Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

"இந்திய மாயை" (இலங்கை - இந்திய ஒப்பந்தம் நினைவு) - என்.சரவணன்

இக்கட்டுரை 20 வருடங்களுக்கு முன்னர் சரிநிகர் பத்திரிகையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் 10வது ஆண்டு நினைவாக "மலர்விழி" என்கிற புனைபெயருடன் வெளியான கட்டுரை. நன்றியுடன் இந்த 30வது நினைவில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

இந்திய - இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 10 (27.07.1997) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 10 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 10 வருடங்கள் ஆகின்றன.

இந்த 10 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து, சரணடைந்து ”ஜனநாயகவழி”க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை போய்விட்டமை, சமாதானம், பேச்சுவார்த்தை, தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக் கைகள், யுத்தம், அதை நியாயப்படுத்த புதிய புதிய கற்பிதங்கள் என்று இந்த 10 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இத்தனைக்கும் பின்புலத்தில் இந்தியாவின் பாத்திரத்தை கூர்ந்து கவனிக்க தமிழ் சக்திகள் தவறிழைத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தியாவை நாடிநிற்பதும், இந்தியாவை நம்பியிருப்பதுவும் தொடர்ந்தும் நிகழிந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்தியா யார்? அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன? அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண்டது எப்படி? அயல்நாடுகளை நடத்தியது எப்படி? அயல்நாடுகளை தனது நலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள் முரண்பாடுகளை அது எப்படி கையாண்டு வந்தது? அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழ் சக்திகள் விடை காண தவறிவிட்டன என்றே கூறலாம்.

இந்திய அமைதிகாக்கும் படை பற்றிய திட்டமிடல்

இந்தியா: பேட்டை ரவுடி
தென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகை, நிலப்பரப்பு, கைத்தொழில் வளர்ச்சி, இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு. இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமை கொண்ட நாடாக திகழ்கிறது. இதனால் இந்தியாவின் இறுமாப்பும், திமிரும் அண்டை நாடுகளின் மத்தியில் அதனை ஒரு பேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம் புரியவும் நேரிட்டதுடன். சிக்கிம் என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில் தங்கியிருக்கச் செய்து அவற்றின் வெளியுறவுக் கொள்கையையும் கூட தாமே வரையறுக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் உள் நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும் கொடுத்து வருகிறது.

பனிப்போர் காலகட்டத்தில் ரஷ்யாவுடனும் பனிப்போரின் பின்னைய (Post Cold War Period) காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்த யாராக இருக்கும் வரையில் அது வல்லரசுகளுக்கு பணிந்து போவதில் பிரச்சினையில்லை என்று கருதுகிறது. இன்று அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பணிந்து போவதையும் அப்படித்தான் பார்க்கலாம்.

இலங்கையின் இனப்பிரச்சினையானது இந்தியா இலங்கையைக் கையாள நல்ல வாய்ப்பாகப் போனது. இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனை தடுத்து நிறுத்துவதற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளை பலப்படுத்துவதும் இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கையாக இருந்தது. இப்படியான காலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது ”பெருந்தன்மை”யையும் ”நட்பை”யும் அது வெளிப்படுத்தி வந்துள்ளது.

மாத்தையா - இந்திய அதிகாரிகள் சந்திப்பு

இந்தியாவின் கூட்டாளி
உதாரணத்திற்கு, மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினையானது இலங்கைக்கு ஒரு நெருக்கடியா, சரி, அதில் குறிப்பிட்ட சின்ன தொகையை ஏற்கலாம் என ஒப்பந்தம் (1964 சிறிமா-சாஸ்திரி, 1974 சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும். இந்த இடத்தில் (இந்தியாவுக்கும் பொறுப்பு உள்ள) மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப்பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல. ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும் இந்தியாவின் நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கவும், கச்சத்தீவை விட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார்.

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியின் போதெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங்கிய நல்லுறவு நிலவும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டும் முன்னைய ஏகாதிபத்திய விரோத மேலோட்டமான அர்த்தத்தில் சோஷலிச தன்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியவை என்பது முக்கியமானது. மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கும் இலங்கையில் ஐ.தே.க ஆட்சிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது கிடையாது. இதன் காரணமாகத்தான் இலங்கையின் 1977 ஐ.தே.க ஆட்சியமர்வும் அதனைத் தொடர்ந்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகம், மேற்குலகுடனான நல்லுறவுகள், அவற்றின் முதலீடுகள், தலையீடுகள் என்பன இந்தியா இலங்கை விடயத்தில் கூடிய அவதானம் கொள்ளச் செய்தது எனலாம்.

1977 தொடக்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தென்னாசியப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலென்றும், தமிழ் மக்களில் தமக்கும் அக்கறையுண்டென்றும் கூறி இலங்கை அகதிகளை ஏற்கச்செய்ததும், (சில நேரங்களில் செயற்கையாகவே அகதிகள் வருகையை தூண்டிவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) தமிழ் போராளிகளுக்கு தஞ்சமளித்ததும் அவர்களது தளங்கள் இந்தியாவில் செயற்பட அனுமதித்ததும் , ஆயுதங்களை வழங்கியதும் ஆயுதப் பயிற்சிகள் அளித்ததும் அவதானிக்கத்தக்கவை. இதன் மூலம் பல ”பிடி”களை தம்வசமாக்கியது.

இயக்கங்கள் ஆயுதங்களைக் கையளித்தல்
இந்தியாவின் பிடியில் தமிழ் இயக்கங்கள்
விடுதலை இயக்கங்களுக்கு வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை கணிக்கலாம். அவ் ஆயுதங்களைக் கொண்டு ரோந்து செல்லும் படையினரையும் காவலரண்களையும் மாத்திரமே தாக்க முடியும். பெரிய படை முகாம்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றவோ அல்லது அரசின் பாரிய படை நகர்வை முறியடிக்கவோ அல்லது ஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது. இந்தியாவுக்கு தேவைப்பட்டதெல்லாம். ஸ்ரீ லங்கா படையினரை ஆங்காங்கு தாக்கி தொல்லை கொடுப்பதற் கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே.

ஆயுதங்கள் விடயத்தில் இந்தியாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவு செய்ய முயன்ற தமிழ் இயக்கங்களின் மீது பகைமை கொண்டது இந்தியா. சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போதே அவற்றை பறிமுதல் செய்தது.

இந்திய அரசுடன் முரண்டு பிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம் இலங்கை அரசை தண்டிக்கும் விதத்தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு ”றோ” இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பௌத்த மதத்தளங்களை தாக்கிய தும். கொழும்பில் அப்பாவி பொதுமக்களை இலக்காகக் கொண்டு பாரிய குண்டு வெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன்  தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாக பல போராளிகள் கூறுகின்றனர்.

இலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை தூண்டுவதும் ஏனைய காலங்களில் இயங்கங்களை தாக்குதல் நடத்தத் தூண்டுவதும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்து வந்தது.

இப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி நகர்த்தியது.

ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் நிகழ்ந்த உடன்படிக்கை
இந்தோ-இலங்கை உடன்படிக்கை
இந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும் நிலை 1987இல் ஏற்பட்டது. 1987 மே மாதம் இலங்கை அரசு வடமராட்சியை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் ”ஒப்பரேஷன் லிபரேஷன்” (Operation liberation) இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது. யாழ் நகரை கைப்பற்று மானால் இலங்கை அரசை நெருக்கி பணிய வைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர், தமிழக மக்களின் உணர்வலைகள் எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும் போரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்களுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக ”அடுத்ததும் நடக்கும்” என்று அச்சுறுத்தியது இந்தியா.  இந்தியாவின் யோசனைக்கு இலங்கை பணிந்தது.

தனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவு செய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கொண்டிராத ஒரு தீர்வை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்த பின்புதான் ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்பட ஏறக்குறைய எல்லா இயக்கங்களும் இந்த மூன்றாம் தரப்பின் நலன்களுக்கான ஒரு தீர்வுக்கு பலியானார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தமும் நடைபெற்றது.

ராஜீவ் காந்தி - ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடத்திய ஊடக மாநாடு
இந்திய-இலங்கை நலன்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு இராணுவ, உளவுச் சேவைகள் செயற்படுவதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொரு நாட்டின் பாவனைக்கு ஈடுபடுத்துவதோ, வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்கள் இராணுவத் தேவைக்காக பாவிக்கப்படுவதோ இல்லை என்பன போன்ற விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா ”வொய்ஸ் ஒப் அமெரிக்கா”வை (VOA - Voice Of America) அமைக்கவும் எண்ணெய்க்குத பயன்படுத்தலுக்கும் முயற்சி செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.

அதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுத பாணிகளாக்குவது இந்திய ஆதிக்கத்தை (ஆபத்தை) தணிப்பது, தென்னில ங்கையில் உக்கிரம் பெற்றிருந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசம் பெறுவது, உலக அளவில் பெற்றிருந்த அவப்பெயரை நீக்கும் வகையில் ”தீர்வை” வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது.

இரு நாடுகளும் தமது நோக்கங்களில் வெற்றி பெற்றன. ஆனால் எதனை தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு இத்தனையும் நடந்ததோ அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டு சரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில் புலிகள் இயக்கம் பலியாகவில்லை என்றே கூறலாம். ”அமைதிப்படையையும்” இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கையும், படைக்கலங்களும், இது அமைதிப்படையல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளது என்பதை உணர்த்தியது.

இயக்கங்களை நிராயுதபாணிகளாக்குவதில் காட்டிய ஆர்வத்தை ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றும்படி பல போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்தவர் திலீபனும் மட்டக்களப்பில் அன்ன பூரணி எனும் பெண்ணும் உண்ணாவிரதத்தில் உயிர் நீத்தனர்.

IPKF கைப்பற்றிய ஆயுதங்களுடன்
தட்டிக்கேட்க யாருமில்லை
ஆரம்பத்தில் உலகிலேயே நான்காவது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போன புலிகள் கூட அடுத்தடுத்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளினால் இந்தியப்படையை எதிர்த்து போரிடாவிட்டாலும் தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் ”அமைதிப்படை”க்கும் இடையில் போர் நடந்தது. அதற்கு முன்னர். இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் விட அகோரமானதாக, மூர்க்கமானதாக இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கை அரசு அதற்கு முன், ஓரளவு எச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டூழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும் பிரச்சாரமாக சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப் படைகளே நேரடியாக களத்தில் இருந்ததால் எதிர் விளைவுகள் பற்றிய எந்த தயக்கமும் இன்றி போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கமின்றி தமிழ் மக்களை கொன்றொழித்தது.

பல பெண்கள் பாலியல் வல்லுறவு க்கு உள்ளானார்கள். முன்னெப்போ தையும் விட அதிகளவு உயிர், உடமை, சொத்துக்களின் இழப்பு காணப்பட்டது. இதனைத்தான் அன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று IPKF என்பதை Innocent People Killing Force என்றது. வேறும் சில பத்திரிகைகள் Indian Peace Killing Force என்றன.

இதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே வி.பி.சிங்கும், பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ”இந்தியப்படையை வெளியேற்றுவது” என்பதை நிறை வேற்ற வேண்டியி ருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை ”வெளியே  போ!” என்றார். இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக் கொண்டு தமிழீழப் பிரகடனமும் செய்யப்பண்ணி பிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலாக்கிவிட்டு இந்தியப் படை வெளியேறியது. மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப் பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்று விட்டது இந்தியா.

ஜனாதிபதி பிரேமதாச பிரதமர் ராஜீவ் சந்திப்பு
இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாச-புலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத் தொடர்ந்து அவசியமற்றதாகியது.

இவ்வாறு இந்திய நலனையே முதன்மையாகக் கொண்ட இவ்வுடன்படிக்கை குறித்தும் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்திருப்பது தான் வேடிக்கை. சில இயக்கங்கள் தமது ஆயுதங்களைக்களைந்தமை குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது.

இந்தியா குறித்து நிலவுகின்ற மாயை இரண்டு வகையானது. முதலா வது வகை, இந்தியா தமிழ் மக்களில் அக்கறையுள்ளது. தமிழக மக்களின் அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு, தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது. தேவைப்பட்டால் தலையிடும், உணவு அனுப்பும், அகதிகளை ஏற்கும், பராமரிக்கும், ஆயுதங்களை வழங்கும் பயிற்சி வழங்கும்... என இந்தியாவில் அதீத நம்பிக்கை கொண்ட மாயை.

அடுத்த மாயையானது இந்தியாவை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதாகும். அது உலகின் நான்காவது பெரும்படை, ஒரு வல்லரசு, பிராந்தியத்தின் ஏகபோக சண்டியன். எந்த நேரத்திலும் இந்தியா எனும் பாறை சிறு எறும்பின் மீது விழுந்து நசுக்கி விடும். ஆகவே அதை மீறி எதையும் செய்யமுடியாது அதன் ஆதரவு கட்டாயம் தேவை. அது சொல்வதைக் கேட்டு நடப்போம் என்பதே.


இரண்டு போக்குமே அபாயகரமானது. இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது. ஒடுக்குமுறை, ஒடுக்கு முறை கருவிகள், என்பவற்றிலிருந்து பாதுகாப்பது, உரிமை பெறுவது எப்படி என்கின்ற மூலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கை அடைய வழிசெய்யும். மாறாக ஒடுக்குமுறை சக்திகளைக் கண்டு அதீத பீதி கொள்வதோ அதீத நம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்களுக்கு பலியாவதில் போய்தான் முடியும்.

ஏற்கெனவே இந்த வரலாற்றை பல தடவை படித்துவிட்டோம்.
இன்னும் தொடர்ந்து புதிதுபுதிதாக படிக்கத்தான் வேண்டுமா?

(சரிநிகர் - இதழ்-126-யூலை-97)

(சரிநிகர் - இதழ்-126-யூலை-97)

நடேசய்யர் – மீனாட்சியம்மாள் : மலையகத்தின் விடிவெள்ளிகள் - என்.சரவணன்

அறிந்தவர்களும் அறியாதவையும் - 21

ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நாம் இலங்கையில் குறிப்பிட முடியும். அதுவேறு யாருமில்லை மீனாட்சி அம்மாள் நடேசய்யர்.

ஒரு ஆணின் வெற்றியின் பின் பெண் இருப்பார் என்று ஒரு பொதுப்புத்தி ஐதீகம் உண்டு. ஒரு பெண்ணின் வெற்றியின் பின்னால் ஆணின் வகிபாகம் உண்டு என்று பொதுவாகக் கூறும் வழக்கமும் இல்லை. ஆனால் நடேசய்யர் – மீனாட்சி அம்மாள் ஆகியோர் விடயத்தில் பரஸ்பர வெற்றிக்கு பரஸ்பர வகிபாகம் பெரிதளவு இருந்திருக்கிறது. நடேசய்யர் பற்றி பேசும்  போது மீனாட்சி அம்மாளை தவிர்க்க முடியாது. அதுபோலவே மீனாட்சி அம்மாள் பற்றிய உரையாடல்களில் நடேசய்யரையும் தவிக்க முடியாது.

தனது முதல் மனைவி இறந்ததன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அய்யர் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். நடேசய்யர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர். மீனாட்சி அம்மையார் நடேசய்யருக்கு உறவுக்காரர் என்று அறியப்படுகிறது.

இலங்கை வருகை
தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகத்தராக பணியாற்றிய பின்னர் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர்.

தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்களின் நிலையைக் காணச் வந்த அவருக்கு கிடைத்த காட்சிகளால் மிகவும் வருந்தினார். தோட்டங்களுக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் புடவை வியாபாரிகளுடன் சேர்ந்து தோட்டங்களுக்குச் சென்று நிலைமையை அறிந்தார். இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத் தொழிலாளருக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்த பாவப்பட்ட மக்களின் மீட்சிக்காக மீண்டும் 1920ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது துணைவியாரான மீனாட்சி அம்மையாரும் வந்து நிரந்தரமாக பணியாற்றினார்கள்.

மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை 1931இல் ஆரம்பித்தார் நடேசய்யர். அந்தத் தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்களை அணிதிரட்டி, அறிவூட்டி உணர்வுகொடுக்கும் தளபதியாக மீட்சியம்மாள் திகழ்ந்தார். 1940 இல் 37,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது அது.

மீனாட்சி அம்மையாரின் பன்முகம்
மீனாட்சி அம்மையார் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். அக்காலத்து பாரதியின் கவிதைகளால் ஆகர்சிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மையார் பாரதியாரின் பாடல்களையும், தானே மலையக தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல சமூக விடுதலை, தொழிலாளர் விடுதலை சார்ந்து கவிதைகளை எழுதி அவரே தோட்டங்களெங்கும் பாடிப் பரப்பினார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் அவரது சிறு கவிதை நூல் வெளிவந்தது.

அந்த சிறு நூலின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார்.
இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவரமிகவும் மோசமா கிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர் களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிசவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா.
கோ. ந. மீனாட்சியம்மாள்.
மல்லியப்பூ, அட்டன்.
23-5-40.
தேயிலைத் தோட்டங்களில் நடைபெற்ற அடக்கு முறைகள் பற்றி 1937ம் ஆண்டு கொழும்பில் வெளியான 'இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்'என்ற நாடக நூல்
மீனாட்சியம்மாள், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த திரைப்படப் பாடல் மெட்டுகளில் தமிழர்களின்தோட்டத் தொழிலாளர்கலைப் பாடல் எழுதினார். 23-5-1940இல் இவர் படைத்த படைப்புகள் கிளர்ச்சியை மூட்டின. மீனாட்சியம்மாள் எழுதிய பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கிடைத்திருந்தன. தொடக்கப் பாடல் வெண்பா அமைப்பிலும், நிறைவுப் பகுதி விருத்த அமைப்பிலும் உள்ளன. அவற்றில் பல திரைப்பட மெட்டில் எழுதப் பெற்றுள்ளன. "பாரத நாட்டினிலே தீரத்தைப் படிப்போம்' என எழுதும் இவர் இரண்டாம் பாடலில் மகாத்மா காந்தியை இருமுறை குறிப்பிடுகிறார். ஒரு பாட்டில் முதல் அடி "வங்க மாதா நம்ம தாய் தான்' என்று தொடங்குகிறது. இந்தியாவிலிருந்து ஈழத்திற்குத் தமிழர் கொண்டு வரப்பட்டதை,
"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்
பல பேர்கள் உயிரினை இடை வழி தந்தோம்''
என்று பாடியுள்ளார்.
சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீருகெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று 
மேலும்
நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு வீரே
இன்றியமையாத வொரு போரே செய்ய
இடமுண் டாக்குகிறீர் நீரே
என்று அவர் பாடிய பாடல் இலங்கை வரலாற்றில் சிங்கள பேரினவாதத்துக்கும் எதிரான கருத்து நிலையை முதன் முதலாக பாடல் மூலம் பதிவாக்கிய பெண்ணாக வரலாற்றில் பதிவாகிறார்.

இதுபோன்ற பாடல்கள் அடங்கிய பிரசுரம் "இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் செய்திடும் சூழ்ச்சி என்றும் குறிப்பிடுகிறார். இலங்கையில் நேர்மையாய் வேலை செய்தோம் என்று பாடுகிறார். கும்மி மெட்டில் பாட்டு அமைத்து அதில் தமிழர் படும் துன்பங்களை அழகாக விவரிக்கிறார்.

நடேசய்யருடன் சேர்ந்து மீனாட்சியம்மை பொது மேடைகளிலும், பஸ்தரிப்பு நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச்சந்தை நிலையங்களிலும் தோன்றி திறந்தகாரை மேடைபோல் பாவித்து பேசும்போது புத்துணர்வு பெற்றார்கள் தொழிலாளர்கள். சந்தாமுறை இல்லாத அந்நாட்களில் தொழிற்சங்கம் நடாத்து மிகவும் சிரமமாக இருந்தபோதும் தொழிலாளர்கள் தரும் உதவியிலேயே சங்கத்தை நடத்த வேண்டிவந்தது.கூட்டம் முடிந்து திரும்புகையில் தொழிலாளர்கள் அன்பளித்த காய்கறிகளால் நிரம்பிவழியுமாம் அவர்களின் வண்டி.

அரசியல் பிரதிநிதித்துவம்
மலையக மக்களின் முதல் சட்ட நிரூபன சபைப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. மூன்றாமவர் ஐ.எக்ஸ். பெரைரா. 1920இல் மனிங் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதிநிதியாக முதற்தடவையாக இந்தியப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் ஈ.ஜி.ஆதமலை. அதன் பின்னர்  1924 ஆம் ஆண்டு சட்ட நிரூபன சபைக்கு இரண்டு இந்தியர்ககளைத் தெரிவு செய்யும் தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரில் ஐ.எக்ஸ். பெரைரா (5,141),  மொஹமத் சுல்தான் (3511) நடேசய்யர் (2948) வாக்குகளைப் பெற்று நடேசய்யர் மூன்றாவதாக வந்ததால் தெரிவாகவில்லை. ஆனால் இந்தியர் சார்பில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் ஆறே மாதங்களில்  இறந்துபோனதால் இடைத்தேர்தல் ஏற்பட்டு அதில் வெற்றிபெற்றார். நடேசய்யர் 1931 சட்ட நிர்ரூபன சபை கலைக்கப்படும்வரை நடேசய்யர் தனது பதவியை திறம்பட செய்தார். எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் (S. R. Mohamed Sultan). மொஹமத் சுல்தான் இலங்கையில் முகமதியர்கள் என்று முஸ்லிம்களை அழைக்கக்கூடாது இனி “முஸ்லிம்” என்றே பதிவுகளில் இருக்கவேண்டும் என்று சட்ட நிரூபன சபையில் போராடிய ஒருவர். (sessional paper XXXV of 1924)

1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று  1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 07.11.47 அன்று மாரடைப்பினால் காலமானார். எஸ்.ஜே.வி. செல்வநாயகமே அவரின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சாதி ஆயுதமாக
நடேசைய்யரை தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்காக பெரிய கங்காணிமார்-தோட்டத் துரைமார் கூட்டணிக்கும் அவருக்கும் இடையில் விரிசலை வளர்த்து கடும்பகையை வளர்த்தெடுத்தனர் அன்றைய ஆதிக்க சக்தியினர். அவர் ஒரு பிராமண என்றும் தென்னிந்தியாவில் பார்ப்பனியர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் சூழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் தஞ்சம் புகுந்திருக்கும் சுயநலவாதி என்று கூறி சாதியத்தை குறுக்குவழியில் பயன்படுத்த விளைந்தனர்.
“கல்வியறிவில்லாத மக்களுக்கு கடவுளைத் துதித்து மீளும் பாக்கியம்கூட இல்லை என்ற அளவிற்குஉயர்குடி மேட்டிமைத்தனத்தின் பிரதிநிதியான நாவலர் விளங்கியபோது, தஞ்சை அக்கிரஹாரத்து மனிதரான நடேசய்யரோ அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைப்பட்ட நிலையில் உழன்ற மக்களின் மத்தியில் நின்று அவர்களின் நலனுக்காக போராடிய ஒரு மகனாக உயர்ந்து நிற்கிறார்.” என்று 91 ஆண்டு பெர்லினில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பின் போது தனது உரையில் தெரிவித்திருந்தார் மு.நித்தியானந்தன்.
இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை ஆரம்பித்த வி.கல்யாணசுந்தரம் ஆசிரியராக இருந்து தமிழகத்தில் நடத்திய தேசபக்தன் என்கிற பெயரிலேயே 1924இல் இலங்கையிலும் நடேசய்யர் ஆரம்பித்தார்.

ஏற்கெனவே திராவிடப் பத்திரிகையில் பணியாற்றிய தனது உறவுக்காரரான சாரநாதனை இலங்கைக்கு வரச்செய்து தேசபக்தனை சாரனாதனின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தபோதும் மதுபழக்கத்தாலும், வெளிச் சதிகளுக்கும் சாரநாதன் பலியானதால் அவர் பிரிந்து போனார். மீனாட்சி அம்மை அந்த இடத்தைப் பூர்த்திச் செய்தார்.

இதைவிட தனது அச்சுக்கூடத்தில் எழுத்துக்கோர்க்கும் பணியில் சில பெண்களைச் சேர்த்துப் பணிபுரியவும் வைத்தார். நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் ஆகியோரின் பங்களிப்பில் வெளியான பல வெளியீடுகள் பதிவாகியுள்ளன.

வாக்குரிமைக்காக
1929ம் ஆண்டில் 'தேசபக்தன்' தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. மீனாட்சி அம்மையார் பத்திரிகையைப் பொறுப்பேற்றார். “பிரதம ஆசிரியரும், சொந்தக்காரருமாகிய கெளரவ கோ. நடேசய்யருக்காக அன்னரின் மனைவி ஸ்ரீமதி கோ. ந. மீனாட்சியம்மாளால் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது” என்ற குறிப்புடனேயே பத்திரிகை தினந்தோறும் வெளிவந்திருக்கிறது. மீனாட்சியம்மாள் அதில்  நிறைய கட்டுரைகளை எழுதினார். “தேசபக்தன்” அவர்களின் இலட்சிய அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டது. இதே காலத்தில் டொனமூர் ஆணைக்குழு இலங்கை வந்திருந்த போது சர்வஜன வாக்குரிமைக்காக அந்த ஆணைக்குழுவில் நடேசய்யர் சாட்சியமளித்த போது மீனாட்சியம்மாள் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்துடன் சேர்ந்து இயங்கியதுடன் பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி தேச பக்தனில் எழுதினார். 

ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதன் முதலாக அனைவருக்கும் ஒரே நேரத்தில் சர்வஜன வாக்குரிமை கிடைத்த முதல் நாடு. சேர்.பொன் இராமநாதன் போன்றவர்கள் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று டொனமூர் ஆணைக்குழுவின் முன் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கையில் பெண்களின் வாக்குரிமை சங்கத்தின் விடாப்பிடியான போராட்டமே பெண்களும் சேர்த்து 1931இல் வாக்குரிமை வழங்கப்பட ஏதுவாகியது.

நடேசய்யர் எழுதியுள்ள நூல்கள்
  • வெற்றியுனதே,
  • நீ மயங்குவதேன்,
  • நரேந்திரபதியின் நரக வாழ்க்கை,
  • தொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்),
  • இந்தியா - இலங்கை ஒப்பந்தம்,
  • தொழிலாளர் சட்டப் புத்தகம், கதிர் காமம்,
  • அழகிய இலங்கை,
  • Planter Raj, The Ceylon- Indian crisis.
  • ‘ஒற்றன்’, ‘மூலையில் குந்திய முதியோன்’ அல்லது ‘துப்பறியுந்திறம்’ (நாவல்கள்)
  • ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஈ.குணசிங்கவை கேலிசெய்து முதற்பக்கத்தில் வெளியிட்ட கேலிசித்திரம்

விடுதலைக்கான ஆயுதமாக பத்திரிகை
நடேசய்யர், ‘பத்திரிகைகளை அச்சில் வார்த்த ஆயுதங்கள்’ என்றார். அது முற்றிலும் உண்மை. அவர் எழுத்தை சமூக விடுதலைக்கான ஆயுதமாகத் தான் பிரயோகித்தார்கள். பத்திரிகையின் பலம் எத்தகையது என்பதை நன்கு அறிந்து அதனை இயக்கினார்கள். ஆங்கிலேயர்களுக்கும், தோட்டத் துரைமார்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தமது விழிப்புணர்வை மெய்ப்பிப்பதற்கும், உண்மையை பிரச்சாரம் செய்து தொழிலாளர்களை விழிப்புணர்வூட்டி, வலுவூட்டுவதற்கும் அவர்கள் கைகொண்ட ஆயுதம் ஊடகம் தான்.

1924 செப்டம்பர் 10 அன்று அவர் சட்டசபையில் உரையாற்றும் போது
'எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையைவிட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படுத்தமுடியும்'. என்று அழுத்தமாகக் கூறினார்.
தேசநேசன் (1922 - 1923) தேசபக்தன் (1924 - 1929) தொழிலாளி. (1929) தோட்டத் தொழிலாளி (1947) உரிமைப் போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும் சிட்டிஷன் - (Citizen) (1922) ஃபோர்வர்ட் (Forward), (1926) இந்தியன் ஒப்பீனியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர்  (Indian Estate Labour) (1929) என்று ஆங்கிலத்திலும் நடேசய்யர் பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிருர். லேக்ஹவுஸ்சிலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்திய சுதந்திரன் பத்திரியகையின் ஸ்தாபக ஆசிரியர் கோ.நடேசையர் அவர்கள் தான். இதனை அன்று ஆரம்பிக்கும்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு இருந்த நம்பகமான முதற் தெரிவு நடேசய்யர் தான்.
தேசபக்தன் ஆசிரியர் தலையங்க முகப்புச் சின்னம்

வீரகேசரியின் முதல் ஆசிரியரான எச். நெல்லையா என்பவர் நடேசய்யரின் கீழ் தேசபக்தனில் 1927ல் கடமையாற்றியவர். அதன் பின்னர் வீரகேசரி ஆசிரியராக வந்த நாகலிங்கம் என்பவர் நடேசய்யருக்கு மருமகன் உறவாவார்.

இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமாக கருதப்படும் ஏ.ஈ.குணசிங்காவின் “இலங்கை தொழிற் கட்சியில் (Ceylon Labor Union) நடேசய்யரும் இணைந்து அதன் சார்பாக “ஃபோவர்ட்” (Forward) என்கிற பத்திரிகையையும் நடத்தி வந்தபோதும் பின்னர் ஏ.ஈ.குணசிங்க இந்தியர்களுக்கு எதிரான இனவாத நிலைப்பாடு எடுத்தபோது அவருடன் 1929 இல் விலகினார். அந்தத் தொழிற்கட்சியில் நடேசய்யர் உபதலைவராகவும் செயற்பட்டிருந்தார். ஏ..ஈ.குணசிங்கவின் போக்கை கடுமையாக விமர்சித்து தேசபக்தன் பத்திரிகையின் முதற் பக்க கேலிச்சித்திரங்களையும் பிரசுரித்து வந்தார்.

பிரேஸ்கேர்டில் சம்பவம் நிகழ்ந்தபோது போலிஸ் கெடுபிடிகளையும் மீறி பலகூட்டங்களில் கலந்து கொண்டார்கள் நடேசய்யர் தம்பதியினர். அதுபற்றி காலி முகத்திடலில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மீனாட்சியம்மாளும் உரையாற்றினார். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களில் ஒன்றாக பயணித்தார்கள்.

விரிவான ஆய்வின் அவசியம்
நடேசையர்-மீனாட்சியம்மாளுக்கும் இரு பிள்ளைகள் பிறந்தனர் மகன் பாப்பையா, மகள் தாயம்மாள்அவர்களின் தலைமுறையினர். மிகுந்த வறுமையில் வாடி மடிந்தனர். எஞ்சியோர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாப்பாவின் மகள் ஜெகதாம்பாளுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்றாவது மகன் திருகோணமலையில் ஒரு சித்ராவதி எனும் சிங்களப் பெண்ணை மணமுடித்து சிங்களவராகவே மாறிவிட்டதாக அறியக் கிடைக்கிறது.

இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது தமிழ் பெண் குரல் மீனாட்சியம்மாள். அதுபோல  ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்ற பெருமைக்குரியவரும் அவர் தான்.

இன்றுவரை நடேசய்யர், மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்களுக்காக மூலாதாரமாக பயன்படுத்தப்படும் பிரதான நூற்களாக மறைந்த எழுத்தாளர் சாரல் நாடன் கண்டுபிடித்து எழுதிய நூல்களையே பலரும் பயன்படுத்தி வருகின்றன. நடேசய்யரை மறுகண்டுபிடிப்பு செய்து அடுத்த கட்ட ஆய்வுக்கு உந்தியவர் கலானித்து குமாரி ஜெயவர்த்தன என்கிறார் சாரல் நாடன். அதைத் தவிர இவர்களைத் தவிர அந்தனி ஜீவா, லெனின் மதிவானம், தம்பையா, ந.இரவீந்திரன் போன்றோரும் பல சிறப்பான திறனாய்வுகளை செய்திருக்கிறார்கள்.

ஒரு முழு நேர தொழிற்சங்கவாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும், சமூக அரசியல், பெண்ணிய செயற்ப்பாட்டாளராகவும், முழு நேர பத்திரிகையாளராகவும், பாடலியற்றும் கவிஞையாகவும், அதைப் படிப்பரப்பும் பாடகியாகவும் ஒரே நேரத்தில் செயற்ப்பட்ட ஒரு பெண் ஆளுமையை இலங்கை வரலாற்றில் முதற் பெண்ணாகவும், ஒரே பெண்ணாகவும் மீனாட்சியம்மயாரைத் தான் காண முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடேசய்யர் பற்றி அறியக் கிடைத்த அளவுக்கு மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்கள் அரிதாகவே உள்ளன. அதற்கான தீவிர முயற்சிகள் செய்ததாகவும் அறியமுடியவில்லை.


மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்


மலையகத்தின் மறைந்தும் மறையாத பிரபல்ய எழுத்தாளர் சாரல் நாடனின் இயற்பெயர் நல்லையா. இவரின் தாத்தா, பாட்டி தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டத்து உறங்கான்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழகத்தில் அன்று நிலவிய கடும் பஞ்சம் காரணமாக இலங்கை வந்து சாமிமலை சிங்காரவத்தையில் குடியேறினார்கள். இவர்களின் மகனான கருப்பையாவிற்கும் மருமகளான சிவகங்கைக்கும் பிறந்தவர்தான் நல்லையா என்ற சாரல் நாடன் 09.5.1944 அன்று பிறந்த இவருக்கு ஐந்து சகோதரிகள்.

நல்லையா தமது ஆரம்பக் கல்வியை மின்னா தோட்டப் பாடசாலையில் கற்றார். நான்காம் ஆண்டுவரை அங்கு கற்றவர், ஐந்தாம் ஆண்டிலிருந்து பிரசித்திபெற்ற ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய நல்லையா அந்தக் கல்லூரியிலிந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் மாணவராவார் என்பது அனைவரதும் கவனத்திற்குரியது.

அவரது கல்லூரி வாழ்க்கையில் அன்னாரது திறமைகளைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியவர்கள் என திருவாளர்கள் இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், பீ.ஏ.செபஸ்டியன், நவாலியூர் நா. செல்லத்துரை, நயினை குலசேகரம், ஹற்றன் ந.அ. தியாகராஜன் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் நன்றிக் கடனாக சாரல் நாடன் அவர்கள் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தமது கல்லூரிப் படிப்பின்போதே பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். இதனால் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். அத்துடன் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையான ‘தமிழ்த் தென்றலிலும், விடுதிப் பத்திரிகையான தமிழோசையிலும் கட்டுரை, கவிதைகள், எழுதும் பழக்கத்தினைக் கொண்டிருந்தார். அத்துடன் இவர் தமது கல்லூரி வாசிகசாலைக்குப் பொறுப்பாகக் காணப்பட்ட காலகட்டத்தில் வாசிகசாலைக்கு வரும் அதிகமான நூல்களை வாசிப்பதனூடாக தமது வாசிப்புப் பழக்கத்தினையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார்.

கல்லூரிப் படிப்பு முடித்ததும் தமது பரீட்சைப் பெறுபேறு வரும்வரை கண்டி அசோகா கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் சாமிமலை குயில்வத்தைத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தமது பணியை ஆரம்பித்து அப்பணியிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அத் தொழில் தொடர்புடைய பல நூல்களை நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்து பல பரீட்சைகளிலும் சித்தியெய்தி 1972 ஆம் ஆண்டில் தலைமைத் தொழிற்சாலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

தொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகளாக டன்சினேன், கெலிவத்தை நியூபீகொக், டிரைட்டன் என பல தோட்டங்களில் செவ்வனே கடமையாற்றினார். 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி தமது அத்தை மகள் புஷ்பம் என்பவரைத் திருமணம் செய்து ஸ்ரீ குமார், ஜீவகுமாரி என இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார். 

 இவர் தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரியும் காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பல தோட்டங்களில் கடமையாற்றியமையாலும் மலையக மக்களின் பல்வேறு பகுதி மக்களுடன் இணைந்து செயற்பட்டமையாலும் அம் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பான அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதனாலும் அன்னார் மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தமையால் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி உணர்வுபூர்வமாகச் சிந்தித்தார். அதுவே அன்னார் படைத்த பல நூல்களுக்கும் காரணமாக இருந்ததென்றால் அது சற்றும் மிகையாகாது.
சாரல் நாடன் தமது 55 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் முற்று முழுதாகத் தம்மை இலக்கியத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் கொட்டகலை இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். பின்னர் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவ்வேளை ஹட்டன், பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, கொழும்பு என பல இடங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தமிழுக்கென ஒரு அலை வரிசையை ஆரம்பித்தபோது அதன் முதலாவது ஒளிபரப்பில் சாரல் நாடனைப் பேட்டி கண்டு பெருமை கண்டது. அன்னார் தொடர்ந்து ரூபவாஹினியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அனைத்தும் நல்ல நிகழ்ச்சிகள்!

வாசிப்பைத் தமது வாழ்நாள் பழக்கமாக்கிக் கொண்ட சாரல் நாடன் தன்னைப் போலவே ஏனையோரும் வாசிப்பின் மகத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் தமது இல்லத்திலேயே நல்லதொரு நூலகத்தையும் அமைத்திருந்தார்.
அமரர் சாரல் நாடன் தமது எழுபதாண்டு வாழ்வில் நிறைய எழுதிக் குவித்தார். அவற்றுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை; போற்ற த்தக்கவை;
சி.வி. சில சிந்தனைகள் (1986), தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988), மலையகத் தமிழர் (1990), மலையக வாய் மொழி இலக்கியம் (1993), மலையக கொழுந்தி (1994), மலையகம் வளர்த்த தமிழ் (1997), பத்திரிகையாளர் நடேசய்யர் (1998), இன்னொரு நூற்றுக்காண்டாய் (1999), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000), பிணம் தின்னும் சாத்திரங்கள் (2001), மலையகத் தமிழர் வரலாறு (2003), பேரெட்டில் சில பக்கங்கள் (2004), சண்முகதாசன் கதை (2005), புதிய இலக்கிய உலகம் (2006), குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் (2007), கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடான இளைஞர்  தளபதி இர.சிவலிங்கம் (2009), கோ. நடேசய்யர் (2009), சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை (2009) சி.வி. வேலுப்பிள்ளை (2013), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் (2014), 

மலையகத்தின் மூத்த மகன் சாரல் நாடன் 31.07.2014 அன்று காலமானார். 

நன்றி வீரகேசரி சங்கமம்


உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சதாசிவம்



என்னதான் நீண்டகால வரலாற்றை கொண்டவர்களாக மலையக மக்கள் இருந்தாலும் இன்று வரை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். சாதாரண அடிப்படை வசதிகள் சிலவற்றை பெற்றுக்கொடுக்கும்   உள்ளூராட்சி சபைகளே உறுதியாக மலையகத்தில் இல்லாத நிலையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவதென்பது  இன்னும் முழுமையாக சாத்தியமாகவில்லை என்பதை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கின்றது.  

 இந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் அதன் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும்  கடந்த ஐந்து வருடங்களாக பல தரப்பிலும் விதந்துரைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது பற்றி முழுமையான முடிவு இல்லை என்பது வருந்தக்கூடிய விடயம்.  அந்த வகையில், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் கலப்பு முறை எனும் புதிய ‘குழப்பம்’. இந்த புதிய முறையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் குறித்து கடந்த வார அலசலில் ஆராய்ந்திருந்தோம்.

மலையக மக்களுடன் தொடர்புடையதாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இன்னுமொரு குழப்பம் இருக்கிறது. அதுதான் அந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான பிரதேச சபைகளில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள், சேவையைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலாகும்.  பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்ட அரசியல் கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று கடந்த வார இறுதியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் 'உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள்'   என்பது குறித்தே இருவரதும் உரையாடல் அமைந்தது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விருவரும் தெரிவித்த கருத்துக்களையும் உள்வாங்கியதாக தேசிய நீரோட்டத்தில் இன்னும் முழுமையாக இணைக்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.

இலங்கைத் தீவுக்குள் இன்னுமொரு தீவாக அமைந்ததே மலையகப் பெருந்தோட்டங்கள்.  தேயிலை, ரப்பர் ஆகிய பணப்பயிர்களை ஆதாரமாகக் கொண்டது மலையகம். இதில் முதன்மை ஏற்றுமதி பயிரான தேயிலை இலங்கையில் வர்த்தக நோக்குடன் அறிமுகப்படுத்தி 150 வருடங்களை அடைந்துள்ள நிலையில் அதனை மையப்படுத்தி வாழும் தொழிலாளர் சமூகத்தின் வரலாறும் 150 வருடங்களுக்கு மேலாகிறது.   

மலையக மக்களின் பரம்பல் இன்று தொழிலாளர் அல்லாதோரின் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றது. அண்மைய தரவுகளின் படி 15 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்திய வம்சாவளி மலையக மக்களில் சுமார் 10 வீதமானவர்கள் மாத்திரமே அதாவது ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அளவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் வெறும் 5ஆயிரத்துக்கு குறைவான தொழிலாளர்களாக அரசாங்கத்துக்கு சொந்தமான கூட்டுத்தாபன தோட்டங்களில் வாழ்கின்றனர். ஏனையோர் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் எனப்படும் தனியார் நிறுவனங்களின் முகாமையில் இயங்கும் தோட்டங்களிலேயே தொழிலாளர்களாக உள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்த தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க அவர்களின் நாளாந்த நிர்வாக பிரச்சினைகள் வேறாகவுள்ளன.

பொதுவாக இலங்கை நாட்டின் பொதுநிர்வாகம் என்பது கிராமசேவகர் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து பிரதேச செயலாளர் பிரிவு, மாவட்ட செயலகம், அமைச்சு என விரிவடைந்து செல்கின்றது.  நிர்வாக   அமுலாக்கத்திற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அதிகாரமிக்க சபைகளாக உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பன காணப்படுகின்றன.  உள்ளூராட்சி மன்றங்களில் பிரதானமானது பிரதேச சபைகள். அதற்கடுத்து நகரசபைகளும் மாநகர சபைகளும் அடங்குகின்றன.

மலையகப் பெருந்தோட்டங்களைப்பொறுத்தவரையில்   பெரும்பாலும் பிரதேசசபை நிர்வாகத்துக்குள்ளேயே அடங்குகின்றன. ஆனாலும் 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் செயற்படுவதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டம் தெரியாமலேயே பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்றுவரை பிரதேச சபைத் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை, நுவரெலியா பிரதேச சபைகளை மலையகக் கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணியாக போட்டியிட்டோ ஆட்சியமைத்துள்ளன. 

அதேபோல கண்டி, கேகாலை, பதுளை, மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில பிரதேச சபைகளின் உப தலைவர்களாக பெருந்தோட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவான உறுப்பினர்கள் தெரிவாகியுமுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே சிற்சில அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பிரதேச சபையினால் பணியாற்ற முடியாது. இவை கேள்விக்கு உட்படாத வரை சிற்சில பணிகளை முன்னெடுத்து வந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக கண்டி, மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபையை இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி கைப்பற்றி 2006இல் ஆட்சியமைத்தபோது இந்தச்சட்ட சரத்தைக் காரணம் காட்டி நீதிமன்ற ஆலோசனையைப் பெற்று மத்தியமாகாண சபை இந்த பிரதேச சபையை கலைக்கும் வரை பிரதேச சபைச் சட்டத்தில் இத்தகைய ஒரு சரத்து இருப்பது தெரியாமலேயே காலம் கடத்தப்பட்டுள்ளது. 

எனினும் கடந்த பொதுத் தேர்தலின்போது உதயமான தமிழ்முற்போக்குக் கூட்டணியின்   தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பிரதேச சபைச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவோம்  என வாக்குறுதி அளித்ததற்கமைய   கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 2015 ஆண்டு டிசம்பர் மாதமளவில் பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து விரிவான விளக்கங்களுடன் ''பிரதேச சபைச் சட்டம் பெருந்தோட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்படல் வேண்டும்'' என கோரியிருந்தார். குறித்த பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா திருத்தம் செய்வதற்கு உடன்பாடு தெரிவித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

அமைச்சரவையில்,  கூட்டணி சார்ந்த அமைச்சர்களான மனோகணேசன், திகாம்பரம் ஆகியோரும் இதனை வலியுறுத்தியதோடு குறித்த சட்டத்திருத்தம் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சிடம் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதற்கு உரிய முன்மொழிவுகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவையெல்லாம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. 

இந்நிலையில், பிரதேசசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மால் உரிய முறையில் இந்தச் சட்டத்திருத்த நடவடிக்கை பாராளுமன்றிற்கு முன்வைக்கப்பட்டபோதும் அவை இன்னும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாதமை குறித்து தமது விசனத்தைத் தெரிவித்தார்.  

இதன்போது, கருத்துரைத்த   வடிவேல் சுரேஷ் எம்.பி., மகிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் 72 மணித்தியாலத்துக்குள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டினார். தாம் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த 2006 – 2010 ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதி மக்கள் செறிவாக வாழ்ந்த பசறை பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களாகவும் அதன் தொடர்ச்சியாக அவை இரண்டையும் தனித்தனி பிரதேச சபைகளாகவும் உருவாக்க முடிந்ததாகவும் தெரிவித்தார். 

அப்போதைய மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு ஜனாதிபதி மகிந்த விடுத்த பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.  அமைச்சர் அதாவுல்லா காலத்தில் தனது ஊரான அக்கரைப்பற்று நகர் மாநகர சபையாக மாறியதையும் மறைந்த அஷ்ரப் காலத்தில் கல்முனை மாநகரசபை உருவானதையும் கூட நாம் இங்கு நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் அமைச்சர் மனோகணேசன் ஹட்டன், தலவாக்கலை நகரங்கள் மாநகர சபையாக மாற்றப்படும் என அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மலையக நகரங்கள் மாநகர சபையாவது ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு திருத்தம் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசசபைகள் சட்டத்தின் திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பெருந்தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் ஆயினும் மக்கள் ஒரு மில்லியன் அளவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் எல்லா மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. எனவே அவர்கள் அங்கம் வகிக்கக் கூடிய பிரதேச  சபைகளைத் தானும் அதிகாரமுள்ள சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு உண்டு.   

மலையக மக்களுக்கான வீட்டுக்காணி உறுதி, தனிவீட்டுத்திட்டம், 25 விஞ்ஞான பாடசாலைகள் விருத்தி என அபிவிருத்தி சார் விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை விரைவுபடுத்தவும் மலையக மாவட்டங்களில் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கவும் கூட்டணி தலைவர்கள் முன்வர வேண்டும். 

மகிந்த அரசு 72 மணித்தியாலத்தில் செய்து முடித்த காரியங்களை நல்லாட்சி அரசு 72 வாரங்களுக்கு மேலாக இழுத்தடிப்பது நல்லாட்சிக்கும் அதற்கு ஆதரவளிக்கும் கூட்டணிக்கும் அழகல்ல. மகிந்த அலை  மீண்டும் அடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் அலை எந்தப்பக்கம் செல்லும் என யாரும் எதிர்வுகூற முடியாது. 

மீண்டும் ஒரு ஜேம்ஸ் டெயிலர் வேண்டும் - மல்லியப்புசந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 28) 

இலங்கைத் தேயிலையின் 150 வருட பூர்த்தி குறித்தும் இந்தப் பயணத்தில் இணைந்து அழைத்துச் செல்லப்படாத மக்கள் குறித்தும் கடந்த வாரம் பார்த்தோம். தொழிலாளர் மக்கள் நேரடியாக இந்த தொழில் துறையுடன் தொடர்பு கொண்டிருக்கின்றபோது தேயிலைத் தொழிலுடன் தொடர்புடைய ஏனைய தொழில் துறையினர் நிறுவனங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கைத் தேயிலையின் தந்தை என போற்றப்படும்  ஜேம்ஸ் டெயிலர் 1852 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்ததாக அறியப்படுகின்றது. ஏறக்குறைய 15 வருடங்கள் தேயிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அவர் 1867 ஆம் ஆண்டிலேயே வர்த்தகப்பயிராக தேயிலையை அறுவடை செய்துள்ளார். மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலைத் தொழில் துறை கண்டி – நுவரெலியா மாவட்ட எல்லையில் 'லூல்கந்துர' எனும் தோட்டத்தில் 19 எக்கரில் இடம்பெற்றுள்ளது. 

முதலாவது எற்றுமதியாக 23 கிலோ கிராமுடன் ஆரம்பமான தொழில்துறை இன்று சுமார் வருடாந்தம் 300 மில்லியன் கிராம்களை ஏற்றுமதி செய்கிறது. சுமார் இரண்டு இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலைப்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது. இவற்றுள் முறையே நுவெரலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி, கேகாலை, மொனராகலை, களுத்துறை என ஒன்பது மாவட்டங்களில் பரப்பளவு ரீதியாக தேயிலை பயிரப்படடு வருகின்றது. கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியிலும் குருநாகல் மாவட்டத்தில் சிறு அளவிலும் கூட தேயிலை பயிரிடப்படுகின்றது. 

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதமாக அமைந்துள்ள தேயிலைக் தொழில்துறையானது வருடாந்தம் சராசரியாக 1.25 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாகப் பெற்றுத் தருகின்றது. இந்த தேயிலைத் தொழில்துறையில் நாட்டு சனத்தொகையில் 20 சதவீதமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் ரீதியாக  தங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளிலும் ஜனவசம, எஸ்பிசி தோட்டங்களில் சுமார் ஐயாயிரம் பேரும் நேரடி தொழிலாளர்களாக இருக்கின்றபோது தெற்கு பகுதிகளில் நான்கு லட்சம் பேர் சிறுதோட்ட உடமையாளர்களாக உள்ளனர். 

இவை தவிர தேயிலை வியாபாரத்துடன் தொடர்புடையதாக ஏற்றுமதித்துறை, கப்பல்துறை, போக்குவரத்துத்துறை, அச்சிடல் பொதி செய்தல் என பல்வேறு உப தொழில் வாய்ப்புகளை தேயிலை தொழில்துறை வழங்கி வருகின்றது. நாட்டின் அந்நிய செலாவணியில் 15 சதவீத வருமானத்தைப் பெற்றுத்தரும் தேயிலைத் தொழில் துறையானது விவசாய எற்றுமதி வருமானத்தில் 65 சதவீதமாகவும் உள்ளது. 

ஜேம்ஸ் டெயிலரினால் வர்த்தக பயிராக அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 'சிலோன் டீ' எனும் வர்த்தக நாமம் உலகில் பிரபலமாகத் தொடங்கியது. சிங்கம் பொறிக்கப்பட்ட சிலோன் டீ லட்சினை உலக சந்தையில் பெரும் வரவேற்புக்கு உள்ளானது. பிரித்தானியர் இலங்கையை தமது ஆட்சியில் வைத்திருக்க இந்த தேயிலைத் தொழில்துறையே காரணமானது. இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரும் கூட பிரித்தானியரகள் தங்களது  கம்பனிகள் உடாக தேயிலைத் தொழில் துறையில் நிலைத்திருந்தனர்.

 1965 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகில் தேயிலை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடு எனும் பெயரை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இன்று சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுக்கொண்டு நான்காவது இடத்தில் இருக்கின்ற போதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமம் கொண்டிருக்கும் நற்பெயர் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. 

இலங்கையில் தேயிலை தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு என 1976 ஆம் ஆண்டு முற்றுழுதாக அரசுக்கு சொந்தமான சபையாக இலங்கைத் தேயிலை சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச வர்த்தக நாமத்தைக்கொண்ட இந்த தொழில்துறையை முறைமையான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கபட்ட தேயிலை சபையானது நான்கு முக்கிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டு செயற்படுகின்றது.

இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம், இலங்கைத் தேயிலை பிரசார சபை, தேயிலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், தேயிலை எற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திணைக்களம் என்பனவே அந்த நான்கு பிரதான நிறுவனங்களுமாகும். 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இலங்கைத் தேயிலை சபையானது திட்டமிடல், நெறிப்படுத்தல்  பணிகளை மேற்கொள்வதுடன் தேயிலை உற்பத்தி தொடர்பான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதுடன் அறுவடை,  மீளபயிரிடல், தேயிலைத் தொழிற்சாலைகளை விருத்தி செய்தல் பராமரித்தல், தேயிலையின் தரத்தினைப் பேணுதல், களஞ்சியததை உறுதிப்படுத்தல் மற்றும் உரிய முறையில் பொதியிடலை உறுதிப்படுத்தல் என்பனவற்றை தேயிலை சபையே மேற்பார்வை செய்யும் பொறுப்பைக்கொண்டுள்ளது.

தேயிலை பிரசார சபையானது உலகம் முழுவதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமத்தை பரப்புவதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேயிலை சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் , மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு இந்த நிறுவனத்துக்கு உரியது. 

தேயிலைச் சபையின் ஏற்றுமதி பிரிவு தேயிலை விநியோகம், களஞ்சியப்படுத்தல், பொதியிடல் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் ஏலத்தினை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து எற்றுமதியாகும் எல்லா வகை பண்டக்கு றிகளிலும், ISO 3720 தர நிரண்யம் இருப்பதை உறுதி செய்வதும் தேயிலை ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் திணைக்களத்தின் பொறுப்பாகும். 

1986 ஆண்டு உருவாக்கப்பட்ட தேயிலைச் சபையின் ஆராய்ச்சி ஆய்வு கூடம் இலங்கைத் தேயிலையின் தரத்தினை உறுதிசெய்யும் பொறுப்பை உடையது. சர்வதேச தரங்களுடனான ஆய்வுகூடங்களின் ஊடாகவும் முறைமைகளின் ஊடாகவும் தனது ஆய்வு பணியினை முன்னெடுக்கும். இந்த நிறுவனம் இலங்கை தர அங்கீகார சபையின் நியம அங்கீகாரத்தையும் 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளது. 

இதனோடு இணைந்ததாக தேயிலை சுவை பார்க்கும் அலகு ஏலத்திற்கும் எற்றுமதிக்கும் முன்பதாக அதனை சுவைபார்த்து ஆய்வ செய்யும் பொறுப்பினைக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஒப்பீட்டுத் தேவைக்காகவும் பண்டக்குறியீட்டுக்காகவும் வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேயிலையினை ஆய்வு செய்து அனுமதி அளிப்பது இந்த அலகின் பொறுப்பு. எந்த நாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படாலும் அவை எற்றுமதி செய்யப்படும்போது சிங்கம் சின்னம் பொறிக்கப்பட்ட 'சிலோன் டீ' என ஏற்றுமதி செய்யப்படுவதை இந்த தேயிலைச் சுவை பார்க்கும் அலகு உறுதிப்படுத்துதல் வேண்டும். 

மேற்படி இலங்கை  தேயிலை சபையுடன் தொடர்புடையதாக அல்லாமல் கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம், இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் என்பனவும் தேயிலைத் தொழில்து றையுடன் தொடர்புடைய அமைப்புகளாக உள்ளன. தேயிலையை ஏலத்தில் வாங்கும் - விற்கும் வர்த்தகர்கள், தேயிலையை எற்றுமதி செய்யும் கம்பனிகள் தமது நலன்களை இலக்காகக் கொண்டு இவ்வாறு அமைப்புகளாக இயங்கி வருகின்றன. 

இவ்வாறு பன்மைத்துவ பங்காளிகளால் இயங்கிவரும் தேயிலைத் தொழில் துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் தேயிலைத் தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் கடும் குளிரிலும், மழையிலும் காடு மலைகளில் ஏறி இறங்கி அறுவடையைப் பெற்றுத்தாரத போது மேற்சொன்ன எந்த நிறுவனமும் இயங்குவதற்கான ஆதராம் அற்றுப்போய்விடும். 

என்னதான் இலங்கையின் தேயிலை 150 ஆண்டுகளை எட்டியிருந்தாலும் இந்த தொழில் துறையின் போக்கு வீழ்ச்சியையே காட்டிநிற்கின்றது. இலங்கையின் அந்நிய செலாவனி வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் வரமான மூலங்களில் முதலாவது இடத்தை இப்போது வெளிநாட்டில் வேலை செய்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்களே பிடித்துக்கொண்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றோர் அனுப்பும் அந்நிய செலாவணியின் தொகை 7.2 பில்லியன் டொலர்களாக உள்ள நிலையில் உல்லாச பயணக்கைத்தொழில் மூலம் 3.5 பில்லியன் டொலர்கள் வருமானமாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கு அடுத்த நிலையில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மூலமான வருமானமாக அமைய நான்காம் இடத்தில் 1.25 பில்லியன் டொலர்கள் வருமானத்தையே தெயிலை ஏற்றுமதி பெற்றுக்கொடுக்கின்றது. 

தேயிலைத் தொழில் துறையின் வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியாக தேயிலைக்கு பிரதியீடாக வெறு பானங்கள் அறிமுகமானமை, பிரதான இறக்குமதி நாடான ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் அந்த நாட்டு நாணயமான ரூபிலில் ஏற்பட்ட பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் இலங்கைத் தேயிலையை முந்திக்கொண்டு சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை உற்பத்தியில் போட்டியிட்டு செயற்படுகின்றமை இன்னும் உலகில் தேயிலைக்கு உரிய சந்தை வாய்ப்பு இருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது. 

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் திறந்த பொருளதார கொள்கைகள் இறக்குமதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் எல்லாத் தொழில் துறைகளிலும் ஒரு வீழ்ச்சிப்போக்கை உருவாக்கியது. ஆடை ஏற்றுமதி தேயிலையை முந்திக்கொண்டபோதும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் ஏற்றுமதி வருமானத்தில் பெரும்பகுதி வெளிநாட்டுக்கே திரும்பி சென்றுவிடும். 

இலங்கையின் தனித்து வத்துடன் இயங்கி வந்த தேயிலைத் தொழில் துறையையை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்பின்றி தனியார் வசம் ஒப்படைத்து அந்த தொழில் துறையின் தேசிய முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது எனலாம். இதனால் தேயிலைத் தொழில் துறை மாத்திரமல்ல அதில் தங்கிவாழும் தோட்டத் தொழிலாளர்களினதும் தேசிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது.

குறைந்த வேதனம், பராமரிப்பு இல்லாத தோட்டங்கள், என தொழிலாரையும் இறக்குமதி செய்து கலப்படம் செய்த ஏற்றுமதியினால் சிலோன் டீ எனப்படும் வர்த்தக நாமத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி இலங்கை நாடு தங்க முட்டையிடும் வாத்தாக வளர்த்திருக்க வேண்டிய சொந்த கைத்தொழிலை தாரைவார்த்து வருகின்றது. இனி மீண்டும் தேயிலைக் கைத்தொழில் துறையை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் என்பது இன்னுமோர் ஜேம்ஸ் டெயிலர் வேண்டப்படுகின்றார். 

நன்றி சூரியகாந்தி 

மலையக மக்களுக்கான காணியும் காணி உறுதியும் - திட்டம் எளிதானதா? -கபில்நாத்-



மலையக அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மலையக மக்களுக்கான காணி மற்றும் காணி உறுதி முதலான விடயங்கள் செயற்பாட்டு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேசுபொருளாகியிருப்பது அவதானத்துக்குரியது. நாட்டில் சிங்கள பெரும்பான்மை இனம் தவிர்ந்த ஏனைய இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது மீள் குடியேற்றத்துக்கான காணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் மலையக மக்கள் இப்போதுதான் தமது குடியேற்றத்திற்கான காணிப் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வடக்கில் படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாபுலவு, வலிவடக்கு என பல்வேறு இடங்களில் காணி மீட்புப் போராட்டம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல முஸ்லிம் மக்கள் வில்பத்து பிரதேசத்தை அண்மித்து தமது முன்னைய குடியிருப்புகளில் மீண்டும் குடியேற பொராட்டம் நடாத்துகின்றனர். இந்த இரண்டு போராட்டங்களிலும் அரசாங்கமும் ஆக்கிரமிப்பு வாதமும்தலை தூக்கியுள்ளதோடு இரண்டும் யுத்தத்தின் விளைவுகளானது.

வடக்கு காணிகள் இராணுவ வசம் இருப்பது இன்னும் நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்து வருவதற்கான சான்று. வில்பத்து விடயத்தில் சூழலியலாளர்களும் அக்கறை காட்டுவது போல தெரிந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தடயங்களை ஆதாரமாகக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எது எவ்வாறெனினும் இவை இரண்டும் மீள் குடியேற்றத்துக்கான போராட்டங்கள். ஆனால், மலையக மக்களைப் பொறுத்த வரையில் இப்போதுதான் அவர்கள் தமது குடியிருப்புக்கான காணி போராட்டத்தையே ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றில் இதுவரை காலமும் இப்போதைய எழுச்சிபோல தமக்கான வாழ்விட காணி தொடர்பான எழுச்சி ஒன்றினை இதற்க முன்னர் காண்பதற்கு அரிது.

தலவாக்கலையில் சிவனு லட்சமணன் உயிர் நீத்த  போராட்டம் காணிக்கானது எனினும் அது மக்களின் குடியிருப்பு காணிகளை இலக்கு வைத்து நடந்தது அல்ல. தொழிலாளர்கள் தாம் தொழில் செய்யும் காணிகளை பெரும்பான்மையின வெளியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்திய போராட்டத்திலேயே  சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். ஆனால், அதற்கு பின்னரான இன்றைய நாள்வரை எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பெரும்பான்மை இன மக்களுக்கு மலையகப் பெருந்தோட்டக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுக்கொண்டு வருவது திட்டமிட்ட அடிப்படையில் பரவலாக இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது. 

மலைப்பாங்கான நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் அதன் தாக்கம் குறைவு எனினும் ஓரளவு சமதன்மை கொண்ட மலைச்சரிவுகள் குறைந்த தமிழ் மக்கள் செறிவு குறைவாக வாழும் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் மிக வேகமாக மலையக பெருந்தோட்ட காணிகள் பெரும்பான்மை இன மக்களுக்கும் அவர்கள் சார்ந்த சிறு கம்பனிகளுக்கும் திட்டமிடப்பட்ட மறைமுகமான நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகப் பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேசத்திலும் அதேபோல மகாவலி அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி பகிர்வுகள் இடம்பெற்றும் வந்துள்ளது. 

இது இவ்வாறிருக்க மலையகப் பெருந்தோட்ட மக்களின் லயன் குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனிவீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஏழுபேர்ச்சஸ் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் அவற்றுக்கும் காணியுறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படடு வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது. இதற்காக குறிப்பிட்ட அமைச்சு மேற்கொள்ளும் காத்திரமான முயற்சிகளைப் பாராட்டவே வேண்டும். அண்மையில் கூட சுமார் 2800 வீட்டுக்காணிகளுக்கு காணியுறுதி வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதியை அழைத்து வந்து தலவாக்கலை நகரில் தனிவீட்டுக் காணிகளுக்கான காணியுறுதிப்பத்திரங்களை குறிப்பிட்ட அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் திகாம்பரம் வழங்கிவைத்திருந்தார். 

இதற்கு முன்னரும் கூட சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதேபோல அமைச்சர் சந்திரசேகரன் காலத்திலும் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் வீட்டுறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அதேபோல 2015 ல் உருவான 100 நாள் ஆட்சிக் காலத்திலும் காலம் சென்ற அமைச்சர் க. வேலாயுதம் ஏற்பாட்டில் 'பசுமை பூமி' காணியுறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் எதோ ஒரு வகையில் சட்ட வலு குறைந்த உறுதிகளாகவே அமைந்திருந்தன. ஒன்றில் லயன் வீடுகளை சொந்தமாக்குதல் அல்லது அதிகாரமற்ற அரச நிறுவனங்களினால் காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுதல் போன்றனவே நடந்து வந்துள்ளது. 

மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில் அவரது   அமைச்சின் கடிதத்தலைப்பில் காணி உரிமம் வழங்கப்பட்ட வீட்டுரிமையாளர்களும் மலையகத்தில் உள்ளனர். இன்றும் கூட அவரது காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக தொழிலாளர்களின் ஊழியர் சேலாப நிதியை ஈடாக வைத்து கடன் பெற்று கட்டப்பட்ட சுமார் மூவாயிரம் வீடுகளுக்கு உரிய காணியுறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. பயனாளிகள் கடனை முழுமையாக செலத்தியும் இன்னும் அவர்களுக்கு உறுதி வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் தொழிலாளர்களுக்கு கட்டி வழங்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டத்திற்கு எவ்வாறான உறுதியினை வழங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியே. 100 நாள் ஆட்சிக் காலத்தில் அமரர் வேலாயுதம் ஏற்பாட்டில் வழங்க்பட்ட பசுமை பூமித்திட்டக் உறுதிப்பத்திரங்களும் முழுமையான உறுதிப்த்திரங்கள் இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையும் கூட. ஆனால், 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு வடிவத்தில் மலையக மக்களுக்கு காணியுறுதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எடுத்த முயற்சியை வரவேற்க வேண்டும். 

இவ்வாறான பின்னணிகளுக்கு மத்தியில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டில் புதிய கிராமங்களை உருவாக்கும் பொறுப்பினை ஏற்ற அமைச்சர் திகாம்பரம் தனது முன்னெடுப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டார். முன்னைய நிலைமைகள் போல் அல்லாது அரசியல் ரீதியானதாக அல்லாமல் காணி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஏழு பேர்ச் காணிக்கான காணியுறுதிகளை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

தலவாக்கலையில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் இத்தகைய காணி உறுதிகளைக் காண முடிந்தது. இப்போது தமது அமைச்சினால் இரண்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் இதுவரை முன்னெடுக்ப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டக்க காணிகள் என்பனவற்றுக்குமாக சுமார் 2800 காணியுறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையை அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான விழா நடாத்துவதற்கான எற்பாடுகளும் இடம்பெறுவதாக அமைச்சு வட்டாரங்கள் மூலம் வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி பாராட்டி வரவேற்கத்தக்கதே
ஆனால், மலையக மக்களின் வீட்டுத் தேவையுடன் ஒப்பிடுகின்றபோது இந்த வேகம் போதுமானதா இப்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் இலக்குகளை எளிதாக எட்டுவதற்கு போதுமானதா? எனும் கேள்விகள் எழாமல் இல்லை. 

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால்  கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருப்பிதற்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் சுமார் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகள். பெரந்தோட்டப்பகுதிக்குள் அமைக்கப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நடைமுறையில் இதனை விட அதிகளவான வீடுகள் அவசியம் எனவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த 160000 வீடுகளையம் கட்டி முடித்து அவற்றுக்கு காணியுறுதிகளைப்பெற்றுக்கொடுப்பது எனில் இப்போதைய வேகத்துடன் பார்த்தால் இன்னும் எத்தனை வருடங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வீட்டுக்காணி தேவை பூரத்தி செய்யப்படும் எனும் கேள்வி எழுகின்றது. 

இரண்டு வருடங்களில் சுமார் 3000 வீடுகளுக்கே இந்த காணியுறுதிகள் பெற்றுக்கொடுக்க முடியும் எனில் 5 ஆண்டு திட்டம் நிறைவறும்போது சுமார் 15000 வீடுகளுக்கே காணியுறுதிகள் வழங்கப்படும். இது அமைச்சினால் முன்வைக்கபட்டுள்ள இலக்கில் பத்தில் ஒரு பங்கினை விட குறைவானதாகும். அதாவது 160000 வீடுகளைக் கட்டி அவற்றுக்கு காணி உரித்துக்களைப்பெற்றுக்கொடுக்க இன்னும் 50 வருடங்களாவது செல்லும் என்பதே பொதுவான கணிப்பாக வருகிறது. எனவே சமர்ப்பிக்கபட்டுள்ள திட்டம் ஐந்தாண்டுத்திட்டமா? ஆல்லது ஐம்பதாண்டு திட்டமா? எனும் கேள்வி வீடமைப்பு மற்றும் காணி உறுதி வழங்கும் விடயத்தில் எழுகின்றது. இது குறிப்பிட்ட அமைச்சு மீது வைக்கின்ற குற்றச்சாட்டு அல்ல. மலையயப் பெருந்தொட்ட மக்களின் காணி பிரச்சினையின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டுவதற்கான கணக்கீடே ஆகும். 

மலையக மக்களின் அரசியல வரலாற்றை எடுத்துப்பாரத்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான போராட்ட கோஷங்களுக்கு அது உட்பட்டு வந்திருப்பதனை அவதானிக்கலாம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கம் உருவான 1920 கள் காலப்பகுதியில் அவர்கள் தமது தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குவததையே தமது போராட்டமாகக் கொண்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கொத்தடிமைகள் போல வைக்கப்பட்ட அந்த சமூகம் குறைந்தபட்சம் அமைப்பாக்கம் பெறும் ஒரே வழிமுiறாக இருந்த தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கவே அதிகமாக அவர்கள் ஆரம்பத்தில் போராட வேண்டியிருந்தது. எனினும் அந்த செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த வேகமும் அதற்கு தலைமை கொடுத்த கோ.நடேசய்யரின் தலைமையும் 1930 களிலேயே சர்வஜன வாக்குரிமையுடன் கூடியதாக தமக்கான இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. 

1934 ஆம் ஆண்டுகளிலேயே கோ.நடேசய்யர் மலையக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் செய்து ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே 1920 – 1940 வரையான காலப்பகுதி என்பது மிக வேகமாக தொழிற்சங்க பலத்தின் ஊடாக அரசியல் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்த காலமாக அமைந்தது. 1940 முதல் 1952 வரையான காலப்பகுதி அப்போது உருவான அரசியல் எழுச்சியை இன்னும் வேகப்படுத்தியிருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றமும் அவர்களின் அரசியல் வியாபகமும் இலங்கை சுதந்திரமடையும் நாட்களில் 7 உறுப்பினர்களை மக்கள் அவையில் இறுத்தியது. 

எனினும் சுதேச அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமைச்சட்டம் மலையக மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கிவிடவே 1948 முதல் 1978 வரையான 30 ஆண்டு காலப்பகுதியை அரசியல் சூனியமாக்கிவிட்டிருந்தது எனலாம். இந்த முப்பது ஆண்டுகளில் இவர்களின் போராட்டம் முழுவதும் பிரஜாவுரிமையைப் பெறுவது எனும் போராட்டத்திற்குள்ளேயே அடங்கிப்போனது. இடையில் 1964 ஆம் ஆண்டு இந்த மக்கள் மீது திணிக்கப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் இந்த மக்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என பங்குபோட்டு பலம் கறைந்தவர்களாகக்கியது. எனவே இடையில் எது தமது நாடு என தீர்மானிப்பதிலும் மலையக மக்களது போராட்டம் அமைந்தது. 

எனினும் 1977 க்குப்பின்னர் மலையக மக்கள் தமது நாடு இலங்கைதான் என்பதை ஓரளவு உறுதி செய்து கொண்டு பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதிலேயே தமது கவனத்தைக்கொண்டிருந்தனர். 1990 ஆண்டு ஆகுகையில் ஓரளவுக்கு பிரஜாவுரிமை பிரச்சினை தீர்வினை எட்டியது. தாங்கள் இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்து கிடைக்கத்தொடங்கியவுடனேயே அவர்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் காணியுரிமை பற்றிய கோஷம் அரசியல் ரீதியாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். இப்போது இருப்பதைவிட அதிக பலம் பொருந்திய அரசியல் சக்தியாக பாராளுமன்றில் ஆட்சியை தீர்மானிக்கின்ற ரிமோட் கொண்டரோல் ஆக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது. 

1977க்கும் 1994க்கும் இடையிலான கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருந்த பலம் போல இனி ஒருபோதும் மலையக மக்களின் பலம் பாராளுமன்றில் அமையாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. வாக்குரிமை இழந்திருத்த மக்கள் தமக்கு வாக்களிக்கும் சக்தி கிடைத்தவுடன் தமது சக்தியை சரியா பாவித்திருந்தனர். அப்போது காணியுரிpமைக்கான கோஷம் அரசியல் ரீதியாக வலுவாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். அது அவ்வாறானதாக அமையவில்லை என்பது துரதிஸ்டவசமானதாகும்.

இதனை உணர்ந்து கொண்ட அப்போதைய மலையகத்தின் எழுச்சி இயக்கமான மலையக மக்கள் முன்னணி காணி உரிமையையும் தனவீட்டு கோரிக்கையையும் அரசியல் சுலோகங்களாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆசனத்தை துரும்புச்சீட்டாகப்பெற்றது. அதுவரை இருந்த 17 அண்டுகால  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை தூக்கியெறிந்து சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு மலையக மக்கள் முன்னணி சயேட்சையாக பெற்றுக்கொண்ட அந்த ஒற்றை ஆசனமே கைகொடுத்தது. அந்த அரசியல் பலத்தினைக் கொண்டு மலையக மக்களின் காணி, தனிவீட்டு விடயத்தை ஒரு பிரகடனமாகக் கொண்டு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய இருக்கவேண்டும். அதற்கான தொலைநோக்கு சிந்தனையும், அரசியல் பலமும் மலையக மக்கள் முன்னணிக்கு இருந்தது. துரதிஸ்டவசமாக பாராளுமன்ற ஆசனம் கிடைத்தும் ஆடிப்போன அரசியலாக அது மாறியது. 

அதன் பின்னரும் கூட 1996 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டபோது காணி, வீட்டுக்கொள்கைகள் உறுதியாக முன்வைக்கப்பட்டிருக்கலாம். அந்த வாய்ப்பும் நழுவவிடப்பட்டது என்றே சொல்லலாம். அதன்பிறகு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இ.தொ.கா வசமானது. 2009 ஆம் ஆண்டு ஆகும்போது மகிந்த ஆட்சிக் காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 11 பேர் பாராளுமன்றில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆக 1977 – 1994 மற்றும் 1994 க்கும் 2014 க்கும் இடைப்பட்ட சமார் 35 வருட காலப்பகுதி மலையக மக்கள் குறித்த தீர்க்கமான அரசியல் கோரிக்கைகள் எதுவும் எழுப்பப்டாத காலப்பகதியாக அமைந்தது என்றே கொள்ள வேண்டும். இந்த 35 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2000 காணியுறுதிகள் என வழங்கப்பட்டிருந்தால் இப்போதைக்கு 70000 வீட்டுக்காணியுறுதிகள் வழங்கப்பட்டிருக்கும் எனவே 2015 ல் உருவாக்கப்பட்ட அமைச்சின் இலக்கு இலகுபடுத்தப்பட்டிருக்கும். எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு தற்போது பெரும் சுமையொன்றை தூக்குவதற்கான முயற்சி மேற்கொள்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

இந்த அமைச்சு உருவாக்க பின்புலத்தில் கூட ஒரு கூட்டணியும் அதனை நோக்கிய மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கின்றது என்பதன் அடிப்படையில் மக்கள் எப்போதும் தமது முடிவுகளை தெளிவாக முன்வைக்கிறார்கள் என்பதையும் தலைவர்கள் தமது திட்டங்களை சாத்தியமான திட்டங்களாக முன்வைத்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டியுள்ளது. 

நன்றி தினக்குரல் 

77 கலவரம்: “போர் என்றால் போர்” - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 22

“ஆவணிக் கலவரம்” என்று அழைக்கப்படும் 77’ கலவரம் நிகழ்ந்து சரியாக 40 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

1977ஆம் ஆண்டு யூலை தேர்தலில் ஐ.தே.க பாரிய வெற்றி பெற்றபோதும், சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்தது. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தமிழீழப் பிரகடன விஞாபனத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. தமிழீழத்துக்கு சைகை செய்யும் மக்கள் ஆணையாகவே நோக்கப்பட்டது.

இலங்கையில் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பின்னரும் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றோருக்கும், வெற்றியீட்டியோருக்கும் இடையில் ஆங்காங்கு அடிதடிச் சண்டைகளும், கலவரங்களும் இடம்பெறுவது ஒரு தேர்தல் மரபாகவே ஆகிவிட்டிருந்தது. அது இனக்கலவரமாக தம் மீது பாயாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக தமிழர்கள் ஒதுங்கி வீட்டில் முடங்குவதையும் நாம் அவதானித்தே வந்திருக்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஐ.தே.க ஆதரவாளர்கள் வெற்றியை வன்முறையுடன் கொண்டாடினர். நாட்டின் பல பாகங்களில் சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசாசக் கட்சி ஆதரவாளர்களின் மீது மோசமான தாக்குதலை ஆரம்பித்தனர். அவர்களின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகலை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறிமாவின் 'அவசரகால' வல்லாட்சியை மாற்றுவேன் என்று உறுதியளித்து பதவியேற்ற ஜீ.ஆரின் பிரவேசம் இப்படி வன்முறையுடன் தான் ஆரம்பமானது. அதுவே மூன்று வாரங்களில் இனக் கலவரமாக உருவெடுத்தது.

இலங்கையில் சிறு இனவாத தீப்பொறியும், சட்டென்று பற்றியெரிந்து பெருந்தீக்காடாக பரவுவதற்கு முழு வாய்ப்பு உள்ள நாடென்பதை அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பேரினவாதமயப்பட்ட சிவில் சமூகம் தயார் நிலையில் இருக்கிறது என்பது தானே அதன் பொருள். வரலாறு நெடுகிலும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது அல்லவா.


கலவரத்தின் தொடக்கம்
1977ம் வருடம் ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் மாலை யாழ். புனித பற்றிக் கல்லூரி மைதானத்தில் கானிவெல் நிகழ்ச்சியொன்று நடந்தது. 12 அன்று இக் கண்காட்சிக்குச் சிவில் உடையில் வந்த யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்தைச் சேர்ந்த சிறீலங்காக் காவற்றுறையினர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டனர். அங்கு வந்திருந்த பெண்களோடு பாலியற் சேட்டைகளில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்தனர்.. இதனால் ஆத்திரமடைந்த யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. பொதுமக்களது எதிர்ப்புக்கு அஞ்சி சிவில் உடையில் நின்ற காவற்றுறையினர் ஒடித்தப்பினார்கள்.

இது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் (Walter Schwarz: Tamils of Sri Lanka, Minority Rights Group Report 1983) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டனர்' எனக் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்திற்குச் திரும்பிச் சென்ற பொலிசார் ஆயுதபாணிகளாகப் பல நூற்றுக்கணக்கான காவற்றுறையினரை இறக்குகளிலும், ஜீப் வண்டியிலும் ஏற்றிக்கொண்டு மீண்டும் பொருட்காட்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டார்கள். பதிலுக்கு யாழ்ப்பாணப் பொதுமக்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடலானார்கள். யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள மதுபானக் கடையை காவற்றுறையினர் உடைத்துவிட்டு மது போதையில் ஆடிப்பாடினார்கள். யாழ்ப்பாண நகரில் பல தீமூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றன. இது பற்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

ஆத்திரமுற்ற பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தச் செய்கையால் நால்வர் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.

இந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமிர்தலிங்கம் பொலிசாரால் அசிங்கமாக திட்டப்பட்டு தாக்கப்பட்டார். ஓகஸ்ட் 19 அன்று அவர் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் உரையாற்றியபோது,
“சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நான் சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.
நீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்முனையினால் என்னைத் தாக்கினார்... நாட்டை இப்படியா ஆள்கிறீர்கள்” என்று வினவிய போது,

போர் என்றால் போர்
அதற்கு பதிலளித்த பிரதமர் ஜே.ஆர்..,
'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' 
என்றார். இதைத் தான் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது.

பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எதையும் கேட்கவில்லை. அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவும் இல்லை. ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கவும் இல்லை. மாறாகத் தமக்கு முன்னைய அரசாங்கம் போல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆள விருப்பமில்லை என்றும் மாறாக சாதாரண சட்டத்தின் கீழேயே நாட்டை ஆளப்போவதாகக் கூறினார்.

இதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ்மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துக்களைச் சூறையாடவும் தமிழர் வீடுகளுக்குத் தீ வைக்கவும் ஜே.ஆர் அரசினால் வழங்கப்பட்ட பகிரங்க அனுமதியாகவே எடுத்துக்கொண்டனர்.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களும் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்தது. யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவுத் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அதில் பயணம் செய்த சிங்கள மாணவர்கள், பெளத்த பிக்கு மாணவன் ஒருவனை இருக்கையில் படுக்கவைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டு அதன் மீது சிவப்பு மையை ஊற்றி தமிழர்கள் புத்த பிக்குவைக் கொன்று விட்டார்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் நயினாதீவுப் புத்த விகாரையை உடைத்து விட்டார்கள் என்றும் சத்தமிட்டு முழக்கமெழுப்பினர். இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.

இதேவேளை கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்த இரவுத் தபால் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அந்தத் தொடருந்தும் சிங்களவரால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் நாடு பூராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டன. திருகோணமலை, வவுனியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்புமற்றும் மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சன்சோனி
சன்சோனி விசாரணை ஆணைக்குழு
1977ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து, இக்காலம் பற்றி விசாரணை செய்வதற்காக இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சன்சோனி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை ஜே.ஆர். நியமித்தார். விசாரணை முடிவில் சன்சோனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிடுகையில், இந்த இனக்கொலைக்கு காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், வதந்தி என்பனவே காரணமென அடையாளப்படுத்தினார். அரசாங்கம் இந்த முழு அறிக்கையையும் வெளியிட்ட போது அதன் பெருமளவு பிரதிகள் ஒரேயடியாக வாங்கப்பட்டு பலரின் கைகளைச் சென்றடைய விடாமல் கொளுத்தப்பட்டதாக ஹரிச்சந்திர விஜேதுங்க தெரிவிக்கிறார். பிரபல சிங்கள தேசியவாதியான அவர் அந்த அறிக்கையை மீண்டும் ஒரு தனியார் வெளியீட்டு நிருனவத்துக்கு ஊடாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிட்டதுடன், அதன் முன்னுரையில் இந்தக் கலவரம் தமிழர்களால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கலவரம் என்று நிறுவ முயல்வதைக் காண முடியும்.

தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,500ற்கும் அதிகம் என அரச சார்பற்ற மனிதநேய அமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.

கொழும்பில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் கடுமாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது வீடுகளை, வியாபார ஸ்தலங்களை தாக்குதல்களுக்கு இரையாக்கிவிட்டு நிர்க்கதியாக நின்ற இந்தத் தமிழ் மக்கள் கொழும்பில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். சிலர் பாதுகாப்பு தேடி முன்கூட்டியே அகதிமுகாம்களை சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். கொழும்பிலே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றபோது, அவர்களை கப்பலிலேற்றி வட மாகாணத்திற்குத் தான் அரசாங்கம் அனுப்பி வைத்ததையும் கவனிக்க வேண்டும். தமிழர் பிரதேசம் மட்டும் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று அரசு ஏன் முடிவு எடுக்கவேண்டும் என்பதையும் கவனித்தல் அவசியம்.
பாடசாலையில் தங்கியிருந்த அகதிகள் தண்ணீருக்கு வரிசையாக
அதுபோல மலையகத்தில் பாதிக்கப்பட்ட பல இந்தியாவம்சாவளி மக்களையும் அரசாங்கம் வவுனியாவுக்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைத்தது. மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் தேடி வடக்குக்கு புறப்பட்டார்கள். மேலும் பலர் தமிழகத்துக்கு திரும்பினார்கள். இந்தியாவுக்கு திரும்பிச் சென்ற மலையகத் தமிழர்கள் அங்கு சிலோன்காரர்களாகவே அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலும் அகதிகளானார்கள்.

பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்றும் கத்திக்குத்து, கத்திவெட்டு, இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பனவற்றால் இவை ஏற்படுத்தப்பட்டவை என்றும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டன. இனக்கொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி விசாரணைக்குழு பரிந்துரை செய்தபோதும், எத்தகைய நட்டஈடும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசால் வழங்கப்படவில்லை.

'பிரபல இடதுசாரித் தலைவரான எட்மண்ட் சமரக்கொடி தனது தனது 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' (Behind the Anti-Tamil Terror: The National Question in Sri Lanka) என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள - தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல, மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். சில சிங்கள மக்களும் இதில் பாதிப்படைந்திருந்தாலும், பெருமளவுக்கு உயிரிழப்புக்களையும் படுகாயங்களையும் கடும் பாதிப்புக்களையும் அடைந்தவர்கள் தமிழ் மக்களே! பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே! ஏறத்தாழ 75,000 பேரை அகதிகளானார்கள். இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்”

லங்கா ராணி கப்பல்
ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அருளர் இந்த கலவரம் பற்றி எழுதிய நாவல் ஈழப் போராட்ட இலக்கியங்களில் முக்கிய நாவலாகப் பார்க்கப்படுகிறது. 220 பக்கங்களைக் கொண்ட அந்த நாவல் கலவரத்தில் பாதிக்கப்பட்டுசுமார் 1200 மக்கள் தென்னிலங்கையிலிருந்து’லங்கா ராணி’ கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சோகம் பற்றி வெளிப்படுத்துகிறது. தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, மூன்று நாட்களில் காங்கேசன்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது. இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலில் பாதிக்கப்பட்ட பலரது கதைகள் அடக்கம்.

அருட்திரு. திஸ்ஸ பாலசூரியவும்.  தி .திருமதி. பேர்ணடின் சில்வாவும் 1978இல் வெளியிட்ட இலங்கையில் இன உறவுகள் நூலில் (பாகம் 2) இப்படிக் குறிப்பிடுகிறார்.

“1977ம் ஆண்டு இனக் கலவரம் தோட்டத் தொழிலாளரை மிக மோசமாகப் பாதித்தது. 1958ம் ஆண்டைப் போலல்லாது தோட்டத் தொழிலாளரும், கொள்ளை, தீ வைத்தல் என்பவற்றிற்குப் பலியானார்கள். தொழிலாள வர்க்கத்திலே மிகவும் வறியவர்களும், மிக அதிகமாகச் சுரண்டப் படுபவர்களுமான பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமது அற்ப சொற்ப சொத்துக்களையும் இழந்தனர். அழுக்கடைந்து போன “லயன்” அறைகள் கூட தரை மட்டமாக்கப்பட்டன. தமக்காக வேண்டிய வியர்வை சிந்திப் பெறுமதி மிக்க அந்நியச் செலாவணியை உழைத்தது மாத்திரமன்றி தமது சொல்லாலோ, செயலாலோ தனி நாட்டிற்காக ஒரு விருப்பத்தையும் காட்டாத இப் பிரிவு மக்கள் மீது இவ்வளவு கீழ்த்தரமான முறையில் சிங்களவர்க்க தமது கைவரிசையைக் காட்டியது மிகவும் பாரிய ஒரு குற்றமாகும்.”

மலையக மக்கள் மீது இது வரை
இலங்கையில் 1939, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983 என தொடர்ச்சியாக நிகழ்ந்த கலவரங்களில் அதிகமான இழப்புகள் வடக்கு கிழக்குக்கு வெளியிலேயே நிகழ்ந்தன. சிங்கள மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் அவர்கள் மத்தியில் சிக்குண்டு வாழ்ந்த தமிழ் மக்களே அதிகளவில் இழப்புகளை சந்தித்தனர். சொத்துக்களை இழந்ததும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதும், அதிகளவு படுகாயங்களுக்கும், படுகொலைகளுக்கும் உள்ளனவர்களும், அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தவர்களும், இந்தியாவுக்கு நாடு திரும்பியவர்களிலும் பலர் இந்திய வம்சாவளியினரே.

ஒவ்வொரு தடவையும் இப்படியான கலவரங்களின் போது கொள்ளையர்களின் மீதும், காடையர்களின் மீதும் பழியைப் போட்டுவிட்டு சிங்கள ஆளும் வர்க்கம் தப்ப முயன்றிருக்கிறது. ஆனால் அரசாங்கத்தினதும், அரச இயந்திரத்தினதும் தயவுடனும், அனுசரணையுடனும் தான் அவை நிறைவேற்றப்பட்டமை நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும், தலைதூக்க விடக்கூடாது என்கிற பாணியிலும், பயத்தையும் பீதியையும் அவர்களிடம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற வெறியிலுமே சிங்களத் தரப்பு இயங்கி வந்திருக்கிறது.

இது பற்றி சில மேலதிக விபரங்களுக்காக சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வை அடுத்த இதழில் பார்ப்போம்.

துரோகங்கள் தொடரும்.

நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates