Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

யார் இந்த “அப்புஹாமி” ? -என்.சரவணன்


அப்புஹாமி என்கிற பதவிப்பெயர் கண்டி இராஜ்ஜியத்தில் தான் உருவானது. அன்றைய கண்டி அரசரின் தனிப்பட்ட செயலாளரைப் போல அவரின் நேரடிக் கடமைகளை மேற்கொண்டவர்களை “துக்கன்னாறால” என்பார்கள். இன்று அந்தப் பதம்; அரசியலமைப்பில் “குறைகேள் அதிகாரி”க்கு (Ombudsman) பயன்படுத்தப்படுகிறது. கண்டி அரசாட்சியில் இவரை “அப்புஹாமி” என்றே அழைத்தார்கள்.  கண்டி இராஜ்ஜியத்தில் அன்று இருந்த உயர்குல நிலப்புரபுத்துவ பின்னணியை உடையவர்களே இந்தப் பதவியை வகித்தார்கள். அவர்களைத் தான் சாதாரண சிவில் மக்களால் “மாத்தையா” என்றும், “நிலமே” என்றும் கூட அழைக்கப்பட்டார்கள்.

அரசனின் அதி நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரையே இந்தப் பதவியில் வைத்திருப்பார். அரசரின் புதையல்களையும் விலைமதிப்பு மிக்க ஆபரணங்களையும் வைத்திருக்கும் களஞ்சியம் இவரது பொறுப்பிலேயே இருந்தன. அதுமட்டுமன்றி குறிப்பாக அரச மாளிகையின் பாதுகாப்பு, காவலரன்கள் என்கிற முக்கிய மூன்று பணிகளும் இவரது பொறுப்பில் இருந்தன.

அரசரின் தனிப்பட்ட செயலாளருக்கு மாத்திரமல்ல மேலும் பல முக்கிய பாதுகாப்பு விடயங்கோடு சம்பந்தப்பட்டவர்களும், மன்னரின் நேரடி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்களும்  அப்புஹாமி என்றே அழைக்கப்பட்டார்கள். ராஜாதி ராஜசிங்கனின் ஆட்சியின் போது 42 பேர் அப்புஹாமி பதவிகளில் ஏக காலத்தில் இருந்திருக்கிறார்கள். கீர்த்திஸ்ரீ ராஜசிங்கனின் காலத்தில் 160 பேர் இருந்திருக்கிறார்கள். ஸ்ரீ விஜய ராஜசிங்கனின் ஆட்சியில் 170 பெரும் முதலாம் இராஜசிங்கனின் காலத்தில் 81 பெரும், இறுதி அரசனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியின் போது 48 பேரும் இருந்திருக்கிறார்கள்.

மன்னர் தங்கியிருந்த அரண்மனை, அரச கடமைகளை மேற்கொள்ளும் கட்டிடம் என்பவற்றின் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட விசேட படையைச் சேர்ந்தவர்கள். காவல் கடமைகளில் இருக்கும் சாதாரண படை சிப்பாய்கள் இவர்களின் கட்டளையின் கீழ் இயங்கியிருக்கிறார்கள். மன்னருக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய சத்தங்கள் வராமல் பார்த்துக்கொள்வது, மன்னர் கூப்பிட்டவுடன்  ஓடிவந்து கட்டளையை ஏற்றுக்கொண்டு செய்துமுடிப்பதும் “துக்கன்னாறால” என்கிற இந்த அப்புஹாமிமாரின் கடமை. இவர்கள் சிப்பாய்களின் உடையில் இருப்பதில்லை. பிரபுக்களைப் போன்ற எடுப்புடன் தான் ஆடைகளை அணிந்திருப்பார்.

இவர்களுக்கு தலைமை வகிக்கும் ஒருவராக முகாந்திரம் என்கிற ஒருவர் இருப்பார். நாளாந்த விடயங்களை தெரிவிப்பதற்கு ஒரு செயலாளர் இருப்பார்.

கிட்டத்தட்ட அரசனுக்காக தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

மன்னர் இரண்டாம் இராஜசிங்கனை நில்லம்பே நுவர என்கிற இடத்தில் வைத்து அம்பன்வல றால என்பவரால் ஒரு கொலைச்சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் தங்கியிருந்த மாளிகைக்குள் இரகசியமாகப் புகுந்து படுக்கையில் வைத்தே கொலைசெய்வது என்பது திட்டம். படுக்கையில் மன்னருக்குப் பதிலாக படுக்கையில் இருந்து அலுவிஹாரே வணிகசேகர முதியான்சே பரம்பரையச் சேர்ந்த ஒரு “துக்கன்னாறால” உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றிய கதையுண்டு. மன்னர் அந்த இடைவெளியில் ஹன்குரங்கெத்த என்கிற இடத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

48 “துக்கன்னாறால”மாரை பாதுகாப்புக்கு வைத்திருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு சிங்களவரைக் கூட அந்தக் கடமையில் வைத்திருக்கவில்லை. தமிழ் - வடுக இனத்தவரைத் தான் தனது பாதுகாப்புக்கு வைத்திருந்தார். சிங்களவர்களின் பாதுகாப்பில் அவருக்கு தனிப்பட நம்பிக்கை இருக்கவில்லை. அதை மெய்ப்பிக்கும் வகையில் பிலிமத்தலாவவின் தலைமையில் பெரும் சதிக்கு அவர் முகம்கொடுத்தார். அந்த சதி முறியடிக்கப்பட்டதும் கூட அப்புஹாமிமார்களால் தான். அந்த சதி முதலில் முறியடிக்கப்பட்டதுடன் பிலிமத்தலாவையை தண்டிக்கவில்லை. இரண்டாந்தடவை பிலிமத்தலாவ மீண்டும் அதே சதி முயற்சி மேற்கொண்டபோது அவருக்கு மன்னர் மரண தண்டனை அளித்தார். மீண்டும் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனை கொலை செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட பலவத்தனறால, ஜா முகாந்திரம் ஆகிய இருவரையும் சூட்சுமமாக பிடித்தவர்களும் “துக்கன்னாறால”மார் தான். ஆக இவர்கள் தான் துணிச்சலான நம்பகமான மெய்ப்பாதுகாவலர்களாகவும் அரசனுக்கு இருந்திருக்கிறார்கள்.

நாளாந்த காவலுக்காக நான்கு வேளை நேரங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். தினசரி காண்டாரத்தை ஒலிக்கச் செய்வதும் இவர்களின் கடமை அந்த காண்டாரம் நான்கு மைல் சுற்றுவட்டத்துக்கு கேட்டிருக்கிறது என்கிறார்கள். இந்த காண்டார ஓசையைக் கொண்டு நேரத்தை அறிந்துகொண்டு கடமையாற்றும் வழக்கத்தை பலர் கொண்டிருந்தார்கள். மன்னர் வெளியில் செல்வது அரிது. அவ்வப்போது அரசர் மல்வத்து – அஸ்கிரி தலைமை பிக்குமாரை சந்திக்கச் செல்லும் வேளைகளில் இந்த இந்த “துக்கன்னாறால” மாரும் மெய்ப்பாதுகாப்பாளர்களாக அரசனைச் சூழ செல்வார்கள்.

ஆயுதக் களஞ்சியத்தைப் பாதுகாப்பதும் இவர்களின் கடமை. மன்னரின் ஆயுதங்கள் மற்றவற்றில் இருந்து வித்தியாசமானவை. அவற்றை தூசுபடியாமல், துருப்பிடிக்காமல் பாதுகாப்பதும், ராஜதந்திர கடமைகளுக்கு செல்லும் வேளைகளில் அரசருக்கு அவற்றை உரிய முறையில் சேர்ப்பதும் அவர்களின் கடமை.

இந்த “துக்கன்னறால”மார் வேறு அதிகாரிகளுக்கோ மந்திரிகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் இல்லை. நேரடியாக மன்னரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள். அரச உற்சவங்களின் போது அரசி, மந்திரிமார், அதிகாரம்மார் ஆகியோரையும் குறுக்கிட்டு முன்னே செல்ல இவர்களால் முடியும். பல சந்தர்ப்பங்களில் தமது சொத்துக்களுக்கான வரிவிலக்கையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். மன்னரின் பாத்திரத்துக்கு உள்ளான அப்புஹாமிமார் பல சலுகைகளையும் உதவிகளையும் பெற்றிருப்பதை பல்வேறு பதிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன. இரண்டாம் இராஜசிங்கன் ஒரு “துக்கன்னாறால”வுக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார். கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒரு விசுவாசமான “துக்கன்னாறால”வுக்கு அவர் உயிருடன் இருக்கும்வரை நெல், தானியங்களை இலவசமாக கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

கண்டி இராஜ்ஜியத்தில் இந்த “துக்கன்னாறால”மாருக்கு இன்னொரு பெயராகவே அப்புஹாமி புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் கரையோரச் சிங்களவர்கள் மத்தியில் இருந்த உயர்சாதி கொவிகம நிலப்பிரபுத்துவ சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அப்புஹாமி என்கிற கௌரவப் பெயரை காலப்போக்கில் சுவீகரித்துக்கொண்டார்கள். இந்தப் பெயரின் சிறப்பைப் பற்றி இன்னும் கூறுவதென்றால் மன்னர் முதலாம் விமலதர்மசூரியன் கத்தோலிக்க மதத்தைத் தழுவி தனது பெயரை “தொன் யுவான் அப்புஹாமி” என்று தான் தனக்கு பெயரை சூட்டிக்கொண்டார். எனவே இது ஒரு உயர்சாதிக்குரிய, உயர் குழாமினருக்கு உரிய மேட்டுக்குடி கௌரவப் பெயராக காலப்போக்கில் இருப்புகொண்டது. 

சிங்களவர்கள் மத்தியில் “அப்புஹாமி, ராலஹாமி, மாத்தையா, முதலாளி, பாசுன்னே” போன்றவை உயர்சாதி/மேட்டுக்குடி ஆண்களுக்கும் “ஹாமினே” என்று உயர்சாதி/மேட்டுக்குடி பெண்ணுக்கும் பயன்படுத்துவது நெடுங்கால பாரம்பரியமாக இருந்துவருகிறது. இன்று அது சாதி, குலம் என்பவற்றைத் தாண்டி வர்க்க உயர்நிலையினருக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் பயன்படுத்தப்பட்டுவருவதைக் காணலாம். ராலஹாமி என்பது அதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை விளிக்க இன்றும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

நன்றி - அரங்கம்

பெருந்தோட்ட சேவைக்கு கற்றவர்களின் உள்வருகை அவசியம் - அருள்கார்க்கி


பெருந்தோட்ட வரலாற்றில் தொழிலாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட நம்மவர்கள் கல்வியிலும், தொழில் தேர்ச்சியிலும் உயர்ந்து இன்று நாட்டின் அனைத்து தொழில் துறைகளிலும் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். அரச, தனியார் துறைகளில் மட்டுமின்றி கட்டமைக்கப்படாத தொழில் துறைகள் அனைத்திலும் மலையகத்தை அடிப்படையாகக் கொண்டவர்களின் பங்களிப்புக் காணப்படுகின்றது. கூலிகளாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட எம்மவர்கள் இன்று கல்வியிலும் குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைந்து உள்ளனர். இவை ஒருப்புறம் இருக்க மலையக நகரங்களும், நாட்டின் முக்கிய வர்த்தக கேந்திரங்களும் தினக்கூலிகளாக எம்மவர்களின் உழைப்பை தினம் தினம் அனுபவிக்கின்றன. ஒழுங்கமைக்கப்படாத வர்த்தக நிலையங்களிலும் சுயாதீன சேவை வழங்குனர்களாகவும் மலையக இளைஞர், யுவதிகள் காணப்படுகின்றனர். கொழும்பு நகரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால் மலையக இளைஞர்களால் தான் வர்த்தக செயற்பாடுகள் தங்கியிருக்கின்றன. 

இவ்வாறு உதிரிகளாக ஆங்காங்கே உழைக்கும் எம்மவர்களின் எதிர்காலம் சரியாக திட்டமிடப்படாமல் சிதைவடைகின்றது. ஓய்வூதியமோ அல்லது வேறெந்த உரிமைகளோ சலுகைகளோ இன்றி இவர்கள் முதலாளிமார்களுக்கு உழைத்துக் கொடுக்கின்றனர். நகர்ப்புற வர்த்தக நிலையங்களில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு எதுவித தொழில் உத்தரவாதமும் இல்லை. எனவே இவர்கள் நிலையில்லாத முறையில் சில மாதங்களில் புதிய இடங்களை நாடிச் செல்கின்றனர். 

இருப்பிடத்துக்கும், உணவுக்கும் அதிக பணத்தை செலவழிப்பது, கேளிக்கைகளுக்காக வீண்விரயம் செய்வது, சேமிப்பு இன்றி பணத்தை விரயமாக்குவது போன்ற வழிமுறைகளால் இவர்களின் இருப்பு தொடர்கின்றது. பாடசாலையிலிருந்து இடைவிலகியர்களும்,  சாதாரண தரம்இ உயர்தரம் சித்தியடைந்தவர்களும் இவ்வாறு இடர்பாடுகளை அனுபவிக்கின்றனர். கல்வி தகைமைக்கேற்ற தொழில் இன்மை, தொழில் தேர்ச்சிக்கு ஏற்ற ஊதிய உயர்வுகள் வழங்கப்படாமை, காப்புறுதி முதலிய சலுகைகள் இன்மை, மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய விடங்களை இவர்கள் அறிந்திருந்தாலும், அதற்கான தீர்வுகள் இன்று தலைமுறை தலைமுறையாக ஊதியம் செய்கின்றமை கவனிக்கத்தக்கது. 

கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களில் சிலர் தொழில் புரிந்தாலும் அவர்கள் சொற்ப அளவானவர்களே என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.  பெருந்தோட்ட தொழில்துறை எனப்படுவது நிறுவனமயப்பட்டது. கட்டமைப்பு ரீதியான நிர்வாகத்தைக் கொண்டது. எம்மவர்கள்; வெறுமனே தொழிலாளர்களாக மட்டுமன்றி சேவையாளர்களாகவும் இத்தொழில்துறையில் உள்ள வெற்றிடங்களை நிர்ப்ப வேண்டும். ஆரம்பக் காலங்களில் பெருந்தோட்ட சேவையாளர்களாக பெரும்பான்மை இனத்தவர்களே காணப்பட்டனர். இன்றளவும் கூட அவர்களின் ஆதிக்கம் மலையக தோட்டங்களில் காணப்படுகின்றது. 

சாரதி, வெளிக்கள உத்தியோகத்தர், அலுவலக பணியாளர்கள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள், பொறுப்பாளர்கள், குடும்பநல உத்தியோகத்தர்;, ஆரம்ப வைத்திய அதிகாரி (நுஆயு) சிறுவர் நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் இதர சேவைகளுக்கென இன்றும் பெரும்பாலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. படித்த இளைஞர், யுகதிகள் மத்தியில் காணப்படும் புறக்கணிப்பும், பற்றின்மையும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. எனவே தொழில் நிமித்தம் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கின்றனர். 

தொழில் நிமித்தம் தோட்டங்களில் தமது குடியிருப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இவர்கள் பின்னர் தம்மை நிலம் சார்ந்து ஸ்தீரப்படுத்திக் கொள்கின்றனர். அதிகமான காலம் இவர்கள் தமது தொழிலை தொடர்வதற்கு நிர்வாகங்களின் உதவியும் கிடைக்கின்றது. அதேப்போல் தோட்டங்களில் உள்ள வளங்களை இவர்கள் சுரண்டி தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்திச் செய்துக்கொள்கின்றனர். சேவைக்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்படும் விடுதிகளை நிர்வாகிகளின் உதவியுடன் தமக்கு சொந்தாக்கிக் கொள்கின்றனர். 

விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல், வியாபார நடவடிக்கைகள் என்று இவர்கள் தம்மை தோட்டங்களில் இன்றியமையாத சக்திகளாக நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இவ்வாறான காரணிகளால் எம் நிலம் அன்னியமாக்கப்படுவதுடன் இனச்செறிவும் சிதறடிக்கப்படுகின்றது. படித்த எம்மவர்கள் இவ்வாறான சமூக சிக்கல்களை இனம்காண வேண்டும். தோட்டங்கள் எனப்படுவது வெறுமனே தொழில் களமாக அன்றி இனத்தின் இருப்புக்கான நிலமாக பார்க்கப்பட வேண்டும். அனைத்து மட்டத்திலும் எமது இருப்பு உறுதிச்செய்யப்பட வேண்டும். 

பெருந்தோட்ட சேவையாளர்களாக படித்த இளைஞர், யுவதிகள் இணைந்துக்கொள்ள வேண்டும். தோட்டங்களில் உள்ள சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை எம்மவர்களே அனுபவிக்க வேண்டும். கௌரவக்குறைவாக பெருந்தோட்டத்துறையை நோக்குவதும், உதாசீனப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக மலையக தோட்டங்களில் மலிவாகக்கிடைக்கும் நிலம், நீர், பசளைகள், விறகு போன்றவற்றை பயன்படுத்தி பொருளாதார நகர்வுகளை மேற்கொள்ளலாம். கல்வியை மாற்று முயற்சிகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் பிரயோசனமாக கையாளலாம். 

அதேப்போல் பெருந்தோட்ட சேவையாளர்களாக எம்மவர்களே இருக்கும் சந்தர்ப்பத்தில் நிலத்துடன் கூடிய பிணைப்பு ஸ்தீரமாவதுடன் சனச்செறிவும் சிதைவடையாமல் காணப்படும். இதன் மூலம் அரசியல் ரீதியாக முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக மலையக மக்களை அடையாளப்படுத்தலாம். எம்மவர்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயரும் சந்தர்ப்பங்களால் இன விகிதாசாரமும், வரப்பிரசாதங்களும் கேள்விக்கு உள்ளாகின்றமையை நாம் உணர வேண்டும். 

சாதாரண தரம் கூட சித்தியடையாத பெரும்பான்மை இன சேவையாளர்கள் இன்று அனேகர் பெருந்தோட்ட காரியாலயங்களில் கடமை புரிகின்றனர். எம்மக்களின் தேவைகளை உணராமல் நிர்வாகங்களின் விசுவாசிகளாக மக்களை சுரண்டும் பணியை கச்சிதமாக செய்கின்றனர். எனவே படித்த எம்மவர்கள் இவ்வாறான இடங்களில் அமரும் போது அது எம்மக்களுக்கான வரப்பிரசாதமாக அமையும். சிவில் சமூகமும்இ தொழிற்சங்கங்களும் இவ்வாறான விடயங்களை பேசுப்பொருளாக்க வேண்டும். இலங்கையின் இனவாத அரசியலுக்கு ஈடுக்கொடுக்கக்கூடிய தந்திரமான நகர்வுகளை கையாள்வதும் கட்டாயமானதாகும். 

நகர்ப்புறங்களை நாடிச்சென்று உழைத்து மீண்டும் அதே நிலையில் திரும்பி வருவதும் நாடோடிகளாக நகர்ப்புறங்களில் வாடகை வீடுகளில் குடியிருப்பதற்கு சொந்த நிலத்தில்  இருப்பை உறுதிப்படுத்துவது சிறந்தது அல்லவா? எனவே கற்ற மலையக சமூகமாக நாம் முன்செல்ல வேண்டுமாயின் அனைத்து மட்டத்திலும் நிலத்துடன் சார்ந்து எமது இருப்பை ஸ்தீரப்படுத்திக்கொள்ள வேண்டும். நிலமும் மொழியுமே எமது அடிப்படைகள். 

நன்றி - சூரியகாந்தி 26.12.2018

கெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்


இலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக் நெவில், டர்னர், கல்வின், ரிவர்ஸ், லொவி, ஹர்ஷோத், பால்தேயு போன்றவர்கள் வரிசையில் கெப்டன் ஜொவாவோ ரிபைரோவுக்கும் (Captain Joao Ribeiro 1622-1693) முக்கிய இடம் உண்டு. மேற்குறிப்பிட்டவர்களில் ரிபைரோ மிகவும் முதன்மையான, பழமையானவரும் கூட. இலங்கையின் வரலாற்றுப் பாட நூல்களிலும் “வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்” என்கிற பட்டியலில் இடம்பெற்றிருப்பவர். இலங்கையில் இரண்டாம் இராஜசிங்கனின் காலகட்ட போர்க்காலத்தில் போர்த்துக்கேய கப்டனாக இருந்தவர். இராணுவச் சேவையில் நாற்பது ஆண்டுகாலம் பணிபுரிந்த ரிபைரோ இலங்கையில் 1640-1658 வரையான 18 ஆண்டுகாலம் அதாவது 1658இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை இருந்தார்.

தனது இறுதிக் காலத்தில் அவர் தனது நாற்பது ஆண்டுகால அனுபவத்தின் பின்னர் 1685 இல் “இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல்” (Fatalidade Histórica da Ilha de Ceilão) என்கிற தலைப்பில் போர்த்துகீச மொழியில் எழுதினார். 

இந்த நூலை அவர் அன்றைய போர்த்துகல் அரசர் இரண்டாம் டொம் பெற்றோவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  

இலங்கையின் வரலாற்றை கற்பவர்களின் மூல நூல்களின் வரிசையில் உள்ளது இந்த நூல். மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த நூலில் வரைபடங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். கண்டி நகரம், கொழும்பு துறைமுகம், இலங்கையின் முழுமையான வரைபடங்களை வரைந்து அப்புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த ஆண்டு 1505. ஒன்றரை நூற்றாண்டு கால கரையோரப் பகுதிகளை ஆட்சிசெய்து வந்த அவர்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் தமது ஆட்சியைப் பறிகொடுத்தனர். ரிபைரோ தனது 18வது வயதில் இந்தியாவுக்குச் சென்ற போர்த்துகேய படையில் சாதாரண சிப்பாயாக 1640 மார்ச் மாதம் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் செப்ரம்பர் 19ஆம் திகதி தென்னிந்தியாவில் கோவாவில் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் 400 சிப்பாய்களுடன் நீர்கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் நீர்கொழும்பைக் கைப்பற்றுவதற்கான சமர் நடந்துகொண்டிருந்த காலம். அதே ஆண்டு நீர்கொழும்பை ஒல்லாந்தரிடம் இழந்தது போர்த்துக்கேய தரப்பு. அதிலிருந்து அடுத்த 18 ஆண்டுகள் ரிபைரோவின் வாழ்க்கை இலங்கையில் தான் அமைந்தது. தொடர்ச்சியாக பல்வேறு சமர்களில் ஈடுபட்டார் ரிபைரோ. ஒருபுறம் இரண்டாம் ராஜசிங்கனின் படைகளுடனான போர்; மறுபுறம் ஒல்லாந்தருடனான போர். இப்படி பல போர்களில் ரிபைரோ கலந்துகொண்டு பல தடவைகள் படுகாயங்களுக்கு உள்ளானார். சாதாரண சார்ஜன்ட் நிலையிலிருந்து அவர் கெப்டன் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார். அதிலிருந்து அவர் கெப்டன் ரிபைரோ என்று தான் அழைக்கப்பட்டார்.

போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் இலங்கை பறிபோன நிலைமாறுகாலத்தின் காலக்கண்ணாடி என்றும் நேரடி சாட்சியம் என்றும் நாம் ரிபைரோவைக் கொள்ளலாம். எனவே அவர் எழுதிய நூல் முக்கிய ஆதார நூல். ரிபைரோ நாட்டை விட்டு வெளியேறிய சில வருடங்களில் தான் ரொபர்ட் நொக்ஸ் கைது செய்யப்பட்டார். ரொபர்ட் நொக்ஸ் எழுதிய நூலுக்கும் ரிபைரோவின் நூலுக்கும் இடையில் உள்ள பெரும்பாலான ஒற்றுமைகளால் இந்த நூல்களை முக்கிய வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்துவது வழக்கம். போர்த்துகேய, ஒல்லாந்து கால வரலாற்றை ஆராய்பவர்கள் தவறவிடக்கூடாத மூன்று அக்காலத்து நூலாசிரியர்கள் கேப்டர் ரிபைரோ, பிலிப்பு பால்டேயு (Phillipus Baldaeus), ரொபர்ட் நொக்ஸ்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் ரிபைரோவைத் தவிர மற்ற இருவரையும் கொண்டாடுவதைக் காண முடியும். பால்டேயு, ரொபர்ட் நொக்ஸ் ஆகிய இருவரின் நூல்களும் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுவிட்டபோதும் ரிபைரோவின் நூல் இதுவரை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டதில்லை. ரிபைரோவின் பணிக்காலம் அதிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்ததால் வடக்கில் செல்வாக்கு செலுத்திய தமிழ் இராஜ்ஜியங்கள் குறித்த பதிவுகளை அவர் செய்திருக்கிறார். மற்ற இருவரும் அதிகமாக கண்டி இராஜ்ஜியம் குறித்தும் சிங்களவர்கள் குறித்துமே அதிகமாக பதிவு செய்திருப்பது அப்படி சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்படாதற்கு காரணமாக இருக்கலாம்.
ரிபைரோவின் நூல் குறித்து ஆராயத் தொடங்கியபோது கண்டெடுத்த முக்கிய சில விடயங்களை வரலாற்றை ஆய்பவர்களுக்கு வெளிபடுத்த தோணிற்று.

ஆனால் அது ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாக அச்சேறாமலேயே இருந்தது. மூல மொழியான போர்த்துக்கேய மொழியில் வெளிவருவதற்கு முன்னரே 1701இல் இந்த நூல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு (Histoire de l'isle de Ceylan, ecrite par le capitaine Jean Ribeyro) பாரிசில் வெளியானது. 1836இல் தான் முதன் முறையாக போர்த்துக்கேய மொழியில் அது நூலாக வெளிவந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து இலங்கை அரச சேவையில் பணிபுரிந்த ஜோர்ஜ் லீ எம்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிரதி MDCCCXLVII ஆம் ஆண்டு (1847) கொழும்பில் வெளியானது. 1890இல் ரோயல்  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியிடப்பட்ட சஞ்சிகையில் Captain Joao Ribeiro என்கிற கட்டுரையில் அவர் அதில் உள்ள கயமைகளை வெளியிட்டார் டொனால்ட் பெர்குசன். பிரெஞ்சுப் பிரதியானது மூல நூலை திரிபுபடுத்தி நாசப்படுத்தப்பட்ட நூல் என்பதை போட்டு உடைத்தவர் டொனால்ட் பெர்குசன்.

பீரிஸ் (P.E. Pieris) மொழிபெயர்த்த மூல நூலில் இருந்து மொழிபெயர்த்த ஆங்கிலப் பதிப்பு “Ribeiro’s History of Ceilao” 1909 தான் வெளிவந்தது. அதன் பின்னர் 1948 இலும் அது “The Historic Tragedy of the Island of Ceilāo” என்கிற இன்னொரு தலைப்பில் கொழும்பில் மீளவும் பதிப்பிடப்பட்டது. அந்த நூலிலும் மூல நூலின் சிக்கல்கள் போதுமான அளவு அவிழ்க்கப்படாததால் C.R.Boxer இது பற்றி ஆராய்வதற்காக ரிபைரோவின் ஊருக்கு பயணித்தார். இந்த விபரங்களையும் சுவீகரித்துக்கொண்டு  1955 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான  ரோயல்  ஆசிய கழக சஞ்சிகையில் சீ.ஆர்.பொக்சர் (C.R.Boxer) எழுதிய “கெப்டன் ஜாவோ ரிபைரோவும் இலங்கையின் வரலாறும்” (Captain João Ribeiro and his History of Ceylon: 1622-1693) என்கிற விரிவான கட்டுரையும் கட்டுரையும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் வரலாற்றாய்வாளர்கள் பலர் இந்த குழப்பங்களை சில சமயங்களில் அறியாத நிலையில் பிரெஞ்சு மொழி பதிப்பையும், அதன் மொழிபெயர்ப்பான “History of Ceylon presented by captain John Ribeyro to the King of Portugal, in 1685, translated from the Portuguese, by the Abbe Le Grand” நூலைக் கையாண்டு வருவதைக் காண முடிகிறது. தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு என்பது இறுதியாக பீரிஸ் (P.E. Pieris) வெளியிட்ட பிரதி தான். அந்தப் பிரதி கூட பல பதிப்புக்களைக் கடந்துவிட்டது. பீரிஸ் இலங்கையின் முக்கியமாக கவனிக்கக்கூடிய வரலாற்றாசியர். இந்த மொழிபெயர்க்கு முன்னரே அவர் 1920ஆம் ஆண்டே போர்த்துகேயர் காலத்து இலங்கையைப் பற்றிய ஆய்வு நூலை (Ceylon and the Portuguese 1505-1658) வெளியிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தில் சில...
இந்த நூலில் ரிபைரோ எழுதிய பல குறிப்புகள் ஆய்வுகளுக்கு மிகுந்த பயனுள்ளது.

கொழும்பு கோட்டை உருவான கதை, கொழும்பின் உருவாக்கம் பற்றி அறிவதென்றால் ரிபைரோவின் குறிப்புகளை கட்டாயம் அறிதல் அவசியம். கொழும்பு கோட்டையை கட்டுவிக்க அக்காலப்பகுதியில் வேடுவர்களின் உழைப்பும் பெறப்பட்டதாக குறிப்பிடுவதுடன் யாழ்ப்பாணப் பட்டினத்தின் கீழ் செறிவான வனக்காடுகளாக இருந்த வன்னி, திருகோணமலைப் பகுதியையும் அதன் கடற்பகுதிகளையும் வேடுவர்களின் சாம்ராஜ்ஜியமென்கிறார். விலங்குகளின் தோல்களை அணிந்திருந்த அவர்கள் போர்த்துக்கேயர்களின் நிறத்துக்கு சமானமாக காணப்பட்டார்களென்றும், வேட்டையாடப்படும் விலங்குகளை தேனில் துவைத்து உண்பவர்களென்றும், ஒரே இடத்தில் ஆறு மாதத்துக்கு மேல் தங்கியிருப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.  

போர்த்துக்கேயரின் பிடியில் இருந்த யாழ்ப்பாணத்தை மீட்க 1629 ஆம் ஆண்டு அத்தபத்து முதலியார் தலைமையிலான 5000 பேரைக் கொண்ட சிறப்புப்படையணி சமரிட்டு விடுவித்தது. பின்னர் போர்த்துக்கேயர் பத்தாயிரம் படையினருடன் சென்று யாழ்ப்பாணத்தை  மீண்டும் கைப்பற்றி அத்தபத்துவின் தலையை வெட்டி யாழ்ப்பாணத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று காட்சிப்படுத்திய கதையை அறிந்திருப்போம். 13 நாட்களில் ஐயாயிரம் பேரை பலிகொடுத்த அந்தப் சமர் குறித்த ஆரம்பத் தகவல்கள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் போர்த்துகேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த அந்த சமர் அன்றைய “முள்ளிவாய்க்கால் சமர்” என்றே குறிப்பிடவேண்டும். அங்கு நிகழ்ந்த கொடூரகரமான அழிவுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

முதன் முதலாகப் போர்த்துக்கேயர்கள் இலங்கையில் கால் பதித்த பொழுது தென்புலத்தில் இயங்கிய சிங்கள இராச்சியமாகிய கோட்டை இராச்சியத்திற்கு நிகராக வடபுலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும், மாந்தோட்டைச் சிற்றரசும், வன்னிமைகளும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய சிற்றரசுகளும் இயங்கியமையும் பதிவு செய்திருக்கிறார்.

1638-1640 காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயரின் படைகளுக்குப் பொறுப்பாக இருந்த கெப்டன் ஜெனரல் அந்தோனியோ மஸ்கரஞ்ஞஸ் (Dom Antonio Mascarenhas) போர்த்துகேய படையில் உள்ள அத்தனை சிப்பாய்களும் புகைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாகக் அவரது இந்த நூலில் குறிப்பிடுகிறார்.   சின்னம்மை போன்ற ஒரு குறிப்பிட்ட வகை நோய்க்கு நிவாரணமாக புகையிலை இருந்ததாகவும் யுத்தகாலங்களில் புகையிலையின் விலை அதிகரித்ததாகவும் இந்தக் காலப்பகுதியில் இருந்துதான் இலங்கையில் புகையிலைச் செய்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை தொடர்பாக வெளிவந்த பல நூல்களில் இலங்கையையும், இலங்கைக்குள் இருந்த பிரதேசங்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொற்கள் ஒன்றுக்கு ஒன்று வேறானவை. இந்த நூலில் அன்றைய ceylonஐ Ceilao என்று பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பாளர் பின்னர் அதனை ceylon என்றே மாற்றிவிடுகிறார்.
  • ரோமானியர்கள் - Serendivis,
  • அரேபியர்கள்  - Serandib
  • பாரசீகத்தினர் - Serendip
  • லத்தீனில் - Seelan
  • போர்த்துக்கேயர் - Ceilão
  • ஸ்பானியர்கள் - Ceilán
  • பிரெஞ்சில் - Selon
  • டச்சில் - Zeilan, Ceilan, Seylon
  • ஆங்கிலேயர்கள் - Ceylon

என்றெல்லாம் அழைத்தார்கள். இதைவிட வேறு பல சொற்களாலும் அழைத்திருக்கிறார்கள். மேற்படி நூலில் கண்டியை  candia என்றும், சிங்களவர்களை Chingalas என்றும், யாழ்ப்பாணத்தை  Jafanapatao அதுமட்டுமல்ல யாழ்ப்பாணம், திருகோணமலையில் வாழ்ந்த தமிழர்களை Bedas என்று அழைக்கிறார். அன்றைய காலப்பகுதியில் வெளியான நூற்றுகணக்கான வேறு நூல்களில் தமிழர்களை மலபார் இனத்தவர் என்றே குறிப்பிட்டிருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். இதே காலப்பகுதியில் நம் நாட்டவர்களின் வரையறுக்கப்பட்ட மிகச் சில குறிப்புகள் கூட பணயோலைகளிலும், செப்பேடுகளிலும் தான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன. அந்த வகையில் நமது வரலாற்றை அறிய வரலாற்றாசிரியர்கள் எல்லோரும் இத்தகைய நூல்களின் குறிப்புகளில் இருந்து தான் குறிப்புகளை எடுத்து ஆராய வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவர்கள் தரும் ஊர் பெயர்கள் பலவற்றை கட்டுடைத்துத் தான் (crack) அறியவேண்டியிருக்கிறது.

ரிபைரோவின் நூலில் பயன்படுத்தப்பட்டப்பட்டிருக்கும் பதவிகளைக் குறிக்கும் சில அடைமொழிகளை சகல மொழிபெயர்ப்புகளிலும் காணமுடிகிறது. இந்தக் கட்டுரைக்காக சகல மொழிபெயர்ப்பு பிரதிகளையும் கண்டெடுக்கமுடிந்தபோதும் மூல நூலான போர்த்துகேய நூலை பெற முடியவில்லை. அந்தவகையில் இந்த பதவிகளைக் குறிக்கும் அடைமொழி மூல நூலில் இருந்ததா என்று அறியமுடியவில்லை. ஆகவே இந்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகளா என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த அடைமொழிகள் பிற்காலங்களில் எந்தெந்த அர்த்தங்களில் அறியப்பட்டிருக்கின்றன என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
  • Appoohaamy – அப்புஹாமி - ஜெனரல் தர அதிகாரி
  • Dessave  - திசாவ - மாவட்ட அதிகாரி
  • Modiliar – முதலியார் - கேர்னல் தர அதிகாரி
  • Arachy – ஆராச்சி - கெப்டன் தர அதிகாரி
  • Lascarin – லஸ்கறின்- உள்ளூர் சிப்பாய்
  • Topaz – டொபாஸ் - கறுப்பினத்தவர்
  • Adigar – அதிகார் - நீதிபதி
  • Bandigaralla – பண்டிகறல்ல - நீதிமன்ற பொறுப்பாளர்
  • Mareillero – மொறைலேரோ- தீர்ப்பின் நடுவர்
  • Changaar - சங்கார் - மதகுரு
  • Atapata – அதபத்த - மாவட்ட அதிகாரியின் பிரதான காவலதிகாரி
  • Bandanezes - Soldiers from Banda – பண்டாவின் சிப்பாய்கள்


ரிபைரோவை சகலரும் ஒரு வரலாற்றாசிரியராகவே குறிப்பதை ஏராளமான ஆய்வுகளில் காணலாம். இந்தக் கட்டுரைக்கான தேடுதல்களின் போது ரிபைரோவின் பெயரை பல நூல்களிலும் ஆய்வுகளிலும் வெவ்வேறு பெயர்களுடன் இருப்பதைக் காண முடிந்தது. இது ஆய்வாளர்களுக்கு பல குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு Jean Ribeyro, John Ribeyro, João Ribeiro போன்ற குழப்பங்களைக் காணலாம்.

1639இல் திருகோணமலையையும், 1640இல் நீர்கொழும்பு காலியையும், 1655இல் களுத்துறையையும், 1656இல் கொழும்பையும் 1658இல் இறுதியாக மன்னாரையும், யாழ்ப்பாணப் பட்டினத்தையும் போர்த்துக்கேயர்கள் ஒல்லாந்தர்களிடம் இழந்தார்கள். கொழும்பைக் கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தர் நடத்திய இறுதிச்சண்டையில் ரிபைரோ கிரேனேட் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் எஞ்சிய படையினருடன் பின்வாங்கி கடல் மார்க்கமாக காயப்பட்ட படையினருடன் தென்னிந்திய கோவாவில் நிலைகொண்டிருந்த முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயங்கள் ஆறியதும் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். போர்த்துகேயரிடம் இறுதியாக எஞ்சியிருந்த யாழ்ப்பாணத்தைத் தக்கவைப்பதற்காக நடந்த இறுதிச் சண்டையில் மோசமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன போர்த்துகேய படையினர். போர்த்துகேய படைகள் கைதுக்குள்ளான போது காயப்பட்டிருந்த ரிபைரோவும் கைதியானார். அங்கிருந்து அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகம் இயங்கிவந்த பட்டவியாவுக்கு (இன்றைய இந்தோனேசியாவிலுள்ள ஜகார்த்தா) கைதியாக அனுப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர் ஒல்லாந்துக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு 1660இல் சொந்த நாடான போர்த்துக்கலை அடைந்தார்.

போர்த்துக்கலின் அண்டை நாடான ஸ்பெயினுடனான தொடர் போரில் பல சமர்களில் தலைமை தாங்கினார். ரிபைரோவின் நீண்ட கால இராணுவச் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு போர்த்துகேய அரசு பிரபுப் பட்டம் வழங்கியது. தனது இறுதிக் காலத்தில் மிகுந்த சமயப் பற்றுள்ளவராகளாக விளங்கிய ரிபைரோ 1693ம் ஆண்டு காலம் ஆனார். குறிப்பட்ட காலத்து இலங்கையின் வரலாற்றை மீட்க நமக்கெல்லாம் ரிபைரோ தந்துவிட்டு போன தகவல்கள் இன்றும் அவரின் பெயரைச் சொல்லி நிற்கின்றன.

கட்டுரைக்காக பயன்பட்ட நூல்கள்:
  • An Historical, Political, and Statistical Account of Ceylon and Its Dependencies, Volume 2, Charles Pridham, 1849 – London
  • Ceylon and the Cingalese their history, government and religion, the antiquities, institutions, produce, revenue and capabilities of the Island - vol .1 - Sir Henry, Charles
  • Ribeiro’s History of Ceilao - By P.E. Pieris - The Colombo Apothecaries Co. Ltd - 1909
  • The Historic Tragedy of the Island of Ceilāo - By P.E. Pieris - Colombo 1948
  • Ceylon and the Portuguese, 1505 - P. E Pieris, Tellippalai – 1920
  • CONCISE MAHAVAMSA, HISTORY OF BUDDHISM IN SRI LANKA, FIRST EDITION, Ruwan Rajapakse, P.E. – 2003
  • Captain João Ribeiro and His History of Ceylon, 1622-1693, C. R. Boxer The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland.
  • Jayawickrama, S.. (1998). An historical relation of the Island Ceylon : Knox and the 'writing that conquers'. (Thesis). by Jayawickrama, Sarojini - University of Hong Kong, Pokfulam, Hong Kong SAR. – 1998
  • "Robert  Knox in the Kandyan kingdom" - 1660-1679" By H. A. I. Goonetileke - A Bio-Bibliographical CommentaryTHE LANKA JOURNAL HUMANITIES VOLUME I – 1975
  • CAPTAIN JOAO RIBEIRO : HIS WORKS ON CEYLON, AND THE FRENCH TRANSLATION THERE OF BY THE, ABBE LE GRAND. By DONALD FERGUSON, Esq. (Read July 26, 1888.)
  • Caste in modern Ceylon - The Sinhalese system in transition - Rutgers University Press - By Bryce Ryan – 1953
  • CEYLON AT THE CENSUS OF 1911, BEING THE REVIEW OF THE RESULTS OF THE CENSUS OF 1911 By E.B.Denham – 1912
  • 10ஆம் ஆண்டு - வரலாற்றுப் பாடப்புத்தகம் – இலங்கைக் கல்வித் திணைக்களம்.
  • KANDY FIGHTS THE PORTUGUESE - (A MILITARY IIlSTORY OF KANDYAN RESISTANCE) By C. GASTON PERERA - Vijitha Yapa Publications - Sri lanka – 2007
  • Ceylon and the Portuguese 1505-1658 – By P, E. PIERIS – American Ceylon mission Press – 1920
  • Ceylon the Portuguese Era – Vol I, II – By Paul E.Pieris – Tisara Prakasakayo Ltd – 1913
  • THE PRINCE VIJAYA PALA OF CEYLON 1634 - 1654 - P.E.Pieris - Colombo – 1928
  • OUTLINES OF CEYLON HISTORY By DONALD OBEYESEKERE - The "Times of Ceylon" Colombo – 1911
  • CORRESPONDENCE BETWEEN RAJA SINHA II. AND THE DUTCH By Donald Ferguson - Journal of the Ceylon Branch of the Roayal Asiatic Society - 1903 – 1905


மொனராகலை தமிழர்களின் இருப்பும் எதிர்காலமும் - அருள்கார்க்கி

ஊவா  மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்புகள் என்பது அருகிவரும் நிதர்சனமாகும். நுவரெலியா மாவட்டத்தை மாத்திரம் குறிப்பிட்டு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இருப்பை மட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரதிநிதித்துவ அரசியலுக்கு சாத்தியமாகாத தமிழர் நிலங்கள் எம் கையிலிருந்து பறிபோகின்றன. ஊவாவின் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளும் மொனராகலை மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்களும் தற்சமயம் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட அரச குடியேற்றங்கள், தொழில் சார்ந்த இடப்பெயர்வுகள் என்பன மூலம் மொனராகலை மாவட்ட தமிழர்களின் இனப்பரம்பல் சிதைக்கப்படுகின்றது. 

இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தின் சனத்தொகை மதிப்பீட்டு ஆய்வுகளின் படி (2012) மொனராகலை மாவட்ட இந்திய வம்சாவளி தமிழர்களின் சனத்தொகை 4590 ஆக அமைந்துள்ளது. இது  மொத்த  இந்திய வம்சாவளியினரில் 0.5% சதவீதமாகும். எனினும் இதற்கு இடைப்பட்ட கடந்த ஏழு (7) வருடங்களில் இத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சிப்போக்கையே கொண்டிருக்கும் என்பது நிச்சயமானதாகும். 

மொனராகலை மாவட்டத்தின் பெரும்பாலான பெருந்தோட்டங்கள் இறப்பர் நிலங்களாகும். இங்கு பணிப்புரியும் எம்மவர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக கனதியான ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இறப்பர் தொழிலாளர்களின் வேதனம், மனிதஉரிமை, தொழில், கல்வி, சுகாதாரம், தொழிற்சங்க அங்கத்துவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு மலையக அமைப்பும் தேசிய ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தப்படவில்லை. காலங்காலமாக இறப்பர் தொழிலாளர்களாகவும், கரும்பு சேனைகளிலும் மொனராகலை தமிழர்களின் வாழ்வு சிறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. 

எதுவித உரிமைகளும் இன்றி அரசியல் அனாதைகளாக வாழும் இவர்களின் வாக்குகள் மட்டும் பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இதன் பிரதிபலனாக இவர்களுக்கான விஷேட ஒதுக்கீடுகள் என்று எவையும் வழங்கப்படவில்லை. வீதிக்கட்டமைப்பு, நகர அபிவிருத்தி, பாரியளவான தொழிற்சாலை கட்டமைப்புகள் என்று இம்மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தொடர்பில்லாத அபிவிருத்திகளே இங்கு இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை. 

பெல்வத்தை சீனித்தொழிற்சாலைக்கு தேவையான கரும்புத்தோட்டங்களில் அன்றாட கூலிகளுக்காக பணிபுரியும் இவர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் இல்லை. அதேப்போல் தொழிற்சாலையில் பல்வேறு விபத்துகள் இடம்பெற்று உடல் உறுப்புகளை இழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் அதற்கான காப்புறுதி எவையும் கிடைக்கப்பெறவில்லை. கரும்பு சேனைகளில் தொழில்செய்யும் போதும் பல்வேறு விலங்குகளால் ஆபத்தை எதிர்நோக்கிய சம்பவங்களும் ஏராளம் உண்டு. 

இம்மாவட்ட மக்கள்; 1978, 1983 ஜீலை கலவரங்களின்போது ஸ்தீரமான பொருளாதாரத்துடன் இருந்ததாக அறியமுடிகிறது. எனினும் இவர்களின் சொத்துக்கள் கலவரத்தின் போது இனவாதிகளால் சூறையாடப்பட்டன. குறிப்பாக கால்நடைகள், வீடுகள், விளைநிலங்கள் என்பன திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் இவர்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். 

உறுதியான சிவில் கட்டமைப்போ அரசியல் பின்;புலமோ இன்றி உதிரிகளாக சிதறி தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். இதன்காரணமாக கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பொதுவசதிகள் இன்றளவும் தன்னிறைவு அடையவில்லை. அரசியல் பிரதிநிதிகள் இன்றி பலமான குரலாக இவர்களால் தமது இருப்பு குறித்து உரத்து ஒலிக்க முடிவதில்லை. பதுளை மாவட்டத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மொனராகலைக்கு பதுளை அரசியல் கட்சிகளாலும், தொழிற்சங்கங்களாலும் கொடுக்க முடியாமைக்;கு சுயநல அரசியலே பிரதான காரணமாகும். 

மாவட்ட ரீதியில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தியவம்சாவளித் தமிழர்கள் பரவி வாழ்ந்தாழும் சில குறிப்பிட்டப் பிரதேசங்களில் அடர்த்தியான சனச்செறிவைக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடியும். குறிப்பாக பாராவில, கும்புக்கனை, மரகலை, புதுக்காடு, மீனாச்சிவத்த, சின்ன பெரியாறு, சின்ன பாலாறு (முப்பனவெளி), நர்மன்டி (புத்தள), சிரிகல மேற்பிரிவு, சிரிகல கீழ்பிரிவு, வெலியாய, குமாரவத்த, குமாரதொல, அலியாவத்த, ஏழேக்கர், தலாவ, மதுருகெட்டிய, பொல்கஸ்யாய (தேங்காய்மலை), வெள்ளச்சிகடை, வைகும்பர, கமேவெல, மாகொடயாய, கந்தசேன, தென்னகும்புர, தேவத்துர, நாமண்டிய, கதிர்காமம், நூறேக்கர், உலந்தாவ, பன்சலவத்த, பிபிலை, படல்கும்புற, சிங்காரவத்தை மற்றும் நக்கல ஆகிய பிரதேசங்களில் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் ஓரளவு அடர்த்தியாக வாழ்கின்றனர். இப்பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும்போது குறைந்தது 15000 மக்கள் தொகையாவது மொனராகலையை நிரந்தர வதிவிடமாக கொண்டிருக்க வேண்டும். 

வாக்காளர்களாக தம்மைப்பதிவுச் செய்துக்கொண்டோர் மாத்திரமே அரச புள்ளிவிபரத் தரவுகளில் வரமுடியும். இனப்பிரச்சினை  காரணமாக இடம்பெயர்ந்தோர், தமது அடையாளத்தை மாற்றிக்கொண்டோர், பெரும்பான்மை இனத்தை தழுவுதல்  போன்றவை சனத்தொகை இழப்பு ஏற்படுவதற்கு ஏதுவான காரணங்களாக அமைந்துள்ளன. 

மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி இனத்தின் இருப்பை ஸ்தீரமாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியம். குறிப்பாக அண்மையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டினூடாக கும்புக்கனை தோட்டத்திற்கான வீடமைப்பு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலம் இம்மாவட்ட மக்களின் வீட்டுரிமைகளையும் காணியுரிமைகளையும் நிறுவனமயப்படுத்தி முன்கொண்டுச் செல்லலாம். அதேப்போல் அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒன்று சேர்ப்பதன் மூலம் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கலாம். 

அரசியல் தொழிற்சங்க கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு சிவில் ரீதியாக இனத்தை ஐக்கிப்படுத்துவதற்கு ஏற்ற சமூக வேலைத்திட்டங்கள் அவசியம். கல்வி, சுகாதாரம், வாக்காளர் நடத்தை என்பவற்றை தீர்மானிப்பதில் விகிதாசார ஒதுக்கீடுகளை பேரம்பேசி பெற்றுக்கொடுப்பதற்கான சமயோகித அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம். 

அதிகமான இழப்புகளையும், அடக்குமுறையையும், சந்தித்த மொனராகலை மாவட்டத்தமிழர்களின் எதிர்காலத்தை இனரீதியாக அபிவிருத்திச் செய்வதற்கு கற்ற சமூகம் முன்னிற்க வேண்டும். உதாரணமாக மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விசார் சமூகம் ஒன்றிணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதற்கு மாறாக மொனராகலை மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட கற்ற சமூகத்தினர் அண்மைக்காலமாக வெளியிடங்களுக்கு சொந்த முன்னேற்றம் கருதி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இது சமூகத்துக்கு ஆற்றும் பிரதியுபகாரம் அல்ல. அங்கு தோன்றியோரே அந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பும், வெளித்தொடர்புகளும், தீர்க்கமான சமுதாய அறிவும் அவசியம். காரணம் இவர்களும்; நுவரெலியா கட்சிகளின் சந்தாதாரர்கள். 

நன்றி - சூரியகாந்தி

மத்திய- ஊவா மாகாணங்களை ஐக்கிய நிர்வாக அலகுகளாக மாற்ற முடியுமா? - அருள் கார்க்கி

மலையக மக்கள் என்ற தேசிய இனமானது இலங்கையில் மிக முக்கிய வரலாற்று பதிவுகளை கடந்து வந்திருக்கின்றது. அண்மைய ஆய்வுகளின்படி மலையக மக்களின் சனத்தொகையானது 10 இலட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த புள்ளிவிபரத்தின் படி இந்த 10 இலட்சம் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலேயே வாழ்கின்றனர். 

மூலம் : இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் 2012.
இலங்கை புள்ளிவிபர மதிப்பீடு திணைக்களத்தின் இத்தரவுகளின் படி மொத்த இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் 75.46% சதவீதம் நிரந்தரமாக வாழ்கின்றனர். எனவே இவ்விரு மாகாணங்களையும் மையப்படுத்தி மலையக தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார,பொருளாதார, பண்பாட்டு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விகிதாசாரத்தின் அடிப்படையில் பாதாளத்தை நோக்கிச் செல்லும் ஒரு இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நிலமும் மொழியுமே ஆதாரங்கள். அந்த ஆதாரங்களைப் பற்றி இனத்தை ஸ்தீரப்படுத்துவதில் காணப்படும் விரிசல்களை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, ஊவாவும் மத்தியும் நிர்வாக ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் பிரதிநிதித்துவ அரசியலை தக்கவைப்பதோடு, நிர்வாக ஸ்தீர தன்மையையும் இறுக்கமாக்கலாம். ஈழத்தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் இணைந்த வடக்கு கிழக்கு கோட்பாடு செல்வாக்குச் செலுத்துவதையும் நிலம் சார்ந்து ஒதுக்கீடுகளைக் கோருவதையும் இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஆனால், இங்கு நாம் பிரஸ்தாபிப்பது அப்படியல்ல. இதை தனிநாட்டு கோரிக்கையோடு எவரும் ஒப்பிட்டு பார்த்து விடல் கூடாது. மலையக மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை என்ற அடிப்படையில் அதை ஐக்கியப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வாக முறை மூலம் தீர்க்க முடியுமா என்ற ஒரு தேடலின் விளைவாகவே இக்கட்டுரை வரையப்படுகிறது. 

இவ்விரு மாகாணங்களுக்கும் புறம்பாக மலையக மக்கள் கொழும்பு (3.2%), களுத்துறை (2.8%), இரத்தினபுரி (7.5%) கேகாலை (4.9%) என்றவாறான இனப்பரம்பலைக் கொண்டுள்ளனர். 

அதேபோல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் சிறியளவில் பரந்து வாழ்கின்றனர். இவ்வனைவரையும் ஒரு புள்ளியில் குவிமையம் கொள்ளச் செய்வதற்கு உறுதியான கட்டமைப்பு ஒன்று ஊவா மற்றும் மத்திய மாகாணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். மேலோட்டமான தொடர்புகளும் சுயநல அரசியல் கலாசாரமும் மக்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாக, பிழையான அரசியல் அணுகுமுறைகளால் பிரதேசவாதமும் இளைய தலைமுறையினரிடம் விதைக்கப்பட்டிருக்கின்றது. வாக்கு அரசியலிலும் சுரண்டல் போக்குடைய தொழிற்சங்க கட்டமைப்புகளாலும் மக்களை ஐக்கியப்படுத்த முடியாது என்பது மலையக அரசியல் வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். இன்று நிலைமை இளைஞர்களை இலக்காக வைத்து நுண்ணரசியலாகவும் சலுகைகளை வழங்குவதாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றது. 

ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் எவ்வாறான தொடர்புகளை சமகாலத்தில் பேணுகின்றன என்ற கருத்தியல் விமர்சன ரீதியாக நோக்கப்பட வேண்டியது. அதே போன்று காத்திரமான ஒருமைப்பாட்டுக்கு இடையூறான காரணிகளும் விவாதிக்கப்பட வேண்டும். 

அரசியல் தொழிற்சங்க உறவுகள் 
முக்கியமாக அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்த இரு மாகாணங்களும் எவ்வாறான பரிமாற்றங்களை செய்கின்றன என்பது குறிப்பிட்டுக்கூற வேண்டியது அவசியம். உதாரணமாக மலையக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் மத்திய மாகாணத்தையே தளமாகக் கொண்டுள்ளன. வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு பேர் போன மலையக அரசியல் வரலாற்றில் ஊவா மாகாணம் வாக்காளர்களையும் சந்தாதாரர்களையும் மட்டுமே வழங்கி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர் தெரிவு பதுளை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் இனப்பரம்பல் குறைந்த மொனராகலை (0.5%) மாவட்டம் அநாதையாகவே உள்ளது. 

ஊவா மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கட்சிகள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டும் பலவீனப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. குறிப்பாக மத்திய மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட கட்சிகள் மற்றும் நபர்களால் ஊவா கட்சிகள் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் மத்திய மாகாண தொழிற் சங்கங்களுக்கும் ஊவா மாகாண சந்தாதாரர்களும் கணிசமாக பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். இவ்வாறு ஆட்சேர்ப்பில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்ட ஊவாவுக்கு அண்மைக்காலமாகவே அபிவிருத்திப்பணிகள் விரிவடைந்திருக்கின்றன. 

தேர்தல் காலங்களில் ஊவாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேட்பாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இது எதேச்சதிகார அரசியலின் மற்றொரு முகம். ஊவாவில் அரசியல் ஆளுமைகளை கட்டியெழுப்ப மலையக கட்சிகள் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்பதும் ஊவாவில் தோன்றிய அரசியல் தலைவர்கள் நாயக பக்தி, சுயநலபோக்கு காரணமாக கட்சிகளின் தலைமைகளிடம் ஊவா மக்களுக்காக போராடவில்லை என்பதும் வெளிப்படை.

நிர்வாக உறவு

அரச நிர்வாக கட்டமைப்பில் ஊவாவும் மத்திய மாகாணமும் இரு வேறுபட்ட நிர்வாக அலகுகள். ஐந்து (05) மாவட்டங்களையும் பொதுவாக உள்ளடக்கி இப்பெரு நிலப்பரப்புக்கு இதுவரை எந்தவொரு தேசிய வேலைத்திட்டமும் பரிந்துரைக்கப்படவில்லை. இதன் பிரதான காரணம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திப்பணிகள் ஆகும். நுவரெலியா மாவட்ட தமிழர்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகள் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்குக் கிடைப்பதில்லை. 

தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படும் மலையக தேசியம் கருத்து ரீதியாக மட்டுமே உள்ளமையும் நிலங்களை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் இதற்குக் காரணிகள். அண்மையில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டபோது அவை பெரும்பாலும் மத்திய மாகாணத்தை தழுவியே இருந்தமை கவனிக்கத்தக்கது. பதுளை மற்றும் மொனராகலைக்கான நிர்வாக இலகுப்படுத்தல்கள் சார்ந்த முன்மொழிவுகள் குறைவாகவே சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன. 

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது போன்று பதுளை மாவட்டத்திற்கும் நிர்வாக விரிவுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லைப் பிரதேச செயலாளர் பிரிவு சுமார் 50,000 சனத்தொகையை கொண்டது. இது போன்ற பாரிய சனத்தொகையை ஒரு பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கும் போது ஏற்படும் அசாத்திய தன்மை பாரதூரமானது. எனவே இவை தொடர்பான தீர்வுக்கு கூட்டுமுயற்சிகள் அவசியம். 

கல்வி இலக்கியம் தொழில் உறவுகள் 
ஊவா மாணவர்கள் பாடசாலைக் கல்விக்காகவும் உயர்கல்விக்காகவும் மத்திய மாகாணத்தை தெரிவு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து ஓய்ந்திருக்கின்றது. காரணம் மத்திய மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் பாடசாலைகள் கல்வியில் உயர்நிலையை அடைந்திருப்பதும் ஊவா தமிழ்க்கல்வி பின்னடைந்திருப்பதுமே ஆகும். இதற்கு அரசியல் சுயநலமும் அசமந்தப்போக்குமே அடிப்படைகள். ஊவாவையும் மத்தியையும் ஒன்றிணைத்து கல்வி அபிவிருத்திகளை வகுக்க கட்டமைப்பு ஒன்று இல்லாததே இங்குள்ள இடைவெளியாகும். 

குறிப்பாக இரு மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை,பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழக கண்டி பிராந்திய நிலையம் மற்றும் அட்டன் கற்கை நிலையம், நுவரெலியா தொழிநுட்ப கல்லூரி போன்ற குறிப்பிடத்தக்க உயர்கல்வி / தொழிற்கல்வி நிறுவனங்களின் வகிபாகத்தை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டங்கள் அவசியம். அதனை இணைந்த ஊவா மத்தியை தளமாகக் கொண்டு முன்னகர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது. நிர்வாக வரையறைகளுக்கு அப்பாற்பட்டு விஷேட வேலைத்திட்டங்கள் மூலம் அரச அனுசரணையில் இதனைச் சாத்தியமாக்குவதே முக்கியமானது. இதற்கு மாகாண சபைகளையும் உள்ளூராட்சி சபைகளையும் முதற்கட்டமாக ஒருங்கிணைக்கலாம். அதே போன்று விகிதாசார ஒதுக்கீடுகளையும் முன்வைத்து கொள்கை ரீதியாக கூட்டமைப்புகளையும் உருவாக்குதல் சிறந்தது. 

மேலும் இலக்கிய பண்பாட்டு ரீதியாகவும் இரு மாகாணங்களையும் உள்ளடக்கி வேலைத்திட்டங்களை சாத்தியமாக்குவதும் இனத்தின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். இவ்வாறான நகர்வுகள் மூலம் வெளிமாவட்ட மலையக மக்களும் நம்பிக்கையுடன் தமது பிரதேசத்தில் ஸ்தீரமாவதற்கு வாய்ப்பு ஏற்படும். 

கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த இளைஞர்கள் சிவில் அமைப்புகளாக நிறுவனமயப்படுத்தப்பட்டு விவாதிக்க வேண்டியது இதன் சாராம்சமாகும். மேலோட்டமான பார்வைகள், அரசியல் தொடர்புகள் மட்டுமே மலையக தேசியத்தை கட்டியெழுப்பி விடாது. அதற்காக அனைத்து துறைகளிலும் முயற்சிப்பதே மலையக தேசியத்தை வலுப்படுத்தும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக ஒருங்கிணைப்புகள் ஏற்படுத்தப்படுவது அவசியம். அது இவ்விரு மாகாணங்களையும் தழுவி அமைவது பலம்மிக்கதாகவும் சமூக அபிவிருத்தியில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இவ் யோசனை குறித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு புத்தி ஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

பிரச்சினையை தீர்க்காத அரசியல் அணுகுமுறை - அருள்கார்க்கி


முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பில் மக்களுக்கான இடம் உழைப்பாளிகளாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. உழைக்கும் இனத்தினால் கிடைக்கும் அனுகூலங்களை முதலாளிகள அனுபவிப்பதோடு உழைக்கும் வர்க்கத்தை காலகாலமாக தக்கவைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளை உறுதியாக வடிவமைத்துக்கொள்வர். காரணம் தொழில் உலகின் இயக்கத்திற்கும் முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் மனித உழைப்புத் தேவை. அவர்களின் அன்றாட தேவைகளை முதலாளிகள் பொறுப்பு எடுத்துக்கொள்வதால் மக்கள் அவர்களில் தங்கி வாழ்வதற்கு இலகுவாக இருக்கின்றது. இலங்கைக்கு சர்வதேச அடையாளம் கொடுக்கும் மலையக பெருந்தோட்டச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிலிருந்து தொழிலுக்காக மட்டும் எம்மவர்கள் இடம்பெயரவில்லை. உணவு உடை பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்களுக்கு ஒரு நிறுவன கட்டமைப்புத் தேவைப்பட்டது. அதுவே மலையக பெருந்தோட்டங்கள். 

அன்று எம்மவர்களுக்கான இருப்பிடமாக லயன்களும் பிரதான உணவுப்பொருளாக கோதுமையும் வழங்கப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக ஊழியமும் இதர தேவைகளும் தோட்ட நிர்வாகத்தினராலேயே வழங்கப்பட்டது. குறிப்பாக போர்வைக் கம்பளிக்கூட தோட்ட நிர்வாகமே வழங்கி வைத்தது. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் தமது தேவைகளை தாமே பூர்த்திச் செய்துக்கொள்ளும் வாய்ப்பை கம்பனிகளில் எம்மக்களுக்கு வழங்கவில்லை. அனைத்து தேவைகளுக்கும் அவர்களையே சார்ந்து சிறைப்பட்டிருக்கும் நிலையில் மக்களை வைத்திருந்தனர். 

இன்றைய நிலைமை என்னவென்றால் தொழிற்சங்க அரசியல் கட்டமைப்புகளும் பெருந்தோட்ட கம்பனிகளும் மலையக மக்களை தம்மில் தங்கியிருப்பதற்கான அனைத்து சட்டரீதியான அனுமதிகளையும் கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு தமிழர்களின் நிலையையும்  இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அண்மையில் மத்திய வங்கியின் பொருளாதாரப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வறுமை நிலை உயர்வாகக் காணப்படுகின்றன. 

மாகாண அடிப்படையில் எடுத்து நோக்கும் இடத்து வடமாகாணத்தில் 7.7% சதவீதமாகவும் கிழக்கில் 7.3% சதவீதமாகவும் வறுமை தொடர்கின்றது. மலையக மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய மாகாணத்தில் 5.4ம% வீதமாகவும் ஊவா மாகாணத்தில் 6.5% வீதமாகவும் சப்ரகமுவ மாகாணத்தில் 6.7% வீதமாகவும் உயர்ந்துக் காணப்படுகின்றது. மேல் (1.7%) தென் (3.1%) மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இது மிக உயர்வான வறுமை நிலையாகும். 
இலங்கையைப் பொருத்தவரையில் பெருந்தோட்ட கைத்தொழிலே மிகப் பாரிய தொழில் துறையாகவும் தொழிலாளர் படையைக் கொண்டதுமாகும். பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கூடாக இத்தொழிற்துறை அபிவிருத்திச் செய்யப்படுகின்றது. பிரதான ஏற்றுமதி உற்பத்தியாக தேயிலை காணப்படுகி;றது. எனினும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேசிய பாராபட்சம் காட்டப்படுவது மேற்குறித்த புள்ளிவிபரங்களில் வெளிப்படையாக புரிந்துக்கொள்ள முடிகிறது. 

அடிப்படைத் தேவைகளுக்காக தோட்ட கம்பனிகளும் பொதுத்தேவைகளுக்காக தொழிற்சங்க அரசியல் முதலாளிகளிடமும் இருபத்தோறாம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் கையேந்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்ட சிறைப்படுத்தல் நுட்பமாகும். நேரடியாக அரச நன்மைகளை எம்மவர்கள் அனுபவிக்க முடியாமல் அதனை தொழிற்சங்க அரசியல் முகவர்களுக்கு ஊடாக வழங்கி வைப்பதன் மூலம் முதலாளித்துவ கட்டமைப்பை இறுக்கமாக்கும் ஏற்பாடுகள் அன்றாடம் இடம்பெறுகின்றன. 

தமது தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நம்பி பாமரன் முதல் பட்டதாரி வரை வரிசையில் காத்திருக்கின்றார். அவ்வாறான நிர்ப்பந்தத்தை முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. பெருந்தோட்ட மக்களின் ஊதிய பிரச்சினை இதன் தீவிரத்தை புரிந்துக்கொள்ள சரியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. எவ்வாறு உழைக்கும் வர்க்கமும் இளைஞர்களும் கையாளப்பட்டார்கள் என்பதும் போராட்டங்கள் விலைப்பேசி வாங்கப்பட்டன என்பதும் இங்கு கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியது. 

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை நேற்று இன்று உருவானது அல்ல. ஒரே பிரச்சினையை காலங்காலமாக அரசியல்வாதிகள் தீர்த்து வைத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு பிரச்சினைகளின் ஆயுட்காலமும் அமைந்திருப்பது அவர்களுக்கு மிக வாய்ப்பான ஒன்றே. மக்களும் அதற்கு இசைவாக்கமடைந்து வருவதையும் இங்கு அடையாளப்படுத்த வேண்டும். உதாரணமாக தோட்டப்பகுதிகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரே பாதையை மீண்டும் மீண்டும் செப்பனிடும் அரசியல் நுட்பத்தை நாம் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். நிரந்தரமான முடிவை மக்களுக்கு பெற்றுத்தந்து விட்டால் அரசியல்வாதிகளின் தேவை அற்றுப்போய்விடும் என்பதால் குறுகிய கால சலுகைகளும் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாத நுட்பமும் அவர்களுக்கு சாதகமான தன்மையை தோற்றுவிக்கின்றன. மாற்று அரசியல் என்று முன்வருவோர் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக சுயநலமாக சில தீர்மானங்களை மேற்கொள்வதும் தம்மை மீட்பர்களாக காட்டிக்கொள்வதும் மலையகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. சாதாரண மக்கள் மட்டுமின்றி மலையக பட்டதாரிகளும் இலகுவில் ஏமாற்றப்படுகின்றமை விசித்திரமானது. 

இம்முறை சம்பளப் பிரச்சினையை சமூக மயப்படுத்துவதில் சிவில் சமூகமும் இளைஞர்களும் அதிகளவில் பங்களிப்புச் செய்திருந்தனர். எனினும் பிரச்சினையை அணுகுவதிலும் அதனை அடுத்த தளத்திற்கு நிலைமாற்றுவதும் சற்று சவாலான விடயமாகவே இருந்தது. சில தனிநபர்களும் குழுக்களும் தாம் யாருக்கு எதிராக போராடுகின்றோம் என்ற புரிதல் இன்றி வெறுமனே கூவினர் என்பதே உண்மை. 

பிரச்சினையின் வேரறியாமல் அதனை முழுமையாகக் களைவது சாத்தியம் இல்லை. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடுவதைக் காட்டிலும் சரியான தெளிவுடனும் அறிவார்ந்து அணுகுவது அவசியம். அரசியல்வாதிகளை கொண்டாடுவதும் சில சமயங்களில் திட்டித்தீர்ப்பதும் மறுபடியும் கொண்டாடுவதும் உழைக்கும் மக்களின் குணம். எனவே படித்தவனும் பாமரனும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அதனையே அறிவார்ந்த நுட்பம் எனக்கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கொடும்பாவிகள் எறியூட்டப்பட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆளுயர கொழுந்து மாலைகள் காத்திருப்பது காலக்கொடுமை. 

09.01.2019 சூரியகாந்தியில் பிரசுரமானது. 

மீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்

இலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது 1883ஆம் ஆண்டு நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தான். அது போல இலங்கையின் முதலாவது இனக்கலவரமாகக் கொள்ளப்படுவது 1915 கண்டிக் கலவரத்தைத் தான். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது இனக்கலவரமாகக் அறியப்படுவது 1939இல் நாவலப்பிட்டியில் தொடங்கியக் கலவரத்தைத் தான்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி என்பது தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை விட பழமையானது என்று நாம் கருதமுடியும். அதன் நீட்சியை தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இடைக்காலத்தில் தணிக்கச் செய்திருந்தது. அப்போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு இன அழிப்பை நடத்தி முடிக்கப்பட்டது. ஆக அது தணிக்க வைக்கப்பட்டதன் பின் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தூசு தட்டி வெளியில் கிளப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக கோலோச்சிய தமிழர் – சிங்கள பிரச்சினை என்பது இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைதான். ஆக அதனை இனப் பிரச்சினையாகத் தான் வரையறுத்தோம். பௌத்த – இந்து பிரச்சினையாக தலைதூக்கவில்லை. மேலும் சிங்கள – தமிழ் இனங்களில் சிங்கள கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். தமிழ் கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். பௌத்த – இந்து முறுகல் என்பது பெரிதாக பேசுமளவுக்கு மேலெழுந்ததில்லை. பௌத்தர்கள் இந்து மதத்தை வழிபடும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். பௌத்த விகாரைகள் இந்து மதக் கடவுள்களை வணங்க தனியான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் சமூகத்துடனான சிங்கள பௌத்தர்களின் சமர் வெறுமனே இனத்துவ சண்டை அல்ல. இனத்தால் முஸ்லிம்களாகவும், மதத்தால் இஸ்லாமியர்களாகவும் இருக்கும் அச் சமூகத்துடனான முறுகல் என்பது இரண்டு வழியிலும் மோதலுக்கு உள்ளாபவை. முஸ்லிம்கள் இன ரீதியிலும் மத ரீதியிலும் சிங்கள பௌத்தர்களின் எதிர் தரப்பாகி விடுகிறார்கள். அதாவது முஸ்லிம்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சினை.

இலங்கையின் கலவரங்களை பட்டியலிடும்போது நாம் மறந்துவிட்ட ஒரு கலவரம் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது அது 1870 இல் மருதானையில் தொடங்கியது. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் அது நிகழ்ந்தது. இந்தக் கலவரத்தையே இலங்கையின் முதலாவது கலவரமாகக் கொள்பவர்களும் உள்ளார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் இது இடம்பெறாவிட்டாலும் கொழும்பு, பாணந்துறை பகுதிகளில் இது தாக்குதல்களையும் பதட்டத்தத்தையும் சில காலம் தக்கவைத்திருந்திருக்கிறது.

மீனாட்சியின் காதல்
சிங்கள கத்தோலிக்க இளைஞருக்கும் மீனாட்சி எனப்படும் முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்த பிரச்சினையின் மையம்.

14 வயதுடைய மீனாட்சியின் குடும்பம் முஸ்லிம் மதத்துக்கு மாறிய குடும்பம். மீனாட்சி ஒரு விதவைத் தாய். மொரட்டுவை கராவ சமூகத்தைச் சேர்ந்த  24 வயதுடைய செல்லஞ்சி அப்பு எனும் கத்தோலிக்க இளைஞன் மீனாட்சியின் வீட்டுக்கு வீட்டு தச்சுத் தொழிலுக்காக வந்திருந்தார்.  செல்லஞ்சி அப்பு மீனாட்சியுடன் காதல்கொண்டு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மீனாட்சியின் தாயார் தனது மகளை மீட்பதற்கு முஸ்லிம் சமூக பெரியவர்களை அணுகியிருக்கிறார். மீனாட்சியை மீட்டெடுத்து வருவதற்காக அவர்கள் தங்கியிருந்த மொரட்டுவ பிரதேசத்துக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கம்பு பொல்லுகளுடன் சென்றது.

அங்கு சென்ற அந்த கும்பலுக்கும் மொரட்டுவ பிரதேசத்து சிங்களவர்களுக்கும் இடையில் கலகம் மூண்டு இரு தரப்பிலும் பலர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். மொரட்டுவக்கு போன முஸ்லிம் குழு காயங்களுடன் ஓடி தப்பித்து வந்துவிட்டது. வந்ததும் அவர்கள் மருதானை பள்ளிவாசலின் ஆலோசனையின்படி தமது பெண்ணை மீட்கச் சென்ற இடத்தில் தம்மை காயப்படுத்தியதாக பொலிசில் மீனாட்சியின் தாயார் சார்பில் முறைப்பாட்டை செய்தனர். அதன்படி ஆட்கடத்தல், கொள்ளையடித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஒரு பொலிஸ் குழுவை அனுப்பினார். செல்லஞ்சி அப்புவின் உறவினர்களையும், ஊரார்களையும் சந்தித்து எடுத்துச் சொல்லி அந்த சோடியை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்து மருதானை பொலிஸ் தலைமையகத்தில் தனித்தியாக தடுத்து வைத்தனர். மீனாட்சியின் தாயாரும் மாமனாரும் வந்து பார்த்தபோதும் அவர்களுடன் போக மறுத்துவிட்டார் மீனாட்சி. இவர்களின் மீது விசாரணையும் நீதிமன்றத்தில் பல நாட்கள் தொடர்ந்தது. ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்த மீனாட்சியின் தாயார் மீனாட்சியின் உண்மை வயதைத் தெரிவித்ததும் நீதிமன்றம் மீனாட்சியை விடுவித்தத்துடன் சுதந்திரமாக மீனாட்சி முடிவெடுக்க முடியும் என்று அறிவித்தது. முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 14வயது பெண்ணைத் திருமணம் முடித்தது சட்டபூர்வமானதே என்று தீர்ப்பளித்தது.

மருதானை கலகம்
இப்போது மருதானை பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிரில் உள்ள மருதானை சாஹிரா கல்லூரி தான் அப்போது மருதானை பள்ளிவாசலாக இருந்தது. சாஹிரா கல்லூரி 1892இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1867ஆம் ஆண்டு தான் இலங்கையின் பொலிஸ் தலைமையகம் மருதானை மருதானையில் உருவாக்கப்பட்டது.

நாள் 28.02.1870. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 200-300 பேர் மருதானை பொலிஸ் தலைமையகத்தின் வாசலில் மீனாட்சியை தம்மிடம் ஒப்படைப்பார்கள் என்று குவிந்தனர். அன்றைய பொலிஸ் மா அதிபர் ரொபர்ட் கெம்பல் (William Robert Campbell – இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபர்) வாசலுக்குச் சென்று சத்தமிட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் மேலும் அதிகரித்ததுடன் சத்தமும் கூடியது. அமைதியற்ற சூழல் அதிகரித்தது. மீண்டும் கெம்பல் வாசலுக்குச் சென்று இப்படிப்பட்ட சூழலில் பெண்ணை வெளியில் விட முடியாது என்பதை அறிவுறுத்தினார். இதனால் குழப்பமடைந்த கூட்டத்திலிருந்து கற்கள் சரமாரியாக வந்து விழுந்தன. அதில் பொலிஸ் மா அதிபரின் முகமும் காயத்துக்கு உள்ளானது. பல பொலிசார் இரத்தக் காயங்களுடன் அதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். பொலிஸ் நிலையமும் சேதத்துக்கு உள்ளானது.

பொலிஸ் மா அதிபர் கலகத்தை அடக்குவதற்காக ஏராளமான பொலிசாருடன் கட்டுப்படுத்த முயற்சித்தும் கூட பல பொலிசார் காயங்களுக்கு உள்ளானார்கள். அதுபோல தாக்குதல் நடத்திய 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்தி காயத்துக்குள்ளாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த அப்துல் ரஹ்மானின் சகோதரர் அப்துல் அசீஸ் தலைமை தாங்கியிருப்பதை ரொபர்ட் கெம்பல் பதிவு செய்திருக்கிறார். அப்துல் அசீஸ் ஒரு கையில் கல்லும் மறு கையில் குர் ஆனும் தாங்கியபடி கலகத்தில் ஈடுபட்டார் என்று கெம்பல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிசார் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்தவற்றை சேதப்படுத்தினார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளிவாசலும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவப் படைப் பிரிவும் இறக்கப்பட்டது.

இதற்கிடையில் கெம்பல் 73வது படைப்பிரிவை அவசரமாக உதவிக்கு அழைத்தார். முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருந்தது. பெரும் கலவரமாக உருவாகக் கூடிய சாத்தியமிருந்ததால் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அன்றைய மகா முதலி டயஸ் முதலியார், அன்ரூ பெர்னாண்டோ முதலியார், சமாதான அதிகாரி கோமஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார்கள். அருகில் குடியிருந்த மக்களும் கூடினர். பொலிசார் இந்த கலகத்தை அடக்க தடிகள், பொல்லுகள், வாள்களைக் கூட பயன்படுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. 30 பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள். அது போல பள்ளிவாசலில் இருந்த புனித குர் ஆன் சேதப்படுத்தப்பட்டதாக பொலிசாருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அது மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்ட போதும் அந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கலகத்தில் ஐரோப்பியர்
இந்த கலகம் குறித்த விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் கெம்பல் 7.05.1870 அன்று காலனித்துவ செயலாருக்கு அனுப்பி வைத்தார். இந்த ரவுடிக் கும்பலின் உருவாக்கத்தின் பின்னால் ஐரோப்பிய தீய சக்திகளும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஐரோப்பிய முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜெர்மனைச் சேர்ந்த யூதர். ஏனைய ஒருவரும் தீயவர்கள். வயதான ஹோகன் என்பவர் இராணியின் (Majesty's XV Regiment) படையில் இருந்து பின்னர் இலங்கை பொலிசில் கான்ஸ்டபிளாக இணைந்துகொண்டு பின்னர் நீக்கப்பட்டவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் முஸ்லிமாக மாறியிருக்கிறார்.
ஒருவர் முஸ்லிமாக மாறியிருந்த ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த ஜோன் மெக்டோனால்ட் என்கிற தடித்த இளைஞர். என்னைக் காயப்படுத்தியது இவர்கள் தான்.”
இந்தச் சம்பவத்தின் விளைவாகத் தான் இலங்கையில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதே 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கலகத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பங்கு வகித்த இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரான ரொபர்ட் கெம்பலின் பெயரை பொரல்லையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பெரிய மைதானத்துக்கு சூட்டினார்கள். கெம்பல் பார்க் என்று இன்றும் அழைக்கப்படும் கொழும்பிலுள்ள பிரபலமான மைதானம் அது.

மரக்கல ஹட்டன
இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு முக்கிய நூல் 1891இல் “மரக்கல ஹட்டன” என்கிற பெயரில் ஒரு நூல் 72 கவிதைகளைக் கொண்டதாக செய்யுள் வடிவில் சிங்களத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதியவரின் பெயர் உறுதியாக கூற முடியாதபோதும் அதை வெளியிட்டது வீ.கரோலிஸ் அப்புஹாமி நிறுவனம் என்கிற குறிப்பு மட்டும் காணக்கிடைக்கிறது. சிங்கள பண்பாட்டு இலக்கியங்களை வரிசைப்படுத்தும்போது இந்த “மரக்கல ஹட்டன” என்கிற நூலும் அதில் ஒன்றாக முக்கியப்படுத்துவப்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் “மரக்கல ஹட்டன” என்கிற தலைப்பில் மீண்டும் நிமேஷ திவங்கர செனவிபால என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த நூலில் உள்ள விபரங்களை வேறு பல இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பல தகவல் பிழைகளைக் காண முடிகிறது. அது மட்டுமன்றி மோசமான முஸ்லிம் வெறுப்புணர்ச்சியைக் கக்குவதாக அது காணப்படுகிறது. நிமேஷ எழுதியிருக்கும் ஏனைய நூல்களைப் பார்க்கும் போது அப்படி அவர் எழுதியிருப்பதில் ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு இடத்தில் இப்படி தொடங்குகிறது...

“தமிழ் சமூகத்தில் சாதிப் பிரச்சினையால் பீடிக்கப்பட்ட சக்கிலி சாதி என்கிற குறைந்த சாதியைச் சேர்ந்த தமிழர்கள் மத மாற்றம் செய்து கொண்டதன் மூலம் தான் இலங்கையின் முஸ்லிம் இனம் பெருக்கமடைந்தது” என்கிறார்.

இந்தக் கருத்தை ஏற்கனவே சேர் பொன் இராமநாதன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இந்த இடத்தில் நினைவுகூறத் தக்கது. “இலங்கைச் சோனகர் இன வரலாறு” என்கிற தலைப்பில் 1888 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியான சஞ்சிகையில் எழுதியிருந்தார். அதில் அவர்; ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருடனான ஒன்று கலப்பின் மூலமே முஸ்லிம் இனம் பெருகியதாக கூறிய கருத்து பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்துக்குள் உள்ளாகியிருந்தது. அதற்கு அப்போதைய ‘முஸ்லிம் காடியன்’ ஆசிரியர் ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் ஒரு விரிவான பதிலை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கலகம் முஸ்லிம்களுக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் இடையில் தொடங்கப்பட்டாலும் கூட பின்னர் பொலிசாருக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்குமாக பரிணமித்தது. கொலைகள் பதிவாகவில்லை ஆனால் பலரின் மீதான படுகாய சம்பவங்கள் பதிவானது. பொலிசாருடன் நடந்த மோதல்களால் வரலாற்று அரச ஆவணங்களிலும் இடம்பெற்றது. கவிதை வடிவில் சிங்கள இலக்கிய நூலாக பதிவானதால் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இலக்கிய வடிவமாக பதிவு பெற்றது. 1915ஆம் ஆண்டு கண்டியில் தொடங்கிய சிங்கள முஸ்லிம் கலவரம்; காலப்போக்கில் உண்மைகள் எப்படி திரிக்கப்பட்டு முஸ்லிம்களின் மீது பழி போடப்பட்டதோ அது போல இந்த கலகமும்  பிற்காலத்தில் மேலும் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம் வெறுப்புக்கு பயன்பட்டது.



மலையகத்தின் உயர்கல்வியில் அரசியல் (அழகப்பா முதல் அல்முஸ்தப்பா வரை) - அருள்கார்க்கி

பாடசாலைக் கல்வியை தொடர்ந்து மாணவர்கள் நிறுவனமயப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமது கல்வியை தொடர்வது வழமை. மலையகத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களுக்கும்இ கல்வியல் கல்லூரிகளுக்கும் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புறம்பாக பெருந்தொகையானவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும்இ தொழிற்கல்வியையும் தெரிவு செய்கின்றனர். குறிப்பாக பொருளாதார காரணங்களை மையமாக கொண்டு இன்று பெரும்பாலான  மாணவர்கள் தொலைக்கல்வி மற்றும் பகுதி நேர பாடநெறிகளை பின்பற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவதும் புள்ளிவிபரமிடுவதும் சற்று நடைமுறை சார்ந்து சவாலான விடயமாகும். காரணம் எவ்வித நிறுவன கட்டமைப்பிற்குள்ளும் அடங்காத உயர்கல்வியை வழங்கும் கடைகள் இன்று மலிந்து காணப்படுகின்றது.  

முன்னர் தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய உயர்தரம் சித்திபெற்றோரின் நிலை கேள்விக்குறியாக இருந்தமையும் உண்டு. ஆனால் சமகாலத்தில் போட்டித்தன்மையும் மாணவர்களின் கற்றல் ஆர்வமும் அதிகரித்ததன் காரணமாக அவ்வார்வத்தைக் காசாக்குவதற்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை வழங்கின. 

அரச பல்கலைக்கழகங்களின் வரையறைஇ பௌதீக வளங்கள்இ ஆளணி மற்றும் கற்கை நெறிகளை அடிப்படையாக வைத்து நோக்கும் போது நாட்டின் பட்டதாரிகளின் தேவையை ஈடு வெய்வாற்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு புறம்பாக தனியார் பல்கலைக்கழகங்களின் அவசியம் ஏற்பட்டது. இந்நோக்கத்திற்காக நாட்டினுள் நுழைந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் மலையகத்திலும் இந்திய பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்கின. குறிப்பாக அழகப்பா பல்கலைக்கழகம்இ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்இ இந்திரா காந்தி பல்கலைக்கழகம்  என்பன முக்கியமானவைகளாகும். இப்பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை தொடர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இன்று ஆசிரியர் நியமனங்கள் பெற்றுள்ளனர். 

தேசிய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பான புள்ளிவிபரங்களை ஆய்வு செய்யும் போது சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதில் மலையக மாணவர்களின் பங்களிப்பு 1.5மூ சதவீதமாக உள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்பட்டன. குறிப்பாக ரூ.60000.00 கட்டணத்துடன் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் பெரும்பாலான மலையக மாணவர்கள் இந்தியப் பல்கலைகழகங்களை நாடினர். 

ஆரம்பத்தில் இப்பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும்இ பின்னர் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றவை என அறிவிக்கப்பட்டது. மலையக அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டு தமது பங்களிப்பை சமூகத்துக்கு வழங்கினர். எனினும் நடைமுறையில் அவற்றின் கற்கைநெறிகள்இ கற்பித்தல் முறைகள்இ பரீட்சை நடைமுறைகள் தொடர்பாக விமர்சனங்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன. 

அரச பாடசாலை ஆசிரியர்கள் விரிவுரைகளை நகரங்களில் தனியார் வகுப்புகளில் நடத்தினர். பரீட்சைகளும் அவ்வாறே நடத்தப்பட்டன. எவ்வாறாயினும் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்விடத்தில் அரசியல்வாதிகள் முக்கியப்பங்கினை நியமனங்களின் போது வழங்கினர். அரசியல் தலையீடுகள் மூலம் நியமனம் பெறும் பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டன. 

தேசிய பல்கலைக்கழகங்களில் சுமார் 03 வருடங்கள் என்ற காலப்பகுதியில் 06 செமஸ்டர்கள் என்று சொல்லப்படும் கற்கை உபபிரிவுகள் இந்திய பல்கலைகழகங்களில் பெறும் 02 இரண்டே வருடங்களில் முடிக்கப்பட்டன். எது எவ்வாறோ எமது சமூகத்துக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்று அனேகர் இது தொடர்பாக மறை விமர்சனங்களை முன்வைக்கவில்லை. எனினும் ஆசிரியர் நியமனங்களைத் தவிர்ந்துஇ அபிவிருத்திஇ பொது நிர்வாகம் போன்ற எவ்வித ஏனைய துறைகளுக்கும் அழகப்பா பட்டதாரிகள் உள்வாங்கப்படவில்லை. இது பெரும்பான்மை இனத்தின் குறுகிய சிந்தனையையும் சிறுபான்மையினர் மீதான ஏற்றத்தாழ்வையும் காட்டுகின்றது. 

அரச பல்கலைக்கழகங்களுக்கு இணையான பட்டப்படிப்பு எனின் அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கும் தகுதி இருக்க வேண்டும் அல்லவா. எனினும் இவ்வாறு நியமனம் பெற்றுக் கொண்டவர்கள் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களாகவே உள்ளமை சற்று வருத்தமானது. எனினும் அவர்கள் இளங்கலைமானி (டீ.யு) விஞ்ஞானமானி (டீ.ளஉ)இ வர்த்தக முகாமைத்துவமானி (டீ.உழஅ) கல்விமானி (டீ.நுன) போன்ற உயரிய அடைவுகளை கொண்டவர்கள் என்பது அபத்தமானது. 

மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான கேலிக்கூத்துகள் அரசியல்வாதிகளால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேசிய கல்வித்திட்டத்தின் தராதரத்துக்கு ஈடுகொடுக்க கூடிய பாடசாலை கல்வியை தரமுயர்த்துவதை விட்டுவிட்டு தரம் குறைந்த சலுகை அடிப்படையிலான உயர்கல்வி வாய்ப்புகளை கேட்டு பெறுகின்றனர். இதன் மூலம் சில வரையரைகளை எம்மவர்களுக்கு கடக்கமுடிவதில்லை. தமிழர்களின் கல்வியை திட்டமிட்டே தரம் குன்றியதாக வைத்திருப்பதன் மூலம் ஏனைய இனங்களுக்கு கீழேயே மலையக சமூகத்தை வைத்து அடக்கியாளும் நுண்ணரசியல் இது என்பது மலையக தலைமைகளுக்கு நன்கு தெரியும். அவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். 

அண்மையில் ஊவாமாகாணத்தில் அரசியல்வாதி ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட ஈரானிய சர்வதேசப் பல்கலைகழகமான அல் - முஸ்தபா பல்கலைகழகம் தொடர்பான சலசலப்பு சூடுபிடித்திருந்தது. சுமார் 500 மாணவர்களின் பட்டப்படிப்பு நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்டு பிரிதொரு அரசியல்வாதியால் தேசத்துரோகத்துக்கு எதிராக முன்னெடுப்புகள் இடம்பெற்றது. இங்கு அரசியல்வாதிகளின் வாக்குச்சேகரிப்பில் 500 மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனம். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகமானது ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாகும். ஈரான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் பட்டப்படிப்புகளை வழங்கிவருகின்றது. இலங்கையில் இலவசமாக 500 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்க முன்வந்ததையும் அவ்வாறான ஒரு நடைமுறையே. எனினும் எந்த ஒரு பல்கலைகழகமும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு (ளழஎநசநபைn) உட்பட்டே இயங்க வேண்டும். அடிப்படைவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ வளர்க்கும் வகையிலும் அல்லது குறிப்பிட்ட மதசார்பான கருத்துக்களை திணிப்பதையோ செய்யமுடியாது. 

சாதாரணமாக ஒரு உணவுப்பண்டம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலே அதன் தரம்இ விலைஇ பெறுமானங்கள் என்பன பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே ஒரு பல்கலைக்கழகம் தன்னிச்சையாக நாட்டினுள் வரமுடியுமா? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். 

ஒரு அரசியல்வாதி முன்மொழிகின்ற காரணத்தினால் மாணவர்கள் குழு நம்பிக்கையுடன் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்தனர். அரச பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள்இ விரிவுரைகளை நடத்தினர். எனவே இது நிச்சயம் அரச அங்கீகாரம் பெற்றது என அனைவரும் நம்புவது சரளமானதே. எனினும் இதனை பிரிதொருவர் கேள்விக்கு உட்படுத்தி அங்கீகாரம் இல்லை என நிராகரிக்கும்போது சமூகம் முட்டாளாக்கப்படுகின்றது. தம்மை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமக்கு இடையிலான போட்டிகளை முன்வைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அதற்கு அவர்கள் தமக்குச் சார்பாக ஆதாரங்கள் என சில தரவுகளையும் முன்வைக்கின்றனர். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகம் எவ்வாறான நடைமுறைகளுக்கு உட்பட்டு வந்தது அல்லது எவ்வாறு சட்டவிரோதமானது என்றோ அரசியல்வாதிகள் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அது அரச நிர்வாக கட்டமைப்பின் அடிப்படையில் மானிய ஆணைக்குழு தான் விளக்கமளிக்க வேண்டும். அது நியதிகளின் படி கொண்டுவரப்பட்டது எனின் கொண்டு வந்த அரசியல்வாதி வீதி வீதியாக விளக்கமளிக்க தேவையில்லை. அது சட்டவிரோதமானது எனின் அதனை குறிப்பிடும் அரசியல்வாதி மானிய ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாகாண சபையிலும் பிரேரணை கொண்டு வருவதும்இ மாணவர்கள் சூழ செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதும் மக்களை ஏமாற்றுவதற்கு என்று தெளிவாக புலப்படுகிறது. மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான சாபக்கேடுகள் இடம்பெறுகின்றன. தேயிலை தொழில்துறை தொழிலாளர்கள் குறைவடைவதால் இப்போது மாணவர்களின் மீது கைவைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இவை எதிர்கால அரசியல் இருப்புக்களின் அத்திவாரங்கள். 
மானிய ஆணைக்குழு கட்டுப்பாடுகளையும் ஒழுக்கக்கோவைகளையும்இ தொடர் கண்காணிப்புகளையும் வெளிநாட்டு பல்கலைகழகங்கள் மீது செலுத்தியிருக்க வேண்டும். அது அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இம்மாணவர்கள் நடுவீதியல் நிற்கவோஇ அரசியல்வாதிகளை நம்பியிருக்கவோ தேவையில்லை. ஆனால் இது மலையகத்துக்கான விடயமாகையால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளமை புலனாகின்றது.

உண்மையில் அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை கூறுபோடுவதை எவ்வாறும் ஏற்க முடியாது. மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் அமைப்புகளும் கல்விச்சமூகமும் இவ்வாறான விடயங்களை அவதானிப்பு செய்ய வேண்டும். மலையகத்தைப் பொருத்தவரை இலவசமாக தகரம் கொடுக்கப்படுவதையும் பட்டம் கொடுக்கப்படுவதையும் சமாந்தரமாகவே நோக்கவேண்டியுள்ளது. 

"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி! தமிழீழமே எங்கள் இலக்கு" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி


மாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன்  எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. மாணிக்கதாசன் உள்ளிட்ட புளொட் தலைவர்களால் எமது அமைப்பின் தலைமை உயிரச்சுறுத்தலை எதிகொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் அரசோடு இணைந்து பல தமிழ் இளைஞர்களை காணாமல் ஆக்கிக்கொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் மீது பொதுவாக இருந்த பயமும் முன்னெச்சரிக்கையும் எனக்கும் இருந்தது. அரசுடன் சேர்ந்திருந்த நிலையிலும் “தமிழீழமே எமது இலக்கு” என்று கொடுத்த பேட்டி பலரையும் கவனிக்கச் செய்தது. இந்தப் பேட்டிக்கு சரியாக 20 வயது. - என்.சரவணன் (ஆனந்தன் என்கிற பெயரில் மே 1999 - சரிநிகரில் வெளிவந்தது.)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் துறைப் பொறுப்பாளராக மாணிக்க தாசன் சொல்லப்படுகின்ற போதும் இன்று அவ்வியக்கத்தின் முழுக் கட்டுப்பாடும் இவரின் கீழேயே இருப்பது இரகசியமல்ல. புளொட் இயக்கம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பளின்றன, அடிப்படையில் அவ்விமர்சனங்களின் சாராம்;சம். எதிரியோடு சேர்ந்து செயற்படுவது, மற்றும் மக்களுக்கு துரோமிழைத்து வருவது, இவ்விமர்சனங்கள் குறித்து சம்பவங்களாக வினாக்களைத் தொடுக்காது அடிப்படையான அரசியல் கேள்விகளாகவே இந்த பேட்டி தயாரிக்கப்பட்டது. கேள்விகளைக் கேட்பது எங்களின் கடமை. அதற்கு பதில் தருவது அவரின் பொறுப்பு. மற்றவை வாசகர்களின் சுதந்திரம்.
கழகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தற்போதைய அதன் நடவடிக்கைகள் தலைகீழாக மாறி இருப்பதாகவும், அது இன்று துரோகக் கும்பலாக ஆகியிருக்கிறது என்றும் எழுந்துள்ளற பரவலான குற்றச்சாட்டுக்  குறித்து உத்தியோக பூர்வமாக என்ன கூறுவீர்கள்?

எமது அரசியல் மற்றும் இராணுவச்  செயற்பாட்டில் எதை  எடுத்துக் கொண்டாலும் நாங்கள் அரசோடு இணைந்தது கிடையாது. ஒரு பரந்த வெகுஜன அமைப்பாக ஒருகாலத்தில் நாங்கள் இருந்தது உண்மை தான். தவிர்க்க முடியாமல் ஆயுதம் தரித்துப்  போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது ஆயுதமயமாக்கலில்  ஏற்பட்ட தாமதம் புலிகளுக்கு வெற்றியை ஏற்படுத்தி விட்டது. போராட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம்பெற்று முன்னுக்கு வந்த வரலாற்றைக் காண்கின்றோம். புளொட் ஒரு கட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒரு கட்டத்திலும்  இன்னொரு கட்டத்தில் டெலோ என்றும் ஏன் ஒரு கட்டத்தில் புலியுமாக இந்த வகையான செல்வாக்கு, ஆதரவு பெறுதல் தளப்பிரதேசங்களை கொண்டிருத்தல் போன்றவற்றைக் காணலாம். இந்தக் காலகட்டத்தில் புலிகள் தங்களின் பாசிசத்தைப் பயன்படுத்தி ஏனைய இயக்கங்களை நசுக்கி தம்மைத் தாமே தலைமைக்குக்  கொண்டு வந்து விட்டனர்.  சுழற்சிமுறையில் இந்தத்  தலைமைகள் மாறிய நிலை போய் ஒரு கட்டத்தில் புலிகள் தம்மை நிரந்தரமாக்கிக் கொண்டனர்.    இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மக்கள் ஆதரவும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதன் அர்த்தம் மக்களின் உண்மையான தலைமை அது தான்  என்பதோ அல்லது அவர்களின் வழிமுறை தான் சரியென்பதோ ஏனைய இயக்கங்கள் தவறானவை, தமிழின விடுதலைக்கு எதிரானவை  என்பதோ அல்ல.

எமது போராட்டத்தைப் பொறுத்த வரை ஆயுதந் தாங்கிய எதிர்ப்புகளை போர் என்றும் அரசியல் ரீதியான போராட்டத்தை போராட்டம் என்றும் தான் நாங்கள் அழைக்கிறோம். இன்றைய நிலையில் பாசிசத்தின் உச்சக் கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும்  நிலையில், புலிகளும் நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து கொண்டு புலி உறுப்பினர்கள் எவரையும் விமர்சிக்க முடியாத சூழலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மாறாக தென்னிலங்கையில் ஆசை தீருமட்டும் ஜனாதிபதியையோ ஏனைய அரசியல் வாதிகளையோ கடுமையா கத் தாக்கி விமர்சிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த வழிமுறைக்கூடாக வடகிழக்குப் பிரதேசத்தில் நாங்கள் காலூன்றி நிற்க முடியுமோ அந்த வழிமுறையைப் பாவித்தே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்திய இராணுவம் இருக்கும் போது புலிகள் அரசுடன் நெருக்கமாக இருந்த போது நாங்கள் கொழும்பில் கூட சுதந்திரமாக உலாவ முடியாத நிலையில் தான் இருந்தோம். எமது உறுப்பினர்கள் வத்தளையில் ரயர் போட்டு புலிகளால் எரிக்கப்பட்டனர். எம்மில் பலர் இந்தியாவை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. ஆனால் என்றோ ஒரு நாள் இந்தியாவும் புலிகளும் மோதிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தோம். கிழக்கும் கிழக்கும், அல்லது மைனசும் மைனசும் ஒன்று சேருவதில்லை அல்லவா? இரு தரப்பும் மோதல் ஏற்பட்ட போது நாங்கள் இராணுவ உயர் அதிகாரி களுடன் தொடர்பு கொண்டு பேசி திரும்பி வந்து எமது பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்தோம்.

அதிலிருந்து எமக்கான தனித்து வமான போக்கைத் தான் கடைப் பிடித்து வருகிறோம். இன்று அரசும் புலிகளை எதிர்க்கிறது. நாங்களும் புலிகளை எதிர்க்கிறோம். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் அடிப் படையில் வித்தியாசம் உண்டு. புலிகள் எங்களை எதிர்ப்பதால் தான் நாங்களும் எதிர்த்து நிற்க வேண்டி யேற்பட்டுள்ளது. எனவே தான் வெளிப் பார்வைக்கு தோன்றுவதை வைத்துக் கொண்டு நாங்கள் படையுடன் சேர்ந்து செயற்படுகிறோம் என்று கூறுவது பிரச்சார ரீதியில் எவருக்கும் வசதியாக இருக்கும். ஆனால் அரசுடன் எவ்வளவு முரண்பட்டு செயற்படுகிறோம் என்பது வெளிக் கொணரப் படுவதில்லை. நாங்கள் எத்தனையோ தடவைகள் பொலிசுக்கு அடித்திருக்;கி றோம். இராணுவத்துக்கு அடித்திருக்கி றோம். அப்படி அடித்த எத்தனையோ எங்களின் உறுப்பினர்கள் இன்னமும் சிறைகளில் இருந்து வருகிறார்கள். புலிகளின் செய்திகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கும் தொடர்பூடகங்கள் எங்களின் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசாங்கத்துக்கு எதிராக எத்த னையோ போராட்டங்களை முன்னெ டுத்திருக்கிறோம். 1952க்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு முன்னால் இருந்து உண்ணாவிரதம் மேற் கொண்ட கட்சி நாங்கள் தான். வவுனியாவில் எல்லைப்புறங்களில் அரசாங்கத்தால் செய்ய முனைந்த எத்தனையோ  குடியேற்றங்களைத் தடுத்து அந்த இடங்களிலேயே நிறுத்தி விட்டுள்ளோம்.  ஆனால் புலிகளின் பலமான பிரச்சார இயந்திரங்களால் தான்  இவை மறைக்கப்பட்டு விட்டன. 

புலிகள் ஒரு கட்டத்தில் தங்களை பலப்படுத்தி அதனையே நிரந்தரமாக்கிக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்நிலைமை புலிகளின் பலத்தால் ஏற்பட்டதா அல்லது கழகத்தின் பலவீனத்தால் ஏற்பட்டதா?

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம் பெற்றபோதும் அவை சக இயக்கங்களுக்கு எதிராக பாசிசத்தைப் பாவித்து இருப்பை உறுதி செய்யவில்லை. அதைச் செய்தவர்கள் புலிகள் தான். அதன் மூலம் தான் அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.

உங்களின் கருத்து இராணுவ ரீதியிலான விடயத்தில் பொருந்தக் கூடும். ஆனால் அரசியல் ரீதியில் உங்கள் பலம் நிரூபிக்கப்படவில்லையே?

புலிகள் மட்டுமென்ன அரசியல் ரீதியில் பலம் பெற்றவர்களா? அவர்களின் பலமும் இராணுவப் பலம் தான். அவர்களின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்களா என்ன? போராட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே மக்களை அரசியல் மயப்படுத்துவதில் புளொட், ஈ.பி.ஆர்எல்.ப்., ஓரளவில் ஈரோஸ் ஆகியவை தான் அக்கறைகாட்டி வந்துள்ளன. புலிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரமுடியாமலிருப்பதும் இந்தக் குறைபாட்டால் தான்.

அரசியல் ரீதியில் கழகம் மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இருக்கும் ஆதரவுக்கும் புலிகளின் மீது இருக்கும் ஆதரவுக்கு மிடையில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

புலிகள் தங்களின் இராணுவப் பலத்தை தமிழ் இயக்கங்கள் மீது திருப்பி விட்டார்கள். ஏனைய இயக்கங்கள் அவ்வாறு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டதில்லை.

சரி, இப்படிக் கேட்டால், இன்று கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களா?

எல்லோரும் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்கள் என்று கூறமுடியாது. ஆனால் இராணுவப் பிரிவில் உள்ளவர்களுக்கு தேவையான அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆயுதம் ஏந்துவதன் நோக்கம்? யாருக்கு எதிராக அதனைப் பயன்படுத்த வேண்டும்? போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கல்வி வழங்கப் பட்டுள்ளது.

அரசியல் துறைக்கும், இராணுவத் துறைக்குமிடையிலான உறவு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இரண்டையும் வேறுவேறாகப்  பிரிக்க முடியாது. அரசியல் இலக்குகளுக்கு அமையத் தான் இராணுவ வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இராணுவ ரீதியான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்குடன் அரசியல் பிரிவை நடாத்த முடியாது.  இவை இரண்டுக்கு மிடையிலான உறவுகள் ஒன்றுடன் ஒன்று விட்டுப் பிரியாததாக இருப்பது அவசியம். ஆனால் இன்றைய யுத்தசூழ்நிலையின் காரணமாக இராணுவ  ரீதியான அலோசனைக்கிணங்க அரசியல் வியூகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்பதும் அத்தியாவசிய மானது. இன்று இதே போன்ற முறையைத் தான் இலங்கை இராணுவத்திலும் கடைப்பிடிக்கிறார்கள்.  பிரிகேடியர் மட்டத்திலுள்ள ஒருவர்  இணைப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏனைய சிவில் நிலைமைகளின் சாதக பாதகங்களைக் கருத்திற்கொண்டே இராணுவ விவகாரங்களை நகர்த்துகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் கழகத்தில், அரசியல் துறையைவிட இராணுவத்துறைக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப் படுவதாக  கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்  குறித்து...?

நேரடியாக பாசிசத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இராணுவத்துறையின் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அரசியற்துறை அதனைக் கட்டுப்படுத்த முடியாது. அரசியல் ரீதியான செல்வாக்குக்கு எவ்வளவு தூரம் அனுமதிப்பது என்பதை அப்படிப்பட்ட நடைமுறைதான் தீர்மானிக்க முடியும்.

சமீபத்தில் கூட கழகத்தின் இராணுவ செயற்பாடுகள் குறித்து அரசியல் பிரிவிடம் கேள்வி கேட்க வேண்டாமென கழகத்தின் அரசியற் பிரமுகர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இராணுவச் செயற்பாடு குறித்து அரசியல் ரீதியில் பொறுப்பு கூற மாட்டோம் என்றல்லவா அர்த்தம்?

அப்படியில்லை. கட்டுப்பாடும், இறுக்கமும் கொண்ட இராணுவமாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை. இன்று பிரபாகரனுக்கு இருக்கின்ற தலையிடியை விட எமக்குத் தான் அதிகம். ஏனென்றால் நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறோம். மக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் பதில் கூறிவருகிறோம். வருஷத்துக்கு ஒரு தடவை கதைக்கும் புலிகளுக்கு இந்தசிரமங்கள் தெரியாது.

சரி, கடந்த ஒரு தசாப்த காலமாக நீங்கள் எவ்வாறான  அரசியல் வெற்றிகளை அடைந்திருக்கிறீர்கள்?

அரசாங்கம் செய்ய முயற்சித்த குடியேற்றங்கள் பலவற்றைத் தடுத் திருக்கிறோம். ஜெனரல் கொப்பேகடு வவுக்கூடாகவும் இந்த முயற்சிகள் இகசியமாக செய்யப்பட்ட வேளை நாங்கள் கடுமையாக எதிர்த்து நின்று அதனை செய்ய விடவில்லை. அதில் எங்களுக்குப் பெரும் திருப்தி. அவ்வாறான தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சின்ன வயசு கல்வியறிவற்ற பெடியன்களே சமயோசிதமாக மேற்கொண்டனர். அதேவேளை நாங்கள் ஏறத்தாழ 12 தமிழ் குடியேற்றங்களை எல்லைப்புறங்களில் நிறுவியிருக்கிறோம். அவற்றுக்கூடாக கிராமங்கள் சிலவற்றை உருவாக்கி யிருக்கிறோம்.

வேறு...?

வேறு... சிரமதானங்கள், கணவர் இழந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கான புனர்வாழ்வுத்  திட்டங்கள், நோயாளர் களுக்கான உதவிகள், வசதியிழந்தவர்கள் தங்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி , மாரி காலங்களில் அடிமட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான கிடுகுகளை விநியோகித்து வருகிறோம். மக்கள் கடைகள் சிலவற்றை அமைத்து வருகிறோம்.

ஒரு தசாப்த காலமாக நீங்கள் செய்ததாகக் கூறிய மேற்படி செயற் பாடுகள் குறித்து நீங்கள் திருப்தி காண்கிறீர்களா?

திருப்தி கண்டதால் தான் மக்கள் எங்களிடம் பிரதேச சபையையும் மூன்று பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தந்திருக்கிறார்கள். மக்கள் திரும்பிக் கொண்டிருப்பதன் சமிக்ஞை தான் அவை.

நீங்கள் செய்ததாக் கூறிய சில சீர்திருத்த நடவடிக்கைகளை கருத்திற் கொள்ளும் போது ஒரு போராளி இயக்கத்தின் கொள்ளளவு இவ்வளவு தானா என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அவ்வளவு மட்டுமல்ல. ஜனநாயக வழிக்கு வந்த ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் தான் மக்களின் பல பிரச்சினைகள் குறித்து ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறோம். உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள் என எங்களின் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம். சர்வதேச ரீதியில் இடம் பெற்று வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்தும் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியிருக்கி றோம். போரில் நாங்கள் ஈடுபட முடியா விட்டாலும் போராட்டத்தில் நின்று கொண்டு தான் இருக்கிறோம். சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போருக்கும் தள்ளப்படலாம். அந்த சுழற்சியின் அடிப்படையில் நாங்களும் புலிகளும் ஒன்றாக செயற்படும் நிலைமையும் ஏற்படலாம். ஒரு சுழற்சி முறையில் இராணுவத்துடன் இருக்கத் தள்ளப்பட்டுள்ளோம். 

ஏன் பழைய நிலைக்குப் போக முடியாது?

 அந் நிலைமைக்கு போதிய வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் போருக்கும், போராட்டத்துக்கும் தயாராக இருப்போம்.

இன்று ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற இயக்கங்கள் இராணுவ ரீதியில் தயாராவதற்கு இருக்கக்கூடிய பிரச்சினை எமக்கு இல்லை. எமக்கு நிறைந்த அனுபவம், தளப்பிரதேசம், வழிநடத்தல், இராணுவத்துறை சார்ந்த அறிவு என்பவை உண்டு. எங்களுக்கு அது இலகுவானது.

சரி, கழகத்தின் ஆரம்ப கால அரசியல் இலக்கான "தமிழீழம், சோஷலிசம்" என்பவை இன்றும் செல்லுபடியானவை தானா?

"பெரியவரின்" உண்மையான நோக்கம் வர்க்க ரீதியானது தான். சோஷலிசத் தமிழீழத்தை அடைய வேண்டுமென்பது தான் அவரின் இறுதி லட்சியமாக இருந்தது. அவர் இருந்த போது அதற்கேற்றவகையில் தான் கட்சியை வழிநடத்தினார். தென்னாசியா வில் ஒரு மோசமான ஏகாதிபத்திய சக்தியாகவே இந்தியாவையும் அவர் அடையாளம் கண்டார். அதன் அடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்காத அதே வேளை அதனை ஏற்கவும்  மறுத்தார். அது இரு நாடுகளின் வர்க்க நலன் சார்ந்த ஒப்பந்தம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது கருத்துக்களின் வளர்ச்சியாகத் தான்  தமக்கு எதிர்காலத்தில் ஒரு சாத்தியமான, சாதகமான நாடு தேவையென்பதால் மாலைத்தீவுப் புரட்சியை மேற்கொண்டோம்.

தமிழீழத்துக்கு ஆதரவான ஒரு நாட்டுக்கு தமிழீழம் பிரிவதால் அந் நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் ஸ்திரத்தன்மைகள்  குழப்பமடையாத பின்தளம் ஒன்று தேவையென்பதால் தான் மாலைதீவுப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழப் போராட்டம் குறித்த மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யுடன் கூட உறவுகளை வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொண்டதும் இந்த வர்க்க நோக்கத்துடன் தான். அந்த நோக்கிலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இன்னமும் வவுனியாவில் பல இடங்களில் கூட்டுறவுப் பண்ணை களை நடாத்தி வருகிறோம்.

தமிழீழ இலக்கில் இன்றைய உத்தியோபூர்வ நிலைப்பாடு என்ன?

அந்தப் பதத்தை நேரடியாகப் பாவித்து அரசியல் செய்ய முடியாத, ஆயுதம் தாங்கிப் போராட முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆயுதம் தரிப்பது அவசியம். பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது தான். அதற்காகத் தான் படைப் பிரிவினை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கிறோம்.

சரி இப்படிக் கேட்கிறேன். இன்று கழகம் என்கின்ற ஒரு இயக்கம் ஏன் தேவை? 

முன்னர் கூறியதைப் போல சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போர்புரியும் காலம் ஏற்படலாம். இன்றைய நிலையில் நிரந்தரமான ஒரு இலக்கைத் தீர்மானிக்க முடியாது.

அப்படியென்றால் தமிழீழம் இலக்காக இருக்க முடியாது...?

தமிமீழம் தானே எங்கள் நோக்கம். அதற்காகத் தான் நாங்கள் புறப்பட்டோம். அர்ப்பணிப்பு, தியாகம் எல்லாமே அதற்காகத் தானே. பிரபாகரன் சில வேளை செத்தால் அப்போது ஏற்படும் இடைவெளி, அலலது போராட்டத்தில்  ஒரு மந்தகதியான நிலைமை தோன்றினால்   நாங்கள் முழுமையாக இறங்கும் முயற்சி தோன்றலாம். இன்று போராட்டம் திசை திரும்பிய நிலையில் அதனை நிறுத்தி விட்டுத் தான் திருப்பி சரியான வழியில் இயக்க வேண்டும்.

அப்படியென்றால் இன்றுகூட உங்களின் பொது எதிரியாக...?

என்றென்றைக்கும் எங்களின் பொது எதிரி ஸ்ரீ லங்கா இராணுவம் தான்.

இராணுவமா? அரசா?

அரசு தான். 

ஆனால் இன்று அந்த அரசுக்கும் இராணுவத்துக்கும் அல்லவா ஆதரவு வழங்கி வருகிறீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இருப்பதால் நாங்கள் அரசு சார்பானவர்களா?

ஆனால் அதன் மூலம் இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று கூறினால்?

நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதில்  ஒன்றும் தவறில்லை. அந்த ஆசனங்களைப் பயன்படுத்துவதில் தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது. அதனை எமது உரிமைக் குரலெழுப்பு வதற்காகப்  பயன்படுத்துவதை விட்டு விட்டுத் தமது சொந்த மகிழ்ச்சிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்துவது தான் பிரச்சினைக்குரியது. எங்களுக்கு இருக்கிற இரத்தக்கொதிப்போ உணர்வோ எமது பாராளுமன்ற ஆசனங்களில் உள்ளவர்களுக்கு இல்லைத்தான். அது குறித்து எமது கட்சியில் பிரச்சினைகள் உண்டு.

நீங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதன் பின்...?

இல்லை, நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பவில்லை. ஜனநாயக வழிக்கு வந்தால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதாகக் கூறியபோது பழைய ஆயுதங்களை வேண்டிக் கொண்டு புதிய ஆயுதங்களை ட்ரக்டர் ட்ரக்டராக அள்ளித் திணித்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் ஜனநாயக வழிக்கு வந்துவிட்டதாகக் கூறியபோது அவர்களும் ஆயுதங்களை அள்ளித் தந்தார்கள். பின் எப்படி ஜனநாயக வழிக்கு வந்ததாகக் கூற முடியும். நாங்கள் விரும்பினாலும் இந்த அரசுகள் எங்களை விடப்போவதில்லை. இன்று ஆயுதங்களை பாசிசத்துக்கு எதிராகவும், அதே வேளை பொது எதிரியுடன் தந்திரோபாய ரீதியிலான உறவையும் கொண்டியங்கி வருகிறோம்.

அவ் ஆயதங்கள் நீங்கள் குறிப்பிடும் எதிரிக்கு எதிராகத் திருப்பப்படாமல் போராட்டத்துக்கு எதிராக திருப்பப்படுவதாக அல்லவா குற்றம் சுமத்தப்படுகிறது?

எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய பொறுப்பை புலிகள் ஏற்க வேண்டும். அப்படிக் கொண்டு வந்து விட்டு அரசோடு நிற்கிறாhகள்; என்கின்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு புலிகளுக்கு தார்மீக உரிமை கிடையாது.மீண்டும் தமது பிரதேசங்களில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தமிழ் இயக்கங்கள் தயாரானால் அதனைப் புலிகள் அனுமதிப்பார்களா? தம்மால் துரத்தப்பட்ட முஸ்லிம்களையே திருப்பி அழைக்காத புலிகள் எப்படி ஏனைய இயக்கங்களை அனுமதிப்பர்?  டெலோவை புலிகள் வேட்டையாடத் தொடங்கிய போது டெலோ அரசோடு இருக்க வில்லை. மக்களோடு இருந்த காலத்தில் தான் புலிகள் நசுக்கத் தொடங்கினர். ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் அதே நிலைமை தான். இந்த நிலைமையில் நாங்கள் மக்களோடு நிற்பதற்கு ஒரு பிரதேசம் வேண்டியிருக்கிறது. தற்காலிகமாக இராணுவம் நிலை கொண்டிருக்கிற பிரதேசத்தில் நாங்கள் நிலை கொண்டிருக்கிறோம் . அவ்வளவு தான்.

சரி, புலிகளின் மீதான அழித் தொழிப்பு நடவடிக்கைகளில் கழகமும் ஈடுபட்டு வருவதாகச் சொன்னால்..?

நாங்கள் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அழித்தொழிப்பில் ஈடுபட்டதில்லை. அவர்களிடம் இருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்கான சந்தர்ப் பங்களில் மாத்திரம் தான் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கப்பட்டுள்ளது.

இராணுவ சோதனை நடவடிக்கை களில் சேர்;ந்து கூட்டாக செயற்படுகிறீhகள் அல்லவா?

சுற்றி வளைப்புகளுக்கு ஒரு போதும் கழகம் போவது கிடையாது. ஆனால் நொச்சிமோட்டை, தாண்டிக்குளம் போன்ற பிரதான இராணுவ சோதனை சாவடிகளில் கழக உறுப்பினர்கள் இருத்தப்பட்டுள்ளனர்.  அதற்கான காரணம் மக்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு சிரமமேற்படாமல் அனுப்ப வேண்டியுள்ளது. அவர்கள் புலிகளின் பிரதேசத்திலிருந்து வரும் எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். புலி வருது புலி வருது என்று தான் பார்க்கிறார்கள். சில வேளைகளில் புலிகளும் வந்திருக் கிறார்கள். பிடிபட்ட எத்தனையோ புலிகளைக் கூட நாங்கள் வெளியில் எடுத்து விட்டிருக்கிறோம். அதனைச் சொன்னால் வெளியுலகம் நம்பாது. புலிகள் எங்களை துரோகிகள் என்று தான் முத்திரை குத்தி வைத்துள்ளது.

உங்கள் இலக்கு எனக் கூறும் தமிழீழத்தை பாராளுமன்ற வழிமுறைக் கூடாக அடைய முடியுமென்கின்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா?

பாராளுமன்றங்களுக்கூடாகவும் இணக்கங்கள் காணப்படலாம். அதற்கு உலகில் ஏகப்பட்ட விடுதலைப் போராட்ட அனுபவங்களும் உண்டு. ஆனால் ஆசியச் சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அனைத்து உரிமைகளையும் கொண்ட தமிழீழத்தை இந்தப் பாராளுமன்ற வழிமுறைக்கூடாகப் பெறமுடியாது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற சந்தேகம், கைது, தடுப்பு, சித்திரவதை என்பனவற்றுக்கு காரணமாகவுள்ள அவசரகால சட்டத்துக்கு உங்கள் இயக்கம் ஆதரவு அளித்து வந்தது  பற்றி...?

எந்தக் காலத்திலும் ஆதரவு வழங்கவில்லை. ஈபி.டி.பி. மட்டும் தான் தமிழ் இயக்கங்களில் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறது. மற்றும்படி கூட்டணி எதிர்த்து வாக்களிக்கிறது.

அவசரகாலச் சட்டம் தொடர்பான கழகத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களை நசுக்கப் பாவிக்கப்படும் இந்தச் சட்டத்துக்கு தமிழ் எம்பி.க்கள் ஆதரவளிப்பது பெரும் முட்டாள்தனம்.

இந்த அரசாங்கம் பதவியேற்ற முதல் இருவருடங்களாக கழகம் ஆதரவளித்துத் தானே வந்திருக்கிறது?

கழகத்திலுள்ள சில மிதவாதப் போக்கின் விளைவாகவும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அந்தளவுக்கு கழகத்தின் அரசியல் சீரழிந்துள்ளதாகக் கூறலாமா?

அரசியல் பிரிவுக்குள் சில முரண்பாடுகள் உண்டு தான். ஆனால் அவை குறித்து மேலதிகமாகப் பேச விரும்பவில்லை.

சம்பவமாகக் கூறாமல் சிக்கலை மாத்திரம் கூறுங்களேன்?

நாங்கள் பாசிச இயக்கம் இல்லையே. ஜனநாயக இயக்கம். அந்த விதத்தில். மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் எமது இயக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் சில முரண்பாடுகளை தோற்றுவித்து விடுகின்றன.

இயக்கத்தில் அரசியல் விவாதங் களுக்கான வழிகள் இருக்கின்றன அப்படியா?

ஆம், அதன் காரணமாகத் தான் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக வெளியில் பேசப்படுகிறது.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் தான் இருக்கிறது என உலகத்துக்கு பறை சாற்றவென வடகிழக்கில் பொதுவாக தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். இந் நிலைமையில் எதிர்வரும் உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட இருக்கிறீர்களே?

சகல தேர்தல்களும் தவறானவை என்பதல்ல. அதனை நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது. அரசு எங்கும் சிவில் நிர்வாகத்தை அப்படியே நடத்தப்போவதில்லை. அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் இல்லையென்பது ஒரு போதும் கழகத்தால் அம்பலப்படுத்தப்பட்டதில்லையே?

நாங்கள் இருக்கின்ற பகுதிகளில் மாத்திரம் தான் நாங்கள் பதில் சொல்லலாம்.

ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என அழைக்கப்படும் உங்கள் இயக்கம் வவுனியாவுக்கு மட்டும் தான் பொறுப்பு சொல்லுமா?

மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் எமக்குச் சேவை செய்ய அனுமதி கேட்டோம் அனுமதி தரவில்லை. ஆனால் வவுனியா மக்கள் தந்திருக்கி றார்கள். அங்கும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலும்  மக்களுக்குச் சேவை செய்கிறோம்.

அரசின் தீர்வு யோசனை தொடர்பாக..?

வரலாற்றில் பல தலைவர்களைப் போல சந்திரிகாவும் பொதி எனும் பேரில் ஏற்க முடியாத யோசனையை முன்வைத்திருக்கிறார்.

ஆனால் நீங்கள் ஆதரவளிப்பதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தனவே?

தீர்வு முயற்சிக்குத் தான் ஆதரவளித்தோமேயொழிய தீர்வுப் பொதிக்கு அல்ல. அதற்கு நாம் ஆதரவளிக்கவில்லை.

நன்றி - சரிநிகர் (மே 1999)


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates