Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஜே.வி.பி.யின் சுயவிமர்சன மரபு! - தோழர் சந்திரசேகருக்கு ஓர் எதிர்வினை - என்.சரவணன்

“ஜே.வி.பியும் பிக்கு அரசியலும்” என்கிற தலைப்பில் சென்றவாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சந்திரசேகர் எனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

“நன்றி சரா.... உங்களது கட்டுரை வலதுசாரிகளுக்கு என்று கூறி இடதுசாரிகள் மீதான விமர்சனமே மேலோங்கியுள்ளது தொடர்ச்சியாக பல வருடங்களாக நான் உங்களை அவதானித்து வருகிறேன் உங்களது கட்டுரை எந்தவகையிலும் ஜே.வி.வியின் வளாச்சிக்கு உதவப்போவதில்லை. என்பதே எனது நிலைப்பாடு. ஏனென்றால் உங்களை பற்றியும் உங்களின் அரசியல் சித்தாந்தம் பற்றியும் எனக்கு ஓரளவு தெரியும். அது உங்களுக்கும் நன்குத் தெரியும். அதாவது ஜே.வி.பி ஏதோ ஒரு வகையில் மகக்ள் மத்தியில் தனது நம்பிக்கையை கட்டியெழுப்பி வருகின்றபோது உங்களை போன்றவர்களின் இவ்வகையான கட்டுரைகள் (நீங்கள் மட்டுமல்ல) அந்த நம்பிக்கையை சிதைப்பதற்கே உதவியிருக்கின்றன. மக்களின் நம்பிக்கைகயை சிதைப்பதற்காகவே எழுதப்படுகிறதா? என்பதே உங்களை போன்றவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதே எனது கருத்து... நன்றி உங்களின் விமர்சனப் பணிகள் தொடரட்டும்...”
என்கிறார் அவர். இந்த நேரத்தில் இப்படியானதொரு விவாதத்துக்கு நான் இழுக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.

இன்றைய அரசியல் களத்தில் ஜே.வி.பி “பிரதான – மரபான – தேசிய கட்சிகளுக்கு” சிறந்த மாற்றாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு இதற்கான தார்மீக பதிலை அளிப்பது நமது கடமை. ஜே.வி.பி.யை ஆதரிப்பவர்களை விமர்சனமின்றி ஆதரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்பார்ப்பது மார்க்சிய தார்மீகம் அல்ல.

என்னை விளிக்கும் போது “சரா” என்று விளித்தத்தைக் கவனித்தேன். உங்களை முதன் முதல் 90களின் நடுப்பகுதியில் அன்றைய “கம்லத் தோழர்” (இன்றைய விமல் வீரன்ச) கொழும்பு பொது நூலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்தபோது உங்களை "ரமேஸ்" என்றே அறிமுகப்படுத்தியது இன்றும் ஞாபகம். அதன் பின்னர் நாம் இருவரும் நமக்கு இடையில் தனிப்பட்ட நண்பர்களாகவும், நெருங்கிய குடும்ப நண்பர்களாகவும் ஆனோம். தோழர் என்றே பரஸ்பரம் நாம் ஒருவரையொருவர் விளித்துக்கொள்வோம். ஆனால் எப்போதெல்லாம் நாம் அரசியல் விவாதம் செய்கிறோமோ; அந்த விவாதம் சூடு பிடிக்கும்போது உங்களுக்கு நான் “சரா”வாக ஆக்கப்பட்டுவிருகிறேன். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மாக்சிய திரிபு என்று வியாக்கியானப்படுத்தி “ரமேஸ்” என்று தொடர்ந்து அழைத்திருக்க முடியும். ஆனால் எனக்கு அரசியல் சகிப்புத் தன்மை உண்டு தோழர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ளாமல் போகுமளவுக்கு நான் அரசியல் வரட்சியடையவில்லை. அதனால் தான் இந்த பதிலும்.

ஆனால் நீங்களோ “உங்களைப் பற்றி எனக்குத் தெரியும்” என்கிற பாணியில் ஒரு சதிகாரனை சுட்டுவது போல கருத்து கூறியிருக்கிறீர்கள். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கும் எனக்கும் இடையிலான அரசியல் உரையாடல் கடும் விவாதமாக மாறியிருக்கின்றன. ஆனால் நாகரிகமாகவே நடந்திருக்கிறது என்பது ஆறுதல்.

என்னால் அன்று தொடக்கம் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உரிய பதில் கிடைப்பதற்குப் பதில் வெறும் அர்த்தமற்ற இழுபறி விளக்கங்களாகத் தான் அவை இருந்திருக்கின்றன. தேவைப்பட்டால் நாம் விவாதித்த விடயங்கள் குறித்து எனது நினைவில் உள்ளவற்றை வேறு ஒரு பதிவில் விளக்க முடியும். எனது சிக்கல் என்னவென்றால் அன்று நான் முன்வைத்த அந்த விமர்சனங்கள் இன்றும் செல்லுபடியானவை. என்பது தான்.

தேசிய இனப்பிரச்சினையை அணுகும் விதம் குறித்த அடிப்படை விவாதங்கள் அவை.

இடதுசாரிய விமர்சன மரபு
90களில் நான் புதிய ஜனநாயக கட்சியினரை சில இடங்களில் விமர்சித்ததற்காக அவர்கள் என்னை ஜே.வி.பி காரன் என்று முத்திரைகுத்தியதுடன், விமர்சனமாக பார்க்காது தமது “புதிய பூமி” பத்திரிகையில் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கினர். போதாதற்கு சரிநிகரில் நான் பாதுகாப்புக்காக பயன்படுத்திவந்த எனது புனைபெயர்களை பத்திரிகையில் வெளியிட்டு அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுத்தார்கள்.

நான்காம் அகில “தொழிலாளர் பாதை” கட்சியினர் (இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி) என்னை அவர்களின் மருதானையிலிருந்த கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிதானமிழந்து என்னை சீ.ஐ.ஏ காரன் என்றார்கள். சரிநிகர் பத்திரிகை அப்போது அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியில் வெளியிடப்பட்டது தான் அவர்கள் அந்த அவதூறுக்கு கிடைத்த பெரும் சாட்சியம்.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை பிரதான தேசிய வலதுசாரிக் கட்சிகள் காலம் நெடுகிலும் சந்தித்த பிளவுகளை விட அளவில் அதிகமானவை இடதுசாரிக் கட்சிகள் கண்ட பிளவுகள். வலதுசாரிக் கட்சிகள் பெரும்பாலும் கோட்பாடுகளிலும், விதிகளிலும் தங்கியிருப்பதில்லை. இடதுசாரிக்கட்சிகள் அப்படியல்ல; கட்சியின் முழு நடத்தையும் தத்துவங்களிலும் கோட்பாட்டிலும் தங்கியிருப்பவை. எனவே கோட்பாட்டு விவாதம் எனும் பேரில் பிளவுகளையேஅளவுக்கு அதிகமாக சந்தித்து இன்று பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் சின்னாபின்னமாகி, அழிந்து நாசமாகப் போய் விட்டன.

ஜனநாயக மத்தியத்துவத்துக்கும், விமர்சனம் – சுயவிமர்சனத்துக்கு போதிய வாய்ப்புகளும் இக்கட்சிகளில் இடம் இருந்திருந்தால் பெரும்பாலான பிளவுகளை தவிர்த்திருக்க முடியும். பல சந்தர்ப்பங்களில் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களில் போய் முடிந்திருக்கின்றன.

90களின் ஆரம்பத்தில் ஜே.வி.பி மீள உயிர்க்க காரணமாக இருந்தவர்கள் ஹிரு குழுவினர். தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை குறித்த விவாதம் மீண்டும் கட்சிக்குள் தலைதூக்கியபோது கட்சிக்குள் இனவாதத்தின் செல்வாக்கும் மேலெழுந்தது. அப்போது ஹிரு பத்திரிகையின் முக்கிய ஆசிரியராக இருந்த ரோஹித்த பாஷன “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின்” அவசியத்தை வலியுறுத்தியதற்காக அவரை “பொம்பிள பக்கத்துக்கு இழுக்கிறான்” என்று தனிப்பட்ட ரீதியில் அசிங்கப்படுத்தப்பட்டார். (அவரின் காதலி ஒரு தமிழ் பின்னணியைக் கொண்டவர்.). 90களின் நடுப்பகுதியில் ஜே.வி.பியை விட்டு வெளியேறியோர் வெளியில் இருந்து தோழமைபூர்வமான விமர்சனங்களை வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகித்தர்வகளை ஜே.வி.பி வன்முறையால் தான் எதிர்கொண்டது. அதற்கு நானும் சாட்சியாக இருக்கிறேன்.

சுனிலா அபேசேகர (மகளிர் பிரிவு செயற்பாட்டாளரும், “விடுதலை கீதம்” குழுவின் பாடகியும்), கெலி சேனநாயக்க (அன்றைய பொதுச்செயலாளர்) போன்றோர் கட்சிக்குள் கோட்பாட்டுப் விவாதத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட காதலை அசிங்கப்படுத்தி அரசியல் விவாதத்தை காயடித்ததன் விளைவு அவர்கள் இறுதியில் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பின்னர் வெளியேற்றப்பட்டதாகக் ஜே.வி.பி கூறிக்கொண்டது. 

முக்கியமாக ஜே.வி.பி.யின் வரலாற்றில் சகிப்பற்றதன்மைக்கும், சுவிமர்சனங்களை அவதூறுகளாலும், வன்முறைகளாலும் பதில் கொடுத்த மரபுக்கும் ஒரு தொகை சம்பவங்களைப் பட்டியலிட முடியும்.

புரட்சிகர கட்சியொன்று விமர்சனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும். மாஓ சேதுங் நமக்கு இப்படி கூறுகிறார்
“உணர்வுபூர்மாக சுய விமர்சனம் செய்துகொள்வது, மற்றக் கட்சிகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும் மற்றொரு அம்சமாகும். நாம் வழக்கமாகச் சொல்வது போல, அறையைத் தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருந்தால் தூசு சேர்ந்துபோகும். நாம் முகம் கழுவும் பழக்கத்தை விட்டுவிட்டால் நமது முகம் அழுக்காகத்தான் இருக்கும். அதுபோல, நமது தோழர்களின் மூளையிலும், கட்சி வேலையிலும் கூடக் குப்பைகள் சேர்ந்துபோகலாம். நாம் அங்கும்கூட கூட்டுவதையும் கழுவுவதையும் செய்ய வேண்டும்... நமது வேலையைத் தொடர்ந்து சரிபார்த்துக்கொள்வதற்காக, அந்த நிகழ்வுப் போக்கில் ஜனநாயக வேலைநடை முறையை உருவாக்கிக்கொள்வதற்காக, விமர்சனத்தையோ அல்லது சுய விமர்சனத்தையோ கண்டு அஞ்சாதிருத்தல் அவசியம். “பேசியது யார் என்பதல்ல, பேசியது என்ன என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டும்”, “தப்பு செய்திருந்தால் திருத்திக்கொள்ளுங்கள், இன்னும் செய்யவில்லையென்றால் எச்சரிக்கையாக இருங்கள்...”
மாஓ சேதுங் -"On Coalition Government" (24, ஏப்ரல் 1945), தெரிவு நூல், Vol. III, பக்கம். 316-17.
“விமர்சனத்தைப் பொறுத்தவரை அதனை உரிய சமயத்தில் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள்.”
மாஓ சேதுங் - On the Question of Agricultural Co-operation (July 31, 1955), 3rd ed., p. 25.

லெனின் இப்படி விளக்குகிறார்.
“ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைத் தீர ஆராய்வது – இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும் (லெ. தொ. நூ. 31.57)
சிங்கள இடதுசாரிக் கட்சிகளாக
இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள்  இலங்கையில் சிங்கள மொழியில் தான் இயங்கியிருகின்றன. விதிவிலக்குகளை தவிர்த்துப் பார்த்தால். கூட்டப் பேச்சுகள், உட் கட்சி விவாதங்கள் செயற்பாடுகள், போஸ்டர்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், ஊடகங்கள், இன்றைய இணையத்தளங்கள் வரை அனைத்துமே சிங்களத்தில் மட்டும் தான் வெளியிடப்படுவந்திருகின்றன. விதிவிலக்காக சிலவற்றை காண்பித்து தமிழில் இதோ வெளியிட்டிருக்கிறோமே என்று வாதிடலாம். இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அப்படித்தான் பதிலளித்து வந்துள்ளன. ஒரு ‘பாட்டாளி வர்க்கக் கட்சி” எப்படி “சிங்களப் பாட்டாளிவர்க்க கட்சி”யாக சுருங்க முடியும் என்கிற கேள்விக்கு எவரும் பதிலளிப்பதில்லை. பதிலளித்ததுமில்லை.

அப்படியிருக்கும்போது அக்கட்சிகளை அறிவதற்கும், கணிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான வாய்ப்புகள் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியதில்லை என்று தான் நான் கூற முடியும். ஜே.வி.பி.யும் இதில் விதிவிலக்கில்லை.

சிங்களமும் தெரிந்த, இடது சாரி இயக்கங்களோடு செயற்பட்ட, அந்த அரசியலை விளங்கிக்கொண்ட என் போன்றோர் மட்டுமே இதனை அணுக எஞ்சியிருக்கிறோம். எனவே தான் ஜே.வி.பியையும் பல சந்தர்ப்பங்களில் ஆதரித்து இயங்கினாலும் தேவையான இடங்களில் தமிழில் விமர்சனங்களையும் செய்ய பின் நின்றதில்லை. சிங்களச் சூழலில் ஜே.விபி.யின் மீதான இடதுசாரி அணுகுமுறையுடனான விமர்சனங்கள் பல நூல்களாகவே வெளிவந்துள்ளன. தமிழில் இத்தகையை விமர்சனங்கள் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். எனவே எனது விமர்சனங்களையும் எதிரிகளின் விமர்சனங்களைப் போல எதிர்கொள்ளப் பார்க்கிறீர்கள் என்பதே எனது விமர்சனம். ஜே.வி.பி.யை விமர்சிக்க எதிரியின் முகாமில் இருந்தால் தான் செய்ய முடியுமா? அப்படி விமர்சிக்க எதிரியின் முகாமுக்கே போகத்தான் வேண்டுமா? விமர்சிப்பவர்கள் எல்லோரும் வலதுசாரி முகாமுக்குப் போய்  தான் ஆகவேண்டுமா? அதைத்தான் ஜே.வி.பி முன்மொழிகிறதா?

வலதுசாரி, முதலாளித்துவக் கட்சிகள் குறித்து வினையாற்றும் போது நாம் அவற்றை அம்பலப்படுத்துகிறோம் எதிர்க்கிறோம். ஆனால் இடதுசாரி முகாமை அணுகும் போது நாம் நேசபூர்வமான விமர்சனங்களையே முன்வைக்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணமே மார்க்சிய விமர்சன – சுயவிமர்சன மரபின் மீதுள்ள நம்பிக்கை தான்.  அவ்விமர்சனங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு வினையாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான். ஆனால் பெரும்பாலும் இது நிகழ்வதில்லை. விமர்சனம் ஒன்று வந்தவுடன் எடுத்த எடுப்பில் அவ்விமர்சனத்தை சதியாகவும், எதிராகவும் கருதும் மரபை மறுபக்கம் வளர்த்துவைத்திருக்கிறோம். அதுவே பல ஆரோக்கியமான தோழமை சக்திகளை புறந்தள்ளி, ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி, தூரவிலத்தி வைக்க காரணமாகியிருக்கிறது. ஜே.விபியும் தமது சுயவிமர்சனத்தின் சுயமரபைப் பற்றியாவது முதலில் சுயவிமர்சனம் செய்துகொள்ளும்படி பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. ஜே.வபி.பி.யின் சுயவிமர்சன மரபு குறித்து ஏராளமான விமர்சனங்கள் சிங்களத்தில் வெளிவந்துள்ளன. தமிழில் அப்படி ஒரு நூல் கூட இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

ஜே.வி.பி.யின் அரசியல் நடத்தையில் நல்ல மாற்றங்கள் காணப்பட்டாலும் கூட முன்னைய அரசியல் நடத்தை குறித்த விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. முதலாவது விடயம் அந்த வரலாறு விமர்சன ரீதியில் தமிழிலும் பதிவு செய்யப்படவேண்டியை அவை. அடுத்தது ஜே.வி.பி. அதனை முறையாகவும் முழுமையாகயும் பகிரங்க சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி கடக்க வேண்டும். இதை அவர்களாக செய்ய முன்வராத வரை வெளிவிமர்சனங்கள் ஓயப்போவதில்லை.

ஜே.வி.பியை நிராகரிக்க, அல்லது எதிர்க்க மேற்படி விமர்சனங்கள் எமக்கு போதுமானவை அல்ல. எனவே ஜேவி.பிக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதுமில்லை.

நன்றி  - அரங்கம் 

"இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள்" மலையகத்துக்கு முன்னுரிமையளித்துள்ளது யார்? - நிஷாந்தன் சுப்பிரமணியம்


சிந்திப்பதற்கு…………

நாட்டின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளான ஐக்கிய தேசிய முன்னணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.

இரண்டு தரப்பினரும் தேசியப் பாதுகாப்புக்கே முன்னுரிமையளித்துள்ளனர். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமென்பதை இருதரப்பினரும் வெவ்வேறு வகையில் விளக்கமளித்துள்ளர்.

19ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து முன்னோக்கி நகருவோமென சஜித் பிரேமதாச கூறியுள்ளதுடன், 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோமென கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கிராமிய பொருளாதாரம், புத்தாக்கம், முயற்சியாண்மை, நவீன தொழில்நுட்பம், உயர்கல்வி, முன்பள்ளி, சமூக சமச்சீரான பொருளாதாரம், பெண்களுக்கு முன்னுரிமை, ஊழல் - மோசடியற்ற ஆட்சி, அடிப்படைவாதத்திற்கு எதிரான போர், போட்டிமிக்க உலக மற்றும் உள்நாட்டு சந்தையை உருவாக்கல், போதைப்பொருளுக்கு எதிராக கடும் சட்டம், இலங்கைக்கு முன்னுரிமை, இலங்கையின் அமைவிடம், சட்டவாட்சி, சுதந்திரமான ஊகத்துறை, வினைத்திறன் வாய்ந்த பொதுச் சேவை, போக்குசரத்து, சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு, நட்புறவுடனான வெளிநாட்டுக் கொள்கை, ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம், மாற்றம் கொண்ட பிரஜை – வளமான மனித வளம், மக்களை மையப்படுத்திய பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப விருத்தி, பௌதீக வள அபிவிருத்தி, சுற்று சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம், சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்து.

இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞானங்களிலும் சுதேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னுரிமை சஜித்தின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக முன்வைத்துள்ளது. அதேவேளை, நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கும் சஜித் உறுதியளித்துள்ளார்.

இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மலையகத்துக்கு யார் முன்னுரிமையளித்துள்ளர்?

கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்
  • மேலதிக வருமானங்களை பெற்றுக்கொள்வதற்காக பாவனைக்கு உட்படுத்தாதுள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்காக வழிவகைகள் செய்யப்படும்
  • பெருந்தோட்டங்களில் மேலதிக கணித, விஞ்ஞானப் பாடசாலைகள் உருவாக்கப்படும்
  • சகல வசதிகளுடனும் கூடிய குறைந்த மாடிவீடுத்திட்டமொன்று அறிமுக்கப்படுத்தம்
  • கர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு போஷாக்கை பெற்றுக்கொடுக்க புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்
  • மலையக இளைஞர்களின் தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான பல்கலைகழக சபைபொன்று ஹட்டனில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் ஸ்தாபிக்கப்படும்.
  • மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்
  • என்பதுடன், தோட்டத்துறையை மையப்படுத்திய கைத்தொழில் வலயமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கையெடுத்தல்.
  • தோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய சிறந்த முகாமைத்துவ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும்
என்பவை கோட்டாபய ராஜபக்ஷவால் மலையக மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளாகும்.

இவரின் வாக்குறுதியில் மலையக புத்திஜீவிகளின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழம் குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை.

அதேபோன்று தோட்டத்தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்கப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவில்லை.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
  • தோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க அவுட் - க்ரோவர் திட்டம் குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை.
  • தோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள்
  • கௌரவம், சமத்தும், அபிவிருத்தி, பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
  • தொழில்துறை மற்றும் சேவைத்துறைக்கு மலையக இளைஞர்கள் உள்ளீர்பு
  • 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும்.
  • நியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு
  • பெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளை போன்று தரமுயர்த்தப்படும்.
  • உயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும்.
  • நாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம்
  • மலையக இளைஞர்களுக்கான தொழில்பயிற்சியை உறுதிப்படுத்தல்
உள்ளிட்டவை மலையக மக்களுக்கான உறுதிமொழிகளாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன்,
  • மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி
  • தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.
  • தோட்டத்தொழிலாருக்கு ரூ.1500 நாளாந்த சம்பளம்.
உள்ளிட்ட உறுதிமொழிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மலையக புத்திஜீவிகளின் கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றியமைப்பதற்கான ஆரம்ப படிமுறையாக ‘தோட்டத் தமிழ் விவசாயிகள்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த அவுட் - க்ரோவர் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித் தேர்தல் விஞ்ஞானம் மலையக மக்களுக்கு ஒரளவு நம்பிக்கைத்தரும் வகையில் அமைந்துள்ளனது.

இறுதி தீர்மானம் மக்கள் கைகளில்…………

நிஷாந்தன் சுப்பிரமணியத்தின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் 

பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் - அ.மயூரன்.


இலங்கையின் வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது.

இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.

அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும், தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும்.

இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள் வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன.

ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.

இதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது.

இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது.

அத்துடன் வவுனிக்குளம், பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானது
மகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுகின்றது.

இவ்வாறு தென்பாகத்திலும் பார்க்க தொல்லியல் ஆதாரம் கொண்ட வடபாகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாகர்களினால் ஆளப்பட்டிருக்கிறது. பின்னர். அது தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிகளுக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடைப்பட்டுஆளப்பட்டிருக்கிறது.

பின்னர் ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆளப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிக்கும், ஐரோப்பிய காலணித்துவத்தின் ஆட்சிவரையான காலப்பகுதியில் (பிரித்தானியர் காலம் வரை) இலங்கையின் வடபாகத்தில் யாழ்ப்பாண அரசுக்கும், தென்னிலங்கை அரசிற்கும் அடங்காது வன்னிப்பிராந்தியத்தை வன்னியர்கள் ஆண்டிருக்கிறார்கள்.

இதை ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பயணக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.

போர்த்துக்யேர் ஆட்சிக்காலத்தில் வன்னி கைலாயவன்னியனது ஆட்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.

அதன்பின்னர் ஒல்லாந்தரும் அதனைத் தொடர்ந்து வந்த பிரித்தானியரும் வன்னியை ஆண்டிருக்கிறார்கள்.

ஒல்லாந்தரது இறுதிக்காலப் பகுதியிலும், ஆங்கிலேயரது ஆரம்ப காலப்பகுதியிலும் வன்னியில் வாழ்ந்தவனாக பண்டாரம் வன்னியனார் திகழ்கின்றார்.

இப்பண்டாரம் வன்னியனார் இலங்கையின் தேசிய வீரர்களுள் 1982ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

டச்சுக்காரரின் காலத்திலும், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இலங்கையில் தேசிய வீரர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒல்லாந்தர்களின் இறுதிக் காலத்திலும் ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலத்திலும் அந்நியர்களை 'எமது தாய்மண்ணில் இருந்து வெளியேற்றுவேன்' என சபதம் பூண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களுள் பண்டாரம் வன்னியனார் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

இவரை இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய வீரராக (வன்னி பண்டார) அங்கீகரித்திருக்கிறது இலங்கை அரசு.

இப்படிப்பட்ட இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவரான பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வன்னிப் பிராந்தியத் தளபதி வொன் டிறிபேர்க் அவர்களால் கற்சிலைமடுவில் தேற்கடிக்கப்பட்டு ஓடிய நாளை பண்டாரவன்னியன் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றோம்.

ஆங்கிலப்படைகளிடம் தோற்றோடிய பண்டாரவன்னியனை நாம் அவனது நினைவு நாளாக கொண்டாடுகிறோம்.

ஏனெனில் பண்டாரவன்னியன் எப்போது இறந்தான் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடமில்லாததன் காரணத்தினாலேயே ஆகும்.

எனவே அவன் ஆங்கிலேயத் தளபதியிடம் தோற்று நிராயுதபாணியாக பண்டாரவன்னியன் ஓடிய நாளையே நாம் நினைவுகூருகிறோம்.

அதுவும் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களிடம் தோற்றோடி கிட்டத்தட்ட 100 வருடங்களின் பின்னர். அதாவது1904 - 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவரால் 1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர்ஒரு நடு கல் நாட்டப்பட்டது.

இந்தக் கல்லிலே
“HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நடு கல்லிலே பண்டார வவுனியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் ஆங்கில தமிழ் வரலாற்று நூல்கள் அனைத்திலும் பண்டார வன்னியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுகல் நிறுவப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் 1913ல் ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்த 'இலங்கையில் உள்ள நடுகற்களும்நினைவுச் சின்னங்களும்' என்ற நூலிலே கற்சிலைமடுவில் உள்ள நடுகல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

எனவே பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் தோற்றோடிய நாளை நாம் அவனது நினைவு தினமாக கொண்டாடுவதா என்கின்ற சர்ச்சை எழுந்தது.

இதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் 1997ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவு நாளை மாற்றியமைத்தனர்.

அதாவது பண்டாரவன்னியன் 2வது தடவையாக (ஆனால் ஆங்கிலேயருக்கு முதல் ஒல்லாந்தர் இக்கோட்டையில் இருந்த போது தகர்த்தான்) ஆங்கிலேயர்களின் கோட்டைகளில் ஒன்றான முல்லைத்தீவை கைப்பற்றி அங்கிருந்த பீரங்கிகளையும் இழுத்துச்சென்ற ஓகஸ்ட் 25 (1803) நாளை தமிழர் படைபலத்தின் திருநாளாக கொண்டாடினர்.

அதன்பின்னர் கற்சிலைமடு மக்களினால் 2002 ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவுருவம் நாட்டப்பட்டது

இதன் பின்னர் கடந்த 07.03.2010 ஆம் ஆண்டு இலங்கையின் தமிழர்களின் வீரனாகவும், சிங்கள மக்களின் தேசிய வீரனாகவும் கருதப்பட்ட பண்டாரவன்னியனின் சிலை இலங்கைப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டன.

உன்மையில் பண்டார வன்னியனின் வீரத்தினை உறுதிப்படுத்துகின்ற ஓகட்ஸ் 25 திகதியே பண்டாரவன்னியனின் வீரத்தின் நாளாக கொண்டாடப்படவேண்டும் பண்டாரவன்னியனின் வரலாறு.,
பண்டாரவன்னியனின் வரலாற்றில் பல வரலாற்றுக் குழப்பங்களை பலரும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

பண்டாரவன்னியனின் குடும்ப ஆய்வை முதன்முதலாக சுவாமி ஞானப்பிரகாசரே செய்தவராவார். இதில் சுவாமி ஞானப்பிரகாசர் தெளிவாக பனங்காம வன்னியர் பரம்பரையை குறிப்பிட்டு 1936 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 30ஆம் திகதி றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பித்தார்.

அத்துடன் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் 1933ஆம் ஆண்டு (பக்கம் 111 -112) இல் நல்லமாப்பாணன் பரம்பரையையும் தெளிவாக விளக்குகிறார்.

இதில் வன்னியர்களுடைய பரம்பரையை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்கின்ற பெயர் எவ்வாறு புனைகதை மூலம் புகுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

இதன் பின்னர். 1982 இல் பண்டார வன்னியன் தமிழ் சிங்கள இனங்களுக்கும் தேசிய வீரனாக 2 தடவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நவரத்தினம் எம்.பி. அவர்களின் முயற்சியால் வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுருவத்தினை அமைத்து அவர்குறித்த வரலாற்றினை சிறிய ஆய்வுரையாக வழங்கினார்.

இதுதான் பண்டாரவன்னியன் குறித்த கருத்தை எம்மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்தது எனலாம்.

இதன் பின்னர். பண்டாரவன்னியனின் நாடகத்தை இயற்றிய திரு முல்லைமணி (வே.சுப்பிரமணியம்) அவர்கள் பண்டாரவன்னியனின் பெயரை குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என ஒரு பெரும் வரலாற்று வடுவுடன் புனைந்துவிட்டார்.

அத்துடன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில்அதாவது பண்டாரவன்னியனுக்கு 150 வருடங்கள் முன்னர் பனங்காமத்தை ஆட்சி செய்த கைலாயவன்னியனை பண்டாரவன்னியனின் தம்பியாக்கி, சங்கிலியனை போர்த்துக்கேயரிடம் காட்டிக்கொடுத்த ஊர்காவற்றுறையின் தலைவனான காக்கைவன்னியனை (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) பண்டாரவன்னியனை காட்டிக் கொடுத்தான் எனக்குறிப்பிடுகிறார்.

(வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலரான மருதநிலா இதழில் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தனது வன்னிநாட்டின் வரலாறு என்ற கட்டுரையில் சங்கிலியனைக் காட்டிக்கொடுத்தாக போர்த்துக்கேய வரலாறுகள் கூறும் இருவர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அவ்இருவர்களில் அதாவது புவிராச பண்டாரத்தின் மாப்பிளையும் தளபதியுமாக இருந்தவன் (1582 - 1592) , மற்றையவன் எதிர் மன்ன சிங்கன் இரகுவம்சம் இயற்றிய அரசகேசரியின் சகோதரனாவான்.

ஆகவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப்புலவர் தனது யாழ்ப்பாண வைபவ மாலையிலேதான் முதன் முதலாக காக்கை வன்னியன் என்கின்ற கதாபாத்திரத்தினை உருவாக்குவதாக சொல்கிறார்.

GAGO என்கின்ற போத்துக்கேயச்சொல்லுக்கு கொன்னையன் என்பது பொருள் என்றும் தமிழில் காகோ என்றால் பிரமா படைக்காத படைப்பு, பெற்றோர் இடாத பெயர்
ஆகவே மயில்வாகனப் புலவர் அந்த காகோ என்கிற பெயரை தமிழில் காக்கை என விளங்கிகொண்டு யாழ் சங்கிலியன் அரசவையில் மாப்பாண வன்னியர்கள் இடம்பெற்றதனால் காக்கையுடன் வன்னியனையும் இணைத்து காக்கை வன்னியன் என புதுபெயரைப் புனைந்தார் என்று பேராசிரியர் பூலோகசிங்கம் மருதநிலா இதழில் குறிப்பிடுகிறார்.

எனவே இவற்றையெல்லாம் (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) வாசித்த முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும் தான் எழுதத்துடித்த பண்டாரவன்னியனின் கதாபாத்திரத்தில் மயில்வாகனப்புலவர் உருவாக்கிய காக்கை வன்னியனுக்கு இரண்டாவது தடவையும் உயிர் கொடுத்திருகிறார்.

இதைவிடப் பெரும் சோகம் என்னவெனில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயப்படைகளினால் கைது செய்யப்பட்டு கற்சிலைமடுவில் தூக்கிலிடப்படுகிறான் எனவும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.
இது மிகப்பெரும் வரலாற்றுத் திரிபும், துரோகமும் ஆகும்.

முல்லைமணி அவர்கள் கற்சிலை மடுவில் உள்ள பண்டாரவன்னியன் வொன் றிபேக்கிடம் தோற்ற நினைவிடத்தினை அவனது கல்லறை என மனதில் நிறுத்தி பண்டாரவன்னியன் நாடகம் இயற்றியிருக்கிறார்.

பின்னர் இந்த பண்டாரவன்னியன் நாடகத்தினை 2006 நூலுருவில் கொண்டுவந்த போதும் தான் இந்த நாடகத்தினை இயற்ற காரணமாக இருந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்புக்களை கோடிட்டுக் காட்டியிருந்தபோதும் அந்த நாடகத்தில் இருந்த தவறை அவர் திருத்த முன்வரவில்லை.

அத்துடன் முல்லைமணி பண்டாரவன்னியன் நூலில் குறிப்பிடும் போது முன்னர் நான் குறிப்பிட்ட ஞானப்பிரகாசர் 1936 இல் றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கொடுத்த அறிக்கையில் தொன்பிலிப் நல்ல மாப்பாணனின் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

1645 இல் பிறந்த நல்ல மாப்பாணனின் பேரன் பண்டாரவன்னியன் 1811 வரை வாழ்ந்திருக்க முடியாது.

அதே ஞானப்பிரகாசரின் அட்டவணையில் எல்லைக்காவேத நல்ல நாச்சனின் (பிறப்பு
1730) கணவன் நல்ல மாப்பாணன் டொன் ஜூவான் குலசேகரன் என்னும் வன்னித்தலைவனின் பெயர் இடம்பெற்றது.

இவனின் முழுப்பெயர் டொன் ஜுவான் குலசேகர நல்லமாப்பாண ஆகும்,

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1933 ஆம் ஆண்டு வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்னும் நூலில் நல்ல மாப்பாணருடைய பரம்பரையை அட்டவணைப்படுத்துகிறார்.

அதில் நல்லமாப்பாண முதலியாருக்கும், எல்லைக்காவேத நல்லநாச்சனுக்கும் பிறந்தவளே கதிரை நாச்சன் அவனுடைய கணவன் முகமாலை வைரமுத்து வன்னியனார் என வகைப்படுத்துகிறார்.

இனி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடும் நல்ல மாப்பாண முதலியாரை சுவாமி ஞானப்பிரகாசர் காட்டும் டொன் ஜுவான் குலசேகர மாப்பாணனாக இனங்கானலாம்.

எனவே மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் முகமாலை வைரமுத்து வன்னியனார் மகனே பண்டாரவன்னியன் எனக்கொள்ளலாம்.

பேரன் குலசேகர மாப்பாணனின் பெயருடன் தந்தை வைரமுத்துவின் பெயரையும் சேர்த்தே குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என குறிப்பிடப்படுகிறது,

எனவே பண்டாரவன்னியனுடைய தாய் குழந்தை நாச்சி இவரை கதிரை நாச்சி எனக்கொள்வதே பொருத்தம். என ஒரு வரலாற்றை சமைத்திருக்கிறார் முல்லைமணி.

இங்கே ஒரு நாட்டுக்கூத்தாளர் (அண்ணாவி) வரலாற்றைப் படைக்கின்ற பொழுது எவ்வகையில் அது திரிபடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது,

எனவே 1936 களில் சுவாமி ஞானப்பிரகாசர் ஏசியாற்றி சபைக்கு வழங்கிய மாப்பாண வன்னியர் பற்றிய கட்டுரையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்பின் தகவல்களும் பொருந்தி வருகின்றன.

அந்தவகையில் ஞானப்பிரகாசர் புவிநல்ல மாப்பாணனின் மகள் கதிரை நாச்சன் (பெரிய பொன்னார் வன்னிச்சி) மகளே எல்லைக்காவேத நல்லநாச்சன் என்கிறார்.

இவருடைய கணவனே டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணன். - இந்த டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணனுடைய மகனாக மாப்பிள்ளை வன்னியனையே காட்டுகிறார் ஞானப்பிரகாசர்.

ஆனால் முல்லைமணியோ இவருடைய மகனாக பண்டார வன்னியனைக்காட்டுகிறார்.

மேலும் மயில்வாகனப்புலவர் வைபவமாலையில் கதிரை நாச்சி மகளாக முகமாலை வைரமுத்து வன்னியனாரை காட்டுகிறார்.

ஞானப்பிரகாசரோ கதிரை நாச்சனுக்கும் இலங்கை நாராயணனுக்கும் வள்ளி நாச்சன் என்று ஒரு மகள் இருந்ததாகவும், இந்த வள்ளிநாச்சனுக்கும் தியாகவன்னியனுக்கும் ஒரு மகள் இருந்ததாகவும் அம்மகள் கதிர்காம வன்னியனை மனம் முடிததாகவும் அவர்களது மகனே வண்டா வைரமுத்து (1813 - 1901) என்றும் கூறுகிறார்.

இந்த வண்டா வைரமுத்து பற்றி ஜே.பி லூயிஸ் அவர்கள் தனது இலங்கையின் வன்னிமாவட்டங்கள் என்னும் நூலில் குறிப்பிடும் காலம் சரியாக ஞானப்பிரகாசரின் கட்டுரையுடன் பொருந்துகிறது.

ஆகவே எப்படி 1811 இல் பிறந்த வண்டா வைரமுத்துவின் மகனாக 1811 இல் இறந்த பண்டாரவன்னியன் இருக்கமுடியும்?

அத்துடன் ஞானப்பிரகாசர் நல்லமாப்பாணன் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் என்று குறிப்பிடுகின்றார்.

ஒல்லாந்த வரலாற்றுக் குறிப்புக்களும் நல்ல நாச்சன் மகனே அதாவது அழகேசன் புவிநல்ல மாப்பாணன் மகனே பண்டாரம் என குறிப்பிடப்படுகிறது.

இது ஒல்லாந்த வன்னித்தளபதி தோமஸ் நாகலின் குறிப்பில் தெளிவாக உள்ளது.

அப்படியிடுக்க நாம் வைரமுத்துவின் மகன் பண்டாரம் என ஆதாரப்படுத்துவது பொருத்தம் அற்றது.

முல்லைமணி கற்பனையில் இயற்றிய பண்டாரவன்னியன் நாடகத்தினை மையமாக வைத்து சோழ சாம்ராச்சியத்தை மனதினில் நிறுத்து கலைஞர் கருனாநிதி ஐயா அவர்கள் பண்டாகவன்னியன் என்ற நாவலை படைத்திருந்தார்.
அதில் பண்டாரவன்னியனுக்கு நளாயினி ( நல்லநாச்சன்) என்று ஒரு தங்கை இருந்ததாகவும் அவன் பண்டாரவன்னியனின் அவைக்கழப் புலவனை காதலித்ததாகவும், சோழசாம்ராச்சியப்பார்வையில் நாவல் புனைந்திருந்தார்.

இதுவே இன்றும் மக்கள் மத்தியில் திகழ்கிறது.
உண்மையில் பண்டாரவன்னியனின் குலமரபினை எடுத்துக்கொண்டால் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் அல்ல.

அவனது முழுப்பெயரை வரலாறுகளைத் தட்டிப்பார்த்தால் டொன் தியோகு பண்டாரம் அழகேசன் புவிநல்ல மாப்பாண வன்னியனாராகும்.

மற்றும் ஒரு விதமாகக் கூறினால்புவிநல்ல மாப்பாண அழகேசன் பண்டாரம் என்பதாகும்.

இவனுடைய வரலாற்றினை விரிவாகப் பார்த்தால். போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழ் வரலாறுகளில் பறங்கியர் எனகுறிக்கப்பட்டுள்ளனர்.

1505ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி மன்னார், மற்றும் பறங்கிச் செட்டிகுளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை பறங்கியரால் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போனது.

இதனால்அங்கு 'வன்னியர்கள்' இருப்பதாகவும், அது வன்னியனார்களுடைய மாகாணம் எனவும் வன்னியனார் பற்று எனவும், தங்களுடைய வரலாற்றுக் குறிப்புகளில் சொல்லிச் சென்றனர்.

போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பலருக்கு முதலியார் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் வன்னிப்பிரதேச நிர்வாகத்தை பறங்கியர் நடத்தி வந்தனர்.

முதலியார் பதவி பெற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்போது 'டொன் 'பட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

பதிவுகளில் டொன் பட்டமும் 'நல்ல' என்ற பெயரும் அவருடைய குலப் பெயருமான மாப்பாணவெள்ளாளர் என்ற பெயரும் பதவியும் சேர்த்து பதியப்பட்டுள்ளது.

1644ம் ஆண்டு தொடக்கம் 1678ம் ஆண்டு வரை கயிலை வன்னியனார் பாணங்காமத்தில் ஆண்டுவந்தார்.

அவர் 1678 இறக்க காசியனார்என்பவர் ஒரு வருடம் பனங்காமத்தில் பதவி வகித்தார்.அப்போது பூநகரி கரைச்சிப் பிரதேசத்தில் பரந்த பல வயல் வெளிகளுக்கு சொந்தக்காரராக இருந்த டொன் நல்ல மாப்பாண முதலியாரை, 1679ம் ஆண்டு டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலி வன்னியனார் எனப் பெயர் சூட்டி பனங்காமத்திற்கு பொறுப்பானவன்னியனாராக ஒல்லாந்தர் ஆக்குகின்றனர். (1679 – 1697)
டொன் பிலிப் நல்ல மாப்பாணருடைய மைத்துனரான டொன் புவி நல்ல மாப்பாண முதலியார் வன்னிப் பிரதேசத்தின்கிழக்குப் பிரதேசங்களான கருநாவல் பற்று, கரிக்கட்டுமூலை போன்ற பிரதேசங்களுக்கு முதலியாராக இருந்தார்.

இவரை டச்சுக்காரர்டொன் தியோகு புவிநல்ல மாப்பாண முதலி வன்னியனார் என்ற பெயரில் நியமித்தனர்.
பனங்காமத்தில் 18 வருடங்கள் அதிகாரம்செலுத்திய டொன் பிலிப் நல்ல மாப்பாண வன்னியனாருக்கு ஒரு;, அருமைத்தாய், கதிரைநாச்சி-1 அல்லது பெரிய பொன்னார் வன்னிச்சிமற்றும் குழந்தை நாச்சன் என்ற பெயர்களில் மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தனர்.

அதேவேளை கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பான டொன் தியோகு புவி நல்ல மாப்பாணருக்குஅழகேசன் அல்லது அகிலேசன் என்ற பெயரில் மகன்
இருந்தார்.

பானங்காம வன்னியனாருடைய கடைசி மகளான குழந்தை நாச்சனை, கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை வன்னியனாரான டொன் தியோகுபுவி நல்லமாப்பாணரின் மகன் டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் திருமணம் செய்திருந்தார்.

இவர் 1742ம் ஆண்டு மாசி மாதம் 21ந் திகதி கருநாவல்பற்றிற்கும், கரிக்கட்டு மூலைக்கும் டொன் தியோகு அழகேசன் புவிநல்லமாப்பாணர் வன்னியனாராக நியமிக்கப்பட்டிருந்தார்.

டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் என்பவர் மன்னார்தொடக்கம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு வரைக்கும், பொதுவாக அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசம் முழுவதற்கும்பொறுப்பாக இருந்ததினாலேயே, 1767ல் டச்சுக் கவர்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, அவரை மன்னாரிலும், ஆனையிறவிலும்,முல்லைத்தீவிலும் வரவேற்று உபசரித்துள்ளார்.

கரிக்கட்டுமூலை கருநாவல்பற்று டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாண முதலி வன்னியனாருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் பெயர் சின்னநாச்சன், இளையவர் பெயர் பண்டாரம்.

1767க்குப் பின்னர் கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்குப் பொறுப்பாக டொன் தியோகு அழகேசன்புவி நல்ல மாப்பாணரின் மூத்தமகளான சின்ன நாச்சன் வன்னிச்சியாராக நியமிக்கப்பட்டார்.

அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்திலிருந்து முறையாக திறைகள் செலுத்தப்படாத காரணத்தினால், அதனை நெறிப்படுத்த, 1782 ம்ஆண்டு கப்டன் தோமஸ் நாகெல் வன்னிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக டச்சுக்காரால் நியமிக்கப்பட்டார்.

1783ம் ஆண்டு கப்டன் தோமஸ் நாகெல் முல்லைத்தீவை கைப்பற்றுகிறான்.

இதனால் சின்னநாச்சனும், பண்டாரமும் அனுராதபுரத்திற்கு அண்மையில் உள்ள நுவரகலாவௌ என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

நுவரகலாவௌ சென்ற பண்டாரமும், சின்னநாச்சனும் புலான்குளம முதியான்சேயின் பாதுகாப்பில் இருந்தனர்.

அப்போதுபுலான்குளம் முதியான்சேயினுடைய மூத்த மகன் குமாரசிங்க கனியே திசாவையாக இருந்தார்.

வன்னிச்சிமார் வேறு இடங்களுக்குசென்றிருந்த காரணத்தினால் 1785ம் ஆண்டு ஜுன் மாதம் பனங்காமமும் ஒல்லாந்த கப்டன் தோமஸ் நாகெல்லினால் கைப்பற்றப்பட்டது.

1785ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி கலவரம் செய்த அனைவருக்கும் கப்டன் தோமஸ் நாகெல் பொது மன்னிப்பு அளித்தான்.

இதனால் பண்டாரமும், சின்னநாச்சனும் தமதிடத்திற்கு திரும்பி வந்தனர்.1785 ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி அதிகாரத்தில் இருந்த பலருக்கான நியமனங்களில் டச்சுக்காரர் பல மாற்றங்கள் செய்தனர்.

இக்காலத்தில் பல பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்பட்டும் குறைக்கப்பட்டும் இருந்தன. 1785ம் ஆண்டு சின்னநாச்சன் நுவரகலாவெவ குமாரசிங்க திசாவையை திருமணம் செய்து குமராசிங்க திசாவையுடன் (வன்னியனார்)சின்னநாச்சன் தனது புகுந்த வீடான நுவரகலாவெவ சென்றார்.

சின்னநாச்சனுக்குப் பின்னர் அவரது சகோதரர் பண்டாரம் கரிக்கட்டுமூலைக்கு 'வன்னியனராகப்' பதவி ஏற்றார்.

வெறுமனே பண்டாரம் என அழைக்கப்பட்டவர் வன்னியனார் பதவி பெற்றதும் பண்டாரம் வன்னியனார் ஆனார்.

இதற்குப் பின்னர் டச்சு ஆட்சியாளர்களால் இவர் பண்டார வன்னியன் என அழைக்கப்பட்டார்.

ஒல்லாந்தர் சாயவேரை இலவசமாக பிடுங்கித்தரும்படி கட்டளையிட பண்டாரவன்னியன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இருந்த ஒல்லாந்தர் கோட்டையை முதன்முதலாக தாக்குகிறான்.

இது தோல்வியில் முடிந்தது.
இதனால் பண்டாரத்திற்கு வழங்கப்பட்டிருந்த வன்னியனார் பதவி 1795இல் பறிக்கப்படுகிறது.

அப்போது பதவியிழந்த பண்டாரவன்னியன் சிங்கள திசாவைகளினால் 'வன்னிப் பண்டாரம்' என அழைக்கப்பட்டான்.

1795ம் ஆண்டு மார்ச் மாதம் 18 ந் திகதி தொடக்கம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் படிப்படியாக ஆங்கிலேயர் வசப்பட்டன.

1800 ஆம் ஆண்டு கவர்ணராக நோர்த் நியமிக்கப்பட கவர்ணர் நோர்த் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களுக்கு நியமணங்களை வழங்கினார்.

அதன்போது பண்டாரவன்னியனுக்கும் இலுப்பைக்குளம் என்ற பகுதிக்கு வன்னியனாக நியமணத்தை கவர்னர் நோர்த் வழங்குகிறான்.

இப்பிரதேசம் பின்னர் பண்டார இலுப்பைக்குளம்; என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

1801ம் ஆண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு வொன் டிறிபேர்க் என்ற ஒல்லாந்தன் டிறிபேர்க் ஆங்கிலேயர் காலத்திலும் பிஸ்கலாகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டான்.

இதன்பின்னர். 1803; ஆண்டு ஜுன் மாதம் 26ந் திகதி கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கனும் முதன்மந்திரி பிலிமத்தலாவையும் சூழ்ச்சிசெய்து ஆங்கிலேயரின் பாதுகாப்பில் இருந்த முத்துச்சாமியை சிரச்சேதம் செய்தனர்.

இதனால் கண்டி ராஜதானியில் மீண்டும் முறுகல்நிலை ஏற்பட்டது. இதைச்சாட்டாக வைத்து பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது பிரதேசத்திலிருந்து வெளியேற்றவேன் என சபதங்கொண்டுகொட்டியாரத்தில் முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குகிறான்.

இதனால் பிரித்தானியப்படை அங்கிருந்துபின்வாங்கியது.

ஆங்கிலேயர் மன்னாருக்குச் செல்லும் வீதி முழுவதும் மரங்களைத் தறித்து விழுத்தி மன்னார் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தை தடை செய்தார்.

இதன்பின்னர். தனது மைத்துனரான குமாரசிங்க வன்னியருடன் இணைந்து 1803 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்... 25ந் திகதி முல்லைத்தீவிலிருந்த அரசாங்க இல்லத்தையும் கோட்டையையும் தாக்கினான் கப்டன் டிறிபேர்க் யாழ்ப்பாணத்திற்கு தப்பிஓடுகிறான்.

முல்லைத்தீவைக் கைப்பற்றிய பண்டாரம் வன்னியனார் தன்னோடு வந்திருந்த குமாரசிங்க திசாவை வன்னியனாரிடம் அப்பிரதேசத்தை ஒப்படைத்துவிட்டு ஆனையிறவில் தாக்குதலை மேற்கொள்ள கற்சிலைமடுவிற்கு சென்று தங்கியிருந்தார்.

அங்கிருந்து ஆனையிறவிற்கு அண்மையிலிருந்த சிறு சிறு கோட்டைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தார்.

இதன்போது 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ந் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரிலிருந்து துணுக்காய் சென்ற வொன் றிபேக் பண்டாரவன்னியன் தங்கியிருந்த கற்சிலைமடுவில் அதிரடித்தாக்குதலை மேற்கொள்கின்றான்.

இதனால் பலர் கொல்லப்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 வீடுகளில் இருந்த பண்டாரத்தின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன.

ஒன்றரை இறாத்தல் குண்டுகள் போடக்கூடிய கண்டி இராஜதானியின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கி, 55 ஆயுதந் தாங்கிகள், பன்னிரண்டு, ஈட்டிகள், இரண்டு வாள்கள், இரண்டு கிறிஸ் கத்திகள், ஒரு துப்பாக்கி வாய்ச் சரிகை, ஒரு துப்பாக்கிக் குழாய், இரண்டு கூடை துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை ஆங்கிலப் படைகள் மீட்டனர்.

இதனால் பண்டாரவன்னியன் தனது இருப்பிடமான பண்டார இலுப்பைக் குளத்திற்கு தப்யோடினார். இதன் நினைவாக வொன் றிபேக்கின் தினக்குறிப்பிலிருந்த தகவலைப்பார்த்த 1904 - 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவர் இருந்தார்.

1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர் ஒரு நடு கல்லை நிறுத்தினார்.

இந்தக் கல்லிலே
“HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய பண்டாரவன்னியன் 1811 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்துடன் நடமாடினான் என கதிர்காமநாயக்க முதலி ஆளுநர் ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இவரே பண்டாரவன்னியனின் நடவடிக்கைகளை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தியவராவார். மாறாக காக்கைவன்னியன் அல்ல.

எனவே பண்டாரவன்னியன் பெரும் மன்னாகவோ இல்லாது சாதாரண படைத்தளபதியாக கிளர்ச்சியாளனாகவே செயற்பட்டிருக்கின்றான்.

அத்துடன் திரிபுபட்டிருக்கின்ற அவனுடைய வரலாறு எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபை எமக்குத் தந்திருக்கிறது.

இதன்மூலம் வரலாற்றில் இல்லாத பளைப்பகுதியில் 1901 ஆண்டுகளில் வாழ்ந்த பண்டா வைரமுத்து என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்று முல்லைமணி அவர்கள் கற்பனையாக புனைந்த காவியம் இன்று வரலாறாகி நிலைக்க உண்மை வரலாறு மங்கியே விட்டது.

வெறும் 150 வருடங்களின் முன் வாழ்ந்த பண்டாரவன்னியனது வரலாற்றிலேயே இவ்வளவு திரிபு என்றால் மகாவம்சம் முதலான வரலாற்று நூல்களில் எவ்வளவு திரிபு இருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை.

வரலாறு என்பது ஒரு இனத்தின் காலத்தைக்காட்டும் கண்ணாடி எனவே வருங்காலத்திலாவது வரலாற்று திரிபில்லாது வரலாற்றுண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எல்லோரது ஆசையாகும்.

உசாத்துணை நூல்கள்
  1. 1928 இல் சுவாமி ஞானப்பிரகாசரினால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம்.
  2. 1933 இல் முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்ப்பாண சரித்திரம்.
  3. அடங்காப்பற்று வன்னி வரலாறு பாகம் 2 (பண்டாரவன்னியன்)
  4. Account of the Vanni - 1793 By Liet.Thomas nagel RAS Journal - 1948
  5. Duch reports - 1795 Translated By R.G.Anthoniz
  6. Manual of The Vanni District (Nothren Province) 1895 By j.pentry Lewis
  7. List of Inscriptions on Tomstones and Monuments in Ceylon - 1913 By John Pentry Lewis
  8. கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை By பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,
மயூரனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் பகிர்கிறோம் .

யாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை!!!? - என்.சரவணன்


இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான, யாழ்ப்பாண விமான நிலலயம் பலாலியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவிட்டதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சை இப்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.

சிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்த இனவாத வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு ஆயுதமாகவே  இதனைப் கையிலெடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மகிந்தவாத சக்திகளாள அதிகமாக இந்தப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி சிங்கள வாசகர்களுக்கு பரப்பப்பட்டது. 

முதன்முதலில் இதனை செய்தியாக வெளியிட்ட நெத் வானொலி நிறுவனத்தின் (NethGossip.lk) இணையத்தளத்தில் (17.10.2018) “இந்த பெயர்ப்பாதகைகளில் இந்த நாட்டின் பிரதான மொழியான சிங்கள மொழியில் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு தமிழில் காணப்படுவதால்...” என்று தொடர்கிறது. 

“நெத்”தின் படி இலங்கையில் பிரதான மொழியென்று ஒன்று உண்டு. ஆனால் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதான மொழியென்று ஒன்றும் கிடையாது.

இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.

அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.

அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.


''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்"
என அரசியலமைப்பு கூறுகிறது. 

தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.

வடக்கைப் பொறுத்தளவில் 93வீத தமிழ் மொழி பேசுவோர் வாழும் இடங்களில் தமிழில் முதல் விளக்கம் இருப்பதை எந்த அளவுகோல் கொண்டு மறுக்க முடியும். அப்படியும் அதை மறுக்கின்ற போக்குகானது பச்சை இனவாதமின்றி வேறென்ன?

வடக்கைப் பொறுத்தளவில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம் உட்பட முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய சேர்த்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை உள்ளடங்கியது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் வடக்கில் மொத்த சனத்தொகை 1,143,000 அதில் தமிழர்கள் 995,975 அதாவது 93.8%. முஸ்லிம்கள் 32,796 (3.1%), சிங்களவர்கள் 31,985 (3%). 


அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் எச்சரிக்கைப் பதாகைகள் கூட சீன, ஆங்கில, சிங்கள மொழிகளில் மட்டும் தான் இடப்பட்டிருந்தது. தமிழில் எந்த எச்சரிக்கையும் இல்லை என்பது மட்டுமன்றி சீன மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதியாக மகிந்தவின் ஆட்சி காலம் என்பதால் இதனை எவரும் தட்டிக்கேட்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.

மேலும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோட்டபாயவின் யாழ்ப்பாண கிளையின் அலுவலகத்தின் முகப்பு பதாகையில் கூட தமிழில் தான் முதலில் உள்ளது.

மகிந்த ஆட்சியில் பெருந்தொகை கடன்பெற்று கட்டப்பட்டு இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தள விமான நிலையத்தின் பதாகை சிங்களத்திலும் இல்லை தமிழிலும் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் உண்டு.

அதுமட்டுமல்ல தியவன்னா  வாவி சூழப்பட்ட இன்றைய பாராளுமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற எச்சரிக்கைப் பலகையில் “வாவியில் முதலைகள் இருப்பதால் கவனம்” என்கிற வசனம் சிங்களத்தில் மட்டும் தான் காணப்படுகிறது. “சிங்கள மொழி தெரியாதவர்கள் செத்தே போங்கள்” என்று அர்த்தம் கொள்ளலாமா?

ஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road”  என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாளிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதைக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன்  அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.  சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்

அரச போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான “அம்பாறை – கண்டி” போக்குவரத்து சேவையில் இருந்த பஸ்சொன்று “கண்டி” என்பதற்குப் பதிலாக “குண்டி” என்கிற பெயர்ப்பலகையுடன் பல காலமாக சேவையில் இருந்ததை சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

நிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.

மகிந்த வாதிகளின் எதிர்ப்பு
இதே விமல் வீரவன்ச இதற்கு முன் தமிழில் தேசிய கீதம் பாடுப்படுவதை எதிர்த்து ஏதோ முதல் தடவையாக கண்டது போல தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆக்ரோசமாக கத்தியதை பல ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட காலம் தொட்டு சிங்களத்தைப் போலவே தமிழிலும் ஏக காலத்தில் பாடப்பட்டத்தையும், அரசாங்கப் பள்ளிக்கூட தமிழ் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் தமிழில் தேசிய கீதம் பல வருட காலமாக அச்சிடப்படுவதும், தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதையும், இலங்கையின் அரசியலமைப்பின் தமிழ் பிரதியில் தேசிய கீதம் ஒரு அத்தியாயமாக இருப்பதையும் அறியாதவராக இருந்திருக்கிறார். அதே போலத் தான் 6 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியே நிர்வாக மொழி என்பதும் தெரியாமல் இருந்திருக்கிறது.

அல்லது வசதியாக அந்த உண்மைகளை மூடி மறைத்து சிங்கள பேரினவாதத்தை உசுப்பேத்தி அதில் அரசியல் லாபமடையும் முயற்சி என்றே நாம் கொள்ள முடியும்.

35 ஜனாதிபதி வேட்பாளர்களில் இந்த இனவாதப் பிரச்சாரத்தை பகிரங்கமாக அதுவும் சிங்கள மொழியிலேயே அம்பலப்படுத்தி கண்டித்த ஒரே நபர் ஜே.வி.பியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தான்.
“இவ்வாறு மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளிடம் தேசிய ஐக்கியத்தையோ தேசிய பாதுகாப்பையோ எதிர்பார்க்க முடியுமா” என்றார் அநுரகுமார.
தமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி  ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி அரச தரப்பில் தமிழ் மொழியானது இன்னமும் பாரபட்சமாகவே இருப்பதும் அந்த மீறல் எந்த எதிர்ப்புமின்றி, கேட்பாருமின்றி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில் இப்படி “சிங்கள மொழி” பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்கிற போலி குற்றச்சாட்டு மோசமான கடைந்தெடுத்த இனவாதம் மட்டுமே.

நன்றி - தினக்குரல் 


ஜே.வி.பி.யின் பிக்கு அரசியல்! - என்.சரவணன்


இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் பிக்குமாரின் வகிபாகம், வளர்ச்சி, நீட்சி, வீழ்ச்சி எத்தகையது என்பது பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும். இடதுசாரித்துவத்திலிருந்து அவர்கள் பேரினவாத தலைமைகளாக பரிமாற்றமடைந்ததை தனியாக ஆராய்வதைத் தூண்டும் ஒரு கட்டுரையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பிரதான வலதுசாரி தேசியவாத கட்சிகள் தமது கட்சிகளில் பிக்குமார் முன்னணியையும் ஆரம்பித்து பேணி வருவதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் பல; நெடுங்காலமாகவெ தமது இயக்கத்துக்குள் பிக்கு முன்னணியை அமைத்து பேணி வந்துள்ளன. அவை அக்கட்சிகளுக்குள் பெரும் செல்வாக்கையும் செலுத்தி வந்துள்ளன. ஜே.வி.பி.யும் அதில் விவிலக்கில்லை.

ஜே.வி.பியின் இனத்துவ அரசியல் அணுகுமுறை இன்று நிறைய மாற்றம் கண்டிருந்தாலும் கூட அதை அவர்கள் உரிய முறையில் சுயவிமர்சனத்துடன் அரசியல் களத்தில் உரையாட முன்வருதல் அவசியம். அப்படிப்பட்ட ஒரு சுயவிமரசனத்தைக் கோருவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்குமான தகவல்களை உள்ளடக்கியது இக்கட்டுரை.

1940கள், 1950களில் பௌத்த தேசியவாதத்தின் முக்கிய கருத்துருவாக்கவாதியாக திகழ்ந்தவர் “வல்பொல ராஹுல தேரர்”. வித்தியாலங்கார பிரிவென்னின் உபவேந்தராக அவர் இருந்தார். பின்னர் அதுவே களனி பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் உபவேந்தராக இருந்தார். இலங்கையின் பௌத்த வரலாற்றில் மிகவும் விவாதப்பொருளாக ஆகிய நூலான 1946 இல் வெளியான “பிக்குமாரின் பாரம்பரியம்” (பிட்சுவகே உறுமய) என்கிற நூலை எழுதியவர் அவர். அதுமட்டுமன்றி ஏராளமான பிரபல சிங்கள வரலாற்று நூல்களை எழுதியவர். தீவிர பிக்குமாரை அவர் “அரசியல் பிக்குகள்” என்று அழைத்தார்.

“பிக்குமாரின் பாரம்பரிம்” என்கிற அவரின் நூல் பல விவாதங்களைத் தோற்றுவித்ததோடு இன்றளவிலும் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. பிக்குமாரின் பாரம்பரியக் கடமை அரசியல் செய்வதல்ல அதை விட அவர்களுக்கு சமூகப் பொறுப்பு, சமூகவேலைகள் அதைவிட முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் வரலாற்றில் பலமான மாணவர் அமைப்பை பல்கலைகழகங்களில் வார்த்தெடுத்து அதனை அரசியல் சமூக செயற்பாடுகளோடு இணைத்தெடுத்தது ஜே.வி.பி தான். ஜே.வி.பியில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிக்குமார் ஜே.வி.பி.க்குள் நுழைவதற்கான நுழைவாயிலாக இந்த மாணவர் இயக்கம் தான் இருந்தது. சகல பல்கலைகழகங்களிலும் இருந்த அவர்களின் மாணவர் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் வகையின் அதன் பெயர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். ஜே.வி.பியின் அமைப்புத்துறையானது பல முன்னணி அமைப்புகளை கட்டி அதன் கீழ் ஒன்றிணைத்திருக்கிறது. மாணவர், விவசாயிகள், வைத்தியர்கள், பெண்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் என பல சமூக சக்திகளையும் தனித்தனியாக இயக்கக் கூடியவகையிலும் தேவையான வேளை அனைத்தையும் ஒரே போராட்டத்தில் இணைக்கக் கூடிய வகையிலும் தான் அவர்களின் அமைத்துறை வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மார்க்சிய புரட்சிகர இயக்கம் மதத்தையும், மத நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும் எப்படி கையாண்டிருக்கவேண்டும் என்பதற்கு புரட்சிகர வழிமுறைகள் உண்டு. பொருள்முதல்வாத தத்துவத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மதங்களைக் கையாளும் நாத்திக வழிமுறையே மாக்சிய வழிமுறையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் அரசியலிலும், பெரிய அரசியல் கட்சிகளிலும் பௌத்தம் தவிர்க்கமுடியாததாக ஆக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 1935இல் முதலாவது இடதுசாரிக் கட்சி லங்கா சமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் அதுதான். அக்கட்சியின் மூலம் தான் பிக்குமாரும் கட்சி அரசியல் செயற்பாடுகளில் நேரடியாக இறங்கினர் என்று கூறலாம்.

ஸ்ரீ சரணங்கர தேரர்
லங்கா சமசாமஜக் கட்சியில் பிரதான செயற்பாடுகளில் உடுகெந்தவல சரணங்கர தேரர் முக்கிய பாத்திரத்தை ஆற்றினார். 1932ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்துவதற்காக மேற்கு வங்காளம் சென்று செயற்பட்ட போது பிரிட்டிஷ் அரசு அவரை 1932 இல் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் நோயுற்றிருந்தபோது அவரை ஜவஹர்லால் நேரு சிறையில் சென்று பார்வையிட்டு ஒரு அறிக்கையை அரசிடம் கையளித்ததன் விளைவாக் அவர் 1936இல் விடுதலையானார். அவர் இலங்கை வந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவதற்காக லங்கா சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டார். 1937 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இலங்கைக்கு சோசலிசம் ஏன் அவசியம்?” என்கிற நூல் பரபரப்பை ஏற்படுத்திய நூல். அந்த  நூலுக்கு எதிராக அன்றைய சிங்கள-பௌத்த தேசியவாத பத்திரிகையான “சிங்கள பௌத்தயா” பத்திரிகையில் பியதாச சிறிசேன தொடர் கட்டுரைகளை எழுதினார்.

1939ஆம் ஆண்டு சமசமாஜ கட்சி பிளவடைந்தபோது அதிலிருந்து வெளியேறியவர்களில் ஸ்ரீ சரணங்கர தேரரும் ஒருவர். பிரிந்தவர்கள் 3.07.1943 அன்று “கொம்யூனிஸ்ட் கட்சி”யை உருவாக்கியபோது, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தலைவராக தெரிவாவனவர் ஸ்ரீ சரணங்கர தேரர். இந்த இடைக்காலத்துக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வியட்நாம் யுத்தக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் இலங்கையில் “வியட்நாம் சகோரத்துவ இயக்கம்” என்கிற அமைப்பைத் தொடங்கினார். 1957இல் அவருக்கு ரஷ்யாவில் லெனின் சமாதான விருது வழங்கப்பட்டது.

இவரின் காலத்தில் தான் பிக்குமார் அரசியல் பணிகளுக்குள் இழுக்கப்பட்டார்கள். 1950கள் பண்டாரநாயக்க சகாப்தத்தில் (தசாப்தத்தில்) நேரடியாக சிங்கள பௌத்த தேசியவாதிகளாக பிக்குமார் பலர் கட்சி அரசியலுக்குள் அதிகளவு இறங்கினார்கள்.

ஜே.வி.பி.யின் நுழைவு
அதன் பின்னர் வந்த அடுத்த சில தசாப்தங்களுக்குக் கூட மதத்தை அதிகளவு இடதுசாரிக்க்கட்சிகள் இழுத்துப் போட்டுக்கொண்டதில்லை. ஆனால் 1956 க்குப் பின்னர் இடதுசாரிகளாக இருந்த முக்கிய தலைவர்கள் சிலர் சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிரலுக்குள் உள்ளிழுக்கப்பட்டார்கள்.

ஜே.வி.பியின் ஆரம்பமும் கூட சிங்கள பௌத்த தேசியவாத எச்சசொச்சனங்களுடன் தான் தொடங்கப்பட்டது என்பதற்கு ஏராளமான கதைகளைக் கூறமுடியும். தோழர் சண்முகதாசன் அது குறித்த பதிவுகளைக் கூட செய்துமிருக்கிறார்.

1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான பிக்குமார் அதில் பங்கெடுத்திருந்தார்கள். அக்கிளர்ச்சியின் போது அரச படைகளால் கொல்லப்பட்ட பிக்குமாரின் எண்ணிக்கை 50க்கு கிட்டியது. நூற்றுக்கணக்கான பிக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கொல்லப்பட்ட 681 பிக்குமாருக்காக ஊர்வலம் செல்லும் ஜேவிபியின் அனைத்துப் பல்கலைக்கழக பிக்கு ஒன்றிய பிக்குமார் 
1987-1989 காலகட்ட இரண்டாவது கிளர்ச்சி காலத்தில் ஜே.வி.பி.யில் ஏராளமான பௌத்த பிக்குமார் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். 1987இல் நேரடியாக ஜே.வி.பியின் இரகசிய செயற்பாடுகளில் 525 பேர் இருக்கும் என்கிறார் ஜே.வி.பியைப் பற்றிய வரலாற்று ஆய்வு நூலை எழுதிய மேற்கொண்ட “தர்மன் விக்கிரமரத்ன”. கட்சிக்கு வெளியில் பல நூற்றுக்கணக்கான பிக்குமார் ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஜே.வி.பி தடை செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக 1983ஆம் ஆண்டு ஜே.வி.பியின் மே தின ஊர்வலத்தில் போது சோசலிச பிக்குகள் சங்கத்தைச் சேர்ந்த 550 பிக்குமார் கலந்து கொண்டிருந்தனர்.

ஜே.வி.பி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ஜே.வி.பியின் பல பகிரங்க  செயற்பாடுகளை முன்னெடுக்க இப்படி அமைக்கப்பட்ட “மனிதாபிமான பிக்குகள் சங்கம்”, “அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம்” போன்ற முன்னணி அமைப்புகளின் மூலம் தான் மேற்கொள்ளப்பட்டன.

பிக்குமாரை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர் டீ.எம்.ஆனந்த. மேலும் விஜேவீர, கமநாயக்க ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது தலைவர் என்று கூறக்கூடியவராக இருந்தார் அவர். அவர் ஒரு பிக்குவாக இருந்தவர். அவரே ஜே.வி.பி.க்குள் ஏராளமான பிக்குமாரை இணைக்கக் காரணமாக இருந்தவர்.

1986ஆம் ஆண்டு தாய் “நாட்டைப் பாதுகாப்பதற்கான இயக்கம்” (மவ்பிம சுரகீமே வியாபாரய) என்கிற பெயரில் தெமட்டகொட பதானசர விகாரையில் ஜே.வி.பி ஒரு முன்னணியைத் தொடங்கியது. ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு முன்னணியினர் இதனை ஒழுங்கு செய்வதில் பிரதான இடம் வகித்தார்கள். இதில்தான் ஏராளமான பிக்குமார் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலங்கையை பாரிய அளவில் உலுக்கிக் கொண்டிருந்த இயக்கம் அது.

களனி பல்கலைக்ககத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்களான கடுகண்ணாவ சீவலி, பதுளை குணசிறி போன்றவர்களுக்கு இந்த இயக்கத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் படையினர் மீது அந்த பழி போடப்பட்டது. ஆனால் அன்றைய ஐ.தே.க ஆட்சியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலர் ரயர்களில் எரிக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படையினர் ஒருபுறம் சந்தகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த அதே வேளை ஜே.வி.பி.யின் முன்னணி இயக்கங்களும் தமது எதிரிகளாக கருதப்பட்ட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையும், சாதாரண பொதுமக்கள் பலரையும் கொன்றனர். அப்படி ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டவர்களில் பிக்குமாரும் அடங்குவர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை இப்போது பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றன.

1987 ஆம் ஆண்டு ஜே.ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து முழு ஊரடங்கு சட்டத்துக்குள் பல நாட்கள் வைத்திருந்தது ஜே.வி.பி. அந்த ஒப்பந்தத்தையும், 13வது திருத்தச் சட்டத்தையும், மாகாணசபை முறையையும் எதிர்த்து பிக்குமார்கள் தான் முன்னணியில் களத்தில் இறக்கப்பட்டார்கள்.
கோட்டை அரசமர சந்தியில் 20,000 பேருக்கும்  மேல் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரினால்  அடிவாங்கும்  கேகாலை விமல  சாமநேர தேரர்.
28.07.1987 அன்று கொழுப்பு புறக்கோட்டை போதிமரத்திர்கருகில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களவர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டம் வரலாற்றில் முக்கியமான ஒன்று. பல பிக்குமார் களத்தில் இறக்கப்பட்டார்கள் அப்படியிருந்தும் அரச படை அவர்களை மோசமாக ஒடுக்கியது. இந்த ஏற்பாட்டுக்கு டீ.எம்.ஆனந்த தான் தலைமை கொடுத்தார். படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிபர்ட் என்கிற மாணவன் ஸ்தலத்திலேயே பலியானார்.

ஜே.வி.பியின் இரண்டாம் கிளர்ச்சிக் காலத்தில் 724 பிக்குமார் கொல்லப்பட்டனர்.
ஜே.வி.பியின் 2 வது கிளர்ச்சியின் தலைவர்கள், ஜே.வி.பி அரசியல் பீட  உறுப்பினர்கள் (இடமிருந்து), ரோஹன விஜீவீர, செயலாளர் உபதிஸ்ஸ காமானநாயக்க, சுமித் அத்துகோரல, பியதாச ரணசிங்க, சாந்த பண்டார , நந்ததிலக கலப்பதி, சமன் பியாசிறி  பெர்னாண்டோ, டீ.எம்.ஆனந்த, சோமவன்ச அமரசிங்க, எச்.பி. ஹேரத், பி.பி. விமலரத்ன மற்றும் லலித் விஜே ரத்னே.
ஜே.வி.பி.யின் ஆரம்பம் தொட்டு இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு வர்க்கப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தினாலும் இனவாதப் பார்வை கொண்டதாகவே அவை இருந்தன என்பதை பல இடதுசாரி முற்போக்கு சக்திகளும் தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்கள் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளை இனங்கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களின் அபிலாஷைகளை இனவாத முனைப்பாகவே கருதியதுடன், பிரிவினைவாதம் என்றும், ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டம் என்றும் வியாக்கியானப்படுத்தினர். இனப்பிரச்சினை குறித்த அவர்களின் கருத்துக்களும் செயலும் இனவாத நடவடிக்கைகளாகவே அமைந்தன. 1960களின் இறுதியில் இந்தியாவை ஐந்தாம்படை என்கிற முழக்கத்துடன் மலையக மக்களை எதிரிகளாக சித்திரித்தது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெளிக்கிளம்பியபோது லெனினையும், மார்க்சையும், ரோசா லக்சம்பேர்க்கையும் பிழையாக வியாக்கியானப்படுத்தி, திரிபுபடுத்தி அப்போராட்டத்துக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைக்கச் செய்தது எல்லாமே இதன் நீட்சி தான்.

80களில் ஜே.வி.பியிள் இயங்கியவர்கள் தான் 90 களில் நேரடியான சிங்கள இனவாத அமைப்புகளுக்கு தலைமை கொடுத்தனர். அவர்களின் சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைக்கான பாசறையாக ஜே.வி.பி இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக 2000களில் “ஜாதிக ஹெல உறுமய” கட்சியாக பரிணமித்தவர்கள் 90களில் சிங்கள வீர விதான இயக்கமாக இருந்தவர்கள். 80களின் இறுதியில் “ஜனதா மித்துரோ” என்கிற பெயரில் இருந்தவர்கள். 80 களில் ஜே.வி.பியில் இருந்தவர்கள். சம்பிக்க ரணவக்க 80களில் ஜே.வி.பி.யின் இரானுவப்பிரிவில் இருந்தவர். அத்துரலிய ரதன தேரர் சோஷலிச பிக்கு முன்னணியில் இருந்தவர்.
அத்துரலியே ரதன தேரரும் 71 கிளர்ச்சியில் பதுளை மாவட்ட உபதலைவர் ஜயந்த ஜயமுனி , களனி கழுபான பியரதன தேரர் - 1991ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர்.
இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார். இன்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பிக்குமார் அங்கம் வகிக்கவே செய்கிறார்கள்.

இன்றைய அரசியலில் பிரபல ஜனநாயக செயற்பாட்டாளராக அறியப்பட்ட தம்பர அமில தேரர் ஒரு காலத்தில் ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு சங்கத்திற்கு தலைமை தாங்கியவர் தான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக ஜே.வி.பியால் முன்மொழியப்பட்டவர் தம்பர அமில தேரர்.

1987 தொடங்கி 2009 யுத்தம் முடியும் வரை ஒப்பந்தங்களை முறியடிக்கவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் காவியணிந்த ஜே.வி.பி. பிக்குமாரே.

இந்த இடைக்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்கியவர்கள் பிக்குமார். காவியுடையை களைந்து புலிகளுடன். யுத்தத்துக்கு சென்ற பிக்குமார் இருக்கிறார்கள். யுத்த காலத்தில் படையணிகளுக்கு பௌத்த அனுட்டானம் வழங்கி ஆசீர்வாதத்துடன் வழியனுப்பினார்கள். யுத்தத்துக்கு நிதி சேகரித்து கொடுத்தார்கள். யுத்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். சமாதான முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்து மூர்க்கத்தனமாக களத்தில் இறங்கினார்கள். இதில் பெரும்பங்கு ஜே.வி.பியைச் சேரும்.

ஜே.வி.பி.யின் அரசியல் போக்கில் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் அதை மக்கள் நம்பவேண்டுமென்றால் அதற்கு முன்நிபந்தனையாக தவறுகளை ஏற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடம் வந்து சொல்வதை சிங்கள மக்களிடமும் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் சுயநிர்ணய உரிமை, அரசியல் தீர்வு விடயத்தில் சுற்றி வளைக்காமல் நேரடியாக கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும்.

பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை பகிரங்கமாக விமர்சிக்க முன்வரவேண்டும். அந்த முன்னுரிமையை நீக்கி மதச்சார்பற்ற நாடாக ஆக்குவோம் என்கிற கொள்கையை பகிரங்கமாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கூறவேண்டும், அதற்கான விழிப்புணர்ச்சியையும், அரசியல் வழிநடத்தலையும் அங்கு செய்ய வேண்டும்.

பிக்குமார்களின் இனவாத அட்டூழியங்களை உரிய நேரங்களில் தட்டிக் கேட்காமல் இருப்பதன் காரணம் இனவாதமா? அல்லது அவர்களை பகைக்கக் கூடாது என்கிற கொள்கையா? அல்லது வாக்கு வங்கி பற்றிய பயமா? இதில் எது காரணமாக இருந்தாலும் ஒரு புரட்சிகர கட்சி என்கிற தகுதியை ஜே.வி.பி. இழந்துவிடும். ஜே.வி.பி சிங்கள பௌத்த தொழிலாளர்களுக்கான கட்சியா அல்லது அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்குமான கட்சியா என்பதை இனியாவது தாமதமின்றி வெளிப்படுத்தியா

கவேண்டும். பிக்குமார்களைக் கண்டித்திருக்கிறோம் என்று எங்கேயோ ஓரிரு சிறு உதாரணங்களைக் கொண்டுவந்து காட்டும் சாக்குபோக்கு வேண்டாம்.

அடிக்குறிப்பு
டீ.எம்.ஆனந்தவறுமை காரணமாக தனது குடும்பத்தவர்களால் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டிருந்தவர் டீ.எம்.ஆனந்த. நாரத பியனந்த ஹிமி என்கிற பெயரில் பௌத்த பிக்குவாக இருந்த அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பில் இணைந்து ஜே.வி.பியின் மேல்மாகாணம் சப்பிரகமுவா மாகாணத்துக்கு பொறுப்பாளராக செயற்பட்டார். மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, பிக்கு அமைப்பு என்பவற்றுக்கும் தலைமை தாங்கினார். பின்னர் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் இருவராக இருந்தார்.
ஜே.வி.பியின் பிக்கு முன்னணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் தான் ஆனந்த. 1981 இல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு ஜே.வி.பி.யின் முழுநேர ஊழியராக ஆனார்.
1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பியின் அதிகமான பணிகளை மேற்கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த ஜயசிறி பெர்ணான்டோவும், முன்னணி அமைப்புகளை டீ.எம்.ஆனந்தவும் தான் ஒருங்கிணைத்தார்கள். டீ.எம்.ஆனந்தவும், ஜயசிறியும் அரசியல் குழுவில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்ததால் அவர்கள் தம் செயற்பாடுகள் குறித்து கொண்டிருந்த அதீத நம்பிக்கை ஜே.வி.பி யை மேலும் குரூரமான இடத்துக்கு எடுத்துச் சென்றது. விஜேவீரவுக்கு சிறுபான்மை ஆதரவே இருந்தது. இயக்கத்தின் பிளவைத் தடுப்பதற்காக அவரால் டீ.எம்.ஆனந்த ஜயசிறி போன்றோரின் முடிவுகளுக்கு இணங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக 1988 யூலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐ.தே.க எதிர்ப்பு சக்திகளை இணைத்து தேசபக்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. விஜெவீரவைப் பொறுத்தளவில் ஐ.தே.க வை வீழ்த்துவதே முதல் இலக்காக இருந்தாலும். டீ.எம்.ஆனந்த, ஜயசிறி போன்றவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் இலக்கை வைத்தே தந்திரோபாயங்களை வகுத்தார்கள். 1989 பெப்ரவரியிலிருந்து ஜே.வி.பி.யின் உள்ளக செயலாளராக நியமிக்கப்பட்டார் டீ.எம்.ஆனந்த.
டீ.எம்.ஆனந்தாவின் ஜே.வி.பியின் மாணவர் பிரிவின் கீழ், சோஷலிச மாணவர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தேசபக்த மாணவர் இயக்கம், தேசிய மாணவர் மையம் என்பனவும், இளைஞர் அமைப்பின் கீழ் சோஷலிச மாணவர் சங்கம், சோசலிச பெண்கள் சங்கம் என்பனவும், பிக்கு பிரிவின் கீழ் சோஷலிச பிக்குகள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம், மற்றும் கலாசார பிரிவுகளும் நிர்வகிக்கப்பட்டன.
1989இல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஜே.வி.பியின் சார்பில் இயலை 13ஆம் திகதி ஜனாதிபதி பிரேமதாசவை சந்திக்க சென்றவர் டீ.எம்.ஜயரத்ன. ஆனால் அவர் எப்பேர்பட்ட பதவிகளில் இருந்தார் என்பதை அரசு அன்று அறியாதிருந்தது.
டீ.எம்.ஆனந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இரத்தினபுரியில் வைத்து ஒரு ஆட்காட்டியால் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தான் விஜேவீரவும் பிடிப்பட்டார். விஜேவீரவையும், உபதிஸ்ஸ கமநாயக்கவையும் காட்டிக்கொடுத்தது டீ.எம்.ஆனந்த தான் என்கிற ஒரு பொய்யை அன்றைய அரசு பரப்பியது. அதன் மூலம் ஏனையோரை சரணடயைச் செய்யலாம் என்று நம்பியது அரசு.
ஜே.வி.பி.யின் அரசியல் குழுவைச் சேர்ந்த எச்.பி.ஹேரத் அன்றைய முக்கிய அமைச்சராக இருந்த தொண்டமானை 08.11.1989 அன்று சந்தித்து பிரேமதாசவிடம் ஆனந்தவை விடுவிக்கக் கோரினார். ஆனால் பிரேமதாசா அதற்கு எந்த பதிலையும் வழங்காத நிலையில் நவம்பர் 15ஆம் திகதி டீ.எம்.ஆனந்தவை கொன்று வீசியது அரசாங்கம்.
உசாத்துணை:
  1. 71 කැරැල්ල (ආරම්භයේ සිට අවසානය දක්වා පූර්ණ සමාලෝචනයක් ) By: Jayatunga, Ruwan M රාජගිරිය : අගහස් ප්‍රකාශකයෝ, 2011
  2. 71 අප්‍රේල් නඩු විභාගය විජේවීරගේ හෘදය සාක්ෂිය, උදේනි සමන් කුමාර, Niyamuwa Publishers, 2016
  3. “භික්ෂූන්ගේ ලේ සොලවා දේශපාලනය කල ජවිපෙ-ජවිපෙ දෙවැනි කැරැල්ලේදී භික්ෂූහු 724 කැළෑ නීතියෙන් මරුට” - ධර්මන් වික්‍රමරත්න - (http://lankanewsweb.org/archives/4527)
  4. ලෝක සාමය වෙනුවෙන් ජීවිතය පූජා කළ උඩකැන්දවල ශ්‍රී සරණංකර හාමුදුරුවෝ - එස්‌. සුදසිංහ - திவயின - 2009/12/14
  5. හැට දහසකට දිවි අහිමිවූ  ‘‘දේශප්‍රේමී’’ කැරැල්ල - ධර්මන් වික්‍රමරත්න - லங்கா தீப – 11.11.2018
  6. 1986-90 භීෂණ යුගයේ සත්‍ය කථා - ධර්මන් වික්‍රමරත්න - http://lnwtoday.blogspot.com/2015/05/1986-90.html
  7. http://www.lankaweb.com/news/items/2016/03/27/%E0%B6%BD%E0%B7%99%E0%B6%BA%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%BA%E0%B6%9A%E0%B6%A9%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A-%E0%B7%83%E0%B7%84-%E0%B6%9C%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B6%BB%E0%B7%92-2/
  8. ජවිපෙ පාලනය විජේවීරගෙන් ගිලිහෙයි - ධර්මන් වික්‍රමරත්න (http://www.lankaweb.com/news/items/2016/07/02/%E0%B6%A2%E0%B7%80%E0%B7%92%E0%B6%B4%E0%B7%99-%E0%B6%B4%E0%B7%8F%E0%B6%BD%E0%B6%B1%E0%B6%BA-%E0%B7%80%E0%B7%92%E0%B6%A2%E0%B7%9A%E0%B7%80%E0%B7%93%E0%B6%BB%E0%B6%9C%E0%B7%99%E0%B6%B1%E0%B7%8A/)
  9. ජවිපෙ 2 වැනි කැරැල්ලේදී භික්‌ෂූහු 724ක්‌ කැලෑ නීතියෙන් මරුට... ධර්මන් වික්‍රමරත්න - திவயின (03.09.2017)
  10. 1986-90 භීෂණ යුගයේ සත්‍ය කථා (http://lnwtoday.blogspot.com/2015/05/1986-90.html)
  11. විජේවීර පාවාදුන්නේ ඩී.එම්. ආනන්දද ? - ධර්මන් වික්‍රමරත්න http://www.lankadeepa.lk/thaksalawa/%E0%B7%80%E0%B7%92%E0%B6%A2%E0%B7%9A%E0%B7%80%E0%B7%93%E0%B6%BB-%E0%B6%B4%E0%B7%8F%E0%B7%80%E0%B7%8F%E0%B6%AF%E0%B7%94%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%B1%E0%B7%9A-%E0%B6%A9%E0%B7%93-%E0%B6%91%E0%B6%B8%E0%B7%8A--%E0%B6%86%E0%B6%B1%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B6%AF--/55-544974
  12. භීෂණයට ගොදුරු වුණු යතිවරු - පුෂ්පනාත් ජයසිරි මල්ලිකාරච්චි http://www.lankadeepa.lk/diyatha_news/%E0%B6%B7%E0%B7%93%E0%B7%82%E0%B6%AB%E0%B6%BA%E0%B6%A7-%E0%B6%9C%E0%B7%9C%E0%B6%AF%E0%B7%94%E0%B6%BB%E0%B7%94-%E0%B7%80%E0%B7%94%E0%B6%AB%E0%B7%94-%E0%B6%BA%E0%B6%AD%E0%B7%92%E0%B7%80%E0%B6%BB%E0%B7%94/48-535999

நன்றி - அரங்கம் 

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates