Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழகப் பஞ்சமும் சிலோன் குடியேற்றமும் – வில்லியம் டிக்பி

 


குறிப்பு: இக்கட்டுரை வில்லியம் டிக்பி 1878இல் எழுதிய The famine campaign in Southern India, Madras and Bombay Presidencies and Province of Mysore, 1876-1878 - ii நூலின் இரண்டாம் பாகத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமாகும். தமிழில் "1877 தாது வருட பஞ்சம்" என்கிற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. 

மெட்ராஸ் மாகாண பஞ்சம் பற்றிய நமது பக்கங்களில், ஒரு பகுதியில் நடைபெற்ற குடியேற்றம் பஞ்சத்தின் பாதிப்பை குறைக்க மிகவும் உதவியது என்று பார்த்தோம். மதுரை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களுக்கு, சிலோன் குடியேற்றம் எப்படி இந்தக் காலத்தில் ஒரு வரமாக இருந்தது என்பதைச் சேர் ரிச்சர்ட் டெம்பிள் திரும்பத் திரும்பத் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அறுவடை இயந்திரங்கள் வருவதற்கு முன், அறுவடை காலங்களில் இங்கிலாந்து எப்படி ஐரிஷ் தொழிலாளர்களுக்கு எப்படியோ, தென்னிந்தியாவின் சில மாவட்டங்களுக்கு சிலோன் அப்படியே இருந்தது. சிலோனின் உட்புற காப்பித் தோட்டங்கள் முழுவதுமாகக் குடி யேற்ற மக்களின் உழைப்பை நம்பியே இருந்தது. பொதுவாக இவற்றில் 300,000 மக்கள் குடியேற்றத்தின் மூலம் உழைத்து வந்தனர்.

அரசாங்கம் மருத்துவ விடுதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, குடியேற்றம் எந்தத் தடையும் இன்றி நிகழ உதவியது. இதனால் தோட்ட முதலாளிகளுக்கு எப்போதும் தொழிலாளர்கள் கிடைப்பதில் தடங்கல் ஏற்படவில்லை. எப்போதேனும் சிலோன் அரசாங்கம் 'பாதுகாப்பதாக' கூறி குறுக்கீடு செய்யும் போது மட்டுமே குழப்பங்கள் ஏற்பட்டன. தென்னிந்தியாவில் மக்களின் வாழ்நிலை மோசமாகும் போது சிலோனிற்கு மக்கள் செல்வது அதிகரிக்கும். 1876இன் இறுதியில் அறுவடைகள் பொய்த்தபோது, சிலோன் அரசாங்கத்தின் கப்பல்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த குறுகிய கடல்பாதையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

பாம்பன் துறைமுகத்தில் இருந்து மட்டும் நவம்பர் 1 முதல் 23, 1876 வரை இப்படிச் சென்றவர்கள் 10,000 நபர்கள் என்று தெரிகிறது. இது சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும். மேலும் தூத்துக்குடியில் இருந்தும் பெரிய எண்ணிக்கையில் மக்கள் கப்பல்களில் சென்றனர். நல்ல, திடமான உடல் உள்ளவர்களே இப்படிக் குடியேறினார்கள். மற்றவர்கள் தங்கள் இடங்களிலேயே தங்கிவிட்டனர். குடியேறிய இடங்களில் வேலை கிடைத்தவர்கள், தங்கள் சொந்தங்களுக்குப் பணஅஞ்சல் மூலம் பணம் அனுப்பினார்கள். அப்படிப் பணம் பெற முடியாதவர்களுக்கு நிவாரண முகாம்கள் மட்டுமே உணவிற்கான வழியாக இருந்தது. மார்ச் 1877இல் மதுரை ஆட்சியர், 150000 மக்கள் வசித்து வந்த 1101 கிராமங்களை ஆய்வு செய்தார். இந்தக் கிராமங்களில் 17 சதவிகிதம் அல்லது 23600 மக்கள் சிலோனிற்குக் குடியேற்றம் செய்திருந்தனர். குடியேற்றம் பெரிய எண்ணிக்கையில் பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. முதலில் சென்ற தடகத்திரமானவர்களைப் பின்பற்றி உடல் நலம் இல்லாதவர் களும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் கூடச் செல்ல ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களிடையே காலரா பரவலாக வந்து, தோட்டங்களைச் சென்றடைவதற்கு முன்பே பலரும் இறந்து போனார்கள்.

தமிழ் மக்கள் குடியேறுவதன் பலனை அனுபவித்த தோட்ட முதலாளிகளும் அவர்களால் முடிந்த அளவு உதவிகளைச் செய்தார்கள். கண்டி நகரில் நிவாரண முகாம் அமைத்து, வேலை கிடைக்காதவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார்கள். சிலோன் அரசாங்கம் பொதுப்பணித்துறை திட்டங்களை ஆரம்பித்து வேலைவாய்ப்பை அதிகரித்தாலும், ரயில் இருப்புப்பாதை தோண்டும் பணிகளை ஆரம்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. 

Source : "The famine campaign in Southern India, Madras and Bombay Presidencies and Province of Mysore, 1876-1878 - ii, by William Digby"

ராம்நாட்டின் சிறப்புத் துணை ஆட்சியர், திரு. ஜே.லீ வார்னர், சிலோனிற்குச் செல்லும் கூலிகள் குறித்து ஆகஸ்ட் 1877இல் கீழ்கண்டவாறு எழுதினார்:- 

"சிலோன் செல்வதற்குக் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான கூலிகளை நான் இன்று ஆய்வு செய்தேன். கடந்த இரண்டு முறை சென்றவர்களை விட, இவர்கள் சராசரி திடகாத்திரமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இங்கிருக்கும் பல இளைஞர்களையும், பெண்களையும் பார்த்தாலே, அவர்களுக்கு எந்த நிவாரண முகாமிலும் உடனே இடம் கிடைத்துவிடும் என்பதை உணரலாம். இப்போது கிட்டத்தட்ட 4000 பேர் இங்கிருந்து கடலைக் கடக்கக் காத்திருக்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இவர்களுடன் இணைவதாகத் தெரிகிறது. இங்கிருக் கும் பதிவு பட்டியலில் இருந்து இவர்கள் பழனி, திண்டுக்கல், திருப்புவனம், புதுக்கோட்டை, ராம்நாட்டின் வடக்குத் தாலுகாக்களில் இருந்தும், இன்னமும் சிலர் திருச்சிராப்பள்ளியில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

சேலத்தில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. வேறு இடங்களில் இருந்து சொல்கிறார்களா அல்லது அங்கிருந்து குடியேறுபவர்கள் குறைந்து விட்டார்களா என்று தெரியவில்லை. இவர்களின் நிலை குறித்துத் திரு. ரெய்டி மிகுந்த கவலை கொள்கிறார். அவரின் கணக்குப்படியே, தேவைக்கு அதிகமாக 40000 மக்கள் வரை அவர் இங்கிருந்து அனுப்பியிருக்கிறார். இவர்களுக்குத் தோட்டங்களில் வேலை கிடைப்பது கிடையாது. இதை இங்குக் காத்திருப்பவர்களிடம் சொல்வதிலும் எந்தப் பயனும் இல்லை. கங்காணிகள் இவர்களை எப்படியாவது இங்கிருந்து கொண்டு செல்ல முனைப்பாக இருக்கிறார்கள். சிலோன் சென்றவுடன், கங்காணிகள் தங்களது தரகுப்பணத்தைப் பெற்றுக் கொண்டு, இவர்களை அப்படியே விட்டுவிட்டு, அடுத்தக் குழுவை கப்பலில் ஏற்ற வந்துவிடுகின்றனர். நான் பார்த்த சில அறிக்கைகளின்படியும், சிலோன் பத்திரிகைகளின் செய்திகளின் மூலமும், அரசாங்கம் சிலோனிற்கு வரும் கூலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைத் தோட்ட முதலாளிகள் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகிறது. சிலோனில் தானிய கையிருப்பு குறைவாக இருப்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. தோட்ட முதலாளிகளோ, தோட்ட தொழிலாளிகளின் எண் ணிக்கையைக் குறைக்க, சந்தையில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக்க முயல்கின்றனர். இவர்களின் வேலை இல்லாமல் இருப்பவர்களைக் கவனிக்கும் பொறுப்பு இறுதியில் அரசங்கத்திடமே வந்து சேரும். ஆனாலும் அரசாங்கம், தோட்ட முதலாளிகளைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.


இத்தகைய நிலையில் என்ன செய்வது என்பதும் தெரியவில்லை. தேவிபட்டினத்தில் இருக்கும் குடியேற்ற அதிகாரி, மெட்ராஸ் அதிகாரிகளும் உதவியுடன், கங்காணிகள் வேலைக்குக் கூலிகளை எடுப் பதை முடிந்த அளவிற்குத் தடுக்கவேண்டும் என்பது மட்டுமே இப்போதிருக்கும் அரசு ஆணை. இது சமீபத்தில் திரு. எலியட் அவர்களின் தோல்வியுற்ற பணியை நினைவுபடுத்துகிறது.

சிலோன் அரசாங்கம் தோட்ட முதலாளிகளைக் கண்டு அஞ்சுகிறது என்று நான் எண்ணு கிறேன். இப்போதைய அளவுக்கு அதிகமான குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது இந்திய அர சின் அல்லது அவர்களது குடியேற்ற மேற்பார் வையாளரான திரு. ரெய்டியின் கடமை என்று சிலோன் அரசாங்கம் எண்ணுவதாகத் தெரிகிறது. இதன் பொருட்டே, திரு ரெய்டி தோட்ட முத லாளிகளால் அநீதியான முறையில் வெறுக்கப்படுகிறார். இப்போது குடியேற்றப்படும் கூலிகளின் எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று திரு. ரெய்டி சொல்வது அவரது மனிதத்தன்மை உடைய மனதினாலேயே. எனவே, சிலோன் அரசாங்கம் உணர்ந்து குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்றும், இப்போது இருக்கும் கப்பல்களில் இரண்டை பராமரிப்பு வேலைக்காக அனுப்ப வேண்டும் என்று சொல்லும் போது, நாம் மிகுந்த நெருக்கடியில் இருப்போம். இரண்டு கப்பல்கள் பராமரிப்பிற்குச் சென்றுவிட்டால், கப்பல்களின் கொள்திறன் பாதியாகக் குறைந்து விடும். எனவே, சிலோன் அரசாங்கம் திரு. ரெய்டி அவர் களுக்குத் தந்தி மூலம் குடியேற்றத்தை நிறுத்த சொல்லிக் கேட்கும் போது எப்படி நடந்து கொள் வது என்பது குறித்து அறிவுறுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அப்போது மூன்றில் இருந்து ஆறு ஆயிரம் மக்களை அவர்களது கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பவேண்டும்.

இவர்கள் அனைவரும் வெகு தூரத்தில் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு வந்திருப்பவர்கள். இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களில் மிகுந்த ஏழைகளையும், பட்டினியில் இருப்பவர்களை யும் நான் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறிது தானியம் அல்லது பணம் கொடுத்து அனுப்ப உங்களது அனுமதியை வேண்டுகிறேன். தானியமோ, பணமோ கொடுக்கப்பட்ட அன்று மாலையே அவர்கள் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் மட்டுமே வழங்குவேன் என்றும் கூறுகிறேன். தேவிபட்டினத்தில் ஏற்கனவே காலரா தோன்றி விட்டது. உதவி தேவைப்படுபவர்களை நான் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுப்பேன் என்றும் கூறிக் கொள்கிறேன். ஆனால் குடியேற்றம் நிறுத்தப்படப் போகிறது என்றால், மாவட்டம் மூலம் இதை அறிவித்து, சிலோன் அரசாங்கத்தின் எண்ணம் என்ன என்பதையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த விவரம் சிலோன் அரசிட மிருந்தே வரவேண்டும். 18ம் தேதி பெரும் அளவில் உதவி தேவைப்படும் என்று திரு. ரெய்டி எண்ணுகிறார். சிறு பொழுதும் நம்மால் வீணாக்கபடக் கூடாது.” 


சில காலத்திலேயே சிலோன் அரசாங்கம் குடியேற்றத்தை நிறுத்த அதிகாரபூர்வமாகக் கேட்டுக் கொண்டது. தேவிபட்டினத்தின் வழியாக வரும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட கூலிகளின் பெரும் எண்ணிக்கையை, மெட்ராஸ் அரசாங்கம் தடுத்து நிறுத்துவது முக்கியம் என்றும் கூறியது. இப்போதிருக்கும் எண்ணிக்கையில் குடியேற்றம் தொடர்ந்தால், அவர்கள் குடிக்கத் தண்ணீரும் இல்லாமல், அவர்களின் எல்லாவற்றையும் இழந்த நிலையில் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் கூறியது. சிலோனில் குடியேற வந்தவர்களில் சிலர் பட்டினியால் இறந்தார்கள் என்ற விவரமும் இணைக்கப்பட்டிருந்தது. பஞ்சத்தில் இருக்கும் மக்களுக்குப் பல விதங்களில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் வழங்கப்படுவதாகவும், ஆனால் சிலோனிற்குக் குடியேற்றத்தைத் தடுக்கத் தங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி இல்லை என்றும், அது சிலோன் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மெட்ராஸ் அரசாங்கம் பதில் எழுதியது. குடியேற்றம், தோட்ட முதலாளிகள் வேலைக்கு ஆள் எடுக்க அனுப்பும் கங்காணிகள் மூலமாகவே நடப்பதாகவும் கூறியது. சிலோன் அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை மெட்ராஸ் அரசாங்கம் மறுத்தது, சிலோனில் தொழிலாளர்கள் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க உதவியது. இத்தோடு இந்த இரண்டு அரசாங்கங்கள் இடையேயான கடிதப் போக்குவரத்து நின்று போனது. 

மெட்ராஸ் அரசாங்கத்தின் முன் வேறு எந்த குடியேற்ற அனுமதி வேண்டுகோள்களும் வரவில்லை. மொரிசியஸ் தீவுகளுக்கும், நாட்டல் (தென்னாபிரிக்கா) குடியேற்றம் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இதைத் தவிர பஞ்சத்தின் சமய சஞ்சீவியாக பார்க்கப்பட இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேறு நன்மைகள் இல்லை.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates