Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

குமார் ரூபசிங்க - (1943 – 2022) - இடதுசாரித்தனத்திலிருந்து NGO த்தனம் வரை... - என்.சரவணன்

குமார் ரூபசிங்க ஞாயிறன்று (20) கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் காலமாகிவிட்ட என்கிற செய்தியை அறிந்தேன். SWRD பண்டாரநாயக்கவின் மூத்த மகளான சுனேத்திராவை 1972 இல் மணந்து கொண்டார். சுனேத்திராவின் இளைய தங்கை சந்திரிகா குமாரணதுங்க, இளைய சகோதரன் அனுரா பண்டாரநாயக்க என்பதை நீங்கள் அறிவீர்கள். குமார் ரூபசிங்கவும் சுனேத்திராவும் சில ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தாகி வேறு திருமணம் செய்துகொண்டனர்.

ஒரு காலத்தில் குமார் தீவிரமான சமூக, அரசியல் செயற்பாட்டாளர். 

அவருக்கு பல தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். 1958 கலவரம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரின் நெருங்கிய தமிழ் நண்பரும் குடும்பமும் அக்கலவரத்தில் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அவர் அப்போது நிறையவே பேச எழுதத் தொடங்கினார்.

1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட 20,000க்கும் அதிகமானோரின் விடுதலைக்காக போராடினார். இறுதியில் முக்கிய தலைவர்களைத் தலைவர்களைத் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டதில் அவரின் பங்கு முக்கியமானது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அவர் இணைந்துகொன்டதன் பின்னர் அதன் “ஜனவேகய” (சிங்களம்), “ஜனவேகம்” (தமிழ்) பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். சிறிமாவின் காலத்தில் இலங்கை இளைஞர் சேவைகள் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதுமட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திலும் அவரின் வகிபாகம் உண்டு.

1977 சுதந்திரக் கட்சியின் தோல்வியின் பின்னர் அவர் பேராதனைப் பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கினார். இலங்கையின் முக்கிய புத்திஜீவிகளின் நிறுவனமான சமூக விஞ்ஞானிகள் சங்கத்தில் (SSA) இணைந்து பல ஆய்வுப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் நோர்வே அவரை PRIO என்கிற சமாதான ஆய்வு நிறுவனத்தில் ஒரு ஆய்வாளராக பணிபுரிய அழைத்ததன் பேரில் 1982 இல் இருந்து நீண்ட காலம் நோர்வேயில் வசித்தார். நோர்வே சர்வேதேச ரீதியில் முன்னெடுத்த உள்நாட்டு சமாதான முயற்சிகள் பலவற்றில் ரூபசிங்கவும்

ஈடுப்படுத்தப்பட்டார். அதுபோல சர்வதேச அளவில் அவர் அறியப்பட்ட ஒரு சமாதான செயற்பாட்டாளராக பல நாடுகளுடனும், சர்வதேச நிறுவனங்களுடனும் இயங்கினார்.

1992 - 1998 காலப்பகுதியில் International Alert (IA) அமைப்பின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

2002 இல் அரசு – புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டபோது அவர் இலங்கை வந்து சேர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் தேசிய போரெதிர்ப்பு முன்னணி (NAWF)  என்கிற இயக்கத்தை ஏற்படுத்தி இயக்கினார். அதற்காக அவர் 203 மில்லியன் ரூபாய் நிதி உதவியைப் பெற்றிருந்தார்.

இந்த காலத்தில் சர்வதேச ரீதியில் அபிவிருத்திகளுக்கான உதவி வழங்கும் பிரதான நோர்வே அரச நிறுவனமான நோராட்டின் உதவியுடன் பல மில்லியன் உதவியைப் பெற்று “சகவாழ்வுக்கான நிலையம்” ("Foundation for Coexistence") என்கிற அமைப்பை நிறுவினார். 2004 – 2009 ஆம் ஆண்டுக்கிடையே அவர் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய்) நோர்வேயிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சமாதான காலத்தில் பல பில்லியன்களை நோர்வே பல நிறுவனங்களுக்கும் நிதியாக வழங்கியது. குமார் ரூபசிங்க தான் அதிகமாக நிதி பெற்றவர். அவருக்கான தனிப்பட்ட சம்பளமாக அவர் மாதாந்தம் ஒரு மில்லியன் இலங்கை ரூபாய்களை பெற்றுக்கொண்டார். அந்த நிறுவனத்தில் 125 பேருக்கும் அதிகமாக பணியாற்றினார்கள். ராவய பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து பல வெளியீடுகளையும் அவர் செய்தார். சமாதான முயற்சிகளோடு தொடர்புடைய பல வெளியீடுகளை ஆங்கில, சிங்கள, தமிழ் மொழிகளில் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

ஆனால் அவர் நிதிக்கான திட்டங்களை உரியவகையில் நிறைவேற்றாததாலும், சரியான நிதியறிக்கைகள் காட்டப்படாததாலும் அதன் பின்னர் அந்த நிறுவனத்துக்கு வழங்குவதாக ஒத்துக்கொண்ட நிதியை நோர்வே வெளியுறவு அமைச்சு நிறுத்தி வைத்தது. அதற்கெதிராக குமார் ரூபசிங்க வழக்கு தொடர்ந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

நோர்வே ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவருக்கு இந்த விடயத்தில் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய எரிக் சுல்ஹைம், அன்றைய வெளியுறவு அமைச்சர் யொனாஸ் கார் ஸ்தூர (Jonas Gahr Støre) போன்றோரும் இந்த சர்ச்சையில் பேசுபொருளானார்கள். இப்போது  யொனாஸ் நோர்வேயின் பிரதமர். பின்னர் “சகவாழ்வுக்கான நிலையம்” என்கிற அமைப்பு இழுத்து மூடப்பட்டுவிட்டது.

குமார் ரூபசிங்க பிற்காலத்தில் ஒரு பண ருசி கண்ட ஒரு என்.ஜீ.ஓ காரராகவே மாறிவிட்டார் என்கிற விமர்சனமே பரவலான அவர் மீதான விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது.

தோழர் சண்முகதாசனின் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை பிற்காலத்தில் முன்னெடுத்துச் சென்றவர் அஜித் ரூபசிங்க. அவர் குமார் ரூபசிங்கவின் இளைய சகோதரர். குமார் ரூபசிங்கவின் வழிகாட்டலால் தான் அஜித் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்ததாக பிற்காலத்தில் கூறிக்கொண்டார். அந்தளவு இடதுசாரித்தனமுடன் இருந்த குமார் ரூபசிங்க பிற்காலத்தில் இலங்கையில் பிரபல என்.ஜீ.ஓவால் பழுதடைந்த தலைவராக ஆக்கப்பட்டிருந்தார். அஜித் ரூபசிங்கவின் இறுதிக் காலமும் அப்படித்தான் ஆகியிருந்தது. இடதுசாரித் தலைவர்கள் பலரின் பெயர் பட்டியலை இப்படி தொகுக்கவும் முடியும்.

இப்படி குமார் ரூபசிங்க பற்றி ஏராளமான விபரங்களை விரிக்க முடியும் இது ஒரு சாதாரண அறிமுகம் மட்டுமே.

காலமான ஒருவர் பற்றி கொடுக்கக் கூடிய சிறிய அறிமுகம் இது மட்டுமே.

கே.குணரத்தினம் இலவசமாக அரசுக்கு கொடுத்த டவர் மண்டபம் (கொழும்பின் கதை - 14) - என்.சரவணன்

1880களில் கொழும்பின் பல்வேறு இடங்களில் நாடகங்களை அரங்கேற்றுவதற்காக பல தற்காலிக கொட்டகைகளும் கூடாரங்களும் உருவாகின. கொழும்பு மணற்பாதைகளில் குதிரை வண்டிகள் தான் ஓடிக்கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் நாடகம் மட்டுமே பொழுதுபோக்கிற்காக கொழும்பு மக்களுக்கு இருந்த ஒரே ஒலி - காட்சி ஊடகம் அவை.

அன்று தற்காலிக கொட்டகைகளும். பெவிலியன் தியேட்டர், பொது மண்டபம் (பப்ளிக் ஹோல்), சரஸ்வதி மண்டபம் போன்ற அரங்குகள் இருந்தன. இவற்றில், கொழும்பு கோட்டையில் உள்ள ராக்கெட் கோர்ட்டில் இருந்த பிளவர் மண்டபம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் 1886ல் அதுவும் தீயில் அழிந்து போனது. அது நாடகத் துறைக்கும் ஒரு இழப்பாக கருதப்பட்டது.

பழைய நாடகக் கொட்டகை

1888களில் ஓடு வேயப்பட்ட கட்டிடத்துடன் கூடிய புதிய மண்டபம் கட்டப்பட்டு வந்தது. பாஸ்டியனின் நடன நிறுவனத்தின் முகாமையாளர் சைமன் சில்வா இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். ஆனால் புதிதாக கட்டப்பட்ட மண்டபமும் தற்காலிக கட்டிடமாகவே இருந்தது. இப்பன்வல சந்திக்கு அருகில் மிகவும் வசதியான, முழுமையான பொது மண்டபம் (பின்னர் எம்பயர் மண்டபம்) கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அதுவும் சிறிது காலத்தில் இடிந்து விழுந்தது. 1900 அளவில் புறக்கோட்டை மல்வத்தை வீதியில் நியூ ஸ்போர்ட்ஸ் போர்ட் ஹோல் என்ற தற்காலிக அரங்கமும் இயங்கி வந்தது.

முதன்முதலில் இவ்வாறு நாடகங்களைக் காண்பித்த இடமாக புறக்கோட்டை தான் திகழ்ந்தது. பின்னர் புறக்கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த மருதானை நாடகங்களை காண்பிக்கும் பிரபலமான இடமாக மாறியது. புறக்கோட்டையைச் சேர்ந்தவர்களும் நள்ளிரவில் நாடகம் பார்க்க மருதானைக்கு வந்தார்கள். “மரதான ப்ரீதி நத்தல் நாட்டிய கந்தாயம”, மருதானை போபஸ் வீதியில் (இப்போது தேவனம்பியாதிஸ்ஸ மாவத்தை) ஓரியண்டல் தியட்டர் நிறுவனம் போன்ற நாடகக் கம்பனிகள் அப்போது பிரபலமாக இயங்கின.

1908 இல் சிங்கள நாடகக் கம்பனி மருதானையில் ஆரம்பமானது. ஜேம்ஸ் பெரேரா என்கிற பிரபல வர்த்தகர் தான் அதன் தலைவர். அவர் முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு புதிய மண்டபம் ஒன்றில் முதலில் நாடகத்தை மேடையேற்றினார். பிற்காலத்தில் அந்த இடத்தில் தான் இன்றைய எல்பின்ஸ்டன் மண்டபம் நிறுவப்பட்டது.

ஹெந்திரிக் செனவிரத்ன

சண்டை சவாலால் உருவான டவர் மண்டபம்

மருதானையில் யூனியன் பெசேஞ்ஜர் ஹோட்டல் உரிமையாளர் கனேகொட அப்புஹாமிலாகே ஹெந்திரிக் செனவிரத்ன. ஒரு நாள் அவருடைய மகன் எட்மண்ட் புறக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நாடகம் பார்க்கச் சென்றபோது வம்புச் சண்டையில் அகப்பட்டார். அப்போது மருதானைக் குழுவினர் புறக்கோட்டை கும்பலால் அடிவாங்கி வரவேண்டி ஏற்பட்டது. இந்தக் களங்கத்திலிருந்து விடுபட எட்மண்ட் ஒரு விசித்திரமான யோசனை தென்பட்டது. அதாவது அவரது குடும்பத்தினர் தலைமையில் ஒரு திரையரங்கை கட்டுவது. அதுவே மற்ற திரையரங்குகளை முறியடிக்கும் என்ற எண்ணம் அவருக்கு உருவானது. எட்மண்ட் இந்த யோசனையை தனது தந்தை ஹெந்திரிக்கிடம் தன் யோசனையைச் சொன்னார். மற்ற குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் மருதானையில் நிரந்தர திரையரங்கம் அமைக்கும் திட்டத்தை ஹெந்திரிக் ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் இலங்கையின் முதலாவது நிரந்தர நாடக சபை மண்டபமான டவர் மண்டபம் கட்டப்பட்டது. 

ஹெந்திரிக் முதலாளி 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி பஞ்சிகாவத்தை வீதியில் குதிரைத் தொழுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை 2000 ரூபாவுக்கு வாங்கினார். அந்த 68 பேர்ச்சஸ் காணி 'மெரக்ஞகே வத்த' என அழைக்கப்பட்டது. 'மெரக்ஞகே வத்த' குதிரை வண்டிகளுக்கான தொழுவமாக அப்போது பயன்படுத்தப்பட்டது வந்தது.

இந்த காலப்பகுதியில் பிரபலமடைந்திருந்த குதிரைப் பந்தயங்களுக்காக; தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகளை பராமரிக்கும் பாரிய லாயமாக நடத்துவதன் மூலம் வணிக ரீதியில் இலாபம் சம்பாதிக்கலாம் என்பதே அவரின் ஆரம்ப எண்ணமாக இருந்தது.

ஜோன் த சில்வா தலைமையிலான நாடகக் குழுவுக்கு மிகப் பிரபலமான வரவேற்பு அப்போது வளர்ச்சியுற்று வந்தது. நாடகம் நாட்டியம் என்பவற்றுக்கான ஜனரஞ்சக எதிர்பார்ப்பும், தேவையும் இருந்ததாலும் அவற்றுக்கான அரங்கங்களின் பற்றாக்குறை இருந்ததால் அதற்கான முயற்சியும் கூட வணிக ரீதியில் இலாபம் தரத்தக்கதே என்பதை அவர் உணர்ந்தார். இறுதியில் இந்த நிலத்தில் ஒரு தேசிய திரையரங்கத்தைக் கட்டுவதென முடிவானது.

இந்தக் காலப்பகுதியில் பௌத்த மறுமலர்ச்சி கால கட்டத்திலிருந்து இலங்கைக்கான சுதேசியத்தைக் கோருகிற இயக்கங்கள் வீரியமாக எழுச்சியடைந்த காலம். மதுவொழிப்பு இயக்கம் இதில் முக்கியமான அங்கத்தை வகித்தது. சுதேசிய பண்பாட்டை வலியுறுத்தும் பல முயற்சிகளை அப்போதைய இலங்கைத் தலைவர்கள் முன்னெடுக்கத் தொடங்கிய காலகட்டம்.

டவர் திரையரங்கை திறந்து வைக்கும் நிகழ்வு சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றதுடன் அக்கால சுதேசிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயபூர்வமாக காலை ஏழு மணிக்கு திறந்துவைத்தவர் அனகாரிக தர்மபால. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அன்றைய கொழும்பு மாநகரசபையின் மேயர் கே.வீ.பீ.மெக்லியட் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் டீ.எஸ்.சேனநாயக்க, எப். ஆர். சேனநாயக்க, சேர்.பொன்னம்பலம் இராமநாதன், டி. பி. ஜயதிலக, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாச சிறிசேன, சட்டத்தரணி ஜோன் த சில்வா போன்ற அன்றைய பிரபல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அநகாரிக தர்மபால அதனை திறந்துவைத்து ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிட்டார்.

"நாடகத்துறையை வெறும் பொழுதுபோக்கிற்காக அர்ப்பணிக்கக் கூடாது. இங்கே நடத்தப்போகிற நாடகங்கள் சிங்கள தேசத்தையும் புத்த சாசனத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்." என்றார்.

அன்றைய முதல் நாடகம் இரவு 9.30 க்கு ஏற்பாடாகியிருந்தது. 9.30க்கு ஆளுநர் ஹென்றி மெக்கலம்; மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுடன் (SWRD பண்டாரநாயக்கவின் தந்தை) வந்திருந்தார்.

மண்டபம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டப்பட்டது. டிசம்பர்  16, 1911 இல் திறக்கப்பட்டதும் சார்ல்ஸ் டயஸின் "பாண்டுகாபயா" என்கிற நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. ஹெந்திரிக்கின் மகளை விவாகம் செய்த வழக்கறிஞர் தான் சார்ல்ஸ் டயஸ். அவரின் முதல் நாடகம் தான் “பாண்டுகபாய”. இந்த நாடகத்துக்கான உடைகள் அனைத்தும் பம்பாயில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

“பாண்டுகாபாய” நாடகமானது “நூர்த்தி” என்கிற சிங்கள நாடக வடிவத்தில் தான் நிகழ்த்தப்பட்டது. சிங்கள நாடகக் கலையைப் பொறுத்தளவில் மூன்று விதமான பிரதான நாடக வகைகளைக் கொண்டியங்கி வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. “நாடகம்”, “நூர்த்தி”, “நவநாடகம்” என்று அம்மூன்றையும் வகைப்படுத்தலாம். நூர்த்தி என்பது இந்தியாவில் பம்பாயில் இருந்து 1800 களில் எல்.வின்ஸ்டன் டிராமடிக் கொம்பனியால் பலிவாளா நூர்த்தி குழுவினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாடக வடிவம். அது இலங்கையில் சிங்களச் சூழலில் வெகுவாக பரவி அவர்களைப் போலவே  ஹிந்துஸ்தானி ராக, தாள வடிவங்களை சிங்கள நாடகங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதில் பிரதான தாள வாத்தியமாக தபேலா பயன்படுத்தப்பட்டது. இந்த நாடக வடிவத்தை அதிகம் பின்னர் பரப்பியவர் பிரபல நாடக கர்த்தாவாக போற்றப்படும் ஜோன் த சில்வா. இலங்கையின் நூர்த்தி நாடக வடிவம் பற்றி பல ஆய்வுகளும் உள்ளன. நுண்கலைத்துறை கற்கையில் அது ஒரு விரிவான பாடம்.

சார்ல்ஸ் டயஸ்

மேற்படி டவர் மண்டபத் திறப்பின் பின் டவர் மண்டபம் இலங்கையின் நாடகம் மற்றும் நாடகக் கலை வரலாற்றில் ஒரு தனித்துவமான மையமாக மாறியது.

லண்டன் கோபுரத்தை (Tower of London) மாதிரியாகக் கொண்ட மூன்று முகங்களைக் கொண்ட கடிகாரக் கோபுரத்தின் மாதிரியில் தான் அது கட்டப்பட்டது. பெயரும் கூட அதனை முன்மாதிரியாகக் கொண்டு “டவர் ஹோல்”  பெயரிடப்பட்டது. பம்பாயிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறப்புத் திரையையும், நவீன மேடை உபகரணங்களுடன் கூடிய டவர் தியேட்டரை 1,500 பார்வையாளர்கள் வரை அனுபவிக்கக் கூடிய விதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “பாண்டுகாபய” நாடகம் இலங்கை நாடகக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் திகழ்கிறது. அன்றைய பாரம்பரிய மரபுகளைத் தாண்டி, சாதாரண கிராமத்து வாழ்க்கையை வியத்தகு முறையில் உள்ளடக்கிய நாடகம் அது.


டவர் மண்டபம் ஒரு தேசிய நாடக அரங்காக நிறுவப்பட்ட நேரத்தில், அது சுமார் 120 நிரந்தர கலைஞர்களைக் கொண்டிருந்தது. டவர் மண்டபம் நினைவு மலரொன்றின் பிரகாரம், டவர் மண்டபத்தின் சிரேஷ்ட நாடக கலைஞர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 400 ரூபா வரை உயர்ந்த சம்பளமாக இருந்திருக்கிறது. அவர்களின் நாளாந்தப் பணிகள் இவ்வாறு இருந்திருக்கிறது. காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி, மதியம் 12.30 மணி முதல் 4.20 மணி வரை ஓய்வு, மாலை 4.30 மணிக்கு நாடகத்திற்கான ஆடைகளை அணிந்து அரிதாரம் பூசி தயாராதல், மாலை 6.30 மணிக்கு முதல் நாடகம், இரவு 10.30 மணிக்கு இரண்டாவது திரையிடல் என இருந்திருக்கிறது.

டவர் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் “தேவனாம்பியதிஸ்ஸ” நாடகத்தில் உயிருள்ள மான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறயது. பின்னர் மான் இறந்த போது அதனை மதச் சடங்குகளுடன் கூடிய இறுதி சடங்கு நடத்தப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது. 1915 இல் சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது டவர் மண்டப உரிமையாளரும், முக்கிய நாடக ஆசிரியர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம், அக்கால நாடகங்களில் பெரும்பாலானவை தேசாபிமானத்தை தூண்டுகிற நாடகங்கள் என்றும் அவை சிங்களவர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டின என்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. ஜோன் ஆண்டர்சன் ஆளுநராக வந்ததன் பின்னர் 1916 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டவர் மண்டபத்தின் உரிமையாளர்களை விடுவித்ததுடன், டவர் மண்டபம் உள்ளிட்ட மற்ற திரையரங்குகளின் மீது இருந்த தடையை விலக்கி அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்தார். 1930 இல், தியேட்டர் வெள்ளத்தில் மூழ்கியது.

டவர் மண்டபத்தின் நாடக ஆசிரியர்கள் ஒவ்வொரு பிரதியையும் மனப்பாடம் செய்து ஒவ்வொரு பாடலையும் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. இதன் விளைவாக, நாட்டின் முதல் தொழில்முறை நாடகக் குழு உருவானதுடன் டவர் மண்டபத்து சுற்றுலா நாடகக் குழு உருவானது. இக்குழுக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று நாடகங்களை நிகழ்த்தினார்கள்.

ஹெந்திரிக் முதலாளியின் மரணத்தின் பின்னர் அவரின் பிள்ளைகளின் சொத்துச் சண்டைகளால் டவர் மண்டபத்தின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து போனது. இதே காலப் பகுதியில் இலங்கையில் மெளனப்படம் (Silent Film) களத்துக்கு வந்து சேர்ந்தது. இது நாடகத்துறையை மெதுமெதுவாக அரித்து விழுங்கியது. இதன் பின்னர் இலங்கைக்குள் பிரவேசித்த சினிமாத்துறையில் சினிமா நடிகர்களாக ஆனவர்கள் பலர் டவர் மண்டப நாடக சபையில் இருந்து தான் வந்திருந்தார்கள். சிங்கள சினிமாவின் முதலாவது கதாநாயகியான ருக்மணி தேவியும் இந்த நாடகக் கம்பனியில் இருந்து வந்தவர் தான்.

ருக்மணி தேவி  நாடகக் குழுவுடன்

செப்டம்பர் 12, 1931 இல் "சைரன் ஆஃப் பாக்தாத்" (Baghdad Nu Bulbul என்கிற தலைப்பு ஆங்கிலத்தில் Siren of Bagdad) திரைப்படம் வெளியானவுடன், அதுவரை தேசிய நாடக மையமாக இருந்த டவர் மண்டபம்; சினிமா தியேட்டராகவும் வடிவமெடுத்தது. தமது தொழிலை இழந்த நாடகக் கலைஞர்கள் அன்றைய தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ.குனசிங்கவை அணுகி சட்ட உதவி கோரினர். அதன் பிரகாரம் வெள்ளிக் கிழமைகளில் நாடகங்களுக்கு பயன்படுத்துவது என்கிற சமரசத்துக்கு வந்தனர்.

இந்த காலகட்டத்தில் திரைப்படத் திரையிடல்களின் காரணமாக நாடகத்துறை கடும் சவால்களை எதிர்கொண்டது. டவர் மண்டபத்தில் நாடகங்கள் சனிக்கிழமைகளில் மட்டுமே காட்டப்பட்டன. ஆனால் டவர் திரையரங்கம் அதற்குமுன் ஒரு நாடக அரங்கமாகவே இலங்கை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருந்தது. ஒரு சினிமாவாக தியேட்டராக அல்ல. 1935 முதல் 1955 வரை, நாட்டின் பெரிய நாடகக் கலைஞர்களை உருவாக்கி வெளிக்கொணர்ந்ததில் டவர் மண்டப கலைப் பண்பாட்டு முயற்சிகள் தான் காரணமாக இருந்தன. 1927 ஆண்டளவில் கொழும்பில் இயங்கி வந்த ஒரேயொரு நாடக மண்டபம் டவர் தியேட்டர் மட்டும் தான்.

டவர் ஹால் தியேட்டர் 1941 இல் இரண்டாம் உலகப் போரின் நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டது. மீண்டும் 1947 ஏப்ரலில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் டவர் மண்டபத்தை 125,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தது. அதன் பின்னர் சிலோன் தியட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான எம்.செல்லமுத்துவும், சினிமா கம்பனி லிமிட்டட் உரிமையாளர் கே.குனரத்தினத்துடன் இணைந்து டவர் மண்டபத்தை சினிமா தியேட்டராக இயக்குவதற்காக “சினிமா டோக்கீஸ்” என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.   டவர் மண்டபத்தை அரச உடமையாக்கி பழையபடி நாடகங்களை நிகழ்த்தும் மண்டபமாக ஆக்கும்படி 1965 – 1970 காலப்பகுதியில் அன்றைய டட்லி அரசாங்கத்துக்கு டவர் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தக் காலப்பகுதியில் டவர் நாடக சபையின் கலைஞர்கள் மிகுந்த வாழ்க்கை நெருக்கடியை அனுபவித்தார்கள். சரளா பாய் என்கிற பெண் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுசிலா ஜயசிங்க தனது வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அதன் சமையலறையில் வாழ்க்கை நடத்தினார். ஏனையோரின் நிலையும் இது தான்.

சினிமாஸ் நிறுவனத்துக்காக 1968 ஆம் ஆண்டு தயாரித்த திரைப்படமான “அட்டவெனி புதுமைய” ('எட்டாவது அதிசயம்') என்கிற திரைப்படம்  கே.குணரத்னத்தின் தயாரிப்பில் எம்.மஸ்தான் இயக்கிஇருந்தார். அன்றைய முதல் காட்சி தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் அன்றைய திரைப்பட ஜாம்பவான்களாக இருந்த எண்டன் கிரகெரி, அன்றூ ஜயமான்ன, எம்.மஸ்தான், கே.குணரத்தினம், வீ,வாமதேவன், பீ.கே.பாண்டியன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

1970 களில் சுதேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவற்றை தேசியமயமாக்கிய சிறிமா அரசாங்கமும் டவர் மண்டபத்தை அரசுடமையாக்க முடியவில்லை. டவர் ஹால் தியேட்டர் மார்ச் 16, 1973 இல் “பயாஸ்கோப்” சினிமாவாகவே மாறியது. 1977 இல் பிரேமதாச பிரதமராக பதவியேற்றதும் 1978 இல் டவர் மண்டபத்தை இலவசமாக அரசுக்கு அளித்தார் அதன் உரிமையாளர் கே.குணரத்தினம். அரசு அதனை அரசுடைமையாக பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையின் சிங்கள சினிமாத் துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் செய்த கே.குணரத்தினம் 09.08.1989 அன்று அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

டவர் மண்டப கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியதுடன் மாளிகாவத்தையில் அமைத்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. அவர்களின் நிகழ்சிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி கொடுப்பனவுகளுக்கான வழிவகைகளை ஏற்படுத்தினார். அவர் 1978 இல் ஏற்படுத்திய டவர் ஹோல் மண்டப அறக்கட்டளையின் (Tower Hall Theatre Foundation) கீழ் பல பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருதானை எல்பின்ஸ்டன் மண்டபமும் அதன் ஒரு அங்கமாகத் தான் பிரேமதாசாவால் தொடக்கப்பட்டது. இன்றும் தமிழ், சிங்கள மொழிகளில் நாடக, அரங்கியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உண்மைகளை கனகிற் எடுக்கும்போது பல சுவாரஷ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் டவர் மண்டபம் நாட்டு மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அங்கமாகத் திகழ்கிறது.

நன்றி - தினகரன் - 06.02.2022



கறுப்புக்கொடிப் போராட்டத்தில் நடராஜன் கொல்லப்பட்டார் (அன்றைய சுதந்திரனில்)

  • இது தான் 2500வது சம் புத்த ஜயந்தி கண்ட புனித ஆண்டு!
  • திருப்பூர் குமரன் தீரபரம்பரையிலே..
  • திருமலை தந்த தியாகி நடராஜன் துப்பாக்கிகுண்டுக்கு விழியைப் பலியாக்கி மொழியைக் காக்க முன்வந்த முதியவர்

உயிர் ஈந்து, செங்குருதி வழிந்தோட திருகோணமலையில் துக்கதின அனுஷ்டானம்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலே பொலிஸாரின் குண்டாந்தடிப் பிரயோகம் மண்டையைப் பிளக்க, தியாகத்தின் பிரவாகமாக பச்சை இரத்தம் பீறிட்டு வழிந்தோட, இறுதி மூச்சுவரை சாத்வீகப் போராடி உயிர் நீத்து மூவர்ணக் கொடியின் புனிதத்தைப் பாதுகாத்தான் தீரன் திருப் பூர்க் குமரன்.

அந்த வீர பரம்பரையிலே திருமலை ஒரு தியாகி நடராஜனைத் தந்துவிட்டது. எந்த இன எழுச்சியிலும் முன்னணி வகிக்கும் திரு மலைக்கு இது தீராப் பெரும் புகழைத் தேடித் தந்து விட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே, அன்னைத் தமிழ் மொழியின் உரிமை காக்க அறப்போரிட்டு ஆருயிரை ஈந்தார்கள். தாளமுத்து தடராஜன் என்ற திராவிட வீரர்கள். அந்த வீரர்களுக்கு ஈடும் எடுப்புமான ஒரு ஜோடி நடராஜன், திருமலையில் தியாகக் கோபுரத்தின் உச்சிக்கே உயர்ந்து விட்டான்.

முது பெரும் கிழவர் ஒருவர் தன் விழியைத் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகக் கொடுத்து மொழியைக் காப்பதில் தன் கடமையைப் புரிந்துவிட்டார். இன்னும் எத்தனையோ இளைஞர்கள் இரத்தம் சிந்தி இன உரிமைப் போருக்கு இளைத்தவர் அல்ல நாம் என்பதை நிருபித்து விட்டார்கள் இவ்வாரம் தமிழ் பேசும் மக்கள் அனுஷ்டித்த துக்க தினத்திலே.

உயிரிழந்த நடராஜனைத் தேசியத் தியாகியாக வைத்து வணங்குவோம். அவன் நாமத்தைத் தமிழரசின் சரித்திரத்தில் பொன் எழுத்தில் பொறிப்போம். இரத்தம் சிந்தியவர்களை தேசிய வீரர்களாகக் கொணடாடுவோம்.

தமிழ் பேசும் மக்களின் தியாக வரலாறு கொழும்பு சத்தியாக்கிரகத்தையும், கல்லோயா கலவரத்தையும் தொடர்ந்து திருமலையிலும் வளர்ந்து வருகிறது. வளரட்டும், வளரட்டும் இந்த தியாகத் தீயிலே அக்கிரமக்காரர்கள் பொசுங்கும் புண்ணிய தினம் அதிக தூரத்திலில்லை.

-ஆசிரியர்

திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பேசும் மக்கள் பெப்ரவரி 4-ந் திகதி சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தார்கள். அங்கு வாழும் சிங்கள மக்கள் சுதந்திர தினத்தைக்கொண்டாட விரும்பினார்கள் எனவே இருசாராருக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாண அதிபர் திரு மக்கேஷருக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்டது.

சமரச முடிவு

அரசாங்க ஏஜண்ட் திரு மக்கேஷர் 3- திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மகாநாடு கூட்டி தமிழ் மக்கள் துக்கம் அனுஷ்டிக்கவும் சிங்கள மக்கள் சுதந்திரதினம் கொண் டாடவும் எப்படி வசதி செய்யலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பிரகாரம் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை தமிழ்ப்பேசும் மக்கள் துக்கதின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்றும் பிற்பகல் 2மணிமுதல் மாலை 6 மணிவரை சிங்கள மக்கள் சுதந்திர தினத்தைக் கொண் டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் ஸ்தாபனங்களிலும் கறுப்புக் கொடி உயர்த்துவதென்றும் சிங்களவர்கள் தங்கள் தங்கள் இடங்களில் சிங்கக் கொடி உயர்த்துவதென்றும் ஒருவரையொருவர் எந்த வகையிலும் நிர்ப்பந்திப்பதில்லையென்றும் முடிவு செய்யப்பட்டது

மார்க்கட் விவகாரம்

ஆனால் திருமலை மார்க்கட்டைப் பற்றி ஒரு பிரச்னை கிளம்பிற்று திருமலை மார்க்கட் நகரசபைக்குச் சொந்தமான கட்டடமாகும். திருமலை நகரசபைக் கட்டடத்திலும் அதற்கு சொந்தமான இடங்களிலும் கறுப்புக்கொடி உயர்த்துவதென முடிவு செய்திருந்தது. இதன் படி மார்க்கட்டிலும் கறுப்புக்கொடி உயர்த்த நகர சபைக்கு உரிமையுண்டு. ஆயினும் மார்க்கட் முழுவதிலும் சிங்கள வியாபாரிகளே இடம் பிடித்திருந்ததால் அங்கு கறுப்புக்கொடி ஏற்றுவது அவர்களைப் புண்படுத்தும் என்று வாதிக்கப்பட்டது. முடிவில் மார்க்கட் கட்டடத்தில் சிங்கக்கொடியும் ஏற்றக் கூடாது கறுத்தக் கொடியும் ஏற்றுவதில்லை, அதை ஒரு பொது இடமாகப்பாவிக்க வேண்டும் என்று சுமுகமான முடிவு செய்யப்பட்டது. இந்த அளவிற்கு திருமலையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களும், நகர சபையினரும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தனர். மரக்கறி மார்க்கட்டிலும் மீன் விற்பனவுச்சந்தையிலும் எந்தவிதமான கொடியும் ஏற்றுவதில்லையென்ற முடிவை தமிழரும் சிங்களவரும் ஒப்புகொண்டிருந்தனர்.

ஊர்வலம்

4-ம் திகதிகாயில் பல்லாயிக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்கள் கருப்புக் கொடிகளப் பிடித்துக் கொண்டும், கறுப்பு சின்னங்களை அணிந்து கொண்டும் மடத்தடிச் சந்தியிலிருந்து நகரசபை காரியாலயத்தை நாடி அமைதியுடன் ஊர்வலமாகச் சென்றனர். இவ்வூர் வலத்தை திருமலைப் ப்பிரதிநிதி திரு என், ஆர். இராஜவரோதயம், ஊர்காவற்றுறைப் பிரதிநிதி திரு வி. ஏ. கந்தை யா, கப்டன் ஏ, ஸி கனகசிங்கம், புரக்டர் துரைநாயகம் ஆகியோர் முன்னின்று நடத்தினர். 

ஊர்வலம் நகர சபைக்காரியாலயத்தை அடைந்ததும் நகரசபைத் தலைவர் திரு த. ஏகாம்பரம் அங்கு ஒரு கறுப்புக் கொடியை ஏற்றிவைத்து உணர்ச்சிகரமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் மக்கள் திரளாகச் சென்று மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீதும் கறுப்புக்கொடி உயர்த்தினர்.

இதைத் தொடர்ந்து திருமலை காலி கோயில் முன்றிலில் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில் திரு. இராஜவரோதயம் தலைமை தாங்கி சுமார் மூன்று நிமிடங்கள் பேசியிருக்கலாம். அப்போது கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. வீர இளைஞர்கள் மரக்கறி மீன் மார்க்கட்டுகளை நாடி ஓட்டம் பிடித்தனர். என்ன காரணம் என்று பார்த்த போது, கண்ணியமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி வெறி பிடித்த சிங்களவர் சிலர் மீன் சந்தையிலும், மரக்கறி சந்தையிலும், தனிச்சிங்கக் கொடிகளை ஏற்றிவைத்து விட்டனர் என்று தெரிய வந்தது.

பொலீஸ் இராணுவம்

உடனே தலைவர்களும் அந்த இடத்திக்குச் சென்றனர் மாகாண அதிபருக்கும், டிஸ்ரிக் நீதிபதிக்கும், பொலீஸுக்கும் டெலிபோன் செய்யப்பட்டது அவரும் அங்கு வந்து சேர்ந்தனர். இராணுவமும் பொலிஸ்படையும் கூட துப்பாக்கிகள் சகிதம் அங்கு வந்து வட்டமிட்டு அணிவகுத்து நின்றன.

முடிவை மீறுவதா

மாகாண அதிபர் மக்கேஷரும் தலைவர்களும் மார்க்கட் கட்டடங்களிலிருந்து சிங்கக் கொடிகள் இறக்கி சமாதானத்தைக் காக்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சிங்களவர்கள் முரட்டுத்தனமாக மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீது உயர்த்திய கறுப்புக் கொடியை இறக்க வேண்டும் என்று அடம் பிடித்தனர். அவர்கள் கோரிக்கை நியாயமற் றது என்றும் மணிக்கூண்டுக் கோபுரம் நகரசபையின் உடைமை என்றும் முதல் நாள் மகாநாட்டில் மார்க்கட் மட்டுமே பொது இடமாக ஒப்பு கொள்ளப்பட்டதென்றும், மணிக்கூண்டுக் கோபுரம் பொது இடமாகாது என்றும் வாதிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டார்கள். சிங்களவர்கள் எல்லோரும் கூட்டமாகத் திரண்டு இரு மார்க்கட தலைவாசல்களையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.

துப்பாக்கி முழங்கிற்று

இந்த நேரத்தில் டும், டும் என்று இரு வெடியோசைகள் கிளம்பின. எங்கோ பட்டாஸ் கொளுத்தப்படுகிறதென்று ஆரம்பத்தில் மக்கள் எண்ணினார்கள், ஆனால் அந்தோ பரிதாபம்! கூட்டத்தில் கூக்குரல் கிளம்பிற்று நடராஜா என்ற இளைஞரின் மார்பில் துண்டு பாய்ந்ததில் அவர் பதறிக் கதறிக் கொண்டு அடி சாய்ந்தார் துடிக்கத் துடிக்க அவர் உயிர் பறந்தது. திரு.வ.நடராஜா என்ற மற்றொரு இளைஞர் படுகாயப்பட்டார். ஒரு முதியவரின் கண்களிலினூடாக குண்டு பாய்ந்து விட்டது. இன்னொரு இளைஞருக்கு நெற்றியில் காயம்பட்டது. மற்றும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஜன சமுத்திரம் அல்லோல கல்லோலப்பட்டது. எங்கும் குழப்பம். எங்கும் கலவரம், எங்கும் பயங்கர தத்தளிப்பு நிலவியது.

கூட்டத்தை களைந்து போகுமாறு டிஸ்ட்ரிக் நீதிபதி திரு. கந்தசாமி கட்டளையிட்டார். கூட்டம் கலைந்தது துப்பாக்கியினால் தாக்குண்டவர்கள் ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தெடுத்துச் செல்லப்பட்டனர்.

சிங்களக் கோழை

நடந்தது இது தான் வெளியில் தலைவர்களும் மக்களும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில், சிங்களவர்கள் திரண்டு மார்க்கட் வாயில்களை மறைந்து நிற்க ஒரு வெறி பிடித்த சிங்களவன் மார்க்கட்டுக்குள் கோழையைப் போல் மறைந்து நின்று, மார்க்கட் சுவரிலிருந்த கிராதித் துவாரத்தின் மூலம் இரட்டைக் குழல் துப்பாக்கியினால் குருட்டுவாக்கில் கூட்டத்தை நோக்கி இரண்டுமுறை சுட்டிருக்கிறான் ரவைகள் நாலா திசைகளிலும் பாய்ந்து தமிழ்மக்களைப் பலி கொண்டன, கொடிகாக்கும் பணியில் தியாகி நடராசா தம் இன்னுயிரைப் பணையம் வைத்தார்.

ஒருவர் கைது

மேற்படி துப்பாக்கி சம்பவம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் எல். ஜி. மனுவல் சில்வா என்றசிங்களவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோட்டில் ஆஜர் செய்த போது இம்மாதம் 15-ந் திகதிவரை அவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதி பதி உத்தரவிட்டிருக்கிறார்.

திருகோணமலை துப்பாக்கி சம்பவத்தை தொடர்ந்து நகரத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கு சில சிறு சிறு கலவரங்கள் ஏற்படடன, சிங்களவர்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர் என்றும், சிங்களவர்களுக்குச் சொந்தமான சில கடைகள் தீயிடப்பட்டனவென்றும் தெரிகிறது.

சிங்களவர் வெளியேற்றம்

திருமலையில் இருந்த பல சிங்கள முதலாளிகளும், மற்றையோரும் குடும்ப சகிதம் திருமலையைவிட்டு வெளியூர்களுக்கு ஓடிவிட்டார்கள் என்று தெரிகிறது. இப்போது திருமலையில் அமைதி நிலவுகிறது இராணுவமும் போலிசும் நகர் காவல் புரிகின்றன. ஆயினும் எந்த நிமிஷமும் மீண்டும் வகுப்புக் கலவரம் ஏற்படலாம் என்ற நிலை இன்னும் தணிந்துவிட்தாகத் தெரியவில்லை.

நன்றி - சுதந்திரன் (10.02.1957)

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates