Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது - துரைசாமி நடராஜா



மலையக பெருந்தோட்டங்களில் வெளியாரின் ஆதிக்கம் தொடர்பாக இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை தோட்டப்புற தொழில் வாய்ப்புகளில் தோட்டத்து இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இந் நிலையானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இதனால் தோட்டப்புறங்களின் நிகழ்காலமும், எதிர்காலமும், இருப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் தேயிலை தொழிற்துறையின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதிகளில் அது ஏற்றுமதி செய்த பொருட்களின் மூலம் பெற்ற அந்நிய செலாவணியில் பெரும் பங்கினை தேயிலையே பெற்றுக்கொடுத்திருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். 1948 ஆம் ஆண்டினை அடுத்த காலப்பகுதிகளில் தேயிலை சுமார் 60 வீதம் வரையான ஏற்றுமதி வருவாயினை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் அந்நிய செலாவணி உழைப்பில் 1959 ஆம் ஆண்டில் 59.6 சதவீதமாக தேயிலையின் பங்கு இருந்துள்ளது. இந் நிலையானது 1976 இல் 43.6 சதவீதமாகவும், 1980 இல் 35.1 சதவீதமாகவும் 1986 இல் 27.2 சதவீதமாகவும், 1990 இல் 24.9 சதவீதமாகவும் இருந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை இலங்கையின் தேயிலை உற்பத்தி நிலைமைகளை நோக்குகின்ற போது அது பின்வருமாறு கடந்த காலத்தில் அமைந்துள்ளதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையில் 1945 இல் 125.6 மில்லியன் கிலோவாக தேயிலை உற்பத்தி இருந்துள்ளது.

1976 ஆம் ஆண்டில் 196.6 மில்லியன் கிலோவும், 1982 இல் 187.8 மில்லியன் கிலோவும், 1984 இல் 207 மில்லியன் கிலோவும், 1990 இல் 233 மில்லியன் கிலோவுமென தேயிலை உற்பத்தி இலங்கையில் இடம்பெற்றுள்ளது. தேயிலை பயிரிடப்பட்ட நிலப்பரப்பினை பொறுத்த வரையில், 1985 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 650 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டது. இலங்கையின் தேயிலை தொடர்பாக நாம் பேசுகின்ற போது பெருந்தோட்டங்களின் ஆதிக்கத்தினையும் நாம் குறிப்பிட்டாதல் வேண்டும். பெருந்தோட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வந்த காலம் மிக நீண்டதாகும்.

இலங்கையின் தற்கால பொருளாதார அமைப்பும் தொழிற்பாடுகளும் காலனித்துவ காலத்துடன் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உருவாக்கம் பெற்றன. இக்காலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பெருந்தோட்ட பொருளாதாரமும் அதனை தழுவிய வெளிநாட்டு வர்த்தகமும் ஒரு நவீன பொருளாதார முறைமையினை அறிமுகப்படுத்தியது என்கிறார் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன். மேலும் , பெருந்தோட்ட விவசாயம் அதன் அடிப்படையிலான வெளிநாட்டு வர்த்தகம் அவற்றுடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்கள், நிதி வங்கி நிறுவனங்கள் மற்றைய துணை நடவடிக்கைகள் முதலானவை சேர்ந்த ஒரு நவீன பொருளாதார துறை விருத்தியடைந்துள்ளது. ‘பெருந்தோட்ட பொருளாதாரம்’, ‘ஏற்றுமதி ,இறக்குமதி பொருளாதாரம்’, ‘இரட்டை பொருளாதாரம்’ என்றெல்லாம் விபரிக்கப்பட்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக இலங்கையின் அந்நிய செலாவணி தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய விவசாய ஏற்றுமதிகளில் இருந்தே பெறப்பட்டு வந்துள்ளது. உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் முதலானவற்றின் இறக்குமதிகளை நிதிப்படுத்துவதற்கு ஏற்றுமதி வருவாய்கள் தேவைப்பட்டன.

ஏற்றுமதி விவசாய பொருட்களுக்கான கிராக்கி உலக சந்தையில் கூடுதலாக அதிகரிக்காத நிலையில் மற்றைய முதல் விளைவு ஏற்றுமதி நாடுகளுடன் இலங்கை கடுமையாக போட்டியிட வேண்டிய சூழல் மேலெழுந்தமை தேயிலைக்கு ஒரு சவாலாக அமைந்தது. மேலும் உற்பத்தி திறன் தேங்கிய நிலையிலும், உற்பத்தி செலவுகள் அதிகரித்து சென்றதாலும் ஏற்றுமதி துறையின் குறிப்பாக தேயிலை உற்பத்தியில் இலாப தன்மையும் அறுபதுகளுக்கு பின்னர் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1950 இல் நிக்கலஸ் கால்டர் என்பவர் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் கூறிய விடயங்கள் பின்வருமாறு அமைந்தன. ‘இப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுபீட்சம் பெருந்தோட்ட பொருளாதாரத்திலேயே தங்கி இருக்கின்றது. பெருந்தோட்ட பொருளாதாரமே தேசிய வளத்தின் துரித வளர்ச்சிக்கு உதவ முடியும்’ என்று நிக்கலஸ் தெரிவித்திருந்தார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெருந்தோட்ட துறையின் வகிபாகம் மிகவும் முக்கியமானது என்பதனை நாம் இதிலிருந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

முக்கியத்துவம் இழப்பு

 பெருந்தோட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் மிக்கனவாகவும், பொருளாதார அபிவிருத்தியில் கணிசமான வகிபாகத்தினை கொண்டனவாகவும் ஒரு காலத்தில் விளங்கின. எனினும் பின்னரான காலப்பகுதியில் இவற்றின் செல்வாக்கில் படிப்படியான வீழ்ச்சி நிலை ஏற்பட்டமையையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கென பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கிராமிய மக்களின் சமூக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற திட்டங்களினதும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட கைத்தொழில் வளர்ச்சி, திட்டங்களினதும் பின்னணியில், பெருந்தோட்ட விவசாய துறையானது தனது முக்கியத்துவத்தினை இழந்து நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெருந்தோட்ட நிர்வாகமும் உடைமையும் இலங்கையர் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற போக்கின் வெளிப்பாடாக 1970–1975 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில சீர்திருத்த செயற்பாடுகள் பெருந்தோட்ட பயிர் செய்கைக்கு உட்பட்ட பிரதேசங்களை தேக்க நிலைக்கு தள்ளி இருந்ததாக கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் குறிப்பிடுகின்றார். சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டன. இதனடிப்படையில் பெருந்தோட்ட துறையில் முதலீடுகள் முடக்கப்பட்டன. பெருந்தோட்ட துறை நிர்வாகத்தினரிடையே ஏனோ தானோ என்ற அக்கறை இல்லாத மனப்பாங்கு நிலவியது. பல வெளிநாட்டு நிறுவனங்களும் ,தனியார் நிறுவனங்களும் தமக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை கூறுபோட்டு விற்க தொடங்கின. ‘நில உச்ச வரம்பு சட்டம்’ பெருந்தோட்டங்கள் மீது கணிசமான தாக்கத்தினை செலுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் இன்னும் பல பாதக விளைவுகளும் ஏற்பட்டன. வேலையின்மை, உணவு பற்றாக்குறை என்பன மேலோங்கின. இதனால் இந்திய வம்சாவளியினர் பலர் வடமாகாணத்திற்கு சென்று குடியேறும் நிலைமையும் மேலோங்கியது. இவ்வாறு சென்றவர்கள் இலங்கை தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் காலப்போக்கில் தமது இந்திய, மலையக அடையாளங்களை கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்து விடும் போக்குகளே அதிகமுள்ளதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது கட்டுரை ஒன்றிலே சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

பெருந்தோட்ட துறையானது இன்று பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. இத் துறையின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் பலவும் மேலெழுகின்றன. தேயிலையின் விளை நிலம் சுவீகரிக்கப்படுதல், கம்பனியினரின் மேலாதிக்கம், ஊதிய பற்றாக்குறை, நவீன மயப்படுத்தப்படாமை, தொழில் முன்மாதிரியாக இல்லாமை, தொழிற் துறையில் காணப்படும் பல்வகைமைசார் நெருக்கீடுகள் என்பன உள்ளிட்ட பல காரணிகள் இத் துறையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது. தொழிலாளர்களின் இடப்பெயர்வு சமூக நகர்வு என்பனவும் இக் காரணிகளுள் உள்ளடங்குகின்றன என்பதையும் கூறியாதல் வேண்டும்.

தொழிலாளர் தொகை வீழ்ச்சி

பெருந்தோட்டங்களில் பல்வேறு தொழில் நிலைகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொழுந்து பறிக்கும் பணி இதில் முக்கியமானதாக உள்ளது. தேயிலை பராமரிப்பு செயற்பாடுகள், தொழிற்சாலை பணிகள், தோட்டக்காவல் என பல வேலைகளும் இங்கு இடம்பெறுகின்றன. களை மற்றும் பீடைகொல்லிகள் தெளிப்பு நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வகையில் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் அண்மை காலத்தில் சடுதியான ஒரு வீழ்ச்சி போக்கினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 1985 ஆம் ஆண்டில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை (பதிவு செய்தது) நான்கு இலட்சத்து 58 ஆயிரத்து 617 ஆக இருந்தது. இதனடிப்படையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை தோட்டங்களில் இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 321 தொழிலாளர்களும், அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபன தோட்டங்களில் இரண்டு இலட்சத்து இருபதாயிரத்து 296 தொழிலாளர்களும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாயிரமாம் ஆண்டில் பெருந்தோட்ட பதிவு தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 11 ஆயிரத்து 773 ஆக இருந்துள்ளது.

2005 ஆம் ஆண்டில் இத் தொகையானது இரண்டு இலட்சத்து 91 ஆயிரத்து 289 ஆகும். எனினும் 2008 ஆம் ஆண்டில் இத் தொகையில் மேலும் சறுக்கல் நிலையினையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் தனியார் பெருந்தோட்டங்கள் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றில் பதிவு தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 42 ஆயிரத்து 266 ஆக இருந்தது. இத் தொகையில் இப்போது மேலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டிருப்பதனையே அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ் வீழ்ச்சி நிலைக்கு ஒப்பந்தங்கள், இன கலவரங்கள், நில சீர்திருத்தங்கள் என பல காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1992 இல் பெருந்தோட்டங்கள் மீள தனியார்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வு ஓய்வு ஊக்குவிப்பு திட்டத்தின் அடிப்படையில் பல தொழிலாளர்கள் வயதுக்கு முன்னர் ஓய்வு பெற்றனர். இந் நிைலமையும் தொழிலாளர்களின் வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியிருப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வு ஓய்வு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்கள் அதே தோட்டங்களில் ‘கைக்காசு’ தொழிலாளர்களாக மீண்டும் வேலை செய்வதனையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்கள் நிரந்தர பதிவு தொழிலாளர்களாக கணக்கெடுக்கப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும்.

வெளியாரின் ஆதிக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒரு குழுவாக தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. தமது கலை கலாசாரங்களை பாதுகாத்து முன்னெடுக்கவும், இன அடையாளத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது ஒரு சிறப்பம்சமாகும். எனினும் இம் மக்கள் சிதறி வாழுகின்ற போதோ அல்லது வெளியாரின் ஊடுருவல் அதிகரிக்கின்ற போதோ மேற்கண்ட விடயங்களை பேணுவதில் ஒரு குழப்பகரமான சூழ்நிலை உருவாகக் கூடும். மேலும் அரசியல் துறை சார்ந்த விடயங்களிலும் சிக்கல் நிலைகள் மேலோங்குவதற்கு இடமுண்டு. தோட்டத் தொழிலாளர்களின் இருப்பினை சிதறடிக்கும் முயற்சியில் அல்லது நடவடிக்கைகளில் இனவாதிகள் நீண்டகாலமாகவே ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னர் இம் மக்களை எல்லா துறைகளிலும் ஓரம் கட்டுவதேயாகும். இதை நாம் மறந்து விடலாகாது.

இந்திய வம்சாவளி மக்கள் சிங்கள பாணியை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமைகள் தொடர்பில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ், கலாநிதி ரமேஸ் போன்றவர்கள் தமது உள்ளக்குமுறலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் உரையாடலின் போது சிங்கள சொற்களை புகுத்துதல் அல்லது கையாளுதல், கிரியைகளை சிங்கள பாணியில் நடத்துதல், நடை, உடை பாவனைகளில் சிங்கள பாணியினை கையாளுதல் என்பனவும் இதிலடங்கும். இத்தகைய நிலைமைகள் எம்மவர்களின் கலை கலாசாரத்தினை கேள்விக்குறியாக்கு வதாகவே அமையும். நாம் வலிந்து சிங்கள பாணியை பின்பற்றி சிங்களவர்கள் சார்பானவர்களாக இனங்காட்டி கொள்ள முற்பட்டாலும் அவர்கள் எம்மை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை பேராசிரியர் சந்திரசேகரன் சற்று ஆழமாகவே வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் உணர்வுடன் செயற்படுதல் வேண்டும். எனினும் வெளியாரின் ஆதிக்கம் தோட்டங்களில் மேலோங்குகின்ற போது இத்தகைய குழப்ப நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போய்விடும்.

மலையக இளைஞர் யுவதிகள்

மலையக மக்களிடையே கல்வி குறித்த நாட்டம், அக்கறை என்பன இப்போது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக உள்ளது. கல்வி மேம்பாடு காரணமாக சமூக நகர்வுகள் இடம்பெறுகின்றன. நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு இடம்பெறுகின்றது. சமூக நகர்வின் காரணமாக அம்மக்களிடையே பல்வேறு மாற்றங்கள், அபிவிருத்திகள் ஏற்படுவதனையும் எம்மால் நோக்கக் கூடியதாக உள்ளது. மலையக இளைஞர், யுவதிகள் இன்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆசிரியர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கல்வியதிகாரிகள் என தொழில்கள் விரிந்து செல்கின்றன. யுவதிகள் ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்றனர். மேலும் வர்த்தக நிலையங்களில் இளைஞர் மற்றும் யுவதிகள் தொழில் புரிவதனையும் அவதானிக்க முடிகின்றது. இதேவேளை கொழும்பில் தொழில் தேடி செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு திருப்தியில்லாத நிலையில் மீண்டும் தோட்டங்களுக்கு திரும்பி வந்து தொழில் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்து கொள்கின்றார்கள். பெருந்தோட்டத்தில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இருப்பினும் அவர்கள் அதனை உரியவாறு பயன்படுத்தி கொள்வதில்லை என்று ஒரு ஆய்வின் முடிவு வெளிப்படுத்தி இருக்கின்றது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதேவேளை இந்த ஆய்வில் மேலும் சில விடயங்களும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி கற்ற சில இளைஞர்கள் தேயிலை பயிர் செய்கை மற்றும் உற்பத்தி அம்சங்களில் போதிய பயிற்சி இல்லாதவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு இத்துறையில் விஞ்ஞான பூர்வமான பயிற்சியளிப்பதன் மூலம் போதிய அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மண் வள முகாமைத்துவம், போஷணை, தேயிலை உற்பத்தி சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் பயிற்சிக்கான பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டும். அத்துடன் அதற்கான தனிநிறுவகம் அமைக்கப்படவும் வேண்டும். இடைநிலை கல்வியுடன் இடை விலகுபவர்களும், பாடசாலை செல்லாதவர்களும் பெருந்தோட்டங்களில் பயிற்சியற்ற தொழில்களில் இணைந்து செயற்படுகின்றனர். இத்தகையோருக்கு பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்ப கல்லூரிகள் மலையகத்தின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தல்கள் மலையக இளைஞர் ,யுவதிகளின் நலன் கருதி இடம்பெற்றுள்ளன. இவற்றை செயல் வடிவம் பெற செய்வதில் மலையக அரசியல் வாதிகளின் பங்களிப்பே மிகவும் அவசியமாக உள்ளது.

புறக்கணிப்பு

தோட்ட பகுதிகளில் உத்தியோகத்தர் நிலை சார்ந்த பல தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அலுவலகம், தொழிற்சாலை, சிறுவர் அபிவிருத்தி நிலையம், முகாமைத்துவம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பலவும் இதில் உள்ளடங்கும். இத்தகைய தொழில் வாய்ப்புகளுக்கு முன்னர் அதிகமாக தோட்டப்புறத்தை சார்ந்த படித்த இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு இணைந்து கொண்ட பலர் இன்று நல்ல நிலையில் தோட்டங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஓய்வு பெற்றும் சென்றுள்ளனர். இந்த நிலையில் அண்மை காலங்களில் தோட்டத்தில் மேற்கண்ட தொழிற் துறைகளுக்கு புதியவர்கள் இணைத்து கொள்ளப்படுகையில் பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. தோட்டப்புறங்களில் தொழில் நிலைகளில் வெற்றிடங்கள் ஏற்படுமிடத்து அத்தோட்டங்களில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வெற்றிடங்கள் விளம்பரம் செய்யப்பட்டு தகைமையுடைய தோட்ட இளைஞர், யுவதிகள் சேவைக்கு சேர்த்து கொள்ளப்படல் வேண்டும்.

தோட்டப் புறங்களில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றன. இந் நிலையங்களில் அதிகமான தமிழ் சிறுவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்படுகின்றார்கள். இவர்கள் பாடசாலைக்கு செல்லும் வயதை அடையாதவர்களாக உள்ளனர். இங்கு முன்பள்ளிக்குரிய சில நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனினும் பல நிலையங்களில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பெண்களே முன்பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பள்ளி பருவ கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்க்கை நீடித்த கல்விக்கும் தேவையான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி முக்கியமானதாகும் என்கின்றனர் கற்றறிவாளர்கள்.

எஸ்.விஜயசந்திரனின் கருத்து

தோட்டப்புற இளைஞர், யுவதிக ளின் சமகால தொழில் நிலைமைகள், போக்குகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் பின்வருமாறு தனது நிலைப்பாட் டினை தெளிவுபடுத்தினார். மலையக இளைஞர், யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி பல மாறுதல்களு க்கு வித்திட்டுள்ளது. இதனால் தொழில் சார்ந்த மற்றும் துறை சார்ந்த நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. எனவே தோட்ட தொழில் அல்லாத ஏனைய தொழில்களை நாடி செல்லும் நிலை அதிகரித்து வருகின்றது. க.பொ.த. சாதாரணம் பயின்ற ஒரு தொகையினர் தொழில் தேடி வெளிச்செல்லும் ஒரு நிலை காண ப்படுகின்றது. குறைவான கல்வி தரத்தை உடைய பெண்கள் ஆடை தொழிற்சாலை உள்ளிட்ட ஏனைய பல தொழில்களை நாடிச்செல்கின்றனர்.

இளைஞர்கள் நகர் புறங்களில் கட்டட தொழில் மற்றும் கடை தொழில்களுக்கு செல்கின்றனர். இந் நிலையில் க.பொ.த உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கான தொழில் வாய்ப்பு என்பது இப்போது ஒரு பிரச்சினையாக இருப்பதனையும் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இலங்கையின் அரச துறைகளில் மலை யக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றன. ஆசிரியர் தொழில் தவிர்ந்த ஏனைய தொழிற்துறைகளில் போதிய இட மளிக்கப் படுவதில்லை என்பது வருந்தத் தக்க ஒரு விடயமாகவே உள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதும் இலகுவான ஒரு காரியமாக இல்லை. கல்வி தகைமையுடன் ஏனைய பல தகைமைகளும் தனியார் துறை தொழில் வாய்ப்புக்காக தேவைப்படு கின்றது. உதாரணமாக ஆங்கில மொழி புலமை, நேர்கணிய மனப்பாங்கு, தொடர் பாடும் திறன், மென்திறன் தொடர்பான திறன்கள், தலைமைத்துவ ஆளுமை, விளையாட்டு போன்ற பல்வேறு துறை களிலும் தனியார் துறை தொழிலுக்காக செல்லும் ஒருவர் ஆளுமையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை மலையக இளைஞர் கள் தொழில்நுட்ப மற்றும் தொழில் சார் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. தனியார் துறை தொழில்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடங்கல்கள் இதிலும் காணப்படுகின்றன. சுயதொழில் நட வடிக்கைகளை பொறுத்தவரையில் உடனடியாக இவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதென்பது கடினமான ஒரு விடயமாகவே தென்படுகின்றது. பாரிய நிதி, சொந்த இடம் என்பன சுயதொழிலுக்கு அவசியமாகும். எனினும் தோட்ட இளைஞர்களுக்கு சொந்தமாக இடம் இல்லை. தோட்ட நிர்வாகமும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு எந்தளவு இடமளிக்கின்றது என்றும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. சுயதொழில் கடன்களை பெறுவதிலும் இழுபறியான நிலைமைகளே காணப்படுகின்றன. உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத் துவதும் சிரமமான காரியமாகவே உள்ளது. இந் நிலையில் மலையக இளைஞர், யுவதிகள் தகுதிக்கு குறைந்த தொழில்களை புரிகின்றனர். அல்லது பெற்றோரில் தங்கி வாழுகின்றனர் என்பதே உண் மையாக உள்ளது. திருமணம் முடிந்த பிறகும் கூட சிலர் பெற்றோரிடம் தங்கி வாழ்வ தென்பது கொடுமை யிலும் கொடுமையாகும். மலையக பகுதிகளில் இளைஞர், யுவதி களின் நலன் கருதி பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பெருந் தோட்டங்களில் அதிகளவு காணிகள், மனித வளங்கள் காணப்படுகின்றன. இதனை மையப்படுத்தி தோட்டத்திற்கு உள்ளேயே பல தொழில் வாய்ப்புகள் உரு வாக்கப்படுதல் வேண்டும். காலநிலை, நீர் வசதியும் உண்டு. மலையக அரசியல் வாதிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தோட்டங்களில் சுமார் 37 ஆயிரம் ஹெக்ெடயர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவற்றை இளைஞர்களின் சுயதொழில் விருத்திக்காக வழங்க முடியும். இளைஞர்கள் சுயதொழிலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வதற்கான மனோ நிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி

“நோமோபோபியா” : நாசத்திலிருந்து நம்மைக் காத்தல்! - என்.சரவணன்


நோமோபோபியா இன்று உலகத்தின் மாபெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்துவருகிறது..

அதென்ன நோமோபோபியா? உங்கள் கைத்தொலைபேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ, மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா?அடிக்கடி அதனை பார்த்துவிட வேண்டும் என்கிற உணர்வு மேலிட்டவரா நீங்கள் அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது உறுதி. அப்படி அனாவசியமாக பயப்படுவதை ''நோ மொபைல் போன் போபியா'' (Nomophobia -"no-mobile-phone phobia") என்று வரைவிலக்கணப்படுத்தியிருக்கிறார்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான பயம் இருக்கும். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே போபியா (Phobia) என்று அழைப்பர். போபியா என்பது இயற்கைக்கு மாறான பயம் ஆகும். போபியா உள்ளவர்கள் சாதாரணமாக பயப்படுபவர்களைக் காட்டிலும், அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஒரு வகையில் போபியாவை ஒரு மனநோய் என்றும் கூறலாம். பலவகை போபியாக்களை (Phobia) மருத்துவ உலகம் அடையாளம் கண்டு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

தொடர்பாடலுக்கு பயன்ப்படுத்தத் தொடங்கி, இன்று தேடலுக்கும், ஆய்வதற்கும், பொழுதுபோக்குக்கும், இன்னும் பல தேவைகளை கண்டடைவதற்கும் செல்பேசியைப் பயன்படுத்தி வருகிறோம். இதன் நீட்சி இன்று அதில் தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். பலர் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதன் விளைவு நமது வாழ்க்கை உறவுகள் அருகில் இருக்காமல் கூட இருக்கலாம் ஆனால் செல்பேசி அருகில் இல்லையென்றால் பித்து பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். நாளுக்கு நாள் இந்தப் பித்து அதிகரித்து ஒரு வித மன நோய்க்கு ஆளாகிவிடிகிறார்கள். அதனை அடையாங்கண்டு அதற்கு இட்டிருக்கிற பெயர் தான் நோமோபோபியா.

நோமோபோபியாவை நம்பியே இன்று பெரும் வர்த்தகங்கள் உலகில் தோன்றியுள்ளன. காசு பண்ணுவதற்காகவே பெரும் முதலீடு செய்யும் ஒரு தொழிலாக இந்த செல்போனுக்கு அடிமையாக்கும் வர்த்தகம் உஎலகமெந்கும் கோலோச்சத் தொடங்கியிருக்கிறது. 

காலையில் எழுந்ததும் வாட்ஸ்அப்பில் வணக்கம் சொல்வதையும், இரவில் கண்கள் சொருகும்வரை செல்போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும், அடிக்கடி சரி பார்ப்பதையும், படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்திருப்பதையும் பலரும் வழக்கமாக்கி வருகின்றனர். இதில் சிறியவர், பெரியவர் என்ற பேதம் இல்லை. ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சினைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. குற்றங்கள் அதிகரிக்கின்றன. உறவுகள் கூட வேறு வடிவங்களைப் பெற்று வருகின்றன.

முகநூலில் அடுத்த “லைக்” வந்து விட்டதா? வாட்ஸப்பில்  புதிய தகவல் என்ன? ட்விட்டரில் போடப்பட்டிருக்கிற பின்னூட்டமென்ன? என்று பதட்டத்துடன் காத்திருப்பதும். வராத செய்தியை வந்திருப்பதாக கற்பனை செய்துகொண்டு திறந்து திறந்து பார்ப்பதும் ஒரு மன நோயாகவே கொள்ளப்படுகிறது. அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த தொழிநுட்ப யுகத்தில், புதிய நோய் அறிகுறியாக உருமாறியிருக்கிறது.

மதுபோதை பாவனையை நிறுத்த பல மருத்துவ நிலையங்களும், ஆலோசனை மையங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறோம். அதுபோலவே மேற்குல நாடுகளில் நோமோபோபியாவை ஒருவித நோயாக அடையாளம் கண்டு அதற்கு வைத்தியம் பார்க்கும் முறைமைகளும் மருத்துவ ஆலோசனை (Smartphone Addiction Therapy) வழங்கும் நிலையங்களும் (smartphone addiction treatment centers) கூட தோன்ற ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினரும், சிறுவர்களும் கூட இதன் பாதிப்புக்கு ஆளாகி வருவது பற்றி உலகமே பேசத் தொடங்கியிருக்கிறது.

குழந்தைகள் அழுதால் கூட தாலாட்டுப் பாடி அழுகையை நிறுத்தும் வழி மாறி, இப்போது செல்போனை கொடுத்து சமாதானப்படுத்தும் உலகத்தை காண்கிறோம்.

பிள்ளைகளுக்கு எந்த வயதில் செல்போன்களை வழங்கவேண்டும், ஒரு நாளைக்கு எந்தளவு நேரம் பயன்படுத்த அனுமதி வழங்கலாம்,  அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள், அதிகாரங்கள் என்பன பற்றியெல்லாம் இப்போது நிறைய பேசப்படுகின்றன.

முன்னர் எல்லாம் பஸ்களுக்கு காத்திருக்கும் நேரங்களில், அல்லது பயணங்களின் போதும் சூழலில் நிகழ்பவற்றை ஊன்றி கவனித்தோம். சக மனிதர்களின் முகங்களை வாசித்தோம். அவர்களை அறிய முற்பட்டோம். அவர்களின் தோற்றத்தை, உடைகளை, அவர்களின் உணர்வுகளை கவனித்தோம். சக பயணியுடன் கதைத்தோம். இப்போது அருகில் என்ன நிகழ்கிறது என்பதை சற்றும் பொருட்படுத்தாது தலையைக் குனிந்து செல்போனின் மூழ்கியிருக்கிறோம். மனித உறவுகள் அற்றுப் போய் இயந்திரங்களுடன் தொடர்பாடுவதோடு தம்மைக் மட்டுபடுத்திக் கொள்ளும் உலகம் உருவாகி வருகிறது.

வெளி உலகத்துடன் மாத்திரமல்ல தமது வீடுகளில் சொந்த உறவுகளுடனும் தான். சற்று நேரம் செல்போன் இல்லேயேல் பதட்டம், தவிப்பு, அமைதியின்மை, மன உளைச்சல், ஆத்திரம் - மூத்திரம் எல்லாமே வந்து தொலைகிறது. 

கணக்குகளை எல்லாம் நாம் கற்ற வாய்ப்பாடுகள்மற்றும் சூத்திரங்களுக்கு ஊடாக கணித்துச் சொல்லும் வழக்கம் கால்குலேட்டரின் ஆக்கிரமிப்புடன் எப்படி சுருங்கியதோ அது போல கூகிளின் ஏகபோகம் ஆக்கிரமித்தவுடன் ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவம் வளர்ந்துள்ளது. மூளையில் எதையும் தக்கவைத்துக் கொள்ளவோ, சேமிக்கவோ சிரமப்படத் தேவையில்லை என்கிற மனோபாவமும் வளர்ந்துவிட்டுள்ளது.

இது ஏற்படுத்தும் உளப் பிரச்சினைக்கு அப்பால் கண் அழற்சி, கண் சோர்வு, கண் மங்குதல், கண் நோவுடன் சேர்த்து தலை வலியும் ஏற்படுவதாக அடையாளம் காட்டப்படுகிறது. கூடவே கழுத்து குனிவின் காரணமாக ஏற்படும் வருத்தத்தை “எழுத்துக்கழுத்து” (text neck) என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறது மருத்துவ உலகம். இதை விட மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் வலி, எலும்பு மூட்டு நோ, இரத்த ஓட்டச் சிக்கல் (bloodstream), இருதய மற்றும் மூச்சுத் துவாரங்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகுவதாக அடையாளம் கண்டுள்ளனர். நோமோபோபியாவின் விளைவாக ஆண்களுக்கு விந்துற்பத்தி, விந்து வீரியம் கூட பலவீனப்படுகிறது என்கின்றனர்.


நோமோபோபியா பற்றி இன்று ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவர்கள் அதனை தேடிப்பாருங்கள், எத்தனை பெரிய ஆபத்துக்குள் தள்ளப்பட்டிக்கிறோம் என்பதை நம்மால் அறிய முடியும்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 53% வீதத்தினர் நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மாத்திரம் 66வீதத்தினர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. பாதிக்கப்பட்டிருப்போரில் அதிகமானோர் இளம் பெண்கள்.

நோமோபோபியா என்கிற இந்த உயிர்க்கொல்லியிலிருந்து உலகைக் காக்கும் புதிய சிந்தனையின் அவசியம் அதி அவசியமாக – அவசரமாக உணரப்படும் இந்த சூழலை விளங்கி புதிய உத்திகளுடன் நம்மையும் நம்மை சூழ உள்ளவர்களையும் காப்போம்.

இலங்கையின் சனத்தொகையில்..
  • 32% இணைய பயனர்கள்.
  • 6 மில்லியன் சமூக ஊடக பயனர்கள் செயலில் உள்ளனர்.
  • 27.38 மில்லியன் கைத்தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன.
  • 20% கைத்தொலைபேசி இணைய பயனர்கள்.
  • இணைய பயனர்களில் 96% முகநூல் பாவனையாளர்கள் (2018 பெப்ரவரி)
  • 6 மில்லியனுக்கும் மேற்பட்ட சமூக ஊடக பயனர்கள், 29% சமூக ஊடக செயலில் பயனர்களாக உள்ளனர்.
  • மொபைல்கள் மூலம் சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் 5.5 மில்லியன் மக்களில், 26% தினசரி செயலில் ஈடுபடுகின்றன.
  • 6 மில்லியன் சமூக ஊடக பயனர்களில், 92% கைத்தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றனர்.
  • முகநூல் பயனர்களில் 68% ஆண்கள்
  • முகநூல் பயனர்களில் 32% பெண்கள்

நன்றி - அரங்கம்


மலையக மண்ணின் "காலா" யார்? - சி.சி.என்


காலா திரைப்படத்திற்கும் மலையக மக்களுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் புருவம் உயர்த்தக்கூடும். எனினும், அத்திரைப்படத்தின் கரு அல்லது பேசுபொருளோடு இச்சமூகம் சம்பந்தப்பட்டிருப்பதால் அது பற்றி பேச விழைந்தேன். குறித்தத் திரைப்படம் நிலம் பற்றிய உரிமையை உரத்துக்கூறுகிறது. 

நகரத்தை மையமாகக்கொண்டு அதன் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வரும் புறநகர் ஏழை மக்களுக்கு என்றுமே நில உரிமை பற்றிய அச்சம் இருக்கும். நகர அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கும் போதெல்லாம் எப்போது தமது நிலம் பறிபோகும் என்ற பதற்றம் இந்த புறநகர் ஏழை மக்களுக்கு இருக்கும்.காரணம் அந்நிலங்கள் அவர்களுக்கு சொந்தமானதாக இருப்பதில்லை. 

எனினும், மலையக பெருந்தோட்டங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அமைந்துள்ள நகரங்களின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தொழிலாளர்களின் கைகளிலேயே உள்ளன எனலாம். ஆகையால் தான் அவற்றைப் பெருந்தோட்ட நகரங்கள் என்கிறோம். பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்கள் தமது அன்றாட தேவைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய நகரங்களை நோக்கி வருகின்றனர். குறித்த நகர வர்த்தகமும் அவர்களை நம்பியே உள்ளது. ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நகர வர்த்தகர்கள் இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேசியதில்லை. இதில் என்ன வேதனையான விடயம் என்றால், குறித்த சமூகத்திலிருந்து வந்த பெருந்தொகையானோர் இன்று நகர மத்தியில் செல்வாக்கோடு இருக்கின்றனர். 

அவர்களும் தொழிலாளர் சமூகத்தைப்பற்றி வாய் திறப்பதில்லை. எல்லாவகையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு தமது இருப்பு குறித்த அச்சம் அண்மைக்காலமாக நிலவி வருகின்றது. உரிய வேதனம் இன்றி தேயிலை தோட்டங்களிலிருந்து இவர்கள் வெளியேறி வரும் நிலையில் தேயிலை மலைகள் காடுகளாகி வருகின்றன. இந்நிலையில் இத்துறையில் நட்டத்தை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் மற்றும் கம்பனிகள் தோட்டக்காணிகளை வெளியாருக்கு பகிர்ந்து கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக அண்மைக்காலமாக கதைகள் அடிபடுகின்றன. 

இப்படி நடக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கே காணிகளை பிரித்துக்கொடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மலையகத்தைப்பொறுத்தவரை மண் மீட்பு போராட்டத்திற்காக தொழிலாளர்கள் உயிரையும் தியாகம் செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்போது போராட்ட உணர்வு மங்கிப் போன நிலையில் நிலத்திற்காக எவர் போராடுவார் என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப்போராடியே களைத்துப்போய் உள்ளனர். இவர்களின் நில உரிமைப் பற்றி பேசுவதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது. 

ஆறு தலைமுறைகளாக ஒரே மண்ணிற்கு தமது உழைப்பை தந்து வரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு அவர்களது பெயரில் ஒரு அடி நிலம் தானும் சொந்தமில்லாது இருப்பது எவ்வளவு அநீதி? இதே மண்ணில் இவர்களை அமர்த்தி அவர்களிடம் உழைப்பை உறிஞ்சும் அரசாங்கத்திற்கும் , மறுபக்கம் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வாக்குகளையும் பறித்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடுகளை காண முடியாதுள்ளது. பிரித்தானியர்களால் அழைத்து வரப்பட்டு பெருந்தோட்டத்தொழிலில் இவர்கள் எவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டார்களோ, என்ன சூழ்நிலை காணப்பட்டதோ அதே நிலைமை இரு சகாப்தங்களை நெருங்கும் தறுவாயிலும் தொடர்கிறது என்றால் இதை ஜீரணிக்க முடியுமா? 1972 இல் பெருந்தோட்டங்கள் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பின்னர் தற்போது கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னரும் இந்தத்தொழிலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர்கள் (Captive labours) என்ற நிலைமையிலேயே தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். 

அரசாங்கத்தால் பெருந்தோட்ட நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் எவ்வகையிலும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு நிலங்களை வழங்கப்போவதில்லை.

அதேவேளை, இது அவர்களின் நிலஉரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு நிலங்களைப் பிரித்துக்கொடுக்க அரசாங்கமும் சம்மதிக்காது.
ஏனெனில், அது தேயிலைத்தொழில் துறையைப் பாதிக்கும் விடயம் என்ற அச்சமும் காரணம்.வீட்டுத்திட்டங்களுக்காக குறிப்பிட்ட சில காணிகளை தற்போது வழங்கினாலும் அது மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆக இந்த மக்களுக்காக நில உரிமையைப் பெற்றுக்கொடுக்க எந்தக் ‘காலா’ வும் தற்போதைக்கு வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.-

 நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 17/06/18

"நவீன சேரி": கொழும்பின் தொடர்மாடி வீடுகள் - என்.சரவணன்

“நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை”
“காலா” திரைப்படத்தின் தாரகச் சுலோகம் அது. காலா திரைப்படத்தைப் பார்வையிட்ட கொழும்பு வாழ் அடித்தட்டு மக்கள் (குறிப்பாக “சேரி” வாழ் மக்கள் மற்றும் அரசாங்க தொடர்மாடிகளில் வாழ்பவர்கள்) அந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் பல முகங்களில் தங்கள் முகங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள். அத்திரைப்படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் பல தமது பிரச்சினைகளும் தான் என்பதை அடையாளம் கண்டிருப்பார்கள்.

கொழும்பில் உள்ள சேரிகளில் பல தாராவியை விட மோசமான நிலையில் பல இடங்கள் உள்ளன. இவர்கள் மொத்த கொழும்பு வாழ் மக்களில் 51% வீதத்தினர் என்கிறார் துஷார சமரதுங்க (Thushara Samaratunga - High Density High Rise Vertical Living for Low Income People in Colombo, Sri Lanka: Learning from Pruitt-Igoe) தனது ஆய்வில். பெரும்பாலான இம்மக்கள் தாம் வாழும் இடங்களை அப்படிப்பட்ட “சேரி” என்று இனங்கான்பதில்லை. தாம் வாழும் இடங்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதும் இல்லை. பெரும்பாலான தமது வாழ்விடங்களை “தோட்டம்” என்று அழைத்துக் கொள்வார்கள். வசதி குறைந்த இடத்தில்,  மக்கள் திரள் நெரிசலாக வாழும் இடங்களைத் தான் சேரி என்று அழைக்கிறார்கள். அதன் படி கொழும்பில் அப்படி பல வாழ்விடங்களை அடையாளம் காணலாம்.

அடித்தட்டு தொழிலாளர்களும், மத்தியதர வர்க்கத்துக்கு கீழே உள்ளவர்களும் சாதாரண மத்திய வர்க்கத்தினரும், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலையினரும் வாழும் இடங்கள் இவை.

“நகராக்கம்” நிகழ, நிகழ மக்கள் செறிவு அதிகரிக்கப்படுவதும், அவர்களுக்கான தேவைகளும், வளங்களும் கூடவே அதிகரிக்கப்படுவதற்கான போக்கு நிகழவே செய்யும். இதை உலகெங்கும் காணலாம்.

பொதுவாக பெருமளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நகரங்களில் சனத்தொகை பெருக்க விகிதாசாரமும் அதிகம். அதாவது ஏனைய பிரதேசங்களை விட இயல்பாக அங்கே சனத்தொகை பெருக்கவீதம் அதிகமாகவே இருக்கும்.

கொழும்பைப் பொறுத்தளவில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பை நோக்கி படையெடுத்து  பெருகுவது என்பது எங்கும் போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது. அடுத்ததாக யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் பெருவாரியாக கொழும்பை நோக்கியே கடந்த தசாப்தங்களில் பெருகினார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமது பிரதேசங்களுக்கு திரும்பியவர்கள் குறைவே. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்புவாசியாகவே ஆனார்கள்.ஆக கொழும்பின் சனநெரிசல் என்பதை இந்தப் பின்னணியுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக குடியேறி நிரந்தவாசியாக ஆனவர்களில் பெரும்பாலானோர் இந்த சேரி வாழ்க்கைக்குள் அகப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோனோரின் பொருளாதார காரணிகள் அந்த இடத்துக்கு அவர்களைத் தள்ளவில்லை. ஆனால் சேரி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்களும் கணிசமானவர்களும் உளர்.

கொழும்பு என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரம். அந்த வகையில்  பல்வேறு தொழில்துறையை நிரப்பும் பெருமளவு தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கே தான் வாழ்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு அதிகமாக ஆளாகும் அவர்களின் வாழ்விடங்கள் இந்த சேரிகளும், அதை அண்டிய பகுதிகளுமாகத் தான் இருக்கமுடியும். அப்படித் தான் இருக்கிறது.

1978 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையின் வரவோடு இந்த வர்த்தகத் தலைநகருக்குள் பல்தேசிய கம்பனிகளினதும், கார்ப்பரேட் நிருவனங்களினதும் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அந்நிய முதலீடுகளாலும் தொழிற்துறை பெருக்கத்தாலும் நிலம் அதிகளவு தேவைப்பட்டன. அதன் விளைவு கொழும்பின் மையத்திலிருக்கும் முக்கிய சேரிகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டு தொடர்மாடிக் கட்டடங்களுக்குள் புகுத்தப்பட்டார்கள்.

இலங்கையின் 1953ஆம் ஆண்டு முதன் முதலில் தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே படிப்படியாக வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 1978க்குப் பின்னர் தான் இதன் வேகம் அதிகரிக்கப்பட்டது. இதெற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையும் நிறுவப்பட்டது. ஐ.நா சபையும் இந்தத் திட்டத்துக்கு உதவியளித்தது. 1982ஆம் ஆண்டை “வீடற்றவர்களுக்கு வீடு” என்று ஐ.நா பிரகடனப்படுத்தியது. ஐ.நா சபையின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் அப்போது கட்டப்பட்டன. வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரேமதாசவின் திட்டத்தில் 1984-1988 காலப்பகுதிக்குள் மாத்திரம் “பத்து லட்சம் வீடுகள்” திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.  பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்த 1989-1993 காலப்பகுதிக்குள் 1.5 மில்லியன் வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டங்களில் மக்கள் நலன் நிச்சயம் இருந்தாலும் காலப்போக்கில் பெறுமதியான நிலங்களை அரசு கையகப்படுத்தும் திட்டத்தின் அங்கமாக பரிமாற்றப்பட்டது. இதன் விளைவாக கொழும்பு சேரிப்புறங்களில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பெறுமதி உயர்ந்திருந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தைக் கொண்டு அகற்றி வீதியில் விட்டார்கள். அவர்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட வீடுகள் அவர்களின் வாழ்ந்த நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பெறுமதியானவை அல்ல.

நிலத்தோடு வாழ்ந்த மக்கள் வசதிகள் குறைவாக இருந்தாலும் அந்த சிறு குடில்களில் மாடிகளைக் கட்டி பல குடும்பங்களும் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் நிலங்களைப் பறித்த அரசு அவர்களை வீடமைப்புத் திட்டம் என்கிற பேரில் சிறு கூடுகளுக்குள் அடைத்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனியார் கொன்ராக்டர்களும், இடைத்தரகர்க்களுமாக நிதியின் பெரும்பகுதியை ஊழல்களால் பிரித்தெடுத்ததன் பின்னர் எஞ்சிய பணத்தைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இன்றைய தொடர்மாடிகள் தரத்தால் மிகவும் மோசமானவை. வீடுகள் வழங்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே அவற்றின் பராமரிப்புகள் கூட மோசமாக ஆகிவிடுகின்றன. வீடமைப்பு அதிகார சபையும், அமைச்சும், திணைக்களங்களும், உள்ளூராட்சி நிறுவனங்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பழியைப் போட்டு தப்பி விடுகின்றன.


இம்மக்களில் கணிசமானோர் தமது சொந்தத் தேவைகளை ஈடு செய்வதற்காகவும் தொழிலுக்காகவும் முச்சக்கர வண்டிகளை வைத்திருப்பவர்கள். அவற்றை நிறுத்துவதற்கும் எந்த வசதிகளும் இல்லை. சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கு போதிய வசதிகள் கிடையாது. பாடசாலை முடிந்து திரும்பும் சிறுவர்கள் வீடுகளுக்குள் அடைவதைத் தவிர அவர்களுக்கு தெரிவில்லை. வளர்ந்தவர்கள், வயோதிபர்கள் ஒன்று கூடுவதற்கான வசதிகளும் கூட உரிய முறையில் இல்லை. ஏன் வீட்டில் துவைக்கின்ற உடைகளைக் காயவைக்கக் கூட வசதிகள் கிடையாது. புதிய சீமெந்து தொடர்மாடி வீடு கச்சிதமான தோற்றத்துடன் காட்சியளித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சிறு வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் கிடைத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வசதி குறைந்தாலும் - இட வசதி அதிகமுள்ள இடங்களுக்கு மீண்டும் வாடகைக்குச் சென்றுவிட்டதையும் அவதானிக்க முடியும்.

இம்மக்கள் இருந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி மீண்டும் வேற்று முதலீட்டாளர்களுக்கு விற்றுவிடவோ, வாடகைக்கு விடவோ செய்கின்றனர். கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் இலவசமாக வழங்கப்படவில்லை மீண்டும் அவர்களிடம் பணம் அறவிடப்படுகிறது. நிலம் மக்களின் கைகளில் இருந்தவரைக்கும் வானமே எல்லை என்று அவர்களால் மேலே பெருப்பித்து வாழ முடிந்தது. ஆனால் இப்போது நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இனி அது கிடைக்கப்போவதுமில்லை.

கொழும்பின் தொடர்மாடிக் காட்டிடங்களுக்குப் போய்ப் பார்த்தால் தெரியும் அவை நவீன சேரிகளாக எப்படி உருவெடுத்திருக்கின்றன என்பது.

அவர்களின் வாழ்க்கையை தரமுயர்த்துவதாக சொல்லிக்கொண்டு தொடர்மாடி வீடுகளை கட்டிகொடுக்கும் அரசு குறைந்தபட்சம் அங்குள்ள  அவர்களின் சுற்றுச் சூழலையும், சுற்றாடல், உட்கட்டமைப்பு விடயத்தில் கூட உரிய காட்டியதாகத் தெரியவில்லை. கட்டிட மலைகளுக்குள் அவர்களைத் திணித்துவிட்டால் மாத்திரம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போவதில்லை. அவர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளும் சரி செய்யப்படவேண்டும்.

கொழும்பில் இன்னும் பல நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்த தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படவேண்டும். ஏற்கெனவே தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பலமான அமைப்பு இதுவரை இல்லை.

நிலம் நமதுரிமை.

நன்றி - அரங்கம்


இயற்கை அனர்த்த காலத்தில் கண்டு கொள்ளப்படாத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் - சி.சி.என்


இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மலையகப்பிரதேசங்களை பாதித்தது மட்டுமல்லாது, இப்பிரதேச மக்களின் தற்கால வாழ்வியலை வெளிச்சம் போட்டுக்காட்டியது எனலாம். குறிப்பாக, இம்மக்களின் குடியிருப்புகள் அவர்கள் வாழ்ந்துவரும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் எந்தளவிற்கு இன்னும் சீர்செய்யப்படாது இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தின. இது இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருபவர்களுக்கு தர்மசங்கடங்களைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஏனென்றால், இந்த மக்கள் இன்னமும் நூறு வருட லயன் குடியிருப்புகளிலும், உட்கட்டமைப்புகள் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்படும் இடங்களிலுமே வாழ்ந்து வருவதை அறிந்தும் தெரிந்தும் இவர்கள் மௌனம் காத்து வருவதை எந்த மக்கள் தான் பொறுத்துக்கொள்வர்?

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காணச்சென்ற பிரதிநிதிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு மட்டும் திரும்பி விட்டனர். வேறு சிலரோ தாம் அவ்விடம் சென்றால் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டி வரும் என செல்வதை தவிர்த்துக்கொண்டனர். இதே வேளை இம்மக்களின் உழைப்பை பெற்று வரும் தோட்ட நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்க முன்வரவில்லை. சேதங்களை பார்வையிட்டதோடு சரி. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புக்களையே திருத்திக்கொடுக்காத தோட்ட நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் இது வழமையாக ஏற்படும் சம்பவம் தானே என மௌனம் காக்கின்றன.

இப்படியும் ஒரு வாழ்க்கை

நுவரெலியா மாவட்டத்தின் பல பெருந்தோட்டப்பகுதிகள் கடந்த வாரமளவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டன. கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல பல தொழிலாளர் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயின இவை 50 வருடங்களுக்கும் பழைமையானவை. பல கூரைத்தகரங்கள் பல வருடகாலமாக மாற்றப்படாதிருப்பதால் அதன் மீது கறுப்பு இறப்பர் சீட்கள் மற்றும் நகராதபடி கற்களை அடுக்கி வைத்து மழையினால் பாதிக்கப்படாது தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர். பல குடியிருப்புகள் அவ்வாறு இருந்தாலும் அக்கரபத்தனை ஊட்டுவள்ளி பச்சை பங்களா தோட்டப்பிரிவில் உள்ள சில குடியிருப்புகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.

இவர்கள் வாழும் வீட்டுக்கூரைகளுக்கு மேல் தகரத்திற்கு பதிலாக பொலித்தீன்களும் கற்களுமே காணப்படுகின்றன.இது குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் 500 கிராம் கறுப்பு பொலித்தீன் மட்டுமே தரப்படுவதாக இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த கூரைத்தகரங்களை மாற்றிக்கொள்ள கூடிய அளவுக்கு தங்களுக்கு வருமானம் இல்லாததால் வேறு வழியின்றி பழுதடைந்த கூரைகளின் வழியே தண்ணீர் குடியிருப்புக்குள் வராதிருக்க மானா புற்களை பரப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த குடியிருப்பின் மற்றுமொரு தொகுதியோ பல தசாப்தங்களாக மாற்றப்படாதிருக்கும் தகரங்களைக்கொண்டிருக்கின்றது. இவற்றை மாற்றும்படி கேட்டால் தோட்ட நிர்வாகமோ கறுப்பு பொலித்தீனை தருகிறது. அரசியல் பிரமுகர்களும் எட்டிப்பார்ப்பதில்லை. அப்படியானால் இந்த மக்களின் நிலை தான் என்ன?

வீட்டுத்திட்டங்களின் பயனாளிகள் யார்?

இந்திய அரசாங்கத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெருந்தோட்டப்பகுதி வீட்டுத்திட்டங்கள் யாருக்கு வழங்கப்படுகின்றன என்ற கேள்வி இங்கு எழுகிறது. மிக மோசமான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லையா? இவர்கள் இந்தத்திட்டத்திற்கு அடையாளம் காணப்படவில்லையா ? இதற்கு பதில் கூறத்தக்கவர்கள் யார்? ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் தொழிற்சங்க பாரபட்சங்கள் காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியே காலத்தை கடத்துவது தான் அரசியல் பிரமுகர்களின் பணியா?

அக்கறையின்மை

இதே வேளை பல தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள ஆபத்தான மரங்களைப்பற்றியும் தோட்ட நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக தொழிலாளர் குடியிருப்புகளின் மீது பாரிய மரங்கள் சரிந்து விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்படியான சம்பவங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம். ஆனால் மழைக்காலம் ஆரம்பித்தவுடன் குறித்த ஆபத்தான பகுதியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்தல் அல்லது அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தல் போன்ற விடயங்களில் தோட்ட நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை. அது குறித்து நிர்வாகங்களுக்கு பிரதிநிதிகளும் எடுத்துக்கூறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் பருவ காலத்தில் மழை பெய்கிறது ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் பாதிப்பு இருக்கக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டும் கூட எவருக்கும் அக்கறையில்லாத நிலைமைகளே காணப்படுகின்றன.

சேதமடையும் பாலங்கள்

தோட்டக்குடியிருப்புகளை கடக்கும் பாலங்கள் குறித்து எவருமே அக்கறை கொள்வதில்லை. ஏனென்றால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலங்கள் யாருக்கு சொந்தம் என்ற குழப்பம் இன்றும் பலருக்கு நிலவுகிறது. தோட்ட நிர்வாகமா அல்லது உள்ளூராட்சி சபைகளா இவற்றை பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தடவையும் கடும் மழை பெய்யும் போது மழை வெள்ளம் குறித்த பாலங்களை சேதமாக்கி விட்டுச்செல்கின்றன. பிறகு அவை தற்காலிகமாக மனித செயற்பாடுகளுக்கு சீர் செய்யப்படுகின்றன.

அவற்றை நிரந்தரமாக அமைக்கவோ அதற்கு நிதி ஒதுக்கவோ எவரும் முன்வருவதில்லை. கடந்த வாரம் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இப்படியானதொரு பாலம் சேதமுற்றது. வட்டவளை லோனக் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு அடித்துச்செல்லப்பட்டது.

இப்பாலத்தின் வழியே பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர் மிகவும் பாதிப்பை எதிர்நோக்கினர். லொறி மூலம் பலர் இந்த ஆற்றைக் கடந்தனர். மிக ஆபத்தான நிலையிலேயே வாகனங்களும் ஆற்றைக் கடந்தன என்பது முக்கிய விடயம்.

மண் சரிவு அபாயம்

 மண் சரிவு அபாயம் இருக்கக்கூடிய பல தோட்டப்பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டும் அபாய எச்சரிக்கை வழங்கினாலும் குறித்த பிரதேசத்தின் குடியிருப்புகளில் வாழ்ந்து வருபவர்கள் தமக்கு வேறு பாதுகாப்பான இடத்தை எவரும் பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் உயிரையும் துச்சமெனக் கருதி ஆபத்தான குடியிருப்புகளில் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் இவர்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. அதே வேளை இவர்களிடம் வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் பிரதிநிதிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனரே ஒழிய இவ்வாறான காலகட்டத்தில் இவர்களின் துன்பங்களில் பங்கு கொள்வதில்லை. இந்நிலையில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே தோட்டத்தொழிலாளர்கள் உள்ளனர். இது மட்டுமன்றி இந்த நவீன காலத்திலும் இம்மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டும் இச்சமூகத்தை இன்னும் லயன் குடியிருப்புகளில் வாழ வைத்துக்கொண்டும் வேறு அடிப்படை வசதிகளைக் கூடப் பெற்றுக் கொடுக்காது அவர்களின் மத்தியிலேயே வாழ்ந்து வரும் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் இந்நிலை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டும்.

நன்றி - வீரகேசரி

மலையகமும் மறுவாழ்வும் - மல்லியப்பு சந்தி திலகர்



ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இந்தியா தமிழகம் நோக்கி தாயகம் திரும்பியவராக சென்ற எமது மலையக உறவுகள் இன்று உணர்வோடு தாங்கள் பிறந்து வளர்ந்த மண் நோக்கி திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமுறைகள் கடந்து மீளபுதுப்பிக்கப்படும் இந்த உறவு உணர்வு ரீதியாக மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுகிறது .

கேகாலை மாவட்டத்தின் முக்கியமானதொரு  தமிழ் பாடசாலையான கந்தலோயா தமிழ் வித்தியாலயத்துக்கு இல்ல விளையாட்டுப்போட்டிகளின் போது விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே மாணவர்கள் தமது இல்லங்களை மலையக தொழிற்சங்க, அரசியல், இலக்கிய, ஊடக, நாடக முன்னோடிகளான கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய பெயர்களை தமது இல்லங்களுக்கு இட்டிருந்தனர்கள்.  

மாணவர்கள் ஓர் இல்லத்தை மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட "ஆதிலட்சுமி கப்பல்" போன்றும், மற்றைய இல்லத்தை மலையக மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்ப்பட்ட "ஒப்பாரிக் கோச்சி" போன்றும் அமைத்திருந்தனர். அந்த இரண்டையும் அன்று உணர்வு பூர்வமாக தரிசித்தேன். அந்த கற்பனைக் கப்பலின் மேல் தளத்திற்கும், அந்த ரயில் பெட்டியிலும் ஏறி இறங்கினேன். என் முன்னைவர்கள் அனுபவித்த அவல உணர்வை அப்படியே அனுபவிக்க கிடைத்த நாள் அது. 

விளையாட்டுப்போட்டிக்கு இல்லத்தை அலங்கரித்ததோடு நின்று விடாமல் " ஆதிலட்சுமி " மூழ்கும் காட்சியையும் "ஒப்பாரிக் கோச்சியில்" மக்கள் அழுது புலம்பும் காட்சியையும் குறுந்திரைப்படமாக்கி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் கந்தலோயா பாடசாலை சமூகத்தினர். 

அன்று ஒப்பாரிக்கோச்சியில் அழுது புலம்பி சென்ற உறவுகள் இன்று தமிழகத்தில் உயர் தொழில் புரிபவர்களாக, ஓய்வு பெற்றவர்களாக தமது மண்ணையும் மக்களையும் பார்க்க வருகை தந்திருந்தனர்.  இரத்தினபுரியில் இருந்து சென்ற தமிழகன் எனும் ராமச்சந்திரன் ஒரு சட்டத்தரணி, ஆகரப்பத்தனையில் இருந்து சென்ற செவந்தி நீதிமன்ற நிர்வாக அதிகாரி, வரக்காப்பொலயில் இருந்து தம்பிராஜா கிராம நிர்வாக அதிகாரி. 

தம்பிராஜா தனது மாவட்ட பாடசாலைக்கு மலையக பாரம்பரிய இசைக்கருவிகளை அங்கிருந்து அன்பளிப்பாகக் கொண்டுவந்திருந்தார். அவர்கள், என்னையும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர் அதன் நிமித்தம்  மூன்றாவது தடவையாகவும் கந்தலோயா போனேன்.

தமிழக உறவுகளுடன் பாடசாலை மண்டபத்தை அடைந்தபோது அங்கே ஆதிலட்சுமி மூழ்கும் காட்சியும், ஒப்பாரிக் கோச்சியில் உறவுகளைப் பிரியும் ஓலமும் கண்ணீரைக் கசியச் செய்தது. கடைசிக் காட்சியில் ஒரு சிறுவனைக் கட்டியணைத்து அழுது ஓர் ஆண்மகன் விடைபெறும் காட்சி. அதில் எங்கே இருக்கிறது கற்பனை.? 80களில் எனது குருநாதரும் சிற்றப்பாவுமான மெய்யன் மேகராஜா சிறுவனான என்னைக் கட்டி அணைத்து விடைபெற்ற உண்மைக் காட்சியல்லவா அது. இந்த சித்தப்பாவைத் தேடி நான் பெரியவனாகி தமிழ் நாட்டில் அலைந்த கதையை "மல்லியப்பு சந்தியில் " பதிவு செய்துள்ளேன். ( ஐயா மேகராஜா வின் அன்றைய உணர்வுப்பதிவுதான் மல்லியப்பு சந்திக்கு முன்னுரை). 

இப்போது தமது உறவுகளைத் தேடி இங்கே வந்துள்ள உறவுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். "குறும்படத்தில் ஒப்பாரிக் கோச்சிக்கு வெளியே பிளட்போரத்தில் நின்று கதறி அழுகிறார்களே  அது நாம். ஐய்யோ என கதறி அழுது கொண்டு கைகாட்டி போனார்களே அவர்கள் தான் இவர்கள் " என அறிமுகம் செய்தேன். அந்த மண்டபத்தின் ஒவ்வொரு கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்கியது. எனக்கு குரல் கரகரத்தது. 

மலர்மன்னன் தம்பிராஜா திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரிடம் இருந்து விலைக்கு வாங்கிவந்த "தப்பு" முதலான பாரம்பரிய இசைக்கருவிகளை அன்பளிப்பு செய்தார். தனது கட்டுரைகளுடன் எமது கட்டுரைகளும் அடங்கியதாக வழக்கறிஞர் தமிழகன் தொகுத்தளித்திருக்கும் நூலான "மலையகமும் மறுவாழ்வும்" தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்டாலும் இலங்கையிலேயே முதல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என தமிழகன் எண்ணியிருந்தார்.

அதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 13-05-2018 விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும்,  எதிர்பாராதவிதமாக அன்று கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவரிடம் இருந்து பாடசாலை அதிபர் கருணாகரன் பாடசாலைக்கான பிரதியைப் பெற்றுக் கொண்டார். ஒப்பாரிக் கோச்சியில் சென்றவர்களை காட்சிப்படிமாக்கிய கந்தலோயா பாடசாலையில் இந்த நிகழ்வு அரங்கேற்றம் கண்டது உணர்வுபூர்மானது.

இந்த நூலின் தலைப்பு பற்றி வீரகேசரி "சங்கமம்" இலக்கிய இணைப்பிதழுக்காக நடைபெற்று இருந்த உரையாடலில் தொகுப்பாசிரியர் தமிழகன் அளித்திருந்த பதில் இங்கே பதிவு செய்யப்படவேண்டிது. 

(உரையாடல் ஆரம்பம் )

ஜீவா சதாசிவம் : மறுவாழ்வு எனும் போது ஒருவாழ்வு இழக்கப்பட்டிப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றதே..

வழக்கறிஞர் தமிழகன் : நிச்சயமாக. மலையக மக்கள் எல்லா காலப்பகுதியிலும் அவர்களது வாழ்வை இழந்து மறுவாழ்வைத்தேடிக் கொண்டிருப்பவர்களாகவே நான் உணர்கிறேன். 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக கிராமப்புற வாழ்வை  இழந்துதான் அவர்கள் இலங்கையில்  வெள்ளைக்காரர்களால்  குடியமர்த்தப்பட்டார்கள்.   அப்போது  அவர்கள்  தமிழகக் கிராமங்களில்  வாழ்ந்த வாழ்ககையை  இழந்து  இங்கு மறுவாழ்வைத் தேடினார்கள். 

இங்கு நூறு வருடங்கள் ஓர் அடிமை வாழ்வை எதிர்கொண்ட அந்த மக்கள் வாக்குரிமை பெற்று இலங்கை நாட்டின் பிரஜைகளாக வந்ததன் பின்னர் சுதந்திர இலங்கையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக மறுவாழ்வு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 

இந்த கட்டத்தில் 1964 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய அரசுகள் செய்துகொண்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்களை இருகூறுகளாக்கியது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழகம் சென்ற மக்கள் அங்கு மறுவாழ்வு தேட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

இவ்வாறு வாழ்வதும் பின்னர் மறுவாழ்வு தேடுவதுமாக சுமார் இருநூறு வருடகாலமாக வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வியலை விளக்குவதாகவே இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இரா.சடகோபன், இலங்கையில் சட்டத்தரணியாக, பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக, வரலாற்று விடயங்களைக் கொண்ட புனைவுக்கட் டுரைகளை எழுதுபவராக அறியப்படுகின்றார். எனவே அவரது பார்வையில் மலையக மக்களின் வருகை, வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பை வெளிப்படுத்தும் கட்டுரையை சேர்த்துள்ளேன். உண்மையில் இந்த நூலுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது. எம்.வாமதேவன் மலையகத் தமிழ் சமூகத்தில் பொருளாதார திட்டமிடல் துறையில் கல்விகற்று இலங்கை அரச நிர்வாக துறையில் உயர் பதவிகளை வகித்து வருபவர். 

கடந்த முறை எனது பயணத்தின்போது அவரது ‘மலையகம் - சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் நூல் கிடைக்கப்பெற்றது. அந்த நூலில் இருந்து எனது தொகுப்புக்கு பொருத்தமான கட்டுரை ஒன்றை தெரிவு செய்து இணைத்துள்ளேன். அதேபோல, அ.லோரன்ஸ், இலங்கை மலையக அரசியல் செயற்பாட்டாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை.  அவரது மலையகம்: 

சமகால அரசியல், அரசியல் தீர்வு என்ற நூலில் இருந்து மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பான பக்கத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை தெரிவு செய்து இணைத்துள்ளேன். இவற்றுக்கு மேலதிகமாக அரசியல், இலக்கியம், பத்திரிகை, அரசியல் ஆய்வு எனும் பன்முகத்தளங்களில் இயங்கும் மல்லியப்புசந்தி திலகரின் சிறப்புக்கட்டுரை இந்த நூலில்தான் முதல் அறிமுகம் காணுகின்றது. 

அவரது எந்த உரை மலையகம் தொடர்பான, இலங்கையில் தமிழர்கள் தொடர்பான எனது பார்வையை மாற்றியமைத்ததோ அந்த உரையினைக்கட்டுரையாக்கித் தருமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு  இணங்க எழுதித்தந்தார். ஒரு விஞ்ஞான பூர்வ ஆய்வுக்கட்டுரையாக அதனை நான் பார்க்கிறேன். 
( உரையாடல் முடிவு) 

தமிழகன் கூறும் மலையகத்தின் மறுவாழ்வு நுணுக்கமான பார்வை விரிவாக ஆராயப்பட வேண்டியது. அவர் கூறும்  எனது ஆய்வு கட்டுரை 2011 அளவில்  தமிழ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக் குழுவினர் என்னை "மல்லியப்புசந்தி" ஊடாக அறிந்திருந்தனர்.
அத்தகைய அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தவர் மலையகத் தமிழராக இந்திய (சிவகாசி) அகதிமுகாமில் வாழ்ந்து மறைந்த அந்தோனி ஐயா. அவர் மலையக மக்களின் இலங்கைக் குடியுரிமை பெறுதலின் இறுதிப்போராளி. அது பற்றியும் அவர் பற்றியும் ஏற்கனவே சில இடங்களில் பதிவு செய்திருந்தாலும் "மலைகள் பேசும்" இந்தத் தொடரில் பொருத்தமான இடம் ஒன்றில் பதிவு செய்கிறேன். ஏனெனில் அந்தோனி ஓர் அறியப்படாத ஆளுமை. அறியப்படவேண்டிய ஆளுமை. 

இவர் முயற்சியால்தான் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையின் எஞ்சியிருந்த பிரச்சினை 2009 ல் தீர்க்கப்பட்டது. இலங்கைத் தமிழரின் 40 ஆண்டுகால ஆயுதப் போரும், மலையகத் தமிழரின் இலங்கைக்  குடியுரிமைக்கான 60 ஆண்டுகால அகிம்சைப் போரும் முடிவுக்கு வந்த ஆண்டு 2009. 

இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்வை இழப்பதும் தேடுவதுமான மலையகமும் மறுவாழ்வும் பற்றி அறிந்து கொள்ள அந்த நூலில் அடங்கிய எனது "இலங்கை(யில்) தமிழர்கள்" எனும் கட்டுரை கூறும் விடயங்கள் இங்கே பேசப்பட வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன். மலைகளைப் பேசவிடுங்கள்.

நன்றி அரங்கம்


நிலவுடைமை சமூகமாவது எப்போது? - துரைசாமி நடராஜா


மலையக மக்களை நிலவுடைமைச் சமூகமாக மாற்றியமைக்கும் முனைப்புகள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன.மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் இது குறித்த அழுத்தங்களை தொடர்ச்சியாகவே வழங்கி வருகின்றனர்.எனினும் இதன் சாதக விளைவுகள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. நாட்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும் இத்திட்டங்கள் எதுவும் மலையக மக்களுக்கு கை கொடுக்கவில்லை.இத்திட்டங்களில் இம்மக்கள் உள்வாங்கப்படாமை குறித்து பலரும் தமது விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அம்மக்களின் நிலவுடைமைக் கனவு நனவாக்கப்படவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளமையும் நோக்கத்தக்கதாக உள்ளது.

மலையக மக்களுக்கு இந்த நாட்டில் மிக நீண்டதொரு வரலாறு காணப்படுகின்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய,பிரான்ஸிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும், அந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடூரமாக சுரண்டப்பட்டதாகக் கலாநிதி க.அருணாசலம் தனது நூல் ஒன்றிலே தெளிவுபடுத்தி இருக்கின்றார். இவ்வாறாக தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக நீண்டகாலமாக வாழ நேர்ந்தது.பல இனத்தவர்களினதும் அலட்சியத்திற்கு உள்ளானவர்களாகவே இவர்கள் விளங்கினர். கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தையான்,தோட்டக்காட்டான் என்று பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதோடு இம்சிக்கவும் பட்டனர்.

உலகில் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகமாக இவர்கள் இருந்து வந்ததாக புத்திஜீவிகள் தமது நிலைப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். மலையக சமூகம் நாட்டின் ஏனைய சமூகத்தினரைப் பொறுத்தவரை ஒரு தாழ்த்தப்பட்ட கேலிக்குரிய சமூகமாகவே கணிக்கப்படுகிறது.உதாரணமாக மலையக சமூகம் வெறும் சோற்றுப்பிண்டங்கள், கல்வி அறிவற்ற சமூகம் இன்னும் கொஞ்சம் பச்சையாக சொல்லப்போனால் “தோட்டக்காட்டான்” இப்படி பல பட்டப்பெயர்களை எமது மலையக சமூகம் ஏனைய சமூகத்தின் கணிப்பின் மூலம் சூட்டிக்கொள்கிறது. இதற்குக் காரணம் இந்த மக்கள் மொழி ரீதியாக, இன ரீதியாக, கலை, கலாசார ரீதியாக சரித்திர பாரம்பரியங்களைக் கொண்டதோர் அறிவுள்ள ஆற்றல் உள்ள சமூகம் என்ற யதார்த்த ரீதியான உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ளாததேயாகும் என்று ஒரு மூத்த எழுத்தாளர் ஒரு சமயம் வலியுறுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.

வேரறுப்பு

மலையக சமூகத்தை வேரறுக்கும் முயற்சிகள் இன்று,நேற்று ஆரம்பமானவை அல்ல. இதனை ஒரு திட்டமிட்ட செயற்பாடாக நீண்ட காலமாகவே இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தெளிவான அட்டவணைகள் இனவாத சிந்தனையாளர்களிடம் காணப்பட்டன. இப்போதும் காணப்படுகின்றன. இதனடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாடு சுதந்திரமடைவதற்கு முன்னதாயினும் சரி அல்லது நாடு சுதந்திரமடைந்த பின்னராயினும் சரி மலையக மக்கள் மீதான நெருக்கீடுகளுக்கு குறைவில்லை என்றே கூறுதல் வேண்டும். இவர்களுக்கான பல வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டிருக்கின்றன. “தாம் இடும் பிச்சையைப் பெற்றுக்கொண்டு இவர்கள் மௌனமாக இருக்க வேண்டும். உரிமைக்காக குரல் எழுப்புதல் கூடாது” என்று பேரினவாதிகள் எண்ணம் கொண்டிருந்தனர். சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இம்மக்களைப் புறக்கணித்து செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

சமூக நிலை, கல்வி நிலை தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்களிலும் முடக்கி இம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. வீடமைப்பிலும் புறக்கணிப்பு நிலைமைகளே மேலோங்கின. வீடமைப்பு நடவடிக்கைகளில் கிராமத்தவர்கள் மீது காட்டிய ஆர்வத்தினை மலையக மக்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்து வருகின்றது. தேர்தல் கால வாக்குறுதிகளிலும் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் எமது மக்களை திருப்தியடையச் செய்த ஆட்சியாளர்கள் செயல் வடிவில் உருப்படியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. “யானைப்பசிக்கு சோளப்பொரி” என்பதன் அடிப்படையிலேயே காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. பின்தங்கிய நிலையில் உள்ள மலையக சமூகத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கோஷங்களும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு ஏறவில்லை. சிறுபான்மையினர் என்ற ரீதியில் இம்மக்கள் செல்லாக்காசாக இருந்தனர். பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட சம்பவம் இந்நிலைமைக்கு மேலும் வலுசேர்த்தது. இச் சம்பவம் மலையக மக்களின் சரித்திரத்தில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தியது.

நிலவுடைமை இல்லை

நிலவுடைமை என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாக உள்ளது. நிலவுடைமையானது சமுதாயங்களில் மக்களுக்கு அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றை அளிக்கின்றது என்பார்கள். ஆனால் மலையக மக்களை பொறுத்தவரையில் அவர்கள் இந்த நாட்டில் சுமார் இருநூறு வருட கால வரலாறு எனக்கொண்டுள்ள போதும் இன்னும் நிலவுடைமை இல்லாத ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் ஏனைய இனத்தவர்கள் நிலவுடைமைச் சமூகமாக இருந்து வருவது தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது எந்த நிறுவனத்தின் முகாமையின் கீழ் இருந்தாலும் மலையகத் தமிழ் மக்களின் பெரும் பகுதியினர் அச்சமூகத்தில் இருந்து இன்று கைத்தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் இப்படி பல தரங்களுக்கு மாற்றமடைந்திருந்தாலும் இந்த லயன் காம்பராக்களைத்தான் தமது வசிப்பிடமாகவும் தமது காணியாகவும் கொண்டு வாழ்ந்துள்ளனர். ஒப்பந்த கூலிகளாகக் கொண்டு வந்த காலத்தில் இருந்து இந்நாள் வரை அடிப்படை லயன் முறையில் இன்னும் முழுமையாக மாற்றம் வரவில்லை. லயன் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கும் நிலம்தான் இச்சமூகத்திற்குரிய காணி. அந்த லயம்தான் இவர்கள் வாழ்விடம். அல்லது வீடாக அமைந்துவிட்டது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தனது நூல் ஒன்றில் (2006) எடுத்துக்காட்டி இருக்கின்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி தோட்டக் கம்பனிகள், ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இரண்டு இலட்சத்து 56 ஆயிரத்து 963 ஹெக்ரேயர் காணிகள் பொறுப்பில் இருந்தன. தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 357 ஆக இருந்தது. உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 965 ஆகும். 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்தச் சட்டம் இலக்கம் ஒன்றின் மூலம் நிலச்சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் தனியார் உரிமை கொண்டிருக்கும் நிலங்களுக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது. இதனடிப்படையில் பெருந்தோட்ட நிலங்களாக இருந்தால் ஐம்பது ஏக்கரும் மற்றைய நிலங்களாக இருந்தால் 25 ஏக்கர்களும் மட்டுமே தனிப்பட்ட ஒருவர் வைத்திருக்கலாம் என்பது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சட்டத்தினை விட 1950ஆம் ஆண்டின் நில சுவீகரிப்பு சட்டம் 1972ஆம் ஆண்டின் பெருந்தோட்ட சட்டம் (இலக்கம் இரண்டு), 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய கூட்டுத்தாபன சட்டம், 1973ஆம் ஆண்டின் விவசாய நிலச்சட்டம் இலக்கம் 42 ஆகிய சட்டமூலங்களை பயன்படுத்தியும், பின்னர் உருவாகிய 1975ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டத்தை (திருத்தப்பட்டது) பயன்படுத்தியும் இலங்கையில் கடந்த காலத்தில் நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் (1995) வலியுறுத்தியுள்ளன. இதேவேளை 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் தோட்டங்கள் இரு கட்டங்களாக அரசினால் கையேற்கப்பட்டன. முதலில் ரூபா நிறுவனங்கள் எனப்பட்ட இலங்கையருக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் அடுத்து வெளிநாட்டு ஸ்டேர்லிங் நிறுவனங்களுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் கையேற்கப்பட்டன. இவ்வாறு கையேற்கப்பட்ட பெருந்தோட்டங்களில் இலாபகரமாக இயங்கும் தோட்டங்கள் என அரசினால் இனம் காணப்பட்ட தோட்டங்களை நிர்வகிக்க அரசு இவ்வகை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை என்ற இரு முகவர் நிறுவனங்களை நிறுவியது. ஏனைய நட்டத்தில் இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட தோட்டங்களை மலைநாட்டு தோட்ட அபிவிருத்தி சபையிடமும், வேறு சில இடைக்கால நிர்வாக முகவர்களிடமும் அரசு ஒப்படைத்தது.

இதன் விளைவுகளை கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தனது நூல் ஒன்றில் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றார். இவ்வாறாக பிரஸ்தாப நிர்வாக முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோட்டங்களை பிற்காலத்தில் கிராமத்தவர்கள் மத்தியில் சிறு நிலத்துண்டுகளாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தோட்டங்களில் பிறந்து தோட்டங்களுக்கே தம்மை அர்ப்பணித்த தொழிலாளர்கள் நிலப்பகிர்வின்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.நில விடயத்தில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களுக்கான நிலவுரிமையானது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது. இது ஒரு மோசமான நிலைமையாகும். மலையகத்தில் காணப்படும் நிலப்பயன்பாடும் காணி உரிமையும் ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்பதாக புத்திஜீவிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி மக்களுக்கு தங்கியிருக்கும் வீடு,காணி என்பவற்றுக்கு உரித்துடைமையை பெற்றுக்கொடுப்போம் என்று ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறி வந்த போதும் எதுவித காத்திரமான பணிகளும் இடம்பெறவில்லை.மலையக சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிற சமூகங்களினால் பாரபட்சத்துக்கு உள்ளாகியும் உள்ளது. இச்சூழ்நிலைகளையும் இப்பாரபட்சத்தையும் நீக்குவதற்கு அரசு உரியவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தோட்டங்களுக்கு வெ ளியே இந்திய வம்சாவளியினர் சுதந்திரமாக தமது வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாமல் செய்துள்ளன. சட்ட ரீதியாக தமது தேசத்திற்குள் வாழ்பவர்கள் அனைவரும் வசிப்பிடத்தை தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டவர்கள். இந்திய வம்சாவளியினர் வீடமைப்பு திட்ட சலுகைகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆகவே பெருந்தோட்டங்களில் காணப்படும் காணியுரிமையும் நிலப்பயன்பாடும் தெளிவாக பௌதீக ரீதியாக ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்கின்றது என்றும் பல்வேறு வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் மலையக மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளன என்பதனை அவற்றின் போக்குகளும் கட்சி கொள்கைகளும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன. ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற விசனம் மேலோங்கி காணப்படுகின்றது.

அபிவிருத்தி போர்வையில் நிலம் சுவீகரிப்பு

தோட்டப்புற காணிகளின் அளவு இன்று வேகமாக குறைவடைந்து வருகின்றது. தேயிலை விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அபிவிருத்தி என்கிற போர்வையில் தேயிலை விளை நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை இனவாதத்தின் பின்னணியாகுமென்று மலையக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பெருந்தோட்ட தமிழர்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுவதாகவும் இந்நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்களும் உடந்தையாக உள்ளதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அண்மையில் ஒரு குற்றச்சாட்டினையும் முன்வைத்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக பெருந்தோட்ட காணியினையும் அதற்குரிய குடியுரிமையினையும் உறுதி செய்வதாக வாக்களித்திருந்தது. அதற்கேற்ப ஆங்காங்கே அவர்களுக்குரிய காணி உரிமைகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பெருந்தோட்டங்களை சூழ இருக்கின்ற அரசாங்க காணிகளை நிச்சயமாக பெருந்தோட்ட மக்களுக்கே உரித்துடையதாக வழங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான காணியிலோ தோட்டத்துக்கு அண்மித்த காணியிலோ கிராமத்தவர்களை குடியமர்த்துவதை உடன் நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன். தோட்டப்புற காணிகள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்படுவதால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன. மலையக மக்களின் இருப்பு பல இடங்களில் கேள்விக்குறியாகி இருக்கின்றது. இம்மக்கள் சிதறி வாழும் நிலைமை மேலோங்குகின்றது. இதன் காரணமாக மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றது. சமூக அபிவிருத்திக்கு அரசியல் ஆதிக்கம் மிகவும் அவசியமாகும் என்று கருதப்படும் நிலையில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பாதிப்பு பாதக விளைவுகள் பலவற்றுக்கும் இட்டுச் செல்லும் என்பதனை மறுப்பதற்கில்லை.தோட்டப்புற நிலங்கள் பல தேவை கருதியும் சுவீகரிக்கப்படுவதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை குறைவடையும் அபாய நிலை காணப்படுகின்றது. அண்மைக்காலமாக கம்பனியினரின் பொறுப்பில் உள்ள பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான வேலை நாட்களே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நிலச் சுவீகரிப்பு நிலையானது இதனை மென்மேலும் உக்கிரமடையச் செய்வதாகவே அமையும். இது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற தோட்டப்புற மக்களின் குரல்களை மேலும் நெருக்குவதாகவே அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

1972 இல் காணியமைச்சர் ஹெக்டேர் கொப்பேகடுவ தலைமையில் காணி சீர்திருத்தம் இடம்பெற்றது. 1975 ஆம் ஆண்டு ரூபா, ஸ்டேர்லிங் கம்பனிகளுக்கு சொந்தமாக இருந்த காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இந்நிகழ்வும் இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னும் பல நிகழ்வுகளும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. உசலசம, ஜனவசம கமிஷன் போன்ற தோட்டங்களில் மாற்றுப் பயிர்ச்செய்கை, பன்முகப்படுத்தல் என்ற போர்வையில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தோட்டக்காணிகளில் இருந்தும் லயன்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நட்சா திட்டம், மகாவலி குடியேற்றம் மற்றும் தோட்ட கொத்தனி முறை தோட்டப் பகுதிகளில் மலையக தமிழ் மக்களின்பலத்தை குறைக்கும் திட்டமிட்ட குடியேற்றம் போன்றன தீவிரமாக இடம்பெற்றுள்ளன. இதேவேளை நிலச்சீர்திருத்தம், தோட்டக்காணிகளை அரசு பொறுப்பேற்று பல்வேறு குடியேற்றத் திட்டங்கள் மூலம் மலையக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டு அவர்கள் காணியுரிமையும் வீட்டுரிமையும் பறிக்கப்பட்டதாக ஏ.லோறன்ஸின் கருத்து அமைந்திருக்கின்றது.

டெல்டா, சங்குவாரி போன்ற இடங்களில் உள்ள லயன்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. டெவன் காணி சுவீகரிப்பில் சிவனு லெட்சுமணன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் துறந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்ட இனக்கலவரம், திட்டமிட்ட குடியேற்றங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பானவை என்பதை புலப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

காணித்துண்டுகள்

 இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக மலையக காணி உரிமையை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனடிப்படையில் இருபதாயிரம் காணித்துண்டுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நான் மலையக தோட்ட மக்களுக்கு 07 பேர்ச்சஸ் காணியை வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்தேன். தற்போது நான் அமைச்சர் என்ற வகையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மலையக மக்களுக்கு சொந்தமாக தோட்டக் கம்பனிகளில் தோட்ட மக்களுக்கு இருபதாயிரம் காணித்துண்டுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தோட்ட நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். 2015 ஆம் ஆண்டு எம் அரசாங்கம் பதவிக்கு வந்தபோது அரசுக்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கான கொடுப்பனவுகள் இருபது வருடங்களாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பெறுமதி ஆயிரத்து 900 மில்லியன்களாகும். நான் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து படிப்படியாக அவற்றை செலுத்திவந்தேன். தற்போது ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை முந்நூறு மில்லியனாக குறைத்துள்ளேன் என்றும் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார். வாக்குறுதிகள் காற்றில் கடந்த காலங்களைப் போன்று பறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகர்

தோட்ட தொழிலாளர்களுக்கு நிலங்களைப் பெற்றுக்கொடுத்து நிலவுடைமை சமூகமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சவால்களையும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் சிறப்பாக எடுத்துக் கூறினார். அவரது கருத்தின் ஊடாக பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கம்பனிகள் இன்று தோட்டங்களை கொண்டு நடத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் வெளியார் உற்பத்தி முறையினை அமுல்படுத்துவதில் ஈடுபாடு காட்டிவருகின்றன. இந்நடவடிக்கை சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது குறித்து பெருந்தோட்ட அமைச்சிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். கம்பனிகள் முன்வைத்த முன்மொழிவுகளில் நிலம் குறித்து எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தேயிலை மரங்களை அடிப்படையாகக் கொண்ட முன்மொழிவுகளே இடம்பெற்றன.எனினும் நான் இங்கு மரங்கள் என்பதற்கு பதிலாக நிலம் குறித்து குறிப்பிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலம் குத்தகையா? அல்லது சொந்தமா? என்பது குறித்து பேசித்தீர்க்க வேண்டியுள்ளது. நிலம் குறித்த விடயத்தினை பிரதமரும் ஏற்றுக்கொண்டார். நிலத்தை சொந்தமாக வழங்குகையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்றும் தொழிலாளர்கள் நிலத்தை கைமாற்றி விடுவர் என்றும் கருத்துக்கள் பலவும் தெரிவிக்கப்பட்டன. இது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இது நமது நிலம். இதில் நாம் பயிரிட வேண்டும் என்பது குறித்த சிந்தனையை சமூக மட்டத்தில் ஏற்படுத்த உள்ளோம். மலையக மக்களிடையே நிலம் குறித்த உணர்வு இப்போது அதிகரித்து வருவதையும் நாம் கூறியாதல் வேண்டும். இது எமக்கு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் நிலத்தை பெற்றுக்கொடுக்கின்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்து வருகின்றோம். வீடமைப்புக்காக பல திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றோம்.

கூலிச்சமூகமாக சுமார் இருநூறு வருடங்களாக வாழ்ந்த சமூகம் உடனடியாக நிலவுடைமை சமூகமாக மாறுவதென்பது இலகுவான காரியமல்ல. இதற்கான தயார் நிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த தயார் நிலைகள் இருபக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலத்தை பாதுகாக்க வேண்டியது ஒரு சமூகப் பொறுப்பு ஆகும். இதனை அரசி யல்வாதிகள் மட்டுமல்லாது பல்துறை சார்ந்தவர்களும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வெளியார் உற்பத்தி முறை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும். தேயிலை உற்பத்தித் துறையில் எமது மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இத்துறையில் மேலும் பலரும் மறை முகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் பட்டு எவருக்கும் பாதிப்பு ஏற்படா வண் ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தொழிற்றுறை தூக்கி நிறுத்தப்படுதல் வேண்டும். தேயிலை நிலத்தை பெற்றுக்கொடுப்பதோடு பொரு ளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மாற்றுப்பயிர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கூட்டு ஒப்பந்தம் குறி த்து கவனம் செலுத்தி வருகின்றோம். நிலத்துடன் கூடியதாக பயிரிடும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் திலக ராஜ்.

 மலையக சமூகம் நிலவுடைமை சமூக மாக தலைதூக்க வேண்டும் என்பதே சகல ரதும் எதிர்பார்ப்பாகும்.

துரைசாமி நடராஜா

நன்றி - வீரகேசரி

ஜனாதிபதி ஆணைக்குழு - மல்லியப்புசந்தி திலகர்



மலையக மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்பது எனது அண்மைக்கால கோரிக்கைகளில் ஒன்று. உண்மையில் இது அண்மைக்கால கோரிக்கை என்று கூட சொல்ல முடியாது. 2016 ஆண்டிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருந்தேன்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரின் போது இலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் சேர்ந்து விடும் ஒன்று. 2015 ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றம் வந்ததும், ‘இந்த முறை சர்வதேச நீதி விசாரணையும் வந்தே தீரும்’ என்ற நம்பிக்கையும் பலருக்கு இருந்தது. 

அந்த எதிர்பார்ப்பைப் போலவே 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியும் சின்னதாக ஒரு சர்வகட்சி மாநாடு போன்ற ஒன்றை நடாத்தி சர்வதேச நீதிமன்ற விசாரணை அல்லது அப்போது பேசப்பட்ட ‘ஹைபிரிட்’ நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்தார். வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், தென்னிலங்கை சிங்கள கட்சிகள், பெருந்தேசிய கட்சிகள் என்பவற்றோடு மலையகக் கட்சிகளும் பிரசன்னமாகி கருத்துக்களைத் தெரிவித்தன.

சிங்கள கட்சிகள் சர்வதேச நீதிமன்ற விசாரணையை அனுமதிக்க முடியாது என்ற கருத்தையே பரவலாக தெரிவித்த நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் விசாரணை வேண்டும் என்ற தோரணையில் கருத்துக்களைப் பகிர்ந்தன. 

குறிப்பாக வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ்க் கட்சிகள் 2009 இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தை பரவலாக முன்வைத்தன. அப்போது முஸ்லிம் கட்சிகள் அத்தகைய விசாரணையானது 1990 களில் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் இருந்தே நடாத்தப்படல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தின.

மலையக அரசியல் கட்சியொன்றின் செயலாளர் என்ற வகையில் நானும் எனது கருத்துக்களைப்பதிவு செய்தேன். அப்போது நான் முன்வைதத கோரிக்கைதான் இந்த ‘ஜனாதிபதி ஆணைக்குழு’.

இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் என அழைக்கப்படுவோர் இன்னும் இந்திய தமிழர் என்றே சட்ட ரீதியாக பதிவு செய்யப்படுகின்றனர். அதாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போது, இலங்கையில் வாழும் சனத்தொகையை இன அடிப்படையில் மத அடிப்படையில் கணக்கெடுப்பு செய்கிறார்கள். அப்போது மலையகப் பெருந்தோட்டத் தொழில் துறையை மையப்படுத்திய தமிழ் மக்களை இந்தியத் தமிழர் (இந்தியானு தெமல) என்ற வகையறாவில் கணக்கெடுக்கிறார்கள். 

அவர்களைப் (அரசை) பொறுத்தவரையில் ‘இலங்கைத் தமிழர்’ என்போர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி வாழும் பூர்விகத் தமிழர்கள். இந்திய தமிழர் என்போர் இந்தியாவில் இருந்து பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள். மற்றப்படி இலங்கைத தமிழர்கள் தங்களை ‘ஈழத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ, இந்தியத் தமிழர்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ அரசியல், பண்பாட்டு நிலையிலானது. சட்ட பதிவுகளுடனானது அல்ல. மலையகத் தமிழரை ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என்பதும் கூட ஒரு சமூகச் சொல்லாடல் மட்டுமே. 

இனி இவர்களை மலையகத் தமிழர் என்றே இந்தப் பத்தியில் விளித்துக் கொள்வோம். இந்த மலையகத் தமிழர்களுக்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் வழங்கியிருந்த இலங்கைக் குடியுரிமையை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதும்  சுதேச அரசாங்கம் பறித்தது முதலே இவர்களின் அடையாளம் மாத்திரமல்ல அரசியல் இருப்பே கேள்விக்குரியானது. அப்படியே ஒரு 15 வருடங்கள் கழிந்து 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்த நாடற்ற மக்களை அவர்களின் பூர்விக நாடான இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் போட்டதும், ஒரு பகுதி அனுப்பப்பட்டதும் மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட பெரு அநீதி. 

இந்த அநீதிகளின் விளைவாக இடம்பெற்றதெல்லாம் அவர்கள் இந்த நாட்டுக்கு உரியவர்கள் அல்லாது போனார்கள். இந்த நாட்டின் நிர்வாக முறைமையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த மக்களின் சரிபாதி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் இலங்கை சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், அதனால் இன்றைய நிiலையில் இவர்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றைப் பேசுவதனால், திருப்பி அனுப்பப்பட்ட மக்களை மீள அழைக்கப்போதில்லை. அவர்கள் இப்போதும் ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களாக’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருப்போர் இலங்கையில் ‘இந்திய தமிழர்களாக’ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இலங்கையில் மலையகத் தமிழர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பது அவர்கள் வாழ்ந்திருக்கவேண்டிய வாழ்க்கை அல்ல. இவ்வாறு இந்த வாழ்க்கை ஏனைய மக்களிடம் இருந்து திரிபுபட்டிருப்பதற்கு, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட மேற்படி அரசியல் தீர்மானங்களே காரணம் என்பதுதான் உண்மை. இதற்கிடையில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் இனவன்முறைகளில் இவர்கள் தாக்கப்படுவதும் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த்தில் குறிப்பாக இறுதி யுத்தத்தில் இந்த மலையக மக்கள் பாதிப்படைநதுள்ளார்கள் என்பதனால் அது சர்வதேச நீதிமன்றமாக இருந்தால் என்ன? ஹைபிரிட் நீதிமன்றமாக இருந்தால் என்ன அங்கே பேசப்படல் வேண்டும் என்பது எனது வாதமாக அமைந்தது. அமைகிறது.

திம்பு பேச்சுவாரத்தை முதல் 2002 சமாதான பேச்சுவார்த்தை வரை  இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகளுக்கு (நோர்வே, ஜப்பான், இப்படி..பல) தூக்கிக்கொண்டுபோன   வரலாறு நம்முடையது. அதில் இலங்கை அரசும், தமிழர் தரப்பும் இணைந்தே செயற்பட்டு இருக்கிறது. எனவே, இலங்கை நீதிமன்ற முறைமையும் சர்வதேச நீதி விசாரணையும் அல்லது மேற்பார்வையும் இணைந்த ‘ஹைபிரிட்’ முறைமை ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. அதற்கு நாம் போகலாம் என்றே அன்று என் கருத்தைச் சொன்னேன். மேலதிகமாக,  இந்த ஹைபிரிட் அமையுதோ இல்லையோ எங்கள் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசியே ஆக வேண்டும். அதற்கு உள்ளுரில் ஒரு ஆணைக்குழு அமைத்தல் அவசியம் அது ஜனாதிபதி ஆணைக்குழுவாக இருப்பது சிறப்பு எனவும் வேண்டுகோளை முன்வைத்தேன்.அந்த ஜனாதிபதி ஆணைக்குழு சுதந்திர இலங்கையான 1948 ல் இருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும்  என்றேன். 

1990, 2009 கோரிக்கை வைத்த தலைவர்கள் என்னைக் கொஞ்சமாக எட்டிப்பார்த்தார்கள். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் என்னைப் பார்த்த பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் ‘தம்பி’ என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் நுவரெலியா ‘எம்பி’யாக இருக்கிறேன் என்றேன். ஓ.. அப்படியா என்றார்கள் அந்த இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். 

எனது கோரிக்கை ஒரு வாய்மொழி மூலமானது என்கின்றதன் அடிப்படையில் உடனே அதனை எழுத்துமூல கோரிக்கையாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவரும் உங்கள் கோரிக்கை கவனத்pல் எடுக்கப்பட்டுள்ளது என பதில் அனுப்பியிருந்தார். இவரது இரண்டாவது கொள்கை விளக்கவுரையில் அவரது கவனம் ஏதும் சென்றிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பில் அதனை வாசித்தபோது அது பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் என்ற ஒற்றை வரிக்குள் சுருங்கியிருந்தது. 

எனவே விவாதத்தில் கலந்துகொண்டு ஹன்சாட் பதிவுகளுக்காக முன்னைய ‘மலையக மக்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்’ என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதில் ஒரு வரி இப்படி வந்து விழுந்தது…. மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பின்னர் யோசிக்கலாம். இப்போதைக்கு அவர்களின் பிரச்சினைகளை உத்தியோகபூர்வமாக பதிவு செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் என்பதுதான் அந்த கோரிக்கை. 

ஏனெனில் மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினைகள் பல பேச வேண்டியுள்ளது. அதனை அந்த மக்களே பேச அனுமதி வழங்கப்படல் வேண்டும். மலைகளின் மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள் புதைந்து கிடக்கின்றன. மலைகளைப் பேசவிடுங்கள். 

நன்றி அரங்கம்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates