Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சிங்களப் பண்பாட்டிலிருந்து : புராதன சிங்களப் பண்பாட்டிலிருந்து நாம் அறியாதன குறித்து ஓர் உசாவல் - அஹமட் பிஸ்தாமி

நூலாசிரியர் : என். சரவணன்

சரவணின் நூல்கள் அனைத்துமே வித்தியாசமானவை. அதற்கு என்னிடம் பல காரணிகள் உண்டு.

  • நூலுக்கு அவர் தெரிவு செய்யும் தலைப்பு.
  • நூலின் அட்டைப்படம்
  • நூலை வெளியிடும் குமரன் இல்லத்தின்  புத்தக வெளியீட்டில் உள்ள நேர்த்தி
  • நூலின் உள்ளடக்கம்.
  • உள்ளடக்கத்தை உறுதி செய்யும் உறுதியான உசாத்துணை

சரவணனின் எழுத்துக்களில் எப்போதும் மர்மங்கள் புலப்படும். எல்லோரும் பேசும் விடயங்கள் இருக்காது. பலரும் தவிர்த்த, பேச மறுத்த தயங்கிய, கைவிட்ட சிக்கலான அம்சங்களையே அவர் பேசு பொருளாக மாற்றுவார். அவரது எல்லா நூல்களிலும் இந்த அதிசய பண்பு இழையோடி இருக்கும்.

வாசகர்களை அப்படியே ஈர்த்து விடும் ஈர்ப்பு அட்டைப்படத்துக்கு உண்டு.அவரது அறிந்தவர்களும் அறியாதவையும், கள்ளத்தோணி, கொலை, தலித்தின் குறிப்புகள், போன்றன எப்போதுமே தொடர் வாசிப்பை தூண்டும் அரிய அபூர்வ வரலாற்றுத் தகவல்களை கொண்டவை. மிக அண்மையில் எழுதிய கட்டுரையான தஹனாயகவின் கோவணமும் அரசியலும் கூட மிகவும் ஆழமானது. அகன்ற பார்வை கொண்டது.

ஈழத்து இலக்கியமாகட்டும் சமய ஆய்வுகளாகட்டும், வரலாறாகட்டும் அரசியலாகட்டும் இனத்துவ ஆய்வுகளாகட்டும்,  இன்னொரு தளத்தில், கோணத்தில் இருந்து  நியாயமான பின்புலத்துடனும் தேடல் மற்றும் வாசிப்பு சகிதமான ஆய்வுப்புலத்தில் இருந்து எழுதப்படுகையில் அதற்கு கனதியான பெறுமானம் உண்டு. அந்த இடத்தில் தான் சரவணனின் எழுத்துக்கள் முக்கியம் பெறுகின்றன. ஊடகவியலாளராக, செயற்பாட்டாளராக ஆய்வாளராக வரலாற்றாசிரியராக அவரை நோக்க வேண்டியுள்ளது. பன்முகப்பட்ட பரந்த தளத்தில் நின்று தான் அவரது எழுத்துக்களை வாசிக்கவும்  புரியவும் விமர்சிக்கவும் வேண்டும்.

கல்விப்புலத்தில் ஒடுக்கு முறையை எதிர்த்து போலோ பிரேரி வெளிக்கிளம்பியதைப் போலத் தான் சரவணின் எழுத்தும் மாற்றுத்தளத்தில் இருந்தே எழுதப்படுவதால் அதனை புரிந்து கொண்டுதான் வாசிக்கவும் வேண்டும்.

அவரிடம் ஏலவே படிந்துபோன முன்முடிவுகள் பார்வைகள் இல்லை, நிகழத்தக்க சாத்தியக்கூறுகள் குறித்தும் அவரது எழுத்து விசாலிப்பதை உணரமுடியும். எனக்கு புரியும் வார்த்தையில் சொல்வதானால் அவர் ஏலவே யாரோ பயணித்த வரைந்த பாதையில் பயணிப்பதில்லை. தனக்கென தனித்துவமான பாதையை வரைந்து பயணிக்கின்றார். வெற்றிடங்களை நிரப்பி patch போடும் பணியை அவரது எழுத்துக்கள் ஊடறுப்பதில்லை. வரலாறற்ற இடங்களை வரலாறாக மாற்றுகிறார். இருட்டடிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார். சிதம்பர ரகசியங்களை வெளிக்கொணர்கிறார். இப்படி அனேகமாக சொல்லப்பட முடியும்.

அவரது இந்த நூலும் இலங்கை வரலாற்றில் கொடி கட்டிப் பறந்த செங்கடகல ராச்சியத்தின் உயர்குலத்தின்  சமூகங்களில் காணப்பட்ட சாதியத்தின் செல்வாக்கு, ஊடுருவல்,தாக்கம், அழுத்தம்,பெண்களின் சமூக நிலை, பெண்கள் கையாளப்பட்ட விதம், பண்பாட்டு பழக்க வழக்கங்கள் மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள், வழக்காறுகள், இசை, விவாகம், விவாக முறைமைகள், பாலியல் அது சார்ந்த விவகாரங்கள்,வழக்குகள், புரையோடி வேர்விட்ட அதிகார இழுபறிகள், போட்டிகள்,பொருளியல், பண்பாட்டியல், சமூகவியல் பிரதான மற்றும் உப கூறுகள் இங்கு அலசப்படுகின்றன.

13 தனித்துவமான தலைப்புகளில் சிங்கள பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணமாக இந்நூல் உள்ளது.பன்மைத்துவ இனங்கள் மொழிகள் வாழும் நாட்டில் 3 தசாப்தம் நீடித்த நெருக்கடியான யுத்த சூழமைவுக்கு மொழியும் இனங்களின் பண்பாட்டியல் கூறுகளை சமய விழுமியங்களை புரியாமையும் புரிந்தும் ஜீரணிக்க தயாரின்மையும் அரசியல் காய் நகர்த்தல்களுமே பிரதான காரணம்.

இத்தகைய விடுபடல்கள் காரணமாகவே இனங்களுக்கிடையில் முறுகலும் மோதலும் பகைமையும் வேர்கொண்டன. தமிழ் முஸ்லிம் உறவாகட்டும், தமிழ் பௌத்த உறவாகட்டும், தமிழ் சிங்கள உறவாகட்டும் பெருத்த விரிசல் காணப்படவே செய்கின்றன. கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் கூட முஸ்லிம் கிறிஸ்தவ உறவில் விரிசலை நிகழ்த்த அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகமாகும்.

இந்த விரிசலை தணிக்க ஒவ்வொரு மதமும் பண்பாடும் அவரவர் மொழியில் கற்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். அல்லது சகோதர மொழிகளை பண்பாடுகளை கற்க வேண்டும். அதன் பிறகு தான் சமாதானமும் சகவாழ்வும் மலரும். சுபீட்சம் உருவாகும்.

புனித திருமறை சிலாகித்து சொல்வது போல “ ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து உங்களைப் படைத்து குழுக்களாக கோத்திரங்களாக வாழ வைத்திருப்பது பரஸ்பரம் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளத்தான்” (ஹுஜராத்: 13.) சரவணின் 13 தலைப்புக்கள் கூட சிங்கள பண்பாட்டை விளங்க உள்ள  13 அடிப்படை அமசங்களாக உள்ளதை அவதானிக்கலாம்.  

சரவணனின் அருமையான  முன்னுரையுடன் கோபிநாத் தில்லைநாதனின் அணிந்துரையும் நூலுக்கு அணி சேர்க்கிறது  

   சிங்கள சமூக அமைப்பில் அல்லது தெற்காசியாவில் கன்னித்தன்மையை Virginity  பரிசோதிக்கும் ஒரே நாடு இலங்கை தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார். துணைக்கு சிரியாணி பஸ்நாயகவின் ஆய்வுகளை முன்வைக்கிறார். பெண்களின் பால்நிலை, சுகாதாரம், ஆரோக்கியம், குறித்து அவர் அதிகமே ஆய்வு செய்துள்ளார். இத்தகைய கற்பொழுக்க சோதனை குறித்து ஆழமாக பேசுகிறார் சரவணன். சிங்கள சமூகத்தில் கொவிகம எனப்படும் உயர் குழாத்தினர் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தமிழ் சமூகத்தில் வெள்ளாளருக்கு சமன். அத்துடன் அதன் கிளை வம்சங்களும் இங்கு பேசப்படுகின்றன. கன்னித்தன்மை பரிசோதனையை நிகழ்த்துவோர் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியினரே. இது தமிழ் மரபில் வண்ணார் சாதிக்கு ஒப்பானவர்கள் என்கிறார் சரவணன். கன்னிப்பரிசொதனை சடங்கு நிகழும் விதம், அதற்கான சம்பிரதாயங்கள் குறித்து தெளிவாக பேசுகிறார். காட்சிப்படங்களும் நூலுக்கு இன்னும் வலிமை சேர்க்கின்றன.

அடுத்து பண்டைய சிங்கள சாதியத்தை பேணிய கோத்திர சபையின் பணிகள் அலசப்படுகின்றன. தீண்டாமை எனும் கொடுமை எப்படி அதிகாரத்தின் பிடியில் அமுலாக்கப்பட்டது என்பதே இங்கு அலசப்படுகிறது.அது பலமான இயக்கமாக செயற்பட்ட விதம் குறித்து சரவணன் ஆய்வு செய்து மர்மங்களைக் களைகிறார். ஆங்கில காலனியம் தலைதூக முன் நிலவிய கோத்திர அமைப்பு (wariga) குறித்தான தகவல்களாக இரண்டாம் அத்தியாயம் அமைந்துள்ளது. 

அடுத்து மிக முக்கியமான தலைப்பு. சற்று கூச்சமாக இருந்தாலும் ஜாஹிலிய காலத்தில் காணப்பட்ட இஸ்லாத்துக்கு முந்திய திருமண முறைக்கு ஓரளவு நிகரான முறை குறித்து பேசுகிறது. இஸ்லாம் அனுமதிக்காத இம்முறை கவனிக்கத்தக்கது එක ගේ කෑම  எனப்படும் ஒரே வீட்டில் புசித்தல் எனும் 

பலகணவர் முறை குறித்து இது பேசுகிறது.ஏன் இந்த வழமை. அதற்கான நியாயங்கள் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் குறித்து இங்கு விலாவாரியாக பேசப்படுகிறது. Polygyny polyandry குறித்து பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்தில் மிக அரிதாக அவகாசம் வழங்கப்படும் பலதார மனத்துக்கும் இந்த முறைக்கும் சட்டங்களிலும் விதிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த விடயத்தில் கூட நீங்கள் அப்படி ஒன்றுக்கு மேற்பட்டவரை சட்டபூர்வமாக மணம் முடிப்பது கூட சிரமமானது. உங்களால் இருவருடன் நீதமாக நடந்து கொள்ள முடியாமல் போகலாம் அப்படி நிகழ்ந்தால் மறுமையில் ஒரு பக்கம் சரிந்தவராகவே இறைவன் முன் தலை குனிவுடன் வர வேண்டி வரும் என்கிறது இஸ்லாம்.

அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பாக மட்டக்களப்பு  டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா எனும் தலைப்பு உள்ளது.அந்த புளியந்தீவு கோட்டை குறித்தான அறிய வரலாற்று தகவல்கள் இங்கு பேசப்படுகின்றன.

அடுத்து சிங்கள இசை மரபில் பிரதான அம்சமான பைலா குறித்து 5 ம் தலைப்பு ஆராய்கிறது. போர்த்துக்கேய ஆபிரிக்க சிங்கள சமூகங்களின் இணைப்பில் தான் இந்த பைலா உருவாகியுள்ளது

6 ம் தலைப்பு வேடுவர்கள் குறித்த ஆய்வாக உள்ளது. இலங்கை இனவியல் வரலாற்றில் செலிக்மனும் அவரது பாரியார் பிரண்டா சாராவும் 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கி இருந்து  மேற்கொண்ட மானுடவியல் ஆய்வு வேடுவர் என்ற தலைப்பில் நூலாகவும் உள்ளது. நிஸ்ஸங்க பெரேரா நூலை சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்துள்ளார்

7 ம் தலைப்பு பமுனு குலய சிங்கள பார்ப்பனியமா எனும் தலைப்பு சிங்கள பிராமணர்களை குறிக்கும் இப்பதத்தின் பின்னால் உள்ள மர்மங்களை சரவணன் இங்கு ஆய்வு செய்கிறார்.இந்தியாவில் போல பிராமணம் கோலோச்ச இலங்கை பௌத்த அரசியல் அதிகாரம் இடம் தராமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால் பிரபல பேரினவாதியான நலின் த சில்வா இத்தகைய சொல்லாடலுக்கு நவீன அர்த்தம் ஒன்றை பரப்பிவந்துள்ளதாக சரவணன் கூறுகிறார். அறிவுச்சமூகமா? ஆளும் வர்க்கமா எனும் வாதம் இங்கு சிங்களவர்களிடையே சூடு பிடித்துள்ளதை சுவைபட கூறுகிறார் நூலாசிரியர்.

அடுத்த அத்தியாயம் “ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை  எனும் பகுதி குறித்து சுவாரஸ்யமாக பேசுகிறார். நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் இருந்தே இவர்களது ஆதிக்கம் காணப்பட்டாலும் கண்டி ராஜ்யத்தில் தான் இவர்களது செல்வாக்கு பரவலடைந்தது. அதிகாரமும் சொத்தும் செல்வாக்கும் ஒரு சேரபெற்ற சாதியே இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

சிங்கள ராஜ்யத்தில் நாயக்கர்களின் மேலோங்கல் எப்படி அமைந்தது என்பது குறித்தும் பேசுகிறார்

பண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் குறித்த கட்டுரையும் கவனிக்கத்தக்கது. பேயாட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை எனும் பெயரிலான நூலும் இங்கு அதிகம் பேசப்படுகிறது.  இதில் வரும் ஓர் அத்தியாயம் தான் இங்கு மையப்பொருள். குறிப்பாக බත්වළන්  ගහනවා பெண்களின் ஓரினச் சேர்க்கை குறித்து பேசப்படுகிறது.

அடுத்து மக்களை பொருளாதார ரீதியாக ஆட்டிப்படைத்த வரி முறைகள் குறித்தான தகவல்கள் உள்ளன. சாவு வரி முதல் முலை வரிவரை அவை நீண்டன. இங்கு தான் நமது தேசிய தலைவர்களுள் வீர புறன் அப்புவும் அதற்கு எதிராக் கிளர்ச்சி செய்ய புறப்படுகிறார். கேரளாவில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் இங்கு நினைவு கூறப்படுகிறது. பருத்த மார்பகங்களை உடைய தாந்த சாதியில் பிறந்த நாங்கிலி முலை வரி செலுத்த மறுத்து வந்ததால் முலை வரி அறவிடும் முளைக்கர்ணம் பார்வத்தியார் வாழை இலையில் தன இரண்டு மார்பகங்களையும் வெட்டி வைத்து இறந்து போகிறாள். இந்தியாவின் புலி எனப்படும் திப்பு சுல்தான் தான் மார்பக வரிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுத்து அதனை தடை செய்தார்.

சிங்கள பேரிலக்கியத்தில் நிகழ்ந்த பரங்கி மகா போர் குறித்த தகவல்கள் அடுத்து அலசப்படுகின்றன. சீதாவாக்கை ராச்சியம், விஜயபாகு கொல்லைய போன்றவற்றுடன் தொடர்பான சரித்திரமே இது. போர்த்துக்கேயரின் அரசியல் திருகுதாளங்கள், கையாலாகாத சுதேச பொம்மை அரசர்கள் குறித்தே இது அமைகிறது. எனது தாயக நிலமான மல்வானை குறித்தன தகவல்கள் இல்லாவிட்டாலும் மலவ்வ்னை அரசன் எனப்படும் ஜோரனிமோ குறித்தும் இங்கு பேசப்படுகிறது.  இதுவே நூலில் உள்ள நீண்ட அத்தியாயம் சுவையான வரலாற்றுத்தகவல்கள் அடங்கிய அத்தியாயம் 

தொடர்ந்து       அப்புஹாமி எனப்படும்  துக்கன்னாறால மற்றும்  ombudsman பற்றிய விடயம் விலாவாரியாக பேசப்படுகிறது.

அடுத்து சிங்கள பெயர்களின் சாத்திய நிலப்பிரபுத்துவ காலநித்துவ பின்புலம் குறித்து பேசப்படுகிறது. இங்கு தான் இலங்கை வரலாற்றில் அநகாரிக தர்மபால எத்தகையா வகிபாகத்தை ஆற்றினார் என்பது முக்கியம் பெறுகிறது. பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியின் தந்தையாக இவர் அறியப்படுகிறார். அவரது இனத்துவ பின்புலம் இங்கு பேசப்படுகிறது.

மொத்தத்தில் சரவணின் சிங்கள பண்பாட்டிலிருந்து இலங்கை குறித்தான பரந்துபட்ட வித்தியாசமான தேடலாக யாரும் அந்தளவு எட்டியும் பார்க்காத அம்சங்கள் பற்றிய உரையாடலாகவே அமைந்துள்ளது.

இன்னும் அறியாத பலத்தையும் அறிந்து கொள்ள அவரது அறிந்தவர்களும் அறியாதவையும் நூலையும் கைவசம் வைத்து வாசிக்கலாம்.

(அஹமட் பிஸ்தாமி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்...)


நன்றி - தினக்குரல்  09.10.2022

மலையகம் : அடுத்து என்ன? - வி.தேவராஜ்

இனிவரும் காலத்தையாவது 'மக்களுக்கான அரசியலாக' செய்ய வாருங்கள்.

மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட 'மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை' நிர்வாணமாக நிற்க வைத்துள்ளது ஜநா மனித உரிமைப் பேரவை அறிக்கை.

மலையக மக்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டை தொட்டு நிற்கின்ற அதாவது 200 வருடங்களை எட்டியுள்ள இவ் வேளையில் ஜநா மனித உரிமைப் பேரவை 'மலையக மக்கள் நவீன அடிமைத்தனத்தின் சின்னமாக' உள்ளதை  வெளி உலகுக்குப் பறைசாற்றி நிற்கின்றது.

இது ஒன்றும் பரம ரகசியமில்லை. காலம் காலமாக பேசப்பட்ட விடயம்தான். சர்வதேசரீதியில் பேசப்பட்டபோதும் ஜநாவில் முதன் முறையாக மலையக விவகாரம் வந்துள்ளது.

மலையக மக்களின் 'பிச்சைக் காசில்' வயிறு வளர்க்கும் ஒரு இளம் தொழிற்சங்க அரசியல்வாதி 'நாட்டை நாம் காட்டிக் கொடுப்பதா எனக் கூறி மலையகம் குறித்து காண முயன்ற விடயங்களைத் திசை திருப்பிவிட முயன்றதாகத் தகவல். சிங்கள தேசமே அணிதிரண்டு ஜநா வாசலில் நிற்கும்போது மலையக நிலையை அறிக்கையிட வந்தவர்களை திசைதிருப்பிவிட முயன்றதை மலையக மக்கள் மன்றத்தின் முன் வைக்கின்றேன்.'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளில் இது ஒரு உதாரணம். துரதிஸ்டவசமாக மலையக தொழிற்சங்க அரசியலில் இன்று பதம் பார்க்காமலே நிலைமையைக் கூறிவிடலாம். 

மலையக தொழிற்சங்க அரசியலில் இன்று ஒரு நடேச ஜயரைப் பார்க்க முடியாதுள்ளது. ஒரு வெள்ளையனையோ அல்லது ராஜலிங்கத்தையோ தேடிப் பார்க்க முடியாதுள்ளது  துரதிஸ்டவசமே.!  

- நீங்கள் யார்? என்று ஒரு மலையக மகனையோ அல்லது மகளையோ கேட்டால் 

எங்களை மலையகத் தமிழர்கள் என்பர்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர் என்பர்

சிங்கள மொழியில் நாம் 'வத்தே தெமழ.'

வடக்கு கிழக்கு மொழியில் நாம் 'வடக்கத்தையான்'

எமக்கு 'தோட்டக்காட்டான்' என்ற பெயரும் உண்டு.

அன்று எமது வறுமை விலை போனது. அதனால் பல தொண்டர்களின் வாழ்வு வளமாகியது. இன்று எமது வாக்குகள் விலைபோகின்றன.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வாக்குகளை விற்று எமது மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் சுகபோகத்தில் திளைக்கின்றனர்.

முன்பு வேலை செய்து வயிறு கழுவ தோட்ட வேலை இருந்தது. இன்று அது பறிபோய்க் கொண்டிருக்கின்றது.

நாம் கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட காய்ச்சிகளாக மாற்றப்பட்டு நிச்சயமற்ற வாழ்க்கையுடன் வீதியில் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கொரனா அதனைத் தொடர்ந்து இன்றைய பொருளாதார நெருக்கடி எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.

கொரனாவும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.இவைகளில் இருந்து மீண்டெழ மற்றவர்களால் முடியும். இதற்கென கொஞ்சகாலம் எடுக்கலாம். ஆனால் நாம் அரசியல் அநாதைகள். எமக்கென யார் இருக்கின்றனர். 

எமது வாழ்க்கையே அன்றாடம் போராட்டமாகவே போய்க் கொண்டிருக்கின்றது.

எமது சந்ததியினர் தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடினர்.

சுதந்திர இலங்கை எம்மை அரசியல் அநாதைகளாக்கியது.

அரசியல் உரிமைகளுக்காக பிரஜா உரிமைக்காக எமது போராட்டம் தொடர்ந்தது.

1977இல் சௌமியமூர்த்தி தொண்டமானை நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதியாக அனுப்பினோம்.

பிரஜா உரிமைப் பிரச்சனைக்கு இறுதியாக 1988 இல் கொண்டுவரப்பட்ட நாடற்றோருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் நாம் இன ஒடுக்குமுறை மனித உரிமை மீறல் மட்டுமல்ல நாம் இன்றும் இரண்டாந்தரப் பிரஜைகளே. 

எமது நிகழ்கால எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கின்றது.

இவ்வேளையில் ஜநாவில் நாம் பேசு பொருளாக  வந்துள்ளோம். இது    எமது விடியலை நோக்கிய பயணத்தின் முதல்படி என நினைக்கின்றோம்.

மலையக மக்களை ஜநா அறிக்கையாவது விழித்தெழ வைக்கட்டும் என்றே கூறுவர்.

மலையகத்தைப் பொருத்து மேலோட்டமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்

  • சுதந்திரத்துக்கு முந்தைய காலம்
  • சுதந்திரத்துக்கு பிந்தைய காலம் 
  • சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம்
  • சௌமிய மூர்த்தி தொண்டமானுக்குப் பிந்தைய காலம்.

மூன்று நான்கு மலையக தலைமுறையை தின்ற  வரலாறு இது. இன்றும் அதே வரலாறுதான்.கொஞ்சம் மாற்றத்துடன் தொடர்கின்றது. 

இப்போது இந்தச் சமுதாயம் சமத்துவத்திற்கும் கௌரவத்திற்காகவும் போராடி வருகின்றது. வாழ்க்கை நிலைமைகள் முன்னேறியிருந்தாலும் செம்மையான சமத்துவம் எனும் அந்தஸ்தினை இம்மக்கள் அனுபவிப்பதற்கு இன்னும் அதிக விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மிகவும் முக்கியமான முதல் விடயமாக மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடப்படவேண்டும் என்று   The plight of Tamils of Indian origin in Sri Lanka என்ற தலைப்பில் 'த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' தளத்தில் வி.சூர்யநாராயணன்  எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

மலையக மக்களின் பிரச்சனைகளை  ஸ்தலத்தில் கண்டறிவதற்காக ஐ.நா. விசேட தூதுவரான டொமொயா ஒபொகடா 2021நவம்பர் 26 இற்கும் டிசம்பர் 3 இற்கும் இடையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த தூதுவர் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்தார். தான் கண்டறிந்த விடயங்களின் பூர்வாங்க அறிக்கையினைத் தூதுவர் 2021 நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதி அறிக்கையானதுதற்போது2022செப்டெம்பரில்ஐநாவில்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி;.

  • மலையக மக்கள் என்றுமே வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த சூழ்நிலையில்  இன்று பொருளாதார நெருக்கடி அவர்களை எழுந்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கத்தை செலுத்தியுள்ளமையை காண முடிகின்றது
  • தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். தனிநபர் வருமானம்  வாழ்க்கை நிலைமைகள்  நீண்ட ஆயுள் கல்வி அடைவுகள் மற்றும் பெண்களின் நிலை – இவற்றைக் கணிப்பிட எந்த அளவுகோலையும் பிரயோகியுங்கள்  – அவர்கள் ஏணியின் அடியிலேயே இருக்கின்றனர். 
  • ஐ.நா. விசேட தூதுவர் பின்வருமாறு கோடிட்டுக்காட்டியுள்ளார்:
  • நவீன அடிமை முறைகள் இனத்துவப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக  200 வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்களின் வம்சாவளியின் அடிப்படையில் பல்வேறு வடிவிலான பாகுபாடுகளுக்கு இன்றும் முகங்கொடுத்து வருகின்றனர்.'
  • 2017ஆம் ஆண்டில்  இலங்கை தேயிலைத் தொழிற்துறையின் 150ஆவது வருடப் பூர்த்தியினைக் கொண்டாடியது. பொருளாதாரத்தில் தேயிலைத் தொழிற்துறையின் வகிபாத்திரத்தினைக் கோடிட்டுக்காட்டுவதற்கும்  துறையின் உற்பத்தியினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும் துறையினை எவ்வாறு நவீனமயப்படுத்துவது என்பது பற்றியும் அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
  • ஆனால்  கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் மட்டுமே  உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலைக் களிப்பினை வழங்கும் இரண்டு இலைகளையும் ஒரு கொழுந்தினையும் (கலாநிதி முல்க் ராஜ் ஆனந்தினால் எழுதப்பட்ட நாவல்) உற்பத்திசெய்பவர்கள் பற்றிய ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. தோட்ட உரிமையாளர்களினதும் தொழிலாளர்களினதும் மாறுபடும் வாழ்க்கைகள் கட்டாயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும்   என்றும் வி.சூர்யநாராயணன்  குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் சகாப்தத்திற்கு பிற்பட்ட இன்றைய மலையக வரலாற்றுடன் தொடர்புபட்டவர்கள். இவர்களில் பலர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களும் உள்ளனர். தொண்டமன் அவர்கள் என்ன செய்தார் என்று உங்களில் பலர் கேள்வி எழப்பலாம்.

இலக்கின்றி மலையகத் தலைமைகள்.

நடேச ஜயர், மலையக காந்தி ராஜலிங்கம், வெள்ளையன், அஸீஸ்,தொண்டமான் இவ்வாறு பலர் அங்குலம் அங்குலமாக செதுக்கிய மலையகத்தில் இன்றைய தெழிற்சங்க அரசியல்வாதிகள் சுகமாக அமர்ந்து தொழிற்சங்க அரசியலை செய்கின்றீர்கள். மலையகம்குறித்த எதிர்காலப் பார்வை,பயணிக்க வேண்டிய இலக்கு என்பன நடேச ஜயர் ,இராஜலிங்கம், வெள்ளையன்,அஸீஸ் ,தொண்டமான் போன்றவர்களுக்கு இருந்தது.

மலையகம்குறித்த இன்றைய தொழிற்சங்க அரசியல் தலைவர்களின் இலக்கு என்ன? எதிர்காலப் பார்வை என்ன?

துரதிஸ்டவசமாக இன்றைய மலையக தொழிற்சங்க அரசியல்  தலைமைகளிடம் மலையகம்குறித்த எதிர்காலச் சிந்தனை ,இலக்கு என்பன இன்றியே தெழிங்சங்க அரசியலை செய்கின்றனர்.

வாக்கு சேகரிக்கும் முகவர்கள்

'கட்சித் தலைகள்' பிரிந்து நின்று தேசியக் கட்சிகளில் போட்டியிடுவதை மலையகத்தில் பார்க்கலாம். சில சந்தர்ப்பங்களில்  ஒரே கட்சியில் பிரிந்து நின்று தேசியக் கட்சிகளின்  ஒரு சின்னத்தில் போட்டியிடுவதும் நடைபெறுகின்றது.

இவ்வாறு போட்டியிடுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாவது, அமைச்சர்களாவது தமது 'ஆலவட்டங்களுக்கு' உயர்பதவிகளைப் பெற்றுக் கொடுப்பது போன்றவைகளைத் தவிற இவர்களால் பெரிதாக சாதித்ததாக இல்லை. 

உண்மையில் இவர்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ பிரிந்து நின்றோ போட்டியிட்டு மலையக வாக்குகளை தேசியக் கட்சிகளுக்கு வாரி வழங்கும் “முகவர்களாகவே “செயற்படுகின்றனர். இதற்கான கையூட்டே அமைச்சர் பதவிகள் மற்றும்  தமது 'ஆலவட்டங்களுக்கான' உயர் பதவிகள்.

மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளிடம் சில கேள்விகள்..!

நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து நிற்கும் பெருந் தோட்டக் கம்பெனிகளை வழிக்குக் கொண்டுவர உங்களால் முடிந்ததா?

தோட்டத்தொழிலாளர்கள்அன்றாடம்காய்ச்சிகளாகமாற்றப்படுகின்றனர்.உங்களால் தடுத்து நிறுத்த முடிந்ததா?

இதனால் அவர்களுக்கான  EPF  மற்றும் சலுகைகள்  மறுக்கப்படுகின்றனவே.

2015 ஆம் ஆண்டில் இருந்து பேசப்படும் 1000 ரூபாவை  பெற்றுக் கொடுக்க முடியாமற் போனதேன்?.

மலையகம் குறித்து  பொது வேலைத்திட்டம்  உள்ளதா?

மலையக மக்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் திட்டங்கள் உள்ளனவா? 

தொழிற்சங்கங்களுக்குள் போட்டி ஏன்.  தொழிலாளர்களுக்காக ஒற்றுமைப்பட முடியாதா?

சந்தா இல்லாததால் பொது வேலைத்திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தற்போது பேசுகின்றன. உண்மைதானே?

தீப் பிடிக்கும் தோட்டக் குடியிருப்புகள். தொடர்ச்சியாக இது தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட தோட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிகின்றது.

எரிந்து நாசமாகியது நூற்றாண்டு கால பழமையான காலணித்துவ சின்னங்கள் மாத்திரமல்ல 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிறுக சிறுக சேர்த்த உடமைகளும் கஷ;டப்பட்டுத் தேடிவைத்த ஆவணங்களும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

பாலங்கள் இன்றி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மக்கள்.

மண்சரிவு அபாயத்தில் இடம் பெயர்ந்தோர்.   மீரியபத்தை மக்களை நோக்கி வந்த உதவிகளுக்கு என்ன நடந்தது? 

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 25 ஆயிரம் ஹெக்டர் தோட்டக் காணிகள் காடாக்கப்பட உள்ளன. இந்தத் தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களினதும் எதிர்காலம் கேள்விக் குறியாக நிற்கின்றது.

'சிஸ்டம் சேன்ஜ்'பற்றி பேசும் தலைமைகள்

இன்னும் பேசலாம். ஆனால் நீங்களோ இலங்கையின் அரசியல் 'சிஸ்டம் சேன்ஜ்'பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இது பற்றி பேசும் மலையக  தொழிங்சங்க அரசியல்வாதிகளே இந்த மாற்றத்தால் மலையகத்தில் ஏற்படப்போகும்  மாற்றம் என்ன என்று கூறுவீர்களா?

கடந்த 74 வருடங்களுக்கு மேல் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் வடக்குக் கிழக்கு மக்களே 'சிஸ்டம் சேன்ஜ்' தமக்கு ஒன்றும் கொண்டு வந்துவிடாது என ஒதுங்கி இருக்கும் போது நீங்கள் மலையக மக்களுக்கு இதன்மூலம்  பெற்றுக் கொடுக்க முயல்வது என்ன?

ஆற்றைக் கடக்க முயன்ற தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளும் அள்ளுண்டு போனதை தெலைக்காட்சிகள் உங்கள் கண் முன் காட்டியபோது நீங்கள் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக இராஜாங்க அமைச்சர்களாக இருப்பது மக்கள் ஆற்றிலும் மண்சரிவிலும் அள்ளுண்டுபோவதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கா என மக்கள்  எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

சில வேளைகளில்      உங்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கான கதவுகளைத் திறப்பதாக 'சிஸ்டம் சேன்ஜ்' இருக்கலாம். பதுளை மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஒரு மலையக தொழிற்சங்க அரசியல்வாதி கூறிய வார்த்தை இது. 

'இப்பொழுது நான் ஒரு எம்பியாக உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கின்றேன் அடுத்த முறை நான் ஒரு அமைச்சராக உங்கள் முன் நிற்பேன்' என்று கூறியதை இங்கு பதிவு செய்கின்றேன்.

மொத்தத்தில் மலையக தொழிற்சங்க வரலாற்றில் நடேச ஜயர் காலம் ஒரு சகாப்தம். வெள்ளையன் இராஜலிங்கம் காலம் அப்பழுக்கற்ற அரசியலின் சின்னம். சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் பலம் பலவீனம் இதற்கப்பால் ஒரு சகாப்தம்.'கிங் மேக்கர்' அரசியலை உருவாக்கியவர்.

தங்கத்தை உரசலாம் வெற்றுக் கோதுகளை?

இந்த வரிசையில் இன்றைய மலையக தொழிங்சங்க அரசியலின் சாதனை என்ன? தங்கத்தை உரசிப் பார்த்து அறியலாம். துரதிஷ;டவசமாக உரசிப் பார்த்து அறியும் நிலையில் இல்லை. ஒன்றும் இல்லா 'கோது' என்பதை மக்கள் அறிவர்.

இதனை வெளிப்படையாக மக்கள் கூறுகின்றனர். தொலைக்காட்சிகளில் கோபக் கனல் கக்க' மக்கள் மலையக அரசியல்வாதிகள் மீது கொப்பளிக்கும் வார்தiதைகளே இதற்குச் சான்று.' 

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியல் 'சிஸ்டம்' மலையக மக்களை எவ்வாறு வைத்திருக்கின்றது என்பதை தோலுரித்துக் காட்டுவதே ஜநா அறிக்கை. இன்று தென்னிலங்கை கோரி நிற்கின்ற 'அரகலயா சிஸ்டம் சேன்ஜ்சில்'; வடக்குக் கிழக்கு மக்கள் பற்றியோ முஸ்லிம் மக்கள்பற்றியோ பேசவில்லை. மலையக மக்களை ஆர்ப்பாட்டத்தில் இறக்கிய மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளிடம்  மலையக மக்கள்பற்றி 'அரகலயா' தமது நிகழ்ச்சி நிரலில் என்ன கூறி இருக்கின்றதென தெளிவுபடுத்த வேண்டும்.

ஆதற்காக 'அரகலயா சிந்தனை' தேவையில்லை என்பதல்ல அர்த்தம். இந்த சிந்தனைமூலம் தென்னிலங்கை தமக்கான அரசியல் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. ஜனநாயகத்தின் குறைந்தபட்ச இந்தக் கோரிக்கைக்கே இன்று பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு 'அரகலயா போராட்டக்காரர்கள்' பயங்கரவாத தடைச் சட்டத்தின்மூலம் வேட்டையாடப்படுகின்றனர். 

மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளே மலையக மக்களை வைத்து அரசியல் செய்து உங்களுக்காகவும் உங்களைச் சார்ந்தோருக்காகவும் 'அறுவடையாக்கியது' போதும். நீங்கள் மலையகத்திற்கு போதிக்கின்ற 'சிஸ்டம் சேன்ஜில்' ஊழல் மோசடி என்பனவும்  முக்கிய அம்சமாக உள்ளது என்பதை உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம். 

உங்களின் நேர்மைக்கு உங்களின் மனச்சாட்சிமாத்திரமல்ல மக்களும் சாட்சியாக உள்ளனர்.

இன்றைய மலையகத் தலைமைகளே இனிவரும் காலத்தையாவது 'மக்களுக்கான அரசியலை' செய்ய வாருங்கள். உங்களால் மலையகத்திற்கென புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். அது உங்களில் ஏற்படுகின்ற மனமாற்றத்திலும் அர்ப்பணிப்பிலுமே தங்கியுள்ளது.

மலையகம் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கும் மலையக நலன் விரும்பிகளுக்கும் ஒரு வேண்டுகோள் !மலையகத்தை தலைமை ஏற்று வழி நடத்த தயாராகுங்கள்.

(மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ் தனது வட்ஸ்அப்பில் பகிர்ந்ததை நன்றியுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.)

தஹாநாயக்கவின் கோவணமும் அரசியலும் - என்.சரவணன்

முன்னால் பிரதமர் டபிள்யு தஹாநாயக்க என்றாலே உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு நுழைய முற்பட்ட அந்த சம்பவம். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் களத்தில் இருந்தவர். அவரின் வாழ் நாள் காலத்துக்குட்பட்ட அவர் சம்பந்தப்பட்ட அரசியல் சம்பவங்களும், சர்ச்சைகளையும் சாராம்சமாக நினைவுக்கு கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த மாதம் அவரின் 120 வது பிறந்த வருடம். 

அவர் இலங்கையின் ஐந்தாவது பிரதமர். இலங்கையின் வரலாற்றில் மேலும் குறைந்தளவு காலம் பிரதமராக இருந்தவரும் அவர் தான். 1959 ஆண்டு 26 செப்டம்பர் தொடக்கம் 1960ஆம் ஆண்டு 20 மார்ச்  வரையான சுமார் ஆறு மாதங்களுக்கும் குறைவாக மட்டுமே அவர் பிரதமராக இருந்தார். கூடவே அவரிடம் தான் பாதுகாப்பு, கல்வி, வெளிவிவகாரம் போன்ற முக்கிய அமைச்சுக்களும் அந்த இடைக்கால ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இரட்டைச் சகோதர்கள் - கல்யாணப் பிரியவுடன்

1902 ஒக்டோபர் 22 ஆம் திகதி காலியில் இரட்டையர்களில் ஒருவராகப் பிறந்தார் தஹாநாயக்க. அவரின் சகோதரரின் பெயர் கல்யாணப் பிரிய. இருவருமே பார்க்க ஒரே தோற்ற ஒற்றுமையில் இருப்பார்கள். உயர் கல்லூரிக் காலம் வரை இருவரின் பயணமும் ஒரே மாதிரியாகத் தன இருந்தது. தஹாநாயக்க காலி ரிச்மன்ட் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் அவர் கல்கிஸ்ஸ புத்த தோமஸ் கல்லூரியில் கற்று அதன் பின்னர் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் கற்றார். அங்கே அவரின் இலக்காக இருந்தது ஆசிரியர் தொழில் தான். தனது கல்விக் காலம் அங்கே முடிந்ததும்  அதே கல்லூரியில் ஆசிரியராக மூன்றாண்டுங்கள் பணியாற்றினார்.

இளம் தாஹாநாயக்கவின் புரட்சிகரக் காலம்

கிங்ஸ்வூட்டில் கற்பித்த காலமானது அவரின் துணிச்சலான இளமைக் காலம். இலங்கையின் வரலாற்றில் பிரம்மச்சாரியாகவே மறைந்த பிரதமராக தஹாநாயக்கவை நாம் குறிப்பிடுவதுண்டு. ஆனால் அவர் கிங்ஸ்வூட்டில் கற்பித்தபோது வாழ்க்கையில் முதன்முறையாக, தனது இதயத்தைக் கவர்ந்த பெண்ணை சந்தித்தார். அவர் சைமன் டி சில்வாவின் மகள் ரோனி லீலாவதி டி சில்வா. ஆனால் அந்தக் காதல் அவருக்கு கைகூடவில்லை. பின்னர் அக்கல்லூரியில் இருந்து அப்பெண் விலகிச் சென்றுவிட்டபின்னர்  அதன் பின்னர் அவர் அப்பெண்ணைக் காணவில்லை.

இரட்டைச் சகோதர்கள் - கல்யாணப் பிரியவுடன் காலியிலுள்ள தனது வீட்டு வளவில்

இளைஞனான விஜயானந்த தன் சகோதரனுடன் அரச ஆசிரியர் கல்லூரி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கொழும்பு தர்ஸ்டன் வீதியில் அமைந்திருந்த ஆசிரியர் கல்லூரியில் நுழைந்தார்கள். சிறுவயதில் இருந்தே கவிதையில் ஆர்வம் கொண்ட அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சரளமாக கவிதைகளை எழுதி வந்த காலம் அது. விஜயானந்த தனது முதல் ஆசிரியர் நியமனத்தை பலப்பிட்டிய சித்தார்த்த வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர் 1928 இல் காலி புனித அலோசியஸ் கல்லூரியில் நியமனம் பெற்றார். அங்கு அவர் அனைத்து மாணவர்களிடையே பிரபலமடைந்திருந்தார்.

1933 இல், அவர் "ருஹுனு ஹன்ட" (ருஹுனுவின் குரல்) என்ற பத்திரிகையை வெளியிட்டார். அவர் அதன் ஆசிரியராகவும், சரிபார்ப்பவராகவும், வெளியீட்டாளராகவும் மட்டுமன்றி அதன் விநியோகத்தையும் அவரே கவனித்துக் கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் தோன்றி தீவிரமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்தன. “சூரியமல் இயக்கத்தின் மூலம் உருவான இலங்கை சமசமாஜக் கட்சியுடனும் அதன் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தஹாநாயக்க 1935ல் காலனித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார். இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னரின் மௌலி திருமண நிகழ்வின் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.சோல்பரி பரிந்துரைகளைத் தொடர்ந்து அரசாங்க சபயில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட 51 உறுப்பினர்கள் அதற்கு ஆதவளித்தார்கள். அதனை எதிர்த்தவர்கள் மூவர் மட்டும் தான். இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அடுத்தவர் தஹாநாயக்க. அதை எதிர்த்த ஒரேயொரு சிங்களத் தலைவர் தஹாநாயக்க என்றும் கூற முடியும். “கேக் தரவில்லை என்பதற்காக பாணையும் சேர்த்து நிராகரிக்கக் கூடாது.” என்று தஹாநாயக்க போன்றோருக்கு பதிலளித்தார் சேனநாயக்க. 

லங்கா சம சமாஜக் கட்சி பிளவுற்ற போது அவர் கொல்வின் ஆர் டி சில்வா தலைமையிலான போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியுடன் சென்று விட்டார். இலங்கையில் கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காக சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர நாடெங்கிலும் கையெழுத்து சேகரித்த போது அப்பணிகளில் தீவிரமாக தஹாநாயக்க பங்கெடுத்துக்கொண்டார்.

1939ல் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று காலியின் முதல் மேயரானார். அது மட்டுமல்ல இலங்கையில் முதலாவது சிங்கள - பௌத்த மேயர் என இன்றும் அவரை அழைக்கிறார்கள். 1942ல் வேளை நிறுத்தமொன்றுக்கு தலைமை தாங்கியதற்காக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பர சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அப்போது கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் மூலம் அரசியல் புகட்டப்பட்டார். 1943 இல் அவர் பிபிலை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோதும் தோல்வியடைந்தார். ஆனால் அதற்கு எதிராக தேர்தல் முறைப்பாடு செய்து அந்த வழக்கில் வென்றார். அதனால் 1944இல் காலி மேயராக இருந்த தஹாநாயக்க பிபிலை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அரசாங்க சபைக்கு முதற் தடைவையாக தெரிவானார்.

சட்டமன்ற வாழ்வின் ஆரம்பம்

விஜயானந்தாவின் சட்டமன்ற வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் 1944-1947 காலப்பகுதியாகும். 

1947 இல் நடந்த இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் 16,588 வாக்குளைப் பெற்று காலி தொகுதியில் போல்ஷெவிக் லெனினிய கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலுக்காக ஒரு சதத்தையும் அவர் செலவழித்ததில்லை என்பார்கள்.

அந்த அரசாங்கத்தின் வரவு செலவின் மீதான விவாதத்தின் போது நீண்ட உரையை ஆற்றினார். இலங்கையின் சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்ட உரையை ஆற்றியவராக அவர் கொள்ளப்படுகிறார். 13 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக அவர் உரையாற்றியிருந்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்தார்.

1952 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவானார். இடதுசாரிக் கட்சியில் நீண்டகாலம் நீடிக்கவில்லை. காலியில் புதிய நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்துவதற்காக வந்திருந்த டட்லி சேனநாயக்கவை வரவேற்றதற்காக அவர் லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அவர் “பாஷா பெரமுன”வை (மொழி முன்னணி) அமைத்தார். இந்த அமைப்பு தான் ஈற்றில் “சிங்களம் மட்டும்” என்கிற சித்தாந்தத்துக்கு அவர்களை வழிநடத்திச் சென்றது. அடிப்படையில் “பாஷா பெரமுன” காலனித்துவ எதிர்ப்பின் அடியையொற்றி இருந்தாலும், ஆங்கிலத்தை எதிர்த்து சுதேசிய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க நிர்ப்பந்திக்கும் அரசியல் இயக்கமாக கட்டியெழுப்பப்பட்டாலும், இனவாத அணிகள் அந்த கூட்டணியில் மையப்பட்டு அதன் போக்கை சிங்கள பௌத்த வழியில் திசைதிருப்பின. அந்நிய ஆங்கிலத்துக்குப் பதிலாக சுதேசிய சிங்களத்தையும் தமிழையும் முன்மொழிவதற்குப் பதிலாக வெறும் சிங்களத்தை மாற்றீடாக முன்வைத்ததன் விளைவு தமிழ் மொழியும், தமிழர்களும் ஓரங்கட்டப்பட்டார்கள்.

அதேவேளை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நேரடியாக ஆதரவு அளிக்காவிட்டாலும் தஹாநாயக்கவை ஒரு இனவாதியாக யாராலும் குற்றம்சாட்ட முடிவதில்லை. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பலமாக இருந்த காலத்தில் தஹாநாயக்கவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து உரையாற்ற வைத்தவர் அன்றைய அதன் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம்.

1948ஆம் ஆண்டு மலையக மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து வாக்களித்த வெகு சிலரில் தஹநாயக்கவும் ஒருவர். அந்த விவாதங்களின் போது “இலங்கையில் பிறந்தவர்கள்” என்கிற பதத்தை இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்று திருத்துக என்று திருத்தங்களை பரிந்துரைத்தத்தையும் ஹன்சாட்டில் காண முடிகிறது. பல விதிகளின் மீது அவர் தனது கருத்துக்களை துணிச்சலாக வைத்ததையும் காண முடிகிறது. அவர் அப்போது அரசாங்க சபைக்கு முதற் தடவை தெரிவாகி ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. அவ்விவாதத்தில் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் வாதங்களின் மீது பல இடங்களில் கேள்வி எழுப்புகிறார்.

56 தேர்தல் கூட்டணியில் பண்டாரநாயக்கவுடன்

பாஷா பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பிலிப் குணவர்தன தலைமையிலான விப்லாவகாரி சமசமாஜக் கட்சியும் இணைந்து தான் 1956 இல் மக்கள் ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்து பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சியை அமைத்ததையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்.

அத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு காலி தொகுதியில் வெற்றி பெற்றார் தஹநாயக்க. அந்த ஆட்சியில் சிரேஷ்ட அரசியல் தலைவர் என்கிற வகையில் தஹநாயக்கவுக்கு  பண்டாரநாயக்க உரிய இடத்தை வழங்க வேண்டியிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவராக இருந்த சீ.பி.டி சில்வாவை சபைத் தலைவராக நியமித்ததுடன், தஹநாயக்கவுக்கு கல்வி அமைச்சுப் பதவியை வழங்கினார் பண்டாரநாயக்க. அந்த அரசில் மூன்றாவது தலைவராக அவர் இருந்தார். கல்வி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இலங்கையில் அனைவருக்கும் கல்வி வழங்கும் செயற்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமாயின் இலவசக் கல்வி மட்டும் போதாது; உணவு இன்மையால் பாடசாலையை தவிர்க்கும் நிலையை மாற்றுவதற்காக மாணவர்களுக்கு பாடசாலையில் சிற்றுணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அதன் படி இலங்கை முழுவதுமான சகல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அமெரிக்க கெயார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் பனிஸ் வழங்கும் திட்டத்தை அவர் ஏற்பாடு செய்தார். மதியம் ஒரு பணிஸ்சுடன் ஒரு கோப்பை பால் வழங்கப்பட்டது. இதனால் அவர் “பனிஸ் மாமா” என்கிற செல்லப் பெயர் கொண்டு பலராலும் அறியப்பட்டார். அழைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி “வித்தியோதய”, “வித்தியாலயங்கார” ஆகிய பிரிவேனாக்களை பல்கலைக்கழகமாக்கினார். ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் கற்போர் அனைவருக்கும் “சம்பளம்” வழங்கியதும் தஹாநாயக்கவின் முயற்சியால் தான். இன்று வரை அது தொடர்கிறது.

பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் உட்கட்சி மோதல் தலைதூக்கியபோது பண்டாரநாயக்கவுக்கு எதிரான அணிக்கு தஹாநாயக்க தலைமை தாங்கியது உண்மை. அந்த அமைச்சரவையில் பிலிப் குணவர்தன எதேச்சாதிகாரமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பத்து அமைச்சர்கள் பிலிப் குணவர்த்தன அமைச்சரவையில் தொடர்ந்தாள் தாம் அனைவரும் விலகப்போவதாக பண்டாரநாயக்கவிடம் அறிவித்தார்கள். அந்த பத்து பேர் கொண்ட அணிக்கு தஹாநாயக்கவும், ஸ்டான்லி டீ சொய்சாவும் தலைமை தாங்கியிருந்தார்கள்.  இதை சரி செய்வதற்காக பண்டாரநாயக்க அமைச்சரவையிலும், அவற்றுக்கு கீழான நிறுவனங்களிலும்  சில மாற்றங்களை செய்தார். இறுதியில் பிலிப் குணவர்தன உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகினார்கள். இதன் எதிரொலி சுதந்திரக் கட்சியின் தான் குருணாகல் மாநாட்டிலும் எதிரொலித்தது.

1959 இல் நடந்த சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாநாட்டில் பண்டாரநாயக்கவை அகற்ற முக்கிய தலைவர்கள் முயற்சித்தார்கள். போதாததற்கு மேலும் 6 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமர்ந்தார்கள். உண்மையில் பண்டாரநாயக்கவின் இறுதிக் காலத்தில் பண்டாரநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை பலம் இல்லாது போயிருந்தது. அரசாங்கத்தில் 46 பேர் மட்டுமே இருந்தார்கள். எதிர்க்கட்சியில் 54 பேர் இருந்தார்கள்.

1959ஆம் ஆண்டு சீ.பி.டி.சில்வா மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்ற போது அவருக்குப் பதிலாக சபைத்தலைவராக தஹாநாயக்கா நியமிக்கப்பட்டார். செப்டம்பர் மாதம் நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக பண்டாரநாயக்க செல்லவிருந்தார். அவரின் அந்தப் பயணக் காலப்பகுதியில் தனக்குப் பதிலாக தஹாநாயக்கா பதில் பிரதமராக கடமையாற்றுவார் என்று கவர்னருக்கு பண்டாரநாயக்கா அறிவித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லுமுன்னரே பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

பண்டாரநாயக்கவின் மரணச் சடங்கு

1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க  படுகொலைசெய்யப்பட்டதும் சில மணித்தியாலங்களில் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஆக்கப்பட்டார். பிரதமராக பதவியேற்றதும் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனம் செய்தார். பண்டாரநாயக்க படுகொலை குறித்து பலவித வதந்திகள் பரவியிருந்ததால் செய்தித் தணிக்கையையும் அமுல் படுத்தினார்.

அவர் பிரதமராக பதவியேற்றபோது ஆற்றிய உரை தனிச்சிங்களத்தில் இருந்ததையும், அவரின் உரையில் நமது இனம், நமது மதம்,  என்று குறிப்பிட்டவை சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் தான் என்று விமர்சித்தார் சீ.சுந்தரலிங்கம். சிங்கள அரசு என்கிற சித்தாந்தத்துடன் இயங்கினால் தனித் தமிழ் அரசு என்பது தவிர்க்கமுடியாமல் ஆகிவிடும் என்று அவர் 1959 இல் அந்த விமர்சனத்தில் வலியுறுத்தினார். 

பண்டாரநாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒருமாதமாகக் கூடவில்லை. மீண்டும் ஒக்டோபர் 27ஆம் திகதி கூடியவேளை இந்த அரசாங்கம் சபையின் முழுமையான நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் ஆள்வதற்கான எந்தத் தார்மீகமும் கிடையாது என்று என்.எம்.பெரேரா சபையில் உரையாற்றினார். அதற்கு பதிலளித்த தஹாநாயக்க தனக்கு அந்தத் தார்மீகம் கிடையாததை ஒத்துக்கொண்டதுடன் தற்போதைய அரசியல் சூழலில் இந்தத் தற்காலிகப் பணியை தான் சுமக்க நேரிட்டுள்ளதை விளக்கினார். அந்த அரசாங்கத்தின் பதவிக்  காலம் 1961 ஏப்ரல் மாதம் முடியும்வரை இந்த ஆட்சியை தொடர அனுமதிக்கும்படியும் தஹாநாயக்க கேட்டுக்கொண்டார். ஆனால் என்.எம்.பெரேரா தஹானாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் கொண்டுவந்தார். அந்த வாக்கெடுப்பில் 48 வாக்குகள் தஹாநாயக்கவுக்கு ஆதரவாகவும், 45 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. மூன்று வாக்குகளால் அவரின் ஆட்சி தப்பியது.

ஆளுநருடன்

அதுமட்டுமன்றி பண்டாரநாயக்கவின் கொலை விசாரணை திருப்திதராததால் நீதி அமைச்சருக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. அதில் 46 வாக்குகள் அரசுக்கு ஆதரவாகும் 45வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஒரே ஒரு வாக்கில் அரசாங்கம் மீண்டும் தப்பியது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் வேறு காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, நிதியமைச்சராக இருந்த திரு.ஸ்டான்லி டி சொய்சா நவம்பர் 23 ஆம் திகதி பதவி விலகினார். அந்த இருவரும் தஹநாயக்கவின் ஆதரவாளராக இருந்தபோதும் எதிர்க்கட்சியினரின் நெருக்கடி காரணமாக அம்முடிவை எடுத்தனர்.

ஆனால் இப்படியான நெருக்கடிகள் மத்தியில் எதையும் தொடரமுடியாது என்பதை தஹாநாயக்க விளங்கிக்கொண்டார். எனவே அவருக்கு இருந்த நெருக்கடிகள் காரணமாக அவர் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்தும்படி டிசம்பர் 5ஆம் திகதியன்று கவர்னரைக் கோரினார். அதன்படி பாராளுமன்றத்தைக் கலைத்த ஆளுநர் மார்ச் 19 தேர்தலை நடத்துவதாக அறிவித்தார். தேர்தல் முடியும்வரை காபந்து அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும்படி தஹநாயக்கவைக் கோரினார்.

இந்த நிலையில் டிசம்பர் 7 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்த சுதந்திரக் கட்சி, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இவற்றின் விளைவாக தனக்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார். 1959 நவம்பர் 8, அன்று தொழில் அமைச்சர் எம்.பி. த சொய்சா பதவி நீக்கப்பட்டார். டிசம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் உள்துறை அமைச்சர் டி.பி. இலங்கரத்ன, சுகாதார அமைச்சர் ஏ.பி. ஜயசூரிய, போக்குவரத்து மற்றும் மின்சக்தி அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க, கலாசார அமைச்சர் பி.பி.ஜி. களுகல்ல ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லண்டனில் இருந்து மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு திரும்பிய சி.பி. டி சில்வா இந்த போக்கை எதிர்த்து நின்ற அமைச்சர்களோடு இருந்ததால் அவரும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பிருந்ததால் அதற்கு முன்னர் அவரே தான் வகித்து வந்த காணி, விவசாய அமைச்சர் பதவியில் இருந்து டிசம்பர் 12 இல் இராஜினாமா செய்து கொண்டார்.

1960 ஜனவரி 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் அவர் இலங்கை ஜனநாயகக் கட்சி (LPP) என்ற புதிய கட்சியை உருவாக்கியதாக அறிவித்தார். இதனை தஹாநாயக்கவுக்கு எதிரான தரப்பினர் “லங்கா பிஸ்டல் கட்சி” என்று அழைத்தார்கள். அதாவது பண்டாரநாயக்கவை கொலை செய்வதற்கு உதவியோர் என்கிற அர்த்தத்தில் அப்படி அழைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தேர்தல் வரை தனது கடமைகளை நேர்த்தியாக செய்து முடிப்பது என்று முடிவெடுத்தார். அதன்படி முதலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களை பதவி நீக்கிவிட்டு அமைச்சரவையை சிறிதாக்கினார். தீர்மானம் எடுப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் அரசாங்க முடிவுகளைன் மீதான வீண் விவாதங்களை தவிர்க்க அவரால் முடிந்தது. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நம்பிக்கையான சகாவாக இருந்த அவரால் பண்டாரநாயக்கவின் மறைவின் பின்னர் சுதந்திரக் கட்சியில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பண்டாரநாயக்க கொலை விசாரணையில் தஹாநாயக்க போதுமான அக்கறையை காட்டவில்லை என்கிற சந்தேகத்தையும் எழுப்பினார்கள் சுதந்திரக் கட்சியினர்.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா கடுமையாக குற்றம் சாட்டினார். இதனால் தஹாநாயக்கவுக்கு எதிராக பல நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. புதிதாக, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Internal Security) என்ற ஒன்று நிறுவப்பட்டு, அதன் செயலாளராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிட்னி டி சொய்சா நியமிக்கப்பட்டார். அது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரதும் விசனத்துக்கு உள்ளானது. பல எம்.பி.க்களின் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டார்கள். பண்டாரநாயக்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிகி சொய்சாவின் சகோதர் தான் சிட்னி சொய்சா. அதுமட்டுமன்றி குருநாகல் மாநாட்டில் பண்டாரநாயக்கவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றி; தஹநாயக்கவை கட்சித் தலைமைக்குக் கொண்டுவரப் போராடிய பிரதான நபர் தான் பண்டாரநாயக்க கொலையின் பிரதான சூத்திரதாரியான களனி விகாரையின் தலைவராக இருந்த புத்தரக்கித தேரர். இந்தக் காரணிகளை இணைத்து தஹாநாயக்கவை பலர் சந்தேகித்தனர்.


இறுதியில் அவர் சுதந்திரக் கட்சியின் பகையாளியாகவே ஆகிவிட்டார். செல்வந்த பின்னணி, பரம்பரை செல்வாக்கு, அரசியல், பணம் போன்ற பின்னணியின்றி பதவிக்கு வந்த முதலாவது அரச தலைவர் அவர். அவரின் தந்தை முகாந்திரம் பதவியை வகித்தவர் என்றபோதும் தஹாநாயக்கவின் வருகைக்கு இந்தப் பதவிப் பின்னணி காரணமாக இருந்ததில்லை. இலங்கையின் “வளவ்வ” பிரபுத்துவ பின்னணியில் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து  வந்ததும் அவரின் மீதான அரசியல் வெறுப்புணர்ச்சிக்கு காரணம் என்று சிங்களத் தரப்பினர் குறிப்பிடுவது வழக்கம்.

வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த எம்.பி.டபிள்யூ. மெதிவல, உணவு, வர்த்தகத்துறை அமைச்சர் ஆர்.ஜி. சேனநாயக்க, கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஜே.சி.டபிள்யூ. முனசிங்க மற்றும் அரச பணித்துறை அமைச்சர் ஹென்றி அபேவிக்ரம ஆகியோர் 1959 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி நள்ளிரவில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1960 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று பண்டாரநாயக்கவுக்காக ஹொரகொல்லையில் சமாதிக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டபோது, அதில் பங்கேற்றிருந்த பிரதமர் தஹாநாயக்கவை எவரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அங்கு உரையாற்றிய பலர் மத்தியில் தஹாநாயக்கவுக்கு உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கவில்லை. 

இந்த அரசியல் நாடகங்களின் பின்னர் தஹாநாயக்க ஒரு இடதுசாரி எதிர்ப்பாளராகவே ஆகிவிட்டார். வலதுசாரி முகாமோடு கைகோர்த்து இடதுசாரித் தலைவர்களோடு மோதுவது அவரின் வாடிக்கையாகியிருந்தது. 1960 தேர்தலில் அதை வெளிப்படையாகவே செய்தார். 

1960 தேர்தல்

1960ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் முதற் தடவையாக 18 வயதிலிருந்து வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1931 டொனமூர் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை காலத்திலிருந்து 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. எனவே வாக்காளர்களின் தொகையும் அதிகரித்தது.

அதுமட்டுமன்றி 1959 ஆம் ஆண்டு வோல்டர் தல்கொடபிட்டிய தலைமையிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 89 இலிருந்து 145ஆக உயர்த்தப்பட்டது. எனவே தெரிவு செய்யப்படவேண்டியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் தேர்தலில் தஹாநாயக்கவினால் தொடங்கப்பட்ட இலங்கை ஜனநாயக கட்சியும் களத்தில் இறங்கியது.

அத்தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் களமிறக்கிய வேட்பாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

  1. ஐக்கிய தேசியக் கட்சி - டட்லி சேனாநாயக்க - 127 வேட்பாளர்கள்
  2. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - சி. பி. டி சில்வா - 108 வேட்பாளர்கள்
  3. இலங்கை சமசமாஜ கட்சி -  என்.எம். பெரேரா - 101 வேட்பாளர்கள்
  4. இலங்கை ஜனநாயகக் கட்சி - விஜயானந்த தஹநாயக்க - 101 வேட்பாளர்கள் 
  5. மக்கள் ஐக்கிய முன்னணி - பிலிப் குணவர்தன - 89 வேட்பாளர்கள்


தஹாநாயக்கவின் இலங்கை ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட 101 வேட்பாளர்களில் சேனபால சமரசேகர (அக்மீமன), சேர் ராசிக் ஃபரீட் (கொழும்பு மத்திய)  காரியப்பர் (கல்முனை) மற்றும் ஜே.டி.வீரசேகர (கொத்மலை) ஆகிய நால்வர் மட்டுமே வெற்றி பெற்றனர். தஹாநாயக்க 483 வாக்குகள் வித்தியாசத்தில் டீ.எஸ்.அபேகுணவர்த்தனவால் தோற்கடிக்கப்பட்டார். அவரின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு இது தான் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால் அப்பின்னடைவும் நான்கு மாதங்கள் மட்டுமே.

அத் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சி – 50. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 46, இலங்கைத் தமிழரசுக் கட்சி – 15, இலங்கை சமசமாஜக் கட்சி – 10, மக்கள் ஐக்கிய முன்னணி – 10, இலங்கை ஜனநாயகக் கட்சி – 4, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி- 3 என்கிற வகையில் முடிவுகள் அமைந்தன.

1960ஆம் ஆண்டு மார்ச் 21இல், புதிய அரசாங்கத்தின் பிரதமராக டட்லி சேனநாயக்க பதவியேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் சபாநாயகர் தெரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் டி. பி. சுபசிங்க வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. சபாநாயகர் பதவியை அரசாங்கம் இழந்திருந்ததால் அரசின் ஆயுட்காலம் குறையும் என கணிக்கப்பட்டது. அந்த கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற சிம்மாசன பிரசங்கத்தின் போது ஆளுங்கட்சி 25 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 86 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி ஏப்ரல் 23ஆம் திகதி டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் கலைக்கப்பட்டது.

அதே ஆண்டு நான்கு மாத இடைவெளியில்; யூலை மாதம் தேர்தல் நடந்தது. அதில் 10,902 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று எதிர்க்கட்சியில் அமர்ந்தார் தஹநாயக்க. 1963இல் பண்டாரநாயக்க கொலை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் அவரின் சாட்சிகளும் பதிவாகின. அதே ஆண்டு வித்தியோதய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் (D. Lit) பெற்றார்.

கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு


கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு

1960ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் சில பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன் அங்கமாக ஆடைகளுக்கான துணியின் விலை 10 சதத்தால் அதிகரிக்கப்பட்டது. துணி வகைகளை அப்போது சதொச நிறுவனம் தான் விற்பனை செய்து வந்தது. இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் கடுமையான விசனத்துக்கு உள்ளானது. எதிர்க்கட்சியினர் இந்த விலையேற்றத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். எதிர்ப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக முன்னாள் பிரதமர் தஹாநாயக்க காலி முகத் திடலில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்கிற செய்தி ஏற்கெனவே வந்திருந்தது. அது ஆனால் அவர் காரில் வந்து இறங்கும் போது கோவணத்துடன் இறங்கியது தான் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏற்கெனவே அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கூட இதை எதிர்பார்த்து இருக்கவில்லை. கூடியிருந்த புகைப்படப் பிடிப்பாளர்கள் அக்காட்சியை சுற்றி சுற்றி படம் பிடித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட கூப்பனுக்கு இவ்வளவு துணியைத் தான் வாங்க முடிந்ததென்றும் அதைக் கோவணமாக மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் அவர் கூறினார். அடுத்த நாள் பத்திரிகைகளில் முதற் பக்க பெரும் செய்தி படத்துடன் வெளிவந்திருந்தது. இன்று வரை இலங்கையின் புகழ் பெற்ற அரசியல் படங்களின் வரிசையில் அப்புகைப்படம் முன்னிலையில் இருக்கிறது.

சம்பவத்தை அறிந்த பாராளுமன்றக் காவலர்கள் உசாராக ஓடிவந்து குவிந்தார்கள். பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அவரை கோவணத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

சிறிமாவின் அரசாங்கம் முழுமையாக நிறைவு பெறுமுன்னரே அந்த ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கும் தஹாநாயக்க தான் காரணமாக இருந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின் போது தஹநாயக்க அந்த உரையின் மீது திருத்தங்களை கொண்டு வரும் யோசனையை பரிந்துரைத்தார் அவரின் அந்தத் யோசனைக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 73 வாக்குகளும் பதிவாகின. ஒரு வாக்கு வித்தியாசத்தில் தஹநாயக்கவின் யோசனை வெற்றி பெற்றதன் மூலம் அரசாங்கம் தோற்றதால் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி அரசாங்கம் கலைக்கப்பட்டது.

மீண்டும் அமைச்சராக

மீண்டும் 1965 ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு 3802 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். ஆனால் சில வாரங்களில் ஐ.தே.க விலிருந்து விலகி சுயாதீன உறுப்பினராக  பாராளுமன்றத்தில் இயங்கினார். 1977 ஆம் ஆண்டு தேர்தல் கிட்டும் வேளையில் மீண்டும் ஐ.தே.க சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக ஆவதற்கு அவர் பிரயத்தனம் கொண்டார். ஆனால் ஜே.ஆர் தஹாநாயக்கவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். அத்தேர்தலில் ஐ.தே.க விலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றார். அந்தத் தேர்தலில் 5009 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்த டீ.ஜீ.எல்பட் சில்வாவின் நியமனத்தை இரத்துச் செய்யச் செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தஹாநாயக்க தோற்றது மட்டுமல்லாமல் எதிராளிக்கான வழக்குச் செலவையும் செலுத்தும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஹாநாயக்க சளைக்காமல் மீண்டும்  மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று தனக்காக தானே வாதாடி வெற்றி பெற்றார். அவரின் தர்க்கங்களே வெற்றி பெற்றன.  1979 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று மீண்டும் காலி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. எல்பட் சில்வா மீண்டும் அவருடன் போட்டியிட்டார். பெரும் செல்வந்தர். ஏற்கெனவே அதிகப்படியான வாக்குகளில் தஹானாயக்கவை தோற்கடித்தவர். கட்சியின் ஆதரவும் செல்வாக்கும் கூட அவரின் பக்கமே இருந்தது. எனவே தேர்தலில் தனது வெற்றியில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு தஹாநாயக்க 13,012 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது மட்டுமன்றி மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் ஆனார். 


அதிலிருந்து 1989 வரை ஜே.ஆரின் ஆளுங்கட்சியில் இருந்தார். 1979-1986 வரை சாதாரண உறுப்பினராகத் தான் அவர் இருந்தார். 1986இல் தான் கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆக்கினார் ஜே.ஆர். அப்பதவியை ஏற்கும் போது அவருக்கு 84 வயது. 1988 வரை அவர் அப்பதவியை வகித்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் தேசியப் பட்டியலில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தபோதும் அவர் நியமிக்கப்படவில்லை.

பிராட்மன் வீரக்கோனின் நூலில் இருந்து.

இலங்கையின் ஒன்பது பிரதமர்களின் கீழ் செயலாளராக பணியாற்றியவர் பிரபல சிவில் உத்தியோகத்தர் பிராட்மன் வீரக்கோன். அவர் இந்த ஒன்பது பிரதமர்களின் கீழ் கடமையாற்றிய அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். 2004 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியான அந்த நூல் பல பதிப்புகளைக் கடந்து விட்டது. பல எழுத்தாளர்களுக்கும் அது ஒரு ஆதார நூல். மிகவும் சுவாரசியமான விபரங்களைக் கொண்ட நூலும் கூட. அதில் தஹாநாயக்க பற்றிய சுவாரசியமான விபரங்களும் உண்டு.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை தனக்கு மிகவும் பெரியது என்று கூறி அதற்குள்ளேயே தனக்கான அறையாக பலகையில் ஒரு அறையை அமைத்துக்கொண்டு தங்கி வந்தவர் தஹநாயக்க.


அவர் பேருந்திலும் ரயிலிலுல் பயணம் செய்த ஒருவர். திடீரென பிரதமராக ஆனதும் தனது ஓரிரு பனியன்களையும், சட்டைகளையும், ஒரு சோடி செருப்பையும் ஒரு சூட் கேஸில் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் பிரதமரின் செயலாளரான பிரட்மன் வீரகோனை அழைத்து;

“பிரட்மேன் எனது அறையைக் காட்டுங்கள்” என்று கேட்டதும் பிரட்மன் வீரகோன் அவரை பிரதமர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அது மிகவும் விசாலமான அறை. தஹநாயக்க ஒரு கணம் திகைத்துப் போனார்.

படுக்க ஒரு சிறிய படுக்கை, உண்பதற்கு ஒரு தட்டம், அருந்துவதற்கு ஒரு கோப்பை, அணிவதற்கு சில உடைகள் போதுமல்லவா? இவ்வளவு பெரிய மாளிகை தேவையா என்று கேட்ட போதும் பிரதமருக்கென்று சில ஒழுங்குகளை ஏற்படுத்தி ஆகவேண்டுமல்லவா ஏற்கநேர்ந்தது.

வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையால் வெளிநாட்டு தலைவர்களையும், அமைச்சர்களையும், வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதற்கும் இந்த அலரி மாளிகைதான் உங்களுக்கு உகந்தது என அவரின் செயலாளராக பிரட்மன் வலியுறுத்தினார்.

"பிராட்மேன், இது பெரிய மண்டபமாக இருக்கிறது. எங்கள் வெளி வரவேற்பறை கூட இதை சிறியது. என்னால் இங்கு தங்க முடியாது. தச்சர் ஒருவரை அழைத்து வந்து இந்த அறையைப் பிரித்து ஒரு சிறிய அறையை உருவாக்க முடியாதா?" கேட்க

"முடியும், ஐயா" என்று பதிலளித்த பிராட்மன் வீரகோன் உடனடியாக தச்சர் ஒருவரை வரவழைத்து அந்த பெரிய அறைக்குள் மரச் சுவர்களால் பிரித்து ஒரு சிறிய அறையை  உருவாக்கிக் கொடுத்தார். தஹநாயக்க பிரதமராக பதவிவகித்த அந்த ஆறு மாதங்களும் அந்த சிறிய அறையில்தான் வாழ்ந்தார்.

1960 மார்ச் அலரிமாளிகையில் இருந்தவாறு பிரதமர் தஹநாயக்க வானொலியில் தேர்தல் முடிவுகளை அறிந்துகொண்டிருந்தார். அதிகாலை விடிவதற்குள் அதுவரையான முடிவுகளின்படி அவரது தோல்வி நிச்சமாகிவிட்டிருந்தது.

சபாநாயகருடனும் ஆளுனருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது பதவிக்காலம் முடிந்துவிட்டது என்றும் ஊருக்குப்புறப்படுகின்றேன் என்று அறிவித்தார்.

“இன்றும் நீங்கள்தான் காபந்து அரசின் பிரதமர். தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான பின்னர் தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் வரையாவது அங்கேயே இருங்கள். இப்போதே ஊருக்குச்செல்ல வேண்டாம்” என்று அவர்கள் கோரினார்கள். 

ஆனால் அவர்களின் வேண்டுகோளை ஏற்காமல் ‘மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள். நான் போகிறேன்’ என்று தனது பழைய தகர சூட்கேசுடன் பஸ்ஸில் வீடு போய் சேர்ந்தார் அவர்.

அலரிமாளிகையில் பணிபுரிந்த சேவகர்களிடம், “மங் என்னாங் புதாலா” (நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிவிட்டு அலரி மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி, காலி வீதியைக் கடந்து எதிர்ப்பக்கம் சென்று கொழும்பு புறக்கோட்டைக்குச்செல்லும் பொதுப் போக்குவரத்து பஸ்ஸில் ஏறிச்சென்று, அங்கிருந்து காலிக்குச்செல்லும் பஸ் தரிப்பை சென்றடைந்தார்.

லேக்ஹவுஸ், வீரகேசரி, ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், பிரதமர் தஹநாயக்கவின் நிலையை அறிவதற்காக அலரிமாளியுடன் தொடர்பு கொண்டார்கள் ஆனால், “ஐயா ஊருக்குப்போயிட்டார்” என்று பதில் அளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் உடனடியாக புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விரைந்தார்கள். தஹநாயக்க பஸ் நடத்துனரிடம் டிக்கட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தன்னைத்தேடி வந்த ஊடகவியலாளர்களிடம், “இனித்தான் உங்களுக்கு அதிகம் வேலை இருக்கும். எதற்காக வீணாக என்னைத்தேடி வந்தீர்கள். திருப்பிப்போய், செய்யவேண்டிய வேலைகளை கவனியுங்கள்,” எனக் கூறிவிட்டு பஸ்ஸில் ஏறி விடைபெற்றார்.

பிரட்மன் வீரக்கோனைப் பொறுத்தளவில், அலரி மாளிகையைப் பயன்படுத்திய இலங்கையின் பிரதமர்களிலேயே தஹநாயக்க மிகவும் எளிமையான பிரதமரும் உண்மையான பிரதமரும் என்கிறார்.


விடியற்காலையில் எழுந்து புல்வெளிகளில் நடப்பது அவரது வாடிக்கை. 7 மணிக்கு பணிகளை ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஓயாமல் இயங்குவார். மிகவும் திட்டமிட்டு தனது பணிகளை முடிப்பார். அவரின் கையெழுத்து தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். அவர் எழுத ஆரம்பித்தால் W.Dahanayake என்று கையெழுத்திடும் வரை எங்கும் நிற்காது. இடையில் வசனங்களைத் திருத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. என்கிறார் பிரட்மன்.

வெளியே அவரை வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், “மங் என்னாங் புதாலா” (நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிக்கொண்டு விடைபெற்றார் தஹாநாயக்க.

அவர் கறைபடாத, ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதியாக இலங்கை வரலாற்றில் இன்றும் அறியப்படுபவர்.

சிங்கள மக்கள் மத்தியில் அவர் “கலாநிதி” விஜயானந்த தஹாநாயக்க என்று அழைக்கப்படுவதை காண முடியும். ஆனால் தமிழ்ச் சூழலில் அவர் அவ்வாறு அறியப்பட்டிருக்கவில்லை. தஹாநாயக்கவைத் தவிர இலங்கையின் வேறெந்த பிரதமரும் கலாநிதி பட்டம் பெற்ற கல்விமானாக இருந்ததில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


அவர் ஒருபோதும் ஊழல் செய்யாதவர். தனது குடும்பத்தினரையோ நண்பர்களையோ ஊழல் செய்ய அனுமதித்ததில்லை. அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் கட்சி, நட்பு பாராமல் உதவி செய்தார். அதிக காலம் பேருந்திலும், இரயிலிலும் தான் பயணம் செய்தார். 1960 தேர்தலில் தோல்வியடைந்த அன்று காலையிலேயே தனது பழைய தகரப் பெட்டியை எடுத்துக்கொண்டு காலிக்கு பொதுப் போக்குவரத்து பஸ்ஸில் தான் சென்றார். அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. அதுமட்டுமன்றி இருந்த அமைச்சுக்களின் எண்ணிக்கையைக் கூட குறைத்தார். பாரபட்சமின்றி பல அமைச்சர்களை மாற்றினார். அமைச்சரவை 10 ஆகக் குறைந்திருந்தது அவரின் காலத்தில் தான். ஒரு பௌத்தராக புலால் உண்ணாமையை இறுதி வரை கடைபிடித்தவர். மரண தண்டனையை இரத்து செய்யும் சட்டத்தையும் அவர் தான் கொண்டு வந்தார்.

தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியை அரசாங்கம் விடுமுறை தினமாக ஆக்குமுன்னமே காலி நகரசபையில் அதனை நிறைவேற்றிக் காட்டியவர் அப்போது மேயராக இருந்த தஹாநாயக்க. அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அரசு மே தினத்தை பொது விடுமுறையாக ஆக்கியது.

ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்கும் முறையையும் அவர் தான் அறிமுகப்படுத்தினார். பல நாட்கள் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் அரச கஜானா வீணாக விரயம் செய்யப்படுவதாக அவர் கூறினார். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் இருந்து தான் அந்த முறை அறிமுகமானது. அதுபோல வேட்பாளர்கள் வானொலியின் வாயிலாக வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான ஏற்பாட்டையும் அவர் முதற் தடைவையாக உருவாக்கிக் கொடுத்தார். 
காலியில் எந்த இறப்பு நிகழ்வுகளிலும், மரண நிகழ்வுகளிலும் பஸ்ஸிலேயே சென்று கலந்து விட்டு வந்தவர். ரிச்மன்ட் ஹில் வீதியில் இருந்த அவரின் அலுவலகத்தில் பொதுமக்கள் எப்போதும் கெடுபிடி இன்றி இலகுவாக சந்தித்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. அது மட்டுமன்றி அந்த அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எவரும் எந்த அவசரத்திலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்து கொடுத்திருந்தார்.

இலங்கைக்கு வெளியே வெளிநாடு செல்லாத ஒரே பிரதமர் அவர். காலியில் அரசாக அதிபராக இருந்த நவரட்ணராஜா ஒரு முறை தஹாநாயக்கவிடம் “சேர்! வெளிநாடு செல்லாத ஒரு மூத்த அரசியல்வாதி நீங்கள் என்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு “சாக்ரடீஸ் ஏதென்ஸை விட்டு வெளியே சென்றதில்லை” என்றாராம் தஹாநாயக்க. 

இறுதிக் காலம்

1988 ஆம் ஆண்டு அவரின் 86வது வயது வரை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். ஆனால் அவர் இறக்கும் வரை பொது வாழ்க்கையில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொள்ளவில்லை. குளியலறையில் இருந்து விழுந்து இடுப்பு எலும்பு முறியும் வரை அவர் வெளியில் ஓடியோடி அரசியல் பணிகளை செய்து வந்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏழ்மையான பின்னணியில் இருந்த வந்த இரண்டு பிரதமர்களைக் கூற முடியும் ஒருவர் தஹாநாயக்க, மற்றவர் ரணசிங்க பிரேமதாச. இவர்களில் தஹாநாயக்க எளிமையாகவும், ஏழ்மையாகவும் இறுதிவரை வாழ்ந்த ஒருவராகக் கொள்ளலாம். இறுதிக் காலத்தில் அவர் காலியில் இருந்த தனது வீட்டில் வாழ்ந்து வந்தார்.

அப்படி இருந்தும் தனது ஓய்வூதியத்தை கூட மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார். 1997 ஆம் ஆண்டு மே 4, அன்று தனது தொண்ணூற்றைந்தாவது வயதில் காலமானார்.

தஹாநாயக்கவின் இறுதிச் சடங்கில்


இலங்கையின் அரசியலில் முன்னுதாரணத் தலைவராக வாழ்ந்து காட்டியவர் அவர்.

விஜேயானந்த தஹநாயக்க கீழ்வரும் தேர்தல்கள் அனைத்திலும் காலி மாவட்டத்தில் இருந்து தான் தெரிவானார்.


தஹாநாயக்கவின் கோவணமும் அரசியலும் - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates