Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ப்ரஸ்கேர்டல் முதல் குமார் குணரத்தினம் வரை - என்.சரவணன்


குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் எத்தனிப்புகள் புதிய அரசாங்கத்தின் லட்சணத்தை அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இலங்கையில் இதற்கு முன்னர் இதுபோன்ற நாடு கடத்தல் நாடகம் நடந்தேறியதில்லை.

ஜனவரி 1 அன்று இலங்கை வந்த குமார் குணரத்தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அது சட்ட விரோதமானது என்கிற ஒரு வாதம் உண்டு. பிரசித்திபெற்ற 'ப்ரஸ்கேர்டல் சம்பவத்தை” இந்த இடத்தில் உதாரணமாக முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. அவுஸ்திரேலிய பிரஜையான ப்ரஸ்கேர்டல் 04.04.1936இல் கப்பல் மூலம் இலங்கை வந்து காலனித்துவத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டார். சாதாரண வீசாவை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டமைக்காக அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலாளர் போராட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கினார். அவரை நாடுகடத்துவதற்கு எதிராக கொல்வின் ஆர் டி சில்வா தலைமையிலான அன்றைய போராட்டம் பிரசித்திபெற்றது. பின்னர் சமசமாஜக் கட்சி காரியாலயத்தில் வைத்து ப்ரஸ்கேர்டல் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த சூழலில் அந்த உத்தரவை எதிர்த்து சமசமாஜிகள் வழக்கு தொடர்ந்தனர். 18.05.1937 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி தேசாதிபதியின் உத்தரவு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மனச்சாட்சியின் சுதந்திரம் என்பதனை தேச எல்லை இடையூறு செய்ய முடியாதென கூறிய நீதிமன்றம், கருத்து கூறும் சுதந்திரத்தை தடுக்கும் விதத்தில் ப்ரஸ்கேர்டலுக்கு தீர்ப்பு வழங்காததோடு, அவரை குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தது.
சம சமாஜ கட்சி தலைவர்களுடன் ப்ரஸ்கேர்டல்
அன்று எந்த காலனித்துவம் தன்னை நாடுகடத்த முற்பட்டதோ அதே இங்கிலாந்துக்கு போய் அங்குள்ள கொம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடினார் ப்ரஸ்கேர்டல்.

அந்த சம்பவம் நிகழ்ந்து 78 ஆண்டுகள் கழிந்து அதே அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த குறுகியகாலம் அந்நாட்டு குடியுரிமையை அனுபவித்த இலங்கை பூர்விகத்தைக் கொண்ட ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. அன்று சுதேசிகள் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்து அவுஸ்திரேலிய பிரஜையை காப்பாற்றினார்கள். இன்றோ சுதேச ஆட்சியாளர்களால் சுதேசி ஒருவரின் விசாவும் நிராகரிக்கப்பட்டு, மீள குடியேறும் விண்ணப்பமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குழப்படிகளை சரிகட்டுதல்
பாடசாலைகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை மாணவத் தலைவராக ஆக்குவது போல மோசமாக கற்கும் பின்வரிசை குழப்படி மாணவர்களையும் சிலவேளை மாணவத் தலைவர்களாக ஆக்கிவிடுவார்கள் எங்கள் பள்ளிக்கூடங்களில். அவர்கள் அடங்கி ஏனைய குழப்படிகாரர்களை அடக்குபவர்களாக மாறி காட்டிக்கொடுக்கவும் ஆரம்பித்துவிடுவர்.

இந்த நல்லாட்சி அப்படிப்பட்ட “குழப்படிகாரர்கள்” என்று பேர்பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. கடந்தகாலங்களில் அப்படிப்பட்ட “குழப்படி” அரசியல் வாதிகளாக பேர்பெற்றவர்களின் கூட்டே புதிய “நல்லாட்சி” அரசாங்கம். முன்னாள் “குழப்படிகாரர்களின் ஏகபோக கூட்டாக” ஆகியிருக்கும் இன்றைய “நல்லாட்சி” தமக்கு வெளியில்  எந்தவொரு குழப்படிகாரர்களும் இருக்கக்கூடாது என்று புலம்புகிறது. அப்படி தம்மோடு சமரசத்துக்கு வராவிட்டால் அவர்களை சரிகட்டும் வழிகளைத் தேடுகிறது.

இன்றைய நிலையில் அப்படி சரிகட்ட முடியாத, சமரசமற்ற உறுதியான எதிர்ப்பியக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது முன்னிலை சோஷலிச கட்சி. சமகாலத்தில் வெகுஜன அரசியலை களத்தில் முன்னெடுப்பதிலும் அரசாங்கத்துக்கு சவாலாகவும், தலையிடியை கொடுக்கும் கட்சியாகவும் அது ஆகியிருப்பது தான் இன்றைய அரசாங்கத்தின் பீதி. அதன் பலம் அறிந்துதான் அன்றே அதனை ஒடுக்குவதற்காக மகிந்த அரசாங்கம் கூட அதன் தலைமையில் கை வைத்தது. அக்கட்சி தம்மை பிரகடனப்படுத்தவிருந்த தருவாயில் அதற்கு குமார் குணரத்தினம் தலைமை தாங்கக் கூடும் என்பதை அறிந்த மகிந்த அரசு குமாருக்கு அந்நிய நாட்டு குடியுரிமையை காரணம் காட்டி கைது செய்ய தயாராக இருந்தது. அதனால் கட்சியை அவர் இன்றியே மாநாடு நடத்தி பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு புரட்சிகர கட்சி என்கிற வகையில் குமார் குணரத்தினம் ஒரு பகிரங்க தலைவராக இருக்க வேண்டியதில்லை என்றாலும் கட்சிக்கு அது ஒரு இடையூறாகவே இருந்து வந்தது. குமார் குணரத்தினத்துக்கு தலைமறைவு தலைமை பாத்திரம் புதியதும் அல்ல. ஏற்கெனவே ஜேவிபியில் நீண்ட காலம் அவரின் பெயரே வெளித்தெரியாதபடி தலைமைப் பாத்திரம் ஆற்றிய அனுபவம் அவருக்குண்டு.

முன்னிலை சோஷலிச கட்சி பல வெகுஜன இயக்கங்களை இணைத்துக்கொண்டு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் அனைத்து இனங்களையும் இணைத்துக்கொண்டு முன்னெடுத்த சமவுரிமை இயக்கம் இன்று அக்கட்சியை பாதுகாக்கும் அரணாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னிலை சோஷலிச கட்சிக்குள்ளும் ஏற்பட்ட உடைவுகளும், ஸ்தம்பிதமும் அதன் பலத்தை கணிசமான அளவு பாதிக்கவே செய்திருந்தன. ஆனால் “நல்லாட்சி” அலையில் அடித்துச் செல்லாத கட்சியாக  தாக்குபிடித்ததனால் இன்றும் அது ஒரு மக்கள் எதிர்ப்பியக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதை காணமுடிகிறது. இலங்கையில் பெரிய மாணவர் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறது.

இந்த பலம் தான் புதிய நல்லாட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிய முடிகிறது. அவர்களின் கடந்தகால அரசியல் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் என்பன குறித்த அரசியல் விவாதத்துக்கு அப்பால் பலவீனமான எதிர்க்கட்சியைக் கொண்ட இன்றைய அரசியல் சூழலில் ஒரு அரசியல் அழுத்தக் குழு என்கிற ரீதியில் அக்கட்சி முக்கியத்துவம் பெறுகிறது.

அக்கட்சியின் தலைமையை பலவீனப்படுத்தி கட்சியின் நிகழ்ச்சிநிரலை வேறுபக்கம் திசைதிருப்பும் கைங்கரியமாகவே இன்றைய குமார் குணரத்தினத்தின் மீதான மோசமான கெடுபிடிகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

குமாருக்காக ஓரணியில்
குமார் குணரத்தினம் ஜனவரி 1 அன்று நாட்டுக்குள் பிரவேசித்தபோது அவருக்கு 30 நாள் வீசாவே வழங்கப்பட்டது. இடைக்காலத்தில் நீடிப்பதற்காக விண்ணப்பிக்க முடியும். அதன்படி ஜனவரி  27 அன்று விண்ணப்பித்தபோது அது நிராகரிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்த நாட்கள் குடிவரவு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வீசாவும் நிராகரிக்கப்பட்டு, குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பெப்ரவரி 18வரை அது விசாரிக்கப்பட்டு அவ்வாறு அடிப்படை உரிமை மீறப்படவில்லை என்று கூறி மேலதிக விசாரணைக்கு அந்த வழக்கு எடுக்கப்படவில்லை. இதனை தீர்க்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு கிடையாது அமைச்சரவைக்கே உள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் மீண்டும் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களை நாடினால் அவர்கள் தம்மிடம் அதிகாரம் இல்லை நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உள்ளது என்று மாறி மாறி பந்தாடி வருகின்றனர். இந்த இழுபறிகளுக்குள் சட்டபூர்வமற்ற முறையிலேயே நாட்டில் தங்கியிருந்து நீதிக்காக காத்துக்கிடக்க நேரிட்டது. அதுவே குமார் சட்டவிரோதமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்ட அரசாங்கத்துக்கு எளிமையாகிவிடுகிறது.

மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட பல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு இது குறித்து கோரிக்கையும் கூட விடுக்கப்பட்டது. குமார் குணரத்தினத்தின் பக்கம் உள்ள நியாயத்துக்காக இன்று பலர் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது போல அரசாங்கமும் பகிரங்கமாக அம்பலப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரை சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனுக்கு இந்த நாட்டின் மத்தியவங்கி தலைமைப் பதவியை வழங்குவதற்காக 24 மணிநேரத்தில் இலங்கை பிரஜாவுரிமை வழங்கமுடியுமென்றால், சட்டவிரோதமாக ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்ததால் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை பிரதமரே நேரடியாக தலையிட்டு குடிவரவு திணைக்களத்துக்கு ஊடாக ஓரிரு மணித்தியாலங்களில் பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால். அதே அரசியல் அதிகாரம் ஒரு நியாயமான பிரச்சினையை தீர்க்க பின் நிற்பது எதற்காக.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 8, 20, 21 பிரிவுகளின்படி குடியுரிமை தொடர்பில் ஏற்பது / மறுப்பது தொடர்பிலான முழு அதிகாரம் பிரதமருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமோ நீதிமன்றமே தீர்ப்பு வழங்கவேண்டும் என்கிறது.

ஜேவிபியே வெளியேற்றியது
மகிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியமைத்தபோது அந்த ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது என்கிற வாதத்தை ஜேவிபிக்குள் குமார் குணரத்தினம் முன்வைத்த போது அந்த தகவல்கள் வெளியில் கசிந்தன. பத்திரிகைகளிலும் அவை வெளியாகின. குமார் குணரத்தினம் கொல்லப்பட இருப்பதாக இரகசிய தகவல்கள் ஜேவிபிக்கு கிடைத்தன. மேலும் இந்த இரகசிய உரையாடல் விமல் வீரவன்சவுக்கு ஊடாக கசிந்ததாக நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜேவிபி தான் குமார் நாட்டுக்கு வெளியே செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வெளியேற்றியது. இன்று மீண்டும் நாட்டுக்கு மீள திரும்புவதற்கான போராட்டத்தை பல இடதுசாரிக்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் முன்னெடுத்தபோதும் இந்த நிலைமையை சரி செய்வதற்கான தார்மீக பங்களிப்பை ஜேவிபி செய்யவில்லை. மாறாக ஒரு பூர்ஷ்வா இயக்கத்தை பழிதீர்ப்பதைப்போல குமாரையும் பழிவாங்குகிறது.

இப்படியான நிகழ்வுகளில் வீதியிறங்கி போராடும் மனோகணேசன் போன்றோரும் இன்று இதற்கு குரல்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தரும் சத்தமின்றி இருக்கிறார். குழப்படிகாரர்களுக்கு பதவி கொடுத்து வாயடைத்தது போலாகிவிட்டது.

மரபுவழி குடியுரிமை
குமார் குணரத்தினம் இந்த நாட்டில் பாதுகாப்பற்ற கெடுபிடிமிக்க சூழலில் இன்னொரு நாட்டில் அரசியல் தஞ்சம் பெறவேண்டி ஏற்பட்டது. ஆனால் அரசியல் சூழல் மாறியபோது மகிந்த அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு மீண்டும் தலைமை தாங்க நாடு திரும்பியவர். ஆனால் மகிந்த அரசு அவரை கடத்தி சித்திரவதை செய்து நாடு கடத்தியது.

நாட்டுக்கு வெளியில் இருந்து அரசியல் வேலைகளை புரியுமாறு தீர்மானம் எடுத்து நாட்டை  விட்டு வெளியேற்றிய ஜேவிபியோ குமார் தமது கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அதே குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கத்துக்கு ஜேவிபி துப்பு கொடுத்ததாக கோத்தபாய சமீபத்தில் ஒப்புக்கொண்டது பலரும் அறிந்ததே.

இன்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொண்டு இலங்கையில் அரசியலிலும் அரசாங்கத்திலும் பங்கெடுத்த பலரைக் கண்டிருக்கிறோம். பசில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் அப்படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.

ஆனால் குமார் குணரத்தினம் அவ்வாறு இரட்டைக் குடியுரிமையைக் கோரவில்லை. அவர் மீண்டும் தானும் தனது பாட்டன் முப்பாட்டன்களும் பிறந்து வாழ்ந்த தனது சொந்த நாட்டில் குடியேறுவதற்காகவே தனது மரபுவழி குடியுரிமையைக் கோரி வருகிறார்.  குடியுரிமை சட்டத்தில் அதற்கான வழிகளும் உண்டு. அவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை இருக்கிறது என்கிறது குடிவரவு குடியகல்வு திணைக்களம். ஆனால் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யவேண்டுமென்றால் இன்னொரு நாட்டில் அவர் குடியுரிமை பெற்று விட்டார் என்பதை உறுதிசெய்யவேண்டும் என்பது சட்டம். ஜெனீவா பிரகடனத்தின் படி நாடற்றவர் என்று இனி எவரும் இருக்க முடியாது என்கிறது. முதலில் ஒரு நாட்டின் குடியுரிமையை பெறுங்கள் இந்த நாட்டின் குடியுரிமையை விலக்கலாம் என்கிறது அவுஸ்திரேலிய அரசாங்கம். எனவே அவுஸ்திரேலிய குடியுரிமையை அவர் தன்னிச்சையாக இழக்க முடியாத நிலை. ஆனால் குடிவரவு திணைக்களம் இன்றுவரை அவரது விண்ணப்பத்துக்கு பதில் அளிக்காமல் இழுத்தடித்துக்கொண்டு வருகிறது. அவரது கடவுச்சீட்டில் அவரது சொந்தப் பெயர் இல்லை என்பதும் அதில் டஸ்கொன் முடியான்சலாகே தயாலால் நோயெல் முதலிகே என்று இருப்பதையும் காரணம் காட்டியிருக்கிறது. தேவையேற்படின் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றிக்கொள்வது அவ்வளவு கடினமில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்டில் வதிவுரிமை பெற்றபோது குமாரும் அவ்வாறே சட்டங்களுக்கு இணங்க மாற்றிக்கொண்டுள்ளார். அது குடிவரவு திணைக்களத்திற்கும் தெரியும்.

குமார் குணரத்தினத்தின் குடியுரிமை சர்ச்சையானது குடிவரவு, குடியகல்வு தொடர்பில் புதிய சட்டத் திருத்தங்களின் தேவையையும் உணர்த்தியிருக்கிறது. பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விடயத்தில் உடன்படுகின்றன.

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் கடந்த காலங்களில் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்புங்கள் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஊடக மாநாட்டில் அறிவித்தார். கடந்தவாரம் வெளிநாடுகளில் வாழும் 2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வைபவம் கூட பெரிதாக நடந்தது.

அந்தந்த நாடுகளில் சட்டபூர்வமான விசாவை பெற்றுக்கொண்டு புரட்சிசெய்ய புறப்படுவது புரட்சிகர வழிமுறை அல்ல. சேகுவேரா உள்ளிட்ட பல போராட்டத் தலைவர்கள் அனுமதி பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால் குமார் குணரத்தினம் விடயத்தில் சொந்த நாட்டில் மீள குடியேறுவதற்கான உரிமை மறுக்கப்படுவது நிச்சயம் அரசியல் பழிவாங்கலாலேயே. எந்த நேரத்திலும் அவர் நாடு கடத்தப்படலாம் என்கிற அச்சம் அவர் சார்ந்தவர்களுக்கு அதிகம் இருக்கிறது. குமார் குணரத்தினத்துக்கு நியாயமான நீதி வழங்கபடாதபட்சத்தில்  அது வரலாற்றில் பிழையான முன்னுதாரணமாக பதியப்படும் என்பது நிச்சயம்.

18.11.1965
கேகாலையில் பிறந்தார்.
1982
கற்றுக்கொண்டிருக்கும் போதே ஜே.விபியில் இணைவு
1985
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் துறையில் கற்றபோதும் நிறைவுசெய்யவில்லை
ஜன 1990
ஜேவிபியில் இருந்த சகோதரன் ரஞ்சிதம் கடத்திக் கொலைசெய்யப்பட்டார்
87/89
தேசபக்த மக்கள் இயக்கத்தில் இயங்கிய காலத்தில் பல தடவைகள் கைது, சிறைப்படுத்தல்
15.04.1987
பல்லேகெல இராணுவமுகாம் தாக்குதலில் ஈடுபடல்
23.05.1987
கலகெதர பொலிசாரால் கைது
13.12.1988
ஜேவிபி மகசின் சிறையை தாக்கி குமாரை தப்பவைத்தனர்
25.07.1989
முள்ளிபதானையில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் ட்ரக்வண்டி சிக்கி 14 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் திட்டமிடல் குமாரால் மேற்கொள்ளப்பட்டது என்கிறது ரிவிர பத்திரிகை
24.09.1989
இராணுவத்தினரால் கைது
1993
விடுதலை, ஜேவிபியை மீள கட்டியெழுப்புதலில் தீவிரம்
2004, 2005
ஜேவிபி அரசுடன் இணைவதற்கு எதிராக உட்கட்சி போராட்டம்
2006
குமாரின் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வெளியில் அனுப்ப கட்சி தீர்மானித்ததில் அவுஸ்திரேலியாவில் புகலிடமடைகிறார்
2011
குமார் தலைமையில் ஜேவிபியிலிருந்து “மக்கள் போராட்ட இயக்கம் என்கிற பெயரில் வெளியேறினர்
09.04.2012
முன்னிலை சோஷலிச கட்சி தொடங்கப்பட்டது.
07.04.2012
கட்சி உறுப்பினர் திமுது ஆட்டிகலவுடன் சேர்த்து கடத்தப்பட்டு சித்திரவதை
09.04.2012
உள்ளூர்/சர்வதேச அரசியல் நிர்பந்தத்தை தொடர்ந்து தெமட்டகொட போலிஸ் அருகாமையில் கண் கட்டப்பட்ட நிலையில் கைவிட்டு சென்றனர் கடத்தியவர்கள்.
10.04.2012
அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
01.01.2015
புதிய அரசியல் சூழலில் நம்பிக்கை கொண்டு மீண்டும் இலங்கை வருகை
04.11.2015
கேகாலயிலுள்ள தாயாரின் வீட்டில் கைது

18.11.2015
கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மீண்டும் விளக்க மறியலில் வைக்கும்படி தீர்மானிக்கப்பட்ட நாள் அவரது 50வது பிறந்த நாள்
நன்றி - தினக்குரல்


செலவுத் திட்டம் மீண்டும் மலையகத்திற்கு கண்துடைப்பா? - சு. நிஷாந்தன்


இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அடுக்கடுக்காய் வரவுசெலவுத்திட்டம் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆட்சிசெய்கிற அரசுகளால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் வியப்பான விடயமல்ல. காலங்காலமாக ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்கள் அவர்தம் அதிகாரத்தை நிலைத்திறுத்திக்கொள்ள வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களை ஏமாற்றிவருகின்றமை கண்கூடு. இம்முறையும் மலையக மக்களுக்கு அவ்வாறானதொருநிலைமையே அரங்கேறியுள்ளது.

இலங்கையில் எச்சந்தர்ப்பத்தில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும் மலையக மக்களின் அபிலாஷைகள் ஓரங்கட்டப்பட்ட ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே யஅமைந்துள்ளது. மலையக மக்களை இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள அரசு முன்வரவில்லை என்பதே அதற்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியில் கொத்தடிமைகளாக மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் வண்ணம் இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரும அரசும் முன்வரவில்லை என்பதற்கு என்ன காரணமென இன்றளவும் அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

1972ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குக் கொண்டுவரப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் குறிப்பாக 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ போக்கு பொருளாதார முறைக்கு முன்னர் இந்த நாட்டின் அந்நிய செலாவணியின் முதுகெலும்பாகத் தோட்டத் தொழிலாளர்கள்தான் இருந்தனர் என்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் மறந்துள்ளனர். 

உலகின் முதல்தரத் தேயிலையாகக் காணப்பட்ட இலங்கையின் தேயிலை இன்று சர்வதேச மட்டத்தில் வீழ்ச்சியடைய ஒருபோதும் தோட்டத் தொழிலாளர்கள் காரணமாக அமையவில்லை. அது தனியார் கம்பனிகளின் வினைத்திறனற்ற பராமரிப்பால் ஏற்பட்ட சாபக் கேடாகும். 

சுதந்திரத்துக்கு முந்திய ஆங்கிலேய ஆட்சியில் தேயிலை, இறப்பர், கோப்பி மற்றும் வாசனைத் திரவியம் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களின் உற்பத்தியில் முன்னிலை நாடாக இலங்கை காணப்பட்டது.  ஆனால், 1970ஆம் ஆண்டு சிறிமா ஆட்சியில் மூடிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டமையால்  இலங்கையின் திறந்தப் பொருளாதாரக் கொள்கை பெரிதும் ஆட்டங்கண்டது மாத்திரமின்றி பெருந்தோட்டங்களின் வீழ்ச்சிக்கு முதல் அடித்தளமாகவும் அது அமைந்தது. 

1992ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டமையால் வருமானத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்திய உற்பத்தியை கம்பனிகள் மேற்கொண்டன. இன்று சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலைக்கு மவுசு குறைந்துள்ளது. தரமற்ற இறப்பர் உற்பத்தியின் காரணமாக உலக சந்தையில் செயற்கை இறப்பரின் கேள்வி அதிகரித்துள்ளது.

மலையக மக்கள் அரசின் கீழ் இயங்கும்போதும் சரி, தனியார்துறையின் கீழ் இயங்கும்போதும் சரி, வரவு  செலவுத்திட்டத்தின் போதும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின்போதும் ஏதோ அந்நிய நாட்டு பிரஜைகள் போலவே இன்னமும் இந்த நாட்டு ஆட்சியார்களால் கணக்கெடுக்கப்படுகின்றனர்.  கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் ஆட்சிக்காலம்வரை மலையக மக்களின் அபிலாஷைகள் தட்டிக்கழிக்கப்பட்டு வந்ததயின் காரணமாகவே மலையகத்தில் மிகப் பெரிய தேர்தல் புரட்சியொன்று இடம்பெற்றது. அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நல்லாட்சி என்று நாமம் ஓதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமோக ஆதரவளித்தனர். 

ஆனால், வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை ஐக்கிய தேசியக் கட்சி உள்வாங்கிச் செயற்படுகின்றதா என்பது தொடர்பில் பாரிய கேள்விகள் உள்ளன. சந்திரிகாவின் ஆட்சிக்குப் பின்னர் மலையக மக்களின்  தனி வீட்டுத்திட்டத்திற்கு ஓரளவு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தற்போதைய ஐ.தே.கட்சிசார் கூட்டரசு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கியுள்ளன.  1,000 மில்லியன் ரூபாவில் முறையாக ஆயிரம் வீடுகளைக் கூட அமைக்க முடியாது என்பது தெளிவான விடயம்.

தேயிலை, இறப்பர் மீள் நடுகை மற்றும் பெருந்தோட்டங்களைப் பராமரித்தல் தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் எவ்விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வில்லை. மலையக அபிவிருத்திக்காக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரே விடயம் இந்த 1,000 மில்லியன் ரூபா என்பது மாத்திரமே.  மலையகத் தலைமைகள் கூறுவது போல் பெருமளவிலான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதே உண்மை.

இந்த நாட்டில் சேரிப்புறங்கள் உருவானது நகரமயமாக்கலின் பின்னர்தான். ஆனால், மலையக மக்கள் 200 வருடங்களுக்கு அதிகமாக சேரிப்புறத்துக்கு ஒப்பான லயன் அறைகளில் வாழ்கின்றனர். மாற்றத்தை விரும்பிய மக்களின் தனிவீட்டுத்திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி சொற்ப அளவே. ஒரு வருடத்தில் 1,000 வீடுகள் அமைக்கப்படுமானால் 5 வருடத்தில் 5,000 வீடுகள்தான் அமைக்கப்படும். மலையகத்தைப் பொறுத்தவரை 2,50,000 தனிவீடுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இலங்கை அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் போது தொடர்ந்தும் மலையக மக்கள் ஏமாற்றப்படுவதாகவே இம்முறை வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் அமைந்துள்ளன.

வரவு  செவுத்திட்டத்தில் மலையகத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் என்ற கனவு துடைத்தெறியப் பட்டுள்ளது.என்றாலும், கண்துடைப்புக்காவது மலையகத்தை நினைவுப்படுத்தியுள்ளமை வரவேற்கத் தக்கதே. மலையகத் தலைமைகளுக்கும் இது ஒரு நல்லப்பாடம். அடுத்த வருட வரவு  செலவுத்திட்டம் தொடர்பில் ஆணித்தரமான முன்மொழிவுகளை அரசுக்கு  கொடுப்பதன் மூலம் சாதிக்கக்கூடிய            சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.  வரவு  செலவுத்திட்டத்துடன் நின்றுவிடாமல் அதனையும் தாண்டிய பல்வேறு சவால்கள் உள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தனியார் உடமையின் கீழ் இருந்து பிரிந்து அரசின் மத்தியஸ்தத்திற்கு கொண்டுவருதல். மலையகமெங்கும்  நீர்வளமிருந்தும் குடிக்கத் தண்ணீர் இன்றித் தவிக்கு மக்களுக்கு முறையான குடிதண்ணீர் திட்டத்தை ஏற்படுத்தல். 

1972ஆம் ஆண்டு பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் காணிகளில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஜனவசம எனப்படுகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை மற்றும் எஸ். பி.சி. எனப்படுகின்ற அரச பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன. 
இதுவே, 1992ஆம் ஆண்டு மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டன. குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இக்கம்பனிகளின் காணிகளிலிருந்தே "பசுமைபூமி' திட்டத்தின் கீழ் 7 பேர்ச் காணி வழங்கப்படுகின்றது. இதனை பிராந்திய கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை அரசின் கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரவேண்டியது கட்டாயமானதாகும். "பசுமைபூமி' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உறுதிப்பத்திரங்கள் நம்பகத் தன்மை அற்ற ஓர் உறுதிப் பத்திரம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அண்மையில் விளங்கப்படுத்தியிருந்தார். வழங்கப்படுகின்ற வீடுகளுக்காவது இந்த மக்கள் உரிமையாளர்களாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக நோக்கின் மலையக மக்களின் வாழ்வில் வரும் ஐந்தாண்டில் பாரிய மாற்றங்களும், அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அதற்கான ஜனநாயக சூழல் இலங்கையில் இன்று துளிர்விட்டுள்ளது. எனவே, நல்லாட்சியிலும் இந்த மாற்று அரசியலிலும் மாற்றங்களை மலையக மக்களும் அனுபவிக்க முறையான அழுத்தத்தை அரசுக்கு கொடுப்பது மாத்திரமின்றி மலையகத் தலைமைகள் உறுதியுடனும், வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும்.

பௌத்த எழுச்சியில் பஞ்ச மகா விவாதத்தின் வகிபாகம் (1915 கண்டி கலகம் – 9) - என்.சரவணன்


பௌத்த அச்சகங்கள் மூலம் கிறிஸ்தவ மிஷனரிமாரின் பௌத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை முறியடிக்கும் முயற்சிகள் ஆரம்பமானது எப்படி என்பது குறித்து சென்ற வாரம் பார்த்தோம். கிறிஸ்தவ மிஷனரிகளிடம் மாத்திரம் மட்டுபடுத்தப்பட்டிருந்த அச்சக வசதி பௌத்த சக்திகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. விமல் அபயசுந்தரவின்  நூலின்படி 1865 ஆம் ஆண்டளவில் ஒருலட்சம் பைபிள் (புதிய ஏற்பாடு) பிரதிகள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. வெஸ்லியன் அச்சகம் (Wesleyan Press) தொடங்கப்பட்டு முதல் 50 ஆண்டுகளுக்குள் மாத்திரம் நூல்கள், சஞ்சிகைகள், மற்றும் சிறு பிரசுரங்கள் என ஐந்து லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பௌத்தர்கள் மத்தியில் அதிக சலசலப்புக்கும், அதிருப்திக்கும் உள்ளாகியது டானியல் ஜோன் கொகெர்லி (Daniel John Gogerly) பாதிரியார் “கிறிஸ்தியானி பிரக்ஞப்திய” (கிறிஸ்தவ பிரகடனம்) எனும் சிங்களத்தில் வெளியிடப்பட்ட நூல். இந்த நூல் 1848இல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் 1853, 1857 காலங்களில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதுடன் 1862 இல் கொகெர்லி பாதிரியார் அதனை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த நூலில் பௌத்தத்தை தாக்குவதற்காக பாலி மொழியில் இருந்து கையாண்டிருக்கிற பல இடங்கள் புனைவும், திரிபும் உடையவை என்று குணானந்த தேரர் ஆத்திரமுற்றார்.
டானியல் ஜோன் கொகெர்லி
கொகெர்லி இலங்கைக்கு 1814 இல் வரும்போது ஒரு பாதிரியாராக வரவில்லை. இலங்கையில் அவர் பாதிரியாராக ஆகி பின்னர் சிங்களம், பாலி மொழியை கற்றுத் தேர்ந்து வெஸ்லியன் மிஷனரியின் தலைவரும் ஆனார். இந்த நூலுக்கு பதிலளிக்கும் வகையில் மிகெட்டுவத்தே குணானந்த தேரர் “துர்லப்தி வினோதினி” எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். தமக்கான அச்சகம் இல்லாத காலத்தில் அவர் அதனை கத்தோலிக்க அச்சகத்திலேயே அச்சிட்டார். அந்த பத்திரிகையில் கொகெர்லி பாதிரியாரின் திரிபுகள் அம்பலப்படுத்தப்பட்டது. “கிறிஸ்தவ பிரகடனத்தை” எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்காகவே “கிறிஸ்தவ வாத முறியடிப்பு” (“கிறிஸ்தியானி வாத மர்தன”) எனும் பத்திரிகையும் குணானந்த தேரரால் உருவாக்கப்பட்டு கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் “லக்மினி பஹான” எனும் சிங்கள அச்சகத்தை 1862இல் ஆரம்பித்த பின்னர் 3 ஆண்டுகளுக்குள் 60 நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரசுரங்கள் மூலம் வெளிக்கிளம்பிய பௌத்த-கத்தோலிக்க விவாதங்கள் மேலும் இறுகத் தொடங்கின. 1847 பரமதம்மா சைத்திய, 1873 வித்யோதய, 1875வித்யாலங்கார என்று தோன்றிய பௌத்த மதத் தளங்களில் கிறிஸ்தவ விரோத நடவடிக்கைகளுக்கு பௌத்த மதத்தலைவர்கள் தலைமைகொடுக்கத் தொடங்கினார்கள்.

தம்மோடு நேருக்கு நேர் வாதம் புரியவருமாறு கொகெர்லி பாதிரியார் உட்பட வெஸ்லியன் பாதிரியார்கள் பகிரங்கமாக சவாலிட்டார்கள். ஆரம்பத்தில் அவர்கள் சாதாரண சிங்கள பூசாரிகளுக்கே சவாலிட்டார்கள். இந்த சவாலை ஏற்று எவரும் வராத நிலையில் கிறிஸ்தவ பாதிரிகளின் கையோங்கியது. பௌத்த மதத்தலைவர்கள் இந்த வாதத்துக்குள் இழுக்கப்பட்டது இப்படித்தான். கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் பதிலளிக்கும் நிலையிலிருந்த பௌத்த தரப்பு பின்னர் கேள்விகளையும் கேட்டு அசத்தி கிறிஸ்தவ சக்திகளை நிலைகுலையச் செய்தார்கள். இறுதியில் இந்த விவாதத்தில் பௌத்த தரப்பே வெற்றியீட்டியது.

பிற்காலத்தில் (1908) கொகெர்லி பாதிரியார்  கிறிஸ்தவ தரப்பு வாதத்தை மீண்டும் பலப்படுத்துவதற்காக “Ceylon Buddhism” (சிலோன் பௌத்தம்) எனும் நூலை வெளியிட்டார். இது இரண்டு தொகுப்புகளாக வெளிவந்தது.

பஞ்ச மகா விவாதம்
ஐந்து வெவ்வேறு ஐந்து காலகட்டங்களில் வெவ்வேறு சர்ச்சைகளின் காரணமாக இந்த விவாதங்கள் உருவாகி இறுதியில் பாணந்துறை விவாதத்தில் முடிந்தது. முதல் மூன்று விவாதங்களும் எழுத்திலேயே பரிமாறப்பட்டன. யதார்த்தமும் உண்மையுமான மதம் பௌத்தமா கிறிஸ்தவமா என்பதே அடிப்படை வாதப் பொருளாக இருந்தது. எழுத்தில் பரிமாறப்பட்ட இவ்விவாதங்கள் மக்கள் மத்தியில் இருந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் பாதித்தன.


தினம்
இடம்
1
08.02.1865
பத்தேகம விவாதம்
2
(08-22).08.1865
வறாகொட விவாதம்
3
01.02.1886
உதன்விட்ட
4
(09-10).09.1871
கம்பளை விவாதம்
5
(26,28).08.1873
பாணந்துறை விவாதம்
இந்த வாதங்கள் உள்ளடக்கம் மற்றும் அந்த வாதங்களின் தோற்றுவாய் என்பன குறித்து இந்தத் தொடரில் விரிக்கத் தேவையில்லை. அட்டவணையாக சுருக்க விபரம் தந்திருக்கிறேன்.

இந்த ஐந்து விவாதங்களிலும் மிகெட்டுவத்தே குணானந்த தேரர் பௌத்த தரப்பின் பிரதான வாதியாக கலந்துகொண்டு பௌத்தர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றார். இந்த விவாதங்களில் பௌத்தர்களின் மீட்பராக அவர் காட்சியளித்தார். அதேவேளை முதல் விவாதத்தில் கலந்துகொண்ட ஜார்ஜ் பார்சன்ஸ் இப்படி கூறுகிறார்.

 “கடுமையான வாதத்துக்கு தயாராகும்படி எமது மக்கள் எம்மிடம் கூறினர். இலங்கையில் இதற்கு முன்னர் இத்தகையதொரு எதிரிகள் கிறிஸ்தவத்துக்கு எதிராக தயாரானது இல்லை. பெப்.8 அன்று கூடிய 50 பிக்குமாரும் அவர்களின் இரண்டாயிரம் ஆதரவாளர்களும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்குடன் இருக்கவில்லை மாறாக கிறிஸ்தவ மதத்தை வீழ்த்தும் நோக்குடையதாக இருந்தது. எனவே சரியான பாதையை காட்டும்படிக்கு மன்றாடுகிறோம்”

குணானந்த  தேரர்
குணானந்த தேரர் 09.02.1823 இல் சலாகம எனும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர். அவரின் இயற்பெயர் லத்து மிகேல் மென்டிஸ். 1840இல் பிக்குவாக ஆக்கி அவருக்கு மிகெட்டுவத்தே குணானந்த எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 1883 இல் நிகழ்ந்த கொட்டஞ்சேனைக் கலவரத்தில் இவருக்கு பெரும் பாத்திரம் உண்டு. அது போல பௌத்த மறுமலர்ச்சியின் மூலகர்த்தாக்களில் ஒருவராகவும், பௌத்த மகான்களில் ஒருவராகவும் சிங்கள பௌத்தர்களால் போற்றப்படுகிறார். பௌத்தத்தோடு மோதுவதில் பிரதான பங்கு வகித்தவர்கள் பாலி மொழியையும் பௌத்த அற நூல்களையும் கற்றுக்கொண்டதைப்போல கிறிஸ்தவத்துடன் மோதுவதற்காக குணானந்த தேரரும் ஆங்கிலத்தையும், பைபிளை முழுமையாக கற்றுத்தேர்ந்தவர். கொழும்புக்கு அவர் பெயர்ந்தபோது கொழும்பில் அப்போது 3 விகாரைகள் மாத்திரமே இருந்தன. அந்த விகாரைகள் பிற்காலத்தில் பல்கிப் பெருகுவதற்கு அவர் ஒரு முக்கியகர்த்தா. கொழும்பில் அரச மரங்களை வெட்டுவதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு எடுத்த முடிவை எதிர்த்து ஒரு இயக்கத்தையே நடத்தி பௌத்தர்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வூட்டியவர் அவர்.

பாணந்துறை விவாதம்
பாணந்துறையிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயத்துக்கும் ரன்கொத் விகாரைக்கும் 300 மீட்டர் மட்டுமே இடைவெளி. மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஆத்மா பற்றிய பௌத்த மத விளக்கத்தை விமர்சித்து பிரசங்கம் செய்ததால் ரன்கொத் விகாரையை சேர்ந்த பிக்குமார் அதிருப்தியடைந்துள்ளனர். பிக்குமாரும் தமது உபதேசத்தின்போது அதனை விமர்சிக்கவே மீண்டும் தேவாலய பாதிரிமார் அதனை விமர்சித்திருக்கிறார்கள். இந்த விகாரையோடு நெருக்கமாக இருந்த மிகெட்டுவத்தே குணானந்த தேரருக்கு எடுத்துரைக்கவே; அதன் விளைவு இறுதியில் பாணந்துறை விவாதத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது.
பாணந்துறை விவாதம் நிகழ்ந்த ரன்கொத் விகாரை
தொன் டேவிட்டின் (பிற்காலத்தில் அநகாரிக்க தர்மபால) நாட்குறிப்பின்படி “இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த விவாதத்தைக் காண மாட்டு வண்டில்களிலும், நடையாகவும் வந்து சேர்ந்திருந்தனர்.” என்கிறார்.

குணானந்த தேரரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அவர் ஒரு மாட்டுவண்டி ஒட்டியைப்போல மாறுவேடத்துடன் ரன்கொத் விகாரைக்கு வந்து சேர்ந்தார்.

இந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்பு தோற்கடிக்கப்பட்டதாக பௌத்த தரப்பு பதிவு செய்துகொண்டது. வாதத்தில் பங்குபற்றிய கிறிஸ்தவ தரப்பு எதிர்த்தரப்பின் வலிமையை குறைத்தே மதிப்பிட்டிருந்தது ஒரு காரணம். பஞ்ச மகா விவாதங்களில் பாணந்துறை விவாதம் இன்று பாடசாலை நூல்களிலும் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. பரீட்சை கேள்விகளில் இணைக்கப்பட்டுள்ளது.

அதுபோல பௌத்த பிக்கு ஆவதற்கான “உபசம்பதா” எனப்படும் பௌத்த தீட்சையை பெறவிடாது தடுக்கப்பட்ட கொவிகம அல்லாதோர் தமக்கான நிக்காயவை அமைத்து கரையோர பிரதேசங்களில் பல விகாரைகளை  உருவாக்கி அப்பகுதி சிங்கள பௌத்தர்களுக்கு வழிபாட்டுக்கான வழிகளை ஏற்படுத்தி பலமடைந்தனர். அந்த கரையோர பிரதேசங்களில் சிங்கள பௌத்தர்களுக்கு சவாலாக இருந்த கிறிஸ்தவ மிஷனரி சக்திகளை எதிர்கொண்டதும் அவர்கள் தான். கொவிகம அல்லாத கராவ, சலாகம, துராவ சாதியை சேர்ந்தவர்கள் தம்மை கொவிகம சாதியை சேர்ந்தவர்களை விட உக்கிரமான, உறுதியான பௌத்தர்களாக நிறுவ தொடர்ந்து போராடினர். பாணந்துறை விவாதம் அந்த வகையில் அவர்களுக்கு கிடைத்த முக்கிய வெற்றி. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்கு தூண்டுகோலாக இருந்ததும் இந்த விவாதமே. பௌத்த மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக பாணந்துறையை குறிப்பிடுவது வழக்கம். அதுபோல கொவிகம அல்லாதோரும் பிரவேசிக்கக் கூடிய வகையில் முதல் பௌத்த விகாரை ரன்கொத் என்கிற பெயரில் உருவாக்கப்பட்டதும் இங்கு தான். பாணந்துறை என்பது கராவ சாதியினரின் கோட்டை என்பார்கள். பௌத்த மறுமலர்ச்சிக்கு தேவையான நிதிமூலம் அங்கிருந்து தான் வந்தது என்கிறார் விக்டர் ஐவன்.
டேவிட் டி சில்வா
இந்த விவாதத்தின் போது கத்தோலிக்க தரப்பில் தலைமை ஏற்றிருந்த பாதிரியார் டேவிட் டி சில்வா கையாண்ட மொழிப்பிரயோகம் மக்களுக்கு அந்நியமானது. ஆனால் குணானந்த தேரர் மக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் அந்த விவாதத்தை நகர்த்தியதுடன் அதுவரை அவர் இத்தகைய விவாதங்களில் கண்ட தேர்ச்சியை முழுவதும் பயன்படுத்தினார். பாதிரியாரின் தர்க்கமற்ற வாதங்கள் நகைப்பை ஏற்படுத்தியதுடன். குணானந்த தேரரின் கருத்துக்கள் ஆழமாக போய் சேர்ந்ததாக அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார். அவரின் இந்த தொடர் பின்னர் பிரசித்திபெற்ற நூலாக அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate - buddhismand christianity – face to face). பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

 (தொடரும்)


இந்த வார கட்டுரைக்கு உசாத்துணையாக பயன்பட்டவை
  1. The Great Debate: Buddhism and Christianity Face to Face - J.M. Peebles (1878)
  2. Ceylon Buddhism: Being the Collected Writings of Daniel John Gogerly – (1908)
  3. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  4. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  5. උඩරට රාජධානිය, ලෝනා ශ්‍රීමතී දේවරාජා, (Colombo Lake house, 1977)
  6. Caste Conflict and Elite Formation. The Rise of a Karava Elite in Sri Lanka, 1500-1931 - Michael Roberts, (Cambridge University Press, 2007)
  7. සිංහල සමාජ සංවිධානය: මහනුවර යුගය - පීරිස්, රැල්ෆ්
நன்றி - தினக்குரல்


தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரமும் சம்பந்தரின் பாராமுகமும் - ஜே.ஜி.ஸ்டீபன்



தமிழ் மக்களின் பிரச்சினைகள், குறிப்பாக வடக்கு,-கிழக்கு தமிழர்கள் எதிர்கொண்டுள்ள நீண்டகால சிக்கல்கள் அதற்கும் மேலாக நாடும் அரசாங்கமும் எதிர்கொண்டுள்ள தேசிய சர்வதேச மட்ட இடர்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தரோ அலட்டிக்கொள்ளவில்லையே என்று இங்கு சுட்டிக்காட்டுவதை எவரும் தவறு என்று எண்ணிவிடக்கூடாது. 

ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை விட அல்லது அரசாங்கத்தை விட நாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கே அதிகமுண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல ஆசிய வலயத்தில் மாத்திரமல்ல அகிலத்திலும் இதுவே மரபாக இருந்து வருகிறது. 

தோட்டத் தொழிலாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு சமூகத்தினால் இன்று தேசியத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்பது எட்டு மாதங்களாக மறுக்கப்பட்டு வருவதானது ஒரு தேசிய பிரச்சினையாக நோக்கப்படுதல் அவசியமாகிறது. 

நாட்டின் வருமானத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எழுகின்ற தாக்கங்களிலும் கணிசமான பங்காளிகளாக இருந்து வருவோரே மேற்கூறப்படுகின்ற வகையிலான தோட்டத்தொழிலாளர்களாவர்.

எனினும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இழுபறி நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் திட்டமிடப்பட்ட வகையில் கிடப்பில் போடப்பட்டும் இல்லாவிட்டால் அக்கறையீனமாக்கப்பட்டும் வருகின்ற நிலையில் அரசாங்கமும் அந்த மக்களை கைவிட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தரும் பொறுப்பற்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு தவறியிருப்பது வேதனைக்குரியதாகும். 

நாட்டின் தேசியப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அரசாங்கம் எவ்வாறு தனது பங்களிப்பினை வழங்குகின்றதோ அதன் இரட்டிப்பு பங்களிப்பு எதிர்க்கட்சியினுடையதாக இருக்கவேண்டும். 

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்தமை, அது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை, தேர்தல் பிரசாரக் காலத்தில் தலவாக்கலைத் தேர்தல் கூட்டத்தின் போது இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமை, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமை, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டமை, இன்னும் கூறப்போனால் மலையக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வந்த, வருகின்ற கருத்துக்கள், வாக்குறுதிகள், மலையக தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல்கள், முதலாளிமார் சம்மேளனத்தின் விடாப்பிடிகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இவ்விவகாரம் தொட்டுக்காட்டப்படாமை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அறிந்திராதவர் அல்ல. "அனைத்தும் யாம் அறிவோம்" என்று கூறக்கூடிய ஒரு பெருமகராக சம்பந்தர் இருக்கிறார். 

அதேபோன்று மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பை ஈடுசெய்யும் வகையில் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு வெறும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவே வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய பொருளாதார சூழலுக்குள் மேற்படி ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு என்பது அந்த இளைஞர்,- யுவதிகளை பச்சைத்தனமாக ஏமாற்றும் செயற்பாடாகும். அது மாத்திரமின்றி ஆறாயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறுகின்ற ஆசிரிய உதவியாளர் ஒருவரின் ஒரு மாதத்துக்கான செலவினத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் தன்மைகள் குறித்து சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்கில்லை. 

இதேவேளை, ஊவாமாகாண சபையினூடாக அந்த மாகாண சபைக்குட்பட்ட தமிழ்ப்பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பத்தாயிரம் ரூபா என்ற மேலதிக கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இக்கொடுப்பனவினை இழந்தவர்களின் மனோ நிலை குறித்து இங்கு சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

அதுமாத்திரமின்றி 3100 க்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்களை உள்வாங்குதல் எனும் செயற்திட்டத்தில் மேலும் 855 பேர் உள்வாங்கப்பட்டாதிருப்பதும் இது தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அதாவது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அசட்டைத்தனமாக செயற்படுவது தொடர்பிலும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருப்பதும் நல்லாட்சியிலும் தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறை கூறியிருப்பதும் எதிர்க்கட்சித் தலைவர் அறியாத விடயமாக இருக்க வாய்ப்பில்லை. 

இத்தனை விடயங்களும் அறியப்படவில்லையெனக் கூறினால் அது வேடிக்கையிலும் வேடிக்கையாகிவிடும். 

அதேநேரம் இத்தனை விடயங்களும் அறிந்திருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் ஒரு வார்த்தையேனும் வெளிவிடாதிருப்பது ஏன் என்பது பாரிய கேள்வியாக இருக்கின்றது. அத்துடன் மலையக சமூகம் தொடர்பில் அக்கறையீனத்தை வெளிப்படுத்தி நிற்கிறதா என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

இல்லாவிட்டால் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கும் மலையகத் தலைமைகள் இருக்கின்றனவே என்ற காரணத்தைக் காட்டுவதற்கு விளையப்படுகிறதா என்று கேட்பதும் நியாயமே. 

சம்பந்தரை தலைமையாகக் கொண்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெறுமனே வடக்கிற்கும் –கிழக்கிற்கும் வரையறுக்கப்பட்ட கட்சியாக அமைந்துவிட்டால் மேற்கூறப்படுகின்ற காரணங்கள் ஏற்கக்கூடியதாக இருக்கலாம். 

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது வடக்கு- கிழக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு விடவில்லை. இன்று அது இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே இன்றைய இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பொறுப்புணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் பாராளுமன்ற நிலையியற் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையும் பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தமையும் அதேநேரம் மேற்படி மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும்படியும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தியிருந்தது வரவேற்கக் கூடியதாக இருந்தது. 

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் இச்செயற்பாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

நிலைமைகள் இவ்வாறெல்லாம் இருக்கின்ற நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றோடு தொடர்புபட்டதான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்புரிவிடயங்கள் குறித்தும் ஆசிரிய உதவியாளர்களின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்பிலும் சம்பந்தன் மெளனம் காப்பது ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. 

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் தனது பொறுப்புக்களில் இருந்து விலகியவராக செயற்பட்டிருக்கவில்லை. தமிழ் இளைஞர்- யுவதிகள் கடத்தப்பட்டபோதும் கைது செய்யப்பட்ட போதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்ட போதும் அவர் குரல் கொடுத்திருந்தார். அதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய பிரதமர் தமது கடமைப் பொறுப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

அன்றைய சந்தர்ப்பத்தில் முன்னைய அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீன் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளையும் பரிகாசங்களையும் அவமதிப்புக்களையும் சகித்துக் கொண்டவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார். எனினும் நாடு??? மக்கள் என்ற ரீதியில் எதிர்க்கட்சியின் பொறுப்பும் கடமையும் கவலைக்கிடமாகியுள்ளது.

இந்நாட்டின் எதிர்க்கட்சியால் மலையக சமூகமும் அந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வும் தேவைகளும் அவர்களது அபிலாசைகளும் குறிப்பிட்டுக் கூறுவதாயின் அவர்களது வாழ்வாதார நிலமை, நிலவரம் தொடர்பிலும் பாராமுகம் காட்டப்படுவது ஏற்கத்தகும் விடயமல்ல.

பிரதான எதிர்க்கட்சியொன்றின் இத்தகைய பாராமுக செயற்பாடானது வடக்கு ,கிழக்கு தமிழர்கள் என்றும் மலையக தமிழர்கள் என்றும் ஒருவித பிரித்தாளுகைக்குள் கையாளப்பட்டு வருகின்றதாக அமைந்து விட்டதோ என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

தேர்தல் காலத்து ஊடக விவாதப் போர்க்களம் சூடேறியிருந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஊடக நிறுவனங்களில் ஒன்று இலங்கையில் சில தமிழ்த்தலைவர்கள் மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் கடுமையாக சாடியிருந்தன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிராபா கணேசன் மற்றும் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ராம் ஆகியோருடன் ஸ்கைப் வகையிலான தொழில்நுட்ப வசதியுடனான நேரடிக் கலந்து உரையாடலை மேற்கொண்டிருந்த மேற்கூறப்பட்ட அந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனம் மஹிந்த அணிக்கு ஆதரவு அளித்தமை தவறு என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்திருந்தது. அத்துடன் பிரபா கணேசனுடைய கருத்துக்களையோ அல்லது ராமின் வாதங்களையோ அந்நிறுவனம் செவிமடுப்பதற்கு விளையவில்லை.

இவ்வாறு இலங்கையின் தேர்தல்கள் தொடர்பிலும் இங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவினை வழங்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்ற வற்புறுத்தலை திணிப்பதற்கு முனைகின்ற இத்தகைய ஊடக நிறுவனங்கள் இலங்கையிலே மலையகம் என்றதொரு பிரதேச பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றவர்களான இந்திய வம்சாவளியினராக இருக்ககூடிய ஒரு சமூகத்தினர் பொருளாதார, வாழ்வாதார, அடிப்படை சுகாதார முறைமைகளுக்குக் புறகணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் இங்குள்ள அரசியல் தலைமைகளின் இழுத்தடிப்பு, ஏமாற்றல், பாராமுகம் ஆகியவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தாரின் விடிவு தொடர்பிலும் இத்தகைய ஊடகங்கள் அறியாதிருப்பதும் புரியாதிருப்பதும் விந்தையானது தான்.

எவ்வாறிருப்பினும் மலையகத் தலைமைகளால் தேர்தல் காலத்தில் காட்டப்பட்டு வந்த அக்கறை தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வாக்குகளைக் குறிவைத்தவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். மலையகத் தலைமைகளைப் பொறுத்தவரையில் அவ்வப்போது நிகழ்வுகளில் தோன்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆறுதல் கூறிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. பாரளுமன்றத் தேர்தலும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் வரையிலும் இந்நிலை இழுத்துச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எப்படி இருப்பினும் ஆயிரம் ரூபா அதிகரிப்பு என்பது சாத்தியப்படாத விடயமாகும். அதுமாத்திரமின்றி முதலாளிமார் சம்மேளனமும் சம்பள அதிகரிப்புக்கு இணங்கிவரப் போவது கிடையாது. அப்படியானால் சம்பள அதிகரிப்பு என்பது அம்போ நிலைதான். 

இந்நிலைகளை கருத்திற்கொண்டும் அதனை சரிசெய்வதை இலக்காகக் கொண்டும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுமானால் அது வரவேற்கக்கூடியதாக இருக்கும். மலையக சமுகத்தின்பேரில் இருக்கும். பொறுப்பிலிருந்து சம்பந்தரும் விலகிநின்று விட முடியாது.

சம்பள விவகாரத்தில் சாபத்துக்கு ஆளாகாதீர் - (ஜே.ஜீ.ஸ்டீபன்)


நாட்டு மக்களின் நலன்புரி அரசியல் அபிலாஷைகள் தேவைப்பாடுகள் விருப்பு வெறுப்புகளில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த அரசியலிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிபடையாகவே ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தேயிலை உற்பத்தித் துறையைச் சேர்ந்த அப்பாவித் தொழிலாளர்களைப் பொருத்தவரையில் இன்னுமின்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மேடைகளில் தோன்றும் போது கும்பிடுபோடுவதற்கும், வீர வசனங்கள், பசப்பு வார்த்தைகளைக் கூறும் போதும் கைநட்பு மகிழ்விப்பதற்கு மாத்திரமே இது வரையில் தமிழ் சமூகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் மலையக அரசியல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. பந்தா காட்டுவதற்கே சிலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 

சிங்கள அரசியல் வாதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் போட்டி போட்டுக் கொண்டு தமது சமூகங்களுக்கு சேவை செய்து வருகின்றனர். 

பாராளுமன்றத்திலும் இது தொடர்பான கருத்து வாதங்களை முன் வைத்து வருகின்றனர். அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். 

எனினும் மலையக மக்கள் தொடர்பிலும் அவர்களது சம்பள விடயத்துக்கு நிலையான தீர்வொன்றை முன்வைப்பதற்கும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் மலையகத் தலைமைகள் தொடர்ச்சியாகவே தவறி வருகின்றனர். 

புதிய அரசாங்கம் அமைத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் பல அமர்வுகள் இடம்பெற்று விட்டன. ஆனாலும் நீண்டு வரும் மலையக தேயிலை உற்பத்தியாளர்களின் சம்பள விவகாரம் 7 மாதங்கள் கடந்தும் தீர்வின்றி காணப்படுவது தொடர்பில் மலையகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் தலைவர்கள் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளனர். 

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அருணாசலம், அரவிந்த குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் மாத்திரமே இந்த இரண்டு மாத காலப்பகுதியில் தமது பாராளுமன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களது சம்பள விவகாரம் தொடர்பிலும் தலா இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகளில் குரல் எழுப்பியுள்ளனர். இது உண்மையாகவே வரவேற்கத்தக்க விடயமாகும். 

பாராட்டுக்களையும் பொன்னாடைகளையும் மாலைகளையும் கைதட்டல்களையும் வாங்கிக் கொள்ள முண்டியடிக்கும் மலையகத் தலைமைகள் தமது மக்களின் விடயங்களிலும் அவர்களது வாழ்வாதார விடயங்களிலும் கூட குருடர்களாக இருந்து வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு முன்னணி என்ற பெயர்களில் பாராளுமன்றம் சென்றோர் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட்டுள்ளனரா? என்பதை மனசாட்சியைத் தொட்டு கேட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற விவாதங்கள் மலையகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் எவ்வளவு பாராளுமன்றத்தில் செலவிட்டுள்ளனர் என்பதும் விவாதங்களில் நேரத்தை ஒதுக்கி தமது மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு எந்தளவில் பிரயத்தனப்பட்டுள்ளனர் என்பதும் கேள்விக் குறிதான். 

தேர்தல் காலங்களில் இவர்கள் காட்டிய ஆர்வம் இப்போது கிடையாது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு இவர்கள் தான் சீமான்கள் என்பதால் வாக்களித்த மக்கள் கைகட்டியே நிற்க வேண்டியது தான் இறுதியாக இருக்கிறது.

கேட்பதற்கு வேம்பாகவே இருந்தாலும் மலையக மக்கள் அவர்களது தலைமைகளால் அப்பட்டமாக ஏமாற்றப்படுகின்றனர். பாராளுமன்ற சிறப்புரிமைக்கும் சுகபோகத்துக்கும் மக்களின் முன்னாள் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதே இவர்களின் சிறப்பம்சமாக இருக்கிறது.

“ஐயா பெரியவர்களே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? எங்களை ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எங்களை ஏமாற்றி எங்களது முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்?. ஏ.சி.காம்பிராக்களிலும் ஏசி வாகனங்களிலும் காலத்தைக் கழித்து வரும் நீங்கள் ஏழுமாத காலமாக எமக்கான ஆக்கபூர்வ செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருக்கிறீர்களே! ஆறு முறைகளும் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்விகண்டுள்ள நிலையிலும் அரசாங்கத்துக்கும் எமது வேதனை புரியவில்லையே! உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா” என்ற நிலையில்தான் இன்று மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பெருந்தோட்டங்களை நிர்வகித்து வரும் கம்பனிக்காரர்களும் மலையக அரசியல் வாதிகளும் இணைந்து தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மறுத்து வருகின்ற ஏமாற்றுத் தன்மையை, அரசாங்கமும் வாய்மூடி மெளனமாக பார்த்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

மலையகத்தில் தேயிலை உற்பத்தி என்பது இன்று நாட்டின் தேசிய வருமானத்தின் மூன்றாவது பங்காளித்துவத்தைக் கொண்டிருக்கின்றது. ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அடுத்ததாக தேயிலை உற்பத்தியே காணப்படுகிறது.

குண்டூசி கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற இலங்கைத் திருநாடு, தேயிலை என்ற பொருளை இறக்குமதி செய்கின்றதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் குளவிகளிடம் கொட்டுக்கள் வாங்கியும் இன்னும் இன்னோரன்ன துன்ப துயரங்களை சுமந்தவர்களாகவும் இருக்கின்ற தேயிலை உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கும் ருசித்து ரசித்து தேநீர் அருந்துவதற்கும், ஒரு சமூகம் நிதமும் தன்னை வருத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஏன் சிந்திக்கத்தவறுகின்றனரா? தெரியாதுள்ளது.

எதிர்பார்ப்புகள் எதுவுமேயின்றி உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை மாத்திரமே உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் மேற்படி தொழிலாளர்கள் மட்டில் மனசாட்சி இல்லாதவர்களைப் போன்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தேயிலை உற்பத்தியாளர்கள் அல்லது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற வர்க்கத்தினரைப் பொருத்த வரையில் அவர்களுக்கான சம்பளம் நலன் புரிவிடயங்கள் என்பன இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நிர்ணயிப்பதாகவே சுமார் 23 வருடங்களாக நீடித்து வருகின்றது. உண்மையாகவே கூறப்போனால் இதுவும் ஒரு வகையிலான அடிமைச் சாசனம் போன்றதாகவே அமைந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார நிலையில் எத்தகைய ஏற்ற தாழ்வுகள் இடம்பெற்றாலும் கூட தேயிலை உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சம்பளமானது இரண்டு வருடங்களுக்கு மாறாநிலையிலேயே காத்திருக்கும் நிலை உண்டு.

அரச ஊழியர்கள் மட்டில் பொதுமக்களுக்கு இன்றைய நிலை வரையிலும் திருப்தியான நிலைப்பாடு காணப்படுவில்லை. அதிலும் பெருந்தோட்ட மக்களைப் பொருத்த வரையில் அரச நிறுவனங்களில் தமது கடமைகளை செய்து கொள்வதற்கு நாயாகவும் பேயாகவும் அலையவேண்டிய நிலையை உருவாக்கித் தருபவர்கள் தான் இந்த அரச ஊழியர்கள் எனும் அந்தஸ்த்துக்குரியவர்கள்.

நாளைக் கடத்தி ஊதியம் பெற்று வரும் இவர்களுக்கு வருடா வருடம் சம்பளத்தையும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரித்துக் கொடுப்பதற்கும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் சம்பள அதிகரிப்பு வாக்குறுதி வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கும் முற்படுகின்ற அரசாங்கம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதற்கும் அவர்களுக்கான நிலையான சம்பளத் தொகை ஒன்றை நிர்ணயித்துக் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டுவது ஏமாற்றுத்தனமாகும்.

மேற்கூறப்பட்டவாறு கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. ஒக்டோபர் மாதம் இன்றைய திகதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் ஏழு மாதங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏழு மாதங்கள் பூர்த்தியான நிலையிலும் ஒரு தரப்பினரது சம்பளக் கோரிக்கையை அல்லது அதன் உரிமையை தட்டி கழித்து வருவது திட்டமிடப்பட்ட செயற்பாடாகவுள்ளது. 

அல்லாவிட்டால் தோட்டத் தொழிலாளர்கள் கேட்பார், பார்ப்பார் எவருமில்லாதவர்கள் தானே என்ற நினைப்பையும் உருவாக்கி விட்டிருக்கிறது. ஏழு மாதங்களாக  இவ்வாறு ஒரு சமூகம் ஏமாற்றப்பட்டு அல்லது யாரோ ஒரு தரப்பினரின் தேவைக்காக பழிவாங்கப்பட்டு வருவது ஏற்கத்தகாத செயற்பாடுகள். மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதன் பின்னர் அடுத்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஆலோசிக்கப்படுகையில் 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியது.

கோரிக்கை 1000 ஆக இருக்க அந்த தொகையில் திருத்தங்களை ஏனைய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டனர்.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கம்பனிகளின் பிரதானிகளும் இவ்வாறு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் அதில் எந்தவொரு முடிவுக்கு வரவில்லை. அனைத்து பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிந்துள்ள நிலையில் ஆறாவது பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டுள்ளது. 

தேயிலை உற்பத்தியினூடான நாட்டுக்கான வருமான நிலை மூன்றாவது இடத்தில் இருக்கின்ற போதிலும் பெருந்தோட்ட உற்பத்தியை தனியார் தேயிலை உற்பத்தியே அதிகரித்துக் காணப்படுவதில் பெருந்தோட்டத்துறை தொடர்பில் அக்கறை செலுத்தப்படாத நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.

பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்ற கம்பனிகளைப் பொருத்தவரையில் அவை தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பதிலோ உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதிலோ அக்கறை செலுத்துவதில்லை. மாறாக செலவேயில்லாது தேயிலையை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கம்பனிகள் நினைத்துச் செயற்பட்டதாலேயே பெருந்தோட்டத்துறை தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சிகள் காணப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தேயிலை உற்பத்தி அதனூடான வருமானம் இலாபம் என அனைத்து விடயங்களையும் கம்பனிக்காரர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைமைகளும் அறிந்தே வைத்துள்ளனர். ஆனாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் ஜாம்பவான்கள் மக்களைப் பற்றி சிந்திக்கத் தவறுகின்றனர் என்பதைவிட அவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர் என்பதே உண்மை.

பொதுத் தேர்தலின் பிரசாரம் காலங்களின்போது மலையகத்தின் அனைத்து அரசியல் தலைமைகளும் தேயிலை உற்பத்தியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமக்கே அதிக கரிசனை இருப்பதாகத் தெரிவித்து பீத்திக் கொண்டனர்.

தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி கண்டதன் பின்னர் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான உயர்ந்த தொனி பனியாக கறைந்து போய்விட்டது. மலையகத் தலைமைகள் மட்டுமல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் அழகான கதை கூறினர். அவை காதுக்கு இனிமையாகிப் போகியிருந்தன. எனினும் தேயிலைத் தொழிலாளர்களுடனான பெருந்தோட்ட சமூகம் கிள்ளுக்கீரை என்றும் கறிவேப்பிலை என்றும் ஏமாறுவதற்கே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களும் சொல்லாமல் சொல்லி விட்டனர்.

தேர்தல் மேடைகளில் முழக்கமிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலேனும் வாக்குறுதியளித்தபடி எதனையும் மேற்கொள்ளாது, தமது வெற்றிக்குப் பங்களித்த மக்கள் தொடர்பில் மௌனிகளாக இருந்து வருகின்றனர்.

ஏழு மாத காலமாக சம்பளப் பிரச்சினை ஒன்று தீர்வில்லாது இழுத்தடிக்கப்பட்டு வருவது ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாத அறிந்திராத விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் அறியாதிருப்பதற்கு சிறுபிள்ளைகளும் அல்லர். எல்லாமே அறிந்திருந்து இது வரையில் ஒரு வார்த்தையேனும் கூறாதிருப்பதானது மலையக அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்ட அவர்களும் ஏமாற்றுக்காரர்கள் என்பதையே நிரூபிக்கின்றனர்.

இப்படி  எல்லா தரப்பினருமே ஏமாற்றிக் கொண்டும் கிள்ளுக் கீரையாகவும் பயன்படுத்தி வருவதாலேயே உங்களுக்குக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். மலையகத் தொழிலாளர் வர்கத்தினரைப் பொருத்தவரையில் அவர்களே இந்நாட்டில் மிகக் குறைவான வருவாயைக் கொண்டிருப்பவர்களாகவும் மிகக் குறைவான வருவாயில் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இது ஜனாதிபதிக்கும் புரியும் பிரதமருக்கும் புரியும். மலையக அமைச்சர்களுக்கும் புரியும். எம்.பி.க்களுக்கும் புரியும்.  ஆனாலும் வெறுமனே பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுத்து சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவருவது மனசாட்சியே இல்லாத துரோகத்தனமான கூற்றாகும்.

இங்கு ஒரு உண்மையை உள்ளபடி கூறுவதனால் மலையக அரசியல்வாதிகள் அனைவருமே மலையக மக்களை வைத்து அநாகரிக அரசியல் செய்து வருகின்றனர். இவர்களிடம் மக்கள் தொடர்பிலான அக்கறை கிடையாது.

பாராளுமன்றத்துக்கு தெரிவாகிவிட வேண்டும். பதவி நிலைகளை அடைந்து விடவேண்டும் என்பது மட்டுமே இவர்களது நோக்கம். வாய்கிழிய வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் என்பதை இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு தெரிவாகிவிட்ட அனைவருமே இன்றும் ஐந்து வருடங்களுக்கு அனைத்து சிறப்புரிமைகளையும் அனுபவித்தே தீருவர். இதற்காகவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடுபட்டனர். 

மலையக மக்களைப் பொறுத்த வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவார்களேயானால் அது மலையக அரசியலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்பதை புரிந்துக் கொண்டு செயற்பட்டால் அது நலமாக அமையும்.

எனவே மலையகத் தலைமைகளை நம்பியிருக்கும் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையிலான செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். தேயிலை உற்பத்தியாளர்களின் உரிமையான சம்பளத்தையும் அதன் அதிகரிப்பினையும் பெற்றுக் கொடுப்பதற்கு மலையகத் தலைமைகள் கட்சி பேதங்களை மறத்தல் வேண்டும் என்பது பிரதானமானதாகும்.

அதுமாத்திரமின்றி அனைத்து தரப்பினருமே உண்மையாகவே தமது மக்களின் மீது இரக்கம் கொண்டவர்களாக இருந்தால், மனசாட்சியே இல்லாத கம்பனிக்காரர்களிடம் இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் தலையீட்டை வலியுறுத்த வேண்டும்.

பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் சாக்குப்போக்குக் கதைகளைக் கூறுமானால், அத்தகைய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தங்களை மலையகத் தலைமைகள் பிரயோகிப்பது சிறப்பாக அமையலாம்.

இல்லையேல் கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்கியேனுத் தேயிலை உற்பத்தியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கும் அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கும் உதவிபுரிய வேண்டும்.

மலையகத் தலைமைகளும் சரி மத்திய அரசின் பிரதானிகளான ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி அதேபோன்று தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் கம்பனிக்காரர்களானாலும் சரி எல்லாதரப்பினருமே மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களது சாபத்துக்கு ஆளாவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். 

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates