Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு : எதிர்நீச்சலான அரசியல் - கலா விஸ்வநாதன்


இலங்கையில் ஆண்கள் தொகையை விட, பெண்கள் தொகை அதிகம் என்பதே சனத்தொகை கணிப்பீட்டின் ஆவணப்பதிவாகும். ஆண்கள் தொகையை விட பெண்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும், அரசியலில் பெண்களின் பங்குபற்றல் பின்னடைவாகவே இருந்து வருகின்றது.

மலையகப் பெருந்தோட்டங்களில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையானோர் பெண்களாகவே இருக்கின்றனர். தற்காலத்தில் ஆண்கள் தோட்டத் தொழிலில் கிடைக்கும் ஊதியம் போதாமையினால் தோட்டத்தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் உழைப்பவர் பட்டியலில் பெண்களே முன்னணி வகிக்கின்றனர்.

இவ்வாறான காலகட்டத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தல், பல மாறுதல்களை உள்ளடக்கி, விரைவில் வருமென்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என்னும் அடிப்படையில் நடைபெறும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் 25 சத வீதம் பெண் வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மலையகப் பெண்களும் அரசியலில் பிரவேசிக்க அதிகார பூர்வமாக பாதை திறக்கப்பட்டுள்ளது அல்லது ஆரம்பமாக திணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் கிராமத்தின் எழுச்சிக்கும் மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளை ஆற்றுப்படுத்தக் கூடிய அத்திபாரமான அரசியல் சேவைக்களமாகும். சட்டத்தால் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அரசியலில் பங்குபற்றும் வரப்பிரசாதம் மலையகப் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது சட்டப்படி நிகழ்வாக இருந்தபோதும், சமகாலத்தில் உடனடியாக ஆற்றலுடன் அரசியலில் வீச்சுடன் ஈடுபடக்கூடிய மகளிர் எத்தனை வீதம் மலையகத்தில் உள்ளனர் என்பது கேள்விக்குறியாகும். அப்படி ஒரு சிலர் இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பிரதிநிதிகளாக வரக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதும் ஓர் ஆர்வப்பார்வையாகும்.

இதுகால வரையில் மலையக அரசியலில் பெண்கள் பங்குபற்ற முயற்சித்ததும் இல்லை. பங்குபற்றுவதற்கான பக்கப்பலங்களை பயனுறுதியுடன் வழங்கி அர்ப்பணிப்புடன் உருவாக்க முயன்றதாகவும் தடயம் ஏதுமில்லை.

தொழிற்சங்கங்களில் ஒரு சில பெண்கள் மகளிர் அணி தலைவிகளாக மட்டும் இருக்க மட்டுப்படுத்தப் பட்டிருந்தார்கள். ஓரிருவர் மாகாண சபை பிரதிநிதிகளாக இருந்தனர். திருமதி. சரஸ்வதி சிவகுரு மத்திய மாகாண சபையில் பிரதிநிதியாக தற்போது இருந்து வருகிறார்.

இது பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க ஆரம்ப முன்மாதிரி அடையாளமாகும். பொதுவாக அரசியல், தொழிற்சங்கங்களில் ஆண் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் அதி உச்ச சக்தியாக தோற்றம் பெற்றிருந்தது.

அதுவே தொடர்கிறது. மலையகத் தமிழ் கலாசார சூழலில் பெண் மூலம் பெறக்கூடிய அனைத்து நலங்களையும் பெற்றுக்கொண்டு ஆண்மைக்கு ஆதிக்க அடிமையாகவும் அல்லது அன்பான அடிமையாகவும ஆக்கிக்கொண்டு ஆண் தலைமைத்துவம் நீட்சிபெற்றுள்ளது. அதுவே மலையக அரசியலாகவும் முன்னேறியிருக்கிறது. அந்த மரபில் மாறுதலாக இடஒதுக்கீடு அமையும்.

மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மத்தியில் குடும்பப் பொறுப்புகளை தமதாக்கிக்கொண்டு, சில பெண்கள் சிறப்பாக வாழ்க்கையை செப்பனிட்டு வருகிறார்கள்.

மேலும் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்று மேன்மையடைய வேண்டும் என்ற கடும் முயற்சியை பெண்களே முன்னெடுத்து வருகின்றனர். “நம்ம காலந்தான் இப்படி போச்சி, நம்ம புள்ளங்களாவது நல்லா படிச்சு, நல்ல நெலமைக்கு வரணும்” என்பது இன்றைய அனேக மலையகப்பெண்களின் எண்ணக்கருவாகும்.

அந்த வகையில் மலையகப்பெண்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதுவே நிதர்சனமாகும். நிதானமாகவும், தூர நோக்குடன் முடிவெடுக்கும் திறன் இயல்பாகவே மகளிரிடம் இருக்கும் சிறப்பம்சமாகும்.

 கல்வி ஞானத்தில் பின் தங்கியிருந்தபோதும் கேள்வி ஞானத்தில் கீர்த்தியான காரியங்களை நேர்த்தியாக செய்யக்கூடிய ஆற்றல் இயல்பாகவே இருப்பதை மலையக் தாய்மார்களிடம் காணலாம். சமூக களத்தில் செயல்படும் நிர்வாகத்திறன், பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்து அரவணைத்துச் செல்லும் சாமர்த்தியம் ஆகியவற்றை முறைப்படி கற்பதற்கு மலையக அமைப்புகள் பயிற்சிபட்டறையை உடன் தொடங்குவதும் உந்து சக்தியாகும். 

அரசியலில் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஆற்றலை மலையகப் பெண்கள் கட்டாயம் அடைய வேண்டும் என்பது இடஒதுக்கீடு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டதனால் நிர்ப்பந்தம் காரணமாகவே மலையகப்பெண்கள் அரசியலில் களம் இறங்கும் எதிர்நீச்சல் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எதிர்நீச்சல் என்று குறிப்பிடுமிடத்து ஆண்களின் அதிகார, அடாவடித்தன ஆள்பல அணிசேர்க்கை, அத்துடன் அதற்கு பக்கபலமான மதுபரிமாறல், அதன் தொடராய் அநாகரிக அரசியல் வன்முறைகள், ஏச்சுகள், பேச்சுகள் மத்தியில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்படையுடன் அரசியல் களத்தில் குதிப்பது வெள்ளமாய் பிரவாகம் எடுக்கும் கங்கையில் எதிர்நீச்சல் போடும் கடுமையான முயற்சியாகும்.

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே மலையகப்பெண்கள் அரசியலில் பங்காளிகளாக மாறுவதற்கு , மலையகட்சிகள், தலைவர்கள் தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நிச்சயம் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நியாயமான அறுவடையை மலையகப்பெண்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

மலையகக்கட்சிகள் பெரும்பாலும் தேசியக்கட்சிகளில் கூட்டாகவே சேர்ந்து போட்டியிட முனையும் பட்சத்தில் மலையகப்பெண்கள் பிரதிநிதித்துவத்தை தேசியக் கட்சிகளுக்கு தாரைவார்த்துவிடக்கூடாது. பிரதேச, நகர, மாநகர சபைக்குள் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் விகிதாசாரத்துக்கேற்ப மலையகப்பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். நேரடி தேர்தல் போட்டியை விட, 40 வீத விகிதாசார பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கென குறிப்பிட்ட சிறப்பு தேர்வு முறை இருப்பதினால், இம்முறையிலும் மகளிர் பிரதிநிதித்துவத்தைப் பேண முடியும். பேரம் பேசுதலில் இது விடயம் ஆணித்தரமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மலையகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக, சமய அமைப்புகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் விழிப்புணர்வு, நிர்வாகத்திறன் , பேச்சாற்றல், தலைமைப்பண்பு கொண்டவர்களாக உருவாகியுள்ளார்கள், உருவாகிவருகிறார்கள். கட்சிக்கொள்கை, சித்தார்ந்தம் என்ற கோட்பாடுகளை கடந்து சமூக நலனில் நாட்டங்கொண்ட சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களே அவசர தேவைகருதி வேட்பாளர்களாக நியமிக்க, ஆய்ந்துணர்ந்து முடிவெடுக்கலாம்.

25 வீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதால் தமது உறவுகள், நட்புகள் என்ற அடிப்படையில் பெயர்ப் பட்டியலைப் பூர்த்தி செய்ய முனைவது பெண்களுக்குச் செய்யும் அரசியல் துரோகமாகும்.

இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் 25 வீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமாகி இருப்பதால் அரசியலில் ஆர்வம் உள்ள மகளிர், சமூகப்பணியில் பகுதி நேரமாக ஈடுபடுபவர்கள். தமது அரசியல் அறிவை மேம்படுத்திக்கொள்வதோடு தமக்குப் பிடித்த அரசியல் கட்சிகளில் இணைந்து தங்களைத் தயார்படுத்திக் கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகும். சமூக நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையும், சமகால நிகழ்வுகளை அறியும் கூர்மையும், வாசிப்புத் திறனையும் வளர்க்க சகலமும் நம் வசமாகும்.

அரசியல் கட்சிகளும், சமூக, சமய அமைப்புகளும் இதற்கான ஆற்றுகையை பெண்களின் முன்னேற்றம் கருதி நெறியாள்கைப்படுத்தினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்திலிருந்து இரண்டு பெண்கள் தெரிவாகும் புதிய ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும்.

இட ஒதுக்கீடு மாற்றத்தை பயன்படுத்திக்கொண்டு, பெண்களுக்கு உரிய இடமும், சந்தர்ப்பமும் சார்ந்து நில்லாத சமத்துவமும் நல்கினால் சமூகம் சகல துறைகளிலும் சடுதியாக முன்னேறும். ஆதலால், பெண்களை அடிமட்டத்திலிருந்து உற்சாகப்படுத்தி, அரசியல் ரீதியாக அற்புதசக்தியாக வலுப்படுத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அனைவரும் வழங்க தயாராகி முன்வர வேண்டும்.

உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடக்கும் காலம் கிட்டியிருப்பதால், ஆர்வமும் அசைக்க முடியாத துணிச்சலும் கொண்டு, குறுகிய காலத்திலும் வெற்றிப்படிகளில் வீரநடை போட முடியும். இட ஒதுக்கீடு இனி ஒரு விதி செய்ய ஏற்ற மாற்றுவழியாக மலர்ந்திருக்கின்றது வேட்பாளர் பட்டியலில் பெண்கள் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, வெற்றி வாய்ப்பை ஆண்களே பெறும் கபடம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எடுபடக்கூடாது. பெண்கள் அனைவரும் தமது வாக்குகளை பெண் வேட்பாளருக்கே அளித்து பெண் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு, முழு முயற்சியாக ஐக்கியப்பட வேண்டும். அப்போதுதான் இந்த இடஒதுக்கீட்டின் நன்மையை நாம் அனுபவிக்க முடியும்.

நன்றி - வீரகேசரி

போராட்ட நிகழ்ச்சிநிரலை திசைதிருப்பிய 6வது திருத்தச் சட்டம்! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 38

1983 யூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீதான கரை, இந்தியத் தலையீடு, சர்வதேச அழுத்தம் உள்நாட்டு சிவில் நெருக்கடி, வடக்கில் ஆயுத இயக்கங்கள் பலமடைதல் போன்ற சூழ்நிலைகளால் தடுமாறிக்கொண்டிருந்தது ஜே.ஆர். அரசாங்கம். தெற்கில் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவின் குடியியல் உரிமையைப் பறித்தாகியாயிற்று, பிரதான இடதுசாரிக் கட்சிகளையும் தடை செய்தாகியாயிற்று, இப்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளை ஒடுக்குவது தான் அடுத்து மிஞ்சியிருக்கும் அரசியல் சவால்.

சட்டம் நிறைவேற்றம்
மேலும் தமிழ் மக்களின் உரிமையை நசுக்குவதற்காக 05.08.1983 அன்று 6வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது அரசாங்கம். அதன்படி மூன்று மாதங்களுக்குள் அரச பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் 6வது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்தாக வேண்டும். 150 பேர் இதற்கு ஆதரவளித்திருந்தனர். எந்த எதிர்ப்புமின்றி அது நிறைவேற்றப்பட்டது. அதே மாதம் அத்தாட்சிப்படுத்தப்பட்டு வேகமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாக்களிப்பில் அன்றைய தினம் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினர்களான கே.டபிள்யு.தேவநாயகம் (கல்குடா), செ.ராஜதுரை (மட்டக்களப்பு), திருமதி ரங்கநாயகி பத்மநாதன் ஆகியோர் வாக்களித்ததுடன் 9ஆம் திகதி அச்சட்டத்திற்கு அமைவாக சத்தியப்பிரமாணம் எடுத்தார்கள்.

சகல அரசாங்க ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசு சகல அரச காரியாலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதன் மூலம் அவ்வூழியர்கள் விரும்பியோ விரும்பாமலோ பிரமாணம் எடுக்க வலிந்து தள்ளப்பட்டனர்.

முதலில் இந்த சட்டத்திற்கு அமைவாக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளக்கூடாது என்று எச்சரிக்கின்ற பிரசுரங்களை தமிழ் இயக்கங்கள் வெளியிட்ட போதும் தமிழ் ஊழியர்கள் அனைவரும் அதனால் பதவி இழக்க நேரிடும் என்பதால் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு தமது நிலைப்பாட்டைத் தளர்தத்தின. வேலையை இழக்க நேரிடும் என்பதால் சத்தியப்பிரமாணம் எடுப்பதை தாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் புலிகள் சார்பில் பிரபாகரனது பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.

 அதன் அர்த்தம் சத்தியப்பிரமானப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதல்ல என்று புலிகள் அறிவித்தனர். வேலைகளை இழக்க நேரிடும்.

கூட்டணியின் மறுப்பும் பதவி துறப்பும்
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கையைத் முன்னிறுத்தி, அதற்கான மக்களாணையைப் பெற்றிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், அந்த மக்களாணைக்கு முற்றிலும் முரணாக அமைந்த, 6ஆம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை, நிச்சயம் செய்ய முடியாது. அது, தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருந்த ஆணையை மட்டுமல்லாது, அவர்கள் முன்னிறுத்தியிருந்த அடிப்படைக் கொள்கைக்கே விரோதமாக அமையும்.

அரசியலமைப்பை பாதுகாத்து 6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக 1983 ஓகஸ்ட்  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்படவேண்டும். அந்த சத்தியப்பிரமாணத்தை செய்ய மறுத்தது கூட்டணி. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சத்தியப் பிரமாணம் கூட்டணிக்கு அவசியப்படவுமில்லை.

1977 பொதுத் தேர்தல் ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் தினமான யூலை 22க்குப் பின்னர் தமது உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தது. பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்தும் கூட அரசாங்கம் பதவியை நீடிபதற்காக நடத்திய சர்வஜன வாக்கெடுப்பையும் “அது ஜனநாயக விரோதம்” என்று கூறி கூட்டணி எதிர்த்தது. யூலை 23, 24 ஆகிய திகதிகளில் மன்னாரில் நடத்தவிருந்த கூட்டணியின் மாநாட்டில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் இயக்கங்களின் நிர்ப்பந்தமும், எச்சரிக்கையும் இந்த முடிவுக்கு முக்கிய காரணம். யூன் 27 அன்று பாராளுமன்றக் கூட்டத்தில் கா.பொ.ரத்தினம் இப்படி கூறினார்.
“இளைஞர்களை அடக்க முடியாத நிலை வந்து விட்டது. சமஷ்டியை, இணைப்பாட்சியை தர மறுத்தால் பிரிவினையைத் தான் கேட்கவேண்டிவரும் என்று அன்று முதல் கூறி வருகிறோம். இன்று அது நடக்கிறது. இன்று நாம் சொல்கிறோம் இளைஞர்கள் ஒரு தற்கொலைப் படையை உருவாக்கும் நிலை தோன்றி வருகிறது....”
அதே வீ.என்.நவரத்தினம் யூலை கலவரம் வெடிப்பதற்கு முன் இரு நாட்களுக்கு முன்னர் யூலை 21 உரையாற்றும் போது,
“வன்செயல் மூலமோ, பலாத்காரத்தின் மூலமோ எமது பிரச்சினையை தீர்க்கலாமேன்ர நம்பிக்கை எனக்கில்லை. எமது இயக்கத்திற்கும் இல்லை. ஏதாவது பெரிய யுத்தத்தின் மூலம் தமிழ் ஈழத்தை மீடகலாமே ஒழிய சிறிய சிறிய வன்செயல்களினால் தமிழ் ஈழத்தை அடைய முடியாது. ஆகவே வன்செயல்களை நிறுத்த வேண்டிய, குறைக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல எமக்கும் உண்டு.” என்றார்.
அதே நாள் உரையாற்றிய அமிர்தலிங்கம் “ 1981 ஓகஸ்ட் 31இலிருந்து 1982செப்டம்பர் வரை ஐ.தே.க அரசுடன் கலந்துரையாடி ஒப்புக்கொண்ட விடயங்கள் கூட அமுலாக்கப்படவில்லை” என்பதை சுட்டிக்காட்டினர்.

ஜே ஆருக்கு மாலை போடும் சிறில் மெத்தியு
அந்த விவாதத்தில் உரையாற்றிய சிறில் மெத்தியு மிகுந்த கடுப்புடன் 83 கலவரத்தை நியாயப்படுத்தியும் ஆற்றிய உரை கவனிக்கப்படவேண்டியது.

இந்த கூட்டம் தான் அவர்களின் இறுதி கூட்டம். ஏற்கெனவே எடுத்த முடிவு மற்றும் 6 வது திருத்தச் சட்டத்தின் படி சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாது 17 பேரும் 3 மாதங்கள் விடுமுறை அனுமதி பெறாமல் பாராளுமன்றத்துக்குச் செல்லதாதால் அவர்கள் அனைவரும் பதவியிழந்தனர். இதனைத் தொடர்ந்து 5 வருடங்களும் 8 மாதங்களும் கூட்டணியின் இடம் வெற்றிடமாகத் இருந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக தேர்தல் ஒன்றை நடத்தியிருக்கவேண்டும் அரசாங்கம் ஆனால் வடக்கு கிழக்கு நிலைமையை சாட்டாகக் கூறி அங்கு அடுத்த பொதுத் தேர்தல் வரை தேர்தலை நடத்தவில்லை அரசாங்கம்.

அதற்கடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைமைக்கு தகுதி பெற்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதன் தலைவரான அனுரா பண்டாரநாயக்க எதிர்க் கட்சித் தலைவரானார். நவம்பர் 8 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம ஆகிய 11 பேரின் ஆதரவுடன் அவர் எதிர்க்கட்சி தலைவரானார்.

தமிழர் போராட்ட நிகழ்ச்சிநிரலை மாற்றிய சட்டம்
6வது திருத்தச் சட்டமானது; தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றக் கதவுகளை மூடியது. கூட்டணி போன்ற பாராளுமன்றவாத கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலையும், வேலைத்திதிட்டத்தையும் திசைதிருப்பி விட்டது போல, தமிழ் இயக்கங்களினதும் போராட்ட வழிமுறைக்கு மறுவடிவம் கொடுத்தது என்று தான் கூறவேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் தயவை நாடித் தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இந்தியாவை தமிழீழ நிகழ்ச்சிநிரலுக்குள் உள்ளிழுக்கக் தள்ளப்பட்டது. படிப்படியாக பல அமைப்புகள் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலைக்கும் ஆளானது. கூட்டணியின் உறுப்பினர்கள் எம்.ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் ஆகியோர் சுட்டுக்கொள்ளப்பட்டபின்னர் ஏனைய கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தார்கள்.

6வது திருத்தச் சட்டத்தை நிராகரித்த கூட்டணி 1988 ஜனவரி மாதம் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்த போது 6வது திருத்தச் சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. அதே வருடம் நவம்பரில் நிகழ்ந்த முதலாவது மாகாணசபைத் தேர்தலில் பங்குகொண்ட இயக்கங்களும் கூட இந்த சத்தியப் பிரமாணத்தின் கீழ் தான் போட்டியிட்டன. அதாவது ஈழக்கோரிக்கையை ஆதரிக்க மாட்டோம் என்கிற சத்தியத்துடன் தான்.

ஈழம் என்கிற சொல்லை அரசாங்கம் பல இடங்களில் தணிக்கை செய்தாலும் 88 மாகாண சபைத் தேர்தலின் பின்னர் “ஈழம்” என்கிற சொல்லைத் தாங்கிய இயக்கங்களின் பெயர்களை அனுமதிக்க நேரிட்டது.

நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும்.


இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை.
தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டணியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள்.

ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள்.

இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை சட்டபூர்வமாக - பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள்.

இனவாதிகளின் இன்றைய வழக்கு
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் (TGTE) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பல இரகசியக் கூட்டங்களில் கலந்துகொண்டு விடுதலைப் புலிகளின் இலக்கான தனித் தமிழீழத்தை நோக்கிச் செயற்பட்டு ஆறாம் திருத்தத்தின் வாயிலான அரசியலமைப்புச் சட்டத்தினை மீறியுள்ளனர் எனக் குற்றஞ் சுமத்தி சிங்கள பௌத்த பேரினவாதப் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சித் சொய்சா என்பவர் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் தான் இருக்கிறது.

அதுபோல “6வது திருத்தச் சட்டத்தை மீறி நடந்துகொள்வதால் அங்கு நடக்கவிருக்கும் தேர்தலை தடைசெய்யுமாறு ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, தேசாபிமான பிக்கு முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர், சுவர்ண சங்க பதனத்தின் தலைவர் புன்யவர்தன அல்விஸ், பொதுகம சங்கத்தின் தலைவர் சதிஸ்சந்திர தர்மசிறி மற்றும் யாழ்ப்பாண பௌத்த சங்கத்தின் தலைவர் ரத்தினம் ரவிக்குமார் ஆகியோரே தாக்கல் செய்திருந்தனர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குக்கு  அம்மூவரும் சமூகமளிக்க வேண்டும் என்று 2013 செப்டம்பர் 18 அன்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

தாம் ஒற்றையாட்சிக்கு உண்மையாக இருக்கப் போவதாகவும் தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் ஏற்கவில்லையென்று கூறி கூட்டமைப்பானது பாராளுமன்ற அவைத் தலைவராகிய சபாநாயகருக்கு எழுத்து மூலம் உறுதியளித்து கூட்டமைப்பு இருப்பைப் பாதுகாத்துக் கொண்டது.

முன்னர் ஜனாதிபதி பிரேமதாசாவுடனான விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகள் தொடக்கம் அதன் பின்னர் நிகழ்ந்த பல பேச்சுவார்த்தைகள் வரை இந்த 6வது திருத்தச் சட்டத்தை நீக்கும்படி தமிழர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் இறுதிவரை இலங்கை அரசாங்கங்கள் எதுவும் அதனை ஏற்கவில்லை.

இத்தனை இறுக்கமான, வலுவான சட்டப் பூட்டுக்கள் இருந்தும் கூட சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் தனிநாட்டை பிரித்து விடுவார்கள் என்கிற பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி குறைந்தபட்ச உரிமைகளைக் கூட தடுக்கின்ற போக்கு நீடித்தே வருகின்றது.

துரோகங்கள் தொடரும்...

6வதுதிருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம்
6 வது திருத்தச் சட்டமானது ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்.
சிறிலங்கா அரசியமைப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 157 (A) பிரிவின் படி, குறிப்பாக இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான எல்லா வகையிலான மீறல்களையும் தடைசெய்கின்றது.
157 A (1) பிரிவின்படி எந்த ஒரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள் இருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனி நாட்டினை அமைப்பதற்கு ஆதரவளிக்கவோ, அதற்கு இணங்கி நடக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ மற்றும் ஆதரவு திரட்டவோ கூடாது.
பிரிவு 157 (2) இன் படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் தனி நாடமைப்பதனைத் தனது நோக்கங்களில் ஒன்றாகவோ அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகவோ கொண்டிருக்கக் கூடாது.
மேற்போந்த பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளவற்றை மீறுபவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுத் தண்டனையாகக் கீழ்வருவனவற்றை அனுபவிக்க நேரும் எனப் பிரிவு 157 (3) உறுதிப்படுத்துகின்றது.
அந்த நபரின் குடிமை உரிமைகள் (Civic Rights) 7 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ்க் குற்றமிழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தவிர அவருக்கு உரித்துடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும்.
பிரிவு 157(4) இன் படி, ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாட்டை நிறுவ முனைந்தால், சிறிலங்காவின் குடிமகனாகவுள்ள எவரேனும் அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்புத் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகத் தனி நாடமைப்பதைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பின் செயலாளரை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யலாம்.
பிரிவு 157 (5) இன் படி, உச்ச நீதிமன்றம் இந்த முறையீட்டினை ஏற்றுக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்பு தடை செய்யப்படும்.
மேலும் பிரிவு 157 A இன் கீழ் 7 வது அட்டவணைப்படி மற்றும் பிரிவு 161 (d) (iii) இன் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவியேற்கையில் அவர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கேற்ப சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாடமைக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்க, நிதியளிக்க, ஊக்குவிக்கச் செய்யேன் என சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீது பற்றுறுதியுடன் உறுதியேற்கிறேன் என உறுதிமொழியேற்க வேண்டும்.
மனித குலத்தின் உறுப்பினர்கள் அனைவரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும் சமவுரிமையையும் ஏற்று நடக்க வேண்டியது இந்த உலக அமைதிக்கும் அறத்திற்கும் அடிப்படையானது என்று உறுதிமொழி தெரிவித்த 1948- 12- 10 அன்று நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் நாளன்று செய்யப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவு உலக அளவில் பிரசித்தம் பெற்றது.
அதன் படி உலகிலுள்ள ஒவ்வொருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உண்டு என்றும் பிரிவு 30 இன் படி இந்த உரிமையை இல்லாதாக்கும் படியான அல்லது மறுக்கும் படியான எந்த நடவடிக்கைகளையும் எந்த நாடோ அல்லது குழுவோ அல்லது நபரோ செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1955 இல் ஐ.நாவின் உறுப்பு நாடாக இணைந்த இலங்கை ஐ.நாவின் சாசனத்தில் உள்ளடங்கியுள்ள கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்டுத் தான் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. தாம் உடன்பட்டவற்றைப் பேணும் கடப்பாடு இலங்கை அரசுக்குண்டு.
அடிப்படை மனித உரிமைகளை குழிதோண்டிப் புதைத்துவிடும் இந்த 6வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இதுவரை உருப்படியான போராட்டங்கள் இதுவரை தமிழர் தரப்பில் மட்டுமல்ல எந்த ஜனநாயக சக்தியாலும் முன்னெடுக்கப்படவில்லை.
நன்றி - தினக்குரல்

எனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது - ஜீவா சதாசிவம்


இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் விருதான
 சாஹித்ய ரத்னா விருதை பெறுகின்றார்
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும்   எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது... என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் 'சாஹித்ய ரத்னா' நீர்வை, பொன்னையன்...

ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு சமூக போராளி. தொழிலாளர் வர்க்கத்துக்காகவே பேனாவை எடுத்த இவர் அவர்களது உரிமைகள், போராட்ட விடயங்கள் தொடர்பில் தனது எழுத்து ஆளுமையினூடாக சமூகத்துக்கு வெளிகொணர்ந்துள்ளார். 

முற்போக்கு எழுத்துலகில் இன்று ஆறு தசாப்தங்களை எட்டியுள்ள நீர்வை இன்றும் எழுத்துத் துறையில்  தன்னன ஈடுபடுத்தி வருகின்றார்.  அத்துடன் இலங்கை முற்போக்குக் கலை, இலக்கிய மன்றத்தின் ஊடாக இலக்கிய கூட்டங்கள், நினைவுப்பேருரைகள்,  நூல்வெளியீடுகள்  என்பவற்றை முன்நின்று நடத்தி வருகின்றார். 

அண்மையில்,  இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  உயரிய தேசிய விருதான  ''சாஹித்ய ரத்னா'' விருதைப் பெற்றுக்கொண்ட நீர்வை பொன்னையனை சந்திப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றேன். 87ஆவது வயதைக் கொண்டுள்ள இவரது பணிவான தன்மை, பணிவான பேச்சு அவர் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட போது மெய்சிலிர்த்தது. தான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்துக்காக எவ்வாறு கொள்கைபிடிப்புடன் வாழ்ந்து வந்தார் என்பது ஆச்சரியமிக்கதாக இருந்தது. 

இதன்போது அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக... 

 அரசியல் துறையில் ஏழு தசாப்தங்கள் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்கள். இவ்வாறு தசாப்தங்களை கண்டுள்ள நீங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 'சாஹித்ய ரத்னா' விருதை பெற்றுள்ளீர்கள். இதனை எவ்வாறு உணர்கின்றீர்கள்? உங்கள் துறைசார் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

நான் சார்ந்த இலக்கிய அமைப்புக்கும் என்னுடைய கோட்பாட்டுக்கும் கிடைத்த விருதாகவே இந்த 'சாஹித்யரத்னா' விருதை கருதுகின்றேன். இவ்விருதை பெற்றதில் மகிழ்ச்சியும் அடைகின்றேன். 

அரசியல் களத்திலிருந்து சிலர் எழுத்துலகிற்குள் பிரவேசிக்கின்றனர்.  எழுத்துத் துறையிலிருந்து சிலர் அரசியல் களத்திற்குள் நுழைகின்றனர். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகிற்குள் பிரவேசித்தேன்.  என்னுடைய அரசியல் பயணம் 1947ஆம் ஆண்டின் இறுதியில்  ஆரம்பமானது. இலக்கிய பயணம் 1957இல் ஆரம்பமானது.  நான் பாடசாலையில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தனியாக இயங்கியது கிடையாது.  எப்பொழுதும்  கூட்டாகத்தான்  இயங்கி வந்துள்ளேன். கூட்டாக இயங்கினால் தான் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியும் என்று  அனுபவரீதியாக  நான் கண்டுணர்ந்தவன். படிக்கும் பொழுது எனக்கு  சிறந்த நண்பர்கள் கிடைத்தனர். எந்த வேலையானாலும்  நாம்  கூட்டமாகத்தான் செயற்படுவோம்.

1957ஆம் ஆண்டே எனது முதலாவது சிறுகதை படைப்பு ஈழநாடு வாரப்பதிப்பில் வெளியானது. இந்த  முதல் படைப்புக்கு நான் அந்த பத்திரிகை ஆசிரியரால்  பாராட்டு பெற்றேன்.அதனை தொடர்ந்து அவரது ஊக்குவிப்பினால் தொடர்ச்சியாக எழுத்தளனானேன். கவிஞன் இ.நாகராஜன் என்ற எனது அமைப்பைச் சேர்ந்தவர் 'தமிழர்' என்ற பத்திரிகையை நடத்தினார். இது வாரப்பத்திரிகையாகும். இதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத ஆரம்பித்தேன். சுமார் 12 சிறுகதைகளை எழுதினேன.

எனக்கு விருப்பமான தொழில் ஆசிரியர் தொழில். ஆனால், விவசாயம் செய்வது எனது விதியானது, ஆசிரியர் தொழிலை எடுப்பதற்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. பட்டதாரியாக இருந்தும் சில,பல காரணங்களால் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைக்காமலே போய்விட்டது. கல்கத்தாவில் சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வந்தேன். ஆனால், முயற்சித்தும் தொழில் கிடைக்கவில்லை. எனது தந்தைக்கு அது பெரும் கவலை. அதன் பின்னரே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். என்னுடைய எழுத்து அரசியலில் இருந்தே பிறக்கின்றது.  


நான் ஒரு விவசாயியின் மகன் என்ற ரீதியில்  தொழிலாளர் சார் விடயங்களை எனது எழுத்தில் உள்வாங்கினேன் தொழிலாளர் சார் விடயங்களின்  உணர்வுகளே தனக்கு அதிகமாக இருந்தது. அதில் முதலாவதாக எடுக்கப்பட்டது  விவசாயிகளை மையப்படுத்தி எழுதப்பட்டதே 'மேடும் பள்ளமும்' எனும் சிறுகதை தொகுதி.  எனது இலக்கியத்துக்கு அரசியலே தலைமை தாங்கியது.  

 சமூக மாற்றத்தை  அரசியல் போராட்டங்கள் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தேன். சரியான அரசியல் களத்தைத்தேடி அலைந்த எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கைகொடுத்தது. நாற்பதுகளின் இறுதிக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் என் பேரன்பிற்குரிய ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே. கந்தையா ஆங்கில இலக்கியத்திலும் மார்க்ஸிசத்திலும் எனக்கு ஆர்வத்தையூட்டி, என் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தார். 

அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிசம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். இவ்விரு ஆசான்களது சரியான வழிகாட்டுதலும் இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் எனக்கு உறுதியான அரசியல் தளத்தை இட்டன.

புரட்சியின் தொட்டில் என்று கூறப்படுகின்ற கல்கத்தாவிற்கு நான் சென்ற பின் வங்காளத் தொழிலாளி வர்க்கத்தின் தீவிர போராட்டங்களிலிருந்தும் கலை , இலக்கிய இயக்கத்தின் செயற்பாடுகளிலிருந்தும் நான் பெற்ற புரட்சிகர உணர்வும் அனுபவங்களும் நான் படைப்பிலக்கிய களத்திற்குள் பிரவேசிக்க உந்துதலாயிருந்தன. 

இக்கால கட்டத்தில்தான் நான் மார்க்ஸிம் கார்க்கி, முல்க்ராஜ், ஆனந்த், கே..ஏ. அப்பாஸ், பிரேம்சந், கிஷன்சந்தர், சரத்சந்ர சட்டர்ச்சி, மாணிக் பந்தோபாந்யாய, தரசங்கர் பாணார்ஜி, விபூதிபூஷன் பர்ணார்ச்சுஜி ஆகியோரது படைப்புகளை ஆங்கிலத்தில் பார்த்தேன். நான் முதல் முதல் படித்த சிறுகதைத் தொகுப்பு புதுமைப் பித்தன் கதைகள், அத்துடன் சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்த மார்க்ஸிம் கார்க்கியின் தாய் என்ற படைப்பு தான் நான் படித்த முதல் நாவல். எனது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரும் உந்துதலாக இருந்தது.  

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதன் குறிக்கோள்கள் பற்றி ...

 ஐம்பதுகளின் இறுதியில் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறிது காலம்தான் செயற்பட்டது. இச்சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான டாக்டர் சரத் சந்ரா, கல்வி கற்க லண்டன் சென்றபின் இச்சங்கம் செயலிழந்தது. அறுபதுகளின் முற்பகுதியில் இச் சங்கம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பெயருடன் புனரமைக்கப்பட்டது.


இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல் மக்களை இலக்கிய மயப்படுத்தல், அரச, இன, மத, சாதி ஆகிய சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுதல், தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் வெகுஜனங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி நிலப் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள், அனைத்தையும் துடைத்தெறிதல், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தி யத்துக்கும் எதிராகப் போராடுதல், சுரண்டலும் சூறையாடலுமற்ற ஒரு சோஷலிஸ சமுதாயத்தை அமைத்தல் ஆகியவைதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோள்களாகும். 

இலக்கிய மாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், செயலமர்வுகள் போன்ற இலக்கியச் செயற்பாடுகளை நடத்தி பல அரிய சாதனைகளைப் புரிந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சியை 2006 ஆம் ஆண்டிலிருந்து இ.மு.க.இ. மன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.  

அரசியல் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்குகின்றது. இதற்கமைய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிரதிபலித்தது. இதனால் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இச்சங்கத்தைப் புனரமைக்க சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. காலத்தின் தேவை கருதி சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களால் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது. 

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுகளை இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை கையேற்று நிறைவேற்றுமுகமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. 

சிறிது காலத்தின் பின்னர் 2002 முற்பகுதியில் நண்பர் சமீமின் சர்வதேச பாடசாலையில் நாங்கள் கூடினோம். இக்கூட்டத்தில் சமீம், நான், கவிஞர்  ஏ. இக்பால், களனி சஞ்சிகை ஆசிரியர் சண்முகம் சுப்பிரமணியம், சிவா சுப்பிரமணியம், கே. சோமசுந்தரம், எம். குமாரசாமி ஆகியோர்  சந்தித்தோம். முஹம்மது சமீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

 ஏற்கனவே இரண்டு தடவைகள் கூட்டம் கூட முயற்சித்து அது கைகூடாமை பற்றி நான் விளக்கினேன். பின்னர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை இயக்குவதற்கு ஐவர் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. காலகதியில் க. சிவபுத்திரன், சுமதி குகதாசன், செல்விகள், றின்சா மொஹமட், தித்தலாவை ரிசானா, , எஸ். சதானந்தம் ஆகியோர் எம்முடன் இணைந்தனர். பின்னர் இராசரத்தினம், தர்மலிங்கம் அருளானந்தம், கருணைநாதன், ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் எமது பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களில் பொறுப்பாயிருந்து செயற்படுகின்றனர்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் ஒரு மைல்கல்  எமது மன்றத்தின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கொழும்பு இல. 6, தர்மராம வீதியிலமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எமது நிகழ்வுகள் இந்த கேட்போர் கூடத்தில் எதுவித தங்கு தடையுமின்றி நடைபெறுவதற்கு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரனும், இந்நிறுவனத்தின் பணியாளர்களும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும்  வழங்கி வருகின்றார்கள். 

இலக்கிய உலகில் மறக்க முடியாத விடயம்..

எனது  முதலாவது  சிறுகதைத் தொகுதி 1961 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால், அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் 'சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை' எனத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.  அந்த ஒரே வருடம் மட்டும் சிறுகதைக்கென  சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்று உணர்ந்தேன். நான் ஒரு போதும் பரிசுகளைத் தேடி ஓடியதில்லை.   ஒரு எழுத்தாளனுக்கான  அங்கீகாரம்  மக்களிடம் இருந்தே வரவேண்டும். 


 உங்களது எழுத்துக்களில் எப்படி  போராட்ட வடிவங்களும் இருக்கின்றன?

 ஆரம்ப  கல்வியைப் பிறப்பிடத்தில் கொண்ட நான் பட்டப்படிப்பை  மேற்கொள்ள கல்கத்தா சென்றேன்.  அங்கு படிக்கும் போது  மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றி  அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் நல்லதொரு அனுபவமும் கிடைத்தது.   அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. இவற்றை கற்பதனூடாக நவீன இலக்கியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது.   இதுவே பிற்காலத்தில் எனது எழுத்தின் உயிர் ஓட்டத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. 

  நீங்கள் எழுதிய சிறுகதை தொகுதிகள் பற்றி...?

'பாசம்' எனது முதல் சிறுகதை. இது 1959 இல் புனையப்பட்டது. 'மேடும் பள்ளமும்' எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுதி 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது.  பாதை, வேட்கை ஆகிய எனது இரண்டு  சிறுகதைத் தொகுதிகள் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர், உரிமையாளர், நண்பர் சிறீதர் 
வெளியிட்டுள்ளார்.  ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள் என்ற 25 கதைகள் அடங்கிய தொகுதியையும் முற்போக்கு இலக்கிய எழுச்சி நான்கு முன்னோடி எழுத்தாளர்கள் என்ற இ.மு.க. மன்றத்தின் இருநூல்களும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 11 நூல்களை வெளியிட்டுள்ளேன்.

முற்போக்கு இலக்கியத்தினுடைய போக்கு இப்போது எப்படி  இருக்கின்றது?

முற்போக்கு இலக்கியம் என்பது மக்கள் இலக்கியம். மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பவற்றை  பிரதிபலிப்பதாகவே முற்போக்கு இலக்கியம் இருக்கின்றது. வர்க்க அடிப்படையிலேயே இந்த இலக்கியம் அமைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இயங்காமல் இருந்த
இந்த இலக்கியம் தற்போது இயங்குகின்றது. வர்க்கப்போராட்டம் இருக்கும் வரைக்கும் இந்த முற்போக்கு இலக்கியமும் இருந்துகொண்டிருக்கும்.. எமக்கு பின்னர் இப்போது தொடர்ந்து வரும்மு ற்போக்கு இலக்கிய  எழுத்தாளர்கள் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இதனை  முன்னெடுத்துச் செல்வார்கள்.

  இன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது? 

வாசிப்பு இப்போது மிகவும் குறைந்துள்ளது. எங்களுக்கு வாசிக்காமல் இருக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. ஒரு எழுத்தாளர் எனும் போது அவர் வாசிப்பை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இளம் எழுத்தாளர்களை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. வாசிக்காமல் எழுதுகின்றார்கள் வெறும் கற்பனை எழுத்துக்களாகவே இருக்கின்றது. என்னிடம் பல சிறுகதைகள் திருத்துவதற்கு வரும் அதனை வாசித்து நான் கவலையடைந்திருக்கின்றேன். எழுத்து என்பது ஒரு தவம். அதனை சரியாக செய்ய வேண்டும். 

நேர்காணல் : ஜீவா சதாசிவம்

நன்றி வீரகேசரி - சங்கமம்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம்   10

ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா சென்றோர் 'தாயகம் திரும்பியோர்' என தம்மை இப்போதும் அழைத்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து மீளவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டபோது இந்திய அரசாங்கத்தால் மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அத்தகைய மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றியும் அவற்றின் வெற்றித்தோல்விகள் பற்றியுமாக ஆய்வரங்கில் கட்டுரையை சமர்ப்பித்தவர் வழக்கறிஞர் தமிழகன். 

வழக்கறிஞர் தமிழகனின் இயற்பெயர் ராமச்சந்திரன். இரத்தினபுரி லெல்லோபிட்டிய தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த  உயர்தரம் வரை படித்தவர். வி.எல். பேரைராவின் தலைமையில் இயங்கிய மலையக இளைஞர் பேரவை எனும் அமைப்பின் இரத்தினபுரி அமைப்பாளராக செயற்பட்டவர். 
1981 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு விண்ணப்பித்து திருச்சி சென்றவர் அங்கு உளவியல் (இளங்கலை), அரசறிவியல் (முதுகலை), இதழியல் மக்கள் தொடர்பு ஆகிய பட்டங்களுடன் திருச்சி அரச சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று இப்போது வழக்கறிஞராக பணியாற்றுகின்றார். 'தமிழ்க்காவிரி' எனும்  சமூக கலை, இலக்கிய இதழின் ஆசிரியராகவும் நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தாயகம் திரும்பிய மக்கள் பேரவை போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 'முட்செடிகள் பூக்கும்' எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள இவர் 'தமிழ்நாட்டு நதிகள்', 'தனியார் மயமாகும் தண்ணீர்' முதலிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர், ஆய்வாளர், களச்செயற்பாட்டாளர், விமர்சகர், பேச்சாளர் ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் இவர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மறுவாழ்வுத்திட்டங்கள் குறித்து அனுபவபூர்வமாக எடுத்துரைத்தார். இலங்கையில் உயர்தரம் முடித்துவிட்டுச் சென்றவர் என்கின்றதன் அடிப்படையில் ஆய்வுநோக்கில் தனது அனுபவங்களுடன் கள ஆய்வு அறிக்கைகள் அரசாங்க அறிக்கைகள் என்பவற்றையும்  ஆதாரமாகக் கொண்டு தனது கட்டுரையை வழங்கியிருந்தார். 

அவரது கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது.

இலங்கை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி துணைத்தூதுவர் காரியாலயத்தில் மறுவாழ்வுத்திட்டங்களுக்குப் பரிந்துரை  செய்து அனுப்பவதற்காக மறுவாழ்வு பிரிவு (Rehabilitation Cell) ஒன்று இயங்கிவந்தது. இப்பிரிவில் தாயகம் திரும்பிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்ப அட்டை (Family Card) வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டையிலேயே தாயகம் திரும்பியவுடன் அவர்களுக்கு வழங்கவேண்டிய மறுவாழ்வு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவானர்கள் பெயர் தாயின் அல்லது தந்தையின் அல்லது பாதுகாவலரின்  கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பதாகவே மறுவாழ்வுத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் இருந்தன. 

i.      இந்திய ரயில்வே , வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் ,        தேர்வு எழுதுதல்
ii. அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு  செய்துகொள்ளல்.
iii  கும்மிடிப்பூண்டியில் இயங்கிய ஓட்டுனர் பயற்சிபள்ளி  உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறல். 
கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு மறுவாழ்வு உதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
i. தாயகத்துக்கு கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் சொத்துக்கள்.
ii. குடும்ப உறுப்பினரட்களின் மொத்த எண்ணிக்கை ஆண்,பெண் விகிதம், குழந்தைகளின் எண்ணிக்கை. 
iii.  குடும்பத் தலைவரின் ஆர்வம், விருப்பம். 
iv.  வழங்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள்
v.  ஒரு குடும்பத்துக்கு மொத்தம் இந்திய ரூபா 5000 வங்கிக்கடன்
vi.  சுய வேலைவாய்ப்பு
vii. தொழில்வாய்ப்பு – தேயிலை,  ரப்பர் தோட்டங்கள், நூற்ப ஆலைகள், அரசு பண்ணை கூட்டுறவு சங்கங்கள், ரெப்கோ வங்கி மூலமான வேலை வாய்ப்புகள்.
viii. வேளான் திட்டங்கள்
ix. அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில்  அனுமதி
x.  இலங்கையில் இருந்தவாறே இந்தியாவின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு.
xi. வீட்டுக்கடன்.
ஆனால், உண்மை நிலையே வேறானது. மேற்படி மறு வாழ்வுத்திட்டங்கள் பலனாளிக்காமல் போனதால் பிழைப்புத் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் குடி பெயர்ந்தனர். தற்போதைய நிலையில் இவ்வாறு தாயகம் திரும்பியோர் தமிழ்நாடு, ஆந்திரமாநிலம் (சித்தூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டஙகள்) கரநாடக மாநிலம் (குடகு, கோலார், ஹாசன், மைசூர் மாவட்டங்கள), கேரள மாநிலம் (இடுக்கி, கொல்லம் மாவட்டங்கள்), புதுச்சேரி, தெலுங்கானா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என பரவலாக வாழ்ந்து வருகின்றனர். 

இதில் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள் இன்றும் 'சிலோன் காலனிகள்' என அழைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக இந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இருபது லட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்றைய நிலையில் சரியான தகவல்கள் இல்லை.  

இவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா வங்கிக்கடனில் 3000 ரூபா மண்டபம் முகாமில் வழங்கப்பட்டதோடு எஞ்சிய தொகை உரிய முறையில் அவர்களை சென்று சேரவில்லை. வீட்டுக்கடன் அடிப்படையில் 25 ஆண்டுகள் காலக்கெடு அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள் 64 வீதமான குடும்பங்கள் இந்தக்கடனைப் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளே சிலோன் காலனிகளாக அழைக்கப்படுகின்றன. எனினும் காலப்போக்கில் கைமாறிய வீடுகளில் தற்போது பத்து சதவீதமனோரே தாயகம் திரும்பியோர் உடமைகளாக உள்ளன.

இரண்டு மூன்று தலைமுறைகளான பிறகும் கூட இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களும் அவர்களது வாரிசுகளில் பெரும்பாலானவர்களும் அடிப்படை  வாழ்வாதாரங்களை பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்களிடம் இருந்து பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக வழக்கறிஞர் தமிழகன் சுட்டிக்காட்டுகின்றார்.

**தாயகம் திரும்பியோரிடம் தமிழ் நாடு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டு, குடும்ப அட்டை உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்படல் வேண்டும்.
**தாயகம் திரும்பியோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் தாயகம் திரும்பியோர் சான்றிதழ் 
**தமிழ் நாட்டுக்கு வெளியே வேறு மாநிலங்களில் வாழும் தாயகம் திரும்பியோருக்கு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்டல் வேண்டும்.
**தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொந்தக் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.
**தாயகம் திரும்பியவர்களுக்காக அமைக்கப்பட்ட (Repatriate Copoperative Finanace and Development Bank ) ரேப்கோ (REPCO)
** தாயகம் திருமபியோருக்கும் அவர் தலைமுறையினருக்கும் தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலங்கை - இந்திய இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுதல் வேண்டும். 
இம்மக்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களின் விளைவுகளையும் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் இம்மக்களின் அவல வாழ்வை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக புதிய மறுவாழ்வுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளிவீசும் ஒரு நல்ல நாளை நோக்கி நம்பிக்கையுடன் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களை அழைத்துச்செல்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும். 

பாதிக்கப்படுகின்ற எந்தவொரு சமூகத்தின் சார்பிலும் அச்சமூகத்தை ஆதரித்து பிற அமைப்புகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் குரல் எழுப்பவது வழக்கம். இத்தகைய குரல்களின் விளைவாகவே அச்சமூகம் கவனிக்கப்பட்டு அதன் குறைகள் நீக்கப்படும் சூழல் உருவாகும். ஆனால், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை. மொத்த சமூகமும் மௌனம் சாதித்து விட்டது.

இலங்கையில் "இந்திய காரர்கள்' என்றும் இந்தியாவில் 'சிலோன் காரர்கள்'    என்றும் அந்நியர்களாக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட தாயகம் திரும்பியோரின் சார்பாக குரல் எழுப்பப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் மலையகத்தவரின் மறுவாழ்வுக்கான வேண்டுகோளை முன்வைத்தார் வழக்கறிஞர் தமிழகன். 

நன்றி - சூரியகாந்தி 

துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 3) - மு.நித்தியானந்தன்

மு.நித்தியானந்தன் எழுதிய "கூலித் தமிழ்" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது மூன்றாவது பாகம்.
  1. முதலாவது பாகம் 
  2. இரண்டாவது பாகம். இந்த இணைப்பில்
கூலித் தமிழ்

டபிள்யு.ஜி.பி. வெல்ஸ் (இரத்தினபுரி) ஆக்கிய கூலித் தமிழ்’ (Cooly Tamil) தேயிலை, றப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பேசுவதை, துரைமாரும் துரை மாராகப் பழகுபவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விசேஷமாக அமைக்கப் பட்டது' என்ற துணைத் தலையங்கத்துடன், இந்நூலின் முதற் பதிப்பு 1915இல் கொழும்பில் வெளியாகியுள்ளது. (22)

"தமிழில் வார்த்தைகள் எவ்வாறு அமைகின்றன, எவ்வாறு காலங்காட்டுதல் உணர்த்தப்படுகிறது, எவ்வாறு வாக்கியங்கள் அமைகின்றன என்பதைப் பற்றிய சிறிதளவு தெளிவான அறிவு இருந்தாற்கூட, கூலித்தமிழைப் பேச்சுவாயிலாகக் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பல கஷ்டங்களைச் சுலபமாக்கிக்கொண்டு விடலாம் என்று எனது சொந்த அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன்” என்று தனது முன்னுரையில் கூறும் வெல்ஸ், "கூலிகளின் இலக்கணமில்லாத மொழி யைக் கற்றுக்கொள்ளவும், கூலி சொல்வதைப் புரிந்துகொள்ளவும், தான் சொல் வதைக் கூலி புரிந்துகொள்ளவும் உதவக்கூடிய ஒரு நூலை சின்னத் துரைமாரின் கரங்களுக்கு வழங்குவதே எனது ஒரே நோக்கம்” என்று கூறுகிறார்.

ஆசிரியர் பிரகடனப்படுத்தும் நூலின் நோக்கத்தைவிட, நூலில் உறைந்திருக் கும் துரைத்தன ஒடுக்குமுறையின் சொல்லாடல் பற்றியே இங்கு நாம் எமது ஆய்வைக் குவிக்கிறோம். தோட்டங்களில் துரைமார் தொழிலாளர்களோடு உரையாடுவதில்லை. ஒருவழிப் பேச்சுவார்த்தைதான் இது. துரைமார்கள் கட் டளை பிறப்பிப்பார்கள். அதனைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண் டும். இதுவே, துரைமார் தயாரித்த தமிழ்ப் போதினிகளின் அடிநாதமாக இருந் தது. இந்நூலின் ஆரம்ப வாக்கிய அமைப்புகள் இதனையே புலப்படுத்துகின்றன.

கவாத்து

"வேலெ பத்தாது”

ஒம்பதரை மணி ஆச்சு, இவ்வளோ மாத்திரம் முடிந்திருக்கிருது'

அவ்வளவு வேகமா போக வாணாம், நீ செய்றது படி பார்

ஒவ்வோராள் இருநூத்திஅம்பது மரம் செய்யோனும்

அதி தேவலை, இப்போ சுருக்கா வெட்டி போ'

இயந்திரமாகத் தொழிலாளர்களிடம் வேலைவாங்கும் துரைத்தன மனோ பாவத்தை இவை படம்பிடித்துக் காட்டுகின்றன.

நான் சொல்ற மாதிரி செய், கரச்சல் பண்ணாமே"

இது "கூலித் தமிழ்’துரைமாருக்குப் படிப்பிக்கும் பாலபாடம்.

அப்படி இல்லே தொரை, அப்படி இல்லே. பதினஞ்சு இஞ்சி எப்பிடி யிருக்குமுன்னு நான் காமிக்கிறேன்" என்று கவாத்து வெட்டு சரியில்லை என்று குற்றங்கண்டுபிடித்த சின்னத் துரையின் கையை வகுந்துவிட்ட "பெருமாள் வெட்டை வலன்டைன் டேனியல் விபரித்துச் செல்வதையும் இவ்விடத்தில் ஒப்பிட்டு நோக்குவது பொருந்தும்.

பழைய மலை என்றால் 150இலிருந்து 200வரை தேயிலைச் செடிகள் ஒரு நாளில் ஒரு தொழிலாளி கவாத்து பண்ண வேண்டும் என்பது திட்ட வேலை. பெரிய தோட்டங்களில் ஒரு ஆள் 160 செடிகள் வெட்டுவதுதான் கணக்கு. "ஒன் னாம் நம்பர் கவாத்துக்காரனின் கணக்கு இது. ஒன்னாம் நம்பர் கவாத்துக் காரனுடன் ஒன்றாய்த் தானும் நிரை பிடித்து கவாத்து வெட்டிய தோட்டத் துரை ஒருவர் அத்தொழிலாளியின் வேலையினுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தன்னால் ஆக 130 செடிகள்தான் வெட்டிக்கொள்ள முடிந்தது என்று தனது அனுபவத்தைக் குறிக்கிறார். ஆனால், கூலித் தமிழ்ப் போதினியின்படி

ஒவ்வோராள் இருநூத்திஅம்பது மரம் செய்யோனும்!

வேலை பத்தாது!

வேலையை வேகமாகச் செய்யாமல் மெதுவாகச் செய்வது தொழிலாளியின் ஒருவித எதிர்ப்பு யுக்தி. ஒன்பதரை மணிக்கு கவாத்து மலைக்கு வந்த தோட்டத் துரை வேலை அவ்வளவாய் ஆகவில்லை என்பதை அவதானிக்கிறான்.

வேலை பத்தாது. ஒம்பதரை மணி ஆச்சு, இவ்வளவோ மாத்திரம் முடிந் திருக்கிறது' என்று துரை கத்த வேண்டும் என்று கூலித் தமிழ் போதிக்கிறது.

துரை மலைக்கு வந்ததும் "கூலிகள் வேகமாக வேலை செய்துகொண்டிருப்பது போல் பாவனை காட்டுவார்கள். மரக்கணக்கிற்கு வேகமாக வெட்டிக்கொண்டு போகும்போது கவாத்து அவ்வளவு சுத்தமாக இராது என்றும் துரைமார்கள் அனுமானிக்கிறார்கள்:

அவ்வளவு வேகமா போக வாணாம், நீ செய்றது படி பார்’

கத்தி வெயிலிலே வைக்க வாண்டா. கைப்புடி கெட்டுப்போவும். நெழலிலே வை’ என்று ஒரு வாக்கியம் வருகிறது.

காலையிலிருந்து மாலைவரை கொளுத்தும் வெய்யிலில், வியர்வை உடம்பில் தெப்பமாய் வழிய, உடலம் ஒய உழைப்பவனைப் பற்றியல்ல, வெயிலில் கிடந்தால் கத்தியின் கைப்பிடி பழுதாகிவிடும் என்று கவலையுறும் துரைத்தனத் தின் மனிதாபிமானம் இன்மையையும் லாப மோகத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

நூல் நன்கு உணர்த்துகிறது. சில மாதிரி வாக்கியங்கள்:

அதெ சுருக்கா கொண்டு போ'

அங்கே மேலே ஆள் ஒன்னும் செய்றதில்லே?

இது யாருட்டு கொந்தரப்பு?

"காத்தான் கொந்தரப்பு'

அப்போ அவன் அரிசி நிப்பாட்டு, அவன் பில்லு வெட்டுறதில்லே.

இந்த பொம்புளை நல்லா வேலை செய்யமாட்டுது. அவளே லயத்துக்கு அனுப்பு'

அந்த குழிமூடல் ரெம்ப செய்றதில்லே’

தேயிலைத் தோட்டங்களில் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும் துரைமார் சொல்வதைக் கேட்காமல் தங்கள் பாட்டில் வேலைசெய்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் சூக்குமமான எதிர்ப்புணர்வு இந்நூலில் பரவலாகப் பதிவாகி யிருக்கிறது.

அம்பது தரம் மண்ர குமித்து வைக்கச் சொன்னேன்"

'பால் வெட்ட" என்ற தலைப்பில் சில மாதிரி வாக்கியங்கள்:

'பால் ஆள் அஞ்சு மணிக்கி காலம்பர வாளி எடுக்க வரோணும்'

அதுக்கு பிற்பாடு வந்தால் வேல இல்லாமே போவனும்

ஆறு மணிக்கல்ல, காலை 5 மணிக்கே றப்பர் தோட்டங்களில் பால்வெட்டு ஆரம்பமாகிவிடுவதை இது உணர்த்துகிறது.

ஆள் சேர்த்தல்

ஆள் சேர்த்தல்" என்ற தலைப்பில் "கூலித் தமிழ் நூலில் இடம்பெறும் உரை யாடலை அதன் முழு வடிவில் நோக்குவது அக்காலகட்டத்தில் தோட்டங்களில் எவ்வாறு தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதையும், ஆள் சேர்த்தலில் கங்காணிகள் எம்மாதிரி நடந்துகொண்டிருந்தனர் என்பதையும் அறிந்துகொள்ள நமக்குப் பெருந்துணை புரியும்.

"என்னத்துக்கு எனக்கிட்டே ஓடி வர்றது? இதென்ன?

இது இருபது ஆளுக்கு ஒரு துண்டு, தொரே தயவுசெய்து எடுக்க வேணும்."

நான் இந்தாள் எப்படி எடுக்ரன், இதி செகப்பு துண்டு தோட்டம்"

ஒவ்வோராளுக்கு தொரே எவ்வளவு கடன் குடுக்கிறார்?

இந்த மாதிரி செகப்பு துண்டு இருந்தால் ஒவ்வோராளுக்கு நாப்பது ரூபாய்க்கு மேலே குடுக்கமாட்டேன்."

நான் வெள்ளை துண்டு கொண்டு வந்தால் தொரே நூறு ரூபா ஒராளுக்கு குடுப்பாரா?

இல்லே, இப்போ உனக்கு ரெம்ப கடன் இருக்கிறது." அப்போ தொரே என் கணக்கைத் தீர்த்து, துண்டு குடுத்தா நான் இந்த புது ஆளுகளை வேறே தோட்டத்துலே எடுத்து வைக்கிறேன்."

"சீமையிலிருந்து ஆள் ஏன் தெண்டித்து எடுக்கிறதில்லே? வழிச்செலவை தோட்டம் கணக்கிலே போட்டிருக்கும்."

"தொரே எனக்கு அம்பது ரூபா கொடுத்தால் நான் போய்ட்டு ஆள் கொண்டு வருவேன்.”

நான் அவ்வளவு குடுக்கிறதில்லே. இங்கே பத்து ரூபா தாரேன். அப்போ நீ டிப்போவுக்கு (திருச்சி) கொண்டு வந்து பதிந்தால் ஒவ்வோராளுக்கு நீபத்து ரூபா வாங்கலாம்”

நல்லதுங்க."

இந்தா, இந்த ஆர்டரை திருச்சினாப்பள்ளி டிப்போவுக்கு கொண்டுபோய் காம்பிக்கணும்."

இந்தா பார், பத்து தகரம் இருக்குறது. நம்பர் எழுதி வைத்திருக்கிறேன்."

நீ போய்ட்டு எவ்வளவோ காலம் நிப்பது?

நான் ஒரு மாசம் போயிட்டு வரேனுங்க."

நீ எத்தனை ஆள் கொண்டு வருவுது? நீ போறது முந்தி எனுக்கு சொல் லத்தான் வேணும்."

நான் எட்டாளு டிப்போவுலே பதிஞ்சு கொண்டு வருவேன்."

'உன் தாய் புள்ளே ஆள் எப்போதும் பாத்து எடுக்கோணும். வேறே ஆள் சில வேளை ஓடி போவுது.

'சீமையிலே உனக்கு என்னா மேல் விலாசம் இருக்கும்?

"ஏன் பேர் பழனியாண்டிப்பிள்ளை, சீனிவாசகம் மகன்."

சரி, இப்போ இந்தக் காய்தத்துக்கு உன் கை ஒப்பம் வை."

'உனக்கு எழுத தெரியாதா? தெரியும்."

நீ சொன்னபடி செய்யாதே போனால் உன்னெ மறியலுக்கு அனுப்புவேன்."

நல்லதுங்க, நான் வரேன் செலாங்க."

இன்னுமொரு மாதிரி உரையாடல்:

"பெரிய கங்காணி கூப்பிடு. இந்தா கங்காணி, ராமலிங்கம் கங்காணி ஊரி லிருந்து ஒரு காயிதம் அனுப்பியிருக்கிறான்."

அதெ வாசித்து அவன் என்னா எழுதி சொல்ரான் எனக்குச் சொல்லு.

அதிலே எழுதியிருக்கிரான். ஊருலே ஆறாளு சேத்துக்கிட்டு அவுங்க டிப் போவுக்கு வரமாட்டோம் எண்டு நிக்கிறது."

ராமலிங்கம் கங்காணி அவுங்களோட ஊருக்கடன் கட்டும் வரைக்கும் வர மாட்டுது."

"கடன் எவ்வளோ இருக்கிறது. அவென் எழுதியிருக்கிறானா?

ஆமாங்க, அவனுக்கு அறுவது ரூவா அனுப்ப வேணும் எண்டு சொல்ரான்."

"என்னா, நீ சொல்லிரபடிநான் கேட்கயில்லை."

அறுவது ரூவா அனுப்ப வேண்டியது என்கிறான்."

'கங்காணிக்கு நான் காசி அனுப்ப ஏலாது. ஏனெண்டால் அவனெ நம்பே லாது."

ராமலிங்கம் கங்காணி தேடிப் புடிக்க அவனோட ஊருக்கு ஒரு பியூன் அனுப் பலாமா? டிப்போ ஏஜண்ட் தொரைக்கி ஒரு காயிதம் எழுதிக் கேக்கிரன். கங் காணி புது ஆள் காம்பிச்சவுடனே பியூன் காசு குடுத்து, எல்லாருக்கும் டிப்போ வுக்கு சேர்ந்து வருவுது."

தகர வில்லை

1902இல் மேற்கு மாகாணத்தின் கவர்ன்மெண்டு ஏஜண்டாக இருந்த எப்.ஆர். எல்லீஸ் அறிமுகப்படுத்திய தகர வில்லைத்திட்டம்" (Tin Ticket System) அமுலில் இருந்த காலத்தில் ஆட்சேர்க்கப்பட்ட முறையை இது விபரிக்கிறது. இந்தச் சிறிய தகர வில்லையில் தோட்டத்துப் பதிவு இலக்கமும், தொழிலாளியின் பதிவு இலக் கமும் என்று இரண்டு இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தத் தகர வில்லையைக் கையில் கட்டிக்கொண்டு வரும் தொழிலாளர்கள் இந்தியக் கரை யிலிருந்து இலங்கைத் தோட்டம்வரை ஒரு சதப் பயணச் செலவும் காசாகச் செலுத்த வேண்டியதில்லை. தோட்டம் வந்துசேர்ந்த பின்னர் தொழிலாளியிட மிருந்து வசூலித்துக்கொள்ளக்கூடிய முறையில் தொழிலாளி தோட்டம் வந்துசேர வழிவகுத்தது. இது வி.பி.பி. முறையில் பார்சல் அனுப்புவதைப் போன்ற முறை என்று வர்ணிக்கப்பட்டது.

தோட்டத்திற்குத் தொழிலாளர்களை ஆடுமாடுகள் போலக் கொண்டுசென்று, அவர்களை ஏலம்போடுவதுபோல் விற்று, அவர்கள் நிரந்தரமான கடனாளிகளாக ஆக்கும் நிலைமையை மேற்கூறிய உரையாடல்கள் புலப்படுத்துகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு இந்தியக் கரைக்குத் தப்பி ஓடினாலும், அவர்களைப் பிடித்துக்கொண்டுவரத் தோட்ட நிர்வாகம் வாரண்டுகள் பிறப்பிக்க முடிந்தது. "கூலித் தமிழ் நூலில் இடம்பெறும் பின்வரும் மாதிரி வாக்கியத்தை நோக்கலாம்:

நான்புடிக்க வேண்டியது ஓடிப் போனாள் ஒராள் ஊரிலே நிக்ரான்."

அவனெ புடிக்கலாம் நீ நினைத்தால், உனக்கு ஒரு வாரண்டு வாங்கப் பாக்ரன்."

இந்தா இந்த கடதாசி பத்திரம் வைத்து, சீமைக்கு போய்ட்டு காம்பி; அந்த மாதிரி இன்னொரு கடதாசி காட்பாடி டிப்போவுக்கு அனுப்புரன்."

தோட்ட அடக்குமுறையும் கஷ்டமும் தாங்காமல் தோட்டங்களை விட் டோடிய தொழிலாளர்களைப் பிடிக்க கங்காணிமாரே துரைத்தனத்திற்குச் சேவ கம் புரிபவர்களாக இருந்தனர். கங்காணிகளின் உதவியில்லாமல் தோட்டங் களை விட்டு ஓடிய தொழிலாளர்களை இந்தியாவில் பிடிப்பது சாத்தியமற்றது.

துரைசாணி

தகவல் கொண்டுசெல்பவர்களாகவும், ஆட்களைத் தூக்கிக்கொண்டு செல் பவர்களாகவும் தொழிலாளர்களே அமைந்திருந்தமையையும் இந்நூலில் அறிய லாம்.

ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு துரைசாணி போவ தானால், அவளைத் தூக்குநாற்காலியில் வைத்துத் தொழிலாளர்கள் தூக்கிக் கொண்டு சென்றிருப்பதைப் பின்வரும் வாக்கியம் உணர்த்துகிறது:

"தொரைச்சானியை நாக்காலியிலே...................... தோட்டத்துக்குத் தூக்க நாலு ஆள் வேணும். அந்த வேலைக்குப் பழக்கமான ஆள் இருக்க வேணும்."

Mail Coach என்பதை அக்காலத்தில் தொழிலாளர்கள் குதிரைக் கோச்சி என்று அழைத்திருக்கிறார்கள்.

இங்கே வா!', 'கூலித் தமிழ் போன்ற தோட்டத் துரைமாருக்கான தமிழ்ப் போதினிகளில் தொழிலாளர் ஒடுக்குமுறையையும், அவற்றில் மறைமுகமாகப் புதைந்துகிடக்கும் தொழிலாளர் எதிர்ப்புணர்வையும் பக்கத்திற்குப் பக்கம் நாம் பார்க்க முடிகிறது.

யுகமாற்றம்

தொழிலாளர்களிடம் வேலை வாங்க என்னென்ன மாதிரிக் கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும் என்றுதுரைமாருக்குஅறிவுறுத்தக்கூலித்தமிழ்ப்போதினிகள் ஈடுபட்டிருந்த காலத்தில், தோட்டத் தொழிலாளர்கள் துரைமாருக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தொழிலாளருக்குப் பால பாடம் நடத்தவந்த நடேசய்யரின் "தொழிலாளர் சட்ட புஸ்தகம்', (23) தொழிலாளர் சமூக வரலாற்றில் ஒரு யுகமாற்றத்தைக் குறித்து நிற்கிறதெனலாம்.

"(முதலாளிகளுடைய ஏஜண்டுகளின்) உதவிபெற்று இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள், சுமார் ஆறேமுக்கால் லட்சம் பேருக்கு மேலிருக்கிறார்கள். இவர்களுடைய நலவுரிமைக்காகப் பாடுபடுகிறவர்கள் மிகவும் சொற்பம். தங்களுக்கு எவ்விதமான சுதந்திரங்கள் உண்டு என்பதை இவர்கள் அறிய முடியா திருக்கிறார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால், எழுத்துக் கூலிக்காரர்களிடமும், சில ஏமாற்றுக்காரர்களிடமும் அகப்பட்டுக்கொண்டு உள்ளவற்றையும் தொலைத்து அவதிக்குள்ளாகிறார்கள். தொழிலாளர்களின் இவ்வித நிலைமையைத் தொலைக் கவே, இச்சிறு புத்தகத்தை அச்சிடத் துணிந்தேன்’ என்ற முன்னுரையுடன் நடேசய்யர் தொழிலாளர்களுக்காக எழுதிய 'தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ துரைத்தனத்திற்கு எதிர்முனையில் போராட்டம் நடத்தத் தொழிலாளர்களைப் பட்டைதீட்ட முயன்றது.

"முறையீட்டு விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டியதில்லை; தமிழிலேயே எழுதலாம்" என்று அறிவுறுத்தி, தோட்ட நிர்வாகத்திற்கு நீங் கள் வேலையிலிருந்து விலகிக்கொள்வதானால் எப்பொழுதும் நோட்டீஸ் கொடுக் கலாம் என்றும், அந்த நோட்டீஸை எவ்வாறு கொடுப்பது என்றும் விளக்குகிறார்.

"நோட்டீஸ் கொடுப்பதைக் கீழ்க்கண்ட முறையில் கொடுங்கள்:

.............................................. தோட்டம்

தேதி ................................... 19

.............................. டிஸ்திரிக்ட் ................................ தோட்டம் துரையவர்களுக்கு, கீழே கையொப்பமிட்டிருக்கும் மேல்படி தோட்டத் தொழிலாளர்களாகிய நாங்கள் உங்கள் தோட்டத்தினின்றும் ........................ மாதம் ..................... தேதி விலகிக்கொள்ளப்போவதற்கு இதுவே நோட்டீஸ். எங்கள் பற்றுச்சீட்டும் சம்பளமும் மேல்படி திகதியில் எங்கள் கையில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

இப்படிக்கு

ஒப்பம் அல்லது ரேகை

எந்தப் பெரிய உத்தியோகஸ்தரையும், ஐயா என்று எழுதினால் போதும். வீணாக இரண்டு பாதங்களுக்கும் முல்லை, மல்லிகை, விருபாட்சி முதலிய புஷ்பங்கள் கொண்டு அர்ச்சித்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து செய்து கொள்ளும் விண்ணப்பம் என்று எழுத வேண்டாம். நீ ஒருவரையும் அர்ச்சிக்க வேண்டாம்" என்றும் தொழிலாளருக்கு இடித்து அறிவுரை கூறி, நடேசய்யர் எழுதக் கற்றுக்கொடுக்க முன்வந்தபோது, "தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூலை வாசித்து விளங்கத் தோட்டத்துரைமார் மேலும் தமிழ் கற்க விரும்பியிருப்பார்கள் என்று ஊகித்தால், அது, அவ்வளவு தவறான ஊகமாக மாட்டாது.

முற்றும்...

அடிக்குறிப்புகள்:

22. W.G.B. Wells. 1915. Cooly Tamil. Colombo: Ceylon Observer Press.
23. கோ. நடேச ஐயர். 1939. தொழிலாளர் சட்ட புஸ்தகம். கொழும்பு: இந்தியன் பிரஸ்.

அவுஸ்திரேலியாவில் "1915: கண்டி கலவரம்" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும்



அவுஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிற "கலை இலக்கியம் 2017" நிகழ்வில் என்.சரவணன் எழுதிய "1915: கண்டி கலவரம்" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும் நிகழவிருக்கிறது. அங்கு நிகழவிருக்கும் ஏனைய நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் கீழே.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

கலை இலக்கியம் 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசெம்பர் 02 ஆம் திகதி ( 02-12-2017) சனிக்கிழமை

கலை இலக்கியம் 2017

நிகழ்ச்சி சிட்னியில் நடைபெறும்

முகவரி:

Sydwest Multicultural Services  மண்டபம்
Level  1,125 Main Street
Blacktown NSW 2148

காலம்:
மாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை

சிட்னி, மெல்பன், கன்பரா, பிறிஸ்பேர்ண், பேர்த், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் வதியும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துசிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
Email: atlas25012016@gmail.com
Web: www.atlasonline.org


நிகழ்ச்சிகள்:

கருத்துரைகள்:

01. கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்    (தமிழகம்)

02. செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்  (இலங்கை)

நூல் அறிமுகம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு

சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் - ( வரலாறு) 

சந்திரிக்கா சுப்பிரமணியம்

நடேசன் எழுதிய  நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)

கார்த்திக்வேல்சாமி

முருகபூபதி எழுதிய  சொல்லவேண்டிய கதைகள்  (புனைவுசாரா இலக்கியம்)

கலையரசி சின்னையா

'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)

எஸ். எழில்வேந்தன்

கலந்துரையாடல் - ஊடகங்களும் அனுபவ அறிவுப்பகிர்வும்

துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 2) - மு.நித்தியானந்தன்

மு.நித்தியானந்தன் எழுதிய "கூலித் தமிழ்" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது இரண்டாவது பாகம். முதலாவது பாகம் இந்த இணைப்பில்

துரைமார் உலகம்

ஆயிரக்கணக்கில், கறுத்த, அகுசியான, அருவருப்பூட்டும், "பெரளி பண்ணப் பார்க்கிற, வேலைசெய்யாமல் ஏமாற்ற முனைகிற, காட்டுமிராண்டிகள் போன்ற கூட்டம் ஒன்று தன்னைச் சுற்றிலும் நிற்கும் அச்சம் கலந்த தனது கற்பனாவுலகில் ஒரு தோட்டத் துரை சஞ்சரிக்கிறான். தனது வெள்ளைத் தோலின் நிறமொன்றி னாலேயே அந்தக் காட்டுமிராண்டிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண் டிருப்பதாகவும் அவன் எண்ணங்கொள்கிறான். ஒவ்வொரு நாளும் வேலைத் தளத்தில் ஒடுக்கப்படும் அந்தக் கூட்டத்தின் வெஞ்சினத்தின் வாடை அவனுக்கு வீசவே செய்கிறது.

உள்ளூர் சிங்களவர்களும் அவன்மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.

லண்டன்வாசிகளோ இந்தத் தோட்டத்துரைமார்களைக் கணக்கில் எடுப்பதேயில்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு மகாராஜாபோல, கலெக்டர் பதவியிலிருந்து சகல உயர் பதவிகளிலும் 40 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக, கேள்வி கேட் பார் எதுவுமின்றிக் காலந்தள்ளியவர் பெர்சிவல் டைக் என்ற பிரிட்டிஷ் உய ரதிகாரி. இங்கிலாந்திற்குச் சென்றபோது, விக்டோரியா ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மோட்டார் வாகனத்தில் ஏறும்போது அந்த வாகன சாரதி அவ ருடன் கடுமையாக நடந்ததில் கடுஞ்சினமுற்ற டைக் விரைவிலேயே யாழ்ப் பாணம் திரும்பிவிட்டதுடன் அதற்குப் பிறகு இங்கிலாந்துப் பக்கம் தலை காட்டவேயில்லை.

“சிங்கப்பூர் வீழ்ச்சியுற்றபோது, தோட்டத் துரைமாரைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசப்பட்டது. அப்போது வீசி எறியப்பட்ட சேறு, இப்போதும் மேலில் ஒட்டிக்கொண்டிருப்பது போலவே இவ்வளவு காலத்திற்குப் பிறகும் எனக்குப் படுகிறது. இலங்கையின் தேயிலை, றப்பர் தோட்டத் துரைமார்க ளாயிருப்பவர்கள் பூரணமான பிரிட்டிஷ் தீவுகளைச் சேர்ந்த மக்களின் அப் பட்டமான வார்ப்புத்தான். அவர்கள்மீது குற்றம் சுமத்துபவர்கள் பிரிட்டிஷ் சமூக அமைப்பின் சகல பிரிவினரையுமே குற்றத்திற்கு இலக்காக்குகிறார்கள்” என்று லண்டன்வாழ் ஆங்கிலேயர் தம்மீது காட்டும் அலட்சிய, குற்றஞ்சாட்டும் மனோபாவத்தைப் பற்றி எரிச்சலோடு பேசுகிறார் ஒரு தோட்டத் துரை. “எந்த மக்களை அவர்களின் சீரழிவிலிருந்தும், கேவலமான நிலையிலிருந்தும் மீட் டெடுக்க அவன் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பானோஅவர்களே அவனை இழிவாக நிந்தித்துப் பேசினர். அவனது சொந்த ரத்தமும் சதையுமானவர்களே அவனைக் கேவலமாகக் கருதினார்கள்’ என்று, அவரே வேதனையுறுமளவிற்கே 'சீமையில் அவரது ரத்தத்தின் ரத்தங்கள் கருத்துக் கொண்டிருந்தன.

கடுமையான வெம்மையும், குரூரமான தனிமையும் ஒரு புறமிருக்க, தன் மொழி பேசும் ஒருவனை இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அவன் வாரக் கணக்கில்கூடக் காண்பதற்கில்லை. நித்திய பிரம்மச்சாரியாக வாழ்ந்தாக வேண் டிய "வெள்ளையின நிர்ப்பந்தம். குடி, குடி மட்டுமே அவனுடைய ஒரே புகலிடமாய் இருந்தது. மனநோய்க் கூறுகளின் சகல தாக்கங்களுக்கும் அவன் இலக்கானான். அவனுடைய மூச்சு, வாழ்வு, இருப்பு அனைத்துமே தோட்ட மாகவே இருந்தது. அவனது தொழில் என்பது சாராம்சத்தில் தொழிலாளர் களைப் பிழிந்தெடுப்பதாகவே அமைந்தது. அவனது சகல மனஉபாதைகளின் வெளிப்பாடும் தொழிலாளர்களின் மீதே பூரண வலிமையோடு பிரயோகிக்கப் பட்டது.

பதினெட்டு அல்லது இருபது வயதில் வெறும் பாடசாலைப் படிப்போடு தேயிலைத் தோட்டத்திற்கு "கிரீப்பராகத் (Creeper) தொழில் பழக ஆரம்பிக்கும் "சின்னத் துரை ஐந்து வருடம் வேலை அனுபவம்பெற வேண்டியிருந்தது. ஐந்து வருடத்திற்குப் பிறகு ஆறு மாதச் சம்பளத்துடன்கூடிய விடுமுறையில் அவன் "சீமை" போய்வரலாம். ஐந்து வருடத்திற்குப் பிறகு, அவன் "சீனியர் அஸிஸ்டென்ட் பதவிக்கு உயர்த்தப்படுகிறான். இதில் பொறுப்புகள் சற்று அதிகமெனி னும் பெருஞ் சலுகைகளை அவன் இப்பதவியில் அனுபவிக்க முடியும். தோட்ட மனேஜர் விடுமுறையில் போனால், இந்தக் கட்டத்தில் அவருக்குப் பதிலாகக் கடமை புரியும் அந்தஸ்தைப் பெறுகிறான். பின்னர், ஒரு தோட்டத்து மனேஜ ராகப் பதவி உயர்த்தப்படுவான். திறமை காட்டுபவனாக இருந்தால், 'விஸிட் டிங் ஏஜண்ட்" என்ற உயர்ந்த பதவிக்கு அமர்த்தப்படுவான். பல்வேறு தோட் டங்களையும் சுற்றிப்பார்த்து கம்பெனிகளுக்கு அறிக்கை அனுப்புவதை முக்கியக் கடமையாகக் கொண்ட இந்த உயர்பதவி மிகச் சிலருக்கே கிடைத்தது. தோட்டத் துரைமார்கள் என்று ஆயிரம் பேர்வரை தேயிலைத் தோட்டங்களில் இருந்தனர்.

இந்தப் பதவி அமைப்புமுறை அத்துணை உற்சாகத்தைத் தோட்டத் துரை மார் மத்தியில் எழுப்பாத நிலையில், அவர்களின் உடனடிக் கவனிப்பிற்கும் கிரகிப்பிற்கும் உரியதாகக் கூலிகளின் தொழில் நடவடிக்கைகளே அமைந்தன. கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களிடம் ஒழுங்காய் வேலை வாங்கு வதே அவனுடைய ஒரே குறியாக இருந்தது. தொழிலாளர்களைக் கண்டிப்பாய் நடத்தி, அவர்களிடம் ஒழுங்காய் வேலைவாங்க முதல் வழியாக அந்தக் கூலி களின் மொழியைப் புரிந்துகொள்வது அவனுக்கு அவசியமாகவிருந்தது.

அபர்டீன்தமிழ் வகுப்பு
"Tamil to be taught
Course for those going east
Aberdeen class arranged."

"தமிழ் போதிக்கப்படும்!
கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி!
அபர்டீன் வகுப்பு தயார்”

என்ற அபர்டீன் பத்திரிகைத் தலைப்புச் செய்திகள் (15) "கூலித் தமிழ் பயிலும் அவசியத்தை அக்காலத்தில் வெளிப்படுத்தியுள்ளன. ஸ்கொட்லாந்தின் அபர்டீன் நகரிலிருந்து பெருந்தொகை வெள்ளையர்கள் மலாயா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகளுக்குத் தொழில் நிமித்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் புலம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்குத் தமிழ் போதிப்பதற்கான வகுப்புகள், ஸ்கொட்லாந்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ளதுறைமுக நகரான அபர்டீனிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

அபர்டீன் பத்திரிகைச் செய்தியை முழுமையாகப் பார்க்கலாம்.

“இலங்கையிலும் மலாயாவிலும் தொழில் பார்ப்பதற்காக இந்நாட்டை விட்டு வெளியேறும் தோட்டத் துரைமார், தோட்டத்து எஞ்சினியர்கள் மற்றும் சிவில் எஞ்சினியர்கள் ஆகியோரைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் கூலி மொழியில் போதுமான பயிற்சி இல்லாத குறை இனிமேல் அபர்டீனில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

அபர்டீன் கல்வி கமிட்டியின் மாலை வகுப்புகளில் கூலித் தமிழ் போதனை விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. வட ஸ்கொட்லாந்தின் விவசாயக் கல்லூரியில் தோட்டத்துறை போன்ற பயிற்சி நெறிகளை மேற்கொண்டு, வெளிநாடு செல்ல விருக்கும் மாணவர்களுக்காகவே இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமாக அமையும் என்று கருதப்படும் இந்தக் கூலித் தமிழ் வகுப்பு களை, 19 ஆண்டு காலம் தோட்டத்து நிர்வாகியாக வெளிநாட்டில் சேவை யாற்றி அனுபவங்கொண்ட திரு. ஜோர்ஜ் வோக்கர்நடத்தவிருக்கிறார்.

குறைந்தது 35 பேரைக் கொண்டதாக இந்த வகுப்புகள் அமையவுள்ளன. விவசாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களே பிரதானமாக இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உள்ளனர். மலாயா அல்லது இலங்கைக்குத் தோட்டத் துரை மாராகவோ, எஞ்சினியர்களாகவோ அல்லாமல் வேறு தொழில்களுக்காகவோ செல்லும் இளைஞர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.

மலாயாவிற்கும் இலங்கைக்கும் செல்லுகின்ற இளைஞர்களுக்குக் கூலித்தமிழ் பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது அவர்களுக்குப் பெருந்தடையாக உள்ளது" என்று இந்த மாலை நேர வகுப்புகளின் அமைப்பாளர் திரு. பிராங்க் ஸ்கோர்ஜி எமது"Press and Journal'நிருபரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த மொழித் தேவையை இந்த வகுப்புகள் நிறைவேற்றும்.

விவசாயக் கல்லூரியில் போதிக்கப்படும் தோட்டத்துறை சார்ந்த பயிற்சி நெறிக்குத் துணையாக இந்த மொழி போதனை அமையும். மலாயாவிற்கும் இலங்கைக்கும் செல்லும் தோட்டத் துரைமாரும் எஞ்சினியர்களும் அங்கு சென்றதும் இந்த மொழியைப் படித்தேயாக வேண்டும்.

மலாயாவின் தோட்டத் துரைமார் சங்கத்தின் விதிகளின்படி, இவர்கள் அம் மொழியில் பரீட்சைக்குத் தோற்றி, சித்தி அடைய வேண்டும். அப்பரீட்சையை இங்கிலாந்திலேயே நடத்துவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொள்வது சாத்தியமே.

வெளிநாடுகளுக்குச் சென்று, கூலிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்படும் பட்சத்தில், கூலித் தமிழைப் பேச முடியாதவர்கள் பெருந்தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய கூலித் தமிழ் வகுப்பு அபர்டீனைவிட, இங்கிலாந்தில் வேறெங்காவது போதிக்கப்படுகிறதா என்று தனக்குத் தெரியாது என்று திரு. ஸ்கோர்ஜி கூறுகிறார்.

எனினும், கூலித்தமிழுக்கான எந்தவிதமான பாடப்புத்தகங்களும் இந்நாட்டில் தற்போது பாவனைக்கு இல்லையாயினும், வெளிநாட்டிலிருந்து கூலித் தமிழ்ப் பாடநூல்களைப் பெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Aberdeen Press and Journal
(23 November 1938)

கஷ்டமான காரியம்

"தமிழ்த் தொழிலாளர்களை வெற்றிகரமாகக் கையாள முதலில் அவர்க ளுடைய பாஷையைப் பேசப் பழக வேண்டும். இது உண்மையில் அவ்வளவு லேசான காரியமில்லை. முன்பின் தமிழ் மொழியோடு ஒரு பரிச்சயமும் இல்லா தவர்களுக்கு, இம்மொழியை யாராவது பேசுவதை முதலில் கேட்கும்போது, தண்ணிர் டாங்கியிலிருந்து குளிப்பதற்குத் தண்ணீர் பாய்கிற சத்தம் மாதிரித்தான் கேட்கும்.

"எனக்குத் தமிழில் ஒரு வார்த்தையுமே பேசத் தெரியாது. புதிதாகத் தமிழைப் பேச முயற்சிப்பவர்களுடன் தொழிலாளர்கள் தயவாயும் சிநேகயூர்வமாயும் இருப்பது மனசைத் தொடுவதாயிருக்கும். துரை எதையாவது பிழையாய்ச் சொல்லும்போது, அவருடைய மனதில் எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தாத வகையில் அவர் பிழையாகச் சொன்னதைத் தாங்கள் நினைவில் வைத்துக் கொண்டு, பிறகு அந்த வார்த்தை வரும்போது தாங்கள் அதைச் சரியாகச் சொல்லிக்காட்டி, துரை அது சரி என்று தெரிந்து கொள்ளுமளவிற்கும் அவர்கள் அதில் பிரயாசையாய் இருப்பார்கள். இது மிகவும் சிநேகயூர்வமான உதவி யெனினும், நீண்ட நோக்கில் இதில் அவ்வளவு பிரயோசனம் இருப்பதில்லை.

"துரைமார் அநேகமாகத் தமிழை எழுதப் படிப்பதில்லை. ஏனென்றால், தோட்டத்தில் வேலை பார்க்கும் பெருந்தொகைத் தொழிலாளர்கள் கல்வியறிவே இல்லாதவர்கள். அவர்கள் தமிழ் எழுத்துகளை ஒருபோதும் பாவிப்பதில்லை. கணக்கப்பிள்ளை மற்றும் மலைக்கங்காணிகள் பெருமளவில் இலக்கங்களோடு தான் புழங்குவார்கள். அவர்களுக்கு மிக அரிதாகவே எழுதுகின்ற தேவை வரும். அவர்களில் பலர் எழுதிக்கொள்ளக்கூடியவர்களே. கணக்கப்பிள்ளைக் கும் துரைமாருக்குமிடையிலான தொடர்புகள் வாய்ப்பேச்சு மூலமாகவே நடை பெறும்.

"தமிழ் எழுத்து மிகவும் கஷ்டம். தமிழ் மொழி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால், கூலிகள் இலக்கணமேயில்லாத அல்லது ஒரளவு இலக்கணத்தோடுகூடிய ஒரு வட்டார வழக்கை வைத்திருக்கின்றனர். அவர்கள் பேசுவதை எழுதுவது பெருங்கவுடம்.

"தமிழ்மொழியைப் படிப்பதும் பெருங்கவுடமான காரியந்தான். உயர்தமிழ் என்பது இலக்கணம், வசன அமைப்பு அனைத்தும் கொண்டதே. இது ஒன்று மில்லாமல் கூலிகள் பேசும் பாஷை "கொக்னி தமிழ் மாதிரி" (cockney: கிழக்கு லண்டனில் கீழ்மட்ட மக்களின் வழக்குமொழி) என்று பதுளையில் தோட்டத் துரையாயிருந்த ஹரி வில்லியம்ஸ் கூறுகிறார்.

தோட்டத் துரைமார்கள் தமிழ் படிப்பதற்கு அல்லது "கூலிகளின் தமிழைப் புரிந்துகொள்வதற்கு "INGEVA', 'COOLY TAMIL’ என்ற இரு முக்கிய நூல்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. இந்நூல்கள் முழுதும் ஆங்கிலத்தி லேயே அமைந்தன. தமிழ் எழுத்துகள் எதுவுமே காணப்பட மாட்டாது. முதலில் ஆங்கில வாக்கியத்தை எழுதி, அதனை எவ்வாறு தொழிலாளர்கள் பேசுவார் களோ அந்தப் பேச்சு மொழியை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவைத்து, பேசுவதற்குத் துணைபுரிவதாகவே இவை அமைந்துள்ளன.

உதாரணம்:
Send her to the lines. - Layathukku poha sollu.
Silent - Pesamal iru, vay mudu.

இக்கூலித் தமிழ்ப் போதினிகள் எவ்வளவிற்குத் துரைமாருக்குத் தொழி லாளர்களின் பேச்சுவழக்கைப் புரிந்துகொள்ள உதவின என்பது நம் அக்கறைக்கு உரியதொன்றல்ல. இந்தத் தமிழ்ப் போதினிகள், தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறை, தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு ஆகியவற்றை எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகின்றன என்பதே நம் ஆய்வின் அக்கறைக்கு உரியதாகும்.

இங்கே வா!

"INGE VA’ or the “Sinnadurai's Pocket Tamil Guide' என்பது இந்நூலின் தலைப்பு.

இந்நூல் ரோயல் ஏசியாட்டிக் சொஸைட்டியின் அங்கத்தவரான ஏ. எம். பேர்குஸனால் (ஜூனியர்) எழுதப்பட்டது. இந்நூலின் திருத்தப்பட்ட மூன்றா வது பதிப்பு 1892இல் வெளியிடப்பட்டது.

"அநாமதேயமாக இருக்க விரும்பிய ஒரு பெரும் மொழியியல் நண்பர் இந்நூலின் தயாரிப்பில் எனக்குப் பேருதவி புரிந்திருக்கிறார். இந்நூல் சாதாரண மக்கள் மத்தியிலே காணப்படும் பேச்சு வழக்கினையே கொண்டிருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்பியதற்கிணங்கவே இந்நூலை ஆக்கியுள்ளேன். எனவே, சிறாப்பர்மாரும் பண்டிதர்களும் இந்நூல் அவர்களுக்கானதல்ல என் றும், தற்போதைய சின்னத் துரைமார் கூட்டத்தாருக்குரியது என்றும் அன்புடன் நினைவுகொள்ள வேண்டுகிறேன். தோட்டத்துச் சின்னத் துரைமார்கள் அவர் களின் முன்னையோரைப் போலவே தாமும் இந்நூலுக்குப் பெருமளவில் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்’ என்று ஏ.எம். பேர்குஸன் (ஜூனியர்) தன் உரையில் தெரிவிக்கிறார். (16)

ஒரு மொழியைப் புதிதாகப் பேச விரும்பும் ஒருவருக்கு இலகு வழிகாட்டியாக ஒரு நூலை எழுதும் எவரும் அந்நூலுக்கு இங்கே வா! என்று தலைப்பிட மாட்டார்கள். ஒரு மொழிப் போதனை நூலும் காலதேச வர்த்தமானங்களுக்கு இயைந்தது என்பதற்கு இந்நூலே நல்ல சான்றாகும். துரைத்தனத்தின் அதிகாரப் பிரயோகத்தை - ஒரு கூலிக்கு ஆணையிடும் தன்மையை இந்நூலின் தலைப்பு பறைசாற்றுகிறது.

தலைப்பு மட்டுமன்று, நூலில் காணப்படும் பெருவாரியான வாக்கியங்கள் தொழிலாளருக்கு ஆணை பிறப்பிக்கும் ஏவல் வாக்கியங்களாகவே அமைந்திருப் பதைக் காணலாம். தப்பு அடி, சங்கு ஊது, வாய் பொத்து, பேசாமல் இரு போன்ற வாக்கியங்கள் இதனைப் புலப்படுத்துவன.

இந்நூலின் மூன்றாவது வாக்கியம்: "கூப்பிட்டதுக்கு கேக்கலையா?

தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறையை எதிர்க்க முனையும் தொழி லாளியின் மனோபாவத்தை இது உணர்த்துகிறது. வேலைத் தளத்தில் ஒவ்வொரு நிமிஷமும் இக்கொடூரச் சுரண்டலை எதிர்கொள்ளும் தொழிலாளி தனக்குச் சாத்தியமான சகல வகை எதிர்ப்புகளையும் தெரிவிக்க முனைகிறான்.

ஜேம்ஸ் ஸ்கொற் என்பவரின் Weapons of the Weak (17) என்ற நூல் இத்தகைய தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளை நன்கு விபரிக்கிறது. இங்கு, தோட்டத் துரை ஏதோ வேலையைப் பணிக்கும்போது அல்லது இங்கே வா’ என்று கூப்பிடும்பொழுது, அவன் அதனை விளங்கிக்கொண்டாலும், தெரியாததுபோல் பாவனைபண்ணி அதனை மறுதலிக்க முனைகிறான். சூக்குமமாக துரைத்தனத் தின் சுரண்டலுக்கு அவன் காட்ட முடிந்த முதல் எதிர்ப்பு இதுவே. அதனால் தான், சின்னத் துரைமாருக்கான இத்தமிழ்ப் போதினியின் மூன்றாவது வாக்கியத்திலேயே இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான தயாரிப்பில் துரைமாரை ஈடுபடுத்த இந்நூல் முனைகிறது.

இந்நூலின் நான்காவது வாக்கியம்:
"ஒழுங்கா இருங்க' (Stand properly)

பெரட்டுக்களத்தில் இடப்படும் கட்டளை இது என்பதை நாம் இலகுவில் அனுமானித்துக்கொள்ள முடியும்.

பெரட்டுக்களம் என்பது என்ன? "தனது இராணுவத் துருப்புகளுக்கு முன் னால் ஒரு கொமாண்டிங் ஒபீஸர் தோற்றுவதுபோல், ஒரு தோட்டத் துரை சடாரென்று தோன்றி மேற்கொள்ளும் வீம்புத்தனமான ஒரு டம்பமான நோட்டமிடல்தான்' என்று வலண்டைன் டேனியல் (18) தெரிவிக்கிறார்.

இராணுவப் பின்னணியிலேயே அனுபவப்பட்டிருந்த பல தோட்டத் துரைமார்கள், இராணுவத் துருப்புக்களிடம் அணிவகுப்பின்போது எதிர்பார்க் கப்படுவதுபோல ஒழுங்காய், விறைத்து நேராய் நிற்கும் தன்மையைத் தோட் டத் தொழிலாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கேள்வி எதுவுமின்றி கடமைப் பாட்டையும் இது கூடவே சூசகமாக உணர்த்துகிறது. ஒரு இராணுவக் கட்டமைப்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படாத தொழிலாளர்கள் மிக்க இயல்பாக சாவகாசமாக துரைமார் முன் நிற்கிறார்கள். அது வேளையில் கட்டுப்பாடிமையை உருவாக்கிவிடக்கூடும் என்று துரைத்தனம் கருதுகிறது. தனக்கு முன்னால் நிற்கும்போது, பட்டாளத்துக்காரன் ஒருவன் உயரதிகாரியின் முன்னால் நிற்பதுபோல அவர்கள் நிற்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கும் இராணுவ மனோபாவத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டளையில் மிளிர்கிறது.

'சிரிக்கிறது யார்?' - Who is laughing?

இந்நூலின் ஐந்தாவது வாக்கியம்:

தோட்டத் துரைமாரின் பகட்டுத்தனமான நடத்தையையும் கட்டளையை யும் பார்த்துப் பெரட்டுக்களத்தில் நின்றுகொண்டிருக்கும் தொழிலாளர்களுக்குச் சிரிப்பு வருகிறது. சிலவேளை அவர்களின் கண்களில் தோட்டத் துரை ஒரு கோமாளி மாதிரியும் தெரிந்திருக்கக்கூடும். எந்த மலைக்குப் போக வேண்டும் என்று தங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயமொன்றிற்குப் பெரட்டைக் கூட்டி வைத்துக்கொண்டு, அநாவசியமான ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண் டிருப்பதைப் பார்த்து அவர்கள் சிரித்திருக்கிறார்கள். இது சகல தோட்டங்களிலும் இயல்பாக நடந்திருப்பதை ஊகிக்க முடிகிறது.

இந்நூலின் ஆறாவது வாக்கியம்:
"லயத்துக்கு போகச் சொல்லு' (Send her to the lines.)

ஒரு பெண்ணின் சிரிப்பின் விலை இது. ஒருநாள் பேர் போய்விட்டது. அப் பெண்ணுடைய சிரிப்புதங்களின் துரைமார் ராஜ்யத்தின் அழிவிற்கான முதற்படி என்பது துரைமார் அகராதியில் தெளிவாய் இருந்திருக்கிறது.

நாங்க என்ன வேலைக்கு போக வேணும்?

இது துரை பெரட்டுக்களத்தில் தொழிலாளர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி. துரைமார்களைவிட மறுநாள் மலையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும் என்பது துரைத்தனத்திற்குத் தெரியும். தோட்டத் துரையின் வேலை தெரிந்துகொள்ளாத-பலவீனமான நிலையைத் துலாம்பரப்படுத்தும் கேள்வி இது. வேலை தெரியாத துரைமாரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் தன்மையைப் பிரதிபலிக்கும் போக்கின் ஒரு அம்சமே இது.

இதற்கடுத்த கேள்வி:
'உன் மம்பட்டி எங்கே?

தான் வேலையில் கவனமாய் இருப்பதாயும், தொழிலாளி மண்வெட்டி இல் லாமல் வந்திருப்பதைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் காட்டிக்கொள்ளும் முனைப்பு இது. சதா நேரமும் வேலையிலேயே கண்ணும்கருத்துமாக இருக்க வேண்டும் என்று தொழிலாளிக்கு உணர்த்துவதற்கு துரைத்தனத்திற்கு அவசியப் படும் கேள்வி இது. அந்த அர்த்தத்தில் இது வெறும் கூலித் தமிழ்ப் போதினியாக இல்லாமல், தொழிலாளரைக் கட்டுப்படுத்தும் 'முகாமைக் கைநூல்' ஆகவும் திகழ்வதை அவதானிக்கலாம்.

'உன்னைக் கூப்பிடேல்லை" என்றொரு வாக்கியம்.

தன்னை எதுவும் கூப்பிட்டுவிட்டாரோ என்று பவ்வியமாகத் துரையிடம் போகும் ஒரு தொழிலாளியை, அப்படியே எட்டத்தில் வைத்துவிடப் பண்ணும் அலட்சியம் நிறைந்த வாக்கியம் இது. நின்ற இடத்திலேயே தொழிலாளியை நிற்கவைக்கும் பாசாங்குத்தனத்திற்குரிய வார்த்தைகள் துரைமாருக்குத் தேவைப் பட்டிருக்கிறது.

பேசாதே!

இந்நூலில் ஒரு சம்பாஷணை இடம்பெறுகிறது:

முத்துசாமி கங்காணி எங்கே?

அந்தா தெரியுது. கீழ் ரோட்டிலே வாரது.

ஏன் இவ்வளவு நேரம் செண்டு பெரட்டுக்கு வந்தாய்?

ராத்திரி தூக்கம் சுத்தமா கெடயாது அல்லது ராத்திரியிலே எனக்கு தூக்கம் இல்லே.

அதெப்படி? ரொம்ப சாராயம் குடிச்சியா? தண்ணி மிச்சம் குடிச்சியா?

தொரைக்கு பொய் சொல்ல ஏலாது; நான் கொஞ்சமெண்டாலும் குடிக்க இல்லே.

பிந்திவந்ததற்கு அவன் என்னென்னகாரணங்களைச்சொல்லக்கூடும் என்பதும் அவர்களது அகராதியில் பதிவாகியிருக்கிறது.

ஆண்டி சரியா சங்கு ஊத இல்லை.

சோறு ஆக்கவும்கூட நேரம் இல்லை.

தோட்டத் துரைமாருக்கு விளக்கம் அல்லது பதில் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது; அது துரைக்கு முன்னால் நின்று அவரை எதிர்த்துப் பேசுவதற்குச்

சமமாகும.

பதில்துரையிடமிருந்து வருகிறது.

பேசாமல் வேலைக்கி போ.

மேலும் ஒரு வேலை சொல்லப்படுகிறது:

ரெங்கன், நாகசேனைக்கு போயிட்டு ஆறு கோடாலி, பன்னண்டு மம்பட்டி கொண்டா."

ஒரு ஆள் ஆறு கோடரிகளையும் பன்னிரண்டு மண்வெட்டிகளையும் தனியே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று அவ்வளவு துல்லியமாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.

இன்னுமொரு உரையாடல்:

"பெரிய பங்களாவுக்கு கொண்டு போகவா?

ஆமா, வந்தவுடனே சொல்லு,

அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தொழிலாளியின் நேரம் வீணாகிப்போய்விடக்கூடும் என்று மிகுந்த அவதானத்தோடு இந்தக் கட்டளை பிறக்கிறது.

எதிர்ப்புணர்வு

"சோமாரிக்காரன், தப்பின பழம் எடுக்க உன்னை மூணு தரம் கூப்பிட்டேன்."

உரையாடல் கோப்பிக் காலத்தை உணர்த்துகிறது. ஏதோ கீழே விழுந்துவிட்டபழத்தைப் பொறுக்கி எடுக்கத் தோட்டத் துரை, தொழிலாளியை மூன்று முறை கூப்பிட்டிருக்கிறான். ஆனால், மூன்று முறை கூப்பிட்டாலும் தொழிலாளி பேசாமல் இருப்பான் என்று துரைமார்கள் அனுமானித்திருக்கிறார்கள். கேட்டாலும் கேட்காதது போல தொழிலாளி பாவனைபண்ணுவதும் தொழிலாளியின் எதிர்ப் புணர்வைத் தெரிவிக்கும் ஒருவித யுக்திதான்.

ஒரு பழத்தைப் பொறுக்காமல் விட்டுவிட்டுப் போனாலும், அவனது லாபத் தில் உதைக்கும் விஷயம் அது. எனவேதான், இதற்கு மறுமுனையில்,
கோணக்கோணமலையேறி
கோப்பிப் பழம் பிக்கையிலே
ஒருபழம் தப்பிச்சுன்னு
ஒதச்சாண்டி சின்னத்தொரை
என்று பெண் தொழிலாளியின் பாடல் எழ நேர்ந்தது.

துரை மூன்று முறை கூப்பிட்டும் வராமலிருந்ததற்குத் தொழிலாளி ஏதேனும் காரணம் கூற முற்பட்டிருக்க வேண்டும். அந்தக் காரணங்கள் விளங்கிக்கொள்ள துரைக்கு அதற்கான தமிழறிவோ அவசியமோ அநாவசியமானது. ஆனால், அத் தொழிலாளியின் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று இந்தத்தமிழ்போதினி வழிகாட்டுகிறது:

சீ! வாய் பொத்து!

இதையடுத்து, இருட்டி போறது என்று தமிழில் சொல்லத் துரைக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது இருட்டும்வரை துரை, தோட்டத்தில் நின்று தொழிலாளியிடம் வேலைவாங்கும் வழக்கத்தைக் குறிக்கிறது.

நீ எவ்வளவு நேரம் அங்கே இருந்தாய்?
ராத்திரி பன்னெண்டு மணி மட்டும் அங்கே இருந்தேன்."

இரவு பன்னிரண்டு மணிவரையும்கூட வேலைத்தளத்தில் சாதாரணமாக நின்று வேலைசெய்வதை இது எடுத்துக்காட்டுகிறது.

தேசப் பிரஷ்டங்கள்

இன்னுமொரு முக்கிய உரையாடல் இந்நூலில் வருகிறது:

"நேத்து சாயந்தரம் முத்துசாமி லயத்திலே நடந்த சண்டை என்ன?

"சின்னப்பயல் பொன்னனை ஏசினதால் (இவனுடைய அண்ணன்) முத்துசாமி அவனுக்கு ஒரு அடி அடித்தான்."

பழனியாண்டி ஏன் லயத்துலே இருக்கிறான்?

அவன் இங்கே இல்லை’ ஆமா, இருக்கிறான். கள்ளன் போல காட்டுக்கு ஓடிப்போறதை நான் இப் போதான் கண்டேன்."

பழனியாண்டி என்ற தொழிலாளி லயத்துக்கு வரக் கூடாதென்று, துரையின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மீறி பழனியாண்டி லயத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறான். திடீரென்று துரை ஒருமுறை லயப் பக்கமாய் வருகையில் அவன் லயத்தை விட்டு காட்டுப் பக்கமாய் ஒடுவதைப் பார்க்கிறான்.

இந்த அனுமானத்தில்தான் மேற்கூறிய தமிழ்ப்போதினி உரையாடல் நடை பெறுகிறது.

இம்மாதிரி "தேசப் பிரஷ்டங்கள் எல்லாம் அந்நாளில் எவ்வளவு சாதாரண மாய் இருந்ததென்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

ஸி.வி. வேலுப்பிள்ளையின் "வீடற்றவன் (19) நாவலில் ஒரு பகுதி.

"உன் தம்பிப்பயல் எங்கே?

தலவாக்கொல்லையில் வேலை செய்ரானுங்க” அவன் பொம்பளே அடிச்சாச் பத்சீட் கொடுத்தாச் உனக்குத் தெரியும்’

தெரியும் தொரைகளே’

இப்ப தோட்டம் வர்றதா? நம்ம தோட்டம் வர்றதா?

வரப் போகத்தானே இருக்கானுங்க” அவன் இங்கே வரக்கூடாத். வந்தா ஒனக் பத்சீட் தெரியும்’

'எனக்கு பத்துச்சீட்டு வேண்டாமுங்க தொரைகளே. பழனியப்பன் சொக மில்லாத தாயே பாக்க வந்தா எனக்கு என்னத்துக் பத்துச்சீட்டுங்க?"

'பேச வேண்டாம் மன்சன்'

துரை சொல்வதை மறுத்து, தன் பக்க நியாயத்தை வலியுறுத்தும் தொழிலாளியின் குரல் எப்போதுமே துரைத்தனத்திற்கு எரிச்சலூட்டுவது; அச்சந்தருவது. எதிராளியின் வாயை என்றென்றைக்குமாக மூடிவிடுவதே உகந்தது.

Silent - பேசாமல் இரு. வாய் மூடு. வாய் பொத்து என்று துரைமாருக்கு இந்தத் தமிழ்ப்போதினி நிறைய உதவுகிறது.

Here என்பதற்கு இங்கே, இஞ்சை, இவ்விடம், இங்காட்டி, இங்காலே என்ற தமிழ்ப் பதங்கள் இந்நூலில் பாவிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் வழக்கில் இங்காலே" என்ற பதம் பாவிக்கப்படுவதில்லை. இது யாழ்ப்பாணத்தில் பயிலும் வழக்காகும்.

அதேபோல், "கொஞ்சமெண்டாலும் குடிக்க இல்லே’ என்பதிலும் யாழ்ப்பாண வழக்கு பிரதிபலிக்கிறது. "கொஞ்சோண்டு", "கொஞ்சமும்", "கொஞ்சுனூன்டு’ ஆகிய பதங்களே தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பயிலும் வழக்காகும்.

இங்கே வா!" என்ற இந்நூலின் தயாரிப்பில் அநாமதேயமாக இருக்க விரும் பிய பெரும் மொழியியல் நண்பர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் பரிச்சய முள்ளவராயிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.

"(தமிழில்) பேச்சுவிதிகள் என்று மிக அரிதாகவே காணப்படுகிறது. தோட்டத் துரைமாருக்கு (கிறீப்பருக்கு) இதுகாலவரை வெளியானதில் மிகவும் பயனுள்ள நூலான இ. மார்ஷ் ஸ்மித்தின் இங்கே வா!' என்ற நூல் மலைக்காட்டில் பாவிக்கப்படும் வாக்கியங்களைப் பெருமளவில் உதாரணங்களாகக் காட்டும் சொற்றொகுதி வடிவிலேயே அமைந்துள்ளது” என்று ஹரி வில்லியம்ஸ் குறிப் பிடுகிறார். (20)

ஹரி வில்லியம்ஸின் கூற்றிலே தவறுள்ளது. இங்கே வா!" என்ற நூலை ஆக்கியவர் இ. மார்ஷ் ஸ்மித் என்று பிழையாக எழுதியிருக்கிறார். அந்நூலை ஆக்கியவர் எம்.எம். பேர்குஸன் (ஜூனியர்) ஆவார். மார்ஷ் ஸ்மித் எழுதிய "கூலித் தமிழ் அகராதி, கொழும்பு டைம்ஸ் ஒப் சிலோன் வெளியீடாக அறிவு (Arivu) என்ற தலைப்பிலேயே வெளியானது. இந்நூலின் முதற்பதிப்பு அனைத்துமே விற்று முடிந்துபோனதாக டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகை விளம்பரமொன்று தெரிவிக்கிறது. (21)


அடிக்குறிப்புகள் :

15. Aberdeen Press and journal, 23 November 1938
16. A.M. Ferguson. 1892. "INGE VÄ!"or, The Sinna Dorai's Pocket Tamil Guide. Colombo: A.M.and J. Ferguson.
17. 'James C. Scott. 1987. Weapons of the weak. Everyday Forms of Peasant Resistance. New Haven: Yale University Press.
18. Valentine E. Daniel. 1993. Tea Talk: Violent Measures in the Discourse of Sri Lanka's Estate
19. ஸி.வி. வேலுப்பிள்ளை. 1981. வீடற்றவன், யாழ்ப்பாணம் வைகறை.
20. Harry Williams. 1956. Ceylon - Pearl of the East. London: Robert Hale.
21. Times of Ceylon, 26 March 1925.


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates