Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கட்டவிழ்க்கப்படாத "காவலப்பன் கதை" - இலங்கையின் முதலாவது நாவல் எது? - என்.சரவணன்

இலங்கையின் பதிப்புத்துறையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளைக் கவனிக்கும் போது முதலாவதாக வெளிவந்தவை எவை என்பதை அறியும் ஆர்வம் எவருக்கும் இருக்கும். அந்த வகையில் பலர் பல நூல்களின் மூலமும், கட்டுரைகளின் மூலமும் விபரங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியான தகவல்களில் கணிசமானவை பிழையாகவும் இருந்துள்ளன. அவை பின் வந்த ஆய்வாளர்களால் திருத்தப்பட்டுமுள்ளன. வரலாற்றுப் பிழைகள் இப்படியான வழிகளால் தான் திருத்தப்பட்டுக்கொண்டு வந்துள்ளன.

அந்த வகையில் எனது இரண்டு கட்டுரைகளின் வாயிலாக இலங்கையில் வெளியான முதலாவது நூல், முதலாவது தமிழ் சஞ்சிகை என்பன குறித்த விபரங்கள் முதற் தடவையாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.

“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) (1737 இல் இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ் நூல்)

“ஞானபோதகம்” – 1831இல் வெளிவந்த முதலாவது தமிழ் சஞ்சிகை.

இவை இரண்டும் விரிவான கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.

உலகில் வெளிவந்த முதலாவது தமிழ் நூலாக தம்பிரான் வணக்கம் (1578) குறிப்பிடலாம். அது தமிழகத்தில் வெளிவந்ததை நம்மில் பலரும் அறிவோம்.

இலங்கையில் 1802 இல் “சிலோன் கெசட்” (Ceylon Gazzette) எனும் இதழ் தொடங்கப்பட்டதன் மூலம் சுதேசிய மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் முப்பகுதிகளைக் கொண்டு வெளிவந்தது. தாய் மொழிகளைத் தாங்கி வந்த முதல் இதழ் இது தான்.

மீஸான் மாலை – இலங்கையில் 1868இல் வெளியான முதலாவது இஸ்லாமியத் தமிழ் நூல் எனலாம்.

இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் சிறுவர் சஞ்சிகையாக “பாலியர் நேசன்” என்பதைக் குறிப்படலாம். 1859 ஆம் ஆண்டு இது வெளிவரத் தொடங்கியது.

இப்படிக் கூறிக்கொண்டு போகும் போது இலங்கையில் வெளியான முதலாவது நாவல் எது என்கிற கேள்வி பல இடங்களிலும் சர்சைக்குள்ளானதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று குறிப்பிட முடியும். அது வெளிவந்த ஆண்டு 1879 ஆகும். அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழுக்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வடிவம் இந்நூலுக்கூடாகவே அறிமுகமானது. ஆனால் இந்த நூல் தமிழகத்தில் வந்தது.

அப்படிப்பார்க்கும் போது சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றி 1885 இல் வெளிவந்த “அசன்பே சரித்திரம்” இலங்கை நாவல் இலக்கியத்தின்  முதலாவது நாவல் என்று கூறலாம்.

ஈழத் தமிழ் நாவலிலக்கியப் பாரம்பரியத்தில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை எழுதி 1895 இல் வெளியான ‘மோகனாங்கி’ நாவலை இலங்கையின் முதலாவது சரித்திர நாவல் என்று குறிப்பிட முடியும். இதன் கதைக் களமும் வெளியிடப்பட்ட இடமும் தமிழகமாக இருந்தபோதும் இதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர்.

நாவலிலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளவர்கள் சிலர் இந்த வரலாற்றுத் தகவல்களோடு “காவலப்பன் கதை”யைக் குழப்பியுள்ளதைக் காண முடிகிறது.  "காவலப்பன் கதை" தான் ஈழத்தின் முதலாவது நாவல் என்று அடித்துச் சொல்பவர்கள் இன்றும் உள்ளார்கள். அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

"காவலப்பன் கதை" முதலாவது மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிற போதும் அப்படிப்பட்ட ஒரு நாவலை கண்ட எவரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்பற்றி மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதியிருக்கிறார்.  ஆனால் கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ அந்த நாவல் குறித்த விபரங்களை சரிவர நிறுவவில்லை. மேலும் இந்த நூல்களில் பிரதிகளும் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்” தனது கட்டுரையொன்றில் எழுதுகிறார்.  

“காவலப்பன் கதை”யானது "மூர் ஹன்னாஹ்" (Hannah More) என்பவர் 1796 இல் இயற்றிய "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப் பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதை காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக் கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன. (The complete works of Hannah More - 1745-1833) இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500 சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறு கதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக எப்படி தமிழில் அடையாப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்த பட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக் கூட இது கொண்டதில்லை.

ஆகவே “காவலப்பன் கதை” என்கிற நூல் வெளிவந்திருந்தாலும் கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

பார்னெட் (L.D.Barnett), போப் (G.U.Pope) ஆகியோர் தொகுத்த A Catalogue of the Tamil books of the British Museum என்கிற நூலில் "Parley the Porter" என்கிற நூலைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் மியூசியம் 1909 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த நூல் பட்டியல்களை இன்றும் பலரும் ஒரு முக்கிய மூலாதார நூலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலில் 177 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு இது தான். 

MORE (HANNAH).  “Parley the Porter” காவலப்பன் கதை. [Translated into Tamil] pp. 36. Jaffna, 1856. 16°. 14170. a. 33.(3.) No. 1 of the New Series of the Jaffna Religious Tract Society.

மேலும் இந்த நூலில் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட நூல்களின் கீழ் 584 ஆம் பக்கம் “காவலப்பன் கதை” பட்டியலிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இது “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தால்” (J.R.T.S - Jaffna Religious Tract Society)  வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஹன்னா மூர் (Hannah More - 1745-1833) தனது என்கிற பெண் எழுத்தாளர் தனது இளம் வயதில் எழுதிய கதை இது. அவர் பல புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் என பல படைப்புகளை எழுதி எழுதி பிரபல எழுத்தாளராக பிற காலத்தில் மிளிர்ந்தவர். ஆனாலும் ஹன்னா மூர் ஒரு ஆன்மீக எழுத்தாளராகவே பல வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்பதையும் கவனிக்க முடிகிறது.

நா. சுப்பிரமணியம் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” (1978) என்கிற நூலில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது“இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது.” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும்

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐஞ்ஞூற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.” என்கிறார்.

அவரின் அந்த ஐயம் மிகவும் சரியானதே என்கிற கருத்தை அந்த கதையின் மூல ஆங்கிலப் பிரதியை நோக்கும்போது உறுதி செய்துகொள்ள முடிகிறது. கூகிள் தனது Google Books இல் இதை வகைப்படுத்தும்போது “சிறுவர்களுக்கான கதையாக” (Children's stories) வகைப்படுத்தியிருக்கிறது. 

இந்த நூலை “Chapbook” என்றும் மேற்கில் வகைப்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவிலான பக்கங்களைக் கொண்ட கதைகளுடன் பிரசுரிக்கப்படுகின்ற பிரசுரங்களையே “Chapbook” என்று அழைத்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தெரு இலக்கிய  (street literature) கலாசாரத்தின் அங்கமாக இந்த வகை இலக்கிய வெளியீடுகள் காணப்பட்டன. மலிவு விலையில் எளிமையான நூல்கள் தெருக்களில் விற்கப்பட்ட கலாசாரம் அது. அச்சுப் பண்பாட்டின் தொடக்கக் காலப்பகுதியில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த வாசிப்பு கலாசாரம் இது.

இந்தக் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே மேற்கு நாடுகளில் சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளில் வாசிக்கப்பட்டிருக்கிறது.  (Parley, the Porter. An Allegory)

மூல நூலை இங்கிலாந்தில் அன்றே வெவ்வேறு பதிப்பாளர்கள் பதிப்பிட்டிருக்கிற போதும் அமெரிக்க சமார்க்க புத்தக சங்கமும் (American Tract Society) 1825 ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதியை வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஹன்னா மூரின் சுமார் 50 கதைகளை அச்சங்கம் பதிப்பித்துள்ளது. 

பார்லி என்பவன் தான் பிரதான கதா பாத்திரம். Parley the Porter என்பதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் “பார்லி என்கிற சுமைதூக்கி” என்று கூறலாம். ஆனால் “காவலப்பன்” என்று இலக்கிய சுவையுடன் அந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்.

ஒரு காட்டிக்கொடுப்பாளனின் உதவியின்றி கொள்ளையர்கள் எப்படி ஒரு வீட்டிற்குள் நுழைய முடியாது என்பதை உணர்த்தும் கதை. 

“காவலப்பன் கதை”யை நமது கதைசொல்லி இலக்கிய வரலாற்று மரபில் இருந்து நீக்கிவிட முடியாது என்பது உண்மை. அதே வேளை அதை நாவலிலக்கியத்தின் தொடக்கம் என்று பதிவு செய்ய முனைகின்ற முயற்சி வரலாற்றுத் திரிபாகிவிடும். அதை இனி நிறுத்தி விடலாம்.

நன்றி - ஜீவநதி - November - 2020



துமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா?

 

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்கு வெள்ளையடிக்கும் வகையில் கூறிவரும் கருத்துக்களை அப்படியே நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. துமிந்த சில்வா ஒரு கிரிமினல். பலரும் அறிந்த போதைப்பொருள் வியாபாரிகள். பட்டப்பகலில் படுகொலை செய்து தமது பண, அதிகார செல்வாக்கால் கூட விடுதலை பெற முடியாதபடி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர். போதைப்பொருள் பணத்தில் பிரதான இனவாத ஊடகமொன்றை நடத்திவரும் குடும்பம் அவர்களின் குடும்பம். துமிந்தவை வெளியில் கொணர்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் அமர்த்த கடுமையாக உழைத்த ஊடகம் அது.

கடந்த சில வருடங்களாக இனவாத பிக்குமாரையும், இனவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் துமிந்தவின் விடுததலைக்கு குரல் கொடுக்க வைப்பதற்காக ஏராளமாக செலவழித்தவர்கள். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்துக்காக தலா நாற்பது லட்சம் வீதம் வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படியெல்லாம் இருக்க

“ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன்”

என்றெல்லாம் மனோ கணேசன் கூறுவது பசப்பு மட்டுமல்ல வேடிக்கையாக இருக்கிறது. மனோகணேசன் இப்பேர்பட்ட உத்தரவாதத்தை கொடுப்பார் என்று நாம் கொஞ்சமும் நம்பியிருக்கவில்லை.

இன்னமும் வழக்குமின்றி, விசாரணையும் செய்யப்படாத நிலையில் துமிந்த சில்வாவை விட அதிக காலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், சந்தேகநபர்களும் உள்ளார்கள். ஆனால் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தாலும் சந்தேகமின்றி கொலைக்குற்றவாவாளியென மீளவும் உறுதி செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தளவு அக்கறை வந்திருக்கிறது பாருங்கள். 

“அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.”

என்கிறார் மனோ கணேசன். துமிந்தவால் கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது பாதுகாவலரும் கூட குடும்பஸ்தர்கள் தான். அவர்கள் இந்த சமூகத்தில் வாழ பாரத லக்ஸ்மனால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தனது தந்தையின் கொலைக்காக நீதி கோரி போராடிய அவரது மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர; மனோ கணேசனுடன் ஜனநாயக அரசியல் கூட்டணியில் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருபவர். இனி சக தோழமை அரசியல் சகாவின் முகத்தில் தான் மனோ கணேசன் விழித்திட முடியுமா?

இதை எல்லாவற்றையும் விட இலங்கையின் ஜனாதிபதிகள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பது இப்போது ஒரு போக்காக மாறி வருகிறது. ஜே.ஆர். காலத்தில் அவரின் ஆதரவாளனான ஒரு பெரிய சண்டியனை விடுவித்தார். மிகச் சமீபத்தில் கூட மைத்திரிபால தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுவித்தார்.

20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அத்தகைய அராஜக அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்கள் கூட கடக்கவில்லை. அதற்குள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தனது ஆதரவாளனான கொலைக்குற்றவாளியை விடுவிக்க முற்படுகிறது. இதற்கு விலை போபவர்கள் யார் யார் என்பது பற்றி இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனோ கணேசன் அந்த பட்டியலில் எப்போது சேர்ந்தார்.

அதிகார நலன்களுக்காக நாட்டின் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வருபவர்கள் ராஜபக்ச தரப்பு. அதில் மனோ கணேசன் எப்போது பங்காளியானார்.

மனோ கணேசன் மட்டுமல்ல இதற்கு துணைபோன அத்தனை எம்பிக்களும் நயவஞ்சகர்களே. 

பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்னணி - என்.சரவணன் (1956: 11)

1956 அரசியலை புரிந்துகொள்வதற்கு எந்தளவு பண்டாரநாயக்கவை சூழ இருந்த அரசியலை புரிந்துகொள்வது முக்கியமோ அதுபோல பண்டாரநாயக்கவின் வகிபாகத்துக்குப் பின்னால் இருந்த குடும்ப செல்வாக்கும், அக்குடும்பத்தின் பரம்பரை வழித்தோன்றலையும் அறிந்துகொள்வது முக்கியம்.

கோல்புறுக் அரசியல் திட்டத்தின் கீழ் சிங்கள, தமிழ், பறங்கி இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உத்தியோகபற்றற்ற உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் தமிழ், சிங்கள உறுப்பினர்களாக ஆன இருவரது குடும்பங்களும் பிற்காலத்தில் இலங்கையின் அரசியலில் செல்வாக்கு படைத்த முதன்மைக் குடும்பங்களாக அவ்வவ் இனங்களில் ஆனார்கள். தமிழ் தரப்பில் கேட் முதலியார் குமாரசுவாமி குடும்பமும், சிங்களத் தரப்பில் பண்டாரநாயக்க – மகாமுதலி ஒபேசேகர – சேரம் என்கிற இரு பரம்பரைகள் தான் தொடர்ச்சியாக இரு இனங்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குள்ள சக்திகளாக ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கோலோச்சின.

அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (Johannes Godfried Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.  அதாவது இலங்கையின் நாடாளுமன்ற மரபில் முதலாவது சுதேசியர்கள் இவர்கள் தான். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பிலிப்ஸ் பண்டிதரத்னவின் மகன் பிலிப்ஸ் கிஸ்பேர்டஸ் பண்டிதரத்ன (Philipsz Gysbertus Panditaratne). அவரின் மகள் அன்னா புளோரென்டினா பிலிப்ஸ் (Anna Florentina Philipsz). அன்னா புளோரென்டினாவை திருமணமுடித்தவர் கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்க (Don Solomon's son, Don Christoffel Henricus Dias Bandaranaike). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் அவர்களில் ஒரே ஒரு ஆண் அவர் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் (Sir Solomon Dias Abeywickrema Jayatilleke Senewiratna Rajakumaruna Kadukeralu Bandaranaike - 1862-1946). அவருக்கு பிறந்த மூவரில் ஒருவர் தான் SWRD பண்டாரநாயக்க.

பண்டாரநாயக்கவின் பூட்டன் டொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க

இதில் இன்னொரு கிளைக் கதையையும் கூறவேண்டும். மேற்படி கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் தந்தை தான் தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார் (Don Solomon Dias Bandaranayake, Mudaliyar). கண்டி அரசன் 1815 இல் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட போது கண்டியிலிருந்தே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அன்றைய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான மேற்சொன்ன ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. அதுபோல அரசன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை  அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் இந்த தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார்.

பண்டாரநாயக்க குடும்பத்துடன் இலங்கையின் பெரிய செல்வாக்கும், வசதிகளையும் கொண்ட பரம்பரையினர் ஒரு சங்கிலியாக ஒரு வலைப்பின்னலுக்குள் இணைவதை அவர்களை மரவடிவில் (Family Tree) தொகுத்து  பார்க்கும் போது காண முடியும். பண்டிதரத்ன பரம்பரை, சேரம் பரம்பரை, ரத்வத்த பரம்பரை, ஒபேசேகர பரம்பரை, விஜேவர்தன பரம்பரை போன்றவர்கள் ஒன்றாக இணைவதைக் காண முடியும். இன்றும் இலங்கையின் அரசியல் அதிகாரம், வர்த்தக ஏகபோகம், ஊடக அதிகாரம் என அனைத்தும் இவர்களின் செல்வாக்கில் இருப்பதைக் காண முடியும்.

1915 கலவரத்தில் 

கண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர் அக் கல்லூரியில் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டியது பற்றி முந்திய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆங்கிலேய அரசு பிரேசருக்கு சாதகமாகவே தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரேசர் வெள்ளைத்திமிர் கொண்ட அராஜக பாதிரியாராக இருந்திருப்பதை பல நூல்களும் பதிவு செய்திருக்கின்றன.


1915 கண்டி கலவரக் காலத்தில் ஹென்றி என்கிற அப்பாவி இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் ஒரு காரணம். ஹென்றி செல்வாக்குள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்குடும்பத்தோடு இருந்த தனிப்பட்ட காழ்ப்பை இதன் மூலம் தீர்த்துக்கொண்டார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க.

ஹென்றியை விடுவிக்கக் கூடாது என்று ஆளுநர் சார்மசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களின்  கண்டி திரித்துவ கல்லூரியின் கல்லூரியின் (Trinity College, Kandy) அதிபராக இருந்த பாதிரியார் ஏ.ஜே பிரேசர் (Alec Garden Fraser), மற்றும் "மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் முக்கியமானவர்கள். அவர் பேதிரிஸ் குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையும் ஹென்றி மீது பழி தீர்க்கச் செய்தது என்கிற கருத்துக்களை பலர் எழுதியிருக்கிறார்கள். ஹென்றியின் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தி பதவியை பறித்து, கைது செய்யப்படுவதற்கு சொலமன் பண்டாரநாயக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டும் காரணமாகியிருந்தது. சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலேயர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்குவதில்லை. அதுபோல அவரை ஒரு  காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.

பண்டாரநாயக்க தனது பெற்றோர், சகோதரிகளுடன்

பண்டாரநாயக்கவின் தாயார்

வேயங்கொட அத்தனகல்ல ஹொரகொல்ல “வலவ்வ”யைச் சேர்ந்த சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகாமுதலிக்கும் டேசி எசலின் ஒபேசேகர அம்மையாருக்கும் 1898
ஏப்ரலில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்தின் பின்னர் டேசி டயஸ் பண்டாரநாயக்க என்று அழைக்கப்பட்டார். டேசி டயஸின் தகப்பனார் சேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகர அரசாங்க சபை உறுப்பினர். பாரிய அளவு விவசாய நிலங்களுக்கு சொந்தமானவர். பெரிய தனவந்தர். அவர் திருமணம் முடித்ததும் அன்றைய அரசாங்க சபை உறுப்பினரான ஜேம்ஸ் த அல்விஸ்ஸின் மகள் எஸ்லின் மரியா அல்விஸ் என்பவரைத் தான்.

சேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகரவின் மகள் தான் டேசி எசலின். அதுபோல டேசி எசலினின் சகோதரன் F.A.ஒபேசேகர 1924 இலிருந்து 1931வரை அரசாங்க சபையின் உறுப்பினராகவும் 1934-1935  காலப்பகுதியில் சபாநாயகராகராகவும் இருந்தவர். டேசியின் மூத்த சகோதரி கேட் முதலியார் சிமோன் வில்லியம் இலங்ககோனை (Gate Mudaliyar Simon William Ilangakoon) மணமுடித்தார்.

அதாவது டேசியின் தகப்பனார், சகோதரன், பாட்டனார், கணவர் அனைவருமே அரசாங்க சபை உறுப்பினர்கள். அதன் டேசியின் மகன் S.W.R.D.பண்டாரநாயக்கவும், அவரின் மனைவி சிறிமாவும், அவர்களின் பிள்ளைகள் சந்திரிகாவும், அனுரா பண்டாரநாயக்கவும கூட பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள். டேசி சமூகத்தில் ஒரு செல்வாக்கு பெற்ற ஒருவராக இருந்தார்.

இந்த அனுபவம் தான் டொனமூர் அரசியல் திட்டக் காலத்தில் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (WFU - Women’s Franchise Union) 07.12.1927 அன்று கொள்ளுப்பிட்டியில் நிகழ்ந்த கூட்டத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டபோது வாக்குரிமை கோரி தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் முதலாவது கையெழுத்தை வைத்து தொடக்கினார் டேசி. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் முதலாவது தலைவியும் அவர் தான். டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் டேசி உள்ளிட்ட குழுவினர் சென்று சாட்சியமளித்ததுடன். பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தி வாக்குரிமைக்காக போராடினார்கள். பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்த்த ஆண் ஆரசியல் தலைவர்களை எதிர்கொண்டு தக்க பதில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 1931 இல் டொனமூர் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமமாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதற்கு இந்தச் சங்கமும் டேசியின் வகிபாகமும் முக்கியமானது. அப்போது எந்தவொரு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் இருந்த எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சேர் சொலமன், டேசி ஆகியோர் திருமணமாகி ஒன்பதாவது மாதத்தில் 08.01.1889 அன்று கொழும்பு முகத்துவாரம் எலிஹவுஸ் இல்லத்தில் பண்டாரநாயக்க பிறந்தார். பண்டாரநாயக்கவுக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர்.

டொன் கிறிஸ்தோப்பர் டயஸ் பண்டாரநாயக்க

நிலப்பிபுத்துவ பின்னணி

SWRD பண்டாரநாயகவின் தகப்பனார் சேர் சொலமன் டயஸ் 22.05.1862 இல் பிறந்தார். சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க வளர்ந்த விதம் குறித்து பண்டாரநாயக்கவின் குடும்ப நண்பர் ஹென்றி அபேவிக்கிரம தனது நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

“எப்போதும் உயர்குடி பழக்க வழக்கங்களையே அவர் கொண்டிருந்தார். தனது வீட்டில் உணவு அருந்தும்போது கூட கோர்ட் டை அணிந்தபடி தான் காணப்படுவார். ஒரு நாளைக்கு பல தடவைகள் உடையை மாற்றுவார். அவரின் கோர்ட் பையில் எப்போதும் அழகான பூவை இணைத்திருப்பார். தூர இடங்களுக்குச் செல்லும்போது இதற்காகவே பூக்களையும் கொண்டு செல்வார்.

அவர் பயணம் செய்கிற வேளைகளில் அவருடன் செல்லும் வேலைக்காரர்கள் அனைவரும் அழகாக அணிந்தபடி தான் அவரோடு செல்வார்கள். இங்கிலாந்துக்கு செல்லும்போது கூட அவருக்கு விசுவாசமான பணியாளர்களும் கூட அழைத்துச்செல்லப்படுவார்கள்.

பண்டாரநாயக்க குடும்பத்து பெண்கள்  பலர் பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பாடசாலையையே வீட்டுக்கு கொண்டு வந்தார்கள் என்று தான் கூற வேண்டும். இலங்கையில் இருந்த கிறிஸ்தவ ஆயரின் துணைவி, ஆளுநரின் துணைவி என்போரின் ஏற்பாட்டில் இங்கிலாந்தில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து வருவிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கி கற்பிப்பதற்காக வசதியான முழு ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டன பண்டாரநாயக்க குடும்பம் செய்து கொடுத்தது.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் சகோதரிகளான ஏமி, எலிசா ஆகியோருக்கு எமி வான் டெடல்சன் என்கிற ஐரோப்பிய ஆசிரியை ஒருவர் தங்கியிருந்து கற்றுக்கொண்டுத்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மிளிகளுடன் இசை, ஓவியம் போன்றவை அவர்களுக்கு விசேடமாக கற்றுக்கொடுக்கப்பட்டன. அவர்கள் பாடுவது, பியோனோ இசைப்பது, தையல் கலை, மேற்கத்தேய நடனம், என்பவற்றுடன் டெனிஸ், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆடத் தெரிந்திருந்தார்கள். 1891இல் சொலமன் டயஸ் குடும்பத்துடன் இங்கிலாந்து பயணமானபோது அவர்களின் பிள்ளைகளின் தனிமையைப் போக்க உதவியாளர்களாக அவர்களின் இலங்கையில் அவர்களின் ஆசியர்களாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்தவர்களில் ஒருவரான சேர்ச் அம்மையாரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 1894 ஆம் ஆண்டு பயணத்தின் போது எலிசா டயஸ் பண்டாரநாயக்க இங்கிலாந்தின் அரச மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராணியை சந்தித்துவிட்டு வந்தார்கள்.  மகாமுதலியாரின் இன்னொரு சகோதரியான ஏமி ஐரோப்பிய சுற்றுலா செய்த முதலாவது சிங்களப் பெண் என்று குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இத்தகைய மேட்டுக்குடி பெண்களுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சமூகம் போன்றவற்றை கற்பிக்காமல் கலை சார்ந்தவற்றை மாத்திரம் கற்றுக்கொடுத்து வீட்டுப்பெண்களாக வைத்திருக்கக் கூடிய பாடங்களையே கற்றுக்கொடுத்தார்கள் என்கிற விமர்சனத்தையும் குமாரி ஜெயவர்த்தன விமர்சிக்கத் தவறவில்லை.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மரணத்தின் போது இறுதி நிகழ்வுகள் எப்படி நிகழ வேண்டும் என்று கூட அவர் திட்டமிட்டிருந்தார். 6 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி அதில் ஒரு உயர்ந்த கோபுரத்தையும் கட்டி அதன் கீழ் நேராக உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்.

பிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது பிரிட்டிஷ் அரசு. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.

இலங்கையின் பெரும் பணக்காரராக இருந்த அவரிடம் ஏராளமான நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயத்திலிருந்து நிறைய வருமானம் அவருக்கு வந்தது. ஹொரகொல்ல வளவ்வையில் அன்று வேறெங்கும் கிடைக்காத பழங்கள் எல்லாம் அங்குள்ள மரங்களில் கிடைத்தன. அவரிடம் தரமான குதிரைகள் பல இருந்தன. தினசரி காலையில் குதிரைச் சவாரி செய்வதிலிருந்து தான் அவரின் அன்றைய நாள் ஆரம்பமாகும். தனது குதிரைகளை குதிரைப் பந்தயத்துக்கும் அனுப்பி வைப்பார். அவை வென்று கொண்டு வரப்படும் பரிசுக் கோப்பைகளை அழகாக வைப்பதற்காகவே மண்டபத்தில் ஒரு தனியான அறை இருந்தது.

சிங்கம், புலி, யானை என பல விதமான மிருகங்களை வளர்க்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஹொரகொல்ல காணியிலேயே ஒரு மிருகக்காட்சி சாலையை அவர் உருவாக்கினார். அந்தக் காலத்தில் இலங்கையில் எங்குமே ஒரு மிருகக் காட்சிசாலை இருக்கவில்லை. இதனால் இலங்கைக்கு வருபவர்கள் நாளாந்தம் இங்கு மிருகங்களைக் காண வந்தார்கள். இந்த மிருகக் காட்சி சாலையை சுற்றி வெளிநாடுகளில் இருந்து அவர் அவ்வப்போது கொண்டுவந்த அபூர்வமான மரங்களை வளர்த்தார். அப்படியான மரங்கள் பேராதனைப் பூங்காவில் கூட கிடையாது. அங்கு வருபவர்கள் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

எப்போதும் அவர் ஒரு ராஜ கம்பீர மிடுக்குடன் தான் காணப்பட்டார். அவருக்கான உடைகள் லண்டனில் தைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.

அவரது இறுதி உயில் பத்திரத்தில் ஹொரகொல்ல பங்களா காணியையும், ரோஸ்மீட் பங்களாவையும் பண்டாரநாயக்கவுக்கு எழுதிவைத்தார். நீண்டகாலமாக தனது வாகன சாரதியாக கடமையாற்றிய டீ.டீ.குனரத்னவுக்கு ஒரு சிறிய பங்களாவை எழுதிவைத்தார். தன்னுடன் எப்போதும் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் பயணிக்கும் பணியாளர்கள் சிலருக்கு இருபது, இருபத்தைந்து ஏக்கர் நிலங்களையும், ஏனைய பணியாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்கிற அடிப்படையில் எழுதி வைத்ததுடன், சமாதிக்கு அருகில் உள்ள அழகான ஐந்து ஏக்கர் தென்னங்காணியை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கும் எழுதிகொடுத்தார். 1946 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் அவர் மரணமானார்.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு 1902 இல் பிரித்தானியவின் CMG (Companion of the Order of St Michael and St George) பட்டாள் வழங்கப்பட்டது அதன் பின்னர் அவருக்கு பிரித்தானிய அரசின் உயரிய பட்டமான நைட் பட்டமும் (KCMG – Knight Commander of the Order of St Michael and St George) வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் அவர் தான். உயர்குடிப் புத்திஜீவிகளின் பிரபலமான அமைப்பான “ராஜரீக கழகத்தின் இலங்கைக் கிளை”யில்  (Ceylon Branch of the Royal Asiatic Society) ஆயுட்கால உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

1947 ஆம் ஆண்டு அமைச்சரவை

இரு குடும்பங்களின் இணைவும் முரணும்

இந்த பின்னணியில் பிறந்த பண்டாரநாயக்க; அரசியல் அதிகாரத்துவ செயற்பாட்டில் இறங்குவதும் தனக்கான அரசியலையும், நிகழ்ச்சிநிரலையும் வடிவமைப்பதும் நிகழ்கிறது.

இலங்கையில் இன்னொரு பொருளாதார – அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பமான சேனநாயக்க குடும்பத்தினர் டொனமூர் அரசியல் திட்ட காலத்தில் மேலும் பலமான இடத்துக்கு வந்தடைந்தார்கள். இந்த காலப்பகுதியில் டீ.எஸ்.சேனநாயக்க, நுகவெல திசாவ, சேர் ஜோன் கொத்தலாவல, டீ.எச்.கொத்தலாவல, ஜே.எச்.மீதேனிய அதிகாரம், ஏ.எப்.மொலமூரே போன்றோர் அரசாங்க சபையில் அங்கம் வகித்தார்கள். 1936 ஆம் ஆண்டு அரசாங்க சபையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் அதிகரித்தார்கள்.

இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டு சுதந்திரத்துக்கான அறிகுறிகள் தென்பட்டவேளை இந்த இரு குடும்பங்களும் அரசியல் தலைமைக்காக ஒன்றிணைந்தன. ஆனால் அந்த இணைவு ஒரு சில ஆண்டுகளிலேயே பிளவுற்று இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்கிற இரு கட்சி செல்வாக்குள்ள ஒரு பாரம்பரியத்துக்குள் கொண்டு சென்றது.

பண்டாரநாயக்க, ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இரு முக்கிய தலைவர்களின் குடும்பப் பின்னணியும் தமிழகப் பின்னணியைக் கொண்டதே என்கிற ஆய்வுக் கட்டுரைகளை இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதியுமான ஜேம்ஸ் டீ ரத்னம் எழுதிய கட்டுரைகள் இவர்கள் வழிவந்த இன – மத - வர்க்க – சாதிய வழித்தடம் பற்றி ஆராய்பவர்களுக்கு பயன்படக்கூடியது. ஜேம்ஸ் டீ ரத்னம் பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  “முற்போக்கு தேசியவாதிகள் கட்சி” (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தவர் அவர்.

இலங்கையில் சுமார் இரண்டு நூற்றாண்டுகால பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சந்திரிகா குமாரனதுங்கவுடன் 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் திசைவழியை ஆட்டுவித்ததில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு முக்கிய வரலாற்றுப்பதிவுகளாக கருதப்படவேண்டியது.

1956 அரசியல் அதிர்வுகளைத் தீர்மானிப்பதில் இக்குடும்பச் செல்வாக்கின் காரணிகளையும் புறந்தள்ளிவிடமுடியாது.

நன்றி - தினக்குரல் 18.10.2020

ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) - என்.சரவணன்

மீண்டும்...  '1956' தொடர் தினக்குரலில்!

கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன. அதனால் முக்கியமான பத்தி எழுத்துக்களும் நின்றுபோயின. அப்படித்தான் இந்த "1956" தொடரும் நின்று போனது. இப்போது மீண்டும் பக்கங்கள் பழையபடி அதிகரிக்கப்பட்டுவிட்டதால் இந்தத் தொடர் மீண்டும் தொடர்கிறது.  தமிழில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் அதில் நிச்சயம் கிடைக்கும். எனது "1915 கண்டி கலவரம்" நூலை விட முக்கியமான பதிவுகளைக் கொண்டதாக இந்த நூலும் இறுதியில் அமையும். 

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான்  1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.

இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.

பண்டாரநாயக்கவின் சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு பதிலீடாக மறுபக்கம் தமிழ் – சைவ தேசியவாத போக்கை  ஜி.ஜி.பொன்னம்பலம் முன்னெடுத்தார். சிங்கள மகா சபை, தமிழ் காங்கிரஸ் ஆகியன இரண்டுமே அப்போது துருவமயமாகிக்கொண்டு போன இரண்டு சமூகத்தினரின் இனத்துவ தேசியவாத அமைப்புகளாக உருவெடுத்தன. அப்போது இரு இனங்களின் மத்தியிலும் இலங்கைக்கான தேசியவாத உணர்வை மீறிய இனத்துவ தேசியவாத எழுச்சியுணர்வு கூர்மை பெறத் தொடங்கிய காலம் அது. இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு (1934) ஒரு தசாப்தத்தின் பின்னர் தான் தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது இனத்துவ தேசியவாதம் மேலும் பட்டைதீட்டப்பட்டிருந்தது.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த இன்னொரு அடிப்படி வித்தியாசத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்கள மகாசபையானது கண்டியச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்று பிளவுபட்டிருந்த சிங்கள இனத்தை ஒன்றிணைத்து சிங்கள பௌத்தத்தனத்தோடு சேர்த்து இலங்கைக்கான தேசியம், காலனித்துவ எதிர்ப்பு, சுதேசிய கலை, கலாசார, விவசாய, மருத்துவ, பொருளாதாரக் காரணிகளை முன்னிறுத்தினார். ஆனால் ஜி.ஜி.யின் காங்கிரஸ் அத்தகைய சுதேசிய அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிராதது; அக்கட்சியை ஒரு இனவாரி கட்சியென நேரடியாக அடையாளம் காட்ட சுலபமாக இருந்தது. குறைந்தபட்சம் சிங்களத் தேசியத்துக்குப் பதிலீடாக தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பி வழிகாட்டும் ஒரு உறுதியான கொள்கையோ, திட்டமோ, நிகழ்ச்சிநிரலோ இருக்கவில்லை.

1931 டொனமூர் திட்டம் இலங்கையருக்கு போதிய திருப்தியை அளிக்காத ஒரு அரசியல் திட்டமாக இருந்தது. அத்திட்டத்தின் கீழ் 2வது தேர்தல் 1936 ஆம் ஆண்டு நடந்தது. இதே காலப்பகுதியில் இன்னொரு சீர்திருத்தத்தை ஆராய்வதற்கான ராஜரீக ஆணைக்குழுவொன்றை (Royal commission) பிரித்தானிய அரசு அமைத்தது. அதாவது 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதமே புதிய அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்குவதற்கான பரிந்துரையை அமைச்சர்கள் கையெழுத்திட்டு குடியேற்ற செயலாளருக்கு அனுப்பி விட்டனர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக பல கட்ட விவாதங்களையும், முயற்சிகளையும், மாற்றங்களையும் கண்டு “சோல்பரி யாப்பாக” அது வெளிவந்தது.

ஜி.ஜி.யின் பிரவேசம்

இந்த முயற்சிகளின் தொடக்கப் பகுதியில் தான் ஜி.ஜி.பொன்னம்பலத்தில் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது. அவர் 1934 ஆம் ஆண்டு பருத்தித்துறை இடைத்தேர்தலின் மூலம் அவர் தெரிவானார். ஆனால் அவர் அதற்கு முன்னரே 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னார் முல்லைத்தீவு தொகுதிகளில் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் அவரால் அவரின் சொந்தத் தொகுதியான பருத்தித்துறையில் போட்டியிட முடியவில்லை. ஏனென்றால் அங்கே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அத்தேர்தலை பகிஸ்கரித்து பிரச்சாரம் செய்திருந்தது. அரசாங்க சபை பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினர்; குறிப்பாக தமிழர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எடுத்துச் சொல்லியும் டொனமூர் திட்டம் அதை சரி செய்யவில்லை என்பதால் டொனமூர் திட்டத்தின் கீழான முதல் தேர்தலை அவ்வாறு பகிஷ்கரித்திருந்தது. இராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் இறப்புக்குப் பின்னர் அந்த இடைவெளியை ஒரு குறிப்பட்ட காலம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தான் நிரப்பியது. அதுவும் அது இடதுசாரி சிந்தனையுள்ள முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது.

பின்னர் யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association)  08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு தமது குறையை பற்றி விரிவான நீண்ட கடிதத்தில் பல விளக்கங்களைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த தரவுகளையும் இங்கே குறிப்படலாம்.

மொத்த சனத்தொகை 5,400,000

சிங்களவர் – 3,016,154

இலங்கைத் தமிழர்  - 600,000

இந்தியத் தமிழர் – 700,000

இதன்படி மொத்த சனத்தொகையில் 54% வீதத்தினர் மாத்திரமே சிங்களவர்கள் இருந்தனர். ஆனால் டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபையில் கீழ்வரும்வகையில் பிரதிநிதித்துவம் அமைந்தது.

இதன் பிரகாரம் 71% வீதம் சிங்களவர்களும், 15% மட்டுமே தமிழர் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது. சனத்தொகையில் ஏறத்தாள 50% சதவீதத்தினர் சிங்களவராகவும், தமிழர்கள் 25% வீதமாகவும், ஏனைய சிறுபான்மையினர் 25% சத வீதத்தினராகவும் இருந்தும் பிரதிநிதித்துவம் அவ்வாரான விகிதாசாரத்துடன் சமத்துவமாக இல்லை என்பதை யாழ்ப்பாண சங்கம் சுட்டிக்காட்டியது.

இந்த விகிதாசாரக் கணக்கில் சற்று பிழை இருந்தபோதும் அவர்களின் தர்க்கம் நியாயமானதாகவே இருந்தது. தமிழர் பிரதிநிதித்துவம் பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் அதை சரி செய்வதற்கான கோரிக்கை வலுவாக இருந்த காலத்தில் தான் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசித்திருந்தார். 

1936 பொதுத் தேர்தலிலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தனது தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

யாழ்ப்பாண சங்கம் 08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு அனுப்பிய கடிதம்
1936ஆம் ஆண்டு தேர்தலில் அரசாங்கசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளில் 38 பேர் சிங்களவர். 7 இலங்கைத் தமிழரும், 2 இந்தியத் தமிழரும், 2 ஐரோப்பியரும், 1 முஸ்லிமும் தான் தெரிவானார்கள். அரசாங்க சபையில் தமிழரின் பிரதிநிதித்துவம் ஐந்தில் ஒன்றாக குறைந்திருந்தது. சிங்களப் பிரதிநிதிகள் அந்த எண்ணிக்கையைக் கொண்டு 10 பேரைக் கொண்ட தனிச்சிங்கள மந்திரி சபையை அமைத்துக்கொண்டார்கள். ஒரு தமிழர், முஸ்லிம் இனத்தவருக்கும் கூட அமைச்சரவையில் இடம்கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு மிகப் பெரும் பாரபட்சத்தை செய்கிறார்கள் என்பதை மேலும் உறுதிபட தெளிவுறுத்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.

1924 சீர்திருத்தத்தின் போது கூட 23 பிரதிநிதிகளில் 16 சிங்களவர்களும், 7 தமிழர்களும் காணப்பட்டனர். ஆக டொனமூர் திட்டம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்துவிட்டது தமிழர் அரசியல் பரப்பில் ஒரு முக்கிய பேசுபோருளாக இருந்தது. இதன் எதிரொலிப்புகள் அடுத்த சீர்திருத்தத்துக்கான விவாதங்களில் முக்கிய இடத்தை வகித்தது.

50:50 ஐ ஆதரித்த சிறுபான்மையினர்

பிரித்தானிய அரசுக்கு காட்டுவதற்காக ஒரு கண்துடைப்பாக  டபிள்யு.துரைச்சாமியை அரசாங்க சபையின் சபாநாயகராக ஆக்கினர். அதற்கு வெளியில் அவருக்கு எந்த பலமும் கிடையாது. அதுபோல ஜி,ஜி,பொன்னம்பலம், ஆர்.ஸ்ரீ.பத்மநாதன், மகாதேவா போன்றோரை அமைச்சரவையின் துணைக்குழுவில் துணை அமைச்சர்களாக பதவி வழங்கி ஆசுவாசப்படுத்தினர். எனவே இந்த தமிழ் தலைவர்களும் பிரித்தானிய அரசிடம் இத்தகைய குறைகளை முன்வைக்கத் தவறினர்.

சிங்களவர்களுக்கு சமமாக தமிழரின் பிரதிநிதித்துவத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கோரினார் என்கிற ஒரு புனைவு இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழர், முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதை நாம் அறிவோம். ஆனால் அன்றைய அந்த விவாதத்தையும் அதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறுபட்ட அன்றைய உரையாடல்களையும் நாம் கவனித்தால் அது அப்படியல்ல என்பதை அறிய முடியும்.

இதன் விளைவாகத் தான் 50:50 சூத்திரத்தை ஜி.ஜி.முன்வைத்தார். மேற்படி வாலிபர் காங்கிரஸ் முன்வைத்த கருத்தின் விரிவாக்கம் தான் பிற்காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்கிற சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையாக அமைந்தது. அரசாங்க சபையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு 50 சதவீத ஆசனங்களும், ஏனைய தமிழ், முஸ்லீம், இந்திய, பறங்கி, ஐரோப்பிய சிறுபான்மை இனக்குழுக்களுக்கு 50 சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சிங்கள ஆதிக்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்வதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் சிங்களவரல்லாத ஏனைய சமூகங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தத்தைக் கெர்டுக்கக்கூடிய வகையில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடிய ஒரு முறைமையாகவே அக்கோரிக்கையை அவர் முவைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஒரு இனவாத கோரிக்கையாக இன்று பலர் வியாக்கியானம் செய்தாலும் அன்று ஏனைய சிறுபான்மை இனத் தலைவர்களோடும் உரையாடி அவர்களையும் ஒன்றிணைத்து தான் அக்கோரிக்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்தார். 08.06.1935 அன்று லண்டனில் உள்ள குடியேற்ற செயலாளருக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி இருபது சிறுபான்மைப் பிரதிநிதிகளின் கையெழுத்துகளுடன் ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. அந்த மகஜரில் வடபகுதித் தமிழர்கள் சார்பில் மகாதேவா, நடேசன் ஆகியோர் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதியாக எம்.என். சுப்பிரமணியமும், தலவாக்கொல்லை பிரதிநிதியாக எஸ்.பி. வைத்திலிங்கமும் முஸ்லீம்கள் சார்பில் டி.பி.ஜயாவும், மாநகரசபை உறுப்பினர் அப்துல் காதரும் இந்தியர்கள் சார்பில் ஐ.எக்ஸ்.பெரேராவும் இந்தியத் தமிழர் சார்பில் ஜி.ஆர்.மேத்தாவும், முஸ்லீம் லீக் சார்பில் எம்.சி.எல். கலீலும் கையெழுத்திட்டார்கள். சிறுபான்மை இனங்களின் அந்த ஐக்கியம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டாலும் அது நாளடைவில் பலவீனமடைய ஆரம்பித்தது.

ஜி.ஜி.பொன்னம்பலம் அக் கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1939 மார்ச் 9ஆம் திகதியன்று அரசாங்க சபையில் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூவ் கல்டேகொட் (Sir Andrew Caldecott) முன்வைத்த அரசியல் சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் பல நாட்கள் நடந்தன. இறுதியில் மே மாதம் 9 ஆம் திகதி அந்த முன்மொழிவுகளின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி கண்டது. அந்த யோசனைகளை தமிழர்களும் ஆதரிக்கவில்லை. சிங்களவர்களும் ஆதரிக்கவில்லை. இறுதியில் ஆதரவாக 9 பேரும், எதிராக 30 பெரும் வாக்களித்திருந்தனர். 21 மேலதிக வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.

ஜி.ஜி.யின் சாதனை உரை

இந்த விவாதங்களின் போது ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 மார்ச் மாதம் இரண்டு நாட்களாக 9 மணித்தியாலத்துக்கும் மேல் உரையாற்றினார். இந்த உரை பிற்காலத்தில் நூலாகவும் (The Marathon Crusade for ‘FIFTY, FIFTY’ – Balanced representation – in the State Council - 1939) வெளிவந்ததது. அந்தளவு நீண்ட உரையை அதற்கு முன்னர் இலங்கையின் சரித்திரத்தில் வேறெவரும் ஆற்றியதில்லை என்பதால் அந்த உரை சாதனையாக பதியப்பட்டது. அதற்கு முந்திய சாதனையாகக் கருதப்பட்டது சேர் பொன் இராமநாதனின் உரை. 1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஆங்கிலேய அரசு நடத்திய கொடுங்கோன்மையை எதிர்த்து அவர் 8 மணித்தியால உரையை ஆற்றியிருந்தார்.

இந்த உரையை எதிர்த்து உரையாற்றியவர்களில் முக்கியமானவர் பண்டாரநாயக்க. அவரும் நீண்ட உரையை ஆற்றினார். 21.03,1939 அன்று அவர் ஆற்றிய அந்த உரை இப்போதும் அவருக்காக உருவாக்கப்பட்ட அவரின் நூதனசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.swrdbandaranaike.lk/ இல் உள்ளது. ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய அந்த உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாற்பது பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ஒரு முக்கியமான உரை. பல இடங்களில் நக்கல் நையாண்டி செய்து தான் அவ்வுரையை நகர்த்துகிறார்.

அதில் இப்படி குறிப்பிடுகிறார்.

“கௌரவ பருத்தித்துறை பிரதிநிதி ஒரு முக்கிய வழக்கொன்றில் வாதிடும் ஒரு வழக்கறிஞரின் உரையைப் போலவே இருந்தது. தன் தொண்டை நோக அவர் கதைத்தார். கௌரவ உறுப்பினர் பல தடவைகள் குளிர் தண்ணீர் கலன்கள் பாவிக்க நேரிட்டதால் லபுகம நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம்  குறைந்திருக்கும்... இந்த நாட்டில் மிகவும் கௌரவம்மிக்க தலைவராக இருந்த சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் இருந்திருந்தால் அவர் இந்த உரையையிட்டு அதிருப்தியடைந்திருப்பார்...

சேர் பொன் இராமநாதன் அவர்களும் இந்த சபையில் நீண்ட உரையை ஆற்றி சாதனை படைத்தவர். அந்த சாதனையை கௌரவ பருத்தித்துறை உறுப்பினர் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் அவரின் சிறந்த சாதனையை இவரால் தகர்க்க முடியவில்லை என்றே நான் நம்புகிறேன். சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் 9 மணித்தியாலங்கள் உரையாற்றினார். ஆனால் அப்போது அவர் சிங்களவர்களுக்காக அந்த உரையை ஆற்றினார். சிங்களவர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநியாயங்களையும், பாரபட்சங்களையும் எதிர்த்து ஆற்றிய உரை அது. வயோதிப நிலையில் பலவீனமாக இருந்தபோதும் சற்று கூட இடை நிறுத்தாமல் ஒரே நாளில் அவர் ஒன்பது மணித்தியாலம் உரையாற்றினார்.

ஆனால் அவரைவிட வயதில் இளமையான, பலமான பருத்தித்துறை உறுப்பினர் தனது உரையை தொடர்வதற்கு சபையை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டும், களனி கங்கையின் அசுத்த நீரை குடித்துக்கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டு உரையாற்றினார். இதெல்லாம் எதற்கு? சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் பாதுகாக்கப்பட்ட மக்களைத் தாக்குவதற்கும், இராமநாதன் அவர்கள் தனது ஆதரவாளர்களுக்கு எது நேரக்கூடாது என்று எண்ணினாரோ அதற்கு எதிரானதை புரிவதற்குத் தானே எனது நண்பர் இந்தளவு முயற்சிக்கிறார். சேர் பொன் இராமநாதன் அவர்களின் ஆத்மா இந்த சபையில் உலவிக்கொண்டிருந்தால் அவரின் ஆதரவாளர்கள் வேதனைக்குரலைக் கேட்டு மீண்டும் பிரம்மலோகத்துக்கே திரும்பியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை....

அவர் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் கூட மிகவும் நெருக்கமாக பழகும் முக்கிய நண்பர்களில் பருத்தித்துறை உறுப்பினர் அவர்களின் இனத்தைச சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லக் கடமைபட்டுள்ளேன். அதுமட்டுமில்லை தலைவர் அவர்களே... தற்போது அவரின் மனைவியாக ஆகியிருக்கும் அழகிய பெண்ணை அவருக்கு முன்னரே நான் அறிவேன். இதை அவரும் அறிவார். அப்பெண்ணின் சகோதரரும் நானும் பள்ளியில் நெருங்கிய தோழர்கள்.  யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவர்களுடன் இரு நாட்கள் தங்கியிருக்கிறேன். முஸ்லிம், பரங்கி இனத்தவர்களும் கூட எனக்கு நண்பர்களாக உள்ளனர். இந்த சபையில் நுழைந்ததன் பின்னர் தான்; இப்படியான சண்டைகளுக்குள் நுழைய வேண்டியேற்படுகிறது...

சிங்களவர்களுக்கு 20 இடங்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு 17 இடங்களும், முஸ்லிம்களுக்கு 1 இடமும், ஏனைய இனத்தவருக்கு 1 என்று வைத்துக்கொள்வோம். இது அவரின் நோக்கத்துக்கு இணையானது. சிங்களவர்களுக்கு 20உம், தமிழர்களுக்கு 17, முஸ்லிம்கள் மற்றும் பிற தேசங்களுக்கு 3 இடங்கள் எனும்போது சிங்களவர்களின் எண்ணிக்கை மற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காது. மேலோட்டமாக பார்த்தால் சரியென்று இது தோன்றினாலும் சிங்களவர்களுக்கான எண்ணிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்....” 

என்று இந்த உரை நீளுகிறது.

அதுபோல ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50:50 சூத்திரத்தை எதிர்த்து கடுமையான தர்க்கங்களை அவர் வைக்கிறார். மேலும் சிங்கள மகா சபை பற்றி சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டு போகிறார்.

1942 இல் அரசாங்க சபைத் தலைவராக டீ.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் சிறுபான்மையினரிடத்தில் ஏற்பட்ட ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் வகையில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அவர் அருணாசலம் மகாதேவாவை உள்நாட்டு அமைச்சராக நியமித்தார். அதன் பிறகு மகாதேவா ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறி அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பிரதிநிதியான சேர் ராசிக் பரீத் சிங்களவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறி ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறினர். அத்துடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியான பெரி. சுந்தரம் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்த டீ.பி. ஜயா ஆகியோரும் வழங்கிய ஆதரவும் பலவீனப்பட ஆரம்பித்தது.

டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் பிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்கு முன்னர் இருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அதற்கான நியாயங்களை ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் விவாதித்து முடிவெடுத்திருந்த பிரிட்டிஷார் மீண்டும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜி.ஜி.யின் கோரிக்கையை எடுத்த எடுப்பில் நிராகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்று அரசியல் என்ன என்பது தொடர்பிலும் ஜி.ஜி.க்கு எந்தவித உறுதியான திட்டமும் இருக்கவில்லை. முஸ்லீம் தரப்பு, மலையக இந்திய தரப்பு மகாதேவா குழுவினர் ஆகியோரின் ஆதரவு விலக்கப்பட்ட பின்பும் கூட ஜி.ஜி. பொன்னம்பலம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவில்லை.

ஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைத்த போது சிங்கள மகாசபை அதற்குப் பதிலாக அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம்; மகாதேவாவின் அறுபது நாற்பது கோரிக்கையை நிராகரித்தது போன்று சிங்கள மகாசபையின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டார்.

சோல்பரி அணைக்குழு விசாரணை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்; அதாவது 1944 ஓகஸ்ட் மாதம் தான் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 1944 டிசம்பர் - 1945 ஏப்ரல் வரை நடந்த சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணையின் போது ஜி.ஜி. பொன்னம்பலம் 50:50 சமபல கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதேவேளையில் மகாதேவா அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தார். சிங்கள மகாசபை சாட்சியம் வழங்கவில்லை.

சோல்பரி ஆணைக்குழு ஜி.ஜி.யின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. 08.11.1945 இல் சோல்பேரியின் அறிக்கை அரசாங்க சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் போதுமானதாக இருந்தபோதும் 90 வீதமான வாக்குகளுடன் அது நிறைவேறியது. ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது, அறுபதிற்கு நாற்பது பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த தமிழ் தரப்பினர் குத்துக்கரணம் அடித்து சோல்பரி திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். ஜி.ஜி. அப்போது இலங்கையில் இருக்கவில்லை. அவர் அப்போது தன் ஆட்சேபனையை வெளியிடவும், சோல்பேரி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்படிக் கோரவும் லண்டன் புறப்பட்டிருந்தார். அவர் இலங்கை திரும்பியிருந்தபோது அவரோடு இருந்த அனைவராலும் 50:50 கோரிக்கை சாகடிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

பிற்காலத்தில் சோல்பரிப் பிரபு தன்னால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாரபட்சம் குறித்து விரிவான கடிதமொன்றை சுந்தரலிங்கத்துக்கு எழுதியிருந்ததையும் இங்கு நினைவுக்கு கொணர முடியும்.

இத்தகைய பின்னணியின் நீட்சி தான் 1939 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரம் வரை இட்டுச் சென்றது.

அடுத்த இதழில்...



20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு!

20 வது திருத்தத்திற்கு உயர் நீதிமன்றம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பை முடித்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அதில் உள்ள தகவல்கள் தற்போது கசிந்திருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது. இந்த தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

அரசாங்கம் முன்வைத்திருந்த 20வது திருத்தச்சட்ட நகலை எதிர்த்து மனித உரிமையாளர்கள், சட்ட நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என பலரால் 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

உயர்நீதிமன்றத்தின் "உயர்நீதிமன்றத்தின் முடிவு" என்று தலைப்பிடப்பட்ட 61 பக்க அறிக்கையில், அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில சிறிய மாற்றங்களை மாத்திரம் தவறு என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 

  • பிரிவு 33 (1) இன் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குவது தவறு என்று குறிப்பிட்டிருக்கிறது. (20 இல் 3வது).
  • ஜனாதிபதிக்கு எதிராக மனித உரிமைகள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை நீக்குவது தவறு (20 இல் 5வது).
  • தேர்தலுக்குப் முடிந்து ஓராண்டின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது தவறு (20 இல் 14வது).
  • தீர்மானம் 20 இன் 14) தேர்தல் ஆணையம் அளித்த அளவுகோல்களை நீக்குவது தவறு (20 இல் 20வது).
  • மற்ற அனைத்து தீர்மானங்களும் அரசியலமைப்பின் 83 வது பிரிவுக்கு உட்பட்டவை.

முறைப்பாடுகளை முன்வைத்தோர் விபரம்

சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்

இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர்  26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன்.

சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 

"இலங்கையின் வரலாற்றில் உண்ணாவிரதம் இருந்து செத்த ஒரே ஆள் திலீபன் மட்டுமே. அதுவும் திலீபன் செத்தது தனக்கு இருந்த நோயால் தான். அதனால் தான் பிரபாகரன் திலீபனை உண்ணாவிரதம் இருக்கப் பணித்தார்." 

என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1988 ஆம் ஆண்டு இந்தியப படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்கிற தகவலைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதோடு திலீபன் நோயால் மரணித்தார் என்கிற அண்டப் புலுகையும் சொல்ல முடிகிறதென்றால் அதிகாரத்துவ இனவெறி எகத்தாள வெளிப்பாடாக மட்டுமே நம்மால் கணிக்க முடியும். மேற்படி அவரின் கருத்தை பல சிங்கள ஊடகங்களும் பெரிதுபடுத்தி வெளியிட்டிருந்தன. அக்கருத்தை உள்வாங்கிக்கொண்ட சிங்கள வெகுஜன உளவியல் அதை அப்படியே பிரதிசெய்து பல இடங்களிலும் வினையாற்றி வருவதை காண முடிந்தது.

மாவீரர் தினத்தை மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், நினைவு கொள்ள விடாதது போல திலீபன் நினைவையும் மேற்கொள்ள முடியாதபடி கடும் கட்டுப்பாடுகளை திணித்துவருகிறது.

இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக எங்காவது கல்லறைகளை உருவாக்குவதன் மூலம், நம்முடைய அன்புக்குரியவர் மீதுள்ள அன்பையும், அவரின் நினைவையும் நிரந்தரமாக நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். எல்லாளன் துட்டகைமுனு சண்டையின்போது துட்டகைமுனு எல்லாளனைக் கொன்ற போதும். போரில் தோற்கடிக்கப்பட்ட தனது எதிரி எல்லாளனுக்காக துட்டகைமுனு ஒரு கல்லறைக் கோபுரத்தை அமைத்து துட்டகைமுனுவுக்கு மரியாதை செய்ய மறக்கவில்லை என்பதை மகாவம்சம் வழியாக அறிகிறோம். அந்தக் கல்லறை வழியாக கடந்து செல்லும் எவரும் அங்கு வந்து தமது தலைக்கவசங்களை கழற்றி கௌரவம் செய்யவும் உத்தரவிட்டாராம் துட்டகைமுனு.

இறந்துபோனபின் ஒருவரின் கல்லறை மதம், இனம், இனம், சாதி என்பவற்றினதும் சின்னமாக ஆகிவிடுவதில்லை. மறுபுறம் இறந்து மண்ணுக்குள் புதைந்துபோன ஓருடல் எந்த சமூக அடையாளங்களுக்கும் சொந்தமாகிவிடுவதில்லை. ஒருவரையோ, ஒரு நிகழ்வையோ நினைவுகொள்வது என்பது அரசியல் பண்பாடல்ல மாறாக வழிவழிவந்த பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, அதற்கென்று பண்பாட்டுப் பெறுமதி, அரசியல் பெறுமதி, அறப்பெறுமதி, மரபுப் பெறுமதி என ஒரு திரட்சியான பெறுமதியைக் கொண்டிருக்கிறது. நினைவுகொள்ளல் என்பது நமது மரபின் ஒரு அங்கமாகவே ஒட்டியிருக்கிறது. அதை வெறுப்பதும், மறுப்பதும், தடுப்பதும் பண்பாட்டு அறமுள்ள ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் இனக்குரோதத்துடன் அந்த நினைவழிப்பு வன்முறை ஒரு தொடர் நிகழ்வாகவும், பேரினவாத அரசியலின் அங்கமாகவும் ஆகியிருக்கிறது.

இலங்கையில் நிகழ்ந்த போரில் உயிரிழந்த சிங்கள இராணுவத்தினருக்கு சிங்களப் பிரதேசங்களில் மாத்திரமன்றி தமிழர் பிரதேசங்களெங்கும் ஏராளமான நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு நினைவுச் சின்னங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள பௌத்த வீரத்தனத்தின் பெருமையாக கொண்டாடப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பல இராணுவ நினைவுத் தூபிகளில் ஒரு கையில் சிங்கக் கொடியையும், மறு கையில் துப்பாக்கியையும் உயர்த்தி ஏந்தியபடி இருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளின் நினைவாக அங்கு உருவாக்கப்படிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களின் சொந்தங்கள் வந்து அழுதாறி, தீபத்தை ஏற்றி, ஒரு பூவை வைத்துவிட்டுச் செல்ல உரிமை இருந்தது.

ஆனால் “சமாதானத்துக்கான யுத்தம்” என்றும், “தமிழர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம்” என்றும் போர் புரிந்த சிங்கள அரசு; போர் நிறைவடைந்ததன் பின்னர் அம்மக்களுக்கு ஏற்கெனவே இருந்த அந்த உரிமையை மறுத்துவிட்டது. அம்மக்கள் அதுவரை அழுதாறி வந்த அந்தக் கல்லறைகள் எதையும் மிச்சம் வைக்காது புல்டோசர் வைத்து தகர்த்து சின்னாபின்னமாக அழித்து விட்டது. அப்படி அடையாளம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்ட இடங்களில் அந்தக் கல்லறைகளுக்கு சொந்தமானவர்களின் தாய்மார்களும், பிள்ளைகளும், சகோதரர்களும், துணைவியரும், உறவினர்களும் வந்து ஒரு பொது இடத்தை தெரிவு செய்து ஒரு தீபத்தை ஏற்றக் கூட விடாமல் யுத்தம் முடிந்து இந்த பதினோரு வருடங்களாக தொடர்ந்தும் தடுத்து வருகிறது சிங்கள அரசு.

இடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி
இடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி

சிசிரவின் பதிவுக்கு...

அரச அதிகாரத்தின் மறுப்பு இப்படி இருக்கையில் மறுபுறம் திலீபனைக் கொண்டாடும் சிங்களத் தோழர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ஊடகவியலாளரும் இடதுசாரி முகாமைச் சேர்ந்தவருமான சிசிர யாப்பா திலீபன் மாபெரும் கூட்டமொன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் படத்துடன் ஒரு குறிப்பையும் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

“திலீபன்!

ஒருபோதும் சந்தித்துக்கொள்ளாத சகோதரனே!

உன் பெயருக்குக் கூட பீதியுருவோரும் இருந்த போதும் நான் உன்னை நினைவில் வைத்து மரியாதை செய்கிறேன்!”

என்று எழுதியிருந்தார். இந்தப் பதிவை அவரின் பக்கத்திலிருந்து மாத்திரம் 170 சிங்கள நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இப்படி வேறு சில சிங்கள தோழர்களும் திலீபனின் நினைவேந்தலை செய்திருந்தனர். சிசிர யாப்பாவின் பதிவின் கீழ் அப்பதிவை வரவேற்று பல பதிவுகள் இருந்தன. அதுபோல அவரை சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பல வாதங்கள் அங்கே காணப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திலீபனை வலுக்கட்டாயமாக சாக அனுப்பியதாக அங்கே விவாதங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு சிசிர யாப்பா தான் அறிந்த திலீபன் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்.

மறுபுறம் இன்னொரு சிங்கள நண்பர் சிசிரவிடம் கேட்கிறார்.

“சிசிர அண்ணா! திலீபன் பற்றி விரிவான கட்டுரையை எழுதுங்கள். முடிந்தால் ஒரு ஆவணப்படத்தை சிங்களத்தில் செய்யுங்கள் நான் உங்களுடன் ஒரு கெமராமேனாக பயணிக்கிறேன்....”

என்கிறார்.

திலீபனை சிங்கள சமூகத்திடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஜயதிலக்க பண்டாரவுக்கு முக்கிய பாத்திரமுண்டு.

மருத்துவ மாணவரும், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளருமான திலீபனுக்காக நல்லூர் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இப்போது அங்கில்லை. திலீபன் போர் புரிந்து கொல்லப்பட்டவரும் அல்ல. தன் மக்களுக்காக விடாப்படியான உண்ணாவிரதம் இருந்து மரணித்த ஓர் உண்ணாவிரதி.

உடைத்து அழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத் தூபி

ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இந்திய துருப்புக்கள் பங்கு வகிப்பதை எதிர்த்து ஐந்து கோரிக்கைகளை எதிர்த்து திலீபன் 1987 செப்டம்பர் 15 அன்று ஒரு கொடிய உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தை திலீபன் தேர்வு செய்தார். உண்ணாவிரதமிருந்த அந்தப் பகுதியை நோக்கி மக்கள் தொகைதொகையாக வந்து ஒன்று கூடினர். பலர் இரவுபகலாக அங்கேயே அமர்ந்திருந்தனர். திலீபனுக்காக பாடல்களையும் பாடினர். 

மகாத்மா காந்தி மற்றும் திலீபனின் உருவத்தை தாங்கிய பதாகைகள் அந்த இடத்தை அலங்கரித்தன. திலீபன் தன் இலட்சியத்துக்காக மரணத்தை அண்மித்துக்கொண்டிருந்தார். அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடிய தமிழ் மக்கள் திலீபனின் தலைவிதியை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை. கையறுநிலை. உண்ணாவிரதம் தொடங்கி பதினொரு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26, 1987 அன்று, திலீபன் மூச்சுத்திணறினார். திலீபனின் கடைசி பெருமூச்சுடன் அந்த இடமெங்கும் கூடி இருந்த தமிழ் மக்களின் கண்களில் இருந்து ஏக்கம் மிகுந்த வேதனையும் கண்ணீரும் பெருமூச்சும் பீறிட்டது. திலீபன் ஒரு நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் இலட்சிய மரணத்தைத் தழுவினார். திலீபனின் மரணம் அரசியல் வர்ணனையாளர்களால் "ஆயுதங்கள் மீதான நம்பிக்கை; வன்முறையற்ற போர் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பு" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் திலீபனின் மரணம் வடக்குக்கு மட்டுமன்றி தெற்கும் முக்கிய செய்தியாக அமைந்தது.

நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்?

வடக்கைப் போலவே தெற்கில் உள்ள மக்களுக்கும் திலீபனின் இறப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி பல்வேறு பல்வேறு கலை, இலக்கிய படைப்புகளால் பேசுபொருளானது பெப்பிலியானா சுனேத்ராதேவி பிரிவேனாவின் தலைவராக இருந்த கோன்கஸ்தெனிய ஆனந்த தேரோ என்கிற ஒரு பௌத்த பிக்கு இந்தச் சம்பவத்தால் மனம் நொந்து போனவர்களில் ஒருவர். அவர் ஒரு படைப்பாளியும் கூட. அவர் தனது கவிதைப் படைப்பால் பட்டினிப் போராட்டம் இருந்து மரணித்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்

தரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்

உயிரால் விலை கொடுத்த சகோதர திலீபனே

நீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்

இப்படியான கவிதைகளை யுக்திய பத்திரிகை அப்போது வெளியிட்டது. யுக்திய பத்திரிகை தென்னிலங்கையின் முக்கிய மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் அது அப்போது வெளியிடப்பட்டு வந்தது. இதே இயக்கத்தின் வெளியீடாக அப்போது பிரபலமான தமிழ் மாற்றுப் பத்திரிகையான சரிநிகரும் வெளிவந்தது. இந்தக் கவிதையை ஒரு பாடலாக நாடெங்கும் சிங்கள மேடைகளில் கொண்டு சென்றார் பிரபல சிங்களப் பாடர் ஜயதிலக்க பண்டார. 1971 ஜேவிபி கிளர்ச்சியில் பங்குகொண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டையும், சித்திரவதையும் அனுபவித்து விடுதலையானவர். அதன் பின்னர் மீண்டும் ஜே.வி.பியின் “விடுதலை கீதம்” (விமுக்தி கீ) அணியில் இணைந்து பல தொழிலாளர் வர்க்க எழுச்சிப் பாடல்கல் பலவற்றை பாடியிருக்கிறார் ஜயதிலக்க பண்டார. அடிமட்ட மக்களின் போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு கலைஞராக அவர் தனது பாடல்களால் பங்களித்தார். அது மட்டுமன்றி அநியாயத்துக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் அவரைக் காணலாம்.

90களின் நடுப்பகுதியில் சந்திரிகாவின் ஆட்சிகாலப்பகுதியில் “வெண்தாமரை இயக்கம்” நாடளாவிய ரீதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் சமாதான உறவை வளர்க்கும் என்கிற நம்பிக்கை தோழர் ஜயதிலக்க பண்டாரவுக்கு இருந்தது. அதனால் அவர் வெண்தாமரை இயக்க பிரச்சார மேடைகளில் பிரதான பாடகராக ஜொலித்தார். தமிழ் மக்களின் துயரங்களைச் சொல்லும் பல பாடல்களை அவர் பாடினார். “பயத்திலிருந்து விடுபடுவோம்” (‘බියෙන් අත්මිදෙමු’) என்று அன்று ஜே.வி.பியின் மேடைகளில் பாடிய பாடல்களை மீண்டும் இந்த மேடைகளில் பாடினார். அந்தப் பாடல்ககள் வரிசையில் முக்கிய பாடலாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த திலீபனின் உண்ணாவிரத இறப்பை நினைந்து பாடப்பட்ட இந்தப் பாடல்.

அவர் 2017 ஆம் ஆண்டு வெளியான “சமபிம” என்கிற சிங்கள சஞ்சிகையில் “நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

“மக்களை கொல்வது பரிநிர்வாணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நல்லொழுக்கம்” என்பது போன்ற கருத்தை பரப்புகிற போர் இலக்கியங்கள் சிங்கள சமூகத்தில் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் இந்த பௌத்த துறவி மரண அச்சுறுத்தலையும் மீறி தனது பேனையைப் பயன்படுத்தினார். தமக்கு தொடர்பேயில்லாத போரில்; தொடர்புடையவர்கள் மரணித்து வருவதைக் கண்டு மனம்நொந்தவர்களில்  ஆனந்த தேரரும் ஒருவர். அவர் தனது கவிதையின் இறுதியில் மரணித்துவிட்ட திலீபனை நோக்கி “உன் சிலையை நடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன்...”

என்று உருகுகிறார்.

“ஆனால் இனி முத்தமிடுவதற்கு மட்டுமல்ல நினைவு கொள்வதற்கோ கூட அந்த சிலை அங்கில்லை. அது இடித்து வீசியெரியப்பட்டுவிட்டது...”  என்கிறார்.

மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார். 

“சமாதான காலப்பகுதியில் இந்த பாடலை திலீபன் நினைவுத் தூபியின் முன் ஒரு மேடையில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தத் தூபி பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. யுத்தத்தின் பின் நான் அங்கு சென்றிருந்தேன். நல்லூர் கோவிலருகில் அமைதியாக நின்றிருந்த அந்த சிலையைக் காணவில்லை. அதை இனிமேலும் நிரந்தரமாக காண முடியாது என்பதை விளங்கிக்கொண்டேன்.

மரணித்த தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த மற்ற கல்லறைகளின் எச்சங்களைத் தவிர வேறெதையும் அங்கு காண முடியவில்லை. இறந்த மற்ற தமிழ் வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களின் எச்சங்களைத் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புபவர்களாக இருந்தால் தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த நினைவுச்சின்னங்களையும் கல்லறைகளையும் அழித்ததன் மூலம் ஒரு நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம். வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் அல்லது கல்லறைகளை இடிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்ற உண்மையை எப்போது உணருவோம்...?”

என்று ஏக்க அழுகுரலில் ஜயதிலக்க பண்டார கூறுகிறார்.

ஜெயதிலக்க பண்டார பாடிய அந்தப் பாடல் மீண்டும் இப்படித் தொடர்கிறது...

“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்

தரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்

உயிரால் விலை கொடுத்த சகோதர திலீபன்

நீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்


உனதும் எனதும் எதிரி யார் என்பதை கண்டுபிடிக்கலையே

ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொள்ளலையே

நாம் ஒர் வழியில் செல்ல உடன்படவுமில்லையே

வாழ்ந்தபடி போராட விரும்பவுமில்லையே


நாங்கள் சிங்களவர், நாங்கள் தமிழர்கள் என்கிற

மூடத்தனத்தை கைவிட்டு - அடுத்த தலைமுறை

நாட்டை ஒன்றிணைத்து மனிதத்தை நேசிக்கும் நாள் வரும்போது

உன்னை நினைத்தபடி - அந்த கோவிலருகிலிருந்து

நடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன் உன் சிலையை...

இந்தப் பாடலின் உள்ளடக்கத்தையும், அதன் மெட்டும், உருக்கமான இசையையும் கேட்டு அழுத சிங்களவர்களை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக வெண்தாமரை இயக்கம் முன்னெடுத்த “சாது ஜன ராவ” என்கிற இசை நிகழ்சிகளை பார்வையிட குழுமியிருந்த சிங்களவர்கள் பலர் அழுதிருக்கிறார்கள். “சாது ஜன ராவ” இசை நிகழ்ச்சி இலங்கையின் மூலை முடுக்கெங்கும் 1200 க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வீதி வீதியாக சென்று “வீதியே விரோதய” (வீதியில் எதிர்ப்பு) என்கிற வீதி நாடகத்தை நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள். அந்த வீதி நாடகத்தின் பிரதான பாடல் குரல் ஜயதிலக்க பண்டாரவினது. நாட்டின் அராஜகத்தை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட நாடகம் அது. 2014 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வீதி வீதியாக நடந்து பல நாட்கள் சென்றது அந்த நாடகக் குழு. டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நகரத்தில் வைத்து ராஜபக்ச அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மேயருமான  எராஜ் தன் சண்டியர்களுடன் சேர்ந்து அந்தக் குழுவை கடுமையாக விரட்டி விரட்டி தாக்கியது. ஜயதிலக்க பண்டார கடுமையாக தாக்கப்பட்டார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவரின் நண்பர்கள் அவரை நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர் ஐரோப்பாவுக்கு வந்திருந்தபோது அவர் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தான் தங்கிருந்தார். தோழர் ஜயதிலக்க பண்டாரவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் சோர்ந்து காணப்பட்டார். எப்போதும் இயங்கியே பழகிய மனிதர் இங்கு வந்து அரசியல் ஓர்மம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தவராக இருந்தார். நான் இங்கு இருக்க மாட்டேன் சென்று விடுவேன் என்றார். அதுபோலவே அச்சுறுத்தல் மத்தியில் மீண்டும் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார். 

திலீபனைப் பற்றிய பாடல் மட்டுமன்றி அவர் தமிழர்களுக்காக பாடிய ஏனைய பாடல்களையும் நீங்கள் கேட்க வேண்டும்.

யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் போர் கொண்டாட்ட, போர் களிப்பு பாடல்கள் தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் வெகுஜன ரசனையை உயர்த்தும் அளவுக்கு போர் போதை ஊட்டப்பட்டாகிவிட்டது.

திலீபனை நினைவுகொள்ள முடியாதபடி ஸ்ரீலங்கா இனவெறித் தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், உறுமல்களும், மிரட்டல்களும் "தமிழருணர்வைத்" தான் ஊட்டிப் பெருக்கியிருக்கிறது என்பதை சிங்களத் தேசம் அறியாது. செப்டம்பர் 15-26 வரையான நாட்களையும் சினமேற்றும் நாட்களாக சிங்களத் தேசம் ஆக்கியதாக புரிந்துகொள்கிறோம்.

சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணம் தான் நின்றுவிடுமா? நினைவுகொள்ளலை மறுத்துவிட்டால் மறதிதான் வந்திடுமோ? கல்லறைகளை சிதைத்துவிட்டால் வேட்கைதான் ஓய்ந்திடுமா?

நன்றி - தாய்வீடு - ஒக்டோபர் 2020

பொதுப்போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சேஷ்டைகள் - எம்.பவித்ரா

பாலினபாகுப்பாடு என்பது சர்வதேச அளவில் ஒரு பொதுப்பிரச்சினையாக நீடித்து வருகிறது. பெண்களும் மூன்றாம் பாலினரும் ஆணாதிக்கத்தின் அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். சமூக கலாசார பண்பாட்டு வழிமுறை இன்று வளர்ந்திருந்தாலும் கூட ஒரு பாலினம் மற்றையதை விட உயர்ந்தது என்கிற கருத்தியல் பலமாகத் தான் இன்றும் நிலவுகின்றது. பாலினவாதமானது பாலின கொடுமைகளை உடல், உள ரீதியில் பாதிப்பை செலுத்த காரணியாக வளர்ந்துள்ளது.   இப்பிரச்சினை தொடர்பாக புரிந்துக்கொள்ளப்படாத ஒரு சூழலே சமூகத்தில் காணப்படுகின்றது. இந்தச் சிக்கல்களை கையாள்வதற்கான ஆய்வுகளும் தரவுகளும் கூட குறைவாக காணப்படுவதும் இப்பிரச்சினையின் பண்புகளில் ஒன்று, எனவே இதற்கான தீர்வுகளை எட்டுவதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கூட சிக்கல்கள் நிலவுகின்றன.

1969 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA - UNITED NATIONAL FUND POPULATION ASIA) நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து  ஆரோக்கியமான இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான  சாத்தியங்களை விரிவுப்படுத்தும் செயற்பாடுகளில் இந்நிதியம் ஈடுபட்டு வருகின்றது. பெண்களின் மீதான வன்முறையற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் UNFPA இணைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை  மிகக்குறைந்த மகப்பேறு இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இலங்கை  சுகாதார சேவையில் முன்னேற்றத்தை கண்டுள்ளமைக்கு UNFPAயுடன் இணைந்து செயற்பட்டுவருவதும்  ஒரு காரணமாக அமைகிறது.  அத்தோடு UNFPA இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விடயங்களில் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர்  அதிக கவனத்தை எடுத்துவருகின்றது . 

இலங்கையுடன் இணைந்து UNFPA 2017ஆம் ஆண்டு  மேற்கொண்ட ஆய்வின் மூலம்  பெண்களின் மீதான பாலியல்  வன்முறைகள் தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கை, இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அளப்பரியதெனக் குறிப்பிடுகிறது. பெண்கள் தமது பொருளாதார தேவைக்காகவும், கல்வி நடவடிக்கைகாகவும் அன்றாடம் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றார்கள்.  இவ்வாறு பொதுப்போக்குவரத்தை  பயன்படுத்தும் பெண்களில்  90 வீதமானவர்கள்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த துன்புறுத்தல்களின் விளைவாக  பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்களின் கல்வி, வாழ்வாதாரங்கள் என அனைத்து வழிகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்ப பெண்கள்  தமது அன்றாட பயண வழியாக பொதுப்போக்குவரத்தையே நம்பியேயுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வில் 15 க்கும் 35க்கும் இடைப்பட்ட பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பாதிபேர் தொழிலுக்குச் செல்வதற்காகவும், மேலும் 28 சதவீதமான பெண்கள் கல்வி நடவடிக்கைகாகவும்  பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகம் என்பது வெறுமனே உடல் ரீதியான தொந்தரவுகளை மட்டும் குறிப்பவையல்ல.  சில சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வசனங்களும், சுடுசொற்களும் கூட துஷ்பிரயோகங்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. பெரும்பாலும் பெண்களை கிண்டல் செய்தல், கடுமையான தொனியை பயன்படுத்துதல், கீழ்த்தரமான நகைச்சுவை போன்றதாகவும் அவை அமையும். பெண்களின் சுய மரியாதையை முற்றிலும் பாதிக்கும் சொற்களும் இதில் உள்ளடங்கும்.

74% பெண்கள் விரும்பத்தகாத தொடுகைக்கு உள்ளாவதாகவும், 60% பெண்கள் தங்களது தனிப்பட்ட இடங்களில் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில்  52% பெண்கள் குறிப்பிடும்போது குற்றவாளிகள் பிறழ்வான நடத்தையில் ஈடுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவற்றில் 97% வீதமான ஆண்களே குற்றவாளிகளென அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வில் பங்கேற்ற 23 வயதான வருணி மானெல்ல என்பவர்  “பல சந்தர்ப்பங்களில், ஆண் பயணிகள் தகாத முறையில் சிறுவர் சிறுமிகளை தொட்டு சாய்ந்துக்கொண்டிருப்பதை நான் கண்டுள்ளேன். பேரூந்து நடத்துபவர்களும் பேரூந்தில் ஏறும் சிறு குழந்தைகளை தேவையில்லாமல் தொடுகின்றார்கள்”  என தெரிவித்துள்ளார்.  18 வயதான ராணிகுமாரி என்பவர் குறிப்பிடுகையில் “சுமார் 15 வயது சிறுவன் பாலியல் சேஷ்டை புரிந்தபோது நான் அசௌகரியமாக உணர்ந்தேன்”  என்றும் கூறியிருந்தார். இவ்வாறு அன்றாடம் தமது தேவைக்காக பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

பொதுப்போக்குவரத்துகளில்  இடம்பெறும் துன்புறுத்தல்கள்  அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததாக 44சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர்  இது தங்கள் பள்ளி செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், 37 சதவீதம் பேர் இது அவர்களின் பணி செயல்திறனை எதிர்மறையாக பாதித்ததாகவும் கூறியிருந்தனர். 

இந்த முறைகேடுகளும்,  அவை உருவாக்கும் சமத்துவமின்மையும், பெண்களின் பொருளாதார ஓரங்கட்டலுக்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன. 2006 இல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் முறையே 6% இருந்து 35% மாக பெண்களின் தொழிற் பங்களிப்பு சரிந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் வெறுமனே பெண்களின் பாதுகாப்பில்  மாத்திரம் தாக்கம் செலுத்துவதில்லை. பாலின வன்முறை, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் என்பவற்றிலும் பாரியளவிலான செல்வாக்கை செலுத்துகின்றது.

2019 டிசம்பர் மாதம் 29ம் திகதி UNFPAஇன்  மற்றுமொரு அறிக்கையின்படி,   குடும்ப சுகாதார பணியகத்தின் புள்ளிவிவரங்களில், இலங்கையில் ஆண்டுதோறும் 20 வயதுக்குட்பட்ட 20,000 சிறுமிகள் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பமாகியுள்ளார்கள்  எனக் கூறுகின்றது. தேசிய இளைஞர் சுகாதார கணக்கெடுப்பின்படி, 50% இளைஞர்கள் முறையான பாலியல், இனப்பெருக்க சுகாதார கல்வியைபெற்றதில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டில் 15 வயதிற்குட்பட்ட 75 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொது இடங்களில் பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதாக இவ்வாய்வு வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் இதுபோன்ற அசௌகரியத்திற்கு உட்படுத்தப்படும்போது பயம், அவமானம்   போன்ற காரணங்களால் அருகில் உள்ளவர்களிடமோ அல்லது காவல்துறையினரிடத்திலோ  புகார் அளிக்க சங்கடப்படுகின்றார்கள். துஷ்பிரயோகங்கள் குறித்து புகாரளிப்பது தொடர்பில் பெண்களுக்கு வழிப்புணர்வு ஊட்ட யு.என்.எஃப்.பி.ஏ உடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தாண்டு பெப்ரவரி 27ஆம் திகதியன்று யு.என்.எஃப்.பி.ஏ  இலங்கையில் பாலின சமத்துவம், பாலியல்  வன்முறை தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சுடன் முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் பாரிய அளவில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலாகும். மூன்றுக்கு ஒரு பெண் தன் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவிப்பதாக மதிப்பீடுகளின் ஊடாக அறியமுடிகிறது. பெண்கள் அல்லது சிறுமிகள் வன்முறையில் பாதிக்கப்படும்போது தேவையற்ற கர்ப்பங்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மற்றும் HIV உள்ளிட்ட பரவும் தொற்றுக்களுக்கும் உள்ளாக நேரிடுகிறது. 

இவ்வாறான வன்முறைகளினால் உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருக்கும்  தரப்பினர்களுக்கான வலுப்படுத்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். பாலியல் அடிப்படையிலான வன்முறை குறித்த தேசிய வழிகாட்டல்களில் இலங்கை அரசுடன்  யு.என்.எஃப்.பி.ஏ இணைந்து செயற்பட தொடங்கியுள்ளது. துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கட்டுப்படுத்துகின்ற ஒன்றாக அமைகின்றது.  

இக்குற்றங்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் மீதான வன்முறையாளருக்கு எதிராக புகார் செய்வதற்கான செயல்முறைகளும் நடைமுறைகளும் நெறிப்படுத்தப்படுகின்ற அதிகார அங்கங்களில் சட்டம் திறம்பட இயங்குதல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவருக்கும் பாதுகாப்பானதொரு பொதுப்பயண கலாச்சாரத்தை உருவாக்குவதல் முக்கியமானதாகும்.

பெண்களின் மீதான தனித்துவமான சிக்கல்களை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை அடையாளம் காணும் வகையில் கொள்கை வகுப்பை மேற்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக அதற்கான பெண்கள் பட்டயம் வலுவானதாகவும் இல்லை. பெண்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பான உரையாடலும் வெறும் சிந்தனை மட்டத்தில் மாத்திரமே சுருங்கிவிட்டிருக்கிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் சமூக மட்டத்தில் இருந்து எழாதததும் இந்த பலவீனத்துக்கு காரணம் எனலாம். இது தொடர்பில் வெகுஜன பொது அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயம்.

நன்றி - தினகரன்



 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates