Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கோட்டாவின் வெற்றி: பாசிசத்துடனான பேரினவாதத்தின் சமரசம் : என்.சரவணன்

"இந்த வெற்றியைத் தரப்போகிறவர்கள் இந்தநாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களே என்பதை ஆரம்பத்திலேயே நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்!... "
கோட்டபாயவின் பதவிப் பிரமாணத்தின் போது ஆற்றிய உரையில் கோட்டா அப்படித் தான் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என்று கோட்டாவுக்கு பின்னர் இருந்த சிங்கள சக்திகள் தேர்தல் காலத்தில் கர்ஜித்துக்கொண்டிருந்தார்கள்.

எல்லாளனைக் கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு கட்டிய அனுராதபுர "ருவன்வெளிசேய"வை கோட்டபாய பதவிப் பிரமாணத்துக்கு தெரிவு செய்தது தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார். கோட்டபாய முதலில் துட்டகைமுனுவின் சிலைக்கு வணக்கம் செலுத்தி கூடியிருந்த சிங்கள பௌத்தர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புகளுடன் தான் பதவிப் பிரமாணத்துக்கு வந்தார்.

அழிக்கவே முடியாது என்று கூறப்பட்ட விடுதலைப் புலிகளை அழித்துக் காட்டியதாக ஆரவாரமாக கொண்டாடியதற்கு கிட்டத்தட்ட நிகரானதே; சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபாதியொருவர தெரிவாக முடியாது என்கிற வாதத்தை உடைத்து சுக்குநூறாக்கியது என்கின்றனர் சிங்கள சக்திகள்.

இவை இரண்டுமே கனவு என்றும், கற்பனை மட்டுமே செய்ய முடியும் என்று கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு அது சாத்தியம் என்பதை சிங்கள பௌத்த பேரினவாதத் தரப்பு நிறுவியிருக்கிறது.

பேரம் தேவையில்லை இனி
ராஜபக்சக்களின் அமெரிக்க விசுவாசத்தை இன்னமும் குறைத்து மதிப்பிடுகின்றன இலங்கையின் மரபு இடதுசாரிகள். அமெரிக்க எதிர்ப்புவாதத்தை இடதுசாரிகளை விட அதிக அளவு தூக்கிப்பிடித்து வந்த சிங்கள பௌத்த தேசியவாதம் ஒரு அமெரிக்கரை தெரிவு செய்ய துணிந்திருக்கிறதென்றால் மறுபுறம் அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வின் உச்ச வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இதுவரையான தேர்தலிலேயே அதிகளவு வாக்களிப்பு வீதம் இத்தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. சிங்கள தேசியவாதத்துக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் இடையிலான தெளிவான இடைவெளியை முடிவுகள் உறுதி செய்திருக்கிறது. சிங்களப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தும் தமிழ்ப்  பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தும் கூட இதுவரையான வாக்குவீத சமநிலையை பேண முடியவில்லை.

இனி சிறுபான்மை இனங்களோடு பேரம் பேசத் தேவையில்லை, அவர்களின் அபிலைஷகளை நிறைவேற்றாததால் பாதகமில்லை என்கிற நற்செய்தியை பேரினவாதத்துக்கு அறிவித்திருக்கிறது இத் தேர்தல். வரலாற்றில் சிறுபான்மை இனங்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியாக கோட்டா ஆனார்.

இந்த வெற்றியில் பேரினவாத நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. முழு பேரினவாத சக்திகளும் ஓரணியில் திரண்டிருந்தார்கள். 

தமிழ் முஸ்லிம் சக்திகள் அப்படி ஒரு சக்தியின் கீழோ, அல்லது தேசியவாதத்தின் கீழோ, அல்லது வேறொரு திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் கீழோ அணிதிரண்டிருக்கவில்லை. தன்னியல்பான அரசியல் அபிலாஷையையே சிறுபான்மை மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்த சக்திகள் அமைப்புகளாக இன்றி சித்தாந்தமாக ஒன்றுபட்டு வென்றிருக்கிறார்கள். எகேனவே நிறுவனமயப்பட்ட  சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புமுறைக்கு தனித்தனியாக வழிகாட்டத் தேவையில்லை. அதன் சித்தாந்தம் வழிகாட்டிகொண்டே இருக்கும். இப்போது பகிரங்கமாகவே பல இனவாத சக்திகள் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளன.

"கோட்டபாய 17ஆம் திகதி வென்றதுமே நாங்கள் "தம்பி"களுக்கும், தெமலாக்களுக்கும் சரியான பாடம் புகட்டுவோம்... சிங்களவர் யார் என்பதை 17ஆம் திகதிக்குப் பின் காட்டுவோம்..." இப்படி இரு நாட்களுக்கு முன் டான் பிரசாத் முகநூலில் அறிவித்திருந்த மிரட்டலை சாதாரணமாக எடுப்பதற்கில்லை. இனி வரும் காலம் அப்படித்தான் இருக்கப் போகிறது. டான் பிரசாத் ஒரு பேரினவாத காலச் சண்டியன். சமீபகால பல இனவாத வன்முறைகளுக்கும், சம்பவங்களுக்கும் தலைமை தாங்கிய ஆபத்தானவன். 

பொதுபல சேனா
கடந்த சில வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் களப் போராளிகளாக இருந்து வந்த பொதுபல சேனா, சிங்கள இராவணா போன்ற சக்திகள் தமது அமைப்புகளை கலைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த சக்திகள் கலைந்து போயிருக்கின்றனவே தவிர சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலும், அதன் சித்தாந்தமும் கலைந்தது கிடையாது.

கோட்டாவின் வருகையுடன் புதிய வடிவத்தில் புதிய இனவாத சக்திகள் அந்த இடத்தை நிச்சயம் நிரப்பும். புதிய தலைமைகளும், புதிய நிகழ்ச்சிநிரலும் அமுலுக்கு வரும்.

27.09.2014 ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடத்திய மாபெரும் மாநாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாநாடு. அந்த மாநாட்டில் உலகின் மோசமான பௌத்த பயங்கரவாதி என்று அழைக்கப்படும் விறாத்து தேரர் மியான்மாரில் இருந்து வருவிக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தான் அளுத்கம கலவரமும் நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் ஞானசாரரின் பேச்சின்போது

““சிங்கள தேசிய விடுதலை போராட்டம்”. அந்த போராட்டம் ஒரு சித்தாந்த போராட்டம். அந்த கருத்து போராட்டத்தில் நாம் முதலில் வெற்றியடைய வேண்டும்.” என்றார். கூடவே அனைத்து சிங்களவர்களும் ஒரே நிகழ்ச்சிநிரலின் கீழ் அணிதிரண்டு ஒரே சிங்கள பௌத்த தலைவரை நாட்டின் தலைமைக்கு கொண்டுவரவேண்டும். சிறுபான்மையினரின் தயவின்றி அது நிறைவேற வேண்டும் என்றார்.

அது இப்போது நிறைவேறியிருக்கிறது. பொதுபல சேனாவின் பிரதான இலக்கின் ஒரு அங்கம் நிறைவேறியிருக்கிறது என்று ஞானசாரர் இப்போது கூறியிருக்கிறார். உண்மை தான் இது அவர்கள் இதுவரை நிறைவேற்றிவந்த நிகழ்ச்சிநிரலின் வெற்றி தான்.

கூடவே ஞானசார தேரர் இன்னொன்றையும் கூறினார். இது எப்படி நிறைவேற்றப்படவேண்டும் என்பது குறித்தது அது. அதற்கு அவர் சொன்ன வழிகளில் ஒன்று. நாட்டின் பௌத்த பன்சலைகளை மையப்படுத்தி சிங்கள பௌத்தர்கள் அணிதிரப்பட்டப்பட்டால் அந்த இலக்கு சாத்தியம் என்றார். இம்முறை கோட்டபாயவின் வெற்றிக்காக பல பன்சலைகள்  நாடளாவிய ரீதியில் பகிரங்கமாகவும் இரகசிமாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பதைக் கவனிக்க வேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இயங்கு திசையும், பண்பும், அளவும், அடர்த்தியும் கோட்டபாய அதிகாரத்தின் கீழ் புதிய வடிவத்தை எடுக்கப் போகின்றன என்பதை தற்போதைய சூழல் வெளிப்படுத்தியிருக்கிறது.

இனவாத வழித்தடம்
90களில் சம்பிக்க ரணவக்க சிங்கள வீர விதான இயக்கத்தைத் தொடங்கிய போது நேரடியாக களப் பணிகளை மேற்கொள்ள முன்னணி அமைப்புகளை தொடங்கினார். அதேவேளை கூடவே பேரினவாதமயப்படுத்தலின் போது கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கும், சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் பல முக்கிய இனவாத கருத்துருவாக்க நபர்களை ஒன்றிணைத்து களத்தில் இறக்கினார். அவை நேரடியாகவும் மறைமுகவும் இயங்கின.

2000ங்களின் பின்னர் நேரடி பிரதிநிதித்துவ அரசியலில் சம்பிக்க தரப்பினர் இறங்கிய பிரதான அரசியல் களத்தில் முக்கிய அங்கமாக படிபடிப்படியாகவும், வேகமாகவும் ஆக்கிக்கொண்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்த வழிகாட்டிகளாக அவர்கள் தான் இயங்கினர். இன்னொரு வகையில் கூறப்போனால் அவர்களுக்குப் பின்னால் தான் அரசாங்கமும், ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்கள தேசியவாத சக்திகள் அணிதிரண்டன எனலாம். அந்தளவு சித்தாந்தப் பலத்தை கட்டியெழுப்பியிருந்தார்கள்.

யுத்தத்துக்கான நியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் பலப்படுத்திய அதே வேளை, அரசை இனவாத கருத்துக்களால் கட்டுப்படுத்தியும் அடிபணிய வைத்தும் இருந்தனர். யுத்தத்துக்கான வழிப்பாதையை ஏற்படுத்தியும் கொடுத்தனர்.

அதே சம்பிக்க மைத்திரி - ரணில் ஆட்சியில் ஒரு சிறந்த அமைச்சராக காணப்பட்டார். ஆனால் அமைச்சரவையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க காரணமாக இருந்தார். மறைமுகமாகவும், திரைமறைவிலும் இயங்குகிற பேரினவாத வடிவம் தான் பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. அப்பேர்பட்ட வடிவத்தின் அடுத்த கட்டத்தை கோட்டபாய அரசு இப்போது தொடக்கியிருக்கிறது. கோட்டபாய எதிரிகளை தாக்குவதற்கு தனது வாயைப் பயன்படுத்துவதில்லை.

“செயல் அதுவே சிறந்த சொல்” என்றார் ஹொசே மார்த்தி என்னும் கியூப தத்துவஞானி. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் போட்டியாளரை தனிப்பட குறைசொல்லி பிரச்சாரம் செய்யாத ஒரே ஒரு பிரதான போட்டியாளர் கோட்டபாய தான். கோட்டாவை குறை கண்டுபிடிப்பவர்கள் பலர் இப்போதும் கோட்டாவின் அன்றைய வாய் வார்த்தைகளைக் கொண்ட காணொளிகளையும், குரல் பதிவுகளையும் நிறையவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கோட்டா அவற்றில் இருந்தெல்லாம் பாடம் கற்றுக்கொண்டிருகிறார். கோட்டாவிடம் இருந்து அப்படியான ஆதாரங்களை இனி நீங்கள் பெற முடியாது.

இனவாத செயற்திட்டங்கள் செயலில் மட்டும் தான் நாம் காண முடியும். அந்தளவு அது தன்னை நவீனமயப்படுத்தியிருக்கிறது. வரலாற்றுப் பாடங்களில் இருந்து திறமையாக தகவமைத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்க குடிமகன்
"பின்வரும் அறிக்கையை நான் உண்மையானது என்று அறிவிக்கிறேன். நான் வேறு நாட்டுடன் நான் கொண்டிருந்த பந்தம், உறவு, விசுவாசம் என்பவற்றை இத்தால் முற்றிலும் கைவிடுவதோடு அமெரிக்க அரசியலமைப்பை மேலும் ஆதரிப்பேன், அதன் விதிகளை மதிக்கிறேன். அவருக்கு எதிராக எழுந்து நின்று அமெரிக்காவைப் பாதுகாத்து அவ்விதிகளை மதித்து தேவைப்படும்போதும் அமெரிக்காவிலும் வெளியிலும் அமெரிக்காவுக்காக ஆயுதம் தாங்குவேன். படை நடவடிக்கைகலோடோ தொடர்பில்லாத இராணுவச் சேவைகளிலும் தேவையேற்படும் வேளை ஈடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன். இதனை சுயவிருப்புடனும், எந்த மனக்குழப்பமுமின்றியும் அறிவித்துக்கொள்கிறேன். கடவுள் உதவுவாராக”
இப்படித்தான் தான் கோட்டபாய அமெரிக்க குடியுரிமை பெற்றபோது அங்கு அவர் செய்துகொடுத்த சத்தியப்பிரமானம். இதற்கு முன்னர் ஒரு இலங்கையனாக அவர் இராணுவத்தில் பல தடவைகள் இந்த நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த பாடுபடுவதாக சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார் கோட்டா. அதே கோட்டா 25 வருடங்களின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அந்த விசுவாசங்களை கைவிட்டுவிட்டு மீண்டும் இப்படி சத்தியப்பிரமாணம் செய்கிறார்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு
*ஏழாம் அட்டவணை
157அ(7) உறுப்புரையும் 161 (ஈXiii) ஆம் உறுப்புரையும்
“................. ஆகிய நான் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும், இலங்கையின் ஆட்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கிறேன் ; சத்தியஞ்செய்கின்றேன்.”


கோட்டபாய 1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து 1972 இல் லெப்டினென்ட் ஆக கடமையாற்றியவர். சிங்க ரெஜிமென்ட், ரஜரட்ட, கஜபா ரெஜிமன்ட் ஆகியவற்றில் பணிபுரிந்து பின்னர் 1992 இல் லெப்டினன்ட் கேர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். வடக்கில் ஒப்பரேஷன் லிபரேஷன், ஸ்ட்ரைக் ஹார்ட், திரவிட பலய ஆகிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

2012 ஆம் ஆண்டு மாத்தளையில் கட்டுமானப் பணியொன்றின் போது கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி பற்றிய சர்ச்சை நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 150 மனித உடல்களின் எலும்புக் கூடுகள் அங்கே கண்டு பிடிக்கப்பட்டன. இது 1986 – 1990 ஜே.வி.பியை நசுக்குவதற்குமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கொள்ளப்பட்ட சிங்கள இளைஞர்களின் சடலங்கள் என சந்தேகிக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் மாத்தளையின் இராணுவ இணைப்பாளராக கடமையாற்றியவர் கோட்டபாய என்பது குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதி காக்கும்படை நாட்டை விட்டு வெளியேறியதும் இரண்டாம் ஈழ யுத்தம் தொடங்கியது. யுத்த நிலைமை தீவிரம் பெற்ற போது குடும்பத்தின் நெருக்குவாரம் காரணமாக இராணுவத்தை விட்டு விலகினார். 1991 நவம்பர் 1 கோட்டபாய இராஜினாமா செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன 1991 மார்ச் 2 அன்று கொழும்பில் புலிகளால் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்கு அவர் உளவியல் சிக்கலைக் காரணம் காட்டித்தான் இராஜினாமவைக் கொடுத்துவிட்டு இராணுவத்தை விட்டோடி அமெரிக்காவில் சரணடைந்தார் என்கிறார் பீல் மார்ஷல் சரத் பொன்சேகா.

2005 ஆம் ஆண்டு தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் தான் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கினார் கோட்டபாய. அமெரிக்க குடியுரிமையைக் கைவிடாமலேயே அவர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக ஆக்கப்பட்டார். மகிந்த அரசாங்கத்தின் அதீத அதிகாரங்களைக் கொண்டவராக இருந்த இந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு காணாமல் போதல், ஊடகவியலார்கள் கொலை, வெள்ளை வேன் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமானார். கோட்டபாயவைப் பார்த்து நாடே நடுநடுங்கும் நிலை உருவானது.

கடந்த 35 ஆண்டுகளில் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விஞாபனங்களில் இடம்பெறாத, முக்கியத்துவம் பெறாத தேர்தல் இது. அதுபோல ஜனாதிபதியொருவரின் பதவிப்பிரமான உரையில் இனப்பிரச்சினை குறித்த எந்த குறிப்பும் இடம்பெறாத உரையும் இது தான்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் கூறாமலேயே வென்ற ஜனாதிபதி. அதுபோல சத்தியப்பிரமானத்தன்று நிகழ்த்திய உரையில் தேசியப் பிரச்சினை குறித்து அலட்சியமாக எதுவும் சொல்லாமல் விட்ட ஜனாதிபதியும் இவர் தான். இலங்கையின் தேசிய உடையை இதுவரை தவிர்த்து வந்திருக்கிற முதல் அரச தலைவரும் இவர் தான்.

வெற்றிபெற்றதன் பின்னர் கூட சர்வ மத பிரார்த்தனைகளுக்கு இடம் கொடாமல் பௌத்த பிக்குமார்களின் ஆசீர்வாதங்களுடன் மட்டுமே பதவியேற்புகளை மேற்கொண்டார்கள். கடந்த அரசாங்கத்தில் குறைந்தபட்சம் சகல நிகழ்வுகளிலும் சர்வ மதத் தலைவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் இந்த ஆட்சியில் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.
“இனப்பிரச்சினை தீர்வு என்கிற பேரில் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும். 6 அடி உயரத்தில் அத்தகைய தேசத்துரோகிகளின் பிணங்களை தூக்கிச்செல்லவும் விடக்கூடாது. அப்பிணங்களை கயிற்றால் கட்டி தரையில் இழுத்துச்செல்லவேண்டும்.”
என்று கோட்டாபயவை வெல்ல வைப்பதற்காக தொடங்கப்பட்டிருந்த “வியத்மக” இயக்கத்தின் கூட்டத்தில் சில மாதங்களுக்கு முன் அப்படி உரையாற்றியிருந்தார். இறுதியுத்தம் பற்றி “நந்திக் கடலுக்கான போர்ப்பாதை” என்கிற நூல் உள்ளிட்ட முக்கிய போர்க்கால நூல்களை எழுதியவர். பிரபாகரனின் மரணத்தை முதன் முதலில் அறிவித்தவர். இப்போது அவருக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் தேசியவாதம் என்பது சிங்கள பௌத்த தேசியவாதமாகவும், பின்னர் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வளர்ச்சியடைந்து ஈற்றில் பாசிசமாக அவ்வப்போது தலைதூக்கி வந்திருப்பதை நாமறிவோம். அப்பேர்பட்ட புதிய சிங்கள பௌத்த நவபாசிச போக்கின் நவநாயகனாக கோட்டா இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எனவே தான் பாசிசத்துடனான பேரினவாதத்தின் சமரசத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறோம்.

இந்த வெற்றி சிங்கள - பௌத்த - வலதுசாரி - சாதியாதிக்க - ஆணாதிக்க கூட்டின் வெற்றி இது.

நன்றி - தினக்குரல்

மலையகத்துக்கான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? - க.பிரசன்னா


மலையக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியானது எதிர்பார்க்காத ஒன்றாக அவர்களுக்கு அமைந்து விட்டது. ஆனால் அது அவர்களின் வாழ்க்கையை சூனியமாக்கிவிடும் என்பது அர்த்தமல்ல. தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப்பின்னர் தோற்றவர்களின் பிரசாரம் அவ்வாறே அமைந்திருக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதியானவர் மக்கள் விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் சகல மக்களுக்கும் பொதுவானதொரு தலைவராகவே இருக்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுவிட்டதால் மலையக மக்களின் எதிர்காலம், அபிவிருத்தி, பாதுகாப்பு என்பன கேள்விக்குரியதாகிவிட்டதாக பலரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வாக்களிக்கச் சென்றவர்களில் பலர் மீண்டும் தலைநகரங்களுக்கு தொழிலுக்கு செல்வதற்கே தயக்கம் காட்டிவரும் சூழல் காணப்படுகின்றது. இதில் அரசியல் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறான நிலையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் மக்களுக்கு வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை முறையாகப் பெற்று சமூகத்தை முன்னேற்றுவதற்கே அனைவரும் உழைக்க வேண்டும்.

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டதால் தாம் சிரமங்களை எதிர்கொண்டுவிடுவோமோ என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கவலையாக இருக்கின்றது. அவ்வாறே அவர்களை அரசியல் தலைவர்கள் வழிநடத்தி வைத்திருக்கின்றார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் பரவலாக பேசப்பட்டது. 1000 1500 ரூபா வரையில் சம்பளவுயர்வுகள் வழங்கப்படுமென தேர்தல் பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய ஜனாதிபதியும் பதவியேற்றிருக்கின்றார். எனவே வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற அடிப்படையில் நிவாரணங்களும் அபிவிருத்திகளும் பங்கிடப்படாமல் சகலரும் அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ளும் நிலையினை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சிறந்த ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் வரிகளை குறைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக அறிவித்திருந்தார். இவை வெறும் ஏமாற்று வார்த்தையாக அமைந்துவிடக்கூடாது. 2015 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். ஆனால் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் போதும் இந்த 1000 ரூபா பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் அரசில் பங்காளிகளாகவிருந்தவர்களின் 50 ரூபா சம்பளவுயர்வும் பல கட்ட அமைச்சரவை அங்கீகாரத்துக்குப்பின்னரும் வழங்கப்படவில்லை. அத்தோடு தீபாவளிப்பண்டிகைக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட 5000 ரூபாவும் இறுதி நேரத்தில் வழங்கப்படாமல் தீபாவளி பிற்கொடுப்பனவாக வழங்கப்படுமென கூறப்பட்ட போதும் இன்று வரையும் அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இனிமேலும் அவை கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான தொடர்ச்சியான ஏமாற்று நடவடிக்கைகளினால் மலையக மக்கள் குறைந்த வருமானத்தில் அதிக சுமையினை சுமக்க வேண்டிய நிலை காணப்பட்டது. அதனை நீடிக்க விடாமலும் 2021 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் வரை காத்திருக்காமலும் உடனடியாக பெருந்தோட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் எவ்வகையிலும் தடைபட்டு விடாமலும் கட்சி சார்பில் முடங்கிவிடாமலும் இருப்பதையும் இன்னும் அதிகமான அபிவிருத்திகள் கிடைக்கப்பெறுவதையும் அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்த வேண்டும். தற்போது பெருந்தோட்டங்களில் பெருமளவில் இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் முறைகேடுகள் இருப்பதாகவும் தரமற்ற வகையில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை இனங்கண்டு சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை தவிர இலங்கை அரசாங்கத்தின் நிதியொதுக்கீடுகளில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் நன்மையடையவில்லை. இது பாரபட்சமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் தற்போது இல்லையென்றாகிவிட்டது. அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டமும் இல்லையென்ற நிலையில் தற்போது அவர்களுடைய ஆட்சி மலர்ந்துள்ளதால் மீண்டும் அவை கிடைக்கப்பெறுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

இவற்றை விடவும் பிரதானமாக தேர்தல்காலத்தின் போது மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இன்னும் பழைய விடயங்களை பேசிக்கொண்டும், வசைபாடுவதாலும் மக்கள் அபிவிருத்தி அடைந்துவிடப்போவதில்லை. யார் ஆட்சிபீடமேறினாலும் மக்கள் தங்குதடையின்றி அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நல்லாட்சியாகவும் கருதப்படும். மக்களும் அதனையே விரும்புகின்றனர். மீண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியத் தேவை இருப்பதால் மீண்டும் மக்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கலாம். அதற்கு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டாம். "நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நான் அவ்வாறே காப்பாற்றுவேன்' என்று புதிய ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆனால் பெரும்பாலான பெருந்தோட்ட மக்கள் புதிய ஜனாதிபதிக்கு தேர்தலின் போது ஆதரவு தெரிவித்திருக்காவிட்டாலும் அவர்களை பின்த்தள்ளி அபிவிருத்திகளை செயற்படுத்த முடியாது. இனிவரும் காலங்களிலும் அவர்களை புறந்தள்ளி அபிவிருத்திகளை முன்னெடுக்கக்கூடாது.

கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிகள்
தேயிலை கைத்தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தோட்ட சமூகத்தை சமமான உரிமைகளை அனுபவிக்கும் ஒரு சமூகமாகவே கருதுகிறோம். எமக்கு அவர்கள் மீது வாக்கு பெறுமதிக்கு அப்பால் சென்று சகோதர வாஞ்சயே உண்டு. இதனால் நாம் கட்டியெழுப்பும் சுபீட்சமான தேசத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழக்கூடிய பொருளாதாரம், உயர் தரத்திலான வீடுகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கொண்ட சொகுசான வாழ்க்கைக்கு அவர்களது தேவை மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
  • தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
  • சம்பளத்திற்கு மேலதிகமாக சகல குடும்பங்களுக்கும் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக தோட்டங்களில் தற்போது பயன்படுத்தப்படாத காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் கேள்வியாக உள்ள மல்லிகை பூ மற்றும் வேறு மலர் வகைகள், சேதன பசளையை கொண்டு செய்கை பண்ணப்படும் மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயிர் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் காலநிலைக்கு பொருத்தமான இடை பயிர்களையும் பயிரிடுவதற்கான வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
  • பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளில் தற்போது குறைபாடாக காணப்படும் உயர்தர விஞ்ஞானம் மற்றும் வணிக பாடங்களை கற்பிப்பதற்கான வசதிகள் உயர்தர கல்வி போதிக்கப்படும் சகல பாடசாலைகளுக்கும் தேவையான மனித மற்றும் பௌதிக வழங்களை பெற்றுக்கொடுப்பதுடன் கடந்த காலங்களில் முறையற்ற வகையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
  • பயிர்நிலங்களை பாதுகாக்கும் வகையில் நீண்ட காலம் நிலவி வரும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பெருந்தோட்ட மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தற்போது வாழும் தோட்டபுறங்களை அண்டிய பகுதிகளில் கொங்கிரீட் கூரைகளை கொண்ட வீடமைப்புத்திட்டம் ஒன்றையும் அரச மற்றும் தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த வீடமைப்புத் திட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
  • கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்கு கிராமங்கள் மற்றும் தோட்ட மட்டத்தில் புதிய போசாக்கு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் அதேநேரம் சகல தோட்ட மருத்துவமனைகளுக்கும் தேவையான அனைத்து பௌதிக மற்றும் மனித வளத்தை வழங்கி சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • விவசாய ஆராய்ச்சி அறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்காக விவசாய கல்லூரி ஒன்று உருவாக்கப்படுவதோடு சகல வசதிகளை கொண்ட தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று அப்பகுதியில் உருவாக்கப்படும். பெருந்தோட்டத்துறை இளைஞர் யுவதிகளுக்கு தேவையான தொழிற்கல்வியை வழங்குவதற்காக திறந்த பல்கலைக்கழக கிளை ஒன்று அட்டனில் ஏற்கனவே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இந்த பிரதேசங்களில் தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையில் புதிய கைத்தொழில் வலயம் ஆரம்பிக்கப்படும்.
  • அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக மீள் பயிர் செய்கை மற்றும் உர பயன்பாட்டுக்கு தேவையான மூலதனத்தை விநியோகிப்பதுடன் பொருத்தமான முகாமைத்துவ முறையொன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த தோட்டங்களில் உள்ள பழைய தோட்ட பங்களாக்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலான பங்களாக்களாக மாற்றுவதற்கு தேவையான செயற்பாடுகள் உருவாக்கப்படும்.
நன்றி - தினக்குரல்

மலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்


பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது.
1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை, அவர்களின் தன்னெழுச்சி, அரசியல் உத்வேகம் என்பவை இலங்கையின் மைய இனவாத அரசியல் தலைமைகளுக்கு பீதியைக் கிளப்பியது. அதன் விளைவே மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது, குடியுரிமையை இரத்து செய்வது, நாட்டை விட்டுத் துரத்துவது, பரம்பரையாக வாழ்ந்த அவர்களின் வாழ்விடங்களில் இருந்து “அபிவிருத்தி குடியேற்றம்” என்கிற பெயரால் அவர்களை துரத்தியடிப்பது என்பன 1940 களில் தொடக்கப்பட்டன.

இனவாத அரசு அச்சமுறுவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த உருளவள்ளி போராட்டம் குறித்ததே இக்கட்டுரை.

டீ.எஸ்.சேனநாயக்கவின் திட்டம்
1939-1947 க்கு இடையில் மலையகத்தில் கிராம அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கப்பட்ட 148 562 ஏக்கர் நிலத்தில் ஒரு துளி கூட, மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. 1942ஆம் ஆண்டு டீ.எஸ்.சேனநாயக்க காணி, விவசாய அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். 1947 ஆம் ஆண்டு வரை  அப்பதவியை அவர் வகித்தார். விவசாய அபிவிருத்தி என்கிற பெயரில் அவர் மேற்கொண்ட திட்டமிட்ட இன சுத்திகரிப்பு குடியேற்றங்கள் குறித்து புதிதாக சொல்வதற்கில்லை. இந்தக் காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட  குடியேற்றங்களில் காகம, சேனபுர (சேனநாயக்க என்கிற தனது பெயர் பொதிந்த), சீ போர்த் (C Fourth) என்பவற்றுடன் நேவ்ஸ்மியர் என்கிற குடியேற்றமும் அடங்கும். “நேவ்ஸ்மியர் ஜனபதய” என்கிற குடியேற்றம் உருளவள்ளி தோட்டத்தையும் உள்ளடக்கியது. கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டையில் அமைந்துள்ள இந்த உருளவள்ளி தோட்டப் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்தின் போது மலையக மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். “சீ போத் ஜனபதய” என்னும் பெயரில் பழம்பாசி தோட்டத்தையும் குடியேற்ற பிரதேசமாக்கியது. (1)

1945 இல் நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) தோட்டத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறிக்க முற்பட்டபோது, அது கடுமையான எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது. அப்படி அது நிறுத்தப்பட்டதற்கு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.எஸ்.அனியின் (M S Aney) அழுத்தமும் காரணம். (2)

இந்த பாரபட்சம் குறித்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்துக்கு நீண்ட  பதில் கடிதத்தையும் Sir R Drayton எழுதியிருக்கிறார்.

இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்றும் டீ.எஸ்.சேனநாயக்க ஏற்கெனவே ஊடகங்களுக்கு அளித்த விளக்கங்களின்படி தோட்டத் தொழிலுடன் தொடர்பில்லாத 2000 தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டது என்றும் அனியின் (M S Aney) கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சேனநாயக்க அரசாங்கம் உருளவள்ளி தோட்டத்தில் மலையக மக்களை வெளியேற்றி சிங்கள குடியேற்றத்தை நடத்த முற்பட்ட போது, இதை எதிர்த்து மலையக மக்கள் போராட்டத்தை நடத்தியது. தொடர்ச்சியான குடியேற்றங்களை இலங்கையில் இன அழிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக மலையகத்திலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் யட்டிந்தோட்டை உருளவள்ளி தோட்டத்தை கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரித்து, அங்கு வாழ்ந்த தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சி எடுத்தது. அதனை எதிர்த்து தொழிற்சங்கத் தலைவர் கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போராட்டத்திற்கு ஆதரவாக டிக்கோயா, கேகாலை, களனி பள்ளத்தாக்கு, அட்டன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார் சி.வி.வேலுப்பிள்ளை. மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொண்ட போராட்டம் அது. 

1946ம் ஆண்டு வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம்.
1946ஆம் ஆண்டு புளத்கோபிட்டிய எனப்படும் வெற்றிலையூருக்கு அருகில் உருளவள்ளி என்கிற தோட்டத்தில் நடத்தப்பட்ட இப்போராட்டமே இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் நடத்திய முதலாவது போராட்டம். உருளவள்ளித் தோட்டத்தில் வசித்த தொழிலாளர்கள் அருகேயிருந்த காட்டை வெட்டி சுத்தப்படுத்தி தமக்கான தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காக மரக்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார்கள். ஆனால் அரசு அப்பகுதியைச் சுவீகரித்து சிங்கள கிராமங்களைச் சேர்ந்த மக்களைக் குடியமர்த்த முடிவெடுத்தது. தொழிலாளர்கள் வெளியேற மறுக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் அத்துமீறல் குற்றத்திற்காக 1000 ரூபா அபதாரம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் கலந்துகொண்ட முதலாவது போராட்டமாக உருளவள்ளி போராட்டம் குறிப்பிடப்படுகிறது. யட்டியாந்தோட்டையை அண்மித்த உருளவள்ளி தோட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு கிராமிய பெரும்பான்மை இன மக்களை அங்கு குடியேற்றுவதற்காக பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே இம்மாபெரும் போராட்டம் வெடித்தது.

கிழக்கிலங்கையில் அல்லை, கந்தளாய், கல்லோயா என குடியேற்றத்திட்டங்களை உருவாக்கிய அரசு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும் விட்டு வைக்கவில்லை. 

உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஹட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 25 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 1946 யூன் 21 முதல் யூலை 9 வரை இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர். (3)

மக்களின் தன்னெழுச்சியானது இலங்கை இந்தியர் காங்கிரஸ் அமைப்பை மேலும் உத்வேகப்படுத்தியது அதன் விளைவாக நான்கம்ச கோரிக்கையை இந்த ஹர்த்தாலில் முன்வைத்தனர்.
  1. தீவின் மற்ற மக்களுக்கு சமமான உரிமையைப் பெறுதல்;
  2. 5 வருடங்கள் குடியிருந்த சகல இந்தியர்களுக்கும் குடியுரிமை.
  3. தொழில் மேற்கொள்ளக்கூடிய ஒழுங்குகளை நேவ்ஸ்மியர் திட்டத்திலும் அது போன்று ஏனைய தோட்டங்களிலும் எதிர்காலத்தில் ஏற்பாடு செய்தல்.
  4. உரிமையையும், குடியியல் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளை எடுப்பதுடன் இலங்கை வாழ் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் இடைநிறுத்துதல்.(4)

புதிய யாப்பு சீர்திருத்தப் பணிகள் இதே காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்ததால் அது முடிக்கப்படுவதற்கு முன்னர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை இந்தியர் காங்கிரஸ் வலியுறுத்தியது.

பிரிவிக் கவுன்சில் வழக்கு
நேவ்ஸ்மியர் தோட்டத்துக்கு சுப்பிரண்டண்டாக டீ.ஆர்.எம்.ராஜபக்ச என்பவர் 26.06.1946 ஆம் ஆண்டு அன்றைய ஆளுனரால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அன்றைய அரசாங்க அதிபர் ஹென்டர்சன் (Henderson) இவர்களின் கூட்டு ஏற்பாட்டின் பேரில் தான் தொழிலாளர்களை அந்தத் தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

ஹென்டர்சன் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 243 வீடுகளைச் சேர்ந்தவர்களை 31.05.1946 க்கு முன்னர் அப்புறப்படுத்தும்படி பணித்திருக்கிறார். செல்வநாயகமும் அதில் ஒருவர். செல்வநாயகம் அங்கிருந்து வெளியேற மறுத்திருக்கிறார். செல்வநாயகம் தனது தாய் தந்தை மற்றும் அவரின் மனைவியுடன் அந்த வீட்டில் வாழ்ந்துவந்திருக்கிறார். 70 வருடத்துக்கும் மேலாக அவரின் குடும்பம் வழிவழியாக அங்கு வாழ்ந்துவந்திருக்கிறது. இறுதியில் ஹென்டர்சன் சட்டத்துக்கு புறம்பாக அந்த நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்று செல்வநாயகத்தின் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் பெரும் நெருக்கடியாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தகாலம் ஆதலால், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வேறு பல கடமைகளும் சுமைகளும் அதிகரித்திருந்த காலம். (5)

இந்தத் தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது அரச தரப்பு அந்த வழக்கில் தொழிலாளர்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் சின்னசாமி செல்வநாயகம் அந்த வழக்கை அன்று உச்ச நீதிமன்றமாக தொழிற்பட்ட லண்டனில் இருந்த பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு 26.07.1950 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்படி அவர் விடுவிக்கப்பட்டார். இக்கட்டுரைக்காக அத்தீர்ப்பின் மூலப் பிரதியை கண்டெடுக்க முடிந்தது.

“...மேற்கூறிய காரணங்களுக்காக, இந்த முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1946 ஜூன் 28 ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றம் நிறைவேற்றிய தண்டனை தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றும் தாழ்மையுடன் மாட்சிமைக்கு அறிவுறுத்துவார்கள்...” என்று அததீர்ப்பின் இறுதியில் குறிப்பிடப்பட்டது

நேருவின் அக்கறை
இந்த ஹர்த்தால் பெரியளவு பேசப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படும்வரை இந்த ஹர்த்தால் பங்களித்திருந்தது. நேரு இது தொடர்பில் “த இந்து” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார். (6)
“...இலங்கை அரசாங்கத்தின் இந்தக் குடியேற்றத்திட்டம் ஒன்றும் மோசமில்லை. அதுவொரு நல்ல திட்டம். அந்தத் திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு ஒழுங்கான மாற்று எற்பாடுமின்றி பெருந்தொகை மக்களை அந்த நிலங்களில் இருந்து எந்தவொரு அரசாங்கமும் வெளியேற்ற முடியாது.

...ஒரு மாதத்துக்கு முன்னர் பொதுவேலைநிறுத்தம் அங்குள்ள இந்தியர்களின் தொழிற்சங்கத்தால் தொடக்கப்பட்டது. பெரிய அளவிலானார் கலந்துகொண்ட அந்த அமைதியான ஹர்த்தால் நீண்டகாலத்துக்கு பேசப்படக்கூடிய வகையில் குறிப்பிடத்தக்கதொரு ஹர்த்தால்.

இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் கசப்பை நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஹர்த்தால்கள் தொடர்பில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் கொடுப்பது இந்தியாவுக்கு மிகவும் எளிதானது, ஏனெனில், கணிசமான அளவு இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவில் தங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இலங்கை வாழ் இந்திய பிரஜைகளின் எண்ணங்களையும் மீறி சமீபத்தில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ இந்தியா உணவு அனுப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணன் - அளவிலும் மற்றும் பொருளாதார நிலையில் பெரியவர்கள்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்த போது கூட அவர்களோடு சண்டை பிடிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை. மாறாக நல்லெண்ணத்தையே வெளிக்காட்டினேன். ஆனால் இலங்கையில் இன்று நடப்பவை என்னை எரிச்சலடையச் செய்கிறது....”
நேருவின் இந்தப் நேர்காணல் வெளிவந்தது 4 நாட்களின் பின்னர் (14.07.1946)  நேருவின் தொடர்பாளர் அரியநாயகத்துக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் போராட்டம் பற்றியும், உரிய வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற விடக்கூடாது என்பதையும் அழுத்தமாக தெரிவித்திருக்கிறார். (7)

01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை என்றார். இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராமிய குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள் என்றும் வாதிட்டார். (8)

நேவ்ஸ்மியர் பிரச்சினை இலங்கை இந்திய உறவில் இந்தக் காலப்பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

நேரு 30.09.1046 அன்று பொதுநலவாய திணைகளத்தின் செயலாளருக்கு இது குறித்து எழுதியதுடன் அக்கடிதத்தில் தொழிலாளர்களுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை குற்ற வழக்கு தொடுத்திருப்பதன் அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இலங்கைக்கு இது குறித்து ஒரு தந்தியை அனுப்புமாறு அச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (9)

பழி தீர்க்கப்பட்ட மலையக மக்கள்
மலையகத் தோட்டத்தொழிலாளர்கள்  பற்றிய எரிச்சலையும், அச்சத்தையும் இலங்கையின் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்தியதில் உருளவள்ளி போராட்டத்திற்கு முக்கிய பங்குண்டு.

இந்த போராட்டம் கொடுத்த உத்வேகம் தான் 1947இல் நிகழ்ந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் 7 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இதில் கே.ராஜலிங்கம் (நாவலப்பிட்டி), சௌமியமூர்த்தி தொண்டமான் (நுவரெலியா), சி.வி.வேலுப்பிள்ளை (தலவாக்கலை) பி.ராமானுஜம் (உடநுவர), எஸ்.எம.சுப்பையா (பதுளை), எம்.ஆர்.மோத்தா (மஸ்கெலியா), கே.குமாரவேல் (கொட்டகலை ). அன்று மலையகத் தமிழர் அடைந்திருந்த எழுச்சியை அவதானித்த இலங்கை அரசாங்கம் அடுத்த வருடமே பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. 

1947 தேர்தலின் மூலம் பதிய அரசாங்கம் ஆட்சியமைத்தது. பிரதமராக அதே டீ.எஸ்.சேனநாயக்க தெரிவானார். ஒரு சில மாதங்களில் அதாவது 1948இல் இலங்கைக்கு சுதந்திரமும் கிடைத்தது. சேனநாயக்க மேலும் பலமான அதிகாரங்களைக் கொண்ட பிரதமராக இருந்தார். அவரின் அமைச்சரவை குடியேற்றங்களைத் தொடர்ந்தது. சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு கிழக்கிலங்கையில் அல்லை, கந்தளாய், கல்லோயா என குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நேவ்ஸ்மியர் குடியேற்றப் பிரச்சினையின் பிரதான சூத்திரதாரியும் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமராக தெரிவானவருமான டீ.எஸ். சேனநாயக்க இந்திய தோட்டத் தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த பகைமையை நிரூபிக்க பல ஆவணங்களையும், ஆதாரங்களையும் காட்ட முடியும். சுதந்திரமடைந்து சில மாதங்களிலேயே பல லட்சக் கணக்கான மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது இதன் விளைவு தான்.

அடிக்குறிப்புகள்
  1. Planters' Association of Ceylon 1854 - 1954, Colombo, 1954, p. 39.
  2. இது தொடர்பில் அனி இலங்கை ஆளுநர் சேர் ஹென்றி மூருக்கு எழுதிய கடிதம் “BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London. என்கிற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது
  3. S.Nadesan- A HISTORY OF THE UPCOUNTRY TAMIL PEOPLE - NANDALALA PUBLICATION SRI LANKA 1993
  4. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-223)
  5. A HUNDRED YEARS OF CEYLON TEA - 1867-1967 - By D. M. FORREST - CHATTO & WINDUS - LONDON – 1967 (P-244)
  6. 10.07.1946அன்று The Hindu பத்திரிகையில் வெளியான நேருவின் இந்த நேர்காணலானது “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982” என்கிற தொகுப்பில் பிற்காலத்தில் வெளியானது. 
  7. “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982 (P – 549-550)
  8. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-220)
  9. Selected Works of Jawaharlal Nehru, Second Series, Volume 01 - General editor, Shri S. Gopal - A Project of the Jawaharlal Nehru Memorial Fund - 1984

அரங்கம் தந்த சுதந்திரம்! - என்.சரவணன்


அரங்கம் 84 இதழ்களை எட்டியிருக்கிறது. அரங்கத்தின் முதலாவது இதழில் இருந்து எழுதுகிறேன். இதுவரை மொத்தம் 35 இதழ்களில் எழுதியிருக்கிறேன்.

அரங்கத்தை தொடக்குவதற்கு முன்னர் நண்பர் சீவகன் பத்திரிகை குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். அப்படியொரு பத்திரிகையில் அவசியத்தைப் பற்றி நிறையவே பகிர்ந்துகொண்டோம். என்னை எழுதச் சொல்லிக் கேட்ட போது எனக்கு மறுக்க முடியாமைக்கு சில காரணங்கள் இருந்தன. நண்பர் சீவகனை 90களின் நடுப்பகுதியில் இருந்து நான் அறிவேன். சரிநிகருடன் நெருங்கிய நட்பு கொண்டவராக அவர் அப்போது இருந்தார். அதன் பின்னர் பிபிசியில் இணைந்த பின் அவர் உலகம் அறிந்த பிரமுகராக ஆகிவிட்டார். அவரின் குரலை பிபிசி தமிழோசையில் தான் கேட்க முடிந்தது. பிபிசியில் இருந்து அவர் நீங்கிய பின்னர் இந்தப் பத்திரிகையை அவர் வியாபார நோக்கத்திற்காக கொண்டு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. இப்பேர் பட்ட ஒரு பத்திரிகையின் தேவை இருக்கிறது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும், முன்னுதாரண பத்திரிக்கை ஒன்றைக் கொணர வேண்டும் பிரக்ஞையாகவே இருந்ததை உணர முடிந்தது.

அவரின் அந்த பிரக்ஞைக்கு எனது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன். அரங்கம் தொடங்கிய அதே காலப்பகுதியில் நான் தினக்குரலுக்கும், வீரகேசரிக்கும் வாராந்தம் எழுதிக்கொண்டிருந்தேன். எனவே இன்னொரு கட்டுரையும் வாராந்தம் கிரமமாக எழுதுவது என்பது பெரும் சவாலான விடயம். ஆனாலும் அந்த சவாலை என்னளவில் ஏற்றுக்கொண்டு எழுதத் தொடங்கினேன்.

எழுத்துச் சுதந்திரத்தைத் தராத எந்த ஊடகத்திலும் இதுவரை நான் எழுதியதில்லை. பிரதான பத்திரிகைகள் சில என்னை எழுதக் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அப்பத்திரிகைகளின் எழுத்துச் சுதந்திர லட்சணத்தை அறிந்தே நான் நாகரிகமாக தவிர்த்துக்கொண்டேன். தினக்குரலில் எனக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தின் காரணமாக இந்த ஐந்து வருடங்களாக நான் ஞாயிறு வாரப் பத்திரிகைக்கு எழுதிவருகிறேன்.

ஆனால் சீவகன் போதுமான சுதந்திரத்தை எனக்கு அரங்கத்தில் தந்தார். நான் எந்தத் தலைப்பில் எழுதினாலும் அது அவசியமானதாகத் தான் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எழுத்தின் எல்லை குறித்து எம்மிருவருக்கும் இருந்த பொதுப்புரிதல் எமது இணைவை சாத்தியப்படுத்தியது. ஆரம்பத்தில் மலையகம், கொழும்பு, மட்டக்களப்பு பற்றிய கட்டுரைகளை நான் எழுதுவதாகத் தான் பேசி உடன்பட்டிருந்தும் அதன் பின்னர் நான் எழுதுகிற எத்தலைப்பும் வரவேற்புக்குரியதாகத் தான் இருக்கும் என்கிற நம்பிக்கை நண்பர் சீவகனிடம் இருந்தது.

எனவே தான் எந்தத் தலைப்பில் எழுதவும் எனக்கு சுதந்திரம் தந்திருந்தார். அந்த சுதந்திரத்தை நான் நன்றாக பயன்படுத்திக்கொண்டேன். துஷ்பிரயோகம் செய்தது கிடையாது.

பெரும் பத்திரிகைகளில் எழுத முடியாத, அங்கு எழுத சந்தர்ப்பம் வாய்க்காத தலைப்புகளை இங்கு எழுதத் தீர்மானித்தேன். அத் தலைப்புக்கள் அனைத்தும் நான் எழுதுவதற்காக நெடுங்காலமாக காத்திருந்த தலைப்புக்கள். குறிப்பாக வரலாறு தொடர்பில் இதுவரை தமிழில் பேசப்படாத விடயங்களை எழுத ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டேன்.

நான்காவது கட்டுரையில் இருந்து எனது பக்கத்துக்கென்று நிலையான தலைப்பாக “பட்டறிவு” என்று இட்டுக்கொண்டேன். அதில் சுய அனுபவக் கட்டுரைகளாக எழுதவே எண்ணியிருந்தபோதும் சமூகம், வரலாறு, பண்பாடு சார்ந்து எழுதினேன்.

எனது எழுத்துக்கள் அனைத்துமே நூலுருவாக்க இலக்கைக் கொண்டவை. நூலை எழுதி முடிப்பது என்று தொடங்கிய திட்டங்கள் எப்படி காலவிரயமாகிப் போயின என்பது தொடர்பில் நிறைய கசப்பான அனுபவம் உண்டு. எனவே பத்திரிகைகளுக்கு எழுத ஒப்புக்கொள்வதன் மூலம் எனக்கான நிர்ப்பந்தத்தையும், கிரமத்தையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதேவேளை மேம்போக்காக எழுதாமல் நூலுக்கான கட்டுரை என்கிற ஆழத்துடனும், பிரக்ஞையுடனும் அக்கட்டுரைகளுக்கு அதிக அளவு உழைப்பைக் கொடுக்கவே செய்கிறேன். எனவே தான் அரங்கத்தில் வெளிவந்த கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

புதிய வாசகர்கள் எனக்கு அறிமுகமானார்கள். எனது கட்டுரை வெளிவராத வாரங்களில் “ஏன் உங்கள் கட்டுரை வெளிவரவில்லை? என்று ஏமாற்றத்துடனும், உரிமையுடனும் கேள்வி கேட்கும் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்தது அரங்கம்.

எனது கட்டுரைகளை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் கடைசி நேரம் வரை இழுத்தடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் பொறுமையுடன் எனக்காக காத்திருக்கிறார் நண்பர் சீவகன். 

இதுவரை எழுதிய கட்டுரைகள் அத்தனையும் முழுப் பக்கக் கட்டுரைகள். சில கட்டுரைகள் இரு பக்க கட்டுரைகளாகவும் இருந்திருக்கின்றன. இடப்பிரச்சினை இருந்தால் நீங்களே தயக்கமில்லாமல் சுதந்திரமாக வெட்டிக்கொள்ளுங்கள், எப்படியும் இது நூலில் பின்னர் இடம்பெறும், என்று சீவகனிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் முழுமையாகவே அவற்றைப் பிரசுரித்தார். எனது கட்டுரைக்கு முன்னுரிமை அளித்து வடிவமைப்பு செய்து முடித்த பக்கங்களைக் கூட தவிர்த்திருக்கிறார். பொதுவாக கட்டுரையாளர்கள் விரும்புவது வாசகர்களின் வினையாற்றல். பெரும்பாலும் அக்கட்டுரையாளர்களுக்கு அந்த வாசகர்களின் எண்ணங்கள் போய் சேருவதில்லை. ஆனால் அவ்வப்போது என் கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்பையும், எதிர்வினைகளையும், கருத்துக்களையும் சீவகன் பகிர்ந்து வந்திருக்கிறார். இதைவிட ஒரு கட்டுரையாளனுக்கு என்ன வேண்டும்?

அதுமட்டுமன்றி சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை மட்டக்களப்புக்கு என்னை அழைத்து அரங்கம் அலுவலகத்திலேயே வாசகர்களுடனான ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்து அற்புதமான  உரையாடலை மேற்கொள்ள வழிவகுத்தார். பேராசிரியர் மௌனகுரு தலைமையில் மேலும் முக்கிய எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பு எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.

அரங்கம் கிழக்கில் ஒரு புதிய ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தியிருகிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். அரங்கத்தின் உள்ளடக்கம் அப்படி.

கடந்த வாரம் அரங்கத்தின் இறுதி இதழ் இதுதான் சரா என்று என்னிடம் சீவகன் கூறியபோது நான் அதிர்ந்தே போனேன். ஒரு லட்சிய ஊடகக் கனவு தன்னை இடைநிறுத்திக் கொள்கிறது என்கிற செய்தியை இலகுவாக கடந்து போக முடியவில்லை. இந்த இழப்பு எனக்கோ, சீவகனுக்கான இழப்பல்ல மாறாக நமது மக்களுக்கும், தரமான வாசகர்களுக்குமான இழப்பு. அரங்கம் குறுகிய காலத்தில் அந்தளவு சாதித்துக் காட்டியிருக்கிறது.

நன்றி - அரங்கம்


ராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்


“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்திலிருந்து கொம்யூனிசம் வரை இசங்கங்களின் பரிமாணங்களும் அவற்றின் பரிணாமங்களும் தனித்த சுயபெறுமதிகளைக் கொண்டவை. இசம் என்பதை தமிழில் “இயம்” என்றும் அறிமுகப்படுத்தி பல காலமாகின்றன. பெண்ணியம், பார்ப்பனியம் என்பனவற்றை நாம் உதாரணங்களாகக் கொள்ள முடியும். தனிநபர் சார்ந்த கோட்பாடுகள், தத்துவங்கள் நடைமுறை என்பவற்றைக் கொண்டும் உலக அளவில் அந்தந்த சூழல்களில் “இசங்களை” சுட்டுவதும் வழக்கம், மாக்சிசம், லெனினிசம், ட்ரொஸ்கிசம், மாவோயிசம் என அடுக்கிக்கொண்டு போகலாம். 

இலங்கையில் ராஜபக்சவாதமும் (“ராஜபக்சயிசம்”) பலமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கிற சிங்கள பௌத்த தேசியவாத கூட்டுச் சிந்தனை தான். அதற்கென்று ஒரு சித்தாந்த வடிவம் கட்டமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது.
குடும்ப ஆட்சி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவதில் தவறுமில்லை, தடையுமில்லை. ஆனால் எந்த அரசியல் தலைமையும் மக்கள் மத்தியில் இருந்து உருவாதல் அவசியம். மக்கள் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் அந்தத் தார்மீக அரசியல் இடத்தை பெற்றடையவேண்டும். மாறாக தனியொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியையும், அதிகாரத்தையும் சுற்றிவளைத்துப் போடும் கைங்கரியத்துடன் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக தலைமைகளுக்கு கொண்டுவரப்படுவார்களாக இருந்தால் அதைத் தான் குடும்ப ஆட்சி என்று வரைவிலக்கணப்படுத்துகிறோம்.

இலங்கையின் அரசியலில் நிலபிரபுத்துவ, செல்வாக்கைக் கொண்ட பல குடும்பங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. சேனநாயக்க, பண்டாரநாயக்க, ரத்வத்த, ஒபேசேகர, எல்லாவல, கொத்தலாவல, விஜேவர்தன, மீதெனிய, ராஜபக்ச, குமாரஸ்வாமி, பொன்னம்பலம், தொண்டமான் போன்ற குடும்பங்களின் செல்வாக்கை குறிப்பாக நாம் சொல்லலாம்.
அந்த வரிசையில் ராகபக்ச குடும்பத்துக்கு வேறொரு பரிணாமமும். பரிமாணமும் உண்டு. மேற்படி எந்தவொரு குடும்பமும் கொண்டிராத செல்வாக்கை கட்டமைத்துக்கொண்ட ராஜபக்ச குடும்பம் மேற்படி குடும்பங்களிலிருந்து எங்கு மாறுபடுகின்றது என்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தமது குடும்ப வலைப்பின்னலை வளப்படுத்தியதும், பலப்படுத்தியதிலும் தான். மைய அரசியல் அதிகாரத்தை தமது குடும்ப உறுப்பினர்களிடமே மாறி மாறி வைத்துக்கொள்கின்ற அஞ்சலோட்ட பாணி அரசியல் அதிகார முறைமையையே அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள முனைந்தார்கள்.

போர் காலத்தில் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கூட அராஜக, சர்வாதிகார, ஊழல் மிகுந்த, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட, குடும்ப ஆட்சியை மேற்கொண்டதன் மூலம் பயத்தாலேயே பலரை தமது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். போரை வெற்றிகொண்டதன் மூலம் சிங்கள பௌத்த தேசியவாதமயப்பட்ட மக்களை தம் வசம் கவரச் செய்தார்கள். புலிகளை ஒழித்துக்கட்டி போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் என்கிற நாமம் அவர்களின் சகல அட்டூழியங்களுக்கும் தயவு காட்டும் லைசன்சாக ஆக்கப்பட்டது. அதுமட்டுமன்றி ராஜபக்சக்களே இலங்கையின் மீட்பர்கள், ஆபத்பாந்தவன்கள் என்கிற மாயையும் கட்டியெழுப்பப்பட்டது.

ஊழல்களால் நாட்டை சீரழித்து, கடனாளியாக்கி, எந்த நேரத்திலும் இலங்கை திவாலாகும் நிலைக்குத் தள்ளியபிறகும் கூட மகிந்தவாதிகள் இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்றால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பலம் அந்தளவு வலிமையானது என்று தான் விளங்க வேண்டியிருக்கிறது. “பிரபாகரனைக் கொன்றவர்கள் அவர்கள் தவறிழைப்பது தவறே இல்லை” என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு மகிந்தவாத வழிபாடு தலைதூக்கியுள்ளது. யுத்தத்தில் அழிவுகளை சந்தித்த தமிழர் தரப்பு கூட சுய வடுக்களை மறந்தபோதும், யுத்தத்தில் வென்ற சிங்களத் தேசியவாதத் தரப்பு பத்தாண்டுகள் கழிந்தும் யுத்த வெற்றியின் பேரால் மகிந்தவை கொண்டாடி வருகிறது. பாதுகாத்து வருகிறது. பலப்படுத்தி வருகிறது. என்று தான் கூற வேண்டும்.

2015 இல் மகிந்தவின் ஆட்சியை மக்கள் மாறிய பின்னரும் கூட இந்த நான்கு ஆண்டுகளும் மகிந்தவை சிங்கள அரசியல் களத்தில் “ஜனாதிபதி அவர்களே” என்றும் “ஜனாதிபதி மகிந்த” என்றும் விளிப்பதை எங்கெங்கும் காண முடிந்தது. கடந்த நவம்பர் 8 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியின் “சலகுன” என்கிற பிரபல அரசியல் உரையாடலில் கலந்துகொண்ட போது பிரபல ஊடகவியலாளர்களும் கூட அவரை ஜனாதிபதி அவர்களே என்று தான் விளித்தார். மகிந்த கட்டியெழுப்பியுள்ள “மகிந்த வழிபாடு” அப்படி.

பிரபல அரசியல் ஆய்வாளரான பிரஹ்மா செல்லானி சமீபத்தில் “இலங்கை ஜனநாயகத்தின் முடிவு” என்கிற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் “ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு ஆபத்தில் இருக்கிறது.” என்று எழுதுகிறார். அக் கட்டுரையில் அவர் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்ந்தும் நீதித்துரையினரிடம் இருந்து தப்பி வருவது குறித்து அலசியிருந்தார்.

ராஜபக்சவின் வேர்
“ருகுனே சிங்ஹயா” (ருகுணுவின் சிங்கம்) என்று கொடிகட்டிப் பறந்த டீ.எம்.ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் பெரியப்பா. நிரூபமா ராஜபக்சவின் பாட்டனார். அதாவது மகிந்தவின் தகப்பன் டீ.ஏ.ராஜபக்சவின் கூடப் பிறந்த மூத்த சகோதரன்.

1936ஆம் ஆண்டு அரசசபைத் தேர்தலில் சுயேட்சையாக ஹம்பாந்தோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் டீ.எம்.ராஜபக்ச. தொகுதிவாரித் தேர்தல் நடந்த அந்தக் காலத்தில் பெயர்களுக்கு வாக்கிடுவதில்லை. அந்தந்த வேட்பாளருக்குரிய நிறத்தைக் கொண்ட பெட்டியிலேயே வாக்கிட்டனர். விவசாயத்தின் குறியீடாக நெல்லின் நிறமான பழுப்பு நிறத்தையே அவர் தெரிவு செய்தார். அதே நேரத்திலான தோல் துண்டொன்றை அவர் அணிந்து வந்தார். இந்த தோல் துண்டு தான் மகிந்த குடும்பத்தின் குறியீடாக ஊதா நிற துண்டாக இன்று மாறியிருக்கிறது.

டீ.எம்.ராஜபக்ச அரசியல் எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டு சிறை செய்யப்பட்டிருந்தார். அவர் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்ட வேளை அவர் சிறையில் இருந்தார்.

டீ.எம்.ராஜபக்ச என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்களுடன் தான் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். மக்கள் பணிகளுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் அவர் மேற்கொண்ட மோதல்களை இன்றும் பல நூல்கள் பதிவு செய்துள்ளன. தனது சுகவீனத்தைப் பொருட்படுத்தாது அவர் அரச சபை கூட்டத்தில் பங்கு கொள்ள சென்றிருந்த வேளை 18.05.1945 அன்று அரச சபையிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

டீ.எம்.ராஜபக்சவின் திடீர் மரணத்தின் பின்னர் அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டீ.ஏ.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தந்தை) 1947 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். அதில் வென்றார்.

மகிந்தவின் தந்தையார் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்த டீ.எம்.ராஜபக்ச பற்றி மகிந்த குடும்பம் எங்கும் பிரஸ்தாபிப்பதில்லை.

மகிந்த குடும்ப ஆட்சியின் ஆரம்பம்
டீ.ஏ.ராஜபக்சவுக்கு 9 பிள்ளைகள். ஆறு ஆண்கள், மூன்று பெண்கள். மூத்தவர் சமல் ராஜபக்ச அடுத்ததாக ஜெயந்தி, மகிந்த, சந்திரா டியுடர், பசில், கோட்டபாய, டட்லி, ப்ரீதி, சாந்தனி ஆகியோர். டட்லி, சந்திரா டியுடர் ஆகிய இருவரைத் தவிர மிகுதி நால்வரும் அரசியலில் உள்ளவர்கள். தற்போதைய நிலையில் அவர்கள் நால்வருமே ஓய்வு பெரும் வயதையொட்டியவர்கள். மகிந்தவின் ஆட்சியில் சந்திரா டியுடருக்கு பெரும் அரச பதவிகள் வழங்கப்பட்டன. சென்ற 2018 இல் டியுடர் மரணமானார். டட்லி ராஜபக்ச அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் சகோதர்களுடன் கைகோர்த்து ஆதரவளிக்க வந்திருந்தார்.

1951 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஐ.தே.கவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்துகொண்டபோது அவரோடு சேர்ந்து சென்ற ஐவரில் (ஏனையோர் ஏ.பி.ஜெயசூரிய, ஜோர்ஜ் ஆர் டி சில்வா, ஜெயவீர குறுப்பு, டீ.எஸ்.குணசேகர) ஒருவர் டீ.ஏ.ராஜபக்ச. 1952 தேர்தலில் சுதந்திரக் கட்சியின்  சார்பில் பெலிஅத்த ஆசனத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றிபெற்றார்.

56 ஆட்சிக்கு தலைமை தாக்கியவர் டீ.ஏ.ராஜபக்ச என்று இன்று மகிந்த பெருமை பேசினாலும் கூட 56 ஆட்சியில் டீ.ஏ ராஜபக்சவுக்கு பிரதி அமைச்சர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு செல்வாக்கற்றவராகத் தான் இருந்தார்.

பண்டாரநாயக்க கொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 1960 மார்ச் தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து அவர் விலகி பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டு ஐ.தே.க.வால் தோற்கடிக்கப்பட்டார். 1960 யூலை தேர்தலின் போது மீண்டும் சுதந்திரக் கட்சியிடம் வந்து ஒட்டிக்கொண்ட டீ.ஏ. அத் தேர்தலில் பெலிஅத்த தொகுதியில் வென்றார். அதற்கடுத்து 1965 இல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.

ஐ.தே.க.விலிருந்து சுதந்திரக் கட்சிக்கும் அதிலிருந்து மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் பின்னர் இரண்டே மாதத்தில் மீண்டும் சுந்ததிரக் கட்சிக்கு பல்டி அடித்துக்கொண்டிருந்தவர் தான் டீ.ஏ.ராஜபக்ச.

அவருக்கு கோடிக்கணக்கான அரச பணத்தில் கோட்டபாய தனியாக மியூசியம் கட்டிய வழக்கு இன்னமும் முடிவடையவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

1967ஆம் ஆண்டு தனது தகப்பனாரின் மரணத்தின் பின்னர் மகிந்தவை அழைத்து பெலிஅத்த தொகுதியின் அமைப்பாளராக ஆக்கினார் சிறிமா பண்டாரநாயக்க. அத் தொகுதியில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு முதன்முறை சென்றார் மகிந்த.

1977 தேர்தலில் ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த மொத்த ஆசனங்களே 7 தான். தோல்வியடைந்தவர்களில் மகிந்தவும் ஒருவர். கூடவே அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச முல்கிரி தொகுதியில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1978இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் பறிக்கப்பட்ட போது கட்சியை விட்டு அவரை துரத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியில் சம்பந்தப்பட்ட பிரபல “13 பேர் கும்பல்” இல் பசிலும் ஒருவர். அப்போது மகிந்தவும் இந்த கும்பலுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். அந்த சதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பசில் காமினி திசானாயக்கவுடன் ஒட்டிக்கொண்டு ஐ.தே.கவில் இணைந்தார். மகிந்த மீண்டும் மெதுவாகச் சென்று சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டார்.

பசிலின் குடியுரிமை பறிப்பு
1985ஆம் ஆண்டு முல்கிரிகல தொகுதியில் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கவால் தெரிவு செய்யப்பட்டவர் நிரூபமா ராஜபக்ச. அவர் டீ.எம்.ராஜபக்சவின் பேத்தி. ஜோர்ஜ் ராஜபக்சவின் புதல்வி. (அதாவது மகிந்தவின் ஒன்று விட்ட சகோதரி) ஜோர்ஜ் ராஜபக்ச முல்கிரிகல தொகுதியில் போட்டியிட்டு 1960-1976 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிமா அரசாங்கத்தில் பிரதி நிதி அமைச்சராகவும் இருந்தவர். நிரூபமாவின் கணவர் ஒரு தமிழர். 1985 தேர்தலில் சொந்தக் கட்சியில் இருந்தபடி மகிந்தவும், ஐ.தே.கவில் இருந்தபடி பசிலும் நிரூபமாவுக்கு தோற்கடிப்பதற்காக இயங்கினார்கள்.

இந்தத் இடைத்தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றார் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச. அதிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் பாரளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மகிந்த ஆட்சி காலத்தில் அவர் தான் பாராளுமன்ற சபாநாயகரமேற்படு முல்கிரிகல இடைத்தேர்தல் காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் மகிந்த சிறையில் அடைக்கப்பட்டு கொலையைக் கண்ணால் கண்ட சாட்சிகளிருந்தும் பின்னர் விடுதலையானார். மகிந்தவின் தாயாரின் இறப்பின் போது விலங்கிடப்பட்டு தான் மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்டார். விடுதலையாகி 1983இல் வெளியே வந்ததும் திருமணம் முடித்துக் கொண்டார்.

நிரூபமாவுக்கு எதிராக அவதூறு செய்த வழக்கில் பசில் தண்டனை பெற்று ஐந்து ஆண்டுகள் குடியுரிமை பறிக்கப்பட்டது. நிரூபமாவுக்காக வாதாடி பசிலுக்கு அத்தண்டனையைப் பெற்று கொடுத்த வழக்கறிஞர் வேறு யாருமில்லை நிமல் சிறிபால டி சில்வா தான். அந்தத் தீர்ப்பின் படி அத் தேர்தலும் செல்லுபடியற்றதாக்கப்பட்டு மீண்டும் முல்கிரிகல தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்களின் பின்னர் நாட்டைவிட்டு அமெரிக்கா சென்று குடியேறி அமெரிக்கனாக ஆன பசில் மீண்டும் நாட்டுக்குள் பிரவேசித்தது மகிந்த அதிகாரத்தில் வந்த போது தான்.

மகிந்தவின் எழுச்சி
பின்னர் மகிந்த 1989 தேர்தலில் தான் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்றார்.

அதன் பின்னர் 1994, 2000 இல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை தொகுதியிலும், 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

2005, 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் போட்டியிட்டு இரு தடவைகளும் வென்றபோதும், மூன்றாவது தடவை 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தனது தொகுதியை விட்டுவிட்டு குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஆகி பின்னர் 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரானார். அதே ஆண்டு ஒக்டோபர் 26 சதி முயற்சிக்கு திரைமறைவில் தலைமை தாங்கி இரு மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அப்பதவி பின்னர் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

மகிந்த குடும்பத்தின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன என்கிற கட்சியை மகிந்த தலைமை தாங்க முடியாது இருந்தது. இன்னொரு கட்சியில் சேர்வதாலும், அதற்கு தலைமை தாங்குவதனால் சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி நீக்கப்பட நேரிட்டால் சுதந்திரக் கட்சியுடன் இருந்த வரலாற்று பந்தமும், அதிகாரமும் நிலையாக இழக்க நேரிடும் என்கிற பீதியில் இருந்தார். ஆனால் சுதந்திரக் கட்சியின் தலைமையை தனது ஆதரவுக்குள் வைத்திருப்பதன் மூலம் அந்த விதிகளில் இருந்து தப்பி பொ.ஜ.முவுக்கு தலைமை வகிக்கத் துணிந்தார்.

மகிந்தவின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஒருபோதும் நேரடியாக சுதந்திரக் கட்சியின் சார்பில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றதில்லை எனலாம்.

சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தின் செல்வாக்கு பண்டாரநாயக்கவுக்குப் பின்னர் சிறிமா, அனுர, சந்திரிகா போன்றோரின் குடும்ப செல்வாக்கு இருந்த போதும் சுதந்திரக் கட்சியை குடும்பத்தின் கட்சியாக அவர்கள் ஆக்கிக்கொண்டதில்லை. அதுவும் பண்டாரநாயக்க குடும்பம் சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக தமது சொத்துக்களை ஏராளமாக இழந்திருக்கிறது.

ஆனால் மகிந்த குடும்பம் நேர்மாறானது கட்சியை சொந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரையும் அவர்களுக்கு கீழ் அடிபணிய வைத்து காரியம் சாதித்தவர்கள். கட்சி அதிகாரத்தையும் நாட்டின் அதிகாரத்தையும் அனாயசமாக துஷ்பிரயோகம் செய்தனர். ஊழலால் தம்மை பெருப்பித்துக்கொண்டனர்.

ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்கள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வைக்கப்பட்டன. துறைமுகம், வீடமைப்பு, விளையாட்டரங்கம், வீதிகள் என மகிந்தராஜபக்ச குடும்பத்தின் பெயரை ஸ்தாபித்து வலுப்படுத்தும் பணிகளை தம்மிடம் இருந்த அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டனர். “மகிந்த சிந்தனை” என்பதை ஒரு வேலைத்திட்டமாக மட்டுமன்றி தத்துவமாகவே பரப்பினர். அந்த பெயரில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனர். 

மகிந்தவுக்காக பாடல் அமைப்பது, அக்குடும்பத்தினரின் வீரப்பிரதாபங்களைப் போற்றுகின்ற படைப்புகள், இலக்கியங்கள் என்பவற்றை வெளிக்கொணர்ந்தனர், பிரபல சினிமா கலைஞர் ஜெக்சன் அன்ரனி நடத்திய ஒரு பெரு நிகழ்வில் மகிந்த துட்டகைமுனு பரம்பரையிலிருந்து வந்தவர் என்பதை நிறுவ முயற்சித்ததை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.  மகிந்த வழிபாட்டை மெதுமெதுவாக பரப்பப்பட்டது. மகிந்தவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை ஒரு சம்பிரதாயமாகவே முன்னெடுப்பது எல்லாம் நிகழ்ந்தது. இதன் உச்சம் என்னவென்றால் வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, நளின் த சில்வா போன்ற மூத்தவர்களும் கூட விழுந்து கும்பிடும் படங்கள் வெளிவந்தன. அதுவும் நாமல் ராஜபக்சவை 90 டிகிரிக்கு குனிந்து கும்பிடும் படங்களும் வெளியாகின.

மகிந்தவாதத்தின் வீழ்ச்சி
இந்த ராஜபக்சவாதத்துக்கு எதிராகத் தான் 2015 இல் மக்கள் தீர்ப்பு வழங்கினர். சுதந்திரக் கட்சியை தமது குடும்பக் கட்சியாக ஆக்கிக்கொள்ளும் கனவு 2015இல் தகர்ந்தது. அதுமட்டுமன்றி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, மூன்றாவது தடவை ஜனாதிபதியாதல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் போட்டியிட முடியாதது, ஜனாதிபதி வேட்பாளர் வயதெல்லை 35 என்கிற ஏற்பாடுகள் மகிந்த குடும்ப செல்வாக்கை கட்டுப்படுத்தின.

சிங்கள பௌத்த இனவாத சக்திகளாலும், ஊழல், கொலை, கொள்ளை, போன்ற வழக்குகள் குவிக்கப்பட்டவர்களாலும் அணிதிரப்பட்ட மகிந்த தரப்பால் மகிந்த குடும்பத்தைத் தவிர்த்து வேறெவரையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியவில்லை. சிரேஷ்ட தலைவர்கள் எத்தனையோ பேர் இருந்தும் அமெரிக்காவிலிருந்து கோட்டாவை ஜனாதிபதித் இறக்க வேண்டியதன் காரணத்தை வேறென்னவென்று சொல்ல முடியும். மகிந்தவுக்கு அடுத்ததாக யுத்த வெற்றியை ஏகபோகமாக சொந்தம் கொண்டாடுகின்ற வல்லமை கோட்டாவுக்குத் இருப்பதை அவர்கள் நம்பினார்கள். போர் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் உளவியல் பிரச்சினை காரணமாக இராஜினாமா செய்வதாக கூறிவிட்டு இராணுவத்திலிருந்து தப்பி அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராக ஆகிவிட்ட கோட்டாபயவின் தெரிவை ஏற்றுக்கொண்ட சிந்தனா முறையை நாம் ஆராயவேண்டும்.

சில வேளை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளர் ஒருவரை தயார் செய்யப்பட போதும் கூட வேறெந்த சிரேஷ்ட தலைவர்களும் தெரிவாகவில்லை. மாறாக சொந்தக் குடும்பத்தில் இருந்து மூத்த சகோதரனான சமல் ராஜபக்சவைத் தான் தெரிவு செய்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலும் கூட கோட்டாவுக்கு எதிரான அணிகளாக திரள்வதை விட ராஜபக்சவாதத்தை தோற்கடிப்பதற்காகவே தேர்தல் களத்தில் எதிரணிகள் பலமாக பிரச்சாரம் செய்தததைக் கண்டோம். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை விட அவர்களுக்கு முக்கியமானது பொதுத் தேர்தல் முடிவுகளே. எனவே ராஜபக்சவாதிகள் இரண்டாம் கட்டத் தேர்தல் போரை ஆரம்பிப்பார்கள். அதன் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் முக்கிய வகிபாகத்தை வகிக்கும். மகிந்தவாதத்தின் நீட்சியையும், வீழ்ச்சியையும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தான் பெரும் வகிபாகம் வகிக்கப் போகிறது.

நன்றி - தினக்குரல்


ஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு? - என்.சரவணன்

“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ.16 பாரியதொரு மாற்றமொன்றை நாம் நிகழ்த்த இயலும்.”
ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார். அவர் மட்டுமல்ல இந்த 71 வருட காலம் ஆட்சி செய்த சக்திகளும் அதே 71 ஆண்டுகால ஆட்சியை விமர்சிப்பது தான் இந்தத் தேர்தலின் அதி உச்ச நகைச்சுவை.

இலங்கையின் வரலாற்றில் அதிகளவானோர் போட்டியிடும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது. அதேவேளை இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்புமில்லை என்று அறிந்தவர்களும் கூட போட்டியிடுவது ஒரு வகையிலான ஜனநாயக கேலிகூத்துத் தான். இத்தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் வெறும் ஒரு வீதத்துக்கும் குறைவாக வாக்கு பெறக்கூடியவர்கள் பலர் போட்டியிடுவது அனாவசிய சிக்கல்களையும், அனாவசிய தேர்தல் செலவுகளை அதிகரிக்கின்ற செயலும் கூட. மேலும் இந்த வேட்பாளர்களில் கணிசமானோர் பிரதான வேட்பாளர்களால் களமிறக்கப்பட்டவர்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் இரண்டாவது தெரிவை இன்னாருக்கு வழங்குங்கள் என்று வாக்குகளை இன்னொருவர் மூலமாக அபகரிக்கும் கைங்கரியம் என்பது இன்று அம்பலப்பட்டுள்ளது.

ஜே.வி.பி ஏன் போட்டியிடுகிறது.
இடதுசாரி சக்திகளைப் பொறுத்தளவில் பாராளுமன்ற ஜனநாயக முறைமையில் இருக்கக் கூடிய வாய்ப்புகளைத் தவற விடகூடாது என்பதற்காக போட்டியிடும் ஒரு அரசியல் நியாயத்தை முன்வைப்பது வழக்கம்.
“ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகாத வரை அதைப் புறக்கணிக்கக் கூடாது. அதை ஒரு பிரச்சார மேடையாகப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பயன்படுத்த வேண்டும்” என்றார் லெனின். (‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு’)
தமது அரசியல் கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சேர்ப்பதற்கான அவகாசம் தாரளமாக கிடைக்கின்ற காலமே தேர்தல் காலம். எனவே தேர்தல்களில் பங்குபற்றுவதும், பிரச்சார கூட்டங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு, ஊடகங்களில் கிடைக்கும் பிரச்சார வசதி, பல்லூடகங்களின் கவனிப்புக்கு உள்ளாதல், துண்டுப்பிரசுரம், போஸ்டர்கள், வெளியீடுகள், என்பவற்றை பரப்ப கிடைக்கின்ற அவகாசம் என்பவற்றை ஒரு உத்தியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே இக்கருத்தின் உட்பொருள். ஏனைய காலங்களில் இதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த வகையில் தான் ஜே.வி.பி.யும் தாம் வெல்லாவிட்டாலும் இத்தேர்தலை ஒரு பெரு முதலீடாக்கிக்கொள்ள வேண்டும் என்று இறங்கியிருக்கிறது.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடந்தபோது அதில் மணி சின்னத்தின் ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டார். அந்தத் தேர்தலை ஜே.ஆர்.அரசை அம்பலப்படுத்த முக்கிய ஆயுதமாக ஆக்கிக்கொண்டார் விஜேவீர. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் ஆபத்தையும், திறந்த பொருளாதார கொள்கை இலங்கையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்துவிட்டத்தையும் அவர் அம்பலப்படுத்தினார். இத்தேர்தலில் போட்டியிட்ட 6 பேரில் விஜேவீர மூன்றாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார். 273,428 வாக்குகளைப் பெற்று மொத்த வாக்குகளில் 4.19% வீதத்தைப் பெற்றுக் கொண்டார். இதுவரையான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலேயே பிரதான போட்டியாளர்கள் இருவரைத் தவிர மூன்றாமவர் பெற்ற அதிகப்படியான வாக்கு வீதமாகும். 

அடுத்த வருடம் 83 கலவரத்தை ஜே.ஆர் ஆரசு ஜே.வி.பி உள்ளிட்ட மூன்று இடதுசாரிக் கட்சிகளின் தலையில் பழியை போட்டு அவ்வமைப்புகளை தடைசெய்ததன் மூலம் ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்கு தள்ளப்பட்டதுமில்லாமல் ஆயுதக் கிளர்ச்சிக்கும் தள்ளப்பட்டது. 1988 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சிக்காலமாதலால் அத்தேர்தலை ஜே.வி.பி பகிஷ்கரித்ததுடன், அத்தேர்தலில் வாக்களிக்கும் முதல் 12பேர் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தது. பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் அவசரகால நிலையிலும் தான் அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.


1989 இல் ஜே.வி.பி மோசமாக அழிக்கப்பட்டு மீண்டும் 1993இல் பத்து வருடங்களில் பின்னர் பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்து சேர்ந்தது. ஜே.வி.பி மீது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பயத்தை துடைக்கவும், ஜனநாயக அரசியலில் ஈடுபடப்போவது குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான பிரச்சார களமாக 1994 ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொண்டது. ஜே.வி.பி சார்பில் அத்தேர்தலில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி மொத்தம் 22,749 (0.30%) வாகுகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். போட்டியிட்ட 6 பேரில் ஆகக் குறைந்த வாக்குகள் ஜே.வி.பிக்கு தான் கிடைத்திருந்தாலும் அத் தேர்தல் ஜே.வி.பி.யை மீண்டும் அரசியலில் நிலைநிறுத்த சிறந்த முதலீடாக அமைந்தது.

அதற்கடுத்த தேர்தல் 1999 இல் நடந்தபோது நந்தன குணதிலக்க ஜே.வி.பி யின் சார்பில் நிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் போட்டியிட்ட 13 பேரில் முதல் பிரதான போட்டியாளர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது அதிகப்படியான வாக்குகள் 344,173 (4.08 %) ஜே.வி.பிக்குத் தான் கிடைத்தது.

1999 க்குப் பின்னர் ஜே.வி.பி. ஜனாதிபதித்தேர்தல் வேட்பை மற்றவர்களுக்கு தியாகம் செய்தது என்று தான் கூற வேண்டும். 

2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தவை வெல்லவைப்பதற்காக தமது தரப்பில் வேட்பாளரை நிறுத்தாததுடன் மகிந்தவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

2010ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பதற்காக ஜனநாயக மக்கள் இயக்கத்தின் சார்பாக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  ஆதரவளித்தது ஜே.வி.பி. ஆனால் மகிந்த ராஜபக்ச அத தேர்தலில் வென்றார்.

அதன் பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு அதே மகிந்தவை தோற்கடிப்பதற்காக தமது தரப்பில் எவரையும் நிறுத்தாததுடன் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்காக கடுமையாக உழைத்தனர்.

இந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக ஜே.வி.பியின் ஆதரவாளர்களுக்கு தமது வேட்பாளருக்கு  வாக்களிக்கும் சந்தர்ப்பங்கம் கிட்டியிருகிறது. இந்த இடைக்காலத்தில் மக்களின் பொது அபிலாசையை நிறைவேற்றுவதற்காக இரண்டு தசாப்தகாலத்தை விலையாக கொடுத்த நிலையில் தான் இனி இந்தப் போக்கு ஒரு வகையில் அரசியல் தற்கொலை என்கிற முடிவுக்கு வந்து இம்முறை களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

அது மட்டுமன்றி ஜே.வி.பியைப் பொறுத்தளவில் இந்த ஜனாதிபதித்தேர்தலை விட முக்கியமானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றப் பொதுத்தேர்தல். அத் தேர்தலுக்கு முன்னர் தமது கட்சியைப் பலப்படுத்துவதும், வாக்காளர்களை அதற்காக தயார்படுத்துவதும், தமது கொள்கைகளையும் திட்டங்களையும் இப்போதே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் இலக்கத் தயாரில்லை. இதற்கு மேலும் அவர்களை விட்டுக்கொடுக்கும்படியும், தியாகம் செய்யும்படியும் கோர எந்த அரசியல் சக்திகளுக்கும் தார்மீக பலமோ, உரிமையோ கிடையாது. அதேவேளை மோசமான பிரதான வேட்பாளராக அவர்கள் கருதும் கோத்தபாயவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு வாக்கை வழங்கலாம் என்று இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் மறு அர்த்தம் சஜித்துக்கு இரண்டாம் தெரிவை வழங்கி கோத்தபாயவை தோற்கடியுங்கள் என்பது தான். ஏனென்றால் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது வாக்குக் கணிப்புக்கும், இரண்டாவது வாக்குத் தெரிவுக்கும் பெரும் பலம் உண்டு என்பதை அரசியல் அவதானிகள் பலரும் நம்புகின்றனர். 

ஆச்சரியங்கள்
எப்படியிருந்தபோதும் இம்முறை எவரும் 50%க்கு அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை. எப்படியோ இம்முறை பெரும்பாலானோர் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவது உறுதி. அதாவது பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படும் ஒருவர் தெரிவாவார். வரலாற்றில் இப்படி முதற் தடவை நிகழப்போகிறது.

41 பேர் வரை போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதும் இறுதியில் 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கோத்தபாய ராஜபக்சவின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்கிற ஐயத்தில் ராஜபக்ச தரப்பில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவுக்கு கட்டுப்பணம் செலுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தபோதும், கோத்தபாயவின் வேட்புமனு ஆட்சேபனயின்றி எற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதும் சமல் ராஜபக்சவின் வேட்பு மனு தவிர்க்கப்பட்டது. அவர்களின் தரப்பில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும் கூட மீண்டும் அவர்களுக்கு ராஜபக்சகளில் ஒருவரைத் தவிர வேறொருவரை தெரிவு செய்ய தயாரில்லாததைப் பற்றி அரசியல் களத்தில் விமர்சிக்கப்பட்டது.

இம்முறை சகல இனத்தவர்களும், மதத்தவர்களும் போட்டியிடும் தேர்தல் இது. மேலும் வேட்பாளர்களில் இருவர் பிக்குமார்.

முன்னைய அரச தலைவர் ஒருவர் போட்டியிடாத ஒரு தேர்தல். மொத்த 35 பேரில் இரண்டு பேர் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒருவர் சஜித் பிரேமதாச மற்றவர் அனுரகுமார திசாநாயக்க. பிரதான கட்சிகளின் சொந்தச் சின்னங்களே இல்லாத தேர்தலும் இது தான்.

சுதந்திர இலங்கையில் அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதற் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியிருக்கிறது. மைத்திரியின் சாதனைகளில் ஒன்று.

பெண்கள்
முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் 1988 இல் தான் பெண்ணொருவர் போட்டியிட முன்வந்தார். அவர் வேறுயாருமல்ல உலகில் முதல் தடவையாக பிதமராக தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க. அதில் அவர் தோல்வியடைந்தாலும் அதற்கடுத்த தேர்தல் 1994 இல் நடத்தப்பட்ட தேர்தலில் அவரின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டு வென்றார். ஜனாதிபதித் தேர்தலிலேயே அதிக வாக்குவீதம் (62.28%) பெற்றவர் அவர் தான். அதற்கு முன்பும், பின்னரும் அந்த இலக்கை எவரும் அடைந்ததில்லை. 1999 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் இரண்டு தசாப்தகாலமாக எந்தவொரு பெண்ணும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த இரண்டு தசாபதத்திற்குப் பின்னர் இத்தேர்தலில் தான் இலங்கை சோஷலிச கட்சியின் சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா என்கிற பெண் களமிறங்கியுள்ளார். அவர் ஒரு இடதுசாரியாக மட்டுமன்றி ஒரு சூலழியலாளராக அறியப்பட்டவர்.

அமெரிக்க வேட்பாளர்
இன்னமும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோத்தபாய அமெரிக்கரா, இலங்கையரா என்கிற ஐயத்துக்கு இன்னும் தெளிவான பதில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி நிகழ்ந்தால் வரலாற்றில் முதல் தடவை அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவர் ஜனாதிபதியாக ஆனதாக பதியப்படுவார். அவரின் பாரியார் கூட இன்னமும் அமெரிக்கர் தான். ஆக இலங்கையின் முதற் பெண்மணியும் அமெரிக்கராக இருப்பார். கோத்தபாயவின் குடும்பமும், சொத்துக்களும் அமெரிக்காவிலேயே உள்ளன என்பது அறிந்ததே.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை அவர் தெரிவாகி சில வருடங்களின் பின்னர் அவர் வெளிநாட்டவர் தான் பறிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக தெரிவான ஒருவர் பின்னர் அவர் வேறொரு நாட்டுப் பிரஜை என உறுதியாகும் பட்சத்தில் அல்லது அவரின் பதவி பறிக்கப்படும் நிலையோ பாரதூரமான பிரச்சினை. ஆனால் இன்னமும் தான் இரட்டைப் பிரஜை இல்லை என்பதை உறுதிபடுத்துகின்ற பொறுப்பை தட்டிக் கழிப்பது மக்கள் விரோத செயலாகவே பார்க்கப்படுகிறது. நீதித்துறையை விட சம்பந்தப்பட்ட தனிநபருக்கே இதனை நிரூபிக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது.

கோத்தபாய இரட்டைக் குடியுரிமையை முறைகேடாக இலங்கையில் பெற்றுக்கொண்டது பற்றிய பல விபரங்கள் அது தொடர்பிலான வழக்கில் வெளியாகின. அதற்கான விண்ணப்பம் முறைப்படி மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான கட்டணம் கட்டப்பட்டிருக்கிறதா? போன்றவை நிரூபிக்கப்படவில்லை என்பது கவனிக்கவேண்டும். கோத்தபாயவின் “ஜனாதிபதி சகோதரன்” அந்த இரட்டைக்குடியுரிமையை பெற்றுக்கொடுத்தார் என்கிறார்கள். அப்படியென்றாலும் கூட நாட்டின் எந்த சாதாரண பிரஜைக்கும் கொடுக்கப்படாத ஒரு வழிமுறை கோத்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது பொருள்

அமெரிக்க பிரஜை ஒருவர் இன்னொரு நாட்டில் இரட்டை குடியுரிமை பெறுவதாயின் அமெரிக்காவில் பூரனப்படுத்தவேண்டிய சில வழிமுறைகள் உண்டு. கோத்தபாய அவற்றைக் கூட முழுமையாக செய்து முடித்தாரா என்பது இன்றும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது.

விக்டர் ஐவன்
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து பிரபல அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் SriNews என்கிற செய்திச் சேவைக்கு நவம்பர் 3ஆம் திகதி வழங்கிய சிங்கள நேர்காணலில்  இப்படி கூறுகிறார்.
“புதியதொரு ஜனாதிபதி தெரிவாகிவிட்டார் என்பதற்காக இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியில் பெரிய மாற்றமெதுவும் நிகழப்போவதில்லை. அதி அவசியமான சீர்திருத்தங்களை அலட்சியப்படுத்தியே வந்திருக்கிற நாடு நம்நாடு. இத் தேர்தலுக்கு 700 கோடி ரூபாய் செலவாகிறது என்பதை நாம் அலட்சியப்படுத்திவிடமுடியாது. அனைத்து வேட்பாளர்களும் உண்மையான போட்டியாளர்கள் கிடையாது. பாரிய குற்ற வழக்குகளைக் கொண்டிருப்பவர்கள் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். அப்படியானவர்களை அரச சேவையில் ஒரு உத்தியோகம் கூட கொடுக்கமாட்டார்கள். ஒரு லிகிதர் வேலையைக் கூட கொடுக்கமாட்டார்கள். அனைத்து சிக்கல்களையும் கொண்ட நாடு. அரசியல் அறம் என்பது சுத்தமாகக் கிடையாது. எங்கேயோ ஒரு நாசத்தை தேடிச்சென்றுகொண்டிருக்கின்ற நாடு.
கோட்டா ஒரு சிறந்த பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு சிலவேளை பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் தலைவராக ஆக எந்தத் தகுதியும் கிடையாது. கோத்தபாயவுக்கு இன்னமும் இராணுவ  மனநிலை தான் இருக்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் கூட ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தான். சிவில் மனநிலை அவருக்கு கிடையாது. சரத் பொன்சேகாவை போது வேட்பாளராக நிறுத்தியபோது கூட அதை எதிர்த்து இதே கருத்தை முதலில் சொன்னவனும் நான் தான்.
அடுத்தது கோத்தபாய ஒரு சீர்திருத்தவாதி கிடையாது. தன்னை சீர்படுத்தவேண்டும் என்று நேர்மையாக நினைத்தது கிடையாது. செய்த தவறுகளை ஒரு போதும் ஒத்துக்கொண்டது கிடையாது. அத் தவறுகளை நிதமும் நியாயப்படுத்திக்கொண்டிருப்பவர். சகலரும் தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் தான். தவறு என்று உணர்ந்தால் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும், வருந்தவேண்டும். இது எதுவும் அவரிடம் கிடையாது. அப்படி இருக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி வழங்கமுடியும்.” என்கிறார்
இவையெல்லாவற்றையும் விட முதலில் இத்தேர்தல் பிரச்சாரங்களில் கூறப்படுகிற வாக்குறுதிகளுக்கு சட்ட வலுவோ, செல்லுபடி பெறுமதியோ, உண்டா என்கிற கேள்வியை வாக்காளர்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் வேட்பாளர்கள். 19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே. அமைச்சரவையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்துக்கும், பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்குமே உண்டு. அப்படி இருக்கையில் ஜே ஆர் ஜெயவர்த்தன கூறிய “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் சக்தியைத் தவிர அனைத்து இந்த ஜனாதிபதி முறையால் செய்ய முடியும்” என்கிற அதிகாரங்கள் எதுவும் தற்போதைய ஜனாதிபதியிடம் இல்லை என்கிற உண்மையைக் கூறியாக வேண்டும்.

நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates