Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சந்தா பணத்துக்கு என்ன நடக்கிறது? RTI இல் அம்பலமானது - க.பிரசன்னா


இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்புடைய மற்றும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் தரவுகளை தொழில் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகவிருக்கிறது. இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தொழில் திணைக்களத்திடம் விண்ணப்பித்த போதும் மேன்முறையீடு, ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு என ஜுன் மாதமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு (03/01/06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 38,3007 (2016/2017) அங்கத்தவர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் 26172 (2017/2018) அங்கத்தவர்களும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் 148,242 (2017/2018) அங்கத்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொள்கின்ற சந்தாப்பணம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தொழில் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டன. எனினும் இவ்விடயம் தொடர்பான தகவல் கோரிக்கைக்கு ஏற்கனவே இருவருக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவிடப்படும் 150 ரூபா சந்தாப் பணத்துக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக ஆராய முற்பட்ட வேளையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் ஆண்டு நிதியறிக்கையினை (23/199) பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, பிரஜைகள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு மாத சம்பளத்தின் போதும் தொழிலாளர்களிடமிருந்து 150 ரூபா சந்தாப்பணமாக அறவிடப்படுகின்றது. இந்த பணத்தின் மொத்த தொகை கோடிகளை எட்டுகிறது. எவ்வாறு இந்த கோடிகள் செலவு செய்யப்படுகின்றன, இந்த கோடிகளால் மக்கள் பெறுகின்ற நன்மையென்ன? என்பதுவே முக்கியமாகும். 2015/2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 396,869 உறுப்பினர்களை கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தாப்பணத்தின் மூலம் 94,731,687 ரூபாவைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 77,71,933 ரூபாவும் 2017/2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 77,580,520 ரூபாவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியல் நிதியெனும் வகையில் 2015/2016 காலப்பகுதியில் 10,525,743 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 8,639,104 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வரவுகள் எனும் வகையில் வட்டி, வாடகை, முதலீடுகள், கடன்கள் மூலமான வட்டி மற்றும் காப்புறுதி என 2015 /2016 காலப்பகுதியில் 20,879,977 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 23,375,980 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் இலாபமாக பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு சந்தாப்பணம் , அரசியல் நிதி மற்றும் ஏனைய வரவுகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 2015/2016 காலப்பகுதியில் 126,37,407 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 109,767,017 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 973,49,464 ரூபா என்றவகையில் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் 30 - 40 வருடங்கள் பெருந்தோட்டங்களில் கஸ்டப்பட்டாலும் இறுதியாக அவர்களுக்கு EPF/ETF எனும் வகையில் 10 - 15 இலட்சம் வரையிலேயே கிடைக்கின்றது. ஆனால் தொழிற்சங்கங்கள் கோடிகளில் இலாபத்தினை ஒரு வருடங்களிலேயே எட்டிவிடுகின்றன. எனவே பெருந்தோட்டங்களில் கஷ்டப்படுவதை விட தொழிற்சங்கங்கள் மூலம் அதிகம் இலாபத்தை பெறலாம் என்பது தெளிவாகிறது.

அதனால்தான் என்னவோ, பெருந்தோட்டங்களை மையப்படுத்தி 34 தொழிற்சங்கங்கள் (தொழில் திணைக்களம் - RTI) இயங்கி வருகின்றன. இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள கோடிகளின் மூலம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏதேனும் கருமங்கள் ஆற்றப்பட்டிருக்கிறதா என கணக்கறிக்கையில் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. இவர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் பெரும்பகுதியை அவர்களின் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்களின் நிர்வாகத்துக்காக அல்ல. இது எல்லா கட்சிகளிடமும் இருக்கும் பொதுவான பண்பாகும். இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகச் செலவுகளுக்காக 2015/2016 காலப்பகுதியில் 98,743,604 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 98,444,643 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 67,597,127 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன.

இதில் அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு, அவர்களுக்கான ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட உள்வீட்டுத் தேவைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமாக கமிட்டிகளுக்கான செலவுகள் என்றவகையில் மாவட்ட மட்டத்திலும் தோட்ட மட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கொண்டு செல்கின்ற தொழிற்சங்க தூதுவர்களாக செயற்படும் மாவட்ட கமிட்டிகளுக்கு 2015/2016 காலப்பகுதியில் 3,002,000 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 2,530,000 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 935,080 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளதோடு தோட்ட கமிட்டிகளுக்கான ஒதுக்கீடுகளுக்காக 2015 /2016 காலப்பகுதியில் 5,149,071 ரூபாவும் 2016/2017 இல் 4,282,765 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேவேளை தொழிற்சங்கங்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மேதின நிகழ்வுகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் 2015/2016 காலப்பகுதியில் 5,007,940 ரூபாவும் 2016/2017 இல் 5,448,872 ரூபாவும் 2017/2018 இல் 4,939,560 ருபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மேதினத்துக்கும் அண்ணளவாக 50 இலட்சம் ரூபாவினை செலவு செய்யும் நிலை காணப்படுகையில் இவ்வாறான பிரமாண்ட மேதினங்களின் மூலம் தொழிலாளர்களுக்கு என்ன உரிமையினை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
இதேவேளை மலையக மக்கள் முன்னணியானது, 01.04.2015 - 31.03.2016 வரையான காலப்பகுதியில் 1,934,000 ரூபாவினை நிதியாக பெற்றுள்ளதாக நிதியறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் இதில் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, பண்டிகைக்கால கொடுப்பனவு என 1,920,628.52 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 01.05.2017 - 31.05.2018 வரையான காலப்பகுதியில் 252,647.18 நிதியாக பெற்றிருப்பதோடு மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

தொழிலாளர் தேசிய முன்னணியானது, 2015 - 2016 காலப்பகுதியில் சந்தாப்பணமாக 1,080,230 ரூபாவினையும் 2016 - 2017 இல் 906,170 ரூபாவினையும் பெற்றுள்ளதோடு அவை மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 
அதேவேளை கடந்த காலங்களில் குறுகிய நோக்கத்துக்காக மலையக மக்களை தொலைக்காட்சி பேச்சு மூலம் ஆட்சி செய்த ரங்காவின் பிரஜைகள் முன்னணியானது, 2016 ஆம் ஆண்டில் 31,650 ரூபாவும் 2017 மற்றும் 2018 இலும் இதே தொகையினை நிலுவையாக கொண்டிருக்கின்றன. 
அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியானது, 2018 மார்ச் 31 இல் 1,400,000 ரூபாவினை நன்கொடையாக பெற்றிருப்பதாக கணக்கு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து மேற்கூறிய கட்சிகளின் கணக்கறிக்கையினை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. தொழிலாளர் தேசிய சங்கமானது தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக இல்லாமையினால் அவற்றின் கணக்கறிக்கையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொழில் திணைக்களத்தின் தகவல்களின்படி 01.04.2016 - 31.03.2017 வரையான காலப்பகுதியில் 34,524,328.41 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணத்தினை பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு என்ன உதவிகளை செய்துவிட்டதாக நினைக்கின்றார்கள். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருபவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியிலேயே அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்களே தவிர, தமது கட்சியின் மூலமான வருமானத்தை கட்சி செலவுகளுக்காகவும் தமது செலவுகளுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் பிறந்தநாள் செலவுகளை கூட மக்களின் சந்தாப்பணத்தில் செலவு செய்து கொண்டாடும் நிலை காணப்படுகின்றது. இதேவேளை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமது கட்சியின் மூலமாக முன்னெடுத்து அவற்றுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையே காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் தொழிலாளர்களை வருமானத்துக்காகவும் பதவிக்காகவும் பலர் பயன் படுத்துகின்றனரே தவிர உண்மையில் தொழிலாளர்கள் மீதான கரிசணையில் எவரும் செயற்படுவதாக தெரியவில்லை.

நன்றி - தினக்குரல்

முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்


அரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித்தல்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த போக்கின் விளைவாக வரிசையாக பல குற்றச்செயல்களை அச்சமூகத்தின் திட்டமிட்ட செயலாக புனைந்து பரப்பி வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மும்முரமாக வளர்ந்துவிட்டிருப்பதை நாமறிவோம். 

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னான முஸ்லிம் சமூகத்தின் வாழ்நிலை என்பது சிங்கள பௌத்த சக்திகளால் தீர்மானிக்கின்ற ஒன்றாக பரிமாணம் பெற்றிருக்கின்றது.

புர்கா தடை, ஹலால் எதிர்ப்பு, முஸ்லிம் கடைகள் புறக்கணிப்பு, மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யும் நிர்ப்பந்தம், மாட்டிறைச்சி தடை என்கிற வரிசையில் முக்கிய ஒன்றாக பரிணமித்திருப்பது "சுய இனப்பெருக்க சதி", ஏனைய இனங்களை "மலட்டுத்தனத்துக்கு உள்ளாக்கும் சதி" போன்ற ஐதீகங்களே.

டொக்டர் ஷாபி மீது கருத்தடை ஒப்பரேசன் குற்றச்சாட்டுகள் ஆயிரக்கணக்காக சுமத்தப்பட்டபோதும் பொலிஸ் விசாரணையில் அத்தனையும் போலிக் குற்றச்சாட்டுக்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு கடையொன்றில்  கொத்துரொட்டியில் மலட்டு மருந்து கலந்திருப்பதாகக் கூறி ஏற்படுத்தப்பட்ட சண்டை வேகமாக பரவி அது பெரும் கலவரமாக உருமாறியது. இதன் நீட்சியாக தற்போது முஸ்லிம்களின் வியாபராத்தைக் குறிப்பாக இலக்கு வைத்து அவர்களின் பொருட்கள் அனைத்திலும் இப்படி கருவுறுவதை தடுக்கும் வழிகள் உள்ளன என்றும் அனைத்தையும் புறக்கணியுங்கள் என்றும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வியாபாரத்தை அழிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் அணியும் பிராக்களிலும், மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகளிலும் கூட ஜெல்கள் மூலம் இந்த கருத்தடை சதிகள் நடப்பதாக வீடியோக்களும் பரவவிடப்பட்டிருந்ததை நாம் கவனித்தோம்.

இதன் விளைவாக சிங்கள பௌத்தர்களால் சந்தேகத்துக்குள்ளாகும் அத்தனை வியாபார நடவடிக்கைகளும் பொலிஸ் முறைப்பாட்டுக்கு உள்ளாகின. அவற்றில் பல நீதிமன்ற வழக்கு விசாரணை வரை கொண்டு செல்லப்படுகின்றன.

இலங்கையில் கருக்கலைப்பு தடை. செய்யப்பட்டிருக்கிறது. எனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக நடத்தும் பல நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால் அப்படியான நிலையங்களை பல சிங்களவர்கள் நடத்திவருகிறபோதும் ஒரு முஸ்லிம் அகப்பட்டுவிட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் திட்டமிட்ட சதியாக புனையப்பட்டு பெரும் பிரச்சாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோலத் தான் போலி மருந்து விற்பனை நிலையங்களும்.

இந்த விளம்பரங்களைப் பாருங்கள். ஒரே நாளில் (13.07.2019) வெளிவந்த அறிவித்தல்கள் இவை. இப்போதெல்லாம் நீதிமன்றங்களே தீர்ப்பின் அங்கமாக குற்றமிழைத்தவர்களை “பொதுமன்னிப்பு அறிவித்தலை” பகிரங்க ஊடகங்களின் வழியாக செய்யும்படி கட்டளையிடுகின்றன. இப்படியான அறிவித்தல்களை சிங்கள சமூகத்தவர் செய்ததாக பார்த்ததில்லை. சில வேளை சிங்கள சமூகத்தவரும் எங்காவது மன்னிப்பு கோரியிருக்கலாம். ஆனால் இப்போது நிகழ்பவை விரிவாக ஆராயப்படவேண்டியவை. குறிப்பாக சமகால நெருக்கடி சூழலில் சிங்கள பௌத்த மனோநிலையை திருப்திபடுத்துவதற்காக; "நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு" எடுத்துவரும் நடவடிக்கைகளே இவை.

தமிழில் நேற்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்த அறிவித்தல் இது.
2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்தின் 131ஆம் பிரிவின் கீழாக மற்றும் கெளரவ நீதிமன்றத்தின் கட்டளை பிரகாரம், இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பு கோரல் மாத்தறை, சம்போதி மாவத்தை , இலக்கம் 29இல் வதியும் ஏ.எஸ். எம் நிஸார் ஆகிய நான், மாத்தறை, புதிய தங்காலை வீதி, இலக்கம் 238பீ என்ற முகவரியில் அமைந்துள்ள சென்ட்ரல் பாமசி எனப்படும் மருந்து விற்பனை நிலையத்தின் உரிமையாளராவேன். மேற்படி மருந்து விற்பனை நிலையத்தில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாது, நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) மற்றும் பாலியல் தூண்டிகளை (Sex Stimylants) களஞ்சியப்படுத்திய தவறுக்கு, வழக்கு இலக்கம் 86225 கீழாக தொடரப்பட்ட வழக்கில் நான் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் மூலம் ரூ.100,000.00 அபராதம் விதிக்கப்பட்டு, அதைச் செலுத்தத் தவறினால் 06 மாதகால சிறைத்தண்டனையொன்று விதிக்கப்பட்டுள்ளதாக இத்தால் பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன். இந்த தவறை நான் மீண்டும் இழைக்க மாட்டேன் என உறுதியளிப்பதோடு, குற்றம் புரிந்தமை தொடர்பில் இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பும் கோருகின்றேன்.
இதே அறிவித்தல் நேற்றைய தினம் வெளியான சிங்கள தினமின பத்திரிகையிலும், ஆங்கில டெயிலி நியூஸ் பத்திரிகையிலும்  வெளிவந்திருக்கிறது. அதே சிங்களப் பத்திரிகையில் மேலும் சிங்களத்தில் மொஹமத் சாலி மொஹமத் என்கிற ஒருவர் “கருத்தடை” மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததற்காக ஐம்பதினாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மன்னிப்பு கோரும் ஒரு அறிவித்தலும் வெளியாகியிருக்கிறது.

சிங்கள செய்திகளை காணும் போது இதுபோன்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாக அறிய முடிகிறது. எனவே இனி வரும் நாட்களில் இப்படி பொது மன்னிப்பு அறிவித்தல்கள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாக வாய்ப்புகள் உண்டு. 

இப்படியான அறிவித்தல்கள் இன்னொருபுறம் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்கள் பற்றிய புனைவுகளை உறுதிபடுத்தும் ஒன்றாகவே அமையப்போகின்றன என்பது உறுதி. குற்றம் செயம் அனைத்துக் குற்றவாளிகளும் நீதிமன்றங்களால் இப்படித்தான் ஊடகங்களில் பொதுமன்னிப்பு அறிவிப்பை செய்யும்படி கட்டளையிடப்படுகின்றனவா? ஏன் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஏன் குறிப்பிட்ட குற்றசெயல்கள் மட்டும் இந்த இலக்குக்கு ஆளாகின்றன. 

இன்னொன்றையும் கவனியுங்கள் சிங்களத்தில் மாத்திரம் ஏனையவற்றைப் போல ஒரு சாதாரண அறிவித்தலாக இல்லாமல் வடிவைக்கப்பட்டு பெயரையும், குற்றத்தையும் தனியாக பெரிய எழுத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். தினமின பத்திரிகையில் வெளியான ஏனைய பொது அறிவித்தல்களுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பக்கலாம்.

இனப்பெருக்க இயக்கம்
முஸ்லிம்கள் திட்டமிட்டு தம்மினத்தை பெருக்குவதும் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் திட்டமிட்ட சதியில் இறங்கியிருக்கிறது என்கிற பிரச்சாரம் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கணிசமான அளவுவெற்றி பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்தப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதில் ஊடகங்கள், சிவில் அமைப்புகள், பௌத்த நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பரந்துபட்ட சக்திகள் கருமமாற்றி வருகின்றன. இன்று இந்த கருத்தாக்கம் நிருவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் வேடிக்கையான நீட்சி என்னவென்றால் இப்போது சிங்களவர்கள் தமது இனப்பெருக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்கிற ஒரு பிரச்சாரமும், அதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. “சிங்கள தறுவன் வவமு” (சிங்கள குழந்தைகளை உருவாக்குவோம்) என்கிற ஒரு இயக்கமே இதற்காக இப்போது தொடக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கென இணையத்தளம் (http://sinhaldaruwan.com), முகநூல் பக்கம் (https://www.facebook.com/SinhalaDaruwan/ ) எல்லாம் இருக்கிறது.

சிங்கள குடும்பமொன்றில் பிறக்கும் நான்காவது குழந்தைக்கு 50,000 ரூபாயும், ஐந்தாவது குழைந்தைக்கு 100,000 ரூபா பணமும் வெகுமதியாக வழங்கப்படுகிறது. இப்படி சிங்கள இனத்தைப் பெருக்கும் குடும்பங்களுக்கு இந்த வெகுமதியை வழங்க சிங்கள பௌத்த தனவந்தர்களை முன்வரும்படியும் தாம் ஒரு எற்பாட்டாளர்களே என்றும் அவ்வமைப்பு தமது பிரச்சாரங்களில் வெளியிட்டு வருகிறது. உதவி கோருவோர் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகளை செய்திருக்கிறார்கள்.


இந்த அமைப்பு குறித்து கடந்த யூலை 14 ஞாயிறு அன்று திவயின பத்திரிகையில் வெளியான கட்டுரையில்
“சிங்கள இனத்தை காக்க சிங்களவர்கள் கைகொடுக்காமல் உலகில் வேறெவர் கைகொடுக்கப் போகிறார்கள். ஒரு இனம் என்கிற வகையில் ஏற்கெனவே நாம் அதிகம் தாமதித்திருக்கிறோம். இப்போதாவது சரியான நடவடிக்கையில் இறங்காவிட்டால் இந்த நிலைமையை சரி செய்ய முடியாமல் போய்விடும். இல்லையென்றால் நாம் பிறந்த நாட்டில் எமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய பெரிய இனம்; சிறுபான்மை இனமாகிவிடும். ஜிஹாத் எனப்படுவது வெறுமனே குண்டு வைப்பது மட்டுமல்ல.... முன்னரெல்லாம் ஒரு சிங்கள குடும்பத்தில் குறைந்தது ஐவர் இருந்தனர். அளவான குடும்பமே பொன்னான குடும்பம் என்கிற கருத்தாக்கத்தை விதைத்து நமது குடும்ப அலகை சிதைத்து விட்டார்கள். நாட்டின் பெரும்பான்மை இனம் “அளவான” குடும்பத்தை அமைக்கும்போது ஏனைய இனங்கள் ஐந்தாறு பேரைக்கொண்ட குடும்ப கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள். அதிவேகமாக அவர்களின் இனத்தை பெருக்கித் தள்ளினார்கள். இதைத் தான் நவீன ஆக்கிரமிப்பு என்கிறோம்.... இப்போதிருந்தே அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால் தான் எதிர்காலத்தில் இன விகிதாசாரத்தின் சமநிலையை நாங்கள் பேண முடியும்."
நிறுவனமயப்பட்ட பேரினவாதம் இனப்பெருக்கம் குறித்த பீதியில் தமக்கான சவக்குழியை தாமே தோண்டிக்கொண்டிருக்கிறது. இனப்பெருக்கத்தை செயற்கையாக திட்டமிட்டு பெருக்குமுன் உலக ஜனப்பெருக்க வேகத்துக்கு ஈடுகொக்கமுடியாமல் உலகின் வளப்பற்றாகுறையை அதற்கேற்ப சரி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் உலகப் போக்கைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் வெறும் “இனத்துவ” போபியா (phobia) மனநிலையிலிருந்து முடிவுகளை எடுக்கிறது பேரினவாதம்.

நன்றி  - அரங்கம்

பண்டாரநாயக்கவால் நிறுத்தப்பட்டு பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்ட மரண தண்டனை! - என்.சரவணன்


மரண தண்டனை விதிப்புக்கு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டதை; நீதிமன்றமே இடைக்காலத் தடையை விதித்திருப்பது ஒரு “மரண” கலாய் தான்.

மரணதண்டையை நீக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அன்றைய நாளை தேசிய சோக தினமாக நான் பிரகடனப்படுத்துவேன் என்று யூலை 14 அன்று எம்பிலிபிட்டியவில் நடந்த கூட்டத்தில் பேசும்போது ஜனாதிபதி தெரிவித்திருந்ததையும் இங்கு கவனிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயம் செய்திருந்தார். அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களை குறுகிய காலத்தில் தேடித்தேடி ஈவிரக்கமின்றி கொலைசெய்த சம்பவத்தால் கவரப்பட்டிருந்தார். இலங்கை வந்ததும் பல மேடைகளில் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தியும் அத்தகைய வழிமுறையே இலங்கைக்கும் தேவையென்றும் கூறிவந்தார். அதன் தொடர்ச்சி தான் இம்முறை போதை ஜூன் 23 முதல் ஜூலை முதல்தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டபோது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கடந்த 26-6-2019 அன்று கையொப்பமிட்டார். இந்த செய்தி இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் வியப்பில் ஆழ்த்தியது.

தடாலடியாக தூக்குமேடை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தூக்கிலிடும் பணிக்காக புதிதாக ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கும் தூக்கிலிடுவது சார்ந்த பணிகளோடு தொடர்புடையவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வுகளைக் கூட சிறைச்சாலைகள் திணைக்களம் ஆரம்பித்தது. ஆக மரண தண்டனையை நிறைவேற்ற நீதிக் கட்டமைப்பு இப்போது தயார் நிலையில் இருக்கிறது.


“நல்லாட்சி” என்கிற பெயருடன் ஆட்சியிலமர்ந்தவுடனேயே புதிய நீதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட விஜயதாச ராஜபக்ச பௌத்த மகாசங்கத்தின் அஸ்கிரிய பீடத் தலைமை பிக்குவை 03.02.2015 அன்று சந்தித்து சந்தித்து “மரண தண்டனையை” அமுல்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார். பௌத்தத் தலைவர்களும் ஆசி வழங்கி வழியனுப்பிவைத்தனர். அந்த நீட்சியின் ஒரு பகுதி தான் ஜனாதிபதியின் முடிவுகள்.

ஒரு பௌத்தனாக ஒரு கொலையையும், பழிக்குப் பழி என்கிற போக்கையும் எப்படி ஆதரிக்க முடியும், போஷிக்க முடியும், நியாயப்படுத்த முடியும். அப்படி செய்துவிட்டு ஒரு பௌத்தனாக அதன் பின்னர் பௌத்த தார்மீகத்துடன் வாழ்ந்துவிடத்தான் முடியுமா?

பலத்த எதிர்ப்பு
மரண தண்டனை குறித்த ஜனாதிபதியின் முடிவுகளை அரசாங்கமும் ஆதரிக்கவில்லை. பிரதான கட்சிகளான ஐ.தே.க, பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி அனைத்தும் எதிர்த்தே வருகின்றன. அதுமட்டுமன்றி ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மன்னிப்புச் சபை மட்டுமன்றி போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐ.நா காரியாலயமும் கூட தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஏதேச்சதிகார போக்கின் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. “பெரும்பான்மை” ஜனநாயக கோட்பாட்டை நிராகரித்து தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன தேவை வந்தது. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் தன்னை உறுதியான தலைவராகவும், துணிச்சலான தலைவராகவும் ஹீரோயிச பாணியில் தன்னை உருவகப்படுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவாகவே அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பார்க்கின்றனர். இது ஜனாதிபதியின் மூடத்தனமான இன்னொரு அரசியல் ஸ்டன்ட் என்றே நாம் புரிந்துகொள்ள முடியும்.
மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் போதைப்பொருள் வியாபாரம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் இதுவரை வழங்கி வந்த ஆதரவுக்கு இனி தடங்கல் ஏற்படலாம் என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். வைத்தியர்கள் சங்கமும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு வைத்தியர்கள் சம்பந்தப்படுவதென்பது வைத்திய அறநெறிகளுக்கு இழுக்கானது என்று வைத்தியர் சங்கம் அறிவித்திருக்கிறது.

மரண தண்டனைகளைத் தடுக்கும் யோசனைக்கு ஆதரவாக 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதியாக 2018 வரை தொடர்ச்சியாக ஐ.நா சபையில் இலங்கை வாக்களித்து வந்திருக்கிறது.

நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரரை இரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தான்தோறித்தனமாக விடுதலை செய்தார். மறுபுறம் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் மரணதண்டனையை எதிர்த்து நிற்பதையும் பொருட்படுத்தாமல் எதேச்சதிகரமாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி நால்வரையும் கொன்றுவிடும்படி ஆணையிடுகிறார். இதே ஜனாதிபதியின் தலைமையில் தான் அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஜனாதிபதிக்கிருந்த பல அதிகாரங்கள் திருத்தப்பட்டன, குறைக்கப்பட்டன. அதன்படி 42(1) விதிகளின் பிரகாரம் குடியரசு அரசாங்கத்தை நடத்தும் ஆட்சியதிகாரம் அமைச்சரைவைக்கு பொறுப்பாக்கப்பட்டது. அந்த அடிப்படைகளை ஜனாதிபதி மீறிக்கொண்டே இருக்கிறார். அரசாங்கமும், பாராளுமன்றத்தின் பிரதான கட்சியும், இன்னும் பல கட்சிகளும் மரணதண்டனையை எதிர்த்து நிற்பதை ஜனாதிபதி கருத்திற்கொண்டிருக்கவேண்டும். அமைச்சரவையின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்.

அரசியலமைப்பை மீறல்
மரண தண்டனையை எதிர்த்து எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 11 பேர் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். (சுமந்திரன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி அந்தஸ்துடையவர் என்பது இன்னொரு முரண்நகை.) சுமந்திரனின் வாதத்தின்படி 

அரசியலமைப்பின் 11, 12(1) ஆகிய உறுப்புரைகளை ஜனாதிபதி மீறியிருக்கிறார் என்பது முக்கிய தர்க்கங்கள்.
11வது உறுப்புரையின் படி “ஆளெவரும் சித்திரவதைக்கு, அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற  அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.” என்கிறது
12(1) உறுப்புரிமையின்படி “சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் : அத்துடன் அவர்கள் சட்டத்தின் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்” என்கிறது.
மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட  1400 பேர் சிறையில் இருக்கும்போது குறிப்பாக அவர்களில் இருந்து நால்வரை மாத்திரம் தெரிவு செய்தது உறுப்புரிமை 12(1)இன் பிரகாரம் தவறானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மரணதண்டனை உச்சபட்ச தீர்ப்பாக சட்டங்களில் இருக்கிற போதும் அது ஒரு கடுதாசி மட்டத்தில் நின்றுவிடுகிறது. தீர்ப்பு வழங்கப்பட்டாலும்  நடைமுறை படுத்துவதில்லை. எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை மரணதண்டனைக்கு கையெழுத்திட்டதில்லை. 

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன சமீபத்தில் “விகல்ப” இணையத்தளத்திற்கு எழுதிய கட்டுரையொன்றில் ...
“நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்தவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. அப்போது அக்குற்றவாளியை தூக்கிலிட விரைவில் உத்தரவிடவேண்டும் என்று ஜனாதிபதி சந்திராகாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்துக்கு அவர் அடிபநிந்துவிடுவாரோ என்கிற பயம் எங்களுக்கு இருந்தது. இத்தனைக்கும் அம்பேபிட்டிய எனது சக சட்டக்கல்லூரி மாணவன். மரண தண்டனை அளிப்பதில் உள்ள விபரீதங்களை விளக்குவதற்காக ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்கச் சென்றிருந்தேன். நான் விளக்கி முடிப்பதற்குள் “யார் என்ன கூறினாலும், நான் மரண தண்டனையளிக்க கையெழுத்திட மாட்டேன்” என்றார். நான் வியந்தேன். கொலைக்கு ஆளான ஒரு தகப்பனின் பிள்ளை அவர். கொலைக்கு ஒரு ஆளான கணவனின் மனைவி அவர். கொலைமுயற்சிக்கு ஆளாகி ஒரு கண்ணையும் பறிகொடுத்த பெண் அவர். 
போர்த்துக்கேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பகிரங்க மரண தண்டனை. இந்தப்படம் 1672 இல் வெளியானபிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus)இன் Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon) என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
வரலாறு
இலங்கைப் பொறுத்தளவில் மரணதண்டனை முறை என்பது தூக்கிலிட்டு கொல்வதையே குறிக்கிறது. காலனித்துவ காலத்தில் காலத்தில் மரணதண்டனை முறைகளாக சுட்டுக்கொல்வது, தலையை வெட்டுவது, போன்ற வழிமுறைகளும் வழக்கில் இருந்தன. இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி பிரெடெரிக் நோர்த் 1802இல் மரண தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு முறைகளை இரத்துசெய்து தூக்கிலிடுவதை சட்டபூர்வமாக ஆக்கினார். ஆனாலும் அதற்குப் பிறகும் ஊவா – வெல்லஸ்ஸ போராட்ட காலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை துண்டித்தும், பகிரங்கமாக சுட்டும் கொன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1915ஆம் ஆண்டு கண்டி கலவர காலப்பகுதியில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பலர் அந்தந்த இடங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு மக்கள் கூடியிருக்கும் இடங்களில் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மரண தண்டனையை இரத்து செய்யும் கோரிக்கையை 1936இல் முதற்தடவை அரசாங்க சபையில் பிரேரித்தவர் டீ.எஸ்.சேனாநாயக்க. ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது சட்டபூர்வமாக அறிமுகமான மரணதண்டனை முறை 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ஆட்சியேறியவுடன் அந்த மரண தண்டனையை இரத்து செய்தார். ஆனால் மூன்று ஆண்டுகளில் அவர் சோமராம தேரரால் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களுக்கு தண்டனையளிப்பதற்காக மீண்டும் 1962இல் மரண தண்டனையை சிறிமா ஆட்சி மீளவும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. சிறையில் இருக்கும்போதே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சோமராம 06.07.1962 அன்று தூக்கிலிடப்பட்டார். இறுதியாக 27.06.1976 அன்றுக்குப் பின்னர் எவரும் தூக்கிலிடப்படவில்லை. 1977இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சியேறியதன் பின்னர் மீண்டும் மரணதண்டனை இல்லாது செய்யப்பட்டது.

அந்த 20 பேர்
இலங்கையில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கும் நிலையில் தற்போது மரணதண்டனையளிக்கப்பட ஜனாதிபதியால் கட்டளையிடப்பட்டவர்கள் நால்வர். இவர்கள் நால்வரும் போதைபொருள் குற்றவாளிகள். இவர்களை கொன்றுவிட்டால் மாத்திரம் போதைப்பொருள் நின்றுவிடுமா? இன்றும் பல சிறைகளில் சிறைக்குள்ளும் போதைப்பொருள் விற்பனை, பாவனை இருப்பதை பலரும் அறிவார்கள். அப்படி இருக்க இந்த மரண தண்டனையால் மாத்திரம் எதைத் தடுத்துவிட முடியும்.

இலங்கையில் தற்போது சிறைகளில் தண்டனை அனுபவித்துவருபவர்களின் எண்ணிக்கை இருப்பதையாயிரம் பேர். அவர்களில் கிட்டதட்ட 60 சதவீதமானோருக்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் விற்பனை, வினியோகம், பயன்பாடு போன்றவற்றோடு தொடர்புடையவர்கள். அதில் 20 பேர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்று தெரியவருகிறது. மொத்தம் 455 மரண தண்டனைக் கைதிகள் தற்போது சிறைச்சாலையில் உள்ளனர். 

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 8 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் அடங்குகிறார்கள். இவர்களில் ஒருவர் பெண். 
எம்.கே. பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ. பூட்பி .ஜே .போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம். சமிந்த, எஸ். கணேசன், டபிள்யு . விநாயகமூர்த்தி, எஸ்.ஏ. சுரேஷ்குமார், எம். குமார், எஸ். மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ். முஹம்மது, ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம் .மிஸ்வர், பி.கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் நிசா ஆகியவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தூக்கிலிட தீர்மாணிக்கப்பட்டிருக்கும் நால்வரில் இருவர் சிங்களவர்கள், அடுத்த இருவரில் ஒருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம். ஆனால் இந்த நால்வரின் பெயர்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
போதைப்பொருளை தடுக்குமா
மரண தண்டனை இதுவரை அமுலில் இல்லாததால் அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் சிறைகளில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நிலையே கடந்த 43 ஆண்டுகளாக தொடர்ந்துவந்துள்ளது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த பற்பல வழிகளில் அரசு திட்டமிட்டாலும் ஊழலும், லஞ்சமும் அதிகாரத் தலையீடுகளும் தலைதூக்கியுள்ள இலங்கையின் கட்டமைப்பானது போதைப்போருளைக் கட்டுப்படுத்த மிகப் பெரும் தடையாக இருக்கிறது. போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மரணதண்டனை அளிப்பதற்குப் பதில் அதனைக் கட்டுப்படுத்துவதில் அரச கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதும், போதைப்பொருளுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளுக்கே அதிகபட்ச தண்டனை அளிக்கும் வழிவகைகளையுமே இன்று செய்யப்படவேண்டியவை.

77ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையின் வருகையோடு இலங்கைக்குள் நுழைந்த மிக மோசமாக சமூக அழிப்பு, பண்பாட்டு அழிப்பு ஆயுதங்களில் ஒன்று தான் போதைப்பொருளும். இன்று மோசமான சமூக சீர்கேடுகளையும், குற்றச் செயல்களையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 


கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பிடிக்கப்பட்ட போதைப்பொருள் நிறைந்த கொள்கலன் ஒன்றைப் பற்றிய விசாரணையில் போது  அதற்கு அனுமதிகொடுத்தவரே நாட்டின் பிரதமர் தான் என்பதை நாடு முழுவதும் அறிந்தது. அதுபோல சென்ற அரசாங்கத்தின் போது ஒரு அரசியல்வாதியின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து சோதனை செய்தபோது அங்கு ஏராளமான போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வேளை அந்த இடத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நேரடியாக ஹெலிகொப்டரில் இறங்கி குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்து அவரை ஆரத்தழுவி விடுவித்த சம்பவத்தையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். போதைப்பொருள் தடுப்பு பற்றி பீற்றிக்கொள்ளும் இதே ஜனாதிபதி அந்த அரசியல்வாதியை சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளராக நியமித்தார். கடந்த மாதம் மகிந்த தரப்பின் முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமான ஒரு பாரிய கசிப்பு தயாரிப்பு தொழிற்சாலையொன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலர்  போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பது இரகசியமானதல்ல.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் போன்றோருக்கு ஆதரவாக தமிழ் சமூகத்தில் எழுந்த மரண தண்டனைகெதிரான பலத்த கருத்தாடலே பேசுபொருளாகி விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது. சிங்களச் சூழலில் தற்போது தான் மரண தண்டனைக்கெதிரான கருத்துநிலை பேசுபொருளாகியுள்ளது. ஆனால் நாட்டின் பெரும்போக்கு கருத்துநிலை மரணதண்டனைக்கு எதிராகத் தான் இருக்கிறது.

ஜனாதிபதி கையெழுத்திட்டு இரண்டு வாரங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதற்கிடையில் அதற்கெதிரான வழக்கு ஜனாதிபதியின் கட்டளைக்கு இடைக்கால தடையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கு இனி எத்தகைய தீர்ப்பை வழங்கப் போகிறது என்பதை சகலரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நஹி வேறேன் வேறானி”
(வெறுப்பால் வெறுப்பழியாது) – கௌதம புத்தர்
நன்றி - தமிழர் தளம்

கோத்தபாயவுக்கு எதிரான கலிபோர்னியா வழக்கின் தமிழாக்கம் (pdf)


பாலியல் வதை முகாம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருக்கும் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக களமறங்கவிருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு முறைப்பாட்டின் தமிழாக்கம் இது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் பணிப்புரையால் மேற்கொள்ளப்பட்டதும், அவரின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டதுமான மோசகரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த முறைப்பாட்டின் தமிழாக்கம் 107 பக்கங்களைக் கொண்டது.

இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கும் பத்துபேரில் மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு தமிழர்கள் அடங்குகின்றனர். எஞ்சிய இருவர் சிங்களவர்.

ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் புலிகளின் சதி என்றும், புகலிடத் தமிழர்களின் (டயஸ்போரா தமிழர்) சதி என்றும் கோத்தபாய பல கூட்டங்களில் தெரிவித்து வந்ததை நாமறிவோம்.

தரவிறக்கம் செய்ய
http://www.itjpsl.com/assets/press/Complete-set-of-Translation-of-Rajapaksa-amended-Complaint-copy.pdf#sinhala

பெருந்தோட்ட சேவையாளர்களும் அடிப்படை உரிமைகளும் - அருள்கார்க்கி


பெருந்தோட்டத் தொழிற்துறையில் தொழிலாளர்களைப் போலாவே தோட்ட சேவையாளர்களும் பேசப்பட வேண்டிய குழுவினரே. இயக்;க ரீதியாக ஒருமுகப்படுத்தப்படாத காரணத்தினால் இவர்கள் உதிரிகளாக உரிமையற்று இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களைப் போன்று தொழிற்சங்க கட்டமைப்பும் இவர்களிடத்து பலமானதாக இல்லை. குறிப்பாக பெரும்பான்மை இனத்தவரும் கணிசமான பெருந்தோட்ட சேவையாளர்களாக இருப்பதன் காரணமாக இவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதேப்போல் அண்மைக்காலமாக பெரும்பான்மை இனத்தவர்களின் உள்வருகை அதி-கரித்துள்ளமையும் அவதானிக்க முடிகிறது. தோட்ட சேவையாளர் நலன்புரி சங்கங்கள் முன்னர் தோட்டங்களில் காணப்பட்டாலும் இன்றளவில் அவையும் அருகிவருகின்றமைக்கு சில காரணங்கள் இருப்பதனை பட்டியலிட முடியும். தோட்ட நிர்வாக ரீதியாக இவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

மலையக அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் பல தோட்ட சேவையாளர்களுக்காக உறங்கு நிலையில் உள்ளன. இத்தொழிற்சங்கங்களுக்கு இவர்கள் தொழிலாளர்களை போலவே மாதாமாதம் சந்தா செலுத்துகின்றனர். எனினும் இவர்களுக்கான நலன்புரி திட்டமென்று எதுவும் இதுவரை முன்மொழியப்பட்டதாக தெரியவில்லை. இவர்கள் நி-றுவனமயப்படுத்தப்படாத காரணத்தினால் தோட்ட மட்டத்திலும் ஒருங்கிணையை முடியாத அசாத்திய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக பயிற்சி நிலைக்கு மலையக இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் தோட்ட நிர்வாகங்கள் அதிகமாக உழைப்;;பை உறிஞ்சிவிட்டு தொடர்ச்சியாக அவர்களை பயிலுனர்களாகவே வைத்திருக்கின்றன. வெளிக்கள உத்தியோகத்தர், தொழிற்சாலை மேற்பார்வையாளர் அலுவலக உதவியாளர்கள், சாரதிகள் மற்றும் சிறுவர் நிலைய பராமரிப்பாளர்கள் என்றவாறான தொழில் வகைப்பாட்டில் இவர்கள் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். எனினும் அவர்கள் தொழில் தேர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ பதவிநிலைகளை தரமுயர்த்துவதற்கோ நிர்வாகங்கள் பங்களிப்புச் செய்வது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

அண்மைக்காலமாக வெளிமாவட்டங்கள் மற்றும் நகரப்பகுதியில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்ட சேவையாளர்களாக உள்வாங்கப்படுகின்றனர். சாதாரண தேர்ச்சியுடன் இணைத்துக்
கொள்ளப்படும் இவர்கள் சிறிது காலத்தில் பதவி உயர்வுகளையும், சலுகைக-ளையும் பெற்றுக் கொள்கின்றனர். தோட்ட முகாமைத்துவத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் அறிமுகமாகி வருகின்றவர்களை நிர்வாகங்கள் இணைத்துக் கொள்கின்றன. அவர்களுக்கு மொழி தெரியும் போன்ற அற்ப காரணங்களுக்காக உயர்நிலை பதவிகளை வழங்குகின்றனர். விடுதி வசதி, போக்குவரத்து வசதி, உதவியாளர்கள் மற்றும் அவர்களின் அன்றாட பணிகளை நிறைவேற்ற தோட்டத்தில் பணியாளர்களையும் நிர்வாகங்கள் வழங்குகின்றன.
 விவசாயம் செய்தல் விறகு பிளத்தல் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லல் கால்நடைகளை பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு தோட்ட கணக்கில் வேலையாட்கள் வழங்கப்படுகின்றது. இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கலாதலால் தொழிலாளர்களும் சிறுபான்மை தோட்ட சேவையாளர்களும் முறையிட முடியாமல் தவிக்கின்றனர்.

பெருந்தோட்டத்தில் அனைத்து தொழில் பிரிவிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் உயர்நிலை பதவிகளில் இருக்கின்றனர். எம் இளைஞர் யுவ-திகள் கீழ்நிலை ஊழியர்களாகவும் பயிற்சி நிலையிலும் தொடர்ந்து இருத்தப்படுகின்றனர். பெரும்பான்மை இனத்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு இவர்கள் பலிகடாவாக

ஆக்கப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக சாரதிகள்வெளிக்கள உத்தியோகத்தர்கள் போன்ற ரீதியில் இவர்கள் குறைவான சம்பளத்தில் உழைப்பை உறிஞ்சுகின்றனர்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மூலம் இவர்களுக்கான தொழில் பாதுகாப்பு, பயிற்சி, ஊதியம் போன்றவற்றை முறைமைப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாகவோ பெருந்தோட்ட ரீதியாகவோ கட்டமைப்புசார் இயக்கம் எதுவும் இவர்களுக்கு இல்லாதக் காரணத்தினால் தொழில் அடிப்படையில் அனாi-தயாக்கப்பட்டுள்ளனர். தனியார் துறை ஊழியர்களுக்கு என்று அரசால் நிர்ணயிக்கப்படும் எவ்வித சட்டத்திட்டங்களும் இவர்களுக்கு ஏற்புடையதாகவோ அபிவிருத்தி அடைய பங்களிப்புச் செய்வதாகவோ இல்லை.

தோட்ட சேவையாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் கைச்சாத்திட்டது. (Ceylon Estate Staffs Union - CESU) இதன்போது பல்வேறு விடயங்களுக்கு முதலாளிமார் சம்மேளத்துடன் இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக சம்பள உயர்வு, மூன்று வருடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவு அதிகரிப்பு என்பவற்றுடன் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 இல் இருந்து 60 ஆக அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

எனினும் அதற்கடுத்து வந்த ஆட்சி மாற்றம், பெருந்தோட்ட கம்பனிகள் என்பன தோட்ட சேவையாளர்களுக்கான நலன்புரி திட்டங்களில் ஆர்வம் காட்டவில்லை. கம்பனிகளின் நட்டத்தைக் காரணம் காட்டியே ஏமாற்றி வந்திருக்கின்றன. உரிமை சார்ந்து போராட்டங்களை மேற்கொண்டு சாதிப்பதற்கு அவர்கள் உதிரிகளாக சிதறிக்கிடந்து பயனில்லை. ஒருசிலர் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதன் காரணமாக ஒருங்கிணைந்த வெற்றிகள் சாத்தியமற்று காணப்படுகின்றன.

தோட்ட சேவையாளர் சேமலாப சங்கம் (Ceylon Estate Staffs Union - CESU)சமீப காலத்தில் நிறுவப்பட்ட ஒரு நலன்புரி அமைப்பாகும். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு புறம்பாக இவ்வமைப்பில் ஊழியர்கள் தமது பங்களிப்பை வைப்புச் செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமானதாக அமைந்நது. வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்ற கடன்திட்டங்கள் மூலம் அவர்கள் நன்மையடையக்கூடிய வகையில் வசதிகள் காணப்பட்டன. எனினும் பங்களிப்பாளர்களின் குறைவு காரணமாக பெயரளவிலான சில கட்டங்களை மட்டுமே இன்றுவரை கடக்க முடிந்துள்ளது.

மலையகத்துக்கான வீட்டுத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தோட்ட சேவையாளர்களுக்கும் அவற்றில் இடமளிக்கப்பட வேண்டும். தொழிலிலிருந்து விலகியவுடன் தங்கும் விடுதிகள் அவர்கள் கையளிக்க வேண்டும் என்பது நியதி.
தோட்டம் தொழிலாளர்களைப் போலவே அவர்களும் இத்தொழிற்துறையை கட்டியெழுப்புவதில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பது உணரப்பட வேண்டும். எனவே அவர்களுக்கும் வீட்டுத்திட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசியல், சமூக ரீதியாக அனாதையாக்கப்பட்டுள்ள இவர்களை இயக்க ரீதியாக ஒருங்கிணைக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு சாத்தியமாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு பாரிய பொறுப்பு இவர்கள் விடயத்தில் இருக்கின்றது. இன்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சும் மலையக பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இதனை பேசுபொருளாக்க வேண்டும்.

தொழிற்சார் ஒழுக்க கோவையும், தொழிற் வகைப்பாடுகளுக்கு ஏற்ற சம்பளத்திட்டமும் கம்பனிகளால் முன்வைக்கப்பட வேண்டும். ஆட்சேர்ப்பின் போது தகைமை அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட நியமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ட்ரஸ்ட் நிறுவனம் மனிதவள அபிவருத்தி சாரந்து தோட்ட சேவையாளர்கள் வலுவூட்டப்படுதலும் அவசியம். முறைசாரா ஒரு தொழிற்துறையாக தோட்ட சேவையாளர்கள் இன்றும் இருப்பது காலத்தின் அவலம். அதனை நிவர்த்திச் செய்ய வேலைத்திட்டம் அவசியம். காரணம் இவர்களும் வாக்களிக்கின்றனர். சந்தா செலுத்துகின்றனர்.

‘உளிகளால் செதுக்கப்பட்டது எமது வாழ்க்கை’ - நவரத்னம் தில்காந்தி


இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வர்த்தக பெருந்தோட்ட பயிர்களில் இறப்பரும் அடங்குகின்றது. இலங்கையில் இறப்பர் 1876 ஆம் ஆண்டு முதன் முதலில் பிரித்தானியரால் களுத்துறை மாவட்டத்தில் பயிரிடப்பட்டது. தேயிலைப்பயிர்ச்செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் கூடுதலாக பெண் தொழிலாளர்கள் இணைந்திருப்பது போன்று இறப்பர் பால் வெட்டும் பணிகளிலும் பெண்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இறப்பர் பால் வெட்டும் பெண்களின் வாழ்க்கைக் குறித்து அதிகமாக பேசப்படுவதில்லை. அந்த வகையில் மொனராகலை மாவட்டத்தின் மரகலை குமாரவத்தை பிரதேச இறப்பர் தோட்டத்தொழிலாளி ஒருவர் தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

அதிகாலை 4 மணிக்கு பணி
எனது பெயர் குகனேஸ்வரி. நான் பணி புரியும் இறப்பர் தோட்டம் அரசாங்கத்தின் கீழ்“ஜனவச” எனும் நிறுவனத்தால் கொண்டு நடத்தப்படுவதாகும். நான் தினமும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து ஒரு கோப்பை தேநீர் அருந்தி விட்டு டோர்ச் லைட்டை எடுத்துக்கொண்டு இறப்பர் பால் வெட்டச்சென்று விடுவேன். பின்னர் 2 மணியளவில் பால் ஏற்றிச்செல்லும் வாகனத்தில் சேகரித்த இறப்பர் பாலை ஊற்றி விட்டு வரவை பதிந்த பின்னரே வீட்டுக்குச் செல்ல முடியும். உணவினை சமைத்து பரிமாறியதன் பின் இரவு துயிலும் தருணத்தில் கடன் தொல்லையையும் குடும்ப வறுமையையும் நினைத்து தூக்கம் வர விழிகள் மறுத்தாலும் இந்நிலையைப் போக்க “நாளைக்கும் வேலைக்குப்போக வேண்டும்” எனும் மன உறுதியோடு துயில் கொள்ளும் சாதாரண தோட்டத்தொழிலாளி தான் நானும்.

எனது குடும்பத்தில் 8 உறுப்பினர்கள். எனது கணவரும் ஒரு தோட்டத்தொழிலாளியே. அத்தோடு நோயாளியும் கூட. எனக்கு 6 பிள்ளைகள். இவர்களுள் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் திருமணம் முடித்து தனியாக வாழ்கிறார்கள். ஏனையவர்களில் ஒரு பெண் பிள்ளை படிப்பை முடித்து வீட்டில் உள்ளார். மற்ற இரு ஆண்பிள்ளைகளில் ஒருவர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். மற்றவர் 9 ஆம் தரத்தில் படிக்கிறார். எமது வீடு மிகச் சிறியது. மழை வெள்ளம் நிரம்பி வழிகின்ற கூரையின் கீழ் வாழ்ந்து வருகிறோம். அரசாங்கத்தின் பார்வையில் எனது குடிசை வீடு தென்படுமா?எனும் ஏக்கத்தில் குடும்ப சுமையை சுமந்து வருகிறேன்.

ஆபத்துகள் நிறைந்த பணி
அதிகாலை தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் ‘‘இறப்பர் மரத்தை உளிகொண்டு வெட்டும் போது கைகளில் எவ்வித காயமும் ஏற்படாமல் இக்காட்டுப்பகுதியில் விஷஜீவராசிகளின் தீண்டலுக்குட் படாமல் இன்றைய தினம் முழுநேர வேலைப்பதிவினை பெற்றுக்கொள்ளும்படி அருள் புரிய வேண்டும்’’ என இறைவனை பிரார்த்தித்துக்கொள்வேன். இறப்பர் தோட்டமானது மேடு பள்ளமாக காணப்படும். ஒருவருக்கு தலா 200 மரங்கள் வீதம் வழங்கப்படுகின்றன. இம்மரங்கள் காட்டுப்பகுதியிலேயே அதிகமாக காணப்படும். அதிகாலையில் டோர்ச் லைட்டின் உதவியுடன் அக்கரடுமுரடான கற்பாறைகளின் நடுவே காணப்படும் இறப்பர் மரங்களைத் தேடி பால் வெட்ட ஆரம்பிப்போம். சில மரங்கள் கைக்கு எட்டிய தூரத்திலும் பல மரங்கள் கைக்கு எட்டாத தூரத்திலும் காணப்படும். அவ்வேளைகளில் நீண்ட பிடிகளுடன் கூடிய உளிகளை பயன்படுத்தி பால் வெட்டப்படும்.

நண்பகல் 12.00 மணியளவில் வெட்டிய மரங்களின் பால்களை சேகரித்துக் கொள்வோம். இதன் போது ஒரு நாளைக்கு 200 மரங்களில் பால் வெட்ட சேகரிக்கவென 400 தடவைகள் நடந்து திரிகிற நிலைமைகளும் உண்டு.

விதிமுறைகள்
இறப்பர் தோட்டங்களின் பாதுகாப்பு அடிப்படையிலான பணிகள் குறித்து விதிமுறைகள் காணப்படுகின்றன. இறப்பர் மரங்களில் காயங்கள் ஏற்படக்கூடாது. குறித்த அடி நீளத்திற்குள் காயம் ஏற்படாது பாதுகாக்க வேண்டும் எனும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பழைய மலை இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் வடியும் ‘பீலி’(தகர வடிவிலான குழாய்) மற்றும் சிரட்டை அல்லது பிளாஸ்ரிக் கோப்பை என்பன தூய்மையாக பேணப்பட வேண்டும். இறப்பர் பாலுடன் நீர் கலக்கக்கூடாது போன்ற விதிமுறைகளும் காணப்படுகின்றன. அத்தோடு, எமது குடும்பத்தில் யாராவது இறப்பர் மரங்களுக்கு கல் எறிந்து காயப்படுத்தினாலோ அல்லது விறகு வெட்டினாலோ சில தினங்கள் வேலை நிறுத்தப்படும்.

ஊதியம் எவ்வளவு ?
ஒரு நாளைக்கு 418 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இறப்பர் தொழிலாளி ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய பாலின் அடிப்படையிலும் வேதனம் வழங்கப்படுகிறது.

ஒருவர் 20 லீற்றர் அல்லது அதற்கு மேலே எடுக்க வேண்டும். குறைவாக எடுப்போர் எச்சரிக்கப்படுவர். அத்தோடு அதிகமாக பால் எடுப்போருக்கு சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் எனும் கருத்து கருத்தளவில் மாத்திரமே இருந்து வருகிறது.

  18 நாட்களுக்கு மேல் வேலை நாட்கள் அதிகரிக்குமாக இருந்தால் மேலதிக சம்பள கொடுப்பனவு எனும் அடிப்படையில் 700ரூபா கொடுக்கப்படும் என கூறப்படும் பொழுதிலும் அவை நடைமுறையில் இல்லை. எனக்கு கிடைக்கும் சம்பளம் மாதத்திற்கு 15 ஆயிரமாக இருக்கும். அதிலும் தீபாவளி , கோயில் நிர்மாணப்பணி, மரண சமுர்த்தி திட்டத்துக்கு என சம்பளம் கழிவு செய்யப்பட்டு இறுதியில் எனது கையில் கிடைக்கும் சம்பளத்தொகை 12 அல்லது 13 ஆயிரமாகவே இருக்கும். நாட்டிலே விலைவாசிகள் அதிகரித்து வருகின்ற இக்காலத்தில் நான் எடுக்கும் சம்பளத்தொகையுடன் எனது குடும்பத்தை கொண்டு செல்வதென்பது சிரமமானதாகும்.

சில சமயங்களில் கடன் வாங்கியே குடும்பச் செலவை ஈடுசெய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அல்லது இறப்பர் தொழில் முடிய பகுதி நேரத்தில் வேறு வேலைக்குச் சென்று வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இல்லாத பட்சத்தில் வீட்டிலிருக்கும் ஓரிரு தங்க நகைகளை அடகு வைத்து காசாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அண்மைக்காலத்தில் அரசாங்கத்தால் சம்பளம் வழங்க தாமதிக்கப்பட்டது அதன் போது ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வறுமையின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தற்போது இறப்பர் பால் விலை அதிகரிப்பினால் சம்பளம் ஒழுங்குமுறையாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இதனூடாக கிடைக்கிற சம்பளம் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இல்லை

 பெண்களே அதிகம்
எங்களது இறப்பர் தோட்டத்தை பொறுத்த வரையில் பெண் தொழிலாளர்களே அதிகம். அந்த வகையில் பெண்களுக்கென விசேட சலுகைகள் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் கர்ப்பிணி பெண்களுக்கென சில சலுகைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பெண்கள் தமது பிரசவ காலம் வரை தொழில் புரிய வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது கர்ப்பிணித்தாய்மார் 07 மாதங்களிலேயே வைத்திய அறிக்கையினை கையளித்து விடுமுறை எடுத்துக்கொள்ளக் கூடிய சலுகைகள் காணப்படுகின்றன. அத்தோடு அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது. ஏனைய பெண்களுக்கான சலுகை எனும் போது வேலைத்தளத்தில் காயம் ஏற்படும் பட்சத்தில் விடுமுறையில் வேலைநாட்கள் பதியப்படும். அவ்வாறு குறித்த தொழிலாளிக்கு நோய் ஏற்பட்டால் வைத்திய அறிக்கையினை கையளித்து விடுமுறை எடுத்துக்கொள்ளக் கூடிய சலுகைகள் காணப்படுகின்றன.

எங்களுக்கு மாதம் முழுவதும் வேலை தான். (சனி, ஞாயிறு உட்பட 31 நாட்களும் ) விடுமுறை தினம் எனும் போது மழைக்காலங்களில் இறப்பர் பால் எடுக்க முடியாது. அதனால் தொழிலாளர்களுக்கும் - முதலாளிகளுக்கும் திண்டாட்டம் தான். எனினும் பண்டிகைகள் திருவிழாக் காலங்களில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது.

இறப்பர் தோட்டத்தின் சிரமங்கள்
 ஆரம்ப காலத்தில் தொழிலாளர்கள் யாவரும் (கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) 03 மைல் தூரத்திற்கு நடந்து சென்று பால் வாளியை சுமந்து கொண்டு தொழிற்சாலைக்குச் சென்று இறப்பர் பாலினை ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தோடு 350 ரூபா கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலையும் இருந்தது.தற்போது பால் ஊற்றும் வாகனம் எமது தோட்டத்திற்கே வந்து பாலினை சேகரிப்பதால் இந்நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இருப்பினும் என்னை பொறுத்த வரையில் வீட்டிலிருந்து 02 மைல் தூரத்திற்கு இறப்பர் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையிருப்பதால் போக்குவரத்து செலவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் வேலை செய்யும் தளம் கரடுமுரடான கல்லும் முள்ளும் நிறைந்த இடமாகும். இவ்வாறான காட்டுப்பகுதிக்குள் தொழில் புரிய வேண்டியுள்ளதனால் விஷ ஜந்துக்களின் தீண்டல்களும் இருக்கவே செய்கின்றன.

இறப்பர் தொழிற்துறையின் எதிர்காலம்
எதிர்காலத்தில் இறப்பர் தொழிலின் நிலையானது மேலும் வளர்ந்து செல்லும் என நம்புகிறேன். ஏனெனில் மலையகத்தை பொறுத்த வரையில் தற்போது பல இறப்பர் பயிரிடல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அறிகிறோம். அத்தோடு வளர்ந்து வருகின்ற இந்நவீன உலகில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கான புதிய நெறிமுறைகளினூடாக இயந்திரமயப்படுத்தப்பட்டு அதீத வளர்ச்சியுறும் என நினைக்கிறேன். ஆனால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . “நாங்கள் பட்ட கஷ்டம் எங்கள் பிள்ளைகள் படக்கூடாது”அவர்கள் படித்து மத்திய தர வர்க்கமாக சமூகத்தில் வலம் வர வேண்டும். அதே வேளை வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் நவீனத்தை நோக்கி பயணிக்கின்ற வேளைகளில் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளன. எதிர்காலத்தில் உளி பிடிக்க தெரியாத சந்ததி உருவாகும் நிலையே காணப்படுகிறது. இளைய தலைமுறையினரை நோக்கி நான் சொல்ல விரும்புவதெல்லாம் -நீங்கள் கையில் எடுத்த பேனா மூலம் எங்களால் எழுத முடியாது நாங்கள் எடுத்த உளியை கொண்டு உங்களால் வெட்ட முடியாது. அவ்வளவுதான்.

நன்றி - வீரகேசரி

வரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்! - என்.சரவணன்

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் "Oud En Nieuw Oost Indien"  நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
போர்த்துகேயர்களின் முடிவும், டச்சுக் காரர்களின் ஆரம்பத்தையும் குறித்து வரலாற்றுப் பதிவுகளைச் செய்த பிலிப்பு பால்டேயு, ரொபர்ட் நொக்ஸ், கெப்டன் ரிபைரோ போன்றவர்களின் வரிசையில் பிரான்சாஸ் வெலென்டின் (François Valentijn) என்கிற வரலாற்றாசிரியரும் முக்கியமானவர். இவர்களில் வெலென்டின் மாத்திரம் இலங்கையில் இருந்ததில்லை. அவரின் நூல்கள் உலக அளவில் பிரசித்திபெற்றபோதும் இலங்கையின் வரலாற்றாசிரியர்களால் அந்தளவு பேசப்பட்டதில்லை. இவர்களின் வரிசையில் யாழ்ப்பாணம், வன்னி கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழ் அரசுகள் குறித்து பேசியதால் கெப்டன் ரிபைரோ வரலாற்றசிரியர்களால் கண்டுகொள்ளப்படவில்லையோ அதுபோல பிரான்சாஸ் வெலென்டினும் வடக்கு – கிழக்கு பகுதியில் இருந்தவற்றை பதிவு செய்ததால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் கொள்ள இடமுண்டு.

பயணம்
வெலென்டின் 17.04.1666ஆம் ஆண்டு ஒல்லாந்தில் டோர்றே (Dordrecht) என்கிற இடத்தில் பிறந்தார். பிற்காலத்தில் இறையியல் துறையில் பட்டம்பெற்று சீர்திருத்த தேவாலயப் பணிகளில் ஈடுபட்டார். 1684இல் கிழக்கிந்திய நாடுகளுக்கான மதத் தூதுவராக நியமிக்கப்பட்டு கிழக்கிந்திய நாடுகளுக்கான சேவைகளுக்கு அனுப்பப்பட்டார். ஒல்லாந்திலிருந்து 13.05.1685இல் பத்தவியாவுக்கு புறப்பட்டார். இந்தோனேசியாவில் Batavia எனும் இடத்தில் தான் அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகம் இயங்கியது. ஆறு மாதங்களின் பின்னர் 30.12.1685 அன்று தான் பத்தவியாவுக்கு வந்து சேர்ந்தார். பத்தாண்டு கால சேவையில் பின்னர் மீண்டும் 1695 ஒல்லாந்துக்கு திரும்பினார். அவர் மீண்டும் மிஷனரிப் பணிகளுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டு பத்தவியாவுக்கு குடும்பத்துடன் 27.12.1705 அன்று வந்து சேர்ந்தார் .  கிழக்கு ஜாவா தீவுகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்துக்கான போதகராக (army chaplain) 1706இலிருந்து கடமையாற்றினார்.

அவர் பத்தவியாவில் இருந்த காலப்பகுதியில் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் வலைப்பின்னலில் இருந்த காலனித்துவ நாடுகளில் பணிபுரிந்த சகல தரப்பினருடனும் தொடர்பில்  இருந்ததால் அவர் பல்வேறு விபரங்களை தொகுத்துவந்தார். மீண்டும் 1714இல் ஒல்லாந்துக்குத் திரும்பினார். அங்கிருந்தபடிதான் அவர்  “Oud en Nieuw Oost-Indiën” (பழைய புதிய கிழக்கிந்தியா) நூல் தொகுப்பை எழுதத் தொடங்கினார். 1726இல் ஐந்தாவது தொகுப்பு வெளிவந்தது. அடுத்த வருடம் 06.08.1727 அன்று அவர் காலம் ஆனார்.

இந்த இடைக்காலத்தில் அவர் இந்த தொகுப்பை மட்டுமல்ல பைபிளை மலே மொழிக்கு மொழி மாற்றம் செய்தார். மலே, ஜாவா போன்ற மொழிகளில் அகராதிகளையும் உருவாக்கினார். (மலே மொழி அகராதி இறுதிவரை அச்சாகவில்லை என்பது இன்னொரு கதை) முஸ்லிம் மதம் குறித்த ஆய்வொன்றையும் வெளியிட்டார். 

உள்ளடக்கம்
“பழைய புதிய கிழக்கிந்தியா” தொகுப்பானது இன்றும் 16-17 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ காலத்தை ஆராய்பவர்களுக்கு முக்கிய ஆதார நூலாக கருதப்படுகிறது. 5000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட சிறிய எழுத்தினாலான மொத்தம் ஐந்து தொகுப்புகளையும் 1724-1726 இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிட்டார். அதை விட  ஆயிரக்கணக்கான விளக்கப்படங்களும், ஓவியங்களும், வரைபடங்களும் உள்ளன. மக்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு, துறைமுகங்களின் அமைப்பு, நகரங்களின் வரைபடம், தாவரங்கள், விலங்குகள், சில முக்கிய சம்பவங்களைக் காட்டும் காட்சிகள் எல்லாம் அந்த கோட்டோவியங்களில் அடங்குகின்றன. அவை மிகவும் பயனுள்ளவை. இலங்கையில் டச்சுக்காரர்கள் செய்த வியாபார நடவடிக்கைகளின் புள்ளிவிபரங்கள், வேட்டையாடி எடுத்துச் சென்றவை, இலங்கை அரசர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பரிசுகள் காலி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற கோட்டைகளுக்குப் பொறுப்பாக இருந்த தளபதிகளின் காலவரிசையான பட்டியல் எல்லாம் இந்த தொகுப்புகளில் அடக்கம்.

இந்த ஐந்து தொகுப்புகளிலும் இலங்கை குறித்து ஏராளமான விபரங்கள் அடகியிருந்தாலும் ஐந்தாவது தொகுப்பில் தான் இலங்கையைப் பற்றிய தனித் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த 1384 பக்கங்களைக் கொண்ட ஐந்தாவது தொகுப்பில் 456 பக்கங்கள் இலங்கைப் பற்றியவை.

வெலென்டின் கிழக்கு ஜாவா, பத்தவியா, கேப், அம்பொய்னா, பண்டா தீவுகள் போன்றவற்றில் வாழ்ந்து செவயாற்றியிருக்கிறார். ஆனால் இந்தியா, சுமாத்திரா, இலங்கை, மலாக்கா போன்ற நாடுகளுக்கு அவர் பயணித்தது கிடையாது. இந்த நூலில் ஆங்காங்கு சில விளக்கப் பிழைகள் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கக் கூடும். ஆயினும் இந்த நாடுகள் குறித்து இந்தளவு விளக்கமாக எழுதியவை அனைத்தும் பெறுமதியானவை.

வெலென்டின் பணி ஓய்வு பெற்று ஒல்லாந்தில் இருந்த காலத்தில் இந்த நூலை எழுதத் தொடங்கினார். ஏற்கெனவே அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றிய போது சேகரித்த ஆவணங்கள், ஆதார்ணகள் என்பவற்றை கொண்டுவந்து சேர்த்திருந்தார். அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணிபுரிந்த கவர்னர்கள், படையதிகாரிகள், சிவில் அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களையும், விபரங்களையும் பெற்றுக்கொண்டார். இலங்கையைப் பற்றிய விடயங்களைத் தொகுக்கும் போது இலங்கையில் 1703-1706 காலப்பகுதியில் கவர்னராக இருந்த ஜோன் சிமோன் (Cornelis Joan Simons) ஓய்வு பெற்று ஒல்லாந்து திரும்பியதும்  உத்தியோகபூர்வமான பல ஆவணங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை அவருக்கு வெலென்டினுக்கு வழங்கினார். அதுபோல யாழ்ப்பாணத் தளபதியாக 1699 -1708 காலப்பகுதியில் பணியாற்றிய ஆதம் வான் (Adam Van der Duyn) தனது பணி ஓய்வின் பின்னர் ஒல்லாந்து திரும்பியதும் அவரும் வெலென்டினுக்கு உதவியிருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றியவர்கள் அவர்கள் பணியாற்றிய காலனித்துவ பிரதேசங்கள் குறித்து எழுதி வெளியிடுவது தடைசெய்யப்பட்டிருந்த காலம்.

இலங்கை பற்றி அதற்கு முன்னர் இலங்கைப் பற்றி பதிவு செய்த எழுத்தாளர்களான குறிப்பாக "Decadas Da Asia" எழுதிய Diogo de Couto, "Decadas Da Asia" எழுதிய Joao de Barros அடுத்தது "Fatalidade Historica de Ilha de Ceilao" ('Historical Tragedy of the Island of Ceylon')  எழுதிய Joao Ribeiro ஆகியோரின் எழுத்துக்கள் வெலென்டினுக்கு அதிகமாக உதவியிருந்தன.

அதுபோல இந்துத்துவம் பற்றிய சிறப்பாய்வுகளைச் செய்த டச்சு எழுத்தாளரான ஆப்பிரகாம் ரொஜேரியஸ் (Abraham Rogerius) என்பவருடன் சிறந்த நட்பைக் கொண்டிருந்தார். பிலிப் பால்டேயு (Phillipus Baldaeus)டானியல் ஹாவார்ட் (Daniel Havart) ரொபர்ட் நொக்ஸ் (Robert Knox) போன்றவர்களின் எழுத்துக்களும் அதிகம் உதவியிருக்கின்றன. ரொபர்ட் நொக்ஸின் "An Historical Relation of the Island Ceylon" நூல் அப்போது S. de Vriesஎன்பவரால் டச்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1692 ஆம் ஆண்டே வெளிவந்திருந்தது.

டச்சு மொழி மூல நூலில் இருந்து இவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவல்ல. மேலும் சமீபத்தில் இப்படி 300 ஆண்டுகளுக்கு முந்திய டச்சு மொழி நூலொன்றின் சில வரிகளை ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு டச்சு எழுத்தாள நண்பரிடம் விளக்கம் கோரியிருந்தபோது அதற்கு அவர்கூட சிரமப்பட்டார். இது பழமையான டச்சு மொழி இப்போதுள்ளவர்களால் விளங்கிக் கொள்ள சற்று கடினம் என்றார். தோராயமாகத் தான் எனக்கு மொழிபெயர்த்து காட்டினார்.

இலங்கையில் மொழிபெயர்ப்பு
வெலென்டின் எழுதிய இந்தத் தொகுப்பு இலங்கையின் சிவில் துறையில் பணியாற்றிய அன்ரூ ஆர்மர் (Andrew Armour) என்பவரால் முதல் தடவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனை அவர் 1806-09 காலப்பகுதியில் இலங்கையின் நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனுக்கு (Sir Alexander Johnston) சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இந்த பிரதி ஒரு மோசமானதும், பிழையானதும் மொழிபெயர்ப்பு என்று பின்னர் சேர் எமர்சன் டெண்னன்ட் (Sir Emerson Tennent) குறிப்பிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு தடவை இந்தியாவில் 1783 – 1821 காலப்பகுதியில் பணியாற்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த கேணல் கொலின் (Colonel Colin Mackenzie) என்பவரால் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
கடின வரலாற்றுச் சமர்களை எதிர்கொண்ட யாழ் கோட்டையின் அன்றைய வரைபடம் மேலே
பின்னர் இந்த நூலின் சில பகுதிகளின் சுருக்க மொழிபெயர்ப்பை இலங்கையின் தொழிற்சங்க முன்னோடியும், ஆய்வாளருமான பறங்கி சமூகத்தைச் சேர்ந்த புல்ஜென்ஸ் (A. E. Buultjens) மொழிபெயர்த்தார் (Orientalist -1885-86, 1888-89, 1891). அதன் பின்னர் தான்இந்த நூலை சின்னப்பா அரசரட்ணம் விரிவாக ஆய்வு செய்து 1977இல் “François Valentijn's Description of Ceylon” என்கிற நூலை வெளியிட்டிருக்கிறார். அந்த நூலே இன்று வரை வெலென்டின் குறித்த ஆய்வுகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசரட்னத்தின் அந்த நூலில் முதல் 12 அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சிங்கள வரலாற்று ஏடான “ராஜாவலிய”யவை மொழிபெயர்ப்பதற்கான அனுமதியையும் வெலென்டின் அப்போது பெற்றிருந்ததாக எஸ்.அரசரட்னம் தனது நூலில் குறிப்பிடுகிறார். “ராஜாவலிய”வில் குறிப்பிடாத அரசர்களின் குறிப்புகளை வெலண்டின் கண்டெடுத்திருந்தார். அரசாட்சிகளின் முன்னுக்குப் பின் முரணான காலவரிசை குறித்து ஆழமாக ஆராயந்திருப்பதை அவர் கண்டெடுத்த தகவல்களில் இருந்து அறிய முடியும். குறிப்பாக “தோஸ் ராஜா” என்கிற அரசர் பற்றிய விபரம் வியப்பை அளிப்பவை. வெலண்டினின் உச்சரிப்புப் பிழைகளால் அதில் உள்ள தகவல்களை சரியாக விளங்கிக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு வியாக்கியானப்படுத்துவதிலும் வரலாற்றாசிரியர்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாவார்கள் என்பது நிச்சயம்.

இலங்கையில் நெடுங்காலமாக இயங்கிவந்த டச்சு பறங்கியர் சங்கம் பல ஆண்டுகளாக ஒரு ஆய்வுச் சஞ்சிகையை (Journal of the Dutch Burgher Union of Ceylon) வெளியிட்டு வந்தது. எனது இந்தக் கட்டுரைக்கான தேடுதல்களின் போது அந்த சஞ்சிகையில் ஆய்வாளரான மொத்தாவு (S.A.W.Mottau) என்பவரால் 1983இல் மொழிபெயர்க்கப்பட்ட 16 அத்தியாயத்தையும், 1985 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த 17வது அத்தியாயத்தையும் (இறுதி அத்தியாயம்) கண்டெடுக்க முடிந்தது. அதற்கு முந்திய இதழ்களில் வேறெந்த அத்தியாங்களும் மொழிபெயர்க்கப்படாததால் இந்த கடைசி இரு அத்தியாங்கள் மாத்திரம் மொழிபெயர்க்கு தெரிவு செய்யப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அறிய முடியவில்லை. ஆனால் அந்த இரண்டுமே இலங்கையின் மதங்கள் பற்றியவை. இந்த முக்கிய நூல் அதன் பின்னரும் ஆங்கிலத்தில் நூலாக முழுமையாக இன்னமும் வெளிவரவில்லை என்று அறிய முடிகிறது.
மட்டக்களப்பு கோட்டையின் அமைப்பை பற்றிய விபரங்களுடன் அன்றைய வரைபடம்
வரலாற்று ஆதாரங்கள்
உதாரணத்திற்கு 16வது அத்தியாயத்தில் ஒரு சுவாரசியமான பந்தியை இங்கே பாருங்கள்.
அவர்களின் மதவழிபாட்டுத் தளத்தை கோவில் (Pagodas) என்று அழைக்கிறார்கள் (கோவிலைத் தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொள்வோம்). புராதன இலங்கை மன்னன் திருகோணமலையில் பிரமாண்டமான கோவிலைக் கட்டியிருக்கிறான். Tricon-maele எனும்போது சிங்கள மொழியில் “மூன்று கோபுர மலைகள்” என்பது பொருள். இந்திய உபகண்டத்தின் பிரபல கோவிலாக அது திகழ்ந்திருக்கிறது. ஆனால் 1622 ஆம் ஆண்டு இது முற்றிலும் இடிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு போர்த்துக்கேயர் அங்கு அழகான கோட்டையைக் கட்டினர்.
திருகோணமலையில் மாத்திரமல்ல இலங்கையில் மற்ற இடங்களில் பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்ட கதைகள் கூட அவரின் நூலில் உண்டு.
300 ஆண்டுகளுக்கு முந்திய இலங்கையின் வரைபடம்
திருகோணமலை கோட்டையின் வரைபடம்
இலங்கை பற்றி வெளியான 5வது தொகுப்பில் "Description of Ceylon" தலைப்பின் கீழ் அவற்றை 17 அத்தியாயங்களுக்கு தொகுத்திருக்கிறார். முதல் அத்தியாயமே இலங்கையில் அழைக்கப்பட்ட அதிகாரத் தரப்பினரின் பதவிப் பெயர்களை வரிசைப்படுத்தி விளக்கப்படுத்துவதுடன். அந்த அத்தியாயத்தில் சாதிப் பெயர்களையும் அவற்றின் விளக்கங்களையும் கூட வெளியிட்டிருப்பது கவனிப்புக்குரியது.

இந்த நூலில் அவர் நூற்றுகணக்கான சாதிக் குழுமங்கள் மட்டுமன்றி அந்த சாதிகளின் உப சாதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டிருப்பது முக்கிய சான்றுகள். உதாரணத்திற்கு சிங்கள சமூகத்தில் இருக்கும் கராவ சாதியினர் மத்தியில் உள்ள பிரிவுகள் மாத்திரம் 1) Caraeuw 2) Boroedal Caraeuw 3) Dandoe-Caraeuw 4) Moroe-Caraeuw 5) Kespe-Caraeuw 6) Cadoel –Caraeuw 7) Tock-Keulo 8) Godo-Keulo and 9) Indimal-Keulo என்கிற 9 குழுமங்களை அடையாளம் காட்டுகிறார்.  கடலில் மீன் பிடி முறையில் இவர்களுக்கு இடையில் வித்தியாசம் இருந்ததையும் அந்த வித்தியாசங்களையும் வெலென்டின் விரிவாக விளக்கியிருக்கிறார். குறிப்பாக கடலின் எந்த ஆழங்களில் பிடிப்பது, எந்த வலைகளைப் பயன்படுத்துவது, எந்த முறைகளைக் கையாள்வது போன்ற தொழில் பிரிவுகளால் இவர்களின் சாதிகள் வகைப்படுத்தப்பட்டிருந்ததை குறிப்பிடுகிறார். கராவ சாதியினர் படைகளிலும் இருந்ததாகவும் அவர்கள் முதலியார், முகாந்திரம் போன்றவர்களின் கீழ் பணியாற்றியதாகவும் விளக்குகிறார்.

அதுபோல சிங்கள சமூகத்தில் இருந்த துராவ சாதியினரில் இருந்த 10 பிரிவினரையும் அவர்களின் வேலைப்பிரிவினைகளையும் குறிப்பிடுகிறார். யானைப் பாகன்கள், மரம் வெட்டுபவர், தேங்காய் பறிப்பவர், கள்ளிறக்குபவர் போன்றவர்களையும் பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்.

இலங்கையில் துராவ சாதியினர் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். போர்த்துகேயர்களால் ஆரம்பத்திலேயே அதிகமானோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டவர்கள். பிற்காலத்தில் கொவிகம சாதியினரின் அந்தஸ்துக்கு அருகில் கருதப்பாட்டார்கள் என்பதெல்லாம் இன்னொரு தனிக்கதை.

காலப்போக்கில் இந்த உப சாதிக் குழுமங்களின் அடையாளங்கள் அழிந்துபோனாலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த இலங்கை மக்கள் சாதிகளாக எப்படி பிளவுண்டு இருந்திருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான முக்கிய குறிப்புகள் இவை.

இலங்கையின் சாதிகளைப் பற்றி ஆராய்ந்த பலர் வெலென்டினின் குறிப்புகளைத் தவறவிட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். சாதிகள் பற்றிய அவரின் குறிப்புகளை பயன்படுத்தியவர்களில்  “Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day” என்கிற நூலை எழுதிய ஆசிப் ஹுசைன் (Asiff Hussein) கவனிக்கத்தக்கவர். 

முதல் இரண்டு அத்தியாயங்களைத் தவிர எஞ்சிய அத்தியாயங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  1. புவியியல் நிலப்பரப்பு, இலங்கையின் இனப்பரம்பல், மக்களின் பண்பாட்டு அம்சம், மரபுகள், மொழி
  2. இலங்கையின் வரலாற்றுச் சுருக்கமும், 1724 வரையான இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளும், (4-15 வது அத்தியாயம் வரை)
  3. இறுதி இரண்டு அத்தியாயங்களும் இலங்கையின் அன்று நிலவிய மதங்கள் பற்றியது. பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, போன்றவை பற்றி.

இலங்கை பற்றிய 31 கோட்டோவியங்களும், இலங்கையின் வரைபடமும் இந்த நூலில் உள்ளடக்கம்.
யாழ்ப்பாண பட்டணம்
வெலென்டினின் “பழைய புதிய கிழக்கிந்தியா” நூலைத் தவிர மேலும் சில முக்கிய ஆய்வு நூல்களையும் வெளியிட்டிருந்தார். கடற் தாவரங்கள் விலங்குகள் குறித்த ஆரின் நூல் அவர் இறந்ததன் பின்னர் 1754இல் ஆம்ஸ்டர்டாமில் வெளியானது. வேறு பல மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டது. அவரின் நூல் ஆசியாவின் முக்கிய கடல்வழிப் போக்குவரத்தை அறிந்துகொள்வதற்கான அடிப்படையான மூல நூலாக பல்லாண்டுகாலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அது ஒரு முக்கியமான கலைக்களஞ்சியம் என்கிறார் மொத்தாவு. அது போல அன்றைய டச்சுக் காலனித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் ஒல்லாந்தர்களின் தேசியவாத பெருமிததத்துக்கு வெலென்டினின் பணிகளைக் கொண்டாடி வருகின்றனர். இலங்கையைப் பற்றியே இவ்வளவு என்றால் ஏனைய நாடுகள் பற்றி அவர் எழுதியிருக்கும் விபரங்கள் கூட வியப்பைத் தரும் வரலாற்றுப் பதிவுகள்.

வெலென்டின் இலங்கையின் வரலாற்றின் ஒரு முக்கிய காலப்பகுதியை கட்டுடைத்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு இன்னமும் அது முழுமையாக போய் சேரவில்லை. அவரின் பதிவுகள் பல வெளிச்சங்களை தர வல்லவை.

தமிழில் மொழிபெயர்க்க முன்மொழியக் கூடிய வரலாற்று நூல்களில் வெலென்டினின் “பழைய புதிய கிழக்கிந்தியா” முக்கியமான ஒன்று.

இக்கட்டுரைக்குப் பயன்பட்ட பிரதான நூல்களும் கட்டுரைகளும்
  • Oud en Nieuw Oost-Indiën (Description of Ceylon) – By François Valentijn - Volume 1 2,3,4,5, (Published 1624 – 1927 - Dutch East Indies)
  • “Francois Valentijn’s Oud En Nieuw Oost Indien And the Dutch Frontispiece in the 17th and 18th Centuries” - Maria S.Labarge A Thesis - Submitted to the Faculty of the University of Miami, in partial fulfillment of the requirements for the degree of Master of Arts – May 2008
  • Translation of Francois Valentijn's Description of Ceylon (Chapter 16) — translated By S.A.W. Mottau, Journal of the Dutch Burgher Union of Ceylon – Vol LXI – 1983
  • Translation of Francois Valentijn's Description of Ceylon (Chapter 17) — translated By S.A.W. Mottau, Journal of the Dutch Burgher Union of Ceylon – Vol LXII - 1985
  • Condensed from S. Arasaratnam's introduction to Francois Valentijn's Description of Ceylon, Hakluyt Society, London, 1978.
  • Francois Valantijn. a biographical note Journal of the Dutch Burgher Union of Ceylon – 1983 – Vol – LXI
  • Antiquarian Ambonese. François Valentyn’s Comparative Ethnography (1724) by Siegfried Huigen - The Dutch Trading Companies as Knowledge Networks. Intersections 14. Leiden / Boston: Brill, p. 171-200.
  • THE MANY FACES OF THE KANDYAN KINGDOM, 1591-1765: LESSONS FOR OUR TIME? –Prof Gananath Obeyesekere. (Article)
  • Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day -  Asiff Hussein - Neptune Publications – 2013
நன்றி - அரங்கம்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates