Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கண்டி மன்னனின் சிம்மாசனத்தை மீட்ட கதை - என்.சரவணன்

மகாவம்ச வர்ணனைகளின்படி ஆரம்பகாலம் தொட்டே அரண்மனைகளையும், அரச சபைகளையும் ஆடம்பரமாக அலங்கரித்திருந்தது பற்றி பல இடங்களில் கூறப்படுகின்றன. சிம்மாசனங்களையும், அரசவை ஆசனங்களையும் தயாரிப்பதற்கும், ஆபரணங்கள், வாள்கள் தயாரிப்பதற்கென தனியான அரசவை நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்திருக்கின்றனர். அந்த நிபுணத்துவத்தின் அற்புதங்களை கொழும்பு அருங்காட்சியகத்தில் காண முடியும்.

அப்படி அங்கிருக்கும் ஒரு முக்கிய பொருள் இறுதி அரசரின் சிம்மாசனம். அங்கே அரசரின் மகுடமும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிம்மாசனம் 1693இல் ஒல்லாந்து அளுனராக தோமஸ் வான் ரீ (Thomas van Rhee – 1691-1697) பதவி வகித்த காலத்தில் அவரால் மன்னர் இரண்டாம் விமலதர்மசூரியனுக்கு (1687-1707) பரிசளிக்கப்பட்டதாகும். ஒல்லாந்தர்களால் அது வழங்கப்பட்டபோதும் அதில் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் இலங்கையின் பாரம்பரியத்தைக் கொண்ட சிற்ப நுணுக்கங்களே என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நீரா விக்கிரமசிங்க அது தென்னிந்திய வேலைப்பாடுகள் என்று தனது ஆய்வில் தெரிவிக்கிறார்.

ஐந்தடி உயரம், மூன்றடி அகலத்தில் மரத்தால் செய்யப்பட்ட அந்த சிம்மாசனத்தின் வெளித்தோற்றத்தில் தங்கத் தகட்டில் சிற்ப வேலைப்பாடுகளும், இரத்தினக் கற்கள் பொறிக்கப்பட்டும் காணப்படுகிறது.


இந்த சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் இரண்டாம் விமலதர்மசூரியனுக்குப் பின்னர் ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707 – 1739), விஜயராஜசிங்கன்  (1739 – 1747). கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன்  (1747 – 1782), ராஜாதி ராஜசிங்கன் (1782 – 1798) ஆகியோர் பயன்படுத்திவிட்டு பின்னர்  ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 – 1815) இறுதியாக பயன்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் உலகமெல்லாம் நாடுகளைப் பிடித்தபின் அந்த வெற்றியில் நினைவாக சிம்மாசனத்தையும் கிரீடத்தையும், கொடியையும், அரசனின் வாளையும், செங்கோலையும், லட்சினையையும் தமது நாட்டுக்கு கொண்டு சென்று விடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நெப்போலியனைத் தோற்கடித்தபின் அவனின் பிரதான கழுகுச் சின்னத்தைக் கொண்டு போய் வைத்திருந்தனர்.

3வது ஜோர்ஜ் மன்னன் இலங்கையின் இறுதி அரசனின் சிம்மாசனம், கிரீடம், வாள் என்பவற்றை அப்படித்தான் லண்டன் வின்சர் மாளிகையில் வைத்திருந்தனர். அங்கே தான் இந்தியாவில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் சின்னங்களையும் வைத்திருந்தனர்.


புதையல்களைத் தேடித்திரிந்த பிரிட்டிஷார்
கண்டியைக் கைப்பற்றியதுமே ஆங்கிலேயர்கள் கண்டியின் அரச சொத்துக்களை அபகரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். 10.01.1815 அன்று ஆளுநர் பிரவுன்றிக் கண்டிக்கெதிரான போர் பிரகடனத்தைச் செய்திருந்தார். ஜோன் டொயிலி, ஹென்றி மார்ஷல், கப்டன் டி புஷ்ஷ, மேஜர் வில்லர்மன், உள்ளிட்ட பலரின் குறிப்புகளின்படி கண்டிக்குள்  அன்று கண்டிக்குள் பிரிட்டிஷ் படைகள் நுழைந்தபோது கண்டி வெறிச்சோடியும், புகை மண்டலங்களுமாக இருந்ததுடன் சொத்துக்கள் பல அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். மன்னரின் சிம்மாசனம், கிரீடம், பாதபீடம் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

எஹெலபொல தனக்குத் தெரிந்த மன்னரின் புதையல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் பட்டியலை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு காட்டிக்கொண்டுத்தான். அதன்படி உடுவெல, ஹங்குரங்கெத்த, மனகொல, வலப்பனை, மெத மானுவர, தெல்தெனிய, ஹிருவெல, கொஸ்கம, அரட்டான, மாவெல, கொத்மலை, கப்பெல, புப்புறெஸ்ஸ, ரம்புக்கன போன்ற இடங்களில் இருந்து பல புதையல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் அரசனின் முக்கிய சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

5.04.1815 சிலோன் கசெட் வெளியீட்டின்படி பிரவுறிக் H.M.Frigate Africaine என்கிற கப்பலில் அரசரின் கிரீடம், வாள், கொடி என்பவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

டொயிலியின் நாட்குறிப்பில் 1815 மார்ச் 13 அன்று எஹெலபொல அரசனுக்குச் சொந்தமான ஏராளமான தங்க ஆபரணங்கள், தங்கத் தலைப்பாகை, இரத்தினக் கற்கள் பதித்த நெஞ்சுக் கவசம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து ஆளுநர் பிரவுன்றிக்குக்கு கொடுத்ததாகவும் ஆனால் ஆளுநர் அந்த பரிசுகளை நிராகரித்தாக குறிப்பிடுகிறார். மார்ச் 26 அன்று எழுதிய குறிப்பில் உடுவெல பகுதியில் இருந்து 31 சாக்குகளில் வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்களைக் கண்டெடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே நாளும், அதற்கடுத்தடுத்த சில நாட்கள் எழுதப்பட்ட குறிப்புகளில் அரசரின் புதையல்கள் எங்கிருக்கின்றன என்பது பற்றி கிடைத்த தகவல்களும் அவற்றைக் கண்டெடுத்து  கொண்டுவர அனுப்பப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.

இவை எல்லாம் கிடைத்தபோதும் ஒரு வருடத்துக்கு மேலாகியும் அரசரின் கிரீடமும் வாளும் கண்டெடுக்கப்படாமல் இருந்தது. ஒரு முறை வெல்லஸ்ஸ பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதானி மில்லேவே திசாவ ஆளுனரை சந்தித்து அரச கிரீடமும் வாளும் பிரித்தானியர் வசம் கிடைக்கும் வரை மக்கள் பிரித்தானியர் கைகளுக்கு ஆட்சி போய் விட்டதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரித்தானியர் அதைத் தேடிக்கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டினர். 5.11.1816 அன்று இலங்கையிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட தந்தியொன்றில் மன்னரின் வாளும், கிரீடமும் ஊவாவுக்கும் கொத்தமலைக்கும் இடையிலான ஒரு காட்டுப் பகுதியில் இருந்து எஹெலபொலவால் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தவிடுபொடியான எஹெலபொலவின் கனவு
04.02.1829 அன்று பிரித்தானிய வருமானவரி இலாகாவின் ஆணையாளர் வெலேகெதர அப்புஹாமி சிட்டம்பி என்பவரை விசாரணை செய்தார். அப்புஹாமி சிட்டம்பி அரசரின் விசுவாசமான சேவகர். அப்புஹாமி சிட்டம்பியின் வாக்குமூலத்தின் படி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் தனிப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் அரசர் வசித்துவந்த அறையிலிருந்து சற்று தூரத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரித்தானிய படை சீத்தாவக்க பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கிற செய்தி வந்தடைந்ததும் அப்புஹாமி சிட்டம்பியும் மேலும் மூன்று சேவகர்களும் பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் இரண்டு பெட்டிகளில் வைத்து முத்திரையிட்டு பூட்டி வைத்துள்ளனர். எதிரிகள் நெருங்குமுன் அரசர் அங்கிருந்து வெளியேறும் போது இவற்றுடன் சேர்த்து நான்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தெல்தெனிய பகுதியில் மறைந்திருந்த அரசர் பிடிபடும் போது அவரிடம் தங்க நாணயங்கள் அடங்கிய ஒரு பெட்டி மாத்திரம் தான் இருந்திருக்கிறது. ஏனைய பெட்டிகள் மன்னருக்கு விசுவாசமான ஒருவரிடம் இரகசியமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குமூலத்தில் இன்னொரு விடயத்தையும் அப்புஹாமி குறிப்பிடுகிறார். அரசர் பிடிபட்டு 6வது நாளன்று எஹெலபொல அரசருக்கு சொந்தமான ராஜரீக பொருட்கள் பலவற்றை சொந்தமாக்கிக்கொள்வதற்கு தனது ஒத்துழைப்பை நாடி வந்ததாக குறிப்பிடுகிறார்.
“அன்று இரவு என்னை உள்ளறைக்கு அழைத்துவந்தார். அனைத்து கதவுகளையும் திறந்து தேடினார். அங்கிருந்த ஒரு தங்க தலைப்பாகையையும் மார்பு கவசத்தையும் அணித்துகொண்டார். நான் அது சரியில்லை என்பதை விளக்கினேன். இன்னும் சில தினங்களில் பிரித்தானியரால் தான் அரசராக முடி சூட்டப்படப் போவதாக அவர் பதிலளித்தார்.”
சிம்மாசனம் எங்கே?
பிரித்தானியா கைப்பற்றிச் சென்ற அரசுரிமைச் சின்னங்கள் பற்றிய ஒரு விரிவான பெரிய நூலொன்று 2016ஆம் ஆண்டு “கிரீடங்களும் காலனித்துவமும்” (Crowns and Colonies: European Monarchies and Overseas Empires) என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. 350 பக்கங்களைக் கொண்ட அந்த நூலில் இலங்கைக்கு திருப்பிக் கொடுக்கப்பட்ட அரச சின்னங்கள், பொக்கிசங்கள் குறித்த 25 பக்கக் கட்டுரையொன்றை ஐரோப்பிய வரலாற்று பேராசிரியரான ரொபர்ட் அல்டிறிச் (Robert Aldrich) எழுதியிருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் ஏராளமான தங்க ஆபரணங்கள், கலசங்கள், பதக்கங்கள், வைரக்கற்கள் என ஏராளமான பொக்கிசங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு சென்றனர். இவற்றை 13.06.1820 அன்று “38, King Street, Covent Garden” என்கிற இடத்தில் ஏலத்துக்கு விடப் போவது குறித்த 17பக்கங்களில் ஒரு பட்டியலைக் (Regalia ofthe King of Kandy A catalogue) காணக் கிடைத்தது. அது வெளியாகி 200 ஆண்டுகள் ஆகப் போகிறது ஆச்சரியமளிக்கும் விபரங்கள் அவை. இத்தனையையும் கொள்ளையடித்துக் கொண்டு போயிருக்கிறார்களே. அந்த வெளியீட்டின் அட்டையில் இப்படி இருக்கின்றன
  • “கண்டி மன்னனின் பொக்கிசங்கள்”
  • பெறுமதிமிக்க நகை சேகரிப்புகள்
  • தூய தங்கம், முத்துக்கள், வைரக்கற்கள், பதக்கங்கள்
  • தங்க மாலைகள்; குறிப்பாக 23.5 அடிகளைக் கொண்ட மாலை
  • விற்பனை பகல் 1 மணிக்கு சரியாக தொடங்கிவிடும்
  • முன்பதிவின்றி அப்போதே விற்பனையாகிவிடும்.
இந்த ஏலத்தில் சிம்மாசனம், மகுடம், வாள் என்பவை இருக்கவில்லை என்று தெரிகிறது. அன்றைய ஆளுநர் பிரவுன்றிக்கின் மகனால் அவை அனைத்தும் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பின்னர் நான்காவது ஜோர்ஜ் மன்னரிடம் அவை திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வின்சர் மாளிகையில் வைக்கப்பட்டது.

கண்டி மன்னனை பிடித்தபின்னர் அரசாட்சியோடு இந்த சிம்மாசனமும், மகுடமும், வாளும் தனக்கே கிடைக்கும் என்று நம்பியிருந்த எஹெலபொலவுக்கு ஒன்றையும் கொடுக்கவில்லை ஆங்கிலேயர்கள். அவர்கள் மேற்படி அரசுரிமைச் சின்னங்கள் அனைத்தையும் இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இலங்கை மக்கள் மன்னரின் இந்த முக்கிய சின்னங்கள் பற்றி மறந்தே போயிருந்தனர். 1913ஆம் ஆண்டு தான் அப்போது காலனித்துவ செயலாளராக இருந்த எட்வர்ட் ஸ்டப்ஸ் (Sir Reginald Edward Stubbs) முதன் முறையாக இந்த சின்னங்கள் எங்கே இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை அறிவித்தார்.

இதே வேளை 1924ஆம் ஆண்டு லண்டன் பத்திரிகையாளரான பிரெடிரிக் குருப் (Frederick Grubb) எழுதிய ஒரு பதிவு சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. அதன்படி கண்டி அரசரின் சிம்மாசனம், மகுடம், வாள் என்பவை அங்கிருந்து இடம் மாற்றப்பட்டுவிட்டதென்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிம்மாசனம் ஒரு பௌத்த சிம்மாசனம் என்பதால் கிறிஸ்தவ அரசர் அருகில் வைத்திருப்பது உகந்ததல்ல என்கிற முடிவுக்கு வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.
பத்திரிகையாளர் பிரெடிரிக் குருப் மீண்டும் இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக மன்னரின் அந்தரங்க செயலாளரோடு அணுகி தொடர் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவை நாகரீகமாக இலங்கைக்கே திருப்பிக் கொடுக்கப்படவேண்டியவை என்று விளக்கியிருக்கிறார்.

காலனித்துவ செயலாளராக இருந்த எட்வர்ட் ஸ்டப்ஸ் ஆளுநராக பதவியேற்ற காலத்தில் (1933-1937) அவரும் இந்த முயற்சியில் பங்களித்துள்ளார்.

மீண்ட “முடி”
இறுதி அரசனின் சின்னங்களை இலங்கைக்குத் திருப்பித் தருமாறு அன்றைய அரச சபை உறுப்பினர் ஜோர்ஜ்  ஈ.டி சில்வா (இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர்) 30.11.1933 அன்று ஒரு பிரேரணையை அரச சபைக்கு கொண்டுவந்தார். 15.02.1934 அன்று அது அரச சபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பற்றிய விபரத்தை இக்கட்டுரைக்காக தேடியபோது சிங்கப்பூர் பத்திரிகையொன்றில் (The Straits Times, 13.09.1936, P5) காணக்கிடைத்தது.

இந்த முயற்சிகளைத் தொடர்ந்து மன்னர் இறுதியில் ஒப்புக்கொண்டார். பக்கிங்ஹாம் மாளிகை காலனித்துவ செயலாளருக்கு இது தொடர்பில் 1934 ஜூன் 5 அன்று ஒரு தந்தியை அனுப்பி வைத்தது. 100 வருடங்களுக்கும் மேலாக வின்சர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த கண்டி மன்னனின் மகுடத்தை மக்களின் உணர்வுபூர்வமான தேவை கருதி திருப்பித் தர ஒப்புக்கொண்டதாகவும், இளவரசர் டியுக் கிளவுஸ்செஸ்டரின் இலங்கை விஜயத்தின் போது அது கையளிக்கப்படும்  அந்த தந்தி குறிப்பிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த சிம்மாசனமும் கிரீடமும் இலங்கைக்கு 1934ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று மீண்டும் கொண்டுவரப்பட்டு கண்டியில் பெரும் திருவிழாவாக இதற்கான வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டியின் பாரம்பரிய தாள வாத்திய இசையுடனும், கண்டிய நடனங்களுடனும் கோலாகலமான ஊர்வலமாக அந்த சிம்மாசனம் எடுத்துக் கொண்டுவரப்பட்டது.
இரவு 9 மணியளவில் இலங்கை பறிகொடுக்கப்பட்ட அதே கண்டி “மகுல்மடுவ”வில் வைத்து பல பௌத்த மத குருமார் மற்றும் அரச தலைவர்கள் முன்னிலையில் அவை இளவரசர் டியுக் கிளவுஸ்செஸ்டரால் (Duke of Gloucester) ஒப்படைக்கப்பட்டன. அங்கு அவர் ஒரு உரையையும் ஆற்றினார்.

அடுத்த மூன்று நாட்கள் 24-27 வரை கண்டி மன்னனின் அரசுரிமை சின்னங்கள் அங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதைக் காணச் சென்றிருந்தனர். பின்னர் கொழும்பிலும் ஒக்டோபர் 1-நவம்பர் 14 வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. 902,920 இலங்கையர்கள் அதை பார்வையிட்டனர்.


1942 இல் கொழும்பில் இருந்த இராணி மாளிகை மியூசியமாக ஆக்கப்பட்டது. கண்டி அரசனின் இந்த சிம்மாசனமும் கிரீடமும், வாள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. இன்றும் அவற்றைப் பார்க்க முடியும்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று மார்தட்டிக்கொள்ளுமளவுக்கு பல உலக நாடுகளை கைப்பற்றியிருந்த ஆங்கிலேயர்கள் ஏராளமான சொத்துக்களையும் பொக்கிசங்களையும் அள்ளிக்கொண்டு சென்று தமதாக்கிக்கொண்டனர். அரசுரிமைச் சின்னங்களை தனியாக தமது சாம்ராஜ்ஜிய பெருமிதத்தின் நினைவுச் சின்னங்களாக வைத்திருந்தனர். இலங்கையைத் தொடர்ந்து பர்மா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் அரச சின்னங்களை மாத்திரம் அவர்கள் திருப்பிக் கொடுத்தனர். மேலும் பல நாடுகளின் அரச சின்னங்கள் அவர்கள் வசமே இன்னமும் உள்ளன. ஆனால் ஏனைய பொக்கிசங்கள் பலவற்றை ஏலத்துக்கு விற்று பிழைத்துக்கொண்டனர்.

கண்டி ராஜ்ஜியத்தில் மாத்திரமல்ல இன்னும் பல இலங்கை அரச பொக்கிசங்களையும், புதையல்களையும் எப்படியெல்லாம் தேடித்தேடி சூறையாடினார்கள் என்பது தனிக்கதை.

உசாத்துணை:
  • Crowns and Colonies: European Monarchies and Overseas Empires by Robert Aldrich, Cindy McCreery - Manchester University Press; 1 edition (August 1, 2016)
  • Regalia ofthe King of Kandy A catalogue,  Printed by w. SMITH, King Street, Seven Dial -1820, 
  • THE THRONE OF THE KINGS OF KANDY – by By JOSEPH PEARSON (Vice-President, Royal Asiatic Society - Ceylon Branch) Vol. 31, No. 82, Parts I., II., III., and IV. (1929), pp. 380-383
  • Diary Of Mr. John Doyly by H.w.Codrington, (JRAS) 1917
  • Tri Sinhala: The Last Phase, 1796-1815 - by P. E. Pieris - Asian Educational Services (2001)
நன்றி - அரங்கம்


ஹட்டனில் இரா.சந்திரசேகரனின் நூல் வெளியீடு


நூல் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்
இரா. சந்திரசேகரன் எழுதிய
“ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சமவாயமும் இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பும்”

(மனிதவுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு)

நாள்  
24.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் 
டைன் என்ட் ரெஸ்ட் (கார்கில் புட்சிட்டி மேல் மாடி, ஹட்டன்)
நேரம் 
மு.ப. 10.00 மணி
தலைமை 
திரு. யு.சு. ஜோன் (ஆய்வாளர்)

வரவேற்புரை 
 திரு. ளு. தவச்செல்வன்

நூல் அறிமுகம்
திரு. னு. ஜெகதீஸ்வரன்

நூல் வெளியீடு
சிறப்பு பிரதி வழங்கல்

நூல் விமர்சனம்
திரு. நேரு கருணாகரன் (சட்டத்தரணி)

கருத்துரை
திரு. து. சற்குருநாதன்
(விரிவுரையாளர் - அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டக்கலை)
திரு. யு. செல்வராஜா
(சட்டத்தரணி)

ஏற்புரை
திரு. இரா. சந்திரசேகரன் (நூலாசிரியர்)

நன்றியுரை

அழைப்பு
புதிய பண்பாட்டு அமைப்பு

அட்டனில் தொழிலாளர் மாநாடு


எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன், தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அட்டன் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், "பெருந்தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகள் மற்றும் ஊதியங்களையும் சமூக உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முன்னோக்கிய பாதை," பற்றி கலந்துரையாடப்படும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளை இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா நாள் சம்பளத்துக்கான ஒன்பது நாள் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னரே எபோட்சிலி நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஏனைய பல தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் எபோட்சிலி குழுவோடு தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதோடு, இதே போன்ற குழுக்களை உருவாக்க போராடுவதற்கும் சபதம் எடுத்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும், ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்த போதிலும், தொழிலாளர்களின் தற்போதைய எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் அதை வர்த்தமானியில் வெளியிடவில்லை. இந்த புதிய ஒப்பந்தத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் பிணைக்கப்பட்ட ஒரு அற்ப சம்பள உயர்வே வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்கள் பங்கெடுத்த ஊதிய அதிகரிப்புக்கான வேலை நிறுத்தமானது, ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் மறு எழுச்சி பெறுவதன் ஒரு பாகமாகும்.

ஒப்பந்தத்தின் கீழ், அடிப்படை தினசரி ஊதியமானது 500 ரூபாவில் இருந்து 700 ரூபா (3.92 டொலர்) வரை 200 ரூபாவால் காகிதத்தில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை பங்கு கொடுப்பனவானது 30 முதல் 50 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கம்பனிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவையும் உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ரூபாவையும் அபகரித்துக்கொண்டன. அதாவது மொத்தமாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா மட்டுமே கிடைப்பதுடன், முந்தைய சம்பளத்துடன் ஒப்பிடும்போது வெறும் 20 ரூபாவே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, புதிய கூட்டு ஒப்பந்தத்தின் உட்பிரிவு 3 இன் கீழ், தொழிற்சங்கங்கள், "வருவாய் பகிர்வு வெளியார் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தி திறனோடு பிணைக்கப்பட்ட சம்பள மேலாதிக்கத்தை" திணிப்பதற்கு ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன.

இந்த "வருமானப் பகிர்வு வெளியார் உற்பத்தி மாதிரி" நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில், குறைந்தபட்ச வாழ்க்கைக்கான வருமானத்தைக் கூட தொழிலாளர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இந்த முறையின் கீழ் ஒதுக்கப்படும் காணியில், முழுக் குடும்பமும் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றிவிடுகின்றது. தொழிலாளர்களின் ஓய்வு கால நிதிகளையும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் கூட இழந்து விடும் அபாயம் உள்ளது.

 தொழிலாளர்களின் எதிர்ப்பை பற்றி ஆழமாக கவலை கொண்டுள்ள அரசாங்கம், புதிய கூட்டு ஒப்பந்தத்தை முறையாக வர்த்தமானியில் அறிவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கமோ அல்லது கம்பனிகளோ தொழிலாளர்களுக்கு நல்லதை செய்யும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி போன்ற போதுமான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. கென்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற மற்ற நாடுகளிலுள்ள எங்களது சக தோட்டத் தொழிலாளர்களைப் போலவே, சர்வதேச பெருந்தோட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களினதும் ஒரு சங்கிலி மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.

அற்ப ஊதிய உயர்வையும் வேலை வேகப்படுத்தலுக்கான கோரிக்கையையும் நாங்கள் நிராகரிக்க வேண்டும். முழு ஊதியத்துடனான விடுமுறை, மருத்துவ நலன்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டத்துடன், ஒரு கெளரவமான மாத சம்பளத்திற்கான உரிமை எங்களுக்கும் உள்ளது.

150 வருடங்களுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அடிமைத்தொழிலாளர் நிலைமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் எல்லா பிரிவு தொழிலாளர்கள் மத்தியிலும் பிரசாரம் செய்து வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட சோசலிச வேலைத்திட்டம், அனைத்து தொழிலாளர்களுக்கும் அவசியமானது என்று நாங்கள் நம்புகிறோம். 

 –சோசலிச சமத்துவக் கட்சி 
நன்றி - வீரகேசரி

சிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி!? - என்.சரவணன்

“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார். அதன் பின் அரச மரியாதையுடன்  ராஜரீக கொடி ஏற்றப்பட்டது. அளவான வெப்பமுள்ள நாள், தெளிவான வானம்....”
கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.

டொயிலியோ அல்லது வேறெந்த ஆங்கில அறிஞர்களோ, அல்லது அதிகாரிகளோ கூட அன்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை.
அப்படி சிங்கக் கொடியை எற்றியிருந்தாலும் கூட அப்படியொரு கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடியாக இருந்ததில்லை. கண்டி ராஜ்ஜியம் ஏழு பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கென கொடிகளும் இருந்தன. அந்த ஏழில் ஒன்று “சத்கோறளை” எனப்படும் பிரதேசம் இன்றைய குருநாகல் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது அது. சத் கோரளவின் கொடி தான்  சிங்கக் கொடி. ராஜசிங்கனுக்கு எதிரான கிளர்ச்சி சத்கோரளையிலிருந்து தான் ஆரம்பித்தது எனலாம்.


கண்டி தலதா மாளிகைப் பகுதிக்குள் உள்ள அதே ‘மகுல் மடுவ’வில் இன்றும் அந்தக் கொடிக்கம்பம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் 200வது ஆண்டு நிறைவையொட்டி மகுல்மடுவவுக்கு ஊர்வலமாகச் சென்ற பிக்குமார்கள் தலைமையிலான கும்பல் தேசியக் கொடியிலிருந்து பச்சை, செம்மஞ்சள் பகுதிகள் அகற்றப்பட்ட தூய சிங்கக் கொடியை போலிசாரோடு மல்லுக்கட்டிக்கொண்டு ஏற்றிய சம்பவத்தை நாம் மறந்திருக்கமாட்டோம். அந்தளவு வாளேந்திய சிங்கக் கொடி பற்றிய கற்பிதங்களும், புனிதப்படுத்தளும் நிறுவனமயப்பட்டுள்ளன.

இலங்கையில் சிங்கத்தை ஒரு குறியீடாகவோ, சின்னமாகவோ கொடியாகவோ பயன்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இருக்கத் தான் செய்கின்றன. அதே வேளை கிடைக்கப்பற்ற தொல்பொருள் சான்றுகளைத் தவிர்ந்த “சிங்கம் சின்னமாக” இருந்ததன் கதைகள் நம்பகத்தன்மை குறைந்ததாகவே உள்ளதை பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட சில வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. 

இலங்கையில் புராதன அரண்மனை வாசல்களில் அமைக்கப்பட்டிருந்த சந்திரவட்டக்கற்களில் வரிசையாக செதுக்கப்பட்ட சிங்கங்களின் உருவங்கள் காணப்படுகிறன. 

அதுமட்டுமன்றி ஏறத்தாழ 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மன்னர்கள் மலசலம் கழிக்க உருவாக்கப்பட்டிருந்த கற்களில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகளிலும் சிங்கத்தைக் காண முடிகிறது.

மலசலம் கழிக்க பண்டைய காலத்தில் கற்களால் செதுக்கி உருவாக்கப்பட்டிருந்திருக்கிறது (அனுராதபுரத்தில்)
இலங்கையில் சிங்கள சாதியமைப்பில் மேனிலையில் இருந்த சாதிகளுக்கென்று தனித் தனியான கொடிகள் இருந்திருக்கின்றன. கராவ (மீனவ "கரையார்" சாதிக்கு ஒப்பானவர்கள்) சாதியினர் சிங்கத்தை தமது கொடியில் வைத்திருந்திருக்கின்றனர்.

கராவ சாதிக்குரிய கொடி
இவர்கள் எல்லோரும் அப்படி நம்புமளவுக்கு அந்த சிங்கக் கொடி தான் கண்டியின் கடைசிக் கொடியா?

இலங்கைக்கு விஜயன் வந்தபோது சிங்கக் கொடியுடன் தான் இலங்கையில் கால் பதித்தான் என்று ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. மகாவம்சத்திளும் சூலவம்சத்திலும் அப்படி இருப்பதாகவும் கதைகள் பரப்பப்பட்டுவருகின்றன. விஜயனின் தகப்பன் சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்ததாகக் கூறும் மகாவம்சக் கதையின் தொடர்ச்சியாகவே இப்படிப் புனைய நேரிட்டிருப்பதாகக் கொள்ள முடியும்.
எல்லாளன் - துட்டகைமுனு போரை சித்திரிக்கும் 19ஆம் நூற்றாண்டுக்குரிய தம்புள்ளை குகை ஓவியம்

அதுபோல எல்லாளனுடன் துட்டகைமுனு போர்புரிந்தபோது துட்டகைமுனு சிங்கக் கொடியுடன் தான் சென்றதாகவும் மகாவசம் கூறுவதாக சொல்வதும் சுத்தப் பொய். பிற்காலத்தில் வரையப்பட்ட அப்படியொரு சுவரோவியத்தைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் ஆட்சியின் போது வரையப்பட்ட தம்புல்லையில் உள்ள குகை ஓவியத்தில் ஒன்றே எல்லாளன் – துட்டகைமுனு போரை சித்திரிக்கிறது. இலங்கையின் தொல்பொருள் ஆய்வின் வித்தகராக போற்றப்படும் பரணவிதான எழுதிய “சிங்ஹலயோ” என்கிற நூலில் தான் அந்த ஓவியம் ஒரு கோட்டுச் சித்திரமாக வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தச் சித்திரத்தில் கொடியில் இருந்த உருவத்தை வெறுமையாக விட்டார். அந்த உருவம் தெளிவாக இல்லாததால் அவர் அதை வெறுமையாக விட்டிருக்கக் கூடும்.

ஆனால் ஈ.டபிள்யு பெரேரா கொடிகள் பற்றி எழுதி வெளியிட்ட நூலில் இந்தக் கொடியில் இருப்பது சிங்கம் தானென்றும் சிங்கத்தின் வலது கையில் வாளொன்றையும் உருவகப்படுத்தி புனைந்து வெளியிட்டார். இலங்கையின் தேசியக் கொடியைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்ததாக கூறி ஒரு வரைபடத்தை முதன் முதலில் வெளியிட்டதும் அவர் தான். அந்தக் கோடி தான் இலங்கையின் தேசியக் கொடியானது. வாளேந்திய அந்தக் கொடியே தான் கண்டு பிடித்த தேசியக்கொடி என்பதை உறுதிபடுத்த அவர் இந்த “துட்டகைமுனுவின் சிங்கக் கொடி புனைவில்” இறங்கியிருக்கக் கூடும்.

இந்த தம்புள்ள ஓவியத்தைக் கொண்டு தான் இன்றும் சகலரும் அந்தப் போர் குறித்த கற்பிதத்துக்கும், காட்சிப்படுத்துவதற்கும் வலுசேர்த்து வருகிறார்கள். பயன்படுத்திவருகிறார்கள். அந்த காட்சியைத் தான் பலரும் சிலைகளாகவும், ஓவியங்களாகவும், கதைகளாகவும் மேலதிகமாக புனைந்துவருகிறார்கள். அதுபோல “சிங்கக் கொடி”யை சிங்களக் கொடியாக புனிதப்படுத்தும் மரபும் இங்கிருந்துதான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சரி... சிங்கக் கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடி என்றால் இலங்கையின் தேசியக் கொடி எது? சிங்களவர்களின் கொடி தான் என்ன? அவ்வாறு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி என்று ஒன்று வரலாற்றில் இருந்திருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்களவர்களின் நாடாகத் தான் என்றாவது இருந்ததுண்டா?

இலங்கையில் சிங்கம் கிடையாது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இல்லாத ஒரு விலங்கு ஆதி காலத்தில் இருந்தே இலங்கையின் சின்னமாக இருந்ததாக கூறப்படுவது எப்படி?

இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோக சக்கரவர்த்தியின் தாக்கமே பிற்காலத்தில் “சிங்கம்” சின்னமானதன் பின்னணிக் கதையாகக் இருக்கக் கூடுமென பலரும் நம்புகின்றனர்.

இன்றும் இந்தியாவின் தேசிய அரச இலட்சினையாக பயன்படுத்தப்பட்டுவருவது நான்கு சிங்கங்களைக் கொண்ட அசோகனின் சின்னம் என்பது நமக்குத் தெரியும். அசோகன் இலங்கைக்கு தனது மகன் மகிந்தனை அனுப்பி பௌத்தத்தை இலங்கையில் பரப்பியபோது அனுராதபுரத்தை தலைமையாகக் கொண்டு தேவனம்பியதிஸ்ஸன் ஆட்சி புரிந்துவந்தான். தேவனம்பியதிஸ்ஸன் பௌத்தத்தைத் தழுவினான். அதுபோல அசோகனுக்கும் தேவனம்பியதிஸ்ஸனுக்கும் இடையில் பல தடவைகள் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள் காணக் கிடைக்கின்றன. இந்த பின்னணியில் தான் தேவனம்பியதிஸ்ஸனின் கொடியும் கூட சிங்கக் கொடியாக அமைகிறது.

இலங்கையில் சிங்கத்தைக் கொடியாகக் கொண்டிருந்தவர்கள் அந்தந்த ராஜதானிகளின் கொடிகளாகத் தான் கையாண்டிருக்கிறார்களேயொழிய  ஒரு இனத்தை அது பிரதிநிதித்துவப்படுத்தியது கிடையாது. 


ஐரோப்பியர்கள் பலரின் குறிப்புகளில் மன்னர் சூரியனையும், சந்திரனையும் கொண்ட கொடியையும், சில நேரங்களில் அன்னம், மயில், மான், கரடி, சிங்கம், புலி, யானை, மேலும் சில பறவைகள் போன்ற பல்வேறு பிராணிகளைக் கொண்ட கொடியையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர். ரொபர்ட் பேர்சிவல் தனது நூலில் (An Account of the Island of Ceylon: Containing Its History, Geography) ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் பரிவாரங்கள் சூரியனின் உருவத்தைக்கொண்ட கொடியைத் தாங்கிச் சென்றதாக குறிப்பிடுகிறார்.

இதேவேளை இன்று நாம் பயன்படுத்தும் வாளேந்திய சிங்கத்தின் உருவத்துக்கு நிகராக ஐரோப்பாவில் பல சின்னங்களும், கொடிகளும், லட்சினைகளும் இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களின் முக்கிய லட்சினைகளாகவும், சின்னங்களாகவும், நாணயங்களிலும் சிங்க உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவற்றின் தாக்கம் கூட இந்தக் காலப் பகுதியில் இருந்திருக்கலாம் என்றும் நாம் சந்தேகிக்க முடியும்.

இப்போது சொல்லுங்கள் சிங்கக் கொடி/கண்டியக் கொடி எப்படி தேசியக் கொடியாக முடியும்? இனப்பிரச்சினையின் ஒரு குறியீட்டு அடையாளமாக இன்று இந்த கொடி உருவகமாகுமளவுக்கு இன்று வந்து நிற்கிறதல்லவா?

“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை! - என்.சரவணன்


இலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.

நான்காம் பராக்கிரமபாகு காலத்திலிருந்தே “ரதல” குழாமினர் பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பேற்றாலும் கண்டி ராஜ்ஜியகாலத்தில் தான் இந்த சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அரச வம்சத்துக்கு அடுத்தபடியாக ராஜ்ஜியத்தில் அதிகாரம் செலுத்திய பிரதானிகள் குழாமினரே இவ்வாறு அழைக்கப்பட்டார்கள். ஒரு வகையில் இவர்கள் “சாதி”யாகவும் இயங்கினார்கள். உயர் வர்க்கமாகவும் இருந்தார்கள். சொத்து படைத்த நிலப்பிரபுக்களாகவும் இருந்தார்கள். இறுக்கமான அகமணமுறையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

ஆக அதிகாரம் படைத்த, சொத்தும் செல்வாக்கும் படைத்த பெரும் பிரமுகர்களாக அறியப்பட்டிருந்தார்கள். ரத் (ராஜரீக = Royal), குல/கொல (சாதி = Caste) இவை சேர்ந்து உருவானதே “ரதல” என்கிற சொல் என்பார்கள். இலங்கையின் சாதியமைப்பில் பிரதான உயர் சாதியாக இவர்கள் கருதப்பட்டபோதும் சனத்தொகையில் இவர்கள் 0.001% வீதம் மட்டுமே என்கிறார்கள் இலங்கையின் சாதியமைப்பை ஆராய்ந்த பலரும். (1)

நாயக்க வம்சத்தினர் காலத்தில் தான் இந்த “ரதல” என்கிற குழாமினரின் உருவாக்கம் நிகழ்ந்தது என்று பல ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

கண்டி ராஜ்ஜியத்தைப் பொறுத்தளவில் ஒருவகையில் இவர்களே பின்புலத்தில் இருந்து அரசர்களை உருவாக்கும் வல்லமையையும் (kingmakers) பெற்றிருந்தார்கள். அதுபோல அவர்கள் அரசாட்சியைக் கவிழ்க்கும் வல்லமையையும் கொண்டிருந்தார்கள்.

இன்றும் சிங்கள சமூகத்தினரில் சாதீய வைதீக முறைமைகளில் கட்டுண்டு கிடப்பவர்கள் பலர் இலங்கையை ஆளும் தகுதி படைத்தவர்கள் “ரதல” வம்சத்தவர்களே என்கிற நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையானது இலங்கையின் கடந்த கால அரசியலில் பெரும் செல்வாக்கை செலுத்தியுமிருக்கின்றன. சிறிமா பண்டாரநாயக்க பதவிக்கு வரும்போதும், அதன் பின் வந்த ஆட்சிமாற்ற காலனகளிலும் அவர் ஒரு “ரதல” வம்சத்து பெண் என்கிற பிரச்சாரம் இருக்கவே செய்தன. அதுபோல ஆளுநராகவும், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவருமான வில்லியம் கொபல்லாவ “ரதல” பரம்பரையைச் சேர்ந்தவர் என்று பெருமை பாராட்டியிருக்கிறார்கள். இன்றும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களில் இவர்களையும் காணலாம்.

கண்டிய – சிங்கள – பௌத்த - கொவிகம – நிலப்பிரபுக்களாக
இலங்கையை பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த தென்னிந்திய ஆக்கிரமிப்புகளும், ஆட்சிகளும் இலங்கையின் சாதிமுறையைப் பலப்படுத்தியதுடன் தென்னிந்திய சாதிய வடிவங்களை புகுத்தின. காலப்போக்கில் சிங்கள சாதிய அமைப்பிலும் புதிய வகை சாதிகளையும் அவற்றுக்கான கோத்திர விதிமுறைகளையும் உருவாக்கிக்கொண்டு வளர்ந்துவந்தான. இது தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருந்தது.

இலங்கையில் மூன்று பிரதான சாதிய வகைகள் இயங்கிவந்தன – இயங்கிவருகின்றன. சிங்கள சாதியமைப்பு, தமிழ் சாதியமைப்பு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு. இவற்றில் வடக்கு – கிழக்கில் இயங்குகிற “இலங்கை தமிழர்” சாதியமைப்பைப் பொறுத்தவரை வடக்கில் உள்ள சாதிய முறைக்கும் கிழக்கில் உள்ள சாதிய முறைக்கும் வித்தியாசம் உண்டு.

சிங்கள சாதியமைப்பில் இன்றளவிலும் உயர்த்தப்பட்ட சாதியாக கருதப்பட்டு வருபவர்கள் கண்டிய – சிங்கள – கொவிகம சதியைத் தான். கொவிகம சாதியில் பல உபசாதிகளும் அதற்கான அதிகாரப்படிநிளையொழுங்கும் இருக்கின்றன. தமிழ் சமூகத்தில் உள்ள வெள்ளாளர் சாதிக்கு சமமாக கருதப்படும் வேளாண்மையைதன்னகத்தே கொண்ட நிலவுடைமை சமூகமாக கொவிகம சாதியினர் இருந்தார்கள்.

“ரதல” என்பதை கனவான் (Gentleman) என்று தான் 1886இல் வெளிவந்த “The Ceylon Almanac and Annual register” அறிக்கையில் சிங்களப் பதவி நிலை குறித்த பட்டியலில் விபரிக்கிறது.
கொவிகம சாதியின் படிநிலையொழுங்கில் ரதல, முதலி ஆகிய பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் கொவிகம சாதியின் உயர் பிரிவில் உள்ளவர்களே என்று கே.எம்.டி.சில்வா குறிப்பிடுகிறார்.(2)  கண்டி ராஜ்ஜியத்தின் சாதிய படிநிலைக்கேற்ற ஒழுங்கில் தான் பதவிகளின் படிநிலையையும் கொண்டிருந்தார்கள் என்று அவர் தனது நூலில் மேலும் விளக்குகிறார்.
  • மகா அதிகாரம் / மகா நிலமே = பிரதம அமைச்சர் (பிரதம மந்திரி)
  • நிலமே = உயர் அலுவலர்
  • திசாவ = மாநிலங்களுக்கான ஆளுநர்
  • ரட்டே மாத்தயா = சிறிய மாநிலங்களுக்கான முதல்வர்
  • கோரால = கோரளைப் பிரதேசங்களின் தலைவர்
  • விதானே = கிராம அதிகாரி
  • லேக்கம் = லிகிதர் (3)
  • மொஹட்டலா = செயலாளர்
  • அட்டுகோரல = கோரலைகளின் பிரதித் தலைவர்
அதுபோல இன்றும் நாம் புழக்கத்தில் பெண்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் குமாரிஹாமி (மகா அதிகாரம் அவர்களின் மனைவியைத் தான் அழைக்கலாம்), ஹாமினே, மெனிக்கா, எத்தனா, ஹாமி போன்றவையும் அன்று அதே அதிகார உயர் படிநிலை ஒழுங்கில் தான் அழைக்கப்பட்டன.

மகா அதிகாரம்
இவர்களில் “அதிகாரம்” எனப்படும் பிரதம அமைச்சர் பதவி சில அரசர்களின் காலத்தில் நான்கு பேர்  ஒரே சமயத்தில் வகித்திருந்திருக்கிரார்கள். அவர்களில் ஒருவர் “மகா அதிகாரம்” பதவியை வகிப்பார். அவர் மன்னருக்கு ஆலோசனைகளை வழங்குபவராக இருப்பார். அடுத்தவர் நகரத்தைப் பாதுகாப்பதற்கும், மற்றவர் நீதித்துறையைக் கையாள்வதர்காகவும், நான்காமவர் யுத்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராகவும் இருந்திருக்கிறார். இரண்டாம் ராஜசிங்கன் காலம் வரை ஒருவர் மட்டுமே அதிகாரம் பதவியில் இருந்திருக்கிறார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் மூவர் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் பிரதான இருவர் சமமான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதும் ஒருவர் மட்டும் “மகா அதிகாரம்” பதவியை வகித்தார். இவர்களின் சேவைக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் அல்லது முன்னையவரின் பதவி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. (4)

“ரதல” பிரிவினர் உயர் கொவிகம சாதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர்கள் ஆள்வதற்காக பிறந்த (5) அரசகுலத்து ஷத்திரிய வம்சத்தவர்களாக கருதப்பட்டார்கள். (6) இலங்கையின் வரலாற்றில் பல சமயங்களில் அரசாட்சிக்கு நெருக்கடியைக் கொண்டுவரும், பலத்த அழுத்த சக்தியாகவும், அரசாட்சிக்கு சவாலான சக்தியாகவும் இருந்து வந்திருக்கிறது. (7)

வீரசுந்தர பண்டார எனும் “ரதல” அமைச்சரின் உதவியால் தான் முதலாம் ராஜசிங்கன் (கி.பி 1581 - 1593) கண்டியைக் கைப்பற்றினான். அவர்கள் இன்றேல் கண்டியைக் கைப்பற்றுவது சாத்தியமற்றுப் போயிருக்கும். ஆனால் தன்னைவிட மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு வீரசுந்தர பண்டாரவுக்கு இருப்பதாகக் கருதிய சீத்தாவக்க ராஜசிங்கன் 1585இல் ஒரு குழியொன்றில் வீரசுந்தரவை விழுத்தச் செய்து கொன்றான். தனக்கு எதிராக “ரதல” பிரிவினர் சதி செய்யக்கூடும் என்று நம்பிய ராஜசிங்கன்  எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை அழிக்கும் பணியில் இறங்கினான். பின்னர் அதுவே அவனது வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

அதன் பின் 1592ஆம் ஆண்டு வீரசுந்தரவின் மகன் கொனப்பு பண்டார; “விமலதர்மசூரிய” என்கிற பேரில் ஆட்சியேறினான். 

கண்டி ராஜ்ஜிய காலத்தில் மூன்று அரச வம்சங்கள் ஆட்சிசெய்தன.
  1. சேனா சம்மத்த விக்கிரபாகு  வம்சம்
  2. விமலதர்மசூரியனின் வம்சம்
  3. நாயக்கர் வம்சம்
கண்டி ராஜ்ஜிய அரசர்கள்
ரொபர்ட் நொக்ஸ்ஸின் குறிப்புகள்
கண்டியை ஆண்ட அரசர்களிலேயே அதிககாலம் ஆட்சி செய்தவர் இரண்டாம் ராஜசிங்கன் (1634 -1686). ரொபர்ட் நொக்ஸ் பிடிபட்டு சிறையிருந்ததும் இவரது காலத்தில் தான். ரொபர்ட் நொக்ஸ்  பிற்காலத்தில் தப்பிச் சென்று எழுதிய நூலைப் பயன்படுத்தாத இலங்கை வரலாற்றாசிரியர்கள் இல்லை எனலாம். ரதல பிரபுக்கள் அரசில் உள்ள ஏனைய ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டு இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைச் மேற்கொண்டது பற்றி தனது “இலங்கையின் வரலாற்றுரவுகள்” என்கிற நூலில் எழாம் அத்தியாயத்தில் தகவல்களைத் தருகிறார்.

“21.12.1664 ராத்திரி 12 மணிக்கு இந்த கிளர்ச்சியின் முதற்கட்டமாக நகரிலுள்ள அரண்மனையை நோக்கி திரண்டார்கள்...” என்று சுவாரசியமாக அந்த கிளர்ச்சி குறித்து ஒரு கதையாக விளக்குகிறார். (8)

அந்தக் கிளர்ச்சியின் சூத்திரதாரிக்கு நேர்ந்ததை ரொபர்ட் நொக்ஸ் இப்படி விளக்குகிறார்.(9)

“கிளர்ச்சியின் சூத்திரதாரியாக நிரூபிக்கப்பட்ட ‘அம்பன்வெல றால’வுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் அரசனுக்கு அந்த தண்டனை போதவில்லை. சிங்கள தேசத்தில் கொடுக்கும் கொடும் சித்திரவதை போதாது என்பதால் புதுவிதமான தண்டனையை அளிப்பதற்காக கொழும்பிலுள்ள ஒல்லாந்தருக்கு அம்பன்வல றால அனுப்பப்பட்டான். ஆனால் ஒல்லாந்தர் அவனின் கை விலங்குகளை அவிழ்த்திவிட்டு அவனோடு சேர்ந்து கும்மாலமடித்ததுடன் அவனை விடுவித்து சுதந்திரமாக உலவவிட்டனர்...” (10)
இந்த கிளர்ச்சி கொடூரகரமாக முறியடிக்கப்பட்டதன் பின்னர் “ரதல” பிரபுக்களில் நம்பிக்கை வைத்துக்கொள்வதை தவிர்த்தார் அரசர். அவர்களுக்கு இருந்த அதிகாரங்களைக் குறைத்தார். அதிலிருந்து  “அதிகாரம்” பதவி (பிரதம அமைச்சர்) இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது.

நாயக்கர்களுக்கு எதிரான எழுச்சியும், சூழ்ச்சியும்!
கண்டி ராஜ்ஜிய காலம் என்பது மொத்தம் 225வருட காலங்கள். “ரதல” பிரபுக்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான இடைவெளி வலுப்பெற்ற காலம் என்பது நாயக்கர் வம்சத்து ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தான். இலங்கையின் கடைசி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிர நரேந்திரசிங்கனின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கட்டிலேறிய விஜய ராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன், ராஜாதி ராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் ஆகிய நால்வரும் தென்னிந்திய நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான். கண்டியை 1739 – 1815 வரையான 76 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டார்கள். 
The reception hall in the palace of the King of Kandy 1785 JAN BRANDES
நாயக்கர்களின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வதில் எந்தவித குழப்பமிருக்கவில்லை. ஆனால் “ரதல” குழாமினர் மத்தியில் எரிச்சலும், வெறுப்பும் இருந்து வந்தது. கண்டி ராஜ்ஜியத்தில் பலமாக இருந்த இந்த சொத்து படைத்த சிங்கள பௌத்த உயர்சாதி நிலப்பிரபுக்களும், மறுபுறம் பௌத்த பீடங்களும் பலமாக இருந்தன. இந்த இரண்டுமே இந்த நாயக்க வம்சத்து அரசாட்சிக்கு அதிருப்தியாளர்களாக வளர்ந்துவந்தார்கள்.

நாயக்கர் ஆட்சி மரபின் முதலாவது அரசனான விஜய ராஜசிங்கன் காலத்தில் இத்தகைய முரண்பாடுகள் தோன்றவில்லை. ஆனால் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் இந்த விரிசல் வலுத்தது. அதற்குக் காரணம் இருந்தது. கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன் பதவியேற்றபோது அவரின் வயது 16 மட்டுமே. எனவே முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அவரின் தகப்பனாரான நரனப்பாவுடன் தான் கலந்துரையாட வேண்டியதாயிற்று. நரனப்பா கண்டி ராஜ்ஜியத்தின் ஒரு நிழல் அரசராகவே இயங்கினார். அவரே செல்வாக்கு படைத்தவராக இருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றி ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தனர். அவர்களால் ஒடுக்குமுறைக்குள்ளான கத்தோலிக்கர்கள் கண்டிப் பிரதேசத்துக்கு தஞ்சம் தேடி ஓடிவந்தபோது அவர்களுக்கு தஞ்சமளித்தார் நரனப்பா. ஒரு கட்டத்தில் நரனப்பாவின் இந்த நடவடிக்கைகயை எதிர்த்து “மகா அதிகாரமாக” இருந்த எஹெலபொல நிலமே (ஸ்ரீ விக்கிரமசிங்க காலத்து எஹெலபொலவின் தகப்பனார்.) அதிருப்தியுற்றார். அதன் நீட்சியாக அரசரது தகப்பனார் நரனப்பாவின் இந்த போக்கு நிறுத்தப்படாவிட்டால் நான் உட்பட சிங்களத் தலைவர்கள் சேர்ந்து அரசரை வீழ்த்துவோம் என்று அரசருக்கு எச்சரிக்கும் அளவுக்கு வளர்ந்தது. இறுதியில் அரசரின் முடிவின்பேரில் நரனப்பா ஒதுக்கப்பட்டார். அந்தளவுக்கு “ரதல” பிரபுக்கள் செல்வாக்குள்ளவர்களாக திகழ்ந்தார்கள். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனும் அதன் பின் அரசராக பதவியேற்ற ராஜாதி ராஜசிங்கனும் உடன் சகோதரர்கள்.

இவர்கள் இருவருமே மிகச் சிறுவயதில் மதுரையிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்கள் ஒரு வகையில் சிங்களவர்களாகவே வளர்ந்தார்கள். சிங்களம், பாளி பாஷைகளையும் சிங்கள பௌத்த கலாசாரத்தையும் கற்று ஒழுகினார்கள். கண்டி ராஜ்ஜியத்தில் அதுவரை எவரும் மேற்கொள்ளாத அளவுக்கு பௌத்த மத வளர்ச்சிக்கும், அதன் கட்டமைப்புக்கும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல குறிப்புகள் உள்ளன. அது பற்றி தனியான சிங்கள நூல்கள் கூட உள்ளன.
ஆனாலும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தாய்லாந்திலிருந்து ஒரு அரச குமாரனை அரசராக்க “ரதல” பிரபுக்கள் 1760 ஆம் ஆண்டு சதி செய்தனர். இந்த சதி முறியடிக்கப்பட்டதுடன் அதில் சம்பந்தப்பட்ட “ரதல” பிரபுக்கள் பலர் அரச ஆணையின் பேரில் கொல்லப்பட்டனர். சதியில் சம்பந்தப்பட்டிருந்த பிக்குமாருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட போதும் பௌத்த துறவிகளின் தலைவராக “சங்கராஜ” (ராஜகுரு) பதவியில் இருந்த சரணங்கர ஹிமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார் அரசர்.

பின்னர் ராஜாதி ராஜசிங்கன் காலத்தில் பிரதம அமைச்சராக இருந்த “மகா அதிகாரம் பிலிமத்தலாவ” அரசருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார். ராஜாதி ராஜசிங்கனின் மரணத்துடன் பிலிமத்தலாவவுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் பல வரலாற்று குறிப்புகளை இன்றும் காண முடிகிறது. 

கண்ணுசாமி விக்கிரமசிங்கவாக
ராஜாதி ராஜசிங்கன் மரணத்தின் பின்னர் அரச மரபின்படி சிம்மாசனத்துக்குரியவனாக மன்னரின் மூத்த மனைவி உபேந்திரம்மாவின் சகோதரன் முத்துசாமியே தெரிவாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் மன்னர் இறந்ததன் பின்னர் அந்த சம்பிரதாயங்களை மீறி அரசனின் இரண்டாவது மனைவியின் சகோதரியின் மகனான கண்ணுசாமியை (ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனாக) 18 வது வயதில் அரசனாக  முடிசூட்டினார் பிலிமத்தலாவ. (11) இதன் மூலம் தானே நிழல் அரசனாக நீடிக்க முடியும் என்று கனவு கண்டார் அந்த “ரதல” பிரதம அமைச்சரான பிலிமத்தலாவ.

ஆனால் பிலிமத்தலாவயின் திட்டம் நிறைவேறவில்லை. “ரதல” பிரதானிகளில் அதிகம் நம்பிக்கைவைக்காத அரசன் நாயக்க வம்சத்து பிரதானிகளின் ஆலோசனைகளை அதிகம் பெற்றான். வழமைக்கு மாறாக “அதிகாரம்” பதவியை பிலிமத்தலாவ, எஹெலபொல மொல்லிகொட ஆகிய மூவருக்கு வழங்கி அவர்களுக்கு இடையில் தந்திரமாக முரண்பாடுகளை உருவாக்கிப் பேணினார் மன்னர்.

தனது கட்டுப்பாட்டில் அரசன் இல்லையென்றதும் சிறிது காலத்தில் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து கண்டியைக் கைப்பற்ற எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. அரசன் பிலிமத்தலாவையை மன்னித்துவிட்டபோதும் மீண்டும் அரண்மனைக்குள்ளேயே மன்னரைக் கொல்ல ஹசன் ஜா என்கிற ஒரு முகாந்திரத்துக்கு ஊடாக ஒரு முயற்சி நிகழ்ந்தது. இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டதன பின் மன்னர் ராஜசிங்கனின் ஆணையின் பேரில் பிலிமத்தலாவவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் காலத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட 20 பிரதானிகளின் பெயர்களை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் “சம்பாஷா” இதழில் வெளியிட்டிருக்கின்றன. (12)

பிலிமத்தலாவவின் இடத்துக்கு பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அவரது மைத்துனரான எஹெலபொல ஆனால் பின்னர் எஹெலபொல, கெப்பட்டிபொல உள்ளிட்ட “ரதல” பிரபுத்துவ பிரதானிகள் கூட்டுச்சதி செய்து இலங்கையின் இறுதி அரசனையும், இறுதி ராஜ்ஜியத்தையும் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து நம்பிக்கைதுரோகம் இழைத்தது கூட தமக்கு அந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தான். ஆனால் ஆங்கிலேயர்கள் தமது காரியம் முடிந்ததும் மொத்தமாக அனைவருக்கும் துரோகமிழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுருட்டிக்கொண்டனர்.

அதை எதிர்த்து கிளர்ச்சி செய்த “ரதல” தலைவர்களின் கிளர்ச்சியை ஒட்ட நறுக்கினார்கள். 1815 ஒப்பந்தத்தின் மூலம் கொடுத்த பதவிகளையும் தம்முடன் எஞ்சியிருந்த ரதல பிரபுக்களிடமிருந்து 1818இல் திரும்பப் பிடுங்கிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். 1818இல் எந்த “ரதல” பிரிவினரும் தமது “ரதல” அந்தஸ்தைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்த முடியாதபடி ஆங்கிலேயர்கள் சட்டமியற்றி அந்த ஒட்டுமொத்த ரதல குழாமினரினதும் எதிர்காலத்துக்கே முடிவு கட்டினார்கள்.(13)

உசாத்துணை:
  1. Jiggins (1979), Ryan (1993), Pieris (2001), Silva (2002)
  2. A HISTORY OF SRI LANKA by K. M. DE SILVA - C. HURST & COMPANY - 1981
  3. பொதுவாக சிங்களத்தில் “லேக்கம்” என்றால் செயலாளர் என்று பொருள் ஆனால் கண்டி ராஜ்ஜியக் காலப்பகுதியில் “மொஹொட்டலா” என்போரைத் தான் செயலாளர் என்று அழைத்தார்கள். - The Ceylon Almanac and Annual register - WILLIAM SkEEN, GOVERNMENT PRINTER, CEYLON - 1856
  4. Ralph Pieris - Sinhalese social organization: the Kandyan period - Ceylon University Press Board, 1956
  5. Caste Discrimination and Social Justice in Sri Lanka: An Overview - Kalinga Tudor Silva, P.P. Sivapragasam, Paramsothy Thanges - Indian Institute of Dalit Studies New Delhi - 2009
  6. Asiff Hussein - Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day - Printel (Pvt) Ltd - 2013
  7. සුජීව දිසානායක  - උඩරට රජවරුන්ට අභියෝගයක්‌ වූ රදළ බලය - திவயின – 30.11.2011
  8. Robert Knox - An Historical Relation Of Ceylon – 1681 - London
  9. அதே நூல் பக்கம் 60.
  10. (இரண்டாம் ராஜசிங்கன் போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக ஒல்லாந்தரோடு ஒப்பந்தம் செய்துகொண்டதாள் ஏற்பட்ட உறவு அது என்பதையும் கருத்திற்கொள்க.)
  11. மகாவம்சம் - தொகுதி இரண்டு – (சிங்கள மொழி பிரதி) - 
  12. සම්භාෂා - பக்கம் 285, 10வது இதழ் – பிரிவென் பிரிவு – கல்வித் திணைக்களம், 1999
  13. பிற்காலத்தில் மீண்டும் பெயரளவில் கண்டியத் தலைவர்களாக நிலமே மார்களை ஆங்கிலேய அதிகாரிகள் நியமித்தார்கள். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர்கள் இந்த “ரதல” குழாமினருக்குப் பதிலாக முதலியார் குழாமினரை அவர்கள் தோற்றுவித்தார்கள்.
நன்றி - தினக்குரல்

மேலதிக பரிந்துரைக்கான கட்டுரைகள்:

இழந்த "தேசிய" கொடியைத் தேடிய கதை! - என்.சரவணன்


பென்னட் “இலங்கையும் அதன் செயல்திறனும்” (J.W.Bennett - Ceylon And Its Capabilities - An account of its natural resources, indigenous productions and commercial facilities) என்கிற நூல் வெளிவராமல் இருந்திருந்தால் இன்றைய இலங்கையின் தேசியக் கொடியின் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும் என்று உறுதியாக கூற முடியும்.



1815 கண்டி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கண்டி ராஜ்ஜியம் பறிபோனது அப்படியே ஒட்டுமொத்த இலங்கையும் அந்நியரிடம் பறிபோனது. ஆங்கிலேயர்கள் கண்டியின் கொடியை இறக்கி அதனை கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்ட 133 வருடங்களுக்குள் அந்த கொடியை இலங்கை மக்கள் மறந்தே போயினர். கண்டியில் ஆங்கிலேயர் தமது யூனியன் ஜேக் கொடியை  ஏற்று முன்னர் அங்கிருந்து இறக்கியதாக கூறப்படும் கொடி எது என்பது பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் தான் பென்னட் எழுதிய நூலொன்றின் இந்தக் கொடி பற்றிய விபரங்களை அறிந்துகொண்டார்.

இலங்கையின் தேசிய வீர்களில் ஒருவராக போற்றப்படும் ஈ.டபிள்யு.பெரேரா லண்டனில் கற்றுக்கொண்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் பறித்துச் சென்ற இலங்கையின் கொடி எப்படி இருக்கும் என்பதை தீவிரமாக அறிந்துகொள்ள விளைந்தார். இந்தத் தேடல் இலங்கையின் கொடிகள் அனைத்தைப் பற்றியுமான ஒரு ஆய்வு நூலைத் தொகுத்து பதிப்பிடும் அளவுக்கு கொண்டு சென்றது.

அன்றைய தொல்பொருள் ஆணையாளராக இருந்த சி.பெல் என்பவரின் வழிகாட்டலின்படி கண்டி மன்னனின் இறுதிக்கொடியைத் தேடி இங்கிலாந்து புறப்பட்டார். 1815காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கடத்திச்செல்லப்பட்ட மதிப்புமிக்க பல்வேறு பொருட்கள் உள்ள இடங்களில் அக்கொடியை தேடியலைந்தார். இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அதிக அக்கறை செலுத்தி பெருமளவு செலவை ஏற்றுக்கொண்டவர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான டீ.ஆர்.விஜயவர்தன. (இவர் இன்றைய பிரதமர் ரணிலின் தாய்வழிப் பாட்டனார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மாமனார்.) ஈ.டபிள்யு பெரேராவும், டீ.ஆர்.விஜயவர்தன இருவரும் லண்டனில் 1908 அளவில் ஒன்றாக கற்றுக்கொண்டிருந்தவர்கள்.

பென்னட்டின் நூலில் 12.10.1815 அன்று லண்டனிலுள்ள whitehall chapel இல் பாதுகாப்பாக சேகரித்துவைப்பதற்காக அனுப்பப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1843. இன்றும் கண்டி ராஜ்ஜியத்தில் இருந்து கடத்திக்கொண்டுசெல்லப்பட்ட அரசனின் சின்னங்கள் வைக்கப்பட்டிருக்கிற வைட்ஹோலில் இந்த சின்னங்கள் 1803இல் கொண்டு வரப்பட்டதென்கிற குறிப்புகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வைட்ஹோல் என்பது ஐரோப்பாவிலேயே மிகப்பெரும் அரண்மனையாக ஒரு காலத்தில் இருந்தது. 1500 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டது அது. இன்றும் அதை மக்கள் போய் பார்வையிட்டு வருகிறார்கள். பழங்காலத்தைப் பிரதிபலிக்கும் நூதனசாலையாக இயங்கிவருகிறது. அங்கு தான் இன்றும் இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு செல்லப்பட்ட முக்கிய அரச காலத்து பொருட்களின் ஒரு தொகுதி Great Hall  என்கிற பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஈ.டபிள்யு.பெரேரா தனது தேடல்களைத் தொகுத்து 1916இல் “sinhalese Banner and Standards" எனும் நூலை வெளியிட்டார். அந்த நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

 “பெனட் எனும் ஆங்கில ஆய்வாளரின் ஆலோசனைப்படி அந்தக் கொடியைத் தேடிக்கொண்டு United service museum சென்று தேடியதில் ஒருபலனும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடிக் கொண்டு சென்ற போது லண்டனிலுள்ள செல்சீ அரச வைத்தியசாலை (Royal Hospital Chelsea) சேமிப்பகத்தில் தற்செயலாக கிடைத்தது நமது சிங்கக் கொடி.” என்கிறார்.

அங்கு நெப்போலியனின் கழுகு இலட்சினையும் இருந்ததாக பெரேரா தெரிவித்திருந்தார். அவருக்கு கிடைத்த மூன்று கொடிகளில் இரண்டு வர்ணம் மங்கிப்போன நிலையில் கிட்டியது. ஒன்று மாத்திரம் கவனமாக துப்பரவு செய்து எடுத்தபோது சற்று உருக்குலைந்த நிலையில் ஒரு கொடியைக் கண்டெடுத்தார். அதுவே இலங்கை இறுதியாக ஆண்ட கண்டி அரசனின் கொடி என்று அவர் நம்பினார். அதன் வடிவத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் டீ.ஆர்.விஜயவர்தன எப்.ஆர்.சேனநாயக, டீ.பீ.ஜயதிலக்க போன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அந்த கொடியை சவுத்வூட் அண்ட் கொம்பனி என்கிற நிறுவனத்தின் உதவியுடன் பிரதிசெய்து நிறமூட்டி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மகிழ்ச்சியை நாட்டு மக்களுக்கு செய்தியாக தெரிவிக்க லேக்ஹவுஸ் உரிமையாளர் டீ.ஆர்.விஜயவர்தன தினமின பத்திரிகைக்கு ஊடாக அதனை வெளியிட்டார். சரியாக கண்டி அரசனின் கொடி இறக்கப்பட்ட 100வது ஆண்டில் அதே 02,03.1915 அன்று அந்த அறிவிப்பு வர்ண நிறத்தில் பிரேத்தியேகமாக வெளியிடப்பட்டது. இலங்கை அந்நியரிடம் பறிபோன காலத்தில் கடைசி அரசின் கொடி எப்படி இருந்தது என்பது பற்றி அப்போது தான் இலங்கை மக்கள் அறிந்துகொண்டனர்..

பிற்காலத்தில் கொழும்பு நூதனசாலையின் இயக்குனராக இருந்த P.H.D.H. டீ சில்வா வெளிநாடுகளில் உள்ள இலங்கையின்  தொல்பொருள் மற்றும் இதர கலாச்சார பொருள்களின் பட்டியல்” (A Catalogue of Antiquities And Other Cultural Objects From Sri Lanka (Ceylon) Abroad - 1975) என்கிற தலைப்பில் ஒரு நூலைத் தொகுத்தார். அதில் செல்சீ அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் கடைசி அரசனின் கொடிகள் பற்றி சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அதன்படி

1803 ஆம் ஆண்டு கண்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்றுவிதமான கொடிகளை கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக 4ஆம் வில்லியம் மன்னரின் அனுமதியுடன் பாதுகாப்பாக வைப்பதற்காக இந்த வைத்தியசாலைக்கு அனுப்பட்டது. பல வருடங்களாக அந்த வைத்தியசாலையில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த கொடிகள் அப்படியே உருக்குலைந்து போனதில் “அரசரின் போர்க்கொடி” ("The King's war standard") என்று அறியப்பட்ட ஒரு கொடி 1934ஆம் ஆண்டு அழித்துவிட்டார்கள். அந்தக் கொடி பிரிட்டிஷ் படையின் 51வது படைப்பிரிவின் கப்டனாக இருந்த வில்லியன் பொல்லக் (Capt. William Pollock) 1803 செப்டம்பர் 13 அன்று கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கொடியில் சிங்கம் எதுவும் இருக்கவில்லை மாறாக பல்வேறு ஆயுதங்கள் குறியீடுகளாக காணப்பட்டிருக்கிறது. எஞ்சியிருந்த ஏனைய இரு கொடிகளும் பழுதடைந்திருந்த நிலையில் ஒட்டுவைத்து தைக்கப்பட்டிருந்திருக்கிறது. 1870 ஆம் ஆண்டு இந்த மூன்று கொடிகளுடன் வேறு கொடிகளும் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்ததை படமாக எடுத்து அதுபற்றிய குறிப்பு வைக்கப்பட்டிருந்தது.

P.H.D.H. டீ சில்வா தனது நூலில் இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு கப்டன் போர்ட் (J. Ford) 1841 எழுதிய “செல்சீ வைத்தியசாலையில் உள்ள போர்க்கொடிகள்” (The War Flags at the Chelsea Hospital) என்கிற நூலை ஆதாரம் காட்டுகிறார்.

இவற்றில் ஒரு கொடி சிகப்பு நிற பின்னணயில் வாள் ஒன்றை ஏந்தியபடி மங்கிய நீல நிறத்தில் சிங்கத்தின் உருவத்துடன் The Secretary At - Hand Flag என்றும் The King's Civil Standard (அரசரின் குடியியல் கொடி) என்கிற குறிப்புகளுடன் கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கொடியைத் தான் 1945 செப்டம்பர் மாதம் தேசியக்கொடியாக ஆக்க வேண்டும் என்கிற யோசனையை ஜே.ஆர் அரசாங்க சபையில்  முன்மொழிந்தார். இலங்கை சுந்தந்திரமடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் 16.01.1948 அன்று அரசாங்க சபையில் டீ.எஸ்.சேனநாயக்க உரையாற்றும் போது,
“இது கண்டி அரசனின் கொடி என்பதை நாமெல்லோரும் அறிவோம். அதுபோல கண்டி அரசன் தமிழ் அரசன் என்பதையும் நாம் அறிவோம். இப்போது இங்கிலாந்து இறைமையைக் இந்தத் தீவின் மக்களுக்கே கைமாற்றுகிறது. நாங்கள் இழந்த இறைமையை எமக்குத் திருப்பித் தரும்போது எமது கொடியையும் பதிலீடு செய்ய வேண்டும்....”
இப்படித் தான் “கண்டியக் கொடி” இலங்கையின் தேசியக் கொடியானது.  பல்வேறு சர்ச்சைகளுடன் அது மாற்றங்களுக்கு உள்ளானபோதும். இன்றும் இந்தக் சிங்கக் கொடியைத் தான் சிங்களத்தின் கொடியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் சிங்களவர்கள்.  இது உண்மையிலேயே கண்டியரசின் இறுதி கொடி தானா? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சிங்கம் பற்றிய புனைவுகளின் நீட்சி சிங்கக் கொடி தமது கொடி என்று நம்புமளவுக்கு கொண்டுவந்து விட்டதன் பின்புலம் தான் என்ன என்பதை பற்றி அடுத்த இதழில் காண்போம்.

நன்றி - அரங்கம்

அணிந்துரை : "தலித்தின் குறிப்புகள்" - ஆதவன் தீட்சண்யா


சாதிய அவமானங்களை இடையறாது எதிர்கொள்ளும் மனம் சாதியத்திலேயே நிலைகுத்தி நின்றுவிடுகிறது. பிறகு அது சாதியம் தனக்கிழைத்த கொடுமைகளின் அனுபவங்களைத் தொகுத்துக்கொண்டு, சாதியம் என்கிற முழுமையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, சமகாலத்தின் இயங்குநிலை ஆகியவற்றையெல்லாம் ஆய்ந்தறியாவிடினும் அது ஒழிக்கப்பட வேண்டியது என்கிற ஒரு முடிவுக்கு தனது சொந்த வாழ்வனுபவத்திலிருந்து வந்து சேர்கிறது. சாதியத்திலிருந்து விடுபடுவது எப்படி, எப்போது, யாரால் என்கிற கேள்விகளை தனக்குத்தானே எழுப்பிக்கொண்டு அவற்றுக்கு பதில் தேடுவதிலேயே அது தனது அறிவையும் ஆற்றலையும் இழந்து நிற்கிறது. அதனிமித்தம் அது தன்காலத்தின் வாழ்வை வாழாமல் தனித்தொதுங்கி எந்நேரமும் இறந்தகாலத்தின் பிரதிநிதி போல தன்னை தாழ்த்திக்கொள்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என் மீது சுமத்திய அழுக்குமூட்டைகளை இறக்கித் தொலையுங்கடா பாவிகளே என்று அது எழுப்பும் கூக்குரல் காலத்திற்குப் பொருந்தாத ஓலமாக பிறர் காதைக் குடைகிறது. காலமும் உலகமும் எவ்வளவுதான் மாறினாலும் இந்த ஒப்பாரியும் ஓலமும் ஓயவேயில்லை என்று தன்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வளவு அநீதியானவை என்று திருப்பிச் சொல்வதற்கும் முடியாத தீனக்குரலாக அது தேம்பிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்நூலிலுள்ள கட்டுரைகள் மற்றும் நேர்காணல் வழியே தோழர் சரவணன் உணர்த்துகிறார். 

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டு இன்று இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று அடையாளமிடப்பட்டுள்ளவர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் தீண்டப்படாதச் சாதியினர். இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பூர்வீகத் தமிழர் நலன் குறித்து ஆதியோடந்தமாக பலதையும் விவாதிக்கிற - தங்களது தொப்பூள்கொடி உறவுகளென சொந்தம் பாராட்டுகிற தமிழகத் தமிழர்கள், உண்மையில் தங்களில் ஒருபகுதியினராகிய இந்த இந்திய வம்சாவளித் தமிழர் நலன் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் இருப்பதற்கு இவர்களின் சாதியப் பின்பலம் பிரதான காரணியாக இருக்கிறது என்கிற மறுக்கவியலாத குற்றச்சாட்டை சரவணன் முன்வைக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருபகுதியினராகிய அருந்ததியர்களின் வாழ்வியல் மீது நம் கவனத்தை குவிப்பதன் மூலம் இலங்கையிலும் புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திலும் இனம், தேசியம் என்பதான பேரடையாளங்களின் உள்ளுறையாக சாதியமே இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் போலல்லாமல் மலையகத்திற்கு அப்பால்  நகரங்களை மையப்படுத்திய வாழ்க்கை அருந்ததியர்களுடையது. நகரங்களின் துப்புரவுப் பணிகளைச் சார்ந்து தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும்படியாக விடப்பட்ட இவர்கள் இந்த இரு நூற்றாண்டுக் காலத்தில் அடைந்துள்ள நிலையை கள அனுபவங்களில் இருந்தும் கருத்தியல் வெளிச்சத்திலிருந்தும் சரவணன் பேசியுள்ளார். சாதிசார்ந்த தொழில், தொழில்சார்ந்த இழிவு, இழிவு சார்ந்த சமூகப் புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பால் ஆளுமைச்சிதைவு, உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர் பாதிப்புகள், சமகால வாழ்வை எட்டிப்பிடிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள், வாய்ப்புகளில் பாரபட்சம் என்று அவர் காட்டிச் செல்லும் அருந்ததியர் வாழ்வின் பொருட்டு தமிழ்ச்சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. 

போரும் புலம்பெயர் வாழ்வும் சாதியத்தை சர்வதேசங்களுக்கும் கொண்டுசென்றுள்ள காலமிது. அங்கெல்லாம் ஒரு பன்மியக் கலாச்சாரத்திற்குள் பொருந்திக்கொள்வதற்கான எத்தனங்களை நடத்திக் கொண்டே சாதியம் என்கிற குறுகிய அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அந்தரங்கமாக தமிழர்கள் கையாளும் நுணுக்கங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சாதியின் வெளிப்பாட்டு வடிவங்களை மாற்றியுள்ளனவேயன்றி சாதியம் அழிந்துவிடவில்லை. உண்மையில் சாதியம் இப்படியாகத்தான் காலத்துக்கு காலம் தன்னை தகவமைத்துக்கொண்டு இன்றுவரையிலும் தாக்குப் பிடித்து நிற்கிறது. அதேவேளையில் சாதியத்தின் கொடூரத்திலிருந்து தப்பிக்கும் பல மார்க்கங்களை ஒடுக்கப்பட்ட சாதியினர் நடைமுறைக்கு உகந்த வகையில் தொடர்ந்து கையாண்டுவருவதையும் காணமுடிகிறது. சாதியடுக்கின் மேலேயுள்ளவர்களைப் போலச்செய்தல், மேல்நிலையாக்கம், நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் பெருந்தெய்வங்களின் அம்சமாக மாற்றிக் கொள்ளுதல், புரோகிதம் பூசனைகளில் பார்ப்பனீய வெள்ளாளீயச் சடங்குகளை மிகுதியாக்குதல் என இம்முயற்சி தொடர்கிறது.  இப்படி இந்துமதத்துடன் மேலும் மேலும் ஐக்கியப்படுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் சாதியப் புறக்கணிப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சி ஒருபுறமிருக்க, அண்டை அயலாராக இருக்கும் சிங்களவர்களில் கலந்து சுயத்தை அழித்துக்கொண்டு சாதியிலிருந்து தப்பிக்கும் முயற்சியும் நடக்கிறது. சாதியம் அருந்ததியர்களை வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் மட்டுமல்லாது சொந்த மொழியிலிருந்தும் இனத்திலிருந்தும்கூட விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மைகளை விவரிக்கின்றன இக்கட்டுரைகள்.   

அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளில் மொழிப்பிரயோகத்தில் வாய்ப்புகளை பகிர்ந்துகொள்வதில் திருமண உறவுமுறைகளில் என்று ஒவ்வொன்றையும் தீர்மானிப்பதாய் இருக்கும் சாதியை அந்தந்த தளத்திற்கான ஆதாரங்களின் துணையோடு அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை. அதனாலேயே திரும்பத்திரும்ப சில விசயங்களைக் கூறுவதுபோல தென்பட்டாலும் அவ்விசயங்களை அவ்வாறாகவும் சொல்லித்தான் கடக்கவேண்டியுள்ளது என்பதை உணரமுடிகிறது. ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் திரும்பத்திரும்ப திணிக்கும்போது அவற்றை எதிர்க்கும் குரலும் திரும்பத்திரும்ப ஒலிப்பதுதானே இயல்பு? தோழர் சரவணனின் குரல் அத்தகையதே. 

தோழமையுடன்,
ஆதவன் தீட்சண்யா
11.02.2019, ஒசூர்
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates