Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன்

இலங்கையைப் பற்றி டச்சு மொழியில் பதிவு செய்தவர்கள் சிலர் இலங்கையைப் பற்றி அவ்வளவு இழிவாக பதிவு செய்திருக்கக் கூடும். அல்லது அப்படி இழிவாக பதிவு செய்திருப்பதை மட்டும் வுயிஸ்ட் பார்த்திருக்கக் கூடும். எனவே தான் வுயிஸ்ட் இலங்கையர்கள் பற்றிய மட்டமான எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

பல நூல்களில் வுயிஸ்ட் ஒரு மனநிலை பிறழ்ந்து இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றே குறிப்பிடுகின்றன. பிரபல டச்சு வரலாற்றாசிரியர் குடீ மொல்ஸ்பெர்கன் (E.C.Godée Molsbergen) எழுதிய “Tijdens de O.-I. Compagnie” என்கிற டச்சு மொழி நூலில் 47 வது அத்தியாயம் வுயிஸ்டின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். அவ்வத்தியாயத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்பு “De krankzinnige Gouverneur” (பைத்தியைக்கார கவர்னர்) என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நூலில் வுயிஸ்ட் மேற்கொண்ட அட்டூழியங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது .(1)

வுயிஸ்ட் காயங்களினால் வெளியாகும் இரத்தத்தைப் பார்த்து இன்பமடைந்தார். இரவு விருந்துக்காக கொண்டுவரப்படும் விலங்குகளை இறைச்சியாக கொண்டு வராமல் உயிருடன் அவற்றைக் கொண்டு வந்து அவற்றை தீயில் இடும் போது கேட்கும் சத்தத்தில் இன்பமடைந்தார். Sadist என்கிற துன்பூட்டுவேட்கை மிகையாகவே அவரிடம் இருந்தது. அது போல பாலியல் இன்பத்தையும் அப்படித்தான் அவர் அனுபவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஏனையோரும் வுயிஸ்டின் இயல்பையும், போக்கையும் பற்றி உணர்ந்துகொண்டனர்.

தன்னைப் பற்றிய மிகை மதிப்பு அவரிடம் இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் கடும் தண்டனைகளை நிறைவேற்றினார். நீதியற்ற முறையில் விசாரணைகளை நடத்தினார். 

டச்சு காலத்தில் 1658 வரை காலி தான் இலங்கையின் தலைநகராக இயங்கியது. 1658 இலிருந்து தான் கொழும்பு தலைநகராக ஆனது. ஏனென்றால் கொழும்பு 1656 இல் தான் போர்த்துகேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். அப்போது டச்சு காலத்து ஆளுநர் வாசஸ்தலமாக இருந்தது இப்போது கொழும்பு கோட்டை புலனாய்வுப்பிரிவு தலைமையகத்துக்கு பின் புறமுள்ள புனித பீட்டர் தேவாலயம். போர்த்துகேயர் அதுவரை ஒரு தேவாலயமாக பயன்படுத்திவந்த அழகிய கட்டிடத்தைத் தான் தமது வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிற் பகுதிக்கு எதிரில் இருக்கும் Grand Oriental Hotelக்கு வலது புறமாக அந்த தேவாலயம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் 1804 இல் அதனை தமது படையினர் வழிபடுவதற்காக St Peter’s Church ஆக ஆக்கினார்கள்.

ஆளுநர் வுயிஸ்ட்டின் வாசஸ்தலமாகவும் இது தான் இருந்தது. வாசஸ்தலத்திலிருந்து அருகாமையில் தான் காலிமுகத்திடலும் இருக்கிறது. இதுவும் படைமுகாம்கள், நிர்வாக இயந்திரம் அனைத்தும் அன்றைய கொழும்பு கோட்டைக்குள் தான் இருந்தன. தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் இடமாக அன்று காலிமுகத்திடலை பயன்படுத்திக்கொண்டார் ஆளுனர்.

அங்கே நிரந்தமாக தூக்குமேடை இருந்தது. தூக்கிடுவதை நிறைவேற்றுகின்ற அலுகோசுமாரும் நிறைந்தமாக அங்கே பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். கசையடி, சுட்டுக் கொல்வது உட்பட பல அங்கே தண்டனைகள் அங்கே நிறைவேற்றப்பட்டன. அதை வேடிக்கை பார்ப்பதற்கு பல மனிதர்கள் காலிமுகத்திடலில் கூடினார்கள். தூக்கிடப்பட்டவர்களின் பிணங்கள் நாய்கள் பிய்த்துத் திண்ணுவதும், அழுகி சிதைந்து சின்னாபின்னமாகி நாற்றமெடுக்கவும் செய்தன. அதுபோல அப்படி கொல்லப்பட்டவர்கள் அதே காலிமுகத் திடலிலேயே அடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் வுயிஸ்டுக்கு முன்னரே நிகழத் தொடங்கிவிட்டன. (2)

வுயிஸ்ட் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். அவரின் ஊழலும் துஷ்பிரயோகமும் நீதித்துறையைக் கூட பாதித்தது. ஆளுநரின் பிழையான வழிகாட்டுதலின் மூலம் டச்சு சிவில் அதிகாரிகளும், படையில் அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் சாதாரணர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

டச்சு ஆட்சியில் கொழும்பை மையப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கியபின் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் களமாக காலிமுகத் திடல் இருந்தது.

ஆட்சிக்கவிழ்ப்பு பீதியின் விளைவு

வுயிஸ்ட் தனக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிமுயற்சி பற்றிய ஒரு வதந்தியை நம்பினார். அதைப் பற்றிய அதீத பீதியாலும் கற்பனைகளாலும் அவர் இந்த சதி முயற்சி குறித்து சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்து அடைத்தார். 

காலி கோட்டையில் அன்று தளபதியாக இருந்த யொவான் பால் ஷாகென் (Joan paul schaghen) குற்றவியல் விசாரணைக்கு நடத்தப்பட்டு மோசடி குற்றமும் சுமத்தப்பட்டார். அவரை நீக்கி கொழும்பு கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பணியில் இருந்த சில முக்கிய போதகர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு பத்தாவியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

அதேவேளை தனது ஆக்கிரமங்களை அவர் மேலும் அதிகரித்தார். 1729 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவலர்களை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார். இரவுக் காவலுக்கு திடீர் என்று எழுப்பப்பட்டு வேலைவாங்குவது வழமைக்கு கொண்டுவரப்பட்டது. அது இரவு நேரக் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று அவரால் அறிவிக்கப்பட்டது. தூக்கமிழந்த இராணுவத்தினர் தமது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி எதிர்த்தவர்கள் அனைவரும் தடியால் தாக்கப்பட்டார்கள் அதன் பின்னர் கொழும்பு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களில் சிறைவைக்கப்பட்டார்கள். அவருக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்புகளை காலப்போக்கில் அவர் தனக்கு எதிரான அரச கவிழ்ப்பு சதியென நம்பத் தொடங்கினார். தான் நம்பிய புனைவுக்கு உருவகம் கொடுத்து காண்பவரையெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனநோய்க்கு ஆட்பட்டார்.

அவருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் எதிராக சதி செய்வதற்காக உளவு பார்க்கும் ஒரு பரந்த வலையமைப்பு இயங்கியதாக அவர் நம்பினார். அப்படிப்பட்ட சந்தேகநபர்களை வரிசையாக தண்டித்தார். அவர்களை விசாரிப்பதற்காக ஒரு இராணுவ நீதிமன்றத்தை கொழும்பில் அமைத்தார். கிழக்கிந்திய கம்பனியின் எந்த அனுமதியுமின்றி விசேட இராணுவ நீதிமன்றத்தை (Blood council) அமைத்து அங்கே விசாரணைகளை நடத்தினார். அவரே அந்த விசேட நீதிமன்றத்தின் தலைவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். இந்த நீதிமன்றத்தின் மூலம் ஏராளமான டச்சு இராணுவத்தினரும், டச்சு பணியாளர்களும் கூட தண்டிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் அவர் ஒரு மிக மோசமான சித்திரவதைகளை செய்கிற ஒரு சாடிஸ்ட் ஆட்சியாளராக ஆனார். உண்மைகளை வெளிக்கொணர்வது என்கிற பேரில் அவர் மிகவும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை மேற்கொண்டார். நகங்களைப் பிடுங்குதல் மற்றும் சூடான மெழுகை உடலில் ஊற்றுதல், காயச் சிதைவுகளில் அரிப்புகளைப் பயன்படுத்துதல், கால்களின் எலும்புகளையும் உடைத்தல் மட்டுமன்றி சந்தேக நபர்களின் தலைகளைத் துண்டிப்பது வரை அவர் அட்டூழியம் செய்தார். காலிமுகத்திடலை ஒரு கொலைக்களமாகவே ஆக்கினார்.

சில அழகிய யுவதிகள் காணாமல் போனார்கள். குற்றவாளிகள் மர்மமான முறையில் சாவடைந்தார்கள். இதை பற்றிய கதைகள் நாட்டுக்குள்ளும் அரசல்புரசலாக கதைகள் உலவின. கேள்வி கேட்ட அதிகாரிகள் பதவியுயர்களால் சலுகைகளாலும் வாயடைக்கபட்டார்கள். இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும், அறிக்கைகளும் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒல்லாந்துக்கு சென்றடைந்தன. 1727 யூன் 7 அன்று இலங்கையில் இருந்த டச்சு அரசியல் சபையால் இரகசிய முறைப்பாடு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாவியா தலைமையகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் அதே மாதம் 30 ஆம் திகதி இன்னொரு முறைப்பாடும் சென்றது. ஆனால் வுயிஸ்ட் தனது ஆட்சியில் உள்ள வளர்ச்சியை அறிக்கையாக அனுப்பினார். குறிப்பாக அவர் சென்றதன் பின்னர் மிளகு உற்பத்தி எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் அறிக்கை எழுதினார். அவரின் காலத்தில் மிளகு உற்பத்தி விவசாயிகளின் நிலங்களில் ஒரு பகுதி டச்சுக் கம்பனியிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் ஓகஸ்ட் மாதமும் விரிவான ஒரு இரகசிய முறைப்பாடு அவருக்கு எதிராக அனுப்பப்பட்டது. அதில் வுயிஸ்ட் நடத்தும் காட்டுத் தர்பார் பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன.

தொடரும்

உசாத்துணை
  1. E.C.Godée Molsbergen, Tijdens de O.-I. compagnie, Amsterdam, Swets, 1932.
  2. වජිර ලියනගේ - ඕලන්දයේදී එල්ලා මැරූ ලංකාවේ සිටි ඕලන්ද ආණ්ඩුකාරයා, லங்காதீப – 13.06.2018 (இக்கட்டுரையில் வுயிஸ்ட் ஒல்லாந்தில் மரணதண்டனை அளிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால் அவர் பத்தாவியாவில் தான் மரண தண்டனை அளிக்கப்பட்டார்) 
நன்றி - தினகரன் 28.11.2021

காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன்

Johannes Hertenberg இலங்கையின் 19 வது டச்சு ஆளுநர். அவர் 12.01.1725இலிருந்து  19.10.1725 வரை ஆளுநராக இருந்தார். பதவியில் இருக்கும் போதே கொழும்பில் திடீர் மரணமானார். அவரின் கல்வெட்டு இன்னமும் வுல்பெண்டால் தேவாலயத்தில் உள்ளது. அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவசரமாக ஆளுநராக அனுப்பப்பட்டவர் தான் பேதுருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst  1691 -1732).(1) 

தனக்கு ஒரு பெரிய நாட்டை ஆளத்தரவில்லை என்கிற ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் 1726 ஆம் ஆண்டு ஆளுநராக இலங்கை வந்து சேர்ந்தார். ஒரு கையால் தன் ஒரு கண்ணை மறைத்தபடி தான் அவர் எதிரிலுள்ளவர்களை விழிப்பார். இந்த சிறிய நாட்டு முட்டாள்களைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே போதும் என்பது தான் அவரின் விளக்கம். மூன்றே மூன்று ஆண்டுகள் தான் அவர் இலங்கையை ஆட்சி செலுத்தினார்.(2)

1729 வரையான அந்த மூன்றாண்டுகளுக்குள் அவர் மேற்கொண்ட அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 

ஒல்லாந்து ஆட்சியை டச்சு ஆட்சி என்றும் அழைப்போம். அன்றைய ஒல்லாந்து காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு அரச ஆக்கிரமிப்பாக நிகழவில்லை. வர்த்தக, வியாபார கம்பனியாகத் தான் நாடுகளைப் பிடிப்பதையும்,  வர்த்தகம் செய்வதையும், ஆட்சி செய்வதையும் புரிந்தனர். குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் அனுமதிபெற்ற அன்றைய பல்தேசிய நிறுவனம் என்று கூறலாம். உலகின் முதலாவதுபல்தேசிய கம்பனியும் (Multi-national company) அதுதான். அக் கம்பனியின் மீது ஒல்லாந்து அரசின் அனுசரணையும், அதிகாரமும் இருந்தது. அரசு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அவ்வரசு பெரும்பகுதி வரியைப் பெற்றுக்கொண்டது. 

சுமார் 450 வருடங்களாக இலங்கையை ஆக்கிரமித்து தலா சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூன்று நாடுகளும் கம்பனிகளின் மூலம் தான் இந்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தின. உதாரணத்துக்கு:

  1. போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company), போர்த்துக்கீச கம்பனியை ’Vereenigde Oost-Indische Compagnie’ (United East India Company)என்றும் கூறுவார்கள்
  2. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (The Dutch East India Company (VOC)),
  3. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி  (British East India Company)

என்கிற நிறுவனங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். இலங்கையைப் பொறுத்தளவில் முதலாவது ஆங்கிலேய ஆளுநராக பிரடறிக் நோர்த் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து முழுமையாகவும், நேரடியாகவும் பிரித்தானிய முடியின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்தார்.

போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் 1640–1796 வரை சுமார் 156 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்னமும் சொல்லப்போனால் போர்த்துகேயரை விட, ஆங்கிலேயர்களை விட அதிகமான காலம் ஆண்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் 42 ஆளுநர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் 24 வது ஆளுநர் தான் இந்த பேத்ருஸ் வுயிஸ்ட்.

1723 இல் ஆளுநர் ரம்ப் (Isaak Augustijn Rumpf) தனது அலுவலகத்தில் திடீர் என்று இறந்து விடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் ஆர்னோல்ட் (Arnold Moll -1723 இல்), யோஹன்னஸ் (Johannes Hertenberg -1724இல்)(3), ஜோன் போல் (Joan Paul Schaghen – 1725இல்)(4) மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் இருந்த இழுபறியின் போது தான் அந்த இடத்துக்கு பேத்ருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst) விண்ணப்பித்திருந்தார்.

பேத்ருஸ் வுயிஸ்ட் வாழ்க்கைப் பின்னணி

வுயிஸ்ட் பத்தாவியாவில் இருந்து தான் வந்தார். அன்றைய பத்தாவியா (Bataviya என்பது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகரம்) என்பது டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமாக இருந்தது. பல முடிவுகள் அங்கிருந்து தான் எடுக்கப்பட்டன. வுயிஸ்ட்டின் தந்தை Hendrik Vuyst டச்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாய் Maria de Nijs இந்தோனேசிய ஜாவா பின்னணியைச் சேர்ந்தவர். தந்தை ஹென்றிக் வுயிஸ்ட் (Hendrik Vuyst (1656–1705)) கிழக்கிந்திய கம்பனியின் நீண்ட சேவைக்காலத்தைக் கொண்ட ஒரு அதிகாரி.

வுயிஸ்ட் பிறந்ததும் பத்தாவியாவில் தான். 1691 இல் பிறந்த வுயிஸ்ட் தந்தையின் ஒல்லாந்து நாட்டில் தான் கல்வி கற்று தேறினார். கல்வியின் பின் ஒரு வரி வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். ஒல்லாந்தைச் சேர்ந்த பார்பரா என்கிற பெண்ணை 1714இல் மணம் செய்துகொண்டார்.(5) பின்னர் 1717 இல் பத்தாவியா வந்து சேர்ந்த அவர் அங்கும் ஒரு வரி வழக்கறிஞராக கடமை புரிந்தார். பார்பராவின் குடும்பத்தினர் கிழக்கிந்திய கம்பனியில் செல்வாக்குள்ள குடும்பம் என்பதால் அதன் மூலம் வுயிஸ்ட்டும் பணியில் இணைந்து கொண்டார். 1721 இல் அவர் கிழக்கிந்திய கம்பனியின் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். 1722 இல் அவர் வங்காளத்துக்கு பொறுப்பான இயக்குனராக பொறுப்பேற்று இந்தியாவில் கடமையாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பத்தாவியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரசாங்கத்தின் உயர் வழிகாட்டுனராக ஆனார்.(6) 1724 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கும் தெரிவானார். 1725 ஆம் ஆண்டு மே மாதம் அவர் நகரசபையின் தலைவராகவும் (president van Schepenen) தெரிவானார். சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 1726 இல் அவர் இலங்கைக்கான ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை சென்றடைந்து செப்டம்பரில் இருந்து ஆதிகாரம் செலுத்தத் தொடங்கினார். 

அதன் பின் இலங்கையில் 1726 ஆம் ஆண்டு வுயிஸ்ட் இலங்கையின் கவர்னராக நியமிக்கப்படும்போது அவருக்கு முப்பது வயது தான் நிரம்பியிருந்தது. ஆரம்பத்தில் நல்லவராக வளர்ந்தாலும் இந்த பருவத்தின் போது அவர் மிகவும் குரூர குணம் உள்ளவராக மாறியிருந்தார். அவர் காலியை வந்தடைந்த போது ஒரு கண்ணை கறுப்புத்துண்டால் மூடியபடியே இருந்தார். அவரை வரவேற்ற ஒரு உயர் அதிகாரி அவரைப் பார்த்து உங்கள் கண்களுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தபோது, இலங்கை போன்ற ஒரு சின்ன குட்டிமுட்டை நாட்டை ஆள்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் ஒரு கண்ணே தனக்குப் போதும் என்று திமிராக கூறித்திருந்தார்.(7)

அடுத்த வாரம்...

அடிக்குறிப்புகள்

  1. 1727 இல் ஆளுநர் வுயிஸ்ட் வெளியிட்ட ஒரு ஆவணத்தின் அன்றைய தமிழ் கையெழுத்துப் பிரதியில்  (Plakkaat) “பெதுருஸ் பொயிஸ்த்” என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இந்த ஆவணத்தின் விரிவான உள்ளடக்கம்; தனிநாயகம் அடிகளார் தொகுத்து, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 2014 இல் வெளியிடப்பட்ட “Tamil culture Vol.XI – 1964” என்கிற நூலில் எஸ்.தனஞ்சய ராஜசிங்கம் எழுதிய “A Phonological and Morphological Study of a Tamil Plakkaat” என்கிற கட்டுரையில் காணக் இருக்கிறது.
  2. Anczewska, Malgorzata , Sri Lanka, Singapore : APA Publications, 2015
  3. 19.10.1725 அன்று ஆளுநர் யோஹன்னஸ் திடீர் மரணமுற்றார். இன்றும் அவரது கல்லறை கல் வுல்பெண்டால் தேவாலயத்தில் காணலாம்.
  4. ஜோன் போல் 19.10.1725 – 16.09.1726 வரையான ஒரே ஒரு மாதம் மட்டுமே தற்காலிக ஆளுநராக பதவி வகித்தார். 
  5. A.K.A. Gijsberti Hodenpijl, De overgang van het bestuur van Ceylon van gouverneur Stephanus Versluys in handen van mr. diderik van Domburgh; 1732-1733, Nijh VI,, 1919.
  6. https://www.vocsite.nl/
  7. David Hussly, Ceylon and World history II (1505 A.D. TO 1796 A.D), W.M.A.Wahid & bros, Colombo, 1932.
நன்றி - தினகரன் 21.11.2021


காலிமுகத்திடல் வெற்றிக் கோபுரத்துக்கு ஆனதென்ன? - (கொழும்பின் கதை -3) - என்.சரவணன்

“கோர்டன் கார்டன்” (Gordon Gardens) பகுதிக்குள் தான் டச்சுக் காலத்தில் கொழும்பின் பிரதான தேவாலயம் இருந்தது. “கோர்டன் கார்டன்” என்பது இன்றைய ஜனாதிபதி மாளிகையாக இருக்கின்ற அன்றைய “இராணி மாளிகை” (Queens house)க்குள் தான் இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் பிரதான தேவாலயமாக அமையும்வரை இது தான் அன்றைய தேவாலயமாக இருந்தது. பிற்காலத்தில்  ஆங்கிலேயர் இலங்கையை தம் வசமாக்கியதன் பின்னர் சிதைவுற்றிருந்த வுல்பெண்டால் தேவாலயத்தை திருத்தி 1813 செப்டம்பர் 4 அன்று விழாக்கோலமாக புறக்கோட்டை மயானத்தில் இருந்த முக்கிய கல்லறைக் கற்களைக் கொண்டு வந்து  சேர்த்தனர்.(1)

இன்னும் சில கல்லறைக் கற்கள்; இன்று புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள டச்சு மியூசியத்திலும் காட்சிக்காக வைக்கப்பட்டன. 1662 – 1736 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கிய பதினான்கு கற்கள் தேவாலயத்தின் உள்ளேயும், ஐந்து கற்கள் தேவாலயத்துக்கு வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மிகப் பழைய கல்லறைக் கல் 1662 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றால் உங்களால் அதன் பழைமையை விளங்கிக்கொள்ள முடியும்.(2)

போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றுவதற்கான போர் நிகழ்ந்தபோது பாணந்துறை, களுத்துறை போன்ற பகுதிகளில் போர் நிகழ்த்தி அவற்றைக் கைப்பற்றியவர் ஜெனரல் அல்ஃப்ட் (Gerard Pietersz. Hulft), அடுத்ததாக கொழும்புக் கோட்டையுடனான போரின் போது காயப்பட்டு  10 ஏப்ரல் 1656 அன்று மரணமானார். அவரின் உடல் பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொழும்பு கைப்பற்றப்பட்டு டச்சுக் கட்டுபாட்டுக்குள் வந்ததன் பின்னர் மீண்டும் கொழும்பு கோட்டையில் (அப்போது வுல்பெண்டால் தேவாலயம் அமைந்த இடத்தையும் சேர்த்து கொழும்பு கோட்டை என்று தான் கூறுவார்கள்.) வுல்பெண்டால் தேவாலயத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறைக் கல்லும் இங்கு தான் இருக்கிறது.

இவரின் நினைவாகத் தான் அப்போது டச்சுத் தலைமையகம் இயங்கிய பகுதிக்கு அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என்று பெயரிடப்பட்டது. இன்று இலங்கையின் உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கும் பகுதி தான் அது.

அதுமட்டுமன்றி கத்தோலிக்க மதத்துக்கு மாறிய கோட்டை மன்னன் தொன் யுவான் தர்மபாலாவின் கல்லறையும் இங்கே தான் வைக்கப்பட்டு பின்னர் அது மாயமானதாக குறிப்புகள் கூறுகின்றன. (Lewis, J. Penry). அவர் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ அரசன். 1580 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருக்கு கோட்டை ராஜ்யத்தை ஒப்பமிட்டு எழுதிக்கொடுத்தவர் அவர் தான்.

அதுமட்டுமன்றி நான்கு டச்சு ஆளுநர்களும் இந்த வுல்பெண்டாலில் தான் அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் பாதுகாக்கப்பட்டன. இலங்கையை இறுதியாக ஆண்ட இரு டச்சு ஆளுநர்களுமான வில்லெம் யாகோப் (Willem Jacob van de Graaf) யொஹான் வான் அங்கெல்பீக் (Johan van Angelbeek) ஆகியோரின் கல்லறைகளும் பிற்காலத்தில் வுல்பெண்டலுக்கு இடம்மாற்றப்பட்டது.

புறக்கோட்டை மயானத்தை (Colombo Pettah Burial Ground) முதலில் மயானமாக பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான் அதன் பின் ஆங்கிலேயர்களும் அதனைப் பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இடமில்லாமல் போன போது தான் ஒல்லாந்தர்கள் இன்றைய காலிமுகத் திடலையும் ஆரம்பத்தில் மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் காலக் கிராமத்தில் புறக்கோட்டை மயானத்தை மெதுமெதுவாகக் கைவிட்டனர். அதையே ஆங்கிலேயர்கள் இன்னும் விஸ்தீரணப்படுத்திய மயானமாகப் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையம் உள்ள பகுதி அந்த புறக்கோட்டை  மயானத்தின் மீது தான் இருக்கிறது. இன்று பரபரப்பான, சனநெருக்கடிமிக்க அந்த “பஜார்” பகுதியின் நிலத்தினடியில் பலர் ஏராளமானோர் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கண்டியில், மன்னாரில், யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட அன்றைய காலனித்துவ இராணுவ அதிகாரிகளின் உடல்களும், அன்றைய அரச அதிகாரிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் என பலரும் இந்த புறக்கோட்டை மயானத்தில் புதைக்கப்பட்டார்கள்.

காலிமுகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டல் ஒரு காலத்தில் கொழும்பின் குறியீடாக இருந்த காலமொன்று இருந்தது. காலிமுகத்திடலை எல்லைப்படுத்தும் ஒரு கட்டிடமாக அது இருந்தது. 250 அறைகளைக் கொண்ட அந்தக் காலத்து சொகுசு ஹோட்டல். அன்று இலங்கை வரும் பிரபுக்களையும், ஆங்கிலேய கனவான்களையும் வரவேற்று உபசரிக்கும் ஹோட்டலாக நெடுங்காலம் அமைந்திருந்தது. 1862 ஆம் ஆண்டளவில் காலிமுகத்திடல் மயானத்தின் பாவனையை மட்டுப்படுத்தத் தொடங்கி, அதனை பொதுப் பொழுதுபோக்குப் பாவனைக்கு பயன்படுத்தத தொடங்கியதும் அடுத்த இரண்டாவது வருடம் 1864 இல் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் இலங்கையில் ரயில் போக்குவரத்தும் 1866 இல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்த ஹோட்டலின் முக்கியத்துவமும் பெருகியது. இலங்கையில் முதன்முதலில் மின்சாரத்தைப் பயன்படுத்திய முதற் கட்டிடங்களில் ஒன்று. அங்கே தான் முதற்தடவை  உயர்த்தி (Elevator / Lift) பயன்படுத்தப்பட்டது.

காலிமுகத்திடல் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளுக்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக அது முக்கிய பல பெரும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடம். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதற்தடவை அங்கு தான் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் சுதந்திர தின நினைவின் பிரதான நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. பெரிய இராணுவ மரியாதை , ஊர்வலங்கள், விமான வீரர்களின் சாகசங்கள் எல்லாமே இங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதற்தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதும் இங்கு தான்.

முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஏராளமானவர்கள் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்யும் இடமாக இது இருந்து வருகிறது. 1929 ஆம் ஆண்டு ரல்ப் ஹென்றி (Ralph Henry Bassett) வெளியிட்ட Romantic Ceylon என்கிற நூலில் காலிமுகத்திடலில் ஆப்கான் முஸ்லிம்கள் பலர் ஹஜ்ஜுபெருநாள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டதைப் பற்றி குறிப்பிடுகிறார். அப்படியென்றால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்த வழக்கம் இருந்து வருவதை அறிய முடிகிறது.

1939இல் ஜவஹர்லால் நேரு வந்திருந்தபோது காலிமுகத்திடலில் அவரின் மாபெரும் கூட்டம் நடந்தது. அன்று அதை எதிர்த்து அன்றைய சிங்கள மகா சபையின் சார்பில் பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க இலங்கை இந்தியர் காங்கிரசை நேரு உருவாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

அதுபோல பாராளுமன்றம் அருகில் இருந்ததால் பல அரசியல் வாதிகளின் ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நிகழ்ந்தபடி இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பல அகிம்சைவழி சத்தியாக்கிரகப் போராட்டங்கள் காலிமுகத்திடலில் தான் நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள் இலங்கையைப் பற்றிய பயணக் கட்டுரை எழுதிய எவரும் காலிமுகத்திடலைப் பற்றி எழுதாமல் விட்டதில்லை என்றே கூற முடியும். Ali Foad Toulba  1926 இல் வெளியிட்ட “Ceylon : The land of eternal charm” என்கிற நூலில் காலிமுகத்திடலின் அழகிய அனுபவங்களை தனி அத்தியாயமாக தொகுத்திருக்கிறார். காளிமுகத்திடலைப் பற்றிய அனுபவங்களை விலாவாரியாக எழுதியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கொழும்பின் மையம்; ஜப்பானின் குண்டுத்தாக்குதலுக்கு இலகுவாக ஜப்பானியர்களால் அடையாளம் காணப்படக்கூடும் என்கிற பீதியால் அந்தக் கோபுரம் அங்கிருந்து அது கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது.


காலிமுகத் திடல் ஒரு மயானமாக மட்டுமல்ல அதற்கு முன் அது ஒரு கொலைக்களமாகவும் இருந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் பலர் தூக்கிட்டும், சுடப்பட்டும், கழுவில் ஏற்றியும் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்கள். அப்படி இலங்கையில் செய்த கொலைகளுக்காக பாதக ஆளுநர் ஒருவர் ஒல்லாந்து அரசால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவமும் நிறைவேறியது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

உசாத்துணை:
  1. Lewis, J. Penry, List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated (1854-1923), Colombo, H.C.Cottle, Government printer, Ceylon, 1913.
  2. Dr. K.D. Paranavitana, That church in the Valley of Wolves, Sundaytimes, 24.10.1999
நன்றி - தினக்குரல்

விஜேவீரவை மீட்க - யாழ் கோட்டை சிறையுடைப்பு சமர் - செங்கை ஆழியான்

 

இக்கட்டுரை 1995 இல் செங்கை ஆழியான் என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட கலாநிதி க.குணராசா எழுதிய "யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு" என்கிற நூலில் வெளிவந்த கட்டுரை. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் எட்டிய நிலையில் அந்த கிளர்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக ஜே.வி.பியின் தலைவர் றோகன விஜேவீரவை மீட்பதற்காக நிகழ்ந்த சமர் பற்றியது இக்கட்டுரை. சிங்களத்தில் பல நூல்களிலும், கட்டுரைகளிலும் அத்தாக்குதல் பற்றி வெளிவந்திருந்தாலும் தமிழில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த இக்கட்டுரையை தற்செயலாகக் கண்டு உங்களுடன் பகிர்கிறோம். உண்மையில் யாழ் கோட்டையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன்னீல் கோட்டை (Hammenhiel) என்று அழைக்கப்படுகிற கோட்டையில் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
05. ஏப்பிரல், 1971.
நள்ளிரவு 11.30 மணி. - யாழ்ப்பாண நகரம் நல்ல உறக்கத்தின் தழுவலில் ஆழ்ந் திருந்த வேளையில், யாழ்ப்பாணம் கோட்டைப்பக்கம் இருந்து துப்பாக்கிகளிலிருந்து விடுபட்ட சன்னங்கள் வெடித்துச் சிதறு கின்ற சத்தம் எழுந்தது. அமைதியான யாழ்ப்பாணத்தின் மோனத் தூக்கத்தை அத்துப்பாக்கி வெடிச்சத்தம் சிதைத்தது ஆங் கிலேயர் காலத்திற்குப் பின்னர் அப்படியான தொடர்ச்சியான துப்பாக்கி வெடிச்சத்ததை யாழ்ப்பாணம் கேட்டதில்லை. சுதந்திரமடைந்த பின்னர் அது தான் முதன் முதல் தொடர்ந்து கேட்ட துப்பாக்கிச் சத்தம். அது தான் முதன் முதல் யாழ்ப் பாணத்து மக்களின் நித்திரையைக் குழப்பிய துப்பாக்கிச்சத்தம். 

அதன் பின்னர் யாழ்ப்பாண மண்ணில் இன்னமும் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் ஓயவில்லை. நித்திரைக்கு ஒரு தாலாட்டு மாதிரி துப்பாக்கிவெடிச்சத்தம் அவசியும் - போலாகிவிட்டது இன்று. 

ஆம். யாழ்ப்பாணக்கோட்டைச் சிறைச்சாலையில் சிறை பட்டிருக்கும் தங்கள் இயக்கத்தின் மாபெருந்தலைஎன் ரோகன விஜயவீரவை, மீட்டுச் செல்வதற்காக தென்னிலங்கையிலிருந்து இங்கு வந்த ஜனதா எக்சத் பெரமுன என்ற ஜே.வி.பி இயக் கத்தினரின் மீட்புத் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. யாழ்ப் பாணம் பொலிஸ்நிலையத்தையும் யாழ்ப்பாணக் கோட்டைக் குள் புகுந்து சிறைச்சாலையும் ஜே வி பி. இயக்கத்தினர் முற்றுகையிட்டுத் தாக்கினர். 

அக்காலத்தில் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் எந்நேரமும் சர்வசாதாரணமாக உட்சென்று வரலாம். மாலை வேளைகளில் நேரம் கிடைத்தால் கோட்டை உள் மைதானத்தில் விளையாடி விட்டும் வரலாம். ஆக சிறைச்சாலைப் பகுதியில் மட்டும் ஜெயிலர்கள் காவலிருப்பார்கள்.

இலங்கைச் சுதந்திரத்தின் பின் முதன் முதல் யாழ்ப்பாணக் கோட்டைத்தாக்குதல் நடந்தது. ஏன்? எதற்கு? 

ஸ்ரீ லங்காவில் முதலாளித்துவ ஆட்சியாளருக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி மக்களாட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் கெரில்லா யுத்தத்தை ஜாதிக எச்சத் பெரமுன இளைஞர்களைச் சேர்த்து நடாத்தியது. அதன் தலைவர் றோகன  விஜயவீரவின் கோட்பாடு மிகத் தெளிவானது இலகுவானது. "எந்த ஒரு புரட்சியும் பாட்டாளிகளினால் ஆயுதம் எடுக்காமல் வெற்றியடைந்ததில்லை. ஆயுதப்போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தைச் சமாதானமாகக் கையளித்துமில்லை . அரசயந்திரங்கள் தாக்சப்பட வேண்டும்.'' 

1971 இல் நாடாளாவிய புரட்சியொன்றினை தோற்றுவிக்க றோகன விஜயவீர முயன்றார் ஆனால், அதற்கு முன் 13, மார்ச், 1971 இல் அம்பாறையில் வைத்துப் பொலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரியக்கத்தைச் சேர்ந்த லால் சோமஸ்ரீ, பிரேமரத்ன, நிசங்க விஜயரத்ன, ஹெலி சேனனாயக்க ஆகியோரும் கைதாகினர். அவர்கள் முத லில் மட்டக்களப்புச் சிறையில் வைக்கப்பட்டனர். பின்னர் கொழும்பு மகசின் சிறையிலும் கொழுப்பு றிமான்ட் சிறையிலும் வைக்கப்பட்டனர் அங்கு இவர்களை வைத்திருப்பதில் புாதுகாப்புக் கஷ்டங்கள் இருப்பதை அறிந்து, 14. மார்ச் இராணுவ வாகனங்களில் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர். அன்றே நாடு முழுவதும் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. வெகு இரகசியமாக இது நடந்தாலும் சிறை இடமாற்றும் வெளியில் தெரியவந்தது. 18 ஆம் திகதி றோகன விஜய வீரவின் தாயார் மகனைப்பார்த்துச் செல்ல, யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைக்கு வந்தார். -20 ஆந்திகதி எஸ் டி பண்டாரநாயக்கவும் பாத்தயாவும் (இது வேறு மாத்தயா, இவரின் பெயர் உயன் சொட) காரில் யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களால் கோட்டை சிறையில் இருந்த விஜயவீரவைப் பார்க்க முடியவில்லை. அனுமதி கிடைக்கவில்லை. எஸ் டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால அங்கத்தவராக இருந்தவர். கம்பஹா பாரளுமன்றப் பிரதிநிதியாகவும் விளங்கியவர். ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், பீக்கிங் கம்யூனிசக்கட்சி அங்கத்தவரானார். பின்னர் ஜே வி பி. ஆதரவாளரானார்.

21, மார்ச் 1971 - யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலை யிலிருந்து, விஜயவீரவும் அவருடன் லால் சோம ஸ்ரீ, பிரேமரத்ன ஆகியோரும் கல்முனை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட னர். நீதிமன்றத்து அடைப்புக் கூட்டினுள் இருக்கும் போது , விஜயவீர மற்றைய இருவருக்கும் தெளிவாக ஒரு தாக்குதலிற்கான விளக்கத்தைக் கொடுத்தார். 'என்னைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு 500 ஜே வி. பி. போராளிகள் யாழ்ப்பாணம் வர வேண்டும், சிறையைத் திட்ட மிட்டு உடைத்து என்னை உடன் விடுவிக்க வேண்டும். அவ்வாறு வருபவர்களுடன் லால் சோமஸ்ரீ அல்லது பிரேமரத்ன கூட வந்து நான் இருக்கும் சிறை அறையைக் காட்ட வேண்டும். இதனை இன்று ஜே.வி.பி.யின் அடுத்த தலைவர்களான சனத் என்பவரிடம் அல்லது பியதிலகவிடம் கூறுக' என விஜயவீர தகவல் அனுப்பினார். கல்முனை நீதிமன்றத்தில் சோமஸ்ரீயும் பிரேமரத்னவும் எதிர்பார்த்தது மாதிரி விடுதலையாகினர். விஜயவீர மீண்டும். கோட்டைச்சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். 

விஜயவீரவின் தகவல் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டது. திட்டம் வகுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்குச் சிலர் அனுப்பப்பட்ட னர்.

28 ஆந்திகதி எஸ். டி.. புண்டாரநாயக்க கொழும்பிலிருந்து தொலைபேசிமூலம், யாழ்ப்பாணத்திலிருக்கும் தன் நண்பர் பாஸ்கரன் என்பவரை அழைத்தார். காலை யாழ்தேவியில் யாழ்ப்பாணம் வருவதாகவும் புகையிரத நிலையத்தில் சந்திக்கு மாறும் தகவல் கொடுத்தார். பாஸ்கரன் அவரை யாழ்ப்பாணப் புகையிரதநிலையத்தில் சந்தித்தார். பண்டாரநாயக்கவுடன் மஞ்சு என்பவரும் வந்திருந்தார். பாஸ்கரனின் காரில் ஏறி அவரின் வீடுசென்றனர். சுன்னாகத்தைச் சேர்ந்த நாகரத் தினம் என்பவரையும் சந்தித்தனர். மறுநாள் யாழ்ப்பாணக் கோட்டைச்சிறைச்சாலைக்குச் சென்று விஜயவீரவைச் சந்திக்க முயன்றனர். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் பண்டாரநாயக்க கொழும்பு திரும்பிச்செல்ல நேர்த்தது. ஏப்பிரல் 1 ஆந் திகதி மாத் தயா, யாழ்ப்பாணத்திற்கு வந்த காரை நகருக்குச் சென்று. திலகரத்ன என்ற கடற்படை வீரனைச் சந்தித்தார், கடற்படை வீரர்களில் சிலர் விஜயவீரவை விடுவிக்க உதவுவதாகக் கூறினர். ஏப்பிரல் 3 ஆந்திகதி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்த மஞ்சு. பாஸ்கரனைச் சந்தித்து தனக்கு கொஞ்சம் டைனமயிற் வெடி குண்டுகள் செய்யத் தேவை எனக் கேட்டார் அவரைப் பாஸ்கரன், வேலாயுதம் என்பவரிடன் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். மஞ்சு கேட்ட டைனமயிற் கிடைக்கவில்லை - அவர் கொழும்புக்குத் திரும்பிச்சென்றார். 

விஜயவீரவைச் சிறையுடைத்து விடுவிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நிகல் கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நடந்தேறின ஏப்பிரல் 5 ஆந்திகதி யாழ்ப்பாணக்கோட்டைச் சிறைச்சாலை தாக்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ஏப்பிரல் 5 ஆந்திகதி, அதிகாலை கொழும்பிலிருந்து வித்தியோதய மாணவர்கள், ஆயுதங்களை மறைவாக்கியபடி, ஈபேட் சில்வா கம்பனியாரின் பஸ் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு வந்தனர் . 250 கைக்குண்டுகள் யாழ்தேவி வழி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தத் தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கிலால் சோம ஸ்ரீ வந்தார். இன்னொரு பிரிவினர், பியதிலக தலையையில், 100 பேர் கொண்ட குழுவாக பஸ்சில் வந்தனர். அவர்களால் புளியங்குளத்திற்கு இப்பால் வரமுடியாது போனது. பியதிலகவின் தலைமையில் வந்த குழுவினர் புளியங்குளத்தில் தரித்து நிற்கின்ற சங்கதி, முதலில் யாழ்ப்பாணம் வந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை .
அவர்கள் திட்டமிட்டபடி சரியாக நள்ளிரவு 11-30 மணிக்கு யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தையும் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலையையும் தாக்கத்தொடங்கினர். கோட்டைக்குள் புகுந்த அவர்கள் சிறைச்சாலையை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் சிறைக்காவலர்கள் பதுங்கிக்கொண்டனர். விஜயவீரவின் சிறை அறைக்குக் காவலிருந்த ஜெயில் கார்ட் அப்புக்குட்டி இரத்தினம், பெண்கள் சிறைச்சாலைக்கு அருகிலிருந்த படிகளினுடாகக் கோட்டை மதிலிற்குப் போராளிகள் ஏறு வதைக் கண்டார். அவ்வாறு ஏறிச்செல்லும் போது ஒரு கைக் குண்டினைப் பெண்கள் சிறைச்சாலைக் கூரைமீது வேணுமென்றோ, தற்செயலாகவோ போட்டார்கள். அது கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்து பெண் வார்டர் செல்லம்மா என்பவரின் வலது காலைத் துண்டித்தது. இவரே முதன் முதல் வெடிகுண்டிற்குக் காலைக் காவு கொடுத்த யாழ்ப்பாணப் பெண் யாழ்ப்பாணப் பொலிசாரின் தாக்குதல் உக்கிரமாகவிருந்தது. லால் சோம ஸ்ரீ எதிர்பார்த்தமாதிரி, பியதிலகா குழுவினர் உதவிக்கு வரவில்லை. போராளிகள் பலர் காயமுற்றனர். கையிருப்பில் உள்ள சன்னங்களும் குண்டுகளும் முடிந்து வந்தன. யாழ்ப்பாணப் பொலீசார் எதிர்ப்பினை முறியடித்தபடி கோட்டைக்குள் பிரவேசித்தனர். அதனால் பின்வாங்கும்படி நேர்ந்தது. 

பின் வாங்கி எங்கு ஓடுவது? எப்படி ஓடுவது? தென்னிலங்கையி லிருந்து வந்த யாழ்ப்பாணம் எப்படிப்பட்டது என்பதை அறியாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலம் இடம் தெரியவில்லை. மத்தியானம் போல யாழ்ப்பாணத்திற்கு வந்து இரவு தாக்கு தலைத் தொடக்கினால் அவர்சள் எங்கு எப்படி ஓடுவது? லால் சோம ஸ்ரீ மட்டும் தப்பி யாழ்ப்பாண நகரத்திற்கு ஓடி வர முடிந்தது. அவரும் அன்று அதிகாலையே கைது செய்யப்பட் டார். ஊர்காவற்றுறை ஹமன் ஹீல் கடற்கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 

றோகன விஜயவீரவின் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறையுடைப்புமுயற்சி தோல்வியில் முடிந்தது. இச்சிறையுடைப்பு முயற்சி சம்பந்தமாகப் பின்னர் பலர் கைதாகினர். யாழ்ப்பாணத்தில் பாஸ்கரன், நாகரத்தினம் ஆகியோர் கைதாகிப் பின்னர் விடு தசையாகினர். 

வடமாகாணப் பொலீஸ் மா அதிபர் பின்னர் ''ஒரு இயக்கத் தின் தலைவர் கைதாகி யாழ்ப்பாணம் கோட்டைச்சிறைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறார். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் அவரைச் சிறையிலிருந்து தப்பவைக்க முயன்றனர். அவர்கள் தென்னிலங்கையிலிருந்து விசேஷ பஸ்களில் வந்திருந்தனர். அவர்களின் முயற்சி தோல்வி கண்ட தற்குக் காரணம் அவர்களின் திடசங்கற்பமின்மைக்குறை மட்டுமன்று; உரிய நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் வந்து சேராமையுமாகும்" எனக் குறிப்பிட்டார்.

இன்றைய மெயின் வீதியும் அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -2) - என்.சரவணன்

காலிமுகத்திடல் மயானமாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் மயானமாக பயன்படுத்தப்பட்டது புறக்கோட்டை மயானம் தான். ஆம் இலங்கையின் நெருக்கடியான சந்தைப் பகுதியாக இன்று இருக்கிற புறக்கோட்டையில் இன்னும் சொல்லப்போனால் கெய்சர் வீதி (Keyzer street), மெயின் வீதி (Main street) அமைந்திருக்கும் பகுதியில் தான் அன்றைய பெரிய மயானம் இருந்தது. வுல்பெண்டால் மயானம் அப்போது மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கே புதைப்பதற்கான கட்டணமும் அதிகமாக இருந்தது. 

BALDAEUS 1672இல் வரைந்த கொழும்பின் வரைபடம்

எனவே புறக்கோட்டை மயானம் தான் மாற்று மயானமாக அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அப்போது “கொழும்பு கோட்டை”யின் மதில்களுக்கு வெளிப்புறமாக இருந்த இந்தப் பகுதியில் மயானம் இருந்தது. இப்படியான மயானங்களை மேற்கத்தேய கிறிஸ்தவர்கள் தேவாலயத்தோடு தேவாலயத்தின் அங்கமாக வைத்துக்கொள்வது வழக்கம். இறந்தவரின் இறுதிக் கிரியைகள், பூசைகள் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்டு அத்தேவாலயத்துகுரிய மயானத்தில் புதைக்கப்பட்டபின் அது பற்றி தேவாலயக் குறிப்புகளில் குறித்து வைத்துக்கொள்வது நெடுங்காலமாக இருக்கும் வழக்கம். பிறப்பு, இறப்பு, திருமண, திருமுழுக்கு போன்ற குறிப்புகளைக் குறித்து வைத்துக்கொள்வதால் இன்றும் பலர் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. மேலும் இந்த மயானங்கள் சுதேசிய சாதாரணர்களைப் புதைக்கும் மயானமாக இருக்கவில்லை. இவை காலனித்துவ நாட்டு சிவில், இராணுவ, அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், ஊழியர்களையும், அவர்களின் குடும்பங்களையும், கிறிஸ்தவ பாதிரிகளையும் புதைக்கும் மயானங்களாகவே இயங்கின.

ஒரு காலத்தில் அதிகமான இறுதிக்கிரியைகளை செய்தவராக அங்கிலிக்கன் பாதிரியாரான பெய்லி (Anglican Archdeacon Bailey) பிரபலம் பெற்றிருந்ததால் பகிடியாக ‘Padre Bailey’s Go-Down’ என்று அந்த இடத்தை அழைத்தார்களாம்.


அன்றைய ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி லூவிஸ் பென்றி (Lewis, J. Penry) பிற்காலத்தில் காலனித்துவ காலத்தில் இருந்த மயானங்களில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய தேவாலயப் பதிவுகளை தொகுத்து “List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated” என்கிற ஒரு பயனுள்ள நூல் ஒன்றை 1913ஆம் ஆண்டு அரசாங்க அச்சகப் பதிப்பின் மூலம் வெளியிட்டார். பல ஆய்வுகளுக்கும் பயன்பட்ட நூல் அது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கண்டி ஒப்பந்தம் நிகழ்ந்து மூன்றாண்டுகளில் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பட்டிபொல தலைமையில் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து நிகழ்ந்ததை அறிவீர்கள். அதில் கொல்லப்பட்ட சில ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் நினைவுக் கல்லறைகளும் காலிமுகத்திடலில் இருந்ததாக லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களைப் புதைக்கும் மயானமாகத் தான் இது பேணப்பட்டது. 1866 ஆம் ஆண்டு பொரல்லை கனத்தை மயானம் இலங்கை வாழ் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்படும்வரை கொழும்பில் சுதேசிகளுக்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட மயானம் இருக்கவில்லை. இந்து, முஸ்லிம்களும், ஏனைய சகல கிறிஸ்தவ பிரிவினரும் கூட எந்த வர்க்க வேறுபாடுமின்றி அடக்கம் செய்யும் இடமாக பொரல்லை கனத்தை மயானம் ஆனது.

1870 இல் காலிமுகத்திடல்

இராணுவப் பாவனைக்கு

ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியின் இராணுவ மூலோபாயப் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் கருதியும், மயானத்தில்  அங்கு உடல்களைப் புதைப்பதை நிறுத்தி அங்கிருந்த கல்லறைகளை பொரல்லைக்கு இடம்மாற்றிவிட்டு அதை அப்படியே மூடிவிட்டார்கள். அந்த இடத்தை இராணுவப் பாவனைக்காக பயன்படுத்தினார்கள். முதலாம் உலக யுத்தம் முடியும் வரை அது இராணுவத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அதே இடத்தில் தான் பிற்கால இலங்கையின் இராணுவ தலைமையகமும் அமைக்கப்பட்டது.

அதுபோல கடற்படைத் தலைமையகமும் அங்கிருந்து அத்தனைத் தூரமில்லை. இராணி மாளிகையும் (இன்றைய ஜனாதிபதி மாளிகை) மிக அருகாமையில் தான் அமைந்திருக்கிறது. இதைச் சூழத் தான் பிற்காலத்தில் இலங்கையின் பாரளுமன்றம் (இன்றைய ஜனாதிபதிச் செயலகம்), பல ஹோட்டல்கள், மத்தியவங்கி, உள்ளிட்ட இலங்கையின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப் பகுதியும் அமைந்தது.

அதுபோல கண்டி ராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இயங்கிய ஜோன் டொயிலி தனது நாட்குறிப்பில் பலர் பற்றிய விபரங்களையும் பதிவிட்டிருக்கிறார். அதில் மேஜர் பெய்லட் பெய்லி பெயிலி (Major Bayley Bayly) பற்றி குறிப்பிடும்போது; 1779 இல் பிறந்த அவர் பிரெஞ்சுப் போரில் ஈடுபட்டபோது கைதுக்குள்ளாகி விடுதலையானார். பின்னர் எகிப்தில் இருந்த ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்து விருதுகளைப் பெற்றார். 88 வது படைப்பிரிவில் லெப்டினன்டாக  கடமையாற்றி 1814 இல் இந்தியாவிலும் பின் இலங்கையில் 1815 கண்டிப் போரிலும், 1817இல் ஊவா கிளர்ச்சியை எதிர்த்தும் போரிட்டு தளபதி நிலைக்கு உயர்ந்தார். 1818 இல் மூன்று கோரளைகளின் அரசாங்க பிரதிநிதியாக ஆகி இறக்கும் வரையிலும் அப்பதவியில் இருந்தார் என்றும் அவர் 10.02.1827 அன்று இறந்தார் என்றும் அவர் காலிமுகத்திடல் மயானத்தில் புதைக்கப்பட்டார் என்றும் டொயிலி தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். (1)

Christ Church - Galle Face

காலிமுகத்திடல் மயானத்தின் தேவாலயமாக 1853 இல் CMS சேர்ச்சுக்கு சொந்தமான தேவாலயம் அன்றைய காலிமுகத்திடலில் இருந்தது. இன்றும் அந்த Christ Church - Galle Face தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு பின்னால் உள்ளது. ஆக அப்போது இறந்தவர்கள் பலரது இறுதிப் பூசைகள் அங்கே நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தேவாலயம் அதிக காலம் தமது மயானமாக காலிமுகத்திடலைப் பயன்படுத்த முடியவில்லை.

1862 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் 9வது இலக்கத் தீர்மானத்தின்படி கொழும்பு பாதுகாப்பு அரணுக்குள் இருக்கிற காலிமுகத்திடல் மயானத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2) 1862 நவம்பர் 19 அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் (Government Gazette) இதைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அன்றைய United Church க்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்கிற விதிகளை நீக்கி பிரிட்டிஷ் குடிமக்களின் அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பியர்களுக்கு மட்டுமே காலி முகத்திடல் மயானத்தில் அடக்கம் செய்ய முடியும் என்று ஆளுநர் மூலம் அறிவிக்கப்பட்டது.

காலிமுகத்திடல் மயானம் மூடப்பட்டபோது அங்கே இருந்த பல நினைவுக் கல்லறைக் கற்கள் கனத்தை மயானத்துக்கு மாற்றப்பட்டது. இன்றும் கொழும்பு கனத்தை மயானத்தில் காலிமுகத்திடல் பிரிவு என்கிற ஒரு பிரிவு இருப்பதை அவதானிக்கலாம்.(3)

விக்ரர் ஐவன் “அர்புதயே அந்தறய” என்கிற தலைப்பில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் புகைப்படங்களைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். அதில் காலிமுகத் திடல் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“ஜனவரி 1803 இல், பிரிட்டிஷார் கண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்தனர், படையெடுக்கும் படைகளை தோற்கடித்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். போரில் ஏராளமான ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர், அதுமட்டுமன்றி பின்வாங்கிய இராணுவம் மலேரியா நோய்க்கு இலக்காகி இறந்தனர். மலேரியாவால் இறந்த வீரர்களுக்கு அடக்கம் செய்ய இடம் இல்லாததால், தற்போது காலி முகத்திடல் வளாகம் அமைந்துள்ள பகுதி மயானமாக மாற்ற வேண்டியிருந்தது...”

வுல்பெண்டால் மயானம்

டச்சு ஆட்சியில் கொழும்பு கோட்டையின் தேவாலயமாக வுல்பெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் 1749 இல் தான் டச்சு அரசின் கீழ் அமைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து பார்த்தால் மேட்டில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் தெரியும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. கொழும்பு விவேகானந்தா மேட்டில் பலரும் வுல்பெண்டால் தேவாலயம் தான் அது. கோட்டையிலிருந்து ஒரு மைல் தொலைவில் அது அமைக்கப்பட்டிருந்து. இந்த தேவாலயத்தோடு ஒட்டி இறந்தவர்களுக்கான மயானமும் இருந்தது.

அடுத்த இதழில்....

உசாத்துணை
  1. Diary Of Mr. John Doyly, Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1917 Vol.25
  2. “No. 9 of 1862: As Ordinance for restricting use of the Galle Face Burial Ground to the Garrison of Colombo, and to make other provision in respect thereof” (A Revised Edition of the Legislative Enactments of Ceylon: Volume I 1656-1879, Colombo, George J.A.Skeen, Gevernment Printer, Ceylon, 1900)
  3. Napoleon Pathmanathan, The History of Christ Church, Galle Face, (Formerly called the Colombo Mission Church of C.M.S )
நன்றி - தினகரன் 07.11.2021



“ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கேளிக்கை” - கோட்டாவுக்கு நூல் கட்டுதல்! | என்.சரவணன்

 

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற வேலைத்திட்டம் இப்போது நேரடியாக சட்டமாக்கப்படப்போவதை அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் வர்த்தமானி அறிவித்தலின் மூலம்; அதுவும் அது ஞானசார தேரர் தலைமையில்.

இலங்கையில் இந்த வார உச்ச பேசுபொருள் அது தான். அப்படி உச்ச பேசுபொருளாவது தான் அரசின் உடனடி இலக்கும். அந்த இலக்கு வெற்றியளித்திருக்கிறது. சகல ஊடகங்களின் கவனமும் இதை நோக்கி குவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை, விவசாய உர ஊழல், ஆசிரியர்களின் போராட்டம், விலைவாசிக்கு எதிரான போராட்டங்கள், பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை போன்ற பிரதான பேசுபொருள் அத்தனையையும் இந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” சர்ச்சையின் மூலம் அடுத்த நிலைக்கு தள்ள முடியும் என்று அரசு திடமாக நம்புகிறது. இதனால் பெருவாரி சிங்கள பௌத்தர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நம்பியிருக்கிறது. எதிர்வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கோத்தபாய அரசு இனவாதத்தைத் தான் கையிலெடுக்கும் என்பதை கோத்தபாய வெற்றியடைந்ததுமே நாம் எதிர்பார்த்தது தான். இதன் மூலம் பெருவாரி சிங்கள பௌத்தர்களை ஓரளவு திருப்திகொள்ளச் செய்யலாம் ஆனால் பட்டினியின் முன்னால் அந்த கைங்கரியம் நிலைக்காது. அதுபோல இந்த கைங்கரியம் வெளிநாட்டு உதவிகளை முடக்கவும் வல்லது என்பதை அறியாதர்வர்களும் அல்லர்.

தற்போது அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து தற்காலிகமாகவாவது இடைவேளையை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இதனை தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களும் கணிக்கிறார்கள். ஆனால் அது மட்டுமா? இதன் எதிர்கால விளைவு என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கடந்த ஒக்டோபர் 26 வெளியிடப்பட்ட 2251/30 இலக்க வர்த்தமானியின் மூலம்  ஜனாதிபதி வெளியிட்டுள்ள பிரகடனத்தில்




ஒரு தரப்புக்கான சட்டம்
“ஒரே நாடு ஒரே சட்டம்” வேலைத்திட்டத்துக்கான செயலணியை தாபித்து அதில் அங்கம் வகிக்கும் 13 பேரின் பெயர்களை அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி. அவர்களில் 9 சிங்கள பௌத்தர்களையும். நான்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களையும் நியமித்திருக்கிறார்கள். இச்செயலணியில்
  1. ஒரு தமிழரும் இல்லை.
  2. ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ இல்லை
  3. ஒரு பெண் கூட இல்லை
  4. இளம் தலைமுறையினர் எவரும் கிடையாது
ஆக இது தான் “ஒரே சட்டத்தை” உருவாக்கப் போகும் செயலணியா? இச்செயலணியில் இவர்கள் இல்லையே என்று விசனப்படுவதற்கும் எதுவும் கிடையாது ஏனென்றால்  இச்செயலணியின் திட்டமே இனவாத, மதவாத, பால்வாத, வலதுசாரி நலன்களைக் கொண்டது அல்லவா? அதில் தமிழரோ, கிறிஸ்தவர்களோ, பெண்களோ இருந்தாலும் ஒன்று தான் இல்லாது விட்டலும் ஒன்று தான். அவர்களின் உள்நோக்கத்தில் மாற்றங்களை நிகழ்த்தப்போவதில்லை. தற்போது அங்கம் வகிக்கும் நான்கு முஸ்லிம் இனத்தவர்களும் கூட வெறும் போடுதடிகள் தான் என்பதை விளங்கிக் கொள்ள விசேட அறிவு நமக்கு அவசியப்படாது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்னர் இதே ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி 2248/57 இலக்க வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டிருந்தது. அது பொருளாதார புத்தெழுச்சி, வறுமையொழிப்பு  என்பவற்றுக்கான 29 பேரைக் ஜனாதிபதி செயலணி. அரச அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளையும் கொண்டது அச்செயலணி. அதிலும் ஒரு தமிழர் முஸ்லிம் இனத்தவரும் இல்லை. தமிழ், மலையக, முஸ்லிம் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை. எனவே எந்த மக்களுக்கான “வறுமையொழிப்பு” என்பதை அவர்கள் இலக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியத்தேவையில்லை.

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற கருத்தாக்கமானது மேலோட்டமான பார்வையில் ஏதோ சமத்துவத்தை பிரதிபலிப்பது போல உலகுக்கு தோணக்கூடிய ஒன்று. ஆனால் “ஒரிலங்கை”, “ஒற்றையாட்சி”, “ஒருமித்த ஆட்சி” என்கிற கருத்தாக்கத்தின் இன்னொரு வடிவம் என்பதை இதன் நீட்சியை அறிந்த எவருக்கும் புரியும். அதுமட்டுமன்றி “சிங்கள பௌத்தத்துக்கு அடங்கி வாழல்” என்பதே அதனுள் பொதிந்துள்ள மறைமுக நிகழ்ச்சித்திட்டம் என்பதே நிதர்சனம்.

ஒரே மதம் பௌத்தம், ஒரே இனம் சிங்களம், ஒரே மொழி சிங்களம், என்கிற தத்துவத்தின் மீது தான் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற திட்டம் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது சொல்லித்தெரியத் தேவையில்லை. சிங்கள பௌத்தம் தவிர்ந்த எதுவும் புறக்கணிப்புக்கும், பாரபட்சத்துக்கும், அநீதிக்கும் உள்ளாகும் நாடாக இலங்கை மாறி எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டன. மாபெரும் யுத்தத்தையும் தான்
கொல்வின் ஆர் டீ சில்வா இதைத்தான் அன்றே ஒரு மொழியானால் இரு நாடு, இரு மொழியானால் ஒரே நாடு (One language, two nations; Two languages, one Nation) என்றார். 

முஸ்லிம் எதிர்ப்பின் வழித்தடம்
2009 இல் தமிழீழப் போராட்டத்தை முற்றுமுழுதாக நசுக்கிவிட்டதாக கொக்கரித்துகொண்டிருந்த சிங்களத் தரப்புக்கு 2009 க்குப் பின்னர் தமிழ் தரப்பு ஒரு சவாலான தரப்பாக இல்லை என உறுதியாக நம்பத் தொடங்கியது. பேரம் பேசும் வல்லமை உள்ள தரப்பாகக் கூட தமிழ் தரப்பை கண்டுகொள்ள சிங்கள அரச தரப்பு தயாராக இல்லை. எஞ்சிய எச்சசொச்ச விடயங்களையும் அழிக்க கைவசம் “தமிழ் (புலி) டயஸ்போரா” என்கிற ஒரு பீதியை கையாண்டுகொண்டே இருந்தது. எனவே தான் சிங்களப் பேரினவாத தரப்பு அடுத்ததாக முஸ்லிம்களை இலக்கு வைத்தனர்.

ஒரே நாடு, ஒரே நீதி என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் பேரினவாத சக்திகள். குறிப்பாக ஞானசாரர் தேரருக்கு இதில் பாரிய பங்குண்டு. இந்தக் கருத்தாக்கம் நேரடியாக முஸ்லிம்களை இலக்கு வைத்துத் தான் உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக, இனப்பெருக்க பீதி, கருத்தடை சதி பற்றிய பிரச்சாரம், மதராஸாக்களின் அதிகரிப்பு பற்றிய பிரச்சாரம், காதி நீதிமன்ற கட்டமைப்பு சர்ச்சை, பாரம்பரிய முஸ்லிம்கள்/வஹாபிய முஸ்லிம்கள் என்கிற வரைவிலக்கணப்படுத்தல், ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரச்சாரம், தொல்பொருள் இடங்களை ஆக்கிரமித்து அழிக்கிறார்கள் என்கிற பிரச்சாரம், மாட்டிறைச்சித் தடை, ISIS பீதி, ஹிஜாப் எதிர்ப்பு,  குவாசி (Quazi Court) நீதிமன்றத்துக்கு எதிர்ப்பு என கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புகளை பல முனைகளிலும் ஏற்படுத்தி அந்த எதிர்ப்புணர்வலையை சிங்கள மக்கள் மத்தியில் சமூகமயப்படுத்தியது ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா தான். அதனைத் தொடர்ந்து ராவண பலய, “ராவண பலகாய” (ராவண படை), சிஹல ராவய, சிங்களே இயக்கம் “மகாசென் 969” உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு முஸ்லிம் வெறுப்புணர்ச்சிக்கான கருத்தாக்கங்களை கட்டமைத்து, அதை பரப்பி வெகுஜன வெறுப்புக்கு பாதை போட்டு தலைமை கொடுத்தவர் ஞானசாரர் தான். எனவே அதே ஞானசாரர் இந்த செயலணிக்கு தலைமை தாங்க பொருத்தமானவர் தான்.

இந்த வரிசையில் பேரினவாத நிகழ்ச்சித்திட்டக் களத்தில் முஸ்லிம் சட்டங்களையும் கையிலெடுத்த சிங்களத் தரப்பு “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற பிரச்சாரத்தை முன் வைத்தது. முஸ்லிம் விவாக சட்டத்தினால் வயதில் குறைந்த சிறுமிகள் பலர் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்தி ஆகவே முஸ்லிம் சட்டத்தை நீக்கி அனைவருக்கும் “ஒரே சட்டம்” கொண்டுவரப்படவேண்டும் என்கிற கோஷத்தை முன்வைத்தார்கள். ஒரே நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றார்கள்.
பேரினவாத தரப்பு தயாரித்து வைத்திருந்த அக்கருத்தாக்கத்தை அப்படியே கோத்தபாய 2019 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தபாய அணியினர் பிரதான கருப்பொருளாக தூக்கிப் பிடித்தார்கள். அதற்கான சித்தாந்த வழித்தடத்தை நேரடியாக உருவாக்கிக் கொடுத்தவர்கள் கோத்தபாயவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக உருவான உலகளாவிய சிங்கள பௌத்த புத்திஜீவிகளைக் கொண்ட “வியத்மக” இயக்கம். “சிங்கள டயஸ்போரா”வைச் சேர்ந்த சிங்கள பௌத்த நிபுணர்கள் இதற்காகவே வந்திறங்கி தேர்தலையும் வெல்லச் செய்து, தேர்தலின் பின்னரும் நிபுணர் குழுவாக இயங்கி வருகின்றனர். இன்றளவில் “வியத்மக” பல சிதைவுகளைக் கொண்டிருகிறது என்கிற போதும் இந்த பின்புலத்தையும் சேர்த்துத் தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற நிகழ்ச்சிநிரலை நாம் நோக்க வேண்டும்.

இலங்கை போன்றதொரு பல்லின நாட்டில் ஏனைய சமூகங்களின் தனித்துவமான சில பாரம்பரிய உரிமைகளுக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் ஏலவே உள்ளன.

அத்தகைய தனியாள் சட்டங்களாக கண்டியச் சட்டம், இஸ்லாமியச்சட்டம், தேச வழமைச் சட்டம்  போன்றன நடைமுறையில் உள்ளன. அது மட்டுமன்றி 13 வது திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்குக்கான விசேட பட்டியல் மாகாண சபையின் நியதிச் சட்டமாக உள்ளது. மாகாண சபை முறையையும் இல்லாதொழித்து ஒரே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டுவருவது என்பதே பேரினவாத நிகழ்ச்சிநிரல். ஆக முஸ்லிம் சட்டத்தின் மீதான பாய்ச்சல் என்பது வெறும் அச்சட்டம் சம்பந்தப்பட்டது அல்ல. அது சிறுபான்மை இனங்களின் எஞ்சிய உரிமைகளையும் பறிக்கும் இலக்கைக் கொண்டது. சிங்கள பௌத்த மையவாதத்தை பலப்படுத்தும் திட்டம்.

மேலும் இன்னொன்றையும் இங்கே குறிப்பட வேண்டும். முஸ்லிம் சட்டத்தால் தான் இலங்கையில் அதிக சிறுவர் திருமணங்கள் நிகழ்கின்றன என்பது வெறும் புனைவே என்பதை டொக்டர் துஷார விக்கிரமநாயக்க தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் நிரூபித்தார், அவர் சுட்டிக்காட்டிய தரவுகளில் சனத்தொகை விகிதத்தின்படி இலங்கையில் அதிகமாக சிறு வயது திருமணங்கள் மலையக சமூகத்தில் தான் நிகழ்கின்றன என்றும் விளிம்பு நிலை சமூகமாக மலையக மக்களின் நிலை அவ்வாறு இருப்பதற்கு காரணங்களை அவர் முன்வைத்திருக்கிறார். அடுத்ததாகத் தான் முஸ்லிம் சமூகம் காணப்படுகிறது. அதேவேளை எண்ணிக்கை அளவில் அதிகளவில் சிறுவர்கள் திருமணம் முடிக்கிற சமூகமாக சிங்கள சமூகமே இருப்பதை அவர் விலாவாரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே முஸ்லிம் சட்டத்தால் தான் இது நிகழ்கின்றது என்பதும், முஸ்லிம்களில் தான் இது நிகழ்கின்றது என்பதும் சுத்த அபத்தம்.

ஞானசார என்கிற குற்றவாளி
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்கான சட்டவரைவை உருவாக்குவது இந்த செயலணியின் பணியென ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் குறிப்பிடுகிறது.

ஞானசாரருக்கு தெரிந்த சட்டம் எது? அவர் சட்ட வல்லுனரும் கிடையாது, சட்டத்தை மதிக்கவும் தெரியாது அதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.

ஞானசார தேரர் இன்று சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கவேண்டியவர். ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தையே அவதூறு செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் 2019 ஆம் ஆண்டு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர் அத் தண்டனையில் இருந்து விடுபட கெஞ்சி, மன்னிப்பு கோரி ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலையானவர். அவ்வாறு சட்டத்தை கேலி செய்து தண்டனை வதிக்கப்பட்ட ஒருவரிடம் சட்டவாக்க உரிமையை எந்த தார்மீகத்தின் பேரில் ஒப்படைக்கலாம்? எத்தனையோ வழக்குகளில் இருந்து தப்பி வந்த ஞானசார தேரர் நீதிமன்ற அவதூறு வழக்கில் மட்டும் தான் தண்டனை விதிக்கப்பட்டார். அதிலிருந்தும் ஜனாதிபதி மன்னிப்பு பெற்றார்.

2015 ஆம் ஆண்டு அளுத்கம, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் சூத்திரதாரியாக அறியப்பட்டவர். அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக (பாதுகாப்பு அமைச்சர் மகிந்தவை விட அதிக அதிகாரம் கொண்டவராக இயங்கியவர்) இருந்து ஞானசாரர் மீது எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்க விடாதபடி  பாதுகாத்தவர் கோத்தபாய. அந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினரும் தான் என்பதையும் நினைவில் கொள்வோம். இனவாத சிவில் தரப்பும், அரச அதிகாரமும், படைத்தரப்பும் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கை அது என்பதை பலரும் அறிவோம். ஒரு நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கையைக் கொண்டவராக இருந்திருந்தால் அன்றே ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக விசாரணை கூட நடக்கவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் 30வது அத்தியாயத்தில் முடிவுரை வரிசையாக குறிப்பிடப்படுகிறது. 475 ஆம் பக்கத்தில் 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமான நான்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளையும், ISIS என்கிற சர்வதேச இஸ்லாமிய அமைப்பையும் உள்ளூர் இனவாதக் குழுவான பொதுபல சேனாவையும் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது. இனவாத அமைப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த பொதுபல சேனாவின் பெருமூளை, தத்துவாசிரியர், தலைவர், வழிநடத்துனர் தான் இந்த ஞானசார தேரர்.

அது மட்டுமன்றி மொத்தம் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கைகளில் பொது பல சேனாவுக்கும், ஞானசாரதேரருக்கும் எதிரான பல சாட்சியங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு தலைமை வகிக்கும் ஞானசாரரை இச்செயலணிக்கு தலைமை தாங்க வைத்திருப்பது அறியாமையால் அல்ல. மோசமான உள்நோக்கத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.
ஞானசார தேரர் வாகனமொன்றை வேகமாக, கட்டுப்பாடின்றி, வாகனம் செலுத்தி, வீதியில் வெல்லம்பிட்டிய வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு முச்சகர வண்டியில் மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். துமிந்த என்கிற முச்சக்கர வண்டி சாரதி கடும்காயங்க்ளுக்கு உள்ளாகியுள்ளார். நள்ளிரவு இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னோர் இடத்தில் பொலிசார் அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். ஞானசார தேரர் அப்போது குடிபோதையில் இருப்பதை அறிந்து அவரை போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மதுவருந்தியிருக்கிறாரா என்பதை உறுதிசெய்யும் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சிகப்பு நிறக் கோட்டையும் தாண்டிச் சென்றுள்ளது. போலீசார் நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில் அவர் குடிபோதையில் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். (வழக்கு இலக்கம் 6315-2000). 12 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்தி அவ்வழக்கில் இருந்து விடுதலையானார் ஞானசாரர். இப்பேர்பட்ட சட்டமீறல்களில் ஈடுப்பட்ட ஒருவரிடம் சட்டவுருவாக்கப் பொறுப்பைக் கொடுக்க எந்த அறிவாளி முன்வருவார்.

ஞானசாரர் செய்த அடாவடித்தனங்கள், சண்டித்தனங்கள், மிரட்டல்கள் எல்லாமே பட்டியல் பல சர்வதேச அறிக்கைகளில் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.

அப்பேர்ப்பட்ட ஞானசாரருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்ததானது நரியிடம் கோழியை பாதுகாக்கக் கொடுத்தது போன்றது.
கோத்தபாய – ஞானசார கூட்டு
2013 இல் பொதுபல சேனா உருவாக்கப்பட்டதன் பின்னணியல் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக அன்று பல தகவல்கள் வெளிவந்த வேளை அதை இரு தரப்பும் மறுத்தன. ஆனால் ஆரம்பத்தில் பொதுபலசேனாவின் நிகழ்சிகளில் கோத்தபாய கலந்துகொண்டது பற்றிய செய்திகளும் படங்களும் கூட வெளியாகியிருந்தன. ஆனால் இன்று அந்த ஞானசார தேரர் மீது இருக்கிற பக்தியையும், நம்பிக்கையையும் ஜனாதிபதி கோத்தபாய வர்த்தமானியில் கீழ்வரும் வரிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி பதவியை வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், தங்களின் விவேகம், திறமை மற்றும் பற்றுறுதி என்பவற்றின்மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு, மேற்சொல்லப்பட்ட உஙகளை ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான சனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்துவதற்காக இத்தால் நியமிக்கின்றேன்...”
இலங்கையில் சமத்துவத்துக்காக பணிபுரியும் எவ்வளவோ சட்ட வல்லுனர்கள் இருக்கும் போது சட்டம் தெரியாத, சட்டத்தை அவமதித்த, நீதிமன்றம் விதித்த தண்டனையில் இருந்து குறுக்குவழியில் தப்பிவந்த, சட்டத்தை தன் கையிலெடுத்து வன்முறையில் இறங்கிய அனுபவங்களைக் கொண்ட, அத்தகைய வன்முறைகளுக்கு சிங்கள பாமரர்களைத் தூண்டிய, தூண்டி வருகிற ஞானசாரரை இச்செயலணிக்கு நியமித்ததன் அடிப்படை நோக்கம் என்னவாகத் தான் இருக்க முடியும். அதுவும் தலைவராக.

வர்த்தமானியின் படி நீதியமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை ஆராய்ந்து திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை செய்யும் அதிகாரத்தை இக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருகிறது என்றால்; அப்பேர்பட்ட சட்டவரைபை தயாரித்த சட்டநிபுணர்களை விட அதிகமான துறைசார் நிபுணத்துவம் ஞானசாரருக்கு என்ன இருக்கிறது. அதுசரி.... சட்டவாக்கம் சம்பந்தப்பட்ட ஒரு செயலணிக்கு மதகுருமார் ஏன்? பௌத்த பிக்குவும், மௌலவிமாரும் ஏன்?
ராஜபக்சக்களுக்கான நாடும், சட்டமும்
இதைஎல்லாவற்றையும் விட கோத்தபாயவுக்கு இருக்கிற  “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற திட்டத்தை ஏற்படுத்தும் தார்மீகம் தான் கோத்தபாயவுக்கு உண்டா. கோத்தபாய மீது நீதிமன்றங்களில் தொடக்கப்ப்ட்டிருந்த அனைத்து வழக்குகளும் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களின் பேரில் நீக்கிக் கொண்டவர் அவர். அது மட்டுமன்றி தனது சகோதரர்கள் மீதும், தனக்கு நெருக்கமானவர்கள் மீதும் தொடுக்கப்பட்டிருந்த பல வழக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த ஒரு வருட காலத்தில் நீக்க வழி செய்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தனது ஆதரவாளர் துமிந்த சில்வாவை தனது தற்துணிவின் பேரில் விடுவித்ததுடன் அந்தக் குற்றவாளிக்கு அரச பதவியும் வழங்கினார். அதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்ற அவதூறு வழக்கில் தண்டனை பெற்றபோது தன்னை தொடர்ந்து விமர்சித்தவர் என்பதால் பலர் கோரியும் மன்னிப்பு வழங்காதவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட உருக்கமான கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்தும் மன்னிப்பு வழங்க முன்வரவில்லை. ஜனாதிபதிப் பதவியை பழியுணர்ச்சிக்கும், துஷ்பிரயோகங்களும், தன்னையும், தன் குடும்பத்தை ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பதற்கும் பயன்படுத்தும், தனது குடும்ப நலனுக்காக அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவந்த கோத்தபாயவிடம் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற ஒரு நீதியை எந்த அறிவாளியாலாவது எதிர்பார்க்கத் தான் முடியுமா?

ஞானசார தேரர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒரு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். உள்ளே சென்று வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கேள்விகள் கேட்க பல ஊடகங்கள் காத்திருந்தன. வந்த வேகத்தில் அவர் ஒன்றைக் கூறினார்
“தேசவழமை, ஷரியா சட்டம், அந்தச்சட்டம், இந்த சட்டம் எல்லாம் இந்த நாட்டில் செல்லுபடியாகாது. இது சிங்கள பௌத்தர்களின் நாடு. அந்த கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு இருக்கக் கூடியவர்கள் இருங்கள், முடியாது என்பவர்கள் உங்கள் பைகளை சுருட்டிக்கொண்டு உங்கள் இடங்களுக்கு ஓடிவிடுங்கள்...
இந்த நாட்டின் மக்கள் யார்...? மொழி என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்றால் சிங்களத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். "

என்றார்.

சிங்கள - பௌத்த – கொவிகம – ஆணாதிக்க – உயர்வர்க்கத்துக்கான நாடும், அவர்களுக்கான சட்டத்தைத் தான் அவர்கள் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோமா என்ன? இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பட்டறிவால் இதைக் கணிக்க முடியாதா என்ன?

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates