Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அதிகாரத்தை பிடிக்க சண்டித்தனம் காட்டும் மலையக அரசியல் - சி.சி.என்.


உரிமைகளுக்காக போராட்டங்கள் செய்து தொழிலாளர்கள் உயிர்நீத்த சம்பவங்கள் மலையக வரலாற்றில் இடம்பிடித்துள்ளன, ஆனால் தற்போது நிலைமை முற்றாக மோசமடைந்துள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் போராட்டங்கள்,சத்தியாகிரகங்கள் அல்லது பணிப் பகிஷ்கரிப்புகள் என ஏதாவது இடம்பெற்றால் அவை தொழிற்சங்கங்களின் சுயலாபத்திற்காகவும் ,அரசியல் இருப்புக்காகவும், தனி மனித செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கும் செய்யப்படுவனவாகவே உள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தொழிற்சங்கங்கள் ,அரசியல் கட்சிகளுக்கிடையே வார்த்தை மோதல்கள் தேர்தல் மேடைகளில் எதிரொலித்தன. அது வழமையானதொன்று என மக்களும் அதைக் கடந்து சென்றனர் ஆனால் இப்போது சபைகளை அமைப்பதற்கான நேரத்தில் கோஷ்டி மோதல்களும் ,அடிதடிகளும் துரோகச்சம்பவங்களும் தாராளமாக அரங்கேறுகின்றன.யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் அடி எடுத்து வைத்தார்களோ அந்தப் பிரதிநிதிகளே உயரிய சபையின் கௌரவத்தை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டார்கள். இவ்வாறான சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெறுவது தான் வேதனையாகும் .ஏனெனில் சகல அம்சங்களிலும் பின்தங்கித் தட்டுத்தடுமாறி முன்னேறி வரும் பெருந்தோட்ட சமூகம் அதிகமாக உள்ள இம்மாவட்டத்தில், நாகரிகம் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்திலும் தொழிலாளர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகளை என்னவென்பது?

நுவரெலியா மாவட்டம்

இலங்கை முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றாலும் ,இந்திய வம்சாவளி தமிழர்களின் பார்வை நுவரெலியா மாவட்டத்திலேயே இருந்தது. ஒரு மாநகரசபையையும், இரண்டு நகரசபைகளையும், ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்டிருந்த இம்மாவட்டத்தில் கணிசமான சபைகளை தமிழர்களே ஆளும் நிலைமைகள் கடந்த காலங்களில் உருவாகியிருந்தன. இதற்குப்பிரதான காரணம் இங்கு அதிகாரத்தில் இருக்கும் மலையக அரசியல் கட்சிகள். கொள்கைகள், தனிப்பட்ட விரோதங்கள் போன்றவற்றால் தாமும் பிரிந்து நிற்பது மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்து வைத்து அரசியல் செய்யும் வித்தைகளை இந்த மாவட்டத்தின் தமிழ் அரசியல்வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கின்றனர். அதைத் தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் அவர்கள் காட்ட நினைப்பது வேடிக்கை என்றால் ,அதை இத்தனை காலங்களாக இம்மாவட்ட மக்களும் நம்பி அவர்கள் பின்னால் செல்வதும் ஒரு வகையில் துரதிர்ஷ்டமான சம்பவம் தான்.

பிரிந்து நின்றே ஆட்சியமைக்க விரும்பினர்

இம்முறை இடம்பெற்ற தேர்தல் பெறுபேறுகளின் படி 9 பிரதேச சபைகள் 2 நகரசபைகள் ஒரு மாநகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 151 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 33 பேர் பெண்கள் (தமிழ்) என்பது முக்கிய விடயம். இம்மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ் பிரதிநிதித்துவமானது 80 வீதத்திற்கும் மேல் பெறப்பட்டமை குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும். நாமே எம்மை ஆள்வோம் என்பதே தேர்தல் காலங்களில் தொழிற்சங்கங்களின் பிரதான பிரசாரமாக அமைந்தது. அதன் படியே பெறுபேறுகளும் இருந்தன, எனினும் கட்சிகளால் வேறுபட்டு நின்றாலும் தேர்தலுக்குப்பின்னரும் கூட ஒரே இன மக்களுக்குத்தானே சேவையாற்றப்போகிறோம், ஒன்றிணைந்து ஆட்சியமைத்தால் என்ன என்ற சிந்தனை மலையகக்கட்சிகள் எவற்றிற்கும் ஏற்படவில்லை. மாறாக பெரும்பான்மையினக் கட்சிகளுடன் இணைந்து தாம் தனித்து இயங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தன. பேரினவாதமும் இந்த பிளவுகளை தமக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டன. அதற்கு சிறந்த உதாரணம் தலவாக்கலை லிந்துலை நகரசபையாகும். இங்கு தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களில் 7 பேர் சிறுபான்மையினத்தவர்களாவர். ஆனால் துரோகங்களாலும் சலுகைகளுக்காக பின் நின்று செயற்பட்ட வேறு பிரதேச பிரமுகர்களாலும் சபை தலைவர் பதவி பெரும்பான்மையினத்தவருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தலவாக்கலை – லிந்துலை வாழ் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சிக்கப்படுகிறது. மட்டுமன்றி சிறுபான்மை பிரதிநிதிகள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு அரசியல் முதிர்ச்சியை இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சிகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மண்ணின் மைந்தர்கள்

ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபையில் தமிழர்களே ஆட்சியமைக்கும் நிலை உருவான போதும் அவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் நடு வீதிக்கு வந்து அடித்துக்கொள்ளும் கேவலமான அரசியல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

 இங்கு தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில் 8 பேர் இ.தொ.காவுக்கும், மிகுதி 8 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவு தர முடிவு ஏற்பட்டிருந்தது. எனினும் ஐ.தே.கவின் ஒரு பெண் உறுப்பினர் அன்று வருகை தராத காரணத்தினால் எதிரணியினர் அவரை மறைத்து வைத்திருக்கலாம் என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததால் குழப்ப நிலை உருவானது. இதனிடையே தமிழ் முற்போக்குக்கூட்டணி உறுப்பினர்கள் சபையின் மேடை மீது ஏறி நின்று மத்திய மாகாண உள்ளூராட்சி விசேட ஆணையாளர் மானல் ஹேரத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தனர். இறுதியில் ஐ.தே.க உறுப்பினர்களும் ஆதரவாளர் ஒருவரும் கூட்டத்தை பகிஷ்கரிக்க முடிவு செய்ததையடுத்து ஆணையாளர் இ.தொ.கா ஆதரவாளர்கள் 8 பேரோடு சபையை நடத்தி தலைவர் உபதலைவர்களை தெரிவு செய்தார். இதில் இ.தொ.காவின் உறுப்பினர் செண்பகவள்ளி தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதையடுத்து தமது வெற்றியைக் கொண்டாட இ.தொ.கா உறுப்பினர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டதையடுத்து கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றது. இ.தொ.கா மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்கள் சரமாரியாக கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதோடு வீதியில் கைகலப்பில் ஈடுபட்டனர். அவ்விடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் ஐந்து பேர் வரை காயமுற்றதோடு இரண்டு வாகனங்களும் சேதமுற்றன. மஸ்கெலியா பிரதேசம் பெருந்தோட்டப்பகுதியை சூழவுள்ள நகராகும். இச்சபைக்கு 81 வீதமான தமிழ் பிரதிநிதிகளை இப்பிரதேச மக்கள் தெரிவு செய்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபை வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப்பெண் ஒருவரை தலைவராகக்கொண்ட பெருமையையும் இப்பிரதேச சபை பெற்றுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் வைத்துப் பெருமை கொள்ளும்படியாகவா சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன ? தமது சுயநலங்களுக்காக ஒரே மண்ணின் மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் கலாசாரத்துக்கு என்று தான் முடிவு வரப்போகின்றதோ தெரியவில்லை.

நன்றி - வீரகேசரி

ஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்


“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அல்ல “மஹாசொன் பலகாய” தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சிங்கள மரபிலக்கிய அர்த்தத்தில் கூறுவதாயின் அதுவொரு “அரக்கர் சேனை” (Demon Brigade)

“மஹாசொன் பலகாய” என்கிற அமைப்பின் பெயர் முதன் முதலில் வெளியானது 2008 ஒக்டோபர் மாதமளவில் தான். அதாவது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது.

20.10.2008 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சிறிய கடிதப் பொதியொன்று கிடைத்தது. ஒரேவிதமான கடிதத்தின் 50 பிரதிகள் அதில் இருந்தன. மனித உரிமைகளின் பேரால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வாதிடும் அனைவரும் கொல்லப்படுவர் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. “மஹாசொன் பலகாய” பெயரில் ஒரு அமைப்பு உரிமை கோரியது அது தான் முதன் முறை.

இந்த துண்டுப் பிரசுரம் கிடைப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஜே.சீ.வெலிஅமுனவின் வீட்டுக்கு குண்டு எறியப்பட்டது. வழக்கறிஞர்களும் சிவில் அமைப்புகளும் சேர்ந்து அந்த சம்பவத்தைக் கண்டித்து புதிய நகர மண்டபத்துக்கு அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தனர். இது ஒரு இரகசிய அமைப்பாக அறியப்படுமுன்னர் இராணுவத்தின் முக்கிய கொலைப்படையாக அறிப்பட்டிருந்தது. அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற அச்சம் பலர் மத்தியில் நிலவவே செய்தது. தற்போதைய “மஹாசொன்” இயக்கத்தும் மேற்படி சம்பவத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய உண்மைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


இராணுவத்தில் பேய்
இராணுவத்தில் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி  (LRRP - Long Range Reconnaissance Patrol) என்கிற ஒன்றை இராணுவத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த (Special Force) கேர்னல் ராஜ் விஜேசிறி 1996இல் உருவாக்கிய வேளை இந்தப்படையணிக்கு வைத்த இன்னொரு பெயர் தான் “மஹாசொன் பலகாய”. எதிர்பாராத நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும் பேயின் பெயரை அவர் வைத்தார். அன்றைய சமாதான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களைத் தேடிச்சென்று இரகசியமாக கொலை செய்து புலிகள் இயக்கத்தைப் பலவீனமடையச் செய்வதே தமது இலக்கு என்று கேர்னல் ராஜ் விஜேசிறி “esankalani” (3 வது இதழ் - உபாலி வெளியீடு) என்கிற பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

சரத் பொன்சேகா, அனுருத்த ரத்வத்த, ராஜ் விஜேசிறி
உலகில் இராணுவ பலம் மிக்க பல நாடுகளில் LRRP படையணியை வைத்திருப்பார்கள். அதனை  "lurp" என்றும் கூட அழைப்பார்கள். இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை இது ஆற்றியிருந்தது. வேவு பார்ப்பது, சட்டவிரோத நாசகர வேலைகளை செய்கின்ற இந்த அணி; ஒரு கொலைப்படையாகத் (killing machines) தான் அறியப்பட்டிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆழ ஊடுருவி விடுதலைப் புலிகளின் தலைவர்களை, தளபதிகளை துல்லியமாக உளவறிந்து தருணம் பார்த்து படுகொலை செய்வது இந்த அணியின் பொறுப்பு.

ஆனால் இந்த படையணி விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல சிவில் சமூகத்திலும் பலரை இலக்கு வைத்து படுகொலை செய்து வந்தது. இப்படி ஒரு படையணியை வைத்திருப்பதை இராணுவத்தில் உள்ள முக்கிய தளபதிகளைத் தவிர இராணுவத்தின் ஏனைய அங்கங்களுக்கோ ஏன் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கோ கூட தெரியாதபடி இரகசியமாக இதனை இயக்கி வந்தது அரசு. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மிருசுவிலில் வைத்து குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரைக் கொன்று கிணற்றுக்குள் வீசியிருந்த சம்பவம் இந்த “மஹாசொன்” படையணியைச் சேர்ந்த ஐவரால் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் தான் அந்த விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு நால்வர் விடுவிக்கப்பட்டு சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு மாத்திரம் மரணதண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.

புலி வேட்டை

விடுதலைப் புலிகளின் மட்டு உளவுப் பிரிவுப் பொறுப்பாளர் லெப்.கேணல் நிசாம், மட்டு அம்பாறை தொலைதொடர்புப் பொறுப்பாளர் மேஜர் மனோ, ஆர்ட்டிலறி நிபுணர் மேஜர் சத்தியசீலன், கப்டன் தேவதாசன், மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் வான்படைத் தளபதி கேணல் ஷங்கர், கடற்புலிகளின் தளபதி லேப்.கேணல் கங்கை அமரன் அனைவரும் இந்தப் படைபிரிவினால் தான் கொல்லப்பட்டார்கள்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மன்னாரில் கொல்லப்பட்ட கேணல் சார்ல்ஸ் கூட LRRP யின் தாக்குதலில் தான் கொல்லப்பட்டார். கேணல் சார்ல்ஸ் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் உட்பட கொழும்பில் நிகழ்ந்த முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர், புலிகளின் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அத்துடன் இலங்கை அரசுக்கு ஒரு கட்டத்தில் பொட்டு அம்மானை விட முக்கியமாக தேவைப்பட்டவர் சார்ல்ஸ்.

அது மட்டுமன்றி, அரசியல் பிரிவின் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப்பையா பரமு, தமிழ்ச்செல்வன் (இரு தடவைகள்) அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் எஸ்.தங்கன், வவுனியா சிறப்புத் தளபதி கேணல் ஜெயம், பிரதி இராணுவத் தளபதி கேணல் பால்ராஜ் ஆகியோர் LRRPயின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர்கள்.

அவர்களுடன் கிழக்கின் அரசியல் அரசியல் துறைப் பொறுப்பாளர் கேணல் கருணா, கரிகாலன், ஜிம் கெலி தாத்தா, பிராந்திய உளவுப் பிரிவுத் தலைவர் லெப்.கேணல்  ரமணன் ஆகியோரும் கூட மயிரிழையில் உயிர் தப்பியவர்கள் தான்.

மில்லேனியம் சிட்டி
ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று இரகசிய கொலைக்கும்பலைப் பற்றிய துப்பின் பேரில் அத்துருகிரிய பகுதியில் மில்லேனியம் சிட்டியில் இருந்த இந்த LRRP படையணியை சுற்றிவளைத்தது பொலிஸ். இந்த அதிரடி நடவடிக்கைக்கு குலசிறி உடுகம்போல தலைமை தாங்கினார். பொலிசாருக்கு கூட இது அரச அங்கீகாரம் பெற்ற இரகசிய கொலைப்படை என்பது தெரியாது இருந்தது. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது பற்றிய உண்மைகளை அறிந்திருந்த இராணுவ பிரதானிகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். இந்த சுற்றி வளைப்பு ஒரு துரோகமெனக் கூறினார்கள்.

பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இதுபற்றி எழுதிய கட்டுரைக்கு “மாபெரும் துரோகம்” என்று தலைப்பு வைத்தார். இராணுவத்தின் இந்த இரகசிய இல்லம் (Safe house) 80களில் ஜே.வி.பியினரை சித்திரைவதை செய்யும் இரகசிய வதை முகாமாகவும் இயங்கியது என்றும் அதுவே பின்னர் LRRPயின் இரகசிய முகாமாக இயங்கியிருக்கிறது என்றும் அந்தக் கட்டுரையில் எழுதினார்.

சம்பந்தப்பட்ட பலரது பெயர்களைக் கூட சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. இந்தப் படையணியின் தலைவராக தொழிற்பட்ட கப்டன் நிலாம் (தம்பிராசா குஹசாந்தன்) மற்றும் முன்னால் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் உளவாளிகள் பலரும் கூட கைது செய்யப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முதலில் தோற்றன. பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு, கைது போன்றவற்றைக் கண்டித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவின் கட்டளையின் பேரின் அவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் LRRPயைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள்; பேச்சுவார்த்தை நிகழ்ந்துகொண்டிருந்த யுத்த நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். LRRP காட்டிக்கொடுக்கப்பட்டது சமாதானப் பேச்சுவார்த்தையின் விளைவே என்று இனவாத சக்திகளால் விமர்சிக்கப்பட்டது. LRRP பற்றிய விசாரணையை மேற்கொள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி LRRPயும், அதன் இராணுவ உபகரணங்களும் சட்டபூர்வமானவை தான் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் மக்கள் மத்தியில் “மில்லேனியம் சிட்டி” விவகாரம் பலமான பீதியைக் கிளப்பியிருந்தது. எனவே அன்றைய ஜனாதிபதி சந்திரிகா LRRP பற்றி விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். அந்த அணைக்குழு “குலசிறி உடுகம்பொல” உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மில்லேனியம் சிட்டி சுற்றி வளைப்பானது நாட்டுக்கு ஏற்படுத்திய மிகப் பெரும் கலங்கமும் துரோகமும் ஆகும் என்று தெரிவித்ததோடு அதற்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பட்டியலை வெளியிட்டது. அதுமட்டுமன்றி “மில்லேனியம் சிட்டி” சுற்றிவளைப்பை செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவை நீக்கியதுடன், கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.


சிறிய படையணியாக இருந்தும் ஈழப்போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புகளை உண்டுபண்ணிய இரகசிய படை இது. இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியானது உலகிலேயே கடுமையான இராணுவப் பயிற்சிகளில் ஒன்று என்று “National Geography” சானல் வெளியிட்ட ஆவணப்படத்தில் (Special Forces: Sri Lanka LRP) அறிவித்தது. இதில் பணியாற்றிய படையினரின் சாவுகளையும், வெற்றிகளையும் பற்றிய வீரகாவியங்களாக பல கட்டுரைகளும், சில நூல்களும் கூட வெளியாகியுள்ளன.

அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு 90களின் நடுப்பகுதியில் "Green Beret" விசேட பயிற்சியைத் தொடர்ந்து ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இராணுவ தந்திரோபாயங்களின் தோல்வியைத் தொடர்ந்து  LRRP போன்ற ஒன்றின் அவசியத்தை இராணுவத்துக்கு அறிவுறுத்தியது அமெரிக்கா தான். அதற்கான தீவிர பயிற்சியையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த இணைப்பையும் கவனியுங்கள். கவனியுங்கள்
http://www.historyasia.com/shows/asias-special-forces-terry-schappert

அமெரிக்கா இலங்கைப் படையினருக்கு வழங்கிய LRRP பயிற்சியின் போது
LRRP படையணிக்கு அமெரிக்கா எவ்வாறு பயிற்சிகளை அளித்து வருகிறது என்பது பற்றி சிவராம் எழுதிய விரிவான கட்டுரை (A Second Look at US Assistance to Lanka Against 'Terrorism') “டெயிலி மிரர்” பத்திரிகையில் 15.09.2004 இல் வெளியானது. ஒரு சில மாதங்களில் சிவராம் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட நிலையில் பாராளுமன்றத்துக்கருகில் (28.04.2005) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சிவராம் கொல்லப்பட்டு சரியாக ஒரு மாதத்தின் 31.05.2005 அன்று அத்துருகிரிய பகுதியில் வைத்து LRRP யை வழிநடத்திய முக்கிய நபர் மட்டுமன்றி அந்தப்படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியுமான கெப்டன் துவான் நிசாம் முத்தலிப் (Nizam Muthaliff) விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதையும் இங்கு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

“மில்லேனியம் சிட்டி” விவகாரம் அம்பலத்துக்கு வந்ததன் பின்னர் LRRPயில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுவந்த 80க்கும் மேற்பட்டவர்கள் வரிசையாக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்டவர்களில் சிலரின் பட்டியலை சண்டே டைம்ஸ் (25.11.2008) பத்திரிகை வெளியிட்டது. அவர்களின் பெரும்பாலானோர் தமிழர்கள்.

சிங்கள தரப்புக்கு தமது யுத்த வெற்றியில் மஹாசொன் படையணியின் பாத்திரம் பாரியது. சிங்கள மக்கள் மத்தியில் புனிதப்படுத்தப்பட்ட அந்த பெயரை தொடர்ந்தும் தாங்கி நிற்பதில் என்ன ஆச்சரியம் உண்டு.

அமித் வீரசிங்க, டான் பிரசாத், சாலிய ரணவக்க
 “மஹாசொன் பலகாய” எனும் பலிக்கடா

மஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித் வீரசிங்கவை தற்போது அரசாங்கம் மேலும் சிலருடன் சேர்த்து கைது செய்துள்ளது.

அமித் வீரசிங்க கடந்த சில வருடங்களுக்குள் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிற ஆபத்தும், அழிவுகளும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல தான்.

ஹலாலுக்கு எதிராக, முஸ்லிம்களின் வியாபரத்துக்கு எதிராக, முஸ்லிம்களின் ஜனத்தொகைக்கு எதிராக, ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக, ஹிஜாப் அணிவதற்கு எதிராக, என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

ஜாதிக ஹெல உறுமய சித்தாந்த தளத்திலும், களத்திலும் பெரும் பங்கை 90 களிலிருந்து இரு தசாப்த காலம் பங்கை ஆற்றிய பின்னர் அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் தேர்தல் அரசியலில் களமிறங்கினார்கள். தேர்தல் அரசியலுக்காக தந்திரோபாய ரீதியில் நேரடி இனவாதத்தை பிரயோகிப்பதை தவிர்த்தார்கள். அவர்கள் அதுவரை மேற்கொண்ட பணியை அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திகள் புதிய அமைப்புகளை உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தத் தொடங்கினார்கள் அந்த வரிசையில் முதன்மையான அமைப்பாக பொதுபல சேனா இயக்கம் தோன்றி ஆக்ரோஷமாக இயங்கத் தொடங்கியது.

ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த அமைப்புகளைவிட புதிதாக “சிங்கள தேசிய முன்னணி”, “சிஹல ராவய” “சிங்களே இயக்கம்”,  “இராவணா பலய” போன்ற பல அமைப்புகள் முளைத்தன. அதன் நீட்சி தான் “மஹாசொன் பலகாய” இயக்கம்.

ஏனைய அமைப்புகள் பிக்குகளை, சேர்த்துக் கொண்ட சற்று முதிர்ச்சி மிகுந்தவர்களைக் கொண்ட அமைப்பாக இயங்கியது. பெரும்பாலும் கூட்டங்கள் நடத்துவது, ஊடக மாநாடுகளை நடத்துவது, குறித்த ஒரு விடயத்துக்காக கூட்டணி அமைப்பது போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆனால் “மஹாசொன்” அமைப்பு ‘“சிங்களே” அமைப்பை சேர்த்துக்கொண்டு இளம் இனவாத சக்திகளை அணிதிரட்டியது.


சித்தாந்த உருவாக்கத்துக்கு ஒரு அணி, கூட்டங்கள் நடத்துவதற்கும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் வேறு அணி இயங்கிய நிலையில், களத்தில் சண்டித்தனம் செய்வதற்கு இந்த இளைஞர்களைக் கொண்ட “மஹாசொன்”, “சிங்களே” போன்ற அமைப்புகள் களம் இறக்கப்பட்டன. அந்தந்த அரசியல் கள நிலவரத்துக்கு ஏற்றாற்போல அரசியல்வாதிகளும் இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

குறுகிய காலத்தில் பல சிங்கள பிரதேசங்களில் கிளைகளை அமைத்தது. அந்தக் கிளைகளுக்கு முகநூல் பக்கங்களும் உருவாகின. தமக்கிடையிலான தொடர்பு வலைப்பின்னலைப் பேணுவதற்கு மட்டுமல்ல, தமது இனவாத பிரச்சாரங்களையும், வதந்திகளையும் கட்டற்று பரப்புவதற்கும், தமது கள நடவடிக்கைகளின் போது அந்தந்த இடங்களில் ஆட்களை உடனடியாக திரட்டுவதற்கும் தான். அதனை இனவாத சம்பவங்களின் போது காணவும் முடிந்தது.

இனவாத பிரச்சாரத்துக்காக இவர்களால் உருவாகப்பட்ட போலி, பினாமி இணையத்தளங்களும், முகநூல் பக்கங்களும் ஆயிரக்கணக்கானவை. “மஹாசொன் பலகாய”வின் முகநூல் பக்கத்தின் பிரதான வாசகம் இப்படி கூறுகிறது. “நாங்கள் பௌத்த சாசனத்தைக் காக்க வந்த அரக்கர் சேனை”.  ஒரே இடத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட முகநூல் பக்கங்களை இயக்கியமையும் கண்டுபிடிக்கப்பட்டது  என்று சமீபத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடக மாநாட்டில் கூறினார்.


கண்டியிலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த வன்முறைகளில் அமித் வீரசிங்க போன்றோர் எப்படி பல பிரதேசங்களில் இருந்தும் சண்டியர்களை பஸ் வண்டிகளில் இறக்கினார்கள், அவர்களுக்கு அனுசரணையாக இருந்த பிக்குமார் யார் என்பவை பற்றிய வீடியோ ஆதாரங்கள் போதுமான அளவு வெளிவந்து விட்டன. வீடியோவில் கிடைக்காத திட்டங்கள், தயாரிப்புகள் என்பன எவ்வாறெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. அதேவேளை கண்டி , குண்டசாலை பகுதியில் இருந்த அவர்களின் அலுவலகத்தில் பொலிசார் 13 அன்று நடத்திய திடீர் சோதனையின் போது இனவாதத்தையும், இனவெறுப்புணர்ச்சியையும் உண்டுபண்ணும் பிரச்சார சுவரொட்டிகள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மட்டுமன்றி பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், இன்னும் பல உபகரணங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் என்பவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அமித் வீரசிங்க இதற்கு முன் முஸ்லிம் பிரதேசங்களைத் தாக்குவதற்காக திட்டமிடும் வீடியோக்கள் யூடியுபில் பகிரங்கமாகவே இருக்கின்றன.

இவர்களுக்கான நிதி உதவிகளை கொரியா, ஜப்பான், மத்தியகிழக்கு போன்ற நாடுகளில் பணிபுரியும் சிங்கள பௌத்தர்கள் அனுப்பினார்கள். அவர்களின் உதவியின் பேரில் தான் பல புதிய சிறிய பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பௌத்தர்கள் செறிவாக வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகளை கொண்டுபோய் நிறுவுதற்கான நிதி வளங்கலும் வெளிநாடுகளில் இருந்து தான் இவர்களுக்கு கிடைத்தன.

இவர்களுக்கான சித்தாந்த வழிகாட்டல், நிறுவன ரீதியிலான வழிகாட்டல் மேலிருந்து கிடைத்தன. அவர்களின் பணிகளுக்கு பாதுகாப்பாக சில பிக்குமார் கூட இருப்பார்கள். அவர்களின் காவிச் சீருடை தேவையான இடங்களில் இந்த இளைஞர்களைப் பாதுகாக்கும்.


சட்டச் சிக்கல் வந்தால் மேலிருக்கும் அணியினர் அகப்படுவதில்லை. இவர்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவார்கள். ஆகவே தான் சமீப காலமாக  சாலிய ரணவக்க, டான் பிரசாத் போன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறுதியில் ஒட்டுமொத்த பழியும் இப்போது அமித் வீரசிங்க, சுரேத சுரவீர போன்றோர் மீது போட்டுவிட்டு பேரினவாத கட்டமைப்பு தப்பித்துக்கொள்ளும். இந்தப் பலிக்கடாக்கள் வெளியில் வந்த பின்னர் ஒன்றில் இரகசிய தலைமறைவு / செயற்பாட்டுக்கு செல்வார்கள். அவர்களின் இடத்திக்கு புதிய பலிக்கடாக்கள் நிரப்பப்படுவார்கள். இது காலாகாலமாக நிழலும் சுழற்சி செயற்பாடு தான்.

ஆக, பேரினவாத சித்தாந்தமும், அந்த கட்டமைப்பும் நிலைகுலையாமல் உறுதியாக, பலமாக திரைமறைவில் இருந்துகொண்டு தமது நிகழ்ச்சிநிரலை ஓயாமல் கொண்டுசெல்லும்.

மொத்த குற்றச்சாட்டுக்களையும் இவர்களிடம் போட்டு விட்டு குற்றவாளியை பிடித்துவிட்டோம் என்று ஆட்சியில் இருப்பவர்களும் தப்பித்துவிடுவார்கள். அமித் வீரசிங்கவை உருவாக்கிய சக்திகளும், அதன் பின்னால் வழிநடத்தும் சித்தாந்தமும் அரசின் கண்களுக்கு படப்போவதில்லை. அப்படி கண்களில் பட்டாலும் அதையிட்டு நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை, அதற்கான திராணியும், சக்தியும், தைரியமும் கூட அரசுக்கு கிடையாது.

இன்று ஒரு மஹாசொன் பேயைப் போல நாளை வேறு பெயர்களில் பேய்கள் அவதரிப்பதை தடுப்பதற்கு இந்த நாட்டில் எந்த மலட்டு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை சிறுபான்மை மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், எதிர்காலத்துக்கும் எந்தவித  பாதுகாப்புக்கும் உத்தரவாதமும் கிடையாது என்பது மட்டும் நிதர்சனம்.



மகாவம்சம் சொல்வது...
“மஹாசொன்” (Mahason Demon) என்பது பற்றி மகாவம்சத்தில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. “மஹா சோன யக்கா” என்பார்கள் சிங்களத்தில். கரடியின் முகமும், கரு நாயின் உடலையும் கொண்டது அது. உடலால் சிறுத்தும், தலையால் பெருத்தும் இருக்கும். பெரும் உடல் பலத்தையும் கொண்ட இந்த அரக்கன் மனிதர்களைக் கொல்ல கையை விரித்து நடு முதுகில் தாக்கினால் கொல்லப்பட்டவரின் உடலில் நீலம் பூத்த கை அடையாளம் பதிந்திருக்கும் என்பது ஐதீகம்.
துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற சரித்திரப் போரில் துட்டகைமுனுவுக்காக அரக்கர் சேனைக்கு தலைமை தாங்கிய பேரரக்கனாக “மஹாசொன்” (இன்னொரு பெயர் ரிட்டிகல ஜயசேன) அரக்கனை குறிப்பிடுகிறது மகாவம்சம். துட்டகைமுனுவின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய தளபதிகளாக இருந்த 10 அசுரர்களில்  (“தச மஹா யோதயோ”) ஒருவர் “கோட்டயிம்பர” என்கிற அசுரன். அவ்வசுரனின் நெருங்கிய நண்பனாக இந்த அரக்கனைக் குறிப்பிடுகிறது மகாவம்சக் கதை.
மகாவம்சத்தின் உப கதைகளைக் கொண்ட  விரிவாக்க இதிகாச நூல்கள் சிங்களத்தில் உள்ளன. அவற்றில் “சஹஸ்சவத்தூபகரணய”, “ரசவாகினி சத்தர்மாலாங்கார” போன்ற நூல்களில் இந்த மஹாசொன் பற்றிய விரிவான கதைகள் உண்டு. அதன்படி துட்டகைமுனு விஜிதபுர சமரில் கண்ட வெற்றியைக் கொண்டாதுவதற்கு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தான். அதன் போது அரக்கர்களுடன் வந்து சேர்ந்த “மஹாசொன்” கோட்டயிம்பரவின் மனைவியை அடைய முயற்சி செய்ததாகவும் அதனால் ஆத்திரம் கொண்ட “கோட்டயிம்பர” தன்னுடன் சண்டைக்கு “மஹாசொன்”னை அழைத்ததாகவும் அந்தச் சண்டையில் “மஹாசொன்”  அரக்கனின் தலை துண்டாடப்படுவதாகவும். துண்டாடப்பட்டத் தலைக்குப் பதிலாக ஒரு கரடியில் தலையை இந்த அரக்கனுக்கு பொருத்தப்பட்டதாகக் கூறுகிறது.

இந்த அரக்கனை சுடுகாட்டுத் தெய்வமாகவும் அழைப்பார்கள். இரவு நேரங்களில் தான் இதன் எதிர்பாராத திடீர் தாக்குதல் நடக்கும். இரவில் பேயடிக்கும் என்பார்களே அது தான். “மஹாசொன்” பேய் ஏறிய உடலில் இருந்து  அதனை விரட்டுவதற்கென்றே இன்றும் சிங்களகிராமங்களில் “மஹாசொன்” பேய் விரட்டும் (“பேய் பிடித்தவர்களுக்கு”) தொவில் ஆட்ட சடங்கு நடப்பதுண்டு. மஹா சொஹொன் உருவத் தலையைப் போட்டுக்கொண்டு ஆடுவது சிங்கள சம்பிரதாய தொவில் ஆட்ட வடிவங்களில் ஒன்று. “மஹாசொன்”னுக்காக மிருகங்கள் பலி கொடுத்து, பாட்டுபாடி, “பெர” வாத்திய தாளத்துடன் “மகாசொன்”னை குறிப்பிட்ட உடலை விட்டு வெளியேற்றும் சடங்கும் நிகழும்.
சுருக்கமாகசக் சொன்னால் சிங்கள பௌத்தர்களின் புனித நூலாக கருதப்படும் மகாவம்சம் பிரேரிக்கின்ற இரவில் மறைந்திருந்து இரகசியமாக திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் ஒரு குறியீடாக “மஹாசொன்” பாத்திரத்தை முன்னிறுத்துகின்றன சிங்கள பௌத்த சக்திகள்.

மலையகத்தில் தொழில் பேட்டைகள் வெறும் கனவா? - சிவலிங்கம் சிவகுமாரன்



நாடெங்கினும் பல்வேறு துறைகளில் சுமார் 5 இலட்சம் வேலை வாய்ப்புகள் இருப்பதாக தொழிலாளர் தேவைக்கான கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த புள்ளி விபரங்களின் படி சேவைகள், பாரியதொழிற்றுறை, வர்த்தகம், கட்டுமானத்தொழில், சுற்றுலா, விவசாயம் (பெருந்தோட்டம்) ஆகிய துறைகளில் சுமார் 497,302 வேலை வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்துறைகளில் பெண்கள் தொழிற்றுறை சார்ந்த ஆடை தொழிற்றுறை (தையல்) ஆடை வடிவமைப்பு, சிகையலங்காரம், அழகுக்கலை அதை விட முக்கியமாக தேயிலை தொழிற்றுறையில் கொழுந்து பறிப்பதற்கும் ஆட்கள் தேவையாக உள்ளன. இந்நிலையில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு குறித்த வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க என்ன செய்தல் வேண்டும் என்பது பற்றிய சிந்தனை இது வரை எவருக்கும் தோன்றாதிருப்பது ஏன் என்று தெரியவில்லை . அது குறித்த அக்கறை இல்லாமலிருப்பதற்கு இரண்டு காரணங்களே இருக்க முடியும்.

௧) வேலை வாய்ப்புகள் இருப்பது பற்றிய தெளிவின்மை

௨) அலட்சியத்தன்மை

 அரசதுறை வேலைவாய்ப்புகள் பற்றி வாய் திறந்தால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை கைகளில் திணித்து அனுப்பி விடுவதே கடந்த காலங்களில் இடம்பெற்ற செயற்பாடாக இருந்தது. தனியார் துறை வேலை வாய்ப்பு என்பது மலையக இளைஞர் யுவதிகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதற்கு பிரதான காரணம் இப்பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்காமை. அடுத்ததாக குறித்த இளைஞர் யுவதிகள் தமது தொழில் மற்றும் சுயதிறன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமையாகும். எனினும் அதற்குரிய பயிற்சி நிறுவனங்கள் இப்பகுதியில் உருவாகாததும் மற்றுமொரு விடயம்.

வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் தோல்வியடைந்த பிரதிநிதிகள்

மலையக பெருந்தோட்டப்பகுதிகளைப் பொறுத்தவரை தொழிற்பேட்டைகள் உருவானாலேயே வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் அதே வேளை அதன் மூலம் குறித்த பிரதேச அபிவிருத்தி குறித்தும் சிந்திக்க முடியும். உதாரணமாக இன்று நாடெங்கினும் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டு குறித்த வலயங்களுக்குள் ஆடை தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், உதிரிப்பாகங்கள் பொருத்தும் தொழிற்சாலைகள் என பல்வேறு பட்ட தொழில் நிறுவனங்கள் உருவாகின. இதற்கு ஆயிரக்கணக்கில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புகள் தேவைப்பட்டன. குறித்த வர்த்தக வலயங்கள் அமைந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி வெளியிடங்களிலிருந்த பெருந்தொகையானோருக்கும் அங்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் மேலதிக பணியாளர்களின் தேவைகளுக்காக குறித்த பிரதேசத்தில் தங்குமிட வசதிகள், உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் உட்பட மற்றைய சேவைகளின் விரிவாக்கம் அதிகரித்தது. இதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்புக்களை பெற்றவர்களும் அதிகரித்தனர். இவ்வாறு அப்பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய வித்தியாசங்கள் உருவாகின, ஆனால் இவ்வாறான சிந்தனைகள் எச்சந்தர்ப்பத்திலும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு தோன்றியிருக்கவில்லை அப்படி தோன்றியிருந்தால் இன்று நுவரெலியா அல்லது அட்டன் நகரில் பாரிய தொழிற்பேட்டை ஒன்று உருவாகியிருக்கும். இதை விட பெருந்தோட்டப்பகுதிகளில் உயர்தர தகைமை பெற்றவர்களுக்கு தோட்டப்பகுதிகளிலேயே மேற்பார்வை உத்தியோகத்தர் அல்லது காரியாலயங்களில் அலுவலக உதவியாளர் பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறை எடுக்கவில்லை.பெற்றுத்தருவோம் எனக்கூறியவர்கள் அப்படி எத்தனைப்பேருக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறினால் எமக்கு செய்திகளாக பிரசுரிப்பதற்கும் புள்ளி விபர வரைபடங்களுக்கும் உதவியாக இருக்கும். ஆனால் கடந்த நான்கு தசாப்த காலமாக அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் அரசியல் பிரமுகர்கள் இச்சமூகத்தின் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதிலும் அதன் மூலம் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதிலும் தோல்வியையே தழுவி வருகின்றனர்.

வேலைவாய்ப்புகள்

தொழிலாளர் தேவைக்கான கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் படி குறித்த தொழிற்றுறைக்கு தேவைப்படும் தொழிலாளர்களை இலங்கையின் எந்த பிரதேசத்திலிருந்து அதிகம் தெரிவு செய்யலாம் என்ற ஆய்வும் அவசியம். புள்ளி விபரங்களின் படி இலங்கையில் ஆடைத்தயாரிப்பு துறையின் தையல் இயந்திர திருத்துனர்களுக்கே அதிக தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்றன. இத்துறைக்கு 2017 ஆம் ஆண்டு 77,189 பேர் தேவையென புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்த படியாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் 57,000 வரை காணப்படுகின்றன. அதற்கடுத்து பல்வேறு உற்பத்தி சார் தொழிலாளர்களுக்கான தேவை 39 ஆயிரம் வரை இருக்கின்றன. நாடெங்கினும் சுதந்திர வர்த்தக வலயங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன ஆனால் அத்தொழிற்சாலைகளில் இயங்கும் தையல் இயந்திரங்களை பராமரிக்கவோ பழுதானால் திருத்துவதற்கோ உரிய இயந்திர திருத்துனர்கள் பற்றி எவரும் அக்கறைகொள்ளவில்லை . அதே போன்று அதிகரித்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்துறைகளுக்கே அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவல்களாகும். இவ்வருட ஆரம்பத்தில் இவற்றில் சிறிய அளவே நிரப்பப்பட்டிருக்கும் என்பதே உண்மை.

தனியார் துறை வேலைவாய்ப்புகள்

அரச துறை வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் வர்த்தமானியில் பிரசுரமாகும் போது சில அக்கறை கொண்ட அரசியல் பிரதிநிதிகள் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்குவர். ஆனால் தனியார் துறையில் இருக்கும் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அல்லது வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களை வகுப்பதில்லை. அவ்வாறான திட்டங்களை வகுப்பவர்களையும் அருகில் வைத்திருப்பதில்லை. இது வரை மலையக பிரதேசங்களில் பாரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் எந்த திட்டங்களையும் எந்த பிரதிநிதிகளும் முன்னெடுத்திருக்கவில்லை. இதன் காரணமாகவே சுமார் இரண்டு இலட்சம் வரையான இளைஞர் யுவதிகள் இன்று தமது சொந்த இடத்தை விட்டு தொழில் நிமித்தம் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தலைநகரிலும் அதனை அண்டிய நகரங்களிலும் பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்தி பல்வேறு துயரங்களுக்கும் ஆபத்துகளுக்கும் முகங்கொடுத்து சொந்தங்களை பிரிந்து தமது வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை இன்றும் தொடர்கிறது.

இச்சமூகத்திலிருந்து தொழில் தேடி புறப்பட்ட இளைஞர் குழாமின் ஒரு தலைமுறை கடந்து விட்ட நிலையில் அடுத்த தலைமுறையினரும் தயாராக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த தலைமுறையினரின் கணிசமானோர் தமது பதிவையும் தலைநகரிலேயே ஏற்படுத்தி தமது உரிமைகளை கேட்டுப்பெற முடியாத யாருக்கோ தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்த பட்டியலில் சேர காத்திருக்கும் அடுத்த தலைமுறையினரையாவது கருத்திற்கொண்டு அவர்களுக்கு அவர்களது மண்ணிலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களை இந்த பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டும். 

நன்றி - வீரகேசரி

பகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் "சிங்கள பௌத்த பாசிசம்" - என்.சரவணன்


“பாசிசம் மதத்திற்குக் காவலாக  நிற்கிறது. காரணம் மத நம்பிக்கையானது அறியாமையை உயர்வாகப் போற்றுகிறது. மக்களை எளிமையாக ஏமாற்ற முடிகிறது.” என்கிறார். “பாசிசம்” என்கிற ஆய்வு நூலை எழுதிய பிரபல ஆய்வாளர் எம்.என்.ரோய்.

இலங்கையில் மதப் பாசிசம், இனப்பாசிசத்தொடு கூட்டாக சமாந்தரமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்துக்கு விஞ்ஞானமோ, விஞ்ஞான பூர்வமான தர்க்கமோ அவசியமில்லை. புனிதப்படுத்தப்பட்ட ஐதீகங்களும், புனைவுகளும் தாராளமாக போதுமானவை.

அம்பாறை உணவுக் கடையில் கொத்துரொட்டியில் இருந்ததாக கூறப்படும் அந்தக் (மலட்டு மருந்து என கூறப்பட்ட) கட்டியை இரசாயன பகுப்பாய்வு செய்தவர்கள் அது வெறும் மாவுத்துண்டு தான் என்று நிரூபித்திருக்கிறார்கள். பகுத்தறிவுடையவர்கள் பலரும் உண்மை அறிந்தபோதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்காகவே இந்த பகுப்பாய்வு தேவைப்பட்டது.

உண்மைக்குப் புறம்பான ஒரு போலி வதந்தி அம்பாறையில் ஒரு கலவரத்தை உண்டுபண்ணி அது இன்று அடுத்தடுத்த கலவரங்களுக்கு தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது.

தனிப்பட்ட பிரச்சினையொன்று ஒரு மதப் பிரச்சினையாக பரிவர்த்தனை பெறுவதன் ஆபத்து மிக்க இனக்குரோத பதட்ட அரசியல் இலங்கையில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. சமீப காலமாக அது மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

ஒரு கொலையைப் புரிபவருக்கு "கொலைஞர்" (murderer) எனலாம், "குற்றவாளி" (Criminal) எனலாம். அந்த கொலைஞருக்கு இன அடையாளம் குத்தப்படுவதன் அரசியல் என்ன. அப்படிப்பட்ட குற்றவாளி முஸ்லிம் ஆகவும், சிங்களவர் ஆகவும், தமிழர் ஆகவும் அடையாளம் குத்தப்படுவது இலங்கையில் தான். திகன சம்பவம் அப்படிப்பட்ட ஒன்று.


மரணத்தின் பின்னால் உள்ள சதி?

இது ஒரு திட்டமிட்ட சதியோ என்கிற சந்தேகங்கள் இன்னமும் நிலவுகின்றன.

பெப்ரவரி 22 அன்று நள்ளிரவு தெல்தெனியவில் முச்சக்கர வண்டியொன்றை முன்னால் சென்ற லொறி முன்கடந்து செல்ல வழிவிடவில்லை. இறுதியில் லொறியுடன் விபத்துக்குள்ளானது. பெட்ரோல் நிரப்பும் நிலையத்தினருகில் இரு வாகனங்களும் நிறுத்தப்பட்ட நிலையில் லொறி சாரதி உடைந்த போன முச்சக்கர வண்டியின் கண்ணாடியை திருத்த பணம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத முச்சக்கர வண்டியில் வந்த நால்வரும் லொறி சாரதியை தாக்கியதாக குற்றச்சாட்டு. லொறி சாரதி சிங்களவர், தாக்கியதாக கூறப்படும் நால்வரும் முஸ்லிம்கள். மற்றும்படி இந்த சம்பவத்துக்கும் இனத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

மேலும் இந்த சம்பவத்துக்கு ஆதாரமாக கூறப்படும் பெட்ரோல் நிலைய சீசீடிவி ஆதாரங்களில் எதிலும் தாக்கியதற்கான ஆதாரங்கள் இல்லை. சர்ச்சையில் ஈடுபடுவோரிடமும் எந்த ஆயுதங்களும் கூட இருக்கவில்லை. லொறி சாரதி அன்றே பொலிசுக்குச் தனியாகச் சென்று ஒரு முறைப்பாட்டையும் செய்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைப் பெற்றிருக்கிறார். லொறி சாரதியின் தாயார், மனைவி ஆகியோரின் தகவலின் படி முதல் மூன்று நாட்கள் அவர் அவரச சிகிச்சை அவசியப்படவில்லை என்றும் அவர் நன்றாகவே பேசி, உணவுண்டு இருந்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் அவருக்கு திடீரென்று என்ன நிகழ்ந்தது என்கிற சந்தேககங்கள் இப்போது எழுப்பப்படுகின்றன. கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் மார்ச் 3 சனியன்று ஒரு சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட நிலையில் இறந்திருக்கிறார். 

சர்ச்சை நிகழ்ந்த நான்காவது நாள் (26) தான் அம்பாறையில் மலட்டுமருந்து விவகாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அசம்பாவிதங்களும் பதட்ட நிலையும் தணியும் முன் மூன்றாவது நாள் திகன பிரதேசத்தில் தொடங்கியது கலவரம். ஞானசார தேரர், ஆம்பிடியே சுமண ரதன தேரர், டான் பிரசாத், “மகாசொன் பலகாய”  அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, சாலிய போன்றோர் கண்டியில் கூடினர். அந்த இடத்துக்கு பஸ்களிலும், வாகனங்களிலும் வந்து சேர்ந்தனர் அவர்களின் தொண்டர்கள்.


ஞானசார தேரர் சாரதியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களில் இது தொடங்கியது. சாரதி தாக்கப்பட்ட அன்று நிகழாத வன்முறைகள், சாரதி இறந்த அன்று நிகழாத வன்முறை 4 ஆம் திகதி தான் நிகழ்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த தயாரிப்புகளை கணக்கில் எடுக்க வேண்டும். வன்முறையைத் தொடக்கியவர்கள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும், பிற பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டது.

இதில் இனவாத, மதவாத சக்திகள், அரசியல் வாதிகள், கொள்ளையர் கூட்டம் என அவரவர் தமது பங்குக்கு பெருப்பித்து, ஏனைய இடங்களுக்கும் பரப்பி லாபம் சம்பாதித்தனர். இதே வடிவத்தில் தான் கடந்த கால சகல கலவரங்களும் நிகழ்ந்ததையும் நினைவுறுத்த வேண்டும்.

எரிக்கப்பட்ட வீடொன்றினுள் சிக்கிய 27 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் இறந்து போனார்.

சம்பவத்தில் ஈடுபட்ட சிலர்  கைது செய்யபட்டார்கள். ஆனால் 5ஆம் திகதி அவர்களை விடுவிக்கக் கோரி இனவாதக் கோஷ்டியினர் போலிசை சுற்றி வளைத்தனர். 6 ஆம் திகதி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக இராணுவம் பாதுபாப்புக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே வன்முறைகள் தொடர்ந்தன. 7ஆம் திகதி இணையப் பாவனை கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.


தீர்வுக்கு அவசரகால சட்டம்?

யுத்தத்தைக் சாட்டாக வைத்து 28 வருடகாலமாக நடைமுறைப்படுத்திவந்த அவசரகால சட்டம் 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பின் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்த அவசரகால சட்டம் 10 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் அது நீடிக்கப்படலாம். கடந்த கால சுற்றிவளைப்பு, அனாவசிய கைது, கடத்தல், விசாரணயின்றி தடுத்து வைப்பு உள்ளிட்ட பல அரச பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த சட்டம் தான் லைசன்ஸ் வழங்கியது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். தற்போது இன வன்செயல்களை கட்டுப்படுத்த என்கிற பேரில் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் அப்பாவி நிரபராதி தமிழ் மக்களே இச்சட்டத்தால் அதிகமாக நசுக்கப்பட்டார்கள். ஆனால் இம்முறை கண்டி அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்த முக்கிய சக்திகளை விட்டுவிட்டு பெயரளவில் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பன்றி வேறென்ன. அவசரகால சட்டம் இன – மத – வர்க்க அடையாளம் பார்த்துத் தான் பாயுமா என்கிற கேள்வி எழாமலில்லை.

ஊரடங்கு சட்டம், சில கைதுகள், கண்டன அறிக்கைகள் இந்த நிலைமையை தற்காலிகமாக கட்டுப்படுத்த ஓரளவு துணைபுரியும். நிலையான அமைதிக்கு அது போதுமானதல்ல.


எங்கே பிழைத்தது?

2500 வருடகால இலங்கையின் சரித்திரத்தில் இனப்பிரச்சினை என்கிற ஒன்று 1915 வரை நிகழவில்லை. மகாவம்சத்துக்கு பொழிப்புரை எழுதிய பின்வந்தவர்கள் தான் எல்லாளன் – துட்டகைமுனு அரசர்களுக்கிடயிலான சண்டையை இனச் சண்டையாக திரித்தே மகாவம்ச மனநிலை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் – சிங்கள அரசாட்சி நிகழ்ந்தபோதும் அவர்களுக்கிடையில் இன மதச்சண்டைகள் எதுவும் நிகழ்ந்ததுமிலை.

ஆனால் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் இலங்கை பெரிதும் சிறிதுமாக பல நூற்றுக்கணக்கான இன – மத – சாதிய சண்டைகள் பலவற்றை எதிர்கொண்டிருக்கிறது என்றால்; காலனித்துவத்துக்கு இருக்கும் வகிபாகத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.

காலனித்துவத்துக்கு எதிரான “சுதேசிய சிந்தனை”யானது  “சிங்கள - பௌத்த” தேசத்தைக் கட்டியெழுப்பும் சித்தாந்தமாக குறுகியதில் தான் இலங்கைக்கு பிழைத்துப் போன அரசியலாக ஆகியிருக்கிறது.

1915 கண்டி கலவரத்தில்  முஸ்லிம்களை ஆங்கிலேய ஆட்சி பாதுகாத்தது அவர்களின் பால் இருந்த கருணையோ, நீதியாலோ அல்ல. மாறாக பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவும் தான். சுதேசிகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு போனதன் பின் சக சகோதர இனங்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையில் பாதுகாத்துக்கொள்ள முடியாது போனதேன். 


பாசிசத்தின் போக்கு

பிரபல கூற்றொண்டு உள்ளது. “King is dead long live the king” அரசர் இறந்துவிட்டார். அரசர் நீடுழி வாழ்க. அதாவது அரசர்கள் வருவார்கள், ஆழ்வார்கள், போவார்கள், சுழற்சியில் அடுத்தடுத்து அது நிகழும். ஆனால் ராஜ்ஜியம் இருக்கும். ராஜ்ஜியத்தின் மீதான புனித வழிபாட்டு மரபு இறப்பதில்லை. என்பதே அதன் அர்த்தம். நாளாந்தம் பாசிச வடிவத்தின் உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த வாதத்த்துக்கும் அப்படி ஒரு மரபு உண்டு. காலத்துக்கு காலம் தலைமைகள் மாறும். சித்தாந்தம் அப்படி நிலைத்து நிற்கும்.

பாசிசம் நேரடியாக இயங்க வேண்டியதன் அவசியம் இல்லை. அது ஒரு நேரடி அதிகாரமாகவோ, நேரடி ஆட்சியாகவோ கூட இருக்கத் தேவையில்லை. அது ஒரு சித்தாந்தமாக நிலைகொண்டாலே போதும் பலமான வினையை ஆற்ற வல்லது. சித்தாந்தமாக நிலை பெற்றதன் பின்னர் வரும் விளைவுகளுக்கும் அநியாயங்களுக்கும் பொறுப்பேற்பார் இன்று எவருமில்லை.

எந்த சக்தியின் மீதும், எந்த தனிநபரின் மீதும் கூட ஒட்டுமொத்த குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. ஏனென்றால் இதன் பின்னால் இயங்கும் நிறுவனமயப்பட்ட சித்தாந்தம் தனி நபர்களையோ, தனி அமைப்புகளையோ அடையாளம் காட்டாது. நேற்று ஒரு பெயரில் இயங்கியவர்கள் இன்று இன்னொரு கூட்டணியாக வேறொரு பெயரில் பாய்வார்கள், நாளை இன்னொரு பெயரில் அடையாளம் காட்டுவார்கள். அதில் சம்பந்தப்படும் நபர்களும், கூட்டணியும், பெயர்களும் வரலாறு முழுக்க மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான சித்தாந்தமும், அதன் பண்பும் அதே இலட்சியத்தில் புதுப்பித்துக் கொண்டு வரும். நமது முழு எதிரி அந்த சித்தாந்தமும் அதனை பாதுகாக்கும் அமைப்புமுறையும், சக்திகளுமே. இதன் இடையில் உள்ள அநியாயக்காரர்கள் யார் என்றால் சந்தர்ப்பவாதிகளும், இனவெறியேற்றப்பட்டவர்களும் தான். அவர்கள் நமது இலக்கு அல்ல.

தேசத்தைக் காக்க வந்த தேசபக்தர்களின் கைவரிசை. முஸ்லிம்களின் சொத்துக்களை முதலில் சூறையாடிவிட்டுத் தான் கொழுத்துகிறார்கள்

ஞானசார தேரர், சுமனரதன தேரர், சம்பிக்க போன்றோரின் மீது நேரடியாக நம்மால் இந்த கலவரத்தின் மீதான பொறுப்பை சுமத்திவிட முடியாது. போதாததற்கு இவர்கள் அனைவரும் கலவரத்தை கண்டித்து அறிக்கை வேறு விட்டிருக்கிறார்கள். கலவரத்தை நிறுத்தக் கோரி அறைகூவலையும் விடுத்திருக்கிறார்கள்.

தமக்கு போதுமான அளவுக்கு இழப்புகளையும், பீதியையும், மிரட்டல்களையும் ஏற்படுத்தியதன் பின்னர் வருத்தம் தெரிவிப்பது கண்கட்டி வித்தையல்லவா?

ஆக இவர்களின் வகிபாகத்தை எப்படி அளவீடு செய்வது? இவர்கள் தமது வகிபாகத்தை கச்சிதமாக எப்போதோ ஆற்றிவிட்டர்கள் என்பது தான் உண்மை. அவர்களின் முன்னோரின் பாதையில் அவர்கள் தமது காலத்து வகிபாகத்தை ஆற்றிவருகிறார்கள்.

அவர்கள் இந்த பேரினவாத கருத்தியலை கட்டமைப்பதற்கும், கருத்துருவாக்கத்துக்கும் போதுமான அளவு பங்கை ஆற்றி சித்தாந்த ரீதியில் பலமாக மக்கள் மத்தியில் நிருவனமயப்படுத்திவிட்டார்கள். மக்கள் மயப்படுத்திவிட்டார்கள். இலங்கையில் உள்ள நடைமுறை சட்டங்கள் இத்தகைய சக்திகளால் ஏற்பட்டுவரும் விளைவுகளின் வகிபாகத்தை அடையாளம் காட்ட போதுமானவை அல்ல.

தன்னை புதுப்பித்துக் கொண்டு வடிவத்தாலும், அளவாலும் காலத்துக்கு காலம் வெவ்வேறு தோற்றத்தோடு இயங்கினாலும் அதன் பண்பில் மாற்றத்துக்கு உள்ளாவதில்லை என்பது பாசிசத்தின் முக்கிய கூறு என்போம்.

பாசிஸ கூட்டு மனநிலை என்பது கூட்டு செயற்திறனை பெற்ற போதும் அது கூட்டாக இயங்க வேண்டியதில்லை. தனி நபர்களாக, சிவில் அமைப்புகளாக, ஊடகங்களாக, மத நிறுவனங்களாக, அரச அங்கங்களாகவும் வெவ்வேறு தளங்களில் கூட இயங்கி வினையாற்ற முடியும். இலங்கையில் அது நிகழ்கிறது.

சிங்கள பௌத்தர்களின் நாடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவம்;  சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை அந்நியர்களாக உருவகப்படுத்தி மனித அறத்துக்கும் ஒவ்வாத செயல்களை ஆற்றும் வலிமையைப் பெற்றிருக்கிறது. பௌத்தத்தைக் காக்க புத்தர் தெரிவு செய்த நாடாக ஒரு ஐதீகத்தை நிறுவி, இலங்கை முழுவதும் சிங்களவர்களின் நாடு என்று புனைந்து, சிங்கள பௌத்தர்களை புனிதப்படுத்தி, இனத் தூய்மைவாத தோற்றப்பாட்டை கச்சிதமாக கட்டமைத்து ஏனையோரை அந்நியர்களாக ஆக்கியிருக்கிறது இந்த சித்தாந்தம். நிறுவனமயப்படுத்தி இயக்குகிறது. அரச கட்டமைப்பு அதற்கு அனுசரணை வழங்கி வருகிறது. இப்படித்தான் இதனை சுருங்கச் சொல்லலாம்.

சிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பின் பரிணாமத்தையும், பரிமாணத்தையும் இப்படித்தான் விளங்கிக் கொள்ளலாம்.

அதன் நிகழ்ச்சி நிரலின் திசைவழியை அவ்வப்போதைய அரசியல், பண்பாட்டுச் சூழல் தீர்மானிக்கின்றன. ஆனால் பண்பளவில் அதன் சித்தாந்த இலக்கில் மாற்றம் இல்லை. நடைமுறை தந்திரோபாயத்தில் மாற்றம் கண்டாலும் மூலோபாயத்தில் உறுதியாகவே இருக்கிறது.

இனவாதத்தையும் இனவெறுப்புணர்ச்சியின் வளர்ச்சியையும் இன்று அதிக கூர்மையுடன் அணுக வேண்டியிருக்கிறது. 


மார்ச் 2 அன்று மட்டக்களப்பில் சுமண ரதன தேரர், ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டலை விடுத்தார். அடுத்த நாள் மட்டக்களப்பு வரும் ஜனாதிபதி தமது விகாரைக்கு வராமல் மாமாங்கம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றால் தீக்குளித்துச் சாவதாக அறிவித்து வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏற்றினார். அடுத்த நாள் மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்து மங்களாராம விகாரைக்குச் சென்று சுமண ரதன தேரரை சந்தித்ததன மூலம் ஜனாதிபதி அந்த மிரட்டலுக்கு அடிபணிந்தார். இதையே இலங்கையில் இன்னொரு மதத் தலைவர் மேற்கொள்ள முடியுமா? செய்தாலும் ஜானாதிபதி தான் அடிபணிவரா? இலங்கையில் பௌத்தத்தின் பேரால் எதையும் நிறைவேற்றலாம் என்பது தான் இதன் செய்தி.

வதந்திகளின் வகிபாகம்

மேலும் இதுவரை நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் வதந்திகள் பெரும் பங்கு வகித்திருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு முழுமையாக சேராத காலத்திலேயே காதுக்கு காது பரப்பட்ட வதந்திகள் வன்முறைகளுக்கு இட்டுச் சென்றதை ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இன்று இணைய வசதிகளும், நவீன தொலைபேசிகளும் பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. தகவலை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் முன்னறி விட வாய்ப்புகள் அதிகமிருந்தும் இவை நிகழ்கின்றன என்றால், இனவாத வதந்திகளுக்கு அந்தளவு வலிமை இருக்கிறது என்பது தான் பொருள். இந்த இடத்தில் தான் மக்கள் மத்தியில் ஊறிப்போயுள்ள பாசிச சித்தாந்தத்தின் வகிபாகத்தை நாம் உணர வேண்டியிருக்கிறது.

முகநூல், வட்ஸ் அப், வைபர், ட்விட்டர் போன்ற இணையப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனை மீது அரசாங்கம் கொண்டு வந்த இடைக்கால கட்டுப்பாடுகள் சரியானதே என்று ஊடகங்களும், கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளும் கூட வரவேற்கும் நிலையை முதற் தடவையாக இலங்கையில் இம்முறை பார்த்தோம்.
அடுத்த மாதம் வரப்போகும் சிங்கள புதுவருடத்துக்காக சிங்கள கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்கிற சமூக வலைத்தள விளம்பரங்களை இப்போதே தொடங்கி விட்டார்கள்
இலங்கையில் இனவாதத்தைப் பரப்பும் சமூக வலைத்தளங்களானவை சமூக நல்லிணக்கத்துக்காக குரல் கொடுக்கும் வலைத்தளங்களை விட பலமானவை என்பது தற்போது உணரப்பட்டும் நிரூபிக்கப்பட்டும் வந்திருக்கிறது. போலிப் பெயர்களில் பல்லாயிரக்கணக்கான கணக்குகள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பேரினவாத சித்தாந்தத்தை உருவாக்குவதிலும், பரப்புவதிலும், பலப்படுத்திவதிலும் பெரும் பங்கை வகித்து வருகின்றன.

முஸ்லிம்கள் மிலேச்சத்தனமான அரக்க குணம் படைத்தவர்கள் என்று பிரச்சாரப்படுத்துவதற்காக அந்த நாடுகளில் நிகழும் கொலை வடிவங்களைக் காட்டி பிரச்சாரம் செய்வது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொலைகளை திரும்பத் திரும்ப காண்பித்து மிலேச்சர்கள் என்று காண்பிப்பது தொடர்ந்து நிகழ்கின்றன.

கடந்த 5 வருடங்களாக இனவாத இணையப் பக்கங்களையும், முகநூல் கணக்குகளையும் தினசரி கண்காணித்தும், பின்தொடர்ந்தும் வருபவன் என்கிற வகையில் இதன் பாரதூரமான போக்கைப் பற்றி பீதியடைந்திருக்கிறேன். வதந்திகளுக்கும், புனைவுகளுக்கும், திரிபுகளுக்கும் சற்றும் பஞ்சமில்லாத முகநூலில் ஒரு தடவை சிங்கள மொழியில் இப்படி ஒரு வாசகம் இருந்தது.
“முகநூலில் வெளிவரும் அனைத்தையும் நம்பாதீர்கள்”
-ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன்-
இலங்கையின் முதலாவது இனக்கலவரமான 1915ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதியான விசாரணை நிகழ்ந்ததில்லை. அதற்கான காரணங்களை ஆராய்ந்து நிலையான தீர்வுக்கான வழிகள் கண்டதில்லை. சில தடவைகள் விசாரணை என்கிற பெயரில் கண்துடைப்புக்காக சில அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் கூட அவை அறிக்கைகளோடு நின்றுவிட்டன. தற்காலிகமாக இவை சீராக்கப்பட்டிருக்கிறதே தவிர அதன் தணல் முற்றாக அணைக்கப்பட்டதில்லை. இந்த கலவரங்களுக்கு உள்ளாகி படுகாயத்துக்குள்ளாகி இருக்கும் இந்தக் குட்டித் தீவுக்கு ஒத்தடங்கள் போதாது. மாற்று சத்திரசிகிச்சையே தேவை.



பெண் தொழிலாளர்களின் வேலைத்தள பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் - மேனகா கந்தசாமி


பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதாரம் உடல் நலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர் நலன்புரி விடயங்கள் மிக குறைந்தளவே பேணப்பட்டு வருகின்றன. விசேட மாக இயற்கை உபாதைகளுக்குக் கூட தோட்ட மலைகளில் போதிய பாதுகாப்போ வசதிகளோ இல்லாத நிலையில் பெண் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என பெண் தொழிலாளர் நலன் பாதுகாப்பு விடயங்களில் குரல் கொடுத்து வரும் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்க ஆலோசகர் திருமதி மேனகா கந்தசாமி தெரிவிக்கிறார். இது தொடர்பில் அவர் கூறும் விடயங்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.

தொழிலாளர் பாதுகாப்பு

உலகில் பல நாடுகளில் உடல் நல பாதுகாப்பு என்ற விடயம் ஒரு முக்கியமான விடயமாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் ஆசிய நாடுகளில் உடல் நல பாதுகாப்பு என்பது ஒரு துச்சமாக கருதப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஒரு மனிதன் வேலைக்கு சென்று சுகதேகியாக மீண்டும் வீடு திரும்பும் நிலையை அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அதிகபணத்தை ஆசிய நாடுகளில் முதலிட்டு அதி உயர் லாபத்தை அடையும் நோக்கில் எமது நாடுகளுக்கு வரும் கம்பனிகளுக்கு எமது நாட்டு தொழிலாளர்களின் உடல் நல பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் தொழில் தளங்கள் இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். எனவே தொழிலாளர்களின் உடல் நல பாதுகாப்பு என்ற விடயம் மிக முக்கியமாக கருதப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

வேலையை ஆரம்பிப்பதிலிருந்து முடியும் வரை ஆபத்துகள்

பெருந்தோட்ட துறையில் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முடிக்கும் வரை பல்வேறு உடல் நல பாதிப்பு ஆபத்துக்களை சந்திக்கின்றார்கள். மலைகளில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பல ஆபத்துக்களுக்கு மத்தியில் வேலை செய்தாலும் இவ் விடயக் கூறு தொடர்பாக தெளிவின்மையோடு காணப்படுகின்றார்கள். மலசல கூடம் என்பது ஒரு அடிப்படை தேவையாகும் எந்த ஒரு வேலைத்தளத்திலும் மலசல கூடம் இருக்க வேண்டும் என்பது கட்டாய தேவையாகும். ஆனால் 200 வருடங்களுக்கு மேலாகியும் இந்த தோட்டத் தொழிலாளர்களின் வேலைத்தளத்தில் மலசல கூடத் தேவை பற்றி எவரும் உணரவில்லை. அதே போல் இவர்களது தேநீர், உணவு இடைவேளைகள் அனைத்தும் தேயிலை புதர்களுக்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது. தூசுகளுக்கும் புகைகளுக்கும் மழை வெயிலுக்கு மத்தியில் உணவு உண்ணும் நிலை இந்த நூற்றாண்டிலும் காணப்படுகின்றது. இவை இவர்கள் முகம் கொடுக்கும் உடல் நல பாதுகாப்பு பிரச்சினைகளில் அடிப்படை பிரச்சினைகள் மட்டுமே. இவர்களின் வேலைத்தளம் மலைகளில் அமைந்திருப்பதனால் இவர்கள் கொழுந்துக் கூடைகளோடு கொழுந்து பறிக்கும் போதும், கொழுந்தை சுமந்து வரும் போதும் பல்வேறு ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் தேயிலைப் பாரத்தை சுமக்கும் விதம் இவர்களது உடல் நலத்தில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு மலையக தொழிலாளர்களுடைய உடல்நல பிரச்சினையை அடுக்கிக் கொண்டே போகலாம்.

செடிகளுக்கு மருந்து தெளிக்கும் போது உரிய பாதுகாப்பு அவசியம்

தோட்டங்களில் மருந்தடிக்கும் போதும், உரம் போடும் போதும் பாதுகாப்பு கவசங்களை அதிகமான தோட்டங்கள் வழங்குவதில்லை. அவ்வாறு பாதுகாப்பு கவசங்களை வழங் கிய தோட்டங்களில் இத் தொழிலாளர்கள் அவற்றை பயன்படுத்துகின்றார்களா என்பதும் மேற்பார்வை செய்யப்படுவதில்லை. மருந்தடிப்பதனால் ஆண் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல அதனை சுவாசித்துக் கொண்டு அருகாமையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் மருந்தடிக்க பயன்படுத்தும் கருவிகளை கழுவதற்கு நீரை பெற்றுக் கொள்ளும் நீரோடைகளில் இம் மருந்து கலப்பதனால், நச்சுக்கலந்த இந் நீரை ஏனைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குடிக்க மற்றும் குளிக்கப் பயன்படுத்தும் போது இம் மருந்துகளின் விளைவுகள் அவர்களையும் சென்றடைகின்றன.

மலையகத்தை பொறுத்தவரை உடல்நல பாதுகாப்பு ஆபத்துக்கள் சகல தொழிலாளர்களுக்கும் பொதுவான ஒன்றாக கருதினாலும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இத் துறையில் வேலை செய்வதனால் அதிக பாதிப்புகளுக்கு பெண் தொழிலாளர்களே உட்படுகின்றார்கள்.

குறிப்பாக கர்ப்ப காலங்களில் கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு ஏற்படும் இந்த உடல் நல பாதுகாப்பு ஆபத்துக்கள் அத்தொழிலாளிப் பெண்ணை மட்டுமல்ல அவள் சுமக்கும் சிசுவையும் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது. மேலும் இத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் வறுமையின் காரணமாக கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள முடியாமை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுடைய தொழிலின் தன்மை என்பவற்றின் காரணமாக அதிகமாக கருச் சிதைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தோட்ட பராமரிப்பு என்பது தொழிலாளர்களையும் சேர்த்துத்தான்

மிக குறுகிய காலத்தில் விரைவாக அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படும் கம்பனிகள் தோட்ட பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் அக்கறை செலுத்துவது இல்லை. (3ஆம் பக்கம் பார்க்க)

இதன் காரணமாக அதிகூடிய பாதிப்பிற்கு உள்ளாவது இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே. இன்று தோட்டங்களில் விச பாம்புகள், பன்றிகள், சிறுத்தைகள், குழவிகளின் பெருக்கத்தில் அதிகரித்த தன்மை காணப்படுகின்றது. இவற்றின் தாக்குதல் காரணமாக அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும் இவர்களுக்கு முறையான இழப்பீடுகள் நிர்வாகங்களினால் வழங்கப்படாது தொழிலார்கள் ஏமாற்றப்படுவதோடு இவ் விடயங்கள் தொடர்பாக யாரும் அக்கறை கொள்ளாத தன்மையும் காணப்படுகின்றது. தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் இப் பிரச்சினையில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்ற வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். 

செங்கொடிச்சங்கம் வலியுறுத்தும் விடயங்கள்

செங்கொடி சங்கத்தின் யாப்பில் உடல் நல பாதுகாப்ப என்ற ஒரு பிரிவு உள்ளடக்கப்பட்டுள்ளது. அப் பிரிவிற்குள் சேர்க்கப்பட்டுள்ள விடயங்களாவன ;

௧) தொழிலாளர்களின் உடல்நல பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

௨)சங்கத்தின் நிர்வாக குழுவிற்குள் விசேட உறுப்பினர்களை உடல் நல பாதுகாப்பு பிரிவிற்காக தெரிவு செய்தல்

௩) தோட்டக்கமிட்டிகளில் உடல் நல பாதுகாப்பு பிரதிநிதிகளை நியமித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப் பிரச்சினையின் உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் நோக்கத்தில் கடந்த வருடம் எமது சங்கம் மலையகத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இவ் ஆய்வில் வெளிவந்த ஆலோசனைகளுக்கு இனங்க சட்ட நகல் ஒன்று அரசுக்கு சமர்பிப்பதற்காக தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அத்தோடு தோட்ட மட்டத்தில் உடல்நல பாதுகாப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு தோட்ட கமிட்டிக்கு ஊடாக நிர்வாகத்தோடு பேசி அடையாளம் கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடுகின்றார்கள். மேலும் எமது நாளாந்த கடமைகளான தொழில் திணைக்களத்தில் முறையப்பாடு செய்தல்’ போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

பொறுப்பு கூறுதல் வேண்டும்

தொழில் வழங்குனரின் கடமை வேலைத்தளத்தில் உடல் நல பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துவது. வேலைத்தளத்தில் முகம் கொடுக்கும் ஆபத்துக்களை அடையாளம் கண்டு தொழில் வழங்குனருக்கு அறிவிப்பதோடு, அதனை தடுத்து நிறுத்தும் கடமை தொழிலாளிக்கு உண்டு. மேலும் நாட்டில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்கின்றார்களா என்பதை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இம் மூன்று சாராரில் யார் தன்னுடைய கடமையை சரியாக செய்யாவிட்டாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்களாகும் எனவே இப் பிரச்சினையின் போது தொழிலாளர்கள் என்ற காரணத்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய பிரச்சினையை தீர்க்க செயற்படுவது கட்டாய கடமையாகும்.

நன்றி - வீரகேசரி

சிங்கள பௌத்தத்தின் “மலட்டு” அரசியல் - என்.சரவணன்


அந்நியர்களுக்கு எதிரான அனாவசிய அதிபீதியை ஆங்கிலத்தில் “Xenophobia” என்பார்கள். முஸ்லிம்களையும், தமிழர்களையும் அந்நியர்களாகவே கட்டமைத்து வந்திருக்கிற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் அதிபீதி மிக்க வெறுப்புணர்ச்சியை  பரப்பி வந்திருப்பதை நாம் அறிவோம்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பீதி என்பது கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக புனையப்பட்டிருந்த  பீதியிலும் பார்க்க வேறுபட்டது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், புனைவுகளும் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் (Islamofobia) இதை ஒத்ததே. 

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் என்பதை உறுதிபடுத்துவதற்கான முஸ்தீபு இன்று நேற்றல்ல அந்த சித்தாந்த பரப்புரைக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. தமிழ் மக்களை ஆயுத ரீதியில் தோற்கடித்த பின்னர் அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு தமிழ் இனத்துடன் முஸ்லிம் இனமும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இருப்பது தான்.

முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சிநிரலில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் பல படிநிலைகளைக் கொண்டியங்கி வருகிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை சித்தாந்த ரீதியில் வலுவாக பாமர சிங்கள மக்கள் மத்தியில் உறுதியாக ஊன்றச் செய்தால் மாத்திரமே அதன் அடுத்த கட்ட வடிவத்துக்கு அதனை நகர்த்த முடியும்.

இதுவரை இலங்கையில் நிகழ்ந்த அத்தனை இனக் கலவரங்களின் பின்னணியிலும், வெறுப்புணர்ச்சி, வதந்தி, முன்பீதி என்பவை பிராரம்பமாக இருந்திருக்கிறது. அது தன்னியல்பாக நிகழ்ந்தது போல தென்பட்டாலும் கூட அதற்கென்று ஒரு நீட்சி இருந்ததென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

அப்படி முன் பீதிக்கு உள்ளாக்குகின்ற பல கட்டுக்கதைகளும், ஐதீகங்களும், புனைவுகளும், மாயைகளும் சமூகத்தில் இன்றளவிலும் பலமாக ஊன்றச் செய்யப்பட்டிருக்கிறது. இன்று அதனை திட்டமிட்டு மேற்கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள் பேராயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அம்பாறை நிகழ்வுக்கு முன்னர் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு இனக்கலவரத்துக்கு தயார் நிலையில் தான் இருந்திருக்கிறது. அங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இன்று அப்படிப்பட்ட இனக்கலவரத்துக்கான தயார் நிலை இருக்கவே செய்கிறது என்பது கசப்பான உண்மை. அது கடந்த சில வருடங்களாக உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கிறது.


அம்பாறை நிகழ்வு திட்டமிட்டதா?

கொழும்பிலும் பல இடங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் ஒரு சுவரொட்டி பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இப்படி இருந்தது.


“சிங்களவர்களே!
இலங்கை முழுவதுமுள்ள முஸ்லிம் கடைகளில் உணவை/பொருட்களை வாங்காதீர்கள். பெப்ரவரி முதல் வாரத்தில் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதிக விஷமுள்ள மலட்டுத்தன்மை உருவாக்கும் மருந்துகளை இலங்கை முழுவதுமுள்ள பள்ளி வாசல்களால் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பாடசாலைகளுக்கு அருகாமையில் உணவு கரத்தைகளில் வடை, பெட்டிஸ், போன்றவற்றை மலிவு விலைக்கு விற்கப்படுகின்றன. நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள்.”

அம்பாறை சம்பவம் நிகழ்ந்த அதே பெப்ரவரி 26 அன்று மவ்பிம பத்திரிகையில் ஸ்ரீ விஜயராம விகாராதிபதி கலாநிதி தலாவே சங்கரதன தேரர் ஆற்றிய உரை வெளியாகியிருந்தது. 1951 இல் 51% மாக இருந்த சிங்கள கொழும்பு பௌத்தர்களின் சனத்தொகை இப்போது 10% ஆக குறைந்துவிட்டது, அடுத்த 10வருடங்களில் அது 0% வீதமாக ஆகப் போகிறது, கொழும்பில் உள்ள பன்சலைகளுக்கு இனி வேலையில்லை நூடிவிடுங்கள் என்பார்கள். அவை மியூசியங்களாக எஞ்சிவிடும், ஏனையவை அழிக்கப்பட்டுவிடும்,”

இந்த பிரசாரங்களுக்கும் அம்பாறை நிகழ்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறப் போகிறோமா? அம்பாறையில் சர்ச்சைக்குரிய கொத்துரொட்டி பிரச்சினையை கிளப்பியவர் சிறிது நேரத்தின் பின்னர் தலைமறைவானார். அதன் பின்னர் கலவரத்தை முன்னெடுத்தவர்கள் அடுத்த கட்ட அணியினர். தீயிடுவதற்கான பெட்ரோல், மற்றும் ஆயுதங்கள் சொற்ப நேரத்தில் அங்கு இருந்தது. அது முன்கூட்டிய செயலே என்கிற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

“இனப்பெருக்க – இனச்சுருக்க சதி”

முஸ்லிம்களின் இனப்பெருக்கம் செயற்கையாக அதிகரிக்கப்படுகிறது என்பதும். அது ஒரு திட்டமிட்ட சதி என்பதும் இதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளில் நீட்சி தான்.

அதாவது முஸ்லிம்கள் தமது இனத்தை பெருக்குவதை திட்டமிட்டு மேற்கொள்வது ஒருபுறம் நிகழ்த்திக் கொண்டிருக்க மறுபுறம் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தமது வியாபார வலைப்பின்னல்களுக்கூடாக மலட்டுத்தனத்தை உருவாக்கக் கூடிய பொருட்களை இரகசியமாக கலந்து விற்று விடுகிறார்கள் என்கிற பிரச்சாரம்.

சிங்களவர்களை மலட்டுத் தனமாக்கும் சதியை முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்கிற பிரச்சாரம் சில ஆண்டுகளாகவே கூர்மை பெற்றுள்ளது. சகல இனவாத சக்திகளும் இந்த கருத்தை சிங்கள சமூகத்தில் ஆழமாக விதைத்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்கிற எச்சரிக்கையையும், பீதியையும் கிளப்பி வந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வேகமாக இனபெருக்கம் அடைந்து வருகிறார்கள். சிங்கள நாட்டை விரைவில் ஆக்கிரமித்து விடுவார்கள். என்றும், அதன் சதியின் இன்னொரு அங்கமாக சிங்களவர்களை மலட்டுத்தன்மை ஆக்கும் முயற்சியில் பல வடிவங்களில் இயங்கி வருகிறார்கள். வதந்திகளையும் பரப்பி வந்திருக்கிறார்கள்.

இந்தப் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து வந்த முக்கிய பத்திரிகை திவயின. முஸ்லிம்களின் இனப்பெருக்கம், “கருத்தடை சதி” பற்றிய கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், பேச்சுக்களை அதிகமாக வெளியிட்ட பத்திரிகை அது தான். இதனை ஆதாரத்துடன் நிறுவ முடியும். யுத்த காலத்தில் அதன் யுத்த செய்திகளையும், அவை சார்ந்த புனைவுகளையும் நம்பித் தான் அதன் வியாபாரம் நடந்தது. பாமர மக்களுக்கு மகிழ்வூட்டக்கூடியதாக யுத்த செய்திகளை புனைவேற்றி, திரித்து பரப்புவதில் அதற்கு நிகர் இலங்கையில் வேறொரு ஊடகம் இருந்ததில்லை. அதனை சிங்கள ஜனநாயக சக்திகளும், ஆய்வாளர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள்.

இதில் சிங்கள முஸ்லிம் வர்த்தக வர்த்தக போட்டியும் ஒரு காரணம் அதேவேளை பண்பாட்டு வெறுப்புணர்ச்சி, இன்னொரு இனம் தலைதூக்குவது பற்றிய பீதி என்பதன் வகிபாகமும் கவனத்திற் கொள்ளவேண்டியது.


90களில் ஆரம்பிக்கப்பட்ட பீதி

இனபெருக்கம், கருத்தடை சதி பற்றிய பீதியை தீவிரமாக முன்னெடுத்தவர்  சோம ஹிமி. 90களில் அவர் முஸ்லிகளுக்கு எதிராக பல ஐதீகங்களை பரப்பி நிலைபெறச் செய்தவர்களில் முக்கியமானவர். அவருக்கும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் இடையில் பகிரங்கமாக நிகழ்ந்த நேரடி TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்தி பெற்றது. அஷ்ரப் அவர்கள் சோம ஹிமியின் புனைவுப் பட்டியலை ஆதாரபூர்வமாக உடைத்தெறிந்தார். அவரே வெற்றிபெற்றார் என்றே முஸ்லிம், தமிழ் தரப்பு நம்பியது. அதேவேளை சிங்கள தரப்பும் அஷ்ரப்பை தாம் தோற்கடித்ததாக பிரச்சாரம் செய்தது.

20 வருடங்களுக்கு முன்னர் சோம ஹிமி பேசிய உரை இது. "...சிங்களவர்கள் வேகமாக மலட்டுத்தனத்துக்கு உள்ளாகிவருகிறார்கள். இன்னும் 40 வருடங்களுக்குள் சிங்களவர்கள் 45%க்கும் குறைவாகி விடுவார்கள்.  55% வீதமாக முஸ்லிம்களும், தமிழர்களும் உயர்ந்துவிடுவார்கள். அப்போது முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதியாகவும், தமிழர் பிரதமராகவும் ஆகிவிடுவார். சிங்களவர்களுக்கு இந்த சமுத்திரம் மட்டும் தான் தான் எஞ்சும்...."
சோம தேரரைத் தொடர்ந்து அதே காலத்தில் “சிங்கள வீர விதான இயக்கம்” செய்தது. சம்பிக்க ரணவக்கவை தலைமையாகக் கொண்ட அந்த இயக்கம் அந்த பிரச்சாரத்தை ஹெல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என்கிற பெயர்களில் தொடர்ந்து மேற்கொண்டது. பின்னர் அக்கட்சியும் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்ததன் பின்னர் காலப்போக்கில் இந்த பிரச்சாரத்தில் தந்திரோபாய நிலையை எடுத்தது. அவர்கள் பகிரங்கமாக அதுவரை முன்னெடுத்த தீவிர சித்தாந்தத்தை சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கிய போது, அதிலிருந்து வெளியேறிய சக்திகள் முன்னெடுத்தன. அப்படி அதிலிருந்து வெளியேறி அந்த நிகழ்ச்சிநிரலை கைமாற்றிக்கொண்டு பகிரங்கமாக இயங்கத் தொடங்கிய இயக்கம் தான் “பொது பல சேனா” இயக்கம்.

பொது பல சேனா இயக்கத்தைப் போல பகிரங்கமாக “இனப்பெருக்க பீதி, கருத்தடை சதி” பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்த வேறெந்த இயக்கமும் இலங்கையின் வரலாற்றில் இருந்தது கிடையாது. பல தடவைகள் இலங்கையில் பல பாகங்களில் பகிரங்கமாக சுவரொட்டிகளை ஒட்டினார்கள். எதிர்காலத்தில் இந்தத் தீவை முஸ்லிம் நாடாக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே சிங்களவர்களை மலட்டுக்குள்ளாக்கும் இஸ்லாமிய சதி என்றார் ஞானசார தேரர்.

4 வருடங்களுக்கு முன்னர் குருநாகல் மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்த பொதுபல சேனாவின் சுவரொட்டிகள் இவை.
"முஸ்லிம் அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்திருக்கும் சீரகத்தைச் சாப்பிட்டால் சிங்கள இனம் மலட்டுக்குள்ளாகும்.  சிங்களவர்களே இப்போதாவது விழித்தெழுங்கள்" பொதுபல சேனா
- குருநாகல் மாவட்டம் -"
பொதுபல சேனா இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக பெருமளவு சமூகவலைத்தள ஆதரவாளர்கள் உருவானார்கள். திட்டமிட்டு உருவாக்கப்பட்டார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட வலையமைப்பு; இன்று மைய அமைப்பு உடைந்தால் கூட தொடர்ந்தும் பலமாக இயங்கக் கூடிய வலையமைப்பு. அவை நாளாந்தம் குட்டிபோட்டு பெருகிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்து அறிந்தே வருகிறேன்.

இறுதியாக தற்போது சிங்கள பௌத்த இளைஞர்களைக் கொண்ட “மஹாசொன் பலகாய” (மஹாசொன் படையணி) என்கிற இயக்கம் பிக்குமாரை அணிதிரட்டி களத்தில் இறங்கி இந்த பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

பாசிச பரப்புரை

ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரச்சாரம், தொல்பொருள் இடங்களை ஆக்கிரமித்து அழிக்கிறார்கள் என்கிற பிரச்சாரம், மாட்டிறைச்சித் தடை, ISIS பீதி, ஹிஜாப் எதிர்ப்பு, வஹாபிசம் என்கிற பிரச்சாரம், குவாசி (Quazi Court) நீதிமன்றத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஹலால் உணவுகளை நிராகரியுங்கள், முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள், முஸ்லிம்களுக்கு எதையும் வாடகைக்கு கொடுக்காதீர்கள், முஸ்லிம் கடைகளில் மட்டுமே உணவு அருந்துங்கள், முஸ்லிம்களை திருமணம் செய்யாதீர்கள் போன்ற தொடர் பிரச்சாரங்கள் இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் நாசிப் படைகள் மேற்கொண்ட பிரசாரங்களை ஒத்தது. யூதர்களின் கடைக்கண்ணாடிகளில் “இங்கே பொருட்களை கொள்வனவு செய்யாதீர்” என்று என்று யூதப் படையினர் ஒட்டிய போஸ்டர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. பாசிஸ்டுகள் எங்கும் ஒரே மாதிரியாகத் தான் இயங்கியிருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பரப்பட்டவை "ஹலால் பொருட்களை வாங்காதீர்கள். முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள், முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்கு கொடுக்காதீர்கள்"
1930களில் ஜேர்மன் கடைகளில் நாசிகள் ஒட்டியவை
ஜெர்மானியர்களே! எதிர்த்து நில்லுங்கள்! யூதர்களின் கடைகளில் கொள்வனது செய்யாதீர்!"
"சிங்களவர்களே! சகல முஸ்லிம் வியாபாரத்தையும் பகிஸ்கரியுங்கள்"
இவற்றின் தொடர்ச்சி தான் முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் மீது தாக்குதல்,

முஸ்லிம்களை நிராகரியுங்கள், அவர்களின் பண்பாட்டையும், தயாரிப்புகளையும், சேவைகளையும் நிராகரியுங்கள் என்கிற கோஷத்தில் உள்ளார்ந்திருக்கும் முட்டாள்தனத்தைப் பார்த்தால் இனவாதத்துக்கு அறிவு என்கிற ஒன்று அவசியப்படுவதில்லை என்பது தான் நிரூபணமாகிறது. அப்படி முஸ்லிம் சமூகத்தை நிராகரிப்பதன் மூலமோ தடை செய்வதன் மூலமோ ஏற்படக்கூடிய இழப்பைப் பார்ப்போம். இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 70களில் உருவாக்கியது ஈரான் நாடு. இன்று நமது நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளில் ஏறத்தாள 60% வீதமானவை இதன் மூலம் தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இன்றுவரை இலங்கையின் பிரதான அந்நிய செலவாணியாக ஈட்டித்தறுவது மத்தியகிழக்கு முஸ்லிம் நாடுகளில் பணிபுரியும் நம் நாட்டவர்களுக்கு ஊடாகத் தான். 2015 இல் மாத்திரம் 948,975 மில்லியன்கள் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களால் மாத்திரம் வருவாயாக கிடைத்திருக்கிறது. அதில் 54% வீதம் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தொழில் புரிபவர்களால் கிடைப்பது. இப்படி உதாரணப் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்லாலாம்.

சிறுவர்களின் இனிப்புப் பண்டங்களில், சாராயத்தில், உணவுப் பொருட்களில், முஸ்லிம் மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்துகளில் மட்டுமல்ல பெண்களின் உள்ளாடைகளில் கூட மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்ற மருந்துகள் கலந்து விடுகிறார்கள் என்கிற செய்திகள் அடிக்கடி வெகுஜன பத்திரிகைகளில் கூட செய்தியாக வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி வெகுஜன ஊடகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செய்திகளின் பரப்புரைக்கு பலியான சாதாரண சிங்கள பாமர வாசகர்கள் வேறென்ன செய்ய முடியும். அவர்கள் பீதிக்கு மேல் பீதியும், வெறுப்புக்கு மேல் வெறுப்பும் கொண்டு உள்ளூர ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த கூட்டு ஆத்திரம் தான் சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளவும் தயங்காத சக்திகளாக உருவாக்கப்பட்டுவிடுகிறார்கள்.

"சிங்களவர்களே அணிதிரளுங்கள்!
முஸ்லிம் ஆக்கிரமிப்பிலிருந்து சிங்களவர்களின் ஒரே நாட்டை மீட்டிடுங்கள்!"
இனவாதத்துக்கு அறிவு அவசியமில்லை.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் இனபெருக்க வளர்ச்சி வேகம் ஏனைய இனங்களை விட, மதங்களை விட அதிகமாகத்தான் இருக்கிறது என்பது விஞ்ஞானபூர்வமான உண்மையே. பல சர்வதேச ஆய்வுகள் அதனை ஒப்புவித்திருக்கின்றன. அந்த உண்மை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தத் தரவை வைத்துக் கொண்டு இந்த இனபெருக்க வளர்ச்சி செயற்கையானது என்றும், திட்டமிட்ட சதி என்கிறதுமான பிரச்சாரம் உலகளாவிய இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “இன-மத” தேசியவாதம் பாசிசமாக உருவெடுத்துவரும் முஸ்லிம் அல்லாத  நாடுகளில் இந்த தரவு முஸ்லிம்களுக்கு எதிராக இலகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இலங்கையும் தீவிரமடைந்து வருகிறது.

மலட்டுத்தன்மையை உருவாக்கும் இப்படி வினோதமான மருத்துகள் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானபூர்வமாக பலர் நிறுவியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினோதமான முறைகளை எளிதில் நம்பச்செய்யுமளவுக்கு இனவாத பிரச்சாரங்களுக்கு வலிமை இருக்கிறது என்பதைத் தான் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருகிறது. 
ஒரு சிங்கள மருத்துவ நண்பர் இதுபற்றி ஒரு குறிப்பை பகிர்ந்திருந்தார். இப்படியொரு மருந்தை எங்காவது கண்டால் நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தை அவர் பட்டியலிட்டிருந்தார். அப்படியோன்ரைக் கண்டெடுத்தால் மறுத்து தயாரிக்கும் நிறுவனமொன்றுக்கு பெரும் விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம், அல்லது இதுபோன்ற ஒரு உணவைக் கொண்டு சென்று கட்டாக்காலி நாய்களுக்கும், பன்சலைகளில் கொண்டுபோய் விடப்படும் நாய்களுக்கும் கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். அந்த ஜீவராசிகளுக்கு கருத்தடை செய்வதற்காக செய்யப்படும் மருத்துவம் வேதனை மிக்கது. செலவு மிக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை மாத்திரம் நாய்களுக்கு இத்தகைய சேவையை செய்வதற்காக 15 மில்லியன்களை செலவு செய்திருக்கிறது. கொத்து ரொட்டியில் இத்தகைய மருந்தைக் கலந்து கருத்தடையை ஏற்படுத்தி அரச செலவைக் குறைப்பது மட்டுமன்றி ஆஸ்பத்திரிகளில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கென ஆகும் அரச செலவையும் குறைக்க முடியும். என்று அவர் ஹாஸ்யமாக எழுதியிருந்தார்.
இந்த நிலைமைகளை சரி செய்வதாக கூறிக்கொண்டு “நல்லாட்சி”, “இன நல்லிணக்கம்” போன்றவற்றை பிரதான இலக்காகக் கொண்டு இன்றைய ஆட்சி அமைக்கப்பட்டது. நல்லினக்கத்துக்கென ஒரு அமைச்சே உருவாக்கப்பட்டது. போதாதற்கு இனவாத முயற்சிகளைக் கட்டுப்படுத்தவென புதிய சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டன. இறுதியில் பிரதமரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சும் ஒப்படைக்கப்பட்ட அடுத்ததடுத்த நாள் இப்படிப்பட்ட கலவரம் நிகழுமாயிருந்தால் இலங்கை பெரும் கலவரத்தையோ, அல்லது கலவரங்களையோ அண்மித்துக் கொண்டிருக்கிறது என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

நன்றி - தினக்குரல்


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates