Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அனர்த்தங்களை தொடரவிடுவதா? - ஜீவா சதாசிவம்


கடந்த 24 ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையின் தென்பகுதி உட்பட நாட்டின் பலபகுதி மக்களும் பதற்றமான நிலையில். இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி,  பெரும் சீரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையில் இது ஒரு புது விடயம் இல்லை. இவ்வாறு  இலட்சக்கணக்கான மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு  வருவது ஒரு வருடாந்த நிகழ்வே!

உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாக வரட்சி, மண்சரிவு , மழை, வெள்ளம், சுனாமி என அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.  எனினும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல கட்டாயமாக வரட்சியும் மழையும் வெள்ளமும் என மக்கள் மாறி மாறி அங்கலாய்கின்ற நிலை.

 சொத்துக்கள் அழிவு,  நிரந்தர இடங்களில் இருந்து நீக்கி தற்காலிக தங்குமிடங்கள் என தொடரும்  பரிதாப நிலை கவலையளிப்பதாகவே இருக்கின்றது.  இந்த கவலைக்கிடமான  தொடர் நிகழ்வுகளுக்கு காரணம் என்ன?அதிலிருந்து மீள்வதற்கான உபாயங்கள் என்ன என்பது தொடர்பிலேயே இவ்வார 'அலசல்' ஆராய்க்கின்றது.

இங்கு 'திட்டமிடல்' என்ற சொற்பதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தத் துறையாயினும் திட்டமிடல் இல்லையென்றால் அதன் விளைவாக சரிவுப் போக்கையே எம் கண் முன்னால் காணக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில், இலங்கையில் தொடர்ச்சியாக இவ்வாறான அனர்த்த நிலைமைக்கு 'திட்டமிடப்படாத  முகாமைத்துவ' முறையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த உலகின் எல்லா அபிவிருத்திகளும் இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்ளும் பொருட்களை மையப்படுத்தியவையே. அதேவேளை, அதுவே நமக்கு ஆபத்தானதாக மாறுகின்றமையை நாம் உணர மறுக்கின்றோம். இந்த உலகத்தை Digital World என அழைக்க தொடங்கி  தொழில்நுட்பத்தின் உச்சத்தை வைத்துள்ள நிலையில் அதுவே 'இலக்ரோனிக் கழிவுகளையும்'இது  இயற்கையிடம் இருந்து வளங்களைப் பெற்றுக் கொள்ளும் இந்த உலகம் அதனை மீளவும் பெற்றுக் கொடுப்பதில் அல்லது எதிர்கால சமூகத்திற்கு மிச்சம் வைக்கா மல் அதீத பாவனையின் விளைவால் இயற்கை சமநிலை குழம்பி இன்று 'காலநிலை மாற் றம் ' என்று  பிரதான பேசுபொருளாகிவிட்டது.

2030ஆம் ஆண்டளவில் யாரையும் பின்நிற்க விடுவதில்லை (No One Left Behind). எல்லோரையும் முன்னோக்கியே அழைத்து செல்லல் எனும் இலக்குடன் ஐக்கிய நாடுகள் சபை 17 இலக்குகளை அடையும் வண்ணம் தத்தமது நாடுகளில் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுமாறும் நடைமுறைப்படுத்தமாறும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.

அவை 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 2030'  ('Sustainable Development Goal 2030)என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டளவில் பத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (Millenium Devlopment Goals) அறிமுகப்படுத்தப்பட்டு அது முழுமையாக எட்டப்படாத நிலையில் விரிவுபடுத்தப்பட்டதாக SDG -2030 என 2015-2030 இடையிலான 15 ஆண்டுகளில் அடையக்கூடிய இலக்குகளை தீர்மானிக்கிறது.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள 17 இலக்குகளையும் இங்கு அலசுவதை விடுத்து  அதில் முக்கியமான இலக்கான 'காலநிலை மாற்றம்' (Climate Change) சாதாரண மனித வாழ்விற்கு சவாலான விடயமாகவும் மாறும் என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள்  90களிலேயே முன்வைக்கப்பட்டன.  இந்த climate change இலக்கினை விசேடமாக கொண்டு  2015ஆம் ஆண்டு G7 நாடுகள் ஒன்றிணைந்து பாரிஸ் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த மாற்றத்தின் பெறுபேறுகளையே இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

இந்த இலக்கினை 90களின் ஆரம்ப காலத்திலேயே 'நிலைபேறான அபிவிருத்திக்கு' இயற்கையை பாதுகாத்து கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனும் கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது.  இதன்போது, ஓசோன் படை குறித்து அதிகமாக பேசப்பட்டது.  பூமியில் இருந்து வெளியாகும்  இலக்ரோனிக் கழிவுகள் குறிப்பாக 'குளோரா, புளோராகளுடன்' கழிவுகள் ஓசோன் படையில் ஓட்டைகளை தோற்றுவித்து சூரியனில் இருந்து சில கதிர்களின் தாக்கத்தை அதிகரிப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், அதுபற்றி யாரும் அக்கறை கொள்ளாத நிலையில் இன்று 25 வருடங்கள் கழிந்து அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதாக இருக்கின்றது. 

கடந்த 25 வருடங்களில் இலக்ரோனிக் பாவனை, இறப்பர், பொலித்தீன் பாவனைகளில் இலங்கை அக்கறை காட்டத் தவறியது. உமா ஓயா, மேல்கொத்மலை போன்ற சுரங்க வழி நீர் மாற்று திட்டங்கள் இயற்கை சமநிலையை குறைக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும் அவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெறும் மண்சரிவுகளுக்கு உமா ஓயா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  சுரங்க அதிர்வுகளின் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல'பொலித்தீன்  பாவனையை பிரதானமாக சுட்டிக்காட்டலாம்.

'பொலித்தீன்' என்பது உக்கிப்போகாத ஒரு பொருள்.  அவற்றை அதிகம் பாவிப்பதனால் அவை செறிவாக சேர்த்து பூமியில் நீர் இயற்கையாக பாயும் திசைக்கு இடைஞ்சலாக இருந்து நீரோடும் திசைகளை மாற்றி விடுகின்றது. மறைந்த அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் மனைவி ஸ்ரீ மணி அத்துலத் முதலி பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.
ஆனால், இன்றைய திகதியில் கட்சி வேறுபாடுகளுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தொன் கணக்கிலான பொலித்தீன்களை தங்களது  கூட்டங்களின் போது அலங்கரிப்புக்காக பயன்படுத்தி அப்படியே சூழலில் விட்டுச் செல்கின்ற நிலைமையே இருக்கின்றது.

 அபிவிருத்தி குறித்து பேசும் திட்டமிடும், செயற்படுத்தும் அரசியல் தரப்பே இந்த பொலித்தீன் பாவனையை நிறுத்தும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். ஆனால், பொலித்தீன் வியாபாரிகளிடம் கிடைக்கும் அனுசரணைக்காகவோ என்னவோ அது குறித்து வாய் திறப்பதாக இல்லை. மறுபுறத்தில் கடைகளிலும் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் பொலித்தீன் பைகளை தடை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக திரும்பவும் பாவிக்கக் கூடிய உக்கும் தன்மை கொண்ட மூலப்பொருளிலான பைகளை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து பொலித்தீன் பாவனையை தொடர்ந்திருக்கும்  தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.  சட்டம் அதுவாக இருந்தால் அதனை மாற்றும்   தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் உடையது.


ஒரு பக்கம் ஐ.நாவின் SDG 2030 இலக்குகளை அடைவதற்கு பயணிப்பதாக கூறும் அரசு மறுபக்கம் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதியளிக்கின்றது.   Renewable energy என சொல்லப்படுகின்ற  சூரிய சக்தியின் உற்பத்தியை செய்வதற்கு அரசு பின்நிற்கின்றது.

எனவே 90களில் செய்திருக்க வேண்டிய விடயத்தை அன்று செய்யத் தவறியதால் அதன் விளைவை 2015 இல் அனுபவித்தோம்.  இப்போது 2030இல் எவ்வாறு காலநிலை மாற்றத்தில் இருந்து எம்மை காப்பாற்றிகொள்வது என திட்டமிட்ட கொள்கை தீர்மானத்தின் படி அபிவிருத்தி கோட்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறினால் 2030ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் அனர்த்தங்கள் அப்போது மாதத்திற்கு ஒரு முறை வரும் நிலை ஏறபட்டு விடும். முன்னைய காலங்களில் மன்னர்கள் குளங்களை கட்டினார்கள் என பெருமையுடன் பேசுகின்றோம். அவை நீரைச் சேமித்தது மட்டுமல்ல பூமியின் ஈரத்தன்மையை பாதுகாக் கவும் வரட்சியை கட்டுப்படுத்தவும் உதவின.

இந்த குளங்களை புனரமைத்து அதனை நோக்கி ஆற்றுப்படுக்கை  அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து மரங்களை நடுவதன் மூலம் இயற்கை சமநிலையில் பேணுவது என நீண்டகால அபிவிருத்தி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தினது பொறுப்பு இத்தகைய நீண்டகாலத்திட்டங்களை நோக்கிய    தீர்மானங்களை நிறைவேற்றாத அரசுகள் தங்களது இருப்புக்காக தங்களது பலத்தை காட்டுவதற்கு பொலித்தீனை கூட தடை செய்ய முன் வராவிட்டால் நிலைபேறான அபிவிருத்தியும் இல்லை நிலையான ஆட்சியும் இல்லை. நீண்டகாலத்தில் தமக்கான நாடும் இல்லை என்ற நிலையே தோன்றும்.

நன்றி - வீரகேசரி
Sri Lanka Flood 2017 3W With Table 300517 by SarawananNadarasa on Scribd

அவுட்குரோவரும், ஹைபிரிட்டும் - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 20)


முள்ளுத் தேங்காய் தொடரின் 20ஆவது அத்தியாயத்தை எழுதத் தொடங்கும் போதே ஒரு தொலைபேசி அழைப்பு. மாத்தளை பகுதியில் இருந்து   ஒரு தொழிற்சங்க செயற்பாட்டாளர்  சொல்கிறார்  'எல்கடுவ தோட்டத்தின் காணிகளை பிரிக்கின்றார்களாம், என்ன ஏது என்று விபரம் தெரியவில்லை' என்றார்.

இந்த செய்தி நமக்குத் தரும் தகவல். 'அவுட் குரோவர் முறை'  வேகமாக இடம்பெற்று வருகிறது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) (மத்துரட்ட பிளான்டேஷன் தவிர்ந்த) ஏனையவை இப்போதுதான் முன்மொழிவுகளைச் செய்து தயாராகிக் கொண்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள மக்கள் பெருந்தோட்ட 'மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்  சபை' (JEDB), 'இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம்' (SLSPC ),  எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய தோட்டங்கள்  'அவட்குரோவர்' முறையை கடந்த பத்து வருட காலமாக சிறுக சிறுக அறிமுகப்படுத்தி இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதன் விளைவுதான் இந்த தொலைபேசி அழைப்பு. 

தனியார் கம்பனிகள் (RPC) அறிமுகப்படுத்த நினைக்கும் 'வருமான பங்கீட்டு முறை'  (Rvenue Share Method) சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் மத்தியஸ்த்தத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக் காரியாலயத்தில் இந்த புதிய முறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டங்கள் கடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' மேற்கொள்ளப்படுவது இழுத்தடிக்கப்பட்ட காலப்பகுதியில்  தங்கள் மாற்றுத்திட்டத்தை முன்வைக்கின்றோம் என்பதன் பேரில் நடாத்தப்பட்ட கூட்டங்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) , இலங்கைத்தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) தொழிற்சங்ககூட்டுக் கமிட்டி (JPTUC) தவிர்ந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிலாளர் தேசிய சங்கம் (NUW),  மலையக தொழிலாளர் (மக்கள்)  முன்னணி (UPF) என்பனவும் கலந்துகொண்டிருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

கடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' (2016)தொடர்பான பிரேரணைகளும் உரைகளும் அதற்கு முன்பெல்லாம் இல்லாத அளவில் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தமை காரணமாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம்  தொடர்பில் கூட்டு 'ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத' தொழிற்சங்கங்கள் (அரசியல் கட்சிகளின்) கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அத்தகைய கூட்டங்களுக்கான அழைப்பினை விடுத்திருந்தார். 

அந்தக்கூட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட முறைமையானது உடனடியாக ஏற்றுக்கொள்ளும் படியானதாக இல்லை. எனவே, இதனை சமூக மற்றும் அரசியல் தொழிற்சங்க மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, தீர்மானிக்க முடியும் என பங்குபற்றிய தொழிற்சங்கங்கள் கருத்தினை முன்வைக்க அந்த பேச்சுவார்த்தைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் பேசப்பட்டவை என்ன என்பதுபற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 

அந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில் வழமைபோன்றே  இந்த முறையும்  'கூட்டு ஒப்பந்தம்'  மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பது என வழமையான நடைமுறைகள் கையாளப்பட்டன. எனினும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அவர்கள் முன்வைக்கும் 'அவுட்குரோவர்' எனும் மாற்றுத்திட்டத்தை அடுத்த முறை ஒப்பந்தத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்துவது என்ற நிபந்தனையை இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொண்டுள்ளது. எனவே, 'அவட்குரோவர் ' முறை என்பது அடுத்த ஒப்பந்தத்தில் பிரதான பாத்திரம் வகிக்க போகின்றமை  தெளிவு. 

எனவே, ஒரு பக்கம் அரச பொறுப்பில் உள்ள தோட்டங்களில் அவை கட்டம் கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையில்  பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அடுத்து திட்டவட்டமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள இந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய சமூகமட்ட ஆய்வுகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
இந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய இரண்டு கலந்துரையாடல்களை கண்டி 'சமூக அபிவிருத்தி நிறுவனம்'  கொழும்பிலே நடாத்தியுள்ளது.  அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையிலும் அனைத்து தொழிற்சங்க, மலையக சமூக செயற்பாட்டாளர்கள் கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை அழைத்து இந்த கலந்துரையாடல்களை 'சமூக அபிவிருத்தி நிறுவனம்' மேற்கொண்டது. 

முதலாவது செயலமர்விலே பிராந்திய கம்பனிகள் தயார் செய்துள்ள முன்மொழிகள் உள்ள அம்சங்களை விளக்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் விடத்த வேண்டுகோள் அடிப்படையில் அதன் தலைவர் ரொஷான் இராஜதுரை திட்டம் தொடர்பின் விளக்கத்தை அளித்தார்.

அவரது அறிக்கையில் முன்மொழிவு பற்றிய விளக்கத்தைவிட தோட்டங்களை பிராந்திய கம்பனிகள் பொறுப்பேற்றதன் பின்னர் அவை வளர்ச்சிப்போக்கில் சென்றுள்ளதாகவும் வறுமை நிலை குறைந்திருப்பதாகவும் புள்ளி விபரங்கள் முன்வைக்கப்பட்டமை சபையோரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி அவரை நோக்கி அதிகம் கேள்விக் கணைகளை எழுப்பிய செயலமர்வாகவே அது முடிந்தது. எனினும், மிகவும் சுருக்கமாகவும் 'அவுட்குரோவர்' முறையில் தொழிலாளர்கள் எவ்வாறு நன்மையடையப் போகிறார்கள் என்பது தொடர்பாக விளக்கமளித்தார். 

பிராந்திய கம்பனிகளின் முன்மொழிவின் படி அவர்கள் ஆரம்பத்தில் தயாரித்த முன்மொழிவு மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் கிடைக்கப்பெற்ற பின்னூட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் 'ஹைபிரிட்' (Hybird) என்கின்ற நடைமுறையில் முதலில் தமது திட்டத்தை அமுல்படுத்தவது என்பதாக தெரிவித்தார். 


'ஹைபிரிட்' (Hybird) எனும் சொல் அண்மைக் காலத்தில் ஒரு பிரபலமானது.
வாகனங்களை தனியே எரிபொருள்  (Petrol or diesel) மாத்திரம் கொண்டு செலுத்தாத அதனிடையே மின்கலம் (Battery) ஒன்றையும் பொறுத்தி எரிபொருளினால் ஓடும் போது அது உருவாக்கும் மின்சாரத்தை பெற்றரியில் சேமித்து அந்த மின்சாரத்தின் ஊடாகவும் வாகனத்தை ஓடச் செய்வதன் மூலம் குறைந்த எரிபொருள் செலவில் வாகனத்தை ஓட்டுவதும், சூழல் மாசடைவதை குறைப்பதும் இந்த 'ஹைபிரிட்' வாகனங்களின் நோக்கம். இந்த இரண்டும் கலந்துமுறையே 'ஹைபிரிட்' (Hybird) என அழைக்கப்படுகின்றது.

மிகவும் சுவாரஷ்யமாக, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிந்துரைப்பு செய்யப்பட்டது.  அது 'ஹைபிரிட்' முறையில் விசாரணைகளை முன்னெடுப்பது என்பதாகும். 

இலங்கையில் இந்த தருணத்திலும் இந்த 'ஹைபிரிட்' என்ற சொல் அரசியல் மட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. அதாவது சர்வதேச நீதிபதிகளையும்  உள்நாட்டு நீபதிகளையும் கொண்ட ஒருபொறிமுறை மூலம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களை விசாரிப்பது என்பதுவே அந்த 'ஹைபிரிட்' பொறிமுறை. 

அரசியல் ரீதியாக இந்த 'ஹைபிரட்' என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கிடைத்தால், போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம் என அதனை 'வெறுப்புக்குரிய' சொல்லாக இலங்கை அரசியல் சூழல் மாற்றி வைத்துள்ள நிலையில் அந்த 'ஹைபிரிட்' முறையில் பெருந்தோட்டங்களை நடாத்துவது என முதலாளிமார் சம்மேளனம் முன்வைப்பு செய்கிறது.

இந்த 'ஹைபிரிட்' முறை என்ன? என அடுத்தவாரம் பார்க்கலாம். 
(உருகும் )

நன்றி - சூரியகாந்தி


தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி


நமது தமிழ் அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும், அதற்கு போஸ் கொடுப்பதும், செல்பி எடுப்பதும் ஊடக பிரச்சாரத்துக்காகவும், முகநூல் விளம்பரங்களுக்குமே என்றாகிவிட்டது.

இவர்களோடு ஒப்பிடும் போது இல்லாமல் தமது பணிகளையும், விளைபலனைத் தரத்தக்க சேவைகளையும் அமைதியாக செய்துவிட்டுப் போபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.

அவர்கள் மத்தியில் பாலித தெவரப்பெரும எனும் மக்கள் பிரதிநிதி தனித்து விளங்குகிறார்.

அவர் புரியும் பணிகளும் விளம்பரங்களுக்கு உள்ளாகவே செய்கின்றன. ஆனால் ஊடக விளம்பரங்களுக்காக நாயாய் அலைவதில்லை. அவரது முகநூலை இயக்குபவர்களும், ஆதரவாளர்களும் நடந்தவற்றை முகநூலில் செய்தியாக்கிவிடுகிறார்கள்.


அது மட்டுமின்றி அவரது நடவடிக்கை அத்தனையும் நேரடியாக விஜயம் செய்து களத்தில் இறங்கி, பந்தா இல்லாமல் ஒரு முடிவு கண்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார் மனிதர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அந்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு பந்தா காட்டும் வகையில் யாராவது இரு அதிகாரிகளை, அல்லது அமைச்சரைத் தொடர்பு கொண்டு கதைப்பதாக பாசாங்கு காட்டிவிட்டு முடித்துவிட்டதாக கதை விடும் பொய்யனாக அவர் இருப்பதில்லை.

சம்பந்தப்பட்ட விடயத்தை எப்பேர்பட்டேனும் தீர்த்து முடிவு காண்பதற்காகத் தான் அவரது தொலைபேசி அழைப்புகளும், சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு புகுந்து நீதி கோரும் நடவடிக்கைகளும் இருக்கும்.

இதனால் தெவரப் பெரும ஏராளமான அதிகாரிகளையும், சொந்த ஆளும் கட்சியையும் பகையை சம்பாதித்துக் கொண்டே வருபவர்.

அவரிடம் உள்ளூர இருக்கும் சண்டித்தன குணாம்சம் கூட மக்கள் சேவைக்கே அழுத்தமாக பிரயோகிக்கப் படுகிறது. அந்த வகையான சண்டித்தனத்தின் தேவையையும் மக்கள் ஒரு வகையில் உணரவே செய்கிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்னர் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து போன போது சுக்குநூறாக நொறுங்கிப் போன அந்த மனிதன் துடிதுடித்து அழுததை செய்திகள் காண முடிந்தது. இனி சில நாட்களுக்கு அந்த மனிதனின் சேவை மக்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரணச் சடங்கு நிகழ்ந்த ஓரிரு நாட்களில்  அவரை மீண்டும் களத்தில் கண்டோம்.

இன்றைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த ஒருவரும் தெவரப்பெரும அளவுக்கு களத்தில் இறங்கி மக்கள் நலன்களுக்காக போராடும் எந்த ஒருவரையும் காண முடியாது. அவருக்கு நிகர் அவரே தான்.

மகிந்த காலத்தில் தான், இந்த மனிதன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறார் என்று நினைத்திருப்பார்கள் சிலர். ஆனால் அதைப பிழையாக்கினார் அவர். அவர் இன்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். எந்த கட்சியென்றாலும் எனக்கு ஒன்று தான் என்கிற அவர் முன்னரை விட அதிகமான போர்க்குணத்துடன்  தனியொரு எம்.பி.யாக களத்தில் நின்று வருகிறார்.

அவரின் இந்த போக்கை சகிக்க முடியாத ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு தகுந்த அமைச்சு பதிவிகளைக் கொடுப்பதைக் கூட தவிர்த்தே வருகிறது. அதை சற்றும் கணக்கில் கொள்ளாத தெவரப்பெரும தனது பாதையில் மக்கள் சேவையில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இயங்கி வருவது அவரின் சிறப்பு.

அவரது போராட்டங்கள் அனைத்துமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் உள்ள அதிகார வரக்கத்தினரதும், அரசியல் வாதிகளதும், வர்த்தகர்களினதும் பிரச்சினைகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களையும் வென்றவர். அளுத்கம கலவரத்தின் போது முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வர் எடுத்த முயற்சிகள் மகத்தானது. ஞாசார தேரரை காலிமுகத்திடலில் பகிரங்கமாக தூக்கிலேற்றி கொள்ளவேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.

சென்ற வருடம் ஏழை மாணவர்களின் பாடசாலை அனுமதி விவகாரத்தை எடுத்து களத்தில் இறங்கி போராடிய அவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து அதுவும் கைவராத நிலையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதை ஒரு நாடகம் என்கிற விமர்சனங்கள் பரவலாக இருந்தபோதும் இந்த விடயத்தில் கற்க வேண்டிய விடயம் என்னவென்றால் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற அவர் எடுத்த பிரக்ஞை தான். அதற்கு எத்தனை விளம்பரம் கொடுத்தாலும் தகும்.

இந்த வெள்ளத்தில் அதிகமான பேரை பலிகொடுத்த மாவட்டம் களுத்துறை. கடந்த மூன்று நாட்களாக அவர் நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் மட்டுமல்ல இறந்து போனவர்களின் உடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்க படகில் தேடித் திரிந்துகொண்டிருக்கிறார்.

பிணங்களில் அரசியல் செய்யும் நம் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிணங்களையும் தேடி அந்த சொந்தங்களிடம் கையளிப்பவரை நாம் வேறு பிரித்துத் தான் அறிய வேண்டியிருக்கிறது.

ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகளோ முடிக்காத வேலைக்கு விளம்பரம் தரச் சொல்லி பத்திரிகைகளிடம் நாயாய்ப் பேயாய் அலைவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல. வெட்கம்கெட்ட செயல். 

அனர்த்தங்களின் போது சொகுசாக களிசான் கசங்காமல் நனையாமல், பரிதவிக்கும் மக்களிடம் சுகம் விசாரித்துவிட்டு சாகசத்தனமாக திரும்புவதோடு கடமை முடிவதில்லை.

நமது தமிழ் செல்பி புள்ளைங்கள் எல்லோரும் நிறையவே பாலித தெவரப்பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.












அளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி பற்றி விளக்குகிறார்











"காங்கேசன்துறை இடைத்தேர்தலின் செய்தி" - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 16
“அவர்கள் எம் உரிமைகளை வழங்கத் தயாரில்லை. அவர்களை நம்பிப் பலனில்லை. தாம் ஆதிகார பீடம் ஏறுவதற்கு எம்மை ஏணியாகப் பயன்படுத்தியபின் எம்மை உதைத்துத் தள்ளுவார்களேயன்றி தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தின் நிலைக்கு உயர்த்த மாட்டார்கள்.”
இப்படிக் கூறியவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்.18.12.1974 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா நிகழ்வில் அவர் ஆற்றிய உரை அது.

அஹிம்சாவழியில் தானும் பொறுமைகாத்து, மற்றவர்களையும் பொறுமை காக்கச்செய்த தலைவராக அவர் இருந்தார். தமிழர் வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய தனியுரிமைப் போராட்டத்தை பிற்போட்டு காலத்தை தள்ளித் தள்ளிக் கொண்டு போனவர் தந்தை செல்வா என்று விளங்கும். எப்போதோ வெடிக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்தை தன்னால் இயன்றவரை அமுக்கி வைத்திருந்தவரும் அவர் தான் என்பது புரியவரும். அவரது இறுதிக் காலத்தில் பொறுமையின் உச்சத்தை எட்டியிருந்ததுடன் அப்படி கட்டுப்படுத்தும் பலத்தை இழந்துகொண்டு போவதை உணர்ந்திருந்தார். அதற்கான நியாயத்தையும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை ஐக்கிய முன்னணிக்கு கொடுக்கப்படவில்லை என்கிற ஒரு தர்க்கம் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தத்தையும் இந்த இடத்தில் நினைவுறுத்த வேண்டும். 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணிக்கு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும் அரைவாசி வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 48.7 வீத வாக்குகளே மொத்தம் அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதாவது மறு அர்த்தத்தில் அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் கூறலாம். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியலமைப்பை மாற்றும் தார்மீக உரிமை என்ன என்கிற கேள்வி இருக்கவே செய்தது. 1972 அரசியலமைப்புக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தந்தை செல்வாவின் இராஜினாமா. அதுபோல சீ.சுந்தரலிங்கம் மேற்கொண்ட வழக்கும் கவனிக்கத்தக்கது.

அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.
இந்த அரசியலமைப்பு நிரைவேற்றப்படுமுன்னர் சுந்தரலிங்கம் அரசியல் நிர்ணய சபைக்கெதிராக உயர் நீதி  மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்பு அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கெதிரான தடையுத்தரவொன்றை வேண்டி சீ.சுந்தரலிங்கம், உயர்நீதிமன்றுக்கு மனுச்செய்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜீ.பெனான்டோ மற்றும் நீதியரசர் விஜேதிலக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் அது விசாரணைக்கு வந்தது. 1971 பெப்ரவரி 13 உயர்நீதிமன்றம் சீ.சுந்தரலிங்கத்தினுடைய மனுவை நிராகரித்தது.

அத்தீர்ப்பில் “அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்புச் சட்டம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது அல்லது அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்ற பொழுது இரண்டில் ஒரு வகையான சூழ்நிலை எழலாம்.

1) அவ்வாறானதொரு அரசியல் யாப்பு சட்டபூர்வமானதாகவும் வலுவானதுமாகவும் இருக்கும். அது தற்போதைய அரசியல் யாப்பை மீறுகின்ற ஒன்றாகவும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பை கேள்விக்குட்படுத்த முடியாது.

2) மாறாக, அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சட்ட அந்தஸ்தும் வலுவுமற்றது என்பது தான் உண்மை நிலையாயின் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது ஸ்தபிக்கப்பட்டதற்கான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டதன் பின்னர் தான் பொருத்தமான நீதிமன்றம் அந்த யாப்பு சட்டத்தன்மை மற்றும் வலுவற்றதென தீர்மானிக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


வண்ணார்பண்ணை கூட்டம்
சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழக்கூடிய சமஷ்டியையே இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்து பல தசாப்தகாலமாக அஹிம்சாவழியில் கோரி வந்தனர்  தமிழர்கள். ஆனால் அந்த ஐக்கியப் பாதையை இறுதியாக அடைத்த சந்தர்ப்பம் தான் 1972 அரசியல் திட்டமும் அந்த ஆட்சியதிகார காலகட்டமும். 22.05.1972 அன்று நவரங்கால மண்டபத்தில் மதியம் 12.43 க்கு அன்றைய “சுபவேளையில்”  அன்றைய சபாநாயகர் ஸ்டேன்லி திலகரத்ன கையெழுத்திட்டு அரசியலமைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

1972 அரசியலமைப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வண்ணார்பண்ணையில் நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமான ஒன்று.

தமிழ் இனமும் சிங்கள இனமும் தனித்தனியாக இயங்கி வந்தததை வரலாற்று மேற்கோள்களுடன் விளக்கினார். இரு இனங்களும் தனித்தனியே சுதந்திரமாக வாழும் உரிமையைக் கொண்டுள்ளன என்று கூறினார். பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க சிங்கள அரசு மேற்கொண்ட சதியின் விளைவை விளங்கப்படுத்தினார்.

1947 இல் 95 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகையில் விகிதாசாரப்படி 66 இடங்கள் சிங்களவர்களுக்கும், 22 இடங்கள் தமிழர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். பிரஜாவுரிமை சட்டங்களின் விளைவாக 1952 தேர்தலில் சிங்களப் பிரதிநிதிகள் 75 ஆகவும் தமிழரின் எண்ணிக்கை 13அகவும் சுருங்கியது. 1956இலும் அது தொடர்ந்தது. 1960இல் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 151 ஆக உயர்த்தப்பட்ட போது சிங்களவர்களுக்கு 105 தொகுதிகளும் தமிழர்களுக்கு 35 தொகுதிகளும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 1960 ஜூலை தேர்தலில் சிங்களவர்கள் 121 இடங்களைப பெற்ற வேளை தமிழர் 18 இடங்களை மாத்திரமே பெற முடிந்தது. 1965 தேர்தலிலும் சிங்களவர்களுக்கு 122 இடங்களும் தமிழர்களுக்கு 17 இடங்களுமே கிடைத்தன. 1970 தேர்தலில் சிங்களவர் 123 இடங்களையும் தமிழர் 19 இடங்களையும் பெற்றனர். 1972 அரசியலமைப்பு இந்த அநீதியை நிலையாக இருக்கச் செய்யப் போகிறது என்றார் செல்வநாயகம்.

இராஜினாமா
1972 நிலைமைகளைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்திருந்தது பற்றி ஏற்கெனவே கண்டோம். பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தபடி இறுதி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சட்டத்தின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு உரிய காரணங்களின்றி வராமல் இருந்தால் அவர்கள் உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு இருந்தது.

ஓகஸ்ட் 22க்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் விடுமுறையும் எடுக்காமல் இருந்தால் அவர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருந்தது.  இப்படியான சூழலில் தான் “பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதால் தமிழ் மக்களின் குரல் கேட்கப்படாமலே போய் விடும்” என்று விளக்கினார் தந்தை செல்வா. ஆனால் பின்னர் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

செல்வநாயகம் 30.09.1972 அன்று காங்கேசன் துறைத் தொகுதி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஆற்றிய உரை முக்கியத்துவம் மிகுந்தது. அந்த உரையில் தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகத்தைச் சுதந்திரமாக ஆட்சிபுரியும் உரிமை உடையவர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். 

அவரின் இராஜினாமாவுக்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருந்தன. 1972 அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும் என்பது ஒன்று, அடுத்தது தமிழ் இளைஞர்களின் சினத்தை கட்டுப்படுத்துவது. அரசாங்கம் இதில் உள்ள முதலாவது காரணத்தைக் கண்டு கொண்ட அளவுக்கு இரண்டாவது காரணத்தை உணரவில்லை. இதனால் ஏற்படப்போகும் இடைத்தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை அரசாங்கம் உணரச் செய்வது முக்கிய இலக்காகவும் இருந்தது. ஆனால் அவரச கால சட்ட விதிகளைப் பயன்படுத்தி காலத்தை இழுத்தடித்தது.

தமிழ் மக்களின் தீர்மானத்தையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வதில் எந்தவித அக்கறையையும் அரசாங்கம் காட்டவில்லை.

தேர்தல் இழுத்தடிப்புக்கு நியாயம்
காலவரையறையின்றி இழுத்தடிப்பதைக் கண்டித்தும் இடைத்தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன, டபிள்யு தஹாநாயக்க, பரிஸ் குணசேகர, எம்.தென்னகோன், வீ.என்.நவரத்னம், ஏ. தர்மலிங்கம், வீ ஆனந்தசங்கரி ஆகியோர் இப்படி கோரியிருந்தனர்.
“அரசியலமைப்பின் தேர்தல் சட்டங்களின் படி காங்கேசன்துறை இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடித்து வருவது மக்களின் அடிப்படை மீறலும், ஜனநாயக உரிமைகளை மீறுவதுமாகும். இதற்கு மேலும் இழுத்தடிக்காமல் இடைத்தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.” 

08.08.1973இல் இது குறித்து தேசிய அரசுப் பேரவையில் (1972 அரசியல் யாப்பின்படி நாடாளுமன்றம் அப்படித்தான் பெயர் மாற்றம் கண்டது.) ஒரு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைத்து நீண்ட நேரம் பேசியவர் அன்றைய மின்னேறிய தொகுதி உறுப்பினரும் தொழில், திட்டமிடல் அமைச்சருமான ரத்ன தேஷப்பிரிய. (மறைந்த முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கவின் சகோதரர்)

வடக்கில் தமிழரசுக் கட்சியினர் தொடர்ச்சியாக கிளர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டே செல்வதால், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குகளைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று அவர் வாதிட்டார். மேலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆயுதங்களைத் திரட்டியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் வடக்கின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்யும் நிலையில் காங்கேசன் துறையில்  இடைத்தேர்தல் நடத்த எப்படி முடியும் என்று அவர் குற்றம் சாட்டினார். “செல்வநாயகம் அரசியலமைப்பை எதிர்த்துத்தான் இராஜினாமா செய்திருக்கிறார். அதிலிருந்து அவர் ஒரு ஜனநாயக விரோதி என்று தெரிகிறது. இராணுவத்தையும், போலிசாரையும் ஈடுபடுத்தி இடைத்தேர்தலை எம்மால் நடத்த முடியும் ஆனால் அதை செய்யப்போவதில்லை” என்று மிரட்டினார்.

1974 இந் நடுப்பகுதியிலும் இந்த விடயம் சம்பந்தமாக ஒரு விவாதம் நிகழ்ந்தது. இதுபற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் 150 கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோதும். அரசாங்கம் அதற்கு அனுமதி தர மறுத்தது.

சிறிமாவின் அறிவிப்பு
20.04.1974 விசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகளின் மீதான விவாதத்தில் உரையாற்றிய வீ.தர்மலிங்கம் “இந்த சட்டத்தின் மூலம் தெற்கில் உள்ளவர்களுக்குத் தான்  ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதற்கு முன்னரே ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிட்டன.” என்றார். மேலும், கூட்டங்கள் நடத்துவதை சட்ட ரீதியில் நேரடியாக தடுக்காவிட்டாலும் பல நிபந்தனைகளின் கீழ் தான் அங்கு கூட்டங்கள் நடத்தமுடிகிறது என்றார் அவர். அந்த விவாதத்தில் பங்கு கொண்ட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வடக்கில் இடம் பெற்று வரும்  நிலைமைகளை அடுக்கிச் சொல்லிவிட்டு குண்டெறிவது, துப்பாக்கி சூடு நிகழ்த்துவது போன்றவற்றை நிறுத்தினால் இடைத்தேர்தலை நடத்த முடியும் என்று காரணம் கற்பித்தார்.

ஆனால் பின்னர் 1974 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக வந்திருந்தவேளை, அங்கு உரையாற்றிய பிரதமர் சிறிமா கூடியவிரைவில் காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்தார். அதுவரை காலம் காங்கேசன்துறை தொகுதி மக்கள் தமது பிரநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை இல்லாமல் செய்யும் நோக்கத்தினால் நடத்தாமல் இருந்தததாக கருத வேண்டாம் என்றும், அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்வதற்காகத்தான் என்றும் கூறினார். உங்களில் உள்ள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் சில சம்பவங்களை நிறுத்தியதன் பின்னர் நிச்சயமாக நடத்துவேன் என்று அறிவித்தார்.

02.12.1974 அன்று பிரதமர் காரியாலயத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்  ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களையும் நினைவு கூர்ந்ததுடன், அத தேர்தலை ஒத்திவைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை புதுப்பிப்பதை நிறுத்திவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் அந்த தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்யப்பட்ட ஒரு மாதத்தில் 07.01.1975 தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் விமல் அமரசேகர முன்னிலையில் செய்யப்பட்டது.

வரலாற்றுத் தேர்தல்
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (வீடு சின்னம்), இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீ.பொன்னம்பலம் (விண்மீன் சின்னம்), சுயட்சையாக எம்.அம்பலவாணர் (கப்பல்) ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தந்தை செல்வா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தந்தை செல்வாவின் வெற்றிக்காக அன்று சிறு ஆயுதக் குழுவாக இயங்கிவந்த பிரபாகரன் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்.

அடுத்த மாதமே 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகவும் அமைந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 25,927 வாக்குகளைப் பெற்றார். 72.89 வீத வாக்குகள் அவருக்கே கிடைத்திருந்தன.

வேட்பாளர்
கட்சி
சின்னம்
வாக்குகள்
%
வீடு
25,927
72.89%
விண்மீன்
9,457
26.61%
எம் அம்பலவாணர்
கப்பல்
185
0.50%
தகுதியான வாக்குகள்
35,569
100.00%
நிராகரிக்கப்பட்டவை
168
மொத்த வாக்குகள்
35,737
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்
41,227
வாக்கு வீதம்
86.68%

அதே வேளை  26.61 வீத வாக்குகள் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வீ.பொன்னம்பலத்துக்கு கிடைத்து. இந்தத் தேர்தலில்  கொம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்ததாலேயே அவர் போட்டியிட்டார் என்கிற ஒரு கருத்தும் உண்டு. அவர் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டுக் கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே நிறுத்தப்பட்டிருந்தார். அதாவது செல்வநாயகத்துக்கு எதிரான அரசாங்க வேட்பாளர். ஆனாலும் அவர் செல்வநாயகத்தை எதிர்த்தோ, சமஸ்டிக் கோரிக்கையை எதிர்த்தோ பிரச்சாரம் செய்யவில்லை. இடதுசாரிகள் பங்குகொள்ளும் முற்போக்கு அரசாங்கத்தை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்கிற பாணியிலான பிரச்சாரத்தையே அவர் மேற்கொண்டார். ஏற்கெனவே அவர் தமிழ்ப் பிரதேசங்களின் சுயாட்சியை கொம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவேண்டும் என்று கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலியுறுத்தி வந்த ஒருவர்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் செல்வநாயகம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது.
“இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தம் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர் என்றே நான் கருதுகிறேன். தமக்குள்ள இறைமையைப் பிரயோகித்து சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதே அவர்கள் அளித்த தீர்ப்பு. அதை நான் இந்நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பிரகடனப்படுத்துகிறேன். மக்கள் எமக்களித்த இந்த ஆணையை தமிழர் கூட்டணி செயற்படுத்தும் என்று நான் இன்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.
இந்த இடைத்தேர்தல் கால இடைவெளிக்குள் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் திருப்பங்களுமே இந்த வெற்றிக்கும், இந்த அறிவிப்புக்கும் உடனடிக் காரணம்.

எவை என்னவென்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

துரோகங்கள் தொடரும்...



தீண்டாமை வந்த கதை மாட்டிறைச்சி உணவு ஹிந்து கலாச்சாரமே! - ஜே.மோஹன்



பசுப் பாதுகாப்புக் கோரி சென்னை பனகல் பூங்காவிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செப்டம்பர் 16, 2000 அன்று நடந்த பேரணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து ஹிந்து பாசிஸ் முகாமை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் மடத் தலைவர்கள், ஜயேந்திரா மற்றும் விஜயேந்திரா ஆகிய இருவரும் தலைமையேற்று நடத்தினார்கள். (1)  பிராணிகள்-வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், இறைச்சிக்காக மாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பெரு நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதையும், அடிமாடுகளை தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் அறுப்பதையும் எதிர்த்து அப்பேரணியை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். இதன் பின்னணியாக, ஹரியானாவில் இறந்த மாடுகளின் தோலை உரித்துக் கொண்டிருந்த ஐந்து தலித்துக்கள் ஹிந்துயிஸத்தின் கூலிரவுடிகளான விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் போன்ற அநாகரீகமான மூர்க்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதைப்போலவே, இந்தியா முழுவதும் தலித் குடிகள் தாக்கப்படுவது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பசுவதைச் சட்டத்தை நேரடியாக அமுல்படுத்துவதற்கான தேசிய அளவிலான எதிர்ப்பை சந்திக்க முடியாத ஹிந்தத்துவ அரசு, பிராணிகள் வதை சட்டம் என்ற போலித்தனமான வேஷதாரித்தனப் போர்வையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் போலீஸ்களின் அத்துமீறல்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். வெளி மாநிலங்களுக்கு சுலபமாகக் கடத்தப்படும் சத்துணவு அரிசி மற்றும் பருப்பு வகைகளை தடுக்க முற்படாத போலிஸ்துறை, தற்போது லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் மாடுகளைக் கண்டவுடன் பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

போலீஸ் துறையினர் கையூட்டு ஏதேனும் வாங்கிக் கொண்டு இத்தகைய லாரிகளை விட்டுவிட்டாலும், 'காக்கி கால்சட்டைக்காரர்கள்’ எனும் ஹிந்து தடியர் படையான ஆர்.எஸ்.எஸ். வெறிக் கும்பல்கள் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு வருகிறார்கள் ஒரு பெண் பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்படும் போதும், கடத்தப்படும்போதும் அல்லது ஹிராயின், அபின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படும்போதும், தடுத்து போலீஸ் துறைக்கு தெரிவிக்கும் மனோநிலை இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள்(?), மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மட்டும் வெறியுடன் செயல்படுவது ஏன்? இறைச்சிக்காக, இரண்டு சக்கர வாகனங்களில் பத்திலிருந்து இருபது ஆடுகள் வரை ஒரே வாகனத்தில்) ஏற்றிச் செல்லுவதைத் தடுக்காதவர்கள், நாட்கணக்கில் வேன்களிலும், லாரிகளிலும், இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் கோழிகளைத் தடுக்காதவர்கள், மாடுகளை ஏற்றிச் சென்றால் மட்டுமே தடுப்பது ஏன்? கோழிகளும், ஆடுகளும் இன்ன பிற ஜீவராசிகளும், பிராணிகள் தடுப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லையே! ஏன்? மாடுகள் வகையிலும், பசுக்கள் மட்டுமே இந்த ஹிந்துக்களின் ஆர்எஸ்எஸ்காரர்களின் கண்களில் விழுகிறதே! ஏன்? இந்திய பூர்வ குடிகளான எருமைகள் உயிர்கள் இல்லையா? எமனின் வாகனம் எருமை புனிதம் இல்லையா? பன்றி விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று பன்றி புனிதம் இல்லையா?

எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராய் இருந்தபோது தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி குதிரைவதைச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சி சார்பில் நூதனமாக எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான். முதல்வரைப் பார்த்து, ‘குதிரையை மனிதன் வதைத்தால் கடும் தண்டனை. ஒத்துக் கொள்கிறோம். ஆனால், குதிரை மனிதனை உதைத்தால் யாருக்கு தண்டனை?’ என்று கேட்டார். சட்டசபையே குலுங்கிச் சிரித்தது. இது சிரிப்பதற்காக அல்ல. மாடுகளை விட கீழ்த்தரமாக மனிதர்கள் நடத்தப்படுவதை சிந்திப்பதற்காகத்தான்.

அப்படியானால், மாட்டிறைச்சிக்கான எதிர்க்கலாச்சாரக் கலகம் ஹிந்துக்களிடையே பரப்பப்பட்டு வருவதற்கான காரணத்தை தெளிவாக்கும் அவசியம் இருக்கிறது. தலைநகர் டெல்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வாகனங்களைத் தாக்கி ஒட்டுநர்களைக் கொன்று வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். கொலைஞர்கள். மாடுகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் மனிதர்களின் இரத்தம் குடிக்கும் இத்தகைய மதவெறி ஒநாய்களின் நோக்கம் என்ன? பாஜக அரசியல் குடையின் கீழ் நடந்து வரும் இத்தகைய மக்கள் உணவுக் கலாச்சாரத்திற்கான எதிர் கலாச்சாரக் கலகம் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

தற்போது மாட்டிறைச்சி உண்ணுகின்ற கலாச்சாரம் யாரிடையே இருக்கிறது? தலித் குடிகள் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்றவர்களே வெளிப்படையாக மாட்டிறைச்சி உண்பவர்கள். சில ஜாதி ஹிந்துக்கள் மறைமுகமாகவும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வெளிப்படையாகவும் உண்கிறார்கள் உயர்த்திக்கொண்ட போலி கலாச்சார ஜாதி ஹிந்துக்களும் பிராமணர்களுடன் சேர்ந்து தலித்-முஸ்லீம் கிறித்தவர்களின் மீது திணிக்கப்படும் நேரடியான மற்றும் மறைமுகப்போரே இந்த மாட்டிறைச்சி எதிர்க் கலாச்சாரம், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், மிசோராமிலும், தமிழகத்தின் வடக்குப் பகுதிகளிலும் மற்றும், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேலைய நாடுகளில் எல்லாம் பொருளீட்டச் சென்றிருக்கும் பிராமண ஜாதி ஹிந்துக்கள் உட்பட எல்லோராலும் பாரபட்சமின்றி உட்கொள்ளப்படும் உணவு மாட்டிறைச்சி சென்னை மற்றும் மற்ற எல்லா நகரங்களிலும் இப்போது துரித நேர உணவு சாலையோரக் கடைகள் ஏராளமாக ரோந்து வருகின்றன. இக் கடைகளில் கிடைக்கக் கூடியது மிகவும் குறைந்த விலையில் அதிக சக்தி தரக்கூடிய, ருசியான ஒரு உணவு வகை என்றால் மாட்டிறைச்சிதான். இது உலகம் தழுவிய உணவுக் கலாச்சாரமாக இன்று திகழ்கிறது. வடகொரியாவில் பட்டினியாகக் கிடக்கும் மக்களுக்கு தென்கொரியா ஆயிரக் கணக்கில் இறைச்சி மாடுகளை அனுப்புகிறது. உலகையே இந்தியா உட்பட) தன் காலடியில் வைத்திருந்த பிரிட்டனின் பிரதான உற்பத்தி மாட்டிறைச்சி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள், இறைச்சி உணவாக உட்கொள்வதெல்லாம் மாட்டிறைச்சிதான். இந்த நாடுகளின் மீது மாட்டிறைச்சிப் போரை இந்தியா தொடுக்க முடியுமா? மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரம் போன்றவற்றில் முதல் நிலையில் இருக்கும் அய்ரோப்பியஅமெரிக்க நாடுகள் மாட்டிறைச்சியையே பிரதான உணவாகக் கொண்டிருப்பதை அறிக, ஒரு கிலோ மாட்டிறைச்சி 15 கிலோ கோதுமைக்குச் சமமான கலோரியயைக் கொடுப்பதாக உணவு அறிவியலாளர் கூறுகின்றனர். அத்தகைய மாட்டிறைச்சி தற்போது ஹிந்தத்துவ அரசாட்சியின் சனாதன அதத்துவங்களையும், அவற்றின் மத-நீதி முதலாளிகளான சங்கரர்களின் செல்லரித்துப்போன அத்வைத கருவறைகளையும் தீட்டுப்படச் செய்திருக்கின்றது. இதனால், ஹிந்து சறைக்குள்ளிலிருந்து எழுந்திருக்கும் எதிர்க் கலாச்சாரத்திற்கு ஒரு எதிர் புரட்சியை செய்வதற்கு முன்னால், மாட்டிறைச்சி இந்திய மக்களிடையே எப்படி வந்தது? இதை ஹிந்துக்கள் எனும் ஜாதிய மக்கள் கைவிட்டது எப்போது? தற்போது மாட்டிறைச்சி விவகாரம் இந்திய அரசியலில் முடுக்கிவிடப்பட்டதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் ஆய்ந்தறிவது அவசியமாகும்.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த அரசியல் ஆதாயங்களுக்காக, பசுவதை தடுப்பு விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. நீச்சமனிதர்கள் என்று புறந்தள்ளப்பட்ட தலித் குடிகளின் இழிந்த உணவாக மாட்டிறைச்சி கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணும் மக்கள் மீது இதையே அடிப்படையாக வைத்து ‘சுத்தமில்லாதவர்கள் அல்லது 'அசுத்தமானவர்கள்’ என்ற மனோ ரீதியான வெறுப்பு ஹிந்துக்களிடையே கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே தீண்டாமையும் வலிமையாக்கப்பட்டது என்பது அரசியல் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில் தோன்றிய ஹிந்தத்துவ அரசியலின் கொடுமையாகும். கோல்வால்கர், வினாயக் தாமோதர் மூஞ்சே போன்றவர்கள் இவ்வுணவுக் கலாச்சாரத்தை வெகுவாக மற்றும் லகுவாக கலாச்சார தேசியம் என்கிற பாசிஸப் போர்வைக்குள் கொண்டு வந்து வெற்றிக் கண்டனர். முதல் வெற்றி மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை சமூக அந்தஸ்துக்காக தூக்கி எறிந்தனர் ‘சத்-சூத்திர்கள் என்றழைக்கப்பட்ட கடைநிலை பணிவிடை ஜாதிக் குழுக்கள் இரண்டாம் வெற்றி, ‘சத்-சூத்திரர்கள் பல்வேறு கட்டங்களில், மாட்டிறைச்சியைத் தின்று வந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டனர். மூன்றாம் வெற்றி இறைச்சிக்காகவோ, தோலுக்காகவோ, மாட்டை அறுக்கும் தலித் குடிகளை பசுவதைச் சட்டம் என்ற ஒன்றின் கீழ் கைது செய்வதும், கொலை செய்வதும் நியாயப்படுத்த முடிகிறது. பசுவின் உயிரை விட மனிதன் உயிர் துச்சமென ஆகிவிட்டது.

இன்றைக்கு பலமாக அடித்தளமிட்டுக் கொண்ட ஜாதியம் அல்லது ஹிந்துத்துவம் அரசியல் ரீதியாக அதிகார வேட்டையில் இறங்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய அதிகாரமும், அகங்காரச் செருக்கும் ஜாதி-மதம் பற்றிய பொய்யும் புளுகும் ஹிந்துத்துவத்தை வளர்க்கும் அல்லது ஹிந்துத்துவம் அல்லாத இனங்களையும், சிறுபான்மைபடுத்தப்பட்ட கலாச்சாரங்களையும் அழிக்கும் என்பது ஹிந்து சாம்ராஜ்யர்களின் பகற்கனவே.

ஹிந்து பாசிஸ் முகாம்களை முன்னின்று நடத்திச் செல்ல தலித் குடிகளையும் தலைமைப் பொறுப்பேற்கச் சொல்லி ஜாதிய ஒணாநியம் தலை விரித்தாடுகின்றது. பாஜக-வின் தலைவராக ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தலித் கருத்தியலுக்கும் எழுச்சிக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்ததா என்றால் இல்லை என்றே கூறிவிடலாம். ஏனென்றால், தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதவன் எனப்படும் திரு. பங்காரு லஷமன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பலவருடங்களாக பயிற்சி பெற்றவர் ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பெல்லாம் இவருக்கு கிடையாது. இவருக்கு தலித் குடிகளின் ஒட்டு வேண்டும். தலித் குடிகளின் ஒட்டுகளை ஹிந்து பாசிஸ் முகாமின் வெற்றிக்கு பணையம் வைக்க வேண்டும். ஒரு ஆதாய பெருமுதலையாகவே இவர் செயல்பட முடியும். இடத்திற்கேற்ப வண்ணம் மாற்றிக்கொள்ள முடியும். இத்தகைய பச்சோந்திகள், தலித் குடிகளின் ஈரல் புண்கள். ஆர்.எஸ்.எஸ் கூடாரத்திலிருந்து வெளிவந்திருக்கும் இத்தலைவர் தலித் குடிகளின் ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் இவரின் ஹிந்துத்துவ அரசியல் சகாக்களின் உத்தரவை உதறித் தள்ள முடியுமா? தலித் மற்றும் சிறுபான்மையினரின் உணவுக் கலாச்சாரத்தில் அரசும், மத அமைப்புகளும் தலையிடாமலிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முடியுமா? இருந்தாலும் பங்காரு லசுஷ்மண் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக வெகுவிரைவிலேயே பதவி இறக்கப்பட்டார் என்பது ஜாதியில் ஹிந்துத்துவம் உறுதியுடன் இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மாட்டிறைச்சி என்பது ஒரு காலத்தில் வந்தேறிகளான ஹிந்து க்களால்தான் அன்றைய இந்தியர்களான தொல் புத்த மக்களிடையே பரப்பப்பட்டது. பகவான்புத்தர் காலத்தில், கேவஷ்தி ஆநிறை கவர்தல்) என்கிற முரட்டுக் கலாச்சாரத்திற்கான யாகத்தில், மாட்டை அடித்து, தீயிலிட்டுச் சுட்டுத் தின்று வந்த வந்தேறி ஹிந்துக்கள் உயிர்க்கொலைப் புரிதலை தவிர்த்துக்கொள்ள, அரசையும், மக்களையும் கெளதம புத்தர் வேண்டிக் கொண்டதன் விளைவாக, பிற்காலத்தில் புத்த பேரரசர் சாம்ராட் பிய்யதஸி அசோகர் தனது வரலாற்று கல்வெட்டுகளின் மூலம், விவசாய விருத்திக்கு பெரிதும் பயன்படும் எருதை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். புத்தனை வாழ்வியல் நெறியாகக் கொண்ட விவசாயிகள் வேளாண்மைப் பெருக உதவிய எருதை வணங்கினர். அது வரைக்கும் மாட்டிறைச்சியையேப் பிரதான உணவாகக் கொண்ட பிராமணர்களும், மற்ற ஜாதி ஹிந்துக்களும் எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றங்களினால், புத்த தம்மத்தை அடியொற்றி வாழும் நிலையால், பசுவை மட்டும் உண்ணக்கூடாது என்று மத சடங்குகளின் மூலம் "பசுவதை தடுப்பை பரப்பினர். இறக்கும்வரை காமதேனுவாக இருக்கின்ற பசு, இறந்தபின்பு தீண்டத்தகாத ஒன்றாக மாறுகிறது. இதைத் தீண்டி அப்புறப்படுத்தி அதன் தோலின் உபயோகத்தை அறிந்திருக்கும் மக்களை தீண்டாதீர்’ என்று கூறி இன்றும் அதம்ம வழியில் செல்லும் ஹிந்துக்கள் தீண்டாமையையே முதன்மைக் கடவுளாக வணங்குவது அவர்களின் இணைபிரியா அறியாமை என்பதைவிட, அவர்களின் தெளிவான ஏமாற்று வேலை என்றே கூறலாம். அஸ்வ மேத யாகத்தில், குதிரைகளையும், மாடுகளையும் பலியிட்டு, தீயிலிட்டுத்தின்று தீர்த்த 'கார்னிவோரஸ் ஹிந்துக்கள், இன்றைக்கு மாட்டை மட்டும் அடித்துத் தின்பதிலிருந்து தடைபோட்டுக் கொண்டனர். இத்தடையை மாட்டிறைச்சியை பிரதான இறைச்சி உணவாகக் கொண்டிருக்கும் தலித் மற்றும் ஒருசில குடிகளின் மீது மட்டுமே திணிக்கின்றனர். ஆனால், கோழி குதிரை, ஆடு, மான், புலி கரடி உடும்பு, பன்றி, மீன், நண்டு, எலி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு ஜீவராசிகளைக் கொன்று தின்று தீர்க்கிறார்கள் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கூட மாட்டிறைச்சி உட்கொள்பவர் தான். இவர்களை தீண்டப்படாதவராகவோ, தாழ்ந்த ஜாதியாகவோ கருதுவதில்லை. ஆனால் தலித் குடிகள் மட்டுமே தீண்டப் படாதவர்களாக கருதப்படுவதற்குக் காரணம் மாட்டிறைச்சிதான் என்று கதைக்கிறார்கள். பல கட்டுரைகளைத் திணிக்கிறார்கள். இக் குடிகள் ஜாதியை அடிப்படையாக்கிக் கொண்ட ஹிந்துயிஸத்தை உறுதியுடன் எதிர்த்த புத்த தம்மத்தைச் சேர்ந்த பூர்வீகிகளின் வழித்தோன்றல்கள் என்பதனால் தானேயொழிய, இவர்கள் இழிவுக்கு காரணம் மாட்டிறைச்சி அன்று.


ஆகவே, பசுவதைச் சட்டம் என்பது தற்போதைய தலித் உணவுக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தோற்றுவிக்கப் பட்ட புற அரசியல் போர். இத்தகைய ஹிந்து பாசிஸ் முகாம்களின் வியூகங்களை புகுந்துடைத்து நொறுக்காவிட்டால், இன்னும் பத்தாண்டுகளில் மத தேசியவாதிகளான ஜாதி ஹிந்துக்கள், கோல்வால்கர், வினாயக தாமோதர் போன்றோரின் ஹிந்து ராஷ்டிர கனவு நினைவு எல்லாம் நிறைவேறிவிடும் அபாயத்தை நெருங்க வேண்டியிருக்கும்.

ஹிந்துக்கள் மாட்டிறைச்சியை தின்றவர்கள், மாட்டிறைச்சியை இந்திய உணவுக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் என்கிற அந்தஸ்தைப் பெற்றவர்கள். இதற்கு ஹிந்துக்களின் புனித நூல் திரட்டுக்களும், பெருங் கதையாடல், செவிவழி உரையாடல் கட்டுக் கதைகளுமே சாட்சியம் தருகின்றன. சதபத பிராமண (satapatabrahmana)வில் இரண்டு பகுதிகள் மிருக பலியையும், குறிப்பாக மாட்டிறைச்சியையும் உள்ளிழுத்து புனையப்பட்டிருக் கின்றன. மாடு விவசாயப் பொருளாதாரத்திலும், மனித வாழ்வின் எல்லா அங்குலங்களிலும் உதவியாக இருப்பதால், மாட்டிறைச்சியை உண்ணுதல் என்பது, எல்லா செல்வங்களையும் உண்டு தீர்த்தல் என்பதாகும். ஆகவே மாட்டிறைச்சியை பிரதான உணவாகக் கொண்டிருந்த, அத்வார்பு போன்ற ஆரியர்கள் இதை உண்ணலாகாது என சதபத பிராமணாவின் கதையாடல் (2)  சொல்கிறது. மாட்டை இறைச்சிக்காக அழித்தல், எல்லாசெல்வங் களையும் அழித்தல் போன்றது என்பதால், மனித வாழ்வின் அழிவை எதிர் நோக்க வேண்டிய நிலை வரும் என்று அபஸ்தம்ப தர்ம சூத்ரா விளக்கிக் காட்டி மாட்டிறைச்சி தின்பதை தடைசெய்யச் சொல்கிறது. (3) ஆனால், வேத கால கட்டத்தில், அதாவது கி.மு. 1500-லிருந்து கிமு.1000-க்கு இடைபட்ட காலத்தில், மட்டுமின்றி புத்திஸ்டு யுகம் எனச் சொல்லப்படும் காலம் வரை ஆரியர்கள் எனப்பட்ட முரட்டு ஹிந்துக்கள் மாட்டைக் கொன்று தின்றனர். (4)  பசுவானது புனிதம் ஆதலால் அதை உண்ணுதலே புனிதம் என்று நம்பியதால், (5)  பசுக்கறி ஹிந்துக்களின் உணவுக் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்திருந்தது. இதற்கு மாறாக, இந்தியப் பூர்வீகிகள் பெரும்பாலும் விவசாயக் குடிகளாக இருந்தமையால், எருதை மிகவும் புனிதமாக நினைத்துப் போற்றியதால் அதை கொல்லக்கூடாது எனவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டில் எருது மிக முக்கியம் வாய்ந்த பிராணி எனவும் ஹிந்துக்களிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், உணவுக்காகவும், பலியிடுவதற்காகவும் மாட்டைக் கொல்வதை ஹிந்துக்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.

ரிக் வேதம் (6) எனும் முதல் வேதத்தில், இந்திரன் 15 முதல் 20 மாடுகளை கொன்று சமைத்ததாகக் கூறுவான். ஹிந்து தேவர்களின் ராஜன் இந்திரனே மிகச் சிறந்த மாட்டிறைச்சி உண்ணும் பலசாலியாக ரிக் வேதம் 10-வது மண்டலத்தில் பல பாடல்கள் காட்டுகின்றன. அக்னி தெய்வத்திற்காக குதிரைகள், எருதுகள் அடிமாடுகள் பசுக்கள் எல்லாம் பலியிடப்பட்டன (7)  என்றும் அதிலும் பிராதான உணவுக்காக பசுவைக் கொல்வதற்கு வாளும், கோடாரியும் பயன்படுத்தப் பட்டதாக ரிக் வேதம் (8) கூறுகிறது.

பலியிடுவதிலும் எந்தெந்த வகையான மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் எனும் விவரங்களை தைத்திரிய பிராமணா விவரிக்கிறது. குள்ளவகை எருதுகளை விஷ்ணுவுக்கு பலியிட வேண்டும். வளைந்த கொம்புடைய தீபம்போல் நெற்றி அமைந்த காளை இந்திரனுக்கு பலியிட வேண்டும். அதே போல் கருப்பு பசு பூஷனுக்கும், சிவப்பு பசு ருத்திரனுக்கும் பலியிட வேண்டும். இன்னும் பஞ்சசாரதிய-சேவா எனும் பலி பூஜையில், ஐந்து வயதுடைய 17 முசப்பு இல்லாத குள்ளவகை மாடுகளும் மற்றும் எண்ணற்ற குள்ளவகை இளம் பசுக்கன்றுகளும் பலியிடப்படும் ஹிந்துக்களின் கொடிய வழக்கத்தை தைத்திரிய பிராமணா படம் பிடித்துக்காட்டுகிறது. (9)

பசுவும், எருதும் புனிதம் என்பதனாலேயே அவற்றின் இறைச்சியை உட்கொள்ள வேண்டும் (வேரி சூத்ரா (10)  வலியுறுத்துகிறது. மிக புனிதமாக கருதப்படும் மதுபார்க்கா எனும் சிறப்பு உணவு பிராமணர் ஆச்சாரியர்குரு) ஹிந்து குருகுல சீடர்கள், அரசர் ஆகியோர்க்கு வழங்கப்படுவது பல கிரஹ்ய சூத்ரா ஸ்லோஹங்களின் மூலம் அறிய முடிகிறது.(11)  மதுபார்க்கா எனும் உணவு, பசுக்கறியுடன் தேனையும் தயிரையும் கலந்து சமைக்கப்பட்ட உணவு என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாத ஒன்று இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் சிறப்பு உணவாக பசுக்கறியைத் தான் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இதற்கு உகந்த சான்று ‘கோ-க்னா" எனப்படும் வழக்கம். விருந்தினருக்கு பசுக்கறி விருந்தோம்பல் என்பது உபசரிப்போரின் கவுரவப் பிரச்சனையாக கருதப்பட்டாலும் விருந்தினர் தமது வீட்டிற்கு வருகிறார்கள் என்று தெரிந்ததும், தொழுவத்தில் கட்டி வைத்த பசுவை அவிழ்த்து விட்டு தப்பிக்க விடுவார்களாம். இதற்கு பெயர்தான் கோ-க்னா (go-ghna). (12)

இவ்வாறு தான் ஹிந்துக்களின் மாட்டிறைச்சிக் கலாச்சாரம் பழங்ககாலத்தில் ரத்தக் களறியாய் களைகட்டி இருந்தது. இக்கொலைஞர்களை திருத்தி உயிர்க்கொலை, பலியிடுதல் போன்ற கொடிய வழக்கங்களில் இருந்து வெளிக்கொணர வேண்டி புத்த தம்மம் எழுச்சியுற்றபோதுதான், ஹிந்துயிஸமும் தன் பேருக்கு மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக் கொண்டது. பின் அதையே பெரும் அரசியலாக்கி அவ்வழக்கத்தை நிறுத்திக்கொண்டது. ஆனால், கொல்லாமையைக் கடைபிடிக்கும் வகையில், இறந்த மாட்டை உண்ணும் வழக்கம் புத்த குடிகளிடம் இருந்து வந்ததால், அவ்வழக்கத்தையே அடிப்படையாக்கி அவர்களின் மீது தீண்டாமை எனும் கொடிய வழக்கத்தைத் திணித்தனர். ஹிந்துக்களின் பல்வேறு சூழ்ச்சிகளுக்கும் கோழைத்தனமான கெட்ட மூடப் பழக்க வழக்கங்களுக்கும் இரையாகி வீழ்த்தப்பட்டது புத்த தம்ம அரசுகள். இதைத் தொடர்ந்து புத்த தம்மமும், அதன் வழி நின்ற குடிகளும் வீழ்ச்சியுற்றனர். இவர்கள் தான் இன்றைக்கும் ஹிந்துயிஸத்தின் கோழைத்தனமான சூழ்ச்சியின் காரணமாக இந்தியாவெங்கும் புரட்சியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டிருக்கும் தலித் எனும் மானுடர்கள். தலித் குடிகள் இனி ஹிந்துயிஸத்தின் சுமக்க முடியாத சுமையாகத்தான் (Dalits are here after Hinduism'sburden) இருக்க முடியும். ஏனெனில், இனி இவர்களையும், இவர்களின் சமூக விடுதலையையும் ஜாதி ஹிந்துக்கள் தமது கோயில் கர்ப்பகிரஹத்தில் தீண்டாமை வன்மத்தோடு சேர்த்து வைத்து பூட்டி வைக்க முடியாது.

அடிக்குறிப்புகள்
  1. தினமணி செப்டம்பர் 17, 2000
  2. சதபத பிராமணா
  3. அபஸ்தம்ப தர்ம சூத்ரா 15:1729
  4. Staurt Piggott, Prihistoric India, Middlesex, 1950, pp.263-264
  5. அபஸ்தம்ப தர்ம சூத்ரா, மே.கு
  6. ரிக் வேதம் X 86.14
  7. ரிக் வேதம் X 9114
  8. ரிக் வேதம் X 726
  9. தைத்திரிய பிராமணா வின் பெரும்பாலான பாடல்களில் எந்தெந்த வகை மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  10. வேரி சூத்ரா 14,1529
  11. மே.கு
  12. மே.கு


"தலித் குடிகளின் மறுக்கப்பட்ட வரலாறு - மோஹன் (ஜே)" என்கிற நூலிலிருந்து
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates