Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)

71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வாவின் நேர்காணல் இது. ஜே.வி.பி.யின் அன்றைய அரசியல் பார்வை, கொள்கை பற்றியும் அறிந்து கொள்ள இந்த நேர்காணல் உதவும்

சமூகத்தின் மோசமான ஏற்றத்தாழ்வுகளை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதிலும், அதற்கான காரணங்களை விரிவாக விளக்குவதிலும் மாற்றத்திற்கான வழிமுறைகளை மொழிவதிலும் ஜே.வி.பி. மிகவும் திறம்படச் செயலாற்றியதாகச் சொல்லப்படுகிறது. கூடவே ரோஹண விஜேவீரவின் எழுத்துக்கள் சிந்தனையை கிளறுவனவாகவும், பேச்சுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவும் இருந்தன. இவ்வாறெல்லாம் இருந்தும் 1971, பின்னர் 1989 என்று இரு காலட்டத்திலுமே ஜே.வி.பி. தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்?

முதலில் இந்த சமூக அமைப்பே பிழையானது என்பதை இனங்காண்கிறோம். எனவே இதனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். அதனூடாக சமவுடமைச் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் வேண்டும். அதைச் செய்வதற்கு முன் நிபந்தனையாக பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். இதற்காக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடில்லாது ஒரு கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும்.

65களில் இலங்கையில் சரியான ஒரு மார்க்ஸிய அமைப்பொன்று இருக்கவில்லை. எனவே நாங்கள் மக்களை மார்க்ஸிய வழியைக் காட்டி கட்சியை நோக்கி அணிதிரட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்தோம்.. அதற்காகவே தோழர் ரோஹண விஜேவீர தலைமையில் இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் அரசியல் வேலைகளை நாடு பூராவும் மேற்கொண்டோம். மக்கள் பெருவாரியாக அணி திரண்டனர். அப்போதுதான் இதனை முதலாளித்துவ வர்க்கம் முதற் தடவையாக இனங்காண்கிறது. பாட்டாளி வர்க்கம் சுயமாகவே அணிதிரள்கின்றது. அவர்களுக்கென்று கட்சியொன்று உருவாக்கப்படுகின்றது. இது தமக்காபத்தானது என்று. எனவே இக்கட்சியின் உருவாக்கத்தை விரும்பவில்லை. என்றாவது இக்கட்சி முதலாளித்துவ வர்க்கத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடுமென்பதை அது உணர்ந்தது. 1969இலிருந்து எங்களை அடக்குவதற்கான முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிதான் அடக்கு முறைக்கான நியாயங்களை கற்பித்துக் கொண்டிருந்தது. எங்கள் இளைஞர்களை ஏமாற்றும் சீ.ஐ.ஏ கும்பல் என்று பிரச்சாரம் செய்தது. தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகினோம். குறிப்பாக எங்கள் உறுப்பினர்கள் அரசியல் வகுப்புகள் எடுக்கின்ற இடங்களுக்கு புகுந்து அவர்களை கைது செய்யத் தொடங்குகின்றனர். 1970 மே மாதத்தில் ஐ.தே.க. அரசாங்கம் தோழர் ரோஹண விஜேவீரவை கைது செய்தது. அதே காலப்பகுதியில் ஆட்சி மாற்றமும் ஏற்படுகின்றது. தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்று ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கமர்கிறது. அக்காலப்பதியில் ஐ.தே.க. வை விட ஐக்கிய முன்னணி ஜனநாயக உரிமைகளை ஓரளவு வழங்கக் கூடிய அமைப்பு என்கிற நம்பிக்கை இருந்ததால் மக்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டிருந்தோம். எனவே ஜே.வி.பி.யின் ஆதாரவு ஒத்துழைப்புடனேயே ஐக்கிய முன்னணி பதவிக்கமா்ந்தது ஆனால் ஐக்கிய முன்னணி பதவிக்கமர்ந்ததன் பின் தொடர்ந்து ஜே.வி.பி.யின் அரசியல் வேலைகளை அடக்குகின்ற முயற்சிகளைத் தொடர்ந்தது. 1970இல் ஜே.வி.பி.யை அடக்குவதற்காக ஐ.தே.க.வால் உருவாக்கப்பட்டிருந்த 'சேகுவேரா பியுரோ' ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் விரிவாக்கப்படடது. அடக்கு முறைகள் தொடர்ந்தன. நாங்கள் அதுவரை ஆயுத ரீதியான அரசியல் வேலைகளை முன்னெடுத்திருக்கவில்லை எங்களிடம் ஆயுதங்களும் இருக்கவில்லை. அதற்கான உடனடித்தேவைகளும் இருக்கவில்லை.

1970 ஓகஸ்டில் நாம் பகிரங்க அரசியலுக்கு வருகிறோம். ஓகஸ்ட் 10ம் திகதி எமது முதல் பகிரங்க கூட்டத்தை 'ஹைட்பார்க்கில்' நடத்தினோம். இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜ்குமார் இரத்தினவேல் அறிக்கையொன்றை வெளியிட்டார். அவ்வறிக்கை 13ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதில் ” நாட்டில் வேகமாக பரவிவருகின்ற சேகுவரர் இயக்கமானது அரசாங்கத்தின் பிரதான எதிரி. அதனை துரத்தி வேரோடு அழிக்க வேண்டும்.” என அதில் காணப்பட்டது. அப்படியான ஒரு அறிவித்தல் விடுக்கக் கூடியளவிற்கான சூழலொன்று அன்று இருக்கவில்லை. அரசாங்கத்துக்கெதிரான எதையும் நாங்கள் செய்திருக்கவில்லை. (அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக நாங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம்.) எங்களது கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்திருந்தோம்.

அடக்குமுறைகள் தொடா்ந்தன. 1971ல் இவ்வடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. 1971ல் மார்ச் 6ம் திகதியன்று ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்கா உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தர்மசேகர எனும் இடதுசாரி வேடம் பூண்ட ஒரு நபரின் கும்பலே அதைச் செய்திருந்தது. இக்கும்பலுக்கும் அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இதைப் பயன்படுத்தி தனது அடக்குமுறையை புரிவதற்காக அரசு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தது. எமது உறுப்பினர்களை கைது செய்வது அதுகரித்தது. எனவே எங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்த கும்பலாக தர்மசேகரவின் கும்பல் இனங் காணப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமாகவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் தர்மசேகரவை கைதுசெய்யவில்லை.

அதன் பின்னர் 1971மார்ச் 13ம்திகதியன்று தோழர் ரோஹண விஜேவீரவையும் இன்னும் சில தோழர்களையும் பொலிசார் கைது செய்தனர். யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைத்திருந்தனர். அது வரை நாங்கள் ஆயுதபாணிகளாக இருக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் மார்ச் 16ல் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின்படி மரண பரிசோதனையின்றி ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க முடியும். அரசாங்கம் கூடிய விரைவில் கட்சியின் மீது பேரழிவை ஏற்படுத்தவிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்படியான அநாதரவான பிணம் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இவ்வாறான சட்டமொன்றை கொண்டு வந்துள்ளது. அதன் நோக்கம் தான் கொன்று போடப்போகின்றவர்களது சடலங்களை எவரது அனுமதியின்றி அழித்து விடுவதற்காகவே என்பதை உணர முடிந்தது. நிராயுதபாணிகளான எங்கள் மீது இப்படியான படுகொலைகளை செய்யவிருப்பதால் அப்படி நாங்கள் இறப்பதை விட அதே அடக்குமுறைக்கு எதிராக போராடி மரணிப்பது மேல் எனத் தோன்றியது. அதன் விளைவாகவே ஏப்ரல் கிளர்ச்சி உருவானது.

தோழர் விஜேவீர கூட எல்லோரையும் பின் வாங்கும் படியும் அடக்குமுறையிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார் ஆனால் அன்று கட்சியிருந்த நிலை காரணமாகவும் அடக்குமுறையின் அதிகரிப்பினாலும் இன்னமும் தப்பமுடியாது என்கின்ற காரணத்தால் தற்காப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது. எனவே 71கிளர்ச்சியானது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே அல்ல. அது முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக அடக்குமுறைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமே.

அரசின் பாசிசத்திற்கு பதிலாக பாசிச வழிமுறையையே ஜே. வீ .பி கைக்கொண்டதும் ஜே.வி.பி மக்களிடமிருந்து அந்நியப்படக் காரணமல்லவா?

எங்களிடம் ஒரு போதும் பாசிசப் போக்குகள் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. அந்த நேரத்தில் ஆயுதப் படையினரின் எங்களுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருந்தது. அதை இந்த அரசு இனங் கண்டது. எனவே இராணுவத்தின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகவே எங்களுடன் தொடர்புற்றிருந்த மற்றும் ஆதரவளித்த இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொல்லத் தொடங்கியது. தற்போது நடத்தப்பட்டு வரும் பட்டலந்த விசாரணைக் கமிஷனின் விசாரனணயிலும் கூட அவ்வகையான சம்பவங்கள் நிருபணமாகியிருக்கிறது. அந்த நேரத்தில் இராணுவத்திலிருந்து அனைவரும் விலகுங்கள் விலகாதவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கூட நாங்கள் ஒட்டியதல்ல. அது இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியென்றே நாங்கள் நம்புகிறோம். இது மக்கள் விரோத அரசாங்கம் இந்த அரசாங்கத்தை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் என்று தான் கூறியிருந்தோம். அரசாங்கத்துக்கு இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது போன சந்தர்ப்பத்திலேயே இராணுவத்திலுள்ளவர்களையும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவத்திலுள்ளவர்களையே கொன்றொழித்தது.

ஆனால் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்ட பொலிஸ் ஆயுதப் படையினரின் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெளிவந்திருந்ததே?

ஓமோம், எத்தனை புள்ளிவிபரங்களையும் காட்டலாமே. இக்காரியங்கள் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களாலும் செய்யப்பட்டிருக்கலாம். அந்தகாலப் பகுதியில் RDF, High Section, CSU போன்ற எத்தனையோ ஆயுதக் குழுக்கள் இருந்தன. நள்ளிரவில் தம்மைச் சுட்டவர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது அன்று இராணுவத்திலுள்ளவர்களுக்கே தெரியாது. தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் எங்களாலும் உண்மையை நிரூபிக்கக்கூடிய சூழலும் அன்று இருக்கவில்லை.

முதாலாளித்துவ பாராளுமன்றங்களே முதலாளித்துவ வர்க்கத்துக்கு சார்பாக சட்டமியற்றும் வேலைகளையே எப்போதும் மேற்கொள்ளும். ஆனால் புரட்சி என்பதோ ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். இவ்வடிப்படையில் ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பங்குபற்றியுள்ளது. இது இம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருப்புக்கு துணை போவதாகாதா?

ஆம், இந்த முதலாளித்துவ அரசாங்கம் தனது இருப்புக்கு பயன்படுத்தி வரும் ஒன்று தான் பாராளுமன்றம். ஆனால் பாராளுமன்றத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் உள்ள நன்மை தீமை என்னவென்பதனைக் கூட அவர்கள் அறிய வழியில்லை. அதற்கான காரணம் பாராளுமன்றத்தில் நடப்பதைப்பற்றி தெளிவுபடுத்த இந்த நிறுவனத்தில் உள்ள எவரும் முன்வருவதில்லை. பாராளுமன்றம் இந்த இயல்பைத்தான் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்கின்ற புரட்சிகர சக்தியொன்று இந்நிலைமைக்கேற்ப தங்கள் செயற்பாடுகளையும் செய்வது அவசியம். லெனின் கூட சொல்கிறார் புரட்சியாளர்கள் முதாலாளித்துவ பாராளுமன்றத்தைப் பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டிவரும் என்று.

இன்று எங்களுக்கென்று ஒரு உறுப்பினர் இருக்கின்றார். இவரால் முதலாளித்துவ பாராளுன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிகிறது. அதனது மக்கள் விரோத செயற்பாட்டிற்கெதிராக வாக்களிக்க முடிகிறது. தற்போது தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்த்து வாக்களித்து வரும் ஒரே ஒரு எம்.பி. தோழர் நிஹால் கலப்பதி மட்டுமே. இன்று தமிழ் மக்களை கொல்வதற்காக அனுமதியளிக்கின்ற இச்சட்டங்களை ஆதரித்து தமிழ் எம்.பிக்கள் அனைவருமே வாக்களிக்கிறார்கள். வெளியில் வந்து தமிழ் மக்களின் வீரர்களாகின்றார்கள்.

தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கு ஆயுதம் வாங்குவதற்கான பாதுகாப்பு நிதியத்தை தோற்றுவிப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது கூட தமிழ் எம்.பிக்கள் உட்பட எல்லோருமே அதரவளித்தார்கள். நிஹால் கலப்பதி மட்டுமே அதனை எதிர்த்திருந்தார்.

இப்படிச் சொல்வோமே. சாக்கடைக் குட்டை உள்ளது அதைச் சுத்தம் செய்யவேண்டுமென்றால் அதில் இறங்காமல் சுத்தம் செய்ய முடியாது. நாங்கள் அந்த சாக்கடைக்குள் இறங்கியது அந்த சாக்கடையில் கிடப்பதற்கல்ல. அதன் அசுத்தத்தை நீக்குவதற்கே.

எனவே ஒரு புரட்சிகர சக்தியொன்றை மக்கள் ஏற்க வேண்டுமென்றால் இந்த அமைப்பு முறைக்குள் இருக்கின்ற விஷ்மகர சக்திகளை இனங்காட்ட வேண்டும். அவற்றை செய்ய இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். பாராளுமன்றம் மாத்திரமல்ல மாகாணசபை , நகரசபை , கிராமிய சபைகள் உட்பட எல்லாவற்றிற்கூடாகவும் இயங்குதல் அவசியம். இந்தப் பாராளுமன்றத்தை சரிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்குள்ளே உள்ள பிழைகளை அம்பலப்படுத்தி சரியான அமைப்பைக் கட்டுவதே எங்கள் நோக்கம்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பியினரிடையே எப்போதும் தவறான அணுகுமுறையே காணப்படுவதாக சொல்லப்படுகிறதே?

சிலவேளை நாங்கள் முன்வைத்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்களது கருத்தாக அது இருக்கக்கூடும். நாங்கள் இனப்பிரச்சனை தொடர்பாக விஞ்ஞான ரீதியில் இனவாதமற்ற ரீதியில் மார்க்சிய பார்வையிலேயே செயற்பட்டு வருகிறோம். சிங்கள இனவாதத்தையோ நாங்கள் சார்ந்தவர்கள் அல்ல.

ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புகளில் ஒன்றான இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கீழ் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படையாகப் பிரசாரப்படுத்தி வந்துள்ளதே?

இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற தலைப்பிலான வகுப்பொன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே ஆனால் இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழியினருக்கு எதிரான கருத்துக்களை அது கொண்டிருக்கவில்லை. அது தப்பான பிரசாரம். ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தினோம்.

மாகாணசபை வடக்கு கிழக்கு இணைப்பு யாவுமே நாட்டைத் துண்டாடுகின்ற முயற்சி என்று ஜே.வி.பி பிரசாரம் செய்கிறதே?

இந்தப் பிரச்சனையை தோற்றுவித்தது முதலாளித்துவ முறைகளே அதே முதலாளித்துவம் இன்று தீர்வையும் சொல்லுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு இதே வர்க்கத்தால் தீர்வுகாண முடியுமென நாங்கள் நம்பவில்லை. அதே போல் மக்களை பிரிப்பதனூடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இந்த முதலாளித்துவ முறைமையே தமிழ் மக்களை ஒடுக்கியதென்றால் பிரிந்து போனதன் பின்னும் அதே முறைமையின் கீழ் தமிழ் மக்கள் ஒடுக்கப்படாமலா இருக்கப் போகிறார்கள். இப்படி கூறுவோமே ஐ,தே.க, ஸ்ரீ.ல.சு.க.வுக்கு பதிலாக தமிழர் விடுதலை கூட்டணியை ஆட்சியில் அமர்த்தி விட்டால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா? தமிழ் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வுகள் இல்லாமல் போயுள்ளது. இருசாராரிடமும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிந்து போவதனூடாக இருசாராரையும்இணைக்க இயலாது போய்விடும். எனவே தான் நாங்கள் கூறுகிறோம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை சேர்ந்து வாழவிடாமல் செய்கின்ற இந்த முதலாளித்துவ முறைமையை விரட்ட வேண்டும். ஒன்றாக வாழக் கூடிய சமதர்ம சோசலிச சமுதாயமொன்று உருவாக்கப்பட வேண்டும். அக்காரியத்தை செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ், முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத்துக்குப் பதிலாக ஒன்றாக வாழக்கூடிய சோசலிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்களுடன் இணையுங்கள்.

இன்று தமிழ் மக்களது பிரதானமான ஒடுக்கு முறை இன ஒடுக்கு முறையாக உள்ளது. அவர்கள் நேரடியாக அதற்கு முகம் கொடுக்கின்ற போது அது தொடர்ந்து நிலவுகின்றவரை வர்க்க ரீதியான அணிதிரட்டல் சாத்தியமில்லை என்கின்ற நிலையில் முதலில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது முன்நிபந்தனையாக உள்ளது இது தொடர்பாக ஜே.வி.பியினது நிலைப்பாடு என்னவாக உள்ளது?

தமிழ் மக்களுக்கென்று விசேடமான பிரச்சனை இருக்கிறதென்பதில் எங்களுக்கு இருவேறு கருத்தில்லை. அவர்களின் பிரச்சினைக்கு விசேட கவனம் செலுத்த வேண்டுமென்பதில் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் அதை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதே எங்கள் கேள்வி. தனியான தேசக் கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தேவையே. தமிழ் மக்களது மட்டுமல்ல முஸ்லிம், சிங்கள மக்களது பிரச்சினைகளுக்கும் கூட மக்கள் அரசாங்கமொன்றினாலேயே தீர்வை வழங்க முடியும்.

ஒரு சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இன்று ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வே உள்ளது இப்படிக் கூறுவோமே தொழில் புரியக்கூடிய வயதுடையவருக்கு தொழில் வழங்க இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முடியாது எனவே ஒரு விகிதாசாரத்தை பின்பற்றுகிறது. தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்கின்ற ரீதியில் இதை வகுக்கிறது. உயர் கல்வியில் சித்தியடைந்த எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. எனவே இவ் விகிதாசாரத்தை பேணுகிறது. ஆகவே முதாலாளித்துவத்தால் இந்த பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சோஷலிசம் வந்தவுடன் தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள் என்கிற பாரபட்சம் இல்லாது தகுதியுள்ள எல்லோருக்குமே இதை வழங்க முடியும். மொழி தொடர்பாக பிரச்சினை இல்லை. எனவே அரச சேவைகளுக்கு சிங்கள மொழி கட்டாயம் என தமிழ் மக்களிடம் கேட்கப் போவதுமில்லை சிங்கள மக்களிடம் ஆங்கிலம் கட்டாயம் என கேட்கப்போவதுமில்லை நியாய விலையில் நுகர்வுப்பொருட்கள் கிடைக்கும் என்றால் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் இருக்க வீடு கிடைக்கும் என்றால் இனப் பிரச்சினைக்கு இடமேயில்லை.

சோஷலிச சமூகத்தில் கூட இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை காணமுடியாது போனதற்கான உதாரணங்கள் உள்ளதே ரஷ்யா உட்பட?

அது பிழையானது சோவியத் யூனியனில் ஸ்டாலினிசம் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய ஊடுருவல் காரணமாகவுமே சரியான முறையில் அவற்றைத் தீர்க்க முடியாது போனது.

அரசின் புதிய தீர்வு யோசனைகள் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன ?

நாங்கள் முற்றும் முழுதாக இத்தீர்வு யோசனைகளை எதிர்க்கிறோம். காரணம் மக்களை பேசும் மொழிகளுக்கு ஊடாக பிரித்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதே பொதியில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசமத்துவத்தை நீக்குகின்ற எந்த ஏற்பாடும் இதில் இல்லை. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற இவ்விசேட சலுகையை நாங்கள் எதிர்க்கின்றோம். இது அசமத்துவமான ஒன்றை சட்டபூர்வமான ஒன்றாக்கும் முயற்சியாகும்.

1987-1989 காலப்பகுதியில் ஜேவிபிக்கும் புலிகள் இயக்கத்திற்க்கும் தொடர்பு இருந்ததெனவும் இக்காலக்கட்டத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாக ஜே.வி.பி.யினரின் இருப்பிடங்களைப் புலிகள் காட்டிக் கொடுத்ததாகவும் ஜே.வி.பி.யின் லண்டன் கிளை பிரச்சாரம் செய்வதாக அறிகிறோம், அது உண்மையா?

ஜே.வி.பி.யின் ஒவ்வொரு கிளைக் காரியாலயங்களும் வெவ்வேறான கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்துவதில்லை. லண்டனில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் இது பிரச்சாரப்படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனாலும், புலிகளுக்கும் எங்களுக்கும் உத்தியோகபூர்வ தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எல்லா அரசியல் சக்திகளுடனும் உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடியிருக்கிறோம்.

ஜே.வி.பி. ஜனாநாயகம், சோஷலிசம் பற்றியெல்லாம் பேசியபோதும், அதன் தாபனச் செயற்பாட்டைப் பொறுத்தளவில் மத்திய குழு, பொலிட்பீரோ அங்கத்தினர் மட்டுமன்றி மாவட்ட அங்கத்தினர் கூட வீஜேவீரவின் தனிப்பட்ட நியமனங்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறதே?

எங்களை நோக்கி நேரில் இக்குற்றச்சாட்டை எவரும் முன்வைக்க மாட்டார்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலர் இருக்கிறார்கள். குற்ப்பாக 71 கிளர்ச்சியின் போது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் ஒழுங்கீனம் காரணமாக விலக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜே.வி.பி.யின் கருத்துக்களில் விமர்சனம் முன்வைக்க முடியாதவர்கள். எனவே அவர்கள் போன்றோர்தான் இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். எங்கள் கட்சிக்குள் மத்திய குழுவுக்குள் வரும் வரையான நீண்ட ஒழுங்குமுறையொன்று ஆரம்பத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. ஜே.வி.பி. தொடர்பான கருத்துச் சொல்வதற்க்கும், விமர்சனம் செய்வதற்க்கும் எல்லாவற்றுக்குமே சகலருக்கும் உரிமையுண்டு. ஒரு நபரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதற்கு இக்கட்சியில் உள்ளவர்கள் என்ன மூடர்களா? எனவே அக்கருத்து பொய்யானது.

1994 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்த போது தம்மை சுயவிமர்சனத்துக்குள்ளாக்குவதாக வாக்குறுதியளித்திருந்தது என்றும், இவ்வாக்குறுதியை இன்னமும் செயற்படுத்தவில்லையென்றும் ஜே.வி.பி.யில் இருந்து ஒரு சாரார் கூறுகின்றனரே?

சுய விமா்சனம் என்பது செய்யப்பட வேண்டிதே. நாங்கள் இதற்கு முன்னரும் 1976இல் 71ஐப் பற்றிய சுயவிமர்சனம் செய்தோம்.1976ன் பின் இது வரை அப்படியொன்றும் செய்யப்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சுய விமர்சனத்தை ஓரிரு வாரங்களில் நினைத்த படி செய்து முடிக்க முடியாது. அது மிகுந்த பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்று. இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தோழர் சோமவங்ச தவிர, இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே செய்ய வேண்டியிருக்கிறது. எனவே கட்சிக்குள் இதைப் பற்றிய தேடல்களை செய்து கலந்துரையாடியே செய்ய வேண்டும். சென்ற ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடத்திய கட்சி சம்மேளனத்தில் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதன்படி இவ்வருடம் யூன் மாதத்திற்குள் அண்ணளவான ஒரு சுயவிமர்சன ஆவணத்தொகுப்பொன்றை வெளியிடுவோம்.

நன்றி - சரிநிகர் - மே.1996



71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி !? - என்.சரவணன்

71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற  எடுக்கப்பட்ட முயற்சி அது. இளைஞர்கள் பலர் மோசமாக அரச பயங்கரவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட அக்கிளர்ச்சி நிகழ்ந்து இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைப் பற்றி சரிநிகர் பத்திரிகையில் என்.சரவணன் எழுதிய இக்கட்டுரை 96 ஆம் ஆண்டு அதன் 25 வது ஆண்டு நினைவின் போது வெளியானது இது.

"நாங்கள் இனவாதிகளல்லர். சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பவ­ர்களும் அல்லர். நாங்கள் எங்கள் போராட்­டத்தில் சிங்கள மக்களையும் நினைவு கூறுகிறோம். அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எங்களது ஒத்துழைப்­பையும் வழங்குவோம். அதேபோல எங்க­ளது விடுதலைப் போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன்னொருவனது சுதந்திரத்தில் அக்கறை கொள்ளாத ஒருவன் தனது சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றான்.

எங்களுக்கு இன்று ஏற்பட்ட நிலை, இன்னொரு நாள் ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்படும். அன்றைக்கு ஆனையிறவு வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்படும். குருநகர் வதைமுகாம் குருநாகலுக்குக் கொண்டு செல்லப்படும். இன்றைய தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக, அன்றைக்கு சிங்கள இளைஞர்கள் வதைபுரியப்படுவார்கள்."

-குட்டிமணி (1982ல் நீதிமன்றத்தில்)

குட்டிமணி சொன்னது 1987-1989 காலப் பகுதியில் நடந்தேறி­யது. தமிழ் இளைஞர்களை குரூரமாக அழித்தொடுக்­கிய அதே ஆளும் வர்க்கம், சிங்கள இளை­ஞர்களையும் அழித்தொழிக்க தவற­வி­ல்லை. அவ்விளைஞர்களது முதல் அனுப­வமல்ல அது. இரண்டாவது அனுபவமே அது. 1971 ஏப்ரலில் அவ் இளைஞர்கள் முதற் தடவையாக அடக்கப்பட்டார்கள். ஆம், சரியாக 25 வருடங்களுக்கு முன் அது நடந்தது. அதை மீளப் பார்ப்போம்.

பாம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்­கையின் வரலாற்றில் முற்­போக்கு பாத்திரம் வகித்து வந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலக்­கட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளாலும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஒரு கட்டத்தில் இவை ஆளும் வர்க்கத்தோடும் கூட்டுச் சேர்ந்தன. மக்களை ஒடுக்குவதிலும் துணை போயின. பாராளுமன்ற­த்தை பிரச்­சார மேடையாகப் பயன்படுத்துவ­தாகக் கூறிச் சென்ற அவை பாராளுமன்றத்தையே தமது இருப்பாக்கிக் கொண்டன. பாராளுமன்ற இருப்புக்காக பாராளுமன்ற வாதம் சார்ந்த போலி வாக்குறுதிகளை அளிப்பவர்களாகவும் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக முதலா­ளித்துவ ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களா­கவும் ஆனார்­கள்.

1960இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிரு­ந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், வாழ்க்கைச் செலவு அதிகாரிப்பு, விவசாயிகளின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக்காரணங்கள் அரசை எதிர்­த்து நிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்கு ஜே.வி.பி. தலைமை கொடுத்தது.

ஜே.வி.பி.யின் உருவாக்கம்

சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனி­ஸ்ட் கட்சியிலிருந்து 1966இல் ரோஹண விஜேவீர உள்ளிட்ட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கெ­னவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனி­ஸ்ட் மாணவர் பிரிவை கட்டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர, அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக் கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலைக­ளில் ஈடுபட்டார். குறிப்பாக அரசியல் கலந்­துரையாடல் நடத்தச் சென்ற இடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங்களை அங்கு களஞ்சி­யப்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை அறிந்­தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முக­தாசனுக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் விஜயம் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்திலிருந்தும் விலக்கப்பட்­டார். இறுதியில் கட்சியின் அனுமதியின்றி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி டட்லி-செல்வா உடன்ப­டிக்கைக்கு எதிராக ஊர்வலத்­தில் கலந்து கொண்டதன் காரணமாக கட்சியிலிருந்து விஜேவீர விலக்கப்பட்டார்.

விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலிருந்த தோழர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு 1967இல் ஜே.வி. பி­.­யை (மக்கள் விடுதலை முன்னணியை) உருவாக்கினார்.

ஏனைய இடதுசாரிக் கட்சிகளோடு ஒப்பிடும் போது ஆயுதப் போராட்டத்தை முற்றாக ஜே.வி.பி. மட்டுமே அங்கீகரித்தது. ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை ”அரசியல் வகுப்புகள் 5” மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது. அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்கு முதற் கட்டமாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுத சேகரிப்பில் ஈடுபடும்படி முன்னணி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்­டது.

இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடது­சாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜே.வி.பி.யை காட்டிக் கொடுத்­தன. குறிப்பாக ”அத்த” பத்திரிகைக்கு ஊடாக ஜே.வி.பி.யின் இரகசிய செயற்பா­டுகள் பகிரங்கப்படுத்தப்பட்­டன. அதனைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அரசாங்­கம், ”சேகுவரா பியுரோ” (Chegura Bureau) எனும் பெயரில் ஜே.வி.பி.யைக் கண்காணி­ப்பதற்காக விசேட பிரிவொன்றை உருவாக்­கியது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரண­மாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இடப்பட்டார்கள். தலைமறைவாக இருந்த விஜேவீராவும் 1970 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலினால் ஆட்சி, மாற்றம் கண்டது.

அரசு சுதாரித்தது

ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவ் ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி ,லங்கா சமசமாஜக் கட்சி கூட்டு சேர்ந்தி­ருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து {யூலையில் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுதலை­யால் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. ரகசிய வேலைகளுக்கு முன்னுரிமை அளித்த அதே வேளை பகிரங்க அரசியலில் ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சியின் அரசியல் கூட்ட­ங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்கள் பெருந்தொகையாக கலந்து கொண்டார்­கள். ஜே.வி.பி.யின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத்தினவேல் ”சேகுவாரா இயக்­கம் அரசின் பிரதான எதிரியாக தலை தூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கம் இன்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம்செலுத்த வேண்­டும்” என 1970 ஒகஸ்டில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து (அவசரகால சட்டத்­தின் கீழ்) மரண பரிசோதனையின்றி சடலங்களை எரிப்பதற்கான சட்டத் திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்­டது. பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜே.வி.பி, ஆயுத சேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத்தியது. வெடி குண்டு தயாரிப்புக்கான தீர்மானத்தையும் அரசியல் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிக­ளுக்கும் ஜே.வி.பி. வினியோகித்தது.

புரட்சியும் எதிர்ப்புரட்சியும்

1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்­சியாக நாடு பூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழு நேர கூட்டத்தில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கி­யுள்ள தருணம் இதுவென்றும் மார்ச் மாத இறுதியில் உறுப்பினர்­களை ஆயுதபாணி­காளாக்கும் வேலை­களை பூரணப்படுத்­தும் படியும் கூறினார் தான் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி பேச வருவதாகவும் கூறிச் சென்றார்.

மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலை­யில் அடைக்கப்பட்டார். 1971 பெப்,21ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரெச்ச­ரிக்கை விடப்பட்டது? 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுவதும் அவசரக்காலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து அடக்குமுறைக்கு முகம் கொடுப்­பது கஷ்டமாக இருந்ததால் தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக்கும் படி விஜேவீரவிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி மத்தியக்குழு (அப்போது முரண்பட்டு இருந்த தரப்பும் கூட்டாகச் சேர்ந்து ) ஏப்ரல் 5ம் திகதி இரவு 11.30க்கு நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்கி அழிக்கும் தீர்மானத்தை எடுத்தன. இத் தீர்மானத்திற்க்கு முன் ஏப்.5ம் திகதி தாக்குவதாகத் தீர்மானிக்­கப்பட்டிருந்தது. அத் தீர்மானம் பின்னர் மாற்றப்பட்ட போதும் அத்த­கவல் மொனறாகலைக்கு போய்ச் சேரவில்லை. எனவே தான் ஏப்.5ம் திகதி 5.20க்கு மொனறாகலை-வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்­டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கி­டையில் தாக்குதல் பற்றி அறிந்த பாதுகாப்புப் படையினர் உஷாருற்­றனர். ஏப்.5ம் திகதி 74 பொலிஸ் நிலையங்கள் கிளர்ச்சியாளர்க­ளால் தாக்கப்பட்டன. பல பொலிஸ் நிலைய­ங்களை கைவிட்டு விட்டு பொலிஸார் பின்வாங்கினர். இக்கிளர்ச்சியை எதிர் கொள்ள பலமில்லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கோரியது.

அடக்குமுறை

இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலைய­த்தில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படையினர் பெருமளவு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்­பினர். 18 யுத்த பீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களையும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும் பெருந்­தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந்தியா விமான ஓட்டிகள் உள்ளிட்ட 7 விமானங்களையும் பெருமளவு ஆயுதங்­க­ளையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அன்டோ­னோவ் எனப்படும் இராட்சத விமானங்­களையும் மிக்-15 ரக விமானம் ஒன்றையும் இரு ஹெலிகப்­டர்களையும் சிறந்த விமான ஓட்டிகளையும் அனுப்பியது. எந்தவித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம் 20,000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்­டனர். 40,000த்துக்­கும் மேற்பட்டோர் சிறை­ச்சாலைக்கும் வதை முகாம்க­ளுக்­கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்­டது. கிளர்ச்சி­யில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை 1972 யூனிலிரு­ந்து 1974 டிசம்பர் வரை விசேட ஆணைக்குழு மேற்கொண்­டது. விசாரணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத் தண்டனை பெற்றனர்.

மீளுருவாக்கம்.

தண்டனை அனுபவித்து வந்தவர்க­ளில் மூன்று பிரிவினர் இருந்தனர். அமைப்­பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறியவர்கள், அடுத்த தரப்பினர் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான பதில் கிடைக்­காத நிலையில் மாற்று அரசியல் ஸ்தாப­னத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி வெளியேறி­யவர்கள். எஞ்சிய மிகச் சொற்ப­மான சிலர் இன்னமும் தத்துவார்த்த கருத்­தாடலில் ஈடுபட்டு வருகிறார்கள். மூன்றா­வது தரப்பினர் ஜே.வி.பி.யின் அரசியல் பூரணமாக தவறற்றது என்ற கருத்துடை­யோரும், ஒருசில விடயங்களை திருத்திக் கொண்டு முன்செல்லலாம் என்ற கருத்து­டையோரும் அடங்கிய குழு. இக்குழுவே விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யை மீளக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி. சிறைக்குள்­ளேயே மீளுருவாக்கம் பெற்றது.

1977 முற்பகுதியில் பொதுத் தேர்தல் நெருங்கியதால் அவசரகாலச் சட்டம் நீக்க­ப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி.­யினர் பலர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்ததுமே ஜே.வி.பி. முதல் தடவையாக சட்டபூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கியது. பதிவு செய்யப்படாததன் காரணமாக 1977ல் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது.

1979 உள்ளூராட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்த போதும் அது நிராகரிக்கப்­பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டது. 1981 மாவ­ட்ட சபைத் தேர்தலிலும், 1982 ஜனாதி­பதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதி­பதி தேர்தலின்போது ஜே.வி.பி. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலின் மூன்றாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் இவ்வளர்ச்சியா­னது ஆளும் ஐ.தே.க.வை அச்சுறுத்திய விடயமாக அமைந்தது ஆனாலும் இத் தேர்தலின் மூலம் ஜே.வி.பி.யின் பலத்தின் அதிகரிப்பை காண முடிந்ததே ஒழிய பிரதிநிதித்துவம் பெருமளவுக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை.

தடையும் தலைமறைவும்

1983 மே தின கூட்டத்தில் இடதுசா­ரிக் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரையாற்றியிருந்தார். 1983 யூலைக் கலவரத்தைத் தூண்டி தலைமை­யேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐ.தே.கட்சி அக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. மீதும் ஏனைய இடதுசாரி கட்சிகள் மீதும் சுமத்தியது. 1983 யூலை 30 ம் திகதி ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமா­ஜக் கட்சி ஆகிய மூன்றையும் மேற்படி குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே. அரசாங்கம் தடைசெய்தது. இத்தடையின் காரணமாக ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்குத் தள்ளியது. இந்நியாயமற்ற தடையை நீக்கும் படி ஜனாதிபதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற்­றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்ட போதும் அது சாத்திய­மற்றுப் போனது. கிடைத்த தலைமறைவு சந்தர்ப்­பத்தை பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல், ஆயுத சேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அரசியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியது.

வடக்கு கிழக்கு பிரச்சினை காரண­மாக இராணுவ­த்தை விஸ்தரிக்கும் முயற்­சியில் அரசாங்கம் ஈடுபட்ட போது அத்தரு­ணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்­களை இராணுவத்திற்­குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணுவ பயிற்சி­யையே ஜே.வி.பி. பிரதான நோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சில படை முகாம் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் போக்காகக் கருதியது. தமது இராணுவ நடவடிக்கைகாக அன்று தேச பக்த மக்கள் இயக்கம் (D.J.V.P.) என்ற ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன. D.JV.P. யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்­பமாக பயன்படுத்தி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், (ஜே.ஆர், ஜே.ஆரைத் தொடர்ந்து பிரேமதாசா) (D.J.V.P.) பேரில் அரசியல் படுகொலைக­ளைப் புரிந்தது. இப்படுகொ­லைகள் பற்றிய உண்மைகள் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணை கமிஷன்களின் மூலம் அம்பலமாகி வருகின்றன.

மீண்டும் வன்முறை

1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. பயங்கரவாதம் என்னும் பெயரில் ஏறத்தாள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்­கள் டயர்களுக்கும், ஆறுகளுக்கும், புதைகுழிக­ளுக்கும் பலியாகினர். (அரசாங்க தகவல்களின் படி 60,000 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்றே கூறப்படுகி­ன்றது.) பலர் வதைபுரியப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்­டனர். 1989ல் விஜேவீரவும் பிடி­க்கப்பட்டு கொலை செய்யபட்டார். மோசமான முறை­யில் ஒடுக்க­ப்பட்ட ஜே.வி.பி. மீள எழப்போ­வதில்லை எனப் பலர் எதிர்ப்பார்த்த­னர். ஆனால் 1994ல் பலர் விடுதலையாகி வந்த­தும் கட்சி புனரமைக்க­ப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசியலில் வேலைகளைத் தொடங்கினர்.

மீண்டும் மீளுருவாக்கம்

நாடெங்கிலும் சந்திரிக்கா அலை­யும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்க­ளும் நடந்து கொண்டிருந்தன. ஜே.வி.பி.யும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்னணியை கட்டி­யெழுப்பின. இலங்கை முற்போக்கு முன்ன­ணியின் பேரில் தேர்தலிலும் இறங்கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெடுத்­தது. 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் தமது வேட்பாளரையும் நிறுத்தியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே தாம் அத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நிறைவேற்று அதி­காரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் நீக்குவதாக சந்திரிகா வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995 ஆம் ஆண்டு யூன் 15 ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இத­னால் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

இதிலிருந்து எங்கே...?

ஜே.வி.பி. தென்னிலங்கையில் மீண்­டும் மீளுருவாக்கம் அடைந்து வருகிறது. தேசிய இனப்பிரச்சினை தவிர்ந்த ஏனைய போராட்டங்களுக்கு எல்லாம் கூடிய பட்ச அளவு தலைமை கொடுத்து வருவதைக் தற்போது காணமுடிகிறது. ஆனால், தன்­னை நோக்கிய மீளாய்வையோ, சுயவிமார்சனத்தையோ செய்வதில் மிக மிகப் பலவீ­னமான நிலையி­லேயே உள்ளது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேரினவாத கருத்தியலையே சார்ந்திருக்கின்றது. புதிய மார்க்சிய கருத்தாடலில் ஈடுபடுவதிலும் பின்தங்கிய நிலையி­லேயே இருக்கிறது. ஜே.வி.பி. பற்றிய சுய விமர்சனங்களை முன்வைப்பவர்களை எதிர்ப்புரட்சிகர சக்தி­களாகவும் எதிரிகளாகவும் முதலாளித்துவ எடுபிடிகளாகவுமே அடையாளம் காண முற்படுகிறது. இந்நிலை மேலும் நீடிக்குமாக இருந்தால் மீண்டும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் தியாகம் எந்த விதமான அர்த்தமுமற்ற விழலுக்கிறைத்த நீராகி விடும்!

நன்றி - சரிநிகர் 1996.04.20



ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நியாயத்துக்கு எதிராக வாதாடிய சேர்.பொன்இராமநாதன் - என்.சரவணன்

தேசவழமைச் சட்டம் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளை கண்டிருக்கிறேன். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு பொதுக் குறைபாடு இருப்பதை அவதானிக்க முடிந்தது. மூலம் பற்றிய விபரங்களை சரியாக கூறப்படுவதில்லை. பின் வந்த ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளை பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்கிற போதும் அதன் மூலப் பிரதியை தேடிச் சென்று விபரங்களைத் முழுமையாக தந்தவர்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மேலும் முதன் முதலில் 1706 இல் அதைத் தொகுத்த க்ளாஸ் ஈசாக்ஸ்ஸின் பெயரைக் கூட ஒருவரும் ஒழுங்காக எழுதுவதில்லை. தமிழில் எழுதும்போது அருகிலேயே சரியான டச்சுப் பெயரை ஆங்கில எழுத்துக்களில் தந்ததில்லை. தந்தவர்களும் பிழையாகவே தந்து கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூட இதில் விதிவிலக்கில்லை. ஒரு இடத்தில் இடுகிற பிழை; அதன் பின் எழுதுகிற அனைவரும் அதையே ஈயடிச்சான் கொப்பியாக செய்து வருவதால் அவர்களும் அதே பிழைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு காரணமாக ஆகிவிடுகிறார்கள்.

குறிப்பாக நபர்களின் பெயர், இடங்களின் பெயர் என்பனவற்றை எனது ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடுகையில் அருகில் ஆங்கிலத்தில் சரியான பெயரைக் குறிப்பிட்டுவிடுவது எனது வழக்கம். மேலதிகமாக ஆராய தலைப்படுபவர்களுக்கு அந்த உறுதியான விபரங்கள் தேடுவதற்கு பேருதவியாக அமையும். இப்படிப்பட்ட குறைபாடுகளை இதற்கு முந்திய பல தமிழ், சிங்கள ஆய்வு நூல்களில் இருப்பதைக் கண்டு கடந்து வந்திருக்கிறேன். அவை எனக்கு ஏற்பட்ட சிரமம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக நான் எனது நூல்களில் கவனமாக அருகில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிடுவேன்.

இரு நாட்களாக முயற்சித்ததில் டச்சு மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன்னைய மேற்படி மூல ஆவணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது. நூறாண்டுக்கு முந்திய தேசவழமை பற்றி டச்சு மொழியில் எழுதப்பட்ட வேறு ஆவணங்களும் கிடைத்தன.

க்ளாஸ் ஈசக்ஸ்கின் பெயரையே எத்தனை ஆய்வாளர்கள் எத்தனை விதமாக எழுதியிருக்கிறார்கள் என்று இங்கே பாருங்கள்.

  • Claas Isaaks – பேராசிரியர் சிவத்தம்பி – யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் – 1993
  • Claas Isaakz - T.Sri Ramanathan – Tesawalamai -1962
  • Claas Isaaksz – Dr.H.W.Tambiah – The Law and Customs of The Tamils of Jaffna.
  • Claas Isaaksz - H.A.I.Goonatileke – A bibliography of Ceylon
  • Class  Isaaksz – Professor T.Nadaraja – The Administration of Justice in Ceylon Under the Dutch Gevernment 1656 - 1796 – Journal of the Ceylon Branch of the Royal Asiatic society – XII – 1968
  • Claas Isaaksz – Henry Francis Mutukisna of Lincold’s INN – A new Edition of The Thesawaleme or The Laws and customs of Jaffna – 1862
  • Claas Isaaksz – P.E.Pieris – Ceylon and the Hollanders (1658-1796) - 1918
  • Claas Isaacsz – Memoir of Hendrick Zwaardecroon, Commadeur of Jaffnapatam, 1697 (Translated 1911)
  • Claas Isaacsz – R.G.Anthonisz – Report on the dutch Records in the Government Archives at Colombo - 1907

வலது பக்கத்தில் கடைசி வரிக்கு முன்னைய வரியில் ஏப்ரல் 8ஆம் திகதி கிளாஸ் ஈஸாக்ஸ் புதைக்கப்பட்டதை கூறும் பதிவு

க்ளாஸ் ஈசாக்ஸ் இறந்ததும் 08.04.1718 அன்று ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு தேவாலய மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பது பற்றிய விபரங்களை அங்கிருக்கும் பதிவில் காண முடிகிறது. அதில் அவரின் பெயர் Isaak claas என்று காணப்படுகிறது. மேற்படி தேசவழமை சட்டத்தில் டச்சு மொழி மூல ஆவணத்தை நூறாண்டுகளுக்கு முன் 1919ஆம் ஆண்டு நெதர்லாந்தில் வெளியிடப்பட்ட “Bijdragen tot de Taal – Land – en Volkenkune” என்கிற நூலில் அதே டச்சு மொழியில் மீண்டும் முழுமையாக வெளியிட்டிருக்கிறார்கள். அத்தொகுப்பின் முடிவில் கையெழுத்திட்டுள்ள க்ளாஸ் ஈசாக்ஸின் பெயர் Claes Isaacqz என்று தான் இடப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை தேசிய சுவடிகூட திணைக்களம் 1943 இல் தொகுத்த Catalogue of the Archives of the Dutch Central Government of Coastal Ceylon,1640-1796 என்கிற நூலில் இலங்கை தொடர்பான டச்சு ஆவணங்களின் பெரும் பட்டியல் உள்ளது. அதில் தேசவழமை சட்டத்தை திரட்டிய கிளாஸ் ஈசாக்ஸ்ஸின் பெயர் தெளிவாக Claes Isaacqz என்று தான் இருக்கிறது.


ஒரு தகவலை தேடி எடுக்க வேண்டுமென்றால் எழுத்துப் பிழையின்றி சரியான சொல் கிடைத்துவிட்டால் தேடுபவர்களுக்கு இலகுவாகவும் இருக்கும், உறுதியான தகவல்களையும் தேடலாம், கால விரயம், தகவல் பிழைகள் என்பவற்றையும் தவிர்க்க முடியும். இதனை ஒரு உதாரணத்துக்காகத் தான் இங்கே வெளிப்படுத்துகிறேன். ஏனென்றால் இந்த குறை ஒரு போக்காகவே நிலைபெற்று தொடர்ந்து வருகிறது. இனி மற்றவர்களும் திருத்திக்கொள்ள உந்துவதே இக்குறிப்பின் நோக்கம். ஆய்வு முறையியலை கற்றுக்கொடுப்பவர்கள் இதனை வலியுறுத்தலாம். 

கட்டுரையில் மேலும் சுவாரசியமான தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் இறுதிக் கிரியையில் பறை முதலிய வாத்தியங்களையும் பயன்படுத்தி ஊர்வலமாகச் சென்று சடலத்தை எரிக்க முற்பட்டபோது ஆதிக்க சாதியினர் அதை எதிர்த்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீதிமன்றத்த்தை நாடினர். அவர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உயர்சாதித் தரப்பு குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டது. உயர்சாதித் தரப்பு மேன்முறையீடு செய்தனர். உயர்சாதியினர் சுப்ரீம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சேர் பொன் இராமநாதன் உயர் சாதியினருக்காக வாதாடினார். தேசவழமைச் சட்டத்தின்படி உயர்சாதியினர் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யும் உரித்துடையவர்கள் என்று எடுத்துக்காட்டி உயர்சாதியினருக்காக வாதாடினார்.

தேசவழமைச் சட்டம் எவ்வாறு ஒரு ஆதிக்க சாதி, ஆதிக்க வர்க்க, பிரதேசவாத சட்டம் என்பதை சுட்டுகிற கட்டுரைகளிலும், நூல்களிலும் இந்த வழக்கையும் ஒரு ஆதாரமாகக் காட்டுவது வழக்கம். இந்த வழக்கைப் பற்றிய முதற் தகவலை டி.ஸ்ரீ ராமநாதன் (T. Sri Ramanathan) எழுதிய “தேசவழமை” (Tesawalamai) என்கிற நூலில் இருந்து தான் ஆதாரம்காட்டி அனைவரும் எடுத்தாழ்வதைக் காண முடியும். ஆனால் அந்த நூலில் ஒரே ஒரு பந்திக்கு மேல் விபரங்கள் ஏதும் இல்லை. குறைந்த பட்சம் அந்த சம்பவம் எத்தனையாம் ஆண்டு நிகழ்ந்தது என்பது பற்றி கூட வேறு எவரும் குறிப்பிடுவதில்லை ஏனென்றால் டி.ஸ்ரீ ராமநாதனின் நூலில் கூட அந்த விபரம் கிடையாது.

எனது கட்டுரைக்காக அந்த வழக்கின் முழு நீதிமன்ற அறிக்கையையும் கடும் உழைப்பின் பின் தேடி எடுத்துவிட்டேன். கட்டுரை முடிந்து கொண்டிருக்கிறது. 


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates