Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தலவாக்கலை - டயகம வீதி நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமா?


ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் பிரதான வீதிகளே காரணமாக அமைகின்றன. அதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் வீதி அமைப்புக்கு முதலிடத்தை வழங்குகின்றன.

ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக ரீதியாக அபிவிருத்தியடைய வேண்டுமானால் அந்தப் பிரதேசத்துக்கான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா வரையிலான பிரதான வீதி நவீன முறையில் அகல வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரிலிருந்து டயகமவுக்கான வீதி பிரிந்து செல்கிறது. லிந்துலை நகரத்திலிருந்து டயகமவுக்கான சுமார் 15 கி.மீ. வீதியே இதுவரை புனரமைக்கப்படாமலுள்ளது.

டயகம செல்லும் வீதியிலுள்ள நாகசேனை நகரத்திலிருந்து பிரிந்து செல்லும் வீதி இராணிவத்தை, பம்பரகலை, நோனாத் தோட்டம் போன்ற பல தோட்டப் பகுதிகளை ஊடறுத்துச் செல்கிறது. இவ்வீதியும் புனரமைக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து டயகம செல்லும் வீதியிலுள்ள திஸ்பனை சந்தியிலிருந்து பிரிந்து செல்லும் வீதி திஸ்பனை, மரேயா, தங்கங்கலை, எல்ஜின் வரை நீண்டு செல்கிறது.

அடுத்ததாக மன்றாசி நகர சந்தியிலிருந்து பிரிந்து செல்லும் மற்றுமொரு வீதி பெல்மோரல் பேர்டைஸ் டிக்கோயா வழியாக ஹட்டன் செல்கிறது. மலையக பெருந்தோட்ட பிரதேசங்களின் ஊடாக செல்லும் பிரதான வீதிகள் 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த வெள்ளைக்கார ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்டவையாகும். இன்றுவரை அதேநிலையில் காணப்படுகின்றன. இன்னமும் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படாமல் உள்ளன.

தோட்டங்களுக்குள் காணப்படும் பாதைகள் தற்போது ஓரளவு தார்ப்பாதையாகவும் கார்ப்பெட் பாதையாகவும் கொங்கிரீட் பாதைகளாகவும் காணப்படுகின்றன. ஆனால், தலவாக்கலையில் இருந்து டயகம வரையும் செல்லும் டயகம–தலவாக்கலை பிரதான வீதியானது எந்தவிதமான அபிவிருத்தியுமின்றி நீண்ட காலமாக உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

லிந்துலை நகரத்தில் இருந்து டயகம செல்லும் 15 கிலோ மீற்றர் தூரமுடைய இவ் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பீ. பிரிவுக்கு உட்பட்டதாகும். இவ்வீதியை தினமும் பல நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரச மற்றும் தனியார் பஸ்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கும் டயகம, அக்கரைப்பத்தனை, மன்றாசி, பசுமலை ஆகிய நகரங்களுக்கும் செல்ல பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மரக்கறி சந்தைகளுக்கு பல லொறிகள் மரக்கறிகளை தினமும் ஏற்றி செல்லுகின்றன. போபத்தலாவ, மெனிக்பாலம், டெபர்ட்பாம் ஆகிய பாற்பண்ணைகளில் இருந்து பாலை ஏனைய பால் சேகரிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல இவ்வீதியையே பயன்படுத்தி வருகின்றார்கள்.

அகலம் குறைந்ததும் குறுகியதுமான இவ்வீதி மேடு பள்ளமாகவும் அதிக வளைவுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பஷில் ராஜபக் ஷவிடம் முன்னாள் கால்நடை வள சமூக அபிவிருத்தி அமமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மேற்படி வீதியை அகலமாக்கி கார்ப்பெட் வீதியாக அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய கடந்த வருடம் 2014 ஆகஸ்ட் மாதம் இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பொழுது தோட்ட நிர்வாகம் தேயிலைச் செடிகளையும் மரங்களையும் வெட்டுவதற்கு அனுமதிக்காமையினால் வேலைகள் இடை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் அக்கரைப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் டயகமயில் இருந்து அக்கரைப்பத்தனை சட்டன் தோட்டம் வரையிலான சுமார் 4 கிலோ மீற்றர் தூரப் பாதையை அகலமாக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதைத் தொடர்ந்து இவ்வேலைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டன. வெட்டப்பட்ட மண், கற்பாறைகள் அகற்றப்படாமல் வீதி ஓரத்திலேயே போடப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் வீதி சேறு நிறைந்து காணப்படுகின்றது.

வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. வீதியில் செல்லும் பயணிகளும் மாணவர்களும் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.
அவசர தேவைகளுக்காக நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது.

ஆகவே, புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பிரதேச பொதுமக்களின் நலன் கருதி இடை நிறுத்தப்பட்டுள்ள இவ்வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோருகின்றார்கள்.

நன்றி - வீரகேசரி

அரசியலமைப்பு பேரவையில் மலையக உறுப்புரிமையை பெறதவறியதால் அவர்களின் உரிமைகள் தோற்கடிப்பு


தற்போதைய தேசிய அரசாங்கம் நல்லாட்சி தத்துவத்தின் கீழ் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதாக கூறிவரும் நிலையில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ச எனும் தனிமனித மற்றும் குடும்ப வல்லாதிக்க, கொடூர சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட அரசியலமைப்பில் 18 வது சீர்த்திருத்தத்தின் ஊடாக நாட்டில் இயங்கி வந்த சுயாதீன ஆணைக்குழுக்களையும், பாராளுமன்ற பேரவையையும் தனது ஆளுகையின் கீழ் ஒரு கைபொம்மையாக வடிவமைத்திருந்தார்.

இக்காலகட்டத்தில் இலங்கை ஜனநாயக சோசலிஸத்தை நோக்கி நகர்வதை முற்றாக இல்லாதொழித்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது இல்லாதொழிக்கப்பட்டு நாட்டை இருவேறு திசையில் பயணிக்க செய்திருந்தார். எனினும் அத்தகைய ஆட்சி இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு செய்யப்பட்டதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்று தேசிய அரசாங்கத்தை தாபித்து ஜனநாயக மற்றும் நல்லாட்சி என்ற மாய விம்பத்தினுள் அனைவரையும் கட்டிவைத்துள்ளது..

இவற்றின் அடிப்படையில் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் மீதான பௌத்த தேசியவாத தீவிரவாத போக்கு காலம் தொட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது. அதிலும் இலங்கைத் தழிழர் மற்றும் முஸ்லிம்கள் நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏதேனும் ஒரு வகையில் பங்குதாரர்களாக இருக்கின்ற போதிலும் நாட்டின் நான்காவது தேசிய இனமாக பரிணமித்துள்ள மலையக தமிழர்கள் காலம் தொட்டு வஞ்சிக்கப்பட்டுவரும் அவலநிலை தொடர்கின்றது. அவை அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் தொடர்ச்சியான நெருக்குதல்களுக்கும,; பின்னடைவுகளுக்கும் சவால் விடுக்கக்கூடிய வகையில் ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கங்களும் அவற்றை செயற்படுத்தி வருகின்றன.

அரசியல் ரீதியான உரிமைகளை மலையக தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு முனைந்த காலம் தொட்டு இன்றுவரை அவற்றின் மீதான மீறல்கள் வெறும் வாய்வார்த்தைகளாகவே இருந்துவருகின்றது. குறிப்பாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்காலிக மனிங் சீர்த்திருத்தத்தில் மலையக தமிழரின் அரசியல் பிரவேசம் இடம்பெற்றதோடு அதனை தொடர்ந்து வந்த டொனமூர் சீர்திருத்தத்தில் சர்வசன வாக்குரிமையின் ஊடாக தமது அரசியல் ரீதியான அந்தஸ்தினை உறுதிப்படுத்திக் கொண்ட இவர்கள் தொடர்ச்சியாக 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் முழு மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 07 ஆசனங்களை பெற்று புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேசியவாதிகளிடத்தில் பெரும் அச்ச உணர்வினை தோற்றுவித்திருந்தனர்.

அன்றைய நாள் முதல் இச்சமூகத்தினரின் மிதான பெரும்பான்மை தேசியவாதிகளில் ஒருவரான தேசப்பிதா டீ.எஸ் சேனாநாயக்கா பிரஜா உரிமைச் சட்டத்தினையும், வாக்குரிமைச் சட்டத்தினையும் கொண்டுவருவதின் ஊடாக இவர்களின் அரசியல் பிரவேசத்தையும் அரசியல் உரிமையினையும் முழுமையாக பறித்துக் கொண்டனர். தொடர்ச்சியான இழுபறி நிலையில் 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக நாடுகடத்தம் முயற்சிகளும் அரசியல் ரீதியாக அநாதைகளாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புகளிலும் இவர்கள் அரசியல் ரீதியாக உரிமைகளற்றவர்களாக மாற்றும் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏனினும் 1987 அம் ஆண்டு இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்தினை பெற்று கொண்ட போதும் அவர்கள் வேற்று நாட்டு பிரஜைகள் போல் இன்றும் அரசியல் அந்தஸ்து அற்றவகையில் தொடர்ந்தும் நடாத்தப்படுவதற்கு பல சான்றுரைகளும் முன்வைக்க முடியும்.

இவ்வாறான தொடர்ச்சியான அரசியல் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போதைய புதிய தேசிய அரசாங்கத்திலும் ஒரு முக்கிய பங்குதாரர்கள் என்ற வகையில் அவர்களின் அரசியல் உரிமை அந்தஸ்து ஒரு கேள்விக்குறிக்கு உட்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் நாட்டின் சுயாதீன தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் நிருவகிக்கப்படும் என கூறப்பட்ட போதும் இனவாத சிந்தனையும் இவ்வாட்சியிலும் தலைதூக்கியுள்ளது.

இதில் அரசியலைப்பு பேரவைக்கான உறுப்பினர்களின் தெரிவில் மலையக தமிழர்கள் சார்பில் ஒருவரேனும் உள்வாங்கப்படவில்லை. இவ்வரசியல் அமைப்பு பேரவைய நாட்டில் ஒரு தீர்மானம் மிக்க ஒரு அமைப்பாக விளங்குவதால் அதில் ஒரு இனத்தின் உறுப்புரிமை இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் இப்பேரவைக்கு மூன்று முக்கிய உறுப்பினர்களில் தமிழர் சார்பில் கலாநிதி. ராதிகா குமாரசுவாமி மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆயினும் மலையக தமிழர்கள் சார்பில் ஒருவர் கூட தெரிவுசெய்யப்படவில்லை. என்பது இவ்வினம் சார்பான அரசியல் நலன்கள் முறியடிக்கப்படுவதையும் அவர்களின் அரசியல் உரிமைகள் மீறப்படுவதினையும் எடுத்துக்காட்டுகின்றது.

தொடர்ச்சியாக இலங்கையில் சுயாதீன ஆணைக்குழக்கள் உருவாக்கப்படுகின்ற போதும் அவற்றிலும் கூட மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் பிரேரிக்கப்படவில்லை என்பது இனரீதியான பாரபட்சத்தை எடுத்தியம்புகின்றது. அத்துடன் எட்டாவது பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழர் முற்போக்கு கூட்டணியை அமைத்துக்கொண்டு இன்று கட்சிக்கான அந்தஸ்தினை பெற்றுக் கொண்டவர்கள் வெறுமனே அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்களே தவிர நாட்டின் முக்கிய அதிகாரம் மிக்க சபையாக விளங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு மலையக தமிழர் சார்பாக ஒருவரை பிரேரிக்கவும், அல்லது ஒரு உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவும் திறனற்றவர்களாக காணப்படுவது முழு மலையக சமூகத்திற்கும் வெட்கக்கேடானது எனலாம்.

அத்துடன் இவர்களை தவிர மலையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், சமூக நலன்விரும்பிகள் அனைவரும் பாராமுகத்துடன் இருப்பது எதிர்காலத்தில் மீண்டும் நாடற்ற பிரஜைகளாக எம்மை மாற்றக்கூடும்.

தொடர்ச்சியாக அரசியல் உரிமையற்றவர்கள் என கூறிவருகின்ற நாம் இன்னும் எவ்வளவு காலம் அரசியல் உரிமையற்றவர்களாக இருக்கப்போகின்றோம்? . தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இவ்வரசியல் அமைப்பு பேரவையில் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்வது காலத்தின் தேவை என்ற வகையில் அதற்கான முயற்சிகளையும் அழுத்தங்களையும் பிரயோகிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றறோம்.

இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்- மலையகம்
நன்றி

தேர்தல் அறுவடை சுமத்தும் பொறுப்புக்கள்! - பீ. மரியதாஸ்


பொதுத்தேர்தல் ஒன்று நடந்து முடிந்துள்ள வேளையில் அதனைப்பற்றியும் அதனோடு தொடர்புடைய விடயங்களைப்பற்றியும் யோசிப்பது பயனுடையது.

டிமோக்ரசி என்ற கிரேக்க மொழி வழி பிறப்பான மக்களாட்சி எனும் சொல்லாடல் கிரேக்க நாட்டின் தன்னாடல் கட்டத்தில் நமது நாட்டில் மக்களாட்சிக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

நம்மை ஆண்ட பிரித்தானிய விழுமியங்களை வியந்தேற்கும் நாம் தேர்தல் பற்றிய அவர்களது விளக்கங்களை ஞாபகப்படுத்திக் கொள்வது பயனுள்ளது. டிஸ்ரேல் எனும் பிரித்தானிய பிரதமர் ஒருவர் காலத்துக்கு காலம் தேர்தல்களை நடத்துவது அவசியம். இதனால் மக்கள் தமது பிரதிநிதிகளின் மூலமாக தம்மைத்தாமே ஆளுவதாக நம்புவர். அவ்வாறில்லா விட்டால் வேறு வழிகளினூடாக தம்மை தாமே ஆளும் மார்க்கத்தினை நாடுவர் என கூறியுள்ளதன் உட்கிடக்கையினை உணர்ந்து கொள்ளல் பயனுள்ளது. நடந்து முடிந்த தேர்தலைப்பற்றிய ஆங்கில வார பத்திரிகை ஒன்றின் பத்தி ஒன்று வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளமை அபாய சமிக்ஞை என குறிப்பிட்டுள்ளதும் இதன் பாற்பட்டதே.

சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலின் பெறுபேறு மலையக மக்களின் மீதான பேரிடியாக இருந்தது. இதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகள் ஏராளம். இதற்கான மூலங்களை சோல்பரி யாப்பு முதல் 2 ஆம் குடியரசு யாப்பு வரை தேடி விளக்கக்கூடிய விற்பன்னர்கள் உளர்.

யாப்புக்கும் மக்களின் வாழ்நிலைக்கும் உள்ள தொடர்பு நூல் இழையினை விட மெல்லியதானது. எனவே யாப்பு திருத்தங்களினூடாக மக்களுக்கான விமோசன வாயில் திறக்குமென்பது யதார்த்தமற்றது.

2015 ஜனவரி 8 தேர்தல் ஒரு சிறிய திருப்புமுனை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை திருத்தி நானே யாவும் எனும் உச்ச சர்வதிகார போக்கினை இது திருப்பியது. 2009 உள்நாட்டுப்போர் வெற்றி தமதே என்று போரில் ஈடுபடாத குடும்பம் ஒன்று உரிமை கோரி சகலவிதமான மாற்றுக்கருத்துக்களையும் முடமாக்கியதோடு, கருத்தாடல்களையும் மௌனிக்கச் செய்தது. இத்தகைய அராஜக போக்குக்கெதிராக வெகுஜன வெறுப்பின் பிரதிபலிப்பு ஓகஸ்ட் 17 பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக மக்களுக்கு எதுவும் கிடைக்குமென்பது கனவின் பாற்பட்டது.

இதனை உணர்ந்து கொள்வதற்கு இந்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வது அவசியமாகும். இதில் இன்று கூத்தாடும் ஐ.தே.க., ஸ்ரீல. சு.கட்சி ஆகிய இரண்டினையும் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்வது பயனுடையது.

ஐ.தே.க. மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து குற்றுயிராக்கிய கட்சி இதன் வடுக்களின் வலியினை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றோம். இதன் சூட்சுமத்தினை உணர மறந்த சிலர் இன்று கனவான்களாக திரிவு பெற மலையகத்தார் அவர்களை இரட்சகர்களாக மதிக்க வேண்டுமென்று கனா காண்கின்றனர். இவ்வுண்மையை அறியாதோர் ஏதோ ஓர் அடிப்படையில் இத்தகையோரையும் சகபாடிகளாக வரித்துக்கொள்வது எதன் பாற்பட்டது என்பது பரம இரகசியமாக இருக்கலாம். தொழிலாளர் வர்க்க விமோசன மார்க்கத்தினை உணரும் பிரக்ஞையற்ற ஞான சூன்யங்கள் மீட்பர்களாக வலம் வரும் காலம் அருகி விட்டது.

ஐந்து சக்திகளின் திரட்சி எனக் கூறப்பட்ட ஸ்ரீல.சு.க. கம்கறு (தொழிலாளர்) என்பதில் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை புறந்தள்ளி வெகுஜன கவர்ச்சி ஆட்சியை அமைத்து 1964 இல் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக மலையகத் தமிழரின் பாதி அங்கத்தினை சிரச்சேதம் செய்தது. இரு தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் இவை. இவைகளின் அருட்கிரகத்தினூடாக மலையக மக்களுக்கு விமோசனம் தேடியோரில் ஒருவர் மறைந்த பெ. சந்திரசேகரன். சமூகப் பெறுமதியான கருத்துக்களை முன்வைப்போரை புறந்தள்ளிய இ.தொ.கா. கற்றோரை அரவணைப்பதாக கூறிய மோசடியில் சிக்கி சீந்துவாரற்றவரான ஊடாக மேதாவியின் மோக வலையின் சூட்சுமத்தினை உணரத்தவறியமை வியப்புக்குரியது.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழர் முற்போக்கு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. உருவாக்கியோர் முற்போக்கு எனும் சொற்பிரயோகம் கவர்ச்சியானது என கருதி இருக்கலாம். இதிலடங்கியோர் யாருக்கும் முற்போக்கு அரசியலோடு எந்தவிதமான தொடர்புகளும் இருந்ததில்லை. அவர்களின் வாக்கு மூலங்களின்படி தொண்டமான், வெள்ளையன், வி.பி.கணேசன் ஆகியோரின் பாசறைகளில் தீட்சை பெற்ற வலது சாரி வல்லமை பெற்றோர் இப்பாசறைகளின் மூலவர்கள். இத்தகைய பின்னணியில் இவர்களின் தேர்தலின் வெற்றி மமதை செருக்கேறியோருக்கு எதிரான பிரதிபலிப்பு என ஆறுதலடையலாம்! இவ்வாறான ஆறுதலுக்கு ஆதரவாக செயற்பட வேண்டியது வெற்றி பெற்றோரின் கடப்பாடு. இது ஒரு வகையான சமூக ஒப்பந்தம். இதனை மீறும்போது நீத்துப்போகும் ஆபத்து காத்திருக்கும். இத்தகைய சமூக ஒப்பந்தத்தினை தமிழர் முற்போக்கு கூட்டணியினர் பிரகடனப்படுத்தி வாக்கு கேட்டனர் இதனால் இவர்களுக்கு உடனடி நீண்ட கால செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதனை சுட்டிக்காட்டுவது அவர்களது தேர்தல் கால வாக்குறுதிகளையும் சபதங்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ள உதவும். அவர்களது சபதங்களில் உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு.

* தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா பெற்றுத்தருதல்

* மீரியபெத்த அனர்த்த பாதிப்பாளர்களுக்கு பூரண நிவாரண ஏற்பாடுகள்

* இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சகல மலையகத்தாருக்கும் தரமான வீடமைப்பு

* சட்டபூர்வமான வீடு, காணி பத்திரம் வழங்கல்

* குளவி முதலான விஷ ஜந்துக்கள் சிறுத்தை பன்றி போன்ற மிருகங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

* காணி விடயத்தில் பெ. சந்திரசேகரனின் 7 பேர்ச் அளவு என்பது சிந்தனாபூர்வமான முடிவு அல்ல. தொழிலாளர்களின் உழைப்புச்சுரண்டலின் மூலம் வர்த்தக நிலையங்களையும் பங்களாக்களையும் உைடமையாகக் கொண்டோர் தொழிலாளர்களுக்கு கிள்ளிக்கொடுக்க கோரியதே பெரிய மனதின் வெளிப்பாடாகும். இந்த ஞானத்தடத்தில் தொடர்ந்து பயணிப்பதா என்பதனை சமூகத்தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். சாய்ந்தால் சாயிற பக்கம் சாயும் அரசியல் பரம்பரையினர் பேதங்களுக்கு மேலாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தோட்ட தரிசு காணிகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வல்லமையை நிரூபிக்க வேண்டும்.

முற்போக்கு கூட்டணியினரின் தேர்தல் வாக்குறுதிகள் பல அவற்றில் குறுகிய கால திட்டங்களுக்கு மேலதிகமாக குறிக்கப்பட வேண்டியவை.

* உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் விடயம் பற்றி மீளாய்வு

* உள்ளூராட்சி சபைகளின் மூலமாக தோட்டப்புறங்கள் பயனடையக் கூடிய சட்டத்திருத்தம்


* தோட்டப்புறங்களை கிராமிய அமைப்புக்களாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை சிவில் அமைப்புகளின் ஆலோசனைகள் கலந்துரையாடல்கள் மூலமாக மேற்கொள்ளல்.

* எல்லை நிர்ணயம் பற்றி விரிவான விவாதங்கள் /கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்

* 1970க்கு பிந்திய கட்டத்தில் கிடைத்துள்ள மனித வளங்களில் ஒன்றான ஆசிரியர் படையினை வள ஆய்வு பரிந்துரை அடங்கலான சமூக முன் நகர்வுக்காகப் பயன்படுத்தும் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தல்.

மலையக பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான கடப்பாடுகள் இவை. இவற்றின் மீதான சமூக ஒப்பந்தம் இவர்களுடைய பரப்புரைகளாக இருந்தமை யாவருக்கும் தெரிந்தது. பேரம்பேசி கட்சிகளோடு இணையும் வல்லமை உடையோர்களாக இவர்கள் இல்லை. இதனால் தேசிய அரசாங்கம் என்ற பூதம் கிளம்பியதோடு எலியாக கிலி கொண்டு மெலிந்துள்ளனர் தேசியப்பட்டியலில் தமக்கும் வாய்ப்புண்டு என எதிர்பார்த்த கல்விப் புலத்தோரும் புலம்பத்தொடங்கியுள்ள அவலத்தினை பார்க்கின்றோம். இவை யாவற்றுக்கும் ஸ்தூல நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும் நுண்மான நுழைபுல வறுமை காரணமாக இருக்கலாம்.

நன்றி - வீரகேசரி

மலையகத்தில் தொடரும் மண் சரிவுகளால் விவரிக்க முடியாத மனித அவலங்கள் - நிஷாந்தன்


“”வறுமையே வாழ்வானதே, வாழ்வே வறுமையானதே. தீராத வேதனையுடன் வறுமைக்கோட்டின்கீழ் வாழும்  மலையகச் சமூகத்திற்கு வறுமையைத்தாண்டி ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அவலம்தான் இயற்கையின் ஊழித்தாண்டவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமை’’. 

இயற்கை என்பதமனிதகுலத்தின் இன்றியமையாத  செல்வம். ஆனால், அவ்வியற்கையின் கோரத்தாண்டவத்தால் பஷீக் கப்படும் உயிர்கள் எண்ணி லடங்காதவையாகும். 


எழில் கொஞ்சும் மலையகம் என்று வர்ணிக்கப்படும் மத்திய மலைநாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கம் காரணமாக பல நூறு உயிர்கள் வருடா வருடம் காவுகொள்ளப்படுகின்றமை மலையக மக்கள் சந்திக்கும் வறுமையிலும் மிகப்பெரிய வேதனையாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை 2.30 மணிவரை சாதாரண கிராமமாகக் காட்சியளித்த கொத்மலை வெதமுல்லை கிராமம், அடுத்த 15 நிமிடத்தில் மிகப்பெரிய மண்சரிவைச் சந்தித்திருந்தது.  பிற்பகல் 2.45 மணியளவில் ஏற்பட்ட  மண்சரிவு  காரணமாக 7 உயிர்கள் அங்கு காவுகொள்ளப்பட்டன. உயிரிழந்த ஏழு பேரில் 4 பேர் சிறுவர்களாவர். பாடசாலையை விட்டு ஆயிரம் கனவுகளோடு வந்தோர்  வீட்டில் படித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அடுத்த நிமிடத்தில் நாம் இறக்கப்போகின்றோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். பகல் வேளையில் பெரியவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் வீட்டில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் இருப்பார்கள். அதேவேளை, இக்கோரத் தாண்டவத்தில் 3 பெரியவர்களும் இறந்துள்ளனர். 

சின்னஞ்சிறுசுகளான  புவனா (வயது - 6), சுபானி (வயது - 9),  மனோஜ் (வயது  - 4 ), ரூபினி (வயது - 2 ) ஆகியோரும். பெரியவர்களான  லோகநாயகி ( வயது - 48), காந்திமதி (வயது - 23 ),  லட்சுமி (வயது - 67) ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். 

இங்கு ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,   கிராமத்தில் வசித்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் இயற்கை அனர்த்தம் தொடர்ந்து ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அவ்வனர்த்தங்கள் மலையகத்தில் ஏற்படுகின்றமைதான் தீராத வேதனை. அதிலும் மிகப்பெரிய வேதனை அவ்வனர்த்தங்கள் பெருந்தோட்டக் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் ஏற்படுகின்றமை.  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலகையே உலுக்கிய உயிர்க்கொல்லி மண்சரிவாக, கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு பதிவாகியிருந்தது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையிலான நிலப்பரப்பு சரிந்து வந்ததில் கொஸ்லந்தை என்ற ஒரு கிராமம் இலங்கை வரைபடத்தில் இருந்த இடமே இல்லாமல் போயிருந்தது. அவ்வனர்த்தத்தில் 35 பேர் வரையில் உயிரிழந்ததுடன் 800 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். இவர்களுக்கு இன்னமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படாத  நிலையில்,  உறவினர் வீடுகளிலும்,  கூடாரங்களிலும் வாழ்ந்துவருகின் றனர். ஆறு மாதத்தில் வீடுகள் கட்டிக்கொடுப்பதாகக் கூஷீய அரசும், அமைச்சர்களும் இன்னமும் இந்த மக்களின் காயத்துக்கு மருந்து  போடாத அவலம் தொடர்கின்றது. 

ஆங்கிலேய காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை சூறையாடுவதற்காகப் பொருளாதார நலன் கருதி மலையகப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புகள் 200 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அப்படியே காணப்படுகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டவைஅல்ல. நிலத்தின் தன்மை,  மண்ணின் உறுதி என்பவற்றைக் கண்டுகொள்ளாமல் தேவைக்கு ஏற்றவாறு அமைக் கப்பட்டவையாகும்.  இவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வாழமுடியுமா? என்பதை எந்தவொரு அரசோ, அமைச்சர்களோ இன்றுவரை ஆய்வுசெய்து பார்த்ததில்லை. பெருந்தோட்டத்துறையினரின் உழைப்பை மட்டும் சுரண்டுகின்றனர். 

வெதமுல்லையில் இதற்கு முன்னரும் இவ்வாறான மண்சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதை வரலாற்றில் அமைச்சர்கள் மூடி மறைத்துள்ளனர். 1970ஆம் ஆண்டும், 1978ஆம் ஆண்டும் இப்பிரதேசத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்ததுடன், பல குடியிருப்புகளும் முற்றாக அழிந்துள்ளன. அந்தத் தருணத்தில் இலங்கை அரசும், அப்போதைய அமைச்சர்களும் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று இச்சிறுவர்கள் உலகை விட்டுப் பிரியும் அவலம் ஏற்பட்டிருக்காது.

பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வில் இயற்கையின் கோரத்தாண்டவமும் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி வாழ்வைத் துன்பக்கடலில் மூழ்கடித்துள்ளது;  மூழ்கடித்து வருகின்றது. வெதமுல்லையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் அங்கு பல அமைச் சர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். புதிய கிராமங் கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் பாதிக்கப்பட்ட 7 வீடுகளையும் 12 இலட்சம் ரூபா செலவில் ஆறு மாதத்திற்குள் கட்டிக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். அத்துடன்,  நாடாளுமன்ற உறுப்பினரான தொண்டமானும், இராஜராம், புத்திரசிகாமணி, ஸ்ரீதரன் சக்திவேல், சதாசிவம், பிலிப்குமார், ரமேஷ் உள்ளிட்ட பல மாகாண சபை உறுப்பினர்களும் ஏனைய  துறையைச் சார்ந்தவர்களும் சென்று பார்வையிட்டுள்ளனர். 
பிரச்சினை இடம்பெற்ற இடத்திற்கு விரைவது வரவேற்கத்தக்கதே. ஆனால், அதனை அவ்விடத்திலே விட்டுவிடாமல் முன்நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டுசென்றால் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை முஷீயடித்து பெருந்தோட்டத்துறையினர் அச்சமின்ஷீ வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியும்.

கடந்த அரசுகளின் காலங்களில் பல  தவறுகள் இடம்பெற்றமையை மலையக மக்கள் மறக்கவில்லை. என்றாலும், அதற்கான  தண்டனையை வழங்கப்போவதில்லை மாறாக, மலையகமெங்கும் இவ்வாறு இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு உட்படப் போகும் கிராமங்களை வேறு சூழலில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும். அத்துடன், இனிவரும் காலங்களில் அமைக்கப்போகும் வீடுகளை முறையான நிலப்பரப்பில் அமைக்கவேண்டும். வெதமுல்லையில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் நேற்று தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இங்கு புதைக்கப்பட்டவைதான் மலையகத்தில் மண்சரிவாலும், இயற்கையின் ஊழித்தாண்டவத்தாலும் புதைக்கப்படும் இறுதி உயிர்களாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மலையக மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீருக்கும் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எனவே, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் அதேவேளை, இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வண்ணம் மலையகத்தில் அபாயமான இடங்களை இனங்கண்டு வெகுவிரைவில் மீள்குடியேற்றம் செய்யும் வகையில்  காத்திரமான முறையில் மலையக அரசியல் தலைமைகள் செயற்படவேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பு.

நன்றி - சுடரொளி 28.09.2015

பெருந்தோட்டங்களில் வீடமைப்பு; PHDTயின் பங்களிப்பு - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டங்களில் வீடமைப்பு என்பது கிராமங்களில் அல்லது நகரங்களில் மேற்கொள்வது போல இடம்பெற முடியாது என்பதை யாவரும் அறிவோம். கிராமிய நகர வீடமைப்பிற்கு தேசிய அளவில் கொள்கைத்திட்டங்கள் இருப்பது போல பெருந்தோட்டங்களுக்கான வீடமைப்புக்கொள்கை அல்லது அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தேசியமட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை, கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணியுடனான வீடுகள் அமைக்க மந்திரி சபையினால் அனுமதி கிடைத்தது. ஆனாலும் அந்த 7 பேர்ச் காணியில் அமைக்கும் வீடுகள் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்கப்படுமா? என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதற்கு பசுமை வீடு திட்டமும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதனை காணி உறுதிப்பத்திரமாக பயன்படுத்தலாமா? போன்ற விபரங்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள PHDT (Plantation Human Develop Trust) இன் வேலைத்திட்டங்களையும் அவ்வமைப்பின் சாதனைகளையும் யாவரும் அறிந்துகொள்வது அவசியம் என்று உணரப்படுகின்றது. இதற்கான விபரங்களை 2004 ஆம் ஆண்டு PHDT இன் இயக்குநர் தயாரித்து வெளிப்படுத்திய வேலைத்திட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களையும் இந்த PHDT எவ்வாறு வீடுகளை கட்டி முடித்துள்ளது என்பதை உதாரணமாக காட்டுவதற்காக கொட்டகலைக்கு அண்மையில் உள்ள DRYTON தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பினை உதாரணமாக கொண்டு இங்கு விளக்கப்படுகின்றது.

PHDT 1992 இல் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும். ஆரம்பத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்களுக்கான (PHSW) அமைப்பாகவே உருவாக்கப்பட்டது. எனினும், 2002 ஆம் ஆண்டு முதல் இவ்வமைப்பில் வேலைத்திட்டமாக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமாக (PHDT) மாற்றப்பட்டது.

இவ்வமைப்பின் பிரதான நடவடிக்கைகளாக வீடமைப்பு உட்கட்டமைப்பு வேலைகள், சிறுவர் பராமரிப்பு, விளை யாட்டு அபிவிருத்திக்கான பயிற்சிகளை அளித்தல் என்பனவற்றுடன் தோட்டங்கள் தோறும் Estate workers Housing co–operative Society (EWHS) ஸ்தாபித்தல் என்பதாகும். கம்பனிகளின் முகாமைத்துவத்தை உள்வாங்கியுள்ள பெருந்தோட்டங்களில் தொழில்நுட்பங்களுக்குள் உள்வாங்கப்பட்டு தொழற்சங்க சட்டத்தின் பிரகாரம் வாழ்கின்ற தொழிலாளர்களின் நிலங்களை பராமரிக்கும் உரிமை PHDT க்கு மட்டுமே உரித்தானதாகும். தோட்டங்களில் இடம்பெறுகின்ற எல்லாவிதமான மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரிமைபெற்ற நிறுவனமாகவே PHDT காணப்படுகிறது.

அரசாங்கம் மாவட்டரீதியிலான அபிவிருத்தி வேலைகளுக்கு பணம் ஒதுக்கலாம் அல்லது பாராளுமன்ற பிரதிநிதி தமக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறுபட்ட அபிவிருத்திகளுக்கு பங்களிப்பு செய்யலாம். அதனைவிட மாகாண சபைகள் பிரதேச சபைகள் மூலமாகவும் பணம் ஒதுக்கப்படலாம். இதனைக்கொண்டு வேண்டுமானால் கலாசார மண்டபங்கள் அமைக்கலாம். அல்லது வாசிகசாலை அமைக்க முடியுமேயன்றி, வீடுகள் அமைப்பது என்பது சவாலான விடயமாகும். வீடுகட்டும் உரிமையுள்ள அல்லது வீடுகள் அமைப்பதற்கான பின்னணி வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு அதிகாரமுள்ள PHDT தோட்டங்கள் சுமார் 977,000 அல்லது 249,000 குடும்பங்கள் இருப்பதாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.1992 முதல் இன்றுவரையிலான 2014 காலப்பகுதியில் அதாவது கடந்த 22 வருட காலப்பகுதியில் 24.760 வீடுகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏனைய (249,000 – 24,760) 224,240 குடும்பங்களும் அதாவது பெருந்தோட்டங்களில் உள்ள 90 வீதமான வீடுகள் இன்றுவரை PHDT யில் நிர்மாண வேலைகளுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது புலனாகின்றது. PHDT இல் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்படும் வீடுகளில் முன்னேற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக பதுளையில் 2014 ஆம் ஆண்டில் 87 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தாலும் 67 வீடுகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலியில் 161 வீடுகளுக்கான திட்டம் காணப்பட்டபோதும் 60 வீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹட்டனில் 115 வீடுகள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் 46 வீடுகள் கட்டுவதற்கே அடிப்படை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பின்னடைவுகள் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
PHDT யின் வேலைத்திட்டங்கள் வீடுகள் நிர்மாணிப்பதற்கு மட்டும் இல்லை. லயத்தில் உள்ள கூரைகளை மாற்றுதல், நீர்விநியோகம், மலசல கூடங்களை நிர்மாணித்தல், புதிய பாதைகள் அமைத்தல், தொழிலாளர்களின் வீடுகள் அமைப்பதற்கான சங்கத்தை அமைத்தல், (EWHCS), சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்தல், மருந்துகளை விநியோகித்தல், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறியை போதித்தல், (CDOS) பற் சிகிச்சை முகாம் ஏற்படுத்தல், கண்நோய்களை பராமரித்தல், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் PHDT இல் பெருந்தோட்ட மக்களுக்காக மேற்கொள் ளும் நடவடிக்கைகளாக காணப்படுகின்றன.

இவ்வேலைத்திட்டங்களால் பலர் நன்மை பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக பெருந்தோட்டங்களில் உள்ளவர்களில் 135,450 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கியுள்ளனர்.

128,547 பேருக்கு மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தோட்டத்தில் உள்ள 235 வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வேறுபட்ட அபவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் வீடுகளை நிர்மாணித்தல் எதிர்பார்த்ததைவிட துரிதமாக மேற்கொள்ளப்பட வில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும். அவ்வாறே வீடுகள் நிர்மாணிக்கப்பட்டாலும் அவை இன்றுவரை அவர்களுக்கு உரிமையுடையதாக மாற்றப்படவில்லை. வீடுகள் நிர்மாணிக்கும்போது தொழிலாளர்கள் தமக்கு சொந்தமான ஒரு வீடு நிர்மாணிக்கப்படுவது போல செலவுகள் செய்துள்ளனர். உரிமை இல்லாத வட்டிகள் கடன்பட்டு செலவு செய்து அதன் உரிமையை அனுபவிக்க முடியாதவர்களாகவே பெருந்தோட்டத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.
PHDT இன் அனுசரனையுடன் கொட்டகலைக்கு அருகில் உள்ள Dryton ESTATE மண்வெட்டி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீட்டின் வரலாற்றினை சுருக்கமாக இங்கு அறியத்தருகின்றேன்.

1997 ஆம் ஆண்டு இந்த தோட்டத்தில் PHDT இன் அனுசரணையுடன் 30 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டினையும் பூர்த்தி செய்ய50,000 ரூபா பெறுமதியான பொருட்களை தோட்ட முகாமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வழி ஏற்பட்டது. வீட்டை அமைப்பதற்கான திட்டம் என்பனவற்றிக்கான அனுமதி என்பன 1999 இல் கிடைக்கப்பெற்றன. 50,000 ரூபா பெறுமதியான பொருட்களை தோட்டமுகாமையிடமிருந்து இருந்த பெற்றுக்கொள்ள 12% வட்டியும் அவ்வீட்டை நிர்மாணித்து குடியேறவுள்ள தொழிலாளரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது. இருப்பினும் மலசல கூடவசதிகள், மின்சாரம் குடி தண்ணீர் என்பன வழங்கப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில் PHDT 80 சீமெந்து கற்களும் 2 மூட்டை சீமெந்தும் அரை கீயூப் மணல் 2 தகரம் மற்றும் இதனை நிர்மாணிக்க ஒரு மேசன் ஒருவரையும் வழங்கினர்.

தோட்டத்தில் இருபது பெற்றுக்கொள்ளப்பட்ட 50,000 ரூபா பெறுமதியான பொருட்களுக்கான செலவை அவ்வீட்டில் குடியிருப்பதற்காக ஏற்படாகிய தொழிலாளர் மாதாந்தம் 250 ரூபா என்றவாறு மாதச்சம்பளத்தில் வழங்கினர். இந்த கடனை 50 மாதத்தில் திரும்பி வழங்கவேண்டும் என்பது நியதியாகும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல வீடுகள் கட்டி முடிந்தாளும் குடிநீர் மின்சாரம் சுவருக்கு வெள்ளை பூசுதல் போன்றவற்றிக்கான செலவுகளை அவ்வீட்டில் குடியிருக்கப்போகும் குடும்பத்தினரின் செலவாகும்.

இவ்வேலைகள் யாவும் 2011ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டன.இதற்காக இக்குடும்பம் தோட்டத்தில் வழங்கிய 500,000 ரூபா கொடுப்பனவு என்பதுடன் (இதனை வட்டியுடன் 50 மாதத்தில் திருப்பி வழங்கவேண்டும்) அதற்கு மேலதிகமான சுமார் 300,00 ரூபா செலவு செய்துள்ளனர்.

இதில் PHDT என்ன செய்துள்ளது? நிலத்தை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிட்ட பிரமாணங்களிலேயே கட்டி முடிக்க வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்டதே அன்றி வீட்டை நிர்மாணிப்பதற்கான எந்த கொடுப்பனவையும் வழங்கவில்லை. (மலசல கூடம் அமைத்து கொடுத்தல்) போக இப்படித்தான் கடந்த 22 வருடங்களாக 23.470 வீடுகளும் மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதாக PHDT பெருமை கொள்கின்றது.

நிலவுரிமை இல்லாத நிலையில் தனது உழைப்பில் குறிப்பிட்ட பிரமாணங்களில் வீடுகள் கட்டும் இத்தகைய செயல்பாடுகள் மலையக பெருந்தோட்டங்களிலேயே இடம் பெறுகின்றன.

இந்த நடைமுறையை பின்பற்றினால் மிகுதியான வீடுகள் எப்படி கட்டிமுடிப்பது அது எப்போது இவர்களுக்கு சொந்தமான வீடாக மாறும்?

நன்றி - வீரகேசரி

"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம்

சிறிமாவோ சாஸ்திரி உடன்படிக்கை ஐம்பதாண்டு நிறைவு நிகழ்வு


நோர்வே Jiffy: பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல் - என்.சரவணன்


கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே ரத்துபஸ் பகுதியில் தண்ணீரில் கலக்கப்பட்ட தொழிற்சாலைக் கழிவு பற்றிய பாரிய சர்ச்சை, சமீபத்தில் கொக்கோ கோலா நிறுவனம் வெளியிட்ட கழிவினால் களனி கங்கை ஆறு விஷமாவது குறித்த விடயங்களுடன் இந்த விடயத்தையும் துணைக்கு இழுத்ததும் ஜிப்பி (Jiffy) குறித்த செய்திக்கு முக்கிய இடமும், நம்பகத்தன்மையும் கிடைத்துவிடுகிறது.

ஆனால் இலங்கையில் இப்போது இது பெரும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மேலெழுந்துள்ளன. அதே வேளை மக்களை திசைதிருப்பும் நோக்கில் இந்த விடயம் உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளிப்படுத்தி பொய்களை ஊதிப்பெருப்பித்தும், உண்மையை சிறுப்பித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. பல்தேசிய கம்பனிகள் இலங்கை சந்தைக்குள் ஒரே துறையில் போட்டியிடுகின்ற போது விலைபோகக்கூடிய நம் நாட்டு ஊடகங்களையும், அரச அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்தந்த நாட்டு கம்பனிகள் தத்தமக்குள் சண்டையில் ஈடுபடுகின்றன. ஆக ஊடக தகவல்களை மட்டுமே ஆதாரமாக நம்பியிருக்கும்  பாமர மக்கள் இதனால் திசைதிருப்பப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பின்தொடர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த “ஜிப்பி” எனப்படும் நோர்வே தனியார் நிறுவனம் பற்றிய சிங்கள ஊடக செய்திகளை நம்பி மேலதிகமாக ஆராய்ந்துகொண்டு போகும்போது கிடைத்த தகவல்கள் அதுவரை பரப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான ஆதாரங்களையே வெளிப்படுத்தின. இதற்காக உரிய ஊழியர்கள், கிராமவாசிகள் என்போரின் பேட்டிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள், நோர்வேயிலுள்ள ஜிப்பி நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரிடமிருந்து பல பேட்டிகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டதில் இந்த செய்திகளுக்கு மாறான உண்மைகள் கிடைத்தன.

தோற்றம் – பின்னணி
அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தான் மாட்டிக்கொண்டிருக்கிறது நோர்வே நிறுவனமொன்று. Jiffy எனப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்று. இலங்கை, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 44 நாடுகளில்  தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு பல்தேசிய கம்பனி.

இலங்கையில் பெருமளவு கிடைக்கக்கூடிய தேங்காய் தும்பு, நார் என்பவற்றைக் கொண்டு இயற்கை விவசாயத்துக்குப் (Organic farm) பயன்படுத்தப்படும் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே வகை உற்பத்தியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன.


குருநாகல் மாவட்டத்தில் கொபேய்கன என்கிற கிராமத்திலேயே 75 ஏக்கர் நிலப்பரப்பில் ஜிப்பி நிறுவனத்தின் தொழிற்சாலை 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 2010இல் அமைக்கப்பட்டது. இன்று இது 24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலை. சூழ உள்ள பல நூற்றுக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அதிகமான பெண்கள் தும்பை உலரச் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்தில் தென்னை வளர்ப்பவர்கள் பலர் தேங்காய் தும்புகளையும், நார்களாக பிரித்தும் ஜிப்பி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதால் பல குடும்பங்கள் பலனடைகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டவற்றை இறுதிப் பொதிசெய்யும் தொழிற்சாலையும் பன்னல பிரதேசத்தில் இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கு பசில் ராஜபக்ச ஒரு பங்குதாரராக இணைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் நம்புகிறார்கள். சூழல் அமைப்புகளும் அவ்வாறு தெரிவித்து வருகின்றன.


இலங்கை தேசிய ஏற்றுமதி சம்மேளனம் (National Chamber of Exporters of Sri Lanka – NCE) வருடாந்தம் வழங்கும் விருதுகளில் “சுற்றுச் சூழல், கழிவுப் பொருட்களின் மறுபாவனை, சிறந்த சக்தி முகாமைத்துவம் என்பவற்றுக்கான விருதை 2012 இலிருந்து பெற்றுவருகிறது ஜிப்பி. இந்த வருடமும் விருதுக்கு தெரிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அதனை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்கிற குரல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தண்ணீரில் விஷமா? – வழக்கு
இந்த தொழிற்சாலையில் தும்பைக் கழுவி வெளியிடப்படும் கழிவுநீர் தெதுறு ஓயா ஆற்றில் கலக்கப்படுவதாகவும் அதனால் ஆற்றில் கல்சியம் நைத்திரேட் Ca(NO3)2 எனும் இராசாயனம் அதிகளவில் கலக்கப்பட்டு அந்த நீர் மாசடைந்திருப்பதாகவும், சூழ உள்ள கிணறுகளையும் அது பாதித்திருப்பதாகவும், சூழ மேற்கொள்ளப்படும் விவசாய நிலங்களும் விஷமடைந்திருப்பதாகவும் செய்திகள், கட்டுரைகள், ஊடக அறிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

முதலாவது காபன் நைத்திரேட் எனப்படுவது விசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு உர வகையே. அது விஷமல்ல. ஒரு லீட்டர் தண்ணீரில் 50 கிராம் அளவு நைத்திரேட் இருக்கலாம் என்பது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருப்பதாகவும், ஆனால் தெதுரு ஓயாவில் எடுக்கப்பட்ட நீரை பரிசோதனை செய்ததில் அதில் 2109.52 கிராம் நைத்திரேட் இருந்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்பட்டது. இந்த செய்தியையே ஊடகங்களும், சுற்றுச் சூழல் கல்வி நிலையமும் (Environment and Nature Education Center) பிரச்சாரம் செய்தன. கடந்த 16ஆம் திகதியன்று அந்த நிறுவனம் கூட்டிய ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களின் தொகுப்பாகவே இருந்தன. அந்த நிறுவனத்தின் அமைப்பாளர் ரவீந்திர காரியவசத்தை இந்த கட்டுரைக்காக தொடர்புகொண்டு விசாரித்த போது அவர் மத்திய சூழல் அதிகார சபையில் அறிக்கையை முன்வைத்தே கருத்து வெளியிட்டார். அந்த அறிக்கையை எமக்கும் கிடைக்கச் செய்தார். ஆனால் அந்த அறிக்கையின் படி பரிசோதனை அனைத்தும் ஜிப்பி தொழிற்சாலைக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாயின் சூழ உள்ள கிணறுகளையும், மண்ணையும், அந்த தெதுறு ஓயா ஆற்று நீரையும் பரிசோதித்து இருக்க வேண்டும். அந்த அறிக்கையில் 2109.52கிராம் நைத்திரேட் இருப்பதாக தெரிவித்திருப்பது கூட நேரடியாக தும்பை ஊற வைத்திருந்த இடத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதுதான் என்பதை அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.




2003 ஆம் ஆண்டு ஜிப்பியின் மீதான குற்றச்சாட்டுகள் அதன் போட்டி நிறுவனங்களால் தூண்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாண சூழல் அதிகாரசபை (Wayamba Environmental Authority) தலையிட்டது. ஜிப்பி நிறுவனத்தினுள் சென்று மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தது. முயற்சி தோல்வியடைந்த போட்டியாளர்கள் வேறு வழியில் தலையீடு செய்தனர். அதன்படி சம்பந்தமே இல்லாத மத்திய சூழல் அதிகாரசபை (CEA) அதிகாரிகளை அங்கு அனுப்பியது. அவர்கள்  வெளியிட்ட 8 பக்க அறிக்கையை ஆதாரம் காட்டித்தான் தெதுறு ஓயா ஆறு விஷமடைந்திருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த அறிக்கை அப்படி சொல்லவில்லை உண்மைக்கு புறம்பான செய்தி இது என்று ஜிப்பி நிறுவனம் அந்த ஊடகங்களுக்கு எதிராக நட்ட ஈடு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் இறுதியில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டதற்காக ரன்திவ எனும் பத்திரிகையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 11.09.2013 இடைக்கால தடையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அது போல அதே மாதம் 18 திகதி ஸ்ரீ லங்கா மிரர் இணையத் தளத்துக்கும் பிழையான செய்தி வெளியிட்டமைக்காக இடைக்கால தடையை விதித்தது நீதிமன்றம். “தென்னம் மட்டை பதனிட்ட விஷக்கழிவு தெதுறு ஓயாவுக்கு” எனும் தலைப்பில் 27.06.2013 ஸ்ரீ லங்கா மிரரில் வெளியான பிழையான செய்தி குறித்த வழக்கின் தீர்ப்பே அது. ஆனால் அத்தீர்ப்பில் ஜிப்பி நிறுவனத்துக்கு நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்திருந்தது. 24.11.2014 அன்று குறித்த செய்தியை வெளியிட்டமைக்கு ஸ்ரீ லங்கா மிரர் மன்னிப்புகோரி செய்தி வெளியிட்டது.

இந்த தகவலை நம்பி செய்தி வெளியிட்ட பல இணையத்தளங்கள் பின்னர் அதற்காக மன்னிப்பு கோரின. சில இணையத்தளங்கள் அந்த செய்தியை நீக்கின.

இப்படிப்பட்ட உண்மைகளை திரிபுபடுத்தி வெளியிடப்பட்டு வருவதன் உள் நோக்கங்களை ஆராய வேண்டியிருக்கிறது. ஒரு சிறிய உதாரணம்; அந்த ஊடக மாநாட்டில் “இவர்களைப் பற்றித் தெரிந்ததால் தான் இந்தியாவுக்குள் இவர்களை விடவில்லை. விரட்டியே விட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆனால் இலங்கையை விட அதிக உற்பத்தியை ஜிப்பி நிறுவனம் இந்தியாவிலேயே மேற்கொண்டு வருவது தெரிய வருகிறது. இத்தகைய பொய்களை வெளியிடுவதற்கு ஊடக மாநாடுகளையும் நடத்துகிறார்கள். தம்மீதான நம்பகத்தன்மையையும் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள்.

புலனாய்வு
மூன்று மாதங்களுக்கு முன்னர் நேரடியாக அங்கு சென்று அங்கு பணியாற்றும் பல ஊழியர்களிடமிருந்து தகவல்களை திரட்டியிருந்தேன். அந்த ஊர் மக்களிடமிருந்தும் கூட இந்த நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரவில்லை. நேரடியாக அந்த தொழிற்சாலைக்குள் ஊர் முக்கியஸ்தர் ஒருவருடன் சென்று பத்திரிகையாளர் என்று காட்டிக்கொள்ளாமல் பல விடயங்களை அவதானித்ததுடன், பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். தொழிளார்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய பிரச்சினை குறித்தே அவர்களில் பலர் முறைப்பாடு செய்தார்கள்.

நோர்வேயில் இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்பின் அன்டர்சனை தொடர்பு கொண்டு உரையாடியபோது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 650 ரூபா சம்பளம் வழங்கப்படுவதையும் 11 மணித்தியாலங்கள் வேலை வாங்கப்படுவத்தையும் ஒப்புக்கொண்டார். அது இலங்கையின் தொழிற்சட்டங்களுக்கு அமையவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்கவாதிகள் தான் பதில் கூற வேண்டும்.


அன்டர்சன் தெரிவித்த கருத்தின்படி மத்திய சூழல் அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையிலும் பல குளறுபடிகள் இருப்பதாகவும் இதன் காரணமாக உண்மை அறியுமுகமாக மூன்றாந்தரப்பு சர்வதேச பகுப்பாய்வு நிறுவனமொன்றை ஆராயும்படி கோரியதாகவும் அவர்கள் 45 விதமான மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதாகவும், அந்த அறிக்கையில் கூட அப்படியான எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த SGS நிறுவனம் சர்வதேச ரீதியில் பிரபலமும், நம்பகத்தன்மையையும் பெற்றது என்கிறார்.



இலங்கையின் இடம்
தென்னாசியாவும், தென்கிழக்காசியாவும் உலக தென்னை சார்ந்த உற்பதியில் முதன்மை வகிக்கின்றன. இலங்கை இன்று இந்த உற்பத்தியில் ஐந்தாவதாக இருக்கின்றது. இலங்கைக்கு இன்று பாரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் ஒரு துறையாக இது மாறியிருக்கிறது. நெதர்லாந்து, நோர்வே, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் பல்தேசிய கம்பனிகள் இலங்கையில் இந்த துறையில் முதலிட்டு இருக்கிறன.


மூலப் பொருள் கிடைக்கிறது, உற்பத்திச் செலவு குறைவு, குறைந்த கூலிக்கு ஊழியர்கள் என்பதால் இந்த பல்தேசிய கம்பனிகள் இந்த துறையில் இலங்கையில் காலூன்றியுள்ளன.

அமெரிக்க தூதுவர் சிசன் Riococo நிறுவனத்தில்
கொபேய்கன கிராமத்துக்கு அருகில் இதே துறையில் இன்னுமொரு அமெரிக்க நிறுவனம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் மூலப் பொருட்களை பெறுவதில் இந்த நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. Riococo எனும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு அடிக்கடி அமெரிக்க உயர்ஸ்தானிகர் வந்து போவதை செய்திகளிலிருந்து காண முடிகிறது. உழைப்பையும், வளங்களையும் நீதியையும் சுரண்டுவதற்கு நம் நாடு எப்போதும் திறந்தே இருக்கிறது அல்லவா.

இப்போது இந்த நோர்வே நிறுவனத்தின் மீதான பாய்ச்சல் வெறும் சூழலியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல இதற்குப் பின்னால் உள்ள ஆழமான அரசியலையும் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக சிங்கள ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் பாரியளவு பிரசாரங்களை மேற்கொண்டதன் பின்னணியில் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நோர்வே மீதான சிங்கள தேசியவாத எதிர்ப்புணர்ச்சி சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த சமாதான முயற்சி காலத்தில் நோர்வே பற்றிய பல புனைவுகளும், மாயைகளும் சிங்கள தேசியவாத ஊடகங்கங்களாலும், பேரினவாத தரப்புகளாலும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை பெருமளவில் வெற்றியடைந்தது. நோர்வேயின் சமாதான பங்களிப்பை மாத்திரமல்ல, நோர்வேயின் உதவிகளையும் கூட சந்தேகிக்கச் செய்யும் வகையில் இந்த பரப்புரைகள் நம்பவைக்கப்பட்டன. ஆக சாதாரண சிங்கள பொதுப்புத்தி நோர்வே எதிர்ப்பலையைகொண்டிருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சமாதான முயற்சி தோல்வியடையச் செய்யும் முயற்சியின் பின்னணியில் நோர்வேயை அன்னியப்படுத்தியத்தில் இந்த “வெறுப்பலைக்கு” கணிசமான பாத்திரம் உண்டு.

நோர்வே மீதான தீவிர எதிர்ப்பாளரான சம்பிக்க ரணவக்க கடந்த அரசாங்கத்தில் சூழலியல் அமைச்சராக இருந்ததும் இந்த சக்திகளுக்கு சாதகமாகப் போனது. சம்பிக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்று அழுத்தம் பிரயோகித்தனர். இப்போது இலங்கையில் சூழலியல் அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழேயே இருக்கின்றது. இப்போது இதுவா நல்லாட்சி இழுத்து மூடு இந்த நிறுவனத்தை என்று கோஷமிடத் தொடங்கியிருக்கின்றன.

அந்நிய முதலாளித்துவ முதலீட்டு பல்தேசிய கம்பனிகள் நம் நாட்டுக்கு நன்மை செய்வதற்காக வரவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் சுரண்டல் மட்டுமே. லாபம் மட்டுமே. அவர்களிடம் கழிவிரக்கம் காண முடியாது. ஆனால் அதனை அந்த நோக்கில் உறுதியாக அம்பலப்படுத்த வேண்டும். இப்போது அந்த முதலீட்டாளர்களின் சண்டைக்குள் நமது கவனம் வீண் திசைதிருப்பலுக்கு உள்ளாகியிருக்கிறது. உண்மையை கண்டடைவோம்.

உண்மையை வெளியிடுவதாக கூறிக்கொள்பவர்கள் ஏற்கெனவே எடுத்த முன்முடிவுகளுடனும், முன் அனுமானங்களுடன் இந்த பணியை மேற்கொண்டதால் ஒன்றில் அவசரப்பட்டு இத்தகைய செய்திகளை வெளியிட்டிருக்கக் கூடும். அல்லது எப்பேர்பட்டாவது இவர்களை மோசமாக சித்திரிக்க வேண்டும் என்கிற முழு முடிவுடன் இப்படி அனணுகியிருக்கக் கூடும்.

ஆய்வு முறையில் இரண்டு பிரதான போக்கை பரவலாகக் காணலாம். ஒன்று தேடிக் கிடைத்த ஆதாரங்களில் இருந்து முடிவுக்கு வருதல். மற்றது ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதனை நிறுவதற்கு தகவல்களை கோர்த்தல். இந்த இரண்டாவது வழிமுறை பெரும்பாலும் புனைவிலேயே முடிகிறது. தமது முடிவுகளை நம்பியிருப்போரை பிழையாக வழிகாட்டுவதில் போய் முடிகிறது.

தேசிய அரசாங்கமும் இந்திய வம்சாவளியினரும் - ஜே.ஜி.ஸ்டீபன்


ஜனரஞ்சகத் தலைவர் எனும் பேரோடும் புகழோடும் வலம் வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவர் இப்போது எல்லாப் புகழையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டார் என்றே கூறவேண்டியுள்ளது.

தவறான அணுகுமுறைகள், தான்தோன்றித்தனமான முன்னெடுப்புகள் எதேச்சதிகாரமான போக்குகள், சர்வாதிகார தீர்மானங்கள் போன்ற காரணங்கள் இவ்வாறு அரசியல் தலைவர் ஒருவரின் பெயரையும் புகழையும் இழக்க செய்வதற்கு வலுவுடையவை எனலாம். இன்று மஹிந்த ராஜபக் ஷ எனும் நபர் நாட்டு மக்களால் குறிப்பாக தமிழ் பேசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவராகிவிட்டார். தமிழ் பேசும் மக்களின் புறக்கணிப்புக்கு ஆளான ஒரே காரணத்தினாலேயே அவர் அந்தஸ்த்தை இழந்தார். பதவியிழந்தார். பரிவாரங்களை இழந்தார். இறுதியில் பல்வேறுபட்ட தோல்விகளையும் சந்தித்தார்.

இந் நாட்டின் ஆட்சியையும் அரசியல் தலைவர்களையும் அவர்களது தலைவிதிகளையும் தீர்மானிக்கின்ற சமூகமாகத்தான் தமிழ் பேசும் சமூகம் திகழ்ந்து வருகிறது. இது கசப்பாகவே இருந்தாலும் இன்றைய சிங்களத் தலைவர்கள் இதனை புரிந்து கொண்டேயாக வேண்டும்.

ஆயிரமாயிரம் கதைகள் கூறினாலும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் என்பது அவ்வப்போது நிரூபணமாகி வருகின்றது. இந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியல் தலைமைகளும் இந்த வகைக்குள் அடங்குகின்றனர்.

இப்படி இருக்கையில் எம் நாட்டு அரசியல் வாதிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன?

சம காலத்து அரசியல் களத்தை எடுத்துக் கொண்டாலும் கூட தேசிய கட்சிகள் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் காதார கதை பேசினாலும் இங்கும் ஒரு விதமான இருட்டடிப்பு இடம்பெற்றுத் தான் இருக்கின்றது.

அந்த இருட்டடிப்பானது அப்பாவித் தமிழர்களுக்கு குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே நிகழ்ந்துள்ளது.பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார களத்தில் இனவாதமும் மதவாதமும் பிரதேச வாதமும் விதைக்கப்பட்ட நிலையில், பிரசாரிகளாகவும் அரசியல் விபசாரிகளாகவும் செயற்பட்ட பேரினவாத அரசியல் வாதிகள் இன்று தேசிய அரசாங்கம் எனும் பொறிமுறைக்குள் ஒன்றுபட்டுள்ளனர்.

நாடு என்ற ரீதியிலும் மக்கள் என்ற ரீதியிலும் இவ்வாறான ஒன்றுபட்ட புரிந்துணர்வு இணக்கச் செயற்பாடு மிகவும் வேண்டப்பட்டவை என்றாலும் அவ்விணக்கப்பாட்டு செயற்பாட்டில். அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாததாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்ற நான்கு கட்சிகள் இருந்து வருகின்றன. இந் நான்கு கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே இந் நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற வரையறைக்குள் வரமுடியும். ஆனால் இங்கு இரண்டு பிரதான தேசியக் கட்சிகளே இணைந்துள்ளன. அதிலும் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழுமையாக அல்லாது அதில் அங்கம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமே இணைந்துள்ளனர்.

இவ்விரு தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஏனைய சிறுகட்சிகள் குறித்தோ அல்லது சிறுபான்மை கட்சிகள் குறித்தோ சிந்தனை கிடையாது. கடந்த பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் என்ற பேரில் தேர்தல் முறையை மாற்றியமைப்பதான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டமையும் இதன் அடிப்படையிலேயே எனலாம்.

எப்படி இருப்பினும் இன்று மலர்ந்திருப்பது நல்லாட்சிக்கான காலகட்டம் என்றாலும் நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டாலும் மலையக சமூகம் திருப்தி கொள்ள முடியாத அளவிற்கு மன உளைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளமை கவலை மிக்க விடயமாகும்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் 20 இலட்சம் பேர் வரையில் இந்நாட்டில் உள்ளனர். இவர்களில் இம்முறை கணிசமானோர் அக்கறையோடு வாக்களித்துள்ளனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் சுமார் ஏழு வீதமானோர் அமையவிருக்கும் தேசிய அரசாங்கம் சார்பில் வாக்களித்திருக்கின்றனர்.

எனினும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாக்களித்த இந்திய வம்சாவளியினர் தேசியப் பட்டியல் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். ஐக்கிய தேசிய கட்சியும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி இவ்விரு தேசிய கட்சிகளுமே மலைய சமூகத்தின்பால் திரும்பிப் பார்க்கத் தவறியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரையில் அது நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெற்றுள்ளது.

மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியானது மொனராகலை, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை,காலி, மாத்தறை ஆகிய மலையகம் சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளியினரது வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதனை இன்னும் விஷேஷித்துக் கூறுவோமானால் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கணிசமான வெற்றியைத் தேடித்தந்துள்ளன என்று கூறினாலும் மிகையில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கிய ஐக்கிய தேசியக்கட்சி 6 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்த தமிழ் முற் போக்கு கூட்டணிக்கு தேசியப் பட்டியல் புறக்கணிப்பு செய்ததா அல்லது கூட்டணி அதற்கு வழிவகுத்ததா என்பது புதிராக இருக்கிறது. எது எப்படியோ இங்கு தேசியப் பட்டியலில் ஒன்று இல்லாது செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு முன்னணி அளித்துள்ள விளக்கத்தில், தேசியப் பட்டியல் நியமனத்திற்கு பதிலாகவே பதுளை, கொழும்பு மாவட்டங்களில் வேட்பளர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இது கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி எடுத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியில் மட்டுமல்லாது பல தோல்விகளைக் கண்டு வாடி நின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தோள் கொடுத்து நின்றவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் பெயர் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கும் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இம்முறை நடந்து முடிந்த தேர்தல் வேலாயுதத்தின் பொறுப்பில் உள்ள பசறை தேர்தல் தொகுதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாவதற்கு பணியாற்றியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தின் பங்குதாரியாக செயற்பட்டுவரும் வேலாயுதம் 100 நாள் நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் 200 வருடகால கனவை நனவாக்கும் விதமாக தொழிலாளர் குடும்பங்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அரிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவராக இருக்கின்றார்.

மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக இருந்த வேலாயுதத்தை தேர்தலில் போட்டியிடச் செய்யாது தேசியப்பட்டியலில் இடமளிப்பதாகக் கூறி பின்னர் அவரைப் புறக்கணித்திருப்பது மலையக மக்களுக்கு குறிப்பாக பதுளை மாவட்ட மக்களுக்கு பெரும் இழப்பாகவே கருத வேண்டி உள்ளது.

சுதந்திரக் கட்சியை நிலை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதத்தை நோக்கினால் தேர்தலில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சியினரைக் கண்டறிந்து அவர்களை தேசியப் பட்டியலினூடாக உள்வாங்கியுள்ளார்.

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பற்றியே சிந்தித்து இங்கு செயலாற்றியுள்ளார். மொத்தத்தில் இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் சிறிதேனும் சிந்தித்தவர்களாக செயற்பட தவறிவிட்டனர். வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.

தேசிய அரசாங்கம் எனும் பெயரில் இணைந்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கம் அமைப்பதற்கு முன்பதாகவே தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனரா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்ப்புவாத அரசியல், நிர்ப்பந்த ரீதியிலான அரசியல் மற்றும் இனவாத, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கு தலைசாய்க்கும் தேசியக் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தின் பிரகாரம் சட்டம் ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒழுகும் சமூகம் தொடர்பில் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் ஆரம்பப் படியே இவ்வாறு இருக்குமானால் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரசார மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின் நிலை என்ன தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம், தனி வீட்டுத்திட்டம், காணி உரிமை, மலையகத்துக்கு ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் எல்லாமே எந்த ரீதியில் சாத்தியமாகப் போகின்றன என்பது பாரிய கேள்விகளாகியுள்ளன.

தேசிய அரசாங்கம் எனும் போது அடுத்து வரும் காலங்களில் மக்கள் பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில் மைத்திரி அணியா ரணில் அணியா என்ற நிலைப்பாடு தோன்றினாலும் ஐயமில்லை.

ஏனெனில் தேசிய அரசாங்கம் என்ற தொரு பொறிமுறையை தோற்றுவிப்பதற்கே சரியானதொரு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அமைச்சுப்பதவிகளுக்கும் குடுமிச் சண்டை தொடரும் நிலை காணப்பட்டு வருகிறது.தேசிய அரசாங்கம் எனும் போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்கு பிரதமர் ரணிலும் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரியும் பாடுபடப் போகின்றனர் என்பது மாத்திரமே உறுதி.

இவ்வாறு இரு தரப்பினரும் தங்களது கட்சிகளை ஆழமாக வேரூன்றச் செய்வார்களேயானால் தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைத்து தொகுதி முறை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அதன் அறுவடைகளை மேற்படி இருதரப்பினர் மாத்திரமே அனுபவிக்கப் போகின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் சிறு கட்சிகளோ சிறுபான்மைக் கட்சிகளோ மேற்படி இரு தரப்பினருக்கும் தேவைப்படப் போவதில்லை.

பதுளை மாவட்டத்தில் இரு தமிழ் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அம்மாவட்டத்திற்காக மேலும் ஒரு தமிழ் உறுப்பினர் தேவையில்லை என்று சிந்திப்பதானது உண்மையில் அது இனவாத அடிப்படையிலாகும்.மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்நாட்டை ஆண்டு வருகின்ற அரசாங்கங்கள் பெரிதாக இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக் கொண்டதில்லை. இரண்டாம் தரப்பிரஜைகளாகவே மலையக மக்கள் மேற்கண்டவர்களால் இது வரையில் கணிக்கப்பட்டு வந்துள்ளனர். வருகின்றனர்.

அந்த வகையில் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இன்று செயற்பட்டு வரும் அரசியல் களத்திலுள்ளோர் எதிர்வரும் ஐந்து வருடகாலங்களில் எவ்வாறு செயற்படப் போகின்றார் என்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசியப் பட்டியலில் ஏமாற்றமடைந்துள்ள இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தேசிய அரசாங்கத்தில் ஏமாற்றப்படமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இலங்கையில் அரசியல் வரலாற்றில் இப்படியான நிலைமை நீடித்து வருகிறது. முன்னைய அரசாங்கங்கள் அரசியல் தலைமைகள் உண்மையாகவே செயற்பட்டிருந்தால் மலையகம் இன்றைய அளவில் பின் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

200 வருட காலமாக வைக்கப் பட்டு தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க நினைப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான மனித உரிமை மீறல் என்றால் அது மலையக மக்களுக்கே இடம்பெற்று வருகிறது.200 வருடகாலமாக கூலித் தொழிலில் ஈடுபடுத்தி அடிப்படைவசதியற்ற லயக் காம்பிராக்களில் வாழ வைக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின்பால் நல்லாட்சிக்கான அரசாங்கம் கருணைக்கண் காட்டவில்லையெனில் இவ்விவகாரமும் சர்வதேச விசாரணை ஒன்றுக்குள் தள்ளப்படும் நிலை நிச்சயமாக எதிர்காலத்தில் உருவாகும்.

இன்று இணைந்துள்ள தலைமைகளும் அவர்களது பேரும் புகழும் நிலைத்திருக்கும் வகையில் செயற்படுவார்களேயானால் அது எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பாக அமையும். இல்லையேல் இவர்களும் பிற்காலத்தில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகுவர் என்பதிலும் சந்தேகமில்லை.

நன்றி - வீரகேசரி

வெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி


- ரமேஷ், எஸ்.தியாகு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (Lily's Lane Estate) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் மூவர் பலியானதுடன், அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் தனி வீடொன்றும் (குவாட்டஸ்) 6 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.

கயிறுக்கட்டி தோட்டத்து கோயிலுக்கு அண்மையில் உள்ள ஒத்தசைட் (ஒரு பக்கத்தில் மட்டும் 6 வீடுகளை கொண்ட லயன் அறை) அல்லது ஆற்றோர லயன் என்று கூறப்படுகின்ற தோட்டக்குடியிருப்புகளே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளன.

ஆறு வீடுகளை கொண்ட லயனும், அந்த லயதுக்கு மேல் உள்ள தனி வீடுமே பாதிக்கப்பட்டுள்ளன. லயன் அறைகளின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்து, பாராங் கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மண்சரிவுக்குள் அகப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு பெக்கோ இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மரணமடைந்த மூவரில் சிறுவரொரும் 50 வயதான முதியவர் ஒருவரும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,

ஒத்தசைட் லயத்துக்கு மேலே உள்ள தனிவீட்டுக்கு அருகில் பாரிய இடியொன்று விழுந்துள்ளது. கடும் மழைக்கு மத்தியில் அந்த சத்தத்துடன் அள்ளுண்டு வந்த மண்ணும், பாராங்கற்களும் தனிவீட்டை அப்படியே சேதப்படுத்தி, புரடிக்கொண்டு லயத்தின் பின்புறமாக விழுந்துள்ளது.

அந்த தனி வீட்டில், பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுபேர் இருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

லயத்தின் பின்புறத்தில் விழுந்து சரிந்த மண்ணும் பாராங்கற்களும், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பாரிய மண்சரிவு என்பதால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாதுபோய்விட்டதாக தெரிவித்த, பிரதேச வாசிகள், மண்சரிவில் சிக்குண்டுள்ளோரை மீட்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அந்த பகுதியில் வழமையை விடவும் கடுமையான மழை பெய்துகொண்டிருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை இன்று மாலை 6 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவத்தில் ஒருகாலை இழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண்ணொருவர், கொத்மலை வைத்தியசாலையில் இருந்து, கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துங்கோரளை பிரதேச அரசியல் நிலைமை - ஜே. அந்தனி


துங்கோரளை என்பது கேகாலை மாவட்டத்தின் ஒரு பிரதேசமாகும். இது ருவான்வெல்ல, எட்டியாந்தோட்டை, தெரணியகலை ஆகிய தேர்தல் தொகுதிகள் உள்ளிட்ட ஒரு பிரதேசமாகும். இடது சாரி இயக்கத்தின் தாய் பூமி என்றும் கொள்ள முடியும். ருவான்வெல்ல தேர்தல் தொகுதியை காலஞ்சென்ற கலாநிதி என்.எம். பெரேரா சுமார் 40 ஆண்டுகள் வரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். இலங்கை சமசமாஜக் கட்சியின் கோட்டை என்றும் கூறுவர்.

சிரேஷ்ட அரசியல்வாதிகளான அத்தாவுத செனவிரத்ன, சட்டத்தரணி எச்.ஆர். மித்ரபால, வை.ஜி. பத்மசிறி, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் லங்கா சமசமாஜக் கட்சியின் தூண்களாவர்.

1977 இல் பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் அலை வீசத்தொடங்கியது. எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த கே. வின்சென்ட் பெரேரா என்ற இளைஞரால் அந்தத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சியின் ஜாம்பவானான என்.எம். பெரேரா தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி துங்கோரளையில் புனர்ஜென்மம் பெற்றது.
பின்னர் சமசமாஜக் கட்சியில் ஒரு குழப்ப நிலை தோன்றலாயிற்று. கட்சியின் முக்கியஸ்தரான அத்தாவுத செனவிரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். அவரையடுத்து, எச்.ஆர். மித்ரபாலாவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தார். ஆனால் , வை.ஜி.பத்மசிறி மட்டுமே கட்சியுடன் இருந்தார்.

மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தல் நடந்தபோது ஜே.வி.பி. யினர் மாகாண சபை முறைமைக்கு எதிராக செயற்பட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பத்மசிறியின் தமயனார் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது தம்பி வை.ஜி.பத்மசிறி மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

துங்கோரளை சமசமாஜக் கட்சியை பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வை.ஜி. பத்மசிறி ஆகியோர் வழிநடத்தலாயினர். திஸ்ஸ விதாரண தேசியப்பட்டியலில் இடம்பெற்று அமைச்சரானார். விலகிச் சென்ற அத்தாவுத செனவிரட்ண, எச்.ஆர். மித்ரபால ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறலாயினர்.

பின்னர் அத்தாவுத செனவிரட்ணவின் புதல்வரும், எச்.ஆர்.மித்ராபாலவின் புதல்வரும், வை.ஜி.பத்மசிறியின் புதல்வியும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களாயினர்.

இவ்வருடம் ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அத்தாவுத செனவிரட்ண தோல்வியுற்றார். சமசமாஜக் கட்சியின் ஒரே உறுப்பினரும், அமைச்சருமான வை.ஜி.பத்மசிறியும் தோல்வியுற்றார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. துங்கோரளையில் சமசமாஜக் கட்சியை வழிநடத்திய இருவரும் அரசியல் அநாதைகளாயினர். இது துங்கோரளையில் சமசமாஜக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும்.

மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்துக்கு
இம்முறை முன்னாள் அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக தனது புதல்வனும் மாகாண சபையில் ஆளுங்கட்சியின் பிரதித் தவிசாளருமான சாரதி துஷ்மந்தவை தேர்தலில் போட்டியிடச் செய்தார். துஷ்மந்த கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு 64,836 வாக்குகள் பெற்று பட்டியலில் மூன்றாம் இடத்தைப்பெற்று வெற்றி ஈட்டினார்.

எட்டியாந்தோட்டையில் வசிக்கும் சுஜித் சஞ்சய பெரேரா காலஞ்சென்ற அமைச்சர் வின்சென்ட் பெரேராவின் புதல்வராவார். இவர் மாகாண சபை உறுப்பினர், ஐக்கிய தேசியக்கட்சியின் எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர். இவர் பலமுறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனால், இம்முறை 53,218 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அடுத்து துஷிதா விஜயமான என்ற பெண்மணியாவார். காலஞ்சென்றவரான இவரது தந்தை ருவான்வெல்லயில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாவார். துஷிதா விஜயமான ஆரம்பத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் அரச சேவையிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ருவான்வெல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபையின் எதிர்க்கட்சித் தலைவியாக நியமிக்கப்பட்டார். இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 50,893 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். எனவே, துங்கோரளையிலிருந்து மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் எம்.பி. க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துங்கோரளையில் இ.தொ.கா.
சப்ரகமுவ மாகாண சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த அண்ணாமலை பாஸ்கரன் உறுப்பினராக உள்ளார். இவர் இம்முறை கேகாலை மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 2,448 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார். இவர் மாகாண சபைத்தேர்தலின் போது ஒன்பதாயிரத்துக்கு சற்று குறைவான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர். அவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் இவருக்கு வாக்களிக்காததற்கு பல காரணங்கள் உள்ளன.

சென்ற முறை சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி இராமச்சந்திரனும், கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரனும் தெரிவு செய்யப்பட்டனர். இருவருமே இ.தொ.கா. வைச் சேர்ந்தவர்கள்.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள தோட்டங்களைச் சுற்றி பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமங்களே உள்ளன. சிறுபான்மை தமிழர் மீது பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கம் உள்ளது. இங்கு தமிழ் வாக்கு என்றால் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளே ஆகும். தொழிற்சங்கங்கள் இவர்களைப் பிரித்து வைத்துள்ளன. தலைவர்களின் அறிவுறுத்தலின் படி வாக்களிப்பதில்லை. இதன் காரணமாய் ஒரு தமிழ் வேட்பாளரால் வெற்றி பெறுவது கடினமாகும். கடந்த மாகாண சபை தேர்தலின் போது இ.தொ.கா. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கூட்டணி போன்ற ஒன்றை ஏற்படுத்தி தேர்தலில் ஈடுபட்டனர். இந்த ஒற்றுமை காரணமாய் கேகாலையிலும், இரத்தினபுரியிலும் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் கூட்டணி முறிந்தது. அதன் பெறுபேற்றை பொதுத்தேர்தலில் காண முடிந்தது.

மேலும், சேவலில் போட்டியிட்டு அண்ணாமலை பாஸ்கரன் எதிர்பாராத சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இதுவரை எட்டியாந்தோட்டை பிரதேச சபையில் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த எம்.ஏ. சத்தியானந்தன் தேர்தலுக்கு முன்னர் மலையக மக்கள் முன்னணியில் இணைந்தார். அதேபோல பல வருடங்களாக எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இ.தொ.கா. வைப் பிரதிநிதித்துவம் செய்ததோடு, கேகாலை மாவட்ட அமைப்பாளருமாயிருந்த ஜெகநாதன் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இந்த இருவரும் தமக்கென பிரத்தியேக வாக்கு வங்கிகளை கொண்டிருந்தவர்கள். இந்த வாக்குகளெல்லாம் இம்முறை யானைக்கே வழங்கப்பட்டன. இவர்களது சேவலுக்கெதிரான பிரசாரமும் பலனளித்தது. இதனால் பாஸ்கரன் தனிமைப்படுத்தப்பட்டதோடு தேர்தலிலும் தோல்வியுற்றார்.

மாகாண சபைத் தேர்தலின்போது காணப்பட்ட ஒற்றுமை தொடர்ந்திருக்குமானால் ஒருவேளை பாஸ்கரனால் வென்றிருக்க முடியும். தமிழ் வாக்காளர்கள் சங்கம், கட்சி என்று பிரிந்திருக்கும் வரை கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதென்பது கடினமாகும்.


நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates