Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

டொனமூர் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள்! - என்.சரவணன்


டொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.

டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்ப்பதற்கு ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன்.  அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார்.

அதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார்.

இராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அறியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.” 
அன்றைய சிவில் சேவைத்துறையில் அதிகமாக இருந்த தமிழர்களின் இடத்தை சிங்களவர்கள் பிடித்துவிடுவார்கள் என்கிற பீதியிலேயே அவர் அப்படிச் செய்தார் என்கிற பதிவுகளை பல இனவாத கட்டுரைகளிலும் நூல்களிலும் காண முடிகிறது.

அதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங்களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார்.  அந்த அறிக்கையை  (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.
“It would be ruinous to introduce Universal Suffrage in Ceylon at that stage.” 
“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.

தொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.

12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பித்தது.  டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.

12.12.1929 டொனமூர் திட்டத்தின் இறுதி வாக்களிப்பு
எதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள்.

இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் இதனை ஆதரித்தார்கள் என்பதற்காக அதன் தலைவர் ஈ.டபிள்யு பெரேரா அதிலிருந்து விலகி All Ceylon Liberal League என்கிற கட்சியைத் தொடங்கினார். அவர் இனவாரி பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த இன்னொரு சிங்களவரான சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான ஆட்சியில் கல்வித்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

டொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான சேர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.

“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்” என்றார். 

டொனமூர் பௌத்தர்கள்
காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவர்களாக மதத்தையும் பெயர்களையும் மாற்றிக்கொண்டவர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் சிங்கள பௌத்த சித்தாந்தத்தின் செல்வாக்கு தலைதூக்கியவேளை மீண்டும் இந்தக் காலப்பகுதியில் பௌத்த மதத்துக்கு மாறினார்கள். 1930களில் இந்தப் போக்கை அதிகமாகக் காண முடிந்தது. அவர்களை டொனமூர் பௌத்தர்கள் (Donoughmore Buddhists) என்றும் அரசியல் ஆய்வாளர்கள் பலர் அழைப்பதுண்டு. அப்படி மீண்டும் பௌத்தத்துக்கு மாறியவர்களில் ஒருவர் எ.டபிள்யு.ஆர்.டிண்டாரநாயக்க. காலனித்துவ மொழி – மத -பெயர்களின் அந்தஸ்து செல்வாக்கிழந்து அந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளங்களும் பெருமிதங்களும் பிரதியீடு செய்யத் தொடங்கிய வேளை இலங்கையின் அடையாள அரசியலின் முகிழ்ப்புக்கு வலு சேர்ந்தது. 

1934ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு “சிங்கள பௌத்தயா” பத்திரிகை 80 பக்கங்களில் வெளிவந்தது. அதில் பண்டாரநாயக்கா “நான் ஏன் பௌத்தனானேன்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். ஜே.ஆர்.ஜயவர்தனவும் அதே தலைப்பில் எழுதியது கைநூலாக வெளிவந்தது.

ஏற்கெனவே இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) 1889இல் இதே தலைப்பில் (Why I Became a Buddhist) ஆற்றிய உரை பின்னர் கைநூலாகவும் வெளியானது.

இவ்வாறு பௌத்தத்துக்கு மாறுவது ஒரு பேஷனாக உருவெடுத்த காலம். கூடவே இனத்துவமும் சாதியமும் வர்க்கமும் சேரும் போது அதற்கான சமூகப்பெறுமதி அதைவிட அதிகம் என்று நம்பினார்கள்.

பண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் என்றே கோரிக்கை விடுத்தார்.

டொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher)   அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி 
“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”
என்று ஆணையிடப்பட்டிருந்தது.

அதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில்  டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.

அந்த மாற்றங்களின் படி

1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)
2. 65 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்பதை மாற்றி 50ஆக குறைத்ததுடன், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆக குறைத்தார்.

அரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும்  யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையை நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.

இதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.

டொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.

இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்தினால் சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். 

மனிங் சீர்திருத்தக் காலத்திலேயே இனத்துவ ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருந்தது. சிங்கள, தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்குள்ளும் கரையோரச் சிங்களவர் – கண்டியச் சிங்களவர் ஆகியோருக்கிடையில் பிரதிநிதித்துவச் சண்டையை மூட்டி அவர்களின் அடையாளங்கள் தூண்டப்படுவதற்கு வழிசமைத்தனர். டொனமூர் ஆணைகுழு விசாரணையில் இதன் விளைவை அப்பட்டமாக காண முடிந்தது.

அதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது. தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.

அடையாள அரசியலின் ஆரம்பம் என்றும் கூட இந்தக் காலத்தைக் குறிப்பிடுவது வழக்கம். 

டொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல
“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.
சாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.

இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.



தன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்! - என்.சரவணன்


தற்போது நடந்துமுடிந்துள்ள ஒக்டோபர் 24 கறுப்புச் சட்டைப் போராட்டம் ஆளும்வர்க்கத்தையும் ஏனையோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை சாத்தியபடுத்தியவர்களுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள். அதேவேளை நாம் வாழ்த்துக்களோடும், பரவசத்தோடும்  சுருங்கிவிடாத - பெருமிதம், துதிபாடுதல் என்பவை நமது பலவீனங்களை மறைத்துவிடாதபடி ஒரு சுயமதிப்பீடும், சுயவிமர்சனமும் அவசியம். அத்தகைய சுயவிமர்சனம் மட்டுமே நம்மை உரிய வழியில் அடுத்த கட்டத்தை வழிநடத்த உதவும்.

இதனை மலையகத்தின் எழுச்சியாக கொண்டாட முடியும் என்று தோன்றவில்லை. அந்த சொல் ஒரு மிகையானது. அந்த சொல் பெரும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். இளைஞர்கள் பலர் இப்படி ஒன்றுக்கு முன்வந்திருப்பது நம்பிக்கை தருகிறது. பல இளைஞர்கள் பொறுப்புடனும் பிரக்ஞையுடன் நடந்துகொண்டதாயும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வர்க்க,  சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.

கடந்த 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் மலையகத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல மலையகத்துக்கான ஊடகங்களும், ஏற்கெனவே இருந்த ஊடகங்களில் மலையகத்துக்கான இடமும் சற்று பெருகியிருக்கின்றன. மலையகத்தின் கல்வி நிலையும் கூட முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மலையகத்தின் நலன்புரி சேவைத்திட்டங்கள் விரிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் மலையகத்தின் விடிவுக்கு வலு சேர்க்கக் கூடியவை தான்.

அதே வேளை தீர்க்கப்படாது இருக்கின்ற பிரச்சினைகள் பெருந்தொகை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அவற்றில் பிரதானமானது.


தன்னெழுச்சி அனுபவங்கள்

மக்களின் தன்னெழுச்சி சதா காலமும் இருந்துவிடுவதில்லை. அது அவ்வப்போது தான் அரிதாக வெளிப்படும். அதனை சரியாக இனங்கண்டு உரிய வகையில் அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, கருத்தேற்றி, ஆதரவு சக்திகளை திரட்டி முன்னேடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியான தன்னெழுச்சியை கிளர்ச்சியாகவும், போராட்டமாகவும், முன்னெடுக்கும் தார்மீக சுயசக்தியை பலப்படுத்தும் பலமும் தகுதியும் இன்று யாருக்கு இருக்கிறது?

தன்னெழுச்சி நமக்கு புதியதல்ல. உலகம் முழுதும், வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. சிக்கலான சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது.

தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும்.

இத்தகைய தன்னெழுச்சிக் காலங்களில் மக்கள் கொடுக்கும் கால அவகாசம் குறைந்ததே. அந்தக் கால எல்லைக்குள் அதனை உரிய அரசியல் கிளர்ச்சியாக மாற்றியமைப்பது எளிமையான காரியம் இல்லை.  குறைந்தபட்சம் தீவிர பிரக்ஞை உள்ள சக்தியால் மாத்திரமே அதனை உரிய முறையில், உரிய காலத்துக்குள் மாற்றியமைக்க முடியும். அத்தகைய சக்தி இன்று நம்மிடம் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. கடந்த கால அரசியல் தலைமைகள் அந்த ஓர்மத்தை நலமடித்து வைத்திருந்தார்கள்.

"என்ன செய்ய வேண்டும்?"
தன்னெழுச்சி மனநிலையைப் பற்றி “என்ன செய்ய வேண்டும்?” என்கிற நூலில் லெனின்  விரிவாக விளக்குகிறார்.
தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் “விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில்  எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாதப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.

இலங்கையின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுவது 1960 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம். நாடளவில் நடத்தப்பட்ட அந்த ஒரே நாள் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தியது. அவர்கள் அந்தப் போராட்டத் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் நான்கே வாரங்கள் தான். இந்த நான்கு வாரங்களுக்குள் பல்வேறு கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், திட்டமிடல்கள், தயாரிப்புகள் என நடத்தினார்கள். வெகுஜன  கிளர்ச்சிக் கொதிநிலையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். அதை கலக உணர்வு மேலிடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தினார்கள். ஆட்சியை உடனடியாகவே கைப்பற்றும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருந்தது. அவர்கள் அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றும் மக்கள் தயாராக இருந்தும் தலைமை கொடுக்க இடதுசாரிகள் தயாராக இருக்கவில்லை  என்றும் இன்று வரை இடதுசாரித் தலைமைகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

வரலாறு என்பது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் நினைவுக் கொண்டாட்டமல்ல. அவை படிப்பினைகள். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டது தான் என்ன?

எழுச்சியிலிருந்து கிளர்ச்சிக்கு

ஆசியாவில் பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கருதப்பட்ட காலத்தில் கூட குறிப்பிடும்படியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மலையகத் தொழிலாளர்களின் பலத்துக்கு பயந்தே இருந்தார்கள். அந்த பயம் தொழிற்சங்க பலத்துக்கும், வாக்கு பலத்துக்கும் தான்.

ஆனால் மலையகத் தொழிலாளர்களை இ.தொ.கா தலைமை வெறும் தொழிற்சங்கமாக குறுக்கிவைத்திருந்தது. வெறும் தனிபட்ட அரசியல் லாபங்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். காலத்துக்கு காலம் அற்ப சலுகைகளுக்கு சமரசம் செய்துகொண்டும், மக்களுக்கு சிறிய சிறிய வெற்றிகளைக் காண்பித்தும் அடிப்படைத் தேவைகளை ஒத்திவைக்க உடந்தையானார்கள். அதன் விளைவுகளை அடுத்தடுத்த மலையகத் தலைமுறைகளும் அனுபவிக்கிறது. தொழிற்சங்கங்கள் மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

அதையும் மீறி சுயமாக வளர்ந்த மக்கள் இன்று தன்னெழுச்சியுடன் நிமிர்கின்ற போதும் அதற்கு உரிய தலைமை கொடுத்து இயக்க, வழிகாட்ட எவரும் மிச்சம் வைக்கப்படவில்லை.

மலையகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிபூர்வமான தன்னெழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியாக மாற்றமுறும் காலத்தில் தான் ஆளும்வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக ஆக முடியும். பிரக்ஞையான கிளர்ச்சியாக உருவெடுக்க முடியும். நமது பலத்தை நிரூபிக்க முடியும். நீதியான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

தமிழகத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தனியொரு அமைப்பால் முன்னெடுக்கப்படாதது தான். அங்கிருந்த பல சக்திகளும் தத்தமது நிகழ்ச்சிநிரலை பிரயோகிக்கவில்லை. ஒருமித்த குரலுக்காக ஒன்றுபட்டார்கள். அது வெற்றிபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் அவர்கள் பெருவாரி தமிழர் சனத்தொகையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்பது முக்கியமானது. காலிமுகத்திடல் மெரீனாவோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதே. அதில் மிகச் சிறிய பகுதிக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தான் ஒக்டோபர் 24 போராட்டத்தில் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. மலையக இளைஞர்களே அணிதிரளுங்கள் என்கிற கோஷம் மட்டுமே இதற்குப் போதாது என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். இலங்கையில் பிரதான நான்கு இனங்களில் நாம் நான்காவது இருக்கும் ஒரு இனமே. நமது புவியியல் இருப்பும் கொழும்பல்ல. நாம் மட்டுமன்றி இனம், மதம், பால், வயது வித்தியாசமின்றி ஆதரவாளர்களைத் திரட்ட வேண்டியவர்கள் நாங்கள். பெரும் மக்கள் சக்தியை ஆதரவு சக்திகளாக திரட்டும் அவசியமும் இத்தகையை போராட்டங்களுக்கு உண்டு. மலையகத்தின் பிரதான தொழிற்படையான பெண்களின் பங்குபற்றலை ஏன் ஊக்குவிக்கவில்லை, உருவாக்கவில்லை என்கிற கேள்விகளும் தவிர்க்கமுடியாதவை.

கடந்த காலங்களில் மலையகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை வெகுஜனமயப்படுத்தி அணிதிரட்டுவதில் கடும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தன. சாதாரண ஒரு சிறிய அளவிலான ஆர்ப்பாட்டத்தையோ, ஒன்று கூடலையோ செய்வதை சட்டங்கள் தடுத்தன. யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு இரும்புக்கரம் கொண்டு அவற்றை அடக்கியது. மலையகத்தில் பல இளைஞர்கள் தாம் சந்தேகத்துக்கு உள்ளாவோம், கைதுக்கு உள்ளாவோம் என்கிற பயத்துடன் பொதுவிடயங்களில் மட்டுப்படுத்தியே இயங்கினர்.


சாதாரண சமூக, பண்பாட்டு விடயங்களைக் கூட ஒழுங்குசெய்வதில் நிறைய தயக்கம் இருந்தன. இதனால் மலையகத்தின் தொழிற்சங்கப் பிரச்சினைகள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் கூட ஸ்தம்பிதமானது. பின்னடைவை சந்தித்தது.

கருங்காலிகள் ஜாக்கிரதை

வெறும் முகநூல் செல்பிக்காக கூடிக்கலைந்து போகும் ஒன்றாக இது அமைந்துவிடக்கூடாது. ஆளும்வர்க்கமும், முதலாளிமார் சம்மேளனமும், நமது அரசியல் தலைவர்களும் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அல்லது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த என்ன நடவடிக்கை என்பதை யார் முடிவுசெய்வது, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முடிவை நடைமுறைப்படுத்த உரிய சக்திகளை முகாமைப்படுத்தி முன்னெடுக்கும் வலிமை உண்டா? அதற்கான வழிகளை உருவாக்கியாயிற்றா? இது வெறும் ஒரு ஆர்ப்பாட்டமாக சுருங்கிவிடப்போகிறதா? அல்லது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படப் போகின்றதா?

நமது சிக்கல்களுக்கு தீர்வு தேடும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளாது முறையான திட்டமிடலுடன், பொறுப்புணர்வுடன் இவற்றை ஒழுங்கமைப்பது முக்கியம். இவை பிசுபிசுத்து சப்பென்று போய்விடச்செய்ய முடியாது. 

சுயவிளம்பரத்துக்காகவும், ஆர்வக்கோளாறாலும், தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகவும், சீசனுக்கு முளைத்து காணாமல் போகும் அமைப்புகளாகவும் இவை சுருங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய சக்திகளும் இதில் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.

இவை ஒழுங்காக ஒப்பேற்றாவிட்டால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சீரியசான எழுச்சிகளுக்கும் மக்களை ஒன்று திரட்டுவது கடினமாகிவிடும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது எந்த சீரியசான முன்னெடுப்புகளுக்கும் அவசியமானது.

ஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி !? - என்.சரவணன்


இலங்கை சுதந்திரம் தொடக்கம் எத்தனையோ ஆட்சி கவிழ்ப்பு சதிகள் அரசியல் ராஜதந்திர மட்டத்திலும், ஆயுதப் போராட்டத்தின் மூலமும் முயற்சி செய்யப்பட்ட வரலாறை நாம் அறிவோம். அது போல மாலைதீவு என்கிற நாட்டையே ஆக்கிரமித்து ஆட்சியை கவிழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியும் புளொட் இயக்கத்தால் சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் (03.11.1988) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது இங்கு சொல்லும் கதை சுதந்திரத்திற்கும் முற்பட்ட கதை.

இரண்டாம் உலக யுத்தம் (1939-1945) உலக வரைபடத்தையே திசைதிருப்பிப் போட்டதுடன் அந்த யுத்தம் ஏற்படுத்திய பாரிய சரவதேச அரசியல் உறவுகளின் திருப்புமுனையையும் நாம் அறிந்திருக்கிறோம்.

யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உலக அளவில் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த நாடுகளை இந்த யுத்தக் களத்தில் இறக்கியது. காலனித்துவ நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட படையினர் பொதுநலவாய இராணுவத்தின் பெயரின் கீழ் தான் இணைக்கப்பட்டார்கள். பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவியாக அப்போது பிரித்தானிய அரசி எலிசபத் மகாராணி இருந்தார்.

2ஆம் உலகயுத்தத்தில் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்பு பிரச்சாரத்துக்காக அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டி.
இலங்கையில் இருந்தும் கரிசன் இலங்கை பீரங்கிப் படை (Ceylon Garrison Artillery (CGA)), இலங்கை பாதுகாப்புப் படை (Ceylon Defence Force (CDF)) இலங்கை காலாட் படை (Ceylon Light Infantry -CLI), இலங்கை தொண்டர் வைத்தியப் பிரிவு (Ceylon Volunteer Medical Corps) என்பன ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் போரிலும், பாதுகாப்பிலும் இறக்கப்பட்டன.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கின்ற கோகோஸ் தீவுகளில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த இலங்கை கரிசன் பீரங்கிப் படை அங்கிருந்த பிரித்தானிய படையினருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்தது. அந்தக் கிளர்ச்சி ஒரு வகை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கான ஒரு தொடக்கமாக கருதப்பட்டது. எவ்வாறாயினும் இறுதியில் அந்த சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட இலங்கைப் படையினர் பலர் பிரித்தானிய விசேட நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லபட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரே இராணுவ சதி முயற்சியாக இந்த சம்பவம் பதிவானது.

ஜப்பானின் பலம்

1941 டிசம்பர் ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கி பலத்த சேதத்தை உண்டுபண்ணியதோடு பசுபிக், மற்றும் ஆசிய பிராந்தியங்களில் தனது ஆக்கிரமிப்பையும் செல்வாக்கையும் வேகப்படுத்தியது. அதே டிசம்பர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஹொங்கொங்கில் போர் தொடுத்து அதையும் கைப்பற்றியது.

1942 பெப்ரவரியில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் கைப்பற்றுகிறது. பிரித்தானியா இவற்றை பெருத்த தோல்விகளாக கருதியது.  2ஆம் யுத்தத்தில் அது மிகவும் மோசமானதொரு தோல்வி என்று அன்றைய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டார்.

அதே பெப்ரவரியில் ஜாவா தீவுகளில் ஜப்பான் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியாவுக்கும் அதன் நேச நாட்டுப் படைகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜப்பானிய தற்கொலைப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலின் மூலம் பல போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.

அதே ஆண்டு ஏப்ரலில் பிரிட்டிஷ் காலனித்துவ நாடான நமது இலங்கையின் கொழும்பு, மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் பிரித்தானிய போர்க்கப்பல்கள் அழித்து மூழ்கடிக்கப்பட்டன.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவத்தை (INA) அமைத்து அவர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இந்திய வீரர்களை களமிறக்கியிருந்த தருணம் அது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்து எதிராக ஜப்பானுடன் சேர்ந்து 1943இல் நடத்திய கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் ஜப்பான் சக்கரவர்த்தி ஹிடேகி தோஜோ, சுபாஷ் சந்திரபோசுடன் பிலிப்பைன்ஸ், மியான்மார், தாய்லாந்து, மஞ்சூரியா, சீனத் தலைவர்கள்.
ஜே.ஆரின் வகிபாகம்?

இப்படிப்பட்ட பின்னணியில் தான் இலங்கையின் அரசியலில் அன்று தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிவில் குழுக்கள் மத்தியில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை விடுவிக்க ஜப்பானால் உதவ முடியும் என்கிற கருத்து தலைதூக்கியது. அதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார்கள். இந்த காலப்பகுதியில் இளம் அரசியல் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜப்பான் ராஜதந்திரிகளுடன் தொடர்புகொள்கிறார். ஆனால் இந்த முயற்சியை முதிர்ந்த தலைவரும் பிரிட்டிஷ் விசுவாசியுமான டீ.எஸ்.சேனநாயக்க எதிர்க்கிறார். ஜே.ஆருக்கு புத்திமதி கூறித் தடுத்தார். ஜே.ஆருடன் சேர்ந்து டீ.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லியும் இந்த சதியில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பிறகாலத்தில் அவுஸ்திரேலிய இராணுவ சஞ்சிகை (The Indian Connection at the AWM - Nr.97) ஒன்று தெரிவிக்கிறது.

கோகோஸ் தீவுகள் ஜப்பானின் போர் நடவடிக்கைகளை கண்காணித்து, எதிர்க்கும் கேந்திர அரணாக பிரித்தானியாவுக்கு இருந்துவந்தது. அருகில் இருந்த நாடு என்கிற வகையில் அங்கு இலங்கையில் இருந்து கரிசன் பீரங்கிப் படையை உதவிக்காக ஈடுபடுத்தியிருந்தது.

ஜப்பான் நம்மை விடுவிக்கும்

அங்கு பிரிட்டிஸ் கப்டன் ஜோர்ஜ் காடினர் என்பவரின் தலைமையில் இலங்கைப் படையினர் 56 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இலங்கைப் படையைச் சேர்ந்த கிரேசன் பெர்னாண்டோ என்பவரின் தலைமையில் அந்த தீவை ஜப்பான் இராணுவம் கைப்பற்றுவதற்கான சதிகளை செய்கிறார்கள். அதற்காக 08.05.1942 ஆம் திகதியை நிர்ணயிக்கிறார்கள். கிரேசன் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக இலங்கைப் படையினர் 30 பேர் தமது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

கிரேசன் லங்கா சமசமாஜ கட்சியின் ஆதரவாளர். ஆனால் அக்கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு ட்ரொஸ்கியவாதி. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

முதற் கட்டமாக அங்கிருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதிகள் இருவரை கைது செய்து அவர்களின் மூலம் அங்கிருக்கும் ஏனைய படையினரை நிராயுதபாணிகளாக்கி அவற்றை கைப்பற்றுவதே திட்டம். இந்து சமுத்திரத்தில் இத்தீவுக்கு சற்று தொலைவில் இருந்த கிறிஸ்மஸ் தீவை அப்போது மார்ச் 3 அன்று ஜப்பான் கைப்பற்றியிருந்தது. ஆக கோகோஸ் தீவு கைப்பற்றப்பட்டதும் கிறிஸ்மஸ் தீவிலிருந்த ஜப்பான் படையினருக்கு சமிக்ஞை கொடுப்பதன் மூலம் ஜப்பானை வரவழைத்து ஒப்படைப்பது, அதன் பின்னர் ஜப்பானின் உதவியின் மூலம் இலங்கையை பிரித்தானியாவிடமிருந்து விடுவிப்பது என்பதே திட்டம்.

தோல்வியில் முடிந்த புரட்சி

ஆனால் மார்ச் 8 ஆம் திகதி முதல் கட்ட நடவடிக்கையின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. சரியான இலக்கை தாக்கமுடியாது போனமையாலும், தானியங்கி துப்பாக்கிகள் சரியாக தொழிற்படாததாலும் அந்த சண்டை தோல்வியில் முடிகிறது. இலங்கைப் படையினனான சமாரிஸ் ஜயசேகர என்பவரும் அங்கு கொல்லப்படுகிறார். பிரித்தானிய படையினரும் காயமுற்றனர்.

கிளர்ச்சி தோல்வியுற்ற நிலையில் கிரேசன் பெர்னாண்டோ தலைமையிலான குழு சரணடைந்தது. கொழும்பில் வைத்துத் தான் சரணடைவும் விலங்கிடப்படலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். ஆனால் ஆனால் அது நடக்கவில்லை. சில வேளை அவர்கள் உரை நிகழ்த்தி தேசபக்தர்களாக காட்ட முயற்சிப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கக் கூடும். அவர்கள் அனைவரும் இலங்கைக்கு கைதிகளாக அனுப்பப்பட்டார்கள்.

சமாரிஸ் ஜயசேகர (வயது 23) உள்ளிட்ட ஏழு பேருக்கு கோகோஸ் தீவிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டு மே 10 அன்று இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். 1950 ஆம் ஆண்டு அவ்வுடல்கள் எடுக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள கிராஞ்சி போர் நினைவு மயானத்தில் மீளவும் புதைக்கப்பது.

ஏனையோருக்கு மன்னிப்பு வழங்கும்படி அன்றைய சிங்கள அரசியல்வாதிகள் பலர் பிரித்தானியாவைக் கோரியபோதும் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூ கல்டேகொட் (Sir Andrew Caldecott) அக்கோரிக்கையை நிராகரித்தார். கிரேசன் பெர்னாண்டோவின் தந்தை அன்றைய சிவில் பாதுகாப்பு ஆணையாளராக இருந்த சேர் ஒலிவர் குணதிலக்கவுக்கூடாக இராணுவத் தளபதி சேர் கொப்றி லேட்டனுக்கூடாக முயற்சித்தார். சேர் ஒலிவர் குணதிலக்க இந்த விவகாரத்தைக் கையாண்ட போது தன்னை சேர் கொப்றி லேய்ட்டன் (Sir Geoffrey Layton) “கறுப்புத் தேவடியா மகன்” (Black bastard) என்று திட்டியதை முறையிட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.

கிரேசன் பெர்னாண்டோ தனக்கு அப்படிப்பட்ட ஒரு மன்னிப்பு தேவையில்லை என்று நிராகரித்தார். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு பெற்று அவமானப்படமாட்டேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1942 ஓகஸ்ட் மாதம் மூன்று வெவ்வேறு தினங்களில் கிரேசன் பெர்னாண்டோ (ஓகஸ்ட் 5), கார்லோ ஒகஸ்டின், பெனி த சில்வா ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்லப்பட்டார்கள். அக்கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியாகிய உண்மைகள்
கிரேசன் பெர்னாண்டோவும் அவரின் தோழர்களும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இன்று வரை முன்நிறுத்தப்படவில்லை. ஆனால் உலகளவில் இந்த சம்பவம் “கொகோஸ் தீவு கிளர்ச்சி” (Cocos Islands mutiny) என்கிற பேரில் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களை 2012 ஆம் ஆண்டு ஒரு “இரண்டாம் உலகப்போரில் தேசப்பற்றற்றவர்களின் கதை” (Unpatriotic History of the Second World War) என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டார் ஜேம்ஸ் ஹார்ட்பீல்ட் என்பவர் அதிலும் இந்த சம்பவம் தகவல்பூர்வமாக (பக்கம் 261-262) தொகுக்கப்பட்டிருக்கிறது.

நொயல் குரூஸ் என்பவர் எழுதிய “கோகோஸ் தீவு கிளர்ச்சி” (The Cocos Islands Mutiny - Noel Crusz – 2000 dec) என்கிற நூல் இது பற்றி விரிவாக பேசும் இன்னொரு தனி நூல். அதில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சமசமாஜிகளின் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அதுபோல படையில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் துவேசத்தால் பாதிக்கப்பவர்கள். ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக போராட தொண்டர்களாக அவர்கள் முன்வந்தபோதும் சக ஆசிய நாட்டவர்களுக்கு எதிராகவும் போராடத் தள்ளப்பட்டார்கள்.”
அந்த நூலில் இன்னொரு முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து செயற்பட்ட சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் இலங்கைப் படையினரும் இருந்தார்கள் என்றும் அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் சேர் ஜோன் கொத்தலாவலவின் சகோதர முறையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார். 

நொயல் குரூஸ் இலங்கையில் காலி பிரதேசத்தில் பிறந்து 1974இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர். ஆய்வாளராகவும், பத்திரிகையாளராகவும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றியவர். 

இலங்கையைச் சேர்ந்த இந்த வீரகளுக்கு நேர்ந்த சம்பவங்களால் பிரித்தானியாவுக்கு எதிரான பொதுமக்களின் மனவுணர்வு மேலும் மோசமடைந்தது. அதேவளை அன்றைய போர்க்கால செய்தித் தணிக்கை போதிய அளவில் இந்த செய்தி மக்களிடம் பொய் சேர்வதற்குத் தடையாக இருந்ததால் அது ஒரு மக்கள் மத்தியில் எழுச்சியொன்று உருவாக வாய்ப்பிருக்கவில்லை.

இக்கிளர்ச்சியின் பின்னணியில் அவர்களைத் தூண்டிவிட்ட அல்லது, அவர்களை பின்னணியில் இருந்து இயக்கிய அரசியல் தலைவர்கள், சக்திகள் யார் என்பது பற்றி அப்போது பகிரங்கமாக உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை.

ஆனால் பிற்காலத்தில் அப்பேர்பட்ட ஒரு ராஜதந்திர சதியில் ஜப்பானுடன் ஜே.ஆர். ஈடுபட்டிருந்தார் என்கிற உண்மைகள் வெளிவந்தன. பல இடங்களிலும் பதிவாயின. அதுபோல ஜப்பானுக்கு ஜே.ஆர் செய்த இன்னோர் மகத்தான உதவிக்காக இன்றும் ஜப்பானிய மக்கள் ஜே.ஆரை வணங்குகிறார்கள். ஜே.ஆரின் நினைவு இல்லம், சிலை என்றெல்லாம் அங்கு வைத்திருக்கிறார்கள். அதனை தனியாக அடுத்த வாரம் பார்ப்போம்.

மைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்! - அஜீவன்


இலங்கை ஜனாதிபதியை படுகொலை செய்ய றோ முயல்கிறது எனும் செய்தி வந்ததும் இலங்கை மக்கள் சற்று அதிரவே செய்தார்கள். இது குறித்து அதிகமாக ஊடகவியளாளர் சந்திப்புகளை நடத்தியவர் கம்மன்பிலதான். கம்மன்பிலவின் வாயிலிருந்து இந்த கொலை முயற்சிக்கு பின்னால் இருப்பவர் ரணில் எனும் விடையை பல ஊடகங்கள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தன. மகிந்த தரப்பு கூட்டு எதிர்க் கட்சியும் ரணிலை இறுக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இவர்கள் மாத்திரமல்ல ஐதேகவுக்குள் ரணிலின் எதிரிகளாக நேரம் வரும் வரை காத்திருக்கும் ஒரு சிலரும் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்த காத்திருந்தார்கள். நீருக்கடியில் பந்தம் கொண்டு போவது போல ரணிலை மாட்ட தருணம் பார்த்தார்கள்.

ரணில் அரசியல் செஸ் விளையாட்டில் சூரன். இதைத்தான் சிலர் ரணில் நரி என்கிறார்கள். இவருக்கு இந்த ஞானம் 40 வருட பாராளுமன்ற வளாகத்துக்குள் வாழ்ந்தே வந்த அனுபவம்தான். குழி எங்கே மேடு எங்கே என பார்க்கும் திறன் ரணிலுக்கு பிறப்பிலே வாய்ந்துள்ளது என தெரிந்தோர் சொல்வார்கள். நிலத்துக் கீழே நீரோடை தெரியும் ஆள் என பழகியோர் சொல்வார்கள். ரணிலுக்கு தெரியும் தன்னைச் சுற்றி சில சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டு சுத்துகின்றன என்பது. இதிலிருந்து மீளவே இந்த அரசியல் ஆட்டத்தை ரணில் கையிலெடுத்தார்.

ரணில் டெல்லி செல்வதற்கு முன், மைத்ரி டெல்லி சென்று மோதியை சந்தித்திருந்தார். அப்போது மைத்ரி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தருவதாக ஒப்புக் கொண்டு விட்டு வந்தார். அதன் நன்றிக் கடனாக மோடி மைத்ரி என்ன கேட்டாலும் செய்ய காத்திருப்பதாக ஒரு தகவலை சொன்னார். இது ஒரு பெரிய வார்த்தை. இதை அறிந்த ரணில் அரசியல் சதுரங்க விளையாட்டையொன்றை கையிலெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். மைத்ரியின் டெல்லி பயணத்தின் போது துறைமுக விடயம் குறித்து மைத்ரி, ரணிலுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவிக்காதிருந்தார். அந்த வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, மைத்ரி போட்ட கேம் அது. அது எப்படியோ ரணிலுக்கு தெரிய வந்தது. இதை வேறு விதமாக கையாண்டு மைத்ரியை பலவீனப்படுத்த ரணில் இன்னோரு திட்டத்தை தீட்டினார்.

மைத்ரி இந்தியாவுக்கு காதும் காதுமாக திரைமறைவில் கொடுக்க ஒப்புக் கொண்ட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு கொடுப்பதற்கான கெபினட் பேப்பர் ஒன்றை தயாரித்து, அதை கெபினட்டில் ரணில் முன் வைத்தார்.அதை மைத்ரி சற்றும் எதிர்பாக்கவே இல்லை. இப்போது அதற்கான அனுமதி வெளிப்படை தன்மையாக அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிர்ந்து போனார் மைத்ரி. தனது திட்டம் வேறு பக்கம் திசை திரும்பியதால் சினம் கொண்டார்.

சாதாரணமாக மைத்ரி போன இடமெல்லாம் மக்களை கவர வாயில் வந்ததை சொல்லும் ஒரு மனிதர். அவர் போகும் இடத்திலுள்ள சனத்தை குசிப்படுத்தி தன்னை ஒரு வீரராக காட்டிக் கொள்வதில் அதிக பிரியமானவர். ஐநாவுக்கு போய் அங்குள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஒன்றை பேசுவார். இன்னொரு இடத்தில் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இன்னொன்றை பேசுவார். அந்த நேரத்தில் அவரது பேச்சு திறனால் பலரைக் கவர்ந்து விடுவார். அது செயல்படுத்த முடியுமா இல்லையா எனும் கவலை அவரிடம் இருப்பதில்லை. அது சாத்தியமா என்பது கூட அவருக்கு கவலையில்லை. இதை பலரும் உணர்ந்துள்ளார்கள். இலங்கையில் தேசியம் பேசுவார். தேசத்தின் சொத்துகளை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்பார். ஆனால் வெளிநாடு போனால் அவர்கள் என்ன கேட்டாலும் தர சம்மதிப்பார். அங்கு இன்னொரு முடிவு எடுப்பார். நாட்டில் இன்னொன்று பேசுவார். இந்த பலவீனம் அவரிடம் உண்டு. இதை ரணில் நன்கு அறிவார். அதை அறிந்துதான் ரணில் இப்படி கெபினட் பேப்பரை சமர்ப்பித்தார். இதனால் மைத்ரியின் கோபம் உச்சத்தை அடைந்தது. வந்த கோபத்தில் ரணில் ஒப்படைத்த கெபினட் பேப்பரை கையிலெடுத்து கசிக்கி வீசி எறிந்தார்.

இதை கண்டதும் மகிந்த சமரசிங்க எழுந்தார். மைத்ரிக்கு ஆதரவாக பேசுவது போல ரணிலை தாக்கி பேசத் தொடங்கினார். அது ரணிலை தாக்குவது போல இருந்தாலும், அதற்குள்ளாக மைத்ரி இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை காயப்படுத்துவதாகவே இருந்ததாம். இது ஒருவரை திட்டுவது போல இன்னொருவரை திட்டும் விதம்.அது புரிந்தோருக்கு மட்டுமே புரியும். இதைத்தான் ரணில் எதிர்பார்த்தார். ரணிலுக்கு தேவையான தீப்பந்தம் வீசப்பட்டு விட்டது. அது நீண்டு கொண்டு போன போது, ரணில் மகிந்த சமரசிங்கவை "shut up and sit" எனச் சொல்லி, அவரது பேச்சை தடுத்துள்ளார். இதுபோதும் என்பதே அதன் அர்த்தம்.

மகிந்த சமரசிங்க உட்கார்ந்ததும், ராஜித்த சேனாரத்ன எழுந்து தொடர்ந்து பேசியுள்ளார். அவருக்கு தெரியும் எங்கே எது பேச வேண்டும் என்பது . நல்லாட்சியின் முக்கிய வகிபாகத்தில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் பேச வேண்டியதை பேசிவிட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே தேவைப்பட்டது. ஒருவரை சினமூட்டி வாயை கிளறுவதாக இருக்கலாம் என்கிறார்கள் அங்கே இருந்த சிலர்.

இந்த வாக்கு வாதங்கள் முத்திக் கொண்டு போன போதுதான் " றோ என்னைக் கொலை செய்ய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் " என்றிருக்கிறார் மைத்ரி. தவளை தன் வாயால் கெடும் நிலைக்குள் இங்கேதான் மைத்ரி விழுந்தார். எங்கேயோ இருந்த குப்பையை தன் தலையில் கொட்டிக் கொண்டார். இதன் பார தூரத்தை மைத்ரி சிறிதும் நினைத்திருக்க மாட்டார். நாலு சுவருக்குள் அடங்கிவிடும் என நினைத்திருப்பார். அது அப்படி நாலு சுவருக்குள் அடங்கவில்லை. இந்த வாக்குவாதங்களை சில கெபினட் அமைச்சர்கள் ஒலி - ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் சிலரது பெயர்கள் வெளியாகியுள்ளது. ஒருவர் மங்கள சமரவீர. அடுத்தவர் மலிக் சமரவிக்கிரம. இன்னொருவர் வஜிர. மேலும் சிலரும் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை தெரியாமல் பெறப்படும் சாட்சிகள்.

கெபினட் மீட்டிங் முடிந்தது. ஆனால் ........

இந்த விடயம் உடனடியாக ஐதேகவின் ஆதரவு சிங்கள ஊடகவியளாளர்களுக்கு தகவலாக கசிய விடப்பட்டது. சிலர் அதை பகிர அஞ்சினார்கள். அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒரு சிலர் நம்பிக்கையின் நிமித்தம், ஏனையவர்களை தொடர்பு கொண்டு பேசி , உறுதி செய்து கொண்டு வெளியிட்டார்கள். அதன் பின்னரே இந்து பத்திரிகை அந்த செய்தியை வெளியிட்டது. இந்து செய்திதான் சர்வதேச மட்டுத்தில் அதிர்ச்சியை கொடுத்தது.

அந்த சூட்டோடு சூடாக ரணில் டெல்லிக்கு பறந்தார். காண வேண்டியவர்களை சந்தித்தார். எமது நாட்டு ஜனாதிபதி கொல்ல றோ சதி செய்கிறதென ஜனாதிபதியே சொல்கிறார் எனும் தீப்பொறியொன்றை மெதுவாக தட்டிவிட்டார். மைத்ரி இலங்கையில் ஊரெல்லாம் போய் எதை பேசினாலும் மக்கள் சிரித்து விட்டு மறந்து போவார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், இன்னொரு நாட்டின் இறைமைக்கு பங்கம் வரும் விதத்தில் இப்படியான ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வு துறைக்கு எதிராக கெபினட்டில் பேசினால் அது இரு நாடுகளுக்குள் ஒரு மோதலை தோற்றுவிக்கும். அதுவே இங்குள்ள பெரிய பிரச்சனை.

அதை மறைக்க ராஜித்த அப்படி ஜனாதிபதி சொல்லவில்லை என அரச ஊடக சந்திப்பில் சொல்லி பூசி மெழுக முயற்சி செய்தார். அதை சில ஊடகவியலாளர்கள் விடாமல் தொங்கி கேள்வி கேட்டார்கள். அதுபோதாதென இந்து பத்திரிகை ஊடகவியளாளர், நான்கு அமைச்சர்கள் ஊடாக அதை உறுதி செய்த பின்னரே செய்தியை எழுதி அனுப்பினேன் என தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் தனது டுவிட்டர் பகுதியில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் என அடித்து சொன்னார். இந்து என்பது சர்வதேச மட்டத்தில் அனைவரும் பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகை. எங்கோ தொங்கிய முட்டி தலையில் கவிழ்ந்தது.

மைத்ரி , தான் விட்ட தவறை உணரும் போது, கேம் ஓவராகும் நிலைக்கு வந்திருந்தது. அவர் மேல் இருந்த இந்தியாவின் அல்லது மோடியின் நன் மதிப்பு கேள்விக் குறியாகியிருந்தது. தவறை உணர்ந்த மைத்ரி, பேசி சரி செய்ய , பல முறை மோடியை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள முயன்றார். அது தசரா பண்டிகை காலம். அந்த விழாவில், நேரத்தை மோடி கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் உடனடியாக மோடி , மைத்திரியின் தொலைபேசிக்கு வரவில்லை. சினம் கொண்டிருப்பார் அல்லது அடுத்தவர்களது ஆலோசனைக்காக காலம் எடுத்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அதன் பின்னரே அவர் மைத்ரியுடன் தொலைபேசி வழி பேசினார்.

மைத்ரி நடந்ததை சொன்னார். மைத்ரி சொன்னவற்றை மோடி கேட்டு விட்டு "வார்த்தைகளை கண்டபடி விட வேண்டாம்" எனச் சொன்னதாக சொல்கிறார்கள்.

எது எப்படியோ ஒரு வார்த்தை இரு தேச தலைவர்களை தூர விலக்கியுள்ளது. ஆசியாவின் பலமான புலனாய்வு துறையான றோவின் கோபத்தை மைத்ரி தேவையில்லாமல் சம்பாதித்துள்ளார். ஒருவருக்கு வெட்டிய குழியில் தாமே விழுவதென்பது சில நேரங்களில் மட்டுமே நடக்கும். இதுவும் அதுபோலத்தான்.

அரசியல் என்பது கத்திக்கு மேல் நடப்பதல்ல. கத்திகளுக்கு கீழ் நடப்பது.

அஜீவனின் முகநூல் பதிவிலிருந்து.

மாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன?


ஒப்பந்த பேச்சுவார்த்தை மப்பும் மந்தாரமுமாக இருக்குமானால்

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன தலைமைப் பணிமனையில் நடந்த இப்பேச்சுவார்த்தை எதிர்வுகூறல்களை மெய்ப்பித்து தோல்வியிலேயே முடிந்தது. கம்பனித்தரப்பு 15 வீத சம்பள அதிகரிப்புக்கு மட்டுமே இணங்கியது. இதன்படி தற்போதைய அடிப்படைச் சம்பளமான 500 ரூபா 575 ரூபாவாக மாறும். ஆனால் இதனைக் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் மறுதலிப்புச் செய்தன. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த இ.தே.தோ.தொ.ச பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், 1000 ரூபாவுக்குக் குறைந்த (அடிப்படைச் சம்பளம்) சம்பளத்தை ஏற்கப்போவதில்லை என்றார். இதனையே இ.தொ.கா.வும் வலியுறுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (12) நடைபெறவிருந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாளை (15) திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் சம்மேளனத்தின் இந்த அறிவிப்பால் தொழிற்சங்கத் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நாளை பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின் பேச்சு ஆரம்பித்து அது நிறைவடையும் காலப்பகுதி வரையான நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக எழுத்துமூலம் உத்தரவாதமளிக்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் சம்மேளனத்திற்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.

பொதுவெளியைப் பொறுத்தவரை நியாயமான சம்பள உயர்வு ஆயிரத்திலிருந்து 1281 ரூபா வரை அவசியம் என்னும் கருதுகோளை முன்வைக்கின்றது. ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி சம்பள அதிகரிப்பு ஆயிரத்தை எட்டப்போவதில்லை என்று தெரிகின்றது. இதேநேரம் அற்பசொற்ப தொகையாக வெறும் 50, 60 ரூபாய் அதிகரிப்பினை இம்முறை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லை என்பதையே முன்னெச்சரிப்பு நடவடிக்கையான கவனயீர்ப்புப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இ.தொ.கா. இதை விமர்சித்தாலும் கூட கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இவ்வாறான போராட்டங்களைத் தமது தரப்பு வாதங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம். ஏனெனில் கம்பனி தரப்பு வழமைபோல தமது சாகசங்களைக் காட்டி கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ளவே முயற்சிக்கும்.

இதுவரை காலமும் இதுவே நடந்தது. ஆனால் இனி அப்படி செய்துவிட்டுத் தப்பிவிட முடியாத சூழ்நிலை மலையகத்தில் உருவாகியுள்ளது. குறைந்தத் தொகைக்கு கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்து வேறு யார்மீதாவது பழியைப்போட இந்தத் தொழிற்சங்கங்களால் இயலாது போகும். இச்சம்பளம் அதிகரிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இ.தொ.கா. மட்டுமே இருக்கின்றது என்பதை அதன் உறுதிமொழிகள் சுட்டுகின்றன. இணக்கம் காணப்படும் தொகையைப் பொறுத்துத்தான் யார் வகையாகச் சிக்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அமையும்.

கடந்தாண்டுகளை விட இவ்வாண்டு பொருளாதாரச் சுமை அதிகரிப்பு என்பது மலையக மக்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இமை மூடித்திறக்குமுன் அதன்விலை எகிறிவிடுமென்ற அச்சம் பாடாய்ப்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் எல்லாவித அத்தியாவசியப்பொருட்கள் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. போக்குவரத்துச் செலவைக் காரணம் காட்டி கண்டபடி பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுவதால் அரசின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் என்பது கைக்குக் கிட்டாத சமாச்சாரமாகிப் போயுள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் பஸ், ரயில் பயணக்கட்டண அதிகரிப்பு எரிவாயு விலைக் கூட்டல் என்பன சாமானியரை சகட்டு மேனிக்குப் பாதிக்கின்றன. உணவுப் பண்டங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேனீர் 20 ரூபாவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்கள் இன்னும் நுகர்வோருக்கு நெருக்கடி தருவதாக அமையலாமென ஊடகங்கள் எச்சரிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கப்படும் அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களான சீனி, மா, எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் எழலாம் என்னும் ஐயம் தோன்றியுள்ளது. இதனால் பெருந்தோட்ட மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.

ஏனெனில் பிற துறைசார் ஊழியர்கள் விலைவாசி அதிகரிப்புக்கேற்ப வாழ்க்கைச்செலவு புள்ளி கொடுப்பனவுகளை பெறும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாடு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இப்போது இல்லை. 1992 இல் அரசு துறை பாரமரிப்பின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் யாவும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதனையடுத்து சம்பள நிர்ணய சபை மூலம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட முறைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் வாழ்க்கைச் செலவு புள்ளிக் கொடுப்பனவுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கூட்டு ஒப்பந்தத்துக்குள் கெண்டுவரப்பட்டது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம் இதுவரை காலமும் வாழ்க்கைச் செலவு புள்ளியைச் சமாளிக்கும் வண்ணம் சரியான சம்பள உயர்வை வழங்கவே இல்லை. எனவே தான் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு எதிரான ஒரு உணர்வு தோட்ட மக்களிடம் கிளம்பியுள்ளது. இன்று அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரம் ரூபாய். தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. 1999க்குப் பின் கடந்த 19 வருடங்களில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் 399 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் 21 ரூபா சம்பள அதிகரிப்பு மட்டுமே இவர்களுக்கு கிடைத்துள்ளமை அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இரண்டு கோரிக்கைகளையே முன்வைக்க முடியும். முதலாவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி அதிகரிப்பு வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேதன உயர்வு வேண்டும். அப்படி இல்லாவிட்டல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் விலை குறைப்பு என்பது சாத்தியமானதாக இருக்கப்போவது இல்லை. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் அரசாங்கத்துக்கு ஓர் இக்கட்டான நிலையை எற்படுத்தியிருக்கின்றது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வினாலும், இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான வர்த்தக பின்புலம் காரணமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை தொடருமானால் மேலும் மேலும் பொருட்களின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே பொருளியல் வல்லுனர்களின் கருதுகோள் காணப்படுகின்றது. இக்கருது நிலை மெய்ப்பெறும் நிலையில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு எஞ்சியிருப்பது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள அதிகரிப்புப் பெற்றுத்தரும் வழியே ஆகும். ஆனால் அந்தக்காரியம் உரியமுறையில் ஆகுமா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி. வழமைபோல நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிதரப்பு இணங்காது போய்விட்டால் அதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப்போகிறது? பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள்? கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா? என்றெல்லாம் கேள்விகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளி கட்சி. அதனால் அரசாங்கத்தோடு பேசி சம்பள அதிகரிப்பை வாங்கிக் கொடுக்கலாமே என்று இ.தொ.கா. கூறுகின்றது. உண்மையில் த.மு.கூட்டணி இதுகுறித்து தேர்தல்கால மேடைகளில் பேசியதாக ஞாபகம். கூட்டு ஒப்பந்தம் தோல்வியுறும் பட்சத்தில் த.மு.கூட்டணி இப்படியொரு அழுத்தத்துக்கு தள்ளப்படவே செய்யும்.

இதே நேரம் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக தாம் ஜனாதிபதியோடு பேசவிருப்பதாக இ.தொ.கா தெரிவித்திருந்தது. மலையக சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவெனில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி ஆராயவென ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும்படி அரசாங்கத்துக்கு ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது? ஏனைய அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவசர அவசரமாக அதுபற்றி ஆராய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பள உயர்வுக்கான பரிந்துரையை வழங்குவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் தோட்ட மக்கள் வாட்டமுற்ற நிலையில் போராட்டம் நடத்தினால் எவருமே ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதற்குக் கூட்டு ஒப்பந்தமே அடிப்படையில் வைக்கிறது ஆப்பு.

எனவேதான் இம்முறை கூட்டு ஒப்பந்தம் மூலமான சம்பள அதிகரிப்பு சறுக்கினால் இறுக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களைப்போல சாக்குப் போக்குகளைச் சொல்லி சமாளிக்கக்கூடிய நிலைமை இன்று இல்லை. ஏனெனில் ஒன்று சம்பளத்தைக் கூட்டு. அல்லது சாமான் விலையைக் குறை என்று முறை வைத்துக் கோரிக்கை எழுப்பத் தலைப்பட்டு விட்டார்கள் தோட்ட மக்கள். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்பதே பொதுவெளி எதிர்பார்ப்பு. தவிர பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கூறுவதுபோல தற்போதைய கூட்டு ஒப்பந்த முறைமையைக் கைவிட்டு புதிய முறைமை யொன்றைக் கண்டு பிடிப்பதே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து செயற்படும் பக்குவம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வரவேண்டிய காலக்கட்டம் இது.

கடந்த 25 வருடகால பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி உற்பத்தித்திறன் மிக்கதும் வாழ்வாதார மேம்பாடு கொண்டதுமான புத்தெழுச்சி பெற்ற துறையாக இதனை மாற்றியமைப்பது அவசரத் தேவையாக ஆகிவிட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் தலையை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுமையை இறக்கிவைக்க ஏற்ற வழிவகைகளைத் தேடுவதே சாலச்சிறந்தது.

பன். பாலா

நன்றி - தினகரன்

கறுப்புச் சட்டைப் போராட்டத்தில் அணிதிரள்வோம்! அணிவகுப்போம்!


மலையக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சகலரும் அணிதிரள்வோம் தோழர்களே!

2000ஆம் ஆண்டுக்குப் பின் மலையக அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் வெகுவாக பலவீனப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் தொண்டமான் காலத்தில் மலையக வாக்கு வங்கிக்கு இருந்த மரியாதையும், பலமும் அதன் பின்னர் இல்லை என்பது கசப்பான உண்மை.

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் பேரம் பேசும் ஆற்றலும் பலவீனமடைந்துபோனது. பேரினவாத அரசு நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலை தன்னளவில் அதிகரித்துக்கொண்டது.

ஆளும் வர்க்கம் முதலாளிகளின் நலன்களுக்காக சொந்த உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவு கொடுப்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தொழிலாளர்களின் பலத்தை நிரூபித்து ஆளும் வர்க்கத்திற்கு மீண்டும் நமது பலத்தைக் காட்ட ஒன்று திரள வேண்டியிருக்கிறது.

இன, மத, மொழி, சாதிய, கட்சி அரசியல் வேறுபாடின்றி பரஸ்பரம் தோள்கொடுத்து இதனை சாத்தியப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் ஒன்று குவிப்போம் தோழர்களே.

அணிதிரள்வோம், அணிவகுப்போம் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.

நம்பிக்கைத் துரோகத்துக்கு எதிராக, ஒடுக்குமறைக்கு எதிராக, ஏமாற்றத்துக்கு எதிராக, காலங்கடத்துவதற்கு எதிராக ஒன்று திரள்வோம்.

எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை (விடுமுறை தினம்) காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முடிந்த வரை கறுப்பு நிறத்தில் அணிந்து வருமாறு கோருகிறோம்.


"நமது மலையகம்"

"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முடியும்!"


பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மாநாட்டில் தீர்மானம்

கம்பனிகளின் இலாபங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகளை நோக்கும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை உடனடியாக 1300 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச் சம்பள அதிகரிப்பை வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகளின் நிதி நிலைமை இருக்கின்றமையும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச அதிகரிப்பாக அதனை வழங்க வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தொடர்புடைய மேலும் பல தீர்மானங்கள் குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வலியுறுத்திய குறித்த மக்கள் மாநாடு கடந்த 13 ஆம் திகதி ஹட்டனிலுள்ள கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உயர்நீத்த போராளிகளுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமான இம்மாநாட்டிற்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மலையக சமூக நடவடிக்கை குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி நேரு கருணாகரன், பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சு. விஜயகுமார், மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ், பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் அழைப்பாளர் சுதர்ம மகாராஜன், பொருளியலாளர் கி. ஆனந்தகுமார், கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அறிமுக உரையை பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றிய அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். பொருளியலாளர் ஆனந்தகுமார் 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க இயலாமை மற்றும் வெளிவாரி உற்பத்தி முறையில் உழைப்புச் சுரண்டல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது பண வீக்கத்தின் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதும் அதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் கம்பனிகளின் இலாப அதிகரிப்பு தேயிலை விலையின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் மற்றும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வெளியாள் உற்பத்தி முறை கம்பனிகளுக்கு பெற்றுக்குக் கொடுக்கும் அசாதாரணமான இலாபத்தையும் நாட் சம்பளம் மற்றும் வெளியாள் உற்பத்தி முறையில் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் கழிவுகள் என்பவற்றை ஒப்பிட்டு எடுத்துரைத்தார்.

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், 'பெருந்தோட்டக் கம்பனிகளின் கணக்கறிக்கைகளும் சம்பள உயர்வை மறுக்கும் பம்மாத்துக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பனிகளின் கணக்கறிக்கைகளில் உண்மையான இலாபம் குறிப்பிடப்படுகிறதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையிலும் 2017ஆம் ஆண்டு 17 கம்பனிகளின் நிதி அறிக்கைகளை நோக்கும்போது அவை தேறிய இலாபமாக மொத்தமாக 4644 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 17 பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து வருமான வரியாக அரசாங்கம் 2258 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது என்ற வாதம் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் வீழ்ச்சி, மீள் நடுகை மற்றும் புதிய நடுகை என்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்கி நோக்கும்போது, தவறானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. மாறாக தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளமையே உண்மையாகும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளத்தை 1300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலையிலேயே கம்பனிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், 'கூட்டு ஒப்பந்த பேரப் பேச்சும் தொழிற்சங்கங்களின் பங்கும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பொது உடன்பாட்டை தங்களுக்குள் எட்டுவதும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்களுடன் இணைந்து தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு பேரப்பேச்சில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். மலையகத்தில் கல்வி வீழ்ச்சியில், மாணவர்களின் போஷாக்கு பிரச்சினை, பெற்றோரின் வருமான குறைவு, ஓய்வின்மை என்பவை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, 'தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதில் மக்களின் வகிபாகமும் மாநாட்டின் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தற்போதைய பொருளாதார சூழலில் நியாயமான நாட் சம்பளமாக குறைந்தது 1300 ரூபா வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான சம்பளமாக அமையும் என்றார். 1300 ரூபா நாட்சம்பளம் மனத் திருப்திக்காக முன்வைக்கப்படவில்லை, மாறாக விஞ்ஞானபூர்வமாக வந்தடைந்த முடிவாகும்.

இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தமக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தமது பெயர் கொண்ட கதிரையைத் தேடிக் கண்டு பிடித்ததோடு அதில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திசாவையைக் கண்ட ஆங்கிலேயர் வியப்புற்றனர்.

குறிப்பிட்ட தினத்தில் கண்டி அரண்மனைவளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலில் பூசைகள் ஏற்பாடாகின. அஸ்கிரிய – மல்வத்தை பீடங்களின் பிக்குமார்களும் அங்கு பிரசன்னமாகினர். பெருந்தொகையான பொதுமக்கள் அன்றைய தினம் தேவாலய வளவில் நிரம்பினர்.

ஆங்கிலேய அதிகாரிகளும், சிப்பாய்களும், சிங்கள பிரபுக்களும், பிரதானிக்களும் பொதுமக்களும் தரையில் மண்டியிட்டும், தரையில் வீழ்ந்தும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களினால் பௌத்த – இந்து மத வழிபாட்டுத்தலங்கள் கொள்ளையிடப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வந்த நிலை இச் சம்பவத்தோடு முடிவுக்கு வந்தது.

இச் சவாலையேற்று அங்கு வரும்போது ரத்வத்தை தமது போர்வாளோடு வந்தது; போட்டியில் தோல்விகாண நேர்ந்தால் அந்த அறைக்குள்ளேயே தமது வாளினால் தம்முயிரைப் போக்கிக் கொள்வதென்னும் திடசங்கற்பத்துடனேயாகும்.

அந்தணர்களின் வழித்தோன்றல்களாகிய ரத்வத்தை சந்ததியினர் இன்றும் மகாவிஷ்ணுவின் பக்தர்களாக காணப்படுகின்றனர். சுதேச ஆட்சிக்காலம் முதல் இவர்கள் அரசியலிலும் பொதுவாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்களாகவும், கண்டி பிரதேசத்தில் தும்பறை மற்றும் மகாயாய பிரதேசத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பிரதேசத்திலும், மாத்தளையில் உக்குவளையிலும், கலாவெவ பிரதேசத்திலும் பிரபுத்துவ குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நன்றி - தினகரன்

வாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்!

தொழிலாளரின் கஷ்ட வாழ்வுக்கு தற்காலிக தீர்வாக
பி. வீரசிங்கம்
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!

மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா?

அருமையான கேள்வி! மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.

தமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்!

தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா?

கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம்! ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.

கம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.

கம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்?

கம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்!

கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா?

உண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.

இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

உற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...?

வீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.

தற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா? இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே?

இந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.

இம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?

வரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும்.

ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.

மலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

மலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றி - தினகரன்

கருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடலில்


கருப்புச் சட்டை ஒன்றுகூடல் (கவனயீர்ப்புப் போராட்டம்)
”குழு 24″” (மலையக இளைஞர்கள்)
இடம் : கொழும்பு, காலிமுகத்திடல்திகதி : 24.10.2015 புதன்கிழமை (பௌர்ணமி தினம்)நேரம் : காலை 10.00
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள ”கருப்புச் சட்டை”” ஒன்றுகூடலுக்கு (கவனயீர்ப்புப் போராட்டம்) அனைத்து இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒன்றை நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

1. வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை அதிகரி,
2. தீபாவளி முற்பணததை உரிய நேரத்தில் வழங்கு,
3.கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்து,
4.கூட்டு ஒப்பந்தத்தை மீறி, உரிமைகளைப் பறிக்காதே,
5. தோட்டத் தொழிலாளியை கௌரவமாக நடத்து,

ஆகிய கோரிக்கைளை முன்வைத்து இந்த கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் இணைந்த இளைஞர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்கின்றனர். வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றாலும், இந்த ஒன்றுகூடலுக்கு உணர்வுபூர்வமாக வெளிநாட்டு வாழ் மலையக நண்பர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் சார்பற்ற, அமைப்புக்கள் சார்ப்பற்ற வகையில் அனைத்துத் தரப்பில் உள்ள இளைஞர்களும் ஆதரவு வழங்கி, உணர்பூர்வமாக ஒன்றிணைந்திருப்பதை அவதானிக்கிறோம். இதுவே எமக்கான முதல் வெற்றியாக கருதுகிறோம். இதனை இன்னும் பலப்படுத்தி, எமது உறவுகளின் உழைப்பை சுரண்டவிடாது, உழைப்பிற்கேற்ற ஊதியைப் பெற்றுக்கொடுக்க இளைஞர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில், அமைப்புக்கள் சார்பாகவும், அரசியல்கட்சிகள் சார்பாகவும் அனைவரையும் அழைக்கிறோம். காலிமுகத்திடலிலுக்கு வந்தவுடன் அமைப்பு, அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து, இளைஞர் சமூகமாக, உணர்வுபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் என்று இளைஞர்களை அழைக்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் 24ஆம் திகதி நடத்தப்படுவதால் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ”24″” குழு என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை ”குழு 24″” ஏற்பாடு செய்வதை உறுதிப்படுத்துகிறோம்.

இணைந்து இளைஞர்களாக இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, மலையகத்தில் காடுகளிலும், மலைகளிலும், உழைப்பை மட்டுமே நம்பிவாழும் எமது உறவுகளைக்கு நம்பிக்கையைக் கொடுக்க ஓரணியில் திரள்வோம். கொழும்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பல்கலைக்கழக சிங்கள இளைஞர்களும் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர்.

எமது மக்களின் உழைப்பை சுரண்டுவோருக்கெதிராக யாழ்ப்பாண சொந்தங்களும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருப்புச் சட்டை ஒன்றுகூடல்
”குழு 24″” (மலையக இளைஞர்கள்)

குறிப்பு :உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு உங்களின் ஊடக பங்களிப்பை பெரிதும் எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்த செய்திகளை உங்களின் ஊடகத்தில் பிரசுரித்து, ஒலி, ஒளிபரப்பி, இணையத்தளத்தில் பதிவிட்டு, ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் உரிமைக்கு வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates