Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சீதனச் சொத்து ஜனாதிபதி மாளிகையாக ஆன கதை! (கொழும்பின் கதை – 28 ) என்.சரவணன்

கொழும்பின் பழமையான மரபுரிமை கட்டிடங்களில் ஒன்று இன்றைய ஜனாதிபதி மாளிகை.

ஒரு காலத்தில் அது இராணி மாளிகை (Queen’s House), அரச மாளிகை, கவர்னர் மாளிகை (Governor’s house) என்றும் அழைத்தார்கள். பின்னர் ஜனாதிபதி மாளிகை (President’s House) என்று இன்று அழைக்கப்படுகிறது. அது அமைந்திருக்கும் வீதியும் கூட அன்று இராணி வீதி என்று அழைக்கப்பட்டது. இப்போது ஜனாதிபதி மாவத்தை (Janadhipathi Mawatha) என்று அழைக்கப்படுகிறது. 

1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பு தோன்றும்வரை இலங்கையில் அரச மாளிகை மூன்று இருந்தது. கொழும்பிலும், கண்டியிலும், நுவரேலியாவிலும் அவை இருந்தன. 

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாவத்தையில் உள்ள கோர்டன் பூங்காவில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் வரலாறு டச்சு காலத்தில் இருந்து தொடங்குகிறது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை. இந்த இடத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய போர்த்துக்கேய புனித பிரான்சிஸ் (St Francis's Church) தேவாலயம் ஒன்று இருந்திருக்கிறது. அதை இடித்துவிட்டுக் கட்டப்பட்ட மாளிகை இது. பின்னர் இது 1785 ஆம் ஆண்டு பெரிதாக கட்டப்பட்டது. 

17.செப்டம்பர்.1795 டச்சுக் காரர்கள் ஆங்கிலேயர்களிடம் இலங்கையை எழுதிக்கொடுத்த ஆவணம்.
நாட்டின் கடைசி டச்சு ஆளுநரான யொஹான் வான் அன்கெல்பீக்கின் (Johan Gerard van Angelbeek-15.07.1794 – 16.02.1796) தனிப்பட்ட இல்லமாக இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (hoofdadministrateur) இருந்தவர் அவரின் புதல்வன் கிறிஸ்தியான் வான் அன்கெல்பீக் (Johan Christiaan van Angelbeek). இந்த கிறிஸ்தியான் தான் இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும் 17.செப்டம்பர்.1795 அன்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் டச்சு தரப்பின் சார்பில் கையெழுத்திட்டவர். (இந்த ஆவணம் டச்சு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தது.)

வான் அன்கெல்பீக் (Johan Gerard van Angelbeek)

இது பிரிட்டிஷ் கவர்னர்களின் உத்தியோகபூர்வ "அரச இல்லமாக" மாறியதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதை உள்ளது.

ஆளுநர் பிரெடரிக் நோர்த் மாளிகையைக் கைப்பற்ற செய்த சதி

பிரடெரிக் நோர்த் 1798 ஆம் ஆண்டு ஓக்டோபர் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு இலங்கையின் ஆளுநராகப் பதவியேற்றார். இலங்கையில் முதலாவது தேசாதிபதியாக அவர் பதவியேற்று ஆட்சி செலுத்த தலைப்பட்ட போது, அதற்கான நிர்வாக செலவுகளை வழங்குவதற்கு பிரிட்டிஷ் தயாராக இருக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்தார் நோர்த். கொழும்பைக் கைப்பற்றும் போரில் பிரிட்டிஷ் அரசாங்கம்  12,000 பவுண்டுகளை செலவிட்டிருந்தது. எனவே இனி வரும் செலவுகளை இலங்கையிள் இருந்து வரி வசூலிப்பதன் மூலமே நிறைவு செய்ய வேண்டும் வருமானத்துக்கான வாய்ப்புகளைக் கண்டு பிடிக்கவேண்டும் என்றும், மகாராணி இனி மேலதிக செலவுகளை செய்ய மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. காலனித்துவ செயலாளரின் இந்த அறிவிப்பால் திருமணமாகாத, வேடிக்கை மிகுந்த ஆளுநரான ஃபிரடெரிக் நோர்த், குழப்பம்டைந்திருந்தார்.  இலங்கையின் அருமைபெருமைகளை அறிந்திருந்த நோர்த் தனக்கு ஒரு சிலிங்கு கூட செலவில்லாமல் விநோதங்களைப் புரியலாம் என்கிற எதிர்பார்ப்பு நிறைந்திருக்கக் கூடும்.

பிரடெரிக் நோர்த்
ஆனால் காலனித்துவ செயலாளர் 'பவுண்ட்'களை அனுப்ப மறுத்ததால், பிரடெரிக் நோர்த் கடினமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில், டச்சுக்காரர்களின் சொத்துக்களை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்ய முடியாது என்கிற ஒப்பந்தத்துடன் தான் அவர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்திருந்தனர்.  ஆளுநருக்குக் கூட வாழ தகுதியான வீடு இருக்கவில்லை. அவர் ஒரு அநாதையைப் போல பல்வேறு இடங்களில் வசித்து வந்தார், மேலும் யோர்க் வீதியில் ஒரு மர வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார் என பதிவுகளில் உள்ளன. இலங்கை வங்கி கட்டிடத்தின் தற்போதைய இடம் தான் அது. அந்தக் காலத்தில் கொழும்பு கோட்டையில் அதிக எண்ணிக்கையிலான அடம்பர டச்சு வீடுகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் அவ்வழியே செல்லும் போது பல்லைக் கடித்துக்கொண்டனர். 'பிரிட்டிஷ் சட்டம்' கவர்னர் மாளிகையைக் கூட கையகப்படுத்தத் தவறியதால் காலனித்துவச் செயலாளருடன் ஃபிரடெரிக் நோர்த் ஆத்திரம் கொண்டிருந்தார். டச்சு மாளிகைகளில் ஆளுநருக்கு ஒரு தனி விருப்பம் இருந்தது. 

பிரடெரிக் நோர்த் தனது நிர்வாகத்தை நடத்த 20 அரசு ஊழியர்களை நியமிக்க விரும்பினார். அப்போது இந்தியாவின் மெட்ராஸில் பணிபுரிந்த பல அரசு ஊழியர்களும் இதற்காக வரவழைக்கப்பட்டனர். ஜார்ஜ் மெல்விக் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியராகவும் இருந்தார். அவர் ஒரு அழகான இளைஞர். அவர் இங்கிலாந்தின் லெவன் பிரபுவின் ஒரே மகன். இவரது முழுப்பெயர் ஜார்ஜ் மெல்வின் லெஸ்லி. அவர் 1802 இல் இலங்கைக்கு வந்தார். அவருக்கு PAYMASTRR (Pay Master) பதவி வழங்கப்பட்டது. இராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்கும் பதவி என ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், நிதியமைச்சர் பதவிக்கு நிகரான அரசாங்க களஞ்சிய முகாமையாளர் பதவி என இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் இலங்கையை கைப்பற்றிய பின்னர், பல டச்சுக்காரர்கள் தங்கள் சொந்த நாடான ஒல்லாந்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். ஆனால் இலங்கையில் சொத்துக்களை சேகரித்து வைத்திருந்த பல டச்சுக்காரர்கள் இங்கேயே குடியிருந்துவிட்டனர். இங்கேயே சில சந்ததிகளாக வாழ்ந்து விட்டவர்களும் இங்கேயே தங்கிவிட்டனர். இப்படி ஒரு உயர் வர்க்க டச்சு குழாமினர் ஆங்கிலேயர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும், வந்தேறிகளாகவும் பார்த்தது உண்மையே. அவர்களுக்கு ஆங்கிலேயே அதிகாரிகளும் புதிய அதிகாரத்துவ வர்க்கமும் சவாலாக இருந்தன.

பிரம்மச்சாரியாக இருந்த ஆளுநர்; மனதை தேற்றிக் கொள்ளவும் ஆறுதல் தரவும் இருந்த ஒரே விஷயம், மாலையில் ஒரு மது அருந்தி கொண்டாடுவது தான். அப்போது கொழும்பில் சுமார் நூறு ஆங்கிலேய அதிகாரிகள் நிலை கொண்டிருந்தாலும் அவர்களில் இருபதுக்கும் குறைவான இளம் பெண்களே இருந்தனர். கவர்னர் பலே நடனங்கள் புரிந்த அழகு நங்கைகளை அரவணைக்க மிகவும் பேராசைப்பட்டார். அதனால்தான் கொழும்பில் உள்ள டச்சு மாளிகைகளில் வசிக்கும் அழகிகள் குறித்து விசாரித்த கவர்னர், பொம்மைகள் போல் அழகாக இருந்த பெண்களை தனது விருந்துகளுக்கு அழைத்தார். எப்பொழுதும் குடிப்பழக்கம் மற்றும் விருந்துகளுக்கு அடிமையான இந்த ஒல்லாந்து இளம் பெண்கள் இத்தகைய விருந்துகளுக்கு முன்பாகவே கலந்து கொள்வதைக் கண்டு ஆளுநர் நோர்த் மகிழ்ச்சியடைந்தார்.

இத்தகைய விருந்துகள் ஆங்கிலேய – டச்சு பகைமை உணர்வுகள் தளர்ந்து போவதற்கு வேகமாக வழிவகுக்கும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

ஜோர்ஜ் மெல்வில் லெஸ்லி ஆளுநரின் விருந்துகளில் தவறாது கலந்து கொள்ளும் பிரமுகராக இருந்தார். பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான அவரது உறவே அதற்கான முக்கிய காரணியாக இருந்தது. விருந்துகளில்  ஃபிரடெரிக் நோர்த் போதையில் இருந்தபோது, அவர் லெஸ்லியை ஒரு நடனத்திற்கு அழைத்தார். அவர் நடனத்துக்காக தெரிவு செய்யப்போகும் அந்த மங்கையை அறியும் ஆவலில் அனைவரும் காத்திருந்தனர். லெஸ்லி ஒரு நாள் விருந்தொன்றில் கண்ட அழகான பெண் நினைவுக்கு வந்தாள். அவள் டச்சு அழகி லகோம்னா கெர்ட்ரூட். அப்பெண் முன்னாள் டச்சு ஆளுநர் வான் ஏஞ்சல்பெக்கின் பேத்தி ஆவார். ஆளுநர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.

அவளது அழகில் மயங்கிய லெஸ்லி, அவளது சண்டையில் தோற்றுப்போன ஒரு நாட்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காலில் விழுந்து தனது பிரபுத்துவ செருக்கையும் தூர எறிந்துவிட்டு காதலுக்காக கதறி அழுதார். ஆனால் இறுதியில் அந்தத் திருமணத்திற்கு ஆளுநர் பிரடெரிக் நோர்த்தின் அனுமதி தேவைப்பட்டது. இது அரச குடும்பத்து சமாச்சாரம் என்பதால் ஆளுநர் நோர்த் இந்த விவகாரத்தில் ஆதரவளிக்க இயலவில்லை. ஆளுநரின் தவறு என்னவென்றால், லெஸ்லியின் காதலியும் கூட பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் போல உயர்ந்த டச்சு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை உணராது இருந்தது தான். இறுதியில் ஏர்ல் பிரபு பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி அந்த விவாகத்துக்கு ராஜரீக அனுமதி பெறப்பட்டது.

லெஸ்லியின் அரச அங்கீகாரத்திற்குப் பிறகு கவர்னர் ஃபிரடெரிக் நோர்த்; ஒரு 'சுடு வாங்கிய பன்றி' போல் தோன்றினார். லெஸ்லி - லகோமினாவின் திருமணம் மணமகளின் தாத்தாவின் சகோதரர் கிறிஸ்டியன் வீட்டில் நடந்தது. கொள்ளுப்பிட்டியில் உள்ள கம்பீரமான மாளிகையானது அன்றைய இலங்கையில் வாழ்ந்த பிரித்தானிய உயர்குடியினராலும், டச்சுப் பிரபுக்களாலும் நிறைந்திருந்தது. இந்த திருமணத்தில் ஆளுநர் பிரடெரிக் நோர்த் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். புதுமணத் தம்பதிகள் இந்த “அரச மாளிகை” (koningspaleis) மாளிகையை தற்போதைய ஜனாதிபதி மாளிகையை வரதட்சணையாகப் பெற்றனர்.  

திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் மாளிகைக்கு வசிக்கச் சென்றனர். அப்போது இந்த மாளிகையில் இருந்த பூங்கா தற்போதைய தலைமை தபால் நிலையம் வரை நீண்டிருந்தது என ஆவணங்கள் காட்டுகின்றன. பூங்காவில் சிறிய நீர்த் தொட்டிகளும் அவற்றுக்கு இடையிலான இருக்கைகள் பளிங்குகளால் செய்யப்பட்டவை. அவற்றில் பல நெதர்லாந்திலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டவை. லெஸ்லியும் லகோம்னாவும் திருமணமானவர்கள் என்றாலும், கவர்னர் ஃபிரடெரிக் நோர்த் இந்த மாளிகையைப் பார்க்கும்போதெல்லாம் அது எப்போது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறும் என்று கனவு கண்டார். கொனிங் பூங்காவில் புதுமணத் தம்பதிகள் உல்லாசமாக இருந்த விதம் கவர்னருக்குப் பிடிக்கவில்லை. இலங்கையின் தலைமைக் குடிமகனாக இருந்தும் தனது அதிகாரத்துவத்தைக் காட்ட இது போன்ற மாளிகையொன்று இல்லையே என்கிற அதிருப்தியில் புதுமணத் தம்பதிகளின் காதல் விவகாரம் ஆளுநரின் உள்ளத்தில் வெறுப்பாக வெடித்தது.

இனிய மணவாழ்க்கையை அனுபவித்து வந்த இந்த ஜோடியால் நீண்ட நாட்கள் காதலை அனுபவிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பை ரிக்ஸ் சரியாக ஆவணப்படுத்தாததால் லெஸ்லி கவர்னரால் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆளுநரிடம் கொண்டு வரப்பட்ட லெஸ்லி, காவலில் வைப்பதற்கு முன் இந்தத் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த சதியின் பின்னால் ஆளுநர் நோர்த்தின் வகிபாகம் உண்டு என சதேகிக்கப்பட்டது. இறுதியில், ஜார்ஜ் மெல்வின் லெஸ்லிக்கு வேறு வழியின்றி அந்த மாளிகையை ஆளுநருக்கு ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பத்தைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

1864 ஐச் சேர்ந்த கொழும்பு கோட்டையின் வரைபடம் இது சிகப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது இராணி மாளிகை

இறுதியில் பிரித்தானிய அரசால் அன்று மதிப்பிடப்பட்டிருந்த 35,000 பவுண்களுக்கு இந்த டச்சு அரண்மனையை 1804ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி 10,000 பவுண்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய தகவல்களை ப்ரூக் எலியட் (Brooke Elliott) தனது நூலில் (Real Ceylon 1937)விபரங்களைத் தந்திருக்கிறார்.

அதிலிருந்து ஆரம்பத்தில் இது அரச மாளிகை (Kings House) என்றும் பின்னர் விக்டோரியா இராணியின் ஆட்சிக் காலம் தொடங்கிய போது (1837-1901) இராணி மாளிகை (Queen 's House) என்றும் அழைக்கப்படத் தொடங்கிற்று. 

ஜனவரி 7, 1804 இல், இந்த “கொனிங் ஹவுஸ்” அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த மாளிகையில் குடியேறினார் நோர்த். சட்டப்பூர்வமாக அதை ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்று அழைத்தார். இறுதியில், லெஸ்லி தனது மனைவியையும் இளம் மகளையும் அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கே  புறப்பட்டுச் சென்று விட்டார்.


அவர் தனது உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமுன், ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள வுல்பெண்டால் தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சில தளபாடங்களை இன்றும் காணலாம். லெஸ்லி பின்னர் கடுமையான குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இளம் வயதிலேயே இறந்தார், ஆனால் அவரது மகள் 1892 வரை வாழ்ந்தார்.

இந்த தனியார் பங்களாவானது இலங்கையின் முதலாவது ஆங்கிலேய ஆளுனர் நோர்த் இதனை அரசின் உடமையாக ஆக்கிக்கொண்டாலும் இதனை ஆளுநரின் இல்லமாக “அரச மாளிகை”யாக ஆக்கிக்கொண்டவர் அவருக்குப் பின்னர் 1805 இல் ஆளுநராக வந்த தோமஸ் மெயிட்லன்ட். அவர் கவர்னருக்கான இன்னொரு மாளிகையையும் மெயிட்லன்ட் கட்டினார். அது தான் இன்றைய கல்கிஸ்ஸ ஹோட்டலாக ஆகியிருக்கிறது.

போர்த்துகேய, டச்சு காலத்தில் பெரு மதில்களுடன் இருந்த கோட்டை எல்லைக்குள் இருந்த மைய கட்டிடங்களில் ஒன்று இது.

ஜேம்ஸ் கார்டினர் தனது நூலில் (Description of Ceylon - 1807) ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் காலமான டச்சு ஆளுநர் வான் ஏஞ்சல்பீக்கின் அந்த இல்லத்தைப் பற்றிக் கூறுகிறார்:


"இது கொழும்பு கோட்டையின் மிகப்பெரியதும், சிறந்த வசிப்பிடமாகும். இப்போது தீவின் ஆளுநரான மேஜர் ஜெனரல் கௌரவ தோமஸ் மெயிட்லாண்ட் அவர்களின் வசமாக்கப்பட்டிருக்கிறது. இது பிரதான பாதையில் அமைந்திருக்கிறது, இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த இல்லத்தின் ஒரு பக்கத்தில் மேல் பால்கனியில் இருந்து கடல், சாலை, துறைமுகம் என்பவற்றை விசாலமாகப் பார்க்க முடியும். மறுபுறம், ஏரி, புறக்கோட்டை, கறுவாத் தோட்டங்கள் போன்றவற்றை காண முடியும்" என்கிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த மாளிகையில் பல உயர் அதிகாரிகளின் ஆடம்பர களியாட்டங்கள் நிகழ்த்தப்பட்ட இடமாக இருந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையைத் தொடர்ந்து ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்ரிக் வெற்றியுடன் கொழும்புக்குத் திரும்பியபோது இங்கே பெரு விழாவாக களியாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புறக்கோட்டையில் பிரதான வாயிலான கைமன் வாயிலில் (Kayman’s Gate) ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக வாயில்வளைவு அமைக்கப்பட்டு, கவர்னர் அங்கிருந்து தனது துருப்புக்களைக் கடந்து சென்றார். மெயின் வீதியிலிருந்து அரச மாளிகைக்கு செல்லும் பாதை நெடுகிலும், கோட்டையில் பீரங்கிகளும் துறைமுகத்தில் தரித்து நின்ற போர்க்கப்பல்களில் இருந்த பீரங்கிகளும் முழங்கி அவருக்கு வணக்கம் செலுத்தின.ஆளுநர் அரச மாளிகையில் இறங்கியதும், குடியிருப்பாளர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். பாணும் சூப்பும் வழங்கி அன்றைய இரவு உணவு பகிரப்பட்டு கொண்டாடப்பட்டன.

ஆளுநர் ரொபட் ஹோர்ட்டனின் காலத்தில் (1831-1837) 700 பவுண்டுகள் செலவில்  பழுதுபார்க்கப்பட்டது. அதன் பின்னர் 1852ல் ஆளுநர் ஜார்ஜ் ஆண்டர்சனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அந்த மாற்றங்கள் தான் நீண்ட அகாலம் நிலைத்திருக்கிற இந்த கட்டிட அமைப்பு.

ஃபிட்ச் டெய்லர்  (Fitch Waterman Taylor) தனது பயணக்குறிப்பில் கவர்னர் மாளிகையை விசாலமான மாளிகை என்று அழைத்தார்:

“நான் வராந்தாவில் உலாவினேன்.., வெகுநேரம் நான் மேல் அறைகளைக் கடந்து சென்றேன். வராந்தாவின் தரைவரை வெகுதூரத்தில், ஜன்னல்கள் வழியாக, கடற்பரப்புடன் வீசும் ஒவ்வொரு காற்றின் சுவாசத்தையும் மகிழ்ச்சியுடன் பெறுவதற்குத் தயாராக இருந்தேன். ஆழமாக உருளும் கடலலை சத்தமும், அழகான, உன்னதமான, நித்திய கடல், அமைதியாகவும், கொந்தளித்தும் காற்றைப் பரப்பியும் கொண்டிருந்தது.”
1875 ஆம் ஆண்டைச் சேர்ந்த படம் இது. இராணி மாளிகை

அவர் மேலும் கூறுகிறார்: "நான் மேல் வராந்தாவுக்கு படிக்கட்டுகளின் வழியாக ஏறியபோது, ஆளுநர் என்னை அணுகினார்; எங்களுக்கு முன்னால் இருந்த காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாங்கள் கைப்பிடியின் மீது சாய்ந்தபோது, கவிதையாக வெளிப்படுத்த முனைவதை அவர் கண்டுகொண்டார். சிறிது நேரம், நாங்கள் இந்த இனிமையான பால்கனியில் உலாவினோம், கடற்கரைக்கும் பூங்காவுக்கும் இடையில் உள்ள மைதானங்களைப் பார்த்தோம், முன்னோக்கில் வெள்ளை கலங்கரை விளக்கம் இருந்தது. பிரகாசமான சந்திரன், தெளிவான மற்றும் ஆழமான நீல வானத்தின் வழியாக தனது அழகான பாதையில், இரவு முழுவதும் நகர்ந்து கொண்டிருந்தது, அந்த மென்மையான பிரகாசத்தில், அங்கும் இங்கும் மட்டுமே கவர்ச்சியான மேகங்களின் தோற்றம் புதிய அழகைச் சேர்த்தது ". என கவித்துவமாக விளக்குகிறார்.

விக்டோரியா மகாராணியின் இரண்டாவது புதல்வனான இளவரசர் அல்பிரட் இலங்கை வந்தது 1870 இல். இலங்கைக்கு முதற்தடவையாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் விஜயம் அது தான். அவருக்கு வரவேற்பு உற்சவம் இங்கே தான் நிகழ்ந்தது. இங்கே தான் தங்கியுமிருந்தார். அது ஆளுநர் ரொபின்சன் காலத்தில் (Sir Hercules Robinson 1865-72).

அதன் பின்னர் 1875 ஆம் ஆண்டு இளவரசர் எட்வர்ட் (பின்னாளில் 7வது எட்வர்ட் அரசர்) விஜயம் செய்தபோது வில்லியம் கிரகெரி (William Gregory 1872-77) ஆளுநராக இருந்தார்.

டச்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பல கட்டடங்களை ஆங்கிலேய உயர் அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திக் கொண்ட போதும் மிகவும் உயரிய தரத்தில் கொழும்பில் இருந்த அரண்மனை இதுவாகத் தான் இருந்ததால் பிரிட்டிஷ் ஆளுநர்களின் இல்லமாக இது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. அதாவது இலங்கையின் முதற் பிரஜையின் இல்லமாக இது தொடர்ந்தது. இலங்கையை ஆண்ட 29 ஆளுநர்கள் இதில் வசித்திருக்கிறார்கள்.

இந்த ஆளுநர்கள் இந்த மாளிகையின் பெருமைகளைப் பற்றி பல குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆளுநர் கிரகெரி எழுதும் போது,

“பெரிய மற்றும் காற்றோட்டமான படுக்கையறைகள், ஒவ்வொன்றிலும் பிரமாண்டமான சொந்த குளியல் அறைகள், நீந்துவதற்கு போதுமான அளவு தொட்டி; எழுபத்தைந்து அடி நீளமுள்ள வரவேற்பறை, கடலையும் பூங்காவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதில் மரங்கள் அனைத்தும் பூக்களால் நிரம்பியிருந்தன, அவற்றில் சில மிகவும் அழகாக இருந்தன, நான் இதுவரை பார்த்திராதவை. இந்த மாளிகை அரசு செலவில் விளக்கேற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடிகளும் மண்பாண்டங்களும் அரசால் வழங்கப்பட்டன. எனது பயன்பாட்டுக்காக ஐந்து சதவீத செலவை செலுத்த வேண்டியிருந்தது. எனக்கான தனிப்பட்ட ஊழியர்களுக்கான சம்பளத்தை நானே வழங்கினேன். தோட்டத்தைப் பராமரிக்கவும் சேர்த்து 12 ஊழியர்கள் சீருடையில் பணியாற்றினார்கள்.” 

1948 சுதந்திரத்துக்குப் பின்னரும் இலங்கையின் ஆளுநர் மாளிகையாகத் தான் அது தொடர்ந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது ஆளுநர் நாயகம் ஹென்றி மூரின் பதவிப் பிரமாணம் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இங்குதான் இடம்பெற்றது. 1954 ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியின் ராஜரீக வருகையின் போதுஅவரின் கணவரோடு இங்கே தங்கியிருந்தார்.


1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டது. டொமினியன் அந்தஸ்திலிருந்து இலங்கை மீண்டதன் மூலம் பிரித்தானிய முடியிடம் இருந்து நிரந்தரமாக விடுதலையானது. அந்த யாப்பின் மூலம் ஆளுநர் ஆளுநர் நிலை கிட்டத்தட்ட ஜனாதிபதி பதவியாக மாறியது. அன்றிலிருந்து இராணி மாளிகை ஜனாதிபதி மாளிகையாக மாறியது. ஒலிவர் குணதிலக்க 1962 மார்ச் 2 ஆம் திகதி வரை இங்கு வசித்தார். அப்போதைய இராணுவ அரச கவிழ்ப்புச் சதியில் சந்தேகிக்கப்பட்ட அவர் நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில் அந்த இடத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட வில்லியம் கொபல்லாவ இரண்டு தடவைகள் ஆளநராக பதவி வகித்த போது இங்கே தான் வசித்தார். 1972 ஆம் ஆண்டு அவர் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவாகிய போது இது ஜனாதிபதி மாளிகையாக அழைக்கப்பட்டது. ஜே.ஆர், பிரேமதாச, கோத்தபாய போன்ற ஜனாதிபதிகள் தமக்கான இல்லமாக தமது சொந்த இல்லங்களை பெரும்பாலும் பயன்படுத்திய போதும் உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கான அரண்மனையாக இதைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இங்கே அவர் வசிக்கவில்லை.

இந்த மாளிகையை பழுது பார்க்கும் தேவை 80 களில் உணரப்பட்டது. அடுத்த பத்தாண்டுகள் அதன் பழுதுபார்ப்புக்காக செலவிடப்பட்டது. அதனை இலங்கையில் மிகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான கொப்ரி பாவா (Geoffrey Bawa) அந்தப் பணியை அற்புதமாக செய்து முடித்தார். இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர் .ஜெயவர்த்தன அவரின் சொந்த இல்லமான ப்றேமரில் (Braemar). ஆனாலும் இந்த இடைக்காலத்தில் முக்கிய அரச சந்திப்புகளுக்கு இந்த மாளிகையைப் பயன்படுத்தினார். 1987 ஆம் ஆண்டு ராஜீவ் ஜே.ஆர் உடன்படிக்கைக்கான சந்திப்புகள் இங்கே தான் நிகழ்ந்தன. இந்த மாளிகைக்கு வெளியில் தான் ராஜீவ் காந்தி இராணுவ மரியாதை ஏற்பு நிகழ்வில் கடற்படை சிப்பாயால் தாக்கப்பட்டார்.

1993 இல் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதும் அவருக்குப் பதிலாக டீ.பி விஜேதுங்க ஜனாதிபதியாகி இந்த மாளிகையில் அவரின் ஓராண்டு கால ஆட்சியின் போது வசித்தார். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க ஆட்சியமைத்த வேளை அவர் ஜனாதிபதியின் வாசஸ்தலமாக அலரி மாளிகையைப் பயன்படுத்தினார். பிரதமராக சிறிமா பண்டாரநாயக்க அவருடன் அங்கேயே வசித்து வந்தார். ஆனால் 1999 ஆம் ஆண்டு அவரின் பதவிக் காலம் நிறைவுறும் வரை அங்கேயே தங்கிய போதும். மீண்டும் அவர் தெரிவு செய்யப்பட்ட போது ஜனாதிபதி மாளிகையில் வசிக்கத் தொடங்கினார்.

இந்த மாளிகையைச் சூழ அழகான பூங்காவை அமைத்தவர் 1883 –1890 காலப்பகுதியில் இலங்கையின் ஆளுநராக ஆட்சி செய்த ஹெமில்டன் கோர்டன் (Sir Arthur Hamilton Gordon). 1887 ஆம் ஆண்டு விக்டோரியா இராணியின் பொன் விழா கொண்டாட்டம் நிகழ்ந்த போது, மாளிகையோடு அண்டிய நான்கு ஏக்கர் நிலத்தில் தனது சொந்தச் செலவில் அந்தப் பூங்காவை அவர் அமைத்தார். அன்றிலிருந்து அந்தப் பூங்கா கோர்டன் கார்டன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதை ஒரு இரகசியப் பூங்கா என்றும் சிலர் அழைப்பதைக் கண்டிருக்கிறோம். பல்வேறு அரிதான மரங்களும், தாவரங்களும் அங்கே உள்ளன. 1970கள் வரை அந்தப் பூங்காவை பொதுமக்களும் அனுபவித்தார்கள். அதன் பின்னர் அது இந்த மாளிகையோடு இணைக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது.

1920 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த விக்டோரியா மகாராணியின் வெண்கலச் சிலை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அகற்றப்பட்டு கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டது. மேலும் 1505 ஆம் ஆண்டு போர்த்துகேயர் இலங்கைக் கைப்பற்றிய போது கொழும்பு துறைமுகத்தின் அருகில் 20 தொன் எடையுள்ள ஒரு கல்லில் தமது சின்னத்தை அடையாளமாகப் பொறித்தார்கள். 1875 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் துறைமுகத்தை மீள்நிர்மாணம் செய்தவேளை இந்தக் கல் அவர்களுக்கு கிடைத்தது. அதனை அவர்கள் கொண்டு வந்து இந்த இராணி மாளிகையின் பூங்காவில் வைத்தார்கள். ஆனால் அதற்கு என்ன ஆனதென இன்றும் தேடுகிறார்கள்.

இலங்கையின் நில அளவையைக் குறிக்கும் போது. இந்த இராணி மாளிகையில் இருந்து தான் சகல பிரதேசங்களின் தூரங்களும் அளவிடப்பட்டு வருகின்றன. 1830 இல் கொழும்பு - கண்டி வீதி அமைக்கப்பட்டதிலிருந்து இந்த வழிமுறை பின்பற்றத் தொடங்கியது.

இந்த மாளிகையை எவரும் இலகுவில் செல்ல முடியாத ஒன்றாகவே ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. ஆளுநர்களும், காலனித்துவ அதிகாரிகளும், மாளிகைப் பணியாளர்களும் மட்டுமே அங்கு சென்று வரும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். 


1996 ஆம் ஆண்டு இந்த மாளிகையின் அருகில் இருக்கும் இலங்கையின் மத்திய வங்கியின் மீது நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் பின்னர் ஜனாதிபதி மாவத்தை (வீதி) மூடப்பட்டது. பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு “நல்லாட்சி அரசாங்கத்தின்” போது தான் திறக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இது ஒரு வார காலத்துக்கு போது மக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டது. பல பாடசாலை மாணவர்களும் போது மக்களும் நீண்ட வரிசையில் இந்த மாளிகையைப் பார்த்து வியந்து சென்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்த மாளிகையின் அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. சுமார் மூன்று பில்லியன் ரூபாய்கள் அதற்காக செலவிடப்பட்டன. யுத்த பீதியின் காரணமாக நிலக்கீழ் இரகசிய அறைகளும் கட்டப்பட்டன. அவரின் குடும்பத்தினரின் ஆடம்பர மாளிகையாகவும் மாற்றப்பட்ட செய்திகள் அப்போது வெளிவந்தன. மாதாந்த மின்சார பாவனைக்கான கட்டணம் மாத்திரம் மூன்று மில்லியன்கள் செலுத்தப்பட்டன.

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் 2013 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது ராஜபக்ஸ குடும்பத்தினரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த வேளை

டச்சு, பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் கலவையான அம்சங்களை ஒருங்கிணைத்து, இந்த இரண்டு மாடிக் கட்டிடம் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கட்டிடத்தின் உட்புறம் பல உறுதியான மர வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நேர்த்தியான தளபாடங்கள் மற்றும் தளபாடங்கள் கட்டிடத்தின் பிரமாண்டத்தை அலங்கரித்து நிற்கிறது. இந்த மாளிகையின் தளபாட அமைப்புகளைப் பற்றி ரொபின் டி ஜோன்ஸ் (Robin D.Jones) எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் விரிவான விபரங்களை உள்ளடக்கியது.


கொழும்பு கண்டி வீதியை அமைப்பதற்கு வழி வகுத்த ஆளுநர் சேர் எட்வர்ட் பார்ன்ஸின் வெண்கலச் சிலை அரண்மனையின் முன் வாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகையில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி பிற்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த அரச விருந்தினர்களும் பல பிரமுகர்களும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மாளிகையின் நுழைவாயிலில் ஒரு பாரிய இரும்பு வாசல் உண்டு. அங்கிருக்கும் சாவடியில் காவலாளிகள் ஆயுதமேந்தி பாதுகாக்கின்றனர். லண்டனில் உள்ள மகாராணியின் அரண்மனைக் காவலாளிகளைப் போல இவர்கள் விசேடமான சீருடை அணிந்து உரிய நேரத்துக்கு அணிவகுத்து வந்து கடமையில் மாறுவதை பலர் வந்து பார்வையிடுவார்கள்.

நன்றி - தினகரன் - 20.05.2022

அலரி மாளிகை : சாராயக் களஞ்சியம் அரச தலைவர்களின் இருப்பிடமான கதை - (கொழும்பின் கதை – 27) - என்.சரவணன்

கொழும்பு 3இல் கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில், அமெரிக்க தூதுவராலயத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்புடன் இருக்கிறது இந்த மாளிகை. இலங்கையில் அதிக பாதுகாப்புடன் இருக்கும் இல்லம் இது தான் என்றும் கூற முடியும்.

ஆயிரக்கணக்கானோர் கூடக்கூடிய மண்டபமும், பல சந்திப்பு அறைகளையும், அமைச்சரவைக் கூட்ட அறை, வசிப்பிடத்தையும், மேலும் பல நிலக்கீழ் அலுவலகங்களையும் கொண்ட மாளிகை அது.

இன்றைய அலரி மாளிகை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலமாக இருக்கிறது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவைத் தவிர; சுதந்திரத்திற்குப் பின்னர் பிரதமர்களாக பதவி வகித்த அனைத்து தலைவர்களும் தமது பதவிக் காலத்தில் இங்கே வசித்திருக்கிறார்கள்.


அதுமட்டுமன்றி பல அரசாங்க கவிழ்ப்புக் கதைகளின் புகலிடமாக இது இருக்கிறது. பல கிளர்ச்சிகளின் கதைகளையும் பரகசியமாகக் கொண்டிருக்கும் மாளிகை. ஒன்பது பிரதமர்களின் கீழ் செயலாளராக பணியாற்றிய பிரபல சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோன் பிற்காலத்தில் தனது அனுபவங்களை “Rendering Unto Caesar” என்கிற பெயரில் இந்த அலரிமாளிகை தலைவர்களைப் பற்றி எழுதினார். மிகவும் சுவாரசியம் நிறைந்த அலரி மாளிகை அரசியல் சம்பவங்களின் தொகுப்பு அது.

“அலரி மாளிகை” என்கிற அதே அர்த்தத்தில் தான் சிங்களத்திலும் “அரலிய கஹா மந்திரய” (அலரி மர மாளிகை) என்று  அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் இதனை “டெம்பில் ட்ரீ” (Temple Trees) என்கிற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இலங்கையில் அலரி மரம் எங்கெங்கும் காணப்படும் மரம். எப்போதும் பூத்துக் குலுங்கும் மரமாக இருப்பதால் அதனை பௌத்த விகாரைகளில் வணங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே பல பௌத்த விகாரைகளில் நிச்சயம் காணப்படும் மரமாகப் பேர் பெற்றது. அதற்கு ஒரு தெய்வீக மரியாதை இலங்கையில் இருக்கிறது. எனவே ஆங்கிலத்தில் இதனை ஒரு “கோவில் மரங்கள்” (Temple Trees) என்கிற பெயர் கொண்டு அழைப்பதில் ஆச்சரியமில்லை. (1)

ஒல்லாந்தர் காலத்தில் கறுவா உற்பத்திக்கு அடுத்ததாக வருமானம் ஈட்டக்கூடிய பெரிய லாபகர தொழிலாக இருந்தது சாராய உற்பத்தித் தொழிலே. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சாராயத்துக்கு பெரும் மவுசு இருந்தது. 

கிழக்கத்தேய நாடுகளில் பரவிய மலேரியா மற்றும் தொற்று போன்ற தொற்று நோய்களுக்கு தெய்வீக மருந்தாக அதனைப் பயன்படுத்த முயன்றனர். அவர்களின் படையெடுப்பு ராணுவத்தின் நாளாந்த பாவனைக்காக அனுப்பிவைத்தார்கள்.

இந்த சாராய உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட தென்னை நிறைந்த கடற்கரை பிரதேசங்களில் பதப்படுத்தும் குளிர் களஞ்சியங்களையும் (De Brandery) கட்டினார்கள். எனவே அலரி மாளிகைப் பகுதியை “De Brandery” என்றும் அழைத்தார்கள். அவ்வாறு கொழும்பு நகரில் பிரதான “பிறன்டரி” அலரி மாளிகைக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியில் தான் இருந்தது. 

ஆம்! இலங்கையின் அரச தலைவர்களின் வாசஸ்தலம் அன்றைய சாராய பதப்படுத்தி பேணும் களஞ்சியம். கொள்ளுபிட்டியில் இருந்த விசாலமான தென்னந்தோப்புக்கு அருகாமையில் இப்படி சாராயம் வடிகட்டுவதற்கு இலகுவாக இந்த “பிறன்டரி” இருந்தது. அதற்கும் முன்னர் அங்கே ஒரு சிறுவர்களுக்கான அநாதை இல்லமும், இராணுவ அலுவலகமும் இருந்ததாக அறியப்படுகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் கொள்ளுப்பிட்டி குடியிருப்புகள் உள்ள பகுதியாக காணப்படவில்லை. கொழும்பு கோட்டைக்கு அப்பாலுள்ள ஹல்ஸ்டாப், புளுமெண்டல், வுல்பெண்டல், புனித செபஸ்தியன் போன்ற தேவாலயங்களை அமைத்து அதை அண்டிய குடியிருப்புகளை பேணி வந்தார்கள். இன்றைய கொழும்பு 7 கூட கறுவாத் தோட்டப் பகுதியாகத் தான் இருந்தது.

“பிறன்டரி” மாளிகையின் முதலாவது உரிமையாளர் யார் என்கிற தகவலை உறுதியாக அறிய முடியாவிட்டாலும் 1796 இல் இலங்கை ஆங்கிலேயர்கள் வசம் ஆகும் போது இந்த மாளிகை அப்போதைய டச்சு தலைமை களஞ்சிய ஆதிகாரியான டேனியல் தித்லொப் (Daniel Ditloff von Railzow) என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் இலங்கையில் பிறந்தவர் அதேவேளை ஆங்கிலேய அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த பிரமுகராக இருந்தார். அவரின் காலத்துக்குப் பின் இக்கட்டிடத்தில் சாராயப் பதப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அன்று கொழும்பில் இருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடமாக இது தான் இருந்தது.

ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களாக வாழ்ந்த ஒல்லாந்தர்களில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக ஆகியிருந்த ஒல்லாந்தர்களை தமது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டார்கள். அப்படி இணைக்கப்பட்ட ஒருவர் தான் பிரெடிரிக் பெரன் மைலியஸ் (Frederick Baron Mylius). அவர் ஜெர்மனில் ஸ்டுட்கார்ட் நகரில் 1762இல்  பிறந்தவர். அவர் காலி மாத்தறை மாவட்டத்தின் நீதவானாக கடமையாற்றினார். அவர் இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியும் கூட. இந்த மாளிகையை அவர் தான் முதற் தடைவையாக (1805) வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டவர். அதுவரை அங்கு இயங்கிய சாராய “பிறன்டரி” யையும் அவர் அகற்றினார். முன்னாள் ஒல்லாந்து ஆளுநரான வில்லம் வண்டர் கிராப்பின் (Willem Vander Graaf) புதல்வியான அக்னஸ் கிளாராவைத் (Agnes Clara) தான் மைலியஸ் திருமணம் முடித்திருந்தார். அதனால் தனது புதல்வியின் திருமணத்தை இந்த மாளிகையில் தான் நடத்தினார் வில்லம் யாகோப். அந்த திருமண வைபவத்துக்கு இலங்கையின் முதலாவது ஆங்கிலேய தேசாதிபதியான பிரெடெரிக் நோர்த்தும் (Frederick North) கலந்து கொண்டார். வில்லம் யாகோப்பின் மனைவியின் தந்தை தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனின் ஆளுநராக இருந்த கொர்னேலியஸ் யாகோப் (Cornelius Jacob Vander Graff).

டச்சுக்காரராக இருந்தும் அவர் ஆங்கிலேயர்களின் கீழ் அதிகாரியாக பணிபுரிய முன்வந்ததால் அவருக்கு இந்த மாளிகை உரிமையானது.

மைலியஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இயங்கி வந்தார். இலங்கையில் அப்போது நிலவிய அடிமைமுறையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அவர் குரல் கொடுத்தார். இது பிரித்தானிய அரசாங்கத்துக்கு நெருக்கடியாக இருந்தது. இறுதியில் 14 ஓகஸ்ட் 1807 ஆம் ஆண்டு தனது 45வது வயதில் 1807ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் அவர் திடீர் சுகவீனத்தால் மரணமுற்றார் என்று 21.08.1807 வர்த்தமானி பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.(2)  ஆனால் மைலியஸ் மீதான ஊழலை விசாரிப்பதற்கு முயற்சித்தவேளை தற்கொலை செய்துகொண்டார் என ஆளுநர் சேர் தோமஸ் மெயிற்லான்ட் (Sir Thomas Maitland) பற்றிய நூலில் வில்சன் (H.F.Wilson) குறிப்பிடுகிறார்.(3) மைலியஸ் பணிபுரிந்தது ஆளுநர் மெயிற்லான்ட்டின் கீழ் தான். மைலியஸ் இந்த மாளிகையில் இரண்டு ஆண்டுகள் தான் வாழ்ந்தார். (4)

அவருக்குப் பின்னர் இந்த மாளிகையின் உரிமை; சிவில் உத்தியோகத்தர்களான லெயார்ட் சகோதர்களிடம் இருந்தது. சுமார் 30 ஆண்டுகளாக மேல்மாகாண அரசாங்க அதிபராக பிரபலமாக இருந்த இருந்த பீட்டர் லெயர்ட் (Henry Peter John Layard) அவர்களில் ஒருவர். கொழும்பு கிராண்ட் பாஸ்ஸிலுள்ள லெயார்ட் ப்ரோட்வே வீதி அவரின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்.

அவருக்குப் பின்னர்; ஜோன் வால்பேப் (John Walbeoff) என்கிற கறுவா திணைக்களத்தின் தலைவர் 1830குப் பின் இதனை சொந்தமாக்கி இருந்தார். எப்போதும் நண்பர்களைக் கூட்டி களியாட்டம் செய்யும் வழக்கமுள்ளவராக இருந்தார் அவர். அப்படி வருகை தந்த ஒரு இளைஞர்; ஜோன் வால்பேப்பின் மனைவியுடன் காதல் கொண்டுவிட்டார். இது சர்ச்சையாகிவிட்டது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வால்பேப் தனது நண்பரை வாள் சண்டைக்கு அழைத்தார். அலரி மாளிகையின் தோட்டத்தில் சண்டை ஏற்பாடானது. இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதில்  வால்பேப் கொல்லப்பட்டார்.

வால்பேப்புக்குப் பின்னர் மேல் மாகாண அரசாங்க அதிபராக இருந்த சீ.ஆர். புல்லர் (C.R. Buller) 1840 இல் இருந்து வாழ்ந்து வந்தார். இன்றும் பொரல்லையிலிருந்து பம்பலப்பிட்டி வரையான வீதிக்கு வைக்கப்பட்டிருக்கிற “புல்லர் வீதி” இவரின் நினைவாக வைக்கப்பட்டது தான். 

அதன் பின்னர் இலங்கையின் முதலாவது சுதந்திரப் பத்திரிகையான “சிலோன் ஒப்சேர்வர்” (1835 இல் இது Colombo Observer ஆனது) பத்திரிகையின் ஆசிரியரும், இலங்கை பிரதான மருத்துவ அதிகாரியுமான ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தோப்பர் எலியட் (Dr, Christopher Elliot) 1848 ஆம் ஆண்டு இதனை வாங்கினார். தனது பத்திரிகையின் மூலம் ஆங்கிலேய அரசை கடுமையாக விமர்சித்தவர் அவர். 1848 இல் மாத்தளை கிளர்ச்சியை ஆங்கிலேய அரசு அடக்கிய விதத்தை எதிர்த்து கடுமையாக சாடியது இந்த அலரி மாளிகையில் வசித்து வந்த போது தான். இந்த கிளர்ச்சிக்கு எலியட் பக்கபலமாக இருந்து ஆதரவு வழங்கியதாகவும், அலரி மாளிகையில் அக்கிளர்ச்சிக்கான இரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் கூட கதைகள் உண்டு. அன்றைய ஆளுநர் டொரிங்டனுக்கு எதிராக இதே அலரி மாளிகையில் பெரும் எதிர்ப்புக் கூட்டத்தை ஒழுங்கு செய்தார் எலியட். ஆளுநர் பொலிசாரை அலரி மாளிகைக்கு அனுப்பி கூட்டத்தைக் கலைத்தார். இறுதியில் எலியட் வென்றார். ஆளுநர் டொரிங்டனும் காலனித்துவ செயலாளர் எமர்சன் டெனண்டும் பதவி விலக்கப்பட்டு இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள்.

காலி வீதி அமைக்கப்படுவதற்கு முன்னர் விசாலமான நிலமாக இருந்த இந்த காணி பின்னர் பாதைக்காகவும், கொள்ளுப்பிட்டி பொலிஸ் போன்றவற்றுக்காகவும் குறுகி சிறியதாக ஆனாலும் இன்றும் அது ஒரு அழகான பசுமைப் பகுதி தான்.

1856 ஆம் ஆண்டு ஜோன் பிலிப் கிரீன் (John Philip Green) இதனை 2300 பவுண்களுக்கு வாங்கினார். சூழலியலாளரான அவருக்கு கோப்பித் தோட்டங்கள் உரிமையாக இருந்தன. தாவரவியல் அறிவியலில் நிபுணராக இருந்தார். அவர் தான் இந்தக் காணியை பசுமையாக மாற்றியவர். அவர் வைத்த மரங்கள் தான் அலரி மரங்கள். அவர் சூட்டிய பெயர் தான் “Temple Tree”. அங்கே அவர் மயில்களையும், பல்வேறு பறவை, விலங்குகளையும் வளர்த்தார். 1881ல் பிரபல தாவரவியலாளர் ஏர்னஸ்ட் ஹெக்கில் (Ernst Haeckel) அப்போது இலங்கை வந்திருந்த போது அலரி மாளிகையில் அவர் கண்ட இத்தகைய காட்சிகளைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை அம்மாளிகையின் உரிமையாளர் ஸ்டேனிஸ்போத்தின் (Stanisforth Green) அழைப்பின் பேரில் அங்கே விஜயம் செய்ததாக அவர் குறிப்பிடுகிறார்.(5)  

ஜோன் பிலிப்புக்குப் பின்னர் இதனை அவரின் சகோதரர் ஸ்டேனிஸ்போத்துக்கு (Stanisforth Green) சொந்தமானது. அவர் தான் இலங்கையின் ஐஸ் தொழிற்துறையின் முன்னோடியாக கருதப்படுபவர். அவர் அலரி மாளிகைக்குப் பின்னால் ஒரு ஐஸ் உற்பத்திச்சாலையை உருவாக்கினார். பேரை வாவி அதன் எல்லையாக இருந்தது. அவரின் மரணத்துக்குப் பின்னர் அலரி மாளிகை 1899 இல் ஏலத்துக்கு விடப்பட்டது. ஏலத்துக்கான அன்றைய விளம்பரத்தில் “இந்த கட்டிடத்தை வாங்குபவர் கொல்லுபிட்டியில் உள்ள மிக இனிமையான நிலத்தின் உரிமையாளராக மட்டுமன்றி நகரத்தில் உள்ள பல வரலாற்று நிரூபணங்களின் உரிமையாளராகவும் ஆவார்". என்று குறிப்படப்பட்டிருந்தது. இறுதியில் டெரன்ட் அண்ட் ஹென்டர்சன் (Tarrant Henderson & Co) கம்பனி இதனைக் கொள்வனவு செய்ய முன்வந்தது. 140,000 ரூபாவுக்கு அதன் உரிமையாளர் J.A.Henderson அதனைக் கொள்வனவு செய்தார். ஆனால் குறுகிய காலம் தான் அவரும் அங்கே வாழ்ந்தார்.

1903 ஆம் ஆண்டு இந்தக் காணி முழுமையாக பிரித்தானிய அரசர் எட்வர்ட்டுக்கு சொந்தமானது. அதிலிருந்து பிரித்தானிய பிரபுக்களின் வாசஸ்தலமானது. அரசாங்கம் 1903 ஆம் ஆண்டு இதனை 99,000 ரூபாவுக்கு கொள்வனது செய்தபோது இந்த காணி ஏக்கர்களையும், 8 பேச்சர்ஸ்களையும் மட்டுமே கொண்டிருந்தது. அதன் பிரகாரம் அங்கே முதலாவது குடியேறிய ஆளுநர் ஹியூஜ் கிலிபோர்ட் (Hugh Clifford 1907-13). அதன் பின்னர் ஆளுநர் எட்வர்ட் ஸ்றப்ஸ் (Edward Stubbs) போன்றோரும் இங்கே வசித்தார்கள். ஆளுநருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய காலனித்துவ செயலாளரின் வசிப்பிடமாக இது ஆக்கப்பட்டது. சர் சார்ல்ஸ் கொலின்ஸ் அப்படி அங்கே குடியேறினார்.

டொனமூர் அரசியல் திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நான்கு பிரதான செயலாளர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக மாறியது. 


1948 பிப்ரவரி இல் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கியதும் “சுதந்திர” இலங்கையின் பிரதமரின் வாசஸ்தலமாக ஆக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இங்கே  1948ஆம் ஆண்டு  19ஆம் திகதி குடியேறினார். அதே ஆண்டு இந்த மாளிகையை புதுபிப்பதற்காக அரசு 50,000 ரூபாவை ஒதுக்கியது. அதன் மூலம் இந்த மாளிகையின் வசதிகள் பெருப்பிக்கப்பட்டது. பெரிய மண்டபம், விசாலமான உணவு அறை என்பன பெருப்பிக்கப்பட்டன. அவருக்குப் பின்னர் எஸ்.டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்க இங்கு வசிக்க வரவில்லை. அதற்குப் பதிலாக அவரின் ரோஸ்மீட் பிளேஸ் இல்லத்திலேயே வசித்தார். அவர் கொல்லப்பட்டதும்  அவரது அந்த இல்லத்தில் வைத்துத் தான். அலரி மாளிகையை அவர் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டார். பண்டாரநாயக்கவின் காலத்தில் வாராந்தம் திங்கள் தோறும் நடத்தும் ஊடக மாநாட்டை “கிரிபத்” (பாற்சோறு) ஊடக சந்திப்பு என்றே அழைத்தார்கள். பத்திரிகையாளர்களுக்கு அங்கே பாற்சோறு வழங்கப்பட்டது.

பல ராஜதந்திரிகளுக்கு தமது சந்திப்புகளையும், வரவேற்பு நிகழ்வுகளையும் செய்த ஒரு நினைவு இடமாக இது இருக்கிறது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதுவரை ஆளுநரின் வாசஸ்தலமாக இருந்த இராணி மாளிகை ஜனாதிபதி இல்லமாக ஆனது. ஆனால் அதை சம்பிரதாய நிகழ்வுக்கு மட்டும் தான் ஜே.ஆர். பயன்படுத்தினார். வாசஸ்தலமாக அலரி மாளிகையைத் தான் பயன்படுத்தினார். எனவே பிரதமரின் இருப்பிடத்துக்கு வேறு இடத்தை ஒழுங்கு செய்ய நேரிட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு சில நாட்களே இங்கு வாழ்ந்தார். அவரின் சொந்த சொகுசு பங்களாவிலேயே (Braemar) அவர் 1977 இல் பிரதமராக பதவியேற்ற சில நாட்களின் பின்னர் வாழ்ந்தார். 1978இல் 2வது குடியரசு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு பிரதமரின் உரிமைகள் குறைக்கப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேமதாச அலரி மாளிகையை உத்தியோகபூர்வமான இல்லமாக ஆக்கிக்கொண்டபோதும், அதிகமான காலத்தை அவர் தனது சொந்த இல்லமான வாழைத்தோட்டத்தில் இருந்த “சுச்சரித்த” இல்லத்தை பயன்படுத்தினார். ஜனாதிபதியான பின்னரும் பிரேமதாச அதே சுச்சரித்த இல்லத்தைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்.

பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த அனைவரும் அப்படித்தான் பயன்படுத்தினார்கள். சந்திரிகாவின் ஆட்சியின் போது இது ஜனாதிபதியின் வாசஸ்தலமாக ஆனது. அப்போதைய யுத்தம் காரணமாக இது தாக்கப்படலாம் என்கிற ஐயத்தில் இந்த மாளிகையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதிபாதுகாப்பு வலயமாக ஆக்கப்பட்டதுடன், இங்கே விமான எதிர்ப்பு பீரங்கிகளும் பொருத்தப்பட்டன.



மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இந்த மாளிகையில் பாதுகாப்பு பங்கர்கள், சுரங்க வழிகள் என்பனவும் அமைக்கப்பட்டன. கூடவே நீச்சல் தடாகம் போன்றவையும் அமைக்கப்பட்டு அது மேலதிக சொகுசு நிலைக்கு உயர்த்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது சில அரச தலைவர்களின் பிள்ளைகளின் திருமண வைபவங்களுக்காக வாடகைக்கும் விடப்பட்டன. உதாரணத்துக்கு 2018 செப்டம்பரில் ராஜித்த சேனாரத்னவின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமண வைபவம் இங்கே நடத்தப்பட்டது. அதற்காக 2,180,000 ரூபா கட்டணம் கட்டியிருந்த ரசீதும் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.  அந்த திருமண நிகழ்வின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க "இனிமேல் திருமண வைபவங்கள் இங்கு நடத்த இடமளிக்கப்படாது என்று அறிவித்தார்.(6) ஆனால் 2019 ஆம் ஆண்டு அமைச்சர் விஜேமுனி சொய்சாவின் புதல்வன் கஜிடு சொய்சாவின் திருமணமும் இங்கே நடத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையை வாசஸ்தலமாக அல்லாமல் அலுவலகமாக மட்டும் பயன்படுத்தினார். ஆனால் மீண்டும் மகிந்த ராஜபக்ச 2019 இல் பிரதமராக ஆனதும் தனது வாசஸ்தலமாக பயன்படுத்தத் தொடங்கினார். 2022 யூனில் ரணில் பிரதமராக 6 வது தடவை தெரிவு செய்யப்பட்டபோது மீண்டும் தனது கடமைகளை இங்கே இருந்து ஆரம்பித்தார்.

மூன்று நூற்றாண்டுகளாக வரலாற்று முக்கியத்துவமுள்ள கதைகளை தேக்கி வைத்திருகிறது அலரி மாளிகை.

அலரி மாளிகையில் வசித்த தலைவர்கள்:

  • 1948 -1952 டி.எஸ்.சேனநாயக்க
  • 1952 -1956 டட்லி சேனநாயக்க
  • 1956 -1959 எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா
  • 1959 -1960 விஜேயானந்த தஹநாயக்க
  • 1960 -1960 டட்லி சேனநாயக்க
  • 1960 -1965 சிறிமாவோ பண்டாரநாயக்கா
  • 1965 -1970 டட்லி சேனநாயக்க
  • 1970 -1977 சிறிமாவோ பண்டாரநாயக்கா
  • 1977 -1978 ஜே. ஆர். ஜெயவர்த்தனே (அவரது தனிப்பட்ட இல்லமான பிரேமரில் வசித்தார்)
  • 1978 -1989 ரணசிங்க பிரேமதாச
  • 1989 -1993 டிங்கிரி பண்டா விஜேதுங்க
  • 1993 -1994 ரணில் விக்கிரமசிங்க
  • 1994 - 2001 சந்திரிகா குமாரதுங்க (ஜனாதிபதியாக வாழ்ந்தார்), பிரதமர் ஹொரகொல்ல வளவ்வயில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தார்.
  • 2001-2004 ரணில் விக்கிரமசிங்க
  • 2004-2015 மகிந்த ராஜபக்ச (ஜனாதிபதியாக வாழ்ந்தவர்), பிரதமர் விசும்பயாவைப் பயன்படுத்தினார்
  • 2015-2019 ரணில் விக்கிரமசிங்க
  • 2019-2022 மகிந்த ராஜபக்ச
  • 2022 ... ரணில் விக்கிரமசிங்க

நன்றி - தினகரன் - 15.05.2022

அடிக்குறிப்புகள் :
  1. Ernst Haeckel, A Visit to Ceylon, Boston, S.E.Cassono and company 1883.
  2. J.Penry Lewis C.M.G, Tombstones and Monuments in Ceylon, H, C, cottle, Government Printer Ceylon, Colombo, 1913
  3. Walter Frewen Lord, Lord, W: Sir Thomas Maitland, the Mastery of the Mediterrane, T.Fisher Unwin, Paternoster Square, London, 1898
  4. மைலியசின் புதல்வர்களின் ஒருவரான அல்பிரட் (Alfred Mylius) 1815 ஆம் ஆண்டு கண்டியைக் கைப்பற்றிய யுத்தத்தில் பிரதான படையாக இருந்த 8 வது படையணியின் கப்டன்களில் ஒருவராக கடமையாற்றியவர். அதுமட்டுமன்றி கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை மெதமானுவரவில் சுற்றிவளைத்து பிடித்த போது அந்த மலே துருப்புகளுக்கு தளபதியாக தலைமை தாங்கியவர் அல்பிரட் மைலியஸ். இந்தத் தகவல்களை Tombstones and Monuments in Ceylon என்கிற நூல் பதிவு செய்திருக்கிறது. மேலும் ஜோன் டொயிலியின் நாட்குறிப்பிலும் கண்டியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் பற்றிய விபரங்களில் எட்டு இடங்களில் அல்பிரட் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 
  5. Ernst Haeckel, A Visit to Ceylon, S.E Cassino, and Company, 1883
  6. “No more wedding receptions at Temple Trees: PM” (News), 07.09.2018 (Daily Mirror)


பழைய பாராளுமன்றத்தின் கதை (கொழும்பின் கதை – 24) - என்.சரவணன்

இலங்கை பிரித்தானியர் கைப்பற்றி சுமார் நான்கு தசாப்தங்களான பின் தான் இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவந்து ஆட்சி செய்வதற்கான முறையான அரசாங்க நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி நிறைவேற்றுப் பேரவை, இலங்கை முதலாவது சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டு ஆளுநர் சேர் றொபட் ஹோட்டன் (Governor Sir Robert Wilmot Horton) என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இன்றைய வெளியுறவு அமைச்சு இருக்கின்ற காரியாலயம் தான் முதலாவது சட்டவாக்கப் பேரவை நடைபெறும் நாடாளுமன்றமாக இயங்கத் தொடங்கியது.

இன்று வெளியுறவு அமைச்சகம் இருக்கிற கட்டிடத்துக்கு ஒரு முக்கிய வரலாறு உண்டு. பலருக்கும் அது ஒரு பழமையான கட்டிடமாக மட்டுமே தெரியும். இன்றைய ஜனாதிபதி மாளிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இராணி மாளிகை என்றே அழைக்கப்பட்டது. அதற்கும் முன்னர் அது கோர்டன் கார்டன் (Gordon Gardens) என்று அழைக்கப்பட்டது. அதன் வரலாற்றுப் பின்புலத்தை தனியாக பிறிதொருமுறை பார்ப்போம்.

இராணி மாளிகையோடு அண்டிச்செல்லும் வீதி ராணி வீதி என்று அழைக்கப்பட்டது. இந்த இராணி மாளிகைக்கு (Queen's House) அருகாமையில் உள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டிடம் 1970 களின் பின்னர் குடியரசுக் கட்டிடம் (Republic Building) என்று அழைக்கப்பட்டது. 1920 களில் இலங்கையின் அரசாங்க சபை (அதாவது அன்றைய பாராளுமன்றம்) இங்கு தான் இயங்கியது என்றால் இன்று வியப்பான செய்தியாக இருக்கும்.

அதற்கும் முன்னர் இக் கட்டிடம் காலனித்துவ செயலாளரின் காரியாலயமாக இயங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் காலனித்துவ செயலாளர் என்கிற பதவி வெளியுறவு அமைச்சருக்கு நிகரானது. ஆனால் அதை விட அதிகாரம் கூடிய பதவியாக இருந்தது. இந்தக் கட்டிடத்தில் பழைய ஓலைச்சுவடிகள், மற்றும் அரச ஆவணங்களைப் பாதுகாக்கும் சுவடிகூடத் திணைக்களமும் இயங்கியிருக்கிறது. இன்னொரு பகுதியில் முன்னூறு ஊழியர்கள் பணிபுரிந்த அரசாங்க அச்சகக் காரியாலயமும் இயங்கியிருக்கிறது. அரசாங்க வெளியீடுகள், தபால் தலைகள், இரயில் டிக்கெட்டுகள் போன்ற பல விடயங்கள் இங்கே அச்சடிக்கப்பட்டுவந்தன.

இன்னும் சொல்லப்போனால் காலனித்துவ காலத்தில் கொழும்பின் அரச இயந்திரத்தின் பிரதான மையம் இந்த சுற்றுப் பிரதேசம் எனலாம். இதை மையப்படுத்திய சுமார் ஐநூறு மீற்றர் சுற்று வட்டத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்களாக திகழ்ந்தன. எச்.ஏ.ஜே.ஹுலுகல்ல (H. A. J. Hulugalle) கொழும்பு மாநகரசபை பற்றிய தனது நூலில்  அரசாங்கக் கட்டிடக் கலைஞர் டாம் நெவில் வைன் ஜோன்ஸ் இந்தக் கட்டிடங்களின் வரலாற்றைக் கண்டறிந்த விதத்தையும் அவை எவ்வாறு காப்பாற்றப்பட்டன என்பதையும் பதிவு செய்கிறார். சேர்ச் வீதியிலும், ராணி வீதியிலும், பிரின்ஸ் வீதியிலும் இன்றும் பல பழைய அரசாங்கக் கட்டிடங்கள் உள்ளன. அரசாங்கத்தின் மேற்சபை இருந்த கட்டிடம் தான் குடியரசுக் கட்டிடம். ஆனால் அக்கட்டிடம் சிறிய அறைகளைக் கொண்டவை. இருட்டாகவும், காற்றோட்டமற்றதாகவும் அது இருந்தது. 1929ல் அரசாங்கத்தின் பிரதான காரியாலயம் காலிமுகத்திடலில் உள்ள செயலகத்திற்கு மாற்றப்பட்டதுடன், இந்த ராணி வீதிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டும் பல்வேறு மாற்றங்களுக்கும் உள்ளாகின. அதுபோல இந்த புனரமைப்புகளின் பின்னர் குறைந்த முக்கியத்துவத்தினாலும் அலட்சியத்தினாலும் விரைவாக சீரழிந்தன.

1948 ஆம் ஆண்டு சுதந்திர காலம் வரை அரசாங்கத்தின் காரியாலயங்கள் இங்கே இயங்கின. 1948 இன் பின் இக்கட்டிடத்தின் தோற்றம் நிறையவே மாற்றத்துக்கு உள்ளாகியது. இவை புதிய கட்டிடங்கள் என்று பலர் நினைக்குமளவுக்கு அவற்றின் தோற்றம் மாறி இருந்தன. இந்தக் கட்டிடத்தில் தான் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, செனட் சபை என்பவை போன்றன இயங்கத் தொடங்கின.

1930 ஆம் ஆண்டில் அரசாங்க சபை காலிமுகத்திடலில் (இப்போது ஜனாதிபதி செயலகம்) கட்டப்பட்ட பாராளுமன்றக் கட்டிடத்திற்கு  நகர்த்தப்பட்டது. 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது, சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இயங்கிய பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான செனட் சபை இக்கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியதால் அதன் பின்னர் இதை செனட் பில்டிங் என்றே பொதுவாக அழைத்தார்கள்.

1972 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் செனட் கலைக்கப்பட்டபோது, இந்த கட்டிடம் குடியரசு கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. இராஜதந்திரிகளையும், அரச தலைவர்களையும் உத்தியோகபூர்வமாக வரவேற்று சந்திப்புகளை நடத்துவதற்கு 70 களில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது வெளிவிவகார அமைச்சாக இயங்கி வருகிறது. அக்கட்டிடத்தோடு சேர்த்தாற்போல் அமைந்திருக்கும் கட்டிடம் தான் இலங்கையின் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகமாகவும் பலராலும் நான்காம் மாடி என்று அழைக்கப்படுகின்ற கட்டிடமும் அமைந்துள்ளது.

கறுவாத் தோட்டத்தில் சேர் எர்னஸ்ட் டி சில்வா (Sir Earnest De Silva Mawatha) மாவத்தையில் பிரதமர் அலுவலகம் அமைவதற்கு முன் இதுதான் பிரதமர் அலுவலகமாக திகழ்ந்தது. 

பழைய பாராளுமன்றக் கட்டிடம்

இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பார்த்தவாறு காலிமுகத்திடலின் ஒரு முனையில் பழைய பாராளுமன்றக் கட்டிடம் இன்று ஜனாதிபதி செயலகமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. மாலையில் இந்திய சமுத்திரத்தில் இறங்கும் சூரிய அஸ்தமனத்தின் போது நேரடியாக அடிக்கும் சூரிய ஒளியில் செம்மண்ணிறத்தில் அழகாக காட்சி தரும் பழமையான கட்டிடம். கிரேக்க கட்டிடக் கலையின் சாயலைக் கொண்டதாக ஐயோனிக் (Ionic) வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஏதென்ஸில் உள்ள (Parthenon) பழமையான பார்த்தினனை கட்டிடத் தூண்களை நினைவுபடுத்தும் மேற்கத்தேய பாணியிலான கட்டடக் கலையுடன் கூடிய அழகான கட்டிடம் அது. இதன் கலைத்துவ, கட்டுமான விடயங்கள் தனித்து பார்க்க வேண்டிய தனியான அங்கம்.

Sir Henry McCallum
1910 களில் அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி மெக்கலத்தின் (Sir Henry McCallum) திட்டத்தில் இது உருவானது. அப்போதைய பொதுப்பணித் துறையின் தலைமை கட்டிடக் கலைஞரான Austin Woodeson ஆல் வடிவமைக்கப்பட்டது இக்கட்டிடம். அப்போது 400,000 லட்ச ரூபாவில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் சுமார் 450,000 ரூபாய் இறுதியில் செலவானது.

இதனைக் கட்டி முடிப்பதற்கு தேவையான 1530 தொன் விசேட நிறமுடைய கருங்கற்கள் கொழும்பிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ருவன்வெல்லவில் இருந்து கொண்டு வரப்பட்டன. அப்போதெல்லாம் ஒழுங்கான பாதைகள் இல்லை. இன்று இருப்பதைப் போன்ற வாகன வசதிகளும் இல்லை. களனி கங்கைக்கு ஊடாக பேற வாவி வரை ஆற்றின் வழியாகவே இவற்றை கொண்டு வந்து சேர்த்தார்கள்.  கல்லொன்றின் உயரம் 51 அடியும் ஏழு தொன் எடையையும் கொண்டிருந்திருக்கிறது.

கட்டிடத்தின் முகப்பின் முக்கோணப் பகுதியில் 1948 வரை பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அரச சின்னமே இருந்தது. அதன் பின்னர் அது அகற்றப்பட்டு இலங்கை டொமினியன் சின்னத்தால் அது அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் அது 1972 ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசின் புதிய அரச சின்னம் பதிக்கப்பட்டது.

இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் 1930 இல் திறக்கப்பட்டபோது நாட்டில் உள்ள அனைவரும் வாக்குரிமையை பெற்றிருக்கவில்லை. ஆனால் 1931 இல் டொனமூர் திட்டம் வழங்கிய சர்வஜன வாக்குரிமையை அனைத்து மக்களுக்கும் அனுபவிக்கத் தொடங்கி மக்களால் உருவான அரசாங்கம் முதலில் இங்கிருந்து தான் சட்டவாக்கப் பணிகளை ஆரம்பித்தது. அதிலிருந்து சுமார் அரை நூற்றாண்டு காலம் நாட்டின் சட்டமன்றமாக செயல்பட்டது.

1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (Sir Herbert Stanley -1927–1931) இப்பாராளுமன்றத்தை திறந்து வைத்தார்.

1948 பெப்ரவரியில் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து 1972 வரை சுதந்திர இலங்கையின் முதலாவது சட்டமன்றமாக இயங்கியது. இளவரசர் ஹென்றி (Prince Henry, Duke of Gloucester) 1948 சுதந்திரத்தின் போது சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளுக்காக திறந்து வைக்கப்பட்ட பின்னர் “பிரதிநிதிகள் சபை”யாகவும் சுதந்திர இலங்கையின் முதலாவது சட்டவாக்க  சபையாகவும் 1972 வரை இயங்கியது. அதன் பின்னர் அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சோசலிச அரசாங்கத்தின் கீழ் “தேசிய அரசுப் பேரவை”யாக 1977 வரை இயங்கியது. 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியின் பின்னர் “இலங்கைப் பாராளுமன்றம்” என அழைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு  இலங்கையின் தலைநகராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அறிவிக்கப்பட்டு 1983 இல் அங்கு புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டதன் பின்னர் 1983 செப்டம்பர் 08 இலிருந்து ஜனாதிபதி செயலகமாக மாற்றப்பட்டு இன்று வரை அப்படியே நீடிக்கிறதும். 

இது திறக்கப்பட்ட காலத்தில் 49 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது அரசாங்க சபை. டொனமூர் திட்டக் காலத்தில் 61 உறுப்பினர்களாக உயர்ந்தது. அதுவே சோல்பரி காலத்தில் 101 ஆக அதிகரிக்கப்பட்டது. 1959 இல் 157உறுப்பினர்களைக் கொண்டிருந்த சட்டவாக்க சபை, 1972 இல் 168 உறுப்பினர்களாக ஆனது. 1978 இல் 225ஆக உயர்த்தப்பட்டது. பாராளுமன்றத்தின் தேவைகளும் உயர்ந்தன. பெரியதொரு பாராளுமன்றக் கட்டிடத்தின் தேவையை அரசு உணர்ந்தது.

1979 யூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாச கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன ஏரியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இந்த இடத்தில் தான் முன்னர் கோட்டை அரசர் மூன்றாம் விக்கிரமபாகுவின் அமைச்சர் நிஸ்ஸக அலகேஸ்வரவிண் அரண்மனை அமைந்திருந்தது. புதிய பாராளுமன்றக் கட்டிடம் ஜெஃப்ரி பாவா என்கிற பிரபல கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் புதிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்றம் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவால் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் சுகாதாரம், கல்வி, தொழில், கைத்தொழில், வர்த்தக அமைச்சுக்களைக் கொண்டிருந்த தலைமைச் செயலகக் கட்டிடமாக இது இயங்கியது. தற்போது நிதி அமைச்சும் பல வருடங்களாக இங்கே இயங்கி வருகிறது.

கட்டிடத்தின் முன்னால் இலங்கையின் தேசத் தலைவர்கள் நால்வரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஆரம்பப் பிரதமர்களான டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் சிலைகளுடன் தமிழ் அரசியல் தலைவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன், தொண்டமான் ஆகியோரின் சிலைகளை இங்கே காணலாம்.

92 ஆண்டுகளை கடந்து பாராளுமன்றக் கட்டிடம் நாட்டின் பிரதான மைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நன்றி - தினகரன் 25.04.2022


பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றிடம் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராம - (கொழும்பின் கதை – 25) என்.சரவணன்

கொட்டாஞ்சேனை ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி. இன்றும் கூட கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை ஆகிய இரு பகுதிகளையும் உள்ளடக்கிய கொழும்பு 13 பகுதியில் பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஏறத்தாள சமமாக வாழும் பகுதி. அதற்கேற்றாற் போல சமய ஸ்தலங்களும் சமமாக உள்ளன.

கொழும்பில் உள்ள சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த விகாரைகளில் முக்கியமான விகாரையாக கொட்டாஞ்சேனை தீபதுத்தாரம விகாரையைக் குறிப்பிடலாம். இரு நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது அது. கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் மதில் சுவர் தான் இந்த விகாரையின் எல்லைச் சுவரும்.

காலனித்துவ ஆட்சி காலத்தில் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க சமயத்தை தடை செய்திருந்தார்கள். அத்துடன் சுதேசிய மதங்களையும் கடுமையாக ஒடுக்கினார்கள். இந்தக் காலப்பகுதியில் கொழும்பில் களனி தொடக்கம் பெல்லன்வில பன்சலை வரை எந்த பன்சலைகளும் இருக்கவில்லை. வெறும் புத்த சிலைகளை வைத்து மட்டும் தான் வணங்கி வந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் கொழும்பில் முதலாவது தொடக்கப்பட்ட பன்சலை தீபதுத்தாராம பன்சலை.

ஒல்லாந்தர் காலத்தில் ஜோசே வாஸ் பாதிரியார் இந்தியாவிலிருந்து வந்து கத்தோலிக்க மதப் பணிகளை மேற்கொள்வதற்காக இரகசியமாக வந்து தலைமறைவாகத் தான் திரிந்தார். இரகசியமாகத் தான் தனது பணிகளை மேற்கொண்டார். கொழும்பு நகரில் சுதந்திரமாக காவி உடை தரித்த பிக்குமார் உலாவக்கூடிய சுதந்திரம் அப்போது இருக்கவில்லை. 

குணானந்த தேரரும் இரகசியமாகத் தான் கொட்டாஞ்சேனைப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். காவி உடை தரித்து உலவும் சுதந்திரச் சூழல் அப்போது இருக்கவில்லை.

பௌத்த துறவிகளுக்கு அன்னமிடக் கூட பௌத்தர்களுக்கு வாய்பற்ற சூழல் நிலவியது. கொட்டாஞ்சேனை போன்ற கிறிஸ்தவ செல்வாக்கு அதிகம் இருந்த பகுதியில் பிக்குமாரை பரிகசிக்கின்ற சூழல் இருந்தது. வீதிகளில் “மஞ்சள் குருவி” (கஹா குறுல்லோ) என்று கிண்டல் செய்தார்கள்.

இப்படிப்பட்ட சூழநிலையில் ந்த விகாரைக்கு வந்து சேர்ந்த குணானந்த தேரருக்கு; அந்த விகாரையை வளர்த்தெடுப்பதை விட பாதுகாப்பதே முதற் கடமையாக இருந்தது.

ஏற்கெனவே கிறிஸ்தவர்களால் விகாரை சேதப்படுத்தப்பட்டநிலையில் உயரமான மதிலைக் கட்டினார். அந்த மதிலுடன் ஒரு பெரிய வாயிற்கதவையும் அமைத்தார்.

பிரதான வணக்கஸ்தலத்தில் உள்ள பதிவுகளின் படி அது ஒல்லாந்து காலத்துக்கு உரியது. 1785 என்று கல்வெட்டுண்டு. அது போல சுவரின் மேற்பகுதியில் புத்த வருஷம் 2416 என்று காணப்படுகிறது அதாவது கி.பி 1872 ஆம் ஆண்டு என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இந்த விகாரைக்கு தீபதுத்தாராமய என்கிற பெயரை சூட்டியவர் குணானந்த தேரர் தான் என்கிறார் குணானந்த தேரரின் சரிதையை எழுதிய விமல் அபயசுந்தர. “தீபதுத்தம” என்பது சில பாளி நூல்களில் கௌத்தம புத்தருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர். 

உபயகுலதுங்க விஜேசிறிவர்தன மகா முதலி அன்றைய ஒல்லாந்து ஆளுநரிடம் தனிப்பட்ட அனுமதி பெற்று தனது காணியில் இந்த விகாரையைக் கட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் அவர் சீனிகம தம்மக்கந்த தேரரைக் கொண்டு சமய நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். ஆனால் அது வசதிபடைத்த மேட்டுக்குடி சிங்கள பௌத்தர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற ஸ்தலமாக இருந்தது. 1806 ஆம் ஆண்டு சீனிகம தீரக்கந்த தேரர் நடத்திய பிரித் நிகழ்வைத் தொடர்ந்து சாதாரணர்களும் இந்த பன்சலைக்கு வந்து வணங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பிரித்தானியரின் கடும் மதத் தலையீடுகளால் ஸ்தம்பித்து போயிருந்த இந்த விகாரைக்கு 1935 இல் மூன்றாவது தலைமை பிக்குவாக குணானந்த தேரர் வந்தடைந்தார்.

தாய்லாந்து இளவரசர்

குணானந்த தேரருக்குப் பின்னர் அவரது சிஷ்யர் ஜினானந்த தேரர் தலைமை பிக்குவாக ஆனார். அவருக்குப் பின் தாய்லாந்து இளவரசர் பிரிஸ்டங் (Prisdang) 1896இல் இலங்கை வந்து பௌத்த மத பிக்குவாக தீட்சை பெற்று “ஜினவரவன்ச” என்கிற பெயரில் தீபதுத்தாராமய விகாரையில் தலைமை பிக்குவாக ஆனார். 1911 இல் தனது தந்தை மன்னர் சூலலோங்கோர்ன் (King Chulalongkorn) மறைந்த போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் தாய்லாந்து சென்றிருந்தவேளை அவரது சகோதரரால் வலுகட்டாயமாக மீண்டும் அரச குடும்பத்திற்குள் இருத்தப்பட்டார். அவர் 1935 இல் தனது 85 வது வயதில் இறக்கும் வரை அவரை அவர்கள் பௌத்த துறவியாக வாழவும் விடவில்லை.

பின்னர் பல ஆண்டுகளாக இந்த விகாரை கவனிப்பாரற்று கிடந்தது. அதனை மீண்டும் உயிர்பிப்பதற்காக தாய்லாந்து அரசரின் புதல்விகள் இருவர் 1999, 2013 ஆகிய ஆண்டுகளில் வந்து உதவிகள் செய்து இதனை சீர்திருத்தி மீண்டும் இயக்கினர். அதுபோல தாய்லாந்து இரு பிரதமர்கள் இங்கே வந்து வணங்கி சென்றார்கள். இலங்கைக்கு தூதுவர்களாக வரும் சகல தாய்லாந்து தூதுவர்களும் பதவியேற்றதும் இங்கே வந்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிறிஸ்தவ மிஷனரிகளை எதிர்த்து குணானந்த தேரரால் தொடங்கப்பட்ட “சுதர்ஷன” என்கிற சஞ்சிகை  பௌத்த கண்டன இலக்கியங்களில் முன்னோடியானது. அதை பிரசுரிப்பதற்கான அச்சு இயந்திரம் 1862 இல் தான்  தான் கொண்டு வரப்பட்டு “லங்கோபகார” அச்சகம் ஆரம்பமானது. அந்த அச்சகத்தை நிறுவுவதற்கு நிதிப் பங்களித்தவர்களில் முக்கியமானவர் அன்றைய சியாம் அரசர் நான்காவது ராமா (King Mongkut). 

1835 ஆம் ஆண்டுகளில் குனானந்த தேரரால் இந்த விகாரையின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் ஒல்லாந்து, ஆங்கிலேய வாஸ்து கட்டட அமைப்பின் செல்வாக்கு இந்த விகாரையின் அமைப்பில் இருப்பதை உணரலாம்.

இலங்கையின் முதலாவது மதக் கலவரம் என்று நாம் அறிகிற கொட்டாஞ்சேனை கலவரம் இந்த விகாரையில் தான் தொடங்கியது.

பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இங்கிருந்து தான் தொடங்கியது. இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரதானமனவர்களாக குனானந்த தேரரையும் கேர்னல் ஒல்கொட்டையும் குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் இருவரதும் முதல் சந்திப்பு இந்த விகாரையில் தான் நிகழ்ந்தது. அதுபோல அநகாரிக தர்மபாலவின் வசிப்பிடமும் இந்த விகாரையின் அருகில் தான் இருந்தது. அவர் தீவிர பௌத்தனாக ஆனதும் இங்கே தான். அவரின் பௌத்த ஞானத் தந்தை இதே ஒல்கொட் தான்.

அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்குதான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான். அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான்.

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பஞ்சமகா விவாதங்களில் பௌத்த தரப்பை பிரதிநிதித்துவம் செய்த பிரதான விவாதியாக இருந்தவர் குணானந்த தேரர். குறிப்பாக இறுதி விவதமான பாணந்துறை விவாதத்தின் கதாநாயகன் அவர். எனவே அவர் நாடறிந்த செல்வாக்குள்ள பிக்குவாக அறியப்பட்டிருந்தார். பாணந்துறை விவாதத்தை ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து வாசித்த ஒல்கொட் தான் பௌத்தத்தால் கவர்ந்து அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்து சேர்ந்து பௌத்த மறுமலர்ச்சிக்கு தலைமை தாங்கினார் என்பதை அறிவீர்கள். இந்த விவாதங்களுக்கான கருத்துருவாக்கத் தளமாக இந்த விகாரை திகழ்ந்தது.

1875 ஆம் ஆண்டளவில் கொழும்பு தலைநகரில் சாதாரண மக்களுக்கான சுதேசிய பாடசாலைகள் இருக்கவில்லை. அப்படி பாடசாலை செல்பவர்கள் கொழும்புக்கு வெளியில் களனி பாடசாலைக்கோ அல்லது இரத்மலான பாடசாலைக்கோ தான் செல்லவேண்டும். அப்படி கொழும்பில் முதலாவது சுதேசிய பாடசாலையை இந்த தீபதுத்தாராமாவில் தொடக்கினார் குனானந்த தேரர். கிறிஸ்தவ பாடசாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொழும்பு நகரில் இப்படியொரு பாடசாலையின் உருவாக்கத்தால் குனானந்த தேரரும், விகாரையும் மேலும் பிரசித்தி பெற்றன. இன்றும் “குமார வித்தியாலய” என்கிற பெயரில் அப்பாடசாலை இயங்கிவருகிறது.

மேலும் இந்த விகாரையில் கணபதி, கந்தன், சரஸ்வது, காளி, லட்சுமி போன்ற இந்துக் கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தேங்காய் உடைத்து, பூக்கள் வைத்து வழிபடும் வழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.  விகாரையின் உள்ளே ஏனைய பல விகாரைகளில் உள்ளதைப் போல விஷ்ணுவின் சிலை சுவரில் பெரிதாக உள்ளது.

குணானந்த தேரர் பயன்படுத்திய அறை இன்றும் அப்படியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனைக் கலவரம்

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் கிறிஸ்தவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் பெரும் கலவரம் உருவானது. அது நாடு பூராவும் பரவியது. மார்ச் 25ஆம் திகதி கிறிஸ்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு நாள். அதே நாள் தான் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமயவில் உள்ள பௌத்த சிலைக்கு கண்கள் வைப்பதற்கான சடங்கைச் செய்யும் பெரஹரவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பௌத்தர்களின் பெரஹர ஊர்வலத்தில் இயேசுவின் உருவமும், அன்னை மரியாளின் உருவமும் கேலி செய்யப்படும் விதத்தின் கொண்டுவரப்படுவதாக கிளப்பப்பட்ட புரளியால் கலவரம் வெடித்தது. கொட்டாஞ்சேனையில் இரு தரப்பும் கைகளில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் பெரும் கலவரம் நடந்து முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமுற்றனர்.


இதனை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு The Kotahena Riots – Commission report என்கிற ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் பௌத்த மறுமலர்ச்சியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொட்டாஞ்சேனைக் கலவரம் பற்றிய ஆணைகுழு அறிக்கை பௌத்தர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டு தரப்பிலும் எவருக்கும் தண்டனை விதிக்கப்படவுமில்லை. தீபதுத்தாரம விகாரைக்கு ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு கோரி கத்தோலிக்க தரப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியடைந்தது. இந்த பின்னணியில் ஒல்கொட் இலங்கைக்கு மீண்டும் 27.01.1884 இல் வந்து சேர்ந்தார். பௌத்தத் தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து கலந்துரையாடியதன் விளைவாக ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் “பௌத்த பாதுகாப்பு சபை” உருவாக்கப்பட்டது. கேணல் ஒல்கொட், குணானந்த தேரர், அநகாரிக தர்மபால உள்ளடங்கிய 10 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு அமைக்கப்பட்டது.

பௌத்த பாதுகாப்பு சபையின் முக்கிய 6 அம்ச கோரிக்கை உள்ளிட்ட முறைப்பாடுகள் குறித்து காலனித்துவ செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒல்கொட் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒல்கொட் 10.02.1884 இல் இங்கிலாந்தை நோக்கி புறப்பட்டார். அந்த 6 முக்கியம்ச கோரிக்கைகள் இவை தான்.

கொட்டாஞ்சேனை கலவரத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சிங்கள பௌத்தர்களின் மத உரிமைகள், சலுகைகளை உறுதிசெய்ய வேண்டும்.

அரசாட்சி காலத்திலிருந்து புத்தர் பிறந்த வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக அனுஷ்டித்து வந்தார்கள். மீண்டும் அந்த நாளை அரச விடுமுறை நாளாக்க வேண்டும்.

மத ஊர்வலத்தின்போது இசைக்குழு வாத்தியமிசைப்பது குறித்த தடையை நீக்கி, பௌத்தர்களின் பெரஹர ஊர்வலங்களுக்கு இடமளிக்கவேண்டும்

பௌத்தர்களின் விவாகப் பதிவுக்காக பௌத்த விவாகப் பதிவாளர்களை நியமிக்க வேண்டும்.

1856ஆம் ஆண்டின் 10 வது இலக்க விகாரைகளை பதிவுசெய்யும் சட்டத்தில் உள்ள இடைஞ்சல்களை நீக்குவதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு நியாயமான பதிலை அளிக்க வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டார் காலனித்துவ செயலாளர் டேர்பி துரை.

வெசாக் தினத்தின் தோற்றம்

இந்த வெசாக் தினத்தை பொது விடுமுறையாக்குவதற்கான யோசனையை அரசசபையில் ஆளுநர் கோர்டன் முன்வைத்தார். ஆனால் கரையோர சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.அல்விஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. வெசாக் விடுமுறைக்கு ஆதரவாக உரையாடிவர்களில் பொன்னம்பலம் இராமநாதனும் குறிப்பிடத்தக்கவர். பௌத்தர்களுக்காக மட்டும் இப்படி விடுமுறை அளித்தது நியாயமல்ல என்றும் இந்துக்களுக்கும் விடுமுறை நாளொன்றை வழங்காதது ஒரு குறை என்றும அன்றைய Times of ceylon (11.08.1885) பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் 15.01.1886 அன்று சட்டசபையிலும் ஒலித்தது. அந்த காரசாரமான விவாதத்தின் விளைவாக தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினமும் உருவானது. இந்துக்களுக்கு விடுமுறை வேண்டும் என்று உறுதியாக குரல் கொடுத்தவர்கள் பலர் அன்றைய ஆங்கில பிரதிநிதிகளே.

28.04.1885 அன்றிலிருந்து வெசாக் பௌர்ணமி தினம் அரச பொது விடுமுறையாக ஆனது. அது உத்தியோகபூர்வமான சட்டமாக 1886 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. வெசாக் தினத்தன்று பௌத்த கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்கான ஒரு கொடியை உருவாக்குவது என்றும் பௌத்த பாதுகாப்பு சபை தீர்மானித்தது. பௌத்த கொடியை உருவாக்கும் குழுவில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், கரோலிஸ் ஹேவவிதாரன (அநகாரிக்க தர்மபால) போன்றோரும் உள்ளடக்கம். ஒல்கொட்டின் வழிகாட்டுதலில் கரோலிஸ் குணவர்தன என்பவரால் பௌத்த கொடி தயாரிக்கப்பட்டது.


தீபதுத்தாராமய விகாரையில் முதலாவது தடவையாக பௌத்த கொடி குணானந்த தேரரால் ஏற்றப்பட்டது. களனி விகாரை உள்ளிட்ட இன்னும் சில பெரிய விகாரைகளில் அன்றைய தினம் இக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியே 1952 இலிருந்து “உலக பௌத்த கொடி”யாக அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.

இந்த சம்பவத்தின் பின்னர் பௌத்த மறுமலர்ச்சியின் பேரால் பௌத்த தரப்பு பலமடைந்தது. அவர்கள் நடத்திய அணிதிரள்வின் விளைவாக வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து இந்த வெசாக் விடுமுறை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

இப்படி இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தமாகவும், சாட்சியமாகவும் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமய விளங்குகிறது.

உசாத்துணை:

  1. 1915: கண்டி கலவரம், 
  2. G.P.V. Somaratna, Kotahena Riot, 1883: A Religious Riot in Sri Lanka, Nugegoda : G.P.V. Somaratna, 1991.
  3. විමල් අභයසුන්දර, මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  (Godage publication, 1994)
  4. Roberts, Michael, Potency. Power & People in Groups, Colombo, Marga Institute, 2011
  5. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)


நன்றி - தினகரன் - 01.05.2022

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates