Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

வரலாற்றில் அரசாங்கமற்ற காலம்! - என்.சரவணன்

“சட்டத்தின் ஆட்சி இல்லாத போது சுதந்திரத்தையும் எதிர்பார்க்கமுடியாது” கிரேக்க பழமொழி ஒன்று உள்ளது. இலங்கையில் ஒக்டோபர் 26 தொடக்கம் அடுத்த 50 நாட்கள் நிகழ்ந்து முடிந்தது அதுதான்.

அரசாங்கமொன்று இல்லை என்பதை உறுதிசெய்கின்ற ஹன்சார்ட் அறிக்கைகள் இரண்டு வெளிவந்தன. நவம்பர் 15, 16 ஆகிய இரண்டும் முக்கிய பதிவுகள்.
“நேற்று 14.11.2018 அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் நான் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை” 
என்கிற 15ஆம் திகதி சபாநாயகரின் அறிவிப்பு ஹன்சார்ட் பதிவு பெற்றது. அதுபோல சபாநாயகரி அந்த அறிவிப்பை பாராளுமன்ற சபைக்கூட்டத்தில் நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை நவம்பர் 16 அன்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க செய்ததுடன் அதை ஏற்றுக்கொள்வதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்து நிறைவேற்றினார். இதுவும் ஹன்சார்டில் பதிவுபெற்றது. அரசாங்கமில்லாத நாட்டை மீட்க இறுதியில் நீதித்துறையே இறுதித் தீர்ப்புவலங்கும் அளவுக்கு இந்த நிலைமைகள் இட்டுச்சென்றது.


இறுதியில் மீண்டும் இலங்கை மக்கள் அரசாங்கமொன்றை நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்துள்ளனர். அரசாங்கமோ, இடைக்கால அரசாங்கமோ இல்லாத ஒரு கோமா தேசமாக கடந்த சில நாட்கள் இலங்கை காணப்பட்டது. அதேவேளை பலரும் நினைப்பதுபோல இலங்கையின் வரலாற்றில் இது தான் முதல் நிகழ்வு அல்ல.

உலகில் பல நாடுகள் இப்படியான நிலையைக் கடந்து வந்திருக்கிறது. இலங்கைக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒரு அரசை நடத்திக் கொண்டு போவது காலா காலத்துக்கு தெரிவாகும் அரசாங்கங்களே. நிலையான அரசுக்கு நிரந்தரமற்ற அரசாங்கங்கள் உரிய காலத்தில் அஞ்சலோட்டம் போல அரசாங்கங்கள் அடுத்தடுத்த அரசாங்கங்ககளுக்கு கைமாற்றிக்கொண்டே ஆட்சிகளை இழுத்துச் செல்வதே வாடிக்கை. சில குறிப்பான நெருக்கடி காலகட்டங்களில் அரசாங்கமற்ற ஆட்சிகள் நிலவியிருக்கின்றன.

டட்லியின் VS கொத்தலாவல

1947இல் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் மூலம் தெரிவான டீ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் இலங்கை 1948 சுதந்திரம் பெற்றபின்னரும் அப்படியே தொடர்ந்தது. 1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அடுத்த தேர்தல் நடத்தப்படவேண்டியிருந்தது. ஆனால் இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க 21 மார்ச் 1952 அன்று காலிமுகத்திடலில் குதிரைசவாரி செய்துகொண்டிருந்தவேளை அதிலிருந்து தவறி விழுந்து பின் அடுத்த நாள் 22ஆம் திகதி மரணமானார்.


டீ.எஸ். அரசாங்கத்தில் இரண்டாவது தலைமைக்குரியவராக அப்போது பண்டாரநாயக்கவே அறியப்பட்டிருந்தார். ஆனால் அவர் சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஐ.தே.க வில் இருந்த மூத்த தலைவர் சேர்.ஜோன்.கொத்தலாவல. அதுமட்டுமன்றி அவர் முதலாவது அரசாங்க சபையிலிருந்தே அதில் அங்கம் வகித்துவருபவர். அதுவும் அவருக்கு மேலதிக தகுதியாக கருதப்பட்டது.

ஆனால் அவரும்  தெரிவுசெய்யப்படாமல் டீ.எஸ்.சேனநாயக்கவின் மகனான அன்றைய காணி, விவசாய அமைச்சராக இருந்த டட்லி சேனநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட குழப்ப நிலையின் காரணமாக ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அதுமட்டுமன்றி ஆளுநர் சோல்பரி பிரபுவும் நாட்டில் இருக்கவில்லை. ஆளுநர் வெளிநாட்டில் இருந்த நிலையில் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரமும் இன்னொருவருக்கு இருக்கவில்லை. ஒரு வாரகாலமாக டீ.எஸ்.சேனநாயக்கவின் இழப்பின் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர் மக்கள். வானொலிகளில் சோக கீதம் தொடர்ந்து இசைத்தபடி இருந்தது. சகல வீடுகளிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டபடி இருந்தது.

ஜோன் கொத்தலாவல, டட்லி, ஜே.ஆர் ஆகிய மூவரின் பெயர்களும் பிரதமர் பதவிக்காக முன்மொழியப்பட்டிருந்தது. ஜே.ஆருக்கு அப்போது அதில் அத்தனை பெரிய அக்கறை இல்லாதிருந்தபோதும் ஏனைய இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் இருக்கவே செய்தது. இப்படி இருந்த சூழ்நிலையில் தான் இறுதியில் சோல்பரி டட்லியை பிரதம் பதவி வகிக்கும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கத்துக்குள்ளிருந்தே 19பேர்  “ஜோன் வேண்டாம்” என்கிற கடிதத்தை அவருக்கே அனுப்பி வைத்திருந்தனர்.

அதுமட்டுமல்ல தமிழ் காங்கிரஸ் கட்சியும் கூட ஜோன் கொத்தலாவலயை விரும்பியிருக்கவில்லை. “டட்லி அரசாங்கத்துக்கு நாங்கள் உடன்படுகிறோம்” என்றார்கள். அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்கள் பலரும் கூட டட்லிக்கு ஆதரவை வழங்கினார்கள். 1952 மார்ச் 21 இலிருந்து நான்கு தினங்கள் நாட்டில் ஒரு பிரதமரற்ற ஒரு ஆட்சியே நிலவியது. அன்று இப்போது போல ஜனாதிபதி முறையும் இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக ஆளுநர் முறை இருந்தது.


இந்த சம்பவத்தால் ஜோன் கொத்தலாவல தனது எதிர்பார்ப்பு கலைந்தது தொடர்பில் ஆவேசமடைந்தது பற்றிய குறிப்புகள் பல நூல்களில் காணப்படுகின்றன. 41 வயதுடைய டட்லி பிரதமர் பதவியை பதவியேற்றார். ஜோன் கொத்தலாவலவுக்கு அப்போது வயது 57.

நான் டீ.எஸ்.சேனநாயக்கவின் உறவுமுறை சார்ந்த வாரிசு, அப்படியிருந்தும் இந்த நாசத்தை ஏற்படுத்திய சோல்பரி பிரபுவை பழிவாங்குவேன். அது மட்டுமன்றி நான் இந்த அரசாங்கத்தில் எந்தவித பதவியையும் ஏற்கவும் மாட்டேன் என்று சத்தமிட்டு கூறிவிட்டு ஒதுங்கினார். 

கொத்தலாவலவின் “பிரதமர் சமர்” நூல்

ஆனாலும் டட்லி கொத்தலாவலவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கினார். ஆனால் கொத்தலாவல சூட்டோடு சூடாக கனடாவுக்கு சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக போய்விட்டார்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளுக்கு “Prime Minister’s Stakes - 1952” (பிரதமர் சமர்) என்கிற தலைப்பிலான 18பக்கங்களைக் கொண்ட நூல் பலரது கைகளுக்கு கிட்டியது. அது ரோனியோவில் பதிப்பிக்கப்பட்ட சொற்பப் பிரதிகளே. அதில்  டீ.எஸ். சேனநாயக்கவின் இறப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த பல சம்வங்களை குறிப்பிட்டு அவை சதி முயற்சிகளே என்று நிறுவ முற்படும் ஆவணமாக வெளியிடப்பட்டிருந்தது. இதை வெளியிட்டவர் யார் என்று அதில் குறிப்பிடாவிட்டாலும் சேர் ஜோன் கொத்தலாவலவால் வெளியிடப்பட்டது என்பதை பலரும் அறிந்திருந்தனர்.

வோஷிங்டனிலிருந்த இலங்கை தூதுவரகத்தில் இருந்து கொத்தலாவலவுக்கு ஒரு அவசரத் தந்தி வந்து சேர்ந்தது. டட்லி சேனநாயக்கவின் பெயரில் வந்த அந்த தந்தியில் “பிரதமர் சமர்” நூலை நீங்கள் எழுதியதன் மூலம் நீங்கள் இதற்கு மேலும் அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியில்லாததனால் உங்கள் பதவி விலகல் கடிதத்தை வோஷிங்டன் தூதுவராலயத்தின் மூலம் இரகசியத் தந்தியாக பிரதமருக்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதத்தின் இறுதியில் “இத்தகைய நடவடிக்கையை எடுப்பதையிட்டு வருந்துகிறேன்” என்று முடிக்கப்பட்டிருந்தது.

அதை உன் “கு..”வில் சொருகிக்கொள்:”

“என்னது இராஜினாமாவா... அதை எடுத்து உன்னுடைய “கு..”வில் சொருகிக்கொள்:” என்று கத்தினார்.

“பிரதமர் அவர்களே!

உங்கள் தகவல் கிடைத்தது. அதை சுற்றி உங்கள் ..... வைத்துக்கொள்ளுங்கள்” என்று கொத்தலாவல பதில் அனுப்பினார்.

கொத்தலாவல உடனடியாக நாடு திரும்பி டட்லியை சந்தித்தார். ஒரு அறிக்கையும் வெளியிட்டார். “பிரதமர் சமர்” நூல் பற்றி பிரதமருடன் உரையாடினேன். அந்த நூலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது விளக்கத்தை பிரதமர் ஏற்றுகொண்டார்.”

இருந்தாலும் அதன் பின்னர் சில காலத்துக்குப் பின் கொத்தலாவல தனது சுயசரிதையை 1956 இல் எழுதி வெளியிட்டார். “ ஆசியாவின் பிரதமரொருவரின் கதை” (‘An Asian Prime Minister’s Story) என்கிற பேரில் எழுதிய அந்த நூலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.


“தலைவர் என்னை விலக்கிவிட்டு அவரின் மகன் டட்லியை வாரிசாக பிரகடனப்படுத்தியதும் எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியை எண்ணிப்பாருங்கள். அது பொய்யென்று மட்டும்தான் நான் சொல்ல முடியும். நான் இந்தளவு நம்பியிருந்த ஒரு தலைவர் இந்தளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது” என்று அந்த நூலில் கூறும் அவர் இன்னொரு இடத்தில்...

“நான் பக்கசார்பற்று அந்த சம்பவத்தை நினைக்கையில் டீ.எஸ். அத்தகைய ஒரு பரிந்துரையை செய்திருக்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன்.”

ஜோன் கொத்தலாவல “சிரிகொத்த” என்கிற பெயரில் இருந்த தனது வீட்டை ஐ.தே.கவுக்கு எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

மக்களின் தீர்ப்புக்காக அரசாங்கத்தை களைத்த டட்லி

இவை எப்படி இருந்தாலும் டட்லி ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சி 13 நாட்களைத் தாண்டவில்லை. “எனக்கு இப்போது வேண்டியதெல்லாம் மக்களின் என்னத்தை நாடிபிடித்தறிவதே. ஆகவே நான் மக்களிடம் செல்லப் போகிறேன்”  என்று கூறி அரசாங்கத்தைக் கலைத்தார் டட்லி. ஒரு புறம் ஜோன் கொத்தலாவல போன்றோரின் நெருக்குதல், இன்னொரு புறம் பண்டாரநாயகவின் புதிய கட்சி சவால் என்பனவற்றின் மத்தியில் வாரிசு என்பதால் தான் தனக்கு இந்தப் பதவி கிடைத்தது என்கிற அவமானத்தை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக ஆக்கிக்கொள்ளலாம் என்று அவர் தேர்தலுக்குத் தயாரானார். 1952 மே 24-30 வரை தேர்தல் நடந்தது.

அந்தத் தேர்தலின் மூலம் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற முதல் அரசாங்கமாக டட்லி அரசாங்கம் ஆட்சியமைத்தது. ஆனால் அந்த ஆட்சியை ஒன்றரை வருடம் கூட டட்லியால் தக்கவைக்க இயலாமல் போயிற்று. 1953இல் நிகழ்ந்த ஹர்த்தால் போராட்டம் நாட்டையே உலுக்கியது. அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலில் நடத்தியது அரசாங்கம் ஓகஸ்ட் மாதம் நடந்த ஹர்த்தாலில் 12பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் ஒக்டோபர் 12ஆம் திகதி டட்லி பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்றார். அடுத்த தேர்தல் 1956ஆம் ஆண்டு நிகழ்வதற்குள் இலங்கையின் இனத்துவ அரசியல் பெரும் வீச்சுடன் மேலெழுந்தது. 1956இல் SWRD பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது. ஆனால் அந்த ஆட்சியும் முழுமைபெறவில்லை. பண்டாரநாயக்க 1959இல் பிக்குவால் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தத்தில் 151 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஐ.தே.க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியை அமைத்துக்கொண்டது. ஆனாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சிகளிடமே இருந்தது. 1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும் அளிக்கப்பட்டதனால் அரசாங்கம் தோல்வி கண்டது. விரைவிலேயே இன்னொரு தேர்தலையும் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது அரசாங்கம். 1960 யூலையில் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்ட சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்சியையும் முழுமை பெறுமுன்னரே 1964 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

சிறிமாவா – டட்லியா

இந்த சந்தர்ப்பத்தில் தான் அரசாங்கமில்லாத இன்னொரு நிகழ்வுக்கும் இலங்கை இரண்டாவது தடவையாக முகம்கொடுத்தது.

“அம்மையார்! நீங்கள் பதவி விலகவேண்டாம் எதிர்வரும் 10 நாட்களில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையை உறுதிபடுத்திவிடலாம்" என்று கொல்வின், என் எம் பெரேரா போன்ற தலைவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க போன்றோர் இராஜினாமா செய்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு இடமளிப்போம் என்றார்கள். பதவிவிலகி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி ஐ.தே.கவினர் வீதிகளில் இறங்கினர். அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அலரி மாளிகைப் பாதுகாப்பதற்காக கூடியிருந்தனர். ஐ.தே.கவினர் கூட்டங்கள் ஊர்வலங்களை நடத்தியதுடன் சில இடங்களில் கைகலப்புகளும் ஏற்பட்டன. 

சிறிமா அம்மையார் பதவிலகவும் தயார் இல்லை. ஐ.தேக.வினர் பின்வாங்கவும் இல்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரம் ஆளுநரின் கரங்களுக்குச் சென்றது. அத்தகைய சூழ்நிலைகளில் அவரே பிரதமரின் அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.

இது பற்றி பிறட்மன் வீரகோன் (இலங்கையின் வரலாற்றில் அரை நூற்றாண்டுகாலம் பிரதமர்கள், ஜனாதிபதிகள் உட்பட 9 அரச தலைவர்களுக்கு செயலாளராக இருந்த சிவில் அதிகாரி அவர்) எழுதிய “Rendering Unto Caesar” என்கிற நூலில் இந்த சம்பவத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“இதன் போது பாக்குவெட்டிக்கிடையில் சிக்கியது போல சிக்கியிருந்தவர் ஆளுநர் கோபல்லாவதான். ஒரு வகையின் அவர் சிறிமா அம்மையாரின் உறவினர். இன்னொரு பக்கம் அவர் நாட்டின் ஆளுநர். அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் அவர் அம்மையாரைச் சந்தித்தார்.
“நான் உங்களை இப்போது சந்திப்பது ஒரு ஆளுநராக மட்டுமல்ல, உங்களுக்கு நெருங்கிய வயதில் மூத்த உறவினராகவும் தான். சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். நாட்டுச் சூழ்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்காமல் உடனடியாக பதவியிலிருந்து விலகுங்கள்.”
அந்த சந்திப்பின் பின் தான் பிரதமர் இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். சில நாட்களாகத் தொடர்ந்த அரசாங்கமற்று நாடு இருந்த அந்த சிக்கலான சூழல் அத்துடன் நிறைவுக்கு வந்தது.

இவர்கள் முழுமையாக ஆண்டதில்லை

ஆக இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி, பண்டாரநாயக்க, சிறிமா ஆகியோர் வரிசையாக எவரும் ஏறத்தாழ 18 ஆண்டுகளில் முழுமையான ஆட்சிகாலத்தை எவருமே ஆளவில்லை. அதுவரையான அனைவரது ஆட்சியும் இடையில் முறிந்த ஆட்சிகள் தான்.

அரசாங்கம் இன்றியிருந்த அந்தக் காலப்பகுதிக்குப் பின் இப்போது தான் ஒக்டோபர் 26க்குப் மைத்திரிபால சிறிசேனவால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இம்முறை இரு தரப்பும் ஆட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று விடாப்பிடியாக இருந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டு ஆட்சி சட்டப்படி யாருக்கு உரியது என்று தீர்ப்பு வழங்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

நன்றி - தினக்குரல்


1978 ஹட்டன் மாநாடு – மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு - பி. ஏ. காதர் லண்டன்


1973 – 1977 ல் மலையகம்

1973 – 1977 காலப்பகுதியில் மலையக தமிழ் மக்கள் முன்னொருபோதும் இல்லாதளவு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர்  சர்வதேச சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாலும் அரசாங்க திறைச்சேரியில் நிதி நெருக்கடி நிலவியதாலும் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி மாவூணவைக் கைவிட்டு மரவள்ளி கிழங்கு போன்ற சுதேச உற்பத்திப் பொருட்களை உண்ணுமாறு வலியுறுத்தியது. உள்நாட்டில் விளையும் அரிசியைக் கூட சுந்தந்திரமாக சந்தையில் விற்பதைக் கட்டுப்படுத்தியது. ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு ஆளுக்கு தலா இரண்டு கிலோ அரிசிக்கு மேலதிகமாக கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் நெல்லும் மரவள்ளிக் கிழங்கும் விளையாத வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரிசியிலும் மாவிலும் முற்றிலும் தங்கியிருந்த மலையகத்தில் முதற்தடவையாக பஞ்சம் தலைவிரித்தாடியது.

இவ் அவல நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில் பெருந்தோட்ட சுவீகரிப்பு என்ற பெயரால் தோட்ட தொழிலாளர்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து இரவோடிரவாக அரசியல் காடையார்களால் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர் . இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட தோட்டதொழிலாளர்கள் தெருவோரங்களில் பிச்சைக்காரர் களாக அலைந்து திரிந்தனர் . அப்போது சர்வதேச அணிசேரா மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இவர்களின் அவலநிலை இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் கண்பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மந்தைகளைப் போல இவர்கள் கூட்டுறவுசங்க லொறிகளில் ஏற்றப்பட்டு வன்னி காட்டில் அநாதைகளாக கொண்டுபோய் விட்டப்பட்டனர்.

பாடசாலைகளுக்கு சென்றிருந்த தமிழ் தோட்ட நிர்வாகிகளின் பிள்ளைகள் வீடு திரும்ப முன்னர் அவர்களை தாம் குடியிருந்த வாசஸ்தலங்களில் இருந்து விரட்டியடித்து விட்டு சிங்களவர்கள் குடியேறினர்.

இவ்வாறு நாதியற்று கிடந்தவர்களுக்கு உதவிகரம் நீட்டுவதற்காகவே டேவிட் ஐயா, டாக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் ‘காந்தியம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் அது மலையகத்திலிருந்து தோட்ட தொழிலாளர்களை புலம் பெயரச்செய்து எல்லைக்காவலர்களாக குடியேற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் கூட.

அன்றைய அரசாங்கம் ஸ்ரீமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கடவூச் சீட்டு பெற்றவர்களை அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த போது தெருக்களில் வைத்து ஆடு மாடுகளைப் பிடிப்பதைப் போல பிடித்து ஜீப்களில் ஏற்றிக் கொண்டுபோய் உடுத்த ஆடையோடு இந்தியாவுக்கு நாடு கடத்தினர். அன்று மலையக புகையிரத நிலையங்கள் யாவும் ஒப்பாரி வீடுகளாக காணப்பட்டன. பிரிக்கப்பட்ட குடுமபங்கள் தமது உறவுகளை புகையிரதங்கள் காவிசெல்வதைப் பார்த்து கதறியழும் காட்சி நெஞ்சத்தைப் பிளப்பதாக இருந்தது. ‘ஒப்பாரி கோச்சி’ போன்ற குறியீடுகள் அன்றைய சிறுகதைகளின் தலைப்பாக இருந்தன.

அப்போதைய அரச அடக்குமுறைக்கு அஞ்சி மலையகததின் பெரிய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்தன. சில படித்த மலையக இளைஞர்களின் அமைப்புகள் இடதுசாரி-முற்போக்கு அரசாங்கம் என அதனை வர்ணித்துக் கொண்டு அதனிடம் சலுகைகளை வாங்கிக்கொண்டு வாளாதிருந்தன.

ஆனால் தோட்ட தொழிலாளர்கள் சுயமாகப்போராடத் தொடங்கினர். மண்ணைப் பாதுகாக்கும் போராட்டம் காணி சுவிகரிப்புக்கு எதிரான போராட்டமாக வெளிப்படத் தொடங்கியது. தோட்டக் காணிகளைப் பிரித்து சிங்களவருக்கு பகிர்ந்தளிப்பதற்கு வந்த அரச அதிகாரிகள் துரத்தியடிக்கப்பட்டனர். அவ்வாறு தலவாக்கெலை – டெவன் தோட்டத்தை அளந்து பிரிக்க வந்த அதிகாரிகள் தொழிலாளர்களால் விரட்டப்பட்டபோது அவர்களுக்கு துணையாக பொலிசார் வந்தனர். அவர்கள் மீது தொழிலாளர் கற்களை வீசி எச்சரித்தனர். அவர்களது நோக்கம் பொலிசாரை தாக்குவது அல்ல– தமது ஜீவாதாரமான தோட்டக்காணிகள் பறிபோகமல் தடுப்பதேயாகும். ஆனால் பொலிசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததனால் சிவனுலட்சுமணன் என்ற இளைஞன் வீரமரணமடைந்தான். மார்பை முன்நிமிர்த்தி முன்பாய்ந்த இவனது வீரமரணம் முழு மலையகத்தையூம் தட்டி எழுப்பியது.

பொலிசாரின் இச்செயலைக் கண்டித்து ஊர்வலம் சென்ற ஹட்டன் தமிழ் மாணவ மாணவியர் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

1977 வன்முறை தாக்குதல்

இவ்வாறு மலையகம் நொந்து தகித்துக் கொண்டிருக்கும் போது 1977 பொதுத் தேர்தல் வந்தது. இனியாவது நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் மலையக மக்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு அள்ளிக்கொடுத்தனர். ஜே ஆர்தலைமையில் ஐ. தே. கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறியது. நுவரெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் 1948ன் பின்னர் முதற்தடவையாக தமிழரின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டார்.  இதனால் மலையக தமிழ் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். தம்மைப் பிடித்த கெட்டகாலம் தொலைந்தது என நம்பினர். ஆனால் நடந்ததோ வேறு.

ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே ஜே ஆர். அரசு மலையக தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஜே. ஆர் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ (“If you want war let there be war; if you want peace let there be peace.”) என பாரளுமன்றத்தில் முழங்கி மேலும் அதனை முடுக்கிவிட்டார். கண்டி மாத்தளை பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. முதற்தடவையாக மலையக மக்கள் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மலையகம் அதிர்ச்சியடைந்தது.

அனைத்து அரசியல் கட்சிகள் மீதும், இரு அரசாங்கங்களின் மீதும் நம்பிக்கை இழந்த மலையக மக்கள் ஏகோபித்த குரலில் தம்மை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். மலையகத்தின் தொழிற்சங்க காரியாலங்கள் யாவும் ஆத்திரங்கொண்ட தொழிலாளர்களினால் நிரம்பிவழிந்தது.

அதுவரை இயங்கிய பல இளைஞர் அமைப்புகள் இரகசியமாக இந்தியா செல்லவேண்டும் என்ற கோஷத்தை ஆதரித்துவிட்டு காணாமற்போயின. இக்காலப்பகுதியில் காந்திய இயக்கம் மத்திய மலைநாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது எனவே வன்னிக்கு வாருங்கள் ‘காணியும், பணமும், பாதுகாப்பும்’ தருகிறோம் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு மலையகத்திலிருந்து வன்னிக்கு ஆள்கடத்தும் பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது.

இச்சமயத்தில் தான் “இந்தியா செல்வதும் வன்னிக்கு ஓடுவதும் தீHவாகாது” மலையகம் முன்னர் வன விலங்குகள் மாத்திரமே வாழ்ந்த காட்டுப்பிரதேசமாகத் திகழு;ந்தது. காடுவெட்டி பெருந்தோட்டங்களை உருவாக்கி முதன் முதலில் அங்கு கால் பதித்தவர்கள் மலையக தமிழர் . எனவே மலையகத்தின் சொந்தக்காரர்கள் மலையகத்தமிழர்களே. கோழைகளாக இந்தியாவுக்கும், வன்னிக்கும் தப்பி ஓடி அங்கு அந்நியர்களாக வாழ்வது பிரச்சினைக்கு தீர்வல்ல. எந்த மண்ணை நாம் உருவாக்கினோமோ – எந்த மண்ணுக்காக சிவனு லட்சுமணன் தன்னுயிரை நீத்தானோ அம்மண்ணுக்காக – நாம் போராடுவோம். எமது மண்ணில் இருந்துகொண்டு எமது உரிமைக்காகப் போராடுவோம்’ என்ற கோஷத்தை முன்வைத்து ‘மலையக வெகுஜன இயக்கம்” என்ற புதிய மலையக இளைஞர் அமைப்பு ஒன்று ஹட்டனையும், தலவாக்கெலையையும் மையமாகக் கொண்டு உருவானது. அதன் தலைவராக காலம் சென்ற வி. ரி. தர்மலிங்கம் (பின்னாள் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர்) இருந்தார். அதன் இணைச்செயலாளர்களாக பி. ஏ. காதர் (அப்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவர் – பின்னர் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகம்) காலஞ்சென்ற ஆசிரியர் தேவசிகாமணி ஆகியோர் திகழ்ந்தனர்.

அதன் தீவிர உறுப்பினர்களாக ஏ. லோறன்ஸ் (தற்போதைய மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம்) காலஞ் சென்ற பெ. சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர்). கே. சுப்பிரமணியம் (தற்போதைய மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலர்) பி. செல்வராஜ் (மலையக மக்கள் முன்னணி) மு. நாகலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்) திலகேஸ்வரன் (மலையக மக்கள் முன்னணி) பிரான்சிஸ் (அப்போது ஹட்செக்கின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்) ஆகியோர் திகழ்ந்தனர். சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு என்பதால் அனைத்து பெயர்களைவும் நினைவு கூருவது கடினமல்லவா?

காந்தியத்தின் வன்னிக்கு ஆள்திரட்டும் செயற்பாடுகளின் மையமாக ஹட்டன் ஹெட்செக் (HATSAC) நிறுவனம் திகழ்ந்நது. டாக்டர் இராஜசுந்தரமும், சந்ததியாரும் அங்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மீதும் ஹெட்செக் நிறுவனத்தின் ஸ்தாபகர் காலஞ்சென்ற அல்போன்சஸ் அவர்கள் மீதும் மலையக வெகுஜன இயக்கத்திற்கு நன்மதிப்பு இருந்த போதும் அவர்களது செயற்பாடுகளுக்கு எதிராக அது கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. திரு. ஏ. லோறன்ஸ் காலஞ்சென்ற தேவசிகாமணி ஆகிய இருவரும் அக்காலத்தில் மிகவும் வேகமானவர்கள். அவர்கள் ஹெட்செக் நிறுவனத்திற்கே போய் அதன் நிர்வாகத்தோடும் டாக்டர் இராஜசுந்தரம் சந்ததியார் ஆகியோருடன் நேரடியாக விவாதித்தனர். இவர்களது அறிவுப்பூர்வமான தர்க்கத்தால் ஹெட்செக் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் மனம்மாறினர். அவர்களில் அதன் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த திரு. சுப்பிரமணியம் (தற்போது ஆசிரியர்) திரு. பிரான்சிஸ் (தற்போது ஒரு தொண்டர் நிருவனத்தின் தலைவராக இருக்கிறார்) ஆகிய இருவரின் மனமாற்றம் அவர்களை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியது.

இப்பிரச்சினை பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு ஒரு இணக்கம் காணப்படும் வரை தம்மால் தமது மனசாட்சிக்கு விரோதமாக செயற்ட முடியாது என அவ்விருவரும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். எனவே இது தொடர்பான ஒரு பகிரங்க விவாதத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய ஹெட்செக் நிறுவனம் முன்வந்தது. டாக்டர் இராஜசுந்தரம் பகிரங்க விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்தார். மலையக வெகுஜன இயக்கத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன் சார்பில் பி. ஏ. காதர் விவாதத்தில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. தலைப்பு “மலையக தமிழர் தனியான தேசிய இனமா? மலையக தழிரின் எதிர்காலத்திற்கான தீர்வு எது? இந்தியா செல்வதா? வடக்கிற்கு இடம்பெயர்வதா? அல்லது மலைலயகத்திலிருந்து கொண்டு தமது உரிமைக்காகப் போராடுவதா?” என்பதாகும்.

திகதி ஞாபகம் இல்லை. 1978ல் அது நடைபெற்றது. அன்றைய தினம் ஹெட்செக் நிறுவனம் ஆர்வமிக்க இளைஞர்காளால் நிறைந்து வழிந்தது.. அதுவரை மலையக வரலாற்றில் அப்படியான ஓரு பகிரங்க அரசியல் விவாதம் நடந்ததில்லை. விவாதத்திற்கு மூத்த ஊடகவியலாளர் காலஞ்சென்ற திரு. தியாகராஜா தலைமைதாங்கினார். எதிர்பாராத விதமாக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களும், சந்ததியாரும் வந்த யாழ்தேவி புகையிரதம் இடையில் தடம்புறண்டதால் அவர்கள் இருவராலும் பங்குகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக தமிழரசு கட்சியின் தொழிற் சங்கமாக அப்போது மலையகத்தில் இயங்கிய ‘இலங்கை தொழிலாளர் கழகத்தின்’ பொதுச் செயலாளர் காலஞ்சென்ற கோவிந்தராஜ் அவர்கள் ‘தமிழர் அனைவரும் ஓரினமே. மலையகத்தில் இனியும் மலையக தமிழர் பாதுகாப்பாக வாழ முடியாது. எனவே வடக்கே சென்று புதுவாழ்க்கை தொடங்க வேண்டும். மலையகத்தில் காணியோ எவ்வித உரிமையோ இன்றி வாழ்வதை விட வடக்கே சென்று காணி உரிமைவுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும் என வாதிட்டார்.

‘மலையகத்தை விட்டு வடக்கே சென்று இரண்டாந்தர பிரஜைகளாக வாழ்வதைவிட நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு – எனது தாய்நாடான இந்தியாவுக்கு – திரும்பிச்சென்று எமது உற்றார் உறவினருடன் வாழ்வதே எமக்கு நிரந்தர தீர்வு’ என திரு பத்மநாதன் என்ற ஒரு சேமநல அதிகாரி வாதிட்டார்.

மலையக வெகுஜன இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பி. ஏ. காதர் தேசிய இனம் என்றால் என்ன? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை கூறிவிட்டு மலையக தமிழர் ஒரு தனியான தேசிய இனம் என்பதை பல்வேறு சர்வதேச உதாரணங்களோடு நிருவிவிட்டு – மலையகம் மலையகத்தவரால் உருவாக்கப்பட்டது. அதுவே மலையக மக்களின் தாயகம். இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முன்னைய தலைமுறை அநேகமாக மறைந்து விட்டது. இப்போதுள்ள தலைமுறை இந்த மண்ணின் மைந்தர்கள்.இவர்களை வெளியே போகச்சொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. மத்திய மலைநாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது மலையகத்தையும், மலையக தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தும்’ என வாதிட்டார்.

விவாதத்தின் முடிவில் சபையின் கருத்து அறியப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள் “இது எனது மண். செத்தால் இங்கு தான் சாவேன்” என நிலத்தில் அடித்து சத்தியம் செய்தனர். சிலர் “நாம் ‘வாருங்கள் காணி தருகிறோம் என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு வன்னிக்குச் செல்ல தயாரானோம். இப்போது சொல்கிறோம்  நாம் கோழைகாளாக எங்கும் ஓடமாட்டோம். எமது உரிமைக்காகப்போராடி அதற்காக உயிர் துறப்போம்” என சுளுரைத்தனர். முடிவில் ஒரே ஒருவரைத்தவிர ஏனைய அனைவரும் மலையக தமிழர் மலையகத்தில் இருந்து தமது உரிமைக்காக போராடவேண்டும் என்ற கருத்தை உறுதியாக ஆதரித்தனர்.

இந்த ஹட்டன் மாநாடுதான் மலையக தேசியவாதத்தின் எழுச்சிக்கு முதல் வித்தை விதைத்தது எனலாம். எனவே இம்மாநாட்டை மலையக வட்டுக்கோட்டை மாநாடு எனக்கூறுவது ஒருவிதத்தில் பொருத்தமானதாகும்.

இவ்விவாதத்தின்போது திரு. பி. ஏ. காதர் சமர்ப்பித்த ஆய்வுரை – படப்பிரதி  செய்யும் தொழில் நுட்பம் இல்லாத அக்காலத்தில்- றோனியோ செய்யப்பட்டு பலராலும் பரவலாக விநியோகிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது – விவாதிக்கப்பட்டது. பின்னர் அது “மலையக தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு அரசியல் புயலைக் கிளப்பியது. யாழ் பல்கலைகழகத்திலும், யாழ் றிம்மர் மண்டபத்திலும் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அப்போது நடைபெற்ற இவ்விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. யோகேஸ்வரன், திரு. மாவை சேனாதிராசா (பாராளுமன்ற உறுப்பினர்), திரு. ஸ்ரீகாந்தா (டெலோ) ஆகியோர் குறிப்பிடத்கக்கவர்கள்.

இச்சிறு நூல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கல்விப் பிரிவுக்கு அப்போது பொறுப்பாக இருந்த நாகலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் காலஞ்சென்ற புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - malaiyagam.lk

1945இல் வெளியான இலங்கை - இந்திய மாதர் சங்கத்தின் அறிக்கையொன்று


வந்தேமாதரம்,
பெண்மை வாழ்க!
அகில இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கத்தின் அறிக்கை .

அவைத்தலைவி அவர்களே!
சகோதர சகோதரிகளே!

இலங்கை இந்திய மாதர் காங்கிரஸ் ஆரம்ப விழாவைக் கொண்டாடுவதற்காக தம் து அழைப்பிற் கிணங்கி இங்கு சமூகமளித்துள்ள உங்கள் அனைவருக்கும் நமது இலங்கை இந்திய மாதர் காங்கிரஸின் பெயரால் யான் நல்வரவு கூறுகின்றேன்.

குறிப்பாகத் தோட்டத் தொழிலாளப் பெண் சமூகத் திடையே, ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், தைரியம், ஐக்கியம், சமத்துவம் சகோதரத்துவம், கால் தூற்றல் அறியாமையைப் போக்குதல் தற்காலத்தில் பெண் சமூகத் திற்குக் கல்வியை பெருக்குதல், ஆணிலிருந்து பெண் எந்த வகையிலும் அடிமை என்ற மனப்பான்மையை ஒழித்துத் தன்னம்பிக்கையோடு வாழவும், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கேள்வி ஞானம் ஆகிய வற்றில் அடிமைப்பட்டுக் கிடப்பதை ஒழித்து அவர்களும் ஆண் மக்களால் சம உரிமையோடு நடத்துவதற்காகவுமே' கலாப் பகுதியில் 7-12-41ல் மாதர் ஐக்கிய சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் அட்வகேட் லெஷ்மி இராஜரத்னம் அவர்களின் தலைமையில், விமரிசையாக நடத்தப்பட்டது. அன்னாரின் தலைமை உரைக்குப்பின் நிர்வாகஸ்தர்கள் தேர்தலையும் நடத்தி வைத்தோம். ஆனால் நிர்வார்கஸ்தர் கள இன்றையவரையிலும் பொறுப்பற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

யான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கப்படாமலும், பெண்கள் வெளிப்பட்டால், ஈரேழு பதினான்கு உலகுகளும் இடிந்து விழுமென்ற கொள்கைகளைக் கையாளாமலும், ஆர்வத்துடன் முன் வந்து பொதுச் சேவை செய்யப் பூரண சுதந்திரமளித்தும், சேவையே சிறந்த பாக்கியமென என் நலத்தையும் வாழ்வையுங் கருதாது, என்னைச் சேவைக்காக அர்ப்பணஞ் செய்த எனது தந்தை ஸ்ரீ என். எம். பழனிசாமி அவர்களுக்கு என் மனப்பூர்வமான வந்தனமளிக்கின்றேன்.

இலங்கை வாழ் இந்திய மூன்று லக்ஷம் இந்திய மாதர்களின் குறிப்பாகத் தோட்டத்தொழிலாளப் பெண் மக்களின் வாழ்க்கை நிலையைச் சீர்திருத்துவதற்காகவும், அவர்களின் நலத்துக்காகவும் சமூகத்திற்குத் தொண்டுபுரியவும் பயிற்சியளிப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இவ் இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கமானது, வளர் பிறைச்சந்திரன் போன்று வளர்ந்தோங்கி வருவது தங்கள் போன்ற அபிமானிகளுக்குப் பெருமையையும், என் போன்ற ' ஊழியர்களுக்கு, மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்குமென்பது நிச்சயம்!

முடிவுரையாக அகில இலங்கை இந்திய மாதர் ஐக்ய சங்கத்தின் முன்னேற்றத்திற்காக என்னுடன் சகல விஷயங்களிலும் பூரணமாக ஒத்துழைத்த எல்லோருக்கும் என் மனப்பூர்வமான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு என து இவ்வறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப் பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்ஙனம்,
சிவபாக்கியம் பழனிசாமி
அகில இலங்கை இந்திய மாதர் ஐக்ய சங்கத் தலைவி.
25-11-45.


நன்றி நூலகம் நண்பர்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்களும் யாப்பைக் கூட்டாக புணர்தலும்! - என்.சரவணன்


இன்று 13.12.2018இல்  வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்தை உறுதிசெய்வதில் 19வது திருத்தச் சட்டத்தின் வகிபாகம் முக்கியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டதும் அந்த திருத்தச் சட்டத்தில் தான்.

சிவில் சேவைத்துறை ஊழலும், அரசியல்/அதிகாரத்துவ தலையீடும், பணத் தலையீடுகளும் நிறைந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அயோக்கியர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதை தடுப்பதகாகத் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அவசியத்தை வலியுறுத்தி பல ஆண்டுகளாக சிவிலியன்கள் தரப்பில் இருந்து பல கோரிக்கைகளும், வேண்டுகோள்களும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சமீபத்தில் குற்றப்புலனாய்வு திகாரி நிஷாந்த சில்வாவை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் செய்திருந்ததும் அந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தியது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தான் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். மகிந்த காலத்தில் இடம்பெற்ற கொலை, ஆட்கடத்தல், கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வருபவர் நிஷாந்த சில்வா. தற்போது மகிந்தவை குறுக்குவழியில் பிரதமராக்கியதும் முதலில் மகிந்த மைத்திரி கூட்டு செய்தவேளை; தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தம்மை மீட்பதற்கான முதல் கட்டமாக அந்த குற்றங்களை விசாரித்துவரும் அதிகாரியை அந்த விசாரணைகளிலிருந்து அகற்றியது. ஆனால் இந்த சுயாதீன ஆணைக்குழுவால் தான் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் போன்றோரின் ஆணைகளையும் கூட தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. 

நல்லாட்சியின் 19

2015 “நல்லாட்சி” எனும் பேரில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகையில் அவர்களின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் யோசனையாகும். அதை அரசியலமைப்பு ரீதியில் செய்வதற்கு அதுவரை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு அதுவரை இருந்த தடையை இக்கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தன் மூலம் சரிசெய்ய முனைந்தன. காலம் இழுபறிபட்டுக்கொண்டு போன நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் யோசனை கைவிடப்பட்டு அரசிலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டமாக அது சுருங்கியது. 19வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரும் எதுவித அம்சங்களும் இருக்கவில்லை. ஆனால் அத்திருத்தச் சட்டம் செய்த முக்கிய நல்ல அம்சங்களில் ஒன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது.

1978 அரசியலமைப்பை விட 2000 இல் சந்திரிகா அரசாங்கத்தின் போது (தற்போது இருப்பதை விட) முன்னேறிய அரசியலமைப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய எதிர்க்கட்சி ஐ.தே.க பாராளுமன்றத்திலேயே வைத்து அதனை கிழித்தும், எரித்தும் அந்த முயற்சியை கைவிடச்செயதனர்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கட்டற்ற அதிகாரங்களை இதுவரை வந்த அனைத்து ஜனாதிபதிகளும் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். அந்த நிலைமையை ஒழிப்பதாகக் கூறி வந்த சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால ஆகியோர் அனைவரும் அந்த அதிகாரத்தில் ருசிகண்டு அனுபவித்தார்கள். மேலதிக அதிகாரங்களைக் தமக்குக் குவித்துக்கொள்ள பேராசைப்பட்டார்கள். அவர்களிடம் குவிந்திருந்த அதிகாரங்களைக் கொண்டு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டார்கள்.

அந்த அதிகாரங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தத்தால் கூட ஜனாதிபதியின் எச்சசொச்ச சர்வாதிகாரத்தையும், அதிகார பேராசையையும் கட்டுபடுத்த முடியவில்லை என்பதைத் தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.


கடந்தகால சில உதாரணங்கள்:

78 தொடக்கம் 1994 வரையான 16 ஆண்டு காலம் நிறைவேற்று ஜனாதிபதிகளாக ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகியோர் இருந்திருக்கிறார்கள். 1994இலிருந்து இதுவரையான 24ஆண்டுகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள். 

1980இல் இடம்பெற்ற பொதுவேலை நிறுத்தத்தையும், தொழிற்சங்கங்களையும் அடக்கியொடுக்குவதற்கும் அது முதன்  முதலில் தான்தோன்றித்தனமாக, பயன்படுத்தப்பட்டது.

1983 கறுப்பு யூலையையும், யுத்தத்தையும் ஆரம்பிப்பதற்கு இந்த நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கவென 1987இல் இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு அதன் பின்னர் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த ஒப்பந்தம் அமுலாக்கப்படவில்லை. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாணசபையும் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மோசமான அநீதியான அரசியல் முடிவுகள் நிறைவேற்று அதிகார ஜனாதிமுறையால் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன

சுயாதீன ஆணைக்குழுக்களின் தனித்தன்மை

19ஆவது திருத்தத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் போல தொடந்தும் மேற்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட “அரசியலமைப்பு பேரவை”க்கு கட்டுப்பட்டிருக்கும் இந்த ஆணைக்குழுக்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளில் எல்லாம் அந்த ஆணைக்குழுக்களை நியமிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவரே தவிர பாராளுமன்றமல்ல. உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பின் 316 (1) இன் படி அரச சேவை ஆணைக்குழுவுக்கும், 324 (2) இன் படி தேர்தல் ஆணைக்குழுவுக்குமான உறுப்பினர்களை இந்திய ஜனாதிபதியே நியமிப்பார். நமது நாட்டிலும் ஆரம்பத்தில் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே அப்படித்தான் இருந்தது. 1972 யாப்பின் பிரகாரம் எல்லை நிர்ணய ஆணைக்குழு, அரச சேவை ஆலோசனைச் சபை, அரச சேவை ஒழுக்காற்று சபை, நீதித்துறை ஆலோசனைச் சபை என்பவற்றுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமித்தார். 17வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் வரை ஜனாதிபதியிடம் தான் அதற்கான அதிகாரம் இருந்தது.

ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென, பரந்துபட்ட மக்களின்; கோரிக்கையின் விளைவாக 17ஆவது திருத்தம் 2001 ஒக்டோபரில் கொண்டுவரப்பட்டது ஆனால் அத்திருத்தமும் உரிய அதிகாரங்களை ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கவில்லை. 17 வது திருத்தச் சட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவளித்திருந்தது ஜே.வி.பியின் அழுத்தத்தின் காரணமாகத் தான் முதன்முறையாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அத்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டன. ஆனால் தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படாமை மூலம் 17ஆவது திருத்தம் முதல்முறையாக மீறப்பட்டது. தான்தோன்றித்தனமான முறையில் அதிகாரம் தொடர்ந்தும் மக்கள் விரோத வழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.


ஜனாதிபதியின் தான்தோன்றித்தனம்

அரசியலமைப்பு பேரவையில் பரிந்துரையின்றி எந்த ஒரு உறுப்பினரையும் ஆணைக்குழுக்களுக்கு நியமிக்க முடியாது என்கிற விதியை மீறி ஜனாதிபதி அந்த அதிகாரங்களை தன் கையில் எடுத்துக்கொண்டு அனைத்து நியமனங்களையும் எதேச்சதிகாரமாக நியமித்தார்.

மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு 18வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரல் கொண்டுவரப்பட்டபோதும்; அத்திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மேலதிக அதிகாரங்களை தனக்கு குவித்துக்கொள்வது தான் நிகழ்ந்தது. நீதிமன்றங்களின் அதிகாரங்கள் சில பறிக்கப்பட்டன. நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் மீது கூட தலையீடு செய்யப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக கண்துடைப்புக்காக அதிகாரமற்ற சபைகள் உருவாக்கப்பட்டன. நீதிமன்றமும் பொலிசும் ஜனாதிபதியின் தேவைக்கேற்ப செயற்பட்டன. 

ஜனாதிபதி அமைச்சரவையின் பிரதானி ஆவார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிகள் ஆகிய அனைவரையும் ஜனாதிபதியே நியமித்தார். அதேசமயம் பாதுகாப்பு அமைச்சுப் பதவியையும், நிதியமைச்சுப் பதவியையும் அவரே வைத்துக்கொண்டார். முதலீட்டுச் சபை, தென்னிலங்கை அதிகாரசபை, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகம், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகிய அனைத்தும் எதுவித சட்டமுமில்லாமல் ஜனாதிபதி தன்வசமாக்கிக் கொண்டார்.

18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்க முடியும் என்கிற விதியை மாற்றி எத்தனை தடவை என்றாலும் வகிக்க முடியும் என்று மாற்றினார். ஏற்கெனவே ஜனாதிபதிக்கு இருந்த பெருமளவு அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டதுடன், அதுவரை இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டன.

19வது திருத்தச் சட்டம் இந்த விதிகளை மாற்றியது. இரண்டு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதிப்பதவியை வகிக்க முடியும் என்று மாற்றியது. அத்துடன் இல்லாதொழிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் அந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்யும் வகையில் மேலதிக அதிகாரங்களை வழங்கியது.

நீக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களை நியமிப்பதற்காக இருந்த அரசிலமைப்புப் பேரவை மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் ஆணைக்குழுக்களின் மீதான ஜனாதிபதியின் தலையீடு முறிக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள்
  • தேர்தல் ஆணைக்குழு
  • அரச சேவை ஆணைக்குழு
  • தேசிய பொலிஸ் ஆணைக்குழு
  • மனித உரிமைகள் ஆணைக்குழு
  • இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
  • நிதி ஆணைக்குழு
  • எல்லை நிர்ணய ஆணைக்குழு
  • கணக்குச் சேவை ஆணைக்குழு
  • தேசிய பெறுகை (விலைமனுகோரல்) ஆணைக்குழு

ஆணைக்குழுக்களின் நம்பகம்

விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் நிரந்த ஆணைக்குழுக்களுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படுவதுடன் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறலைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஆணைக்குழுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மாத்திரம் பாராளுமன்றத்திற்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறுவதற்கான அவசியம் கிடையாது என்ற வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தால் மட்டும்போதாது. அது இயங்குகிறதா? உரியவர்களுக்கு, உரிய நேரத்தில், உரிய வகையில் நீதி கிடைக்கச் செய்கிறதா என்பதை கையாளும் பொறிமுறை அரசிடம் இல்லை. அதுவே அதன் அர்த்தமற்ற தன்மைக்கு கட்டியம் கூறுகிறது.

அந்த ஆணைக்குழுக்கள் தாம் இயங்குவதற்கு போதிய வளங்களை அரசாங்கம் ஒதுக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை சுமத்தி வந்திருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியில் கொண்டுவந்த 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தெரிவிலும் இந்த இன விகிகதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கை இரத்தாக்கப்பட்டதில்லை. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்ததில்லை அரச நிறுவனங்கள். இந்த பாரபட்சங்களை சரி செய்வதற்கு இந்த ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் பொறிமுறை என்ன? இந்தக் கேள்வியை பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் வினவி வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் தான்.

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், பரிந்துரைகளுக்கும் என்ன நடந்தன என்பது பற்றி நாம் அறிவோம். வெறும் கண்துடைப்பு ஆணைக்குழுக்களாக அவ்வப்போது மக்களின் கோரிக்கைகளையும், கவனத்தையும் திசைதிருப்பும் ஆணைக்குழுக்களாகவே இலங்கையின் ஆணைக்குழுக்கள் வரலாறு முழுக்க இருந்திருகின்றன. எனவே ஆணைக்குழுக்களை நம்பிக்கையுடன் பார்க்கும் காலம் கடந்துவிட்டது. சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்வதும், அதற்கான வளங்களை ஒதுக்கி வேகமாக செயற்பட ஒத்துழைப்பதும், அரசியல் தலையீடற்றதாக அதனை பேணுவதற்கு உத்தரவாதமளிப்பதும் அரசின் கடமை. பாரிய பொறுப்பும் கூட. அரச அமைப்பு முறை மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை சரிசெய்வதற்கு இருக்கின்ற முக்கிய பொறிமுறை இந்த ஆணைக்குழுக்கள். அந்த பொறிமுறை சீர்கெட்டால் மக்களின் இறுதி நம்பிக்கையும் சீர் கெட்டுவிடும் என்பது உறுதி.

நன்றி - தமிழர் தளம்


கதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்


யார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரா அல்லது ஜனாதிபதியின் விருப்பைப் பெற்றவரா என்பதை சட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்துமளவுக்கு பூதாகரமாகியுள்ளது இந்தப் பிரச்சினை. இந்த சர்ச்சையை உருவாக்கியிருப்பவர் ஜனாதிபதி. தான் விரும்பிய ஒருவரைத் தான் நியமிப்பேன் என்றும் அது அரசிலமைப்பின்படி சரியானதே என்றும் வாதிடுகிறார். இதே மைத்திரிபால 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவால் பிரதமராக முன்மொழியப்பட்ட கதிர்காமரை நியமிக்கவிடாமல் மகிந்தவுக்குத்தான் பாராளுமன்றத்தில் ஆதரவு அதிகம் என்று வாதிட்டு மகிந்தவை பிரதமராக்க காரணமாக இருந்தவர். கதிர்காமர் போன்ற “தமிழர்களுக்கு” வரலாற்றில் நேர்ந்த கதியை நாம் சற்று திரும்பி பார்ப்போம்.

கடந்த 03.12-2018 அன்று ரணில் விக்கிரமசிங்க பொதுக்கூட்டத்தில் உரையாடிபோது இந்த கருத்தை உறுதிசெய்யும் வகையில் இப்படிக் கூறினார்.
“மகிந்த அன்று பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்தில் நான் சந்திரிகாவை சந்தித்தபோது அவரிடம் நேரடியாக கேட்டேன், ஏன் நீங்கள் மகிந்தவை நியமித்தீர்கள் என்று. அதற்கு அவர் பாராளுமன்றத்தில் அதிக ஆதரவை அவர் கொண்டிருக்கிறார் என எனக்கு பதிலளித்தார்.”
ரணில் அந்தப் பேச்சின் போது கூடவே இன்னொரு விடயத்தையும் கூறினார். “ஜாதிக ஹெல உறுமய லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமராவதை விரும்பவில்லை. அவர்களும் எதிர்த்து வருகிறார்கள்” என சந்திரிகா கூறியதாகக் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமய அன்று மோசமான தமிழர் விரோதப் போக்கை முன்னெடுத்த கட்சியாக வளர்ந்திருந்தது. அந்த 2004இல் தான் சிங்கள வீர விதான ஒரு இயக்கம் என்கிற நிலையில் இருந்து ஒரு கட்சியாக பரிணமித்து சிஹல உறுமய என்று பெயரை வைத்துக் கொண்டதுடன் பின்னர் ஜாதிக ஹெல உறுமய என்று பெயரை மாற்றிக்கொண்டார்கள். அந்தத் தேர்தலில் ஹெல உறுமய கட்சியானது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் தனித்து 5.97% வீத வாக்குகளைப் பெற்று 9 உறுப்பினர்களை வென்றது. அந்தளவுக்கு பேரினவாதம் செல்வாக்குபெற்றிருந்த காலம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

கதிர்காமரை பிரதமராக்குவதில் அன்றைய ஜே.வி.பியும் ஆதரவு தெரிவித்திருந்தது என்று அன்றைய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நந்தன குணதிலக்க சமீபத்தில் சமூக வலைத்தளமொன்றில் தகவல் வெளியிட்டிருந்தார். தனக்கு பிரதமர் பதவி தராவிட்டால் அம்பாந்தோட்டையில் இருந்து கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு வந்து அலரி மாளிகையின் கூரையில் ஏறி நின்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச ஒரு அவசரத் தகவலை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பி வைத்ததாக அவர் அந்தக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சொன்னது
இந்தக் கதையை உறுதிப்படுத்துகின்ற விபரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 16.07.2017அன்று “திவய்ன” சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.


“மகிந்தவும் நானும் நெருங்கிய நெருங்கிய பழைய நண்பர்கள். 2000ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வின் போது சந்திரிகா அவர்கள் எஸ்.பீ.திசநாயக்கவுக்கு வாக்களித்தபோது என் பக்கம் இருந்த முக்கியமானவர் தான் மகிந்த. 2005 தேர்தலில் நாங்கள் வென்றோம். பிரதமர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நேரத்தில் சந்திரிகா அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். “நீங்கள் பொலன்னறுவையில் இருக்காமல் உடனடியாக வாருங்கள்...” என்றார். உடனடியாக எப்படி வருவது ஐந்து மணித்தியாலங்களாவது ஆகுமே என்றேன். “அப்படியென்றால் நான் ஹெலிகொப்டரை அனுப்புகிறேன்” என்று கூறி அவர் ஹெலிகொப்டரை அனுப்பினார். நானும் வந்து சேர்ந்தேன். அங்கே லக்ஷ்மன் கதிர்காமர், எஸ்.பீ.திசாநாயக்க, பாலபட்டபந்தி போன்றோர் ஜனாதிபதியுடன் இருந்தார்கள்.

“இப்போது யார் பிரதமர்” என்று என்னிடம் கேட்டார். “ஏன் கேட்கிறீர்கள்” என்றேன். “இல்லை.. ஜே.வி.பியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அவர்கள் அதிகாலை அரசியல் குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை தெரிவு செய்யும்படி கேட்டிருக்கிறார்கள். அவரை முடியாது போனால் அனுரா பண்டாரநாயக்கவை அல்லது மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக ஆக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறி டில்வின் சில்வாவிடம் இருந்து வந்த கடிதத்தை என்னிடம் காட்டினார்.

“ஜே.வி.பிக்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ளமுடியாது. நாம் சுதந்திரக் கட்சியின் தேவையின்படியே பிரதமரை நியமிப்போம். மகிந்தவை தெரிவு செய்வது தான் பலரின் விருப்பம்” என்று நான் கூறினேன்.

பின்னர் கதிர்காமரை சமாளித்தோம். “இனி என்ன செய்வது” என்று கேட்டார் சந்திரிகா அம்மையார்.

“மகிந்தவை பிரதமராக ஆக்குங்கள்” என்று நான் தான் கூறினேன். 2005இல் மகிந்தவை ஜனாதிபதியாக்குவதற்காக நான் பட்ட கஷ்டத்தை நான் தான் அறிவேன்.” 

ரணில் அரசைக் கவிழ்த்தது
2001 டிசம்பர் 05 நடந்த பொதுத்தேர்தலில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதும் விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக தென்னிலங்கையில் ரணில் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நாட்டை பிரித்துக்கொடுக்கப் போவதாக பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமய, இன்னும் பல சிங்கள பேரினவாத இயக்கங்களுடன் சேர்ந்து ஜே.வி.பியும் இனவாத அணியில் இருந்தபடி அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அந்த பிரச்சாரத்தின் விளைவு பேச்சுவார்த்தையை முற்றிலும் தோற்கடிக்கும் வரைக்கும் கொண்டு சென்றது. சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகள் கூட கடக்காத ரணில் அரசாங்கத்தை 07.02.2014 அன்று  கலைத்தார்.


இந்த இடைக்காலத்தில் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுடன் பலமான கூட்டை சுதந்திரக் கட்சி உருவாக்கியிருந்தது. அந்தக் கூட்டானது அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான கூட்டாகவே உருவாகியிருந்தது. 2004 ஏப்ரல் 2 அன்று நடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு ஆளுங்கட்சியில் பங்கெடுத்தது. மொத்தம் 39 உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் செல்வாக்கு அரசாங்கத்தில் ஓங்கியிருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் பிரதமரையும் தெரிவு செய்யும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றார்கள். 

கதிர்காமர் : சிங்கள விசுவாசி!?
சந்திரிகா அரசாங்கம் பதவியிலமர்ந்ததுமே லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக ஆக்க முயற்சித்தது வெறும் தகுதிக்காக மட்டுமல்ல உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் ஒரு தமிழரை முக்கிய அரசாங்கப் பொறுப்பில் இருத்தியிருக்கிறோம் என்பதை அரசியல் பெருந்தன்மையாகக் காண்பிப்பதற்கும் தான். தேசியப் பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அதன் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஆக்கப்பட்டார்.  கதிர்காமரும் தன்னை எவரும் தமிழர் சார்பானவர் என்று சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்கிற அளவில் தனது விசுவாசத்தை அளவுக்கு அதிகமாகவே காண்பித்தார். குறுகிய காலத்திலேயே விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் தடை செய்விக்கும் அளவுக்கு அன்றைய சிங்கள அரசின் மீதான அவரின் தீவிர விசுவாசம் வெற்றிகண்டது. ஆட்சியில் வந்து மூன்று வருடத்துக்கு 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடைசெய்ய வைத்த பின்னர் சர்வதேச அளவில் ஏனைய நாடுகளும் அதையே பின்பற்றின.

தான் ஒரு தமிழர் தனக்கு இலங்கையில் எந்தவித பிரச்சினையும் இல்லையே என்கிற தொனியில் அவரது சர்வதேச பேச்சுகள் அமைந்திருந்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களோடு தொடர்பில்லாத, தமிழர்களோடு அரசியல் பணிகளில் ஈடுபடாத, தமிழைப் பேச முடியாத, பல தமிழர்களால் தமிழராக அறியப்படாத ஒருவராக இருந்தார் என்பதை வெளிப்படையாக பலர் அறிந்திருந்தார்கள். அவரது “தமிழ் பூர்வீக” அடையாளம் சிங்களத் தரப்புக்கு வெற்றிகளை குவித்தது. அவர் பெளத்தர்களுக்காக களத்தில் இறங்கினார்.

லக்ஷ்மன் கதிர்காமர் 1999 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுதலை நாளாக்கும் பிரேரணை ஐ.நா. வில் நிறைவேறியது. இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.


100 வருடங்களுக்கு முன்னர் சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம். அன்று சிங்களத் தலைவர்கள் கூட அந்தளவு முனைப்புடன் இருக்காத நிலையில் இராமநாதன் அவர்களின் அபிலாஷைகளுக்காக இருந்தார். இராமநாதன் 1915 கலவரத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை இங்கிலாந்துக்குச் சென்று வாதாடி விடுவித்தார். அவரை பல்லக்கில் தூக்கி வரவேற்றது சிங்களத் தரப்பு. தர்மபால ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார். ஆனால் அந்த இராமநாதனையே கொழும்பை விட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடும் அளவுக்கு இனத்துவ பாரபட்சத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களை இலங்கை வரலாறு கடந்து வந்திருக்கிறது.

எந்த தமிழ் அடையாளம் சிங்களத் தரப்பை மீட்க கதிர்காமரிடம் இருந்து தேவைப்பட்டதோ அந்த தமிழ் அடையாளம் அவரை பிரதமராக ஆக்குவதற்கு தடையாக இருந்ததையும் கூறித்தான் ஆக வேண்டும். எந்த சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமரைக் கொண்டு அரசியல் – ராஜதந்திர லாபமடைந்ததோ அதே சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமருக்கு நாட்டின் உயரிய பதவி போய்விடக்கூடாது என்பதில் கறாராக இருந்தது.


கதிர்காமர் கொல்லப்பட்டதனால் (12.08.2005), அதுவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதால் தான் அவர் சிங்களவர்கள் மத்தியில் வீரர் ஆனார். தியாகியானார். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவரது மரணமும் பல மடங்கு சிங்களத் தரப்பின் வெற்றிக்கு உதவியது.

சிங்கள - பௌத்த - கொவிகம தவிர்ந்தவர்களையே அதிகாரத்துக்கு வருவதை சகிக்காத இந்த அமைப்புமுறை தமிழ் – கிறிஸ்தவ பின்னணியுள்ள ஒருவரை மட்டும் அனுமதிக்குமா என்ன.

ஆனால் கதிர்காமர் இறந்ததன் பின் எழுந்த அனுதாப அலை “ச்சே...பிரதமராக ஆக்கப்படவேண்டிய ஒருவர்... அதற்கு தகுதியான ஒருவர்” என்கிற குரல்கள் எங்கெங்கும் கேட்க முடிந்தது. இன்றும் கேட்க முடிகிறது.

கதிர்காமர் கொல்லப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று பிரதமர் பதவியை தட்டிப்பறித்த அதே மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு கதிர்காமருக்கு சிலை வைத்தார்.


சந்திரிக்காவுக்கு லக்ஷ்மன் கதிர்காமர் போல கதிர்காமரின் மூத்த சகோதரர் ராஜன் கதிர்காமர் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியாவராகவும் இருந்தார். இலங்கையின் கடற்படைத் தளபதியாக இருந்தவர். 1962ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடந்த இராணுவச் சதி முயற்சியின் போது சிறிமாவின் அருகிலேயே இருந்து, அவரைப் பாதுகாத்து கட்டளைகளைப் பிறப்பித்து அச் சதியை முறியடிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தவர்.

"தேசபக்த தேசிய இயக்கம்" என்கிற பிரபல இனவாத அமைப்பு கதிர்காமர் கொல்லப்பட்டபோது அவருக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்டிருந்த பேனர்

தமிழர்களின் எல்லை என்ன!
இலங்கையில் இரண்டு தடவைகள் இப்படி தமிழ் வம்சாவளிப் பின்னணியுள்ளவர்கள் இருவர் பிரதமர்களாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன. அந்த இருவரும் இனத்துவ, சாதிய பாரபட்சங்களால் தான் பிரதமர் பதவி கைநழுவிப் போயிருக்கின்றன. ஒருவர் கதிர்காமர் எனக் கண்டோம். இன்னொருவர் சீ.பீ.டி சில்வா.

அதே வேளை இருவருமே இலங்கைச் சமூகத்தில் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள், அல்லது அறியப்படாதவர்கள். ஆனால் ஆதிக்க இனக்குழுமத்தால் நுணுக்கமாக அவர்களின் இனத்துவ, சாதிய அடையாளங்கள் உரிய நேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள்.

வகுப்புவாதம் பார்க்காதவர்கள் என்று அறியப்படுபவர்கள் பலர்; திருமணக் கலப்பின் போது தான் அந்த அடையாளங்களை வெளிப்படுத்தி பாரபட்சம் காட்டுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அதிகாரத்துக்கு வரும் போது கூட ஒடுக்கப்படும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்த அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் கவனித்திருக்கிறோம்.

மகாவம்சத்தை சுயாதீனமாகவே 2009 இல் தமிழுக்கு கொண்டுவந்த எஸ்.பொன்னுத்துரை சீ.பீ.டி.சில்வா  பற்றி சில தனது முன்னீட்டில் குறிப்பிடுகிறார்.
“சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சேரர்களே. தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றிய அரசின் பிரதிப் பிரதமராக இருந்தவர் சீ.பி.டீ.சில்வா. அவருக்கு பல தமிழ் நண்பர்கள் உண்டு. ஒரு சமயம் உரையாடியபொழுது. “நான் மலையாளி வம்சம். சிங்களருடன் கரைந்து வாழ்வதினால் நான் எதையும் இழக்கவில்லையே. தமிழை இந்தியாவில் வாழும் ஐந்து கோடித் தமிழர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். இலங்கையில் சிங்களம் வளரட்டுமே. அது தானே நியாயம்.” என்றாராம்.
அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என்று சுதந்திரக் கட்சிக்குள் பேசப்பட்ட இன்னொரு தமிழர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. கட்சிக்குள் அவர் தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஒரு சண்டித்தன பின்னணியுடன் தான் அவர் அரசியல் செய்ய நேரிட்டது. அவருக்கு ஆதரவு இருந்த அளவுக்கு அதிருப்தியாளர்களும் நிறையவே இருந்தார்கள். அவரும் தமிழ் கத்தோலிக்க வம்சாவளிப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சிங்களவராகவே அதிகமானோரால் அறியப்பட்டிருந்தார்.

சிங்களத் தரப்பு தமது “இனத்துவ பெருந்தன்மையைக்” காட்டும் சமீபத்தேய உதாரணம் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் இருக்க முடியும் என்று காட்டி களிப்படைகிற போக்கு. வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை உரியமுறையில் செய்யாத ஒரு தலைவராக அடையாளம் காணப்பட்டும் அவரை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் அது அவரது இனத்துவ அடையாளத்தின் காரணமாகத் தான். ஆளும் தரப்பில் அதிக ஆதரவைக் கொண்டவர் தான் பிரதமராக ஆக முடியும் என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள்; எதிர்க்கட்சியில் அதிக ஆதரவுடையவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக முடியும் என்கிற வாதத்தை வசதியாக மறைத்துவரும் அரசியல் சூட்சுமம் இது தான்.

கதிர்காமர், சம்பந்தர் அனைவருமே இந்த சூத்திரத்துக்குள் இயக்கப்பட்டவர்களே.



ஞாயிறன்று ஹட்டனில் கருத்தாடல் களம்

மானிட விடுதலைக்கான நூற்றாண்டு போர்களின் பங்காளிகளாக மலையக பாட்டாளிகளின் பாத்திரம்

16.12.2018 ஞாயிறு

டைன் என்ட் ரெஸ்ட்
(ஹட்டன் கார்கில்ஸ் புட் சிட்டி மேல்மாடியில்)

பி.ப. 1.00 மணிக்கு

தலைமை - பொன்.பிரபாகரன்


“சாதியூறிய மொழி” - என்.சரவணன்


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய “இலங்கைச்சரித்திர சூசனம்” என்கிற நூலைக் காணக் கிடைத்தது. இந்த நூல் 1883 இல் வெளியிடப்பட்டிருக்கிறது. 1903 இல் யாழ்ப்பாணத்தில் நாவலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு மாத்திரம் இப்போது காணக்கிடைகிறது. ஈழத்து எழுத்தாளர், முதுபெரும் அறிஞர் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் அவர். பாட நூல்களிலும் கூட அவரைப் பற்றி கற்பிக்கப்படுகின்றன. சமயம், தமிழ் இலக்கியம், இலக்கணம், இலங்கை, தென்னிந்திய வரலாறு பற்றியெல்லாம் எழுதிய அவர் ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதியும் எழுதியிருக்கிறார். அதுபோல அவர் “அபிதான கோஷம்” (The Tamil Classical Dictionary - 1902) ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதை அன்றைய தமிழ் லெக்சிகன் என்றும் கொள்ள முடியும்.

“இலங்கைச்சரித்திர சூசனம்”  ஆய்ந்துகொண்டிருந்த போது ஒரு விடயம் கண்ணில்பட்டது. அது “சாதி” என்கிற பதப்பயன்பாடு பற்றியது.
“இயக்கரும் நாகரும் தற்காலத்துச் சிங்களவரையும் தமிழரையும் போன்று இரு வேறு சாதியினராயிருந்திருக்கலாமென்றன்றி, அவர் இன்னசாதியினர், இன்னபாஷையினர் என்று துணிந்தற்கிடமில்லை.”
என்று அந்நூலின் 5 ஆம் பக்கத்தில் காண முடிந்தது. தமிழரையும், சிங்களவரையும் அவர் சாதியாகத் தான் குறிக்கிறார், சாதியாகத்தான் அடையாளப்படுத்துகிறார் என்று பொருளில்லை. ஆனால் அவருக்கு ஒரு சமூகக் குழுமத்தை அடையாளப்படுத்துவதற்கு “சாதி” என்கிற பதம் எப்படி மூளையில் நுழைகிறது என்பது தான் நமது மண்டைக்குள் குடைகிற விடயமாக இருக்கிறது.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை பல நூல்களை எழுதியிருக்கிற போதும் “இலங்கைச்சரித்திர சூசனம்” தான் அவரின் முதலாவது நூலாகக் காண முடிகிறது. இந்த வரிசையில் அவரின் “அபிதான கோஷம்” (தமிழ் கலைக்களஞ்சியம்) நூலில் “சாதி” என்பதற்கு அவரின் வரைவிலக்கணத்தை அறிய ஆவலாக இருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமாக அறியப்படுகிறது இது. அதை முடிப்பதற்கு அவருக்கு 16 ஆண்டுகள் எடுத்ததாக நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ் எண்களின் படி தான் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்நூலில் பல இடங்களில் அவர் “சாதி” என்றும், இன்னும் வேறு இடங்களில் “ஜாதி” என்றும் பயன்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்ல அதில் பல தனிநபர்களைப் பற்றி அவர் சுருக்கமாக எழுதும் இடங்களிலெல்லாம் அவர்களின் சாதி இன்னது என்பதை அடையாளப்படுத்தத் தவறவில்லை. ஓரிரு வரிகளில் விளக்கும் விடயத்தில் சாதிய அடையாளம் அந்தளவு ஏன் அவசியப்படுகிறது என்கிற கேள்வி வலிமையாக எழுகிறது. உதாரணத்திற்கு

ஏகன் - ஏகம்பவாணனை அளவிறந்த திரவியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகமபவாணன் தந்தைசொல்லை அற்பமே னும் வழுவாமற்காத்த சிறுவனை முற்ப்படவைத்த பண்ணையாள். இவன் சாதியிலே பறையனாயினும் எசமான் பக்திற் சிறந்தவன். (பக்கம் - ௪௮  - அதாவது 48)

கணியன்பூங்குன்றனார் - பேர்யாற்றருகேயுள்ள பூங்குன்று என்னுமூரிற்பிறந்து விளங்கிய புலவர். இவர் உக்கிரப்பெரு வழுதி காலத்துக்கு முன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். (பக்கம் – ௫எ  - அதாவது 57)

கலியுகம்: என்பதற்கு அவர் தரும் விளக்கத்தில் “சாதியாசாரம் சமயாசாரம் தலை தடுமாறப் பெற்வர்களாய்ப் பிறந்துழல்வார்கள்” என்கிறார். (பக்கம் – ௬௬  - அதாவது 66) அந்த நூலில் அவர் எழுதிய முன்னுரையில் காலத்தைக் “கலியுகம்” என்று தான் அழைக்கிறார் என்பதையும் கருத்திற்கொள்க.

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். .... இவர் சாதியில் வணிகர். (பக்கம் 75)

சிவப்பிரகாசசுவாமிகள் : .... சாதியில் வீரசைவர். (பக்கம் - 147)

நேசநாயனார் - சாதியிற் சாலியராகிய இச்சிவபக்தர் (பக்கம் - 281)

பெருந்தேவனார் - இவர் சாதியிலே வேளாளர் (பக்கம் - 319)

ஒட்டக்கூத்தர் - ...இவர் ஜாதியிற் கைக்கோளர். (பக்கம் - 49)

கணிகன் - ... திருதராஷ்டிரன் மந்திரிகளுள் ஒருவன். இவன் ஜாதியில் துவிஜன். (பக்கம் - 55)

காளிதாசன் - .... ஜாதியில் அந்தணன். (பக்கம் - 79)

சுப்பிரபை - முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில் வைசிய ஸ்திரி. (பக்கம் - 158)

சேனாவரையர் - ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதியினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். (பக்கம் - 171)

ஜரிதை - மந்தபாலன் பாரி. இவள் சாரங்க ஜாதிப்பெண். (பக்கம் - 179)

பெருங்குன்றூர்கிழார் - ...ஜாதியால் வேளாளர் (பக்கம் - 318)

விசுவாமித்திரன் - ... இவர் ஜாதியில் ஷத்திரியர். (பக்கம் - 374)

இப்படியெல்லாம் சாதியை அடையாளப்படுத்துபவர் “ஜாதி” என்பதற்கு பெரிய வரைவிலக்கணம் கொடுக்கிறார். அதன் இறுதியில் “இச்சாதிக்கிரமங் கூறுமாற்றால் இவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோரென்பது எமதுமதமன்று” என்று தப்பிவிட முயல்வதைக் காணலாம். (பக்கம் – ௧௮ ௰ - அதாவது 180).


நாவலரின் மிகப்பெரும் அபிமானியான முத்துத்தம்பிப்பிள்ளை சென்னையில் இருந்து தொழில் செய்தபடி “சத்தியாபிமானி” என்கிற பத்திரிகையையும் நடத்தி, சொந்தமாக அச்சுகூடத்தையும் தொடங்கி சில நூல்களையும் வெளியிட்டார். 1893இல் யாழ்ப்பாணம் திரும்பி ஆறுமுகநாவலர் வாழ்ந்த வண்ணார்பண்ணை வீட்டை சொந்தமாக வாங்கி அதற்கு “நாவலர் கோட்டம்” என்றும் பெயரிட்டு நாவலர் அச்சுக் கூடத்தையும் ஆரம்பிக்கிறார். அந்த அச்சுக் கூடத்தில் தான் பின்னர் அவரின் முக்கிய நூல்கள் வெளிவந்தன. முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிமானம் நாவலரின் மீதான அபிமானத்தையும், தமிழபிமானத்தையும் சார்ந்ததா அல்லது அது சாதியபிமானத்தையும் சார்ந்தது தானா என்கிற ஐயம் நமக்கு வரவே செய்யும். காரணம் அவரின் எழுத்தில் ஊறிப்போயிருந்த “சாதி”ய மொழி. இதை அக்காலத்து எழுத்துச் சூழலோடு ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம் என்கிற ஒரு வாதத்தையும் சிலர் முன்வைக்கக் கூடும். அதே காலத்தில் வாழ்ந்த பல படைப்புகளை செய்தவர்களிடத்திலும் இதைக் காண முடியும் என்கிற வாதத்தை வைக்க முடியும்.

ஆனால் ஒன்றை மறத்தலாகாது. ஓலைச்சுவடிக்கு மாற்றாக எழுத்து என்பது கடுதாசிகளில் பதியத் தொடங்கிய காலமது. அச்சு இயந்திரம் அறிமுகமாகி மெல்ல மெல்ல நூல்கள் அச்சுக்கு வந்து பரவலானவர்களின் கைகளுக்கு கிடைக்கப் பெற்ற காலமும் கூட. அப்படியென்றால்  எழுத்து, மொழி அனைத்தும் இவர்களிடத்தில் தான் இருந்தது. இவர்களால் தான் தகவல் பதிவு செய்யப்பட்டதும், கருத்து பதிவுசெய்யப்பட்டதும். இன்னொருவகையில் கூறுவதென்றால் அன்றைய கருத்துவாக்கச் செல்வாக்கும் அதனை பதிவுசெய்யும் வல்லமையும் இவர்கள் போன்றவர்களிடத்தில் தான் இருந்தது. ஆறுமுகநாவலர் மாத்திரமல்ல முத்துத்தம்பிப்பிள்ளை போன்றவர்களும் தான் சாதிய மொழிவழக்கை அன்றே எழுத்தினூடே ஜனரஞ்சகப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றும் யாழ்ப்பாண மொழிவழக்கில் சாதாரண அரிசியை தரம் பிரிக்கக் கூட

இது இன்ன சாதி அரிசி..,
என்ன சாதி மீன் இது...?
இது இன்ன சாதி கார்..,

என்றெல்லாம் சகலதுக்கும் வகைப்படுத்தும் பழக்கத்தை காண முடியும். இப்படி அவர்களின் பேச்சு வழக்கில் “சாதி” மொழி அவர்களுக்கே தெரியாமல் கொலோச்சியிருப்பதை அவர்கள் அறிந்துகொண்டதில்லை. மிகவும் அநாயசமாக, சர்வசாதாரணமாக அது இன்றும் பேச்சுமொழியில் கலந்திருப்பதை அன்றாடம் கவனிக்க முடிகிறது. ஏனென்றால் சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டுவரும் பேச்சுவழக்கு அது.

நமது மொழி வழக்கில் மனைவி கூட “பெண்+சாதி” தான்

இதைத் தான் பெரியார்
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
என்றார்.

ஜாதி என்பது சம்ஸ்கிருத சொல். சாதி என்பது அதன் தமிழ் மருவல் தான். சமஸ்கிருதத்தில் ஜாதி (Jati)  என்பதன் நேரடி பொருள் “பிறப்பு” என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அகராதி. பிறக்கும் போதே ஒவ்வொருவரும் சாதியோடுதான் பிறக்கிறார்கள் என்கிறது இந்துமத வர்ணாசிரம தர்மம். சாதி பிறப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்றும் சாதி என்பது தெரிவுக்குரிய ஒன்றல்ல என்றும் அது போதிக்கிறது. அப்படியான சாதியின் படிநிலைப்படியே ஒவ்வொருவரினதும் நிலையும், தரமும், கௌரவமும் தீர்மானிக்கப்படுவதாகவும் சொல்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

இந்த அடிப்படை கருதுகோளிலிருந்து தான் சாதி என்கிற பதம் மக்கள் மத்தியில் ஆற்றிவருகிற செல்வாக்கையும் புரிந்துகொள்ளவேண்டும்.

முத்துத்தம்பிப்பிள்ளை போன்றோரின் நூல்களிலும் நூற்றாண்டுக்கு முன்னர் சமூக வகைபடுத்தலுக்கும், பொருள் வகைபடுத்தலுக்கும் “சாதி” என்கிற சொல்லுக்கு ஊடாகவே அணுகியிருக்கிறார்கள், அதையே நிறுவியிருக்கிறார்கள், ஜனரஞ்சகமாக நிருவனமயப்படுத்தியிருக்கிறார்கள் சரி. இன்றும் அதை ஏன் காவ வேண்டும், ஏன் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

“சாதி” என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அடக்குமுறை வடிவத்தின் “பொருள்”, பாரபட்சத்தினதும், சமூக அநீதியினதும், அநியாயத்தினதும் குறியீடு. நமது மொழி வழக்கிலிருந்தும் சாதியை சுயநீக்கம் செய்வதும் நமக்கான பணி தான் நண்பர்களே.

டிசம்பர் 2018 - காக்கைச் சிறகினிலே சஞ்சிகையில் வெளிவந்தது.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates