Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தெவட்டகஹ பள்ளிவாசல்: அதிசயம் நிகழ்ந்த மஸ்ஜீத்? (கொழும்பின் கதை - 36) - என்.சரவணன்

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள லிப்டன் சுற்று வட்டத்துக்கு அருகில் உள்ள தெவடகஹ ஜும்மா மஸ்ஜித் கொழும்பு நகரின் மிக முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். கொழும்பின் மையத்தில், பலரால் கவரக்கூடிய முக்கிய பிரதேசத்தில் இது அமைந்திருக்கிறது. மிகப் பழமையான பள்ளிவாசலும் கூட. முஸ்லிம்கள் மட்டுமன்றி வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் பலரும் கூட ஒன்றுகூடி வணங்கிச் செல்லும் இடமாக அது திகழ்கிறது. பல அரசாங்க பெரிய ஆஸ்பத்திரிகளும் இதைச் சூழ இருப்பதால் பலர் நோய்கள் தீர வேண்டி வணங்கிச் செல்லும் இடமாகவும் இது இருக்கிறது. எனவே பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்த பள்ளிவாசலுக்கு வந்து செல்கிறார்கள்.

1802ஆம் ஆண்டு இங்கே முஸ்லிம் புனித யாத்திரிகரான ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் அவர்களின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டதாக பல முஸ்லிம் மூல தகவல்கள் தெரிவிக்கின்றன.  அரேபியாவில் உள்ள அராஃபத்திலிருந்து ஆதாமின் சிகரத்திற்கு புனித யாத்திரையாக வந்த வேளையில் அவர் மறைந்தார். அவர்  இங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். இந்த பள்ளிவாசலின் முக்கிய அம்சமாக அதனைக் குறிப்பிட முடியும்.

"தெவட்டகஹ பள்ளிவாசல்" என்று அழைக்கப்படுவதைப் போல “ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் தர்கா மஸ்ஜீத்” (Sheik Usman Vali-ulah Darga Mosque) என்றும் இன்று இதனை அழைக்கிறார்கள். அதிசயம் நிகழ்ந்ததாக நம்பப்படும் கதைகளைக் கொண்ட தர்காக்கள் இலங்கையில் சிலவற்றைக் குறிப்பிட முடியும் அவற்றில் இது முக்கியமானது.

இந்தப் பள்ளிவாசலைக் கடந்துசெல்லும் “எந்த முஸ்லிம்களும் தமது மரியாதையை செலுத்தாமல் தாண்டுவதில்லை.” என்கிற பொது அப்பிப்பிராயமும் உண்டு.


அதுமட்டுமன்றி பெண்களும் உள்ளே சென்று வணங்கிச் செல்லும் வணக்கஸ்தலமாக அது திகழ்கிறது. கொழும்பில் வெள்ளியன்று ஜூம்மா தொழுகை முடித்துச் செல்ல பலர் ஒன்று திரளும் இடம். எனவே தான் முஸ்லிம் மக்கள் தமது தமது எதிர்ப்புக் கூட்டங்களையும் அதிகமாக நடத்தும் இடமாக இது திகழ்கிறது.

அரேபியாவின் அரபாத்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து; ஆதாமின் சிகரத்திற்குச் (அதாவது பௌத்தர்கள் சிறிபாத என்றும், இந்துக்கள் சிவனொளிபாத மலை என்றும் அழைக்கப்படும் மலைக்கு) சென்று, பின்னர் இலங்கையில் தங்கிவிட்ட முஸ்லிம் சமயத் துறவி செயிதினா அஸ்-ஷேக் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மானின் கல்லறை இருக்கும் 150 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் அது. இந்த மஸ்ஜித் உருவான வரலாறு பற்றி ஒரு சுவாரஸ்யமான பின்னணி கதையொன்று உள்ளது. வாய்மொழிக் கதையாக இந்த கதை மிகவும் பிரபலமானது.

200 ஆண்டுகள் பழமையான கதை அது. 

1820 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த கறுவாத்தோட்டப் பகுதி மரங்கள் நிறைந்த வனாந்திரப்  ஒரு எண்ணெய் விற்கும் சிங்களப் பெண், தனது குடும்பத்தை உழைத்துக் காக்கும் ஒரே ஒரு பெண்.அவர் நாளாந்தம் பம்பலப்பிட்டியிலிருந்து கறுவாத்தோட்ட காட்டு வழியாக மருதானைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இந்த காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த வேளை அவர் ஒரு முந்திரி மரத்தின் வேரில் தடுக்கி விழுந்தார். அப்படி விழுந்ததில் அவரின் மண் பானை துண்டு துண்டாக உடைந்தது. அதைத் தாளாமல் கதறி அழுதார். “என் குடும்பத்திற்கு இன்று உணவு இல்லை. என்னுடைய ஒரே வருமானம் அழிந்து விட்டது. ஐயோ! எனது குடும்பம் இன்று பட்டினி கிடக்க வேண்டுமே” என புலம்பி அலுத்துக் கொண்டிருந்தார். அந்த அழுகையிலேயே களைத்துப் போய், அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டார் அந்தப் பெண். அப்போது ஒரு குரல் அவரை எழுப்பியது. அது ‘விரக்தியடைய வேண்டாம்..,விரைவில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று அவருக்கு உறுதியளித்தது. அப்பெண் நிமிர்ந்து பார்த்தார், அங்கே யாரையும் காணவில்லை, விரக்தியில் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருந்தார்.

மீண்டும் அந்தக் குரல் உறுதியளிக்கும் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னது. அப்பெண்ணால்  இதை நம்பமுடியாததாக இருந்தது. ஏனென்றால் அந்த அடர்ந்த காட்டில் அவர் எந்த மனிதனையும் அங்கே காணவில்லை. திடீரென்று பச்சை நிற ஜிப்பா அணிந்த ஞானி போன்ற தோற்றத்தில் ஒரு முதியவரைக் அப்பெண் கண்டார். அம்மனிதனின் தோற்றத்தால் அப்பெண் உற்சாகமாக நோக்கினார்.

"நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை," என்று அவர் அப்பெண்ணிடம் கூறினார். “உன் எண்ணெயை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். எனக்கு ஒரு பானை மட்டும் கொண்டு வா” என்றது அந்தக் குரல்.

அந்தப் பெண் மருதானை நோக்கிப் புறப்பட்டு, வழக்கமான தனது வாடிக்கையாளரான மாமினா லெப்பை என்ற முஸ்லிம் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அவரது தாயிடம் ஒரு புதிய பானையைக் தரும்படிச் சொன்னார். வழக்கத்துக்கு மாறான இந்த வேண்டுகோளைக் கேட்ட மமினா லெப்பை அதுபற்றி அப்பெண்ணிடம் வினவியபோது; அவர்களிடம் "நான் திரும்பி வந்து நடந்ததைச் சொல்கிறேன்" என்று கூறி பானையுடன் காட்டிற்குத் திரும்பிய அப்பெண் முதியவர் ஒரு `தெவட்ட' மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். தேவதா மரம் என்பதை தமிழில் “அந்திமிரியம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். முதலில் உடைந்த இடத்தில் பானையை வைக்கச் சொன்னார். அம்மனிதர் தன் பாதத்தை தரையில் அழுத்தினார் அத்தரையில் இருந்து எண்ணெய் குமிழியாக பொங்கி வழிந்தது வெளிவந்தது.

அந்தப் பெண் திகைப்புடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முந்திரி மரத்திலிருந்து சில இலைகளைப் பறித்து, அவற்றைக் கொண்டு எண்ணெயை அள்ளி அப்பானையை பானையை நிரப்பச் சொன்னார். அந்தப் பானை நிரம்ப எண்ணெய் கிடைத்தது. "இனி உன் தொழிலைச் செய்யலாம்," என்று அவர் அப்பெண்ணிடம், மேலும் அம்முதியவர் இதைப் பற்றி முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும்படியும், அவர் அங்கே தோன்றிய இடத்தை அவர்களுக்குக் காட்டவும் கேட்டுக் கொண்டார். நன்றி அப்பெண் அந்தப் பெரியவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்று விடைபெற்றார்.

இந்தச் சம்பவத்தை கூறுவதற்காக அப்பெண் மருதானையிலுள்ள மமினா லெப்பையின் வீட்டுக்குக்கு விரைந்தார். அவர் உடனே பெரிய பிச்சை, மீரா கனீ ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு கறுவாத்தோட்டத்துக்கு விரைந்தார். அங்கு அந்த அற்புத அடையாளங்களை அவர்கள் நேரிலேயே கண்டனர். அதாவது உடைந்த குடம், சிந்திய எண்ணெய், மரமுந்திரிகை மரம், எண்ணெய்யை அள்ளியெடுத்த இலைகள், தெவட்டமரம் என்பன அங்கே காணப்பட்டன.

அந்த ஞானி யார் என்று அவர்களால் அறியமுடியவில்லை. ஆனால், “யாஸீன் சூறா” வையும், “பாத்திஹா” வையும் ஓதிய பின் “வொலியுல்லாஹ் அவர்களே! தங்கள் அற்புதங்களை காணச் சந்தர்ப்பம் அளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் எங்களுக்குத் தாங்கள் யார் என்பதைக் காட்டித்தருவானாக.” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அங்கே சூழ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அந்த இடத்தில் அறங்காவலராக மமினா லெப்பை நியமிக்கப்பட்டார்.

இந்தக் வாய்மொழிக் கதையின் நம்பகம் ஒருபுறம் இருக்க அதனை மறுப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மேலும் சமாதி வழிபாடுகளை மறுக்கும் முஸ்லிம் சமூகத்து பிரிவினரும் இந்த பள்ளிவாசலை விமர்சிக்கவே செய்கிறார்கள்.

1847 இல், இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்கு மொரோக்கோ - மஃரிப் தேசத்தைச்சேர்ந்த அஷ்ஷெய்கு அலி ஜபருத் மெளலானா என்னும் மார்க்கப்பெரியார் இலங்கை வந்தார். கொழும்பு மருதானை மசூதியிலேயே அவர் தங்கினார். தவட்டகஹா அதிசயம் பற்றியும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையன்று, ஜும்மா தொழுகைக்குப் பிறகு, கதீப் ஹஸன் லெப்பை, ஷெய்கு அப்துல் காதிர், போன்ற சிலருடன் ஸயாரத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பாத்திஹா ஒதினார்கள். அலி ஐபரூத் மௌலானா அவர்கள் அந்த வலியுல்லாஹ் சமாதிக்கு முன்னால் தன்னை ஒரு அவர் தனது ஜுப்பா' (அங்கி) மூலம் தன்னை மூடிக்கொண்டு, கல்லறையில் மண்டியிட்டு,  தொழுதார். இறுதியில் அவர் போர்வையிலிருந்து வெளிப்பட்டபோது அவரது முகம் தெய்வீக ஒளியால் பிரகாசித்தது. கூடியிருந்த முஸ்லிம்களுக்கு அவர் இப்படி உபதேசித்தார்கள்.

"ஓ, எல்லாம் வல்ல அல்லாஹ், இது மிகவும் மரியாதைக்குரிய புனிதர். அவரது பெயர் செயத் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மான், ஆதாமின் சிகரத்திற்கு புனிதப் பயணமாக இந்தத் தீவுக்கு வந்து சில காலம் அருகாமையில் வாழ்ந்த பிறகு இங்கேயே மரணமடைந்தார். பின்னர் கதீப் தம்பி லெப்பை பக்கம் திரும்பி, “இது எந்த மாதம்?” என்றார்.

பெண்கள் இந்த பள்ளிவாசலின் பிரதான தொழுகை மண்டபத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்களுக்கென தனியான தொழுகைப் பிரிவு அங்கு உள்ளது. இது இலங்கை முழுவதும் உள்ள மசூதிகளில் பொதுவான அம்சமாகும்.

பள்ளிவாசலின் கட்டட வரலாறு

இந்தப் பள்ளிவாசல் இருந்த நிலம் ஆரம்ப காலத்தில் ஒரு கண்ணகி கோவில் (சிங்களத்தில் பத்தினி தெய்யோ) இருந்த இடம் என கூறும் சிங்களவர்கள் உள்ளார்கள். அதற்கான பழங்கால ஓவியங்கள், பாடல்கள் என்பவற்றையும் கூட கட்டுரைகளாகவும், நூல்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இருக்கலாம். அப்படியே இருந்தாலும் கூட அது அழிக்கப்பட்டுத் தான் இது கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. மேலும் இது மமினா லெப்பையின் காலத்திலேயே ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரங்களும் உண்டு.

1848 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கம் வீதி அபிவிருத்திக்காக சில நிலங்களை கையகப் படுத்தியது. அதில் மமினா லெப்பையின் நிலமும் அடங்கும். அதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க ஒத்துக் கொண்டது. அப்போது மரணப் படுக்கையில் இருந்தார். இழப்பீடாக தற்போது பள்ளிவாசல் உள்ள நிலத்தைத் தரும்படி மமீனா லெப்பை கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய ஆங்கிலேய ஆளுநர்  சேர் சார்ல்ஸ் ஜஸ்டின் மெக்கார்த்தியால் (Sir Charles Justin McCarthy)1863 ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி இந்த நிலம் அக்கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்டது. (கொழும்பு கச்சேரி பதிவிலக்கம் No.A/16/381)

பிரதான வீதியோடு சேர்ந்தார் போல் அமைந்திருக்கும் இந்த பெரிய பள்ளிவாசல் முகலாய கட்டட அமைப்பின் சாயலில் வட்டக் கூரை வடிவத்திலான கோபுரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த குவிமாடம் 1885 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, 1905 ஆம் ஆண்டு ஒரு தமிழ் ரத்தின வியாபாரி தனது திருடப்பட்ட நகைகளையும் ரத்தினங்களையும் கண்டுபிடிக்க நேர்த்திக் கடன் வைத்து அது நிறைவேறியதும் 1905 ஆம் ஆண்டில் மசூதியை ஒட்டி யாத்ரீகர்களுக்கான தங்குமிடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.

இரு உயரமான பெரிய வட்டக் கோபுரங்களில் ஒன்று 500 துளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது அவற்றில் பல புறாக்கள் வந்து தங்குவதைக் காணலாம். நாளாந்தம் கூடும் பெருமளவு புறாக்களுக்கு அங்கே தீனி போடும் வழிபாட்டாளர்களையும் அங்கே காணலாம். அங்கிருக்கும் நீர் தடாகத்தில் அவை நீர் அருந்திக் குளித்துச் செல்வதையும் காணலாம்.

அருகிலேயே இருக்கிற கொழும்பு நகரசபை மண்டபக் கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் கட்டும் போது இந்த குவிமாடத்தின் சாயலில் தான் கட்டினார்கள் என்கிற ஒரு நம்பிக்கையும் கூட பரவலாக இருக்கிறது.

தம்பிலிங்கம் செட்டியார் சமாதிக்கு அருகில் நிரந்தரமாக எரியும் எரிவாயு விளக்கை அமைத்துக் கொடுத்தார். எஸ்.தம்பி முதலியார் இந்த பள்ளிவாசலின் வாயில் பகுதிகளை அமைத்துக் கொடுத்தார். பல முஸ்லிம் தனவந்தர்கள் இதன் கட்டுமானப் பணிகளுக்காக நிறைய உதவியிருக்கிறார்கள்.

1983 ஆம் ஆண்டு அன்றைய போக்குவரத்து, முஸ்லிம் அலுவல்கள் கலாசார அமைச்சராக இருந்த எம்.எச் முஹமட் அவர்களால் இந்த மஸ்ஜீத்தின் முன்னர் இருந்த தோற்றம் புதுப்பிக்கப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. ஆனால் பிரதான கட்டிடம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மாற்றப்படாமல் அப்படியே பேணப்பட்டு வருகிறது. கொழும்பு வரும் உல்லாசப் பிரயாணிகள் பலர் இதனை தேடிக் கண்டு அனுபவித்துச் செல்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் இந்த மசூதியில் கூடுகிறார்கள்.

இந்த பள்ளிவாசலின் கட்டடக் களையும், அங்கே உள்ள மொசைக் கற்களின் அலங்காரமும் சிறப்பாக பேசப்படுகின்றன. 



றோயல் கல்லூரி : இலங்கையின் முதலாவது அரசாங்க பாடசாலை (கொழும்பின் கதை - 35) -என்.சரவணன்

இலங்கையின் முன்னணி கல்லூரியாக திகழ்வது கொழும்பு றோயல் கல்லூரி (Royal College). தமிழில் வேத்தியர் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இது தான் இலங்கையின் முதலாவது அரசாங்க பொதுப் பாடசாலை. 1835ஆம் ஆண்டு இது நிறுவப்பட்ட இக்கல்லூரி இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையாக திகழ்ந்தாலும் ஒரு தனியார் கல்லூரியின் வடிவத்தைத் தருவதற்குக் காரணம் இலகுவில் மாணவர்களை சேர்க்கமுடியாத அளவுக்கு போட்டியும், அதன் காரணமாக இறுக்கங்களும் அதிகம் உள்ள இலங்கை பாடசாலை இது தான்.

இக் கல்லூரியில் தமது பிள்ளைகளை சேர்த்துவிட கனவு காணாத பெற்றோர் அரிதென்றே கூறலாம். இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலர் இங்கே தான் கற்றார்கள்.

இலங்கையின் பணக்காரர்களின் கோட்டையாக அறியப்படும் கறுவாத்தோட்டப் பகுதியில் 15.5 ஹெக்டேர் பரப்பில் பெரிய விளையாட்டு வளாகம், நீச்சல் தடாகம் என பல வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு நூற்றாண்டை எட்டப்போகும் இந்தக் கல்லூரியின் பின்புலம் முக்கிய வரலாற்றுப் பாத்திரத்தையும் கொண்டிருக்கிறது.


ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இலங்கையில் தமது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல மாற்றங்களை செய்யத் தொடங்கினார்கள். கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களின் உற்பத்தி வேகம் தொடங்கப்பட்டதும் புதிய பாதைகளை உருவாக்குதல், இலங்கைக்கான அடிப்படை உட்கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்வதற்காக பல விடயங்களைத் தொடங்கினார்கள். 1833இல் கோல்புறூக் தலைமையிலான ஆணைக்குழு இந்த மாற்றங்களை செய்வதற்கான பரிந்துரைகளை செய்தது. அதன் மூலம் தான் இலங்கைக்கான யாப்பும் முதற்தடவை உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பரிந்துரை தான் பிரித்தானிய பொதுப் பள்ளிக்கூடங்களைப் போல அரசாங்க பள்ளிக்கூடங்களை தொடக்குவதற்கான தொடக்கமாகும்.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மிஷனரி பாடசாலைகள் அப்போது ஆரம்பமாகியிருந்தன. இலங்கையின் முதலாவது பிரிட்டிஷ் ஆளுநரான பிரெடிரிக் நோர்த் (Frederick North) காலத்தில் 1800 இல் யாழ் குடா நாட்டில் மாத்திரம் கிறிஸ்தியான் டேவிட் பாதிரியாரைக் கொண்டு 47 மிஷனரி பாடசாலைகளை தொடக்கினார். ஆனால் அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆளுநர் மெயிற்லான்ட் (T. Maitland) 1805 இல் அவற்றை நடத்துவதற்கான வளங்கள் போதாதென்று மூடிவிட்டார்.  1812 இல்  பப்டிஸ்ட் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றை நடத்த அரசு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அவற்றை நடத்த அனுமதியளித்திருந்தது. 1833 இல் 15 பப்டிஸ்ட் பள்ளிகளும், 90 வெஸ்லியன், 78 அமெரிக்கன் மிஷன் மற்றும் 53 மிஷனரி சொசைட்டி பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜோசப் மார்ஷ் பாதிரியார்

1835 ஆம் ஆண்டு றோயல் கல்லூரி தொடக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் 1831 இல் மெட்ராசிலிருந்து வந்த ஜோசப் மார்ஷ் (Joseph Marsh) பாதிரியாரால் அது தனிப்பட்ட ரீதியில் தான் தொடங்கப்பட்டது. அரசாங்கத்துக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 28 வயதேயான ஜோசப் மார்ஷ் பாதிரியார் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர். கோட்டேயில் இருந்த சேர்ச் மிஷனரி சொசைட்டியின் பணியாளராக அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். குறிப்பாக கணக்கியல், ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்காக அவர் அனுப்பட்டிருந்தார். 1835 ஆம் ஆண்டு அவர் புறக்கோட்டை, புனித பவுல் தேவாலயத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இங்கே தான் றோயல் கல்லூரிக்கான ஆரம்பம் இடப்பட்டது.

Rev. Joseph Marsh, Sir robert Wilmot horton, John Barnabas Cull

1837ஆம் ஆண்டு அவர் நூலகத்தைத் தொடங்கினார். பாடசாலை சஞ்சிகை ஒன்றையும் தொடங்கினார். இலங்கையின் முதலாவது பாடசாலைச் சஞ்சிகையாக அது தான் கருதப்படுகிறது. அவர் ஒரு அச்சகத்தையும் நிறுவினார். பரிசளிப்பு நிகழ்வுகளையும் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தார். அப்போதே கிரிக்கெட் விளையாட்டையும் ஊக்குவித்திருக்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கடும் சுகவீனமுற்றார். 1838 ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அவரின் நாட்டுக்கே திரும்பினார். ஆனால் அவர் தாய்நாடு போய் சேரவில்லை.  1839ஆம் ஆண்டு கடல் பயணத்தின் போதே அவர்  சென்ற கப்பலிலேயே காலமானார்.  ஆனால் அவரின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்தனர். அவர் அப்போதைய கொழும்பு மாவட்ட நீதிபதி அன்ரூ வோக்கரின் சகோதரியைத் தான் மணமுடித்திருந்தார்.

ஜோசப் மார்ஷ் பாதிரியாரின் மகள் அக்னஸ் ஜேனின் கணவர் பார்குரோப்ட் போக் (ஜோசப் மார்ஷ்) பின்னர் இப்பாடசாலையின் அதிபராக ஆனார். றோயல் கல்லூரியின் வரலாற்றில் அதிக காலம் அதிபராக இருந்தவர் அவர் தான். அவர் பதவி வகித்த 1842 – 1870 காலப்பகுதிக்குள் தான் தங்குமிடம் (Boarding House) உருவாக்கப்பட்டது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரியாக ஆக்கப்பட்டது. அதுபோல கொழும்பு அக்காடமி; குயின்ஸ் கல்லூரியாக ஆக்கப்பட்டது. மிகவும் கண்டிப்பான அதிபராக இருந்ததுடன், மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கிய ஒருவர். இலங்கையின் சுதேசிய மதங்களான பௌத்தம், சைவம் போன்ற மதங்களின் மீது அவரின் காட்டமும் இருந்தது பற்றிய குறிப்புகளையும் காணக் கிடைக்கிறது.

றோயல் கல்லூரியின் முதல் இடம்

முதன் முதலில் இந்தப் பாடசாலை எங்கே தொடங்கப்பட்டது என்கிற தகவல் வியப்பாக இருக்கும். புறக்கோட்டையில் ஐந்து லாம்பு சந்தியில் இன்றும் இருக்கிற புனித போல் (Chaplain of St Paul’s Church) தேவாலயம் இருக்கிறதல்லவா அந்த தேவாலயத்தின் வராந்தாவில் தான் இருபது மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. அப்போது இந்த இடம் வுல்பெண்டால் வீதி (22, Wolfendhal Street) என்று அழைக்கப்பட்டது. அந்த றோயல் கல்லூரியின் ஆரம்பப் பெயர் மேட்டுத்தெரு அக்காடமி (Hill Street Academy).

இந்தப் புறக்கோட்டைப் பகுதியில் அப்போது அதிகமாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான். இந்த இடத்தைச் சூழ இருந்த முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று கொச்சிக்கடையில் இருந்து செட்டியார் தெருவுக்குள் நுழையும் முன்னர் உள்ள சுற்றுவட்டத்திற்கருகில் இடதுபுற மூலையில் இருக்கிற புனித தோமஸ் தேவாலயம் (Malabar Episcopalian Church, St. Thomas’s). இது ஆங்கிலேய ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்றிக் (Sir Robert Bownrigg)1816இல் கட்டியது. இந்து சமுத்திரத்தைப் பார்த்தப்படி மேட்டுப் பகுதியில் கட்டப்படிருக்கிறது. எனவே “மேட்டுத்தெரு சேர்ச்” என்றும் அழைப்பார்கள். 1815இல் கண்டியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் ஆங்கிலேயர் கட்டுப்பட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது இவரின் தலைமையில் தான். இரண்டாவது தேவாலயம் தான் முன்னர் கூறியபடி ஐந்து லாம்பு சந்தியில் உள்ள  (St. Paul’s Church). இது முன்னர் போர்த்துகேயர்களின் வழிபாட்டிடமாக இருந்தது. இயங்காமல் இருந்த இந்த புனித போல் தேவாலயம் மீண்டும் 1816 யூலை 28 இலிருந்து வழிபாட்டுக்காக திறக்கப்பட்டன.  அங்கு தான் றோயல் கல்லூரியின் ஆரம்பம் நிகழ்ந்தது.

1836 இல் அன்றைய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்டன் (Sir Robert Wilmot-Horton) கொழும்பு அக்காடமி (Colombo Academy)  என்று இதன் பெயரை மாற்றி அரசாங்க பொதுப் பாடசாலையாக ஆக்கினார்.  எனவே றோயல் கல்லூரியின் தோற்ற நாளாக 25.10.1836ஆம் திகதியை பதிவு செய்கிறார்கள்.  அவர் தான் இலங்கையில் கட்டாய சேவை “இராஜகாரிய முறை”யை ஒழித்தார். ஜோசப் மார்ஷ் பாதிரியார் அந்தப் பாடசாலையின் முதலாவது அதிபராக ஆகி அரசாங்க சம்பளம் பெற்றார். அவருக்கான ஆண்டு சம்பளமாக 200 பவுண்டுகள் வழங்கப்பட்டது. அதன் இன்றைய பெறுமதியில் கூறுவதாயின் ஐந்து மில்லியன் எனலாம். ஆளுநர் தான் அதன் புரவலராக இருந்தார். 

ஆரம்பத்தில் ஆங்கில, டச்சு சமூக பின்னணியுள்ளவர்களே கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பின்னரே சுதேசிய இலங்கையைச் சேர்ந்த வசதி படைத்த மேட்டுக்குடியினர் முதலில் நுழைந்தனர்.

புறக்கோட்டை மெசேஞ்சர் வீதியில் 1836ஆம் ஆண்டு அமைந்திருந்த பாடசாலைக் கட்டிடம்

1836 ஜனவரியில் இந்த மேட்டுத்தெரு அக்காடமி கொழும்பு அக்காடமியாக பெயர் மாற்றப்பட்டு கொழும்பு புறக்கோட்டை, மெசேஞ்சர் வீதியில் உள்ள 144 ஆம் இலக்கக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது, இன்று அது சனநெருக்கடிமிக்க சந்தைப் பகுதி. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே ஆண்டு  அங்கிருந்து சென் செபஸ்தியன் வீதியில் உள்ள மேட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு முனனர் அது பொலிஸ் குதிரை லாயமாக இருந்தது. இன்னும் உறுதியாக சொல்வதாயின் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த “தவச” கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள மிகுந்து மாவத்தை சிங்கள வித்தியாலயம் இப்போது அந்த நிலத்தில் தான் அமைந்திருக்கிறது. 

நீண்ட காலமாக (1836 - 1913) சென் செபஸ்தியன் வீதியில் இங்கே தான் இயங்கியது

அதுமட்டுமல்ல இங்கே தான் சுமார் 75 ஆண்டுகளாக றோயல் கல்லூரி இயங்கியது. தொடக்கத்தில் அங்கிலிக்கனிசத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஒரு மத சார்பற்ற பள்ளிகூடமாகவே இயங்கியது. 

1859ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனமான குயின்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆங்கில பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுப் பரீட்சையில் தொற்றுவதாயின் அப்போது கொழும்பு அக்காடமியில் தான் பரிட்சை எழுத வேண்டியிருந்தது. 1865 ஆம் ஆண்டு இலங்கையின் கல்வி நிலை பற்றி ஆராய்ந்த மோர்கன் குழு (Morgan Committee) மேற்படிப்புக்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்க புலமைப்பரிசில் வழங்கவேண்டும் என்கிற தீர்மானத்தைத் தொடர்ந்து; கல்விக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரித்தானியாவில் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கே அடிப்படைக் கல்விக்கான உரிமை வென்றெடுக்கப்பட்ட அதே 1870 இல் தான் இலங்கையில் மோர்கன் ஆணைக்குழுவின் கல்வி குறித்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கள, தமிழ் மொழிக் கல்விக்கான சுதந்திரம், மிஷனரி பள்ளிக்கூடங்களிலும் சொந்த மதங்களைக் கற்கும் உரிமை போன்றவற்றை பரிந்துரைத்த ஆணைக்குழு அது. அதன் விளைவாக 1859 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரியும், கொழும்பு அக்காடமியும் ஒன்றாக இணைக்கப்பட்டது. குயின்ஸ் கல்லூரி என்றும் பெயர் மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது உயர் கல்வி நிறுவனம் அது தான்.


1881 இல் விக்டோரியா மகாராணியின் அரச அனுமதியுடன் கொழும்பு அக்காடமியானது; “றோயல் கல்லூரி” (Royal College Colombo) என்று பெயர் மாற்றப்பட்டது. 1881ஆம் ஆண்டு 31 யூலை வர்த்தமானிப் பத்திரிகையில் இதற்கான அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அப்போது கல்லூரியின் அதிபராக ஜோன் குல் (John Barnabas Cull) இருந்தார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பரீட்சை 1880 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதும் அதே ஆண்டு 21 அப்பரீட்சைக்கு தோற்றினர். அவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் 1915 ஆம் ஆண்டு மொத்தம் 2151 மாணவர்கள் அப்பரீட்சைக்கு தோற்றினர் அதில் 236 பெண்களாக இருந்தனர். இதன் அறிமுகத்தோடு பலர் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக செல்லும் வாய்ப்பு விரிவானது.  


றோயல் கல்லூரிக்கான இடவசதியைப் பெருப்பிப்பதற்காக 1911 ஆம் ஆண்டு ரீட் அவெனியுவில் பெரிய காணியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இலங்கையின் முதலாவது விமானமோட்டும் முயற்சியின் போது அந்த விமானம் அங்கே விழுந்து கட்டிடத்துக்கும் சிறு சேதத்தை விளைவித்தது. 1913 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்துக்கு கல்லூரி கொண்டுவரப்பட்டது. இன்றைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடம் தான் அது. 1923 இல் ரீட் அவெனியுவில் புதிதாக கட்டப்பட்ட இன்னொரு கட்டிடமான விக்டோரியா கோபுர வடிவத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே 1914 இல் றோயல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்படவேண்டும் என்று உயர்கல்விக் குழு பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அரசாங்க சபையில் பிரெடெரிக் டோர்ன்ஹோஸ்ட் (Frederick Dornhorst, KC) நீண்ட உரையை வழங்கினார். மேலும் அன்றைய ஆளுநர் சார்மர்ஸ் (Lord Chalmers) கூட கொழும்பு பல்கலைக்கழகம் தனியாக இயங்கவேண்டும் என்றார்.

இதன் விளைவாக இந்தக் கட்டிடங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதே கட்டிடத்துக்கு சற்று அப்பால் கட்டப்பட்ட கட்டிடத்தில் றோயல் கல்லூரி இயங்கத் தொடங்கியது. 1923 ஆம் ஆண்டு ஆளுநர் வில்லியம் மனிங் ஆட்சியின் போது அவரின் கவனிப்பில்  தான் தற்போதைய நிலையான கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. இன்றுவரை அங்கே தான் நிலைத்து இயங்கி வருகிறது.


1940ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் றோயல் கல்லூரி மூடப்பட்டு இக்கட்டிடங்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்கான மருத்துவமனையாக இயங்கியது.  1945 இல் யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் பழையபடி இயங்கத்தொடங்கியது.

சேர் முத்துக்குமாரசுவாமி, இராமநாதன் சகோதரர்கள், அநகாரிக தர்மபால, ஜே.ஆர், கொல்வின் ஆர் டி சில்வா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை பல அரசியல் தலைவர்கள் இங்கு கற்றவர்கள் தான். ரணில் விக்கிரமசிங்க செல்வந்த குடும்பத்தின் வாரிசு என்பதை அறிவீர்கள். ஆனால் அவருக்கு வாரிசுகள் கிடையாது அவரின் தற்போதைய சொத்துக்கள் அவருக்குப் பின்னர் றோயல் கல்லூரிக்கே உயில் எழுதி வைத்துவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

றோயல் கல்லூரியின் பல செயற்பாடுகளில் தமிழ் விவாத அணியையும் முக்கியமாக குறிப்பட முடியும். இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணி அது. நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், றவுஃப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

றோயல் கல்லூரிக்காக கட்டப்பட்ட கட்டிடம் இன்று கொழும்பு பல்கலைக்கழகமாக

றோயல் கல்லூரியின் அதிபர்களாக சுமார் இலங்கை சுதந்திரமடையும் காலம் வரை ஆங்கிலேயர்கள் தான் இருந்து வந்தார்கள். அதன் பின்னர் தான் சுதேசியர்கள் அதிபர்களாக ஆனார்கள். இதுவரை ஒரு தமிழரும் அங்கே அதிபராக ஆனதில்லை.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் பலரை ஆண்டு தோறும் உள்வாங்கி அக்கல்லூரியின் தரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டே வருகிறது இக்கல்லூரி. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் சிவில் அதிகாரிகள் பலரை உருவாக்கிய கல்லூரி அது. ஆரம்பத்தில் உயர் வர்க்க, கொவிகம, வெள்ளாள ஆண்கள் பலர் கற்ற பள்ளிக்கூடமாகத் தான் இருந்தது என்கிறார் L.H.Gratiaen. 

20 மாணவர்களுடன் சிறு வராந்தாவில் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் இன்று 9000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற இலங்கையின் மிகப் பெரிய கல்லூரியாக இயங்கி வருகிறது.

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 24.07.2022



பதிப்புப் பண்பாட்டின் நினைவுச் சின்னமாகத் திகழும் வெஸ்லியன் சிட்டி மிஷன் - (கொழும்பின் கதை - 34) - என்.சரவணன்

ஆசியாவின் முதலாவது மெதடிஸ்ட் தேவாலயம் இலங்கையில் தான் நிறுவப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் டாம் வீதியில் உள்ள கச்சேரிக்கு எதிரில் இது அமைந்திருக்கிறது. 1816 ஆம் ஆண்டு கொழும்பு சிட்டி மிஷன் (Colombo City Mission) என்கிற பேரில் அமைக்கப்பட்ட இது இன்றும் அதே பேரில் தான் அழைக்கப்படுகிறது. அதேவேளை இந்த தேவாலயம் பல முக்கிய வரலாற்றுக் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதோடு பல கிறிஸ்தவ மிஷன்கள் இலங்கையை இலக்கு வைத்து வந்து சேர்ந்தன. அதற்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தை தடை செய்து வைத்திருந்ததால் இத்தகைய மிஷன்கள் தமது மதப் பிரச்சார, மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லாது இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் வந்ததோடு அந்த நிலை மாறியது. அவ்வாறு வந்திறங்கிய மிஷன்களுக்கு ஆங்கிலேய அரசே போதிய ஆதரவை வழங்கியது.

  • லண்டன் திருச்சபைக் கழகம் - London Missionary Society (LMS) - 1805,
  • பப்டிஸ்ட் திருச்சபைக் கழகம்  - Baptist Missionary Society (BMS) - 1812,
  • வெஸ்லியன் மெதடிஸ்ட் திருச்சபை - Wesleyan Methodist Mission – (WMM) - 1814,
  • அமெரிக்கன் மிஷன் The American Mission, (ABCFM- American Board of Commissioners for Foreign Missions) - 1816
  • சேர்ச் மிஷன் கழகம் Church  (of   England)  Missionary  Society  (CMS) – 1817

இவற்றில் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷன்கள் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனும், அமெரிக்க மிஷனும் தான்.

தெற்காசியாவை ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆக்கிரமித்தபோது, ஆங்கிலேய மிஷனரிகள் பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி துருப்புக்களோடு சேர்ந்து நெருக்கமாக அவர்களைப் பின்தொடர்ந்தனர், 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சிலோன் முடிக்குரிய காலனியாக அறிவிக்கப்பட்டபோது, ஆறு பேர் கொண்ட மெதடிஸ்ட் பணியாளர்கள் டிசம்பர் 1813 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டனர். ஆறு மாத பயணத்தின் பின்னர் ஜூன் 1814 இல் அவர்களில் நான்கு பேர் தென்னிலங்கையின் வெலிகம கடற்கரையில் வந்திறங்கினர். இந்த இலங்கைப் பயணக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் டொக்டர் தோமஸ் குக் (Dr Thomas Coke). அவர் அந்தக் கடற்பயணத்தின் போது இறந்துவிட்டார். மற்றொருவர் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டார்.


அவர்களில் ஒருவர் வில்லியம் மார்ட்டின் ஹார்வர்ட் (William Martin Harvard). இன்னொருவர் ஆண்ட்ரூ ஆர்மர் (Andrew Armour) அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. ஹார்வர்ட் இந்தியா, பம்பாயில் மிஷனரிப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட போதும் அவர் இடைநடுவில் 1815ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை வந்து தனது குழுவோடு இணைந்து கொண்டார். அவர் ஒரு கைதேர்ந்த அச்சகர். மிஷனரிப் பணிகளை முன்னெடுக்க பிரசுரங்களே சிறந்த வழி என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். மார்ட்டின் ஹார்வர்ட் பம்பாயிலிருந்து அச்சு இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றார். அதன்படி அச்சு இயந்திரம், அதற்கான மை, நான்கு பெட்டிகளுக்கு எழுத்துவார்ப்புக்கள், கடதாசிகள் அனைத்தையும் அங்கிருந்து கொண்டு வந்து சேர்த்தார் அவர்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள டாம் வீதியில் ஹார்வார்ட் வெஸ்லியன் சபைக்காக ஒரு நிலத்தை வாங்கினார். அங்கு தான் தேவாலயம் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப் பழமையான மெதடிஸ்ட் தேவாலயம் இது தான். வெஸ்லியன் மிஷன் ஹவுஸ் (Weslyan Mission House) 1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தாருக்கு சற்று முந்திய நாள் தனது முதல் ஆராதனையை நடத்தியது. தேவாலயத்தின் உட்புறப் பகுதிகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. மேலும் வெளிப்புறமானது 1966 இல் மாற்றியமைக்கப்பட்டது.  இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள புகழ்பெற்ற  டோரிக் வடிவத்திலான  பிரன்சுவிக் வெஸ்லியன் சேப்பலின் (Liverpudlian Brunswick Wesleyan Chapel) தோற்றத்துக்கு நிகராக இன்றும் தோற்றமளிக்கிறது. அந்த தேவாலயத்தின் தோற்றத்தில் தான் இது அமைக்கப்பட்டது.

Liverpudlian Brunswick Wesleyan Chapel

யாழ்ப்பாணம் சென்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் வடிவமும் இப்படித்தான் இருக்கிறது.

இந்த தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டு சில காலத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு பாடசாலை அங்கே ஆரம்பிக்கப்பட்டது. அங்கே தான் வெஸ்லியன் அச்சகமும் உருவாக்கப்பட்டது. 1874ஆம் ஆண்டு 2ஆம் திகதி டேனியல் ஹென்றி பெரேரா பாதிரியாரால் வெஸ்லி கல்லூரி இங்கே உருவாக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதலாவது அதிபரும் அவர் தான். புறக்கோட்டைப் பகுதியின் சத்தங்களும், தூசுகளும், வெக்கையும் பாடசாலையை தொடர்ந்து அங்கே நடத்த இடையூறாக இருந்தது. இடவசதியும் போதாமையாக இருந்தது. 1895இல் இக்கல்லூரிக்கு பொறுப்பாக வந்து சேர்ந்த  ஹைபீல்ட் (Highfield) 1905ஆம் ஆண்டு இகக்கல்லூரியை இடமாற்றம் செய்தார். அந்தக் கல்லூரி தான் இன்று இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கிற பொரல்லையிலுள்ள வெஸ்லி கல்லூரி.

இலங்கையின் அச்சு ஊடக வரலாற்றின் முக்கிய திருப்பு முனையாக அமைந்த அந்த அச்சகம் கைமன் வீதியில் (Kayman’s Street) நிறுவப்பட்டது.  அது என்ன கைமன் வீதி என்கிறீர்களா? அது தான் பிற்காலத்தில் டாம் வீதி (Dam Street) என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது. டச்சு காலத்தில் கைமன் வீதி என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலேயர் காலத்தில் அது தம்ப வீதி (Damba Street) என்று அழைக்கப்பட்டது. தம்ப என்கிற பழ மரம் வழிநெடுக இரு மருங்கிலும் அப்போது இருந்திருக்கிறது. அதுவே பின்னர் டாம் வீதி என்று ஆகியிருக்கிறது.

மிஷனரி பாடசாலைகளுக்கான நூல்கள் தான் இந்த வெஸ்லியன் அச்சகத்தில் அச்சடிக்கபட்டன. குறிப்பாக ஞாயிறு பாடசாலைக்கான நூல்கள் அங்கே பிரசுரிக்கப்பட்டன. இந்த அச்சகம் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருந்த வேளை அன்றைய தேசாதிபதி சேர் ரொபர்ட் பிர்வுன்றிக் அச்சகத்தை அரசாங்கத்துக்காக வாங்குவதற்காக தனது தனிப்பட்ட செயலாளர் பிஸ்ஸத்தை (Bisset) பல தடவைகள் அனுப்பிப் பார்த்தார்.

இதற்கு ஒரு காரணம் இருந்தது. பிரவுன்றிக் தலைமையிலான அரசாங்கம் தான் கண்டி ஒப்பந்தத்தை 1815இல் செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் ஒரு உடன்பாட்டையும் (5வது ஏற்பாடு) எட்டியிருந்தது. ஆனால் இந்த மிஷனரிகள் மெதடிஸ்ட் இலக்கியங்களான கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களின் மூலம் சுதேசிகளிடம் சிக்கல்களை உருவாக்கி விடக்கூடும் என்று நம்பினார் அவர்.

ஆனால் ஹார்வார்ட் இந்த அச்சகத்தை விற்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தேசாதிபதியின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆனால் தேசாதிபதி வேறு விதமாக அணுகினார். அதாவது அரசாங்கத்தின் அச்சகத்துக்கு பொறுப்பாக வந்து பணியாற்றும்படியும் அதற்கு தகுந்த சம்பளத்தையும் வழங்குவதாக கேட்டுப்பார்த்தார். தமக்கு வெஸ்லியன் மிஷனை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த தேசாதிபதியை பகைத்துக்கொள்ள முடியாமல் இறுதியில் அவர் அரசாங்க அச்சகத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆனால் டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தை மிகுந்த வினைத்திறனுடன் அவர் நடத்தவும் செய்தார். அந்த அச்சகத்துக்கு சிலவேளை தொழிநுட்ப உதவிகளோ, உபகரணங்களோ தேவைப்பட்ட வேளைகளில் அரசாங்க அச்சகத்தில் இருந்த வளங்களைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்தது. குறிப்பாக இந்த அச்சகத்துக்கு தேவையான தமிழ் எழுத்துக்கள் அரசாங்க அச்சகத்திடம் இருந்து தான் பெற்றுக்கொண்டது. 

இந்த அச்சகத்தில் ஆங்கிலத்தை விட சிங்கள மொழி பிரசுரங்கள் பல அன்று அச்சடிக்கப்பட்டன.  இலங்கையில் வெஸ்லியன் மிஷன் வருவதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே Auxiliary Bible Society தொடங்கப்பட்டுவிட்டாலும் அச்சகத்தை வெஸ்லியன் மிஷன் தான் தொடங்கியது. மேலும் ஏனைய மிஷனரி அமைப்புகளின் நூல்களையும் கூட வெஸ்லியன் அச்சகம் தான் அச்சிட்டு கொடுத்தது. இங்கு தான் ஆரம்பகால சிங்கள பைபிள் மொழிபெயர்ப்பு எல்லாம் அச்சடிக்கப்பட்டது. வடக்கு பகுதிக்கான தமிழ் மொழி பாடசாலை நூல்களும் இங்கிருந்து பிரசுரித்து அனுப்பப்பட்டன. அன்றைய மெட்ராசில் இருந்து தமிழ் மொழியிலான பழைய ஏற்பாடு பைபிள்கள் அச்சடித்து அனுப்பும்படி ஹார்வார்டிடம் கோரப்பட்டபோது இங்கிருந்து அதனை பிரசுரித்து அனுப்பியிருக்கிறார். 


ஹார்வார்ட் காலத்திலேயே இந்த அச்சகத்துக்குப் பொறுப்பாக மேலும் சிலர் இயங்கினார்கள். (Squance, Callaway, Spence, Hardy, Gogerly). இவர்களில் கோகர்லி முக்கிமானவர். அவர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வெஸ்லியன் பாதிரியார். இவர் வெஸ்லியன் மிஷன் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதாவது 1818 ஆம் ஆண்டு வந்து சேர்ந்து விட்டார்.

அவர் தெவுந்தர என்கிற சிங்கள பிரதேசத்தில் தங்கி வாழ்ந்து அங்கேயே சிங்களம், பாலி மற்றும் பௌத்தம் ஆகியவற்றைக் கற்று தேறினார். அவர் 'கிறிஸ்தவ சாசனம்' (The Kristiyani Prajnapti - “கிறிஸ்தியானி பிரக்ஞப்திய”) என்கிற நூலை 1848 இல் வெளியிட்டார்.  இந்த நூல் 1848இல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் 1853, 1857 காலங்களில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதுடன் 1862 இல் கொகெர்லி பாதிரியார் அதனைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பௌத்தத்துக்கு ஈடு கொடுப்பதற்காகவே தன்னை தயார் செய்து; தருணம் வந்ததும் பௌத்தத்தை அவர்களின் களத்திலேயே சவாலுக்கு இழுத்தது அவர் அந்தத் துறையில் பெற்றிருந்த பாண்டித்தியத்தின் காரணமாகத் தான். வரலாற்றில் அதுவரை பௌத்தம் சந்திக்காத தத்துவார்த்த சவால் அது.

இந்த நூலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் தான் பெந்தொட்ட அட்டதஸ்ஸி தேரர்.  அவர் கரதொட்ட தம்மாராம தேரரின் கடைசி சிஷ்யர்.  அட்டதஸ்ஸி தேரர் 1849 ஆம் ஆண்டு “கிறிஸ்தவ சாசனத்துக்கு பதில்” (ක්‍රිස්තියානි ප්‍රඥප්තියට පිළිතුරක්) என்ற நூலை வெளியிட்டு கோகர்லிக்கு சவாலுக்கு அழைத்தார். இது தான் பௌத்த தரப்பின் கண்டன இலக்கியத்தின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையின் சமய கண்டன இலக்கியத் தொடரின் முதல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரதான கண்டன இலக்கியமாக கொள்ளப்படுவது இது தான். சிங்கள பௌத்த அச்சகங்களின் உருவாக்கம் இதன் காரணமாகத் தான் எழுந்தது. இந்த விவாதங்கள் தான் பஞ்சமகா விவாதங்களாக தொடர்ந்து இறுதியில் பாணந்துறை விவாதத்தில் வந்து முடிந்தது. தமிழில் கண்டன இலக்கியம் தொடங்குவதற்கு முன்னரே சிங்களத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரம்பத்தில் டாம் வீதி வெஸ்லியன் மிஷன் தேவாலயம் இப்படித்தான் இருந்தது

ஆரம்ப கால டாம் வீதி வெஸ்லியன் கல்லூரி

ஆக இந்த டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தில் இருந்து தான் சுதேசிய பௌத்த தரப்புக்கு எதிரான நிந்தனைப் பிரசுரங்கள் பல வெளியிடப்பட்டன. 

அதேவேளை கோகர்லி பல பௌத்த இலக்கியங்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து பிரசுரித்ததும் இங்கிருந்து தான். குறிப்பாக முதன் முதலில் அவர் தான் தம்மபதத்தை ஆங்கில உலகுக்கு மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். அது இங்கிருந்து வெளிக்கொணரப்பட்ட “The Friends” என்கிற சஞ்சிகையில் தான் தொடராகப் பிரசுரமானது. அதுபோல வடக்கில் பேர்சிவல் பாதிரியாரின் பல பிரசுரங்களும் இங்கு பதிப்பிக்கப்பட்டன.

இந்த வெஸ்லியன் சபையோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர்; இலங்கையின் அன்றைய நீதியரசர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் அன்று நிலவிய அடிமைமுறையை 1833இல் ஒழித்தவர் அவர். அவரின் துணைவி கொள்ளுப்பிட்டியில் இயக்கி வந்த பாடசாலையை ஹார்வர்டிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். வெஸ்லியன் மெதடிஸ்ட் சபை அதைப் பொறுப்பேற்று நடத்தியது. அந்த பாடசாலை தான் கொள்ளுப்பிட்டி சந்தியில் பிரதமரின் அலரி மாளிகைக்கு அருகில் இன்றும் இயங்கிவரும் பிரபல மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி.

வெஸ்லியன் திருச்சபையின் தலைமையகமாக பல வருடங்களாக இயங்கிய இந்த டாம் வீதி கட்டிடத்தை 2013 இல் இலங்கை அரசாங்கம் தொல்லியல் முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னமாக அறிவித்தது.

நன்றி - தினகரன் - 10.07.2022


ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் உயர் நீதிமன்ற வளாகம் (கொழும்பின் கதை – 32) - என்.சரவணன்

ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் இன்று இலங்கையின் நீதித்துறை வலையமைப்பின் மையமாக விளங்குகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் உருவான இந்த ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் நகரம் அன்றைய இலங்கைத் தீவின் கரையோரப் ஆட்சிப் பகுதிகளின் பகுதிகளின் நீதி மையமாக இருந்தது. உண்மையில் அதன் பெயரே அதன் டச்சுத் தோற்றத்திற்கு சான்றாக உள்ளது, ஏனென்றால் ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் என்பது ஒல்லாந்தரின் மொழியில் "ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் கிராமம்" ('Hulfts Village') என்று பொருள்படும். கொழும்பை முற்றுகையிடும் போது நடவடிக்கையில் கொல்லப்பட்ட டச்சு ஜெனரல் ஜெரார்ட் ஹல்ஃப்ட் என்பவரிடமிருந்து அதன் பெயரைப் பெறுகிறது.

போர்த்துக்கேயரின் வசம் இருந்த கொழும்பைக் கைப்பற்றும் பொறுப்பை டச்சு கிழக்கிந்தியக் கம்பனி  ஹல்ஃப்ட்ஸ் தலைமையிலான படையணியிடம் தான் ஒப்படைத்திருந்தது. பத்தாவியாவிலிருந்து 14.08.1655 ஆம் ஆண்டு 12 கப்பல்களில் 1200 படையினருடன் மொத்தம் 9800 ஐரோப்பிய படையினருடன் அவர் கொழும்பை முற்றுகை இட்டார். அவருக்கு துணையாக போர்த்துகேயரை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக கண்டி மன்னர் இரண்டாம் இராஜசிங்கன் 16,000 படையினரையும் அனுப்பினார். முதலில் நீர்கொழும்பை கைப்பற்றி அதன் பின் தொலைவில் உள்ள களுத்துறையையும் கைப்பற்றியபின்னர் இரண்டு பக்கங்களாலும் வந்து முற்றுகையிட்டு நவம்பர் 12ஆம் திகதி கொழும்பின் மீதான தாக்குதல் தொடங்கியதுஎப்ர. மே மாதம் கொழும்பு முழுவதும் கைப்பற்றுவிட்டது. அந்த முற்றுகையின் போது கொழும்பு கோட்டையின் அரண்களை படை நகர்வுக்காக கவனிப்பதற்கான சிறந்த இடமாக இருந்தது தான் இந்த புதுக்கடை குன்று.

1656இல் ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் கைப்பற்றியபோது கொழும்பின் தோற்றம்

டச்சு கவர்னர் ஹல்ஃப் (General Gerard Pieterszoon Hulft) இங்கு குடியேறிய முதல் டச்சு கவர்னர், எனவே ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்று அழைக்கப்படுகிறது. "டார்ப்" (Dorp) என்றால் கிராமம். இரண்டாம் ராஜசிங்க மன்னரின் உதவியுடன் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கொழும்புத் துறைமுகத்தை வெற்றிகரமாகத் தாக்கிக் கைப்பற்றிய ஹல்ஃப்ட்ஸ் (Hulft) இன் மரணத்திற்குப் பிறகு “ஹல்ஃப்ட்ஸ்” என்கிற பெயர் இப்பகுதிக்கு சூட்டப்பட்டது.

இந்தக் குன்றின் மீது ஜெனரல் ஹல்ஃப்ட்ஸ் தனது கட்டளைப் படையணியை நிலைநிறுத்தி வைத்திருந்தார். இங்கிருந்து பார்த்தால் புறக்கோட்டை வழியாக கோட்டை வரை பார்வையிடக்கூடியதாக இருந்ததால் இந்த குன்றை அவர் அன்று தெரிவு செய்திருந்தார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. முற்றுகையைத் தொடங்குவதற்கான சிறந்த உயரமான இடமென தேர்வு செய்திருந்தார். 1656 மே மாதம் எஞ்சியிருந்த சில போர்த்துகீசியர்கள் சரணடைந்ததால் டச்சுப் படை பலமடைந்திருந்தது.

ஹல்ஃப்ட்ஸ்டோர்ப்

டச்சு எழுத்தாளர் பிலிப்பஸ் பால்டேயஸ் தனது 1672இல் தனது நூலில் அந்த துரதிர்ஷ்டமான நாளைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். "ஹல்ஃப்ட்ஸ் தனது மார்புச் சட்டையை திறந்துகொண்டு கேலரியின் நடுவில் மும்முரமாக தனது கடமையைச் செய்வதில் இருந்தபோது, திடீரென்று ‘ஓ நல்ல பிதாவே எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடுவதைக் கேட்டார்! கேப்டன் போச்சிம் ப்ளாக் (Boachim Block) அதைக் கேட்டுக் விரைத்துப் போய் நின்றார். அவர் இரத்தம் தோய்ந்தவராக இருப்பதைக் கண்டு, மேஜர் வான் டெர் லானின் (Major Van Der Laan)  உதவியுடன் அவரை அங்கிருந்து ஒரு படுக்கைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு அதற்குமேல் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவர் இறந்துபோனார். அவர் பட்ட காயத்தை ஆராய்ந்தபோது அது ஒரு மாஸ்க்வெட் ரக தோட்டா அவரின் உயிரைக் குடித்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்".

1655 இல் போர்த்துகேயரிடமிருந்து கொழும்பை கைப்பற்றுவதற்கு தலைமை தாங்கிய டச்சு ஜெனரல் கெராட் ஹல்ஃப்ட்ஸ் 1656ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று கைமன் வாசலில் வைத்து போர்த்துகேயரால் சுட்டுகொல்லப்பட்டார்.  அவரின் நினைவாகத் தான் அவர் முகாமிட்டிருந்த மேட்டுப் பகுதிக்கு ஹல்ஃப்ட்ஸ் டொப் (Hulfts-dorp,) என்று வைக்கப்பட்டது. அங்கே தான் இன்றைய கொழும்பு உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கிறது.

இப்பகுதியைப் பற்றிய ஆரம்பகால பதிவுகளில் ஒன்று; யொஹான் வொல்ஃப்காங் ஹெய்ட் (Johann Wolffgang Heydt) என்பவரின் பதிவாகும். 1744 இல் வெளியான Allerneuster Geographisch Und Topographischer Schau-Platz von Africa Und Ost-Indien என்கிற அவரின் நூலில்; இல் ஹல்ஃப்ட்ஸ்டார்ப் பற்றிய பல குறிப்புகளுடன் அன்றைய காட்சிகளைக் கண் முன் கொண்டுவரக்கூடிய இப்பிரதேசத்தின் கோட்டோவியங்களும் அடங்கியுள்ளன. கொழும்பில் இருந்த நீதியரசரின் இல்லத்தைப் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லமானது கொழும்பு கோட்டையில் இருந்து ஆட்சி செலுத்தும் ஆளுநரின் ஆட்சி நிர்வாகத்தைப் போலவே அன்றைய நீதி நிர்வாகத்தில் பங்கெடுத்த உள்ளூர் நீதிபதி, திசாவ போன்றோரின் இல்லமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஜேம்ஸ் ஸ்டேபநோப் (JAMES STEPHANOFF 1778-1874) என்கிற பிரபல பிரிட்டிஷ் ஓவியர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வரைந்த இலங்கை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுவதை சித்திரிக்கும் ஓவியம்.


அந்த இல்லம் இரண்டு மாடிகளைக் கொண்டது, முன்னால் ஒரு சுவர் உள்ளது, அதன் அருகில் ஒரு காவலர் வீடும், முற்றத்திற்குப் பின்னால் சமையலறையும் அதற்கப்பால் அடிமைகளின் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஹல்ஃப்ட்ஸ்டார்ப்பில் இடைவிடாமல் இரவிரவாக அப்பகுதியை கண்காணித்து வருவதுடன், சுற்றி ரோந்து செல்லும் சுமார் 30 சிப்பாய்களுக்கான ஒரு பாதுகாப்பு அறையைத் தவிர விசேடமாக வேறு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக குடிபோதையில் அனாவசியமான தகராறுகளில் ஈடுபடும் களியாட்டக்காரரர்கள், அசாதாரண நிலைமைகளை ஏற்படுத்தி வரும் சுற்றித் திரிபவர்கள், சிறு வியாபாரங்களில் ஈடுபடும் முஸ்லிம்கள் போன்றோர் மத்தியில் ஏற்படும் அசம்பாவிதங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கும், கையாள்வதற்கும் தான் இந்த ரோந்து அதிகம் தேவைப்பட்டிருந்தது என்கிறார்.

ஹெய்ட்டின் கருத்தின்படி டச்சு ஆட்சிக் காலத்தில் இங்கே முக்கியமான நீதிமன்றச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இடமாக இருந்ததைக் குறிப்பிடுகிறார்.


ஜோன் கெப்பர் (John Capper) 1877 இல் வெளியான தனது Old Ceylon நூலில் ஹல்ஃப்ட்ஸ்டர்ப் பற்றிய தனியான ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். பிரபல ஓவியர் வான் டோர்ட் (Van dort) வரைந்த நீதிமன்ற வளாக கோட்டோவியம் ஒன்றையும் அந்த அத்தியாயத்தில் இணைத்திருக்கிறார். நீதிமன்றத்துக்கு வெளியில் படியிலும், வாசலிலும், மர நிழலிலும் குழு குழுக்களாக கூடி நிற்கும் மக்கள் கூட்டத்தை அந்த ஓவியம் சித்திரிக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியும், போர்த்துக்கேய, டச்சு, தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளைப் பேசும் மக்கள் தமது சட்டத் தேவைகளை அங்கே நிறைவேற்றிக்கொள்வதை பதிவு செய்திருக்கிறார்.

டச்சுக் காலத்தில் இந்த நீதிமன்றங்கள் ஹல்ஃப்ட்ஸ்டார்ப்பிற்கு மாற்றப்பட்டன என்று நம்புபவர்களும் உள்ளனர், ஆனால் அது மிக உயர்ந்த நீதிமன்றமா என்பது சந்தேகமே என்று ஜோன் கெப்பர் குறிப்பிடுகிறார். "இந்த உயர் நீதிமன்றம் கொழும்பு கோட்டையில் அரண் சுவர்களுக்குள் அமர்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போது அப்போதைய ஆளுநர் ரிப் வான்; உத்தியோகபூர்வமாக அக்கறை கொண்டிருந்த சில வழக்குகளில் நீதிபதிகளை மிஞ்சும் வகையில் தலையீடுகளை செய்து வந்ததாக கருதியதால் அவர்கள் நெதர்லாந்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து சுவர்கள் இல்லாமல் அமர்வுகளை நடத்தும் உரிமையைக் கோரினர் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தான் இங்கேயும் நீதிமன்ற வழக்குகளை ஏனையோரும் பார்வையிடும் வாய்ப்புகள் கிட்டின.


இலங்கையின் நீதித்துறை பாரம்பரியம்

இலங்கை நாட்டில் ஒரு முறையான சட்ட அமைப்புக்கான அடித்தளம் பண்டைய மன்னராட்சிக் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இவற்றில் கிடைக்கப்பெற்றது “நீதி நிகண்டுவ” என்கிற நூல் தான். அது கண்டி ராஜ்ஜிய காலத்தில் குறிப்பாக 1769 தொடக்கம் 1815ஆம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர்களிடம் முற்றாக பறிபோகும் வரை நடைமுறையில் இருந்தது. கண்டியச் சட்டம் என்றும் இதை நாம் அழைக்கிறோம். இலங்கையில் இயங்கிய ராஜ்ஜியங்களில் பல்வேறு வடிவங்களில் நீதித்துறை இயங்கிய போதும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டமாக “நீதி நிகண்டு” தான் காணக்கிடைக்கிறது. அதேவேளை அது முழு இலங்கைத் தீவுக்குமான சட்ட நூலாக இருக்கவுமில்லை. கண்டி ராஜ்ஜியத்துக்குள் மாத்திரம் இயங்கிய சட்டம் தான் அது. அச்சட்டம் பற்றிய பல பெரிய ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.

கண்டியில் “மகுல் மடுவ” என்கிற கட்டிடத்தில் வழக்குகளும் அதற்கான தீர்ப்புகளும் வழங்கப்பட்டதை ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டொயிலி போன்றோரின் குறிப்புகள் நமக்கு சாட்சி பகிர்கின்றன. இதன் பிரகாரம் அன்று அரச அவையின் நெருக்கமான அங்கமாக நீதித்துறை இயங்கியிருப்பதையும் நாம் இனங்காணலாம்.

1505 ஆம் ஆண்டில், போர்த்துக்கேயர்கள் இலங்கையக் கைப்பற்றினார்கள். ஆனால் அவர்கள் நாட்டில் போர்த்துகேய நீதிமன்ற கட்டமைப்பை நிறுவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டச்சுக்காரர்கள் 1656 இல் இலங்கையின் கரையோரன்களைக் கைப்பற்றினர், பின்னர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி டச்சு சட்ட அமைப்பை நீதித்துறையாக ஆக்கினர்.

அவர்கள் லான் ராத் (Lan Raad), சிவில் ராத் (Civile Raad), ராத் வான் ஜஸ்திதி (Hof Van Justitie) போன்ற நீதித்துறைப் பிரிவுகளைக் கொண்டு இயங்கியது  ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர். டச்சு நாட்டின் உயர் நீதிமன்றமான ராத் வான் ஜஸ்டதிதிய, டச்சு கவர்னரால் நியமிக்கப்பட்ட ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்டிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைக் கொண்டிருந்தது அந்த உயர் நீதிமன்றம். காணி நீதிமன்றம் (Lan Raad), சிவில் நீதிமன்றம் (Civile Raad) ஆகியன காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்தன. உயர் நீதிமன்றம் கொழும்பில் இயங்கியது. இது மற்ற நீதிமன்றங்களின் இறுதி மேல்முறையீட்டு அதிகார வரம்பையும் அத்துடன் மிக உயர்ந்த குற்றவியல் அதிகார வரம்பையும் கொண்டிருந்தது.

1796 ஆம் ஆண்டில், பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றியதும் அவர்கள் தமது சொந்த ஆங்கிலேய நீதிமன்ற முறைக்கு நிகரான நிதிமன்றத்தை நிறுவினார்கள். செப்டம்பர் 23, 1799 அன்று வெளியிடப்பட்ட ஒரு பிரகடனத்தின் மூலம் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க்கவுமில்லை. 16 ஆண்டுகள் கழித்து 1815 கண்டியைக் கைப்பற்றிய பின்னர் தான்  1801 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி  "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க உச்ச நீதிமன்றம் இலங்கையில் நிறுவப்பட்டது. பிரித்தானியா, அயர்லாந்து ஆகிய அரச முத்திரைகளின் இலட்சினைகளின் கீழ் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகள் பிப்ரவரி 08, 1802 அன்று தொடங்கின.

1833 பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட அரச சாசனத்தின் மூலம் தீவு முழுவதும் உச்ச நீதிமன்றம் அதிகாரபூர்வமாக இயங்கத் தொடங்கியது. உச்சநீதிமன்றமானது தலைமை ஒரு நீதிபதியையும் இரண்டு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். நீதிபதிகள் பெரும்பாலும் இங்கிலாந்தில் பணியமர்த்தப்பட்டனர். இந்த நீதிபதிகள் உயர்ந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். பிரித்தானிய தலைமை அதிகார கட்டமைப்பு இவ்வாறு இருந்தது.

  • ஆளுநர்
  • ராஜரீக கடற்படைத் தளபதியும், இராணுவத்தின் தளபதியும்.
  • தலைமை நீதிபதி
  • ராஜரீக கடற்படையின் கேப்டன்
  • நிர்வாக கட்டமைப்பின் உறுப்பினர்கள் (Executive Council)
  • நீதிபதிகள்

தலைமை நீதிபதியும், ஏனைய நீதிபதிகளும் சிறப்பு அதிகாரத்தின் கீழ் அரச ராஜரீக சாசனத்தின் மூலம் நியமிக்கப்பட்டனர்.

1883 ஆம் ஆண்டின் கட்டளை எண். 01இன் பிரகாரம் 1884 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சட்ட மா அதிபர் பதவியையும் நிறுவியது பிரித்தானிய அரசு.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் 1804 இல் கொழும்பு கோட்டையிலிருந்து புதுக்கடைக்கு கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இருந்த இடம் அப்போது டச்சு ஆளுநர்களின் வசிப்பிடமாக இருந்தது. பழைய உச்ச நீதிமன்ற கட்டிடமானது 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட ஒரு வரலாற்று பெருமை வாய்ந்த கட்டிடமாகும்.

1656 முதல் 1796 வரை இந்த கட்டிடம் நாட்டின் டச்சு கவர்னர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக மாறியிருந்தது. இலங்கையின் முதல் ஆளுநரான ஃபிரடெரிக் நோர்த், 1805 ஆம் ஆண்டு வரை இந்த மாளிகையை தனது உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். அந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையின் உச்ச நீதிமன்றம் மேலே குறிப்பிட்டபடி அதிகாரப் பத்திரத்தின் மூலம் நிறுவப்பட்டது. இலங்கையின் முதலாவது பிரதம நீதியரசர் சேர் கொட்ரிங்டன் எட்மண்ட் கெரிங்டன் (Sir Codrington Edmund Carrington), ஈ.எச்.லுஷிங்டன் (E. H. Lushington) ஆகியோர் அடங்கிய இலங்கையின் முதலாவது உச்ச நீதிமன்றம் கோர்டன் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டிடத்தில் கூடியது. இந்த கட்டிடம் இன்று கோட்டை புனித பீட்டர் சர்ச் (St. Peter Church)என்று அழைக்கப்படுகிறது. 1680 இல் கட்டப்பட்ட இந்த இல்லம், டச்சு ஆளுநர்களால் தங்களுடைய வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இந்த இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் உச்ச நீதிமன்ற அமர்வுகளை அப்போது நடத்தினர். 1804 இல் இது புதுப்பிக்கப்பட்டு முற்றிலும் தேவாலயமாக மாற்றப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு ஆங்கிலிகன் புனிதரான பீட்டரின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

கவர்னர் நோர்த் 1805 இல் ஹல்ஃப்ட்ஸ்டோர்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைக் கைவிட்டு வேறிடத்தில் குடியேறினார். அன்றிலிருந்து அந்தப் பெருமை வாய்ந்த கட்டிடம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்காக ஒதுக்கப்பட்டது.

தற்போதைய உச்ச நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அமைந்துள்ள புதிய கட்டிடம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. சீன அரசின் நிதி உதவியுடன் அது கட்டப்பட்டது. ஆர். 1988 செப்டெம்பர் 17 ஆம் திகதி பிரதம நீதியரசர் பாரிந்த ரணசிங்க தலைமையில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நீதித்துறை நூலகமும் வழக்கறிஞர்களுக்கான அறைகளும் உள்ள கட்டிடம் 1958 இல் திறக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம் முன்னாள் நீதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினால் திறக்கப்பட்டது. சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டதால் அக்கட்டிடமும் வளாகமும் சீன கட்டிட அமைப்பின் சாயலைக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். சீன அரசு அக்கட்டிடத்தின் மீது தொடர் அக்கறை காட்டி வருவதால் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உயர் நீதிமன்ற கட்டிடத்தை மேலும் விஸ்தரிக்கவும், அதனை சரிபார்த்து திருத்துவதற்கும் மேலும் நிதிகளை இலங்கைக்கு ஒதுக்கியது.

நன்றி - தினகரன் 26.06.2022

கொழும்பு இரயில் நிலையத்தின் ஆரம்ப அமைவிடம் எது? (கொழும்பின் கதை - 33) என்.சரவணன்

இலங்கைக்கு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது 1858இல், மண்வெட்டியால் வெட்டிஅதற்கான பாதையை ஆரம்பித்து வைத்தவர் அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி வார்ட். முதல் ரயில் பயணம் 1864ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி ஒட்டப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1865, அக்டோபர் 12 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றைய இலங்கையின் “சாலைகளின் ஸ்தாபகர்” என்று அழைக்கப்பட்ட ஆளுநர் சேர் எட்வர்ட் பார்ன்ஸ் பதவி விலகியபோது, நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் நெடுஞ்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. 1822 முதல் 1825 வரை கொழும்பு-கண்டி நெடுஞ்சாலை கிட்டத்தட்ட முழுமையடைந்தது. 1832 இல் முதல் 'மெயில் கோச்' அல்லது குதிரை வண்டி தபால் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இரயில் சேவை ஆரம்பிக்கப்படும் வரை அது தொடர்ந்தது.

கொழும்பில் இருந்து மலையகப் பகுதிகளுக்கான இரயில் பாதைகளை அமைப்பதற்கு இந்திய வம்சாவளி மக்கள் கொடுத்த விலை தனியான கதைத் தொடர்கள். பாரிய இயந்திர வசதிகள் இல்லாத காலத்தில் மலைகளைக் குடைந்தும், தோண்டியும், வெட்டியும் தமது கடின உழைப்பை செலுத்தி உருவாக்கியவர்கள் அவர்கள். இந்த காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறைக்காக இந்தியாவில் இருந்து இறக்கப்பட்ட ஒப்பந்தக் கூலிகளை விட, கொழும்பு துறைமுகப் பணியாளர்களாகவும், நாடளாவிய நகரசுத்தித் தொழிலுக்காகவும் இறக்கப்பட்டதுடன், கொழும்பு – கண்டி இரயில் பாதை அமைப்பதற்கான பணிக்காகவும் ஒப்பந்தக் கூலிகளாக இறக்கப்பட்டனர். முதலில் மூன்று வருட காலத்துக்கான ஒப்பந்தத்துக்கு இறக்கப்பட்டார்கள். இந்த இரயில்வே பாதையமைப்பு தொழிலாளர்கள் பற்றிய கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ஒப்பந்தத்தை மீறியவர்களுக்கு எதிரான சட்டங்கள் கவனிக்கப்படவேண்டியவை. அவற்றில் 1861ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டம். 1863ஆம் ஆண்டின்  16ஆம் இலக்கச் சட்டம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். 

ஆளுநர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Henry George Ward)

இலங்கையின் இரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான பிரதான காரணியாக அமைந்தது; அன்றைய கோப்பி, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்தியை கொழும்புக்கு கொண்டுபோவதற்கான போக்குவரத்துக்கான தேவை குறித்து அரசுக்கு கொடுத்த அழுத்தம் தான். அரசின் பிரதான வருமானமீட்டும் துறையாக அது மாறியிருந்த காலமாதலால். இரயில் சேவை தமது மூலதனத்தை பாதுகாத்து, பன்மடங்கு பெருக்க முக்கிய காரணியாக அமையும் என்று உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை.

கொழும்பு கண்டி புகையிரத சேவையை 1842 ஆம் ஆண்டு வலியுறுத்தியது அன்றைய கோப்பித் தோட்ட முதலாளிகள் தான். அதன் பிரகாரம் 1845 ஆம் ஆண்டு இலங்கை இரயில்வே கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 

ஐரோப்பாவில் இரயில் சேவை தொடங்கப்பட்டதன் பின்பு கண்ட அதிவேக வளர்ச்சியையும், மாற்றங்களையும் குறிப்பிட்டு இலங்கையில் அதன் அவசியத்தையும், அதனால் காணக்கூடிய நலன்களைப் பற்றியும் ஒரு சிறப்பரிக்கையை 1856 ஆம் ஆண்டு அரசாங்க செயலரிடம் அன்றைய ஆளுநர் ஹென்றி வார்ட் (Henry Ward) சமர்ப்பித்தார். அது எற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாக அதே ஆண்டு ஜூலை மாதம், இலங்கையில் ரயில் சேவையை தொடங்க “சிலோன் ரயில்வே நிறுவனம்” (Ceylon Railway Company) என்ற தனியார் நிறுவனத்திற்கு 800,000 பவுண்டுகள் செலவில் நிர்மாணிப்பதற்கு வழங்கி அரசாங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் முதல் இரயில் நிலையம் டெர்மினஸ் புகையிரத நிலையம் (Terminus Railway Station). இன்று மருதானை தொழிநுட்பக் கல்லூரிக்கு எதிரில் இரயில்வே நூதன சாலையாக இயங்கி வருகிறது

1858ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் இலங்கையில் இரயில்வே போக்குவரத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கையின் ஆளுநர் ஹென்றி வார்ட் மண்வெட்டியால் பாதை வெட்டி ஆரம்பித்து வைத்தார். மருதானை தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னால் தற்போதைய புகையிரத களஞ்சிய திணைக்களத்திற்கும் சரக்கு களஞ்சியசாலைக்கும் இடையில் அமைந்துள்ள இடமே அன்று அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பாதையின் தொடக்கம். அதுமட்டுமல்ல அங்கே தான் இலங்கையின் முதலாவது இரயில் நிலையமும், கொழும்பு மத்திய இரயில் நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. அன்று டெர்மினஸ் புகையிரத நிலையம் (Terminus Railway Station) என்று அழைத்தார்கள். இங்கிலாந்தில் மான்செஸ்டர் இரயில் நிலையத்தை (Manchester Railway Station) நிர்மாணித்த வில்லியம் பிரெடெரிக் (William Frederick Faviell 1822-1902) தான் 1858-1865க்கு இடையில் கொழும்பின் முதல் இரயில் நிலையத்தையும் வடிவமைத்தவர்.

இலங்கையின் முதல் ரயில் சேவைக்கு பாதை வெட்டப்பட்ட நாள் கொழும்பு மாநகருக்கு ஒரு திருவிழா போல் இருந்தது. நகரம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கான அழைப்பிதழை சிலோன் ரயில்வேயின் தலைமைப் பொறியியலாளர் டபிள்யூ.டி.டோய்ன் (W.T.Doyne) அனுப்பிருந்தார். 560 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக அறிய முடிகிறது. இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.

1858 ஆகஸ்ட் 5, அன்று ஓப்சர்வர் நாளிதழ் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி இப்படி எழுதியது:

"அனைத்து விருந்தினர்களும் மாலை 4.30 மணிக்கு வந்திருந்தனர், ஆளுநர் மாலை 5.00 மணிக்கு வருகை தந்தார், அங்கு அவரை தலைமைப் பொறியாளர் வரவேற்றார். 5.30 க்கு மண் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த மண்ணை ஒரு தள்ளுவனடியில் எடுத்துச் சென்று அப்பால் கொட்டினார் தலைமைப் பொறியாளர் டொயின். இந்த வரலாற்று தருணத்தின் நினைவுகளைப் படம்பிடிக்க புகைப்படக் கலைஞர்கள் வந்திருந்தனர், மேலும் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர் பார்டின் (Partin). (இலங்கைக்கு புகைப்படக் கலையை அறிமுகப்படுத்தியாவர் அவர் தான்) தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர், அவர்களில் பலர் ஐரோப்பியர்கள்" என்று ஓப்சர்வர் தெரிவித்தது.

உணவு விருந்துக்கான இடமும் பிரேத்தியமாக ஏற்பாடாகியிருந்தது. அதற்கான பிரமாண்டமான கூடம் தெமட்டகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தில் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 மேஜைகள் இருந்தன. ஒரு மேசையில் சுமார் 40 பேர் அமரும் வகையில் ஏற்பாடாகியிருந்தது. A முதல் P வரை எழுதப்பட்ட மேசை வரிசை அமைகப்பட்டிருன்தது. விருந்தினர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். இந்த விருந்தில் பங்கேற்பவர்களின் முழுமையான பட்டியல் சிலோன் ரயில்வே (The Ceylon Government Railway) என்கிற நூலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த உணவு விருந்தில் இராணி சார்பில் காலனியச் செயலர் சி. ஜே. மெக்கார்த்தியும், அரச குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மேல்மாகாணத்தின் அரசாங்க அதிபர் சீ.பி.லேயார்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கிய பின், அதற்கான பாதை வழித் திட்டங்கள் பற்றி வேறுபட்ட பல கருத்துகள் எழுந்ததால், அசல் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் செலவு, ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆகிவிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன் விளைவாக, 1860 இல் சட்டமன்றம், மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, புதிய உத்தேச செலவீனத்தை வெளியிட்ட்டது. ஆளுநர் சார்லஸ் ஜஸ்டின் மக்கார்த்தியின் (Charles Justin Maccarthy) தலையீட்டின் பேரில், ரயில் பாதையின் கட்டுமானப் பணி; குறைந்த ஏலத்தில் விண்ணப்பித்த ஜெபியேல் என்ற தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஏலத்தின் மதிப்பு 873,039 ரூபாய். 1863 ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் அவர் ரயில்வே பணிகளைத் தொடங்கினார்.

1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான 54 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்ட முதலாவது ரயில் பயணம்; ரயில்வேயின் முதல் இயக்குனரான ஜீ.எல்.மோல்ஸ்வத் தலைமையில் தொடங்கியது. இந்த முதல் பயணத்தில் பெல்ஜியத்தின் பட்டத்து இளவரசரும் பங்கேற்றார்.

கொழும்பில் இருந்து கண்டி வரையிலான ரயில் பாதை ஏப்ரல் 25, 1867 இல் நிறைவடைந்தது. இதை நிறைவு செய்ய நான்கு வருடங்களுக்கும் மேலாக எடுத்தது. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அன்று தேயிலை உற்பத்தி ஆனபோது இந்த இரயில் போக்குவரத்து தான் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது. ஏப்ரல் 26 அன்றிலிருந்து கொழும்பு - கண்டி புகையிரத சேவை பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.


களனி இரயில் பாதை தொடர்பாக பொறியாளர் எப்.பி.வேர்னன் தலைமையிலான குழுவின் அறிக்கை 1895 பெப்ரவரி 15ஆம் திகதி ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் “களனி மணல் புகையிரதப் பாதை” எனப் பெயரிட்டார். இந்தப் புதிய பாதை கட்டுமானப் பணிகள் 1900 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்றிலிருந்து தொடக்கப்பட்டது. 1902 செப்டம்பர் 15 ஆம் திகதி மருதானையிலிருந்து அவிசாவளை வரையான இரயில் பாதை திறக்கப்பட்டது. இந்தக் களனி வழிப் பாதைக்காக அப்போது ரூ.55, 43, 879 ரூபா செலவிடப்பட்டிருந்தது.

கொழும்பில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையான முதலாவது பயணிகள் ரயில் சேவை 1865 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதல் பயணம் 84 பயணிகளுடன் காலை 7.00 மணிக்கு கோட்டையிலிருந்து ரயில் புறப்பட்டது. இரயில் பயணம் பற்றி அன்றைய செய்தித்தாள்களில் கூட விளம்பரப்படுத்தப்பட்டது.

தற்போதைய கோட்டை பிரதான இரயில் நிலையம் அமைந்துள்ள இடம் 1877 காலப்பகுதியில் “பேறை ஏரி”யின் நீரால் மூடப்பட்டிருந்த பகுதியாக இருந்தது. இன்றைய லேக் ஹவுஸ் கட்டிடம் அமைந்துள்ள பகுதியும் இந்தக் காலப்பகுதியில் காலத்தில் பேறை ஏரியின் எல்லைக் கரையாக இருந்தது. “லேக் ஹவுஸ்” நிறுவனப் பத்திரிகைகளை இன்றும் ‘ஏரிக்கரை பத்திரிகைகள்’ என்று அழைக்கப்படுவதை அறிவீர்கள். 

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தற்போதைய கோட்டை புகையிரத நிலையமும் மருதானை புகையிரத நிலையமும் அதே பகுதிகளில் இருக்கவில்லை. இவற்றின் பெரும்பகுதிகள் பேறை வாவியால் பரவியிருந்தது. தற்போதைய தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரில் தான் இலங்கையின் முதலாவது கொழும்பு இரயில் நிலையம் அமைந்திருந்தது. இந்தப் பகுதி பேறை வாவியின் எல்லையில் அப்போது இருந்தது. அன்றைய கொழும்பின் அமைப்பும் இயல்பும் இன்றைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை உங்களால் ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடியும். அம்பேபுஸ்ஸ நோக்கிய முதலாவது புகையிரத சேவை தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னால் உள்ள இந்த நிலையத்திலிருந்து தான் இயங்கியது. இன்று அது புகையிரத நூதனசாலையாக ஆக்கப்பட்டிருக்கிறது. 1897 ஆம் ஆண்டளவில் இந்த நிலையத்தில் 197 பணியாளர்கள் கடமையாற்றியதாக குறிப்பிடப்படுகிறது. இந்த முதல் ரயில் நிலையம் 1908 ஆம் ஆண்டு மருதானை இரயில் நிலையம் திறக்கப்பட்டதும் மூடப்பட்டது.

1873 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி செனட் சபையில் உரையாற்றிய ஆளுநர் வில்லியம் கிரகரி, கொழும்பிலிருந்து களுத்துறை வரையான புகையிரத சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரயில் சேவையை பரவலாக விரிவாக்கி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அதன்படி பல பொதுச் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கி அதனை மேற்கொள்வது பெரும் செலவு ஆகும் என்பதால்; காலிமுகத்திடலின் குறுக்காக கொள்ளுப்பிட்டி கடலை அண்மித்து தண்டவாளப் பாதைகளை நிர்மாணிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.  காலி முகத்திடலுக்கு குறுக்கே புகையிரத பாதையை அமைக்க அரசாங்கம் தீர்மானித்தது. ஆனால் காலி முகத்திடலைப் பாதுகாக்க வேண்டுமென அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக பொதுமக்களிடையே கண்டனங்கள் எழுந்தன. ஆர். வி. டன்லப், டி.ஹெல்மர், எச்.குரோஸ் போன்றோர்; “கொழும்பின் பெண்கள், சிறுவர்கள் பேரால்” என்கிற பெயரில் உருவாக்கிய அமைப்பின் சார்பில் பெப்ரவரி 1875ஆம் ஆண்டு 24ஆம் திகதி அன்று ஆளுநரைச் சந்தித்து தமது எதிர்ப்பத தெரிவித்தார்கள். பெண்கள், குழந்தைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு, பொழுதுபோக்கிடமாக திகழும் காலிமுகத்திடலை அழித்து விட வேண்டாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இறுதியில் ஆளுநர் ஹென்றி வார்டினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

1874 நாவலப்பிட்டி பாதை, 1877 கொழும்பில் இருந்து மொரட்டுவ பாதை, 1879 களுத்துறை பாதை, 1884 ஹட்டன் மற்றும் தலவாக்கலை பாதை, 1893 பலாங்கொடை மற்றும் ஹப்புத்தளை பாதை, 1894 காலி பாதை, 1902 அவிசாவளை முதல் களனிபாதை, 1903 இல் அனுராதபுர, நநுவரெலிய ஆகிய பாதைகள், 1905இல் பளை வரையிலான வடக்குக்கான பாதை,  1908 இல் ஜா எல வரையிலுமான பாதைகள் திறக்கப்பட்டன. 1912 இல் ஆளுநர் சேர் ஹென்றி மெக்கலம் அவர்களால் இரத்தினபுரி வரையிலான பாதை திறக்கப்பட்டது. 1914 இல் இந்தோ-இலங்கை ரயில்சேவையும், 1916 இல் சிலாபம் வரை, 1924 இல் ஆளுநர் சேர் வில்லியம் மனிங் அவர்களால் பதுளை வரையிலும் 1927 இல் திருகோணமலை வரையிலும் ரயில் பாதைகள் திறக்கப்பட்டது. கொழும்பு – யாழ் இரயில் பாதை 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போதைய கொழும்பு கோட்டை புகையிர நிலையம் 1917 ஆம் ஆண்டு தான் திறக்கப்பட்டது.

நாளாந்தம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அனுபவிக்கும் முக்கியமான போக்குவரத்து சாதனம் தான் நாட்டின் இரயில் சேவை. இலங்கைத் தீவில் பரவலான இரயில் பாதையின் வலைப்பின்னல் கொழும்பில் இருந்து விரிகிறது எனலாம்.

உசாத்துணை

Papers relating to the affairs of the Ceylon Railway. Presented to both houses of Parliament by command of Her Majesty, 1871. London, Printed by W. Clowes & Sons, for H.M. Stationery Off., 1871.

George J. A. Skeen, A Guide to Colombo: With Maps : a Handbook of Information, Useful Alike to the Visitor and the Resident, A.M. and J. Ferguson, 1906 – Colombo

NIHAL PERERA, Society and Space Colonialism, Nationalism, and Postcolonial Identity in Sri Lanka, Westview Press, Boulder San Francisco, Oxford, 1997

https://www.historyofceylontea.com/pdf/article-extracts/45.ceylon-railway-figures.pdf

நன்றி - தினகரன் 03.07.2022

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates