Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

1800களில் இலங்கை: காலனித்துவ நூல்கள் வழியாக... - என்.சரவணன்


இந்த பத்தி 1800களில் (19வது நூற்றாண்டில் இலங்கை பற்றிய அரிதான விபரங்களை வெளிப்படுத்திய காலனித்துவக் கால வெளியீடுகள் அறிக்கைகள் என்பவற்றை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைப்பதற்காக தொடங்கப்படுகிறது. இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று விடயங்களை ஆராய்பவர்களுக்கு உதவும் ஒரு வழிகாட்டி உசாத்துணையாக பதிவு செய்வதற்கும், கூடவே அவை வெளியிட்ட முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவுமே இந்தப் பத்தி சில வாரங்களுக்குத் தொடரும்.

காலனித்துவ கால இலங்கை பற்றிய குறிப்புகளை ஆராய்பவர்களுக்கு உதவும் பல்வேறு முக்கிய ஆவணங்களின் வரிசையில் “இலங்கை நாட்காட்டி” (The Ceylon Calendar - almanac for the year OF OUR LORD «....»), “பெர்குசன் டிரக்டரி” (The Ceylon Almanac and Ferguson‟s Directory) ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை இரண்டுமே ஆண்டுதோறும் அன்றைய அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டு வந்த பல நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரிய அறிக்கைகள். இவற்றை இன்று காண்பதும் தேடிக்கண்டுபிடிப்பதும் லேசான வேலையல்ல. இலங்கையின் சுவடிகூடத்திணைக்களத்திலும், நூதனசாலை நூலகத்திலும் இன்னும் சில பழைய நூல் சேகரிப்பு இடங்களில் மாத்திரமே காணக்கிடைக்கூடியவை.

இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபர சேகரிப்பும், வெளியீடும் 1871 இலேயே ஆரம்பித்துவிட்டன. அதேவேளை 1944 டிசம்பர் மாதம் தான் டொனமூர் அரசியல் திட்டம் அமுலில் இருந்த காலத்தில் இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் (Census Department) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது வரை இலங்கையின் மக்கள், சமூகம், வர்த்தகம், விவசாயம், மருத்துவம், வரலாற்றுக் குறிப்பு, நாட்டின் மொத்த வரவு செலவு என அத்தனையையும் துல்லியமாக பல நூற்றுக்கணக்கான பக்கங்கங்களில் பல வருடங்களாக தந்தவர் தான் பெர்கியுசன்.

“The Ceylon Calendar - almanac for the year” என்பதை இலங்கையின் பஞ்சாங்க நாட்காட்டி என்று அழைக்கலாம். ஆனால் அது ராசிபலன்களை அறிவிக்கும் வைதீக அர்த்தத்திலல்ல. மிகவும் விஞ்ஞானபூர்வமான ஏராளமான நடைமுறைத் தகவல்களைக் கொண்டிருப்பது இது. வருடாந்தம் இந்தத் தகவல்கள் கிராமமாக புதுப்பிக்கப்பட்டுவந்ததால் ஆரம்பத்தில் இதனை தொகுப்பதற்கு கொடுக்கப்பட்ட விலை அதற்குப் பிறகு அந்தளவு தேவைப்பட்டிருக்காது.

முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், குடித்தொகை புள்ளிவிபரங்கள், அரச நீதி, நிர்வாகத்துறைகள் மட்டுமன்றி பொது விடுமுறை நாட்கள், பௌர்ணமி நாட்கள், பிறப்பு, இறப்பு, திருமணம் பற்றிய விபரங்களைக் கூட காணக் கிடைக்கின்றன. ஆங்கிலேயர்கள் இலங்கையை 1818இல் தான் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் 1833இல் தான் இலங்கையை ஆட்சி செலுத்துவதற்கான முதலாவது அரசியல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

“இலங்கை பஞ்சாங்க நாட்காட்டியை” அவர்கள் அதற்கு முன்னரே வெளியிட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. எனது சேகரிப்பில் ஒரு சில உள்ளன அதில்  பழமையானது 1827 ஆம் ஆண்டு வெளிவந்தது. எனவே இது எப்போது முதன் முறை வெளியிடப்பட்டது என்று அறியக்கிடைக்கவில்லை. 1827ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கை 327 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இலங்கைக்குள் வந்ததன் பின்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாட்குறிப்பும் 12 மாதங்களிலும் குறிப்பிடப்படுகின்றன. நாளாந்த சூரிய உதயம், அஸ்தமனம், சந்திர உதயம், அஸ்தமனம் என்பவை பற்றிய கால அட்டவணையும் அடங்குகிறது.

இலங்கையில் தரித்துநிற்கும் கப்பல்கள், போக்கப்பல்களின் விபரங்கள், அவற்றின் கப்டன்கள், கப்பலில் அடங்கியுள்ள பீரங்கிகளின் எண்ணிக்கை என்பவை கூட பட்டியலிடப்பட்டுள்ளன. 
இந்தியாவில் இருந்து கப்பல்கள் மூலமும் தோணிகள் மூலமும் இலங்கைக்கு கொண்டுரவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி தீர்வை வரி பற்றிய நீண்ட பட்டியல் ஒன்றும் உள்ளது. சாராயம் என்பவற்றுடன் கஞ்சாவுக்கும்  தீர்வை விதித்திருப்பதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியில் கஞ்சா அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருப்பதும் தெரிகிறது.

இலங்கையில் அப்போது இயங்கிய மிஷனரி அமைப்புகள் அவை நடத்திய பாடசாலைகளின் எண்ணிக்கை, அவை கொண்டிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி பிரதேச வாரியாக பட்டியலிட்டிருக்கிறார்கள்.

1821-1853 வரையான இலங்கைக்கான வரவு செலவு
85ஆம் பக்கத்தில் காலனித்துவ அடிமைகளை (Registy of Colonial Slaves) பதிவு செய்யும் காரியாலயம் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன.

தூரப் பயணங்கள் மேற்கொள்கையில் தாண்ட வேண்டிய பிரதேசங்கள், அந்தந்த பிரதேசங்களை அடைவதற்கு எடுக்கும் மைல் தூரம், இடையில் தங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்கள் அவற்றுக்கு உள்ள தூரம் என்பன பற்றிய விபரமான நீண்ட பட்டியல் சில பக்கங்களை நிறைத்துள்ளன. உதாரணத்துக்கு கண்டியிலிருந்து யாப்பானத்துக்கு தம்புள்ளை, மிஹிந்தலை வழியாக செல்லும் வழியில் உள்ள இடங்களில் தங்குமிடங்களாக கூலிக் கொட்டகைகள் (Cooly shed), தங்குவிடுதிகள் பற்றிய விபரங்களும் எதிர்கொள்ளக்கூடிய ஆறுகள், பாலங்கள், நெல்வயல்கள், மிஷனரி நிலையம், பொலிஸ் நிலையம், எல்லைகள், துறைமுகங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

அன்றைய காலிமுகத் திடல் வழியாக போக்குவரத்துக்காகவும், பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டில்கள்
மாட்டு வண்டில்களுக்கும் அவற்றை ஓட்டும் கூலிகளுக்குமான வரிகள், சட்ட விதிகள் பற்றி இரு பக்கங்களில் சில விபரங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு
  • கூலிக்கு ஒரு நாள் சம்பளம் - 6 பென்னிகள்
  • கொழும்பு – மாத்தறை கூலி – 6 சில்லிங்கள்
  • கொழும்பு - மட்டக்களப்பு – ஒரு பவுன், 4 சில்லிங்கள்
  • கொழும்பு – யாழ்ப்பாணம் – 18 சில்லிங்கள்
விதிகளில் சில...
  • 40 இறாத்தல் பொதிக்கு மேல் எந்தவொரு கூலியும் எற்றிச்செல்லக் கூடாது.
  • கூலிகளின் வேளை நேரம் காலை 7 – மாலை 5.30 வரை. இரண்டு மணித்தியால உணவுநேர ஓய்வுண்டு
  • சகல மாட்டு வண்டில்களுக்கும் இலக்கத்தகடு இருக்கவேண்டும்.
  • முறைப்பாடுகள், அல்லது மேலதிக உரிய கொடுப்பனவுக்கு மேல் கேட்கும் கூலிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இங்கிலாந்தின் பணம் தான் இலங்கையிலும் புழக்கத்தில் இருந்தது 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பிரித்தானிய பணம் இப்படித்தான் கணக்கெடுக்கப்பட்டது .
12 பென்னிகள் = 1 சில்லிங்
20 சில்லிங் 1 பவுன்
அதாவது 1 பவுன் 240 பென்னிகள்
12 Pennies (Pence) = 1 Shilling | 20 Shillings = 1 Pound | So 1 Pound = 240 Pence 

இந்த விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1800என்று காணப்படுகிறது. அதாவது கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுமையும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னர்.


1856 இல் வெளியான பதிப்பில் 110வது பக்கத்திலிருந்து தேசாதிபதி சுதேச மொழிப் பரீட்சை பற்றி வெளியிட்ட குறிப்புகளை காண முடிந்தது. சுதேச மொழிகளைக் கற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு அப்போது பதவிகளும், பதவி உயர்வுகளும், சம்பள உயர்வுகளும் வழங்கப்படும் வழக்கம் இருந்ததால் அதை ஊக்குவிக்கும்வகையில் இந்த பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. இந்தளவு கடினமான ஒரு மொழிப் பரீட்சை வேற்று மொழிக் காரர்களுக்காக அன்று இருந்திருக்கிறது என்பது வியப்பைத் தருகிறது.

கீழ்வரும் இரண்டு அல்லது மூன்று நூல்களை மாணவர்கள் மொழிபெயர்த்திருக்கவேண்டும். ஓலைச்சுவடிகள் பரீட்சையாளரால் வழங்கப்படும். அவை சீல் செய்யப்பட்டு காலனித்துவ செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும்.
சிங்களத்தில் இருந்து:
  • பால பிரபோதன
  • பாடசாலை ஆணையகத்தால் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று நூல்கள்
  • சிங்களச் சட்டம்
  • பாலியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தம்ப்பியாவ
  • பன்சிய பனஸ் ஜாதக 
  • தூபவன்ச
  • ராஜாவலிய

தமிழில் இருந்து:
  • நீதிவெண்பா
  • திருக்குறள்
  • தேசவழமை சட்டம்
  • சைமன் காசிச்செட்டியின் இலங்கை வரலாறு
  • கல்லாடம்
  • அரசாங்க சட்டங்கள்
  • கம்பராமாயணம்
  • மகாபாரதம்

இந்த பரீட்சை பற்றிய விபரங்கள் அன்றைய ஆளுனரால் உத்தியோகபூர்வ அரச வெளியீடுகளினூடாக அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும். ஜேம்ஸ் 1852 ஆம் ஆண்டு வெளியிட்ட “The sidath sangarawa” என்கிற சிங்கள இலக்கணம் பற்றிய ஆய்வு நூலிலும் மேலதிக அடிக்குறிப்புகளோடு இந்த அறிக்கையைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

சிவில் சேவைக்கான இந்த மொழிப் பரீட்சை ஆண்டுதோறும் இரண்டு தடவைகள் ஜனவரி, யூலை ஆகிய மாதங்களில் இடம்பெற்றிருக்கிறது.

32ஆம் பக்கத்தில் லெயார்ட் (Layard) என்பவர் சந்தித்த வெவ்வேறு 35 சாதியினர் பற்றிய பட்டியல் காணப்படுகிறது. சிங்களம், தமிழ் சமூகங்களை கலந்து பட்டியலிடப்பட்டிருக்கிறது.

காலனித்துவ காலத்தில் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும், ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என்போருக்கு துல்லியமான தகவல்களையும், தரவுகளையும் வழங்குவதற்கான வழிகாட்டியாக இந்த வெளியீடு பெரிதும் பயன்பட்டன.

அடுத்த நூல் அடுத்த இதழில்...

நன்றி - அரங்கம்


மலையக மக்களை ஏமாற்றுகிறதா ஐக்கிய தேசியக் கட்சி? - எஸ்.தியாகு


மலையக பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றி வருவதாக மலையகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் வெளிவருகின்றன.

உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களை மறந்து செயற்படுகின்றதா? ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களை மட்டுமன்றி அதனுடைய ஆதரவாளர்களையும் மறந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு மலையக மக்கள் வழங்கிய வாக்குகள் பெரும் பங்கு வகித்திருப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் பல மேடைகளிலும் வெளிப்படையாக பேசி இருக்கின்றார்கள். நன்றி தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.இப்படி எல்லா நேரங்களிலும் அக்கட்சிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்ற போதும் அவர்களுக்கு இக்கட்சி இதுவரையில் என்ன செய்திருக்கின்றது?என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கின்றது.

மலையக மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை தேசிய மட்டத்தில் செயற்படக்கூடிய கல்வி இராஜாங்க அமைச்சு இருந்தது.

அது தவிர, தேசிய மொழிக் கொள்கைகள் என்ற ஒரு அமைச்சு இருக்கின்றது. இதைவிட எந்த ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவியோ அல்லது திணைக்கள தலைவர்களாகவோ மலையக மக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

அடுத்ததாக, வடகிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் கட்சிகள் தங்களுடைய பேரம் பேசுகின்ற சக்தியின் மூலமாக தேசிய மட்டத்தில் வேலை செய்யக் கூடிய வகையில் பல அமைச்சு பதவிகளையும் இராஜாங்க அமைச்சுகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையானது அச்சமூகத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக கருதவேண்டுமே தவிர அதை விமர்சிக்க தலைப்படக்கூடாது.

அத்துடன் வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.இவை எல்லாவற்றையுமே வரவேற்கக் கூடிய விடயங்களாகவே பார்க்க வேண்டும்.

மறுபுறம் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய ரீதியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி என்றுமே விரும்புவதில்லை என்பது உண்மை.அதற்கு காரணம் என்ன? எம்மவர்களுக்கு தேசிய அமைச்சுக்களை பெற்றுக் கொண்டு சிறப்பாக செயற்பட முடியாது என்ற எண்ணமா?அல்லது இவர்களுக்கு தேசிய அமைச்சுகள் தேவையில்லை இவர்களுக்கு வாகனமும் பெயரளவில் ஒரு அமைச்சும் வழங்கினால் போதும் என்ற அலட்சியமா ? இல்லாவிடின் அதைப்பெற்றுக்கொள்வதற்குரிய பேரம் பேசுகின்ற சக்தி இவர்களுக்கு இல்லையா?

அல்லது ஏதோ ஒரு அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் எம்மவர்கள் கிடைத்ததைப்பெற்றுக்கொண்டு வாழ்கின்றார்களா? கட்சி இவர்களைக் கண்டு கொள்வதில்லையா போன்ற பல கேள்விகள் எங்கள் மத்தியில் எழுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் அமைந்த போது உண்மையிலேயே மலையக மக்கள் தங்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டது போல உணர்ந்தார்கள்.ஏனென்றால் அந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமாக அமைந்தது.

மலையக மக்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளது.இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு வசதிகளை செய்வதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அது வரவேற்கப்படவேண்டியதொன்று தான்.

ஆனால் மலையக மக்களுக்கு தனியே வீட்டுப் பிரச்சினை மாத்திரம் தான் இருக்கின்றதா?அவர்களுக்கு ஏனைய பிரச்சினைகள் இல்லையா?அப்படியானால் ஏனைய பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு தீர்த்துக் கொள்வது?

நவீன் திசாநாயக்க பராமுகம்

ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து எங்களுடைய பிரதிநதிகள் செயற்பட வேண்டும் என்று பலரும் கூறலாம்.அது உண்மையிலேயே சாத்தியப்படுமா?அவர்கள் எங்களுடைய மக்களுக்கு எதனையும் செய்வதற்கு முன்வருவார்களா?அப்படியானால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் நவீன் திசாநாயக்க இதுவரை மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர்களுக்காக என்ன செய்திருக்கின்றார்? அல்லது எங்கேயாவது மலையக மக்களுக்காக அவர் குரல் கொடுத்திருக்கின்றாரா? சம்பளப் பிரச்சினையின் போது கூட பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சார்பாகவே அவர் இருந்தாரே தவிர அவர் மக்கள் சார்பாக இருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நுவரெலியா மாவட்டத்தை கண்டு கொள்ளாத அமைச்சு

சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதிநிதிதான் அமைச்சர் கபீர் ஹாசிம். இவருக்குக் கீழேயே பெருந்தெருக்கள் அமைச்சு இயங்குகிறது.

எமது பிரதேச பாதை அபிவிருத்திக்கு இவ் அமைச்சு ஏன் முக்கியத்துவம் வழங்குவதில்லை? அது குறித்து ஏன் கூட்டணி பிரதிநிதிகளும் கேட்பதில்லை? அந்த அமைச்சு மலையக பிரதேசங்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டு வருவதாக அண்மையில் அம்பேகமுவையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.அது மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கிக்கு சரிவை ஏற்படுத்தும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தமது திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான அளவு நிதி கிடைப்பதில்லை. அதனாலேயே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது என்று தெரிவித்தனர்..அப்படியானால் ஏன் நிதி வழங்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்காக பல இடங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது.

அதே போல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் முறையாக கிடைப்பதில்லை.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை.இப்படி பல வழிகளிலும் நுவரெலியா மாவட்டம் ஓரம் கட்டப்பட்டு வருகின்றது.இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிகாலத்திலேயே அதிகமாக நடைபெறுகின்றது.மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவியும் முத்து சிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சு பதவியும் தேசிய ரீதியில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.அதனை எந்தளவுக்கு அவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற கதை வேறு, ஆனாலும் தேவையான அளவில் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக இன்னும் நிலைமை மோசமடைந்திருப்பதை காண முடிகின்றது.குழப்பமான நிலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையான ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கியிருந்தாலும் அதன் பின்பு ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் இருவருக்குமே அதே அமைச்சுப்பதவிகளே கிடைத்தன.

மனோ கணேசனுக்கு மேலதிகமாக இந்து கலாசாரம் வழங்கப்பட்டுள்ளது.இராதாகிருஷ்ணனிடம் இருந்த இராஜாங்க கல்வி அமைச்சு பறிக்கப்பட்டு விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் என ஒரு புதிய அமைச்சு ஏற்படுத்தப்பட்டு அது வழங்கப்பட்டிருக்கின்றது.ஆனால் அதில் என்ன இருக்கின்றது.என்ன செய்யலாம் என்பது யாருக்குமே தெரியாது.இன்னும் அந்த அமைச்சிற்கான வர்த்தமானி அறிவித்தலை கூட வெளியிடமுடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சு ஏன் பறிக்கப்பட்டது?

இராஜாங்க கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட பின்பு அவர் நாடு முழுவதும் தேசிய ரீதியில் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.அதற்கு காரணம் அவருக்கு கல்வித்துறையில் இருந்த அனுபவம்.அவருடைய சேவைகள் வடகிழக்கு மலையகம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கு சென்றடைந்தது.ஒரு கட்டத்தில் அவருடைய சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கூட வெகுவாக பாராட்டியிருந்தார்கள். அப்படியான ஒரு நிலையில் என்ன காரணங்களுக்காக அதனை பறித்துக் கொண்டார்கள் என்பது புரியவில்லை.ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் இதுவரை மலையக கல்வி பற்றி வாய்திறக்கவேயில்லை. மட்டுமன்றி தற்போது கொழுந்து விட்டெரியும் பத்தனை கல்வியியற் கல்லூரி விவகாரம் தொடர்பில் எந்தவித பிரதிபலிப்புகளையும் காட்டாது மௌனமாகவே இருக்கின்றார்.

அரசியல் குழப்ப நிலை இருந்த கால கட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சு பதவியும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்த போதிலும் அதனை வழங்கவில்லை.மேலும் இராதாகிருஸ்ணன் எம்.பி எழுத்து மூலமாக தனக்கு ஏற்கனவே தான் வகித்த இராஜாங்க அமைச்சுடன் இந்து கலாசார அமைச்சை இணைத்து தருமாறு பிரதமரிடம் கோரியிருந்த போதிலும் அது வழங்கப்படவில்லை.அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் வெளிவராத உட்பூசல்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருவதாகத் தெரிகிறது.அங்கே கூட்டணி என்பது வெறும் பெயரளவிலேயே இருக்கின்றது.இதனை நாம் வெளிப்படையாகவே காண முடியும்.குறிப்பாக அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் மூலமாக செயற்படுத்தப்படுகின்ற வீடமைப்பு திட்டம் அவருடைய கட்சியை மையப்படுத்தியதாகவே அமைவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்;.அதே போல மனோகணேசனும் கட்சி ரீதியாக செயற்படுவதாகவும் இராதாகிருஷ்ணன் அதிகமாக வடகிழக்கு சார்ந்த பகுதிகளிலேயே அபிவிருத்திகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பொழுது மூன்று தலைவர்களும் இணைந்து கூட்டாக தங்களுக்கு என்னென்ன அமைச்சு வழங்கப்பட வேண்டும்.எந்தெந்த திணைக்களங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் முன்வைக்கவில்லை ?அப்படி முன்வைக்கப்பட்டு இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாங்கள் யாரும் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற அழுத்தத்தை கொடுத்திருக்கலாமே ? ஆனால் அது நடைபெறவில்லை.

தமிழ் முற்போக்குக்கூட்டணியை ஏமாற்றுகிறதா ஐ.தே.க?

தமிழ் முற்போக்கு கூட்டணியை அரசாங்கம் பெரியளவில் கண்டு கொள்வதாக தெரியவில்லை. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்பு ஏனைய மாவட்டங்களைப் பொறுத்தளவில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அவை எதுவும் மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.

சம்பள உயர்வு விடயத்திலும் கூட இதுவரையில் அரசாங்க தரப்பில் இருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை வெறுமனே காலம் இழுத்தடிக்கப்படுகின்றதே தவிர எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. எனவே என்னதான் மலையக மக்கள் யானை சின்னத்துக்கு வாக்குகளை வாரி வழங்கினாலும் ஐ.தே.க பெருந்தோட்ட மக்கள் மீதோ அல்லது அவர்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மீதோ அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

 இந்நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல்களில் மலையக பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு வெகுவாக குறைவடையும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.அதனை நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் காணக்கூடியதாக இருந்தது.இதனை மாற்றி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா? மலையக மக்களின் அபிவிருத்திக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமா?

நன்றி - வீரகேசரி

கோத்திர சபையில் தொடுக்கப்படக்கூடிய வழக்குகள் - என்.சரவணன்


பண்டைய ஏழு கோறளைகளுக்கு சொந்தமான குளக்கரை (வாவிகளையும், குளங்களையும் அண்டிய கிராமங்கள்) கிராமிய கலாசாரத்திலும் பிராந்திய அதிகார மையங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. குளக்கரை கிராமங்களில் கிராமிய மக்களின் பிரபுக்களாகத் திகழ்ந்தவர்கள், இந்தக் கோத்திரச் சபைகளின் அங்கத்தவர்களாக கடமையாற்றினார்கள். கிராமங்கள் சார்ந்த முடிவுகளை மேற்கொள்கையில், இவர்கள் நிறைவேற்று அதிகாரிகளாக செயற்பட்டார்கள்.

கோத்திர சபை விசாரிக்கக்கூடிய சாதிய வழக்குகளை 16 பிரிவுகளாக அடையாளம் கண்டோம் என்கிறார் பேராசிரியர் டீ.ஈ.ஹெட்டி ஆராச்சி. அவர் எழுதிய “சிங்கள சிரித் சங்ராய (1979)” (சிங்கள சட்டக் கோவை) என்கிற நூலில் இதைப் பட்டியல் படுத்தியிருக்கிறார்.
  1. பிற சாதியில் மணமுடித்து ஒன்று கலத்தல்
  2. சாதிக்கு ஒவ்வாததைச் செய்தல். (கீழ் சாதி என்று கருதப்படும்  ஒருவரை திருமணம் முடித்தல் அல்லது அப்படிப்பட்ட ஒரு ஆணுடன் செல்தல்.)
  3. கணவர் இறந்ததும் இன்னொரு வெளி ஆணுடன் “கள்ளத் தொடர்புற்று” கர்ப்பமடைதல்
  4. தமிழ், முஸ்லிம் (மரக்கல) அல்லது வேறு வெளி பெண்ணுடன் பாலுறவு கொள்தல்.
  5. மாமியாரின் மகளைத் தவிர வேறெந்த உறவுப் பெண்ணுடனும் கூடுதல்.
  6. கோத்திர சபையால் தண்டனை பெற்று சாதிக்கு அவப்பேரை ஏற்படுத்திய ஒருவருடன் உறவைப் பேணுவது
  7. வேறு சாதிக்காரரின் திருமணப் பேச்சு சடங்கில் (பருசம்) உணவு உண்ணுதல்.
  8. தண்டனை பெற்று தடை விதிக்கப்பட்ட ஒருவருடன் சாதி சடங்குகளை பகிர்தல்.
  9. குறைந்த சாதிக்காரர்களுடன் சேர்ந்து சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நிந்திப்பது.
  10. காரணமின்றி ஒருவரை நிந்திப்பது.
  11. கோத்திர சபையின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடியவகையில் அவமதித்தல்.
  12. கோத்திர சபையின் தீர்ப்புக்கு கீழ்படியாமை
  13. முன்னனுமதி பெறாமல் கோத்திர சபையில் பேசுதல்.
  14. சபையில் கைகால்களை உயர்த்திக் கதைத்தல்
  15. ஊர்த்தலைவரின் ஆணையின்படி சபையின் பிரதானிகளுக்கு வழங்கவேண்டிய உபசரிப்பை செய்யாமை
  16. சபையிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமுன் வேறொரு முறைப்பாட்டை முன்வைத்தல்.


கோத்திர சபை வழங்கும் தண்டனைகளும்  – தண்டப்பணமும்
  • 1 - 5 வரையான பிரிவுகளை மீறியவர்கள் 500 வெள்ளிகள்
  • 6-7 ஐ மீறியவர்களுக்கு 50 வெள்ளிக்கு மேற்படாமல்
  • 10 ஐ மீறியவர்களுக்கு 12 வெள்ளிகள் 
  • 11 ஐ மீறியவர்களுக்கு 7 வெள்ளிகள் 
  • 12ஐ மீறியவர்களை சாதியிலிருந்து (ஊரிலிருந்து) வெளியேற்றல்
  • 12-14 ஐ மீறியவர்களுக்கு 2 வெள்ளிகள்
  • 15 ஐ மீறியவர்களுக்கு 7 வெள்ளிகள்
  • 16 ஐ மீறியவர்களுக்கு 2 வெள்ளிகளும் வெற்றிலைகளும்

வடமத்திய மாகாணத்திலுள்ள “புல் எளிய”  (Pul Eliya) என்கிற கிராமத்தை 1954 அளவில் தனியாக ஆராய்ச்சி செய்த ஈ.ஆர்.லீச் (E. R. Leach) (1)  அந்த கிராமத்தைப் பற்றிய 368 பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கிய நூலை 1961 வெளியிட்டார். இந்த நூல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்புகள் கண்டது. இந்த கிராமத்தை அவர் தெரிவு செய்ததற்கு முக்கிய வரலாற்றுக் காரணிகள் உண்டு. 

இந்த நூலில் அவர் “வறிக சபா” பற்றிய தனியான ஒரு அத்தியாயத்தை எழுதி ஒரு வழக்கொன்றைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். 

கொழும்பிலிருந்து வந்து குடியேறிய ஆர்லிஸ் என்கிற தச்சன் மணமுடித்திருக்கும் பெண் வேறு சாதியைச் சேர்ந்தவள் என்று ஒரு முறைப்பாட்டை இந்த கோத்திர சபைக்கு கொண்டு சென்றார் கிரிஹாமி என்கிற நபர். இந்த வழக்கு இரவு பகலாக நடந்திருக்கிறது.  இறுதியில் 550 வெள்ளிகளை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு புலங்குலம திசாவவிடம் கோத்திர சபைத் தலைவர் ஒப்படைத்திருக்கிறார்.

அதன் பின் பெண் தரப்பைச் சேர்ந்த இரண்டு மைத்துனர்கள் கொழும்பிலுள்ள ஆர்லிஸின் வீட்டுக்கு விசாரிப்பதற்காகச் சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் ஆர்லிஸ் ஒரு கொவிகம சாதியை (வெள்ளாள சாதியை) சேர்ந்தவர் தான் என்பதை உறுதிசெய்துகொண்டு திரும்பியிருக்கிறார்கள். அதாவது “வண்ணகுலசூரிய ஆர்லிஸ் பெர்னாண்டோ” என்கிற பெயர் கராவ சாதிக்குரிய பெயர் என்கிற புரிதலில் தான் இந்த வழக்கு நடந்திருக்கிறது. மனைவியின் அதே உயர்சாதியைச் சேர்ந்தவர் தான் ஆர்லிஸ் என்பது நிரூபனமான போதும் கோத்திரம் வித்தியாசம் என்கிற வாதத்தை அவர்கள் கிளப்பினார்கள். ஆக கோத்திர சபை தண்டப்பணத்தை 150 வெள்ளி ஆக குறைத்து கூடவே உபசரிப்புச் செலவு வெற்றிலை என்பவற்றை ஏற்கும்படி மறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த பணத்தை கோத்திரசபை உறுப்பினர்களான ஆறுபேரும் பிரித்துக்கொள்வது வழக்கம்.

இந்த நூலைப் பற்றி 2015ஆம் ஆண்டு ராவய பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது. கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்துக்குச் சென்று சிறு கள ஆய்வொன்றை செய்திருக்கிறார். (2) இப்போது அங்கு நிலைமைகள் மாறிவிட்டன. புல் எளிய கிராமத்தில் 73வயதுடைய வன்னிஹாமிகே ஹெரத்ஹாமி என்பவர் இப்படி கூறியிருக்கிறார்.

“தண்டப்பணமாக இத்தனை வெள்ளிகளை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பார்கள். தண்டனைக்கு உள்ளானவர் அதை கேள்வியின்று செலுத்திவிடுவார். அத்தோடு பிரச்சினை தீர்ந்தது. பணத்தைப் பெற்றதும் கோத்திர சபைத் தலைவர்கள் அதை எடுத்துக்கொண்டு தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டால் புறமணத் தடை எற்றுக்கொள்ளப்பட்டுவிடுகிறது. இல்லையென்றால் அது பிழை என்றாகிவிடுகிறது. இது விசித்திரமானதொரு முறைமை. இது ஒரு மோசடிமிக்க சுரண்டல் அல்லவா?

இந்த கோத்திர சபை வெறும் தமது குலக்கோத்திரங்களுக்கு இடையில் மட்டும் வேறுபாடு பார்ப்பதில்லை. மாறாக தமிழர் – சிங்களவர் போன்ற வேற்று இனத்தவருடன் கலப்பது கூட தண்டனைக்கு உரிய குற்றமாக கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். 

லீச் இந்த நூலில் ஓரிடத்தில் இப்படி விளக்குகிறார்.

இனமும். சாதியும், கோத்திரம் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. உதாரணத்திற்கு புல் எளிய, மருதமடு ஆகிய இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இன, சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் கோத்திரம் வேறானதாக இருந்தால் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தான் பொருள். அவர்களுக்கு இடையில் மணமுடிக்க முடியாது.

காணி விற்பனை சம்பந்தப்பட்ட விடயத்திலும் அதே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்குத் தான் முன்னுரிமை அதன் பின்னர் தான் அடுத்தடுத்த படிநிளைவரிசையில் பார்த்து கோத்திர சபை அனுமதியளிப்பது அன்றைய வழக்கம். காணிகள் எப்படி விற்கப்பட்டன என்பது பற்றிய சில சம்பவங்களை தனது நூலில் லீச் விளக்கியுள்ளார்.

உசாத்துணை:
  1.  E. R. Leach – “Pul Eliya: A Village in Ceylon” - Cambridge University Press, Jan 2, 1961
  2. கே.சஞ்சீவ – “மல்வத்து ஓய்வுக்கு அண்மித்த ராஜகுருக்களின் புல் எளிய” (මල්වතු ඔය අසල රාජගුරුවරුන්ගේ පුල්එළිය) - “ராவய” பத்திரிகை – 21.06.2015 



பண்டைய சிங்களக் கோத்திர பஞ்சாயத்து இயங்கியது எப்படி? (3) - என்.சரவணன்


1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்களப் படைகளை ஆங்கிலேயப்படைகள் மிகவும் கொடூரமாக ஒடுக்கின. இந்தக் கிளர்ச்சியை அடக்குவதாகக் கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை எப்படி எல்லாம் அழித்தொழித்தார்கள் என்பது தனிக்கதை அவற்றைப் பற்றி தமிழில் போதிய அளவு பதிவு செய்யப்படவில்லை. 

1833இல் இலங்கைக்கான நிர்வாக சீர்த்திருத்தத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தும்போது ஏற்கெனவே இலங்கையில் கிராம சபைகள் நடைமுறையில் இருந்தன. கிராம சபைகளுக்கென்று இலங்கையில் நீண்ட வரலாறு உண்டு. அதை இல்லாதொழித்துவிட்டே ஆங்கிலேயர்கள் தமது ஆட்சி அலகை அமுலுக்கு கொண்டுவந்தார்கள். ஆனால் இலங்கை மக்களை வெறுமனே தமது ஆங்கிலேய பாணியிலான அதிகார அமைப்புக்குள் அடக்கிவிடுவது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கவில்லை எனவே அவர்கள் மீண்டும் 1848இல் பழைய கிராம சபையையே மீண்டும் அமுல்படுத்த நேரிட்டது. அந்த முறையை மீண்டும் சீர்திருத்தி 1856இல் அன்றைய ஆங்கிலேய தேசாதிபதி ஹென்றி வோர்ட் கிராம சபைக்கு மீண்டும் புத்துயிரளித்தார். அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகள் இலங்கையில் ஆங்கிலேயர்களால் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைவிட்டுவிட்டுச் சென்றதன் பின்னரும் கூட சுதேச ஆட்சியாளர்களால் கிராம சபை முறை அப்படியே பேணப்பட்டது. இலங்கையின் ஆட்சி அதிகார முறையின் ஒரு அங்கமாக 1980 மாவட்ட அபிவிருத்தி சபை வரும் வரை இந்த கிராம சபை நீடித்தது. மாவட்ட அபிவிருத்தி சபை கூட இலங்கையின் இனக்குழுமங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியாகவே அறிமுகப்படுத்தினார்கள். குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதையே முன்மொழிந்தார்கள்.

1980களில் களனி பல்கலைக்கழகத்தின் சிங்களப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றுக்காக நுவரகலாவி என்கிற கிராமத்தில் இருந்த கோத்திர சபை சட்டங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தினார்.

“இந்த நிகழ்ச்சியை பார்த்த பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அந்த கிராமத்தில் நிலவிய கோத்திர சபை பற்றிய கள ஆய்வை மேற்கொள்வதற்காக சென்று அங்குள்ள பெரியவர்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ இவர்களைத் திட்டியிருக்கிறார்கள். இவை பாரம்பரியமாக காக்கப்பட்டுவரும் இரகசியம் என்றும், அந்த விபரங்களை பகிரங்கமாக தம்மால் கதைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.” என்று பேராசிரியர் பள்ளியகுரு தெரிவித்திருக்கிறார்.

இந்த கோத்திர சபைகள் இறுதியில் பெரும்பாலும் குளங்களை அண்டிய கிராமங்களில் பேணப்பட்டு வந்திருக்கிறது. மேலும் கிராமங்கள் சாதிவாரியாக இருந்திருக்கிறது. அவற்றுக்கென்று தனி கோத்திர சபைகள் இயங்கியிருக்கின்றன. அந்தந்த கிராமத்துக்குரிய குலக் கட்டுப்பாடுகள் தனித்துவத்துடன் காணப்பட்டிருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை பொதுமைப்படுத்தி விளக்குவது ஆய்வாளர்களுக்கு சிரமங்கள் உண்டு.

பல்வேறு பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டவேளை கிராமங்களின் இயல்பு நிலை சீர்குலைந்தன. குடியேற்றங்களால் கிராமங்களில் பல்வேறு சமூகக் குழுவினரும், பல்வேறு சாதியினரும் விவசாய குடியேற்றங்களில் குடியேற்றப்பட்டு கலந்துபோயினர். எனவே “தூய” கிராமம் என்றோ, “தூய” சாதியென்றோ ஒன்று இன்று கிடையாது.” என்கிறார் சந்திரசிறி பள்ளியகுரு.

இலங்கையின் ஆதிவாசிகள் பற்றிய ஆய்வொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2011 மேற்கொண்ட இருவர் (Premakumara De Silva Asitha G Punchihewa)  தமது கள ஆய்வுக்காக சில வேடுவர் பிரதேசங்களை தெரிவுசெய்திருந்தனர். (1) அதில் ஒரு பிரதேசம் ஹேனநிகல (Henanigala) என்கிற பிரதேசம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்  போது அவர்கள் இந்த இடத்துக்கு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். 302 குடும்பங்களையுடைய 1078 பேரைக் கொண்ட அந்த சமூகத்தினர் மத்தியில் இருந்த கோத்திரங்களை அவர் அட்டவணைப்படுத்தியிருந்தார் அந்த ஆய்வில். ஆயிரம் பேரைக் கொண்ட ஒரு சமூகத்திலேயே எத்தனை கோத்திரக் குழுக்கள் உள்ளன என்பதைக் காணலாம். இந்த அட்டவணையில் ஏனையோர் என்று இருப்பவர்கள் தமது கோத்திரம் எது என்பதை அடையாளம் காண முடியாது போயுள்ளவர்கள்.



இந்த கோத்திர சபைகள் இறுக்கமான - உறுதியான சட்டத்தை நிலைநாட்டும் என்கிற நம்பிக்கை நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. அது தான் பல காலம் அதன் மீதான மதிப்பும், மரியாதையும் எக்காலத்திலும் இருந்திருக்கிறது.  செல்வாக்குள்ள ஒருவராலோ, நட்பைக் கொண்ட ஒருவராலோ குறித்த வழக்கொன்றின் தன்மை மாற்றப்படுவதோ அல்லது சீர்கெடுவதோ பெருங்குற்றம். அதனை அவர்கள் “புளத் வெறெத்த” (வெற்றிலைச் சாதி) என்று அழைத்தார்கள்.  கோத்திர சபை கூடுமிடங்களில் உபசரிப்பு செய்யும் பணிகளை ஒருவருக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் அதனை அலட்சியப்படுத்தினால் அதனை “பத் வெறெத்த” (சோற்றுச் சாதி) என்று அழைத்திருக்கிறார்கள்.

 “சாதி” என்பதைத் தான் அவர்கள் “வெறெத்த” என்றார்கள்.

கோத்திர சபைகள் கூடுவதற்கென்று நிரந்தர கட்டடம் எதுவும் இருந்ததில்லை. குற்றம் சுமத்த்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் சேர்ந்து கோத்திர சபை கூடுவதற்கு அளவான இடத்தில் ஒரு மடுவத்தை ஏற்படுத்த வேண்டும். அதைச் சுற்றி கயிறு கட்டி எல்லையிட வேண்டும். சபை கூடும் நாள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் அங்கு சமூகமளிக்க வேண்டும். கிராமத்து பன்சலையின் பிக்கு, மருத்துவர், விதானையார், பயிர்ச்செய்கை சேனைத் தலைவர், குலத் தலைவர் ஆகிய ஐவரும் அங்கு வந்து அமர்ந்ததும் விசாரணை ஆரம்பமாகும். சாட்சிகளை விசாரித்து குற்றத்தை அடையாளம் காண்பார்கள். இதன்போது நீதியைப்ப் பேணுவதற்காக விசாரணை முடியும்வரை குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து எந்தவொரு ஆகாரத்தையும் உண்பது சபையில் கலந்துகொள்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.

குற்றம்சுமத்தப்பட்டவர்கள் கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களாயின் மேற்படி ஐவரும் அந்த விசாரணையை மேற்கொள்வார்கள். கொவிகம அல்லாதோர் என்றால் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த வழக்கை நடத்தி கிராம சபையிடம் அதை ஒப்படைக்கவேண்டும்.

ஒரு பெண் சுயமாக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடிப்பது “கராபு குலய” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டது. அது பெருங்குற்றமாக கருதப்பட்டது. 
உசாத்துணை :
  1. Socio- Anthropological Research Project on Vedda Community in Sri Lanka By Premakumara De Silva Asitha G Punchihewa - August 2011 - Department of Sociology University of Colombo
நன்றி - அரங்கம்

கிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா?


நுவரெலியா மாவட்டத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு இரண்டு உயர்கல்வி நிறுவனங்களே இருக்கின்றன. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் பத்தனை தேசிய கல்வியியற்கல்லூரி என்பனவே அவை. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பத்தனை கல்வியியற் கல்லூரி உருவாகி 27 வருடங்களாகின்றன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் கற்கை நெறிகளையும் ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தவர்கள் மலையக பிரதேசங்களில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் , ஆசிரிய ஆலோசகர்களாகவும் , கல்வி பணிப்பாளர்களாகவும் தமது பணியை செவ்வனே முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு கல்வி நிறுவனங்களினதும் பீடாதிபதிகளாக பெண்களே இருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

 ஆனாலும் பத்தனை கல்வியியற் கல்லூரி மட்டும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனமாக மாறி வருவது வேதனைக்குரிய விடயமாகும். ஆரம்ப காலத்திலிருந்தே இங்கு கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்குவதிலிருந்து அவர்களுக்கான ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதில் நிர்வாகம் மிகவும் அசமந்த போக்குடன் நடந்து கொள்வது வழமையாகியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் உணவக பிரிவை சுகாதார பிரிவினர் சீல் வைத்து மூடும் அளவிற்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா? மாணவர்களை வழிநடத்த வேண்டிய கல்லூரியின் நிர்வாகப் பிரிவின் சிலர் கல்லூரிக்குள்ளேயே மது அருந்தும் ஒளிப்பட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கல்லூரியின் நிர்வாகப்போக்கு குறித்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

1992 ஆம் ஆண்டு GTZ எனும் ஜேர்மன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பத்தனை கல்வியியற் கல்லூரியின் உருவாக்கத்துக்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியது.

பெருந்தோட்ட மாணவர்கள் 75 வீதம் உள்ளீர்க்கப்படல் வேண்டும் , தமிழ்ப்பெயரை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. இறுதியில் முதலாவது கோரிக்கை நிறைவேறியது. மற்றையதை பிறகு பார்க்கலாம் என அவர் பொறுமை காத்தார்.

அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவினால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.

நீச்சல் தடாகத்திலிருந்து மாணவர்களுக்குரிய விடுதி, மைதானம், சிற்றுண்டிச்சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள்,கணனி பிரிவு, நூலகம் என சகல வளங்களையும் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்துக்குரிய அம்சங்களுடன் இக்கல்லூரி பரிணமித்தது.

மலையக பல்கலைக்கழக யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது , இங்கு பயிலும் டிப்ளோமா தாரிகளின் கற்கை காலத்தை மேலும் 3 வருடங்கள் நீட்டித்து இளமானிப் பட்டத்தை வழங்கும் வகையில் இக்கல்லூரியையே பல்கலைக்கழகமாக மாற்றினால் என்ன என்ற ஆலோசனை அப்போது மலையக கல்விமான்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் அது சாத்தியப்படவில்லை. சகல வளங்களுடன் மலையக சமூகத்துக்கு இக்கல்லூரி கிடைக்கப்பெற்றாலும் அவ்வப்போது இங்கு பெரும்பான்மை மற்றும் தமிழ் மாணவர்களிடையே புகைச்சல் நிலவி வந்ததை மறுக்க முடியாது. பகிடிவதை, சிற்றுண்டிச்சாலை பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவில்லை.

நேரடியாக கல்வி அமைச்சின் கீழ் இது இயங்கி வந்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளும் இக்கல்லூரியின் உட்பூசல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. அரசாங்கம் கூட வழமையாக மலையக மக்களின் விடயத்தில் எவ்வாறு பராமுகமாக நடந்து கொள்கின்றதோ அதே போன்று இவ்விடயத்திலும் செயற்பட்டது. ஆனால், பெரும்பான்மையின பீடாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் அது அக்கறை காட்டியது.

அவ்வப்போது இக்கல்லூரியில் எழுந்த பிரச்சினைகள் பிரதிநிதிகளாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படாத நிலைமையிலேயே உச்ச கட்டத்தை தொட்டுள்ளது. கல்வியியற் கல்லூரியை விட வளப்பற்றாக்குறைகளுடன் அதாவது கட்டிடம் மற்றும் மலசலக்கூட வசதிகள் கூட இல்லாது கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை நிர்வாக கட்டமைப்புடனும் சிறந்த பெறுபேறுகளுடனும் வெற்றிகரமாக செயற்படும் போது சகல வளங்களும் கொண்ட பத்தனை கல்வியியற் கல்லூரியில் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பதை பற்றிய தேடல் அவசியமானது. ஏனென்றால் இது மலையக சமூகத்தின் எதிர்கால உயர்கல்வியோடு தொடர்பு பட்ட விடயமாகும்.

தற்போது உள்ளே இடம்பெறும் விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை சீர்செய்வதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. மேலும் உள்விவகாரங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே வேளை அவர்களின் கல்விப்பயணத்துக்கும் எவ்வித தடைகளும் ஏற்படாது என்ற உத்தரவாதம் நிர்வாகத்தால் வழங்கப்படல் அவசியம். நுவரெலியா மாவட்டமே தமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மார் தட்டும் அரசியல் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் மத்திய கல்லூரிகளையோ ,தேசிய பாடசாலைகளையோ அல்லது தனியான பல்கலைக்கழகங்களையோ இனியும் உருவாக்கப்போவதில்லை என்பது கண்கூடு. ஆனால் அரசாங்கத்தால் உருவாக்கி தரப்பட்டிருக்கும் இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களையாவது பாதுகாப்பதற்கும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கும் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது போன்று நாளை கல்லூரிக்கே சீல் வைக்கப்படும் நிலை ஏற்படலாம். அதைத்தான் பேரினவாதமும் எதிர்ப்பார்த்துள்ளது. இந்த நிலைமை எமது சமூகத்துக்கு தேவை தானா? உரியோர் சிந்திப்பார்களா?

சிவலிங்கம் சிவகுமாரன்

இறையாண்மை நாடாளுமன்றத்தின் கையிலா? மஹாசங்கத்தின் காலடியிலா - மு.திருநாவுக்கரசு


இலங்கை தன்னாதிக்கமும், இறையாண்மையும் கொண்ட குடியரசு என்றும் அதன் இறைமை மக்களிடம் இருந்து பிறக்கின்றது என்றும் நாடாளுமன்றம், ஜனாதிபதி, பொதுவாக்கெடுப்பு என்பவற்றிற்கு ஊடாக அந்த இறைமை பிரயோகிக்கப்படுகிறது என்றும் அரசியல் யாப்பு கூறுகிறது.

இறைமை இறைவனிடமிருந்து பிறக்கின்றது என்றும் அந்த இறைமை மன்னனுக்கு ஊடாக பிரயோகிக்கப்படுகிறது என்றும் தெய்வீக இறைமைக் கோட்பாடு கூறுகிறது. ஆனால் மன்னராட்சி முறையால் உருவாக்கப்பட்ட இந்த தெய்வீக உரிமைக் கோட்பாட்டை எதிர்த்து மனிதகுலம் நீண்ட போராட்டங்களின் வாயிலாக மக்கள் இறைமைக் (Popular Sovereignty) கோட்பாட்டை பெற்றெடுத்தது. தெய்வீக இறைமைக் கோட்பாட்டை எதிர்த்து மக்கள் இறைமைக் கோட்பாடு உருவாக்கியமையே ஜனநாயகம் ஆகும்.

ஆனால் இலங்கையின் இறையாண்மையானது மீண்டும் பண்டைக் காலத்திற்குரிய தெய்வீக இறைமைக் கோட்பாட்டிற்குரிய மத நிறுவனமான மஹாசங்கத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. பெயரளவில் நாடாளுமன்றத்திற்கு ஊடாக மக்கள் இறைமை பிரயோகிக்கப்படுவதாக கூறினாலும் நடைமுறையில் மஹாசங்கத்தின் சுண்டிவிரல் அசைப்பின்றி நாடாளுமன்றம் எதனையும் செய்ய முடியாது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் மஹாசங்க மஹாநாயக்க தேரோக்களினது காலடியில் வீழ்ந்து வணங்கி அவர்களினது ஆணைக்கு உட்பட்டே ஆட்சிபுரிகின்றனர்.

எனவே உண்மையான அர்த்தத்தில் இறையாண்மையின் பிறப்பிடம் மஹாசங்கமே தவிர ஜனாதிபதியோ, நாடாளுமன்றமோ, பொதுவாக்கெடுப்போ அல்ல. அதாவது பொதுவாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதைக்கூட மஹாசங்கத்தின் அனுமதியின்றித் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக இனப்பிரச்சினைகள் சார்ந்த அரசியல் விடயங்களுக்கு இது நூறுவீதம் பொருந்தும்.

இந்நிலையில் மஹாசங்கம் பற்றிய சரியான புரிதல் அவசியமானது. மஹாசங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இலங்கையின் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மையில் மஹாசங்கம் இலங்கை அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாத தீர்க்கமான பங்கு வகிக்கும் ஒரு தலையாய நிறுவனம். ஆதலால் இதனை பௌத்தம் - அரசியல் - தத்துவம் - வரலாறு – வாழ்நிலை சார்ந்து புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

சிங்கள-பௌத்த தேசியவாதமானது “ஆகம, ரட்ட, பாஷாவ” என்ற மூன்று எண்ணக் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். அதாவது ‘ஆகம’ என்பது பௌத்த மதம், ‘ரட்ட’ என்பது சிங்கள அரசு, ‘பாஷாவ’ என்பது சிங்கள மொழி. இந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்த கட்டமைப்பே சிங்கள-பௌத்த தேசியவாதம் ஆகும்.

தேரவாத (Theravada)பௌத்தம் மும்மணிகளை (Triple Gem of Buddhism) அடிப்படையாகக் கொண்டது. புத்தபிரான், அவரது தர்மபோதனை, சங்கம் (The Buddha, the Dharma, and the Sangha) என்பனவே மும்மணிகளாகும். தேரவாத பௌத்தத்தின்படி ஞானம் பெறுவதற்கு அல்லது பரிநிர்வாணம் அடைவதற்கு இம்மூன்று மும்மணிகளும் அடிப்படையானவை. இதனால் ஒரு பௌத்தன் புத்தபிரானிடமும், அவரது போதனையிடமும், சங்கத்திடமும் சரணடைவதன் மூலம்; அவன் ஞானம்பெற அல்லது பரிநிர்வாணம் அடைய முடியும்.

ஆனால் போதிசத்துவ (Bodhisattva) கோட்பாட்டு முறையைக் கொண்ட மஹாயானத்தின் (Mahayana) ஒரு பிரிவின்படி மும்மணிகளில் ஒன்றான சங்கமின்றி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ஞானமடைய முடியும். மேலும் புத்தபிரான் ‘நான் கடவுள் அல்ல மனிதன் தான்’ என்று தன்னைத் தானே கூறியிருப்பதை ஆதாரங்காட்டி, அதன்படி மனிதனிடம் சரணடையத் தேவையில்லை என்பதால் புத்தரிடம் சரணடைய வேண்டியதில்லை என்றும் அவரது போதனைகளை வழிகாட்டியாகக் கொண்டு சுயமுயற்சியினால் நிர்வாணம் அடையலாம் என்றும் மேற்படி மூவகை சரணடைதலையும் நிராகரிக்கும் போதிசத்துவர்களின் தத்துவமும் உண்டு.

அதாவது மும்மணிகளிலுள்ள சங்க கோட்பாட்டின்படி மலையில் ஏறும் ஒருவர் அல்லது சகதியில் நடக்கும் ஒருவர் அக்கம்-பக்கம் உள்ளவர்களின் துணையோடு மலையேறவும், சகதியைத் தாண்டவும் எவ்வாறு முடியுமோ அவ்வாறே பிறவிப் பிணியை ஆன்மா கடப்பதற்கு சங்கத்தின் துணை வேண்டும் என்று இந்த மும்மணிக் கோட்பாடு சங்கத்தை நியாயப்படுத்துகிறது. இதன்படி ‘ஞானம்’ (enlightenment) பெறுவதற்கான அல்லது ‘நிர்வாணம்’ (Nirvana) அடைவதற்கான கண்டிப்பான மூன்று அடிப்படைகளில் ‘சங்கம்’ (Association) ஒன்றாக அமைகிறது.

ஆனால் மஹாயானத்திலுள்ள போதிசத்துவ கொள்கையின்படி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ‘ஞானம்’ பெறமுடியும். இங்கு ‘சங்கம்’ முக்கியமல்ல. போதிசத்துவர் என்பது புத்தர் நிலையை அடையாத அதற்கு முற்பட்ட நிலையாகும். இதன்படி ஞானம் பெற்ற போதிசத்துவர் ஏனைய ஆன்மாக்களுக்கு உதவுவதன் பொருட்டு மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறார். ஆனால் புத்தபிரான் புத்தநிலையை அடைந்தபின் அவர் மீண்டும் பிறப்பதில்லை.

‘சங்க’ என்ற பதத்திற்கு பொருள் காண்பதில் வேறுபாடுகள் உண்டு. ‘சங்க’ என்பது ஆண் பிக்குக்களையும், பெண் பிக்குக்களையும் அங்கமாகக் கொண்ட அமைப்பாகும் என்று ஒரு பொருள் உண்டு. புத்தபிரான் உயிரோடு இருந்த போது முதலில் பிக்குக்களுக்கும், பின்பு பிக்குணிகளுக்கும் என ஒழுங்கு விதிமுறைகளை வகுத்தார். இது ‘வினய பிடக’ (Vinaya Pitaka - The Basket of the Discipline) என்ற விதிமுறைகளைக் குறிக்கும்.

அதேவேளை நால்வகையினரைக் கொண்ட சங்கம் என்ற வரைவிலக்கணத்தின் படி பிக்குக்கள் (ஆண்), பிக்குணிகள் (பெண்), ஆண் பௌத்த குடியினர், பெண் பௌத்த குடியினர், the “fourfold” Sangha, which included bhikkhus (monks), bhikkhunīs (nuns), upāsaka (laymen) and upāsikā (laywomen) ஆகிய அனைவரையும் கொண்ட அமைப்பு என்றும் கூறுவர். இதன்படி பௌத்தமும், சங்கமும் இரண்டல்ல என்ற அத்வைத நிலை கூறப்படுகிறது.

பௌத்த சங்க வரலாற்றை அதன் வளர்ச்சிப் போக்கிற்கு ஊடாக பின்வருமாறு நோக்கலாம். புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்ததன் பின்பு அவரது பிரதம சீடரான மஹாகாசியப்ப (Mahakasyapa) தலைமையில் முதலாவது பௌத்த பேரவை (First Buddhist Council) கிமு 400ஆம் ஆண்டுளவில் பீகாரிலுள்ள சப்டப்பானி குகையில் (First Buddhist Council) மன்னன் அஜாதசத்ருவின் (Ajatashatru) ஆதரவோடு கூடியது. புத்தபிரானையும் அவரது தர்ம போதனையையும் இப்பூமியில் நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கென்ற நோக்கின் அடிப்படையில் அந்தப் பேரவை கூடியது. அப்போதுதான் புத்தபிரான், புத்த தர்மம், சங்கம் என்ற மும்மணிகளிடமும் (Triple Gem of Buddhism) சரணடைவதான வரையறையும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இவை மூன்றிடமும் சரணடைவது என்ற கொள்கை புத்தபிரான் உயிரோடு இருக்கும் போது பிரகடனப்படுத்தப்பட்டதல்ல. அது புத்தபிரான் நிர்வாணம் அடைந்த பின் (மரணம் அடைந்த பின்) கூட்டப்பட்ட இந்த பௌத்தப் பேரவை மாநாட்டிலேயே முதல் முறையாக தீர்மானம் எடுக்கப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது.

நிலபுலங்களைக் கொண்ட பெரும் செல்வச் செழிப்புமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த மஹாகாசியப்ப திருமணம் செய்தும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து பௌத்தரானவர் என்று கூறப்படுகிறது. இவரே பௌத்த சங்கத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.

அதேவேளை இந்த முதலாவது பௌத்த பேரவையிற்தான் திரிபிடக (Tripitaka) என்ற ஒழுக்க நெறியும் தொகுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய தகுதிவாய்ந்த பௌத்த மத ஞானிகள் நியமிக்கப்பட்டு, பின்பு அமைப்பு ரீதியாக அது பிரகடனப்படுத்தப்பட்டது.

புத்தபிரான் உயிரோடு இருக்கும் போது முதலில் ஆண் பிக்குக்களுக்கும், பின்பு பெண் பிக்குணிகளுக்கும் என அவர் வகுத்த ஒழுக்க விதிமுறையான ‘வினய பிடக’ (Vinaya Pitaka) நெறியோடு இங்கு சங்கத்திற்கான முதல் நிலைத் தொடக்கத்தைக் காணலாம். பின்பு முதலாவது பௌத்த பேரவையோடு இது அரச ஆதரவுடன் கூடிய ஒரு பெருநிறுவன அமைப்பைப் பெற்றது.

எனவே அரசின் கரங்கள் இந்த முதலாவது பேரவையில் தெளிவாகப் பதிந்த வண்ணம் பௌத்த சங்க அமைப்பு வடிவம் பெற்றதைக் காணலாம்.

கௌதம புத்தர் முடியையும், அரச வாழ்வையும் துறந்து பௌத்தத் துறவியானார். ஆனால் அவர் முன்வைத்த அவரது மூலவேரான துறவறத்திற்கு எதிர்மாறாக அவரது பிரதம சீடனும் ஏனைய பௌத்த துறவிகளும் பௌத்தத்தை அரச நிறுவனத்தோடு சங்கமிக்கச் செய்தனர்.

உடைமைகளையும் ஏனைய அந்தஸ்துக்களையும் துறப்பதிலிருந்து ‘துறவறம்’ ஆரம்பமாகிறது. ஆனால் இங்கு முதலாவது பௌத்த பேரவையின் மாநாட்டோடு, சொத்துக்களின் பெருநிறுவனமான அரசுடன் பௌத்தம் தன்னை பிணைத்துக் கொண்டதோடு, அதன் சங்க வரலாறு அரசியல் வரலாறாக பரிணமித்தது. இது துறவறத்தின் நேரெதிர் நிலை.

இலங்கையில் உள்ள மஹாசங்கம் என்பது நடைமுறையில் அரசின் போஷிப்பிற்குரிய பௌத்த பிக்குக்களையும், பிக்குணிகளையும் கொண்ட ஒரு நிறுவனம் என்பதே அதற்கான முதலாவது அர்த்தமாகும். ஆதலால் அரச போஷிப்புடன் கூடிய பிக்கு-பிக்குணிகளின் சங்கமே இங்கு மஹாசங்கம் என்ற செயல்பூர்வ அமைப்பாகிறது. இதற்கு பௌத்த மக்களின் ஆதரவும், அனுசரணையும் இருப்பது என்பது அதற்கான இரண்டாவது தளமாகும்.

எப்படியோ அரசும், ஆட்சியாளர்களும், சங்க தலைமைத்துவ பௌத்த பிக்குக்களும் இணைந்த வகையில் தீர்மானங்களும், நடைமுறைகளும் உருவாகின்றன. மொத்தத்தில் பீடங்களின் தலைமைத் தேரோக்களும், ஆட்சியாளர்களுமே இந்த மஹாசங்கத்தின் இதயத் துடிப்பாவர். எனவே பௌத்த மஹாசங்கம் என்பதிலிருந்து அரசையும்,அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும், சிறிதும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தவகையில் பௌத்த மஹாசங்கம் எடுக்கும் முடிவே அரசாங்கத்தின் முடிவாகவும் அமைகிறது. அப்படிப் பார்க்கையில் அரசும், பௌத்த மஹாசங்கமும் இரண்டல்ல.

அடுத்து ‘இறைமை’ என்பதை நோக்குவோம்.
ஒரு மனிதனுக்கான ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ தனக்கான தீர்மானத்தை எடுப்பதற்கான ‘அதிகாரம்’ என்பனவற்றின் மொத்த வடிவவே ‘இறையாண்மை’ என்பதன் பொருளாகும். இது ஒரு மனிதனின் சுயத்திலிருந்து இனம், அரசு, நாடு என்ற பெருவட்டம் வரை விரிந்து செல்கிறது.

‘தமிழ்’ என்ற பதத்திற்குள் ‘இறையாண்மை’ என்பது பொதிந்துள்ளதாக பேராசிரியர் மா.திருநாவுக்கரசு கூறும் மொழியியல் விளக்கம் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது :-

“தமிழ்” என்ற பதத்தைப் பிரித்தால் தம் + இழ் ஸ்ரீ தமிழ் என விரியும் என்றும் “தம்” என்பது தனது, தன்னுடைய, எனது, என்னுடைய என்ற பொருளைக் கொண்டது என்றும்.

“இழ்” என்பது வாழ்வு, வாழ்கை, வழி, தத்துவம், தர்மம், சுதந்திரம், இறையாண்மை என்ற பொருளைக் கொண்டது என்றும் கூறுகிறார்.

“தமிழ்” என்ற பதம் தனது வாழ்வியலில் “இறையாண்மையோடு” கூடிய ஒரு வாழ்க்கை முறையை கொண்டதாக வடிவம் பெற்றது என்று கூறுவதன் மூலம் இறையாண்மையை வாழ்வில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பண்பாடாக அவர் அடையாளப்படுத்துகிறார். அதாவது “தமிழ்” என்ற சொல்லிற்குள் “இறையாண்மை” என்பது பிறப்போடும், வாழ்வோடும் இரத்தமும் தசையுமாக இணைந்துள்ளதாக வியாக்கியானப் படுத்துகிறார்.

சங்ககால திருவிளையாடல் புராணக் கதையில் வரும் புலவர் நக்கீரன், சிவபெருமானுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர் கடவுள்தான் என்பதைத் தெரிந்துகொண்ட பின்பும் “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று கடவுளின் முன்னால் தனது தன்னாதிக்கத்தை, அறிவுசார்ந்த இறையாண்மையை விட்டுக் கொடுக்காத பண்பாடு தமிழனிடம் உண்டு என்று பேராசிரியர் மா.திருநாவுக்கரசு தன் வாதத்தை மேலும் முன்னெடுக்கின்றார். எப்படியோ ஒரு புராணக் கதைக்கு ஊடாக இறையாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு பண்பாட்டு அம்சம் இங்கு புராணக் கதைக்கு ஊடாக வெளிப்படுவதைக் காணலாம்.

மொத்தத்தில் ‘இறையாண்மை’ என்பது ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ ‘அதிகாரம்’ என்ற மூன்றையும் உள்ளடக்கிய பிறப்புரிமை சார்ந்த பதப்பிரயோகமாகும். இது ஒரு தனி மனிதனில் இருந்து தேசிய இனம் வரையான தலையாய உரிமையுமாகும்.

தமிழ்த் தேசிய இனத்திற்குரிய இந்த இறையாண்மைக்கு மாறாக ஜனநாயகம் என்ற பெயரில் தலையெண்ணும் இனநாயக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய இனத்திற்கான இறையாண்மை முற்றிலும் மறுக்கப்படும் வரலாறே நடைமுறையாக உள்ளது. அந்த நாடாளுமன்றத்தின் இறையாண்மை மஹாசங்கத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பொறுத்து நாடாளுமன்றம் இறைமையற்றது.

கிமு 400ஆம் ஆண்டு முதலாவது பௌத்தப் பேரவையால் முன்வைக்கப்பட்ட புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளும் கிபி 5ஆம் நூற்றாண்டு மஹாவம்சம் முன்வைத்துள்ள ஆகம, பாஷாவ, ரட்ட என்ற மூன்று நிலைப்பாடுகளும் ஒன்றிணைக்கப்பட்ட வகையில் இலங்கையில் மஹாசங்க இலட்சியம் வகுக்கப்பட்டு அதுவே நடைமுறை சார்ந்த அரசியல் சக்தியாகவும் உள்ளது.

இத்தகைய மஹாசங்கத்தின் காலடியில் இருந்தே இலங்கையில் ‘இறையாண்மை’ என்பது பிறக்கிறது. ஆதலால் நாடாளுமன்றத்திற்கு ஊடான அரசியல் தீர்வு என்பது பொய்யானது மட்டுமல்ல இலங்கையில் இறைமையின் பிறப்பிடம் மஹாசங்கத்தின் காலடியிற்தான் என்ற புரிதலின்றி சமாதானபூர்வ அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பது அபத்தமானது. இல்லாத கறுப்பு பூனையை இருட்டறையில் தேடுவது போன்றதே இலங்கையின் நாடாளுமன்றத்திற்குள் அரசியற் தீர்வைத் தேடுவது என்பதாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்கான தீர்வானது இவற்றிற்கு அப்பாலான சர்வதேச அணுகுமுறைக்கு ஊடாக இறைமை, சுயநிர்ணய உரிமை அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியிலான ‘பொதுவாக்கெடுப்பு’ என்ற பொறிமுறைக்கு ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டும்

(விரைவில் வெளிவர உள்ள ‘‘ தமிழீழப் புதிய தேசியவாதம்‘‘ நூலில் இருந்து)

பெப் 4. சுதந்திரக் கேலிக்கூத்து : காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்திற்கு - என்.சரவணன்

காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம்.

டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது.

“சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். சட்டபூர்வமாக உரிமை பறிபோன நாள். அவ்வப்போது சற்று தணிந்தும், கொதித்தும் வந்த போதும் பண்பளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். உணர்வு பூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம். அகதிகளாகவும், ஆனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பறிகொடுத்தவர்களாகவும் இருக்கும் அரசியல் அனாதைகளுக்கு  சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள்.

(சு)தந்திரம் கைமாறிய கதை

இலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தது. இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவிலும் சுயராஜ்யப் போராட்டம் வேக முற்றுக் கொண்டிருந்த போது இலங்கையர்களும் இலங்கைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்தனர்.

அன்று அரசாங்க சபையில் அங்கம் வகித்து வந்த உயர் மத்திய தர வர்க்கத் தலைவர்கள் டொனமூர் திட்டம் தொடர்பாகவும் அதிருப்தியுற்றிருந்தனர். அது போதுமானதல்ல என்றும், அதற்கு மாற்றாக மேலதிகமாக சீர்திருத்தக் கோரிக்கைகளையும் வேண்டி நின்ற போது அதனை கருத்திற் கொள்ளாமலிருக்க பிரித்தானியருக்கு இயலவில்லை.


வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை மாத்திரமே முன் வைத்து வந்த இலங்கையை தமது காலனித்துவ நாடுகளிலேயே  சிறந்த ''மாதிரிக் காலனி” (Model Colony) என்றே பிரித்தானியா அழைத்து வந்தது. எனவே சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஓரளவானதை வழங்கி இலங்கையரை திருப்திப்படுத்திவிட பிரித்தானியாவும் தயாராக இருந்தது. என்ற போதும் 1939 செப்டம்பரில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகா யுத்தத்தைக் காரணம் காட்டி அச் சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கூட பின்போட்டு வந்தது. 1940ம் ஆண்டு பிரித்தானிய அரசு தமது அறிக்கையொன்றின் மூலம் போர் நிலை காரணமாக அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக 1941ம் ஆண்டு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தலும் பின்போடப்பட்டது. இப்படிப் பின் போட்டமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. அப்போது மிக வேமாக வளர்ச்சியுற்று வந்த இடதுசாரிகளின் செல்வாக்கானது தமது இருப்புக்கு அச்சுறுத்தலாதென்றும் சீர்திருத்தவாத தேசிய சக்திகளை தமக்கு சாதகமாகத் தயார் படுத்துவதற்கான அவகாசத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தேர்தல் பின்போடப்பட்டதும் ஒரு காரணம்.

1941ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இன்னொரு அறிவித்தலையும் விடுத்தது. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அரசியல் சீர்திருத்தம் இடம் பெறும் என்பதே அது. சீர்திருத்தவாதத் தலைவர்கள் இம்முறை சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் மாத்திரம் நின்று விடாது ''டொமினியன்”” அந்தஸ்தைக் கோரிநின்றனர்.

உலக மகா யுத்தம் பல நாடுகளுக்குப் பரவி தீவிரமடைந்து கொண்டிருந்த போது பிரித்தானியா தமது நற்குணத்தைக் காட்ட வேண்டியதன் அவசியம் இருந்தது. இந்நிலையில் 1943இல் இன்னொரு அறிக்கையைப் பிரித்தானியா வெளியிட நேரிட்டது.

அதன்படி யுத்தம் முடிந்ததன் பின் பொறுப்புடன் கூடிய அரசியலமைப்பொன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அவ் ஆட்சி முறையானது பிரித்தானிய முடிக்குட்பட்ட சுயாட்சி முறையாக இருக்குமென்றும், இதனை உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாமென்றும் அதிலிருந்தது.
"சுதந்திர சாசனம்" கையெழுத்தான போது
”அமைச்சர்களின் நகல்” (Minister’s Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் உண்மையிலேயே அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இதனை உருவாக்கியவர் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனைப் பல்கலைக் கழக) உபவேந்தராகவிருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ் என்பவரே. இது தன்னாலேயே உருவாக்கப்பட்டது என பிற்காலத்தில் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் எழுதிய ”இலங்கையின் அரசியலமைப்பு” (Constitution of Ceylon) எனும் நூலில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.

இந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். தம்மிடமிருந்து எந்தவித யோசனைகளையும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந் நகல் சிறுபான்மையினங்களுக்கு எதிரானவை என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித்தலை விடுத்தது. ”1944 அறிக்கை” எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையில் ''அமைச்சர்களின் நகலை” நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும், யுத்தம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

”1944 அறிக்கை”யை அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அதனை அரசாங்க சபைக்கு முன்வைக்கு முன்பே அதனை நிராகரித்தார்கள். ஆனாலும் அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிசீலிப்பதற்கென சோல்பரி ஆணைக்குழு 1944 யூலை 5இல் அமைக்கப்பட்டது. இக்குழு டிசம்பர் 22 இலங்கை வந்தது.

சோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. ”அமைச்சர்களின் நகல்” எனும் பெயரில் சொல்லப்பட்ட ஐவர் ஜெனிங்ஸ் தயாரித்திருந்த அதே திட்டத்தையே தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. செனட் சபை எனும் பேரில் மேற்சபையொன்றும் உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாணைக்குழு கூறியிருந்தது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்மேற்சபை அனுகூலமாக இருக்குமென சோல்பரி குழு நம்பியது. வேறும் சில சிறு சிறு திருத்தங்கள் செய்த போதும் ஜெனிங்ஸின் அடிப்படையான திட்டத்தில் பாரிய மாற்றமெதனையும் இது செய்யவில்லை. இறுதியில் ஜெனிங்ஸ் திட்டமானது சோல்பரித் திட்டமாக  1945 ஒக்டோபர் 09இல் முன்வைக்கப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்தை விட சற்றுக் குறைந்திருந்தது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் நடந்த தேர்தலில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி பதவியிலமர்ந்தது. இலங்கைக்கான சீர்திருத்தமும் இந்த தொழிற் கட்சி அரசாங்கத்தாலேயே பரிசீலிக்கப்பட்டது.

"சோல்பரித் திட்டம்" பற்றி அன்றைய சபைத் தலைவர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடாத்தியது. அதன் பின் இது ஒரு மசோதாவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மசோதா 1945ம் ஆண்டு நவம்பர் 8 இல் அரசாங்க சபையில் வாக்குக்கு விடப்பட்ட போது 51 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (எஸ்.நடேசன், பீ.தியாகராஜா, ஏ.மகாதேவா ஆகியோர் இதற்கு ஆதரவளித்திருந்தனர்).

1947ம் ஆண்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ”1947 அரசியல் திட்டம்” என அழைக்கப்படுவது இது தான்.

யூன் 18ஆம் திகதி அரசாங்க சபை கூடிய போது பிரித்தானியா இலங்கைக்கு சுயாட்சி (டொமினியன்) வழங்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அடுத்த மாதமே 4ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஓகஸ்ட் 23 – செப்டம்பர் 20 வரை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (ஐ.தே.க.வானது இலங்கை தேசிய காங்கிரசும், பண்டாரநாயக்காவின் சிங்கள மகா சபை உட்பட சில அமைப்புக்களையும் இணைத்தே அமைக்கப்பட்டிருந்தது) இருந்த சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும் இறுதி நேரத்தில் பண்டாரநாயக்காவால் டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக ஆவதற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத் தேர்தலில் சோல்பரி அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எஸ்.நடேசன் யாழ்ப்பாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் தோற்கடிப்பட்டார். ஏ.மகாதேவா (சேர்.பொன் அருணாசலத்தின் மகன்) ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தோற்கடிக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதம் 24 அன்று டி.எஸ். பிரதமராகப் பதவியேற்றார். ஒக்டோபர் மாதம் முதலாவது பாராளுமன்றம் கூடியது. அதே மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது அங்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.

இதே வேளை 1947 டிசம்பர் ஆளுனர் சேர். ஹென்றி மொங்க் மேசன் மூர் மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்லது அமைச்சரவையுடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமல் இந்த ஒப்பந்தம் தன்னிஷ்டப்படி பிரித்தானிய விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காக செய்து கொண்டார் சேனநாயக்கா. பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள், அரசாங்க நிர்வாகம் ஆகியன தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வொப்பந்தங்கள் 1948 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வரும்படி செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகே 1947 நவம்பர் 26 அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ”சதந்திரச் சட்டம்” (The Ceylon Independence Act 1947) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கையில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை)


இச்சட்டத்தின் பின் தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி ”சுதந்திரம்” என்ற கேலி நாடகம் அரங்கேற்றப்பட்டது. சோல்பரி கொமிசனின் செயலாளராக செயற்ப்பட்ட பில்லிஸ் மில்லர் (Phyllis Miller) அம்மையாரின் பிறந்த நாளைத் தான் சுதந்திரத் தினத்துக்காக தெரிவுசெய்திருந்தார்கள் என்கிற ஒரு கதையுமுண்டு. சேர் ஒலிவர் குணதிலக்க 1962 அரச கவிழ்ப்புச் சமபவத்தின் பின் லண்டனில் குடியேறியிருந்த காலத்தில் பில்லிஸ் மில்லர் அம்மையாரைத் தான் 1968இல் திருமணம் செய்துகொண்டார்.

இப்படித்தான் காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவத்திற்கு பரிமாறப்பட்டது. காலனித்துவத்துக்கு முன் பன்முக சமூகங்களின் வெவ்வேறு  அரசாட்சிகளைக்  கொண்டிருந்த இந்தத் தீவு காலனித்துவம் முடிவுக்கு வரும்போது “ஒற்றையாட்சியாக்கி” ஒட்டுமொத்தமாக சிங்கள -பௌத்த கொவிகம - ஆணாதிக்க - சுரண்டும் - வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிபத்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கும் படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த சக்திகளினாலேயே.


நன்றி - "தமிழர் தளம்" பத்திரிகை

இலங்கை சுதந்திரச் சட்டம் 1947

சம்பள விடயத்தை மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் - நுவரெலியா தியாகு


26 வருடங்கள் 13 கூட்டு ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாக நடைபெறும் ஒரு சில போராட்டங்கள் அதன் பிறகு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு வெற்றிகரமான சம்பள உயர்வு ஒப்பந்தம் என கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் வெற்றி கொண்டாட்டம்… இதுவே இதுவரைகாலமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெற்று வந்த வழமையான நிகழ்வுகள்.

ஆனால் இம்முறை அப்படி இடம்பெறவில்லை. கைச்சாத்திட்ட பின்பும் இடம்பெறும் தொடர் போராட்டங்கள், வர்த்தமானி இடைநிறுத்தல் என இன்னும் முற்றுப்பெறாமல் இருக்கின்றது தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம்.

இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்கள் முழுமையாக அறிந்திருக்கின்றார்களா?அதற்கான நடவடிக்கையை கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களோ கையெழுத்திடாத தொழிற்சங்கங்களோ முன்னெடுத்திருக்கின்றதா? உண்மையாகவே கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு விடயம் மாத்திரம்தான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? இப்படி பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன.

பேசப்படாத விடயங்கள்

இந்த ஒப்பந்தத்தில் இன்னும் பேசப்படாத பல விடயங்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒரு தொழிலாளி இறந்து விட்டால் அவருக்கான கொடுப்பனவாக இன்னும் 2 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. இந்த தொகை இன்றைய காலகட்டத்திற்கு போதுமானதா?அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற வருடாந்த போனஸ் தொகை 750.00 ரூபாய் இதுவும் போதுமானதா?அல்லது இது எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படுகின்றதா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவு மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை ? அதற்கான அழுத்தத்தை எம்முடைய அரசியல் தலைவர்கள் கொடுத்திருக்கின்றார்களா? இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ளதோடு தொழிலாளர்களின் எதிர்காலமும் அப்படியே இருக்கின்றது.

உண்மையிலேயே பெருந்தோட்ட கம்பனிகள் நட்டத்தில் தான் இயங்குகின்றனவா? அப்படியானால் நட்டத்தில் ஏன் அவர்கள் தொடர்ந்து இதனை செய்ய வேண்டும். அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டியது தானே? ஏன் அவர்கள் அதனை செய்ய முன்வருவதில்லை. அப்படியானால் இதில் நட்டம் ஏற்படவில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது. அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் முதன்முதலாக கைச்சாத்திட்ட பொழுது இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இன்றைய எண்ணிக்கையும் பாரிய அளவில் குறைந்திருப்பதை காணமுடிகின்றது. அன்று அவர்கள் தனியே தேயிலையின் மூலமாக பெற்றுக் கொள்கின்ற வருமானத்தை மாத்திரமே கருத்திற் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்திருக்கின்றது.

இன்றைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய வருமானத்தை பல வழிகளிலும் அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.அந்த வகையில் பெருந்தோட்டப்பகுதியானது உல்லாசத்துறையில் தடம் பதித்திருக்கின்றது. அதற்கு உதாரணங்களாக பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படுத்துகின்ற நட்சத்திர விருந்தகங்கள், எல்லா இடங்களிலும் உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தேநீர் விற்பனை நிலையங்கள், அதன் மூலமாக தேயிலை விற்பனை அது தவிர பல தொழிற்சாலைகளை உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் என பல்வேறு துறைகளின் மூலமாகவும் வருமானங்களை அதிகரித்துக் கொண்டுள்ள பெருந்தோட்ட கம்பனிகள் இந்த வரவு, செலவு தொடர்பான விபரங்களை தங்களுடைய வருடாந்த கணக்கறிக்கையில் சமர்ப்பிக்கின்றார்களா? அல்லது இதனை தொழிங்சங்கங்கள் தேடிப்பார்த்து இது தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருக்கின்றார்களா ?

 இது ஒருபுறம் இருக்க, எத்தனையோ தேவையற்ற செலவினங்கள் பெருந்தோட்ட கம்பனிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களிடம் இருக்கின்றது. உதாரணமாக கடந்த சில காலங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியா லபுக்கலை தொழிற்சாலைக்கு வருகை தந்த பொழுது அந்த தோட்ட நிர்வாகம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தது தொடர்பாக விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உலங்கு வானூர்திகளை தரையிறக்குவதற்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இது தவிர இன்னும் பல செலவுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த அனைத்து செலவுகளும் எங்கிருந்து செய்யப்பட்டது? அத்துடன் பெருந்தோட்ட கம்பனிகளில் தொழில் புரிகின்ற முகாமையாளர்களின் மாதாந்த சம்பளம் தவிர அவர்களுக்கான ஏனைய வசதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

பராமரிப்பு

பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தொழிலாளர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். பெருந்தோட்டங்களுக்கு முறையான பசளையிடுதல், கிருமிநாசினிகள் தெளித்தல் போன்றவற்றில் அக்கறை செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இன்று அநேகமான தோட்டங்கள் காடுகளாக மாறிவருகின்றன.

அதனை உடனடியாக தனியாருக்கு விவசாயம் செய்ய குத்தகைக்கு வழங்கி விடுகின்றார்கள்.தொழிலாளர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பெருந்தோட்ட கம்பனிகள் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் அரசாங்கமே முன்னெடுத்து வருகின்றது.உதாரணமாக பாதை அபிவிருத்தி, வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இவை அனைத்தையும் அரசாங்கமே செய்துவருகின்றது.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எவ்வாறு இலாபம் ஈட்டுவதற்கு அவர்களுக்கு அரசாங்கம் அதிகளவில் மானியங்களை வழங்கி வருவதும் ஒரு காரணமாகும். அப்படியானால் பரீட்சார்த்தமாக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு காணியை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து (குறிப்பிட்ட காலத்திற்கு) அவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மானியங்களை வழங்கி அதனை நடைமுறைபடுத்த ஏன் கம்பனிகள் தயங்குகின்றன? அது வெற்றிகரமாக அமையுமாக இருந்தால் படிப்படியாக அதனை நடைமுறைபடுத்த முடியும். இப்படி பல கோணங்களிலும் இந்தத் துறை தொடர்பாக ஆராயவேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

தொழிலாளர்கள் தங்களை அர்ப்பணித்து வேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நியாயமான கொடுப்பனவுகளை வழங்க எவருமே தயாராக இல்லை.

பெருந்தோட்ட கம்பனிகள் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் ஊடு பயிர்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதா? இதன் மூலமாக பாரிய ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம்..வெற்றுக் காணிகளை அடையாளம் கண்டு அவற்றில் கால்நடை வளர்ப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக அவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மூடப்பட்டுள்ள பல தேயிலை தொழிற்சாலைகளையும் உரியவர்களுக்கு குத்தகைக்கு வழங்கி அதன் மூலம் பெருந்தோட்டங்களில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பிற்கு தொழிலுக்காக செல்ல வேண்டிய தேவை இருக்காது.

 தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு போராடுகின்ற அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி அல்லது தொழிலாளர்களின் சந்தா பணத்தை பெற்றுக் கொள்கின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலன் சார்ந்த ஏனைய விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெறுமனே சம்பள உயர்வை மாத்திரம் மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தையின் மூலமாக தொழிலாளர்களுக்கு பெரிய நன்மை கிடைக்காது.இதையும் தொழிற்சங்கங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.

நன்றி - வீரகேசரி

கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு! (2) - என்.சரவணன்


ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய கோல்புரூக் - கமரூன் மறுசீரமைப்பு ஆணைக்குழுவானது இலங்கையில் ஆண்டாண்டு காலம் அமுலில் இருந்த கிராமிய சபை முறையை ஒழித்துக்கட்டுமாறு பிரேரித்தது. அது பெயரளவிலான யோசனையாக இருந்தது. அவர்களால் உடனடியாக கிராமிய சபை, ரட்ட சபா, வறிக சபா முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை.

கோத்திர சபைகள் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் இருந்தாலும் கூட கண்டி ராஜ்ஜியத்தில் பல்வேறு ஆதிக்க சாதியினர் மத்தியில் நீண்டகாலம் நடைமுறையில் இருந்ததையும் பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் வேடுவர்கள் பற்றிய ஆய்வுகளை செய்தவர்களில் முக்கியமானவர் செலிக்மன் (Seligmann). வேடுவர்கள் மத்தியில்  வெளிக்கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். (1)

இலங்கையில் பழங்குடிகள் மத்தியில் குலக் கோத்திர சம்பிரதாயங்கள் இன்னமும் இறுக்கமாக பேணப்படுகின்றன. கோத்திர சபை முறையும் கூட இன்னமும் இலங்கையில் வேடுவர் மத்தியில் அமுலில் இருக்கிறது. அவர்கள் வேடுவர் தவிர்ந்தவர்களை மணமுடிப்பதைக் கூட கோத்திர சம்பிரதாய மீறலாக கருதுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் ஆங்காங்கு வேடுவ சமூகத்தினர் தமிழர்களுடன் ஓரளவு திருமண பந்தத்துக்கூடாக ஒன்று கலப்பது கணிசமாக நிகழ்ந்தாலும் கூட பல இடங்களில் தமது வேடுவர் சமூகத்துக்குள்ளேயே அவர்கள் “சாதி வேறுபாடுகளை” (கோத்திர வேறுபாடுகளை) பார்ப்பதைக் இன்றும் காண முடிகிறது. “அவர்கள் வேறு சாதி” என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள். புறமணத் தடையும், அகமணமுறையின் இறுக்கமும் அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவுகிறது. மட்டக்களப்பு வாகரையில் வாழும் ஆதிவாசிகள் இன்றும் “வறிகசபை” யைக் கூட்டி தமது முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்கிற செய்திகளை காண முடிகிறது.

வருடாந்தம் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆதிவாசிகள் தினத்தன்று மஹியங்கனையில் ஏராளமானோர் கலந்து கொள்ளும் “வறிக சபை” கூட்டம் நடப்பது பற்றிய செய்திகளையும் சிங்களத்தில் காணமுடிகிறது.

வேடுவர் பற்றி ஜேம்ஸ் ப்ரோ ஆய்வு செய்து வெளியிட்ட நூலில் “வறிக (கோத்திர) சித்தாந்தத்தின்படி” புறமணத்தடை (endogamy) அவர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று என்கிறார். (2)

அதிசயிக்கத்தக்க தீர்ப்பு

1970ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்திய நீதிபதி வோல்டர் லத்துவஹெட்டி. இலங்கையின் முதலாவது குறைகேள் அதிகாரியும் (ஒம்பூட்ஸ்மன்) அவர் தான். ஏறத்தாழ 60 வருடங்கள் சிவில் சேவையில் இருந்தவர். “கோத்திர சபை” பற்றி அவர் வழங்கிய ஒரு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் லங்காதீப பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் அந்த சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு இப்படி விளக்குகிறார். (3)
கேள்வி : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோத்திரசபை வழக்கை இந்தக் காலத்தில் தானே விசாரித்தீர்கள்?
பதில்: ஆம். அது ஒரு வரலாற்றுப் பதிவுபெற்ற ஒரு வழக்கு. அந்த தீர்ப்பின் மூலம் கிராமத்தில் நடைமுறையிலிருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுத்தேன்.
கேள்வி :பலரும் அறியாத அந்த கதை தான் என்ன?
பதில்: கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் விவசாய வேலைகளுக்காக வந்தான். அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் காதல்வயப்பட்டான். சில நாட்களில் அவர்கள் இரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் அந்த காலத்தில் அங்கிருந்த வறிக சபையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவந்தவர்கள்.
கேள்வி : இது வழக்காக ஆனது எப்படி?
பதில்: முஸ்லிம் இளைஞன் சிங்கள பெண்ணை விவாகம் செய்தததால் அந்த கோத்திரத்தினரின் கௌரவம் போய்விட்டது என்று தான் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அநுராதபுரவில் இருந்த பிரபல வழக்கறிஞரான மகாதிவுல்வெவ என்பவர் தான் அந்த இளம் தம்பதிகளுக்காக ஆஜாராகியிருந்தார். எனக்கோ இந்த கோத்திர சபை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. வழமை போலத்தான் நானும் வழக்கைத் தொடங்கினேன். சாட்சிகளை அழைக்க தாயாரான போது முகத்தில் அங்கு தாடி மீசை நிறைந்த விசித்திரமான ஐந்து ஆண்கள் வந்திருந்ததைக் கவனித்தேன். அவர்கள் யாரென்று நான் வினவினேன். அவர்கள் தான் கொத்திரசபயின் தலைவர்கள் என்று பதில் வந்தது.
கேள்வி : அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?
பதில்: சிங்கள ராஜ்ஜியக் காலம் தொட்டு பின்பற்றப்படும் வறிக சபையின் படி கோத்திர விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்க எனக்ளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு எங்கள் வீடுகளில் இருந்து தீப்பந்தத்தை வழங்குவது கூட தடை. கூடவே அவர்களின் அதிகாரங்கள் பற்றி இன்னும் பல விடயங்களை கூறினார்கள். அங்கு வந்திருந்தவர்கள் தாம் தான் அந்த கோத்திரக் குழுவின் தலைவர்கள் என்றார்கள். வறிக சபை ஒரு பலம்மிக்க ஒரு அமைப்பாக சமூகத்தில் இருப்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவது என்பது எளிமையான காரியமில்லை. நானும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. எனவே தீர்ப்புக்கு முன்னர் இதைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.
கேள்வி : நீங்கள் எப்படி தகவல் திரட்டினீர்கள்?
பதில்: மாலை 4 மணிக்கு நீதிமன்ற அலுவல்களை முடித்துக்கொண்டு அனுராதபுர நூல்நிலைய சபைக்குச் சென்றேன். அங்கு சென்று ரஜரட்ட சாதிமுறை, வறிக சபை என்பவை பற்றிய தகவல்கள் அடங்கிய நான்கைந்து நூல்களை ஒருவாறாக தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். அன்றிரவு 12 மணிவரை அவற்றை படித்தேன். அங்கிருந்த சமூக அமைப்பில் வறிக சபை அமைப்புமுறை எந்தளவு முக்கியத்துவம் மிகுந்தது என்பதை புரிந்துகொண்டேன். பொலிஸ் இல்லாத காலத்தில் அந்தந்த கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு எப்படி தம்மை நிர்வகித்து வந்திருக்கிறார்கள் என்பது பற்றி அந்த நூல்களில் இருந்தன. ஆனாலும் எனது தீர்ப்பை வழங்க இந்த நூல்கள் போதுமானதல்ல. மேலும் அறிய ஆவலாக இருந்தது.
கேள்வி : யார் அதற்கு உதவினார்கள்?
பதில்: அந்த சமயத்தில் அனுராதபுர அட்டமஸ்தன தலைமை பதவியில் இருந்தவர் உந்துரவஹல்மில்லேவே ஸ்ரீ சுமனரேவத்த தேரர். அவருடன் தொலைபேசியில் முதலில் கதைத்தேன். அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். வாருங்கள் ஆனால் இரவு 9.30க்குப் பின் வாருங்கள் ஏனென்றால் நீதிபதியொருவர் எனது பன்சலைக்கு வந்து சென்றது சனங்களுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்றார். சொன்னபடி இரவு சென்று வறிக சபை பற்றிய விபரங்களைக் கேட்டேன்.

பதில்: அவர் பல தகவல்களை எனக்குச் சொன்னார். மாடொன்றை களவாடிய குற்றத்துக்கு வறிக சபை கொடுத்த தண்டனையொன்றைப் பற்றியும் அவர் விளக்கினார். பௌத்த பிக்கு சொன்ன தகவல்களையும் நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் சேகரித்துக்கொண்டு தீர்ப்பெழுத நீதிமன்றத்துக்கு சென்றேன்.
கேள்வி : எத்தகைய தீர்ப்பை வழங்கினீர்கள்?
பதில்: நீண்ட காலமாக பின்பற்றப்பட்டுவரும் வறிக சபையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினேன். இதை இன்னொரு விதமாகச் சொன்னாள் “வறிக சபை”க்கு சட்ட அந்தஸ்து வழங்கினேன். வறிக சபையின் சம்பிரதாயங்களை ரோம / ஒல்லாந்து சட்டங்கள் குழப்பக்கூடாது என்பதே எனது கருத்தாக இருந்தது. நமது வரலாற்றில் வறிக சபையை சட்ட ரீதியில் அங்கீகரித்த தீர்ப்பு அதுதான். அப்படித்தான் அது வரலாற்றுப் பதிவு பெற்றது.

இந்தத் தீர்ப்பு குறித்து இன்றளவிலும் ஏராளமான விமர்சனங்கள் நிலவவே செய்கின்றன. ஆனால் இப்போது அரச நீதிமன்றங்களில் வறிக சபையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால் பழங்குடிகளின் மத்தியில் தமக்குள் வறிக சபை கூட்டங்களையும், தீர்ப்புகளையும், தீர்மானங்களையும் நிகழ்த்தியே வருகின்றனர்.

நன்றி - அரங்கம்
உசாத்துணை :
  1. The Veddas C. G. Seligman, Brenda Z. Salaman Seligman, Charles S. Myers Cambridge University Press, 1911
  2. Brow, James. 1978. Veddha Villages of Anuradhapura: The Historical Anthropology of Community in Sri Lanka. Seattle: University of Washington Press. பக்கம் 20-21
  3. லங்காதீப பத்திரிகையில் வெளிவந்த நேர்காணல் (12.05.2013)

சிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates