Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பற்றி என்.சரவணன்

என்.சரவணன் 32 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் பணியாற்றிவரும் மூத்த ஊடகவியலாளர். 90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியல் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் அதன் பின்னர் தொடர்ந்து சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றியாவர். தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இஇயங்கி வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம், சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை வெளிப்படுத்தி வந்த இவர் சமீப காலமாக காலனித்துவகால அரசியல் வரலாற்றை மீள் கண்டுபிடிப்புக்கு உள்ளாக்குகின்ற எழுத்துக்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் என்.சரவணனுக்கு கடந்த பெப்ரவரி மாதம் தமிழக அரசு அவரின் “கள்ளத்தோணி” நூலுக்கு சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. மலையக நூலொன்றுக்கு தமிழக அரசு வழங்கிய முதல் நூல் இது.

 

உங்களது கள்ளத்தோணி நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பது பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்? 

மகிழ்ச்சியாக உணருகிறேன். மலையகம் பற்றிய நூலொன்றுக்கு முதல் முறை தமிழக அரசின் விருது கிடைத்தமை மலையகத்துக்கு கிடைத்த ஒரு கௌரவமாகவும், அங்கீகாரமாகவும் உணர்கிறேன். தமிழகம் நமது முன்னோர்களின் தாயகம் அல்லவா. மேலும் இந்த விருதை தனிப்பட்ட சரவணனின் படைப்புக்கானதாக பார்க்கவில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தின் கனதிக்கானதாகவே பார்க்கிறேன். சமூக விடுதலைக்கான ஆயுதமாகவே எழுத்தை நான் பார்க்கிறேன். எனவே இந்த விருது அந்த நூலையும், அதன் உள்ளடக்கத்தையும் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவும்.

தமிழக அரசின் விருது பெற்ற முதலாவது நூலா?

அயலக நூல்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் தமிழர்களையும் அவர்களின் இலக்கியப் பணிகளையும் ஒன்றிணைக்க  இந்தத் திட்டம் உதவி வருகிறது. ஏற்கெனவே அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூத்த படைப்பாளி சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களின் படைப்பொன்றுக்கும் இவ்விருது கிடைத்திருக்கிறது. 

பொதுவாக விருதுகளின் பின்னால் செல்பவர் அல்ல நீங்கள். இந்நிலையில் இவ்விருதுகள் கிடைத்திருப்பது பற்றி?

கள்ளத்தோணி நூலுக்கு விருது அறிவித்திருப்பதை அந்த பதிப்பு செய்த குமரன் இல்லத்தின் உரிமையாளர் நண்பர் குமரன் தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தகவல் தந்தார். அவர் இலங்கையில் ஆயிரம் நூலுக்கு மேல் வெளியிட்டு சாதனை படைத்தவர் என்பது மட்டுமல்ல, இலங்கையின் தரமான நூல்களை வெளியிடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். விருதுகளை இலக்கு வைத்து இயங்கும் இயல்பு எனக்கு என்றும் இருந்ததில்லை. 

பேசாப்பொருளை பேசுபொருளாக்கிக் கொண்டு இருப்பதே எனது எழுத்தியல்பு. இதற்கு முன்னர் 2018 இல் “1915 கண்டி கலவரம்” நூலுக்கு இலங்கை அரச சாகித்திய விருது கிடைத்தது. அதன் பின்னர் 2020 இல் “சிங்களப் பண்பாட்டிலிருந்து”, 2021 இல் “கள்ளத்தோணி” ஆகியவற்றுக்கும் சாகித்திய விருதின் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்களப் பண்பாட்டிலிருந்து நூலுக்கு கடந்த ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சியில் சிறந்த ஆய்வுக்கான விருதும் வழங்கப்பட்டது. என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக வெகுஜனப் பணிகளில் ஈடுபடும் போது கூட மற்றவர்களை விட அதிக உழைப்பையும் சிரத்தையையும் கொடுத்துத் தான் உரிய இடத்தைப் பெற முடிகிறது. பல ஓரங்கட்டல்களை எதிர்கொண்டு எமது எழுத்துக்களை வெகுஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு இந்த விருது அவசியப்படுகிறது. விருதுகளை நான் ஏற்றுக்கொள்வதை விமர்சித்த பலர் நமது எழுத்தைக் கண்டுகொள்ளாதவர்களே என்பதை நான் அறிவேன். எனவே விருதை எதிர்க்கும் தார்மீகத்தை இழந்த; உளச்சுத்தி அற்றவர்களை நான் பொருட்படுத்தவில்லை.

எழுத்துத் துறையில் நீங்கள் தீவிரமாக செயற்பட காரணம்? 

எழுத்து என்பது எனது அரசியல் செயற்பாட்டின் அங்கம் தான். நான் என் மண்ணில் இருந்து பெயர்க்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். களச் செயற்பாட்டில் என்னை அர்ப்பணிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டிருகிறேன். எனவே புகலிடத்தில் இருந்து என் மண்ணுக்கும், என் மக்களுக்கும் என்னிடம் எஞ்சியிருக்கும் ஆற்றலால் தான் ஆற்றமுடிகிறது. எழுத்தும் ஆய்வும் கைவரப்பெற்றதே எனது பலம். கடந்த 32 ஆண்டுகளாக அந்தப் பணியைத் தொடர்கிறேன். நான் கற்றதையும், பெற்றதையும் இப்போது பலருக்கும் கற்று கொடுத்து வருகிறேன். "செயற்கை நுண்ணறிவு ஊடகவியல்" கற்கைகளுக்கான “மெய்நிகர்” கல்லூரி ஒன்றை தற்போது நோர்வேயில் நிறுவியிருக்கிறேன். ஊடகவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், உயர்கல்வி மாணவர்களுக்கும் உதவக் கூடியவகையில் அதை கட்டமைத்து வருகிறோம்.

மும்மொழித்தேர்ச்சி எமது எழுத்துக்கள் வளம் காரணமாக அமைகின்றது. இந்நிலையில் அதனை எவ்வாறு வளர்த்துக்கொண்டீர்கள் ?

இலங்கையின் பல்வேறு ஆய்வுசார் பணிகளின் போது மும்மொழிகளை பயன்படுத்தியவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். இலங்கை சார் ஆய்வுகளை மும்மொழி உசாத்துணை இன்றி பூரணமாக சாத்தியப்படுத்த முடியாது என்பது எனது அனுபவம். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினை, தேசியவாதம், வரலாறு, பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கு மாற்று இனத்தின் மொழி இன்றிமையாதது. தமிழிலும், சிங்களத்திலுமான  இதுவரையான ஆய்வுகளை இக்குறைபாடுள்ளவையாகவே காண்கிறேன்.

இந்தக் குறையை எனது எழுத்துக்களில் தவிர்ப்பதற்காகவே ஆரம்பத்திலேயே வலுக்கட்டாயமாக சிங்கள மொழியைக் கற்று அதனை ஆய்வின் வளமாகமாகவே கையாள்கிறேன். அப்படி மேற்கோளும் போது பல தகவல்களையும், தரவுகளையும் சரி பார்க்க முடிகிறது, உறுதி செய்து கொள்ள முடிகிறது, புதிய விபரங்களை கண்டு பிடிக்க முடிகிறது. ஈற்றில் நமது ஆய்வுகள் மேலும் பூரணப்படுகிறது. வியப்பளிக்கும் ஆய்வுகளை தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. புதிய ஆய்வுகளுக்கான திறவுகோல்களை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடிகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ள நாடுகளில் மேலும் சிரமமானது. ஆனால் நமது நாட்டில் இரண்டே இரண்டே இரண்டு சுதேசிய மொழிகள். மிக மிக எளிமையான ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம். இரண்டு சமூகங்களும் பரஸ்பர குரோதங்களையும், வெறுப்புகளையும், பாரபட்சங்களையும் குறைக்க அடிப்படை அம்சமாக இது இருந்திருக்கும்.

புலம் பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கை சார்ந்த விடயங்களை எவ்வாறு எழுத்துக்களில் கையாளுகின்றீர்கள்?

தொடர் அவதானிப்பு, கண்காணிப்பு, நிரப்பப்படாத; அதே வேளை நிரப்ப வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அதன் மீது ஆய்வுக் கவனத்தை குவிப்பது, அதற்குத் தேவையான அடிப்படை மூலங்களையும், உசாத்துணைகளையும் தேடித் தேடிக் கண்டு பிடித்து பலம் சேர்ப்பது. இதனை மேற்கொள்வதற்கான பார்வையையும், அதற்கான அரசியல் புரிதலையும் வளர்த்துகொள்வது, கிரமமான தொடர் எழுத்துக்களுக்கூடாக பயிற்சியை மேம்படுத்தி வைத்திருப்பது. இதுவே எனது எழுத்தின் பலமாக உணருகிறேன்.

நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் பற்றியும் அதன் அனுபவங்கள் பற்றியும் சுருக்கமாக? 

இலங்கையின் அரசியலில் பெண்களும், பெண்களின் அரசியலும், தலித்தின் குறிப்புகள், 1915 : கண்டி கலவரம், அறிந்தவர்களும் அறியாதவையும், சிங்களப் பண்பாட்டிலிருந்து, கள்ளத்தோணி, பண்டாரநாயக்க கொலை போன்ற நூல்களைக் குறிப்பிட முடியும்.

நூலை எழுதுவதற்கான எனக்கான தந்திரோபாயமாக ஒரு வழிமுறையைக் கையாண்டு வருகிறேன். அதாவது பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் தொடர் கட்டுரைகளுக்கு ஒப்புக்கொண்டு விடுகிறேன். அதன் பிரகாரம் வாராந்தம் குறித்த நாளில் அக்கட்டுரையை எழுதுவதற்கான நிர்பந்தத்தை எனக்கே நான் ஏற்படுத்திக் கொள்கிறேன். இந்த நிர்ப்பந்தமே என்னை கிரமமாக எழுதத் தள்ளுகிறது. ஒரு நூலை தனியாக எழுதி முடிப்பதெனில் பல்வேறு சமாதானங்களை நாமே நமக்கு ஏற்படுத்தி ஒத்திவைத்துக் கொண்டே செல்ல நேரிடுவது என்பது எனது அனுபவம். இது வரை வெளிவந்த எனது நூல்கள் அத்தனையும் அப்படி ஏற்கெனவே வெளிவந்த தொடர் கட்டுரைகள் தான். இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஐந்து நூல்களும் கூட அவ்வாறு கட்டுரைகளாக வெளிவந்தவை தான்.

இவ்வாறு கட்டுரைகளாக வெளிவரும் போது; நூலாக வெளிவருவதற்கு முன்னரே வாசகர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள முடிவதுடன், நூலுவாக்கத்துக்கு முன்னர் மேலதிக செப்பனிடளுக்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் வெளியிட வுள்ள படைப்புக்கள் பற்றி? 

தற்போது பதிப்பில் உள்ள நூல்கள் கொழும்பின் கதை, மகாவம்சம் : புனிதங்களும் புனைவுகளும், நோற்றாண்டு துரோக வரலாறு. அதைத் தவிர “மலையகம் 200: அடிமையிலிருந்து கொத்தடிமைக்கு மாறிய வரலாறு”, 83’, ஈழத்தில் பதிப்பு பண்பாட்டின் வரலாறு என்பவை பதிப்புக்கான வேலைகள் நடக்கின்றன. இவை முடிந்தால் தான் நிறைவுக்காக காத்திருக்கும் அடுத்த சில நூல்கள் வரிசையாக வெளிவரும்.

நூல்கள் அச்சிடும் நிலைமை குறைந்து; மின்னூல் வடிவில் வடிவமைத்து வெளியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதன் தாக்கம் இனி எவ்வாறு நிகழப்போகிறது?

இலங்கையில் தான்  இதன் பாதிப்பை அதிகம் உணருகிறோம். இலங்கை எதிர்கொண்டு வருகிற பொருளாதார நெருக்கடியே கடதாசியின் மீதான இறக்குமதிச் சிக்கலையும், அதன் விலையுயர்வையும் எதிர்கொள்ள வைத்திருக்கிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல் வெளியீடுகள் அனைத்தின் மீதும் இதன் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இத்துறை சார்ந்த பணியாளர்கள் பலர் வேலை இழந்திருப்பதையும் காண்கிறோம். அச்சு உற்பத்திகளின் விலைவாசியை சமாளிக்க முடியாத வாசகர்கள் இலவச மின்னூல் வாசிப்பை நோக்கி இழுக்க இதுவே காரணம். கொரோனா  கால வெளியும் நவீன இலத்திரன் வழிமுறையை சகல தொழிற்துறைகளிலும் பழக்கியிருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை நாம் கூட்டாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

ஆனாலும் அச்சு ஊடகம் அவ்வளவு இலகுவாக விழ வாய்ப்பில்லை. ஒரு தேக்கம் உருவானாலும் அது தன்னை நிமிர்த்திக் கொள்வதற்கான சாதகங்கள் உள்ளன. அதற்கென்று இருக்கிற இடம் இருக்கவே செய்யும். ஜனவரியில் நிகழ்ந்த சென்னைப் புத்தகக் கண்காட்சி அந்த நம்பிக்கையைத் தரும் முக்கிய உதாரணமாகக் கொள்ளலாம். அச்சு ஊடக வரலாற்று வழித்தடத்தில் நவீன முறைகள் உள் நுழைந்தபோதெல்லாம் இத்தகைய பீதி கிளம்பிய சந்தர்ப்பங்களை நாம் மீட்டுப் பார்க்க வேண்டும்.

நன்றி - தமிழ் முரசு - 12.03.2023





 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates