Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“மகாவம்சம்” 6 ஆம் தொகுதி: தொடருக்கான அறிமுகம் - என்.சரவணன்

“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது.

மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு முந்திய 1100 ஆண்டுகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம்.

மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக வெளிவந்த 6வது மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வரிசையில் இறுதியாக வெளிவந்த தொகுதி 6வது தொகுதி. கடந்த 2016 ஆம் ஆண்டு அது இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. “மகாவம்சம்” என்கிற வரலாற்றுக் குறிப்புகளை இன்று அரசே எழுதி வைத்து வருகிறது என்பதை இங்கே முதலில் விளங்கிக்கொள்வோம். கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச்சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் வெளியிடப்படுவதுமில்லை. அதை எழுதும் அணியில் எந்த தமிழ் அறிஞர்களும் இருந்ததுமில்லை. இவ்வாறு சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களும் கூட தமிழர்களால் வெளிக்கொணர முடிந்ததில்லை.

மகாவம்சத்தின் தோற்றம்

கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் உள்ளதைப் பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அதே வேளை மகாவம்சத்தில் உள்ள பல வரலாற்றுத் தகவல்கள் தொல்லியல் ஆய்வுகளைத் தூண்ட பயன்பட்டுள்ளன.

இதை எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மகாவம்சத்தின் அரசியல் வகிபாகம்

இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட இலங்கையின் புராதன வரலாற்றைப் பற்றி பேசும் போது மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். குறைநிறைகளுக்கப்பால் மகாவம்சத்தை அடியாகக் கொண்டே மூலாதாரங்களைத் தேடும்/தொகுக்கும் ஆராய்ச்சி மரபுக்கு ஆட்படாத எந்த வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது. இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்குகளிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதமாக “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம் விளங்குகிறது. இந்தியாவில் இந்துத்துவ தீவிரத்தனமைக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” இருப்பதாக முழுமையாக நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணமாக மகாவம்சம் பின்புல சித்தாந்தமாக இயக்கப்பட்டு வருகிறது.

மொழியாக்கம்

கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.

மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான்  குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம்  லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA)  என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அந்தப் பணியை அன்திரிஸ் த சில்வாவிடம் அன்று ஒப்படைத்தவர் அன்றைய ஆளுநர் கிரகெரி.

இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.

அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட்


(Mabel Haynes Bode) என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி மகாவம்சத்தின் இரண்டாம் பாகமாக கொள்ளப்படும் “சூளவம்சம்” (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று அறிஞராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வரலாற்றுப் புலமைத்துவத்துடன் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுவரை மகாவம்சத்தின் முதலாவது தொகுதி தவிர எதுவும் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த மகாவம்ச மொழிபெயர்ப்புகள் கூட தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. தமிழில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தொகுதியை மாத்திரம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவை எதுவுமே கூட; சிங்கள மகாவம்சத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல. சொல்லப்போனால் மொழிபெயர்த்தவர்களின் சுருக்கமான - சொந்த விளக்கவுரை / பொழிப்புரை தான். இந்த ஐந்தையும் எடுத்து மூலத்துடன் பரிசீலித்தால் அந்த வித்தியாசங்களை அப்படியே உணர்வீர்கள்.


ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?

மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, களை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத  நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி. 

இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.

2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.

சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதமாக மகாவம்சம் திகழ்கிறது.

இதுவரையான மகாவம்சத் தொகுதிகள்

இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.

  1. தொகுதி  1 -  இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் (37வது அத்தியாயம் வரை) எழுதப்பட்டது
  2. தொகுதி  2 -  கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான (100வது அத்தியாயம் வரை) ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (இதைச் “சூளவம்சம்” என்றும் அழைப்பர்)
    1. தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை
    2. தர்மகீர்த்தி (II) தேரரால் 79-90 வது அத்தியாயம் வரை
    3. திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் 90-100 வது அத்தியாயம் வரை
    4. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர்  ஆகியோரால் 101 வது அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது
  3. தொகுதி  3 -  1815 முதல் 1936 வரை. (114 வரை வது அத்தியாயம் வரை) யகிரல பஞ்ஞானந்த தேரரால் எழுதப்பட்டது
  4. தொகுதி  4 -  1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை. (124வது அத்தியாயம் வரை) கலாநிதி நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  5. தொகுதி  5 -  1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை. (129 வது அத்தியாயம் வரை) பெல்லன ஸ்ரீ ஞானவிமல தேரரின் தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  6. தொகுதி  6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம்  முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை. (133 வது அத்தியாயம் வரை) அரசின் கீழ் அமைக்கப்பட்ட மகாவம்சக் குழுவால் திருமதி மாலினி எந்தகம தலைமையில் இயற்றப்பட்டது.
    1. 130 வது அத்தியாயம் - ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989) 
    2. 131 வது அத்தியாயம் - ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
    3. 132 வது அத்தியாயம் - சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
    4. 133 வது அத்தியாயம் - மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)

எந்த “சிங்கள பௌத்தத்தின்” பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும். ஆனால் இலங்கைத் தீவு சிங்களவர்களின் தீவு, சிங்கள மக்களே மண்ணின் மைந்தர்கள், 5000 வருடங்களுக்கு பௌத்தத்தை காக்க புத்தர்  அருளிச் சென்ற தீவே இலங்கைத் தீவு என்கிற தம்மதீப சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கவும் இதே மகாவம்சத்தைத் தான் இதுவரை பயன்படுத்தி வந்திருகிறார்கள். இன்றும் தொடர்கிறார்கள்.

எனவே தமிழில் மகாவம்சம் பற்றிய விரிவான ஆய்வுகள் அதி அவசியமானவை. அத்தகைய ஆய்வுகளுக்கு “மூலம்” அவசியம். அந்த “மூலத்தை” தமிழில் ஒப்படைக்கும் முயற்சியே இந்த மொழிபெயர்ப்புத் தொடர். இத்தொடர் மொழிபெயர்ப்புக்கப்பால்; தேவைப்படும் இடங்களில் மேலதிக விளக்கங்களுக்காக அடிக்குறிப்புகளோடு வெளிக்கொணர்வது எமது நோக்கம். மற்றும்படி மூலமொழியில் உள்ளபடி அப்படியே வழங்குவதே எமது இலக்கு.

(தமிழன் பத்திரிகையில் மார்ச் 3 தொடக்கம் தொடராக வெளியாகும் மகாவம்சம் 6வது தொகுதியின் மொழிபெயர்ப்புக்கான மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இது)

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்

ராகுல சாங்கிருத்தியாயன் (09.04.1893 – 14.04.1963)  என்கிற பெயரை அறியாத ஆழமான தமிழ் வாசகர்கள் எவரும் இருக்க முடியாது. அவரை இந்திய அறிஞராக மட்டுமே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரை ஆய்வெழுத்தாளராக ஆக்கியதில் இலங்கையின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அவரைப் பற்றி வெளிவந்த எந்த நூலிலும் இலங்கைப் பின்னணி குறித்த விபரங்கள் ஓரிரு வரிகளுக்குள் மாத்திரமே சுருங்கி விட்டிருப்பதை காண முடிகிறது. இக்கட்டுரை அவரின் பல நூல்களையும், அவரைப் பற்றிய பல நூல்கள், ஆவணங்கள் என்பவற்றில் இருந்தும் தேடித் திரட்டி எடுக்கப்பட்டவற்றின் தொகுப்பாகும்.

இதில் உள்ள ஆச்சரியமும், வேதனையுமான விடயம் என்னவென்றால் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரின் நூல்கள் எதிலும்; அவரைப் பற்றிய சுயசரிதைக் குறிப்புகளில்; இக்கட்டுரையில் வெளியிடப்பட்ட இலங்கையுடனான தொடர்பு பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இல்லாதது தான்.

அவருக்கு ராகுல சாங்கிருத்தியாயன் என்கிற பெயர் சூட்டப்பட்டதே இலங்கையில் தான் என்பதும், அவர் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டு பௌத்த ஆய்வுகளில் முன்னணி அறிஞராக ஆனதிலும் அவரது இலங்கைப் பயணம் தான் என்பதையும் அறிகிற போது வியப்பே மேலிடுகிறது. அவரின் படைப்புகளில் ஓரிரு நூல்களைத் தவிர எஞ்சிய அனைத்தும் இலங்கையில் இருந்து அவர் திரும்பிய பின்னர் வெளிவந்தவை தான்.

ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம், பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்தததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 

ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.

அவர் காசியில் சமஸ்கிருதம், அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற டயரிக் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல அலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்ட நூல்.

1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காக பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

அநாகரிக தமபால தொடர்பு

இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற் காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாக கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையில் இருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுலின் பங்கும் கணிசமானது.)

புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கொமிட்டியை ராகுல் கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாக சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கொமிட்டியில் ராகுல் முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்கு புறப்பட்டார்.

இலங்கை விஜயம் – பௌத்த தீட்சை – பெயர் மாற்றம்

அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு  தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். அவர் லுனுபொகுனே ஸ்ரீ தம்மானந்த தேரரின் சிஷ்யர். 

ராகுல் 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார். கல்கத்தாவில் மகாபோதி சங்கம் அவருக்கு உதவியது. வித்தியாலங்கார பிரிவெனாவில் அவர் சுமார் 19 மாதங்கள் (16 May 1927 to 1 December 1928) பௌத்த கல்வியைக் கற்றார்.

அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் வித்தியாலங்கார பிரிவெனாவிலேயே பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். 1923 ஆம் ஆண்டு 20 வது வயதில் அவர் வைஷ்ணவ துறவு நிலைக்குச் சென்ற போது அவர் கேதார்நாத் பாண்டே என்கிற தனது இயற் பெயரை பாபா ராம் உதார் தாஸ் என்கிற பெயரை சூட்டிக் கொண்டார். பின்னர் 1930 ஆம் ஆண்டு பௌத்த துறவியாக தீட்சை பெற்றபோது அப்பெயரையும் மாற்றி “ராகுல சாங்கிருத்தியாயன்” என மாற்றிக்கொண்டார்.  ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர். இலங்கையில் சிங்கள மொழியில் ராகுல என்றே அழைப்பார்கள். ஆனால் அவர் தன்னை “ராகுல்” என்றே அழைத்துக்கொண்டார். சாங்கிருத்தியாயன் என்பது அவரின் குடும்ப கோத்திரப் பெயர். அவரின் மூல நூல்களில் எல்லாம் “Rahul Sankrityayan” என்றே இருப்பதைக் கவனிக்கலாம். அவரின் வாழ்நாள் முழுதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.

அவர் முறைசார் கல்வியை இலங்கையில் தான் கற்றார். பல பௌத்த நூல்களைப் படித்தார். இந்திய கலாச்சார வரலாறு பற்றிய தனது அறிவையும் விரிவுபடுத்தினார். இலங்கையில் Pali text society வெளியீடுகளிலும் லண்டன், பம்பாய், வங்காளம் இலங்கை ஆகிய கிளைகளைக் கொண்டிருந்த ரோயல் ஏசியாடிக் சொசைட்டியின் பருவ இதழ்களிலும் அவர் ஆர்வம் கொண்டு எழுதினார். இலங்கையில் ராகுலுக்கு தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க. ராகுல் இலங்கையில் சிங்களத்தையும் கற்றுக்கொண்டார்.

அவர் எழுதிய “இந்திய கலாச்சாரமும் பௌத்த விமர்சன பாதையும்” (භාරතීය සංස්කෘතිය හා බෞද්ධ විචාර මාර්ගය) என்கிற தலைப்பில் ஒரு சிங்களக் கட்டுரையைக் காணக் கிடைத்தது. அதில் இந்தியாவில் பௌத்தம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நாம் இதுவரை அறியாத விபரங்கள் அளவற்றை தந்திருக்கிறார். இக்கட்டுரை எங்கே எப்போது வெளிவந்தது என்கிற விபரங்களை அறிய முடியவில்லை. சிங்களத்தில் வெளிவந்திருப்பதால் அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒன்றா அல்லது சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றா என்பதையும் அறிய முடியவில்லை.

பிற்காலத்தில் இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாக ஆன ராஜேந்திர பிரசாத் இந்திய காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்த காலத்தில் 1927 டிசம்பரில், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்குப் சென்று விட்டு அங்கிருந்து இலங்கைக்கு விஜயம் செய்தார். அவருக்கு வழிகாட்டியாக ராகுல் இருந்தார். அவரின் பயண அறிக்கையை பத்திரிகைளுக்கு எழுதினார். அப்போது அலகாபாத்தில் இருந்து வெளியாகும் “சரஸ்வதி” என்ற ஹிந்தி மாத இதழில் இலங்கையைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இலங்கையில் சில உள்ளூர் மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுத்தார். இலங்கையில் இருந்து அவர் செல்லும் போது பௌத்த ஆய்வுகளுக்காக திபெத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் 1931 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டு மீண்டும் 1931 இல் இலங்கை வந்து ஓராண்டு தங்கி இருந்தார். 


இலங்கையில் சிங்களத்தையும், பாளி மொழியையும் பௌத்த இலக்கியங்களைப் பற்றி ஆழமாக கற்றுணர்ந்தார். பௌத்த புனித நூலான “திரிபீடக” (மூன்று பீடங்கள்) எனப்படுகின்ற பௌத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந்து “திரிபீடகாச்சார்யா” என்கிற பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் “திரிபீடகாசார்ய மகா பண்டிதர் ராகுல சாங்கிருத்தியாயன்” எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே வாழ் நாள் முழுவதும் நிலைத்து நின்றது. ஒன்றரை வருடம் கழிந்து 01.12.1928 அன்று அவர் இலங்கையிலிருந்து நேபாளுக்கு பயணமானார். இந்த 19 மாதங்களில்  ஆனாலும் அவர் இலங்கையில் பாளி நூல் கழக வெளியீடுகளையும், ரோயல் ஆசியாடிக் சொசைட்டியின் லண்டன், பம்பாய், இலங்கைக் கிளைகளினால் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுச் சஞ்சிகைகளின் பழைய தொகுதிகளை கற்றார். அவர் அவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

இலங்கையில் இருந்து சென்றதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், தீபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கபடாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார். 

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இவை முன்னர் இந்தியாவில் அழிந்துபோன நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும்.

லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் ராகுல் பௌத்த உயர் பட்டப்படிப்பை வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவருக்கு அப்பல்கலைக்கழகத்தில் பௌத்த திரிபிடகம் பற்றிய கற்கையை முடித்துக் கொண்டதால் அவருக்கு திரிபீடகாச்சார்ய மகா பண்டித பேராசிரியர் என்கிற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.  அவர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் தந்தையாக ஆகியிருந்த நிலையில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. 1959 இலிருந்து 1961 வரை அவர் அங்கே பேராசிரியராக பணியாற்றினார். அது மட்டுமன்றி வித்யாலங்கார பல்கலைக்கழகம் 1959ஆம் ஆண்டு ஆரம்பித்த “தத்துவம் மற்றும் ஆராய்ச்சி” பீடத்தின் முதல் பீடாதிபதி ராகுல சாங்கிருத்தியாயன் என்பதையும் இங்கே பதிவு செய்யவேண்டும்.

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ராகுல் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

“ஹீனயான-மகாயான இருவகையான பெளத்தங்கள் முறையே வடக்கு பௌத்தம் - தெற்கு பௌத்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, இலங்கையில் பௌத்த துறவிகள் மத்தியில் நடந்த ஆழமான கோட்பாட்டு விவாதங்களில் பாரம்பரிய இந்திய தத்துவம் கிட்டத்தட்ட முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. பௌத்த பிக்குமார் இந்திய தத்துவத்துக்கு மாறாக கவிதை அழகியல் மற்றும் ஜோதிடம் என்பவற்றை சமஸ்கிருதத்தின் மூலம் கற்றனர். அந்த விவாதங்களில் இருந்து சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது தம்ம அறிவியல் (scholastic) அல்லது சமஸ்கிருத இலக்கிய மரபே. இலங்கையின் தற்கால தேரவாத மரபில் உருவாகியிருந்த இந்தத் தத்துவத் தனிமை வித்யாலங்காரத் துறவிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வித்யாலயங்காரவில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தில் அந்த சமச்சீர் தத்துவத்தை இணைத்த இரண்டு முன்னோடிகளைக் குறிப்பிட வேண்டும். அந்த இருவர் வித்யாலயங்காரா பிரிவெனவின் அதிபர் ஸ்ரீ தம்மானந்த தேரர், அடுத்தவர் இந்தியாவிலிருந்து வந்திருந்த அப் பிரிவெனவின் சமஸ்கிருத ஆசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்.

வித்யாலங்கார பிரிவெனாவில் வெளிநாட்டு அறிஞர்களின் சேவைகளை சரியான முறையில் பயன்படுத்தியதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவில் இருந்து சமஸ்கிருதம் கற்பிக்க வந்த அறிஞர் ராகுல சாங்கிருத்யாயனாரே சிறந்த உதாரணம். அவர் 1927 ஆம் ஆண்டு பிரிவெனாவில் சேர்ந்தார். வித்யாலங்கார பிரிவெனாவில் மூன்று வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் வித்யாலங்கார பிரிவெனாவின் பௌத்த துறவிகள் மத்தியில் இருந்து எழுந்த “அதிருப்தி அறிவுசார் இயக்கம்” (විසම්මුතික බුද්ධි ව්‍යාපාරය) தொடங்கிய காலமும் அதுதான். சாங்கிருத்யாயன் சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல, மேற்கத்திய தத்துவமும். பண்டைய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு செயல்பாட்டாளராகவும் இருந்த ஒரு அறிவுஜீவி. வித்யாலங்கார பிரிவெனாவில் பாலி மொழி மற்றும் பௌத்த தத்துவத்தை மேலும் கற்று, சமஸ்கிருத மொழி மட்டுமன்றி மேலதிகமாக வித்யாலங்கார பிரிவெனா வகுப்புகளின் இளம் துறவிகளுக்கு ஐரோப்பிய தத்துவம், பாரம்பரிய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாக நாரவில தம்மரதன தேரர் குறிப்பிடுகிறார்.” 

இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் பேராசிரியராக வைத்துக் கொண்டது, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகம் பௌத்த அறிஞராக (Scholar) அவரை அழைத்து அவரின் அறிவைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் அவரின் பட்டத்தை முறையான பட்டமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எந்தப் பல்கலைக் கழகமும் கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவித்தை அவருக்கு கொடுக்கவுமில்லை. அவர் காலமானதன் பின் அதே ஆண்டு அவருக்கு இந்திய உயர் விருதான பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது.

ஊர் சுற்றியின் யாத்திரைகள்

பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுலும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 50 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்.

அவர் எழுதிய பயணக் கட்டுரை தொகுப்பு நூல்களில் ஊர்சுற்றிப் புராணம் மட்டுமே தமிழில் வெளிவந்திருக்கிறது என்பதையும் இங்கே கூறியாக வேண்டும். இதை விட கின்னர் தேஷ் (Kinnar Desh) என்கிற நூலை எழுதினார். அது ஹிமாலய பகுதிகளுக்கு பயணம் செய்து அவர் கண்டெடுத்த தொல்லியல் ஆதாரங்களையும், அனுபவங்களையும் வைத்து எழுதப்பட்ட நூல். அதை விட அவர் திபெத் பயணம் செய்து அதுபோன்றே பலவற்றை கண்டு பிடித்த அனுபவங்களை திபெத் யாத்ரா (Tibbati Yatra) என்கிற நூலை எழுதினார். சோவியத் யூனியன் பயணம் பற்றிய அனுபவத்தை (Soviyat Bhumi) என்கிற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இரண்டு தொகுதிகளும் சேர்ந்தே சுமார் 1200 பக்கங்கைக் கொண்டது. இதை விட அவர் "ராகுல் யாத்ராவளி” (Rahul Yatravali) என்கிற இரண்டு பெரிய தொகுதிகளைக் கொண்ட நூலை வெளியிட்டார். இது 1949 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நூலின் முதலாம் பாகம் இந்திய உபகண்டத்தில் அவர் பயணித்த இடங்களைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளை எழுதியுள்ளார். 425 பக்கங்களைக் கொண்ட அந்நூலில் பல அத்தியாயங்களும் அவற்றுக்குள் பல உட் தலைப்புகளையும் கொண்டிருக்கிறது. இந்த நூலில் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் அதற்கு முன்னர் எழுதிய “லங்கா” நூலின் உள்ளடக்கத்தை அப்படியே உள்ளடக்கியிருக்கிறார்.

ராகுல் யாத்த்ராவளி நூலின் இரண்டாம் பாகத்தில் பயணவியல் தொடர்பான தத்துவக் கட்டுரைகளின் தொகுப்பாகும். 


இதுவரை வெளிவராத “லங்கா” நூல்

“லங்கா” நூலை அவர் இலங்கைக்கு முதல் தடவை வந்த அதே ஆண்டிலேயே வெளியிட்டார் என்பதையும் கவனிக்குக. இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விபரித்து “லங்கா” (लंका) நூலை அவர் எழுதி முடித்தார். இக்கட்டுரைக்காக அந்த நூலை தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஹிந்தி எழுத்துக்களில் சமஸ்கிருத மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது. அதில் உள்ள பக்கங்களை தோராயமாக மொழிபெயர்த்து அதன் உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விபரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும், இலங்கை எழுத்துலகில் அதைப் பற்றி எங்கும் அறியப்படவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. 1950 இலிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது. 

உலகப் பிரசித்தி பெற்ற நூலாக பிற்காலத்தில் ஆன “ஊர்சுற்றிப் புராணம்” போன்ற பயண அனுபவ நூலை எழுதிய அவர்; இலங்கையில் அவர் வாழ்ந்த சொற்ப காலத்துக்குள் அவர் பயணித்த இடங்களையும் அவற்றின் பின்னணி, வரலாறு மக்களின் வாழ்வியல் என்பவற்றையும் அழகாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பின்வரும் ஏழு தலையங்களில் அவர் அதனை எழுதியுள்ளார்.

1. அனுராதபுரம் : இலங்கையின் தலைநகரம்

2. பொலன்னறுவை அலது புலஸ்தியபூர் (புலஸ்திகம)

3. கண்டி

4. கொழும்பு சுற்றுப் பயணங்கள்

5. இலங்கை மக்களும், பௌத்த துறவிகளும்

6. இலங்கையில் இந்துக்கள்

7. Adam’s peak (சிவனொளிபாதமலை)

பண்டைய இலங்கை நாகரிகம், பௌத்த மரபு, காலனித்துவம், மக்களின் வாழ்வியல், தென்னிந்தியத் தொழிலாளர்கள், அன்றைய அரசியல் சூழல் என பலவற்றை அவர் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை.. அது மட்டுமன்றி ராகுல் பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல். வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. 

“சிங்கள வீர புருஷர்கள்”

இதை விட “சிங்கள வீர புருஷர்கள்” என்கிற இன்னொரு இந்தி மொழி நூலையும் அவர் எழுதியிருப்பதை அறிய முடிகிறது. “சிம்ஹல் கே வீர் புருஷ்” (सिंहल के वीर Simhal ke Vir Purush) என்கிற அந்த நூலின் பிரதியை தேடி எடுக்க முடியவில்லை; ஆயினும் அந்நூல் இந்தி மொழியில் இன்றும் ஒன்லைனில் விற்பனைக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது. இந்த நூலில் பிரதானமாக

  1. துட்டகைமுனு மன்னன்: இலங்கையை ஒருங்கிணைத்து சோழர்களின் படையெடுப்பை முறியடித்தவர். 
  2. முதலாம் பராக்கிரமபாகு: சிங்களப் பேரரசை விரிவுபடுத்தி பொற்காலத்தை நிறுவிய சக்திவாய்ந்த அரசன்.
  3. விஜயபாகு I: போர்த்துக்கேயர்களுக்கு எதிரான சிங்கள எதிர்ப்பை வழிநடத்தியவர்

போன்ற விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1961 என்பதால் இந்த காலத்தில் தான் அவர் இலங்கையில் பேராசிரியராக பணியாற்றிய காலம் என்பதையும் கருத்திற் கொண்டால் இந்த நூல் இலங்கையில் இருந்து போது எழுதபட்டிருப்பதை நம்மால் அனுமானிக்கலாம்.

பன்முக ஆய்வாளர்

வர்னாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்காருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.

தனது பத்து வயதிலேயே காசியை விட்டுக் கிளம்பும் ராகுல சாங்கிருத்தியாயன் அதிலிருந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் பெரும் பயணங்களில் தனது வாழ்வைக் கழித்தார். அவரின் காலத்தில் அவரளவு பயணங்களை மேற்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. அதுவும் அந்தப் பயணங்கள் அவரை புடம்போட்ட விதத்தை அவரின் எழுத்துக்களில் வாயிலாக அறியமுடியும். தத்துவம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், ஆன்மிகம், அரசியல் விஞ்ஞானம், மெய்யியல் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் அவரது எழுத்துக்கள் விரிந்திரிப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். அவர் எழுதி பதிப்பிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியலே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளை அவரின் வெளிவராத எழுத்துக்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அவர் இந்தி, சமஸ்கிருதம், பாளி, ஆங்கிலம் என இன்னும் பல மொழிகளை கற்றிருந்தாலும், அவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் இந்தி மொழியிலேயே வெளிவந்திருக்கிறது. அவற்றில் பல நூல்கள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில நூல்கள் இந்தி எழுத்துக்களின் மூலம் சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார். 

இலங்கையில் இருந்து அவர் பௌத்தராக திரும்பியதன் பின்னர் அவர் முக்கிய ஆறு பௌத்த நூல்களை முதன்முதலாக இந்தி மொழியில் எழுதி வெளியிட்டார்.

1. Buddha-Charya (பௌத்த சரியா) 1930

2. Dhammapada (தம்மபதம்) 1933

3. Majjhima-Nikaya (மஜ்ஜிம நிக்காய) 1933

4. Vinaya Pitaka (வினய பீடகம்) 1934

5. Dirgha Nikaya (தீர்க நிக்காய) 1935

6. Tibbat mein Bauddha Dharma (திபெத்தில் பௌத்தம்) 1935 

7. Bauddha Sanskriti (பௌத்த கலாசாரம்) 1952

இப்பட்டியலில் மஜ்ஜிம நிக்காய உள்ளிட்ட நூல்கள் பிரகிருதி மொழியில் இருந்து ராகுலால் இந்தி மொழியில் கொண்டு வரப்பட்டவை என்பதை கவனிக்குக.

அநகாரிக தர்மபாலவால் தொடங்கப்பட்ட “The Maha – Bodhi” சஞ்சிகையில் 1936 ஆம் ஆண்டு இதழ்களில் ராகுல சாங்கிருத்தியாயன் பற்றிய விபரங்களைக் காண முடிகிறது. அவரை “Tiripitakachariya Bhikshu Sri Rahula Sankrityayana” என்றே அவ்விதழ் விளிப்பதைக் காண முடிகிறது. காஷ்மீர் ஸ்ரீநகரில் அவர் செய்த பௌத்த உரைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதில் மெச்சுகிறது. 

இன்னோர் இடத்தில் “வஜ்ஜிரயான” அறிமுகப்படுத்தப்பட்டதனாலேயே இந்தியாவிலிருந்து பௌத்தம் இல்லாமல் போனமைக்கான காரணம்” என ராகுல விபரித்திருப்பதை குறிப்பிடுகிறது.

பிக்கு ஜகதிஷ் காஷ்யப (Bhikkhu Jagadish Kasyapa, M.A.) என்பவர் எழுதிய கட்டுரையொன்றில்

“நம் ஹிந்தி இலக்கியம் இத்துறையில் கிட்டத்தட்ட வெறுமையாகவே ஆகி விட்டமை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ராகுல சாங்கிரித்யாயன் அவர்களின் கடினமான உழைப்பின் விளைவாக  தீக நிக்காய, மஜ்ஜிமா நிக்காய, புத்தச்சரிய, வினய பீடகம் போன்ற பல மதிப்புமிக்க புத்தகங்கள் எங்களிடம் இப்போது உள்ளன. அவர் தம்மத்துக்கும் இந்தி இலக்கியத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளார்.” என்கிறார்  

(தீக நிக்காய என்பது திரிபீடகத்தின் ஒரு பகுதியாகும். 34 சூத்திரங்களைக் கொண்ட அந்த நூல் புத்தரின் சமகாலத்து தத்துவ ஞானிகளின் கருத்துகளை உள்ளடக்கியதாகும் )

அதே 1936 டிசம்பரில் வெளியான இதழில் திபெத்துக்கு போகும் வழியில் (On way to Tibet) என்கிற ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எழுதியிருப்பதைக் காண முடிகிறது. அக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே “நேபாளில் இருந்த இரண்டு மாதங்களில் “தீக நிக்காய” நூலின் எழுத்து சரிபார்ப்பை நிறைவு செய்துவிட்டேன். அதில் தவரவிடப்பட்டிருந்த மூன்று அத்தியாயங்களும் இப்போது அதில் சேர்க்கப்பட்டுவிட்டது.” என்கிறார். மொத்தம் பத்து பக்கங்களைக் கொண்ட அந்த பயண அனுபவக் கட்டுரையின் இறுதியில் “தொடரும்...” என்று காணப்படுகிறது. மீண்டும் அடுத்த இதழில் 16 பக்கங்களில் அந்தக் கட்டுரையின் அடுத்த பாகம் வெளிவந்திருக்கிறது.

ஒரு மாக்ஸியவாதியாக

பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்திய பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.


பவுத்தப் பயிற்சி அவரை இயல்பாகவே மார்க்சியத்தின்பால் அவரை கொண்டு செலுத்திற்று. 1935 ஆம் ஆண்டு சோவியத் தேசம் சென்றார். அங்கே தத்துவஞானப் பயிற்சியும் விடுதலை வேட்கையும், மாக்ஸிய அமைப்புக்களோடு கொண்ட தொடர்பும், இடை விடாத போராட்டமும்; விஞ்ஞான சோஷலிசமே மனித சமூகத்தைக் கடைத்தேற்ற உறுதியான வழி எனக்காணத் துணை செய்தன. எனவே கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினரானார். 

ராகுல் தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். பீகார் சோசலிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தராக அவர் இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆரசு இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தபோது அதை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி சிறை வாழ்க்கை அனுபவித்தார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மாக்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மாக்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார். அதை விட மேலே குறிப்பட்ட “சோவியத் தேசம்” என்கிற பெரு நூலும் முக்கியமானது. மேலும் அவர் ஸ்டாலின் (1954), லெனின் (1954), கார்ல் மார்க்ஸ் (1954) மாஓ சேதுங் (1954) ஆகிய மாக்சிய தலைவர்களைப் பற்றிய சுயசரிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் மாக்சிய பாத்திரம் குறித்து பல கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன. அந்த வரிசையில் “Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue” என்கிற கட்டுரை குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் இருந்த காலமே அவரின் உடல்நிலை குன்றிப் போன காலமாக அமைந்தது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என ஒன்றன்பின் ஒன்றாக வந்து இறுதியில் அவர் நினைவாற்றலையும் இழந்தார். ஏழு மாதங்கள் சோவியத் யூனியனில் சிகிச்சை பெற்று 1963 ஏப்ரல் 9 ஆண்டு நாடு திரும்பினார். இந்தியா திரும்பி ஐந்து நாட்களில் ஏப்ரல் 14 அன்று அவர் டார்ஜிலிங்கில் காலமானார். இறுதி இரண்டாண்டுகள் அவர் நினைவாற்றலை இழந்தே இருந்தார்.  

ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய சுமார் பதினைந்து நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். குறைந்தபட்சம் அவர் இலங்கை பற்றியும், பௌத்தம் பற்றியும் எழுதிய எஞ்சிய நூல்களாயினும் முதலில் தமிழ் மொழியில் வெளிக்கொணர முடியுமாயின் தமிழ் ஆய்வுலகுக்கு இன்னும் பேருதவியாக அமையும்.

மேலதிக உசாத்துணை

  • Prabhkar Machwe, Rahul Sankrityayan, Sahitya Akademi, 1978
  • Johannesbeltz, Mahar, Buddhist And Dalit, Religious Conversion and Social-Political Emancipation in Contemporary Maharashtra, Manohar Publishers, 2005
  • Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)
  • The Buddhist Vol – VI-VII, Krishta Kunj, 1937
  • பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் ராகுல் சாங்கிருத்யாயன் – ராகுல் சாங்கிருத்தியாயன் – 1986
  • Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935
  • கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)
  • Ven. Dr. Khammai Dhammasami, "The Twentieth century: Early Efforts" - Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue, (Teaching Dhammain New Lands), Academic Papers presented at the 2nd IABU Conference Mahachulalongkornrajavidyalaya University, Main Campus Wang Noi, Ayutthaya, Thailand, 2012
  • මහාචාර්ය ජයන්ත අමරසිංහ, “සොමිබර පවර නිසයුර නුවණ සුරගුර ලුණුපොකුණේ ශ්‍රී ධර්මානන්ද නා හිමියෝ”, සිළුමිණ, 27.01.2024
  • Anoop Tiwari, Rahul Sankrityayan – The Forgotten Musafir of India, https://medium.com/
  • https://medium.com/@anoop_tiwari/rahul-sankrityayan-the-forgotten-genius-10768ae7a8e3
  • Maya Joshi, Rahul Sankrityayan's Journeys of the Self, Studies in Humanities and Social Sciences, 2009, Indian Institute of Advanced Study Rashtrapati Nivas, Shimla.
  • ලුණුපොකුණේ ශ්‍රී ධර්මානන්ද නා හිමි (1869-1945) - ආචාර්ය උදය මල්ලවාරච්චි (இக்கட்டுரை வெளிவந்த நூல் எது என்பதை அறிய முடியவில்லை.)
  • ஜனவரி 08, 2020 அன்று களனிப் பல்கலைக்கழகத்தின் 60வது ஆண்டு விரிவுரைத் தொடரின் 1வது விரிவுரையாக வரலாற்றுப் பிரிவில் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட வடிவமே இந்தக் கட்டுரை. இதை சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) பின்னர் நூலாக வெளியிட்டது.
  • The Maha-Bodhi - Vol 44, December, 1936
  • ஆர்.பார்த்தசாரதி, ராகுல சாங்கிருத்தியாயன் (ராகுல்ஜி) வாழ்க்கைக் குறிப்பு, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 

பிற்குறிப்பு:

இன்னொரு சுவாரஷ்யமான தகவலையும் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழிலோ ஆங்கிலத்திலோ கூட அத்தகவல் இல்லை. ராமர் கோவில் பற்றிய உரையாடல்கள் நிகழும் இந்த நேரத்தில் இதைப் பகிர்வது பயனுள்ளது.

கரப்பாத்ரி என்கிற ஒரு இந்து வெறியர் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” என்கிற ஒரு நூலை வெளியிட்டதாகவும் அதை எதிர்த்து ராகுல்ஜியும் “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூலை எழுதியதாக ஆர்.பார்த்தசாரதியின் “ராகுல சாங்கிருத்தியாயன் வாழ்க்கைக் குறிப்பு” என்கிற நூலில் காணக் கிடைத்தது.

இதைப் பற்றி அறிவதற்காக தேடினால் முதலில் கரப்பாத்ரி என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுதித் தேடுவது. எப்படி எல்லாமோ தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலை ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன். “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” அப்படி ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன் எதுவும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் இதனை மொழிபெயர்ப்பு உதவியுடன் இந்தியில் அச்சொற்களை எடுத்து தேடினேன். இதோ கிடைத்துவிட்டது. அந்த இரு இந்தி மொழி நூல்களையும் pdf இல் தரவிறக்கிக் கொண்டேன். (Ramrajya Aur Marksvad (रामराज्य और मार्क्सवाद), Marxvad Aur Ramarajya (रामराज्य और मार्क्सवाद)).

இதற்காகத் தான் எனது நூல்களில் நபர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றை நிச்சயமாக ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிக்குள் இட்டு விடுவேன். அடுத்த கட்ட ஆய்வாளர்களுக்கும் தேட விரும்புபவர்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.

பின்னர் கரப்பாத்ரி என்பவரின் பெயரை ஆங்கிலத்தில் Karpatri என்று அறிந்து கொண்டேன். அவரைப் பற்றித் தேடினால் அவரை சுவாமி கர்பாத்ரி என்று அழைப்பதை கண்டுகொள்ள முடிந்தது. மிகத் வெறித்தனமான இராம பக்தர். இந்து மத சாஸ்திரங்கள் சார்பாக பல சமய கண்டன விவாதங்களை நடத்தியவர். ஆனால் சுமார் 900 பக்கங்களைக் கொண்ட அவரின் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலில் அது வெளிவந்த ஆண்டு இருக்கவில்லை. அதேவேளை சாங்கிருத்தியாயன் அதற்கு வினையாற்றி கண்டன விவாதமாக கொண்டுவந்த “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூல் 1959 இல் வெளிவந்திருக்கிறது. எனவே தீவிர தேடலின் பின் கரப்பாத்ரியின் நூல் 1956இல் வெளிவந்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.

ராம ராஜ்ஜியம் குறித்த கருத்தாக்கத்துக்கு எதிராக அதுவும் முக்கிய இந்துத் தலைவரின் நூலுக்கு எதிராக 70 ஆண்டுகளுக்கு முன்னரே ராகுல்ஜி எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சுமார் 100 பக்கங்களுக்குள் அடங்கிய இந்த நூல் தமிழில் வெளிவரவில்லையே என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.


ராகுல் சாங்கிருத்யாயன் படைப்புகள்

இலக்கியம் - இந்தி

நாவல்கள்

1. பய்ஸ்வின் சாதி 1923?

2. ஜினெ கே லியே 1940

3. சிம்ஹ சேனாபதி 1944

4. ஜெய் யவ்தேயா 1944

5. பாகோ நஹீன், துனியா கோ பாத் லோ 1944

6. மதுர் ஸ்வப்ன 1949

7. ராஜஸ்தானி ராணிவாஸ் 1953

8. விஸ்ம்ரித் யாத்ரி 1954

9. திவா தாஸ் 1960


சிறுகதைகள்

10. சாத்மி கே பச்சே 1935

11. வால்கா ஸே கங்கா 1944

12. பகுரங்கி மதுபுரி 1953

13. கனெய்லா கி கதா 1955-56


சுயசரிதை

14. மேரி ஜீவன் யாத்ரா (5 பாகங்கள்) I-1944, II-1950 (3 பாகங்கள் அவரது மரணத்திற்குப்பின் பிரசுரமாயின.)

வாழ்க்கை வரலாறு

15. சர்தார் பிருத்வி சிங் 1955

16. நயே பாரத் கே நயா நேதா 1942 (2 பாகங்கள்)

17. பச்பன் கி ஸ்மிரிதியான் 1953

18. அதித் ஸே வர்த்தமான் (முதல் பாகம்) 1953

19. ஸ்டாலின் 1954

20. லெனின் 1954

21. கார்ல் மார்க்ஸ் 1954

22. மா – சே-துங்  1954

23. கூமாக்கார் சஸ்வாமி1956

24. மேரா ஆஷாயோக் கே ஸாதி 1956

25. ஜின்கா மேய்ன் கிரிதாஜ்னா 1956

26. வீர் சந்திரசிங் கார்வாலி 1956

27. சிங்கள கூமாக்கார் ஜெய்வர்தன் 1960

28. கப்தான் லால் 1961

29. சிங்கள கே வீர் புருஷ் 1961

30. மகா மானவ் புத்த 1956


பயணநூல்

31. மேரி லடாக் யாத்ரா 1926

32. லங்கா 1926-27

33. மேரி யுரோப் யாத்ரா 1932

34. மேரி திபெத் யாத்ரா 1937

35. யாத்ரா கே பன்னே 1934-36

36. ஜப்பான் 1935

37. ஈரான் 1935-36

38. ரூஸ் மே பச்சீஸ் மாஸ் 1944-47

39. கின்னர் தேஷ் 1948

40. திபெத் மே ஸவா வர்ஷ் 1931

41. கூமாக்கார் சாஸ்த்ரா 1949

42. ஆசியா கே துர்காம் பூ-கந்தோன் மே 1956

43. சீன் மே க்யா தேக்கா? 1960


கட்டுரைகள்

44. சாகித்ய நிபந்தாவளி 1949

45. புரதத்வ நிபந்தாவளி 1986

46. திமாகி குலாமி 1937

47. துமாரி க்ஷாயா 1937

48. ஆஜ் கி சமஸ்யாயன் 1944

49. சாம்யவாத் ஹாய் க்யோன்? 1934

50. அதித் ஸே வர்த்தமான் (2-ம் பாகம்) 1953


போஜ்புரி

51. தீன் நாடக் 1942

52. பாஞ்ச் நாடக் 1942


திபெத் மொழி

53. திபெத்தி பால் சிக்ஷா 1933

54. பதாவளி (1,2,3 பாகங்கள்) 1933

55. திபெத்தி வியாகரண் 1933


இதர நூல்கள் இந்தி

அறிவியல்

1. விஸ்வ கி ரூப்ரேகா 1942


சமூகவியல்

2. மானவ் சமாஜ் 1942


அரசியல்

3.சோவியத் நியாய1939

4. ராகுல்ஜி கா அப்ராத் 1939

5. ஆஜ் கி ராஜ்நீதி 1949

6. கம்யூனிஸ்ட் க்யா சாஹ்தே ஹைன்? 1953

7. க்யா கரேன்? 1937

8. சீன் மே கம்யூன் 1960

9. சோவியத் கம்யூனிஸ்ட் பார்டி கா இதிஹாஸ் 1939

10. ராம்ராஜ்யா அவுர் மார்க்ஸ்வாத்


தத்துவம்

11. வைஞ்னானிக் பௌதிக்வாத் 1942

12. தர்சன் - திக்தர்சன் 1942

13. பௌத்த தர்சன் 1942


சமயம்

14. புத்த சரியா 1930

15. தம்மபத 1933

16. மாஜ்ஹிம—நிகாய 1933

17. விநய பீடக 1934

18. தீர்க நிகாய 1935

19, திபெத் மே பௌத்த தர்ம 1935

20. பௌத்த சன்ஸ்கிருதி

21. இஸ்லாம் தர்ம கி ரூப்ரேகா 1923


பயண நூல்

22. சோவியத் பூமி

23. சோவியத் மத்ய ஆசியா

24. டார்ஜீலிங் பரிச்சய 1950

25. குமாயுன் 1951

26. கார்காவால் 1952

27. ஜாவ்ன்சார் -டேராதுன் 1955

28. ஆஜாம்கார் கி புராகதா

29. இமாசல் பிரதேஷ் 1954 (பிரசுரமாகவில்லை)

30. நேபாள் 1953


அகராதி மற்றும் லெக்சிகள்

31. ஷாஸன்-ஷப்த- கோஷ் 1948

32. திபெத்தி-இந்தி கோஷ் (முதல் பாகம்) 1974


இலக்கிய வரலாறு

33. இந்தி காவ்யதாரா (அப்பிரம்ஷா) 1944

34. தாக்கினி காவ்யதாரா 1952


நாட்டார் பாடல்

35. ஆதி இந்தி கி கஹானியா அவுர் கீதன் 1950


ஆய்வு

36. சாராஹ்பாத் கிரித் தோகா கோஷ் 1954


வரலாறு

37. மத்ய ஆசியா கா இதிகாச (1,2 பாகங்கள்) 1952

38. ரிக்வேதிக் ஆரிய 1956

39.அக்பர்

40. பாரத் மே ஆங்ரேஸி ராஜ்ய கா ஸன்ஸ்தாபக் 1957

41. பாலி சாகித்ய கா இதிகாஸ்


தொகுப்பு

42. துளசி ராமாயண் சங்க்ஷேப் (தொகுத்தது) 1957

43. சூத்ர கிரிதங்கா (பதிப்பித்தது) சம்ஸ்கிருதம்

44. சம்ஸ்கிருத காவ்யதாரா 1955 சம்ஸ்கிருதம்

45. பாலி காவ்யதாரா (வெளிவரவில்லை) பாலி


மொழிபெயர்ப்பு

46. சைத்தான் கி அங்க் 1923

47. விஸ்மிரிதி கி கர்ப் மே 1923

48. ஜாடு கா முல்க் 1923

49.சொனே கி தன் 1923

50. தாகுந்தா 1947

51. ஜோ தாஸ்தே 1947

52. அநாத் 1948

53. ஸன்விதான் கா மஸவ்தா 1948

54. ஆதினா  1951

55. சுத்கோர் கி மௌத் 1951

56. ஷாதி 1952


சமஸ்கிருதம் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வு

57. சம்ஸ்கிருத பதமாலா (5 பாகங்கள்) 1928

58. அபிதர்ம கோஷ் 1930

59. விஜ்னாப்திமாத்ரத சித்தி 1934

60. ஹேது பிந்து 1944

61. சம்பந்த பரிக்க்ஷா 1944

62. நிதான – சூத்ர (பரிக்க்ஷா) 1951

63. மகா பரிநிர்வாண சூத்ர 1951

64. வாத-நியாய

65. பிரமாண-வார்திக 1935

66. பிரமாண-வார்திக பாஷ்ய 1935-36

67. பிரமாண-வார்திக விருத்தி 1936

68. பிரமாண-வார்திக ஸ்வவிருத்தி 1936

69. பிரமாண-வார்திக-ஸ்வவிருத்தி-திகா 1937

70. அத்யார்த்த-சாதக 1935

71. விக்ரக வியாவர்த்தினி

72. விநய சூத்ர 1943


மேற்படி நூல்கள் பற்றிய பட்டியல் ஆதாரம்

Prabhakar, Machwe Rahul Sankritiyayan – Sahitya Akademi, New Delhi, 1978

நன்றி - தாய்வீடு

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை 

முக்தா சால்வே : முதல் தலித் பெண் எழுத்தாளர் - வித்யா குல்கர்னி

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று 167 ஆண்டுக்கு முன்பே முழங்கிய 14 வயது சிறுமி.

முக்தா சால்வே மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாட்டின் முதல் தலித் பெண் எழுத்தாளராகக் கருதப்படுகிறார். முக்தா சால்வே (Mukta Salve) தனது 14 வயதில் எழுதிய ஒரு கட்டுரையின் அடிப்படையில் அவரது அடையாளம் உருவாக்கப்பட்டது.

இச்சம்பவம் 167 ஆண்டுகளுக்கு முன்பு 1855ல் நடந்தது. உண்மையில், ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் புனேவில் பள்ளியைத் தொடங்கிய போது, ​​அந்தப் பள்ளியில் முக்தா ஒரு மாணவியாகச் சேர்ந்தார்

அந்தப் பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்த போது, ​​முக்தா தனது குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களைப் பற்றி புரிந்துகொண்டு, தலித்துகளின் பிரச்னைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.

இந்த சிறு கட்டுரை 'மாங் மஹாராச்சேயா துக்விசை' அல்லது 'மாங் மற்றும் மஹரின் துன்பம்' என்று அழைக்கப்படுகிறது. இதில், முக்தா மஹர்களின் கோரிக்கைகள் மற்றும் துன்பங்களை முன்வைப்பது மட்டுமல்லாமல், அதன் சமூக காரணங்களையும் விவாதித்து, சமூக சமத்துவமின்மையின் மீது கூர்மையான தாக்குதலை நடத்துகிறார்.

அக்காலத்திலும் முக்தாவின் இக்கட்டுரை பெரிதும் பாராட்டப்பட்டதுடன் இன்றும் முக்தாவின் கட்டுரை தலித் பெண் இலக்கியத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.

முக்தா சால்வே 1840 இல் புனேவில் பிறந்தார். சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வு உச்சத்தில் இருந்த காலகட்டம், உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்திய காலம் அது. அக்காலத்தில் தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட 'மாங்' சாதியில் பிறந்தவர் முக்தா.

அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சமயக் கல்வி பிராமண ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தது. பெண்களோ, 'தீண்டத்தகாதவர்களோ' சமயக் கல்வியைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் சில பள்ளிகள் இந்துப் பெண்களுக்காக திறக்கப்பட்டன. ஆனால், இதுவரை கல்வியில் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமுதாய மக்களுக்கு இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், முக்தா 11 வயதில் பள்ளிக்குச் சென்றார்.

உண்மையில், ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புனேவில் பெண்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். பெண்களுக்கென தனிப் பள்ளியைத் திறந்த முதல் இந்தியர்கள் பூலே தம்பதிகள்.

இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சேர்க்கப்பட்டனர். அவர் 1848 இல் புனேவின் பிடே வாடாவில் முதல் பள்ளியைத் திறந்து, அனைத்து சமூக எதிர்ப்பையும் மீறி அதைத் தொடர்ந்தார். ஆனால் ஒரு பள்ளி போதாது என்பதை பூலே தம்பதியினர் உணர்ந்தனர். கல்வியறிவு இழந்தவர்களை பள்ளிக்கு அனுப்பும் தேவை பல பள்ளிகளுக்கு இருந்தது.

பூலே தம்பதியினர் புனேவில் வெவ்வேறு இடங்களில் பள்ளிகளைத் திறக்க இதுவே காரணம். 1851-52ல் சிப்லுங்கர் வாடாவில் மற்றொரு பள்ளி தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் வேடலில் மூன்றாவது பள்ளி தொடங்கப்பட்டது.

ஜோதிபா-சாவித்ரிபாயின் கல்வியை பரப்பும் பணியை ஆதரித்தவர்கள் பல்வேறு இடங்களில் பள்ளிகளை அமைக்க அவருக்கு உதவினார்கள். அவர்களில் ஒருவர் லஹுஜி சால்வே. கிராந்திகுரு உஸ்தாத் என்று அழைக்கப்படும் லஹுஜி சால்வே, வேட்டலில் தற்காப்புக் கலைப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.

லஹுஜி சால்வேயின் பேத்தி முக்தா சால்வே ஆவார். இவர் பூலே தம்பதியரின் மூன்றாவது பள்ளியின் மாணவி ஆவார். முக்தா மஹர் மற்றும் மாங் சமூகத்தில் இருந்து பள்ளிக்குச் சென்ற முதல் பெண். 11 வயதில் படிப்பைத் தொடங்கினார்.

'மஹர் மற்றும் மாங் சமூகங்களின் துன்பங்கள்' என்ற பிரச்சினையில் அவரது புகழ்பெற்ற கட்டுரை 1855 இல் வெளியிடப்பட்டது. அவர் மூன்று வருடங்கள் மட்டுமே பள்ளியில் படித்தார். அவருடைய பதினான்காவது வயதில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் காரணமாக அவர் பெயர் வரலாற்றில் அழியாத இடம் பிடித்தது. ஒரு தலித் பெண்ணால் எழுதப்பட்ட முதல் புத்தகம் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் இன்றும் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று முழக்கம்

அவரது கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் முக்தாவின் காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதிகளின் சமூக நிலையை வெளிப்படுத்துகிறது.

1855 பிப்ரவரி 15-ம் தேதி ‘ஞானோதயா’ இதழில் முக்தா சால்வே எழுதிய கட்டுரையின் பக்கங்கள்

இந்த கட்டுரையில் அவர் கடவுளைப் பற்றிப் பேசும் போது, 'வலிகள், கோரிக்கைகள், துன்பங்கள்' என்பன பற்றி பேசுகிறார். உண்மையில், இந்த சமூகங்கள் மத அமைப்புக்கு வெளியே ஏன் கருதப்படுகின்றன என்று அவர் கடவுளிடம் முறையிடுகிறார்.

மத அமைப்பு ஒன்றைப் பொறுப்பேற்று நடத்தும் பிராமண சமூகத்தை நயவஞ்சகர்களாகக் கருதும் அவர், “வேதங்கள் நம்முடையது என்றும், அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிராமணர்கள் கூறுகிறார்கள். எனவே எங்களிடம் எந்த மதப் புத்தகமும் இல்லை என்பது தெளிவாகிறது," .

"வேதங்கள் பிராமணர்களுக்கானது என்றால், வேதத்தின்படி நடந்துகொள்வது பிராமணர்களின் தர்மம். மத புத்தகங்களைப் பார்ப்பதற்கு சுதந்திரம் இல்லை என்றால், நாம் மதமற்றவர்கள் என்பது தெளிவாகிறது, இல்லையா?"

இது தவிர, தன் மதத்தைப் பற்றி கடவுளிடம் கேள்விகள் கேட்கிறார்.

இது பற்றி அவர் அக்கட்டுரையில் எழுதும் போது, “கடவுளே, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எந்த மதத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்? அதை நாங்கள் அனைவரும் சமமாக அனுபவிக்கும் வகையில் எங்களுக்குச் சொல்லுங்கள். ஆனால் ஒரு சமூகம் மட்டுமே அனுபவிக்கும் ஒரு மதம், பின்னர் இதுபோன்ற மற்ற மதங்கள் பூமியில் இருந்து அழிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட மதத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் மனதில் வரக்கூடாது," 

கட்டுரையின் கூர்மையான மொழி

பிறப்பின் அடிப்படையில் சிறப்பான சமூக அந்தஸ்து பெறுபவர்களை விமர்சித்து, மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் பேணுவதே மதத்தின் பணியாக இருக்க வேண்டும் என்று முக்தா தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பேஷ்வா சகாப்தத்தின் சமூக சூழ்நிலையை விவரிக்கும் போது முக்தாவின் எழுத்துகள் பெரும் குரலெடுத்து ஒலிக்கின்றன.

பேஷ்வா காலத்தின் அநீதியையும், தீண்டத்தகாதவர்கள் மீதான பிராமணர்களின் மனிதாபிமானமற்ற நடத்தையையும், விலங்குகளை விட தாழ்வாக நடத்தப்பட்டதையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, முக்தா எழுதியுள்ளார், “பிராமணர்கள் நம்மை பசுக்கள் மற்றும் எருமைகளை விடக் கீழான மனிதர்களாகக் கருதினர். பாஜிராவ் ஆட்சியின் போது நாங்கள் கழுதைகள் போல் நடத்தப்பட்டோம். முடக் கழுதையைக் கொல்லாதே என்று சொல்வார்கள். ஆனால் மாங்கையோ மஹர்களையோ கொல்லாதே என்று சொல்ல அப்போது யாரும் இல்லை,” 

பேஷ்வா காலம் பற்றிய விமர்சனம்

அக்காலத்தில் கல்வி என்பது பிராமணர்களின் பாக்கியமாக கருதப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், கீழ் மட்டத்தில் இருப்பதாகக் கருதப்படும் சாதிகள் எப்படி கற்கும் வாய்ப்பை இழந்தார்கள் என்பது முக்தாவின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

இது குறித்து அவர் எழுதும் போது, "தீண்டத்தகாதவர்கள் அரசரின் வீட்டு வாசல் வழியாகச் செல்வது தடை செய்யப்பட்டால், அவர்கள் அறிவைக் கற்கும் சுதந்திரம் எங்கிருந்து கிடைக்கும்? தீண்டத்தகாதவர்கள் யாரேனும் படித்து அது, பாஜிராவுக்குத் தெரிந்தால், அவர் அதை ஒரு மஹர் மற்றும் மாங் சாதியைச் சேர்ந்தவன் எப்படிப் படிக்க முடியும்? அவன் படிக்கிறானா? அவனை யார் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்? இப்படி பல கேள்விகளைக் கேட்டு அவனை தண்டிப்பார்," என எழுதுகிறார்.

தலித்துகளுக்கு கல்வி தடை செய்யப்படும் போதும், தீண்டத்தகாதவர்கள் என்ற அவமரியாதைக்கு ஆளாகும்போதும், வேலை வாய்ப்பை இழந்தாலும் அவர்களின் நிலை எப்படி மேம்படும் என்ற கேள்வியை முக்தா தனது கட்டுரையில் எழுப்புகிறார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமூகத்தின் இந்த யதார்த்தம் இன்றும் முற்றாக மாறவில்லை என்பது வருந்தத்தக்கது.


பிராமண சமூக சீர்திருத்தவாதிகளின் பாராட்டு

முக்தா தனது கட்டுரையில் சாதி சமத்துவமின்மை என்பது மட்டுமின்றி பாலின சமத்துவமின்மையுடன் வறுமையின் கொடுமையையும் தலித் சமூகத்தின் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று எழுதியுள்ளார்.

"நம்முடைய பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது, ​​அவர்களின் வீடுகளுக்கு கூரை கூட இல்லை. அவர்கள் வெயில், மழை மற்றும் காற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு எவ்வளவு பரிதாபமான நிலையில் தவிக்கின்றனர்? தொற்றுநோய்கள் பரவும் போது அவர்களது நிலை என்ன? ஒரு நாள் அவருக்கு உடம்பு சரியில்லை என்ற நிலை ஏற்பட்டால், மருந்துக்கும் டாக்டருக்கும் பணம் எங்கிருந்து கிடைக்கும்? இலவச மருந்து கொடுக்க உங்களில் யார் தயாராக இருக்கின்றனர்?" என எழுதியுள்ளார்.

பேஷ்வாக்கள் காலத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறையையும் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் அவர். முக்தா சால்வே தனது கட்டுரையில் ஆங்கிலேயர்களால் சமூகத்தில் ஜாதி அமைப்பின் கொடுமை குறைந்துவிட்டது என்று எழுதியுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதிகளான பிராமணர்களின் பணிகளையும் அவர் தனது கட்டுரையில் பாராட்டியுள்ளார். இது குறித்து எழுதும் போது, "இப்போது ஒரு அதிசயமான விஷயம் நடந்தது, நேர்மையான மற்றும் அன்பான பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை எழுதுவதில் நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எங்களுக்கு சிரமத்தை அளித்த பிராமணர்களே, என் அன்பான நாட்டினரே, இப்போது நாங்கள் விடுவிக்கப்படுகிறோம். அவர்களை வெளியேற்றுவதற்காக நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் எல்லா பிராமணர்களும் இப்படி இருப்பதில்லை. யாருடைய எண்ணங்கள் பிசாசுகள் போல இருக்கிறதோ அவர்கள் முன்பு போல் நம்மை வெறுக்கிறார்கள்," என எழுதியுள்ளார்.

முக்தா தனது கட்டுரையில், தலித்துகள் கல்வி கற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். “அறியாமையை அகற்றுங்கள். பழைய நம்பிக்கைகளில் ஒட்டிக் கொள்ளாதீர்கள். அநீதியைப் பொறுத்துக்கொள்ளாதீர்கள்” என்று எழுதுகிறார்.

முக்தா சால்வேயின் இந்த எழுத்துகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவையாக உள்ளன.

மூன்றே வருடங்கள் மட்டுமே படித்த 14 வயது சிறுமியால் எப்படி இவ்வளவு தெளிவுடனும் ஆற்றலுடனும் எழுத முடிகிறது என்று கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். அவரது எழுத்துகளில் விறுவிறுப்பு மற்றும் விவரங்கள் அடங்கியிருக்கும். முக்தாவின் புத்திசாலித்தனம் மற்றும் திறமை போன்றவற்றின் பெருமை பூலே தம்பதியர் அளித்த கல்விக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். பூலே தம்பதிகள் அவருக்கு கல்வியை அளித்ததோடு மட்டுமல்லாமல், உண்மையைத் தேடும் போக்கையும் அவரிடம் வளர்த்தனர்.

பொதுக்கூட்டம் ஒன்றில் வாசிக்கப்பட்ட கட்டுரை

பூலே தம்பதியினர் முக்தாவுக்கு சுய விழிப்புணர்வு மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வைக் கற்றுக் கொடுத்தனர். மேலும் மத அமைப்பைக் கேள்வி கேட்கவும் கற்றுக் கொடுத்தனர். இதுவே உண்மையான தரமான கல்வியாக கருதப்படும்.

முக்தாவின் இந்தக் கட்டுரை 1855ல் 'ஞானோத்யா'வில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பல வாசகர்களைச் சென்றடைந்தது. முதல் பகுதி பிப்ரவரி 15 மற்றும் இரண்டாம் பகுதி மார்ச் 1 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், இந்த கட்டுரைக்கு பதில் இரண்டு கடிதங்களும் வெளியிடப்பட்டன.

அப்போது கிறித்துவ மிஷனரிகளின் வார இதழாக ஞானோதயா இருந்தது. அதே ஆண்டில் இந்த கட்டுரை பம்பாய் மாநில கல்வி அறிக்கையில் பிரிட்டிஷ் அரசின் சார்பாக வெளியிடப்பட்டது.

முக்தாவுக்கும் இந்தக் கட்டுரையை பெரும் கூட்டத்தின் முன்னிலையில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜோதிபாவின் பாராட்டு விழா விஸ்ரம்பாக் வாடாவில், புனே கல்லூரியின் முதல்வர், அரசு சிறைத் தலைவரும், பூலேயின் கல்விப் பணியின் நலம் விரும்பியுமான மேஜர் கண்டி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு சுமார் மூவாயிரம் பேர் முன்னிலையில் முக்தா தனது கட்டுரையை வாசித்தார். இதைக் கேட்டதும் மேஜர் கண்டி மிகவும் கவரப்பட்டார். அவரைப் பாராட்டி முக்தாவுக்கு சாக்லேட் ஒன்றை அவர் பரிசாக அளித்தார்.

அப்போது முக்தா, “சார் எங்களுக்கு சாக்லேட் வேண்டாம், லைப்ரரி வேணும்” என்றார்.

அந்த நேரத்தில் ஒரு தலித் பெண் புத்தகங்களையும் நூலகத்தையும் கோருவது எவ்வளவு அசாதாரணமாகவும் புரட்சிகரமாகவும் இருந்திருக்கும் என்பதை இப்போது கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.



முதல் தலித் பெண் எழுத்தாளர்

கட்டுரையில் முக்தா சால்வே எழுப்பிய பிரச்னைகள் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன.

பகுஜன்களின் விழிப்புணர்வுக்காக உழைத்த மகாத்மா பூலே, பாபா பத்மாஜி மற்றும் ரெவரெண்ட் முர்ரே மிட்செல் ஆகியோர் பல இடங்களில் முக்தா சால்வேவின் கட்டுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். என்.வி.ஜோஷி முக்தாவின் கட்டுரையின் ஒரு பகுதியை 1868 இல் வெளியிட்ட 'புனே விளக்கம்' புத்தகத்தில் வெளியிட்டார். முதலில் மராத்தியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மேலும், 1991 இல் வெளியிடப்பட்ட, பெண்களின் எழுத்தாற்றல் குறித்த ஒரு வரலாற்று இதழிலும் இடம்பெற்றது.

இன்றும் முக்தா சால்வேயின் அசல் கட்டுரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புடன் இணையத்தில் கிடைக்கிறது.

'மஹர்களின் கோரிக்கைகளும் வலிகளும்' என்ற கட்டுரையை எழுதிய பதினான்கு வயது முக்தா சால்வே முதல் தலித் பெண் எழுத்தாளர் என்று அங்கீகரிக்கப்படலாம். ஆனால் இந்த கட்டுரைக்குப் பிறகு அவர் என்ன எழுதினார்? என்ன மாதிரியான குணங்களைக் கொண்டவர் அவர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது பிந்தைய வாழ்க்கை குறித்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

அந்தக் கால வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலோர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மராத்தி வரலாற்றாசிரியர்கள் அவரைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. தலித் இலக்கியம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் செயல்முறை 1950 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அதாவது முக்தா சால்வேயின் கட்டுரை வெளியான சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அப்பணிகள் தொடங்கின. எஸ்.ஜி. மாலி மற்றும் ஹரி நரகே போன்ற அறிஞர்கள் முக்தா சால்வேவின் படைப்புகள் வரலாற்றில் சேர்க்கப்படாமல் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஏனெனில் பெண்கள் அல்லது தலித்துகளின் பணி அக்காலத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் தான் முக்தா சால்வேயின் முதல் மற்றும் ஒரே எழுத்துகள் எஞ்சியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்தக் கட்டுரையைப் படிப்பது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. முக்தா சால்வே பற்றி அதிகம் அறியப்படாவிட்டாலும், அவர் முதல் தலித் பெண் எழுத்தாளர் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லாததற்கு இதுவே காரணம்.

(இக்கட்டுரையை எழுதிய ஆசிரியர் ஒரு புகைப்படக்கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பெண்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஆர்வலர். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள்.)

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது போராட்டம் (1893 -2023) - என்.சரவணன்

இலங்கையில் முதலாவது தொழிலாளர் போராட்டமான அச்சுத் தொழிலாளர் போராட்டம் நிகழ்ந்து 130 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப் போராட்டம் தான் இலங்கைக்கு முதலாவது தொழிற்சங்கத்தை அறிமுகப்படுத்தியது, இந்தத் தொழிற்சங்கத்தின் பின்னர் தான் நாட்டில் பல தொழிற்சங்கங்கள் உருவாவதற்கு வித்தாக அமைந்தது. மலையகத்தின் முதல் தொழிற்சங்கம் கூட நாற்பது வருடங்களின் பின்னர் தான் உருவானது. ஏன் அதிக உழைக்கும் வர்க்கத் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு துறையில் தொழிற்சங்கமொன்று உருவாவதற்கு நான்கு தசாப்தங்கள் எடுத்தன என்பதற்கான காரணங்களை குமாரி ஜெயவர்த்தன  தனது “இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம்” என்கிற நூலில் விளக்குகிறார். அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய விபரமான வரலாற்று ஆய்வுப் பதிவுகளை செய்தவர் குமாரி ஜெயவர்த்தன என்றால் அது மிகையாகாது. தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“1893ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தொழிலாளர் இயக்கத்தில் பிரெடெரிக் ஏங்கெல்சின் கால சேவையைப் பாராட்டி வியன்னா நகரில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பின் போது; பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தமது சேவைக்கான அதி உயர்ந்த பரிசு என்பது’ சைபீரியச் சிறைச்சாலைகளிலிருந்து கலிபோர்னியாவின் தங்கச் சுரங்கங்கள் வரை, அவுஸ்திரேலியா போன்ற மிகத் தூர இடங்களுக்கும் பூமியின் நாலா பக்கங்களிலும் தொழிலாளர் இயக்கம் பரவியதுதான் எனப் பிரகடனம் செய்தார். இந்தப் பட்டியலில் அவர் இலங்கையையும் சேர்த்திருக்கலாம், ஏனெனில், அவர் கூறிய 'விழிப்புணர்வின் தீப்பொறி' கொழும்பு தொழிலாளரிடையே அவ்வேளையே இடம் இடம்பெற்றிருந்தது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி எச்.டபிள்யூ. கேவ் கொம்பனியைச் (H.W. Cave and Co) சேர்ந்த 60 அச்சுத் தொழிலாளர்கள் தமது சம்பளம் தாமதம் ஆனதற்காக 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.” 

இலங்கை தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் முன்னோடிப் போராட்டமாகக் கருதக்கூடிய இந்த போராட்டத்தினதும், முதலில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்கிற ரீதியிலும் இந்த ஆண்டு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் அதன் நினைவாக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லும்படியாக ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. 

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இலங்கையில் ஒரு அரசாங்க ஊழியர் ஒரு நாளைக்கு 10 மணிநேர  வேலைகளை செய்யும் நிலையே இருந்தது. ஒரு தனியார் துறை ஊழியர்  சுமார் 12 மணிநேரம் அல்லது 14 மணி நேரம் தினசரி வேலையாகக் கொண்டிருந்தார் . பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளிக்கு மாதத்திற்கு சுமார் முப்பது ரூபாவும், திறமையற்ற தொழிலாளிக்கு சுமார் பன்னிரண்டு ரூபா சம்பளமும் வழங்கப்பட்டது. இந்த ஊதியம் அதிகரிகப்பட்ட  அதிகரிக்கப்பட்ட சில சந்தர்ப்பங்கள் இருந்ததைப் போலவே குறைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. பணிக்குத் தாமதமாக  வருவது அபராதம் விதிக்கப் போதுமான குற்றமாக கருதப்பட்டது. அபராதம் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகமாகும். வேலையாட்களை மதிக்காதது, கீழ்ப்படியாமை, ஓய்வெடுப்பது போன்றவையும் இதே போன்ற குற்றங்களாக கருதப்பட்டன. பணியிலிருந்து வெளியேறுவது கடுமையான குற்றமாகும்.

19 ஆம் நூற்றாண்டில், நெசவாளர்கள், மாட்டு வண்டிக்காரர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே கணிசமான அளவு தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதும், அவை எந்த அமைப்பும் அல்லது தலைமையும் இல்லாமல் நடத்தப்பட்டன. அதுவும் அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவது மற்றும் சட்டப்பூர்வ உரிமங்களை வழங்குவது தொடர்பானவையாக இருந்தன. ஆனால் இவ்வாறு ஒரு நவீன தொழில்துறை போராட்டத்தின் வடிவத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிற முதல் வேலைநிறுத்தம் 1893 இல் கொழும்பில் நிகழ்ந்த அச்சுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமே.

1891 ஆம் ஆண்டில் இலங்கையில் பத்திரிகை அலுவலகங்களிலும், அச்சு நிறுவனங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சுத் தொழிலாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் பணிபுரிந்தனர். இந்தக் காலப்பகுதியில் கொழும்பில் தினமும் ஆங்கிலப் பத்திரிகைகள் மாத்திரம் வெளியிடப்பட்டன. தொழிலாளர் எழுச்சிக்குப் பின்னர் முதலாளிகளுக்கு சார்பான பத்திரிகைகள்; தொழிலாளர்களின் ஓர்மத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் உடனடியாக செய்திகளை வெளியிட்டன. உதரணத்துக்கு; அன்றைய ஊதியத்தை விடக் குறைந்த ஊதியத்தில் பணியில் அமர்த்துவதற்காக இந்தியர, சீன, மலாய்த் தொழிலாளர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியிட்ட செய்தியைக் குறிப்பிடலாம்.

1893ல் கொழும்பில் அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது தொழிற்சங்கங்களின் அவசியத்துக்காகக் அன்று போராடிய ஏ.ஈ.புல்ஜென்ஸ் மற்றும் கலாநிதி லிஸ்போ பிந்து  (Lisboa Pinto) ஆகியோர் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளின் விளைவு என்றும் கூறலாம். பறங்கி சமூகத்தைச் சேர்ந்த புல்ஜென்ஸ் இங்கிலாந்து சேரணு உயர்கல்வியைக் கற்று இலங்கைக்கு திரும்பி பொதுக் காரியங்களில் ஈடுபட்டவர். தொழிலாளர் பிரச்சினைகள் முதலில் லிஸ்போ பின்ரோவால் வெளியிடப்பட 'சுயாதீன கத்தோலிக்கம்' (Independent Catholic) இதழில் விவாதிக்கப்பட்டன. அச்சுத் தொழிலாளர்களின் முக்கிய குறைகளாக ஊதியமின்மை, மோசமான வேலை மற்றும் வாழ்க்கைத் தரம் என்பவற்றை முன்வைத்தனர். 

ஜூலை 1893 இல் , புல்ஜென்ஸ் அப்பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அது தொழிலாளி தனது சொந்த பலத்தையும் உரிமைகளையும் எவ்வாறு வென்றெடுப்பது என்பதை விளக்குகின்ற கட்டுரையாக அமைந்திருந்தது. அதன்படி, தொழிலாளர் சங்கங்களை கட்டியெழுப்புவதும், அவற்றின் மூலம் போராடுவதும், ஆட்சியாளர்களை அதன் மூலம் மண்டியிட வைப்பது எப்படி என்பது பற்றியும், உலகின் தொழிலாளர் போராட்டங்களைப் பற்றியும் அக்கட்டுரை விளக்கியது. இந்த கட்டுரை தொழிலாளர்களுக்கான ஒரு வேண்டுகோளாக இருந்தது. 

கட்டுரை வெளிப்படுத்திய சில உண்மைகள் மிகவும் வெளிப்படையானவை. பயணம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற மிக பலத்த மழை பெய்யும் நாளில் - காலி முகத்திடலில் மின்னல் தாக்கியதில் முத்து என்பவர் உயிரிழந்துள்ளார். அன்று காலை நகரத்தில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தில் தாமதமாக வந்ததற்காக ரூ.15 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் கொழும்பில் உள்ள எந்தவொரு பெரிய நிறுவனத்திலும் எந்த நாளிலும் மொத்த அபராதத் தொகை இவ்வளவு பெரியதாக இருக்குமா என்பது சந்தேகமே!

12 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஊழியருக்கு ரூ.12 அபராதம் விதிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மழை நாளில் தாமதமாக வந்ததற்காக. இந்த அலுவலகத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த அபராதம் ஒரே மாதத்தில் ரூ.  170. 

இந்த அநீதிகள் அனைத்தும் சமத்துவத்திற்கான நற்பெயரை அனுபவிக்கும் ஒரு நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்டது என்று கட்டுரை கூறுகிறது. இது போன்ற ஒரு நிறுவனத்தில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தால் " நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்" என்று அப்பத்திரிகை வாதிட்டது.

ஆனால் இந்தப் பிரச்சாரம் பலவீனமாகவே இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக புல்ஜன்ஸ் அப்பத்திரிகையின் ஊடாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக எச் டபிள்யு கேவ் நிறுவனத்தின் அச்சுப் பிரிவைச் சேர்ந்த சிலரை விவாதத்திற்குத் தயார்படுத்த முடிந்தது. கொழும்பில் அப்போது அன்றைய ஆங்கிலேயருக்குச் சொந்தமான மிகப் பெரிய அச்சக மற்றும் புத்தக வர்த்தக நிறுவனமாக எச்.டபிள்யு கேவ் நிறுவனம் இருந்ததுஆகும்.

இப்படி ஒரு சூழலில் தான் கேவ் நிறுவனத்தில் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. வழமையாக மாத இறுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் பல சிரமங்களையும் கடன் சுமைகளையும் எதிர்கொண்டனர். சில தொழிலாளர்களின் மாத சம்பளம், 11 ரூபாய் வரை குறைவாக இருந்தது. மேலும், தாமதமாக பணிக்கு திரும்புதல், சேவைத் தவறுகள் மற்றும் விடுப்பு என்பவற்றை காரணம் காட்டி அதற்கான தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டன. அச்சுத் தொழிலின் இயல்பால் ஏற்படும் உடல் ரீதியான உபாதைகள் மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் வாழ்ந்த மோசமான சூழல் போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் சோர்வுக்கும் சொல்லனா துன்பத்துக்கும் இலக்கானார்கள். காலதாமதமின்றி முறையாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கேவ் நிறுவனத்திடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் நிர்வாகம் அந்த கோரிக்கைகளை நிராகரித்தது. 

இறுதியில்  கியூ நிறுவனத்தின் 60 அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்  தொடங்கியது. ஆனால் அடுத்த நாளே அப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டார்கள். அடுத்தடுத்த நாட்கள் இன்னும் பலர் இணைந்துகொண்டார்கள்.

இத்தொழிலாளர்கள் தமிழ்,சிங்கள. பறங்கிய இனங்களைச் சார்ந்தவர்கள்; அவர்கள் மூன்று மொழிகளிலும் அச்சடிக்கும் வேலைகளை செய்தவர்கள். வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரு நாள் கழித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான அச்சுத் தொழிலாளர் சங்கம் (The Ceylon Printers Society) 1893ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. 

கொழும்பில் உள்ள ராக்கெட் கோர்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கம் அமைப்பதற்கான தீர்மானத்தை எஸ். பி. தம்போ என்பவர் முன்மொழிந்தார், லவன்டஹான் (Lovendahan) என்பவரால் ஆமோதிக்கப்பட்டது. அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 18.9.1893 வெளியான "தி டைம்ஸ் ஆஃப் சிலோன்"  இந்த கூட்டத்தை வரவேற்று எழுதியிருந்தது. சுமார் 450 ஊழியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்திற்கு பிரபல வழக்கறிஞர் சார்ள்ஸ் பெரேரா தலைமை தாங்கினார். லிஸ்போ பின்தோ தலைவராகவும், ஏ.இ.புல்ட்ஜென்ஸ் செயலாளராகவும், ஜே.ஜி.பெர்னாண்டோ பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறாக, அங்கத்தவர்கள் கல்வியறிவும் அறிவும் கொண்டவர்களாக தொழிற்சங்கத் துறைக்குள் நுழைந்ததைக் காணமுடியும்.

அச்சுத் தொழிலாளர் சங்கத்தினரின் தலைமைப் பீடத்திலும் பல இனத்தவரும் அங்கம் வகித்தனர். சங்கத் தலைவர் டொக்டர் லிஸ்போ பின்ரோ கோவாவைச் சேர்ந்தவர். செயலாளர் ஏ.ஈ.புல்ஜென்ஸ் ஒரு பறங்கியர். அதுபோல செயற்குழு அங்கத்தவர்கள் பல சமூகத்தையும் சேர்ந்தவர்கள். பௌத்த சமயத்திற்காகப் பாடுபட்ட மாட்டினஸ் பெரேரா. சீ.டொன் பஸ்தியன் போன்றவர்களும் செயற்குழுவில் அங்கம் வகித்தனர். இவ்வாறு தொழிலாள வர்க்கத்தின் முதல் நடவடிக்கை இன ஒற்றுமையின் அடிப்படையில் நிகழ்ந்தது. "ஒற்றுமையே பலம்" என்ற வாக்கியம் சங்கத்தினுடைய முதற் சுலோகமாக அமைந்தது. இச்சங்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் இச்சுலோகம் பெரிதாக எழுதப்பட்டுப் பலரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட “சுயாதீன கத்தோலிக்கம்” செய்தித்தாள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "இந்த சிறிய தீவின் வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இதுபோன்ற கூட்டத்தை நடத்துவதற்கான யோசனை மிகவும் புதியதும் ஆச்சரியமானதும். சிலருக்கு, இது மிகவும் துணிச்சலான செயலாகத் தோன்றலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்."

சம்பள நாளுக்கு மிக அருகில் இந்த வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டதால் சம்பளம் வழங்குவதை நிறுத்தி வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக, தொழிலாளர்கள் ஆறு நாட்களில் பணிக்கு திரும்பினர். இதனால், வேலை நிறுத்தம் தொடர முடியாததால், ஆறு நாட்கள் கழித்து முடிவுக்கு வந்தது. வேலையாட்களுக்கு ஓரளவு விசுவாசமாக இருந்த தொழிலாளர்கள் குழுவை அழைத்த தொழிலாளர்கள், நிபந்தனைகளுக்கு மன்னிப்பு கோருவதாகக் கூறி கடிதங்களில் கையெழுத்திட்டனர். மற்ற தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான். வில்லியம் என்கிற ஒரு தொழிலாளி இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவராக கணித்து ஒரு வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்த போதிலும், தொழிலாளர் சங்கம் நீண்ட காலம் நீடிக்கைவிட்டாலும், இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கான வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஊக்கம் தரும் முன்னோடி போராட்டமாகவும், உதாரணமாகவும் இது அமைந்தது.

அச்சு தொழிலாளர் சங்கம் இலங்கையின் முதல் தொழிற் சங்கமாக மாறியது. 1894 ஆம் ஆண்டில், சங்கம் உருவாக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டாக்டர் லிஸ்போ பின்ரோ இலங்கை அச்சுத் தொழிலாளர்கள் அனைவரும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரினார்.

அது மட்டுமன்றி இலங்கையில் நிகழ்ந்த இந்த போராட்டத்தின் பின்னர் அதாவது 1894 இல் சிட்னியும் பீட்ரிஸ் வெப் (Sidney, Beatrice Webb) ஆகியோர் எழுதிய தொழிற்சங்கவாதத்தில் வரலாறு (The history of trade unionism) என்கிற நூலும் வெளியாகியது. இந்த நூல் தொழிற்சங்கவாதிகளுக்கான மிக முக்கியமான கைநூலாக இன்றும் கருதப்படுகிறது. சுமார் 800 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த நூல் தொழிலாளர் இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பிரித்தானியாவில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப தோற்றம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அதன் வளர்ச்சியைப் பற்றி விரிவாக விபரிக்கின்ற நூல் இது. 

இந்நூல் பல காரணங்களுக்காக முக்கியமானதாகக் கருதபடுகிறது. முதலாவதாக, இது தொழிற்சங்கங்கள் பற்றிய முதல் முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். வெப்ஸின் புத்தகத்திற்கு முன்பு, தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் முக்கியமற்றவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்று முதலாளித்துவ அமைப்பு முறையால் நிராகரிக்கப்பட்டன. தொழிற்சங்கங்களை ஒரு தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் அதனை சட்டபூர்வமாக்குவதற்கும், பிரித்தானிய சமூக, பொருளாதார வரலாற்றில் அவற்றின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதற்கும் வெப்ஸின் பணி உதவியது.

இரண்டாவதாக, இந்த நூல் ஒரு தேர்ந்த முறையியலின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த நூல் ஏராளமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அவர்கள் பல தொழிற்சங்கத் தலைவர்களையும், அவற்றின் உறுப்பினர்களையும் நேர்காணல் செய்திருந்தனர். எனவே தொழிற்சங்க இயக்க வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் வெப்ஸின் பணி ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக ஆனது. பிரித்தானிய உதாரணங்களைக் கொண்டிருந்தாலும் அது உலக அளவில் தொழிற்சங்க அனுபவங்களைப் போதித்த நூலாக அமைந்தது.

மூன்றாவதாக, தொழிற்சங்கங்கள் வெறுமனே பேரம் பேசும் அமைப்புகளாக மட்டும் இருந்திட முடியாது அன்றும் அதன் ஏனைய புரட்சிகர பாத்திரங்கள் எவை என்றும் அந்த நூலில் விபரித்துச் செல்கிறார். ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் பலப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அந்நூலின் ஆசிரியர்கள் வாதிட்டனர். தொழிற்சங்கங்களைப் பற்றிய நவீன புரிதலையும் சமூகத்தில் அவற்றின் பங்கையும் வடிவமைக்க வெப்ஸின் பணி உதவியது எனலாம். தொழிற்சங்கவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் பரவலாக இது வாசிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிற்சங்க சட்டங்களையும், கொள்கைவகுப்பை வடிவமைக்கவும் வெப்ஸின் பணி உதவியது.

இலங்கைக்கு இடதுசாரி இயக்கங்களை விதத்தைத் தலைவர்கள் இந்தப் பின்னியில் தான் இங்கிலாந்தில் இருந்து கற்றுக்கொண்டு வந்து இலங்கையின் இடதுசாரி இயக்கங்களை ஸ்தாபித்தார்கள்.

1893 க்கு முன்னர் 1860 ஆம் ஆண்டு தர்ஸ்டன் தொழிநுட்ப கல்லூரியின் நிர்வாகத்திற்கு எதிராக ஆசிரியர்களும் அங்கே பணிபுரிந்த தச்சர்களும் நடத்திய வேலை நிறுத்தம், 1870 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன பணிமனையொன்றில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்,  1879 இல் வரி அதிகரிப்புக்கு எதிராக இறைச்சிக் கடை உரிமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் போன்றவை தொழிலாளர் போராட்டங்களாக இலங்கையின் வரலாற்றில் பதிவாகி இருக்கிற போதும்; முறையாக திட்டமிடப்பட்டு அமைப்பாகத் திரண்டு மேற்கொள்ளப்பட தொழிற்சங்கப் போராட்டமாக இதைத் தான் கொள்ள முடியும்.

நன்றி - ஜீவநதி - செப்டம்பர் 2023
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates