Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நாடு கடத்தப்பட்ட அவலம் பற்றி - பேரா.மு..நித்தியானந்தனின் உரை


பேராசிரியர் மு.நித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு டிசம்பர் 24-25 திகதிகளில் பேர்லினில் நிகழ்ந்த 6வது இலக்கிய சந்திப்பில் "மலையக மக்கள் இங்கும் அங்கும்" என்கிற தலைப்பில் ஆற்றிய உரை. தோட்டத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்ட அந்த அவலக் கதையை விபரங்களோடு உணர்வுபூர்வமாக விபரிக்கிறார். எந்தவொரு கையெழுத்து பிரதியுமில்லாமல் கதையாக அவர் விபரித்திருந்தார். இந்த ஒலிப்பதிவை பத்திரப்படுத்தி பகிர்ந்த நண்பர் சுசீந்திரனுக்கு நன்றி.
 

தமிழகம் அனுப்பப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் அவலம்

19ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து இலங்கை – இந்திய அரசுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை இன்றும் மிகவும் மோசமாக உள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனத்தால் நிரந்தர வேலை வழங்கப்பட்டோரில் 3850 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. வரிசையாகக் கட்டப்பட்டுள்ள 400 சதுர அடி பரப்பையே கொண்ட இவ்வீடுகள் லையன்கள் ஆகவே உள்ளன. இவ்வீடுகள் தற்போது குடியிருக்க முடியாத அளவுக்கு சீரழிந்தும் உள்ளதாக அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. இவ்வீடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாது உள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இலங்கையில் இருந்து வருகின்ற தேயிலைத் தோட்டப் பணியாளர்களை மீளக் குடியமர்த்துவதற்காக 1975இல் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனம் நீலகிரி மாவட்டத்தில் 8 பிரிவுகளில் 2513 இலங்கையில் இருந்து திரும்பிய குடும்பங்களை குடியமர்த்தி உள்ளது. இவர்களின் வீடுகளின் நிலை மட்டுமல்ல தொழில் நிலைமைகளும் கடினமானதாகவே உள்ளது.
இவர்கள் இன்னமும் தினக் கூலிகளாகவே உள்ளனர். இதுவரை இவர்கள் புடுங்குகின்ற தேயிலையின் நிறைக்கு ஏற்பவே கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலி 78 ரூபாய் உம் மேலதிக கொடுப்பனவாக 67 ரூபாய் உம் ஆக 145 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. 
இலங்கை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில் 1870க்களில் இந்தியத் தமிழர்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட போது மோசமான கஸ்டங்களை எதிர்கொண்டதுடன் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர்.
1948இல் சுதந்திர இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய டி எஸ் செனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் ஆதரவளித்தது. ஜிஜி பொன்னம்பலம் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக்கப்பட்டார்.
மலையகத்தில் இருந்து கூடுதலான இடதுசாரிகள் பாராளுமன்றம் சென்றதனைத் தொடர்ந்து அதனைத் தடுக்கவும்; இனவாத அடிப்படையிலும் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. 1948இல் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1949இல் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டம் என்பவற்றின் கீழ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு; அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இப்பிரஜாவுரிமையைப் பறித்த அரசாங்கத்தில் அமைச்சராக ஜிஜி பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன்)இருந்தார்.
மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க தமிழ் கொங்கிரஸின் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் அதரவளித்தமையே எஸ் ஜே வி செல்வநாயகம் தமிழ் கொங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கக் காரணமாய் இருந்தது.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழ் கொங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடியதாகவும் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினருக்கு அவர்கள் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்ததாகவும் உண்மைக்குப் புறம்பாகத் தெரிவித்து இருந்தார்.
1964, 1974 ஆகிய ஆண்டுகளில் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட இரு நாட்டு உடன்படிக்கைக்கு அமைய 10 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இன்றும் கடினமான வாழ்வை எதிர்கொள்கின்றனர்.
நன்றி. தேசம்நெட்

தோட்டக் காணிகள் பகிர்வில் தொழிலாளர் புறக்கணிக்கப்படலாம் என்று அச்சம்


இலங்கையின் மலையகத்தில் தோட்ட தரிசு நிலக் காணிகளை பகிரும் போது அவை மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் நீதி மற்றும் சட்ட உருவாக்க துணை அமைச்சரான புத்திரசிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைவரும் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நிலையில் அவர்கள் இந்தக் காணிகள் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றும் புத்திரசிகாமணி கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் மலையக தோட்டக் காணிகள் பகிரப்பட்டபோது அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு அல்லாமல், வெளியாருக்கு வழங்கப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகக் கூறும் புத்திரசிகாமணி, 1975 ஆம் ஆண்டில் இப்படியான ஒரு முயற்சி, மலையகத் தலைவர்கள் கட்சி பேதமின்றி போராடியதால் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது பல தோட்டங்களில் தரிசு நிலங்கள் பற்றிய தகவல்கள் அரசாங்க தரப்பினரால் பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மலையக அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் உட்பட அனைவரும் கட்சி பேதமின்றி இணைந்து இதற்காக நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தியில் நடந்த கதை

18ஆம் நூற்றாண்டில் தொட்டதொழிலாளர்கள்.

இது!
சந்தியில் நடந்த கதை
சந்தியே சிரிந்த கதை.

கடலைக்கடந்து ‍ நாங்க‌
சிலோனுக்கு வந்த கதை,
மேடுபள்ளம் ஏறி நாங்க‌
வியர்வை சிந்தி உழைத்த கதை!

அரை வயிறு நிறையாம்
அல்லல்பட்டு வாழ்ந்த கதை,
இருட்டிலேயே எங்க வாழ்வு
இன்னும் இருக்கும் கதை.

துரைமார் எச்சரிக்க,
கங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,
குழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்
குலையாமல் உழைத்த கதை.

தேயிலை நட்டு வைத்து
தேகமெல்லாம் நொந்த கதை,
தேசம் உயர்ந்தாலும்
வேதனைகள் நிறைந்த கதை.

தலைவர் என்று சொன்னாலே
தலை சொறிந்து நின்ற கதை,
தண்ணியில மிதந்து
தத்தளித்து வாழ்த்த கதை.

அப்பன் ஆத்தா செத்த பின்னும்
அயராது உழைத்த கதை,
உறவுகளை புதைத்த மண்ணில்
ஏறி நாங்க மிதித்த கதை.

இந்தியாவுக்குத் தெரியாது
நாம் இங்கிருந்து சாகும் கதை,
இந்த இலட்சணத்தில்
இந்திய தமிழன் என்று சொன்ன கதை.

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
ஓடாகிப்போன கதை,
தலைவணங்கித் தலை வணங்கித்
தலைமுறையாய் நடந்த கதை.

விலைபோகா மனிதர் நாம்
வீதியிலே நின்ற கதை,
உழைப்பெல்லாம் உணர்வாக்கி
வீராப்பாய் இருந்த கதை.

லயம் லயமாய் மக்கள் வெள்ளம்
சந்தியிலே சேர்ந்த கதை,
சம்பளத்தை கூட்டச்சொல்லி
சத்தியாக்கிரகம் இருந்த கதை.

உறவுகள் பசித்திருக்க‌
உறுதியாய் நின்ற கதை,
உரிமை என்று கேட்டதை
உலகமே அறிஞ்ச கதை.

சம்பளத்தை எதிர்பார்த்து
சனமே வீதியில நின்ற கதை,
ஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு
தலைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.

கிம்பளத்தை வாங்கிக்கிட்டு
சம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,
சரித்திரமே வாய்விட்டு அழுத போதும்
சரிங்க சாமி போட்ட கதை.

மல்லியப்பூச் சந்தியிலே
மக்கள் வெள்ளம் திரண்ட கதை,
தேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து
பரம்பரையாய்ச் செத்த கதை.

இது
சந்தியிலே நடந்த கதை
சந்தியே சிரிச்ச கதை,
சாமி எல்லாம் சேர்ந்து
நமக்கு சமாதி செஞ்ச கதை.


-திரு.மை.பன்னீர்செல்வம்
நன்றி
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன?


அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.

இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.

பிரதான பிரச்சினைகள் தான் என்ன?

தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.

குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.

இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.

எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.

மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்

இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.

இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் நிலை என்ன?

நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.

பிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.

எனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.

நட்புறவுடன் பழகும் நிர்வாகங்கள்

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.

இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.

ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.



18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

கடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
பெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

இரத்தபுரியான இரத்தினபுரி!-2


வேவல்வத்தை பகுதியில்...
விஸ்வநாதன் (20 வயது) இளைஞன்முதலில் 8ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் கொலை நடந்ததாக கேள் விப்பட்டிருந்த போதிலும் எங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் உறுதியாகத் தெரிந்தது. பந்துவின் சடலத்தை பார்த்து விட்டு இந்த வழியால் வரும் சிங்களவர்கள் பலர் எமது லயன்களைப் பார்த்து தூஷணங்களால் திட்டித் திட்டிச் சென்றார்கள். "தீ வைப்போம்", "இரவு பார்த்துக் கொள்கிறோம்", "இன்று ஒருவரும் மிஞ்ச மாட்டீர்கள்", "இன்று உதைபட தயாராயிருங்கள்" என கத்திக் கொண்டே சென்றார்கள். சிறிது நேரத்துக்குப் பின்னர் தான் அசித்தவும் கொல்லப்பட்டிருக்கிறான் என்ற சேதி வந்தது என்று கூறினார். இதன்பின் மேலும் நிலமை மோசமானது.அதனால் தான் மத்தியானம் 12 மணிக்கெல்லாம் நாம் தேயிலை ஸ்டோருக்குச் சென்று விட்டோம். அங்கு புஞ்சி மாத்தையாவிடம் (நாணயக்கார பத்மசிறி) நாங்கள் விடயத்தை எடுத்துக் கூறியதும் அவர் எல்லோரையும் அழைத்து வரும்படி கூறி ஏறத்தாழ 900க்கும் மேற்பட்டோரை ஸ்டோருக்கு அழைத்து அங்கு புகலிடம் அளித்தார். அவரை அடிக்க அன்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். இன்னமும் அவர் மீது பலருக்கு கோபமுண்டு.

அன்று இரவு 7 மணியளவில் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இங்கு இரவு நடந்தவை ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.இது எங்களுக்கு புதிய ஒரு 1996 ஒக்டோபர் 10 அன்றும் இதே போன்று தான் இந்த வேவல்வத்தை லயம் மீது ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் வந்து தாக்கினர். தமிழ்க் கடைகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். பலரைத் தாக்கிவிட்டு, அவர்களது உடமைகளை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். ஆனாலும் இந்த அளவு மோசமாக அப்போது நாம் பாதிக்கப்படவில்லை. அந்த முறையும் இப்படித் தான் அரசாங்கம் 2000 ரூபா நட்டஈடு கொடுத்து விட்டுப் போனது. ஆனால் நட்டஈட்டால் எங்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த முடியவில்லை.

அது போல கடந்த இரு வருடங்களுக்கு முன்னரும் நெல்சன் எனும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த கசிப்பு வியாபாரி பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சண்டித்தனம் செய்த போது தோட்ட இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அதில் நெல்சன் கண்ணை இழந்தார். அதனைத் தொடர்ந்து 3 லயன்கள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. அப்போதும் இவ்வளவு மோசமாக நாம் பாதிப்படையவில்லை.தற்போது கொல்லப்பட்டவரின் சகோதரர் இங்குள்ள ஒருவரைக் கொல்ல வந்த போது முந்திக்கொண்ட இங்குள்ள தமிழ் இளைஞர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அதனைத் தொடர்ந்தே எல்லோரும் திரண்டு வந்து எங்கள் குடியிருப்பை நாசமாக்கினார்கள்.

எஸ்.உதயகுமார் (28வயது)
இரவு 7 மணியளவில் பஸ், லொறி, வான்கள், என்பவற்றில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானோர் திமுதிமுவென வந்து வேகமாக இறங்கி எமது லயன்களை நொறுக்கித் தள்ளினர். கண்ணுக்கெட்டிய வரை வாகனங்கள் தான் தெரிந்தது. வெளியில் பார்த்தால் ஓவென சத்தங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. எல்லோரது கைகளிலும் ஏதாவது ஆயுதங்கள் இருந்தன. இரும்புக் கம்பிகள், கத்திகள், கம்புகள், கோடறிகள், துவக்குகள் கூட இருந்தன. பெற்றோல் குண்டுகள் கொண்டு தான் பல வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. அது வெடிக்கும் சத்தத்தை தொடர்ந்தும் கேட்க முடிந்தது. ஒரு காம்பராவுக்குள் மாத்திரம் 25 பேரளவில் போயிருப்பார்கள். அந்தளவு கூட்டம் வந்திருந்தது. இங்குள்ள ஒரு வீடு மிச்சமில்லாமல் அழிக்கப்பட்டது.நாம் 83இல் கூட இந்தளவு பாதிக்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்டோம், தான், தாக்கப்பட்டோம் ஆனால் எங்களைத் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டது இந்தத் தடவை தான்.பெக்டரியிலும் நாங்கள் தொடர்ந்து இருக்கவில்லை. அங்கும் மிரட்டிச் சென்றார்கள். எனவே அங்கிருப்பதும் ஆபத்தென்று பாங்கொடைக்கும் காடுகளை நோக்கியும் சென்றோம். எனது குடும்பத்தினர், மூன்று தினங்களுக்குப் பின்னர் தான் உண்ண ஆகாரமின்றி, பட்டியினியுடன் வந்து சேர்ந்தனர். இன்னமும் பலர் வந்து சேரவில்லை. எவரெவர் இருக்கின்றனர்- இல்லை என்பது கூட வந்து சேர்ந்ததன் பின் தான் தெரியும்.

சின்னத்துரை (56வயது)
எங்களைத் தொடர்ந்தும் இம்சித்து வருகின்றனர். பஸ்களில் போக முடிவதில்லை. தாக்கப்படுகிறோம். எங்கள் பெண் பிள்ளைகளை தொடர்ந்து இம்சிக்கின்றனர். இதனாலேயே பல சிறுமிகள் படிப்பை இடைநிறுத்தி விடுகின்றனர். பஸ்ஸில் உட்கார்ந்திருந்தால் இழுத்துவிட்டு மற்றவருக்கு இடம் கொடுக்கின்றனர். இடையிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர். எங்களை கேலி செய்கின்றனர். பஸ்காரர்களும் இதனைத் தட்டிக் கேட்பதில்லை. அவர்களும் கூடச் சேர்ந்து சிரித்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒரு போதும் இதனை எதிர்த்தது கிடையாது. எதிர்க்கவும் முடியாது. எதிர்த்து விட்டு நாங்கள் நிம்மதியாக இருந்து விடவும் முடியாது. அப்படிப்பட்ட எங்களுக்குத் தான் இன்று...

இனிமேலும் எங்களுக்கு இதே கதி தொடரத்தான் போகிறது. அரசாங்கம் பாதுகாப்புக் கொடுத்தாலும் அது எந்தளவு, எத்தனை தூரம் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியாது.நான்கு பெண்கள் இருந்த வீடொன்றில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்து கடும் வதைக்குள்ளாகினார். அவர் பின்னர் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.முன்கூட்டியே பலர் தப்பிப் போய் விட்டதால் பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன

கே.பாலகிருஷ்ணன்
(சிங்களப் பெண்ணை மணமுடித்திருக்கும்- தமிழில் பேசவராத ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் இளைஞர்) இவரது கடை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.அன்றாடம் ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் ஒன்றுமறியாத அப்பாவித் தொழிலாளர்களின் சொத்துக்கள் தான் இப்படி அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிய வேண்டும்.இங்கிருந்து தப்பி அலுப்பொல போனால் அங்குள்ளவர்கள் அடித்து விரட்டுகின்றனர். அங்கிருந்து ராசகல்ல போனால் அங்கிருந்து அடித்து விரட்டுகின்றனர். இந்தப் பக்கத்தால் போக வழியேயில்லை. அமுனுதென்ன பக்கம் தான் போகமுடியும். அங்கு போனால் அங்கும் அடித்து விரட்டுகின்றனர். முழுக்க முழுக்க சுற்றி வளைத்து சிறைப்படுத்தப்பட்ட ஒரு மூடுண்ட பிரதேசமாக இருக்கிறது. ஒரு வகையில் இது ஒரு திறந்த வெளி சிறைக்கூடம் தான். சம்ப தினத்தன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிச் சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த குழந்தையைப் பறித்து ஆற்றில் போட்ட சம்பவமும் இங்க தானுங்க நடந்தது.

பின்னர் குழந்தையைக் காப்பாற்றி விட்டார்கள்.மூன்ற நாட்களாக வெளியில் வரவில்லை. தெருவுக்கு வந்தால் அடி விழும் என்ற பயத்தில் பட்டினியோடு இருந்தோம்.இத்தனை வெறித்தனத்தையும் செய்து விட்டுச் சென்றவர் கூட கைது செய்யப்படவில்லை.... இங்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தால் "வேவல்வத்தை புலி பிறந்து விட்டது" என்று தான் கூறுகின்றனர். வேவல்வத்தையைச் சேர்ந்தவர்களென்றாலே புலிகள் என்று தான் பார்க்கிறார்கள். பாதைகளில் எங்களை புலி... புலி என்று அழைக்கிறார்கள். இன்று பல புலிகளை தயாராக்கி விட்டுள்ளார்கள். இது தான் உண்மை. 
'அவுப்பே'வில்காட்டுக்குள் ஒளிந்திருந்த பொது குளிரினால் ஒரு வயது குழந்தையொன்று இறந்து போனது அதனைப் பார்க்க நானும் சென்றிருந்தேன். 11ஆம் திகதி பஸ்ஸில் தப்பிப் போன தமிழர்களை ஜட்டியுடன் இறக்கிவிட்டனர.

வள்ளியம்மா பெண் தொழிலாளி (ஒரு தாயார்)
சிங்களவர்களுக்கு பல வேலைகளையும் செய்து கொடுக்கப் போவது நாங்கள் தான். காலையில் வேலை வாங்கியவர்கள் மாலையில் எங்களைத் தாக்குகின்றனர். எங்களைத் தாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல எங்களை நன்றாக அறிந்தவர்களே!இனிமேல் நாங்கள் அவர்களின் வேலைக்குப் போகக் கூடாது என்று பேசிக் கொண்டுள்ளோம்.சம்பவம் நடக்கும் போது 12 பொலிஸார் இருந்தனர். அவர்கள் இதனைத் தடுத்து நிறுத்த ஒன்றும் செய்யவில்லை. இங்குள்ள 13 கடைகளை நெருப்பிலிட்டு விட்டார்கள். ஒன்று கூட மிச்சமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் மேல் பெறுமதியான சாமான்கள் இருந்தன. அவையனைத்தும் பல வருட கடும் உழைப்பால் சேர்க்கப்பட்டவை. ஆண்கள் இல்லாத வீட்டில் வந்து அதிக சேட்டைகள் புரிந்துள்ளனர். முடிந்தால் அவர்களின் உஷாரை "அங்க" (வடக்கிலே) காட்டனுங்க.

ஐயன் பெருமாள் வீரய்யா (38 வயது)
எங்களது சகல பொருட்களையும் ஒரு இடத்தில் வைத்து நொருக்கி அதிலேயே தீமூட்டிக் கொளுத்தியுள்ளனர். ஒன்றும் மிச்சமில்லை. பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன... ஆனால் இனி இந்தத் தோட்டமே வேண்டாம். பேசாமல் இந்தியாவை நோக்கிப் போய்விடலாம். ஆனால் அதற்கு இந்த அரசியல்வாதிகள் விட மாட்டார்கள். நாங்கள் இல்லாவிட்டால் இவர்களுக்கு வேலை செய்ய எவருமில்லை என்ற பிரச்சினை, எங்களின் தலைவர்களுக்கோ எங்களைக் காட்டி அரசியல் செய்யவும், சந்தா எடுக்க முடியாத பிரச்சினை. எங்களின் தலைவர்களை பாதுகாக்க நாங்கள் உதைவாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டி பாதுகாப்பாக பஜிரோக்களில் திரியட்டும். இதனை எத்தனை நாள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருப்பது. பொலிஸார், பவித்ரா, பந்துல போன்ற அரசியல் தலைவர்களின் முன்னிலையில் தான் இவை நடந்தன. பின் யாரிடம் நாங்கள் போய் தீர்வு கேட்பது. எல்லா அரசியற் தலைவர்களும் வந்தார்கள் ஆனால் எவராலாவது இனி இது நடக்காது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?எஸ்டேட்டில் வேலை இல்லாத சில நாட்களில், அவர்களின் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து எடுத்து, புல் வெட்டி, அவர்கள் கூறும் அத்தனை வேலைகளையும் செய்ததன் பின்னர் அவர்களின் குண்டி கழுவாத ஒரு குறையாக நாங்கள் சகலதையும் அவர்களுக்கு செய்து விட்டு வருகிறோம். காலையில் இவ்வளவையும் செய்து விட்டு இரவு எங்களை தாக்குகிறான் என்றால் அவன் என்ன மனிதன் கூறுங்கள். அவர்கள் எங்களை என்ன செய்தாலும் நாங்கள் அதனைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற தைரியம் தானே.

இந்தியாவுக்குப் போய்விட்டால் நாங்கள் பசி பட்டினியுடன் இருக்க நேர்ந்தாலும் உயிருக்கும் உடமைகளுக்கும் இப்படியொரு ஆபத்து நேராதே...! எங்களை ஒரு நாய் போல அவர்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை. "வெல்லவல"வில் போய் எனது மனைவி பிள்ளைகள் மறைந்திருந்தார்கள். அன்று இரவு அங்கு வந்து அடித்தார்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்து கொழும்புகம (நிவித்திகலவில்) எனும் இடத்தில் இருக்கும் எங்களது சகோதரியின் வீட்டுக்கு கால்நடையாகவே போய் சேர்ந்த போது அங்குள்ள சிங்களவர்கள் வந்து வேவல்வத்தையைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கிறார்களா எனக் கூறி, கூடி வந்து அடித்துள்ளனர். எனது மைத்துனர் போய் அப்புகஸ்தன்ன எனும் இடத்திலுள்ள தனது வீட்டுக்கு கூட்டிச் செல்ல முனைந்த போது அவரையும் அடித்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து மீண்டும் நிவித்திகலைக்கு வந்து சேர்ந்த போது சிறிது நிலமை தணிந்திருந்தது. ஆனாலும் உயிரைக் கையில் பிடித்தபடி மறைவாக இருந்து விட்டு இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீடு வந்து சேர்ந்தனர். நாங்கள் மிச்சம் பிடித்து சேகரிப்பவையும், எமது பிள்கைளின் கல்வி வளர்ச்சியையு; அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நாங்கள் கொஞ்சம் நன்றாக உடுத்து திரிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எங்களை மீறிவிடுவார்களோ என்ற சந்தேகமும், பயமுமே எரிச்சலுமே எங்களின் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள வைத்திருக்கிறது. இவர்கள் என்றைக்குமே தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தான் 3 வருடத்துக்கும், 5 வருடத்துக்கும் ஒரு முறை நாங்கள் இப்படி தட்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பொலிஸாரில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தனை அநியாயங்களையம் புரிந்தவர்களோடு தான் இரவு வேளைகளில் ஒன்றாக சேர்ந்து குடித்து கும்மாளமிடுகிறார்கள். பொலிஸாரின் அனுசரணையுடன் மேலும் எதுவும் நடக்கலாம்.

அலுப்பொல பகுதியில்,விஜயா இரு குழந்தைகளின் தாய்வேவல்வத்தையைச் செர்ந்த மூன்று பேரை நாங்கள் வைத்திருந்ததாகக் கூறியே இதனை வந்து தாக்கினர். அழித்து விட்டுச் சென்றுவிட்டனர். இவ்வளவு காலம் வீட்டோடு இருந்த நான் தற்போது வேலைக்கு போகத் தொடங்கியிருக்கிறேன். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை.ஓரு மாணவியும்(இவர்கள் எதிர்த்து நின்றிருக்கிறார்கள்)அன்று இரவு 7.30 மணியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வர்கள் பல வாகனங் களில் வந்து சேர்ந்தார் கள். நானம் அப்பாவும் தான் இருந்தோம். வந்த வேகத்தில் தாக்கத் தொடங்கினர். அப்பா வும் தாக்கினார். என்னை எரிப்பதற்காக பெற்றோல் ஊற்றி எரிக்க முற்படுகையில் அப்பா அதனைத் தடுத்து நிறுத்தி சண்டையிட்டார். ... பஸ்ஸில் எல்லாம் சுதந்திரமாக போக முடிவதில்லை. போக முடிந்தால் நானும் பாடசாலை போய் தொடர்ந்து கற்றிருப்பேன்.மாணவியின் தகப்பனார்என்னங்க 1957இலிருந்து தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டிருக்கிறோம். இனி ஓட ஏலாது. எப்படிப் பொறுத்துக் கொள்வது.இரும்புக் கம்பிகள், பொல் லுகள், பெற்றோல், மண்ணெண்ணெய், எல்லாவற்றையும் கொண்டு வந்து தாக்கினர். அருகிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி விட்டிருந்தனர். என்னை கம்பியால் தலையில் தாக்கினர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இத்தனை நாள் வேறெங்கும் போக முடியவில்லை. இன்று தான் பலாங்கொடைக்குப் போய் வந்தேன்.

வீரப்பன் (34)
முதலில் வந்து தீயிட்டுக் கொளுத்தி விட்டு போனதன் பின்னர் நாங்கள் அதனை அனைத்துக் கொண்டிருந்த போது மீண்டும் 8.30க்கு வந்து தியிட்டுக் கொளுத்தினர். அனைய, அனைய சூழ உள்ளவர்கள் வந்து திரும்பத் திரும்ப தீயிட்டனர்.

ஏக்கஸ்லேன் லேன்ராமையா குமரன் (30) (ஏக்கஸ்லேன்-மரத்தோட்டம்- 
இ.தொ.கா.வின் தோட்டத் தலைவரொருவர்)இங்கு அடித்தவர்களில் பலர் வேறு யாருமல்ல இவர்களைத் தெரிந்த சிங்களவர்கள் தான். சூழ உள்ளவர்கள் தான். ஊர் முழுக்க அடிபட்டுக் கொண்டிருந்த போது நாங்கள் உடனேயே அறிவிக்க வேண்டிய இடங்களுக்கு அறிவித்துவிட்டு சில சிங்களவர்களின் அதரவுடன் தோட்டத்துக்கு காவல் நின்று பாதுகாத்துக் கொண்டோம்.

வீரய்யா (ஏக்கஸ்லேன் லோவர் டிவிஷன் இ.தொ.கா. தலைவர்)
எங்கள் லயன்களும் வேவல்வத்தைக்காரர்களை பாதுகாத்திருக்கிறோம் என்று தான் 9ஆத் திகதி இரவு தாக்கப்பட்டோம். இங்கிருக்கும் 77 வீடுகளில் 57 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டு விட்டன. வேவல்வத்தைக்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது என்று அன்று மத்தியானமே எங்களுக்கு துரையிடமிருந்து உதத்தரவு வந்துவிட்டது. அன்று நாங்கள் தோட்டத் தலைவர்மார் கூட்டமொன்றுக்குப் போய்விட்டு வரும் வழியில் இங்கு தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேள்விபட்டோம். தூரத்திலேயே நெருப்பைக் கண்டோம். ஒரே கதறல் சத்தமும் ஓட்டமும், நெருப்புமாக ஒரே கலவரமாக இருந்தது. கண்ணில் கண்டவர்களை அடித்தனர். எல்லோரும் ஓடினர். பெண் பிள்ளைகளை உடனேயே ஒரு இடத்துக்கு அழைத்து காப்பாற்றினோம். ஆனால் கல்லால் எறிந்து காயப்படுத்தினார்கள். இங்குள்ள ஆண்கள் பலரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார்கள்...பஸ்களில் எங்களால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்களை கேலி செய்து, இருக்கையிலிருந்து இழுத்துப்போட்டு "தெமலா" என திட்டிப் பேசுவது, தூஷனத்தால் எமது பெண் பிள்ளைகளை ஏசுவது என்பன இங்கு சகஜமான ஒன்று.ஒரு இளைஞரிடம்இதனை பொறுத்துக்கொண்டு எப்படி இருந்தீர்கள் என வினவியபோது. தொண்டமானும் கூட நீங்கள் ஏன் திருப்பித் தாக்கவில்லை என்று எங்கிளிடம் கேட்டார். திருப்பி எதையாவது செய்திருந்தால், அவர்கள் மிச்சம் வைத்துவிட்டுப் போனது எங்கள் உயிர் ஒன்றை தான், அதையும் இழக்க நேரிட்டிருக்கும்.

கே.சண்முகராஜா (38)
அந்த டிவிஷனிலேயே பெரிய கடை வைத்திருந்தவர் தற்போது இவருக்கு எஞ்சியிருப்பது இவர் ஓடும் போது அணிந்திருந்த உள் பனியனும், சரமும் தான்."பணத்தையோ எனது ஆவணங்களையோ, உடுதுணிகளையோ எத....னையும் எடுக்கவில்லை. உயிர் ஒன்றை காப்பாற்றுவது தான் ஒரே நோக்கமாக இருந்தது.... பேசாம நம்ம ஊரைப் பாத்து போறது தானுங்க சரி. இனிமேல் இங்க இருக்க முடியாதுங்க...."இந்தியாவை அவ்வளவு நம்புறீங்களா?"வேறென்னங்க இங்க தமிழருக்கு ஏதாச்சுன்னா, அவங்க அங்க மறியல் செய்யிறாங்கல்ல... அது அந்த அக்கறையினால தானுங்களே... அந்த துடிப்பினால தானுங்களே... நாங்க யாரை நம்புறதுங்க... உசுர மட்டுமாவது காப்பாத்திக்க வேணாமுங்களா...?"

தர்மதாச. இ.ரஞ்சித், தபிராஜா (படையிலிருந்து தப்பியவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்) ஆகிய இந்த டிவிசனைச் சேர்ந்த சிங்களவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதை பலரிடமிருந்து அறியக்கிடைத்தது.
திக்குமுக்குலானஒரு இளைஞன்.9ஆம் திகதி இரவு 8.00 மணியிருக்கும், பல வாகனங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் வந்திறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சுற்றி வளைத்து வந்தனர். அவர்களைக் கண்டவுடன் ஓடினோம். இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பிரதேசத்தைச் சூழ உள்ள சிங்களவர்களே. முதலில் பல வாகனங்களில் வந்தவர்கள் தாக்கி சின்னாபின்னப்டுத்திவிட்டுப் போனதன் பின்னர் அடுத்த அணி வந்து மிகுதியை கொள்ளையடித்துவிட்டு இருந்ததை நாசம் செய்து விட்டுப் போயுள்ளது. எல்லோரும் தப்பியோடி மலைக் காடுகளில் மறைந்திருந்திருந்து தங்களின் குடியிருப்புகள் நாசமாவதை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இங்கு ஏறத்தாழ 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பழனியம்மாள்
வேவல்வத்தையில் கொலை செய்த நபரை என் தம்பி லாசர் தான் அழைத்து வந்ததாக ஒரு கதையைப் பரப்பி 8.30 அளவில் இங்கு வந்து பரையும் தாக்கி லாசரைத் தேடிர். லாசரிடமே வந்து யார் லாசர் என்று கேட்டனர். லாசரை முந்திக் கொண்டு நானும், லாசர் இந்த வழியால் போனார் என்றோம். வெளியில் வந்தவுடன் லாசர் தப்பிப் போனார். பின்னர் தான் இங்கு எல்லோரும் தான் தாக்கப்பட்டோம். உண்மையில் எனது தம்பியிடம் ஒரு வான் உள்ளது. ஆனால் அவர்கள் கூறும் எந்த நபரையும் என் தம்பி கூட்டிவரவில்லை. இங்குள்ள கணக்குப்பிள்ளை தான் இந்த பகுதியில் நடந்த தாக்குதலுக்கு வழிகாட்டியுள்ளார்.

தேவநேசம் (27)
வான் அன்று வெளியில் எடுக்கப்படவே இல்லை. பொலிஸார் வந்து இப்போது வானையும் கொண்டு போய்விட்டனர். கணக்குப்பிள்ளை ஜெயசேன தான் இங்கு தாக்கப்பட வெண்டிய வீடுகளை குறித்துக் கொடுத்துள்ளார். முதலில் வசதியான வீடுகள் தான் தாக்கப்பட்டன. பின்னர் தான் ஏனையவையும் தாக்கப்பட்டன.இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலரது விபரங்களடங்கிய பட்டியலொன்றையே சரிநிகருக்குக் கொடுத்தனர் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வந்த வாகனங்களில் சிலவற்றின் வாகன இலக்கங்களையும் எம்மிடம் கொடுத்தனர். (சுபேஸ் முதலாளியின் வாகனம் 58-6157)

இராசகல்ல யோகநாதன் (25)(தேசிய தொழிலாளர் காங்கிரசின் தோட்டத் தலைவர்)
200க்கும் மேற்பட்டவர்கள் அன்று இரவு 8.30 மணியளவில் வந்து எல்லோரையும் தாக்கினர். எல்லாமாக 39 காம்பராக்கள் அத்தனையும் நொறுக்கப்பட்டுள்ளன.சந்தனமேரி (38)துவக்குகள், வாள்கள் என்பவற்றைக் கொண்டு வந்தனர். என் கனவரைத் தாக்கினர், தலையில் வாளால், தாக்கியதில் இதோ பாருங்கள் தையல் போட்டிருக்கிறது. அன்று இரவு நாங்கள் எல்லோரும் காடுகளுக்குள் ஒடி ஒளிந்து பின்னர் இரண்டவது நாள் துரை எங்களை அழைத்து ஸ்டோரின் வைத்திருந்தார். நான்கு நாட்களின் பின்னர் தான் வெளியில் வந்தோம்.

சரிநிகர் - ஒக்டோபர் 1998 - இதழ் - 156

வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது

- த ஜெயபாலன்


வீரகேசரி பத்திரிகையின் ஊடகத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றி இலங்கையின் முதல்தர பத்திரிகை ஆசிரியராக இருந்த வி தேவராஜா பத்திரிகையின் ஊடகப் பகுதியில் இருந்து நிர்வாகப் பிரிவுக்கு மாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய தூதரகத்தினூடாகவும் வீரகேசரி இயக்குநர்கள் அவைக்கூடாகவும் வழங்கிய அழுத்தங்களை அடுத்து வி தேவராஜா அவரது ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறுவனருமான பா உ சரவணபவனின் மைத்துனர் சு வித்தியாதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரே வி தேவராஜாவை வீரகேசரியின் ஆசிரியர் பதவியில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சு வித்தியாதரன் யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வி தேவராஜாவை ஆசிரியர் பீடத்தில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தி உள்ளனர். இந்த அழுத்தம் வீரகேசரி இயக்குனர் அவைக்கு இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சு வித்தியாதரனும் இரா சம்பந்தனும் வீரகேசரியின் இயக்குநர் அவையினருடன் பேசி வி தேவராஜாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளனர்.
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்கள்; வீரகேசரி தினசரி பத்திரிகைகளுக்கும், வாரமலருக்கும், வீரகேசரியின் வார வெளியீடுகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். ஆனால் வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது வீரகேசரியின் தினசரி பதிப்புக்கு பிரபாகரன் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வீரகேசரியின் வாரமலர் மெற்றோ மித்திரன் உட்பட்ட 5 சஞ்சிகைகளுக்கு வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த வேலைப் பகிர்வு என்பதும் பிரித்தாளும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செப்ரம்பர் முற்பகுதியில் இருந்து வீரகேசரியின் தினசரி பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த பிரபாகரன் வீரகேசரியின் வாரமலர் உட்பட வீரகேசரியின் சஞ்சிகைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார். வி தேவராஜா பதவி உயர்வு என்ற பெயரில் ஊடகத்துறையில் இருந்து நீக்கப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட உள்ளார்.
வி தேவராஜா இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த கல்வித் தரமும் திறமையும் மிக்கவர் அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலேயே வீரகேசரி கூடுதல் வாசகர்களைக் கொண்டு திகழ்ந்தது. மேலும் “வி தேவராஜா தான் ஏற்றுக்கொண்ட, நம்புகின்ற கருத்துக்களை ஆணித்தரமாக எழுதத் தயங்காதவர்” என்கிறார் ஆய்வாளர் மு நித்தியானந்தன். ”இதுவே அவரை ஊடகத்துறையில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்தித்தது” என்றும் “வி தேவராஜா வின் மலையகப் பின்னணியும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்” எனவும் மு நித்தியானந்தன் தேசம்நெற் க்கு தெரிவித்தார். மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட மு நித்தியானந்தன் வி தேவராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி தேவராஜா ஊடகத்துறையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னணி:
வி தேவராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மிகுந்த மென்போக்கு உடையவர். அன்றைய கால கட்டத்தில் அவருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்த போதும் அவர் தொடர்ந்தும் தனது ஊடகத்துறையில் தனக்கு நியாயம் எனப்பட்டதை ஆணித்தரமாக எழுதி வந்தார்.
2009 மே 18இற்குப் பின்னும் தேவராஜா தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாகவே கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். 2010 இல் லண்டனில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கை அரசு மீதான காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மே 2009 இற்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மென்போக்குடனேயே வி தேவராஜா காணப்பட்டார். “அவர் தீவிர தமிழ் தேசியவாதிகள் மீது குறிப்பாக கஜேந்திரகுமார் குழுவினருடன் கருத்தியல் நட்பு உடையவர்” எனத் தேசம்நெற்க்கு தெரிவிக்கிறார் ஆய்வாளர் இதயச்சந்திரன். வீரகேசரியில் பத்தி எழுதி வருகின்ற இதயச்சந்திரன் வி தேவராஜாவுடன் மிக நெருக்கமானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தலைமை மீது மிகுந்த மதிப்புடைய இதயச்சந்திரன் “மகிந்த அரசுக்கு எவ்விதத்திலும் குறையாத ஊடக அடக்குமுறையை தமிழ் தலைமைகள் கொண்டிருப்பதை இச்செயல் காட்டுகின்றது” எனத் தெரிவித்தார்.
வி தேவராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை கொண்டவர் என்றும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் நம்புவதாகவும் அதனையே வி தேவராஜா தனது பத்தியில் எழுதி வருவதாகவும் இதயச்சந்திரன் குறிப்பிட்டார். இதற்காகவே தேவராஜாவை வீரகேசரியின் ஊடகப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறியாக இருந்ததாக இதயச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதனை உறுதிப்படுத்திய மு நித்தியானந்தன் அரசாங்கத்துடன் என்ன பேசுகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட வேண்டும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டத்தை வெளியிட வேண்டும்; காலம் காலமாக தமிழரசுக் கட்சியினர் மேற்கொள்ளும் ஏமாற்று அரசியலை அனுமதிக்க முடியாது போன்ற தீவிரமான அரசியல் கருத்துக்களை வி தேவராஜா எழுதி வந்துள்ளார் எனத் தெரவித்தார். மு நித்தியானந்தன் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் மகிந்த ராஜபக்ச அரசுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற இரகசியங்களை வி தேவராஜா அறிந்து வைத்திருந்தமை போன்ற விடயங்களும் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
 “சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரசிங்கவை வெளியேற்ற முடியாமல் போனதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வி தேவராஜாவை வெளியேற்ற முடிந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை” எனத் தெரிவித்த மு நித்தியானந்தன் இருவருமே அதிகார சக்திகளால் தாங்கள் நேசித்த ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார். வி தேவராஜா வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் குரல் எழுப்பாதது வேதனையானது என்றும் மு நித்தியானந்தன் தெரிவித்தார்.

நன்றி - தேசம்நெட்
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates