Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொழும்பின் பழைய – புதிய நகர மண்டபங்கள் (கொழும்பின் கதை - 37) - என்.சரவணன்

கொழும்பின் அதிகம் அறியப்படாத வரலாற்று நினைவுச்சின்னங்களில், புறக்கோட்டையில் உள்ள பழைய நகர மண்டபம் (Old Town Hall) முக்கியமான வரலாற்று பின்புலத்தைக் கொண்டுள்ளது. பழைய கோதிக் தேவாலயம் போன்ற மாளிகையின் தோற்றத்தில் அது காணப்படுகிறது. இலங்கையிலேயே அதிக சனநெரிசல் கூடிய மையமான இந்தப் பகுதியைக் கடக்கும் சுதேசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இதனை ஒரு தடவை நிமிர்ந்து பார்க்காமல் எவரும் கடந்திருக்க மாட்டார்கள். ஆனால் பெறுமதிமிக்க பண்டைய வரலாற்றின் சின்னமாக இது திகழ்கிறது.


இது புறக்கோட்டையின் இதயம் என்று கூறலாம். அதுபோல கொழும்பின் அன்றைய கோட்டைச் சுவர்களின் நுழைவாசல் இதற்கு அருகாமையில் சுமார் 50 மீட்டர் தொலைவில் தான் கைமன் கேட் என்கிற பெயரில் இருந்தது. சுறுசுறுப்பும், பரபரப்பும் மிகுந்த சந்தைப் பகுதி இது. ஐந்து லாம்பு சந்தியின் மையத்தில் இது அமைந்திருக்கிறது. ஐந்து பாதைகள் பிரியும் இடமிது. மெயின் வீதி, செட்டியார் தெரு, டாம் வீதி, ஸ்ரீ போதிராஜ மாவத்தை, சென்ரல் வீதி, செக்கட்டித் தெரு ஆகியவற்றுக்கு பிரியும் வீதி என முக்கிய சந்தியாக இது திகழ்கிறது. இலங்கையின் முக்கிய சந்தியும், சந்தையும் உள்ள இடமெனலாம்.

இந்த பழைய நகர மண்டபம் தான் மாநகர சபைக் கூட்டங்களை நடாத்தும் நகர மண்டபமாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவானது. ஆம் 2023 இல் இதன் வயது ஒன்றரை நூற்றாண்டை எட்டுகிறது.

1865 இல் கொழும்பு மாநகர சபை உருவான கதையை ஏலவே பார்த்தோம். மாநகர சபைக் கூட்டத்தை நடாத்துவதற்கு நிலையான ஒரு கட்டிடத்தின் தேவை உணரப்பட்டது.  அதன் விளைவாக இந்தக் கட்டிடம் 1873 இல் அப்போதைய ஆளுநர் வில்லியம் கிரகரி ஆட்சியில் கட்டப்பட்டது, இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தரால் (J. G. Smithers) வடிவமைக்கப்பட்டது, அவர் இந்த நகர சபை தரத்துக்கு பொருந்தக்கூடிய தளபாடங்களையும் வடிவமைத்தார், மேலும் இது கொழும்பில் திறக்கப்பட்ட முதலாவது பொதுக் கட்டிடமாகும் (Civic Building). ஒரு இடைக்கால ஐரோப்பிய தேவாலயத்தின் சாயலில் இருக்கிறது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1924 வரை நகராட்சி தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நகர சபைக் கட்டடத்தோடு ஒரு மண்டபமும் ஒரேயடியாக கட்டப்பட்டது.

1870 இல் இலங்கைக்கு பிரித்தானிய எடின்பர்க் அரச குடும்பத்தினர் வருகை தந்திருந்தார்கள். ஏப்ரல் 22, 1870 அன்று இந்த எடின்பர்க் சந்தைக்கான அடிக்கல்லை எடின்பரோவின் அல்பிரட் டியூக் (Alfred Duke of Edinburgh) நாட்டினார். இந்த சந்தை தொடங்கிய காலத்தில், கட்டிடத்தின் உட்புறம் எரிவாயு விளக்குகளின் மூலம் வெளிச்சம் பெறப்பட்டது. எடின்பர்க் பிரபுவின்  ததால் அதன் நினைவாக இந்த மண்டபத்துக்கு எடின்பர்க் மண்டபம் (Edinburgh Hall) என்று பெயர் சூட்டப்பட்டது.

அதில் தெரு நாடகங்கள், நாடகங்கள், நடன நிகழ்வுகள் என பல கலை நிகழ்ச்சிகளும் இங்கே இடம்பெற்றன. கலை வளர்ச்சிக்கு அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட மண்டபம் இது. மிகவும் நேர்த்தியான கட்டிடக்கலை அம்சங்களுடன் கட்டப்பட்ட அந்தக் கட்டிட அமைப்பின் கலை வடிவத்தை இன்றும் பார்க்கலாம். அது மட்டுமன்றி இந்த மண்டபம் அன்று நீதவான் நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஜி. பர்ட்டன் (G. Burton) வழங்கிய ஒரு வடிவமைப்பை முதலில் சபை ஏற்றுக்கொண்டது. ஒரு அருங்காட்சியகம், நூலகம், மண்டபம், நீதிமன்ற இல்லம், தரைத்தளத்தில் நீதவாங்களுக்கான அறை, ஒரு சபைக் கூட்ட மண்டபம். குழு அறைகள், மேல் மாடியில் செயலாளருக்கும் பணி கண்காணிப்பாளருக்குமான அலுவலகங்கள் போன்றவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டிடத்தைக் கட்டுவது தான் ஆரம்ப யோசனையாக இருந்தது. இதைக் கட்டுவதற்காக பர்ட்டனால் மதிப்பிடப்பட்டிருந்த செலவு 15,400 பவுன்களாகும். ஆனால், இந்தத் தொகை அதிகம் என்று முடிவு செய்த அரசு, திட்டத்தை சுருக்க வேண்டியதாயிற்று.


இறுதியில் அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தர் வழங்கிய 7000 பவுன்களில் முடிக்கப்படக் கூடிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் கொழும்பு மியூசியத்தையும், கொழும்பு துறைமுகத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் (The Grand Oriental Hotel) போன்ற கட்டடங்களை வடிவமைத்தவர் ஜே.ஜி. ஸ்மித்தர். இந்த நகர சபைக் கட்டடம் 1873 ஆம் ஆண்டில் ஆளுநரால் திறக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடம் பற்றி அப்போதைய பிரதமர் பிரேமதாசவின் கவனத்திற்கு வந்தது, அவர் 1984 ஆம் ஆண்டளவில் அதனை புனரமைத்து கொழும்பின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்றினார். பிற்காலத்தில் எடின்பர்க் மண்டபம்; பழைய நகர சபையை நினைவுபடுத்தும்  அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதன் நாளா பக்கங்களிலும் திறந்த   வளாகமாக அது இருந்தது. நகர சபைக் கட்டிடமானது “பழைய நகர மண்டபம்” (Old Town Hall) என்று அழைக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் போது மக்களுக்கும், போது நிறுவனங்களுக்கும் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டது. இன்று வரை அது தொடர்கிறது. மேலும் எடின்பர்க் மண்டபத்தைச் சூழ சந்தை பெருகியதால் அதை எடின்பர்க் சந்தை என்று அழைத்தார்கள்.


பழைய நகர மண்டப அருங்காட்சியகம் இன்றும் திறந்த ஒன்றாகத் இயங்கி வருகிறது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறியாது பலரும் கடந்து போவதும், சந்தையைச் சூழ உள்ளவர்கள் அதன் தொல்லியல் முக்கியத்துவத்தை அறியாது பாழ்படுத்துவதையும் அவதானிக்கலாம். அங்கே நூற்றாண்டுக்கு முன் வரை பயன்படுத்தி வந்த தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் என்பவற்றையும் பார்வையிட முடியும்.

இந்த மண்டபத்தை சுற்றிக் காட்ட பராமரிப்பாளர் ஒருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் உங்களை மாடிக்கு அழைத்துச் செல்வார். நீங்கள் படிக்கட்டுகளின் உச்சியை அடைந்ததும், மையத்தில் ஒரு மாநாட்டு மேசை உள்ள  ஒரு பெரிய திறந்த அறையில் இருப்பீர்கள். இங்கே 15 ஆண்கள் (மாதிரிப் பொம்மைகள்) மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல சுதேசிய பல்லின உருவங்களையும் உடையவர்களின் உருவங்கள் அந்தக் கதிரைகளில் சுற்றி வர அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம்.






காவலாளர்கள் / பணியாளர்கள் இருவர் மாதிரி பொம்மைகளாக நிற்க வைக்கப்பட்டிருப்பார்கள். சுவரில்  பழைய புகைப்படங்கள் காணப்படுகின்றன. அங்கே தெரியும் ஜன்னல்களிலிருந்தும் நகரத்தைப் பார்க்கலாம். குறிப்பாக விறுவிறுப்பான ஐந்துலாம்பு சந்தியின் மையத் தோற்றத்தை அங்கிருந்து காணலாம். இன்னோரிடத்தில் பழைய தட்டச்சுப்பொறிகள், பழைய ரேடியோக்கள் போன்ற பழங்கால பொருட்களின் சேகரிப்புகளையும்,  1785 காலத்து கொழும்பின் வரைபடத்தையும் காணலாம்.

கீழே அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்கள் உள்ளன; பழங்கால இயந்திரங்கள், பழைய மரக் கம்பத்தில் பொருத்தப்பட்ட பழைய உலோகத் தெருப் பலகைகள், பழங்கால கொதிகலன்கள், கடிகாரம், பழைய நூலக வாகனம் போன்றவற்றைப் பார்வையிடலாம்.


புதிய நகர சபை கட்டிடம்

இட நெருக்கடியாலும், வாகனப் போக்குவரத்துக்களின் சத்தங்களாலும், சந்தைப் பகுதியில் அதிகரித்த தூசுகளின் பெருக்கத்தாலும் இந்த நகர மண்டபம் கைவிட ஆலோசிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக கட்டவேண்டிய கட்டிடத்தையும் இதனைச் சூழ எங்கேயும் கட்ட வாய்ப்பிருக்கவில்லை. அதற்கான காணியும் இருக்கவில்லை. அமைதி நிறைந்த சூழலும் இருக்கவில்லை. வேறு இடத்தில் புதிய டவுன்ஹால் கட்டப்பட வேண்டும் என்று 1907 டிசம்பர் 13ஆம் தேதி நகர சபைக் கூட்டத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. 1914 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்தது. விவாதங்களும் நீண்டன.

முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மாநகர சபையின் தலைவர் இ. எம். டி கோர்சி ஷோர்ட் (E. M. de Courcy Short), 1907 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில்,  நகரத்தின் தேவைகள், நகராட்சி அலுவலகங்கள், உச்சபட்ச திறன் வரை நீண்டு, வழங்கக்கூடிய இடவசதியை முற்றிலுமாக விஞ்சிவிட்டது என்று குறிப்பிட்டார். ஒரு புதிய நகர சபைக் கட்டிடத்துக்கான தேவை மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது என்று அவர் வலியுறுத்தினார். 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், புறக்கோட்டை பிரதேசத்தில் இதனை விரிவுபடுத்துவது சாத்தியமற்றது என்பதுடன், ஒரு  புதிய இடத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை மாநகர சபை அங்கீகரித்தது. 

"கொழும்பு மாநகரசபையின் அலுவல்கள்" பற்றி விசாரிப்பதற்காக ஆளுநரால் 1914 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இப்பிரச்சனையை முழுமையாக ஆராய்ந்து தனது பரிந்துரையை வழங்கியது. ஆர். ஸ்கெல்டன் (R. Skelton) தனது சாட்சியத்தின் போது, ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவது அவசரமான விடயம் என்று கூறினார். தலைவர், செயலாளர், நகர துப்புரவு பொறியாளர், கணக்காளர் போன்றோர் கட்டிடத்தில் நிறைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மதிப்பீட்டாளர் பொறுப்பில் இருந்தவர் கட்டிடத்துக்கு வெளியே உள்ள கடையொன்றில் இருந்தபடி தனது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னும் சில அலுவலகர்கள் மாளிகாகந்தையில் அலுவலகம் நடத்தி வந்தார்கள்.

புறக்கோட்டை கட்டிடம் ஒரு நகரசபைக்கு பொருத்தமற்ற இடமாக இருந்தது. அதே வேளை ஒரு மதிப்புமிக்க நிலமாகவும் இருந்தது. விற்கப்பட்டால் ஒரு புதிய நகரசபைக் கட்டிடத்துக்கான செலவையும் ஈடு செய்து மிகுதி பணமும் மிஞ்சும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது ராயல் கல்லூரி இருந்த இடமான சென் செபஸ்தியான் மேட்டில் (அதாவது இன்று உயர் நீதிமன்ற வளாகம் உள்ள இடத்தில்) நகர சபைக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முன்மொழிவு கூட நகராட்சி மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்று ஸ்கெல்டன் கூறினார். சிறந்த கட்டிடக்கலை தகுதி கொண்ட ஒரு கட்டிடத்தை அமைபதாயின் அதற்கான நிலம் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகெங்கிலும் நகர சபைக் கட்டிடங்கள் நகரத்தின் மிக முக்கியமான கட்டிடமாக இருக்கிறது என்றார். இறுதியில் முழு திட்டத்திற்கும் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் செலவாகும் என்று திரு. ஸ்கெல்டன் கூறினார். 

ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவின்படி பணிகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அதற்குள் முதல் உலகப் போர் வெடித்ததால், இக்கட்டிடப் பணிகள் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் போர் முடிந்ததும் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 

1921 ஆம் ஆண்டில், கொழும்பு நகரத்தின் திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரும் நகர திட்டமிடலாளருமான பேராசிரியர் பெட்ரிக் கெடிஸ் (Patrick Geddes), தற்போது கொழும்பு நகர சபைக் கட்டிடம் அமைந்திருக்கும் பகுதி அதற்கு ஏற்றது என்று பரிந்துரைத்தார். அதற்கு அவர் விரிவான விளக்கத்தைக் கொடுத்தார். மக்கள்தொகை கொண்ட பகுதியின் மையத்தில் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட நகரத்தின் மையத்தில் இருந்தது விக்டோரியா பூங்கா. இந்த மக்கள் செறிவில்லாத நிலம் அதற்கு ஏற்றது என்று அரசும் ஒப்புதல் அளித்ததால், பேராசிரியர் கெடியின் முன்மொழிவின்படி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்பின் எழுந்த பிரச்சினை, டவுன்ஹால் கட்டுவதற்கான திட்டம் தயாரிப்பது. அதற்கான போட்டியும் நடத்தப்பட்டது. மொத்தம் 32 வடிவமைப்புத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதியில் மூன்று பெரிய வெளிநாட்டு கம்பனிகள் இப்போட்டியில் தகுதி பெற்றிருந்தன. அந்த கம்பனிகளில் சிங்கப்பூரின் ரல்ப் பூட்டி கம்பெனி (S J. Edwards of Ralph Booty & Co. of Singapore) சிறந்த வடிவமைப்பை கொடுத்து முதலிடத்தைப் பெற்றது. சமர்ப்பித்த திட்டமும், கட்டிடத் திட்டத்தின் தனித்தன்மையும், உள்ளே இருக்கும் அலுவலகங்களின் விசாலமான தன்மையும், உச்சியில் அரைக்கோளக் கோபுரத்துடன் கூடிய கட்டிடத்தின் கவர்ச்சியும் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படையாக இருந்தது.


இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அப்போது கொழும்பு மேயராக இருந்த டி.ரெய்ட் (T. Reid) 1924ஆம் ஆண்டு மே  24 அன்று நாட்டினார். இந்தக் கட்டிடத்தை 1924 இல். கெமன் என்கிற கமனியால் (A. A. Gammon & Co) மூலம் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது தற்போதைய நகரசபைக் கட்டிடம். இதக் கட்டு முடிப்பதற்கு அப்போது ரூ 1,500,000 செலவாகியது. இதற்கான செலவை மத்திய அரசிடமிருந்து எந்தக் கடனும் வாங்காமல் நகரசபையின் வருவாயிலிருந்தே பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்த பின்னர், 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபம் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இன்று கொழும்பின் மிகவும் அழகானதும், பிரமாண்ட மிடுக்கோடும் நகர சபைக் கட்டிடம் கொழும்பின் கவர்ச்சிகரமான அடையாளமாகவும், அமெரிகாவில் வோஷிங்க்டனில் உள்ள கெப்பிடல் கட்டிடத்தின் சாயலில் நிற்கிறது.

உசாத்துணை

  • H. A. J. Hulugalle, Centenary Volume of the Colombo Municipal Council, 1865-1965, Colombo Municipal Council, 1965 - Colombo (Ceylon)
  • CEYLON Report of the Commission on the Constitution Presented by the Secretary of State for the Colonies to Parliament by Command of His Majesty, July, 1928, Printed And Published By His Majesty's Stationery Office, LONDON: 1928.
  • Lopamudra Maitra Bajpai, Stories of the Colonial Architecture: Kolkata-Colombo  Doshor Publication, 2019
  • ආර්. මහීෂ්වර, ලක්ෂ පහළොවක වියදමින් ඉදි වුණු කොළඹ නගර සභා ගොඩනැගිල්ල දිනමිණ, (16. 07. 2021)
  • හර්ෂිනී පුෂ්පමාලා ආරච්චිගේ, කොළඹ යනු ඓතිහාසික පුරවරයකි, දිනමිණ, (08. 10. 2011)
  • Tuan M. Zameer Careem, Ceylon’s First Royal Tour,  (https://www.colombotelegraph.com/index.php/ceylons-first-royal-tour/) 21,07.2019
நன்றி - தினகரன் 21.08.2022


கொழும்பு நகரசபையின் உருவாக்கம் ( கொழும்பின் கதை - 37) என்.சரவணன்

இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனம் தான் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலை விட பழமையைக் கொண்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலானது முதலாவது இடம்பெற்றது 1911 இல் தான் என்பதை அறிவீர்கள். இலங்கையின் ஆளுநராக 1865 -1872 காலப்பகுதியில் ஆட்சி செய்த சேர் ஹர்கியூலிஸ் ரொபின்சனின் (Hercules Robinson) காலத்தில் தான் இலங்கைக்கான உள்ளூராட்சி நிருவாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையின் ஆட்சி அதிகார நிர்வாகத்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பங்காற்றியவர்களில் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் பங்கு முக்கியமானது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் முழு நாடும் ஆவதற்கு முன்னரே; ‘பிரித்தானிய அரசியலமைப்புக்கு ஏற்றார்போல யாப்பு முறை இலங்கையிலும் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் கொடுத்தவர் அவர் தான். அவர் பின்னர் இலங்கையின் முதலாவது நீதியரசராக ஆனார்.

1809 இல் அப்போதைய வெளியுறவுத்துறை செயலரிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்து இப்படிக் கூறினார்:

"இந்தத் தீவில் வசிப்பவர்களின் வாழ்க்கை – நடத்தைக்கும், மதச் சூழலுக்கு ஏற்ற, பிரிட்டிஷ் அரசியலமைப்பின்படி இலங்கைக்கு ஒரு ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும்."

அப்படித்தான் 1833 இல் கோல்புரூக் கமிஷனின் முன்மொழிவுகளும் ஒரு சுதந்திர அரசாங்கத்தின் தேவையை பரிந்துரைத்தன. 1848 இல் இலங்கையில் வெடித்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக, இலங்கைக்கு ஏதாவது ஒரு சுயராஜ்யத்தை வழங்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. இந்தக் காரணங்களின் விளைவாக, 1850 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் கொழும்புக்கு ஒரு நகர சபை முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

1865 இல் புதிதாக ஆளுநர் பதவியேற்ற சேர் ஹர்கியூலிஸ் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் இதற்கான யோசனையை அரசாங்க சபையில் சமர்பித்தார். இதன்படி 1865 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் கொழும்பு நகர சபை நிறுவப்பட்டது. அதுமட்டுமல்ல 1866ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இயங்கக் கூடிய வகையில் கொழும்பு, கண்டி ஆகிய இரு நகர சபைகளும் உருவானது அதுபோல நகரசபை எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டது. கொள்ளுப்பிட்டி, கொம்பனிவீதி, கொழும்பு கோட்டை, புனித செபத்தியன் வீதி, புறக்கோட்டை, செயின்ட் போல்ல் பிளேஸ், கொட்டாஞ்சேனை, நியூ பஸார் மற்றும் மருதானை ஆகியவை அதன் அப்போதைய நகர எல்லைகளாகும்.

நகராட்சி உறுப்பினர்களாக தெரிவாக தகுதிபெற்றவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்வதற்கான விசேட கூட்டம் 1865 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதி கச்சேரியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏ. எம்.பெர்குசன், டாக்டர். எஃப். டபிள்யூ. வில்ஸ் ஃபோர்டட், சீ.ஏ.லோரன்ஸ், ஜே. டி. அல்விஸ், சி. டயஸ், எஸ்.சண்முகம். ஒசின் லெப்பை, அபுதுல் காதர் மரிக்கார் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். இந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் 14 நாட்களுக்கு கொழும்பு கச்சேரியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களைத் தெரிவு தெரிவுசெய்வதற்கான கூட்டம் ஏற்பாடாகும் என்றும் பத்திரிகைகளிலும், வர்த்தமானி அறிவித்தலாகவும் அறிவிக்கப்பட்டது.

நகராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் கூட்டம் 1866 ஜனவரி 12, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. கூட்டங்கள் எனப்படுகிற இந்தத் தேர்தல்; ஒன்பது தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டன. கொழும்பு நகரில் வரி செலுத்துபவர்கள் வாக்காளர்களாக தகுதி பெற்றிருந்தார்கள். இதற்கு மக்கள் மத்தியில் தனி ஆர்வம் இருந்ததையும் உணர முடிகிறது. கொழும்பு நகர சபைக்கு ஆசன மட்டத்தில் முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு.

  • சி. எல். பெர்டினாண்ட்ஸ் (கொள்ளுப்பிட்டி)
  • கலாநிதி எஃப். டபிள்யூ. வில்ஸ்ஃபோர்ட் (கொம்பனி வீதி)
  • ஜே. டபிள்யூ. வென் (கோட்டை)
  • எஃப். ஜே. த. சேரம் (சென்ட்செபாஸ்தியன்)
  • டாக்டர் ஜே. டபிள்யூ. வான் கேசல் (புறக்கோட்டை)
  • எஸ். தம்பையா (சென்ட் போல்)
  • சி. ஏ. லோரன்ஸ் (கொட்டாஞ்சேனை)
  • ஜே. டி. அல்விஸ் (நியூ பஸார்)
  • எம். சி. லோஸ் (மருதானை)

ஜனவரி 5 , 1866 இல், பின்வரும் ஐந்து பேரை நகராட்சி கவுன்சிலர்களாக ஆளுநர் நியமித்தார்.

  • சி. பி. லெயார்ட் (அரச அதிபர், மேல் மாகாணம்)
  • கலாநிதி டபிள்யூ. பி. சார்லி (தலைமை சிவில் மருத்துவ அதிகாரி)
  • எச். ஏ. எவட் (நெடுஞ்சாலை ஆணையர், தலைமை பொறியாளர்)
  • டி. பெர்விக் (பிரதி சட்ட மா அதிபர்)
  • ஜே. ஜே. கிரின்ளிண்டன் (நில அளவையாளரின் உதவியாளர்)


இதே வேளை அதிகாரப்பூர்வமாக தலைவராக தெரிவானவர் சி. பி. லெயார்ட். அதாவது இலங்கையின் முதலாவது மேயர் அவர். இன்றும் கிராண்ட்பாசில் லெயர்ட்ஸ் புரோட்வே என்கிற வீதி அவரின் நினைவாகத் தான் இருக்கிறது. சாமுவேல் கிரேனியர் செயலாளராக தெரிவானார். இந்த ஐந்து உறுப்பினர்களும் பின்னர் நைட் பட்டம் பெற்றனர். சி. பி. லெயார்ட் இலங்கை சிவில் சேவையின் மூத்த உறுப்பினராக இருந்தார் அது மட்டுமன்றி 30 வருட காலமாக மேல் மாகாணத்துக்கான அரச அதிபராகவும் இருந்தவர். கோல்ப்ரூக் கமிஷனின் உறுப்பினராக இருந்த சி. எச். கமரூனின் மகன் எச். எச். கமரூன் கொழும்பு நகர சபையின் முதலாவது முழுநேரத் தலைவராக ஆனார்.

1887 இல் இயற்றப்பட்ட நகர சபை கட்டளைச் சட்டத்தின்படி ஆங்கில மொழி தெரியாத எவரும் நகர சபை பிரதிநிதியாக நியமிக்கப்படக் கூடாது. மேலும், ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்தின் உரிமை அல்லது ஆண்டுக்கு ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத அசையாச் சொத்தின் உரிமை இருத்தலே; ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதியாக இருந்தது. 1887 ஆம் ஆண்டு ஆணைச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் எழுந்ததால் எழுந்த சர்ச்சையால் மீண்டும் ஒருமுறை அவசரச் சட்டம் திருத்தப்பட்டது . 1910 ஆம் ஆண்டின் நகர சபைச் சட்டம் இல. 06இன் மூலம், தற்போதுள்ள நகராட்சி எல்லைகள் மேலும் விரிவாக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டு யாப்பின் பிரகாரம் கொழும்பு நகரை ஆளுவதற்கு முதல் முறையாக மேயர் மற்றும் துணை மேயர் என இரண்டு புதிய பதவிகளை உருவாக்கியது. மேலும், இந்த புதிய யாப்பின் மூலம் நகர்ப்புற பிரிவுகளின் எண்ணிக்கை 20 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, கொழும்பு நகர சபையின் புதிய பிரிவுகள், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, மருதானை வடக்கு, மருதானை தெற்கு, வடக்கு சென்ட் போல் , தெற்கு சென்ட் போல், கிழக்கு புதிய பஸார் , மேற்கு புதிய பஸார், கோட்டை, புறக்கோட்டை, வடக்கு கொம்பனி வீதி, தெற்கு கொம்பனி வீதி, சென்ட் செபஸ்தியான், தெமட்டகொட, திம்பிரிகசாய மற்றும் கறுவாத்தோட்டம் என்கிற நகரசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 1943 இல் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அப்பிரிவுகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, திம்பிரிகசாய, ஹெவ்லொக் டவுன், தெற்கு வெள்ளவத்தை, கறுவாத்தோட்டம், பொரளை , தெமட்டகொட, முகத்துவாரம், மாதம்பிட்டிய, கிழக்கு கொட்டாஞ்சேனை, மேற்கு கொட்டாஞ்சேனை, நியூ பஸார், கிராண்ட் பாஸ், கொம்பனிவீதி, ஹூனுபிட்டி, வேகந்த, மாளிகாவத்தை, சென்ட் போல், சென்ட் செபஸ்தியான், கொச்சிக்கடை, புதுக்கடை, புறக்கோட்டை போன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

1946ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் வாக்காளர், வேட்பாளர் ஆகியோரின் தகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்படி 21 வயதுக்கு குறையாத பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. (அப்போது இலங்கையர்கள் என்றால் பிரித்தானிய முடியாட்சியின் குடிகள் தான்) மீண்டும் 1953 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் நகரசபைச் சட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்ட போது இலங்கை பிரஜைகளுக்கு மட்டும் வாக்காளர்களாக ஆகும் தகுதியுண்டு என்று மாற்றப்பட்டது. 1963 இல் உள்ளூராட்சி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு நகர சபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டது.

1978 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, நகராட்சி நிர்வாக அமைப்பு மற்றும் சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்படி, 1979 ஆம் ஆண்டு விகிதாசார வாக்குப்பதிவு முறையில் தான் மாநகர சபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மாநகர சபை சட்டம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.


1866 இல் கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1937 வரை கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாடு 71 வருடங்கள் முழுமையாக ஐரோப்பியர்களின் கைகளிலேயே இருந்தது. கொழும்பு மாநகர சபையின் முதலாவது இலங்கை மேயர் என்ற பெருமை திரு ரட்ணஜோதி சரவணமுத்து அவர்களுக்கே உண்டு. அதுபோல அவரின் மனைவி திருமதி நேசம் சரவணமுத்து இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் பிரதிநிதி ஆவார். பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க 1940 இல் கொழும்பு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் மூன்றாவது சுதேசிய மேயர் எனக் கூறலாம். இந்நாட்டின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது இலங்கையின் ஜனாதிபதியாகவும் , பிரதமராகவும் , அதிகாரமிக்க அமைச்சர்களாகவும் பதவி வகித்த பலர் கொழும்பு மாநகர சபையின் ஊடாகவே அரசியல் களத்திற்கு வந்தவர்கள் என்று கூட கூற முடியும். கொழும்பு மாநகர சபையானது இந்நாட்டின் தேசிய அரசியலில் வலுவான செல்வாக்கு செலுத்திய ஒரு மையம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

1869 இல், கொழும்பு நகர சபையை இல்லாது செய்யும்படி நகரவாசிகள் சிலர் சமர்ப்பித்த மனு காலனித்துவ செயலாளரால் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

1905 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை 256 ஆக இருந்தது. ரிக்ஸாக்களின் எண்ணிக்கை 2369. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வண்டிகளின் எண்ணிக்கை 1676 ஆகும். குதிரை வண்டிகளின் எண்ணிக்கை 191.

1905 இல் கொழும்பு நகரில் மின்சார டிராம்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 6,555,338 என மதிப்பிடப்பட்டுள்ளது. மைல்களின் அடிப்படையில், அந்த ஆண்டு ஓட்டப்பட்ட மைல்களின் எண்ணிக்கை 814,725 ஆகும். மின்சார டிராம் பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ஒன்றரை மைல்களுக்கு 025 சென்ட் ஆகும். இதேவேளை, வடக்கு கிழக்கிலிருந்து கொழும்புக்கு செல்லும் பிரதான பாதையான விக்டோரியா பாலம், அந்த வருடம் கொழும்பு மாநகர சபைக்கு 92,676 ரூபா வருமானமாகப் பெற்றுள்ளது.

1899 இல், கொழும்பு நகரசபை மாநகர சபையானது, கொழும்பு நகரில் ஒரு விளக்கைப் பராமரிப்பதற்கான கட்டணமாக வருடத்திற்கு 45 ரூபாய் செலுத்தி 2000 விளக்குகளை நிறுவ எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதே ஆண்டில் பொது போக்குவரத்துக்காக மின்சார ட்ராம் போதுப்போக்குவரத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது.

1920 இல் கொழும்பின் மக்கள் தொகை 300,000 ஆக இருந்தது . 1939 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கொழும்பின் சனத்தொகையில் 25% பேர் சேரிகளில் வசிப்பதாகவும், இதேபோன்ற மற்றொரு சதவீதத்தினர் இதேபோன்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டன.

1943 ஆம் ஆண்டில், Bousted நிறுவனத்திற்கு 3,663,443 ரூபாவை செலுத்திய பின்னர் , டிராம் வண்டிச்சேவை கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமானது. 1954 இல், கட்டணப் பேருந்து சேவை தொடங்கப்பட்டவுடன், அதுவரை இருந்த டிராம் ரயில்கள் அகற்றப்பட்டன. 1895 ஆம் ஆண்டில், Baustead நிறுவனம் வணிகரீதியாக மின்சாரம் தயாரித்து, கோட்டைப் பகுதி மற்றும் முக்கியமான அரசாங்க கட்டிடங்களை வெளிச்சமாக்குவதற்கு போதுமான மின்சாரத்தை வழங்கியது. 1927 இல், பவுஸ்டட் நிறுவனத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தை அரசாங்கம் வாங்கியது. அதே நேரத்தில், அரசு மின்சாரத் துறையும் தொடங்கப்பட்டது. 1946 இல் அரசாங்க மின்சார திணைக்களம் 372,848 ரூபாயை இலாபம் ஈட்டியுள்ளது.

கொழும்பில் வாழும் நாய்களும் நகர சபையால் விதிக்கப்பட்ட வரிக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1905 ஆண்டளவில், நாய்களை வளர்க்கும் ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஒரு நாய்க்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் அந்த வருடத்தில் மாநகர சபையின் வருமானமாக ரூபா 5382/= கிடைத்தது. மேலும் அந்த ஆண்டில் 2072 தெருநாய்கள் மாநகர சபையின் பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டு அவற்றில் 1374 நாய்கள் அழிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபையால் தெமட்டகொட மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் இரண்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வந்தன. 1905 ஆம் ஆண்டு மனித நுகர்வுக்காக இந்தக் கடைகளால் கொல்லப்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை 86,956 ஆகும் . அதிலிருந்து கிடைத்த மாநகர சபையின் வருமானம் 46,614 ரூபாவாகும். மேலும், அந்த ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அளவு 227,206 இறாத்தல்களாகும்.

1905 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், நகரசபை குப்பைகளை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுடன், அந்த முதல் வருடத்திற்கான செலவு 33,000/= ரூபாவாகும்.

கொழும்பில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, கோடை காலத்தில் நகர வீதிகளை தண்ணீரால் நனைப்பதான் மூலம், நகரின் தூசியை குறைக்கலாம் அப்போது எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக 1905 இல் செலவிடப்பட்ட தொகை 10,799 ரூபாய்கள் ஆகும்.

1879 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் விலங்குகளை அறுப்பதற்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை அதிகரித்ததற்கு எதிராக கொழும்பு இறைச்சிக் கடைக்காரர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போதைய நாளிதழ்களில் இது பெரிதாக பேசப்பட்டன. அப்போதெல்லாம் வேலைநிறுத்தங்கள் இலங்கைக்கு அந்நியமானதாக இருந்தது. இலங்கை மக்களும், அரசாங்கமும் அதற்கு எதிர்கொண்டது கிடையாது. “கத்தலிக் மெசேஞ்சர்” நாளிதழ் "தொழில்முறை குழுவொன்று தமது கோரிக்கைக்காக தமது வியாபார ஸ்தலத்தை மூடிய முதல் சந்தர்ப்பம் இது என்றது. 

இலங்கையின் இறைச்சிக் கடைக்காரர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இலங்கையின் வரலாற்றில் பெரிதாக ஆராயப்படாத ஒன்று. அச்சுத் தொழிலாளர் போராட்டம் கூட 1893 இல் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். “மகாராணியின் பிரஜைகள் மரக்கறி சொதியுடன் உணவு உன்ன வைத்துவிட்டார்கள்.” என்று சிலோன் டைம்ஸ் பத்திரிகை நையாண்டியுடன் கட்டுரை தீட்டியது.

கொழும்பு மாநகர சபையின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். மாநகர சபைக் கட்டிடம் எங்கே இயங்கியது. எப்படி உருவானது. எப்படியெல்லாம வளர்ச்சி பெற்றது என்கிற சுவாரசியமான தகவல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி - தினகரன் - 07.08.2022

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates