Headlines News :
முகப்பு » , , , , » தலதா புனித தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? - என்.சரவணன்

தலதா புனித தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? - என்.சரவணன்

புத்தரின் அடையாளச் சின்னங்களென இலங்கையில் குறிக்கப்பட்ட அத்தனையும் இலங்கையின் தன்மையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன.

பௌதீக நினைவுச்சின்னங்கள், பயன்பாட்டு நினைவுச்சின்னங்கள், அழகியல் நினைவுச்சின்னங்கள் என வகுக்க முடியும். புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகள், புத்தர் பயன்படுத்திய பொருட்கள், புத்தர் சிலைகள், அரச மரங்கள், பௌத்த தூபிகள், புத்தரின் அட்சய பாத்திரம், அவரின் தர்ம நூல்கள் என அடுக்கிக் கொண்டு போகலாம். இவற்றில் தலையாய அடையாளமாக கருதப்படுவது தான். கண்டி தலதா மாளிகையில் காணப்படும் புனித தாதுப்பல்.

1561 ஏப்ரல் மாதம் போர்த்துகேயரால் கோவாவில் வைத்து அப்புனிதப்பல் அழிக்கப்பட்டுவிட்டதாக ஒரு பிரபல கதையுண்டு. அதைப் பற்றிய ஆய்வுகளின் மீதான ஒரு பார்வையே இது.

இதைப் பற்றி பல ஆங்கில ஆய்வுகள் உள்ளன. இறுதியில் The Buddha’s Tooth: Western Tales of a Sri Lankan Relic என்கிற நூலில் ஜோன் ஸ்ட்ரோங் அந்த சம்பவத்தை மறுக்கிறார்.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையின் தொடக்கம் எது என்று ஆராய்ந்து கொண்டு போனால் Diogo Do Couto 17-18 ஆம் நூற்றாண்டுகளில் இல் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “Da Asia de João de Barros e de Diogo de Couto” என்கிற நூல் தொகுதிகள் வரை பின் செல்கின்றது.

அவரோ பல நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட 12 தொகுதிகளாக போர்த்துகேய நூல்களை எழுதி வைத்திருக்கிறார். சில தொகுதிகள் பாகங்கள் 1,2,3, என நீள்கின்றன. அத்தொகுதிகள் அனைத்தையும் தேடி எடுத்துக் கொண்டேன். இதில் எந்த நூலில் இதைப் பற்றி எழுதி இருக்கக் கூடும் என்பதை அறிவதில் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது. இதை ஆதாரம் காட்டி எழுதிய பல ஆங்கில ஆய்வுகளும் கூட எத்தனையாவது தொகுதியில் என்பதை கூறவுமில்லை. அந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் என்னிடம் இதைப்பற்றி உள்ள ஆய்வு நூல்கள், ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து பதில் கேட்டேன். அங்கே இவற்றை அறிய முற்பட்டபோது ஏழாவது தொகுதியில் இத்தகவல்கள் இருபதாகக் கூறியது. ஆனால் போர்த்துகேய மொழியில் தான் Sexta, Setima, Ottava, Nona என்கிற வரிசையில் இத்தொகுதியின் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதை மொழிபெயர்த்து அது Setima (ஏழாவது தொகுதி) என்பதை அறிந்து கொண்டு எத்தனையாவது பக்கம் என்பதை கேட்டறிந்தேன். 316-318 பக்கங்களில் உள்ளதாகவும் வேறு சில இடங்களிலும் இதைப் பற்றிய விபரங்கள் உள்ளதையும் அப்பதில்களில் இருந்து அறிந்துகொண்டேன்.

இறுதியில் அப்பக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரித்து எடுத்து தோராயமாக மொழிபெயர்த்து அப்பகுதிகளை கண்டு பிடித்தேன்.

தியோகோ டோ கூட்டோ (1542 - 1616) ஒரு போர்த்துகேய வரலாற்றாசிரியர். 1559 இல் அவர் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதிக்கு சென்று ஒரு படை சிப்பாயாக பணியாற்றியிருக்கிறார். 

1561 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் வடக்கு முனையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு மதஸ்தலத்தில் வைத்து புனித தாதுப்பல் நினைவுச்சின்னம் கைப்பற்றப்பட்டதாக கூட்டோ கூறுகிறார். யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேய வைஸ்ராய் டோம் கொன்ஸ்டன்டினோ டா பிராகன்சாவின் (Don Constantino de Braganza) படையெடுப்பின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது என்கிறார் அவர்.

போர்த்துக்கேயரால் அத்தாதுப்பல் கைப்பற்றப்பட்டது என்பதைப் பற்றி வெளிப்படையாகக் கூறிய முதல் மேற்கத்திய ஆதாரம் கூடோவின் நூலாகும். அவர் "பூர்வீகவாசிகளிடமிருந்து" அறிந்தகொண்டவற்றின் அடிப்படையில் புத்தரின் வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறார். கூட்டோ தொகுத்துள்ள இலங்கை பற்றிய குறிப்பின்படி, புத்தர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கும் ‘பெகு’வுக்கும்  விஜயம் செய்ததாகவும் அவரின் இறப்புக்குப் பின்னர் அஸ்தியில் இருந்து ஒரு பல்லை எடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதையும் விபரிக்கிறார்.

இந்த காலப் பகுதியில் கோட்டே மன்னர் தொன் ஜுவான் தர்மபாலவும் (1551-1581)  1567 ஆம் ஆண்டில் பர்மாவுக்கு அனுப்பிய தூதுக்குழுவிடம் புனிதப் பல்லை கொடுத்து அனுப்பியதாக சில பர்மிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் இதே காலப்பகுதியில் சபரகமுவவின் உள்ள விகாரையொன்றில் அது வைக்கப்பட்டிருந்ததை சூளவம்சம் தெளிவாகக் கூறுவதால்,  பர்மிய ஆதாரங்களில் உள்ள விளக்கத்தை நம்புவது கடினம் என்பது தெளிவாகிறது.

மேலும், இக்காலப்பகுதியில் முதலாம் இராஜசிங்க மன்னனினதும் போர்த்துக்கேயரதும் தாக்குதல்களின் காரணமாக வீதிய பண்டார புனிதப்பல்லுடன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றதாக சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் வீதிய பண்டாரவுக்கு உதவ இணங்கியதாகவும், அதற்காக நல்லூர் கோவிலில் ஒரு விசேட வைபவத்தை நடத்தியதாகவும் இக்கதைகளில் குறிப்பிடுகின்றன. ஆனால் அங்கே நிகழ்ந்த சில எதிர்பாராத சம்பவங்களால் வீதிய பண்டார கொள்ளப்பட்டுவிட்டதால் வீதிய பண்டாரவின் வசம் இருந்த புனிதப் பல்லும், பொக்கிசங்களும் யாழ்ப்பாண அரசர் வசம் சென்று விட்டதாக வரலாற்றாசிரியர் கொட்ரிங்க்டன் கூறுகிறார். 


கி.பி. 1560 ஆம் ஆண்டு  போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போது மன்னனின் அரண்மனைக்கு தீயிடப்பட்டதாகவும் போர்த்துக்கேயர் அங்கிருந்த வீதிய பண்டாரவின் உடைமைகளைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அதன்  போது கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனிதப்பல் போர்ச்சுக்கேய படையினரால் காப்பாற்றப்பட்டு டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது என்றும், போர்த்துக்கேய பாதிரிமார் அதைக் கோரிய போதும் அவர்களிடம் அது கொடுக்கப்படவில்லை என்றும் பின்னர் சிறைபிடிக்கப்பட்ட யாழ்ப்பான மன்னருடன் சேர்த்து கோவாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கொட்றிங்டன் குறிப்பிடுகிறார். 

இந்தச் சம்பவம் பர்மா அரசனுக்குத் தெரிய வந்ததும் அவன் கோவாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி அப்புனிதப் பல்லை சுமார் 300,000–400,000 குரோசோடோவுக்கு   கேட்டிருக்கிறார். அதை பர்மிய அரசனுக்குக் கொடுப்பதை கோவாவிலிருந்த அதிகாரிகளும் பாதிரிமாரும் கடுமையாக எதிர்த்ததால், டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோ இறுதியில் அப்பல்லை கோவாவின் பேராயரிடம் அதை ஒப்படைத்தார். 

கோவாவில், நினைவுச்சின்னத்தை என்ன செய்வது என்பது குறித்து பேராயருக்கும் பிற இறையியலாளர்களுக்கும் இடையில் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும், இறுதியில் அது ஒரு அந்நிய மத அடையாளம் என்றும் பிசாசின் நினைவுச் சின்னம் (reliquia do demonio) என்றும் அதை வைத்திருப்பது கடவுளை அவமதிப்பதாகும் என்றும் வாதிட்டனர். இறுதியில் அதை அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.  

டோம் கொன்ஸ்டான்டினோவின் செயல்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எதிர்வினைகள் இருந்ததாக கூட்டோ குறிப்பிடுகிறார். சிலர் விக்கிரகாராதனைக்கு எதிராக நின்றதற்காக அவரைப் பாராட்டினர், மற்றவர்கள் போர்த்துக்கேய சாம்ராஜ்யத்திற்கு சாதகமான செயலை ஆற்றியதாகவும், பௌத்தர்கள் வழிபடுவதற்கான மற்றொரு பொருளை உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன.


பேராயர் டொன் காஸ்பர் (Don Gaspar) தலைமையில் அன்றைய வைசிராய் கொன்ஸ்டண்டைன் கோவாவில் மண்டோவின் ஆற்றோரத்தில் பகிரங்கமாக அனைவரிடமும் காண்பித்து அப்பல்லை ஒரு உரலில் நசுக்கி, சிதைத்து பொடியானதை எடுத்து எரிந்துகொண்டிருந்த தீயில் போட்டு எரித்து, அதன் மீதான வணக்கத்தைத் முற்றாகத் தடுக்க அதன் சாம்பலை அங்கிருந்த ஆற்றில் எறிந்து அழித்ததாகவும் கூட்டோ கூறுகிறார்.

கொந்தளிப்பான காலகட்டத்தில் தலதாவை ஆக்கிரமித்த போர்த்துகீசியர்கள் அதை அழித்ததாகவும் குவைரோஸ் குறிப்பிடுகிறார். 

ரிபைரோவும் இதே போன்றே விபரித்திருப்பதாகத் தெரிகிறது. அவரின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் அப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பெகு (பர்மா) மன்னன் அதைப் பற்றி அறிந்து, அதை எப்படியாவது தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதாக அவர் கூறுகிறார். இதற்காக கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிய மன்னர் அப்புனிதப்பல்லை பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்துமாறு கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்.   அவர்கள் இதற்காக போர்த்துக்கல்லுடன் ஒரு நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவும், மலாக்காவில் உள்ள போர்த்துகேய கோட்டைகளுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவும் ஒப்புக் கொண்டதைக் காண முடிகிறது.  அப்போது கோவாவில் இருந்த போர்த்துக்கேய அதிகாரிகள் அப்பல்லை மன்னரிடம் ஒப்படைக்கவும் தயாராக இருந்தனர், ஆனால் பாதிரிமாரும், பேராயரும் அதை எதிர்த்ததுடன் கடவுளின் நற்பெயருக்கு அவமானம் என்று அறிவித்து அழிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டன  என்று ரிபெய்ரோ குறிப்பிடுகிறார்.


எவ்வாறாயினும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு குரங்கின் பல் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் ரிபைய்ரோ குறிப்பாக குறிப்பிடுகிறார், எனவே இலங்கையர்கள் ஒரு குரங்குப் பல்லை வணங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனிதப் பல் என்று நம்பப்பட்ட வேறொன்றைத் தான் போர்த்துகேயர் அழித்தார்கள் என்று பிற்கால ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுமுளனர். பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் இந்த சம்பவத்தை சற்று வித்தியாசமான வேறு வழியில் விளக்க்கிறார், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் ஒரு குரங்கு பல்லை கைப்பற்றியதாகவும், ஆனால் அது ஒரு தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ஹனுமனை வணங்குவதற்கான அடையாளமாக பொதுமக்களால் அது பேணப்பட்டு வந்ததாகவும் விளக்குகிறார். அதுவே கோவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் டெனன்ட் விவரிக்கிறார். 

பின்னர்  "உண்மையான" தாதுப்பல் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கோட்டே மன்னர் யுவான் தர்மபால அதனை பெகுவின்  (பர்மா) மன்னருக்கு  விற்றதாகவும் கூட்டோ மேலும் விவரிக்கிறார். அதனைத் தொடர்ந்து, கண்டி மன்னன் விமலதர்மசூரிய இதற்கு முரணாக, உண்மையான புத்தரின் பல் நினைவுச்சின்னம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மனனர் தர்மபால போலிப்பல்லையே அவ்வாறு பர்மா மன்னருக்கு விற்றார் என்கிறார்.  

கூட்டோவின் பதிவுகளில் உள்ள உண்மைத்தன்மையை பகுப்பாய்வு செய்வதற்கு, மேற்கத்திய மற்றும் சுதேச ஆதாரங்களில் இருந்தும் வரலாற்றுப் பின்னணியிலிருந்தும் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

"புத்தரின் பல்..." மேற்கத்திய ஆதாரங்கள் குறிப்பிடத்தக்க மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளன. சில டச்சு ஆதாரங்கள் 1554 ஆம் ஆண்டில் ஆதாமின் சிகரத்திற்கு அருகில் அப்பல் எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன, இன்னும் சிலர் இது காலிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. கூட்டோவுக்கு முன்பு, மேற்கத்திய நூல்களில் பொதுவாக அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருள் புத்தரின் பல்லே அல்ல என்றும் குரங்கின் பல் என்றும் குறிப்பிட்டன. 


இதைப் பற்றிய முன்னைய பல ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி “புத்தரின் பல்: இலங்கை நினைவுச்சின்னம் பற்றிய மேற்கத்திய கதையாடல்கள்” (The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic) என்கிற நூலை எழுதியவர் ஜோன் எஸ்.ஸ்ட்ரோங் (John S.Strong). இதைப் அப்ற்றிய முதற் தகவல்களைக் கூறியவர் கூட்டோ என்கிறார் அவர்.

பிற்கால போர்த்துகீசிய வரலாற்றாசிரியர்கள், குவைறோ மற்றும் டி சூசா போன்றவர்கள், இது புத்தரின் பல் என்பதை அதிகளவில் உறுதிப்படுத்தினர். பிரான்சிஸ்கோ டி சூசா (1710) இது புத்தரின் பல் தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். 

இலங்கை மக்கள் "புத்தரின் பல்லை" போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியதையும், அதை அழித்ததையும்  ஏற்க மறுத்தனர். யாழ்ப்பாணத்தில் அது கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் அழித்தது இராமாயணக் கதைகளில் வரும் குரங்குத் தெய்வமான ஹனுமானின் பல்லாக இருக்கக் கூடும் என்றும் கூறினர். இன்னும் சிலர் அது அதிர்ஷ்டவசமாக தப்பி இருக்கிறது என்றும். தாதா வம்சத்தின் பிரகாரம் அது அளிக்கப்பட முடியாதது என்றும் கூறினார். அதற்கேற்றாற் போல தொன் ஜூவான் தர்மபால, கொனப்பு பண்டார போன்றவர்கள் தம்மிடம் அப்பால் பத்திரமாக இருக்கிறது என்று தெரிவித்த கருத்துக்களும் மக்களின் நம்பிக்கைக்கு சாதகமாக அமைந்தன.

தாதாவம்ச காப்பியமானது இலங்கையின் புனித தாதுப்பல் நினைவுச்சின்னத்தின் வரலாற்றை விரிவாக விளக்குகிறது. தாதவம்சம் போன்ற 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுதேசிய பாலி மொழி வம்ச காப்பியங்கள் அதற்கு முந்தைய சிங்கள இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டது. கிபி 4 ஆம் நூற்றாண்டில் புத்தரின் தகனத்திலிருந்து; அஸ்தி இலங்கைக்கு வரும் வரையிலான புனிதப்பல் வந்து சேர்ந்த வழித்தடத்தை விவரிக்கிறது. ஆனால் ஸ்ட்ரோங் அதில் உள்ள பல விவரங்களின் வரலாற்றுத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறார். பிற மத மற்றும் இலக்கியப் படைப்புகளிலிருந்து எடுத்தாண்டு புனையப்பட்ட பல கதைகளும் அதில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ஸ்ட்ரோங். 4 -15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இலங்கையில் புனித தாதுப்பல் ஏற்படுத்தியிருந்த அரசியல் முக்கியத்துவத்தை இக்காப்பியம் விளக்குகிறபோதும்  16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை எப்படி சேர்ந்தது என்கிற விபரங்களை அது சொல்லவில்லை.

இலங்கையில் பௌத்த மத நினைவுச் சின்னங்கள் இலங்கையின் அரசியல் அதிகார மையங்கள் நிலை கொண்டிருந்த பிரதேசங்களோடு தொடர்புடையவை. மாறாக 16 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார் அன்ன பிலேக்பெர்ன். 

கூட்டோவின் பதிவுகள் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும் என்கிறார் ஸ்ட்ரோங். அவர் அன்றைய கால பல விவரிப்புகளை வழங்கினாலும், கைப்பற்றப்பட்ட பல்லின் அமைவிடம் மற்றும் ஆரம்ப அடையாளம் போன்ற தகவல்களை வழங்கும் பொது  மற்ற மேற்கத்திய ஆதாரங்களுடன் முரண்படுகிறது. சுதேச நூல்களோ அல்லது வேறு இலக்கியங்களோ இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அத்தகைய ஒரு நினைவுச்சின்னம் இருந்ததை உறுதிப்படுத்தியதில்லை.

கண்டி ராஜ்ஜிய காலத்தில் எழுதப்பட்ட “சிறு ராஜாவலிய”, “சிறு பூஜாவலிய” போன்ற   நூல்களில் இத்தாதுப்பல் எங்கெல்லாம் பாதுகாக்கப்பட்டு இறுதியில் கண்டி தலதா மாளிகையில் நிலைகொண்டது என்பது பற்றிய விபரங்களைத் தருகிறது.1693 இல் எழுதப்பட்ட “தலதா புவத்” என்கிற காவிய நூலிலும் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்திருக்கிறது. 

நினைவுச் சின்னங்களின் நம்பகத் தன்மை

புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை தாங்கள் வைத்திருப்பதாகக் கூறும் நாடுகள் பல உள்ளன. இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பர்மா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, யப்பான், தென் கொரியா, மேலேசியா, கம்போடியா, தாய்வான்,  நேபாள், பங்களாதேஷ், திபெத், போன்ற நாடுகளில் இத்தகைய புத்தரின் நினைவுச் சின்னங்கள் இருப்பதை காண முடியும்.

ஆனால் இவற்றில் பல நம்ப முடியாத அளவுக்கு புனைவுகளைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழும். உதாரணத்திற்கு சீனாவில் இருபது இடங்களில் புத்தரின் உடற்பாகங்களினாலான நினைவுச் சின்னங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சீனாவில் பீஜிங் நகரில் உள்ளதாக இன்றும் நம்பப்படும் புத்தரின் தாதுப் பல்லின் அளவு மூன்று அங்குலமாகும்.

சிங்கப்பூரில் சைனா டவுனில் புத்த விகாரையும், அதனோடு இணைந்த நூதனசாலையொன்றும் உள்ளது அங்கிருப்பதாக சொல்லப்படும் புத்தரின் புனிதத் தாதுப் பல் விகாரையின் நான்காம் தளத்தில் 350 கிலோ தூபியின் உள்ளே வைக்கப்பட்டிருகிறது. இந்தப் பல் 7.5 சென்றிமீற்றர் நீளமானது என்றால் இதன் உண்மைத் தன்மையை நீங்களே புரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்கு இதனால் ஏராளமான வருமானம் வருகிறது. அந்த விகாரைக்கு மட்டும் வருடாந்தம் சராசரியாக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. சுமார் 3.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்காக மட்டும் வருகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ளதாகச் சொல்லப்படும் இந்த எந்தவொரு நினைவுச் சின்னங்களும் புத்தரது தான் என்று தொல்லியல் ரீதியில் நிறுவப்பட்டதில்லை.

இலங்கையில் காணப்படுவதாகக் கூறப்படும் புத்தரின் எந்தவொரு அஸ்தி தொடர்பான நினைவுச் சின்னங்கள் பற்றிய கதைகள் இலங்கையில் உள்ள இலக்கியங்கள் மட்டுமே குறிப்பிடுகின்றனவே ஒழிய எந்தவொரு இந்திய நூல்களோ அல்லது புத்தர் பற்றி இலங்கைக்கு வெளியில் எழுதப்பட்ட பண்டைய திரிபீடகம் உள்ளிட்ட எந்தவொரு நூல்களிலும் குறிப்பிடப்பட்டதில்லை. அதே திரிபீடக நூல்கள் எதுவும் இலங்கைக்கு புத்தர் மூன்று முறை விஜயம் செய்ததையோ, ஐயாயிரம் வருடங்களுக்கு பௌத்தத்தை பாதுகாக்கும் பணி இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையோ பற்றி கூட குறிப்பிட்டதில்லை என்பதையும் நினைவிற் கொள்வோம்.

நன்றி காக்கை சிறகினிலே! - யூன் 2025

உசாத்துணை:

  1. பெகு என்றால் பர்மா என்று அறியமுடிகிறது.
  2. මූර්ති, ලංකාව සහ බුරුමය, මියුරෝ පොත් ප්‍රකාශකයෝ, 2005,
  3. Culavamsa, tr. W. Geiger, Ceylon Government Information, Department, Colombo, 1953, Vol. II, 5
  4. Codrington H. W, A Short History Of Ceylon, Macmillan and Co., Limited, 1926
  5. கொட்ரிங்டன் (Humphry William Codrington) இலங்கையில் ஒரு சிவில் அதிகாரியாக 1903 ஆம் ஆண்டிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இலங்கையில் கடமையாற்றியவர். பல மாவட்டங்களில் அரசாங்க அதிபராக பணியாற்றியதுடன், இலங்கை பற்றிய பல வரலாற்று ஆய்வுகளை செய்திருக்கிறார். செனரத் பரணவிதான போன்ற தொல்லியல் அறிஞர்களால் கொண்டாடப்பட்டவர். பிற்காலத்தில் ஜோன் டொயிலியின் நாட்குறிப்பை தொகுத்துவெளியிட்டதும் அவர் தான்.
  6. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  7. Harvey GE, History of Burma, Longman Green and co, London, 1925
  8. Strong, John S., ‘The Devil was in that Little Bone’: The Portuguese Capture and Destruction of the Buddha’s Tooth-Relic, Goa, 1561. Past & Present, Volume 206, Issue suppl - 5, 2010, Pages 184–198.
  9. Fernao De Queyroz, The Temporal and Spiritual conquest of Ceylon, tr. SG Perera, Government Printer, Colombo, Vol.II, 1930
  10. ප්‍රතිකාල් ජාතික රෙබෙයිරෝගේ ලංකා ඉතිහාසය, පරි. ටී කේ රුබේරු, ඇස් ගොඩගේ සහ සහෝදරයෝ, කොළඹ, 2003
  11. J Emmeron Tennent, Ceylon, Longman, London, Vol.2, 1859
  12. “Pegu” என்று அன்று அழைக்கப்பட்டது எதனை என்று தேடித் பார்த்தபோது பர்மா என்று அறியக்கிடைகிறது. அதாவது பர்மா அரசருக்கு விலைக்கு விற்றுவிட்டதாக அந்நூலில் குறிப்பிடுகிறார்.
  13. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  14. João de Barros, Da Asia de João de Barros e de Diogo de Couto, Volume VII ( 1616), IX ( 1736)
  15. John S. Strong, The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic (Buddhism and Modernity) 2021 
  16. De Sousa, Francisco. Oriente Conquistado a Jesu Christo pelos padres da Companhia de Jesu da Provincia de Goa. Lisbon: Valentim da Costa Deslandes, 1710.
  17. Anne M. Blackburn, Buddha-Relics in the Lives of Southern Asian Polities, Vol. 57, No. 3/4, Relics in Comparative Perspective (2010)


தலதா புனிதத் தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates