Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கஹவத்தையில் கூட்டு மேதினம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வையும் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையையும் வலியுறுத்தியும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக, மனித உரிமைகளையும் வென்றெடுக்கவும் ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்பவும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் கூட்டு மே தின நிகழ்வு மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறும்.

மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டு மேதின நிகழ்வில் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம் மற்றும் பல அமைப்புகள் கலந்து கொள்ளவுள்ளன.

இம் மேதின நிகழ்வில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை இணைப்பாளர் டிபில்யூ. சோமரத்தின, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ். மோகன் மற்றும் மக்கள் பண்பாட்டு கழகத்தின் உறுப்பினர் சு. விஜயகுமார் ஆகியோர் உரையாற்றவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

சிறையிலிருந்து சந்திரசேகரன் 1994இல் அளித்த பேட்டி - (நேர்காணல் என்.சரவணன்)


நேர்கண்டவரின் குறிப்பு
1994இல் இந்த நேர்காணலை சிறையிலிருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனுடன் கண்டிருந்தேன். சந்திரசேகரன், பி.ஏ.காதர், வி.டி.தர்மலிங்கம் ஆகியோர் நான்காம் மாடியிலிருந்து வாராந்தம் கோட்டைக்கு அழைத்துவருவார்கள். பழைய Dutch Hospital அது. இப்போது அது மீண்டும் அழகிய ரெஸ்டுரண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களைப் பார்ப்பதற்காக உறவினர்கள், கட்சித் தொண்டர்கள், நண்பர்கள் வருவார்கள். 93 தொடக்கம் 94 வரை அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முதல் வாரம் வரை அவர்களை அடிக்கடி சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.
அவர்களின் விடுதலைக்கான வெளிப் பிரச்சாரங்களை (ஊடகங்கள் மூலம்) மேற்கொண்டதில் எனக்கு அதிகமான பங்கிருப்பதாகவே நம்புகிறேன். எனக்கு தொடர்புடைய உள்நாட்டு-வெளிநாட்டு, தமிழ், சிங்கள ஊடகங்களில் அவர்களின் கருத்துக்களை வெளிக்கொணரச் செய்தேன். குறிப்பாக மலையகத்துக்கான தனியான நிர்வாக அலகு குறித்தும், மலையகத்துக்கான புரட்சிகர அரசியல் மாற்றம் குறித்தும் அவர்களே உறுதியான தெளிவான அரசியலைக் கொண்டிருந்தார்கள் என்று நம்பியதே அதற்குக் காரணம். கூடவே மலையகத்தின் சாபக்கேடான இ.தொ.காவின் அரசியலை  அம்பலப்படுத்துவதற்கான தகுதியும் இவர்களிடத்திலேயே இருந்தன. 
அது தவிர இவர்கள் மூவரையும் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருக்க இ.தொ.கா செய்த சதிகளை சரிநிகர் பத்திரிகைக்கு ஊடாக அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தோம். இவர்களின் விடுதலை மலையகத்தின் மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கப்போகிறது என்கிற நம்பிக்கை என் போன்றவர்களுக்கு இருந்தது. சந்திரசேகரனிடமிருந்து பேட்டிகளையும், காதரிடமிருந்து கட்டுரைகளையும், வி.டி.தர்மலிங்கத்திடமிருந்து கட்டுரை தொடர்களையும் வெளியே எடுத்துக் கொண்டு வருவதை தொடர்ந்து செய்தேன். அப்போதைய கால கட்டத்தில் அது ஒரு “ரிஸ்க்”கான பணியும் கூட. அப்படி வெளிகொணரப்பட்ட கட்டுரைத் தொகுதிகளில் ஒரு பகுதி தான் சரிநிகரில் வெளிவந்து பின்னர் சமீபத்தில் வெளியான “மலையகம் எழுகிறது” நூல். துரதிர்ஸ்டவசமாக அந்த இந்த கட்டுரை எப்படி வெளியில் கொணரப்பட்டது, அதற்க்கு பின்னால் இருந்த உழைப்பு பற்றி அந்த நூலில் ஒரு சொல்லும் குறிப்பிடப்படவில்லை.  
ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களுடனான சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்கும். உணர்ச்சி பூர்வமானதாகவும் இருக்கும். அங்கு அவரைக் காண செல்லும் சில சந்தர்ப்பங்களில் நண்பர்கள் பொன்.பிரபாகரன், சோதிலிங்கம் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள். ம.ம.மு இன்னொரு இ.தொ.க வாக குறுகிய காலத்தில் ஆகிவிடும் என்று என்னைப் போன்றவர்கள் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ம.ம.மு அன்று வைத்திருந்த அந்த கொள்கையுடன் இன்றுகூட எந்த ஒரு மலையாக சக்தியும் இல்லை என்றே கூறலாம். அந்த அரசியலுக்கான இடைவெளி இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் இன்னும் வலுவிலக்கவில்லை. சந்திரசேகரன் வெளியில் வந்த கதை, அவருடன் தொடர்ந்தும் நடத்திய உரையாடல்கள் என்பன சகிக்கக் கசப்பானவை.
சந்திரசேகரன்: இவர் மலையக மக்கள் முன்னணியின் தலைவர். மலையக மிதவாத அரசியல் தலைமைச் சூழ்நிலை நிலவும் நிலையில் முற்போக்கு அரசியல் சக்தியாகவும் மாற்று அரசியல் சக்தியாக வளரக்கூடியவர் என்றும் இனங்காட்டப்பட்டவர். கொழும்பில் கூட்டுப்படைத் தலைமையகக் குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும வரதனுக்கு புகழிடம் அளித்ததாகக்கூறி 1991 இல் இவரும் ம.மஇ முவின் ஏனையத் தலைவர்களான காதர், தர்மலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் 18.03.94 அன்று சந்திரசேகரன் மாத்திரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலை சந்தேகத்துக்குரிய சர்சைகளை கிளப்பி விட்டிருந்த போதும் இவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன் சிறையிலிருந்து விடிவு சஞ்சிகைக்கு அளித்த பேட்டியை இங்கே தருகிறோம். - விடிவு - 1994

விடிவு: மலையகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளில் ஒன்றாக தாங்கள் மலையக மக்கள் செறிவான வாழும் பகுதிகளை ஒன்றிணைத்த மலையக மாகாணம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளீர்கள். ஆயின் அதன் எல்லைகளை வரையறுத்து விட்டீர்களா: அவ்வாறாயின் கூறமுடியுமா?

சந்திரசேகரன் : மத்திய, ஊவா, சப்ரகமுவ, மாகாணங்களில் மலையகத் தமிழர்கள் செறி வாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாகாணம் அமைகிறது. ஆனால் எல்லைகளின் நிர்ணயம் இன்னும் எம்மால் பீரணப்படுத்தப்பட்ட வில்லை . இதன் புவியியல் அமைப்பு, இன விகிதாசாரம், தற்போதைய நிர்வாகப் பிரிவுகளின் அடையாளம், மலையக மக்களை ஒருங்கிணைப்பதற்கான சாதகத் மன்மை நடைமுறை சாத்தியத்துக்கான ஏதுக்கள், என்பவற்றை சகலருக்கும் ஏற்புடைய விதத்தில் நியாயப்படுத்தக் கூடியதாய் இதன் எல்லைகளைப் பற்றிய ஆய்வின் பூர்வாங்க நகலை கவனமாக தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

துரித கதியில் இதனை பகிரங்கப்படுத்தி மக்களின் ஆமோதிப்பையும் ஆதரவையும் திரட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

விடிவு: தாங்கள் மற்றும் காதர் தர்மலிங்கம் போன்றவர்களின் கைது, வழக்கு நீடிப்பு என்பவற்றுடன் அமைச்சரவையில் உள்ள தமிழ் பிரதிநிதி மற்றும் அவரின் கட்சி தொடர்புள்ளதாக பொது மக்கள் கருதுவது எவ்வளவு தூரம் உண்மை?

சந்திரசேகரன்: எமது கைது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்பளித்தும் கூட நாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது பிணை மறுக்கப்படுவது, வழக்கு இழுத்தடிக் கப்படுவது என்பவை தொடர்பாக அரசியல் கட்சிகளும், பல்வேறு தலைவர்களும் பாராளு மன்றத்திலும் வெளியிலும் பிரஸ்தாபிக்கும் போதெல்லாம் இவர்களின் 'நழுவித்தப்புகின்ற' நிலைபாடு இத்தகைய கருத்த மக்கள் மத்தியில் வலுப்பெறக் காரயமாயுள்ளது. 

அதேபோல, மாகாணசபையில் நாம் மக்களால் தெரிவ செய்யப்பட்டபின் எம்மை விடுவிக்க கோரி சகல கட்சிகளம்- மத்திய மாகாண ஆளும் ஜ.தே.க உட்பட அனைத்தக்கட்சிகளும் குரல் கொடுத்த போது, ”தேர்தல் வெற்றி குற்றவாளிகள் தப்பவதற்கான மார்க்கமாகி விடக்கூடாது” என இவர்கள் கருத்த தெரிவித்ததற்கும், மாகாண சபையில் சத்தியபிரமாணம் எடுப்பதற்க மேல் நிதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியதை இறதி நேரத்தில் அரசு தரப்பினர் விகற்பமான காரணங்களைக் கூறி ஆட்சேபிப்பதற்கும். தொடர்பு இருக்க வேண்டுமென அவதானிகள் சந்தேகம் கொள்வது அலட்சியப்படுத்தக்கதல்ல.

விடிவு: இலங்கையின் இனப்பிரச்னைக்க சமஷ்டி தீர்வ பற்றி உங்கள் அபிப்பிராயம்: அல்லது இன பிரச்சனைக்கு எந்த வகையில் தீர்வை காணலாம்? 

சந்திரசேகரன் : எந்த ஆட்சி முறையும் இந்திந்த உரிமைகளை உள்ளடக்கியது என்ற சூத்திரத் துக்கள் இயங்குவதல்ல. ”தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு எவ்வளவு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறோம் என்பதைவிட சமஷ்டி என்ற சொற்பதத்தை சிங்கள மக்கள் ஏற்கத்தயாரில்லை” என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரும் ஸ்ரீ.ல.சு. கட்சி பா.உ. ஒருவரும் அண்மையில் பி.பி.சி.க்க (BBC) அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பது நினைவு கொள்ளத்தக்கது.எத்தகைய ஆட்சி முறை என்பதைவிட அது எந்தவிதமான உரிமைகளை உத்தரவாதம்ப் படுத்தகின்றது என்பதுதான் தமிழ் பிரதேசத்தின நிரந்தர அமைதியை தீர்மான்க்கம். மத்திய அரசின் அதிக்கமோ, தலையீடோ ஏற்பட முடியாத சகல கோணங்களிலும் சுயமான, சுதந்திரமான செயற்பாட்டை உறுதிபடுத்தம் வகையிலான திட்டவட்டமான அரசியல் ஏற்பாடுகளே இப்போதைய கொந்தளிப்பை தணிக்க உதவும். 

அரசு கட்டுபாட்டில் உள்ள சில பகுதிகளில் தேர்தலை நடத்தியும், குறிப்பிட்ட சில தமிழ் பிரதிநிதிகளை இணைத்த கொண்டும் தற்போதைய சூழ்நிலைகளில் சில திருப்பங்களை ஏற்படுத்தி அதனால் ஏற்படும் சிறிய தளம்பல் நிலையை தனக்க வாய்ப்பான சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ள அரச எத்தனிக்குமானால் அது தீர்க்கதரிசனமற்ற பேதமையாகவும், பிரச்சனையின் நெருக்கடியை மேலும் சிக்கலாக்குவதாகவுமே முடியும். 

” இது இனப்பிரச்சனை அல்ல: பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே” எனக் கூறுவது காப்பாற்ற முடியாத வாசமாகும். எனவே யதார்த்தத்தை புரிந்து கொண்டு சம்பந்தபட்டவர்களோடு சமரச பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கமான உடன்பாட்டுக்கு வர முயற்சிப்பதே நாட்டின எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும். 

ஒத்தி போடுவதை தப்பவதற்கான சாணக்கியமாக எவராவது நம்புவார்களேயானால் அவர்களையெல்லாம் இந்நாட்டின் சாபக் கேடுகளென எதிர்கால வரலாறு எழுதி வைத்துவிடும்.

விடிவு: பிரேமதாஸ ஆட்சிக்கும் தற்போதைய ஜனாதிபதி டி.பி. விஜயதுங்காவின் ஆட்சிக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமை என்ன?

சந்திரசேகரன் : இப்பொது புதிதாக ஒரு ஜனாதிபதி நாட்டை நிரிவகிக்க வந்திருக்கிறார் என்பதையே மக்கள் மறந்துவிடுமளவுக்கு 'அதே தண்டவாளத்தில் ஓடும் ரயிலாக' ஆட்சி ஓடிக்கொண்டிருப்பதை ஒரே அச்சாக நம்மால் பார்க்க முடிந்தாலும், இரண்டு முக்கியமான மாற்றங்களும் கவனத்தில் படுகின்றது.

ஒன்று, கருத்து சுதந்திரத்தக்கான இறுக்கம் தளர்ந்திருப்பதும், அரசின் - அரசியல் வாதிகளின் -அதிகார பிரயோகம் ஆதிக்கம் சார்ந்திருப்பதும் பரவலாக பிரதிபலிக்கின்றது. 

இரண்டு, தமிழ் மக்களின் பிரச்சனையில், உணர்ச்சிவயப்பட்ட தனது நிலைப்பாட்டை - அரசியல் விமர்சனங்களைப் பற்றிய கண்ணோட்டமில்லாமல் - போட்ட உடைத்த விடுவதோடு அதைபூசி மெழுகி சமாளிக்க வேண்டிய அவசியத்தை கூட புரிந்து கொள்ளத் தெரியாத அப்பாவித்தனத்தை புதிய ஜனாதிபதியின் பேச்சுக்களிலும் முடிவுகளிலும் காணமுடிகிறது.

கிழக்கு மாகாண தேர்தல் அறிவிப்பும் இந்த வெளிபாட்டின் விளைவு என்றே கருதுகின்றோம். எப்படியோ, பழைய ஜனாதிபதிகளின் கபடத்தனத்தை புதிய ஜனாதிபதி அடிக்கடி நினைக்க வைக்கிறார்.

விடிவு: பாராளுமன்ற வழி முறையை முழுமையாக நம்புகிறீர்களா? மாகாண சபை தங்களின் நோக்கத்தக்கு எந்தளவு வெற்றியை தரும்?

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால் மட்டும் எல்லாவற்றையும் சாத்த்து விடமுடியும் என்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியால் வடக்கு கிழக்க தமிழ் மக்களின் பிரச்சனை 1983 க்கு முன்னரே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் செயற்படும் வாய்ப்பு அமைந்தபோது அந்தப் பதவியையும் அதற்கான அந்தஸ்துக்களையும் அவர்கள் குற்றம் சொல்ல முடியாதளவுக்கு பயன்படுத்தினார்கள் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்ற செயற்பாட்டின் உச்சக்கட்ட போராட்டத்தக்கு அவர்களின் நடவடிக்கைகள் உதாரணங்களாக அமைந்தன. வடகிழக்கு மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தையும் பரிபூரண ஆதரவையும் அவர்கள் கொண்டிருந்தனர் ஆனால் இறுதியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்த விட்ட வெளியேற நேரிட்டது.

இந்த நிகழ்வுகளை முன்னுதாரண படிப்பினையாக கொண்டே மாகாண சபையம் பார்க்கிறொம். ஆனால் எமது கருத்தை தெளிவாக வெளிச்சம் போட்டுகாட்ட இது போன்ற வாய்ப்புகள் உதவும் என நம்புகிறோம். எமது கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் செல்வாக்கை தேர்தல்களின் மூலம்தான் நாம் நிரூபித்தாக வேண்டியுள்ளது.

ஆனால் தேர்தலினால் எம்மை வந்தடையும் பதவிகளை, எமத அரசியலுக்கான மேலதிக பலமாக நினைக்கிறோமே தவிர இதுவே எமது நோக்கமோ, அரசியல் அடித்தளமோ ஆகிவிடாது.

விடிவு: தோட்டங்களின் தனியார் மயத்தினால் அண்மைக்கால பிரச்சனை பற்றி தங்களின் நடவடிக்கைகள்?

சந்திரசேகரன் : தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன பின்னர் ஏற்பட்டுள்ள பாரதுhரமான பின்விளைவுகள் மக்களைக் கிலேசமடைய வைத்துள்ளது. 'தோட்டங்கள் தனியார் மய மாக்கலை ' ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக ஆதரித்து, சிலாகித்து, பாராட்டிய தலைவர்கள் இன்று மக்களின் அதிருப்தியையும், ஆக்ரோஷமான எதிர்ப்பையும் தணிக்க முடியாமல், இத ஏதோ தங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டதைப் போல ஒப்பாரியை பாடத் தொடங்கியிருக்கிறார்கள். 

இது கூட மக்கள் மிதுள்ள அக்கறையா? அல்லது தங்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் புறம் தள்ளப்பட்ட உதாசீனப்படுத்தப்பட்டதினால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடா? என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும்.

மக்களின் கொந்தளிப்பால் கரிசனை காட்டுவதை விட இந்தத் தலைவர்களை சாந்தப்படுத் துவதில்தான் அரசு அக்கறையோடு முனைவதாகத் தெரிகிறது. இந்த பிரச்சினையில் எமது தலைவர்கள் எந்தளவு நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்பதை” தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அவர்களுக்கே சொந்தமாக்குவோம்” என்ற கொள்கையில் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். 

தோட்டங்கள் தனியார் மயமாக்கல் என்பது திடீரென்று புதிதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. எமது தலைவர்களை பெருமை படுத்தி புளங்காகிதம் அடைய வைப்பதன மூலம் பெருந்தோட்ட த்துறையில் நினைத்ததையெல்லாம் செய்து கொண்டிருக்கலாம் என்ற அரசினது மனப் போக்கின் வளர்ச்சிக்கட்டத்தின் - இன்னொரு வடிவமே இதுவுமாகும்.

மக்கள் தற்போது விரக்தியோடும் வேதனையோடும் வாழ்ந்தாலம் இதுபோன்ற பிரச்னைகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்ற தோற்றுவாய் பற்றிய விளக்கத்திலோ, இதிலிருந்து மீளும் விமோஷனத்துக்கான வழிமுறைகளிலோ எம்மக்களுக்கு பூரணத் தெளிவு ஏற்படுத்தப்படவில்லை. 

தற்பேதைய வேலை நிறுத்தங்களும், வேறுசில போராட்ட வடிவங்களும் மக்களின் குமுறலை வெளிபடுத்துவதையும், மக்களின் ஆத்திரத்தை தணித்து கொள்வதையுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன. 

இதன் மூலம் தொழிளாலர்களின் போராட்ட சக்தி விரயமாக்கபடுகின்றது என்பதே உண்மையாகும்.

காரணம் மக்களுக்கு பிரச்சனைகளைப்பற்றிய பூணை தெளிவில்லதாதால், தொழிற் சங்கங்களின் மூலம் சில சமரசங்களாலேயே போராட்டங்கள் இடைநிறுத்தப்படுகின்றன.

தோட்ட பகுதிகளில் ஒரே காரணத்துக்காக நடைபெறும போராட்டங்கள் வெவ்வேறு பகுதிகளில், பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்களினால் ஒன்றுக்கொன்று எந்த தொடர்புமற்று மக்களை திருப்திபடுத்த மட்டுமே நடத்தப்படுவதால்- போராட்டங்களின் தாக்கம் அரசை உலுக்குவதற்கு பதிலாக தொழிலாளர்களின் தன்னம்பிக்கையைத் தான் தவிடு பொடி ஆக்கிக் கொண்டிருக்கிறது.

இடைக்கால சமரசங்களின் மூலம் தற்காலிக சமாளிப்புகளை மட்டும் ஏற்படுத்தி கொள்வது தொழிற்சங்கங்களின் பிழைப்பாக போய் விட்டிருப்பது எமது பிரச்னைகள் இன்னம் இறுக்கமாகவே வழி வகுக்கம்.

எனவே இதைப்பற்றிய தெளிவான கண்ணோட்டமும், தீர்க்கமான வேலைத்திட்டமும், முரண்பாடற்ற பொதுக் கொள்கையும் மலையக தொழிற்சங்க தலைமைகளுக்க முதலில் ஏற்பட வேண்டும். அடுத்து, இன்று புதிதாக கொதிநிலையை அடைந்துள்ள தோட்டங்கள் தனியார் மயமாக்கல் பிரச்னை மட்டுமல்ல: எமது சகல கோரிக்கைகளையும் அரசியல் விவகாரமாக வெளிக்கொணர வேண்டும். இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினை என்பதை நமது மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இந்தக் கண்ணோட்டத்தோடு எமது எதிர்கால செயற்திட்டங்களை தொடங்குவதற்கு தயாராகி இருக்கிறோம். அதே நேரத்தில் எமது ஸ்தாபனத்தின் முக்கியமான பதவியிலிருக்கம் நாங்கள் மூவருமே மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு எமது முனைப்பான செயற்பாடுகள் பின்தள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.     

நன்றி - விடிவு 

புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட சேவையாளர்கள் - அருள்கார்க்கி


பெருந்தோட்டத்துறை வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து அதன் வளர்ச்சிக்கு எம்மவர்கள் உரமான சரித்திரம் எழுதப்படாத ஒரு காவியம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் நாட்டின் தேசிய வருமானத்தின் உழைப்பாளிகள் இவ்வாறு சுரண்டப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு வாழும் வரலாறு பெரும்பாலும் இல்லை.

புகழ்பெற்ற அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் இருந்தும் இன்றளவும் கூட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.

தனியார் கம்பனிகள் எம்மை கொண்டு பல கூட்டுக்கம்பனிகளாகவும், நிதி நிறுவனங்களாகவும் ஊதிப்பெருத்திவிட்டன. காலம் காலமாக மாறி வந்த அரசாங்கங்கள் எம்மை வாக்காளர்களாக மட்டுமே கணித்திருக்கின்றன. அனைத்து அரசாங்கங்களிலும் எம்மவர்கள்(?) அமைச்சர்களாக இருந்தமை எமக்கு கிடைத்த பெரிய வெற்றி. மாதாமாதம் ரூ.150 சந்தாப்பணம் மட்டும் தவறாமல் தொழிற்சங்கங்களுக்கு சென்றுவிடுகிறது. இந்த சந்தா தொகையின் செலவு விபரம் கூட அதனை செலுத்தியவருக்கு அறியமுடியாத நிலைமையிலேயே இன்று காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளிக்கு உள்ள பிரச்சினைகள் ஒன்றும் இக்கட்டுரையில் புதிதாக எடுத்துக்கூறத்தேவையில்லை. யாவரும் அறிந்த அடிப்படை தேவைகள் கூட நிறைவுசெய்யப்படாமல் ஏமாற்றப்படும் எமது நிலைமையை பேசி பயனில்லை. இது இவ்வாறிருக்க பெருந்தோட்டங்களில் வேலையாற்றும் பெருந்தோட்ட சேவையாளர்கள் என்று அழகாக, அழைக்கப்படும் ஒரு தரப்பினரும் உண்டு. இவ்வாறு அழுத்தமான விளக்கம் ஒன்று கொடுக்க வேண்டிய தேவை என்னவென்றால், அவ்வாறு ஒரு தரப்பு இருப்பது பலருக்கு தெரியாது.
தோட்டத்தொழிலாளர்களை போலவே பெருந்தோட்ட சேவையில் தமது வாழ்வையும் குடும்பத்தையும் அர்ப்பணித்த பெருந்தோட்ட சேவையாளர்களின் நிலை பற்றி பெரிதாக பேசுவதற்கு எவருமில்லை. ஒப்பீட்டளவில் பெரும்பான்மை இனத்தவரை விடக் குறைந்தளவு எண்ணிக்கையிலான தொகையினரே பெருந்தோட்ட சேவையில் உள்ளனர். அவர்கள் அத்தொழிலுக்கு வரவே பகீரதப் பிரயத்தனப்படவேண்டிய சூழல் காணப்படுகின்றது. அவ்வாறு அத்தொழிலுக்கு வந்து தமது இறுதிகாலம் வரை தோட்டங்களில் சேவையாற்றும் அவர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் கொடுக்கப்படும் மரியாதையை எழுத்தில் வார்க்க முடியாது.

தோட்டப்புறங்களில் "ஸ்டாப்" என அறியப்படும் இவர்கள், ஓய்வு பெற்றவுடன் தமக்கு வழங்கப்படும் விடுதியிலிருந்து குறிப்பிட்ட காலவறையரைக்குள் வெளியேற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி என்பன வழங்கப்படும்., இறுதிநேரத்தில் எங்கு செல்வது என்று தெரியாது தடுமாறும் இவர்கள் வீடுகளை கையளிக்க மறுப்பதும் ஒரு புறம் நடக்கும்.

இவர்கள் தொடர்பில் பேசுவதற்கு பெயரளவிலான தொழிற்சங்கம் இருப்பினும் இவர்களது சந்தாப்பணத்தால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் தொழிற்சங்க ரீதியான இவர்களது எந்த ஒரு வேண்டுகோளும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. இவர்களில் சிலர் அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டு சுயநலத்திற்காக தமக்கு மட்டும் ஏதாவது ஒரு சலுகையை பிச்சையாக பெறுபவரும் உண்டு. அதேபோல் இவர்களுக்கான வேலை நேரமும் கூட அதிகளவாகவே காணப்படுகின்றது. முறைமைப்படுத்தப்பட்ட ஒரு நேர அட்டவணை இல்லை. அதிலும் தோட்டப்புறங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக தொழில்புரிபவர்களின் நிலை இதற்கு சாலப்பொருந்தும்.

இலங்கையை பொறுத்தவரை பல கம்பனிச்சட்டங்கள் உள்ளன. அவை எவற்றுக்கும் மலையக தோட்டச் சேவையாளர்களுக்கு. பொருந்துவனவாக இல்லை போலும். அண்மையில் தனியார் தொழில் துறையினருக்கு வழங்கப்படுவதாக அறி விக்கப்பட்ட ரூபா .2500 சம்பள உயர்வு இவர்களுக்கெல்லாம். பகற்கனவு. அதற்காக குரல்கொடுக்க இவர்களும் தயாரில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலையே காணப் படுகின்றது.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெருந்தோட்ட சேவை யாளர்களின் நலன்சார் விடயங்களையும் ஆராய்ந்து அவர்களுக்கு உதவுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டம் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.


நன்றி - வீரகேசரி

பெருந்தோட்டக் கம்பனிகள் கடைசி 08 வருடங்களில் 2206 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளன- மக்கள் தொழிலாளர் சங்கம்


19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத் துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிலையில் கம்பனிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து. எவ்வாறாயினும் 2014ஆம் ஆண்டில் 17 கம்பனிகளின் (புஸ்ஸல்லாவ, மத்துரட்ட மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனிகள் தவிர்ந்த ஏனைய கம்பனிகள்) ஆண்டறிக்கைகளின் நிதி கூற்றுகளை நோக்கும் போது 2014 இல் 09 மாதங்களில் மாத்திரம் 92 கோடியே 82 இலட்சம் ரூபாயை தேறிய இலாபமாக பெற்றுள்ளன. (03 கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் திறந்த அணுகுதலுக்கு இன்மையினால் அவற்றின் நிதி நிலைமைகளை அறிய முடியாதுள்ளது). தேயிலை, இறப்பரில் 285 கோடி நட்டத்தை பெற்றிருக்கும் போது கம்பனிகள் இந்த அளவு தேறிய இலாபத்தை எவ்வாறு பெற முடியும் என்ற கேள்வி எழுவதுடன் இது அடிப்படையற்ற வாதம் என்பதும் தெளிவாகிறது. எனவே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை மறுக்கும் வகையில் போலியான கருத்துக்களை முன்வைப்பதை கம்பனிகளின் பிரதிநிதிகள் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இடம் பெற்று வரும் பேச்சுவாத்தை தொடர்பாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு சார்பாக பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை மறுக்கும் தமது அடிப்படையற்ற வாதங்களை ஊடகங்களூடாக பாரிய அளவில் பரப்பி வருகின்றன. எனினும் கம்பனி பிரதிநிதிகள் பகிரங்கமாக முன்வைக்கும் வாதங்களுக்கு பகிரங்கமாக மறுப்பையோ எதிர்வாதங்களையோ கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முன்வைப்பதாக இல்லை. வெறுமனே சம்பள உயர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிவிட்டு வழமை போல இம்முறையும் பேச்சுவார்த்தைகள் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மூடுமந்திராமாக இருந்து வருவதில் இருந்து மக்கள் மத்தியில் சம்பள உயர்வு தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பேச்சுவார்த்தைகளில் தற்போது சம்பள உயர்வு தொடர்பாக பேசுவதை விடுத்து தொழிலாளர்களின் சில சமூக நல விடயங்கள் தொடர்பாக பேசப்படுவதாக அறியமுடிகிறது. இது தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு விடயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகின்றது.

2014ஆம் ஆண்டில் ஒரு கிலோ தேயிலை மற்றும் இறப்பருக்கு முறையே ரூபா 50, 70 நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான நட்டம் ஏற்பட்டிருப்பின் கம்பனிகள் எவ்வாறு இலாபத்தில் இயங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இங்கு குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் யாதெனில் 2014ஆம் ஆண்டில் நட்டத்தை (தேறிய நட்டம்) அடைந்த அகலவத்தை, கொடகல, மஸ்கெலிய ஆகிய கம்பனிகள் முறையே ரூபா 183,858,000, 318,769,000, 122,515,000வை மொத்த இலாபமாக பெற்றுள்ளன. மொத்த வருமானத்தில் இருந்து மொத்த உற்பத்திச் செலவை கழித்து பெறப்படும் மொத்த இலாபத்தை (Gross profit), நடத்தில் இயங்கும் கம்பனிகளே பெற்றிருப்பதில் இருந்து தேயிலை இறப்பரில் கிலோவொன்றுக்கு இவ்வாறான நட்டம் எற்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

தேயிலை, இறப்பரின் விலை வீழ்ச்சி என்பது தொழிலாளர்களின் சம்பளத்தோடு எவ்வகையிலும் தொடர்பான விடயமல்ல. தொழிலாளர்களுக்கான சம்பளம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, இறப்பர் ஏலத்தில் விற்பதற்கும் பல காலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்நிலை காரணமாக தேயிலை, இறப்பரின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் அதிகரிப்பு எற்படாது. தொழிலாளர்களும் அதற்கேற்ப அதிகரிப்பை கோரவும் முடியாது. இந்நிலையில் தேயிலை, இறப்பரின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்படும் போது அதனை அடிப்படையாக கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது என கம்பனிகள் வாதிடுவது அவர்களின் சம்பள கொள்கைக்கும் கூட முரணனானதாகும்.

17 கம்பனிகளும் கடைசி 21 மாதங்களில் (2013, 2014 காலப்பகுதியில்) மொத்த தேறிய இலாபமாக 327 கோடியே 19 இலட்சத்தை பெற்றுள்ளன. இந்த இலாபம் 2013ஆம் ஆண்டு சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சம்பள உயர்விற்கு பின்னர் ஏற்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது. 2007இல் இருந்து 2014 வரையான 08 வருட காலப்பகுதியில் மாத்திரம் 17 கம்பனிகள் 2206 கோடியே 23 இலட்சத்தை தேறிய இலாபமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பனிகள் பெறும் இலாப நட்டத்தில் பங்கு என்ற அடிப்படையைக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுமாயின் கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றன. தேயிலை, இறப்பர் மரங்களின் பராமரிப்பு, உரிய காலத்தில் மீள்நடுகை, புதிய நடுகை முறையாக இடம்பெறாத நிலையிலும், தேயிலை மற்றும் இறப்பர் மரங்களில் அறுடை நாட்களுக்கிடையில் இருக்க வேண்டிய இடைவெளிகள் பேணாது விஞ்ஞான அடிப்படையற்ற நடைமுறை பின்பற்றும் நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. தேயிலை அறுவடை இடைவெளியாக 07 நாட்கள் இருக்க வேண்டும் என்ற போதும் பல தோட்டங்களில் 05 நாள் இடைவெளியில் அறுவடை செய்யப்படுகிறது. அதாவது வருடத்தில் 52 முறை மாத்திரம் அறுடை செய்யப்பட வேண்டிய இடத்தில் 73 முறை அறுவடை செய்யப்படுகிறன. இதனால் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த செயல் முகாமைத்து நடைமுறை பற்றிய பிரச்சினையே அன்றி தொழிலாளர்களின் உற்பத்தி திறன் பற்றிய பிரச்சினை அல்ல என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். எனினும் இப்பின்னணியிலும் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளமையே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

1995ஆம் ஆண்டு 20 பெருந்தோட்டக் கம்பனிகளில் 280,783 மொத்த தொழிலாளர்களைக் கொண்டு 135.2 மில்லியன் கிலோ தேயிலையும் 37.6 மில்லியன் கிலோ இறப்பரும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு (2013, 2014 தரவுகள் இனனும்; வெளியிடப்படவில்லை) தொழிலாளர்களின் எண்ணிக்கை 180,168 அதாவது (100,615 தொழிலாளர்கள் குறைந்துள்ளனர்) தொழிலாளர் எண்ணிக்கை 35.83மூ வீழ்ச்சியடைந்த போதும் 118.8 மில்லியன் கிலோ தேயிலையையும் 28.8 மில்லியன் கிலோ இறப்பரும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது 1995 ஆம் ஆண்டை விட 2012ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பர் உற்பத்தியில் முறையே 12.13மூ, 23.7மூ வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கை 35.83மூ இருக்கும் நிலையில் உற்பத்தி வீழ்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தேயிலை, இறப்பர் உற்பத்தியானது 1995ஆம் ஆண்டை விட 2012ஆண்டில் முறையே 23.7மூ, 12.43மூ இல் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

உற்பத்திச் செலவில் 67%-70% வீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மாத்திரம் செலவு செய்யப்படுகிறது என்று சொல்லாப்படுகிறது. இதனை கம்பனிகள் ஆதரத்துடன் முன்வைக்க வேண்டும். நிரந்தர தொழிலாளர்கள், சமயாமய தொழிலாளர்கள் என்ற வேறுபாட்டுடன் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத நிலையில் அவ்வாதத்தின் உண்மைத் தன்மையை பரீட்சித்து பார்ப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. தொழிலாளர்கள் ஒழுங்காக தொழிழுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொழிலாளர்கள் மீது கம்பனிகள் முன்வைத்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய வீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு செலவாகுவதாக கம்பனிகள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கென்னிய, இந்தியாவின் அசாம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையே 2.6, 2.1 அமெரிக்க டொலரை நாட் சம்பளமாக பெற இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 4.6 அமெரிக்க டொலரை நாட் சம்பளமாக பெறுகின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஜப்பான் சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் தேயிலை உற்பத்தியில் முன்னிற்கும் நாடுகளாக இருக்கும் போது ஏன் கென்னிய, அசாம் தொழிலாளர்களை மட்டும் இலங்கை தொழிலாளர்களோடு ஒப்பிட வேண்டும். இந்த ஒப்பீட்டின் உபாயத்திற்கு அப்பால் தகவல்கள் திரிபும் காணப்படுகிறன. உண்மையில் கென்னிய தொழிலாளர்கள் 2014ஆம் ஆண்டிலேயே வருகை ஊக்குவிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தவிர நாளொன்றுக்கு 317.42 கென்னிய சிலிங்கை சம்பளமாக பெறுகின்றனர். அதாவது 3.38 அமெரிக்க டொலர். அசாம் தொழிலாளர்களுக்கு ஏனைய கொடுப்பனவுகள் இன்றி 169 இந்திய ரூபாய்களை குறைந்தபட்ச நாட்சம்பளம் உறுதி செய்ய தற்போது மாநில அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இவற்றோடு இங்கு கவனிக்க வேண்டி விடயம் யாதெனில் கென்னிய, இந்திய தேயிலை கிலோ ஒன்று உலக சந்தையில் 3.39 மற்றும் 3.09 அமெரிக்க டொலருக்கு விற்கப்படும் நிலையில் இலங்கையின் தேயிலை 4.33 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுகின்றது.

கென்னியா, அசாம் ஆகிய இடங்களில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பள பேச்சு இடம்பெற்றாலும் முதலாம் மற்றும் இரண்டாம் வருடங்களுக்கு என ஒரு குறித்த வீதத்தில் சம்பளம் அதிகரிப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அத்தோடு வருகை ஊக்குவிப்பு என்பது நாட்களை மற்றும் கிழமையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றன. எனினும் இங்கு அவ்வாறான நடைமுறைகள் இல்லை. அத்தோடு இந்தியா மற்றும் கென்னியவின் வாழ்கைச் செலவு இலங்கையை விட குறைவாக காணப்படுகின்றது. அந்நாடுகளில் அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையை விட கணிசமாக குறைவாக உள்ளன. இலங்கையில் அமெரிக்க டொலர் ரூபா 132ஆக இருக்கும் நிலையில் இந்தியாவில் 62 இந்திய ரூபாவாகவும் கென்னியாவில் 93 கென்னிய சிலிங் ஆகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கென்னிய தொழிலார்கள் 48 கிலோ தேயிலை ஒருநாளில் பறிப்பது உண்மை என்ற போதும் அங்கு தேயிலை பறிக்க விசேட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு குடும்ப உறவுகள் தேயிலை பறிப்பதற்கு தொழிலாளிக்கு உதவி செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது. 

தொழிலாளர்களின் சமூக நலத் தேவைகளுக்கு கம்பனிகள் குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்குவதாக கூறுவதுடன் சம்பள உயர்வு கோரிக்கை வரும் காலத்தில் அதனை சுட்டிக்காட்டி வருகின்றன. கூட்டு சமூக பொறுப்பு (CSR) அடிப்படையில் கம்பனிகள் சமூக நல தேவைகளை செய்து வருகின்றன. எனினும் இது எவ்வகையிலும் போதுமானதல்ல. பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் காணியை குத்தகைக்கு பெறும் போது தொழிலாளர் குடியிருப்புகள், தோட்டக் காணிகள் என்ற வேறுபாடு இன்றி பொறுப்பேற்றுள்ளனர். எனவே அரசு நேரடியாக தலையிட்டு சமூக நல சேவைகளை செய்ய முடியாத நிலையை இது தோற்றுவித்துள்ளது. எனவே கம்பனிகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி குடியிருப்பு பிரதேசங்களை வரையறுத்து அவைகள் அரசின் கட்டுபாட்டிற்கு கீழ் வரும் வகையில் குத்தகையில் மாற்றங்களை செய்யுமாயின் அது கம்பனிகளினால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நல பொறுப்புகளை அரசுக்கு வழங்க முடியும். இது கம்பனிகளுக்கு மாத்திரமல்லாது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக மக்களுக்கும் தேவையான ஒன்றாகும்.

பல்வேறு வாதங்களை முன்வைத்து பெருந்தோட்ட பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாகவும் அதனை மீட்பதற்கு தொழிலாளர்கள் உழைப்பை அதிகளவு வழங்க வேண்டும் என்ற கருத்து கம்பனிகாரர்களினால் முன்வைக்கப்படுகிறது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்றும் கூறுகின்றனர். எனினும் கம்பனிகளின் நிர்வாக செலவுகள், முகாமைத்துவ கட்டனங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகின்றன. பெருந்தோட்டங்களை விஞ்ஞான ரீதியாக முன்னேற்றுவதற்கான எவ்வித வேலைத்திட்டங்களையும் கம்பனிகள் கொண்டிருக்கவில்லை. பெருந்தோட்டத் துறையை முன்னேற்றுவதற்கான நீண்டகால நடவடிக்கைகள் எதுவுமே கம்பனிகளிடம் இல்லை. தொழிலாளர்களை உழைப்பை அதிகளவில் பெறுதல், ஊதியத்தை குறைத்தல் என்ற பழைய பொருளாதார சூத்திரத்தை அடிப்படையாக கொண்டே பெருந்தோட்ட துறையை கம்பனிகள் தொடர்ந்து நடத்திச் செல்ல முயற்சிக்கின்றன. பெருந்தோட்டத் துறையின் முகாமைத்து பிரச்சினைகள் அனைத்திற்கும் பொய்யான காரணங்களை காட்டி தொழிலாளர்களை காரணம் காட்டி அவர்களின் சம்பள உரிமையை மறுக்கும் முயற்சி காணப்படுகிறது. இந்நிலையில் உண்மையில் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களுமே நெருக்கடிக்கு உட்பட்டுள்ளன. பெருந்தோட்டத் துறையும் நெருக்கடியில் இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாக்க தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு இம்முறை வழங்கப்பட வேண்டும். நாட் சம்பளமாக ரூபா 1000 வழங்க கூடிய நிலையிலேயே கம்பனிகள் இருக்கின்றன. எனவே தொழிலாளர்கள், குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களில் உள்ள தொழிலாளர்கள் தமது தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். நியாயமான சம்பள கோரிக்கையைப் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்ய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சம்பள உயர்வுக்காக போராட அனைத்து தொழிலாளர்களும் தயாராக இருக்க வேண்டும். என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை ஒரு அரசியல் காய் நகர்த்தலா - சந்தனம் சத்தியநாதன்


சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முடிவடைந்தது. இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட முடிவுகள் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையானது ஓரு அரசியல் நகர்வாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நிறைவு பெற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் பொழுது கம்பனிக்காரர்களும் தோட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறுவதே இல்லை எனலாம்.

இன்றைய நிலையில் தேயிலையின் சர்வதேச சந்தைவிலை வீழ்ச்சியும் இவர்களது சம்பள உயர்வில் ஒரு பாரிய பின்னடைவை செலுத்துகின்றது என்பதை மறுக்கமுடியாது.

தோட்ட நிர்வாகம் தனது நாளாந்த கொழுந்தெடுக்கும் அளவை, அதாவது 12 கிலோ எடுத்தால்தான் ஒரு நாள் சம்பளம் என்ற நிலையில் இருந்து சில தோட்டங்களில் 16 கிலோவாக அதிகரித்தமை கவலைக்குரியது. இது போன்ற விடயங்களில் தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? சந்தா மட்டும் தானா? என்ற கேள்வி எழுகிறது.

குறிப்பாக தோட்டங்களில் தொழிலாளர்களுக்காக தமது தொழில் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் பலமிழந்து காணப்படுவதும், தோட்ட நிர்வாகத்துக்கு துணை போவதும் கண்டிக்கத்தக்கது. இம்முறை வழமைக்கு மாறாக இ.தொ.கா. முந்திக் கொண்டு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத்தரப் போவதாக உறுதியாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும், இதுவரை 500 ரூபாவைக் கூட அடிப்படைச் சம்பளமாக பெற முடியாத தொழிற்சங்கங்கள் ஒரேயடியாக 1000 ரூபாவைப் பெற்று கொடுக்குமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

ஜூன் மாதம் தொழிற்சங்கங்களின் சந்தாவுக்கு அடித்தளமிடும் மாதம். அங்கத்துவ உறுப்பினர்களை அதிகரித்துக் கொண்டு முன்செல்ல வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவர். இதன் ஒரு காய் நகர்த்தல்தான் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கை என்பது தோட்டத் தொழிலாளர்களின் சந்தேகமாகவுள்ளது.

நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்தி வரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். தேசிய வருமானத்தின் பங்காளிகளான தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாது.

உலகிலேயே குறைந்த ஊதியத்திற்கு கூடுதலான வேலை செய்யும் ஒரு பிரிவினர் என்றால் இது தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே. இம்முறை இரண்டு முன்மொழிவுகள் சம்பளத் தொகையாக வெளிவந்துள்ளன. இ.தொ.கா 1000 ரூபாவெனவும் ஜே.வி.பி. யினரின் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் 800 ரூபாவெனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தனியார் துறையினருக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் இந்த அதிகரிப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏதும் நன்மை கிட்டுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர வேண்டுமானால், தேயிலை ஏற்றுமதி வரி குறைக்கப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த வரிக் குறைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேயிலைத் தொழிற்றுறையைப் பொறுத்தவரை இருநூறு வருடங்களுக்கு மேலாக இலங்கையின் தேசிய வருமானத்திற்கும் 'இலங்கை என்றாலே தேயிலை' என்ற நாமத்தை நிலைக்கச் செய்த தோட்டத் தொழிலாளர்கள் இனியும் இதை செய்வார்களா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தில் இத்துறையில் வேலை செய்வதும், செய்யாமல் விடுவதும் அவர்களது வாழ்வாரத்திலேயே தங்கியுள்ளது. காரணம் தற்போது தோட்டங்களில் வேலை செய்வதை இளந் தலைமுறையினர் விரும்பவில்லை.

பெருந்தோட்டத்துறையின் தேயிலைப் பயிர்ச்செய்கையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் பழைய முறைகளை தவிர் த்து, புதிய முறைகளை கையாள வேண்டும். வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, தொழில் பாதுகாப்பு, தொழிலுக்கான கௌரவம், அந்தஸ்து என்பன சரியாககிடைக்க வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம் வரவேண்டும். உரிய அந்தஸ்து, நிறைவான சம்பளம், புதிய தொழில்நுட்ப வசதிகள் போன்றவை மாற் றம் பெற வேண்டும். இல்லையேல், மறுபடியும் தேயிலைத் தொழில் துறைக்கு வெளிநாடுகளிலிருந்து வேலையாட்களை வரவழைக்க நேரிடும். இன்னும் 15 ஆண்டுகளில் தேயிலைத் தொழிற்றுறையில் பாரிய மாற்றங்கள் வரலாம். எனவே, தொழி லாளர்களையும் தொழில் துறையையும் பாதுகாக்க வேண்டுமானால் அரசியல் காய் நகர்த்தல்களை விட்டுவிட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். எனவே தொழிற்சங்க நடவடிக்கை என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்ற நிலையை புரிந்து கொண்டு உரிய நேரத்தில் சரியான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாய மாகும்.

நன்றி - வீரகேசரி

சிங்கத்திலிருந்து சிங்களம் வரை - என்.சரவணன்


இந்த வாரம் மகிந்த குடும்பத்தின் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணிதிரண்ட பலரின் கைகளில் சிங்கம் மட்டுமே தாங்கிய தேசியக் கொடி காணப்பட்டது. தேசியக்கொடியில் தமிழ்-முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் செம்மஞ்சள், பச்சை நிற கோடுகள் நீக்கப்பட்ட வெறும் சிங்கத்தை மட்டுமே கொண்ட “தேசியக் கொடி” சூழ பறக்கவிடப்பட்டபடி கோத்தபாயவின் பேச்சுக்கள் அமைந்தன. ராவணா பலய, சிங்கள ராவய, சிங்கள தேசிய முன்னணி, பொது பல சேனா போன்ற சிங்கள பேரினவாத அமைப்புகள் மட்டுமல்ல மகிந்த தரப்புக்கு ஆதரவளிக்கும் பெரும்பாலான சக்திகள் பேரினவாத தரப்பே என்பது நாம் அறிந்ததே. சமீப காலமாக இந்த சக்திகள் முன்னெப்போதையும் விட அதிகமாக பேரினவாத நிகழ்ச்சிநிரலை நிர்ப்பந்திப்பதில் முனைப்பு காட்டிவருகின்றன.


இலங்கையின் பெயர் “சிங்ஹலே” என்று மாற்றப்படவேண்டும் என்றும், தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவேண்டும் என்றும், சிங்கக் கொடி சிங்கள பௌத்தத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

“சிங்கம்” சிங்களவர்களை மட்டுமல்ல “சிங்கள பௌத்தர்களை” குறிக்கும் குறியீடாக நிறுவப்பட்டு வந்திருக்கிறது. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமென்பது அரச அதிகாரம் வரை ஆழ நிறுவப்பட்டுள்ளது என்பதை அதிகம் விளக்கத்தேவையில்லை. அரச இலட்சினைகள், கொடிகள், நாணயங்கள், கட்டட அலங்காரங்கள் என சர்வவியாபகமாக சிங்கம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வருகிறது. அப்பேர்பட்ட அந்த சிங்கம் எங்கிருந்து வந்தது? அது எதன் ஊற்று, எத்தன தொடர்ச்சி என்பவை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் மட்டுமல்ல பதிவு செய்ய வேண்டியதும்.

சிங்கத்துக்கு பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மக்களின் வழித்தோன்றல் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. அது வெறும் ஐதீகம் மட்டுமல்ல. பெரும்பாலான சிங்கள மக்கள் தம்மைக் குறித்து சுயப் பெருமிதம்கொள்ளும் ஒரு விடயமாகவும் பார்க்கப்படுகிறது.

சிங்கள பௌத்தர்கள் தமது வரலாற்றைக் கூறும் புனித நூலாக நம்பும் மகாவம்சம் சிங்கத்துக்கு பிறந்தவர்களே சிங்கள வம்சம் என்று தெட்டத் தெளிவாக கூறிவிட்டது. மகாவம்சத்தை இன்று எந்த சிங்கள பௌத்தர்கள் மறுக்கிறார்கள்.

சமீப காலமாக சிங்களப் பேரினவாதம் சிங்கம் – சிங்களம் என்பவற்றை முன்னிறுத்தி சிங்களமயமாக்கும் போக்கிற்கு கருத்தாக்கமாக முன்வைக்கின்றவற்றை சற்று ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. எப்படி இராமர் – இராமாயணம் குறித்த புனைவிலக்கியங்களை நம்பும்படி நிர்பந்திக்கின்ற போக்கு மேலேறி இந்து அற்றவர்களின் மீது அநீதி இழைக்கப்படுகின்றதோ. அதனை விட ஒரு படி மேலே போய் மகாவம்ச புனைவுகளை உண்மையான வரலாறாக புனைந்து நிறுவும் பணி நடக்கிறது.
இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட கணிசமான அளவிற்கு மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்கிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

மகாவம்சத்தில் சிங்களவர்களின் பெருமித வரலாற்றைக் கூறும் கதைகளில் விஜயனின் வருகை, துட்டகைமுனு-எல்லாளன் போர் ஆகிய இரண்டு கதைகளும் முக்கியமானவை. சிங்களவர்களின் சரித்திரம் விஜயனிலிருந்து ஆரம்பிப்பதாக கொள்ளப்படுகிறது. விஜயன் வரும் போது சிங்கக் கொடியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல துட்டகைமுனு சிங்கக் கொடி ஏந்திய படையுடன் சென்று எல்லாளனுடன் போர் தொடுத்ததாகக் கூறுகிறது. இவை இரண்டுக்குமே போதிய உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் கூறிவிட்டனர்.

சிங்கத்துக்கு பிறந்தவர்களா..?
மகாவம்சத்தின் 6வது அத்தியாயத்திலிருந்து சிங்கத்தின் கதை தொடங்குகிறது. அதன்பபடி வங்க நாட்டு அரசனுக்கும் கலிங்க இளவரசிக்கும் ஒரு புதல்வி பிறந்தாள். ஆரூடத்தின் படி “இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடரால் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த மன்னன் இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்து தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான். சுதந்திர வாழ்வை விரும்பி தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த வணிகக் கூட்டமொன்றுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.

அப்போது பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு அந்த கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் வந்துகொண்டிருந்த பாதையில் சென்றாள்.

அவளுக்கு ஆரூடம் நினைவுபடுத்தியபடி சிங்கத்தின் அங்கங்களை ஆரத் தழுவினாள். அதனால் உக்கிர காமவசப்பட்ட அந்த சிங்கம் இளவரசியை முதுகில் ஏற்றிக்கொண்டு தனது குகைக்கு சென்றது. சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தையின் கைகளும் கால்களும் சிங்கத்தைப்போன்று அமைந்திருந்ததால்  சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி (சிங்களத்தில் சிங்ஹசீவலி என்பார்கள்) என்றும் பெயரிட்டாள்.

சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான்.

"தாயே நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள். தந்தை மட்டும் ஏன் வேறுபட்ட தோற்றத்துடன் இருக்கிறார். ''

இளவரசி நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, "நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.

"எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் அடைத்து வைத்திருக்கிறார்.'' என்றாள்.

இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் தடையைத் தூக்கிக் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை வலத் தோளிலும், தங்கையை இடத் தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியேறினான்.

தாயாரின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.

சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.

இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.

காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் துயருற்றது. உணவு, நீரை மறுத்தது. அவர்களைத் தேடி எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.

"சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டும்'' என்று எல்லைவாசிகள் அரசரிடம் முறையிட்டார்கள்.

ஆயிரம் பொற்காசுகளை யானையின் முதுகில் வைத்து, "அந்தச் சிங்கத்தைக் கொண்டுவருபவன் இவற்றைப் பெறக் கடவன்'' என்று முரசறிவித்தான் அரசன்.

எவரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் அதற்கு முன்னர் இரண்டு தாய் தடவைகள் தடுத்திருந்தாள். இம்முறை தாயின் அனுமதியின்றி யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.

"சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே உனக்குத் தருவேன்'' என்றான் அரசன்.

சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான் சிங்கபாகு. தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வாஞ்சையுடன் நெருங்கியது சிங்கம். சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் சிங்கத்தின் வாஞ்சையின் காரணமாக அம்பு திரும்பி வந்து விழுந்தது. தந்தை சிங்கம் சினம் கொண்டது. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தின் உடம்பைத் துளைத்தது.

சிங்கபாகு தான் கொய்த தகப்பன் சிங்கத்தின் தலையுடன் அரண்மனைக்குப் போனான். பொதுமக்கள் அவனது வீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் மரணித்து ஏழு நாட்களாகியிருந்தன. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்ததனால் சிங்கபாகுவை அரசனாக்கினார்கள். அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் ராஜ்யத்தை தனது தாயாரின் கணவரிடம் ஒப்படைத்தான்.

பின்னர் தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென சிங்கபுரி (சிங்ஹபுர) என்கிற நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்ஹசீவலி) தனது மனைவியாக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

தமது முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு “விஜய” என பெயரிட்டனர். உரிய காலத்தில் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள். ஆனால் விஜயனும் அவனது கூட்டாளிகளும் மக்களை துன்புறுத்தினார்கள். கோபமுற்ற மக்கள் பலமுறை முறையிட்டார்கள் இறுதியில்  "உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.

தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை செய்தான் சிங்கபாகு. அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி (சிங்களத்தில் தம்பபன்னி) என்னும் பகுதியில் கி.மு.483இல் கரையேறினார்கள். அந்த விஜயனே இலங்கையின் முதல் சிங்கள மன்னன் என்கிறது மகாவம்சம். அந்த விஜயனின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்கிறது மகாவம்சம் ஆனால் அதுபோன்றே இலங்கை வந்த ஏனையோரை "பரதேசிகள்" (பறையோ) கள்ளதொணிகள் என்று அழைப்பது தான் அயோக்கியம் கலந்த முரண்நகை. விஜயன் வந்தபோது இலங்கையில் இருந்தவர்கள் நாகர்களையும் இயக்கர்களையும் கொண்ட அதிவாசி இனங்களே. அவர்கள் இன்றும் சிங்களவர்களை பரதேசிகள் என்று கூறி விரட்டுகின்ற நிலை இல்லை.

சிங்க இரத்தம்

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஆறாவது நூற்றாண்டில் புனையப்பட்ட மகாவம்சம் அதற்கு முன்னர் எழுதப்பட்ட சிங்கள வரலாறான தீபவம்சத்தின் திரிபுபடுத்தப்பட்ட வடிவம். மகாவம்சத்தில் இரண்டே இரண்டு இடத்தில் மாத்திரமே "சிங்களம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிங்கத்தின் வழித்தோன்றலாக வந்ததாலும், சிங்கத்தின் இரத்த பந்தத்தாலும் சிங்ஹ+ளே (சிங்க+இரத்தம்) சிங்கள என்று அழைக்கப்படுகிறது சிங்கள இனம். சிங்கத்தைக் கொன்றதால் சிங்கபாகு “சிஹல” என்று அழைக்கப்பட்டான் என்று மகாவம்சம் கூறுகிறது. அதன் வழியே விஜயனும் அவனது பரிவாரங்களும் கூட “சிஹல” என்று அழைக்கப்பட்டார்கள் என்கிறது அது. இலங்கைத் தீவு சிங்கத்தை அடிப்படையாக வைத்து சிங்களம் என்று அழைக்கப்பட்டது என்கிறது தீபவம்சம். அதே வேளை சிங்கள என்பதன் தோற்றுவாய் குறித்து வேறும் பல புனைகதைகளும், வரலாற்றுக் கதைகளும் நிரம்பவே உள்ளன. ஆனால் மகாவம்ச புனைவுக்கு கட்டுண்டு இருக்கும் சிங்கள சமூகம் சொல்லும் சிங்கத்தின் வழித்தோன்றல் என்கிற ஐதீகத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சிங்கள தேச உருவாக்கம் குறித்து மகாவம்சம் கட்டியெழுப்பியுள்ள ஆரிய மாயை வெகுஜன மட்டத்தில் ஜனரஞ்சகமாக மதக்கருத்தேற்றி ஒப்பேற்றப்பட்டுள்ளது. மகாவம்ச மனோநிலைக்கு ஆட்பட்ட தூய சிங்கள கருத்துநிலை புனித நிலைக்கு உயர்த்தப்பட்டு ஏனைய இனங்களை அந்நியர்களாக தள்ளிவிட்டுள்ளது. அதுவே இனவிரிசல்களாக நீடித்து வருகிறது.

இந்த மகாவம்ச மனோநிலை என்பது தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் வந்து ஆட்சிசெய்த ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் அதேவேளை, அதே இந்தியாவிலிருந்து 700 பேருடன் வந்து ஆளத் தொடங்கிய விஜயனை ஆக்கிரமிப்பாளனாக பார்ப்பதில்லை. மாறாக சிங்கள இனத்தின் தோற்றம் சிங்கள விஜயனிலிருந்து தொடங்குகிறது என்கிறது. இது ஒரு வேடிக்கையான முரண்நகை.

சிங்களவர்களின் வரலாற்று இருப்பு குறித்து சமீபகாலமாக பல அறிவுபூர்வமான விவாதங்களும் ஆரம்பித்துள்ள நிலையில் விஜயனுக்கு முற்பட்ட காலத்தில் இராவணனை மறுபுனைவுக்கு தள்ளும் வேலையில் பல சக்திகள் கிளம்பியுள்ளன. இராவணனே சிங்களத் தலைவனென்றும் இராவணனின் இருப்பை உறுதிசெய்யும் ஐதீகங்களைக் கட்டியெழுப்பும் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. இராவணன் பற்றி வெளிவரும் பல நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொல்பொருள்கள் என மீள உயிர்ப்பிக்கும் வேலைகளை சமீபகாலமாக பல இடங்களிலும் காணக் கிடைகின்றன. அது தனியாக ஆராயப்படவேண்டியவை.

“லங்காபுர”, “லங்கா”, “சிங்களதீப”, “ரத்னதீப”, “செரண்டீப்”, “தம்பபன்னி”, “ஸ்வர்ணதீப”, “தப்ரபோன்”. “சீஹலக” போன்ற பல பெயர்களில் இலங்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கை “சிங்கள” என்று தான் அழைக்கவேண்டும் என்று நிர்பந்திக்கும் போக்கு சிங்கள பௌத்த தரப்பில் கூர்மையாக காணப்படுகிறது.

சிங்கம் பற்றிய கற்பிதமான புனைவை புனிதமாக்கி அதையே நம்பும்படி நிர்பந்தித்து அந்த மாயையை வரலாற்று மரபாக்கி கொண்டு வந்து சேர்த்தது தற்செயல் அல்ல. அது ஒரு வரலாற்று முயற்சியின் நீட்சி. அந்த நீட்சியே பகுத்தறிவுக்கு இடம்கொடாமல் ஏனைய இனங்களின் மீது இனவெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டுள்ளது என்பதே கண்முன்னுள்ள வரலாறு.

எழுத உதவியவற்றில் சில
  1. மகாவம்சம் - ஆர்.பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம் - 2007
  1. "மகாவம்ச" : சிங்களர் கதை - தமிழில் எஸ்.பொ, மித்ர வெளியீடு, 2009
  1. இலங்கையின் இனத்துவமும் சமூக மாற்றமும் - சமூக விஞ்ஞானிகள் சங்கம, 1985
  1. Dipavamsa - Translated by Hermann Oldenberg - (London: William & Norgate,1874)
  1. “බුදුසමය, ජනවාර්ගිකත්වය හා අනන්‍යතාව: බෞද්ධ ගැටළුවක්“ මහාචාර්ය ගණනාථ ඔබේසේකර
  1. මහාවංශය හොල්මන් කිරීම - තිසරණී ගුණසේකර
  1. විජයාගමනය මිථ්‍යාවක්‌ද? - විජයපාල වීරවර්ධන
  1. බුදුසමය සහ ශ්‍රී ලංකාවේ ජනවාර්ගික ඝට්ටනය. By මහින්ද හිමි, දීගල්ලේ
நன்றி - தினக்குரல்



இலங்கையில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட "சிங்கபாகு" நாடகம்.
சிங்கபாகுவின் கதையா மையமாக வைத்து எதிரிவீர சரத்சந்திரவின் நெறியாள்கையில் கடந்த 54 வருடங்களில் பல நூற்றுககனக்கான தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் இது



பாளி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது ஆங்கில வடிவம் 1912 


மகாவம்சம் தமிழில்

தோட்ட மக்களுக்கு முகவரி மலையக மக்களுக்கு சொந்த காணி வழங்கும்“பசுமை பூமி” திட்டம்


நல்லாட்சியில் 1815 – 2015 200 வருட மலைய மக்களுக்களின் இலங்கை வருகை முடிவில் “தோட்ட மக்களுக்கு முகவரி மலையக மக்களுக்கு சொந்த காணி வழங்கும்“பசுமை பூமி” திட்டம் ஆரம்பம் 25.04.2015 சனிக்கிழமை. பண்டாரவலையில் மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உரையுள் என்பவற்றில் ஒரு தனி மனிதனின் இருப்பிடம் அவனது  வாழும் உரிமையினை கட்டாயப்படுத்தி நிற்கின்றது. ஒரு  அரசின் எல்லைக்குள் தான் நினைக்கும் எந்த ஒரு இடத்திலும் அவன் வாழ்வதற்கான உரிமை உண்டு.

ஆனால் இவ் உரிமை தோட்ட மக்களின் வாழ்கையில்; முழுமையாக கிடைக்கின்றதா? என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே தற்போதும் இருந்து வருகின்றது. தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பாதை மலர்கள் தூவிய பாதையல்ல. கரடு முரடான கற்கள் முட்கள் காணப்ட்ட பாதை. 1815 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள் தேயிலை, தென்னை, இறப்பர் செய்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அக்காலப்பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் இலயக் காம்பிராக்களே காணப்பட்டன இது 10ஓ12 காம்பிராவும் ஒரு குசினியும் ஒரு வராந்தாவும் கொண்டது. இதுவே இவர்களின் காணியாகவும், வீடாகவும் இருந்து வந்தது. இவ்வாறான நிலையிலேயே மலையக மக்கள் தற்போதும் 460 தோட்டங்களில் காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் முகவரி அற்றவர்காக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த 200 ஆண்டு காலப்பகுதியில் தோட்ட மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இடைபட்ட காலப்பகுதியில் பல அரசியல் மாற்றங்களினால் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்ட்டு இந்தியா சென்றவர்களும் அயிரக்கணக்கானோர் உள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தினால் முற்றிலும் அடிமைகளாக அழைத்து வரப்பட்ட தோட்ட மக்கள் இன்னமும் அதே நிலையில் வாழ்ந்து 1985 ஆம் ஆண்டு ஆடசியில் இருந்த அரசாங்கம் நாடற்ற மலையக மக்களுக்கு ஒரு சத்திய கடதாசியை வழங்துவதன் மூலம் இலங்கையர் என்ற பிரஜா உரிமையை வழங்கியதன் ஊடாகவே தற்போது தோட்ட மக்கள் இலங்கையர் என்ற அந்தஸ்ததை பெருகின்னர்.

அன்றிலிருந்தே தோட்ட மக்களின் காணி, வீட்டு உரிமை பேசபப்ட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் பெருந்தோட்ட காணிகள் அனைத்தும் அரசின் பொருப்பிலேயே காணப்பட்டது. இக்காணிகளில் விவசாயத்திற்கு உதவாத ஒதுக்கபட்ட இடங்களிலேயே தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடியிருப்புகள் மிக நீண்ட தூரத்தில் தொழிலாளிகள் வேலைக்கு தேயிலை மலைகளுக்கு செல்லக்கூடிய வசதிக்கு ஏற்ப்ப அமைக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டின் பின்னர் இக்காணிகள் சுமார் 23 கம்பனிகளுக்கும்  அரசு பெருந் தோட்டம் மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்தி சபை (துநுனுடீ) போன்றவற்றின்  கீPழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  இலங்கையில் காணப்படும்  பெரும்பாலானக் காணிகள்  தனியார் வசமே கூடுதலாக காணப்படுகின்றன.  ஆனால்  பெருந் தோட்டத்தை பொருத்தவரையில் 80ம காணிகள்; அரசாங்கத்திற்கு சொந்தமானது.

இன் நிலையில்  தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கங்கள் காணி உரிமையை முறையாக பெற்றுக் கொடுக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தற்போதும் தோட்ட தொழிலாளர்களின்  அடிமை சின்னமாக லயம் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் இன் நிலையில் சுமார் 200 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட இவர்;கள் இப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வரும் வேலையில் அவர்களுக்கு என காணி உரிமை வழங்கப்படவில்லை மலையகத் தோட்டப் புரங்களில் 1.5 மில்லியன் தோட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இன் நிலையில் ஒரு வீட்டில் 05 பேர் கொண்ட குடும்பம் என்று எடுத்தால் சுமார் 300.000 வீடுகளுடன் காணி தேவை.

தற்போது இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் விடு உள்ளவர்களை கழித்து தற்போதைக்கு 185.000 வீடுகள் தேவை. அன்மைக்காலமாக மலையகத்தில் பல வீடமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 07 பேர்ச் காணி, மாடி வீடுத் திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தபடும் கிராம வீடமைப்பு திட்டம், தோட்ட வீடமைப்பு திட்டம் போன்றவை நடைமுறையில் காணப்பட்டாலும் கடந்த அரசாங்களினால் ஆரபிக்கப்ட்ட 7 பேர்ச் வீட்டுத்திட்டம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மக்களின் ஏனைய தேவைகளுக்கு போதிய இடமில்லை, ஒரு வீட்டின் கழிவுகள் இன்னொரு வீட்டுக்குச் செல்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு மண்சரிவு அபாயங்களில் ஒரு வீடு இன்னொரு வீட்டில் விழுகின்றமை, இவ்வாரான சம்பவங்கள் அன்மைக்கால மண் சரிவுகளின் போது அதிகமாகவே இடம் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. கட்டப்பட்ட வீடுகள் மக்களே சுயமாக கட்டியுள்ளனர் அதனால் சரியான தரத்தில் வீடுகள் இல்லை. வீடுகள் கட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒரு தொகை பணத்தையும். தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை அடமானமாக வைத்து ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கபட்டு வருகின்றன.

இந்த பணம் முறையாக மக்களிடம் போய் சேராததினால் கட்டப்பட்ட வீடுகள் பூர்த்தியாகாமல் ஆயிரகணக்கான வீடுகள் காணப்படுகின்றன. இந்த மக்கள் தங்கள் சொந்த பணத்தில் இன்னொருவரின் காணியில் வீடுகளை அமைக்கின்றார்கள். வீட்டு உரிமை இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்குமா? ஏன்பது தான் கேள்வி குறியாக இருந்தது.

தற்போது நடைமுறையில் காணப்படும் வீடமைப்பு திட்டங்கள் சுய உதவி வீடமைப்பு  திட்டத்தின் ஊடாக சேமலாப நிதியை பினையாக கொண்ட கடன் ஊடாக அமைக்கப்படுகிடுன்றன. சில வங்கி உதவிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே வேலை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி, மத்திய வங்கி, அரச முதலிட்டு வங்கி கடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச சார்பாற்ற நிருவனங்கள் மூலமாகவும்  வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும் டெம்பரி செட்களில் 25.000 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இன் நிலைமை நாளாந்தம்  அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந் நிலையில் தோட்ட தொழிலளார்களுக்கு இக்காணி உரிமை கிடைக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தோட்டங்களினாலும் அரசாங்கத்தினாலும் உரித்துடன் காணிகள் வழங்கி  இலவசமாக வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டிய நிலையில்  இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

கம்பனித்தோட்டங்களில் ஓரளவு இவ்வாரான வீடமைப்பு திட்டங்களில் அறிமுகப்படுத்தபட்டாலும்  அவை முறையாக இடம்பெறவி;ல்லை. கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சில தோட்டங்களில் இவர்களுக்கான காணித்துண்டுகள் ஒதுக்கபட்ட போதும் வேலைத்திட்ங்கள் ஆரம்பிக்கபடவில்லை. சில இடங்களில் காணித்துண்டுகள் ஒதுக்கபடவும் இல்லை. அவ்வாறு வழங்கினாலும் போதிய வசதி உள்ள இடமாக இல்லை கட்டபட்ட வீட்டை சுற்றி போதிய வசதி இல்லாமையால் இவற்றின் ஏனைய தேவைகளை செய்துக் கொள்ள முடியாத நிலையில் தோன்றியுள்ளது.

அத்துடன் மின்சாரம் நீர் போன்றவை கிடைக்கபெறவும் இல்லை. ஸ்ரீ லங்கா பெருந்தோட்ட யாக்கம் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை போன்றவற்றில் இச்செயற்பாட்டு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இலய குடியிறுப்புகளுக்கு கூட 100 வருடங்களாக தகரங்கள் மாற்றபடாத நிலையில் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர். தற்போதும் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இலயங்களிலேயே மக்கள் வாழ்ந்தும் வருகின்றனர்.

தனியார் தோட்டம் அல்லது தனியுடமை தோட்டங்களில் இப்பிரச்சினைக்கு  குறையவே இல்லை இதற்கு தோட்ட மக்கள் இலய குடியிறுப்புகளை தவிர வேறு எந்த செயற்த்திட்டமும்  காணப்பட வில்லை காணி, தனிவீடு என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது இவர்களுக்கான வீடமைப்பு திட்டமும் இதுவரைக்கும் யாராலும் முன்வைக்கபடவில்லை.

இங்கு வாழும் மக்கள் ஒதுக்கபட்டவர்களாக காணப்படுகின்றனர். அங்கு காணப்படும் காணிகளில் மலசலகூடம் கூட அமைக்க தொழிலாளிகளுக்கு உரிமை இல்லை. தோட்ட மக்களை பொருத்த வரையில் முறையாக தனிவீடுகளை கட்டி நிம்மதியாக வாழ எத்தனிக்கின்றார்கள் இச்சந்தர்ப்பம்  சிலருக்கு மாத்திரம் கிடைகின்றது. சிலருக்கு கிடைப்பதில்லை இதனால் சிலர் இவர்களுக்கும் முறையாக காணி உரித்துடன் காணிகள் வழங்கவும் கிராம  திட்டத்தின் கிழ் தனித்தனி வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் தேவை.

தற்போது தோட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் முறையாக அமைக்கப்படுகின்றதா என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்யபததினால் வீடமைப்பு திட்டங்கள் பின்னடைவை நோக்கிச் செல்கின்றது. தோட்டங்களில் வேலை செய்து ஒய்வு பெற்றோருக்கு. படித்து விட்டு உயர் தொழிலுக்காக எதிர் பார்த்து இருப்போருக்கும், நோயாளர்கலுக்கும், வலது குறைந்தோருக்கும், தோட்டத்தில் இருந்துக் கொண்டு வெளியில் வேலை செய்பவர்களுக்கும் வீடுகளோ காணிகளோ கிடைப்பதில்லை கேட்டால் தோட்டத்தில் வேலை இல்லை என்கின்றார்கள் அவ்வாறாயின் இவர்களின் வீட்டு உரிமை, காணி உரிமை சம்மந்தமான பிரச்சினை எப்போது தீரும் அதே போல் தோட்ட சேவையாளர்களுக்கும்  இன் நிலைமையே அவர்களின் தோட்ட சேவை காலம் முடிந்ததும் தோட்டத்தை விட்டு  சென்று விட வேண்டும்.

இவ்வாறு மலையகம் சார்ந்த மக்கள் தங்களது காணி உரிமையும் வீட்டு உரிமையும் பெற்றுக்கொள்ள பல இன்னல்களையும் பிரச்சினைகளையும் எதிர் நோக்கி வருகின்றனர். தற்போது மலையக தோட்ட புறங்களில் காணப்படும் இலயக்குடியிருப்பக்கள் சுமார் 150 வருடங்களுக்க முன்னர் கட்டப்பட்டவை.

அக்காலத்தில் காணிகள் நில ஆய்வாரள்களின் அறிக்கையின் பின்னர் கட்டப்பட்டவை அல்ல. அதனால் தான் தற்போதும் மலையகத்தில் மண்சரிவுகளும் இயற்கை அனர்த்தங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் அகதிகளாக காணப்டுகின்றனர். பலர் இறந்தும் உள்ளனர். இந் நிலையில் பெருந்தோட்ட மக்களின் காணி மற்றம் விட்டு பிரச்சனைக்கு புதிய அரசாங்கம் முன் வைத்துள்ள நடவடிக்கை தான் என்ன? தோட்ட மக்களுக்கு ஏனய மக்களுக்கு போல் தங்களது முகவரியை தடம்பதித்துக் கொள்ள எடுத்த முயற்சித்தான் என்ன? இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டுமானால் விலாசமும் வீட்டு இலக்கமும் இருக்கின்றது.

ஆனால் தோட்ட மக்களுக்க இல்லை இந் நிலையில் தோட்ட மக்களின் முகவரி தொடர்பாக மலையக மக்களின் காணி உரிமையையும் தனி வீட்டு உரிமையையும் மையப்படுத்தி அவ்வவ்ச்சந்தர்ப்பங்களில் பலர் பல வேலைத்திட்டங்களை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் இலங்கையின் முதலாவது நிரைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்,ஜெயவர்தன அவர்கள் 1977 ஆண்டு தோட்ட மக்களின் 7 பேர்ச் காணி தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்தார் அதனை தொடர்ந்து காமினி திசாநாயக அவர்களும் 2வது நிரைவேற்று ஜனாதிபதியான ரனசிங்க பிரேமதாச அவர்களும் காணி உரிமையுடன் மலையக மக்களின் வீட்டு உரிமை தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு நுவரெலியாவில் அதற்கான உரித்து வழங்கும் நிகழ்வினையும் நடாத்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அமைச்சராக காணப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் இனைந்து கொண்டமை குறிப்பிடதக்கது. இருந்தும் காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் மலையக வரலாற்றில் அமரர் சௌமியமூர்த்தி தொண்மான் அவர்களின் காலத்தில் மலையகத்தின் தோட்ட மக்களுக்கு தனி வீடும், காணியும் என்ற செயற்பாட்டிற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தற்போது மலையகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருந்தும் இந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் உரித்துகளை வழங்குவதில் பல சிக்கள்களை எதிர்நோக்க இருந்துள்ளது.இருந்தும் தற்போதும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் தனி வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தோடர்ந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 2வது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 3வது ஜனாதிபதி டீ.பி விஜயதுங்க, 4வது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோருடன் இனைந்து மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை, தொடர்பில் குரல் கொடுத்தமை குறிப்பிடதக்கது.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது 4வது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு எத்தனித்த போது குறைவாக இருந்த ஆசனத்தை பெரும் நோக்கில் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் ஸ்தாபகருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நாடிய போது அவரின் கணவாக இருந்த மலையக மக்களின் கிராம செயற்திட்டத்திற்கு அங்கிகாரம் கிடைத்ததிற்கு இனங்க அரசாங்கத்துடன் இனைந்து மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும், காணிப்பிரச்சினைக்கும் முடிவு கட்டுமுகமாக 7 பேர்ச் காணியுடன் கிராம வீடமைப்பு திட்டங்களை அமுல் படுத்தினார்.

தொடர்ந்து வந்த 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் இத்திட்டத்திற்கு ஆதரவழித்த அதே நேரம் மலையக மக்கள் அனைவருக்கும் காணியுடன் கூடிய வீடு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அவர் தனி வீடு இல்லை மாடி வீடுதான் தீர்வு என்று கூறினார். ஏற்கனவே மாடி வீடுகள் மலையகத்தில் அமைக்கப்பட்ட போதும் அவை வெற்றி அளித்ததாக இல்லை.

இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் இச்சந்தர்ப்பத்தில் பூனாகல மீரிபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு 77 குடும்பங்கள் பாதிக்ப்பட்டு சுமார் 37 பேர் மண்ணுடன் புதைந்து மாய்ந்தனர். இதன் பின்னர் உலகலாவிய ரீதியில் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை பேசப்பட்டது.

ஆரசியல் வாதிகளின் பேச்சுகளுக்கு அப்பால் மக்கள் அனைவரும் ஒன்று திரன்டு காணியுடன் தனி வீடு தேவை என்பதை ஞாபகபடுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் மஹிந்த அரசோ அதன்பால் செவிமடுக்கவி;ல்லை. இந்நிலையில் 6வது ஜனாதிபதிக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மலையக கட்சிகளில் ஒரு சிலர் மஹிந்த அரசுடன் இனைந்து மஹிந்தவின் செயற்திட்டத்திற்கும் பலர் மஹிந்தவிடம் இருந்து விழகி மைத்திரியுடன் இனைந்து காணி உரித்துடன் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை நாடினர். ஆதன்படி மைத்திரி அரசு வெற்றிப்பெற்றதினால் இன்று மலையகத்தில் காணி உரித்துடன் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வரும் அதே வேலை பூனாகலை மீரிபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் இலவசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது மலையகத்தில் பல்வேறுப்பட்ட இடங்களில் காணியுடன் தனிவீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முகவரியற்றவர்களாக 200 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஏழு பேர்ச் காணியை வழங்கி உறுதியை ஒப்படைப்பதன் மூலம் அந்த மக்களை முகவரியுடையவர்கள் என நிரூபிக்கப்டவுள்ளது.

இதன்படி பெருந்தொட்ட அமைச்சினதும் ஜக்கி தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் பேரின் முதற்கட்டமாக பசரைத் தேர்தல் தொகுதியை மையப்படுத்தி 1000 பேருக்கு காணி உரிமை பெருந்தோட்ட கைத்தொழில் இராஜங்க அமைச்சர் கே.வேலாயுதம் தலைமையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு இந்நகழ்வு தேசிய நிகழ்வாக பண்டாரவலையில் இடம் பெறவுள்ளது.

இச்செயற்ப்பாட்டை நிர்ணயிக்கும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதானிகள், புத்திஜீவிகள், அமைச்சின் அதிகாரிகள் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களுகு நிரந்தர முகவரி ஒன்னை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்திலேயே அத்திவாரம் இடப்பட்ட போதிலும் அது இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஈடேறவுள்ளது.

இச் செயற்த்திட்டத்திற்கு ஜனாதிபதியின் மைத்திரிபால சிரிசேன அவர்களின் பூரண ஒத்துழைப்பும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்ய அவர்களின் பூரண ஆதரவும், பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் ஓத்துழைப்பும் காணப்படுவதோடு இராஜாங்க கல்வி அமைச்சர்; வி.இராதாகிருஸ்னன், தோட்ட உட்கட்டமைப்பு பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னனி தலைவர் – மனோ கணேசன் இதேவேலை தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தோட்ட தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை சொந்தக்காணியில் குடியேற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் பண்டாரவலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஊவா மாகாண்ம இன்றைய நிலைமைகளுக்கு மீரயபெத்த திருப்பு முனை என்பதால் முதற் கட்டமாக பதுளை மாவட்டத்தை மையப்படுத்தி பண்டாரவலையில் இத்திட்டத்தை ஆரம்பிக்கின்றனர். பண்டாரவலையில் ஏப்ரல் மாதம் 25ஆம் இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கும் நிகழ்வானது தேசிய நிகழ்வாகவே இடம் பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இக்காணி உறுதிகள் தோட்டத் தொழிலாளர் மட்டுமன்றி தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழில் செய்யாதவர்களும் உள்வாங்கப்படும் வகையில் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். அது மாத்திரமன்றி தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்படுகின்ற காணி உறுதிகள் கைமாறும் பட்சத்தில் அல்லது பிறிதொருவருக்கு விற்கப்படும் பட்சத்தில் காணி உரிமைச்சட்டத்தின் பிரகாரம் அதனை அரசாங்கம் மீளப்பெறுவதற்கும் தயங்காது.

காணி உரிமை என்பது தோட்டத் தொழிலாளரின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் ஒரு விசேட செயற்றிட்டமாகும். இதனை எவருக்கும் விற்பதற்கு பயனாளிகள் ஒருபோதும் கனவிலும் நினைத்துவிட இந்த காணிகள் வழங்பப்படுவதன் ஊடாக மலையக மக்களுக்கு காணி உரிமையுடன் வீடுகள் அமைக்கபட்டு அவர்களும் கிராம எழுச்சி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்கள் வாழும் வீட்டு பாதைகளுக்கு பெயர், வீட்டுக்கு இலக்கம் இடப்பட்டு கடிதங்கள் அனுப்பினால் குறித்த நபருக்கே கடிதம் கிடைக்கும் முகவரி உருவாகும். இது நல்லாட்சியில் மலையக மக்களுக்கு கிடைத்த முகவரியுமாகும்.
நன்றி - Tamilfastnews

19 ஆவது திருத்தச்சட்டமும் மலையக பிரதிநிதித்துவமும் - சிவலிங்கம் சிவகுமார்


19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாதபிர திவாதங்கள் தற்போதைய அரசியல் நகர்வில் முக் கியமானதொரு கட்டத்தை பிடித்திருக்கும் நிலையில் மலையக பிரதிநிதித்துவம் தொடர்பான காத்திரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் உள் ளிட்ட சரத்துக்கள் அடங்கியுள்ள 19ஆவது திருத் தச்சட்டமும் புதிய தேர்தல் முறைகளை உள்ளடக் கிய 20 ஆவது திருத்தச்சட்டமும் ஒரே தடைவையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப் படுகிறது. இந்நிலையில் மலையக பிரதிநிதித்துவம் தொடர்பில் ஒரு நிகழ்வு கடந்த வாரம் அட்டனில் இடம்பெற்ற போது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் 16 ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கு நூற்றுக்கணக்கான தேர்தல் தொகுதிகளும் ,மாகா ணசபைகளும்,உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கும் போது சுமார் 15 இலட்சம் சனத்தொகை கொண்ட மலையக மக்களுக்கு அவ் வாறானதோர் நிலைமை இல்லை என இங்கு புள்ளி விபரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்து உரையாற் றிய மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ் தெரிவித்திருந்தார்.

மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித் துவத்தைப்பொறுத்தவரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்களார்களைக்கொண்டுள்ள நுவ ரெலியாமஸ்கெலியா தேர்தல் தொகுதி ஒன்றா கவே காணப்படுகின்றது. ஆனால் வடக்கு,கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அவர்களின் சன த்தொகை செறிவுக்கேற்ப புவியியல் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத் தப்பட்டுள் ளன. விகிதாசார மற்றும் தொகுதிவாரி கொண்ட கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அது மிக பிரதானமாக மலையக மக்களின் பிரதிநி தித்துவத்திற்கே ஆபத்தாக அமையும் என்ற விடயம் தெரிந்திருந்தும் அதற்குரிய தீர்வுகளை அரசாங் கத்திடம் முன்வைக்க போதுமான கால அவகாசம் இப்போது இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே, மட்டுமல்லாது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமைகளில் சிறுபான்மை மக்களின் ,பிரதிநிதிகளின் குரல் எடுபடுமா? என்பதும் முக் கியவிடயம்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகை யிலான நடவடிக்கைக்கும் இச்சமூகத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் பிரதான கட்சிகள் ஒரே மேசையில் ஒன்று கூடி ஒருதீர்மானத்திற்கு வர வேண்டும் என தமிழ் ஊடகங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கின்றன, எனினும் மக்களுக்காகவேனும் ஒன்றி ணைந்து ஒருமித்த கருத்தை முன்மொழிய எவரும் தயாராக இல்லை. இந்த மக்களின் எதிர்கால அரசியல் இருப்பு என்பது பிரதிநிதித்துவங்களின் மூலமே தீர்மானிக்கப்படப்போகின்றது என்ற உண் மையையும் இங்கு மறுக்க முடியாதுள்ளது. ஆகவே இவ்வாறான கலந்துரையாடல்கள் காலத்தின் தேவையாக உள்ளது. அதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் இறுதி வடிவம் ஒரு சேர அரசாங் கத்தை சென்றடைய வேண்டும். தற்போதைய அர சாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் இதை சற்று உரத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது எமது அபிப்பிராயமாகும். அது அவர்களின் கடமையும் கூட. சனத்தொகை பரம்பல் மற்றும் புவியியல் அடிப்படையில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவ தெரிவும் இருக்க வே ண்டும் என்பது எவரும் மறுக்க முடியாத இந்த சமூ கத்திற்கான ஒரு உரிமை கோரிக்கையாகும்.


நன்றி - சூரியகாந்தி

காணி, வீட்டு, சம்பள, தொழில் உரிமைகளை வென்றெடுக்க மே தினத்தில் அணிதிரளுங்கள் - மக்கள் தொழிலாளர் சங்கம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருவாரியாக உள்ளடக்கிய மலையக மக்களுக்கு இன்னும் இருப்பதற்கு வீடும் இல்லை காணியும் இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கான முறையான சம்பளத் திட்டமும் இல்லை. 1823ஆம் ஆண்டு இங்கு வந்து இலங்கை நாட்டிற்கு பெருந்தோட்ட பொருளாதார ரீதியாக முகவரியைக் கொடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் முகவரி இல்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றுடன் தொடர்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சிகள் எனப்படுபவையோ இவ் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்ப்பதில் வெற்றிபெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வாக்குகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றுக் கொண்ட ஐ.தே. கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ மலையக மக்களை அடிமைகளாக கொண்டு செயற்படுகின்றனர். மலையக மக்களிடையே நேர்மையாக செயற்பட்ட சில தனிநபர்களையும் அமைப்புகளையும் தொடர்ந்து எமது மக்கள் தொழிலாளர் சங்கம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக புதிய பாதையில் புதிய இலக்குகளை நோக்கி பயணம் செய்கின்றது.

இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 01ஆம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டு மே தின நிகழ்வு தொடர்பாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க இயக்கத்தை பெயரளவில் அன்றி உண்மையாகவே தொழிலாளர்களினால் இயக்கவும் வளர்க்கவும் முடியுமென்பதை பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. தோட்டக் கம்பனிகளின் சூழ்ச்சிகள், தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள், அடக்குமுறைகள் சீரழிந்த தொழிற்சங்க தலைவர்களின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களை அணித்திரட்டி ஆற்றல் உள்ளவர்களாக்கி தொழிற்சங்கத்தை உயிர்ப்புடன் முன்னெடுக்கிறது.

தொடர்ந்து எட்டாக்கனியாக இருந்து வரும் வீட்டு காணி உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்க செய்தது எமது கடந்த மே தின கூட்டம். அதற்காக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் தனியாகவும் அடிப்படை அரசியல் கொள்கை முரண்பாடுள்ள தனி நபர்களையும் அமைப்புகளையும்கூட இணக்கத்துக்கு கொண்டுவந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுக்க பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு எனும் பொது அமைப்பை கட்டியெழுப்பியுள்ளது. அவ் அமைப்பின் தேவையை குறுங்குழுவாத அமைப்புகள் தனிநபர்களை தவிர ஏறக்குறைய அனைத்து மலையக அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. 

கடந்த மேதினத்தில் புத்துயிரளிக்கப்பட்ட மலையக மக்களின் காணி வீட்டு உரிமைக் கோரிக்கை கொஸ்லந்த மீரியபெத்த அவலத்துடன் மலையகத்தின் பட்டித் தொட்டில்களில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த ஆரோக்கியமான மக்கள் நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டு மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து மலையக மக்களின் அதிக வாக்குகளையும் பெற்றுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். ரணில் பிரதமரானார். மைத்திரி-ரணில் அரசாங்கம் அமைந்தது. முன்னைய மஹிந்த அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடிய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக விவகாரங்களுக்கு அமைச்சர்களாகியுள்ளனர். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொள்ள காணிகளை வழங்குவதாக கூறுகிறது. வீடமைப்பு பற்றி எவ்வித அதிகாரமும் இல்லாத தோட்ட உட்கட்டமைப்பு அபிவிவிருத்தி அமைச்சு வீடுகளை கட்டிக் கொடுக்க அடிக்கல் நாட்டுகிறது. இவை தோட்ட லயன் அறைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்குவதாக லயன் அறைகளுக்கான உறுதிகள் எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க ஒன்றல்ல பல தடவைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஏமாற்று நடவடிக்களை நினைவுப்படுத்துவதுடன் அவ் ஏமாற்று நடவடிக்கைகளே தொடருமோ என்ற நம்பிக்கையீனமே மிஞ்சுகிறது.

அதனால் ஜனாதிபதி, பிரதமர், மலையக அமைச்சர்கள் போன்றவர்களின் வாக்குறுதிகளுக்கு அப்பால் மலையக மக்களின் காணி வீட்டுரிமை என்ற கனவு மெய்பட தொடர்ந்து போராடுவோம் என 2015ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. காலத்திற்கு காலம் நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்யும் சம்பளத்திட்டத்துடனான கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்தி போராடுவோம்.

கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் நடைமுறையில் இருக்கும் பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்தின் சில ஏற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை என்பதையும் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் சட்டபூர்வமான தொழிலாளர்களின் உரிமைகளையும் மீறுவதாக பெருந்தோட்ட கம்பனிகள் நடந்து கொள்வதையும் தோலுரித்துக் காட்டி (தொழில் ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது) தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவசியமான நடவடிக்கைகளில் மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.

இந்த தொடக்கத்துடன் கூட்டு ஒப்பந்தமும் சம்பள உயர்வும் எல்லா மட்டங்களிலும் பேசப்படும் விடயமாகியுள்ளது. தொழிலாளர்கள் சார்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வாய்ப்பை பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் ஒருமுகமாக தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளன. தற்போது அரசாங்கத்துடன் இல்லாத தொழிற்சங்கங்களுக்கும் அரசுடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. எனினும் இம்முரண்பாடுகள் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதாக மாறுபடும் என்று நம்பிக்கை கொண்டிருக்க முடியாது.

நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்து கொண்டு தொழில் உரிமைகளை மீள உறுதி செய்து கொள்ளவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும்.

அத்துடன் ஏனைய தொழிலாளர்களினதும் அடக்கப்படும் தேசிய இனங்களினதும் மக்கள் பிரிவினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதில் நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நாம் செயற்பட வேண்டும். அவர்களுக்கு எமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். அதனூடாக நாடளவிலும் சர்வதே ரீதியிலும் எமது விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய முடியும்.

இவ்வாறான தொடர் நடவடிக்கைகளினூடாக நாம் எமது உழைப்பிற்கான உரிய இடத்தை நிலை நாட்டிக்கொள்ள இந்த 2015ஆம் ஆண்டு மே தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.

இம் மே தினத்தை மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் உட்பட பல அமைப்புகளும் இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களினதும் அடக்கப்படும் தேசிய இனங்களினதும் ஒடுக்கப்படும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன் அதனடிப்படையில் காவத்தையில் மே முதலாம் திகதி கூட்டு மே தின நிகழ்வாக நடத்தப்படுகிறது. இக்கூட்டு மேதினத்திற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates