Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“Order Please…!” - இலங்கையின் “கதாநாயகர்கள்” - என்.சரவணன்


இன்றைய அரசியல் களத்தில் பாராளுமன்ற சபாநாயகர் பற்றி நிறையவே உரையாடப்பட்டுவருகிறது. குறிப்பாக தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய மீது ஆளும் மகிந்த தரப்பு; அவர் பக்கச்சார்பானவர் என்று பிரச்சாரம் செய்து வருவதுடன் அவரை தனிப்பட தாக்கிவருகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் இந்தளவு பேசுபொருளான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

சபையை நடத்தவிடாத படி சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து சேதப்படுத்தி, அங்கிருந்த அவரது ஆவணங்களையும், உபகரங்களையும் சேதப்படுத்தி, அவரை சபைக்குள் வரவிடாதபடி தடுத்தனர். அதையும் மீறி அவர் தனது கடமையை செய்ய பொலிஸ் பாதுகாப்பு சூழ தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தபடி வந்து வேறொரு ஆசனத்தில் இருந்தபடி சபையை நடத்துமளவுக்கு சம்பவங்கள் அரங்கேறின. இலங்கை ஆசியாவிலேயே மூத்த பாராளுமன்ற மரபைக் கொண்ட நாடு. ஆசியாவில் பல நாடுகள் வாக்குரிமை பெற்றிராத காலத்தில் இலங்கை 1931இலேயே ஆணுக்கும் பெண்ணுக்குமான சர்வஜன வாக்குரிமையைப் பெற்று வெகுஜன தேர்தல் முறைக்கு முன்னோடியாக ஆன மூத்த நாடு.

அந்த எடுத்துக்காட்டுக்கு உலக அளவில் மரியாதை உள்ள நாடும் கூட. அப்பேர்பட்ட பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல்கள் ஆங்காங்கு நமது வரலாற்றில் நிகழத்தான் செய்திருக்கின்றன. ஆனால் உலகே பரிகசிக்கும் வகையிலான உச்சமான சம்பவங்கள் தான் இந்த மாதம் அரங்கேறின. சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்றத்துக்கு வெளியில் மாத்திரமன்றி சபைக்குள்ளேயே மோசமான அவதூற்றுச் சொல்களால் தாக்குவதை வீடியோ பதிவுகள் உறுதிசெய்துள்ளன. சபாநாயகர் என்பவர் சபையை நடத்தும் தலைவர் மாத்திரமல்ல. அப்பதவி  நாட்டின் ஒரு உயர் கௌரவத்துக்கு உரிய பதவி.

மொலமூறே முதல்
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947ஆம் ஆண்டு நடத்தப்பட்டு அதன் பிரகாரம் உருவான பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமூரே.

தமிழில் சபாநாயகர் என்று அழைக்கப்படுவதை சிங்களத்தில் “கதாநாயக” என்றே அழைப்பார்கள். ஒரு வகையில் இப்பதவியை “பாராளுமன்றத்தின் கதாநாயகர்” என்று சொன்னால் அது மிகையில்லை தான்.

சேர் அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே பிரித்தானிய இலங்கையில் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபைத்தேர்தலில் தெடிகம தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அவையின் முதல்வராக தெரிவானவர். சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உருவான பிரதிநிதிகள் சபையில் சபாநாயகராக தெரிவானார். அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகராகராக தெரிவானபோதும் பதவிக்காலம் முடியுமுன் அவர் 1951இல் இறந்துபோனார்.

டொனமூர் காலத்தில் பெண்களின் வாக்குரிமைக்காக குரல் கொடுத்த சொற்பத் தலைவர்களில் இவரும் ஒருவர். அவரது மனைவி அடலின் மீதெனிய மொலமூரே தனது தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து ருவன்வெல்ல தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கை  அரசாங்க சபையின் முதலாவது பெண் உறுப்பினர்.

இரண்டாவது உலக யுத்தம் காரணமாக பல வருடங்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னர் 1947இல் தான் மறு தேர்தல் நடத்தப்பட்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான டீ.எஸ்.சேனநாயக்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கப்பட்டது.

1947இல் பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சி தரப்பில் அன்றைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் ஸ்ரீ நிஷ்ஷங்க மொலமூறேவுக்கு எதிராக சபாநாயகர் ஆசனத்துக்கு போட்டியிட்டார். இறுதியில் மொலமூரே அதிக வாக்குகளுடன் தெரிவானார்.

மொலமூரே காலத்தில் சபையில் நிகழ்ந்த பல சுவாசியமான சம்பவங்கள் உள்ளன.

ஒருமுறை தண்டகமுவே தொகுதி உறிப்பினர் I.M.R.A.ஈரியகொல்ல பாராளுமன்றத்தில் தனது பேச்சின் போது எதிர்த் தரப்பிலிருந்த அரசாங்க உறுப்பினர்களைப் பார்த்து “எனக்கு இந்த சேனாக்களும், புக்குசாக்களும், தேவிந்தலாக்களின் மீதும் நம்பிக்கை கிடையாது” என்று கூறிவிட்டார். ஈரியகொல்ல சபையில் தூசனம் பேசிவிட்டார் என்று கூறி சபாநாயகர் மொலமூரே அவரை சபையை விட்டு வெளியேற்ரும் அறிவித்தலைச் செய்தார்.

ஈரியகொல்ல உடனடியாகச் ஓடிச்சென்று அங்கிருந்த பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர்களின் பொறுப்பாளரை சந்தித்து தனது வசனத்தை விளங்கப்படுத்தி சபாநாயகருக்கு அதனை விளங்கப்படுத்தும் படி வேண்டினார்.

அவர் சபாநாயகருக்கு விளக்கத்தை அளித்தார். சிங்கள இலக்கியங்களில் வந்த ஒரு அரச அவையில் இருந்த புலவர்களின் பெயர்களே அவை என்றும் அது அவதூறுக்குரிய சொல் அல்ல என்றும் விளக்கினார்.

தான் தெரியாமல் செய்த தவறுக்கு வருந்துவதாகக் கூறி ஈரியகொல்லவிடம் மன்னிப்பு கோரினார் மொலமூரே. அதன் பின்னர் தனக்கு தெரியாத சொற்களை மொழிபெயர்ப்புப் பிரிவினரிடம் கேட்டு விளக்கம் பெரும் வழிமுறையை அவர் கைக்கொண்டார். தனது மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்ள அவர் பல இலக்கியப் புலவர்களுடன் நெருங்கிய தொடர்பையும் நட்பையும் பேணி வந்தார். இலக்கியவாதிகளை அழைத்து விருந்துகொடுத்து மகிழ்ந்தார்.

ஒரு முறை பாராளுமன்றத்தில் சபையை நடத்திக்கொண்டிருக்கும் போதே அவருக்கு ஏற்பட்ட நெஞ்சடைப்பினால் அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இரண்டாவது நாள் காலமானார்.


மொலமூறேவுக்குப் பின்னர் சபாநாயகர் பதவியில் இருந்தவர்கள்
  • எல்பர்ட் எப்.பீரிஸ்
  • ஹமீட் ஹுசைன் ஷேக்
  • டிகிரி பண்டார சுபசிங்க
  • ஆர்.எஸ்.பெல்பொல
  • ஸ்டான்லி திலகரத்ன
  • ஹியு பெர்னாண்டோ
  • ஷேர்லி கொறயா
  • ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ்
  • பாக்கீர் மாக்கார்
  • ஈ.எல்.சேனநாயக்க
  • எம்.எச்.மொஹமட்
  • கிரி பண்டார ரத்னாயக்க
  • அனுரா பண்டாரநாயக்க
  • ஜோசப் மைக்கல் பெரேரா
  • வி.ஜே.மு.லொக்குபண்டார
  • சமல் ராஜபக்ஷ
  • கரு ஜயசூரிய
இருபது வருடகாலமாக இலங்கையின் முக்கிய அமைச்சுப் பதவிகள் இரண்டை வகித்த சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர (இலங்கையின் சுதந்திரக் கல்வியின் தந்தை) தனது இறுதிக்காலத்தில் வறுமையில் காலம் தள்ளினார். இறுதியில் இயலாத நிலையில் அவர் அன்றைய சபாநாயகர் பெல்போலவிடம் “நான் எனது இறுதிக் காலத்தில் இருக்கிறேன். மிகவும் நலிந்த நிலையில் இருக்கிறேன். எஞ்சிய காலத்தைக் கழிக்க எனக்கு பிச்சை சம்பளமாவது போடுங்கள்” என்று எழுதினார். அப்போது அவரின் சிஷ்யனான சேர் ஒலிவர் குணதிலக்க ஆளுநராக இருந்த காலம். ஏதோ காரணங்களால் கன்னங்கரா ஓரங்கட்டப்பட்டு பழிவாங்கப்பட்டிருந்ததாக சில சிங்களக் கட்டுரைகளில் கூறப்படுகிறது.

பாக்கீர் மாக்கார் சபாநாயகராக பதவி வகித்த போது “எனது ஒரு கையில் அல் – குர் ஆன் இருக்கிறது. மறு கையில் தம்மபதம் இருக்கிறது. அவற்றின்படியே நான் ஒழுகுவேன்” என்றார். 1983 கலவரத்தைத் தொடர்ந்து அதே யூலையில் நிகழ்ந்த பாராளுமன்றக் கூட்டத்தில் அக்கலவரத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான சிறில் மெத்தியூவின் இனவாத பரப்புரைக்கு எதிராக “இந்தப் பொய் பிரச்சாரங்களுக்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது” என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் குறுக்கிட்டார். ஆனால் பாக்கீர் மாக்கார் (ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்) அவரைப் பேசவிடாது மெத்தியூவை இனவாதம் காக்க அனுமதித்தார் என்கிற குற்றச்சாட்டு  அன்று எழுந்திருந்தது.

சுதந்தரத்திற்குப் பின்னரான இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்று வரை தமிழர் எவரும் சபாநாயகராக தெரிவானது கிடையாது. சுதந்திரத்திற்கு முன்னர் அரசாங்க சபையில் 1936-1947 வரையான காலப்பகுதியில் வைத்திலிங்கம் துரைசுவாமி சபாநாயகராக பதவி வகித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் குறைந்த குறைய பேசி, நிறைய கடமைகளை நிறைவேற்றுபவர் சபாநாயகர். இலங்கையின் முதலாவது பிரஜையாக ஜனாதிபதி அழைக்கப்படுகிறார். இரண்டாவது பிரஜையாக பிரதமர் அழைக்கப்படுகிறார். மூன்றாவது பிரஜையாக அழைக்கப்படுபவர் பாராளுமன்ற சபாநாயகர். இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி இழக்கும், துறக்கும் காலப்பகுதியில் அடுத்த ஜனாதிபதி தெரிவாகும் வரை சபாநாயகரே ஜனாதிபதியாக இருப்பார்.

சபாநாயகர்களை “கதாநாயகர்களாக” கௌரவித்து ஒழுகும் பாராளுமன்ற சம்பிரதாயம் எப்போது முடிவுக்கு வருகிறதோ அன்று பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஜனநாயகத்துக்கு சரிவு தான் எஞ்சும்.



"இறுதியில் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்... !?" - என்.சரவணன்


தோழர்களே!

கடந்த சனியன்று (24) என்னைத் தேடி பொலிஸ் குழுவொன்று கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நடு ராத்திரி 1.30 மணியளவில் சென்றுள்ளது. முதலில் அவர்கள் வீட்டுக்கதவை பெரும் சத்தத்துடன் தட்டியதில் எனது தாயார் பீதியுடன் யார் என்று கேட்டிருக்கிறார். நாங்கள் போலீசில் இருந்து வந்திருக்கிறோம் என்று சத்தம் வந்திருக்கிறது. வந்தவர்கள் மூவர். முன்னால் வந்து விசாரித்துக்கொண்டிருந்தவர் அவர் அணிந்திருந்த நட்சத்திரங்களும், அதிகளவு பெட்ஜ்களும் அவர் ஒரு உயர் அதிகாரி என்பதை உணர்ந்துகொண்டதாக அம்மா கூறினார்.

அம்மா பீதியுடன் சென்று கதவைத் திறந்திருக்கிறார்.

“இது சரவணனின் வீடு தானே... ஆளைக் கூப்பிடுங்கள்.." என்று கேட்டிருக்கிறார்கள்.

“அவர் இங்கே இல்லை” என்று அம்மா கூறியிருக்கிறார்

“அப்படியென்றால் எங்கே” என்று இன்னொரு போலீஸ்காரர் கேட்டிருக்கிறார்

“வெளிநாட்டில்” என்றிருக்கிறார் அம்மா

“வெளிநாட்டில் எங்கே” என்று மீண்டும் பொலிஸ்காரர் வினவ

“நோர்வேயில்” என்று கூறியிருக்கிறார்.

தூசனத்தால் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதிகாலை எனக்கு எனது தங்கையிடம் இருந்த தொலைபேசி அழைப்பு வந்தது. இவர்கள் வந்ததற்கான காரணங்கள் ஏதும் எனக்குப் புலப்படுகிறதா என்று கேட்டாள். உறுதியாக சொல்லமுடியவில்லை என்றேன். நிலைமை குறித்து சற்று சீரியஸாக உரையாடிக்கொண்டோம். வந்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சுய அறிமுகம் செய்யும் மரபு எங்கே நம் நாட்டுப் பொலிசாரிடம் இருந்திருக்கிறது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும் துணிச்சல் தான் மக்களுக்கு - குறிப்பாக தமிழர்களுக்கு எங்கு இருந்திருகிறது?

ஒரு பொலிஸ் முறைப்பாட்டை செய்வதன் மூலம் மேலதிகமாக அறிந்துகொள்வதற்கும், தற்காப்புக்கும் உதவலாம் என்கிற முடிவுக்கு வந்தோம். அதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்தோம். வழக்கறிஞரும் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான தோழர் ஜனரஞ்சனவோடு உரையாடிதன் பின் எமது பகுதி பொலிஸ் நிலையத்துக்கு அம்மாவும் தங்கையும் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.

தங்கையும் ஊடக நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றிவருபவர், ஒரு சமாதான நீதவானும் கூட அந்த அறிமுகத்துடன், எனது ஊடகப் பின்னணியையும் கூறித் தான் அவர்களை மரியாதையுடன் நடக்கச் செய்ய வேண்டியிருந்திருக்கிறது.

பதிவுகளைப் பார்த்துவிட்டு கோட்டை 911இல் இருந்து வந்தவர்களா என்றும் பார்க்கவேண்டும் என்று அந்த போலீஸ்காரர் கூறிக்கொண்டிருக்க, நள்ளிரவு வந்தவர்களில் ஒருவரை அங்கு அம்மா அடையாளம் கண்டிருக்கிறார். 

அதெப்படி போலிசார் வந்து விசாரித்ததை முறையிடமுடியும் என்றெல்லாம் வம்பு பண்ணியிருக்கிறார் அந்த பொலிசார்.

"ஏன் வந்தீர்கள்.." என்று அம்மா கேட்டதற்கு நான் தான் (சரவணன்) தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டில் பிரச்சினை என்று கூறி அழைத்தேனாம்.

சரி...  அது அனாமதேய தொலைபேசி அழைப்பாக நாம் கருதிக்கொண்டால் கூட,

ஒரு வீட்டில் பிரச்சினை என்றதும் அந்தளவு வேகமாக வந்து தீர்க்கும் அளவுக்கு அந்தளவு நல்லவனாடா நீங்கள்... அதுவும் பெரிய அதிகாரிகளுடன். அமைதியான இருட்டுச்  சூழலில் இருந்த வீட்டின் கதவை உடைப்பது போல ஏன் தட்டினீர்கள்? ஏன் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை? ஏன் எனது தாயை தூசனத்தால் திட்டினீர்கள்?

தங்கை அவர்களிடம் “அப்படி அண்ணா தொலைபேசியில் அழைத்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாவுடன் நாங்கள் கதைத்தோம் அப்படி அவர் யாருக்கும் தொலைபேசி அழைக்கவில்லை” என்றும் தங்கை விளக்கியிருக்கிறார்.

இந்த உரையாடல்; இறுதியில் உத்தியோகபூர்வமாகத்தான் வந்தோம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று முறைப்பாடின்றி கலைக்கப்பட்டிருக்கிறது.

நேரடியாக என்னைத் தூக்க வந்தவர்களா? அல்லது குடும்பத்தை மிரட்டி பீதிக்குள் வைத்திருக்க எடுக்கப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை.

இந்த இடைவெளிக்குள் எனது பத்திரிகைத் தோழர்களுக்கும், மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சில சிங்களத் தோழர்களுடன் உரையாடி அவர்களினதும் ஆலோசனைகளை பெற்றேன். அவர்களை சற்று Alert பண்ணினேன். ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுபோனார் ஒரு தோழர்.

ஒரு தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நட்பு பூர்வமாக இதனை தெரிவிக்க முயற்சித்தேன் அவரசமாக தொடர்புகொள்ளும்படியும் வேண்டியிருந்தேன். ஆனால் அவர் ஏனோ இந்த நிமிடம் வரை திருப்பி தொடர்புகொள்ளவில்லை.

2014 ஆம் ஆண்டு (கோட்டபாயவின் அட்டகாசம் தலைதூக்கியிருந்த நேரத்தில்) இலங்கைக்கு சென்றிருந்த போது கோட்டை பொலிசில் இருந்து வந்ததாகக் கூறி சிவில் உடை தரித்த புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தேடி வந்தார். என்னைப் பற்றி நிறைய விசாரித்துவிட்டுச் சென்றார். அப்போதும் உடனடியாக அரசியல் பிரமுகர்களாக இருந்த முக்கிய சிங்களத் தோழர்களுக்கு விடயத்தை தெரிவித்தேன். என்னை உடனடியாக நாட்டை விட்டு போகும்படி ஆலோசனை கூறினார்கள். தற்போதைய நிலைமை சரியில்லை என்றும் நான் நோர்வே திரும்பும்வரை எனது வீட்டில் - குறிப்பாக இரவு நேரங்களில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடக பயிற்சிநெறியையும் கைவிட்டோம்.

அன்றே நான் கொழும்பை விட்டு வெளியேறி குற்றவாளியைப் போல வேறு இடங்களுக்கு ஒளிந்து திரிய நேரிட்டது. என்னுடன் பாதுகாப்புக்காக எனது உறவினர்கள் இருவர் வந்தார்கள். எனது தொலைபேசி சிம் கார்டை மாற்றிவிட்டு இருவரைத் தவிர வேறெவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். ஒன்றரை வயதுடைய கைக்குழந்தையுடன் இருந்த எனது மனைவிக்கும் கூட உண்மை நிலைமையைப் பற்றிக் கூறவில்லை. ஒரு பயணம் சென்று வருவதாக மட்டும் கூறிவிட்டுக் கிளம்பினேன். என் மனைவி என் விடயத்தில் அதிகம் பயப்படுபவர். பின்னர் நோர்வே வந்ததன் பின்னர் தான் நடந்ததைக் கூறினேன்.

2012 ஆம் ஆண்டு நான் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சென்றிருந்த வேளை என்னைப் பற்றி திவயின சிங்களப் பத்திரிகையின் பாதுகாப்பு பத்தியில் வெளிவந்த தகவல்களால் (பொய்ப் புரளிகளால்) எனது துணைவியும் குடும்பமும் கலக்கமடைந்திருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்கள் இலங்கை செல்கின்ற வேளைகளில் துணைக்கு ஆளில்லாமல் என்னை என் குடும்பத்தவர்கள் வெளியில் அனுப்புவதில்லை.

சில வேளைகளில் இந்த சம்பவங்கள் பற்றிய அனுமானங்கள் மிகையானதாக இருக்குமோ என்று தோணலாம். இப்பேர்பட்ட அலட்சியங்களால் தான் நம் சக தோழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள். எனவே இன்னும் திட்டமிடப்பட்ட கொஞ்சம் பணிகள் இருக்கின்றன அதுவரை விட்டுவையுங்களேன். வாழ விடுங்களேன்.


1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி! - என்.சரவணன்


இப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ ரீதியிலான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியொன்று நிகழ்ந்தது. அது ஒரு தோல்வியுற்ற புரட்சியாக இருந்தாலும் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்னும் நினைவு கொள்ளப்படுகிறது.

S.W.R.D.பண்டாரநாயக்க சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் சிறிமாவோ பண்டாராநாயக்க பிரதமரானார். அவரும் 1962இலும், 1971இலும் இரண்டு தடவைகள் அரச கவிழ்ப்புப் புரட்சிக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

முன்னர் வருடாந்த ஆரம்பத்தில் நிகழும் முதல் பாராளுமன்ற கூட்டத்தில் அரசின் இலக்குகளையும், கொள்கைகளையும் அறிவிக்கும் சிம்மாசனப் பிரசங்கம் ஆளுனரால் நிகழ்த்தப்படும் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மரபும் கைக்கொள்ளப்பட்டது.

அன்றைய சுதந்திரக் கட்சியின் உபதலைவராக இருந்தவர் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய தொகுதி உறுப்பினர் சீ.பீ.டி சில்வா. அவரின் தலைமையிலான நால்வர் கொண்ட கும்பல் இரகசியமாக சதி செய்து 03.12.1964 அன்று எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து அந்த சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்தனர். அப்போதைய அரசியல் களத்தில் இந்த நிகழ்வு “முதுகில் குத்துதல்” என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டது.

சபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான். ஆனால் 1962 சதி சற்று வித்தியாசமானது. அது இராணுவச் சதி முயற்சி.

அதிருப்தியுற்ற கிறிஸ்தவர்களின் கிளர்ச்சி?
1960ஆம் ஆண்டு பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சி 18 மாதங்கள் கூட நிறைவுறாத நிலையிலேயே 1962இல் அவரின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான கூட்டுச்சதி நடந்தது.

27.01.1962 அன்று கிறிஸ்த்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சியை இராணுவ பலத்துடன் கவிழ்க்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்த முயற்சி திட்டமிடப்பட்ட இரவன்று; புரட்சி முன்னெடுக்கப்படும் முன்னரேயே முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

1956 ஆம் ஆண்டு பண்டாராநாயக்காவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள – பௌத்தர்கள் அல்லாத அனைத்து சிறுபான்மை இனங்களும் மதங்களும் தான். இத்தனைக்கும் பண்டாரநாயக்கா ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தில் இருந்து பௌத்தத்திற்கு மதம் மாறியவர். பண்டாரநாயக்க தன்னை ஒரு சிறந்த சிங்கள – பௌத்தனாக வெளிக்காட்டுவதற்காக அதிக விலையைக் கொடுக்க தயாராக இருந்தார். அதுவே 1956இல் நிகழ்ந்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மாற்றம். அப்படியிருந்தும் சிங்கள பௌத்த சக்திகள் அவரின் செயற்பாடுகளில் போதாமையைத் தான் கண்டன. அவரது ஆட்சியில் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அவருக்கெதிரான சதி முயற்சிகள் பின்னப்பட்டன. அந்த சதியின் இறுதியில் அவர் பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் படிப்படியாக கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்துகொண்டே போன நிலையில் 1956 ஆட்சிமாற்றத்தால் மேலும் கிறிஸ்தவர்கள் தம்மீதான புறக்கணிப்பை உணரத் தொடங்கினர்.

அப்போது இராணுவ உயர் பதவிகளில் ஐந்தில் மூன்று பங்கு கிறிஸ்தவர்களும், ஐந்தில் ஒன்று தமிழரும், ஐந்தில் ஒன்று பரங்கியரும் இருந்த நிலையை பண்டாரநாயக்கா மாற்றி அமைத்தார். பௌத்த சிங்கள அதிகாரிகளை நியமித்தார். மூன்று கிறித்தவ உயர் அதிகாரிகள் பணியில் இருந்த போதிலும், ஒரு பௌத்தரை காவல்துறை மா அதிகாரியாக நியமித்தார்.

1961 அளவில் தாம் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாக கருதிய உயர்குடி கிறித்தவர்கள் மனதில் மனக்கசப்பு மேலிட்டிருந்தது. இலங்கை அரசு சிறுபான்மையின கத்தோலிக்கப் பாடசாலைகளை அரசமயப்படுத்தியது. அதே வேளையில் சில உயர்குடி ஆங்கிலிக்கப் பாடசாலைகளை அவர்கள் விட்டு வைத்தனர். இந்நிலையில் பல கிறிஸ்த்தவர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். உயர் உத்தியோகத்தில் இருந்த ஆங்கிலம் கற்ற கணிசமானோரும் இப்படி இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். நாட்டின் வளர்ச்சியிலும் இது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவே செய்தன.  உள்ளூர் கிறிஸ்தவர்களின் அதிருப்தி தலைதூக்கத்தொடங்கியிருந்தது.

இதே காலப்பகுதியில் பாகிஸ்தானில் இராணுவத் தலைவர் அயூப் கான் நடத்திய இராணுவப் புரட்சி இத்தகைய அதிருப்தியாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. 

"வன்பிடி நடவடிக்கை"
இந்த இராணுவப் புரட்சிக்கு "வன்பிடி நடவடிக்கை" (Operation Holdfast) எனப் பெயரிடப்பட்டது. பிரதமர் சிறிமா, அமைச்சர்கள், பாதுகாப்புக்கான நாடாளுமன்றச் செயலர் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா), இராணுவத் தளபதி, கடற்படையின் பதில் தளபதி, காவல்துறை உயர் அதிகாரி, புலனாய்வுத்துறை உயர் அதிகாரி (ஜோன் ஆட்டிகலை) ஆகியோரைக் கைது செய்து இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் (இந்த இராணுவக் களஞ்சியம் காலிமுகத்திடலுக்கடியில் ஒரு பாரிய கொங்கிரீட் பங்கர் போன்று இருந்தது.) சிறை வைப்பதே பிரதான நடவடிக்கையாக திட்டமிட்டிருந்தனர்.

அதை விட கொழும்பு நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், தொலைதொடர்புச் சேவை, வானொலிச் சேவை என்பவற்றையும் கையகப்படுத்தவேண்டும் என்றும் திட்டமிட்டனர். 

அப்போது கதிர்காமத்தில் விழாவொன்றுக்கு குடும்பத்துடன் செல்லவிருந்த பிரதமர் சிறிமாவை இடைநடுவில் குடும்பத்துடன் சிறைபிடிப்பதும் பின்  அவரின் மூலம் ஆட்சிமாற்றம் செய்யப்பட்டதாக கடிதம் ஒன்றைப் பெற்று ஆளுநர் ஒலிவர் குணதிலகவுக்கு ஊடாக அரசு கலைக்கப்பட்டதை ரேடியோ மூலம் நாடு முழுவதும் அறிவிப்பது என்று திட்டமிட்டனர். அதேவேளை அந்த ஆட்சிக்கவிழ்ப்பை “ஒரு துளி இரத்தமும் சிந்தாமல்" நடத்தி முடிக்கவேண்டும் என்றும் எண்ணினர்.

ஸ்டேன்லி சேனநாயக்க என்கிற பொலிஸ் அதிகாரி ஒருவர் மாத்திரம் தான் இந்த சதிக்கும்பலில் இருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்தர். இந்த சதிமுயற்சி பற்றிய செய்தியும் இவரால் தான் கசிந்தது.

கசிந்த தகவல்
இப்படி ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நிகழப்போகிறது என்றும் அதன் பின்னர் தனக்கு பொலீசில் மிகப் பெரும் பதவியுயர்வு கிடைக்கவிருப்பதையும் அவர் தனது மனைவிக்கு தெரிவித்திருக்கிறார். ஸ்டான்லியின் மனைவி சிறிமாவுக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினரான பீ.த.எஸ்.குலரத்னவின் மகள். மகள் தனது தந்தைக்கு இந்த இரகசியத்தை பட்டும்படாமலும் அறிவித்திருக்கிறார். குலரத்னவின் மூலம் இந்தத் தகவல் பிரதமர் சிறிமாவைச் சென்றடைந்தது. அந்தத் தகவல் கிடைக்கும்போது சம்பவம் நிகழ ஒரு சில மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இருந்தன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ் அதிபர் எஸ்.ஏ.திசாநாயக்க சதியில் சம்பந்தப்பட்டவர்களோடு நட்புகொண்டு தகவல் திரட்டியிருந்தார். அவர் பொலிஸ் அதிகாரி ஜோன் ஆட்டிகலவையும் அழைத்துக்கொண்டு பிரதமர் சிறிமாவை சந்தித்து நிலைமையை விபரித்தார். 

உடனடியாகவே அரசாங்கத்திற்கு விசுவாசமான பொலிஸ், முப்படை அதிகாரிகளை அழைத்து சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது பம்பலபிட்டியில் இருந்த ஆயுதக் களஞ்சியச்சாலையை சீல் வைத்து மூடி எந்த ஆயுதங்களும் அங்கிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான வழிகளும் நிறுத்தப்பட்டன. அதுபோல பொலிஸ் மா அதிபரின் ஆணையைத் தவிர வேறெந்த அதிகாரிகளினதும் ஆணையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாட்டில் சகல இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு வேகமாக அறிவிக்கப்பட்டது.


அரசுக்கு உறுதியாக விசுவாசமான பாதுகாப்பு அதிகாரிகளாக கருதப்பட்ட கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் (லக்ஷ்மன் கதிர்காமரின் மூத்த சகோதரர்), இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விஜேகோன், விமானப்படைத் தளபதி பாக்கர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதமர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

அலரி மாளிகைக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டதுடன் ஜனவரி 27 அன்று வானொலிச் சேவையும் நிறுத்தப்பட்டது. பிரதமர் சிறிமாவை ரோஸ்மீட் பிளேசிலிருந்த அவரது இல்லத்திலிருந்து அலரி மாளிகைக்கு யுத்த டாங்கிகள் சகிதம் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அலரி மாளிகையைச் சூழ யுத்த டாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்திருந்தன. இரவு பொலிஸ் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் எவரும் வெளிய வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை முற்றிலும் விசாரணை செய்யும்படி அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதம் சிறிமா. அவர் இந்த சதியோடு தொடர்புடையவர்கள் என்று சதேகப்பட்ட பலரைக் கைது செய்து அலரி மாளிகைக்கு அழைத்துவந்து அவரே விசாரணை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். குறுகியநேர விசாரணையின் பின்னர் அவர்கள் அருகில் இருந்த ஆயுதக் களஞ்சிய சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பிரதான பொலிஸ் தலைமையகங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த விபரங்கள் எதுவும் நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்கள் உறக்கத்தில் இருந்த வேளை இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் பெரும்பாலான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன.

பிரதான சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.சீ.தஹாநாயக்க அலரி மாளிகைக்கு கொண்டுவரப்பட்டார். உதவிப் பொலிஸ் புலனாய்வாளரான எஸ்.ஜோன் புள்ளேயின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சிறைசெய்யப்பட்டார்.

இந்த சதி பற்றி அரை நூற்றாண்டு காலம் சிவில் சேவையில் கொடிகட்டிப்பறந்த மூத்த அறிஞரான பிரட்மன் வீரக்கோன் (அப்போது பிரதமரின் செயலாளராகவும் இருந்தவர்) “அலரி மாளிகையின் நாடித்துடிப்பு” என்கிற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அதில் இந்த சதி முயற்சி பற்றிய அவரது நேரடி அனுபவங்களையும் விபரிக்கிறார்.

“...இளம் அதிகாரிகள் மன்னிப்பை எதிர்பார்த்தபடி ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர். அதன் மூலம் தான் பல உண்மைகள் வெளியாகின. பீலிக்ஸ் அலரி மாளிகையின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்தார். நீல நிற கடற்படை சீருடையில் கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் பாதுகாப்பு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே தானியங்கி துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு அந்த தாழ்வாரப்பகுதியில் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்ததை நான் கவனித்தேன். இந்த சதிக்குள் உள்ளவர் யார்? வெளியில் இருப்பவர் யார்? என்று குழம்பிப் போய் இருந்தார்.” என்கிறார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்றது பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் வேகமாகவே அறிந்துகொண்டார்கள். தாம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டதையும் உணர்ந்தார்கள். அந்த சதியில் சம்பந்தப்பட்ட; இராணுவத்தில் கெப்டன் தரத்தில் இருந்த போலியர் என்கிற இளைஞர் தனது ரிவோல்வரை எடுத்து தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியும் பதிவானது.

மொத்தம் 31பேர் கைது செய்யப்பட்டு நீதி விசாரணை நடத்தப்படுவரை வெலிக்கடையில் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

விடுதலை செய்த பிரித்தானிய சட்டம்
பீரங்கிப்படையைச் சேர்ந்த கேர்னல் பெட்ரிக் த சேரம், பிரதிப் பொலிஸ் மா அதிபர். சீ.சீ.தஹானாயக்க, இராணுவ நடவடிக்கைச் சபையின் தலைவர் கேர்னல் மொரிஸ் த மெல், ரியல் அட்மிரல் ரொயிஸ் த மெல், இலங்கை சிவில் சேவையில் இருந்த டக்ளஸ் லியனகே போன்றோர் உள்ளிட்ட 29 பேர் இந்த சதியின் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

அதுவரை காலம் இலங்கையில் ஒரு இராணுவச் சதிக்கான தண்டனை குறித்த எந்த சட்டங்களும் முறையாக இருக்கவில்லை. எனவே 1962 ஆம் ஆண்டின் இலக்கம் 1 என்கிற விசேட சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றித் தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

அதன்படி பிரதான சதிச் சூத்திரதாரிகள் அனைவரினதும் சொத்துக்களை அரசு சுவீகரித்ததுடன் அவர்களுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் அன்று இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக இருந்த பிரித்தானிய பிரிவுக்கவுன்சிலுக்கு குற்றவாளிகள் மேன்முறையீடு செய்தனர். ஒரு குற்றம் நிகழ்ந்ததன் பின்னர் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தால் தண்டிப்பது என்பது அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதாவது இலங்கை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பிரித்தானிய சட்டத்தால் விடுவிக்கப்பட்டனர்.

சதியில் அரசியல் தலைவர்களும்...
ஒப்புதல் வாக்குமூலங்களின் போது கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவுடன் தான் இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. அதன்படி ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க, முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோர் மீது அரசாங்கத் தரப்பு பழிசுமத்தியது. பெப்ரவரி 12, 13 ஆகிய தினங்களில் இந்த சதி பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடந்தபோது பீலிக்ஸ் டயஸ் பகிரங்கமாக அவர்கள் தான் சதியின் பிரதான சூத்திரதாரிகள் என்று குற்றம்சுமத்தினார். ஆனால் அதனை நிரூபிப்பதற்கு அவர்களால் முடியாதிருந்தது. நீதிமன்ற  விசாரணைகளிலும் அவர்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவத்தின் பின் ஆளுனர் ஒலிவர் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். அவரது இடத்துக்கு அன்றைய ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவராக இருந்தவரும் சிறிமாவின் மாமனாருமான வில்லியம் கொப்பல்லாவ நியமிக்கப்பட்டார்.

இந்த சதி பற்றிய சுவாரஸ்யமான இரகசியங்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சுயசரிதை நூலில் (J.R. Jayewardene of Sri Lanka: A Political Biography - from 1956 to His Retirement 1995 by K. M. De Silva (Author), Howard Wriggins) முக்கிய குறிப்புகளைக் காண முடிகிறது. 1966ஆம் ஆண்டு புத்தாண்டின் நிமித்தம் இரத்மலானையிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டுக்கு அவரை சந்திக்கச் சென்றிந்தபோது தான் முதற் தடவையாக அவரும் (கொத்தலாவல) டட்லி சேனநாயக்காவும் அந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஜே.ஆர். அறிந்துகொண்டார். 

ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு முன்னைய நாளான 26 அன்று சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டில் சதிக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இந்த விபரங்களை ஜே.ஆர். வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் சினம் கொண்டார்கள் என்று அந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. (மேற்படி நூலாசிரியர் ஜே.ஆருடன் 15.10.1979அன்று நடத்திய உரையாடலில் இருந்து)
“...சதித்திட்டத்துக்கான கூட்டங்கள் டட்லி சேனநாயக்கவின் பொரல்லை வீட்டுக்கு அருகில் கித்துல்வத்தையில் அமைந்திருந்த கைவிடப்பட்டிருந்த களஞ்சியத்தில் டட்லியின் தலைமையில் சதித்திட்டத்துடன் சம்பந்தமுள்ள மற்றவர்களுடன் சந்திப்புகள் நடந்திருக்கின்றன. 27ஆம் திகதி இந்தச் சதி வெற்றிபெறும் பட்சத்தில் சதித்திட்டத் தலைவர்களை சுதந்திர சதுக்கத்தில் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே டட்லி சேனநாயக்க 27ஆம் திகதியன்று நல்ல செய்திக்காக காத்துக்கொண்டு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் இருந்த தனது உறவினரான டபிள்யு சேனநாயக்கவின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். முயற்சி கைவிடப்பட்டு தோல்வியடைந்ததை அறியாத அவர்; ஊர் நிலைமையை அறிவதற்காக தனது மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்." (ஜே.ஆரின் மேற்படி நூலில் 203-204ஆம் பக்கங்களில்)
பிரதான குற்றவாளியாக கருதப்பட்ட டக்ளஸ் லியனகேவுக்கு பின்னர் ஐ.தே.க அரசாங்கத்தில் அரச அமைச்சொன்றின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு சதி பற்றி ஆராய்வதற்காக இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்த அமெரிக்க நிபுணர் டொனால்ட் எல் ஹோரோவிட்ஸ் (Donald L Horowitz) இந்த சதியை “கேர்ணல்களின் சதி” என்றே அழைத்தார். சந்தேகநபர்களுடன் அவர் நடத்திய விசாரணையில் டட்லி சேனநாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டது பற்றி வெளியிட்டார்.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்சிக்கவிழ்ப்புச் சதி கிறிஸ்தவர்களின் சதி என்றும், இராணுவத்தின் சதி என்றும், டட்லி, கொத்தலாவல போன்றோரின் சதி என்றும் தனித்தனியாக அழைக்கப்படுகின்ற போக்கை காண முடிகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் தத்தமது இலக்குகளை அடைவதற்காக பொது உடன்பாடொன்றைக் கண்டு இந்த சதியை திட்டமிட்டிருப்பதாகவே மொத்த சம்பவங்களில் இருந்தும் அறிய முடிகிறது.
சதியில் சம்பந்தப்பட்டவர்கள்
இராணுவம்
1. கர்னல் F.C. த சேரம்: ஸ்ரீலங்கா இராணுவ தொண்டர் பிரிகேடியின் துணை கட்டளை மற்றும் இலங்கை பீரங்கிப் படையின் தளபதி.
2. கேணல் மோரிஸ் த மெல்: இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி.
3. லெப்டினன்ட் கேணல் வில்மட் (வில்லி) எஸ். ஆபிரகாம்: - கட்டளை அதிகாரி, 3 வது படையணி, இலங்கை பீரங்கிப்படை.
4. லெப்டினன்ட் கேணல் J.H.V. த அல்விஸ் - கட்டளை அதிகாரி, இரண்டாம் தொண்டர் பொறியாளர் பிரிவு, சிலோன் இன்ஜினியர் ரெஜிமன்ட்.
5. லெப்டினன்ட் கர்னல் பசில் ஆர்.ஜெசுதாசன்: கட்டளை அதிகாரி, 2வது தொண்டர் சமிக்ஞை பட்டாலியன்
6. லெப்டினன்ட் கேணல் நோயல் மத்தியாஸ்: - லங்கா மின்சார மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி.
7. மேஜர் பி.ஐ. லொயலா: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
8. மேஜர் டபிள்யூ ஜி. வைட்: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிபடை.
9. மேஜர் விக்டர் ஜோசப்: - சதித்திட்ட நாளன்றுக்கான நடவடிக்கை அதிகாரி, இலங்கை ஆயுதப்படைத் தலைமையகத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.
10. கேப்டன் J.A.R. பீலிக்ஸ்: - இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் மண்டல அதிகாரி.
11. கேப்டன் டோனி அங்கி: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
12. கேப்டன் தொன் வீரசிங்க: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.
கடற்படை அதிகாரி
1. ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜெரார்ட் ரோய்ஸ் மேக்ஸ்வெல் த மெல் - இலங்கையின் கடற்படையின் முதலாவது சிங்களக் கடற்படைத் தளபதி. மேலே குறிப்பிட்ட கேர்னல் மொரிஸ் த மெல்லின் உடன்பிறந்த சகோதரன்.
பொலிஸ் அதிகாரிகள்
1.மூத்த DIG C.C. திசாநாயக்க ('ஜங்கல்' என்றும் அழைக்கப்பட்டவர்): - 1ஆம் தர பொலிஸ் பொறுப்பதிகாரி.
2. மூத்த டிஐஜி (ஓய்வுபெற்ற) சிட்னி த சொய்சா: - போலீஸ் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அலுவலர். 1962 வரை.
3. SSP V.E. பெரேரா -கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவு.
4. SP W.E.C. ஜெபநேசம்: - கொழும்பு
5. ASP கொலின் வான்டென்டிஸன்: - திம்பிரிகஸ்யாய பொலிஸ் படைத் தலைமையகத்தின் பொறுப்பான அதிகாரி.
6. பொலிஸ் உதவியாளர் பொலிஸ் J.F. பெடே ஜோன் பிள்ளே: - போக்குவரத்து பிரிவு
7. பொலிஸ் உதவிப் பொலிஸ் டெரி வி. விஜேசிங்க: - பிரதிப் பொலிஸ் மா அதிபர்.
8. ASP லயனல் சி. எஸ். ஜீரசிங்க
அரசாங்க உத்தியோகத்தர்கள்
1. டக்ளஸ் லியனகே (அரசாங்க சேவை): - காணி அபிவிருத்தி பிரதி பணிப்பாளர்
2. ரொட்னி த மெல்: - தோட்ட உரிமையாளர்





19வது திருத்தச்சட்டம் : 212 MPக்கள் தமக்குத் தாமே வைத்துக்கொண்ட சூனியம் - என்.சரவணன்


பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்தது தொடர்பிலான விசாரணை 13 அன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தனது விளக்கத்தை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்திருந்தார். அதன்படி அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமையவே கலைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய முறைப்பாடுகளை நிராகரித்து தள்ளுபடி செய்யும்படியும் அவர் உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இங்கு தான் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது ஏதேச்சதிகாரம் மிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது அல்லவா 19வது திருத்தச் சட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. அப்படியிருக்க தான் விரும்பும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை மீறும் வழிகள் ஜனாதிபதிக்கு அந்த யாப்பின் மூலம் இருக்கிறது என்றால் அதற்கான பொறுப்பு யாருடையது. இப்போது “பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டுவிட்டது”, “மரபு மீறப்பட்டுவிட்டது”, “தார்மீகம் இழக்கப்பட்டுவிட்டது” என்று குய்யோ முறையோ என்று கத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரை பார்த்து கோபிக்க முடியும். அண்ணாந்து தான் உமிழ முடியும்.

19வது திருத்தச் சட்டம் எப்படி நிறைவேறியது?
19வது திருத்தச் சட்டம் 28.04.2015 அன்று பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின் பின் நிறைவேற்றப்பட்டபோது மொத்த 225 உறுப்பினர்களில் 215 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். சரத் வீரசேகர மாத்திரமே எதிர்த்து வாக்களித்தார். 10 பேர் சமூகமளிக்கவில்லை. ஒருவர் (அஜித் குமார - முன்னிலை சோசலிசக் கட்சி)  நடுநிலை வகித்தார், சபாநாயகர் வாக்களிப்பதில்லை.

சமூகமளிக்காதவர்கள் பிரபா கணேசன், டீ. எம்.ஜயரத்ன, எச்.எல். பிரேமலால் ஜயேசகர, ஜானக பண்டார, கலாநிதி ஜகத் பாலசூரிய, வண. எல்லாவல மெத்தானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ரோஹண ராஜபக்ஷ, ரத்னசிறி விக்கிரமநாயக்க, அ. விநாயகமூர்த்தி.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகர மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்தவர். இன்றைய இனவாத தரப்பின் முக்கிய பேச்சாளர் அவர். போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்காக மகிந்த தரப்பில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பிரதான ஆயுதம் அவர். ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர். 

ஆனால் 25.04.2015 அன்று தந்தை செல்வா நினைவு தினத்தின் போது சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க 
“நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்குக் காரணம் சிங்கள பெரும்பான்மை அரசாங்க ஆட்சியே... அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்... 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது சிங்களப் பெரும்பான்மை இனத்தின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்குத் தான்”
என்றார். அந்த பேச்சை அடுத்த நாள் சிங்களப் பத்திரிகைகள் பல சந்திரிகாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டன. 19வது திருத்தச் சட்டத்தை எதிர்த்த ஒரே ஒரே நபரான சரத் வீரசேகர சந்திரிகாவின் இந்த வாசகத்தைப் பாராளுமன்ற உரையில் பயன்படுத்திக்கொண்டார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பதன மூலம் சிறுபான்மை இனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும், தமிழர்களும், பிரிவினைவாத உணர்வும் பலப்படும் என்றும் பாரளுமன்றத்துக்கு வெளியில் உள்ள இனவாதத் தரப்பினர் கொக்கரித்தத்தது போலவே பாராளுமன்றத்திலும் சரத் வீரசேகர கர்ஜித்தார்.
“நாட்டின் பிரதான பொலிஸ் பாதுகாப்புக்கு அதிகாரியான பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் கூட அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பிரதமரின் கைக்கு செல்கிறது...
அன்று புலிகளுடன் போலிப் பேச்சுவார்த்தை நடத்திய ரணிலின் அரசாங்கத்தை ஒரே வருடத்தில் சந்திரிகாவால் கலைக்க முடிந்தது இந்த ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தால் தான். இப்போது இதன் மூலம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதபடி செய்யப்பட்டிருக்கிறது.”
என்றெல்லாம் அவர் உரையாற்றினார்.  இதுபற்றி சரத் வீரசேகர 24.12.2017 அன்று திவயின பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை முக்கியமாக கவனிக்கத்தக்கது.

மகிந்த குடும்பத்தினரை இலக்கு வைத்து முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சார்ந்த தரப்பினர் குற்றம் சுமத்தினர்.
  1. மூன்றாவது தடவையாக ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது.
  1. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் வயதெல்லை 30இலிருந்து  35ஆக அதிகரிக்கப்பட்டமை.
  1. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் பங்குபற்ற தகுதியற்றவர்கள்

ஆகிய திருத்தங்களை சுட்டிக்காட்டினார்கள்.

19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் மொத்தம் 174 இடங்களில் திருத்துவதற்கான யோசனை 2015 மார்ச் 13 அன்று வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் இவையும் உள்ளடங்கும்.

நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலட்சியம் என்று 2015 ஆரம்பத்தில் கூறப்பட்டது.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் பிரதான அம்சம் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறை. ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர எதையும் செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கூறிக்கொண்டார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. 

அப்பேர்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் நடத்திய ஏதேச்சதிகார ஆட்சியினால் நாடு பட்ட துன்பங்கள் அதிகம். ஜனாதிபதியின் இந்த அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் எதிர்ப்பலை உருவானது. 90களின் ஆரம்பத்தில் இந்த அலை பெருகியது. சந்திரிகா 1994இல் ஆட்சியேறியபோதும் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை ஒழிப்பேன் என்றே சூளுரைத்தார். ஆனால் அவர் ஜே.ஆரை விட மோசமான நிலைக்குச் சென்று பொதுத் தேர்தலின் மூலம் தெரிவான ஆட்சியை ஒரே ஆண்டில் கலைத்தார். அப்போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தது ரணில் ஆட்சி

அதன் பின்னர் மகிந்த மற்றவர்கள் செய்யத் தவறிய அந்த நிறைவேற்று அதிகார ஒழிப்பை தான் ஒழிப்பதாக உறுதியளித்துக்கொண்டு வந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச அளவுக்கு இலங்கையில் இந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த ஒரு ஆட்சியாளரும் இல்லை எனும் அளவுக்கு நிலைமை உச்சம் பெற்றது. நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது செய்வதற்குப் பதிலாக 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜே.ஆர் உருவாக்கிய அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை தனதாக்கிக்கொண்டார். அடுத்த தடவை தானே மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்காக இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என்கிற அரசியலமைப்பு வரையறையை அகற்றினார். அதுமட்டுமன்றி முக்கிய அரச அதிகாரிகளின் நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை இத்திருத்தத்தின் மூலம் தனதாக்கிக்கொண்டார்.


18வது திருத்தச் சட்டம் 09.09.2010அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளை அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழர்கள் 
  1. பீ.திகாம்பரம்,
  2. பிரபா கணேசன்,
  3. ஜே ஸ்ரீ ரங்கா

ஆகிய மூவரே என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் ஆதரவாகத் தான் வாக்களித்தார்கள்.

மகிந்த அரசின் கொடுமைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் சமூக – ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்த போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல் ஆகிய இரண்டு காரணிகளையும் முதன்மைப்படுத்தினர். அதை செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்குடன் பிரதான கட்சிகள் இரண்டும் மகிந்தவையும் எதிர்த்துக்கொண்டு வரலாற்றில் ஒன்றிணைந்தன. ஆனால் ஆட்சியமைத்த இந்த மூன்று ஆண்டுகளில் அவர்களால் அந்த இரண்டு பிரதான விடயத்தையும் சாதிக்க முடியவில்லை. 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை எதிர்பார்த்தபடி குறைக்கமுடியவில்லை. 1978இல் இருந்தது போல இன்றும் ஜனாதிபதி தான் முப்படைகளின் தளபதி.

இப்போது நிகழ்ந்துள்ள தேசிய நெருக்கடி அரசியலமைப்பு நெருக்கடியாக உருவெடுத்திக்கிறது. ஜனநாயக நெருக்கடியாக பூதாகரமாகியுள்ளது.

ஜனாதிபதியும், பாராளுமன்றமும், சட்ட மா அதிபரும், உயர் நீதிமன்றமும் ஆளாளுக்கு அரசியலமைப்பை வெவ்வேறு அர்த்தம் கொள்ளத் தக்க வகையில் வியாக்கியானப்படுத்துமளவுக்கு பலவீனமான ஒரு அரசியலமைப்பை ஆக்கியது யார் பொறுப்பு? ஜனநாயகத்தைப் இழுக்காகக் கூடிய ஓட்டைகளை அடைப்பதாகக் கூறிக்கொண்டு அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கக்கூடிய அளவுக்கு ஓட்டைகளை மிச்சம் வைத்தவர்கள் யார்? இதுவா மாதக்கணக்கில் விவாதித்து கொண்டு வந்த திருத்தம்? இன்று ஜனாதிபதியைக் குற்றம் கூறுபவர்கள் தமது அசட்டைத் தனத்தை சுயவிமர்சனம் செய்துகொள்வார்களா? நாட்டை தாங்கி வைத்திருக்கும் அரசியலமைப்பின் ஓட்டைகளால் நாடு வரலாறு காணாத பாரிய நெருக்கடியை சந்தித்திருகிறதே அதற்கு பொறுப்பேற்பார் யார்? அரசியலமைப்பை திருத்தும் அளவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மீண்டும் இலங்கையின் வரலாற்றில் அமைவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? இன்னும் இந்த நாடு எத்தனை காலம் தான் அதற்குத் தவம் இருக்க வேண்டும்?

நன்றி - அரங்கம்


ஜே ஆரால் மீண்டெழுந்த ஜப்பான் - என்.சரவணன்


இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தையே நாடுகளுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்து வந்தது. இந்தப் போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தது ஜப்பான். பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941இல் அமெரிக்காவையும் தாக்கியது.

ஐரோப்பாவில் ஜெர்மனை வீழ்த்துவதில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அது போல ஜப்பானில் 1945 ஓகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணுக்குண்டை போட்டு பாரிய மனிதப் பேரழிவை நடத்தியதுடன் மட்டுமன்றி அந்த நாட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாக்கி சரணடைய வைத்தது. அத்தோடு இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.

ஜப்பான் இராணுவம் கலைக்கப்பட்டது. ஜப்பானை குற்றம் சாட்டி அமெரிக்காவின் நிரந்தர இராணுவத் தளம் அங்கு அமைக்கப்பட்டது. ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப்படைத்தளம் ஒக்கினாவில் தான் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுக்கு கொணர்வதற்காக 08.09.1951 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் 48 நாடுகள் சமாதான மாநாடொன்றை கூட்டினார்கள். மாநாட்டு மண்டபத்துக்கு வெளியில் 51 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜப்பானின் கோடி மட்டும் அங்கு காணப்படவில்லை. ஆனால் ஜப்பானை வரவழைத்திருந்தனர்.
அங்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் “ஜப்பான் இதற்கு மேல் ஒரு இராணுவ அரசுமல்ல இரகசிய சமூகமும் அல்ல. அது புனருத்தாபனம் செய்யப்பட்ட நாடு. யுத்த உரிமையை கைவிட்டிருக்கிற அந்த நாட்டுக்கு பாதுகாப்பளிக்கும் கடமை ஐ.நாவுக்கு உண்டு” என்றார்.
அந்த மாநாட்டின் இரண்டாவது நாள் அனைத்து நாடுகளும் கையெழுத்திடுவதற்கான சமாதான ஒப்பந்தம் தயாராகியிருந்தது. ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் ஜப்பானின் மீது  மேலும் தடைகளை போடவேண்டும் என்று உரையாற்றினர்.


ஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.

அந்த மாநாட்டில் இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்தனர். அந்தத் தீர்மானம் மனிதாபிமானமற்றது என்று நீண்ட உரையாற்றினார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.


அந்த பேச்சு மிகவும் பிரசித்தமானது. பல வல்லரசு நாடுகள் ஜப்பானிடம் நட்ட ஈட்டை அறவிடுவதற்கான கோரிக்கைகளை உறுதியாக அந்த மாநாட்டில் முன்வைத்தபோது வறிய நாடான இலங்கையின் பிரதிநிதி தமக்கு எந்த நட்ட ஈடும் வேண்டாம் என்றார். அது ஜப்பானின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றார். “அதிர்ஷ்டவசமாக எங்கள் நாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை, ஆனால் விமானத் தாக்குதல்களினால் சேதங்களை உருவாக்கியிருந்தது....” என்றார்.

“நஹி வேறேன வேறானி” அதாவது “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” என்கிற புத்தரின் தம்மபதத்திலிருந்து மேற்கோள் காட்டி ஆற்றிய உரை அது.

இந்தப் உரையும் ஜப்பானுக்கு ஆதரவான பிரேரணையும் முடிந்ததும் பல நாட்டுத் தலைவர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தனர்.

இத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.

ஜப்பானை தண்டிக்கவேண்டும், நட்ட ஈட்டை சுமத்த வேண்டும் என்றிருந்த நாட்டுத் தலைவர்கள் அந்த உரையின் பின்னர் உருகினார்கள். ஒரு வசதி குறைந்த நாடொன்றே தமக்கு எதுவும் வேண்டாம், நலிந்த ஒரு நாட்டை மேலும் கஷ்டத்தில் தள்ளாதீர்கள் என்று கூறியதை கேட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது முடிவைக் கைவிட்டன.

அந்த பிரேரணை மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் கொரியா, சீனா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் ஜப்பானை மூன்றாக பிளவுபடுத்தி தனித்தனியாக ஆண்டிருக்கும். ஜப்பான் என்று இன்று இருக்கிற நாடே வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும் என்று கூறுவார்கள்.

ஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியான வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். ஜப்பானின் புத்தரின் படத்துக்கு அடுத்தபடியாக ஜே.ஆரின் புகைப்படத்தை வைத்து மரியாதை காலம் ஒன்று இருந்தது. இன்றும் பல வீடுகளில் காண முடியும். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்து வந்ததும்; அந்த வரலாற்றுபூர்வமான நன்றிக்காக பல உதவிகளை இலங்கைக்கு செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது. சமாதான காலத்தில் நோர்வே வழங்கிய நிதியுதவிகள் போலவே ஜப்பானும் சமாதானத்துக்காக கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியது. யுத்தத்தின் பின் மீள் குடியேற்றத்துக்கும், பின்னர் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக 03 பில்லியன் நிதியையும் கொடுத்துதவியது.


1953இலேயே இலங்கையில் ஜப்பான் தூதரகத்தை நிறுவியது. ஜே.ஆர். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஏராளமான நிதியுதவிகளையும், கடனுதவிகளையும் வழங்கியது. மேல்கொத்மலை மின்னுற்பத்தித்திட்டம், கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க விமானநிலைய அபிவிருத்தி, டெலிகொம் திட்டம், இரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைப்பது என்று ஒரு தொகை அபிவிருத்திப் பணிகள் ஜப்பானின் உதவியால் இலங்கை பலனடைந்திருக்கிறது.

இலங்கையின் அடிப்படை உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள், பேராதனை, ஜெயவர்த்தனபுர ஆஸ்பத்திரிகள் வைத்திய பரிசோதனை நிலையங்கள் என்பன மட்டுமல்ல இலங்கையின் ரூபவாஹினி நிறுவனத்தையும் ஜப்பான் தான் அன்றே அமைத்துக்கொடுத்தது. சுனாமி அழிவின் போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 50%வீதத்தை ஜப்பான் தான் வழங்கியிருந்தது.


2013 ஆம் ஆண்டு இலங்கை – ஜப்பானிய ராஜதந்திர உறவின் 60வது ஆண்டு நிறைவையொட்டி அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபஷ ஜப்பான் சென்றிருந்த வேளை இலங்கையின் அபிவிருத்திக்காக 57.8 பில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கியது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததும் இந்தத தாமீக நன்றியுணர்வின் பின்னணியினால்தான். ஆனால் அந்த ஆதரவில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்ததும் வாக்களிப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தது.

ஏற்கெனவே ஜே.ஆர். நினைவாக ஜப்பானில் சிலைகளும், நினைவுக் கல்லும் சில இடங்களில் உள்ளன. ஜப்பானில் சுகியானோ பிரதேசத்தில் ஜே.ஆரின் சிலை பெரிய சிலையுடன் அவருக்கான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 2020இல் அது திறக்கப்படவிருக்கிறது. அந்த நாட்டில் வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவருக்காக கட்டப்படும் ஒரே ஒரு நினைவகம் அது மட்டும் தான். அங்கு அவரின் சான் பிரான்சிஸ்கோ உரை தினசரி ஒலிபரப்படவிருக்கிறது.

இலங்கை செய்ததற்கு பேருதவிக்கு நன்றிக்கடனாக இன்னும் இலங்கையின் பிரதான நட்பு நாடாக பல காலம் கைமாறு செய்துவருகிற நாடு ஜப்பான்.




 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates