Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..? - மு.சிவலிங்கம்


தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதல் தேர்தல் மேடையில் ¸ மலையக மக்களின் ஆறு அம்ச அரசியல் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அக் கோரிக்கைகளில் ஒரேயொரு உள்ளூராட்சி கோரிக்கையை மட்டும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் சபையில் முன்னெடுத்து உரையாற்றினார். அவ்வுரைக்குப் பின்னர் இன்று வரை ஆட்சியாளரின் நிலைப்பாடு என்னவென்று அறிய முடிய வில்லை. செப்டெம்பரில் தேர்தல் வரலாம்¸ என்ற செய்தி அடிபடுகிறது.

அதற்கு முன்பு பெருந்தோட்டக் குடி மக்களுக்கு எதிரான 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க உள்ளூராட்சியின் 33 ம் உறுப்புரைச் சட்டம் நீக்கப்பட்டு விடுமா..? 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா..? எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா..? இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா..? அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா? வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா..?” என்று வினா தொடுத்தால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்..?

கீதோபதேசம் சொல்வது போல் “கடமையைச் செய்.. பலனை எதிர் பாராதே..! “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே..!" என்பார்களா..? வாக்காளர் வாயை சாத்திய பின்¸ உள்ளூராட்சிப் பணத்தை வழமைப் போல கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு மட்டுமே செலவு செய்வார்களா..? அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒரு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா..? அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா..? பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்து தெளிக்கிறார்கள்? டெங்கு கொசு தோட்டப்புறம்..கிராமப்புறம் என்று வித்தியாசம் பார்த்துதான் கடிக்குமா?

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உட பலாத்த பிரதேச சபையில் என்ன நடந்ததென்று உங்கள் வேட்பாளர் சொல்வார்களா..? புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா..? இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா? தேர்தலை வென்றெடுக்கும் எம் மக்களுக்கு பயன் படாத பிரதேச சபை தலைவர் பதவி..பிரதேச சபை உறுப்பினர் பதவிகள் தேவை தானா?

200 ஆண்டுகளாக அவமானப்பட்டுக் கிடக்கும் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் ஒன்றான உள்ளூராட்சிக்குள் உள் வாங்க மறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமையை எதிர்வரும் தேர்தலுக்குள் பெற்றுக் கொடுக்க முடியுமா..? என்ற கேள்வியை த.மு.கூ. விடம் மட்டுமல்லாமல்¸ போட்டியிடும் எல்லா கட்சிகளிடமும் முன் வைக்க விரும்புகின்றேன்.. இந்தக் கேள்வி முகநூல் என்னும் சர்வதேச மக்கள் அரங்கத்தின் முன் சமர்ப்பிக்கப்படுவதால் சர்வதேசங்களிலிருந்தும் மக்கள் உங்கள் அறிவார்ந்தப் பதிலை எதிர்பார்ப்பார்கள்…!

ஒரு நாட்டு நிர்வாக ஆட்சிக்குள் 200 வடங்களாக வாழ்ந்து வரும் குடிமக்களை உள்வாங்க மறுக்கும் ஆட்சிக்கு எதிராக ஏன் இன்னும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையென்று சர்வதேச சமூகம் உங்களிடம் ஆக்ரோஷமாக கேள்வி கணைகளைத் தொடுப்பார்கள்!.. கருத்து பகிர்வார்கள்…! உள்ளூராட்சி… தேர்தலுக்கு முன் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பீர்களா?

தெளிவத்தை ஜோசப்பின் "கூனல்": மௌனிக்கும் குரல்கள் - ப்ரிந்தன் கணேசலிங்கம்


என்னதான் நாங்கள் சமத்துவமும் சம உரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும் மிக குறுகிய மாத சம்பளத்திற்கும் அடிமைகளாக தேயிலை தோட்டங்களில் இன்னமும் மிஞ்சி இருக்கின்ற சாதாரண மனிதர்களின் அவலம் மிகக் கொடியது. குறுகிய லயன்களில் போதிய வசதி எதுவும் இல்லாமல் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் சரிவர இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் குளிரில் வாடி மடிகின்ற மலையக  தொழிலாளர் வர்க்கத்தின் குரல்கள் வெளிப்படுத்தப் படவேண்டும்.

என்னதான் வாக்குரிமை வசதிகள் என்று நுண்மையாக அரசியல் வழிநடத்தல்களோடு உரிமைகள் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும், அதே சமயத்தில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்னொரு சமூகம் இருந்துகொண்டே இருக்கின்றது. எல்லோரின் போர்வையிலும் அவர்களும் அடிபட்டுப் போனாலும் அங்காங்கே எழுகின்ற இலக்கிய குறிப்புக்களில் தெளிவாக பதிவிடப்படுகின்றனர். சாதியத்தாலும் அவர்களின் ஆரம்ப கால வருகை நோக்கத்தினாலும் புண்படுத்தப்பட்டு, இறைச்சி சதையின் மேல் நெளிகின்ற புழுவைப்போல அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தினரால் இன்னமும் பார்க்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.

இந்த தொழிலாளர் பாட்டாளி வர்க்க பேதம் பற்றி மிக நுண்மையான கதையாடல் மூலம் வெளிபடுத்துகின்ற தெளிவத்தை ஜோசப்பின் படைப்புத் தான் கூனல் சிறுகதை.

சிறுகதை இலக்கியத்தின் ஒரு கூறான மெய் தரிசனத்தை இந்த கதையின் பின்னணியில் காணலாம். கதையின் ஆரம்பத்திலிருந்து சாதாரண தேயிலை ஆலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நகர்வுகளோடு தொடங்குகின்றது கூனல். மேற்ப்பார்வையாளர் தனது மேற்பார்வைக்கு வருகின்ற கணம் வரை , அவர்களின் வேலை பரபரப்பிலாமலும் அமைதியாகவும் நடந்துகொண்டிருக்கின்றது. மேற்பார்வையாளரின் முன் வேலையை பரபரப்பாக்கிக் கொள்கின்ற முறையும், அந்த பரபரப்பு வெறும் செய்கையில் மட்டுமே இன்றி உற்பத்தி வேகத்தை ஒரு போதும் அதிகரித்ததில்லை என்ற நிதர்சனமான பார்வையையும் ஜோசப்பின் மொழியாடலின் மிக லாவகாமாக வெளிப்படுகின்றது. தொழிற்சாலையின் ஒவ்வொரு கூறுகளும் அதில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் உடல் அசைவுகள் , மன சிக்கல்கள், தேவைகள் , கஷ்டங்கள் என்று நுட்பமான விபரித்தல் ஊடாக கொண்டு சென்று கதையின் மைய பகுதிக்குள் நுழைகின்றார்.

கதையின் மைய பகுதி ‘பெனிங்சின்’ என்கிற உயர் வகைத் தேயிலையை கையாள்கின்ற பெயர் குறிப்பிடாத தொழிலாளி பற்றியது. அந்த பெயர் குறிப்பிடாத நபர் முழு தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமாக நகர்த்தபடுகின்றார். அவனின் மனநிலை பற்றிய சித்திரமாக ஜோசப் ஒவ்வொரு மலையக தொழிலாளியையும் முன்நிறுத்துகின்றார்.

லயன்களில் வசிக்கின்ற மக்களின் பொதுமையான தொழில் தேயிலை தோட்டம் சார்ந்ததாகவே இருக்கும். தேயிலை களத்தில் வேலைசெய்கின்ற ஒரு சாரார், தேயிலை ஆலையில் வேலைசெய்கின்ற ஒரு சாரார் , தேயிலை போக்குவரத்தில் வேலை செய்கின்ற இன்னொரு சாரார் என தேயிலையின் உற்பத்திகளோடு ஒன்றித்து வேலைசெய்கின்ற மக்கள் அவர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு மிக பொருத்தமான உதாரணம் அவர்கள் குடிக்கின்ற தேநீர். என்னதான் உயர் ரக தேயிலையுடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ கடைசி தரத்திற்கு முன்னைய தர தேயிலையாகும். கடைசி தர தேயிலை மரங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்படும். ரேசன் அரிசி வாங்குவது போல தேயிலையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இரண்டாம் வடித்தலுக்கு சாயம் வராத கஞ்சல்கள்(தேயிலை) சீக்கிரம் தீர்ந்து போக அயலவர்களிடம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள். எத்தனை நாட்களுக்கு இதே போக்கில் செல்வது. மாத முடிவுகளில் வெறும் சுடு தண்ணீர் குடித்துவிட்டு குளிருக்குள் வேலைக்கு செல்கின்ற துயரம் மிக்க வாழ்க்கை அவர்களது. கதையின் நாயகனது.

மனதின் பாய்ச்சலில் நல்ல தேநீர் அருந்தி விடவேண்டும் என்று உயர் ரக தேயிலை சிறிய அளவை தனது கைகளில் மடிப்புக்குள் நிறைத்து சுருட்டி விடுகின்றான். மாடு மாதிரி வேலைகளை செய்து விட்டு இறுதியாக சோதனை செய்யும் இடத்தில், முகத்தில் வெறுமையும் பயமும் மிரட்சி கொள்ள காத்திருக்கிறான். துரதிஷ்டவசமாக அவனின் திருட்டு பிடிபட்டு விட்டது. எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுகிறான். குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அவன் வியாபாரத்திற்க்கோ அல்லது வேறு தீய நோக்கத்திலோ தேயிலையை திருடியிருக்கவில்லை. அவனின் சிறிய ஆசைக்கு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக சிறிய விருப்பிற்கு அங்கே முட்டுக்கட்டை போடப்படுகிறது.

சிறுகதையின் இறுதி வரிகள், இதுவரை வாசகன் சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் இருண்ட பக்கங்களை வெளிபடுத்துகிறது. இரவில் மூடை மூடையாக தேயிலை ஒரு கருப்பு காரில் ஏற்றப்படுவதும் அதை காவலாளி சலனமின்றி அவதானிப்பதும் திட்டமிட்ட பாட்டாளி திருட்டை அமபலபடுத்துகிறது. ஒரு சிறிய அளவு தேயிலையை விருப்பிற்காக கொண்டு செல்லும்போது குற்றவாளியாக பிடிபட்ட தொழிலாளியும், அதே தேயிலையை இருட்டில் மூடை மூடையாக சொந்த லாபத்திற்காக பாட்டாளி களவாடும் போது காவலாளி மௌனமாக ஆதரிப்பதும் வர்க்க பேதத்தின் பரவலாக்கத்தை விளிகின்றது. சோதனை செய்யும் இடத்தில் அவன் ஒரு பெருமனதோடு விடுவிக்கப்பட்டிருக்கலாம், இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் அந்த விடுதலையை தடுப்பது தொழிலாளி என்ற வர்க்க நிலையே. இதுவே பாட்டாளி வர்க்கம் சுரண்டு மூடையாக குவிக்கும் போது “ யான் ஒன்றும் அறியேன் பராபரமே” என்றிருப்பதும் வர்க்க நிலையே.

தெளிவத்தை ஜோசப் கூனல் என்ற சிறுகதையின் மூலம் கூனலாகிப்போன மலையாக தொழிலாளர் வர்க்க உணர்வு நிலை போராட்டத்தை பதிவிடுகின்றார்.

யாருக்காக தகவல் அறியும் சட்டம் - ஜீவா சதாசிவம்


தகவல் உரிமைச் சட்ட அறிமுகத்தின் பின்னர், இனி எல்லா விடயத்திலும் வெளிப்படைத்தன்மை, நேர்மை இருக்கும் என்று எதிர்பார்ப்பு. எல்லோரது மத்தியிலும் ஒரு நம்பிக்கைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அதற்கும் தடை போடும் வகையில் முறைகேடுகள் இருக்கின்றமையினால் அதன் நம்பிக்கை நிறைவேற்றப்படுமா? என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. 

தகவல் அறிவதற்கான சட்டமூலம் வந்தது என்பதற்காக 'தகவல் சுதந்திரம்' இந்த நாட்டில் முழுமையாக பேணப்படுமா? என்று நம்பிவிட முடியுமா? ஆம்! இந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஒரு வருடமும் ஐந்து நாட்களும் ஆகிவிட்டன.  இந்த ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டா தெரியவில்லை பல இடங்களில் இது பற்றி செயலமர்வுகளும்  நடத்தப்பட்டுள்ளன. 

அண்மையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் (SLPI) தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வொன்று நடத்தப்பட்டது. சட்டத்தரணி ஏ.கே.ஐங்கரன் வளவளராக கலந்துகொண்டார். இச்செயலமர்வில் மேற்படி சட்டத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி தெரிந்துகொண்டாலும் இந்த சட்டம் மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது மக்கள் இதனை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாயின் எவ்வாறான பின்பற்றல்களைக் கையாள வேண்டும் என்பது குறித்து விரிவாக இங்கு கலந்துரையாடப்பட்டது. செயலமர்வும் தரமான தகவலுடனேயே இருந்தமை வரவேற்கத்தக்க விடயம். 

சுதந்திரத்தினத்தன்று முழுமையாக செயற்பாட்டுக்குள் வந்த  'தகவல் உரிமைச் சட்டம்' இப்போது எவ்வாறு செயற்பட்டு/ செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பது பற்றியே இவ்வார 'அலசல்' அலசுகிறது.


ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ள இச்சட்டம் தனக்கான  உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்துள்ளது.  www.rticommission.lk இதுவே அதன் முகவரி.  2016ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 23ஆம் திகதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. கொண்டுவரப்பட்ட தினத்தில் இருந்து அதனை அமுல்படுத்தும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று வரை விறுவிறுப்பான பேசுபொருளாக இருந்து வந்தது. 

இதன்போது பலதரப்புகளிடமிருந்தும் பல்வேறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் வெளியாகின. ''அப்பாடா இந்த சட்டம் வந்தா இந்த அரசியல்வாதி என்னென்ன திருட்டு வேல செய்றாங்கன்றத பற்றி முதல்ல தெரிஞ்சிக்கலாம்''  இது பொது தரப்பில் இருந்து வந்த கருத்துக்கள்.  இதனை மிக ஆர்வமாக தெரிவித்ததை  அவதானிக்கவும் முடிந்தது.

ஆம்! வெறுமனே அரசியல் தரப்பில் உள்ள ஊழலை மாத்திரம் அறிந்துக்கொள்வதற்குதான் இந்த 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' இருக்கின்றதா? இல்லாவிடின்? 

இத்தருணத்தில் இச்சட்டத்தின் உருவாக்கப் பின்னணி குறித்து சிறு விளக்கம் ஒன்று இவ்விடத்தில் அவசியப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு இந்தச் சட்டம் சம்பந்தமாக பேசப்பட்டு வந்தாலும் சுமார் 10 வருடங்களின் பின்னர் நீண்ட கடினமான  போராட்டங்களையடுத்து உயிர்பெற்றிருக்கின்றது.  
தொடர் செயற்பாடுகளின் பின்னர் 2011ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதன் முதலாவது அறிக்கையில் 'தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு' பரிந்துரைத்ததுடன் 2013 ஆம் ஆண்டு இக்குழு இச்சட்டத்தினை ஒரு தேசிய செயல் திட்டத்தினது ஒரு செயல் இலக்காக உள்ளடக்கியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். 

நீண்டகால செயற்பாடுகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டம் மக்கள் மத்தியில் ஒரு பகுதியளவில் மாத்திரமே சென்றுள்ளது எனலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் நலன் சார்ந்த பல விடயங்கள்  உயர்பீடத்தில் இருந்து அறிவிக்கப்பட்டாலும் பின்வரும் நாட்களில் மக்கள் மத்தியில் அதனை  எவ்வாறு கொண்டு செல்வது, அவர்களிடத்தே அதனை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது பற்றிய விளக்கங்களை கொடுப்பது அரிதாகவே இருக்கின்றது.  


இச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தன் பின்னர் ஊடகங்கள் , இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என சகல மட்டங்களிலும் பேசப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அதன் நிலை மிகவும் மந்தமாகவே இருக்கின்றது. மக்கள் நலன் கருதி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் இவ்வாறான சட்டங்கள் அரச பத்திரிகைகளில் முழுமையாக விளம்பரப்படுத்தப்படுகின்றனவா? அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாளுகின்றனர் என்பதை பார்த்தால் அதுவும் மந்தகதியே!!!!!

இந்த சட்டம் ஏன்? அவசியம் என்பது பற்றியதொரு சிறிய விளக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்தையே சேர்ந்தது. இவ்வாறானதொரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது 2016ஆம் ஆண்டே அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கின்றபோதும் அந்தாண்டு வரவு- – செலவு திட்டத்தில் இதற்கென தனியான நிதி ஒதுக்கீடு எதனையும் செய்திருக்கவில்லை. இதனுடன் இணைந்து வேலை செய்வதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இருக்கின்ற அதிகாரிகளுக்கும் இது பற்றிய போதிய பயிற்சியும் வழங்கப்படாதிருப்பது அதனை கையாள்வது மிகவும் சிரமமான நிலைமையை தோற்றுவித்து விடுகின்றது. 

மக்களுக்கென   உருவாக்கப்பட்டுள்ள  The Right to Information Act, No. 12 2016 இந்த சட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும். ஆனால், மக்கள் , அரசு அதிகாரிகள் என எல்லோருடைய ஈடுபாடும் இருந்தால் தான் இந்த சட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் . 
இந்த சட்டம் மக்களிடத்தே முழுமையாக சேருமிடத்து நாட்டில் தலைவிரித்தாடுகின்ற இலஞ்ச ஊழல், ஏனைய அத்துமீறல்களை இல்லாதொழிக்க முடியும். வெறுமனே சட்டத்தை கொண்டு வந்து விட்டோம். எமது கடமை முடிந்து விட்டது என்று அரசாங்கம் அசமந்தப்போக்கில் இருந்து விடக்கூடாது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி  மக்கள் தங்களுக்கு தகவல் அறியும் உரிமையை எந்த அளவுக்கு விவேகத்துடனும் வலுவாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே தெரிந்துக்கொள்ள முடியும்.  ஆனால், இந்த ஒரு வருட காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை தோன்றியதாகத் தெரியவில்லை. குறிப்பாக தலைநகரை அண்டிய பகுதிகளுக்கு இந்த தகவல் அறியும் 'தகவல்' எந்தளவுக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது என்றால் அது கேள்விக்குறியே. 

'தகவல் பெற விரும்பும் நபர்கள் மிகுந்த விருப்பத்துடன் இருப்பது போலவே, தகவல்களை ,முடிந்த வரை மிக குறைவாக தர வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் சூழ்ச்சியால் ஆதரிக்கப்படும் அதிகாரிகளும் இருப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கக் கூடும்.  அவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் இதனை வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இன்று அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி உட்பட பலதரப்பட்ட விடயங்களிலும்  மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து பொதுமக்களிடத்தில் பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தாலும் அதனை தத்தமது பிரதேசத்தில் எவ்வாறு நிவர்த்தி செய்துக் கொள்வார்கள் அதனை எவ்வாறு உறுதிப்படுத்திக்ககொள்வார்கள் என்பதற்கு இச்சட்டத்தின் விளக்கம் மக்களுக்கு தேவைப்படுகின்றது.  இச்சட்டம் உலகிலுள்ள பல ஜனநாயக நாடுகளில் வலுப்பெற்றிருப்பது யாவரும் அறிந்ததே. இதனால் மக்கள் அரசை நேசிக்கும் தன்மையும் இருக்கின்றது.  ஜனநாயக நாடொன்றுக்கு அத்தியாவசியமான இவ்வாறான சட்டங்கள் மக்களின் நலன் கருதி அமுல்படுத்தப்பட்டாலும் அதில் மக்களை எவ்வாறு உள்வாங்கச் செய்வது என்பது பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது.  இதனை வழிநடத்தி செல்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான பொறுப்பையும் கடமையையும் வலியுறுத்தி அவர்களை முழுமையாக செயற்படுத்த வேண்டிய கடப்பாடும் அரசாங்கத்தையே சார்ந்தது. 

நன்றி - வீரகேசரி

"சுதந்திரமாக கருத்தாடுவதற்கான களமாக அமையும் இலக்கிய சந்திப்பு" - என்.சரவணன்


“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்” என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில் மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.

1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 27 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 44 இலக்கிய சந்திப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 04, 05 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து முடிந்திருக்கிறது. நோர்வேயில் இதுவரை மூன்று தடவைகள் இலக்கிய சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.

புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 

இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.

அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய  சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.

ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.

ஒஸ்லோ சந்திப்பு
இரு நாட்கள் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பில் பல காத்திரமான தலைப்புகளும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் நாள் வாசுகி ஜெயபாலனின் கணீரென்ற குரலில் கவிஞர் ஜெயபாலனின் கவிதை பாடி தொடக்கப்பட்டது. அதன் பின்னர் “தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்), சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்), ஆகியோர் உரையாற்றினார்கள் அதனை நெறிப்படுத்திய ராகவன் (இங்கிலாந்து) “லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்கும் வரை அவருக்கு புரட்சி பற்றிய சிந்தனையே உதித்திருக்காது என்றார் அம்பேத்கார்.” என்கிற வாசகத்துடன் தொடக்கவுரை ஆற்றியதுடன் ஏனையோர் தலித் விடுதலை சார்ந்து செயல்படுவதில் எதிர்கொள்ளும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார்கள். இன்று தலித் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை எதிர்ப்பவர்கள் எந்த உள்நோக்கங்களுடன் அதனை மேற்கொள்கிறார்கள் என்பதை விலாவாரியாக பேசப்பட்டது.

உயர்சாதியினர் தமது சாதியை அறிவித்துக்கொண்டு வாதிப் பெருமிதத்துடன் பணிபுரிய முடிகிறது.  ஒடுக்கப்பட்ட சாதியினர் தலித்தியம் பேசுவது ஒன்றும் அப்படி ஒன்றும் சொகுசானதல்ல. பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் எதிர்கொண்டபடித்தான் தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார் என்.சரவணன்.

“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ராஜன் செல்லையா (நோர்வே) நோர்வே அரச தொலைக்காட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றி வருபவர். ஐரோப்பா மட்டுமன்றி இலங்கையிலும் ஊடக ஆறாம் பற்றிய வரைவிலக்கணம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்வது குறித்தும் நேர்த்தியான தயாரிப்போடு உரையாற்றினார்.


“நடைப்பயணக் குறிப்புகள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய சஞ்சயன் ஸ்பெயின் நாட்டில் 750 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்ட அனுபவத்தை இலக்கிய தரத்துடன் பகிர்ந்துகொண்டார். இரண்டு வருடங்களாக இந்த பயணத்தை மேற்கொண்டுவரும் அவர் அந்த பயணம் தந்த சுகமான அனுபவம் மட்டுமன்றி அந்த பயணம் இறக்கி வைத்த சுமைகளையும் அற்புதமாக பகிர்ந்துகொண்டார்.

“மைத்திரியோடும் மாகாணசபையோடும் மௌனமாகுமா தமிழர் அரசியல்? என்கிற தலைப்பில் உரையாற்றிய எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) குறிப்பாக வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை நிறைய தகவல்களுடன் விமர்சித்தார். ஸ்டாலின் கிழக்கு மாகாண சபை உருவாக்கிய  இன நல்லுறவு பணியகத்தின் பொறுப்பாளராக பிள்ளையான் காலத்தில் இயங்கியவர்.

சுவிசில் தனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விஜயன் ஒரு சிறு அரங்க நிகல்வோன்ரையும் செய்து காட்டினார். அதில் கலந்துனர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்திருந்தது சிறப்பு. விஜயன் 90களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்று அரங்க செயல்பாடுகளின் மூலம் அறியப்பட்டவர்.

இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக “புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்கிற தலைப்பில் ஒஸ்லோவில் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களான மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா ஆகியோர் ஆக்கபூர்வமான உரையாடலை ஆரம்பித்து வைத்தனர். மேலதிக நேரம் நடந்த இந்த நிகழ்வை வாசுகி ஜெயபாலன் நெறிப்படுத்தினார். கலந்துனர்களில் பெரும்பாலானோர் இந்த உரையாடலில் உற்சாகமாக பங்குகொண்டனர். சிறந்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் இந்த நிகழ்வு பலரையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

1915 முஸ்லிம் - சிங்கள கலவரத்தின் 100 ஆண்டுகள் நினைவு குறித்து உரையாற்றிய ஸஹீர் அந்த கலவரம் குறித்து இன்னுமொரு கோணத்தில் தனது பார்வையை முன்வைத்தார். குறிப்பாக ஆங்கில அரசு சிங்களத் தலைவர்களை மட்டுறுத்துவதற்காக சிங்கள பௌத்தர்களின் மீது பலியை போட்டு முஸ்லிம் சார்பு – சிங்கள எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் கூட சிங்களவர்களே என்றும் தனது கருத்தை முன்வைத்தார். ஒரு வைத்தியராக பணியாற்றும் சஹீர் தனது அரசியல் தேடலினை உறுதியாகவே முன்வைத்தார்.


அன்றைய நாள் “இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய உமா (ஜேர்மன்) நீண்ட காலம் பெண்கள் குறித்த விடயங்களில் எழுதி, பேசி, செயற்பட்டு வருபவர். சர்வதேச பெண்கள் சந்திப்பு நிகழ்வை பல தடவைகள் ஜெர்மனில் பொறுப்பேற்று நடத்தியவர். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த வரலாற்று பூர்வமான தகவல்களை விலாவாரியாக பல செய்திகளின் மூலம் உமா முன்வைத்தார். தற்போதைய ஒதுக்கீடு குறித்த கோரிக்கை எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வை நெறிப்படுத்திய என்.சரவணன் “பெண்களின் அரசியலும், அரசியலில் பெண்களும் என்கிற விரிவான நூலை எழுதியவர்.

கடந்த வருடம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 50 வருட நினைவு குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தனின் உரை அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தது. உணர்ச்சிபூர்வமாக இருந்த அந்த உரை ஒரு கதையாக ஓடிக்கொண்டிருந்தது. தகவல்கள், தரவுகள், ஈவிரக்கமற்ற தலைவர்கள், துரோக ஒப்பந்தம் என்று விரிந்து சென்றது அது. கலந்துனர்களில் பலருக்கு புதிய தகவல்களாக இருந்ததுடன் அதிர்ச்சியைக் கொடுக்கும் தகவல்களாகவும் இருந்தன. அந்த நிகழ்வை அவரின் நண்பர் நடராஜா நெறிப்படுத்தியிருந்தார்.

“உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ஆதவன் (டென்மார்க்) சிறுவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் அரங்காற்றுவது எப்படி, அந்த உளவியலுக்கும் பெரியவர்களின் உளவியலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதற்கான சவால்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார். 

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மு.நித்தியானந்தனின் “கூலித் தமிழ்” நூல் அறிமுக உரையை சத்தியதாஸ் ஆற்றினார். மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக அந்த நூலின் உள்ளடக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். ஆங்கிலேயர்கள் இந்தியக் கூலிகளை வேலை வாங்குவதற்காக அவர்களின் பேச்சுமொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அதற்காகவே அந்த காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டன என்றும், அதற்கான நூல்கள் கூட வெளியிடப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் சுசீந்திரா எனும் பெண் புகைப்பட கலைஞரின் “இயற்கையோடு பயணித்தல்” என்கிற புகைப்படத் தொகுப்பின் காணொளி காண்பிக்கப்பட்டதுடன் அதனை நெறிப்படுத்தினார் உமா.

அடுத்த இலக்கிய சந்திப்பு இலங்கையில் மட்டகளப்பு நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. அதற்கடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் நடத்தப்படவிருக்கிறது.

ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்

சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும்  சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக  குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில்  சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்  தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.

மார்ச் 28 ஆம் திகதி “ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்ற பத்திரிகைச் செய்தியின்  மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.

ஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.

44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014

தேயிலைக் கைத்தொழிலில் 'க்ளைபோசைட்' பாவனை - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 24)

பெருந்தோட்டக் கைத்தொழிலில் குறிப்பாக தேயிலைக் கைத்தொழிலுடன் தொடர்புடையதாக அண்மையில் வெளிவந்த சில செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. 

களுத்துறை மாவட்டத்தில் நான்காயிரம் சிறு தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு, இதைப்போலவே காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலும் சிறுதேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மறுபுறம் 'தேயிலை செய்கைக்கான 'கிளைபோசைட் ' தடையை நீக்க முயற்சி' என பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் விடுத்திருக்கும் செய்தி தேயிலைப் பயிர்ச்செய்கை எதிர்நோக்கும் இன்னுமொரு சவாலை வெளிக்காட்டுகின்றது. இதற்கு பதிலடியாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரோ 'தேயிலைக் கைத் தொழிலை மேற்கொள்ள க்ளைபோசைட் அவசியம்தானா'? எனும் பிரசுரமும் செய்தியும் முக்கியத்துவம் பெறகின்றது. 

'க்ளைபோசைட்' (Glyphosate) எனப்படுவது ஒருவகை களைநாசினி. தேயிலை மலைகளிடையே வளர்ந்துகிடக்கும் புற்களை கொல்லுவதற்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த களைக்கொல்லி மருந்து. வயல் வெளிகளிலும் கூட இந்த மருந்தினை பாவனை இருந்து வந்தது. குறிப்பாக தேயிலைப்பயிர்ச்செய்யும் மலைநாட்டு பகுதிகளில் இந்த மருந்து அதிகளவில் பயன்படுத்தப்படுவதனால் அவை மழைநீரில் கரைந்து சென்று ஆற்றுடன் கலக்கின்றது என்றும், அந்த ஆற்றுநீர் கீழ் மாவட்டங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்படுவதனால் அதிகளவானோர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது தேரரின் வாதம். இது அவரது வாதம் மட்டுமல்ல ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிகளவான சிறுநீரக பாதிப்புக்கு நீரில் கலந்திருக்கும் இந்த க்ளைபோசட்டே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி செயற்படும் சனாதிபதி செயலணியில் மிக முக்கியமான அம்சமாக இந்த சிறுநீரக நோயினைக் கட்டுபடுத்தவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக 'க்ளைபோசைட்' எனப்படும் களைநாசினி இப்போது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் பெருந்தோட்ட கம்பனிகள் 'க்ளைபோசைட்' பாவனை இல்லாமலாக்கப்பட்டதால் தங்களால் தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாகவும் எனவே தேயிலைக் கைத்தொழிலுக்கு மாத்திரம் அந்த மருந்தினை பாவிப்பதற்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும் எனும் கோரிக்கையை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஊடாக அரசாங்கத்தை நாடியுள்ளது. 


அரசாங்கத்தின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவருமான அத்துரலியே ரத்தன தேரர் க்ளைபோசைட் பாவனையை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிப்பதோடு 'க்ளைபோசைட்' பாவனையை கண்டிக்கும் தனிப்பட்ட துண்டு பிரசுரங்களையும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறார். 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய அத்துரலியே ரத்தன் தேரர், நெற்செய்கையில் ஈடுபடுவோர் 'க்ளைபோசைட்' பாவனையில்லாமல் அதனை மேற்கொள்ள முடியும் என உறுதிப்படுத்தியிருக்கும்போது, தேயிலைப் பயிர்ச்செய்கையில் ஏன் அதனைத் தவிர்க்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.  அரசியல் லாபங்களுக்காகவும் பல்தேசிய இரசாயன கம்பனிகளின் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்பட்டே க்ளைபோசைட்டை மீண்டும் பாவனைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

பெருந்தோட்ட கம்பனிகள் மாத்திரமே இதனை கோரி நிற்கின்றன. தேயிலை உற்பத்தியில் 40 சதவீதமான பங்களிப்பை மாத்திரமே பெருந்தோட்டக்கம்பனிகள் வழங்குகின்றன. மொத்த தேயிலை எற்றுமதியில் 25 சதவீதம் மர்திரமே பெருந்தோட்டத் தேயிலை கம்பனிகளில் இருந்து பெறப்படுகின்றது. தேயிலை உற்பத்தியின் 60 சதவீதம் சிறுதேயிலைத் தோட்ட உடமையாளர்களிடம் இருந்தே பெறப்படுவதுடன் ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பங்கு சிறு தேயிலைத் தோட்ட உடமையாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது என்று கூறியுள்ள அத்துரலியே ரத்தன தேரோ பெருந்தோட்ட கம்பனிகளால் தோட்டங்களைக் கொண்டு நடாத்த முடியாது போனால் அவற்றை திரும்பவும் அரசாங்கத்துக்கு ஒப்படைத்துவிட்டுச் செல்லட்டும் எனவும் சாடியுள்ளார். 

'க்ளைபோசைட்' விவாகாரம் மாத்திரமல்லாது இந்த புள்ளிவிபரங்களுக்குள் அடங்கியிருக்கம் இன்னுமொரு பக்கத்தையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியள்ளது. ஏற்கனவே இந்தத் தொடர் பத்தியில் 'திசை மாறும் தேயிலை' எனும் தலைப்பில் இது பற்றி எழுதப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் நான்காயிரம் தோட்டங்கள் பாதிப்பு என்கிற செய்தி அங்கு தேயிலைக் கைத்தொழில் எவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது. 

பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களது தேயிலை மலைகளில் புற்களைக் கொல்வதற்கு (களையகற்ற) க்ளைபோசைட் பாவிக்க கோரினால் சிறுதேயிலைத் தோட்டங்களில் எவ்வாறு இது மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. பெரிய பரப்பளவில் அல்லாது தேயிலைத் தோட்டங்கள் சிறிது, சிறிதாக பகிரப்பட்டு அவை சிறுதோட்ட உடமையாளர்களுக்கு மாற்றப்பட்டிருக்கும்போது அவர்களது தோட்டத்தில் புற்களை அகற்றி பராமரிப்பது பாரிய சுமையாக தெரியாது. தவிரவும் அவர்கள் தொடர்ச்சியாக ஒரே தேயிலைத் (தமது) தோட்டத்தில் வேலை செய்துவருவதனால் தோட்டங்களை காடாகவும் விடுவதில்லை. 

ஆனால், பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருவதனாலும் தோட்டங்கள் பரப்பளவில் பெரிதாக இருப்பதனாலும் தேயிலை மலைகளிடையே வளரும் புல் வகைகள் வளர்ந்து அவை காடாகிவிடுகின்றன. சிறிதுகாலம் பராமரிக்காது விடும்போது அந்த பகுதி தேயிலைகள் இயல்பாகவே காடாகிவிடுகின்றன. எனவே தேயிலைப் பயிர் செய்யும் அளவும் குறைந்து வருகின்றது. பெருந்தோட்டக் கம்பனிகள் இப்போது க்ளைபோசைட் பாவனையை காரணம் காட்டினாலும் ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையினால் பெருமளவில் தேயிலை மலைகளை பராமரிக்காது விட்டு அவை காடுகளாக மாறி வருகின்றன. 

ஹங்குராங்கத்தை பிரதேசத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்ற தொழிலாளர்கள் அங்கு வளர்ந்து நின்ற புற்களுக்கு மத்தியில் கொழுந்து பறிக்க முடியாத நிலையில் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை களையகற்றும் மருந்துகளுக்காக பயன்படுத்த தோட்ட நிர்வாகத்துக்கு விட்டுக்கொடுத்து கொழுந்து பறித்த சம்பவம் ஒன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. 

தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்காமை காரணமாகவும் பெருந்தோட்ட தேயிலைப்பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தேரர் சொல்வதுபோல 'தோட்டங்களைப் பராமரிக்க முடியாதுபோனால், அரசாங்கத்துக்கு பொறுப்புக்கொடுக்க வேண்டும்' என கோருகின்ற போது அரச பொறுப்பில் நிர்வகிக்கப்படும் ஜனவசம, எஸ்.பி.சி தோட்டங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. தனியார் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளை முந்திக்கொண்டு அரச பொறுப்பில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் 'அவட்குரோவர்' முறையை அறிமுகம் செய்துவிட்டன. இப்போது அவை குறித்து கேள்வி எழுப்புகையில் எஞ்சியுள்ள தோட்டங்களையும் விரைவில் 'அவுட்குரோவர்' முறைக்கு மாற்றுவதையே அவர்கள் இலக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது தெரிய வருகின்றது.

எனவே, எந்த பக்கம் சுற்றினாலும் அவுட்குராவர் முறை நோக்கியே அடுத்த கட்டம் வந்துநிற்க போகின்றது. இப்போது அவுட்குரோவர் முறை என்பதன் ஊடாக அல்லது அதன் பேரில் சிறு தேயிலைத் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்படுகின்றன. அத்தகைய கம்பனிகள் 'பயோ டீ' எனப்படும் செயற்கை உரங்கள் , மருந்துகள் அற்ற முறையில் இயற்கை உரம் மட்டும் களையகற்றும் முறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த தேயிலை உற்பத்திப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்றது. இவர்கள் க்ளைபோசைட் பாவிப்பதில்லை. எனவே, பெருந்தோட்டங்களில் 'க்ளைபோசைட்' பாவனை என்பது கட்டாயம் இல்லை. 

தேயிலைக் கைத் தொழிலை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறோம் என்கிற திட்டவட்மான நடைமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டியள்ளது. அவுட்குரோவர் முறை நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள் பக்கத்தில் இருந்து எழும்பக்கூடிய பிரதான கேள்வி 'புல்லுவெட்டுபர்களுக்கு' 'மருந்தடிப்பவர்களுக்கு', 'உரம் போடுபவர்களுக்கு' சம்பளம் இல்லாதுபோகும் என்பதாகும். ஏனெனில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறைக்கு அமைவாகவே அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்கின்றபோது அதற்குள் தனியாக புல்வெட்டுவோருக்கு சம்பளம் தீர்மானிப்பதில் சிக்கல் உருவாகும். மறுபறத்தில் பெண் தொழிலாளர்கள் கொழுந்து எடுப்பவர்களாகவும், ஆண் தொழிலாளர்கள் பராமரிப்பாளர்களாகவும் இருக்கின்ற பட்சத்தில் தேயிலைக் கைத்தொழில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் ஒரு தொழிலாகவும் மாற்றம் பெறும். இப்போதைக்கு கூட ஆண் தொழிலாளர்கள் அதிகம் தோட்டங்களில் இல்லை. 

எனவே தோட்டங்களை பராமரிக்க 'க்ளைபோசைட்' போன்ற நாசினிகள் தேவை என்று காரணம் சொல்லப்படுகின்றது. 'க்ளைபோசைட்' தடையின் ஊடாகவும் தேயிலை தேசிய ரீதியில் முக்கியத்துவம் உடைய விடயமாக மாறியிருக்கின்றது... 

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி


47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்


47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

முதல் நாள் அரங்கு 29.07.2017
நேரம் காலை 9- பகல் 12
மீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்
மலையகம் -ஆய்வு 
அளிக்கை கிழக்கு -ஆய்வு 
அளிக்கை வடக்கு -ஆய்வு 
அளிக்கை சிங்கள நாட்டாரியல்

பகல் 01- மாலை 04.00
சி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம் 
நாவல் /சிறுகதை/கவிதை
மலையகம்
வடக்கு
தென்னிலங்கை

மாலை 4.30 
அரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்


இரண்டாம் நாள் - 30.07.2017
நேரம் காலை 9- பகல் 12 
திருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்
மலையகம்
மட்டக்களப்பு
தென்கிழக்கு
வடக்கு
சிங்கள அரங்கியல்

பகல் 01- மாலை 03.00
கே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்

மாலை 03.30- 5.30
நடேசய்யர் அரங்கு - அரசியல்

மாலை 6.00 
ஆவணப்படம்

ஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்7

மல்லிகை ஜீவா ஒரு மகத்துவம் - தெளிவத்தை ஜோசப்



காலம் மெய்ப்பித்திருக்கும் ஒரு புதிய இலக்கியக்குரல்  ‘மல்லிகை ஜீவா என்றே பெரிதும்  அறியப்பட்ட டொமினிக்  ஜீவா’ வின் ஆத்மக்குரல். அதைத் தான் மகத்துவம் என்று குறித்தேன்.

மார்க்சியக் கலை இலக்கியக் கோட்பாட்டோடு  ஒன்றித்து நிற்பவர்கள், ஓரளவு சார்ந்து நிற்பவர்கள், மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் போன்று அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பரந்த நிலையில் இயங்குவதற்கான ஒரு அணியை மல்லிகையூடாகக் திரட்டிக்கொண்ட மகத்துவம் அவருடையது. அதை வளர்த்தெடுத்த மகத்துவம்  அவருடைய  மல்லிகையுடையது.  இதற்கான   காரணமே டொமினிக்  ஜீவா  முதலில்  ஒரு படைப்பாளி, எழுத்தாளர். 

‘எழுத்துலகில் இருந்தே மார்க்சியத்துக்கு வந்தவர் ஜீவா’ என்று குறிக்கும் பேராசிரியர் சபா ஜெயராசா ஜீவாவின்  எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ‘மலினமான இலக்கிய ரசனையில்  அமிழ்ந்து  விடாமல், எழுதத் தூண்டப் பெற்றமை  எழுத்தின் நெறிப்பாடு முதலியவற்றுக்கு விசையூட்டியது மார்க்சியம். சமூகவெளியில்  பட்டு அனுபவித்த அனுபவங்களே எழுத்துக்குரிய களமாக அமையும் நிலையில், சமூக நோக்குள்ள எழுத்தாளன்  அந்தத் தளத்தையே பலமாகப் பற்றிக் கொள்ள நேரிடும். ஆக்கத்துக்குரிய அழகியலும்  அந்தத் தளத்திலிருந்தே  மேலெழும் டொமினிக் ஜீவாவின்  படைப்பாக்கங்கள் அந்த எழுபுலத்திலிருந்தே  பாய்ச்சல் கொள்கின்றன. எழுத்துக்குரிய புலத்தெரிவிலும் காட்சித் தெரிவிலும் சாதிய ஒடுக்குமுறையே முன்னுரிமை பெறுகின்றது. ஒடுக்கப்பட்டோர் நிலையில்  அவரின்  சமூகப் புலக்காட்சியும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  மண்வாசனை மற்றும்  பேச்சுமொழி தொடர்பான கருத்தியல் உணர்வும்  நெடுங்கோட்டில் ஒன்றிணைந்து கொண்டன….  என்றெழுதுகின்றார்.

மல்லிகையின் முழுச்சுமையையும் டொமினிக் ஜீவாவே தாங்கி சுமந்தமையால் அவரின் படைப்பு  மலர்ச்சி  பின்னடைவுகளை எதிர்கொண்டது என்றும் குறிக்கின்றார் பேராசிரியர் சபா ஜெயராசா.

மல்லிகையூடான  இந்த பரந்த நிலை செயற்பாடுகள் மல்லிகை என்னும் சிற்றிதழ்  சுமையுடன்,  தோழர்களின்  கண்டன விமர்சனங்களின் சுமையும் ஜீவாவின்  தோள்களையும் மனத்தையும் அழுத்தின என்றாலும் வளர்ச்சி தடைப்படவில்லை. அந்த வளர்ச்சியின் நீட்சியாகவே  மா.பாலசிங்கத்தின் மா.பா.சி கேட்டவை தொகுதியை வெளியிட்ட  புதிய பண்பாட்டுத்தளம் எஸ்.பொ.விற்கு சமர்ப்பணம் செய்துள்ளமையை நான் காணுகின்றேன்.

‘எஸ்.பொ.’வுக்கு இந்நூல் படையலாகும் போது உண்மையில் வீறுமிக்க அந்த வரலாற்றுக் காலத்துக்கான  போர்க்குணமிக்க மக்கள் அனைவரும், கூடவே அவர்களது பிரதிநிதிகளாக வெவ்வேறு தளங்களில் செயற்பட்ட ஆளுமைகள் எல்லோரும் மதிக்கப்படுகின்றார்கள். நினைவு கூரப்படுகின்றார்கள் என்பது பொருளாகும்’ என்று பதிகின்றார். கலாநிதி ந.ரவீந்திரன்.

இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் ஏடாகத் தொடங்கினாலும் ஈழத் தமிழ்ச் சிறுகதைத்துறைக்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய சுதந்திரன் பத்திரிகையிலேயே தனது முதற்கதையை எழுதியவர் டொமினிக் ஜீவா.

‘எனது  முதல் கதை  எழுத்தாளன்’  சுதந்திரனில் தான் பிரசுரமானது. அதன் அரசியல் கோட்பாடுகளில் எங்களுக்கு அன்றும் நம்பிக்கை  இல்லை, இன்றும் நம்பிக்கை இல்லை. எம்மை  எல்லாம் எழுத ஊக்குவித்த ஏடு அது’. (மூன்றாவது மனிதன் நேர்காணல் –1997).

ஒரு படைப்பாளியாக மேற்கிளம்பிய  ஜீவாவை  விஜய பாஸ்கரனின் சரஸ்வதி வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் ஜீவாவின் படத்தை சரஸ்வதியின் அட்டையிலிட்டு கௌரவித்தது. சரஸ்வதி  வெளியீடாக டொமினிக் ஜீவாவின்  “தண்ணீரும் கண்ணீரும்” சிறு கதைத்தொகுதியை1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது.

இந்த நூலுக்கான இலங்கை சாகித்திய மண்டலத்தின் புனைகதைகளுக்கான விருதை முதன் முதலாகப் பெற்று வரலாறு படைத்தவர் இவர். அத்துடன்  5 சிறுகதைத் தொகுதிகளின் சொந்தக்காரரான முதல்வரிசைப் படைப்பாளி இவர்.

இவருடைய சிறுகதை  நூல்களாக வெளிவந்துள்ளவை. தண்ணீரும், கண்ணீரும் – 1960, பாதுகை – 1962, சாலையின் திருப்பம் – 1965, வாழ்வியற் தரிசனங்கள்,· டொமினிக் ஜீவா சிறுகதைகள் – 1996 ஒரு படைப்பாளியாக எழுத்துலகில் கால் பதித்து, மல்லிகை என்னும்  சிற்றிதழை 1966  இல் தொடங்கி ஈழத்து தமிழ் சிற்றிதழ்  சாதனையாளராகத் தடம் பதித்து, மல்லிகைப் பந்தல்  மூலம்  நூல்  வெளியீட்டாளராகி  தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்களின்  உறவுப் பாலமாகத் திகழும் மல்லிகை ஜீவா ஒரு சகாப்தமே தான்.

90 ஐப் பிடித்துவிட்ட அவர் 100 ஐப் பிடிக்க வாழ்த்துவோம்.

நன்றி: வீரகேசரி (சங்கமம்)

உக்கிரமடைந்து வரும் மலையக மக்களின் வீட்டுத்தேவை - துரைசாமி நடராஜா


மலையக மக்களின் வீட்டுத்தேவை நாளுக்குநாள் உக்கிரமடைந்து காணப்படுகின்து. இதற்கான பரிகாரத்தை காணவேண்டிய தேவை மேலெழுந்திருக்கின்றது. இந்நிலையில் மலையக மக்களின் வீடமைப்பு கருதி முறையான திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். இத்திட்டங்கள் வெற்றிபெறுவதற்கு பலரினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதோடு மலையக அரசியல்வாதிகள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்கவும் வேண்டும்.

மலையக மக்கள் சுமார் இருநூறு வருட கால வரலாற்றினைக் கொண்டவர்களாக இந்நாட்டில் இருந்து வருகின்றனர். நாட்டின் அபிவிருத்தி கருதி இம்மக்கள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். தேசிய வருமானத்தில் கணிசமான தொகையினை இம்மக்கள் ஈட்டிக்கொடுத்து வருகின்றார்கள். எனினும் இம்மக்கள் உழைப்பிற்கேற்ப ஊதியம் இல்லாத நிலையிலும் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவு செய்யப்படாத நிலையிலும் பெரும் சிரமங்களுக்கும், சிக்கல்களுக்கும் மத்தியில் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. கம்பனியினரின் அடக்குமுறையினால் இம்மக்கள் நிலை குலைந்து போயிருக்கின்றார்கள். எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்து தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்ட கம்பனிகள் தொழிலாளர்களின் நன்மைகருதி உருப்படியாக எதனையும் செய்ததாக இல்லை.

நாளாந்தம் நெருக்குதல்களுக்கும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் எமது மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். இதற்கிடையில் வெளியார் உற்பத்தி முறையினை அறிமுகப்படுத்தி தொழிலாளர்களை மென்மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் முனைப்பில் கம்பனியினரின் காய் நகர்த்தல்கள் அமைந்திருக்கின்றன.

தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புகள் பழமை மிக்கதாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் கூட நீண்டகாலமாக இடம்பெறாதுள்ளன. லயத்துச் சிறைக்குள் தொழிலாளர்கள் முடங்கிப் போய்க் கிடக்கின்றார்கள். இதனால் இம்மக்களின் வாழ்வும் முடங்கிப் போனதாகவே காணப்படுகின்றது. ‘வீடு என்பது தனியே வெயிலுக்கான ஒரு ஒதுக்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் கூட. அங்கேதான் சமூக நாகரிகத்தின் அத்திவாரம் இடப்படுகின்றது. எனவே வீடு என்பது குறைந்த பட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம், குடிநீர் வசதி, கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும் வாசிக்க இடவசதிகளும், மின்சார வசதியும் தேவை. இத்தகைய அடிப்படை வசதிகள் ஆடம்பரமானவை அல்ல. சுகாதாரமான ஆரோக்கிய வாழ்க்கைக்கு இவ்வசதிகள் அத்தியாவசியமானவையாகும்’ என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். எனினும் மலையக மக்களின் லயன் குடியிருப்புகளில் இத்தகைய வசதிகள் காணப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வெளிவரும்.

தோட்ட லயன்களில் பல பொருத்தமற்ற அமைவிடங்களில் காணப்படுகின்றன. மலையடிவாரங்கள், கற்கள் நிறைந்த பிரதேசங்கள், சரிவான இடங்கள் எனப்பல இடங்களும் இதில் உள்ளடங்கும். பொருத்தமற்ற அமைவிடங்களில் லயன்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துக காணப்படுகின்றது. மண்சரிவுகள், கற்கள் உருண்டு விழுதல் போன்ற பல காரணிகளால் அனர்த்தங்கள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலத்தில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. இனியும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. பல லயன்களின் சுவர்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இப்போதோ எப்போதோ இடிந்து விழும் அபாயத்தை இந்த லயன்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. வாழ்வதற்கு பொருத்தமற்ற சூழ்நிலையைக் கொண்ட இந்த லயன் அறைகளில் தொழிலாளர்கள் வேறுவழியின்றி அச்சத்துடன் வாழ்ந்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பொருத்தமற்ற இடங்களில் வீடுகளை அமைக்க தோட்ட நிர்வாகம் காணிகளை வழங்கி இருந்ததாக கடந்த காலத்தில் தொழிலாளர்கள் கண்டனக்குரல் எழுப்பி இருந்தனர். இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிக்கும் ஒரு நிலைக்கு ஒப்பானதாகும் என்றும் இவர்கள் மேலும் கருத்துகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலைமை மாற்றப்பட்டு வீடுகளை அமைக்கும் பொருட்டு பொருத்தமான இடங்களில் காணிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இன்னும் சில இடங்களில் அனர்த்தம் ஏற்படக்கூடுமென்ற நிலையில் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு கோரப்படுகின்றார்கள். எனினும் அவர்களுக்கு மாற்றிடங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதனால் தொழிலாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. புதிய குடும்பங்கள் நாளுக்கு நாள் தோற்றம் பெறுகின்றன. எனினும் குடும்பங்களின் தொகைக்கேற்ப உரிய வீடுகள் காணப்படவில்லை. இதனால் லயன் அறைகளில் மட்டுமல்லாது தற்காலிக குடில்களை அமைத்துக் கொண்டும் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இத்தகைய தற்காலிக குடில்களிலும் பாதகமான விளைவுகள் அதிகமாகவே காணப்படுகின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமில்லை.

இன்னும் ஒரு சில லயன் அறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகளும் தோற்றம் பெறுகின்றன. குடும்ப வாழ்க்கையின் இனிமையும் சீர்குலைகின்றது. வீட்டுத்தேவை உரியவாறு பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக சுகாதார சீர்கேடுகள், கல்விநிலை பாதிப்பு, இயல்பு நிலை பாதிப்பு, உறவுகளுக்கிடையிலான விரிச்சல்கள் என்பனவும் தலைதூக்குகின்றன. 

தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வீட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. மாடி வீட்டுத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. வரவு, செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் வீடமைப்பு தொடர்பில் கூறப்பட்டிருந்தது. எனினும் வீடமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வளச்சியினைக் காணமுடியவில்லை. எல்லாம் மந்தகதியிலேயே சென்றுகொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சில வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க இந்தியா உதவும் என்று மலையக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி இருப்பது சிறப்பம்சமாகும்.  

மலையகத்தின் வீட்டுத்தேவை அதிகரித்துள்ள நிலையில் மலையக அரசியல் வாதிகள் கலந்து பேசி முறையான திட்டவரைவு ஒன்றினை முன்வைக்க வேண்டும். இதனை நிறைவேற்ற அரசாங்கம் மற்றும் ஏனைய நாடுகள், நிறுவனங்களின் உதவியினையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி

ஞானசாரருக்கு இந்தியா உதவி!? – என்.சரவணன்


தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதால் தான் தான் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறிவந்த ஞானசார தேரர் இப்போது நீதிமன்றத்துக்கு மிடுக்குடன் வந்து பிணையும் பெற்று நீதித்துறையையும், நீதிகோரியவர்களையும் கேலி செய்யும் வகையில் சிரித்துக் கொண்டு வெளியேறியக் காட்சியைக் கண்டோம்.

ஞானசார தேரோ பௌத்த மத போதனைகளையும், பௌத்தத் மத உயர்பீடங்களையும் சங்கடப்படுத்தும் வகையில் அவரின் நடவடிக்கைகள் கட்டுமீறி செல்வதாக பல பௌத்தத் தலைவர்களே எச்சரித்திருந்தாலும் பௌத்த உயர் பீடங்களின் ஆசீர்வாதமும், பல இடங்களில் ஆதரவும், அனுசரணையும் கூட இருந்தே வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் கடந்த 20ஆம் திகதி ஊடக மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை இருக்கிறது.


சியம் நிக்காயவின் அஸ்கிரித் தலைமையின் நிறைவேற்றுக்குழு எடுத்த அந்த தீர்மானத்தில்
  • தாய் நாட்டுக்கும், சிங்கள இனத்துக்கும், பௌத்த சாசனத்துக்கும் சிக்கல் நேரிடும்போதெல்லாம் பௌத்த பிக்குகள் உயிரைக் கொடுத்து சரிசெய்ய முற்பட்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது நேர்ந்துகொண்டிருப்பவற்றை பார்த்துக்கொண்டு அமைதியாக எங்களால் இருக்க முடியாது. அசட்டை செய்ய முடியாது.
  • ஞானசார தேரரின் வெளிப்பாடுகளில் குறைகள் இருந்தபோதும் அவர் முன்வைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து தீர்ப்பதற்குப் பதிலாக அந்த சம்பவங்களைக் காரணம் காட்டி இடதுசாரிகளாக தங்களைக் காட்டிக்கொள்வோரம், பௌத்த சூழலில் வளர்ந்து ஆளான அரசியல்வாதிகளும், அமைப்புகளும் பிக்குமாரை மோசமான வார்த்தைகளாய் விமர்சித்து தூற்றி, பிக்குமாரின் பெயர்களைக் குறிப்பிட்டு பேசுகிறார்கள். பிக்குமார்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் உரிமை வயதில் மூத்த பிக்குமாருக்கு மட்டும்தான் உண்டு.
  • இனவாதத் தொனியில் கருத்துவெளியிடும் சில அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு அவர்களுக்கு பதிலளிக்க முயலும் பிக்குமார்களை நிறுத்துவதற்கு முனையும் அரசாங்கத்துக்கு எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • இதனால் எதிர்காலத்தில் நேரவிருக்கும் விபரீதங்களுக்கு அரசாங்கமே பொறுபேற்க நேரிடும்.
  • பிக்குகளின் பிரச்சினையை பேசித் தீர்க்காமல் சட்டத்தைக் கொண்டு ஒடுக்க முயல்வது வருந்தத்தக்கது.

சங்க சபை மகாநாயக்கவின் அறிக்கையும் இதற்கு நிகராகவே இருக்கிறது. கடந்த காலங்களில் வட்டறக்க விஜித போன்ற வயதில் மூத்த பிக்குவை பெயர் கூறியும், பற நாய், பேய் என்றெல்லாம் மோசமான வார்த்தைகளாலும் பகிரங்கமாக ஞானசாரர் திட்டும் போது இந்த பௌத்த சங்க சபைகள் வெறுமனே கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தோம்.

வாரியபொல சுமங்கல ஹிமி போன்ற வரலாற்றுப பாத்திரங்களைப் போன்றே ஞானசார தேரரும் இயங்கி வருவதாகவும் அரசாங்கத்தைக் கண்டித்தும் பொலன்னறுவ பிரதான பௌத்த சங்க தலைவர் உடுகம தம்மானந்த ஹிமி 20ஆம் திகதி ஊடக மாநாடு நடத்தி தெரிவித்தார்.

ஞானசாரரின் கருத்துக்களுடன் உடன்பாடு இருப்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை அப்பட்டமாக இவர்கள் யார் பக்கம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

பிக்குமாரை வெறுப்புமிழும் பேச்சுக்களுக்கு எதிராக ஐ.தே.க கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தான் மேற்படி பௌத்த தலைவர்களின் ஊடக மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த அறிக்கையில் ஐ.தே.க ஆரம்பத்திலிருந்தே ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே இயங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் அப்படி ஒரு “மதச்சார்பற்ற” பிரகடனத்தை எங்கும் கண்டதாகத் தெரியவில்லை.

பௌத்த பிக்குமார் பௌத்த மதத்துக்கு சார்பாக பேசுவதைக் கூட ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் கூடவே சிங்கள இனத்தையும் சேர்த்துக்கொண்டு “சிங்கள பௌத்த” சார்  நிலை எடுக்கும் போது இவர்கள் பௌத்தர்களாக எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எலவே செய்கிறது. எஞ்சிய 2500 ஆண்டுகளுக்கு பௌத்தத்தை பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்கிற ஐதீகம் நிலைபெற்றுவிட்டது. 

தென்னாசியாவிலும், தென் கிழக்காசியாவிலும் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சண்டையும், முறுகலும் மேலும் மேலும் வலுத்தவண்ணமே இருகின்றன. அதன் வேளை இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்தர்களுடன் இந்து அமைப்புகள் பலவும் கைகோர்ப்பதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் ஞானசார தேரருடன் கைகோர்த்துள்ள இந்து அமைப்பைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். தற்போதைய பி.ஜே.பி அரசாங்கத்தின் பிரதமர் மோடியின் கடந்த மாத வெசாக் நிகழ்வுக்கான இலங்கை விஜயம் வெறும் தற்செயல் அல்ல.

ஞானசார தேரரின் நடவடிக்கைகளின் பின்னால் இந்திய உளவுச் சேவையின் பாத்திரமும் இருப்பதாக பல்வேறு ஐயங்கள் நிலவுகிற இந்த வேளை. இந்து மகா சபை (Hindu Mahasabha Loktantrik) – லோக்தந்றிக் என்கிற ஒரு இந்துத்துவ தீவிரவாத அமைப்பு கடந்தவாரம் இந்திய மத்திய அரசாங்கம்  தலையிட்டு “ஞானசார தேரரை காப்பாற்ற வேண்டும்" என்று உள்துறை அமைச்சுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் நிர்பந்தத்தினால் ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்தி சர்ச்சைக்குரிய “கோட்சே” என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியவரே இந்து மகா சபையின் தலைவர் டொக்டர் ராய். அந்த அமைப்பு பாரதீய ஜனதா கட்சியின் ஒரு திரைமறைவு முன்னணி அமைப்பு என்கிற குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்கின்றன.

அசின் விறாத்துவை போதுபல சேனாவின் மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக அழைத்து வந்த போது வரவேற்கும் ஞானசாரர்
இதே வேளை மியன்மாரிலுள்ள பௌத்த தீவிரவாத அமைப்பான 969இன் தலைவர் அசின் விறாத்து பேச்சுகளின் மூலம் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை ஒரு வருடகாலத்துக்கு தடை செய்த்திருக்கிறது அந்த அரசு. அங்கிருக்கும் வேறு பல பௌத்த பீடங்கள் அரசின் அந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.

10.02.2010 அன்று அஸ்கிரி பிரிவு மாத்திரமல்ல மல்வத்த, ராமக்ஞ, அமரபுர போன்ற நிக்காயக்கள் ஒன்று சேர்ந்து சரத் பொன்சேகாவை கைது செய்தது தவறு என்றும், கண்டித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கையை பெப்ரவரி 18  சங்க சபை கூடி எடுப்பதாகவும் அறிக்கை விட்டார்கள். வரலாற்றில் இப்படி அனைத்து சங்க பீடங்களும் ஒரு சேர கூடி முடிவெடுத்த சந்தர்ப்பங்கள் குறைவு. குறிப்பாக மன்னர் வரம்புமீறி செயல்படுகின்ற வேளைகளில் அப்படி கூட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாகவே மிரட்டல்கள் பறந்தன. தொலைபேசி எச்சரிக்கைகள் செய்து, தமது பினாமி ஊடகங்களை வைத்து அந்த நிக்காயக்களின் உட்பிரச்சினைகளை கிளப்பினர். அதுமட்டுமன்றி மல்வத்த பட்டத்தின் கீழ் இருந்த 500 பன்சலைகளை அகற்றினர். இறுதியில் இந்த சங்கங்கள் சரணடைந்தன. பெப்ரவரி 16 அன்று “பாதுகாப்பு காரணங்களுக்காக” சங்க சபை கூடுவதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தது. இன்று வரை அப்படி ஒன்றும் கூட்டப்படவில்லை. மகிந்த காலத்தில் பௌத்த பீடங்கள் தமக்கு எதிராக செயல்படாத வண்ணம் அப்படித்தான் கோலோச்சினார்கள்.

ஞானசார தேரருக்கு பிணையில் அனுப்பப்பட்டது முந்திய வழக்குக்கே. வட்டரக்க விஜித தேரருடனான மோதல் பற்றியதும், அதற்கு நிகரான இன்னொரு வழக்குக்கும் தான் அவர் ஆஜராகினார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அந்த வழக்குகளுக்கு சமூகமளிக்க முடியாது என்று வழக்கறிஞர்கள் முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியபோது அதனை மறுத்து நீதவான் பிறப்பித்த பிடிவிராந்துக்குத் தான் ஞானசாரர் ஆஜரானார். ஞானசாரருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தரப்பு மறுக்காததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.


ஆனால் இம்முறை அவர் தேடப்பட்டு வந்தது அல்லாஹ்வை இம்சித்து பேசிய பேச்சுக்களின் மீது தொடரப்பட்ட வழக்குக்கே. தலைமறைவாக இருந்த அவரை தேடுவதற்கென்று நான்கு சிறப்புக் குழுக்களும் இயங்கிவந்தன. ஆனால் இன்னொரு வழக்கில் பிணையில் வெளிவந்த போது மற்ற வழக்குக்கு “தேடப்பட்டு வந்த” ஞானசாரரை ஏன் பொலிசார் கைது செய்யவில்லை என்கிற கேள்வி எழுகிறது. இலகுவாக நமட்டுச் சிரிப்புடன் போலீசாரைத் தாண்டி சென்ற ஞானசாரரை ஒன்று செய்யவில்லை பொலிசார். இந்த கேள்வியை இன்று பலரும் எழுப்பி வருகிறார்கள். நீதித்துறையின் “நீதி” யின் மீது நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகிறார்கள்.

இதைத்தான் அசாத் சாலி “இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை” என்கிறார். நல்லாட்சியின் கண்கட்டிவித்தை இனவாதத்தை திரைமறைவில் நன்றாகத் தான் பாதுகாக்கிறது. ஞானசாரரை பாதுகாப்பதில் சுதேச சக்திகளுடன் விதேச சக்திகளும் கூட்டுச் சேர்ந்துள்ளனவா என்கிற சந்தகம் எழாமல் இல்லை.

நன்றி - தினக்குரல்

ஞானசார தேரர் வாரியபொல தேரரின் பாதையிலேயே செல்கிறார் என்று கூறுகிறார் சங்க நாயக்கர்
"ஞானசார தேரரரின் கன்னித்தன்மையை சோதிக்கவேண்டாம்" என்கிற தலைப்பில் அவரின் பெட்டியை வெளியிட்ட "மவ்பிம" பத்திரிகை
ஞானசாரருக்காக கூடிய மகாசங்கத்தினர்

ட்ரையல் -அட்-பார் வழக்கு! என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 20
1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய நிலையில், அந்த செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலைத்திட்டத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) தொடங்கியது. கூடவே இலங்கையின் குடியரசு தினத்தைப் பகிஸ்கரிக்கும்படி கோருகின்ற ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். யாழ்ப்பாண பஸ் நிலையத்தின் அருகில் தந்தை செல்வாவின் தலைமையில் கூடி விநியோகித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி தாங்கிய பொலிசார் ஜீப்களில் வந்து வேகமாக பாய்ந்தனர். 

உங்களைக் கைது செய்யும்படி எங்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. எங்களுடன் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார். அனைவரும் ஜீப்களில் ஏறினர். ஆனால் தந்தை செல்வநாயகத்தைப பார்த்து நீங்கள் வர வேண்டாம் என்றார் இன்ஸ்பெக்டர். என்னையும் கைது செய்யுங்கள் என்று செல்வநாயகம் கூறியபோதும். உங்களை எங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார் இன்ஸ்பெக்டர்.

1976 மே 22 ஆம் திகதி தேசத்துரோகத் துண்டுப்பிரசுரங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை என்ற குற்றங்களின் பேரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சாவகச்சேரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.பொ.ரத்தினம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மு.சிவசிதம்பரம், பருத்தித்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் அவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்.  

இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பீலிக்ஸ் ஆர்.டயஸ் பண்டாரநாயக்க இதன் விளைவை கொஞ்சமும் எதிர்பாத்திருக்க மாட்டார்.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் கடுமையாக சோதனை செய்யப்பட்டன. பின்னர் இவர்கள் கொழும்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.

பின்னர் மு.சிவசிதம்பரம் விடுதலை செய்யப்பட்டாலும் மற்றைய நால்வரும் விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் தேசத்துரோகக் குற்றத்துக்காக 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைவாசம், சொத்துப் பறிமுதல் என்றெல்லாம் அரசு அறிவித்துக்கொண்டிருந்தது.

ட்ரையல் -அட்-பார் 
இந்த நால்வரின் மீதும் தேசத்துரோக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கு யூரிகள் அற்ற ட்ரயல் அற் பார் (Trial At Bar - TAB) முறையில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களுக்கு ஆதரவாக திருவாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு. திருச்செல்வம், மு. சிவசிதம்பரம் உட்பட 67 தமிழ்ச்சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மாத்திரமல்ல இலங்கையின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியற்சட்ட வரலாற்றிலும் ஒரு முக்கிய பதிவாக இந்த வழக்கு அமைந்தது.

அமிர்தலிங்கத்தை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் 'சா.ஜே.வே.செல்வநாயகமும் இலங்கைத் தமிழ்த் தேசியமும் (S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Tamil Nationalism 1947-77) என்கிறற அவரது நூலில் குறிப்பிடுகிறார்.

அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதால் வழமையான ஜூரர்கள் முன்னிலையில் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் தமிழ் ஜூரர்களை கோரும் உரிமை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இருந்தது. அந்த சிக்கலைத்  தவிர்ப்பதற்காக மூன்று நீதிபதிகள் விசாரிக்கும் ட்ரையல்-அட்-பார் விசாரணையை நடத்த அரசாங்கம் முடிவு செய்தது. இதை மேற்கொள்வதற்காக அவரசகால சட்டத்தின் 59வது விதியையும் அவசரமாக அரசாங்கம் திருத்தியது.

இதன்படி அன்றைய சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த வழக்கை 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஜே.எப்.ஏ. சூசா, ஆனந்த.ஜீ.டி சில்வா, அட்டர்னி ஜெனெரல் பதவி வகித்த சிவா செல்லையா ஆகியோர் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை 1976 ஜூன் 18 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் எஸ்.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம் மற்றும் கொழும்பிலுள்ள மிகவும் பிரபலம் பெற்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு ஏறத்தாழ 61 சட்டத்தரணிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகினர்.  அரசர் வழக்கறிஞரான (King’s Counsel - KC)  எஸ்.ஜே.வே.செல்வநாயகமும், ராணி வழக்கறிஞரான (Queen’s Counsel - QC)  ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து வழக்காடியமை முக்கிய நிகழ்வாகும். . அரசர் வழக்கறிஞர், ராணி வழக்கறிஞர் என்பது இலங்கை பிரித்தானிய முடியின் கீழிருந்த காலத்தில் ஒரு வழக்கறிஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரும் கௌரவம்.

செல்வநாயகத்தின் கீழ் இந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவாரா என்கிற ஐயம் பலருக்கும் இருந்தது. ஆனால் இந்த விடயத்தில் எந்தவித கௌரவமும் எவரும் பார்க்காமல் ஒன்று பட்டு மிகத் திறமையாக தமது திட்டமிட்டபடி வழக்கை புது கோணத்தில் திருப்பினர்.

அருகதையற்ற நீதிமன்றம் !?
குற்றம் சாட்டப்பட்டவர் இந்நீதிமன்றுக்கு இவ்வழக்கினை விசாரிக்கும் அதிகாரமே இல்லையென்ற நிலைப்பாட்டினை எடுப்பார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். அதன் அடிப்படையிலேயே தாம் வாதிடப்போவதாகவும் அவர்களுக்கு அறிவித்தார். இது அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

என்றாலும் நீதிமன்றத்துக்குரிய மரியாதையினை வழங்கும் முகமாக குற்றப்பத்திரிகையை ஏற்பதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற கிளார்க் குற்றப்பத்திரிகையை வாசித்துவிட்டு உரிய பத்திரங்களைக் கையளித்தார். நால்வரும் அதனை அமைதியாக பெற்றுக் கொண்டனர். நீங்கள் குற்றவாளியா? சுற்றவாளியா என்று முதலில் அமிர்தலிங்கத்தை நோக்கி கேட்கப்பட்டது. அப்போது சில முக்கிய விடயங்களை வாதிடப்பட இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ போவதில்லை என்று குறிப்பிட்டார் ஜீ. ஜீ.பொன்னம்பலம்.

இதற்குப் பதிலளித்த சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்களை மறுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், குற்றவாளியா, சுற்றவாளியா என்பது பற்றி சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். எதிரி தான் குற்றவாளியா சுற்றவாளியா என்று சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நீதிமன்றம் உருவாவதற்கு அடிப்படையான அவசரகாலச் சட்டவொழுங்குகளின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்துவதனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ தேவையில்லை என்றார்.  இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரான அமிர்தலிங்கம் ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்ற காரணத்தை நீதிமன்றத்துக்குச் சொல்வதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றார்.

எதிரி எதையும் கூறத்தேவையில்லை. அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. என்றார். அமிர்தலிங்கமும் ஏனைய மூவரும் குற்றவாளிக் கூண்டில் ஏறியதும் அமிர்தலிங்கம் இந்த விடயங்களை முன்வைத்தார்.
  1. முதலில் இந்த நீதிமன்றத்தை அமைத்த அவசரகால சட்டமே செல்லுபடியாகாது.
  2. இந்த நீதிமன்றமே அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. முதலில் 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியற்றது;
ஆகவே எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை குற்றவாளியா சுற்றவாளியா என்பது எமக்குத் தெரியாது என்றனர். அந்த அடிப்படையில் வாதிடப் போவதாக அறிவித்தார் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.

முதலில் அவர்களை பிணையில் விடுவிக்கும் கோரிக்கையை வென்றெடுத்தனர். நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர். ஜூலை 12 அவரசகால சட்டம் ஏன் செல்லுபடியாகது என்று வாதிட்டார்.

முதலாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார்.


அரசுக்கு கொடுத்த அதிர்ச்சி
நடைமுறையிலிருக்கும் அவசரகால சட்டத்தை 1972 மே 15 ஆம் திகதி கவர்னர் ஜெனரலின் பிரகடனத்திற்கேற்ப நடைமுறைக்கு வந்தது. அதாவது மே 22 குடியரசு அரசியலமைப்பு வருவதற்கு முன்னர். சோல்பரி திட்டத்தின் கீழ் அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு இந்நிலையை மாற்றிவிட்டது. 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வது பற்றி தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு மாற்றியது. பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யலாம்.

1972 மே 15 அன்று செய்யப்பட்ட அவசரகாலப் பிரகடனமானது பிரதமரின் ஆலோசனையின்படி செய்யப்படவில்லை. ஆகவே, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததும் மீண்டும் புதிதாக பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். அதற்கேற்ப அவசரகால சட்டம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை என்பதால் நடைமுறையிலுள்ள அவசரகால சட்டம் செல்லுபடியற்றதாகும்.

ஆகவே, அவசரகால நிலையின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து சட்ட ஒழுங்குகளும் கூட செல்லுபடியற்றவை என்பதுடன் எவ்வித சட்ட வலிமையும் அற்றதாகும் என்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதத்தை முன்வைத்தார். அதன் அடிப்படையில் இந்நீதிமன்றமும் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் உருவானதால், இந்நீதிமன்றமும் செல்லுபடியற்றது என்றும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சட்டவிரோதமானவை என்றும் வாதிட்டார் அவர்.

அடுத்தது 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு செல்லுபடியற்றது என்கிற வாதத்தை முன்வைத்தார் எம்.திருச்செல்வம்..

சோல்பரி அரசியலமைப்பின் 49வது சரத்தையும் சுட்டிக்காட்டி அதன் பிரகாரம் அந்த யாப்பைத் திருத்துவதற்கு மட்டுமே இடமுண்டு. முற்றாக மாற்றுவதற்கு அதிகாரமில்லை. ஐக்கிய முன்னணி அரசாங்கமோ இதனை மாற்றுவதற்கு மக்கள் ஆணையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தாலும் அப்படியொரு ஆணையை பெற்றுள்ளதா என்பது சந்தேகம் என்று வாதிட்டார். புதிய அரசியலமைப்புத் திட்டமொன்றை ஆக்கப்போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபோதும் மக்கள் மத்தியில் அதனை ஒரு பிரதான விடயமாக பிரசாரத்தின் போது கொள்ளவில்லை. அதற்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தையும் அது பெறவில்லை. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் சமஷ்டியையே ஏற்றுள்ளனர் என்று வாதிட்டார் திருச்செல்வம்.

வழக்கு விசாரணையும் முடிவடைந்து, 1976 செப்டம்பர் 16 அன்று 67 பக்கங்களைக் கொண்ட அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலே எழுப்பப்பட்ட முதலாவது பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்று ஏற்றுக்கொண்டது.


அதன்படி அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்படாமையினால், அதன்கீழ் உருவான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செல்லபடியற்றது என்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த நால்வரையும் கைது செய்வதற்கு எந்த சட்டத்தைப் பயன்படுத்தியதோ அந்த அவசரகால சட்டமே செல்லுபடியற்றது என்கிற அதிரடித் தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம்.

அந்த அவரசகால சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்நீதிமன்றம் முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன். இதன் நிமித்தம் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்று, முதலாவது குடியரசு அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மை பற்றி ஆராயும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு இல்லை எனத் தீர்ப்பளித்து நான்கு பேரையும் விடுவித்தது.

அந்த வகையில் நீதிமன்றமும் முறைப்படி அமைக்கப்படாமையால் இரண்டாவது வாதமான அரசியலமைப்பின் செல்லுபடியற்றத்த்தன்மை குறித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமும் தமக்கு இல்லை என்று என்றும் அறிவித்தனர்.

தீர்ப்பை மாற்றிச் சொல்!
இந்த தீர்ப்பு அரசாங்கத்துக்கு மிகப் பெரும் அதிர்ச்சியையும், பேரிடியையும் கொடுத்தது.  பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையில் இது பற்றி ஆராய ஒரு உயர்மட்ட மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.

அவசரகால நிலை செல்லுபடியாகாது என்ற தீர்ப்பால் ஏற்கெனவே அவசரகால சட்டவொழுங்குகளின் கீழ் பல வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில், அந்த வழக்குகளும் கைவிடப்பட வேண்டி வரலாம். அவசரகால நிலை செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்தால் நீதிமன்றம் ஏற்கெனவே அச்சட்டத்தின் கீழ் வழங்கிய தீர்ப்புகளும் செல்லுபடியற்றதாகிவிடும்.  இது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது. சட்டமா அதிபர் சிவா பசுபதி உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய சிக்கல்களையும் நீதியரசர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்தத் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான மேன்முறையீட்டை சட்ட மாஅதிபர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செப்டம்பர் 15 அன்று செய்தார்.
சட்டமா அதிபர் சிவா பசுபதி

பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன், நீதியரசர் ஜீ.ரீ.சமரவிக்ரம, நீதியரசர் வீ.ரீ.தாமோதரம், நீதியரசர் நொயெல் தித்தவெல, நீதியரசர் டபிள்யூ.டீ.குணசேகர ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாற்றியமைத்தது. நீதிமன்றம்; குறித்த மேன்முறையீட்டை விசாரித்து, அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது என்றும், அது செல்லுபடியானது என்றும் தீர்ப்பளித்ததுடன், மேல் நீதிமன்றமானது குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கப் பணித்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்தில் 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நால்வர் மீதான வழக்கை மேற்கொண்டு தாம் நடத்தப்போவதில்லை என்று சட்ட மாஅதிபர் நீதிமன்றிற்கு அறிவித்தார். அதன்படி அமிர்தலிங்கம் உட்பட நான்கு தலைவர்களும் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க அரசு சட்ட வாய்ப்புகளைத் தேடித் தேடி பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அந்த சட்டமே முதலில் முறைகேடானது என்கிற வாதத்தை அதே நீதித்துறையைப் பயன்படுத்தி வெற்றி கொண்டனர் தமிழ்த் தலைவர்கள். ஆனால் அகிம்சா வழி அரசியல் முயற்சிகளையும்,  சட்ட வழியிலான முயற்சிகளையும் மேலும் சீண்டிப் பார்க்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டது. 1977 தேர்தலும், ஐ.தே.க.வின் வெற்றியும், அதனைத் தொடர்ந்த கலவரமும் அடுத்தடுத்து இந்த நாடு சந்திக்கப் போகும் விபரீதங்களுக்கு கட்டியம் கூறின.

துரோகங்கள் தொடரும்...
குறிப்பு
இந்தத் தொடர் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றைக் கூறுவதற்கான தொடர் அல்ல. அது பற்றி பல நூல்கள் வெளிவந்திருப்பதால். சில விடுபட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் இருக்கும் விடயங்களையும் உள்ளடக்கி “நம்பிக்கை துரோகங்களையும்”, “உடன்பாடு மீறல்களையும்”மையப்படுத்தி தொகுப்பதே   இலக்கு. அப்படி கூறும்போது தவிர்க்கமுடியாதபடி பல்வேறு நிகழ்ச்சிகளையும் கோர்வையாக தாண்டியே ஆக வேண்டியிருக்கிறது. மையப் புள்ளியில் மாத்திரம் கவனத்தைக் குவித்து சுருக்கும் வகையில் இனி வரும் தொடரில் நிகழ்சிகளை காலவரிசைப்படி தொகுத்துக் கூறும் அட்டவணையுடன் வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.
நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates