Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை!

கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு பற்றி பேசப்படுகின்ற போதிலும் பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனம் எடுக்கப்படுவதில்லை என்று உழைக்கும் பெண்கள் முன்னணியின்; பொதுச்செயலாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான திட்ட முகாமையாளருமான யோகேஷ்வரி கிருஷ்ணன் தெரிவித்தார். தோட்டப்பகுதிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தகுதியான பெண்கள் இருந்தாலும் அவர்களின் திறமைகள் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது கருத்துக்கள் இங்கு நேர்காணலாக பதிவாகின்றது.
கேள்வி:மலையக மக்களின் சம்பள உயர்வுப் போராட்டம் வெற்றி காணாமல் ஒரே இடத்தில் ஸ்தம்பிதமடைந்துள்ளதன் காரணம் என்ன?
பதில்:பிரதான தொழிற்சங்கம் ஒன்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பள உயர்வு கோரிக்கையாக முன்வைக்கும் போது எல்லா தொழிற்சங்கங்களும் அந்த கோரிக்கைக்கு பின்னால் அணி திரளும் போக்கு தான் காணப்படுகின்றது. ஆனால் இன்றுள்ள வாழ்க்கைச் செலவினைக் கவனத்திற் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமான கோரிக்கை முன்வைக்கப்படுவதில்லை.

இதனை அவதானித்த நாம் சில பொருளாதார வல்லுனர்களுடன் இணைந்து இவ்விடயம் தொடர்பில் ஒரு ஆய்வை செய்துள்ளோம். அதன்படி தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்தது 1108 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இன்று உலக அளவில்; ஒரு தொழிலாளிக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டுமாக இருந்தால் அதனை எப்படி கணிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறைகளை பின்பற்றி தான் இந்த தொகை கணிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த விடயத்தினை எல்லா தொழிற்சங்கங்களுக்கும், தேயிலைத்தோட்ட முகாமைத்துவங்களுக்கும், சிவில் சமூகங்கள் மற்றும் கொள்கை வகுப்போர் உட்பட அனைவருக்கும் ஆவணமாக வழங்கியிருந்தோம். இந்த ஆய்வின் அடிப்படையில் நியாயமான சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைக்குமாறு அவர்களை கேட்டிருந்தோம்.
கூட்டு ஒப்பந்தத்தின் படி சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகளுக்கு தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் செல்லும் போது எந்தவிதமான விஞ்ஞானபூர்வமான ஆவணங்களும், தரவுகளும் இல்லாமல் தான் செல்கின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தினை இந்த இந்த காரணங்களுக்காக தான் கேட்கின்றோம் என்று நியாயபூர்வமான ஆதாரங்களை முன்வைக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தினைப் பார்த்தால் அவர்கள் உலக சந்தையில் தேயிலை விலை நிலவரங்கள், ஏற்றுமதி இறக்குமதி தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வந்து ஆதாரபூர்வமாக விடயங்களை முன்வைத்து எங்களால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்கின்றனர். தொழிற்சங்கங்கள் நியாயபூர்வமான ஆதாரங்கள் எதுவுமின்றி வெறுமனே வாய்ப்பேச்சில் ஈடுபடுவதால் அங்கு தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் எடுபடாத நிலைமையே உள்ளது.
கேள்வி:தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தாமைக்கான காரணம் என்ன?
பதில்:தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் காத்திரமான விதத்தில் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்து பேரம் பேசல் வேண்டும். ஏனெனில் இன்று எமது தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து தொழில் உரிமைகளும் தொழிற்சங்கங்களின் கடந்த கால போராட்டங்களின் விளைவாகவே கிடைத்தவையாகும்.

எனவே வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் பெறப்பட வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். இன்று இந்நாட்டின் தேசிய வருமானத்தினை எடுத்துக் கொண்டால் 13 வீத நிரந்தர வருமானத்தினைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரு தொழிற்துறையாக தேயிலை உற்பத்தி உள்ளது.

இந்த தொழிலாளர்களின் சம்பளம், கௌரவமான தொழிற் சூழல் மற்றும் தேயிலை தொழிற்துறைக்கு சாதகமான விடயங்களை சரியாக தக்க வைத்துக்கொண்டால் தான் தேயிலை உற்பத்தியை நீடிக்க முடியும். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்துகொண்டு செல்ல அடிப்படை காரணம் தேயிலை உற்பத்தியாகும். ஆனால் இந்த மக்களின் வாழ்வாதாரம் அவர்களின் முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் அது திருப்திகரமானதாக இல்லை.
கேள்வி:மலையக தோட்டப்பகுதிகளில் பெண்கள் அதிகமாக பங்களித்து வரும் நிலையில் அவர்களின் தொழில் உரிமைகள் எவ்வாறு உள்ளன?
பதில்:தேயிலைத் தோட்ட தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்களாவர். இன்னும் தேயிலைப் பறிக்கும் பெண்கள் பயன்படுத்தும் கூடையின் பாரம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது. இவ்விடயம் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அந்த விடயம் மாற்றப்படவில்லை. ஓய்வாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு ஓய்வு அறைகள் இல்லை.

வீட்டினை தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் இந்த வேலையை செய்கின்றனர். அதிகமாக பெண்கள் வேலை செய்கின்ற நிலையில் அவர்களுடைய சுகாதாரம் இதர சேமநலன்கள் குறித்து கம்பனிகளும், அரச நிர்வாகங்களும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவற்றில் திருப்திகரமான மாற்றங்கள் இன்னும் வரவில்லை. எல்லா தொழிற்துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் கௌரவமான தொழில் சூழல், சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கூறியுள்ளது.

ஆனால் இவ்விடயம் மலையக பெண் தொழிலாளர்கள் விடயத்தில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களில் பெண்கள் தலைவிகளாக இருக்கின்றனர். பெண் கங்கானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். தலைமை மேற்பார்வையாளராக ஒரு ஆணை நியமிக்கும் போது கல்வி அறிவு மற்றும் இதர தகுதிகள் பற்றி கருத்திற் கொள்ளப்படுவதில்லை.

ஆனால் பெண்களை நியமிக்கும் போது மட்டும் கல்வி தாரதரம் மற்றும் இதர நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவர்களைத் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றனர். கட்சிக் கூட்டங்கள் நடத்தும் போதும் தேநீர் தயாரித்தல், இடத்தை சுத்தப்படுத்தல், மக்களை ஆட்திரட்டல் போன்ற மரபுரீதியான வேலைகளே அவர்களுக்கு வழங்கப்படுவதனைக் காணலாம்.

தற்போது மலையகப் பெண்கள் அதிகளவில் வெளிநாட்டில் பணிப்பெண்களாக வேலை செய்ய செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. விழிப்புணர்வு இன்மையினால் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாடிச் சென்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கேள்வி:பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?
பதில்:எமது நிறுவகம் 1990 ஆம் ஆண்டு முதல் மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்புரை, பரப்புரை உட்பட பலவிதமான வேலைத்திட்டங்களை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் தொழிலாளர்கள் இன்று வீதியில் இறங்கி போராடுவதே ஒரு பெரிய மாற்றம் தான். சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்கள் யுவதிகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை அவர்களாகவே இம்முறை நடத்தியிருந்தனர்.

தொழிற்சங்க பேதங்களின்றி பொதுவான நோக்கோடு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தமை வரவேற்கத்தக்கதாகும்.

ஆரம்பத்தில் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கவில்லை. சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்களை மட்டும் நம்பிப் பயனில்லை என்று மக்கள் கருதுகின்றனர். கல்வி ரீதியிலான முன்னேற்றங்கள் ஓரளவு உள்ளன. ஆனால் வாழ்வாதாரம் சம்பந்தமான விடயங்களில் தான் திருப்திகரமான மாற்றம் வரவில்லை. இதற்கு காரணம் நில உரிமையும் வீட்டு உரிமையும் அவர்களுக்கு இன்மையாகும். இதனால் மேலதிகமான வருமானத்தை அவர்களினால் பெற்று வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியவில்லை.
கேள்வி:மலையகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர் யுவதிகள் மலையகப்பகுதிகளிலிருந்து வெளியேறி தனியார் நிறுவனங்களிலும், கடைகளிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எவ்வாறான தொழில் உரிமைகளை அனுபவிக்கின்றனர்?
பதில்:சம்பளம் குறைவு, சமூகத்தில் அங்கீகாரம் இன்மை, தோட்டத்தொழிலாளர்களாக இருப்பது கௌரவமில்லை என்று இளைஞர் யுவதிகள் கருதுகின்றனர். தொழில் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வின்மை காரணமாக தொழில் உரிமைகள் மீதான அக்கறையற்றும் உள்ளனர். கடை காரியாலய பணிமனைச் சட்டம் தனியார் துறையினருக்கு இருக்கின்றது.

அதில் எல்லா உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தொழில் தருனர்கள் இந்த உரிமைகளை வழங்குகின்றார்கள் இல்லை. எனவே அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை எங்கள் தொழிற்சங்கத்தில் இணைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு செய்வதனூடாக தற்போது நிறைய பேருக்கு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பன கிடைத்துள்ளன.
கேள்வி:மலையகத்தில் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
பதில்:ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட வேண்டும். அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும். இளைஞர் யுவதிகள் மத்தியில் திறன் தேர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் சிறப்புற்றால் எம்மை யாரும் அடிமைப்படுத்த முடியாது. அத்துடன் மூன்று மொழியிலும் தேர்ச்சி அவசியம்.

மேலும் பல பாடசாலைகளில் குடிநீர் பிரச்சினையும் கழிப்பறை பிரச்சினையும் உள்ளன. இது பற்றி யாரும் கவனம் செலுத்துவதில்லை. அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 5 முதல் 7 ஆயிரம் ரூபா வரை சம்பளம் பெறும் குடும்பங்களும் உள்ளன. அந்தளவு சம்பளத்தில் அவர்கள் எப்படி வாழ முடியும்? இவை அனைத்தையும் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் அரசாங்கமும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும். எமது மக்கள் பிரதிநிதிகள் பிறரில் சார்ந்திருந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ள நினைக்கக் கூடாது. அனைத்து வீடமைப்பு திட்டங்களிலும் வீட்டுரிமைப் பத்திரங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்ட வேளை வீட்டுக்கான கடனை மீள் செலுத்தியவர்களுக்கும் வீட்டுரிமை பத்திரம் வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்துப் பார்த்து அதனை கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

நேர்காணல் - பிரியதர்ஷினி சிவராஜா
நன்றி - தினக்குரல்

பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை - 7 - என்.சரவணன்

காலனித்துவ காலத்தில் மதம் மாற்றவர்களை மீண்டும் பழையபடி பௌத்தத்துக்கு வந்து சேர்க்கும் பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் நடத்தி முடித்தவர் அநகாரிக்க தர்மபால. மீண்டும் பௌத்தத்துக்கு மாறுவது மட்டுமன்றி பழைய கிறிஸ்தவ பெயர்களைக் கலைந்து பௌத்தப் பெயர்களை மீண்டும் சூட்டிக்கொள்ளும் ஒரு வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. அநகாரிக்க தர்மபால கூட தனக்கு சூட்டப்பட்டிருந்த காலனித்துவ அந்நியப் பெயரான டொன் டேவிட் ஹேவாவித்தாரன என்கிற பெயரை தர்மபால என்று மாற்றிக்கொண்டார். மற்றவர்களை மாற்றச்சொல்லி வற்புத்தினார். கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டிருப்பவர்களை கேலியும் செய்தார்.

கிறிஸ்தவ பெயர்களை மாற்றிக்கொள்வதும், மீண்டும் பௌத்தத்தை தழுவிக்கொள்வதும் ஒரு பேஷனாக மாறிய காலம் அது. அதன் மூலம் தம்மை சிறந்த தேசியவாதியாக காட்டிக்கொள்ளும் அடையாளமாக ஆகியிருந்த காலம். எனவே புதிதாக அரசியலுக்கு வந்து தேசியவாத அரசியலை மூலதனமாக ஆக்கிக்கொண்ட பண்டாரநாயக்க மாத்திரம் இதில் இருந்து எப்படி விலகிநிற்க முடியும். அவரும் மதத்தையும் மாற்றிக்கொண்டார். பண்டாரநாயக்க அங்கிலிக்கன் மதத்தைச் சேர்ந்தவர். பெயரில் சிங்களத்தனமும் இருந்தபடியால் பெயரை மாற்றிக்கொள்ள அவருக்கு அத்தனை அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவரின் உடை கலாசாசாரத்தையும் மாற்றிக்கொண்டார்.

லண்டனிலிருந்து வந்ததன் பின்னர் அவரின் அரசியல் நடவடிக்கைகளின் போது பௌத்த மத பெரும்போக்கு தேசிய அரசியலுடன் அவர் படிப்படியாக கலக்கத் தொடங்கினார்.

அவர் பௌத்த மதத்துக்கு மாறிவிட்ட தகவலை அவரது தகப்பானார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க கூட பின்னர் தான் அறிந்துகொண்டார். பண்டாரநாயக்க சில காலமாக கிறிஸ்தவ தேவாலயத்துக்குப் போகாமல் தவிர்ப்பதை அடையாளம் கண்டதன் பின்னர் தான் அறிந்துகொண்டார். ஒரு முறை தேவாலயத்தில் முக்கிய நிகழ்வொன்ருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்கவை அழைத்தபோது தான் பண்டாரநாயக்க

“டாடி, மன்னியுங்கள். நான் இப்போது ஒரு பௌத்தன்.” என்று பதிலளித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும் 1930களில் அவர் “நான் ஏன் பௌத்தனானேன்”  (Why I became a Buddhist) என்கிற தலைப்பில் விரிவான கட்டுரையொன்றையும் எழுதி வெளியிட்டார்.

பண்டாரநாயக்க தேசிய வெள்ளை ஆடை அணியத் தொடங்கிய கதையும் சுவாரசியமானது.
"நமது நாட்டில் பருத்தி உற்பத்தி செய்து நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் இதன் மூலம் நமது ஆடை நுகர்வுக்காக அந்நிய நாட்டுக்கு செல்லும் அதிகப்படியான பணத்தை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்கமுடியும்."
இப்படி கூறிய இளம் பண்டாரநாயக்க தனது கோர்ட், காற்சட்டை, டை, சப்பாத்து, தொப்பி மட்டுமன்றி அவர் தனது உணவு மேசையில் பயன்படுத்திவந்த கத்தி, முற்கரண்டி என்பவற்றை கைவிட்டுவிட்டு தேசிய உடையாக வெள்ளை வேஷ்டி சட்டையை அணியத் தொடங்கினார்.

கதருக்கு
வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த ஜெயராம்தாஸ் ஜயவர்த்தன என்கிற ஒரு மனிதரை அவர் சந்தித்தது பண்டாரநாயக்காவில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவதந்து. கதர் வெட்டியும் வெள்ளை பனியனும் உடுத்திக்கொண்டு வந்து சந்தித்த அவரிடம்,
“என்ன இப்படி ஒரு விசித்திரமான உடையை அணிந்து வந்திருக்கிறீர்கள்.” 
எனக் கேட்டார் பண்டாரநாயக்க
“நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நீங்கள் ஒரு தேசிய உணர்வுள்ளவர் என்பதால் உங்களை சந்திக்க ஆவலாக வந்தேன்... வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மகாத்மாகாந்தியின் ஆயுதங்களில் ஒன்றாக இந்த ஆடையை அவர் பயன்டுத்தினார். தமது நாட்டிலியே, சுதேசியர்களாலேயே கைத்தறியில் நெய்த கதர் உடையை பயன்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கினார். அவருக்கான உடையைத தயாரிக்க அவரே இராட்டினத்தில் நூல் நூற்தார். உள்நாட்டில் அதை தயாரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கைத்தறிகளை ஊக்குவித்தார்.”
என்றார் ஜயவர்தன.

முன்னர் அரச சேவையில் தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு கல்கத்தாவுக்கு சென்று மகாத்மா காந்தியின் பேச்சுகளைக் கேட்டு அங்கே ஆசிரமத்தில் இருந்து 1925 நாட்டுக்குத் திரும்பியதும் ஜயவர்தன ஒரு கைத்தறி நெசவாலையை ஆரம்பித்திருக்கிறார்.

இதெல்லாம் கேட்ட பண்டாரநாயக்க ஜயவர்தனவை ஒரு குருவாக மதித்தார். வெல்லம்பிட்டியவில் ஜயவர்தன நடத்தி வந்த ஆசிரமத்தில் பல இளைஞர் யுவதிகள் சர்வசாதாரண வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துக்கொண்டு பயிற்சிபெற்று வந்ததை பண்டாரநாயக்க கண்டார். அங்கே பண்டாரநாயக்கவும் இராட்டினத்தில் நூல் கோர்ப்பது, கைத்தறி பயன்படுத்தி துணிகள் செய்வதைக் கற்றுக்கொண்டார். இது நிகழ்ந்தது 1930இல். பின்னர் 1933 இல் அவர் “பட்டும் விவசாய உற்பத்தியும்” (චර්කය හා ගොයම් කෙත) என்கிற ஒரு சிறு நூலை எழுதினார். அதை நாடு முழுவதும் இலவசமாக விநியோகித்தார். அன்றிலிருந்து அவர் கோர்ட், சூட், தோப்பி அனைத்தையும் பகிரங்கமாக எரித்தார்.
பண்டாரநாயக்க கதர் அணிந்து...
ஒரு முறை இராட்டினத்தில் நூல் நூற்கின்ற ஒரு போட்டியைய ஜயவர்தன நடத்திய பொது அந்த நிகழ்வில் பண்டாரநாயக்க மேற்கத்தேய உடைகளை எரித்தது அந்நிகழ்வில் ஒரு அங்கமானது.

1928 இல் தித்தம்பஹுவ என்கிற இடத்தில் ஆரம்பித்த முதலாவது ஜவுளிக்கடை பின்னர் பல இடங்களில் முகவர் கடைகளைத் திறந்தார் ஜயவர்தன. பண்டரநாயக்காவின் தொகுதியில் மாத்திரம் பல கடைகள் திறக்கப்பட்டன. அம்பலங்கொடவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் தொடங்கப்பட்டது.

பண்டாரநாயக்க சில பிரதேசங்களில் கைத்தறி உற்பத்தி நிலையங்களையும் ஆரம்பித்தார். கொட்டால என்கிற கிராமத்தில் உள்ள ஒரு நிலையத்தில் அவர் அடிக்கடி சென்று கைத்தறி நெசவு செய்வது அவருக்கு பிடித்தமானது. இந்த நிலையத்தை ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது அவரால் திறக்கட்டிருக்கிறது.

பண்டாரநாயக்க அதன் பின்னர் சகல நிகழ்வுகளிலும் தேசிய உடையை அணிந்தார். தனது திருமணத்தின் போது இரு மணமக்கள் வீட்டாரும், வந்திருந்த கனவான்களும் மேற்கத்தேய உடையில் காணப்பட்டபோதும் மணமகன் பண்டாரநாயக்க தேசிய உடையில் காட்சியளித்தார்.

ஆனாலும் உடனடியாக முற்றாக கோர்ட் சூட் உடையை அவரால் கைவிட முடியவில்லை. தனவந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர், தமது குடும்பம் பாரம்பரியமாக கலந்துகொள்ளும் மேட்டுக்குடியினரின் நிகழ்வுகளில் அவர் கோர்ட் சூட்டை அணிந்து தான் சென்றார். அவரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது கோர்ட் சூட் அணிந்து தான் சென்றார். அவருக்கு ஒரு உயர் ரக செல்ல நாய் இருந்தது. வருடாந்தம் அந்த நாயை; தனவந்தர்களின் நாய்களை வைத்து நடத்தப்படும் போட்டியில் பண்டாரநாயக்க அழைத்துச் செல்வார். அப்போதும் அவர் கோர்ட் சூட்டுடன் போவதை தவிர்க்க இயலாததாக இருந்தது. இந்த இரட்டைத் தன்மையை பற்றி நேரடியாகவே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள்.

1959 இல் அவரின் தேசிய உடையை குத்திக்கொண்டு நெஞ்சில் பாய்ந்த தோட்டாக்கள்  அவரின் உயிரைப் பறித்தன. அந்த இரத்தக்கரை படிந்த அந்த தேசிய உடை இன்னமும் பண்டாரநாயக்க நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச்சடங்கில் அவருக்கு தேசிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது.

மொழிக்காக மன்னிப்பு
ஆங்கில மொழியில் உரையாடுவதை தவிர்த்து சிங்களத்தில் உரையாடுவதற்காக சிங்களத்தை வேகமாகக் கற்றார்.

பண்டாரநாயக்க தனது படிப்பை முடித்துக் கொண்டு 24.02.1925 அன்று இலங்கைக்கு வந்த போது அவருக்கு அளிக்கப்பட வரவேற்புக் கூட்டத்தில் அங்கு குழுமியிருந்தவர்களிடம் அவர் தனது சிங்கள மொழிப் பலவீனத்துக்காக வருந்துவதை இப்படி தெரிவித்தார்.
“முதலில் நான் உங்களோடு ஆங்கிலத்தில் உரையாற்ற நேரிட்டிருப்பதற்காக மன்னிப்பைக் கோருகிறேன். நீண்டகாலம் நாட்டைவிட்டு தூரத்தில் இருக்க நேரிட்டிருந்ததால் சிறப்பாக சிங்கள மொழியில் தொடர்ச்சியாக பேச முடியாமல் இருக்கிறது. அந்த குறைபாட்டை நான் கூடியவிரைவில் சரிசெய்துவிடுவேன். நான் உளமார இந்த விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் உங்கள் முன் இன்று சிங்களத்தில் உரையாற்ற முடியாது போனாலும் கூட என்னிடம் இருப்பது முழுமையான சிங்கள இதயமே என்பதை உங்களுக்கு உறுதியாக கூற விரும்புகிறேன்...”
ஒக்ஸ்போர்ட்டிலிருந்து திரும்பிய போது ஹொறகொல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு
பண்டாரநாயக்கவின் காலத்தில் தேசிய உடை, தேசிய மொழி, தேசிய பண்பாடு, தேசிய மதம், தேசிய உணவு, தேசிய வளம், தேசிய உற்பத்தி என பல மாற்றங்கள் பலப்படுத்தப்பட்டன என்பது உண்மை ஆனால் அந்த தேசியத்துக்குள் சிங்கள பௌத்தர்களைத் தவிர ஏனையோர் உள்ளடக்கப்படவில்லை என்பது தான் இங்கு நாம் கூற வரும் செய்தி. ஆங்கிலம் பேசும் குடும்பத்தில் வளர்ந்து பின்னர் சிங்களத்தில் பேச உறுதிபூண்டு, சிறந்த சிங்களப் பேச்சாளராக உருவானது மட்டுமன்றி, இறுதியில் சிங்கள "மொழித் தேசிய"வாதத்தை நிறுவி, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரும் அளவுக்கு அவர் சிங்களப் பற்றுறுதி கொண்டவராக ஆனார். அந்த மொழிக் குருட்டுத்தனத்தின் விளைவாக சிங்களவர்களுக்கு சிறந்த தேசியவாதத் தலைவராக ஆனார். ஆனால் இலங்கைக்கான தேசியவாதியாகத் தவறினார்.

தேசிய உடையைத் தேடி
இலங்கையர்களின் தேசிய உடை எது என்பது குறித்த தேடல் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியைத் தொடர்ந்து முனைப்பு பெற்றது. ஒருபுறம் சுதேசியம் பேசிய தேசியத் தலைவர்கள் மறுபுறம் ஆங்கிலேய மோகத்தில் இருந்தார்கள். அந்த பிரபுத்துவ குழாமினர் அரசியல் சீர்திருத்தத்தையே வேண்டி நின்றவர்கள். முழுச் சுதந்திரத்தில் நாட்டம் அற்றவர்களாக இருந்தவர்கள். அப்பேர்பட்ட பலர் இங்கிலாந்து சென்று பட்டம் பெற்று திரும்பி ஆங்கிலேய அரசில் சிவில் சேவைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, பேசும் மொழி அனைத்தும் மாறி இருந்தது.

தமது கற்கைக்காக சில வருடங்களையே அவர்கள் இங்கிலாந்தில் கழித்தாலும் அவர்கள் மேற்கத்தேய பாணியில் தமது நடத்தையையே இலங்கை திரும்பியதும் கடைப்பிடித்தார்கள். ஆங்கிலத்தையோ, அல்லது ஆங்கிலம் கலந்த சிங்களத்தையோ, அல்லது ஆங்கில பாணியில் சிங்களத்தை உச்சரிப்பதையும் கோர்ட்டுடன் வலம் வருவதையும் கௌரவமானது என்று தமது நடை உடை பாவனையில் காண்பித்தார்கள். தொப்பி அணிந்தார்கள். சிலர் கோர்ட் அணிந்து, காற்சட்டையும் அணிந்து அதற்கு மேல் வேஷ்டியை அணிந்து கொண்டார்கள். இவர்களைப் பார்த்து மக்கள் “வேஷ்டிக்குள் கனவான்” (රෙද්ද අස්‌සේ මහත්තයා) என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

அரசியலையும், ஜனநாயகத்தையும் மேற்கில் இருந்து கற்றுக்கொண்டு வந்து தமக்கான அரசியலை வகுக்க முயன்றவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் பௌத்த மறுமலர்ச்சிக்காலகட்டத்தைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கதிற்கூடாக சிங்கள பௌத்த தேசிய எழுச்சியோடு தம்மை ஈடுபடுத்தத் தொடங்கினார்கள். 

சிங்கள பௌத்த தேசியத்தை நிறுவும் பணியில் முன்னின்றவர்கள் இந்தியாவை முன்னுதாரணமாக் கொண்டு  அங்கு மகாத்மாகாந்தியால் முன்னெடுக்கப்பட்ட சுதேசிய இயக்கத்தால் கைத்தறியில் நெய்த கதர் ஆடையை அணியும்படி ஊக்குவிக்கப்பட்ட காலம். அதையே முன்னுதாரமாகக்கொண்டு சுதேசியத்தை வலியுறுத்திப் போராடிய இந்திய காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த வெள்ளைக் கதர் உடைகளை இலங்கையிலும் உடுக்கத் தொடங்கினார்கள்.
அநகாரிக தர்மபால
அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர போன்றோரும் கதர் ஆடைகளை உடலில் சுற்றிக்கொண்டனர். இதை அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டார்கள். 1893 இல் அமெரிக்காவில் சிக்காகோ மாநாட்டுக்கு விவேகானந்தர் சென்று அங்கு நடத்திய உரையைப் பற்றி அறிவோம். அந்த மாநாட்டுக்கு அநகாரிக தர்மபாலவும் சென்றிருந்தார். அவரின் உரையும் சிங்களத்தில் இன்றும் பேசப்படுகிறது. அந்த மாநாட்டுப் படத்தில் அநகாரிக தர்மபால வெள்ளைக் கதர் உடையை சுற்றிக்கொண்டபடி தான் கலந்து கொண்டிருந்தார் என்பதை அங்கு பிடிக்கப்பட்ட படத்தில் காண முடியும். அந்தப் புகைப்படத்தில் விவேகானந்தருக்கு பின்னால் அநகாரிக தர்மபால அமர்ந்திருப்பார். பிற்காலத்தில் பௌத்த காவி உடுக்கும்வரை வெள்ளைக் கதரைத் தான் தர்மபால அணிந்தார்.
தேசிய உடை இயக்கம்
அநகாரிக தர்மபாலாவின் சிந்தனைகளால் உந்தப்பட்டு பல்வேறு சிங்கள பௌத்த தொடங்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்த வரிசையில் “தேசிய உடை இயக்கம்” (ජාතික ඇඳුම් ව්‍යාපාරය National dress movement) என்கிற ஒரு இயக்கத்தை 1921இல் ஆரம்பித்தார் பீ.டீ.எஸ்.குலரத்ன. குலரத்ன அப்போது ஆனந்த மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்தார்.  இதே 1921 இல் தான் மகாத்மா காந்தியும் அரை உடை உடுத்த ஆரம்பித்தார்.

இந்த இயக்கம் குறித்து 31.05.1921 இல் வெளியான “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“தேசத்தின் புத்தெழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதை தாமதப்படுத்தவோ, பழைய நிலைக்கு கொண்டுசெல்லவோ முடியாமல் இல்லை. இன்றைய நிலையில் சிங்களவர்கள் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க முடியுமா?
நமக்கு தேசிய உணர்வுகள் இல்லாவிட்டால், சிங்கள இரத்தம் கொஞ்சம் கூட நமக்கு கலக்கவில்லை என்று பொருள். சிங்களவர்களின் இரத்தத்தில் கொஞ்சமாவது கலந்திருப்பதால் தான் இன்று தேசிய உணர்வு வளர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. தேசிய உணர்வு எழும் பொது தேசிய உடையும் அவசியம். பலர் இதைப் பற்றி நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர்.
ஐரோப்பாவிற்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாவை நாம் ஏன் கொடுக்க வேண்டும்? இது நமது தேசத்திற்கு பொருத்தமற்றது, ஆரோக்கியத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது, மற்ற நாடுகளிலிருந்து கேலி செய்யும் முட்டாள்தனமான வேடதாரிகளை உருவாக்குகின்ற விரும்பத்தகாத ஐரோப்பிய ஆடை.
காலுறை, டை, கொலர், டை பின், பூட் போலிஷ் கேட்டர், தொப்பிகள், காற்சட்டை, கோட்டுகள், வெஸ்ட் கோட், பொத்தான்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக நம் சிறிய நாட்டிலிருந்து 100 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலவிடப்படுகிறது. இதுவும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நாட்டின் மேட்டுக்குடிகளும், படித்தவர்க்களும் போடும் வேடத்தை நாட்டு மக்களும் கவர்ந்து நாடு முழுவதும் ஐரோப்பிய ஆடையால் புத்திஜீவிகள், படித்தவர்களே பீடிக்கப்படும் போது நாட்டு மக்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே பல்வேறு வகையான உடைக் கலாசாரம் பரவி நம்மை மேவுமலவுக்கு வளர்ந்து முழு நாடும் அதில் சிக்கியிருக்கிறது. இந்தச் சுமையிலிருந்து விடுதலையாவது நம்மெல்லோருடைய பொறுப்பு.”
இதற்கு குலரத்ன எழுதிய பதில் யூன் 14 அன்று வெளியானது. அதில் அவர்
“நமது முன்னோர்கள் அணிந்த பல்வேறு உடைகளில் இதைத் தான் அணியவேண்டும் என்று நம்மால் கூறமுடியாது. எனவே அதில் இதுதான் தேசிய உடை என்று தெரிவு செய்வது சிரமம். இப்போது பரிந்துரைத்திருக்கும் உடை தான் தேசிய உடை என்று உறுதியாக நான் கூறவரவில்லை. ஆனால் இது தேசிய உடையாக கருதக்கூடிய அளவுக்கு பொருத்தமான உடை என்றே கருதுகிறேன். காலப்போக்கில் மக்கள் மத்தியில் இது படிப்படியாக பாவனைக்கு வரலாம்.”
அதே பத்திரிகையில் “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் சிறிசேன இப்படி கூறுகிறார்.
“அந்நிய உடைகளில் திரிவது, அந்நிய பொருட்களை உபயோகிப்பது, அந்நிய மொழியைப் பேசுவது, அந்நிய தெய்வங்களை வைத்திருப்பது போன்ற செயல்கள் நமது சுதேசியம் பற்றிய நினைவுகளை மறக்கடிக்கச் செய்கின்ற காரணிகள். இந்தக் காரணிகளைப் பேணிக்கொண்டே நாம் தேசிய எழுச்சி, தேசிய உணர்வு, தேச பக்தி என்பவற்றை முன்னெடுக்கலாம் என்பது சரியாக கொள்கையாக இருக்க முடியாது. உடை, நடை, தோற்றத்தில் அந்நிய உருவத்தில் இருந்துகொண்டு வீழ்ந்திருக்கும் ஒரு இனத்தின் தேசபக்தியை ஒருபோதும் தூண்டமுடியாது.”
இதற்கு அடுத்த வாரம் யூன் 21 அன்று அநகாரிக தர்மபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதம் பிரசுரமானது.
“பிரியமுள்ள சிறிசேன,
மக்களின் விருப்புக்கேற்ப ஒழுகுதலே பண்டைய மரபு. அதை மீறிய ரஷ்யா, ஜெர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளின் அரசுகள் வீழ்ந்தன. துணியணியும் சிங்களவர்கள் கலிசம் அணியும் சிங்களவர்களை விட அதிகம் என்பதால் மக்களின் அபிலாஷயின் பிரகாரம் கலிசம், தொப்பி போன்ற ஐரோப்பிய ஆடைகள் புறக்கணிக்கப்படவேண்டும். சிங்கள மக்களின் கருத்துக்கு செவிகொடுப்பது  சிறியளவிலான கலிசம்காரர்கலின் பொறுப்பு. மக்கள் சபையை அமைத்து கலிசம்களை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்....
சிங்கள இளைஞர்களுக்கு நேர்த்தியான மார்க்கத்தை வழிகாட்டும் பண்டிதர் குலரத்னவை சிங்கள இளைஞர்கள் முன்னுதாரணமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்....
அன்புடன் அநகாரிக்க தர்மபால”
“சிங்கள ஜாதிய” பத்திரிகை தொடர்ச்சியாக “தேசிய ஆடை இயக்கத்தை” ஆதரித்து படைப்புகளை வெளியிட்டது. ஐரோப்பிய ஆடைகளை புறக்கணித்து நமது சுதேசிய ஆடைகளை அணிந்து உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தியது. யூன் 21 அன்று ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
“தேசிய உடை குறித்து கசப்புடன் பார்க்கும் போக்கையும் நாம் காண்கிறோம். இதில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர். அவர் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து சிறிசேன எழுதிய எதிர்ப்புக் கட்டுரையை எதிர்த்து அவரைப் பலி வாங்குவதற்காக 5000 ரூபாவுக்கு  மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் பிரேசர். நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமாதானமாக தீர்க்கப்பட்டபோதும். வழக்குச் செலவாக 300 ரூபாவை சிறிசேன செலுத்த பணிக்கப்பட்டார்.”
இந்த இயக்கத்தை ஆதரித்து அப்போது டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட பல தலைவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். டீ.எஸ்.சேனநாயக்க சாகும்வரை கோர்ட் சூட்டுடன் தான் வளம் வந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமரான அவரின் மகன் டட்லி செனநாயக்கவும் இறுதிவரை மேற்கத்தேய உடையுடன் காணப்பட்டார். ஆனால் மத நிகழ்வுகளில் மாத்திரம் டீ.எஸ். சேனநாயக்காவும், டட்லியும் தேசிய உடை அணிந்தார்கள். டீ.எஸ். சேனநாயக்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதும் கண்டி தலதா மாளிகைக்கு தேசிய உடையில் தான் சென்றார். அந்த வரிசையில் சுதந்திர இலங்கையின் தலைவர்களிலேயே முதலாவதாக தேசிய உடையை அணிந்து முன்னுதாரணமாக ஆனவர் பண்டாரநாயக்க.

ஆரம்பத்தில் தேசிய உடை அணிந்த முன்னோடித் தலைவர்களாக கலாநிதி ஈ.அதிகாரம், ஆதர த சில்வா, சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர, எச்.எல்.டீ.மெல், டபிள்யு.ஏ.டீ.சில்வா இடதுசாரித் தலைவர்களான எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பிலிப் குணவர்த்தன போன்றோரை குறிப்பான உதாரணங்களாகக் குறிப்படலாம். பின்னர்  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எப்போதும் வெள்ளை வேட்டியும், பனியனுமாக காட்சியளித்தார். 

தேசிய உடை இயக்கத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்து வந்த பிரபல சிங்கள தேசியவாத இலக்கியவாதியான ஜி.பீ.மலலசேகர பல்கலைக்கழக பேராசியராக இருந்த காலத்திலும், ரஷ்யா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இலங்கைப் பிரதிநிதியாக இருந்த காலத்திலும் கூட வெளிர்நிறத்தில் தேசிய உடையையே அணிந்துவந்தார்.

இதேவேளை  1920 களின் பிற்பகுதியில் யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸ் வேஷ்டியும், கோர்ட்டையும் உடுத்தும்படி ஆசிரியர்களை வேண்டிக்கொண்டது. 1931 இல் யாழ்நகர் ஆசிரியர் சங்கம் (Jaffna Town Teachers Association) அந்நிய ஆடைகளை களைந்துவிட்டு தேசியத்தின் சுயகௌரவத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணியும்படி தீர்மானம் நிறைவேற்றியது. 

இந்தியாவில் அணியப்பட்ட சுதேசிய உடைகளான வெள்ளை நிற வேஷ்டியும், நீளமான சட்டையையும் கண்டு அவர்களும் தொடர்ச்சியாக அணியத் தொடங்கினார்கள். அவர்களின் அடியொற்றியவர்களும் அதே உடைகளை முக்கிய நிகழ்வுகளில் இலங்கையில் உடுக்கத் தொடங்கினார்கள்.

சுதேசியத்தைத் தேடும் நீட்சியில் 1940 களில் “சுதேசியமே சுகம் தரும்” ("සියරට දේ සිරි සැප දේ") என்கிற சுலோகம் வலுக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாக இந்த கோஷம் தலைதூக்கியது. காற்சட்டையும், கோர்ட்டையும் அணிந்தவர்கள் தமது தேசிய உடை என்ன என்கிற தேடலைத் தொடங்கினார்கள். சிங்களவர்களின் தேசிய உடை கோவணம் தான் என்று அப்போது சிலர் கூறினார்கள்.

இதே காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரசுக்குள்ளும்  தேசிய உடை பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. 1941 இல் தேசிய உடையைத் தெரிவு செய்வதற்காக ஒரு ஆடை அணிவகுப்பை ஒழுங்கு செய்தது காங்கிரஸ். இதன் நடுவர்களாக G.C.S.கொறயா, H.W.அமரசூரிய, Dr.R.சரவணமுத்து,  J.R.ஜெயவர்தன, M.D.A.விஜேசிங்க கடமையாற்றினர்.  அதன்படி வெள்ளை நிறத்தில் முழங்காலுக்கு சற்று மேலே வரை இருக்கும் வகையில் அந்த சட்டையின் அமைப்பு இருக்கும் வகையில் சட்டையில் இடுப்புப் பகுதியில் இருபுறமும் சட்டைப்பை வைக்கப்பட்டு இருந்த உடை தெரிவானது. பெண்கள் சிங்கள (கண்டிய சிங்கள), தமிழ், முஸ்லிம் பெண்கள் அவரவர் கலாசாரத்து ஆடைகளை அணிகின்ற வழக்கம் உருவானது. ஆனாலும் இலங்கையில் ஆண்கள் அணியும் தேசிய உடை என்பது சிங்கள ஆண்கள் அணிகின்ற உடையாகவே பின்னர் வழக்கத்துக்கு வந்தது.

சிங்களப் பெண்களில் ஒரு பகுதியினர் சாதியின் பேரால் மேலாடை அணிய உரிமையற்றவர்களாக இருந்தனர். மார்புகளை வெளிக்காட்டிக்கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். தமிழ்ச் சூழலிலும் கச்சை அணிவது உயர்சாதியினருக்கு உரிய ஒன்றாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அது மறுக்கப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. அப்படி மீறி அணிந்தவர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய உடையென்பது வெள்ளை வேஸ்டியும், வெள்ளை பனியனும் என்கிற நம்பிக்கை இருந்தது. 1952இல் நிலவிய அரசியல் சூழலில் பௌத்தத்தை அரவணைத்து இருப்பதும், தேசிய உடையை உடுப்பதும் இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான தகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டது. 1948 சுதந்திரத்தின் பின்னர் காலனித்துவ வெள்ளையினத்து கோர்ட்டும் சூட்டும் போதும் போதும் என்றாகியதுடன் தேசிய உடைக்கு அதைவிட அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவானது.

இதே வேளை 1956 அரசியல் மாற்றத்தோடு ஏற்பட்ட கலாசார மாற்றத்தின் போது சாதாரணமாக ஆண்கள் அணிகின்ற சுதேசிய தேசிய உடையாக வெள்ளை வேஷ்டியுடன் (சரம்), மேலே வெள்ளை பனியனும் அணிவது பிரபல்யமாக ஆனது.
1947 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்
"சுதந்திர இலங்கையின்" 1948 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்
1956 பண்டாரநாயக்க "தேசிய உடை" அமைச்சரவை
1960 சிறிமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவை
1956 ஆம் ஆண்டு பண்டரநாயக்காவின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வில் ஒருவரைத் தவிர அனைவரும் தேசிய உடையில் தான் காணப்பட்டார்கள். அன்றைய ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலக்க மேற்கத்தேய அந்நிய உடையிலும் பண்டாரநாயக்க தேசிய உடையிலும் பல நிகழ்வுகளில் ஒன்றாக காட்சியளித்தார்கள். அது இருவேறு அரசியலை அப்பட்டமாக பிரதிபலித்துக்கொண்டிருந்தன.

1962 ஆம் ஆண்டு வில்லியம் கொபல்லாவ ஆளுநராக தெரிவாகி பின்னர் 1972இல் முதலாவது ஜனாதிபதியாக அவரின் பதவி தொடர்ந்தது. 1962 தொடக்கம் சமீபத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வரை தேசிய உடையை தேசத்தின் கௌரவத்தை பிரதிபலிக்கும் உடையாக அணிந்து வந்திருக்கிறார்கள். அதை முதலாவது தடவை மீண்டும் மாற்றி தேசிய உடையணியாமல் மேற்கத்தேய ஆடையை மீண்டும் அணிந்தவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, இலங்கை ஜனாதிபதியாக ஆன கோத்தபாய ராஜபக்ச தான்.

தேசிய உடை இப்படி  சமூகத்தில் ஜனரஞ்சகமானாலும் அது அரசியல்வாதிகள் அணிகின்ற உடையாக மட்டும் சுருங்கியுள்ளது. அல்லது சில பாரம்பரிய, மத, கலாசார, வைபவ நிகழ்வுகளில் மாத்திரம் காண முடிகிறது. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் கூட தேசிய உடை அணிகின்ற வழக்கம் புழக்கத்தில் இருக்கவே செய்தது. இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தியின் ஆதர்சத்தால் உள்வாங்கப்பட்ட இலங்கையின் தேசிய உடை இப்போது அதே இந்தியாவிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட பல மோஸ்தர்களில் சேலைகள், பஞ்சாபிகள், சுடிதார்கள், வேஷ்டிகள், குர்தாக்கள் எல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் தேசிய உடையின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.
நன்றி - தினக்குரல்

உசாத்துணை:
  1. සෝමදාස අබේවික්‍රම - හෙන්රි අබේවික්‍රම දුටු බණ්ඩාරනායක පරිවර්තන යුගය - S.Godage Brothers – Colombo - 1973
  2. ஆசிரியர் குழு - “பண்டாரநாயக்கவின் உடை மாற்றம்” – லங்காதீப – 18.08.2017
  3. டொக்டர் – பீ.ஜீ.ஏ.வித்யாதிலக்க, - “தேசிய உடை புராணம்” - “சத்மண்டல” (மாத சஞ்சிகை) -02.12.2019
  4. Jane Russel – Communal Plitics under the Donoughmore Constitution, Colombo, 1982, p.120, Ceylon Daily News 18.july 1931
  5. Nira Wickramasinghe - Sri Lanka in the Modern Age: A History of Contested Identities – University of Hawaii Press -2006

பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் (1956- (6)) - என்.சரவணன்

1956 என்றால் அது பண்டாரநாயக்க, பண்டாரநாயக்க என்றால் அது 1956 என்கிற அளவுக்கு பண்டாரநாயக்கவை 1956 இலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. ஒரு வகையில் பரம்பரைத்தனத்தின் அரசியல் நீட்சித் தான் அது.

வேயங்கொட அத்தனகல்ல ஹொரகொல்ல “வலவ்வ”யைச் சேர்ந்த சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகாமுதலிக்கும் டேசி எசலின் ஒபேசேகர அம்மையாருக்கும்  08.01.1889 இல் கொழும்பு முகத்துவாரம் எலிஹவுஸ் இல்லத்தில் பிறந்தவர் SWRD பண்டாரநாயக்க (SWRD Bandaranaike - சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க). பண்டாரநாயக்க மகா முதலியைப் பற்றி தனியாக பின்னர் பார்ப்போம்.

SWRD பெயரின் சூட்சுமம்
வெஸ்ட் ரிஜ்வே என்கிற பெயர் பண்டாரநாயக்கவுக்கு எப்படி சேர்ந்தது என்பது சுவாரசியமான கதை.  அது அவரின் பரம்பரைப் பெயரல்ல. மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலி அப்போது நாட்டை ஆளும் ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். ஆளுநரின் நெருங்கிய நட்புக்கும் உரிய ஒருவராக இருந்தார். அதுபோல அவர் ஒரு தீவிரமாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தார்.  1898இல் அவருக்கு புதுக்கடை தேவஸ்தானத்தில் (All Saints Church – இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு முன்னாள் இருக்கும் தேவாலயம்) திருமணமானபோது அதற்கு சாட்சி கையெழுத்திட்டவர் ஆளுநர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே (Sir Joseph West Ridgeway). இலங்கையில் அவர் 1896-1903 வரையான காலப்பகுதியில் ஆளுநராக இருந்தார்.
ஆளுநர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே
மேற்படி அதே தேவஸ்தானத்தில் தான் பண்டாரநாயக்கவுக்கும் ஞானஸ்தானம் அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஞானத் தந்தையாக இருந்தவர் ஆளுநர். அவரின் பெயர் தான் பண்டாரநாயக்கவின் முதற்பெயராக சேர்க்கப்பட்டது. SWRD என்பதில் உள்ள S என்பது சொலமன் என்கிற தகப்பனின் பெயர். அதன் பின்னர் வருகின்ற WR என்பது வெஸ்ட் ரிட்ஜ்வே என்கிற ஆளுநரின் பெயர். என்னதான் பின்னர் தன்னை தேசியவாதியாக ஆக்கிக்கொள்ள அவர் அதீத பிரயத்தனம் செய்துகொண்டாலும் ஆங்கிலேய விசுவாசத்தின் எச்சம் இறுதிவரை அவரது பெயரில் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது.

காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்த மேல்மட்டத்தில் இருந்தவர்களுக்கு முதலி, மகாமுதலி, ஆராச்சி போன்ற பதவிகள் வழங்கப்பட்டன. அவர்கள் வசித்த பெரிய பங்களாக்களையும் அதன் சுற்றுப்புற காணிகளையும் சேர்த்து “வலவ்வ” என்று அழைத்தார்கள். அப்படிப்பட்ட பெரிய “வலவ்வ” களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் தான் SWRD பண்டாரநாயக்கவின் தகப்பனார் மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க. 

பண்டாரநாயக்கவோடு கூடப்பிறந்தவர்கள் இரு பெண் சகோதரிகள் அலெக்ஸாண்ட்ரா கெமிலியா பண்டாரநாயக்க, அண்ணா புளோரண்டினா பண்டாரநாயக்க. சிறு வயதில் இரு சகோதரிகளோடும் எலிஹவுஸ் இலத்திலும், ஹொரகொல்ல வலவ்வயிலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களின் வயதையொத்த வெளிச்சிறார்களோடு கூட விளையாட அனுமதிக்கப்படாதவர்கள். இவர்களுக்கான உடைகள், விளையாட்டுப் பொருட்கள் கூட வெளிநாடுகளில் இருந்து தான் வருவிக்கப்பட்டன.
இளம் பண்டாரநாயக்கவும் தந்தையார் மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும்
கல்வி
ஆரம்பத்தில் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மட்டக்குளியில் அமைந்துள்ள எலிஹவுஸ் பிளேசில் தான் பங்களா அமைத்து இருந்தார்கள். அங்கு வாழ்ந்தபோது முகத்துவாரம் புனித தோமஸ் வித்தியாலயத்தில் SWRD பண்டாரநாயக்க ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பண்டாரநாயக்கவுக்கு பாடநூல்களை வைத்து ஆரம்பத்தில் கல்வி புகட்டியவர் மகாமுதலியின் வீட்தில் பணிபுரிந்த பறங்கி இனத்தைச் சேர்ந்த “வெம்பெக்” என்பவர். அதன் பின்னர்  “யங்” எனும் கல்வி கற்ற ஆங்கிலேயர் ஒருவரை ஆசிரியராக நியமித்தார். ஆனால் அவரோடு எப்போதும் குறும்புத்தனமாக பண்டாரநாயக்க இருந்ததால் “யங்”கை பணியில் இருந்து நிறுத்தினார். 

பண்டாரநாயக்கவுக்கும், சகோதரிகளுக்கும் மேலதிக கல்விக்காக இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஏ.சீ.ரூட்பர்ட் என்பவரை இலங்கைக்கு அழைத்துவந்து அவரைக் கொண்டு கற்பித்தார். முதலாவது உலக யுத்தம் ஆரம்பமானபோது பிரித்தானிய இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக ரூட்பர்ட் செல்லும்வரை பண்டாரநாயக்கக்களின் ஆசான் ரூட்பர்ட் தான்.

அதன் பின்னர் 1907 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸவில் உள்ள புனித தோமஸ் வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கற்ற காலத்தில் அப்பாடசாலையின் அதிபராக இருந்த பாதிரியாரின் இல்லத்தில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

அதன் பின்னர் 1915 டிசம்பர் மாதம் உயர் கல்விக்காக இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட் கிரைஸ்ட் சேர்ச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், அரசறிவியல், பொருளியல் ஆகியவற்றைக் கற்று 1923 இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்துடன், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு போன்ற மொழிகளையும் கற்றார். அங்கு தான் அவர் அரசியல் அரிச்சுவடியைக் கற்றதுடன் அரசியல் பங்குபற்றல், தலைமைத்துவம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டார். தன்னை அங்கு தான் தயார்படுத்திக்கொண்டார்.

1921ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கக் கூட்டத்தில் வைத்து “தற்போதைய பாராளுமன்ற அமைப்பு முறை நவீன ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை” என்கிற தலைப்பில் ஆற்றிய உரையை அவரின் முதல் அரசியல் உரையாக கருதப்படுகிறது. அப்போதிருந்து வாத விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறந்த பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். பிற்காலத்தில் “ஆசியாவின் வெண்கல மணி” என்று அழைக்கிற அளவுக்கு அவர் ஒரு சிறந்த பேச்சாளராகக் கருதப்பட்டார். ஒக்ஸ்போர்ட் மாணவர் அமைப்பின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் பண்டாரநாயக்க. பண்டாரநாயக்கவுடன்  அப்பதவிக்கு அவரோடு போட்டியிட்டவர் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரம்சே மெக்டொனால்ட் (Ramsay MacDonald) என்பவரின் மகன் மெல்கம் மெக்டொனால்ட். பிற்காலத்தில் இங்கிலாந்தின் அமைச்சராகவும் அவுஸ்திரேலியாவின் ஆளுநராகவும் ஆனார் மெல்கம்.

நின்றுகொண்டிருப்பவர்களில் கடைசியாக இருப்பவர் பண்டாரநாயக்க - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 
1924 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பரீட்சையிலும் தேறி பரிஸ்டர் பட்டமும் பெற்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிற்காலத்தில் சுவரில் வைக்கப்பட்ட பண்டாரநாயக்கவின் பெரிய உருவப்படம் இன்றும் அங்கு காணப்படுகிறது.
பிற காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டிருக்கிற பண்டாரநாயக்கவின் உருவப்படத்தை பார்க்கின்றனர் அவரின் துணைவி சிறிமா பண்டாரநாயக்கவும் புதல்வர் அனுரா பண்டாரநாயக்கவும்.
ஆரூடம்
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரொபர்ட் பார்னேஸ் (Robert Bernays) என்பவர் 1931 இல் மகாத்மா காந்தியைப் பற்றி 350 பக்கங்களிலான ஒரு நூலை எழுதினார். “Naked Fakir” என்பது அந்த நூலின் தலைப்பு. இன்றுவரை மகாத்மா காந்தி பற்றி ஆராய்கிற ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகிற நூல் அது. அந்த நூலின் ஆரம்பப் பக்கங்களில் பண்டாரநாயக்கவைப் பற்றி பல இடங்களில் வியந்து பேசுகிறார். 14 ஆம் பக்கம் பண்டாரநாயக்க எதிர்காலத்தில் அந்நாட்டின் பிரதமராக ஆவார் என்று ஆரூடம் சொல்கிறார் அந்த நூலில். 

இலங்கை வருகை
24.02.1925 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார். கப்பலில் வந்திறங்கும் போது அவரின் தந்தையும் தாயாரும் பெரும் வரவேற்பு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். பெருமளவு மக்கள் அவரின் வருகைக்காக குழுமியிருந்தார்கள். அங்கிருந்து புதுக்கடை தேவஸ்தானத்துக்கு கத்தோலிக்க பூஜைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் பிரமுகர்களுக்கு விருந்துபசாரம் கொடுக்கப்பட்டு அங்கிருந்து ஹொரகொல்ல வலவ்வ வரை மேள தாளங்களுடன் பெரஹர ஏற்பாட்டுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கை வந்ததும் அவர் புதுக்கடையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வழக்கறிஞராக கடமையாற்றவும் செய்தார். இதன் பின்னர் அவரது அரசியல் வாழ்க்கை வேகமாக வளர்ச்சியுறத் தொடங்கியது.
ஒக்ஸ்போர்ட்டிலிருந்து திரும்பிய போது ஹொறகொல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு
மகாமுதலியாரின் கனவெல்லாம் தனக்குப் பின்னர் தான் கொண்டிருக்கிற பதவியில் மகனையும் அமர்த்துவதே. அல்லது இலங்கைக்கான உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிவரை அடைவதற்கு ஏதுவான வழிகளை செய்துகொடுத்தல். ஆனால் பண்டாரநாயக்கவின் தெரிவு அரசியலாக இருந்தது. நிட்டம்புவ கிராமிய சபையின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டு அரசியல் செயற்பாடுகளுக்குள் தன்னை உள்நுழைத்துக்கொண்டார் பண்டாரநாயக்க.

அவரிடம் அப்போது  தாராளவாத ஜனாநாயக அரசியல் கருத்து செல்வாக்கு பெற்றிருந்தது. இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கைக்கான சிறந்த அரசியல் முறைமை என்பது சமஸ்டியே என்கிற கருத்து அவரிடம் குடிகொண்டிருந்தது. எனவே தான் கரையோரச் சிங்களவர், கண்டியச் சிங்களவர், வடக்கில் தமிழர்கள் என மூன்றாக பிரிக்கப்பட்ட சமஷ்டி முறை இலங்கைக்கு பொருந்தும் என்றார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அவர் அரசியல் தலைமைக்கு வருவதாயின் அதற்குரிய குறுக்குவழி சிங்கள பௌத்தத் தனத்துக்கு தலைமை கொடுப்பதே என்பதை கணித்தார். வேகமாகவே தன்னை அதற்காக தயார்ப்படுத்தி தகவமைக்கவும் செய்தார்.

ஏ.ஈ.குணசிங்கவைத் தோற்கடித்தார்
அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுடன்  “தேசபக்தி கட்சி” என்கிற பேரில் ஒரு கட்சியையும் 1926 இல் (ජාති හිතෛෂී පක්ෂය) தொடக்கினார். அதன் தலைவராகவும் இயங்கினார். இலங்கைக்கான சுயாட்சி கருத்தாக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் அந்தக் கட்சியை அவர் அமைத்தார் என்று பொதுவில் கூறப்படுவதுண்டு. ஆனால் இந்தக் கட்சியை அவர் வெகுகாலம் கொண்டு நடத்தவில்லை.

இதற்கான காரணம் 1926 இல் கொழும்பு மாநகர சபையின் மருதானைத் தொகுதியில் நடத்த நேரிட்ட இடைத்தேர்தல். அத் தொகுதியின் உறுப்பினராக இருந்த ஈ.ஏ.த.சில்வா திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான அவசியம் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் பண்டாரநாயக்கவுடன் போட்டியிட முன்வந்த அடுத்த போட்டியாளர் அப்போது கோடி கட்டிப்பறந்த இலங்கை தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க. இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்காகத் தான் அவர் இலங்கை தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஆனார். அச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே அவர் அத்தேர்தலில் ஏ.ஈ.குணசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

ஏ.ஈ.குணசிங்க கொழும்பு தொழிலாளர் வர்க்கத் தலைவராக சாதாரணர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒருவர். அவரைத் தோற்கடிப்பது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் பண்டாரநாயக்கவுக்கு இது தான் தனது அரசியல் பிரவேசத்துக்கு சரியான தருணம்.

இந்த வருடம் தான் பண்டாரநாயக்கவின் தந்தை சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு பிரித்தானிய அரசின் உயரிய பட்டமான நைட் பட்டம் (KCMG – Knight Commander of the Order of St Michael and St George) வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் அவர் தான்.  தேசிய காங்கிரசும் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மகனைப் போட்டியிடச் செய்வதே தமக்கு சாதகமானது என்று கருதி அவரை அச்சங்கத்தின் சார்பாக தேர்தலில் நிறுத்தினர்.

பண்டாரநாயக்கவின் அரசியல் அதிகாரத்துவத்துக்குள் பிரவேசிக்க அவரின் குடும்பப் பின்புலம், பணம், செல்வாக்கு, அந்த செல்வாக்குகளால் வளைத்துப்போட முடிந்த அன்றைய இலங்கை தேசிய காங்கிரஸ் என பல்வேறு மேட்டுக்குடிக் காரணிகள் செல்வாக்கு செலுத்தின என்றால் அது மிகையில்லை.

சுயாதீன தொழிற் கட்சியின் தலைவராக இருந்த தம்பிராஜா சரவணமுத்து என்பவரை அழைத்துக்கொண்டு வீடுவீடாக தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் சென்றார்.

இந்தக் காலப்பகுதியில் 21 வயதுக்கு மேற்பட்ட, ஆங்கிலம் அல்லது  சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆண்டுக்கு 600 ரூபாவுக்கு குறையாத வருமானமுள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். எனவே இந்தத் தேர்தலில் 4029 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் காணப்பட்டனர். 14.12.1926 நடந்த அத் தேர்தலில் பண்டாரநாயக்கவுக்கு 1801 வாக்குகளும், ஏ.ஈ.குனசிங்கவுக்கு 1186 வாக்குகளும் கிடைத்தன. ஏ.ஈ.குணசிங்கவை விட 615 வாக்குகள் அதிகமாகப் பெற்று அமோக வெற்றியைப் வெற்றிபெற்றார் பண்டாரநாயக்க.

ஏ.ஈ.குணசிங்கவைத் தோற்கடித்து வெற்றி பெற்றது முக்கியமான ஒரு அரசியல் திருப்புமுனை. அடுத்த ஐந்து ஆண்டுகளும் அவர் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், சட்ட பரிபாலனம் குறித்த துணைக்குழுவில் அங்கம் வகித்தபடி தனது கடமையை ஆற்றினார். அது மட்டுமன்றி 1927இல் தேசிய காங்கிரசின் செயலாளராகவும் அதே வருடம் அதன் பொருளாளராகவும் தெரிவானார்.

தேசியவாத தலைவராக வளர்சியுறல்
1927 ஆம் ஆண்டு இலங்கையின் புதிய அரசியல் திட்டத்துக்கான வழிகளை ஆராய்வதற்காக வந்த டொனமூர் ஆணைக்குழு இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி இருந்து 34 இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் பட்டியலில் பண்டாரநாயக்க இல்லை. ஆனால் பண்டாரநாயக்கவின் தந்தை மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க 01.12.1927 அன்று சேர் மார்க்கஸ் பெர்னாண்டோவோடு “ஒருமையாளர் சங்கம்” என்கிற சங்கத்தின் சார்பில் சந்தித்து முறைப்பாடுகளை செய்திருக்கிறார் என்று அந்த அறிக்கையில் இருந்து அறியக் கிடைக்கிறது.

அதுவும் தன் மகன் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்று தெரியவருகிறது. 

தேசிய காங்கிரஸ் சர்வஜன வாக்குரிமையை முழுமையாக ஆதரிக்கவில்லை. மட்டுபடுத்தப்பட்ட வாக்குரிமையைத் தான் முன்மொழிந்தது. டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஐரோப்பியர் சங்கத்தின் சார்பில் கேர்னல் டீ.வை.ரைட் சாட்சியமளிக்கும் போது இலங்கையில் உள்ள அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று நவம்பர் 24 அன்று சாட்சியமளித்தார். இதன் மூலம் தென்னிந்திய “கூலித் தொழிலாளர்கள்” அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்துவிடும் என்று சிங்கள தரப்பினர் அஞ்சினர். பண்டாரநாயக்கவின் சகாக்களுக்கும் இதே அச்சம் இருந்தது.  ஆனால் மத்திய மலைநாட்டில் உள்ள தங்கள் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஸ்திரத்தன்மைக்காகத் தான் அவர்கள் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும்படி வற்புறுத்துகிறார்கள் என்று வியாக்கியானம் செய்தது சிங்கள தேசியவாதத் தரப்பு. இறுதியில் சர்வஜன வாக்குரிமையுடன் கூடிய டொனமூர் திட்டம் 1931 இல் அமுலுக்கு வந்தது.

1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் 04.05.1931 அன்று நடத்தப்பட்ட முதலாவது தேர்தலில் வேயன்கொட தொகுதியில் போட்டியின்றியே அரசாங்க சபைக்குத் தெரிவானார். அதே வருடம் டிசம்பர் 18 அன்று இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவானார். இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக அதுவரை தெரிவானவர்களிலேயே வயதில் குறைந்த தலைவராக அவர் அப்போது இருந்தார். பண்டாரநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை தேசிய காங்கிரசுக்குள் தேசியவாதிகள் தலையெடுத்தனர். டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு தேசிய காங்கிரசில் இருந்த செல்வாக்கும் இதன் மூலம் பலவீனப்பட்டுக்கொண்டுவந்தது. இதே காலத்தில் தேசிய காங்கிரசில் தீவிர செயற்பாட்டாளராக தலையெடுத்து வந்த இளம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் பண்டாரநாயக்கவும் இடதுசாரிக் கட்சிகளை தேசிய காங்கிரசுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டனர். டீ.எஸ்.சேனநாயக்க இதனை எதிர்த்து தேசிய காங்கிரசில் இருந்து 21.12.1943 அன்று விலகினார்.

இலங்கையின் பூரண சுதந்திர யோசனையை எதிர்த்தும், டொமினியன் அந்தஸ்தே போதும் என்று தான் டீ.எஸ்.சேனநாயக்க அதிலிருந்து விலகியதாக பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஹென்றி அபேவிக்கிரமவின் நூலிலும், ஜே.ஆர். ஜெயவர்த்தன குறித்து கே,எம்.டீ.சில்வா எழுதிய நூலிலும் இதனை உறுதிபடுத்தி விபரிக்கப்பட்டுள்ளன. 

அன்றைய அரசாங்க சபை உறுப்பினர் சார்ல்ஸ் பட்டுவந்துடாவேயின் தலைமையில் இயங்கிய உள்துறை நிறைவேற்று கமிட்டியின் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். 

1936 இல் நடந்த அரசாங்க சபைத்தேர்தலிலும் போட்டியின்றியே அதே தொகுதியில் தெரிவான அவர் மேற்சொன்ன அதே உள்துறை நிறைவேற்றுக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை வகித்தார். பின்னர் உள்துறை பரிபாலன அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1947 வரை மொத்தம் 11 ஆண்டுகள் பண்டாரநாயக்க உள்துறை அமைச்சராக தொடர்ந்தார். இந்த இரண்டாவது அரசாங்க சபையின் அமைச்சரவையில் இருந்த வயதில் குறைந்த அமைச்சர் பண்டாரநாயக்க தான். 

பண்டாரநாயக்கவின் அரசியல் கனவுக்கு இடையூறாக இருந்த முக்கிய பிரச்சினை அன்று அவருக்கு இருந்த அடையாளம். எனவே அவர் தனது மதம், ஆங்கில மொழி செல்வாக்கு, தனது உடைக் கலாசாரம் அனைத்துமே அவரின் அடத்த கட்ட நகர்வுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதனை எப்படி துறந்தார் என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

உசாத்துணை

  1. සෝමදාස අබේවික්‍රම - හෙන්රි අබේවික්‍රම දුටු බණ්ඩාරනායක පරිවර්තන යුගය - S.Godage Brothers – Colombo - 1973
  2.   Robert Bernays - "Naked fakir," - Victor Gallancz Ltd, London - (1931) – p.14
  3. K M De Silva - A History of Sri Lanka - University of California Press, 1981
  4. யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை) – அரச கரும மொழி வெளியீட்டுக் கிளைப் பிரசுரம் - 1961
  5. K. M. De Silva, William Howard Wriggins - J.R. Jayewardene of Sri Lanka: 1906–1956 p. 127-8 & 168-70 Univ of Hawaii - 1988

தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்  கியூ.ஸி. அவர்கள் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவ்வாரம்ப மாநாட்டில்,  செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை.
வரவேற்புக் கழகத் தலைவருக்கும் இலங்கையின் பற்பல பகுதிகளிலுமிருந்து இங்குவந்து குழுமியிருக்கும் பிரதிநிதிகளுக்கும் - எனது அன்பான வணக்கம். 

இன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்கும்படி என்னைத் தெரிந் தெடுத்துக் கௌரவித்ததற்காக எனது மனப்பூர்வமான நன்றியறிதலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கின்ற பெரும் பொறுப்பினை நோக்கும் போது, அவற்றையெல்லாம் கொண்டு நடத்துவதற்குப்போதுமானவன்மை என்னிடமிருக்குமோ என்று ஐயுறுகின்றேன். எனினும், நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து எனக்கெனக் குறிக்கும் பணியினை ஏற்று, எங்கள் நோக்கத்துக்காக யான் தொண்டு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேன். என்னைத் தலைவராகத் தெரிவு செய்ததில் - நல்ல நியாயம் - ஒன்று மாத்திரம் இருக்கின்றது. அது, இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் அடைந்திருக்கும் பரிதாப நிலைமையினையும், அவர்கள் அதினின்று நீங்கி விடுதலை பெறுவதற்காக ஒரு இயக்கம் அவசியமாகும் என்பதையும் நீங்கள் உணரும் அளவுக்கு யானும் உணர்கின்றேன் என்பதேயாகும். 

இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள், விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்கவேண்டும் என்னும் தனிநோக்கத்துடன், நாங்கள் எல்லோரும் இன்று கூடியிருக்கின்றோம். இப்போதிருக்கும் நிலைமையில், யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமை யாதது என்பது எமது திடமான நம்பிக்கையாகும். பழைய காலச் சரித்திரத்தைத் தெளிவாக நன்றாக ஆராய்ந்து பார்த்தால், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டிலே இப்போது எப்படியான நிலைமைகளுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து நோக்கினால், இதுதான் ஒரேயொருவழி வேறு எந்தவிதமான பரிகாரமும் கிடையாது - என்பது நன்கு விளங்கும்

16ஆம் நூற்றாண்டிலே, ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இந்நாட்டு மக்களே தங்களுக்கென அரசாங்கங்களை அமைத்திருந்தனர். நாங்கள் ஒரு விஷயத்தை மாத்திரம் ஊன்றிப்பரிசீலனை செய்தல் வேண்டும். அதாவது, போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் இங்கு வசித்த மக்கள் பல நூ ற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். விஜயன் காலந்தொடங்கிப் பல நூ ற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் தேசிய இனத்தைப்பற்றி மாத்திரம் பேசப்படுகிறது. இவர்களைச் சில காலங்களில் தமிழ் மன்னர்களும் அரசு புரிந்தார்கள். எனவே, தமிழ் மக்கள் அவர்களிடையே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. ஆயினும், அது சிங்களத் தேசிய இனமும் சிங்கள அரசாங்கமுமே யாரும் பூமிசாத்திர சம்பந்தமான காரணங்களாலும் வேறுபல நியாயங்களாலும் இலங்கையின் வட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நெடுங்காலமாகத் தமிழர்களாகவே திகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால், பெரும்பாலும் தமிழ் மக்களையே கொண்ட வட பகுதிகளைத் தென் பகுதியிலிருந்த சிங்கள இராச்சியங்கள் ஆட்சி புரிவது வரவரக் கடினமாக இருந்திருத்தல் வேண்டும். இறுதியாக, இயற்கையாயமைந்த ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 9ஆம், 10ஆம் நூற்றாண்டளவிலே, வடபகுதித் தமிழ்ப்பிரதேசங்கள் பிரிந்து தனியரசாயின. இலங்கையின் தென்பகுதி, சில வேளைகளில் 2, 3 இராச்சியங்களாகப் பிரிந்திருந்தாலும் சிங்களப் பிரதேசமாகவே இருப்பதாயிற்று. 

சில காலங்களில் இந் நிலைமை மாறியிருந்தாலும், ஐரோப்பியர் வரும்வரை, இச் சிங்கள் - தமிழ் இனப் பாகுபாடு பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்தது. முதலிலே தமிழ் இராச்சியத்தை அழித்த ஐரோப்பியர், படிப்படியாகச் சிங்கள் இராச்சியங்களையும் ஒழித்து விட்டார்கள். இதிலிருந்து யாம் பெறக்கூடிய பெரும் படிப்பினை, மக்களின் வாழ்க்கையிலும் அரசியலிலும் மொழி மிக முக்கியமானதென்பதேயாகும். சிங்களத் தேசிய இனமாகவும் தமிழ் தேசிய இனமாகவும் இலங்கை பிரிக்கப்பட்டிருந்தபோது கூட, சிங்களச் சாகியத்தினரிடையே தமிழ் மக்களும், தமிழ்ச் சாகியத்தினரிடையே சிங்கள மக்களும் வாழ்ந்திருத்தல் வேண்டும். மக்கள் இப்படியாக நாடெங்கும் பரவிக் கலந்து வாழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசியல் விஷயங்களுக்காக, வடபகுதியிற் பெரும்பான்மையினராய்த் திகழ்ந்த தமிழர் - தென்பகுதியிற் பெரும்பான்மையினராய்த் திகழ்ந்த சிங்களவர் - என இரு பிரிவினராகப் பகுக்கப்பட்டார்கள். தமது ஆட்சிச் சௌகரியத்தை மட்டுமே கருதிய பிரிட்டிஷார், சிந்தனைக்குறைவான முறையில், நாடு முழுவதையும் ஒரே குடியேற்ற நாட்டு அரசாங்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, பல நூற்றாண்டுகளாக இரு தேசிய இனங்களாக இருந்த பாகுபாட்டினை ஒழித்து விட்டார்கள், ஆயினும் இவ்விரு தேசிய இனங்களும் இயற்கையாகக் கலந்து ஒன்றாகி விடவில்லை ஆயினும், மக்களுட் பெரும்பகுதியினர் வெவ்வேறான இரண்டு மொழிகளையே பேசுபவராய், வெவ்வேறு நிலப்பகுதிகளுள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆயினும், இரு இனங்களிலிருந்தும் ஆங்கிலம் பேசுகின்ற ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் 

தலைமையான தோன்றினார்கள். ஆனால், நாட்டு மொழிகள் பொது வாழ்விலே தமக்குரிய ஸ்தானத்தைப் பெற்றவுடன். தொகையிற் குறைந்தவர்களாகிய இவ்வாங்கிலம் பேசும் சமூகத்தினர் அருகிவருகிறார்கள். நாளடைவில், குடியேற்ற நாட்டு ஆட்சி முறை மாறி, மக்களாட்சி படிப்படியாக நிலைபெறத் தொடங்கிய காலத்தில், புதிய அரசியற்றிட்டங்களை வகுத்தவர்கள், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சி முறையினைப் பின்பற்றி, ஒற்றையாட்சி அமைப்பு அடிப்படையிலேயே தமது திட்டங்களை வகுத்தனர். இதற்குப் பல காரணங்களுள்ளன. வெளித்தோற்றத்தளவில், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சியின் கீழ், இலங்கை மக்கள் ஒரே தேசிய இனமெனும்படி ஆகிவிட்டார்கள். அன்றியும், நமது அரசியற் சீர்திருத்த வாதிகள் அரசியலமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அனுபவமற்றவர்களாயிருந்தார்கள். அல்லாமலும், ஆங்கிலேயரும் ஸ்கொச்சுக்காரரும் உவெல்சுக்காரரும், ஒரு அரசின் கீழ்ச் சேர்ந்துகொண்டதுபோல , அதையே முன்மாதிரியாக வைத்து, இலங்கையிலும் அரசியலமைக்கலாம் என எல்லோரும் ஏமாறினார்கள்; அதிலும் பார்க்கச் சிறந்ததொரு மாதிரி கிடையாதென்றும் நம்பியிருந்தார்கள். பெரிய பிரித்தானியாவிலே, ஸ்கொச்சு மொழியும், உவெல்சுமொழியும் முற்றாக இல்லையெனும்படி அழிந்தொழிந்து, பிரித்தானிய மக்கள் எல்லோரும் ஆங்கில மொழியையே பேசுபவர்களாக மாறி விட்டார்கள் என்பதைச் சிந்தித்து, எவராவது எடுத்துக்காட்டினாரல்லர். ஆனால், இருபது 

நூற்றாண்டுகள் வரை கூடி வாழ்ந்திருந்தும், சிங்கள மொழியோ, தமிழ் மொழியோ அழிந்தொழியவில்லை, ஒவ்வொரு சாரிலும், அம்மொழிகள் அழிந்தொழியாதபடி காக்கும் இயற்கைச் சக்திகளும் நோக்குகளும் அமைந்துள்ளன. 

பிரிட்டனிலும் இலங்கையிலுமிருந்து எமது நாட்டின் அரசியலமைப்பினை வகுப்பதில் பங்குபற்றினோர், பிரிட்டிஷாரின் ஒற்றையாட்சி அமைப்பினை மாதிரியாகக் கொண்டு அதையே எமது நாட்டிலும் தழுவிக்கொள்ள முயன்றார்கள். சென்ற முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற அரசியற்சீர்திருத்த இயக்கத்தின் வரலாற்றை நோக்குவோமாயின், நமது சீர்திருத்த வாதிகள் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைத் தழுவுவதிற் கவனஞ் செலுத்தினார்களேயன்றி, எமது நாட்டிற்கு எவ்வகையான அரசாங்கம் பொருத்தமானதென்று ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. தமது அரசியலமைப் பேயல்லாமல் வேறு எதனையும் இலங்கைக்கு மாதிரியாகக் கொள்ளலாமென்று பிரிட்டிஷார் கருதவில்லை . பிரிட்டிஷ் அரசியலமைப்பானது, சிங்கள மக்களுக்கு விசேஷ திருப்தியளிப்பதாயிற்று, ஏனெனில், சிங்கள மக்கள் பெரும்பான்மையோர். எனவே வெறும் எண்ணிக்கையினாலேயே அவர்கள் பூரணமான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லாமலும், பழைய காலத்திலிருந்தது போல, ஒரே சிங்கள இராட்சியத்தை அமைத்துக்கொள்ளலாமென்றும் கனவு கண்டார்கள். சென்ற பத்து நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருந்த மாற்றங்களையெல்லாம், ஒரு சிறிதாவது அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. பல இன மக்கள் கூடி வாழும் நாட்டிலே, ஒற்றையாட்சி அமைப்பை நிறுவுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தமிழ் பேசும் மக்கள் தெளிவாகக் கண்டார்கள். அவர்கள் தங்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை என்றும் உணர்ந்திருந்தது போற்றத்தக்கதாகும். தலைவர்களென்போர் இந்த ஆபத்தைக் குறைப்பதிற் கவனஞ் செலுத்தினார்களேயன்றி, அதை நீக்க முயற்சிக்கவில்லை. சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்றுக் கொண்டாற் போதுமென்று அவர்கள் நம்பினார்கள். அவர்களுக்குத் தோன்றிய ஒரே பரிகாரம் அதுதான். அவர்கள் வருங்காலத்தைப்பற்றிப் போதிய முன்யோசனையுடனும் பரந்த நோக்கத்துடனும் நடந்து கொள்ளாதது வருத்தத்திற்குரியதாகும். இங்ஙனம் தவறியதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. தமிழ் பேசும் மக்கள் - முஸ்லிம்கள், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழரென மூன்று பிரிவினராய் இருந்தனர். இந்நாட்டிலே முஸ்லிம்களும் இலங்கைத் தமிழர்களும் வாழும் பிரதேசங்கள், பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் விருத்தி செய்யப் படாதனவாய், கீழ்நிலை எய்திக்கிடந்தன. இதனால், அப்பிரதேசங்களின் பொருளாதாரநிலை சீரழிந்திருந்தது. அப்பிரதேசங்களிலேயே வாழ்ந்துகொண்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டுழைக்கப் போதுமான அவகாசம் படைத்தோர், அவ்விடங்களிலே தோன்றவில்லை. இந்தியத் தமிழரென்ற பிரிவினர், அரசியலமைப்பு ஆலோசனைகளிற் பங்குபற்ற இயலாதவர்களாயிருந்தனர். அவர்கள் எங்கள் நாட்டுக்கு ஏனையோரிலும் பார்க்கப் பிந்திய காலத்தில் வந்தவராவர். அவர்கள், தமிழ் பேசும் பிரதேசங்களுக்குப் புறம்பான சிங்களமொழி பேசப்படும் பிரதேசங்களிற் குடியேறியிருந்தார்கள். இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த போதிலும், அவர்கள், தொழிலாளர்களாகிய தங்களது வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளிற் கவனம் செலுத்தினார்களேயன்றி, அரசியலமைப்புச் சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந் நிலையின் பயனாக அரசியலமைப்பில் ஈடுபட்டோர், பிரிட்டிஷ் ஒற்றையாட்சி அமைப்பினையே அடிப்படையாகக் கொண்டனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பதானது. ஜனநாயகத்துக்கு மாறான தென்று சிங்கள மக்கள் எதிர்த்தனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பதனாலேனும், அதிகாரம் முழுவதையும் தம் கையிலேயே வைத்திருக்க கூடிய ஒற்றையாட்சி அமைப்பினை நிலைபெறச் செய்யலாமென்று அவர்களுக்குத் தென்படவில்லை. 

நீதி செய்வார்களென்று எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டிஷ் எஜமானர்கள், தம் கடமையில் முற்றாகத் தவறிவிட்டார்கள். அரசியலதிகாரம் சிங்களவரின் கையிலேயே இருப்பதை அவர்கள் கண்டார்கள். எனவே, தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதிலும் பார்க்கச் சிங்கள மக்களைத் திருப்தி செய்வதே உசிதமென்று கருதினர். அது ஆண்மையற்ற செயல் எனினும், அதையே விரும்பினர். இதன் பயனாக இந்நாட்டின் அரசியற் பிரச்சினைக்கு ஒரு பரிகாரமென , சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதி நிதித்துவம் அளிக்காத ஒரு ஒற்றையாட்சி அமைப்பு, சோல்பரி - பிரிட்டிஷ் அரசியற்றிட்டம் தமிழ் பேசும் மக்களின் மீது திணிக்கப்படுவதாயிற்று. வாக்காளர்கள் அளித்த உத்தரவாதத்தை மறந்து எம் பிரதிநிதிகள் சோல்பரித் திட்டத்தை ஏற்றமையால், இப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்தது. இதனால், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வுக்கு அந்தியக் கிரியைகள் செய்யப்பட்டு விட்டனவென்று பலரும் கருதியிருக்கக் கூடும். ஆனால் பொதுமக்கள் சரணடைய மறுத்தனர். 1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஏற்ற அப்போதைய அரசாங்கசபைத் தமிழ் அங்கத்தவருள், ஒருவர் தவிர்ந்த பிறரெல்லாம் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்படுதோல்வி அடைந்தனர். தமிழ்ப்பிரதி நிதிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா அன்றேல் சரணடைவதா என்ற ஒரே கேள்வியை அடிப்படையாகக் கொண்டே தமிழ்த் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் தெளிவான முடிவு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டு மென்பதேயாகும். 

ஆனால், முஸ்லிம் தொகுதிகளில் இதற்கு வேறான கொள்கையுடன் தேர்தல் நடைபெற்றது. 1945ஆம் ஆண்டுவரை சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கைக்காகத் தமிழரும் முஸ்லிம்களும் சேர்ந்துழைத்தனர். சோல்பரித் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், வேறு வழியின்றி முஸ்லிம்கள் தயங்கினர். இப்போது நாங்கள் கைக்கொண்டிருக்கும் கொள்கையைப் போன்ற திட்டங்களெவையும் அர்களுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசங்கள், தனிச்சுயாட்சி அரசாக அமைக்க முடியாதனவாய் இருந்தன. வடபகுதியிலும் திரிகோணமலையிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, இப் பிரதிகூலமில்லாதபடியால் அவர்களிடையே ஒரு விடுதலை உணர்ச்சி நிலவியது. 

இவ் விடுதலை உணர்ச்சியே உருவெடுத்தாற்போல் விளங்கிய தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தொகுதிகள் எல்லாவற்றிலும் பூரண வெற்றி. பெற்றது தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய தமிழ் மக்களின் கருத்தினை, அத் தேர்தல் தெளிவாகக் காட்டியது. தமிழ்க்காங்கிரசினை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர்கள், அதிகாரத்துக்கு வரக்கூடியவர்களான சிங்களப் பெரும்பான்மையோருடன் ஒத்துழைப்பதால், தமிழ்ப் பிரதேசங்களுக்குப் பொருளபிவிருத்தி ஏற்படுமென்று வாக்களித்தார்கள். ஆனால், தமிழ்க் காங்கிரஸ் அபேட்சகர்கள் அரசாங்கத்திடமிருந்து பொருள் நலம் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளிக்கவில்லை; தமிழரின் உரிமையைப் பறிக்க நடக்கும் முயற்சிகளை எதிர்ப்போமென்றே கூறினர். அதிகப்படியான வாக்குகளால் தமிழ்க் காங்கிரஸ் அபேட்சகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் அடுத்த வருஷம் - 1948 ஆம் ஆண்டில் என்றும் எதிர்பார்த்திராத சம்பவம் நடைபெறுவதாயிற்று. தேர்தலிலே தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பையும் தமிழ்க் காங்கிரசையும் கவனியாது ஐக்கிய தேசியக்கட்சி தனிப்பட்ட முறையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது. அதன்பின், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் மனந்தளர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியிடம் சரண் புகுந்தார். தமிழ் மக்கட்கு அளித்த உத்திரவாதத்தையும் இதனால் மீறினார். ஆனால் அநேகர், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் பூரணமாகச் சரணாகதி அடையவில்லையென்றும், தாம் சேர்ந்திருக்கும் அரசாங்கம் தமிழ்க் காங்கிரசின் கொள்கைகளுக்கு மாறான சட்டங்களைக் கொண்டுவரும் பொழுது அவற்றை எதிர்ப்பதற்கான உரிமையை வைத்துக் கொண்டாரென்றும் நம்பியிருந்தனர். 1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அரசாங்கம் இந்தியப் பிரஜாஉரிமைச் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபையிற்கொண்டுவந்தது இச்சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரசும் புதுடெல்லியிலுள்ள இந்திய அரசாங்கமும் எதிர்த்து வந்தன. இது, தமிழ்க் காங்கிரசின் அமைப்பு விதிகளிலும் அதன் மகாநாடுகள் பலவற்றிலும் வற்புறுத்தப்பட்ட - அடிப்படையான கொள்கைகளுக்கு முரண்பட்டதாயிருந்தது. அன்றியும், ஐந்து வருஷ ங்கள் இலங்கையில் வசித்த இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை பெறுவதற்காகவும், அவர்களுடைய பிறவுரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் உழைப்பதற்காக, இலங்கை, இந்தியக்காங்கிரசுக்குத் தமிழ்க்காங்கிரஸ்த் தலைவர் கைச்சாத்திட்டுத், தேர்தற் காலத்தில் வாக்களித்திருந்தார். எதைப்பெறுவதற்கு உழைப்பதாக இவர் வாக்களித்திருந்தாரோ, அதைப் பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் மறுத்தது. அவரும் தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரும் இதனை ஆதரித்தனர். இதிலிருந்து தமிழ்க்காங்கிரஸ் தலைவரும் பிரதிநிதிகள் சிலரும் உரிமைப் போரைக் கைவிட்டுவிட்டன ரென்பது தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. இதன் பயனாக , தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள், இரு கட்சியினராகப் பிரிந்தனர். முன்கூறியபடி, ஒரு பகுதியினர் - தங்கள் தேர்தற்காலக் கொள்கையைக் கைவிட்டுவிட்டனர். மற்றப் பகுதியினராய - உங்கள் முன்நிற்கும் நாங்கள் - தேர்தற்காலக் கொள்கையைக் கடைப்பிடித்து. உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்திருக்கின்றோம். 

இப்போதைய அரசியற்றிட்டத்தின் கீழ், சிங்கள மக்கள், தமிழ்ப் பிரதிநிதிகள் எல்லோரையும் உதாசீனஞ் செய்து, அவர்களது உதவியில்லாமல் அரசாங்கத்தை . நடத்தவும் அவர்களது விருப்பத்துக்கும் உணர்ச்சிக்கும் மாறாகச் சட்டங்களை ஒன்றன் மேலொன்றாய் நிறைவேற்றவும் முடியுமென்பது, 1947ஆம், 1948ஆம் ஆண்டுகளிலே தெளிவாகியபின், தமிழ் பேசும் மக்களுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நிபந்தனையற்ற சரணாகதி; மற்றையது தமிழ் பேசும் மக்களை, பலுரிமையற்றவர்களாகச் செய்யும் இப்போதைய அரசியலமைப்பிலிருந்து மீட்பதற்காக, ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பதாகும். பிந்திக்கூறிய வழி கடினமானது; ஆனால் வீரர்களுக்குரிய வழி அதுவேயாகும். அதுவுமல்லாமல், தேர்தற் காலத்திலே தமிழ் மக்கள் காட்டிய வழியும் அதுவே. தமிழ்க் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்குள்ளே, "தலைவணங்கோம்" என்று நின்றவர்கள், இவ்வழியையே கைக்கொண்டு, அதனையே பின்பற்றும்படி, நாடெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களிடையே பிரசாரஞ் செய்து வருகின்றனர். 

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று, தமிழ்க்காங்கிரஸ் தலைவரே குடியேற்ற நாட்டு மந்திரிக்குப் பின் வரும் தந்தியை அனுப்பினார். 
"இல:181 - சென்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் அபேட்சகருள் ஒருவராவது தெரிவு செய்யப்படாததிலிருந்தும்; 1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஆதரித்த பழைய அரசாங்க சபை அங்கத்தவர்களுள், ஒருவர் தவிர ஏனையோர் தோற்கடிக்கப்பட்டதிலிருந்தும்; இலங்கைத் தமிழ்மக்கள் சோல்பரி அரசியற்றிட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு.''
"இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லாவற்றுக்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியற்றிட்டமொன்றை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோருகிறது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்றிட்டத்தை வகுப்பதற்கு, அரசியல் நிர்ணயசபையொன்று வேண்டும். இப்பொழுது இருப்பதைப்போன்ற, சட்டசபை - மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால், நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய உரிமை கோருகிறோம்.'' 
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே, தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த தலைவர் சரணடைந்ததும், தமிழ்க் காங்கிரஸிற் பிளவு ஏற்பட்டபோது, தமிழ் பேசும் மக்கள் திற்க்கற்றவர்களாய்த் தவிக்கலாயினர். அரசியல் வாழ்விலே , தமது நிலையையிட்டு திருப்தி கொள்ளாதவர்களாய் இருந்தபோதிலும், இந்நிலையை மாற்ற வழி காணாதவர்களாய் திகைத்தனர். தமிழ் பேசும் மக்களுக்கென ஒரு சுதந்திர அரசினை நிறுவுவதன் மூலம், இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற புது எண்ணம் மக்களின் மனதைப் பெரிதும் கவரவில்லை. இப்படியான இயக்கத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருக்குமென அவர்கள் திடமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்களிடையே இவ்விதமாக இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிய வீரர்களும் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள், இந்த வீரர்கள் இடைவிடாது தமது நம்பிக்கையூட்டும் கொள்கையைப் பிரசாரஞ்செய்து கொண்டு வந்தபடியால், இன்று, தமிழ்பேசும் மக்கள் எல்லோருக்குமே சுதந்திரத் தமிழ் அரசு ஒன்றினை நிறுவவேண்டும் என்னும் கொள்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெருந்தொகையினராக நீங்கள் இங்குவந்து இன்று குழுமியிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். 

இப்படியான எண்ணத்தில் நம்பிக்கை மாத்திரம் இருந்தாற்போதாது; அதை டைமுறையில் கொண்டுவரவேண்டும். எமது கனவை நனவாக்குவதே எமது இயக்கத்தின் அடுத்த திட்டமாகும். இவ்விஷயத்திலே பலரும் சந்தேகமுறுகின்றனர். துரதிஷ்ட வசமாக, எமது சமீப காலத்திய அரசியல் வரலாறு இச் சந்தேகத்துக்கு இடமளிப்பதாயிருக்கின்றது. பல முறைகளில் தலைவரென்போர் எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். வீரர்களாகக் காட்சியளித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள், ஒருநாள் நமிர்ந்து நின்று போராடி, மறுநாள் களத்தையே விட்டு ஓடினர். 1934ஆம் ஆண்டு தொடக்கமாக சேர் மகாதேவா அவர்கள் தமிழ்ப்படையின் முன்னணியில் நின்றார்; அவருடைய உற்சாகம் படிப்படியாகக் குறைந்து, ஈற்றில் அவர் எதிரிகளின் கட்சியிற் சேர்ந்தார். இப்படியே திருவாளர்கள் நடேசன், தியாகராசா ஆதியானோரும் தமிழர்களின் உரிமைக்காக உழைப்பவர்களாயிருந்து, கடைசியில் 1945ஆம் ஆண்டிலே தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்த உரிமைகளை மறுக்கும் அரசியற்றிட்டத்துக்குச் சார்பாக வாக்களித்தார்கள். அண்மையிலே, நம் உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காது போராடிவந்த திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் இப்பொழுது போராட்டத்தைக் கைவிட்டது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வித குறையுமில்லை என்று எங்கும் பறை சாற்றி வருகிறார்! இப்படியான குட்டிக் கரணங்களின் பலனாக, தமிழ் இனத்தின் பண்புக்கே பழுது வந்தடைந்ததுடன், இப்போதுள்ள தமிழ்த்தலைவர்களிலும், எதிர் காலத்திலே தோன்றக்கூடிய தலைவர்களிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது. "இப்போது சுதந்திரத் தமிழ் அரசு வேண்டுமென்று கோரும் தலைவர்களை, நாம் எப்படி நம்புவது" என்று மக்கள் கேட்கின்றார்கள். "முந்திய தலைவர்கள் செய்ததைப்போல, இத் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு" என்று வினவுகின்றார்கள்; இவை சரியான கேள்விகளேயாகும். 

தமிழ்த் தலைவர்களது மனவருத்தத்தைத் தரும் நிலையற்ற போக்குடன், எம் பொதுமக்கள் அரசியல் விஷயங்களிற் காட்டிய விடாப்பிடியான உறுதியை ஒப்பிட்டுப் பார்த்தால், எவ்வளவு வித்தியாசம் தென்படுகிறது? மக்களின் மனவுறுதி சாந்தி அளிப்பதாயிருக்கின்றது. இதனைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எல்லாப், பிரிவினருள்ளும் தமிழ் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள், இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மாத்திரமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக் கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கை வாழ் தமிழ் இனத்துக்காகத் தொண்டு செய்யும் பொறுப்பு, பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக நடைபெற்ற அரசியற் கிளர்ச்சிகள், பெரிதும் வடமாகாணத்திலேயே ஆரம்பித்தன. வடமாகாணத்தினருக்குக் கூடுதலான வசதிகளிருந்தமையால், இக்கடமை அவர்களையே சார்ந்தது. யான கூறப்போகும் அரசியற் கிளர்ச்சிகள், பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப்பட்டன. ஆயினும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் சுதந்திர உணர்ச்சிக்கு அவை எடுத்துக்காட்டாகும். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பேயில்லாது, இந்நாட்டுக்கு ஓரளவு சுயாட்சி வழங்கிய முதல் அரசியற்றிட்டம் டொனமூர்த் திட்டமேயாகும். டொனமூர் அரசியற்றிட்டத்தின் கீழ் நடைபெற்ற முதற் பொதுத்தேர்தலை யாழ்ப்பாண மக்கள் பகிஷ்கரித்து விட்டனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு, அரசாங்க சபையில் யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் எவருமே இருக்கவில்லை . இப்பகிஷ்காரம் அந்த அரசியற்றிட்டத்துக்குள்ள எதிர்ப்பையே பிரதிபலித்தது. இந்த நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே இது ஒப்பற்றதொரு சம்பவமாகும். அந்த அரசாங்க சபைக்கு நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலிலே அந்த அரசியற் திட்டத்தை மாற்றி, சிறுபான்மையோருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற ஒரே கொள்கையுடைய பிரதிநிதிகளே வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். 

அடுத்த பொதுத்தேர்தல் இப்போதைய சோல்பரி அரசியற்றிட்டத்தின் கீழ், சென்ற 1947ஆம் ஆண்டிலே நடைபெற்றது. இத்திட்டம் சிறுபான்மையினருக்குச் சாதகமாகத் திருத்தியமைக்கப்படமாட்டாது என்றே தோன்றியது. இச்சந்தர்ப்பத்திலே தமிழ் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே அரசியல் விஷயங்களை நுணுகி நோக்குவோர் பலர் எதிர்பார்த்தனர். ஆனால். என்னுடைய பேச்சின் முற்பகுதியில் யான் குறிப்பிட்டதைப்போல. தமிழ் பேசும் மக்களின் விடுதலைப்போரினைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற தீர்ப்பே தமிழ்த் தொகுதிகளிலிருந்து கிடைத்தது. இத்தருணத்திலே திருகோணமலையும், வடமாகாணத்துடன் சேர்ந்துகொண்டது. இதிலிருந்து, இவ்விஷயத்தையிட்டு தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் கோரப்பட்ட நேரத்திலெல்லாம், உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகின்றது. தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே தமது இலக்கினின்றும் பிறழவில்லை. வருங்காலத்திலும் அவர்கள் தமது இலக்கினின்றும் தவறமாட்டார்கள் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இவ்விஷயத்தில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்தும், திருகோணமலையிலும் வடமாகாணத்திலுமுள்ள நம் சகோதரர்களின் கருத்தை ஆதரிப்பதாகவே இருக்கின்றதென்பது பல குறிகளிலிருந்து தெளிவாகின்றது. இங்ஙனமாக, இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்கெல்லாம் தங்களுடைய இன்றைய அரசியல் நிலையைப் பற்றியும் எதிர்கால நிலையைப் பற்றியும் ஒரு நிலையான கொள்கை உண்டு என்று விளங்குகின்றது. அவர்களுக்கு ஒரு நிலையான குறிக்கோள் உண்டு. சுருக்கமாகக் கூறினால் அவர்களுக்குத் தாங்கள் ஒரு தனித்தேசிய இனம் என்ற உணர்ச்சி உண்டு. இம் மக்களின் நலத்துக்காக உழைக்க விரும்புவோர் உற்சாகமூட்டக்கூடிய இவ்வுணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

நமது மக்களின் அரசியல் இலட்சியத்தை அடைவதற்கு, கட்டுப்பாடான முறையில் வேலை செய்வது அத்தியாவசியமாகும். ஆனபடியால், தமிழ் பேசும் மக்களின் விடுதலையைக் காண்பதற்கு விரும்புபவர்களாய், நமது மக்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் உள்ள உண்மை ஊழியர்களை ஒன்று சேர்த்து ஒரு ஸ்தாபனம் நிறுவுதல் வேண்டும். 

இனி, தமிழ் பேசும் மக்கள் சென்ற காலங்களில் அரசியல் உலகிலே தங்களை ஆபத்து எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக எண்ணியது சரியோவென்று கவனிப்போம். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இன்றைய அரசியற்றிட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேற் சிறிது காலந்தான் ஆகிறது. இதற்கிடையில், அரசாங்கமோ - இங்கே எடுத்துச்சொல்ல முடியாத தொகையினவாய் நமக்குப் பாதகமான சட்டங்களை ஒன்றன் மேலொன்றாய் நிறைவேற்றியும், பரிபாலனத் துறையில் நம்மைப் பாதிக்கக் கூடிய கருமங்களை ஆற்றியும் கொண்டுவருகின்றது. தெளிவாகப் புலப்படுகின்ற சில உதாரணங்களை மாத்திரம் இங்கே எடுத்துக்காட்டினாற் போதுமென்று கருதுகின்றேன், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களில், அரைப் பங்கினரைப் பிரஜாவுரிமை யற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன், அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றது. அந்நியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவென்று வெளிக்குக் கூறிக்கொள்கின்றனர். இது ஒரு போலி நியாயமாகும். இலங்கையின் மத்திய பாகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் தமிழ்த் தொழிலாளர்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதே இச்சட்டங்களின் உண்மை நோக்கமாகும். இவர்களுள்ளே பெரும்பாலானோர் வேறு நாட்டையே அறியமாட்டார்கள், அவர்களெல்லோரும் இந்தியர்களல்லர்; இலங்கையர்களே. தமிழ்பேசும் மக்களாக இருப்பதே அவர்களுடைய ஒரே ஒரு குற்றம். அரசியல் அதிகாரம் எண்ணுத் தொகையினையே பொறுத்திருக்கின்றது. இந்த மலைநாட்டுத் தமிழர்களைச் சேர்த்து எண்ணினாலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியலதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 

இவர்களுள் மலைநாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழ் பேசும் மக்கள், தொகையில் மிகவும் குறைந்த அரசியல் அநாதைகளாய் விடுவார்கள். இது போதாதென்று, இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள். இது கொடுமையிற் கொடுமையாகும். அரசாங்கத்தின் நோக்கம், இந்நாட்டில் வசிப்பதற்குப் பூரண உரிமையுடைய இம்மக்களை இந்நாட்டைவிட்டுத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகச் சிங்களம் பேசும் மக்களாக மாற்றுவதுதான் என்பது எவருக்கும் எளிதிற்புலனாகும். 

தேசியக்கொடி விஷயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், தமிழ் பேசும் மக்களுடைய உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி - சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று, அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக் கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டின் தேசியக்கொடியாக, ஒரு இனத்தவரின் கொடியைக் கொண்ட நாடு வேறு எதுவும் உலகிலில்லை. தேசியக்கொடி விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கை, தமிழ் பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம், அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக் கொண்டிருக்கின்றது; அவ்வளவுதான். 

அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கையானது, இவையெல்லாவற்றிலும் பார்க்கத் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்து விளைவிக்கக் கூடியதாய் இருக்கின்றது. இக்கொள்கையின் ஆரம்பத்தைத்தான் கல்லோயாவிற் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ் பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ் பேசும் இப்பிரதேசத்திலே, அரசாங்கம், சிங்கள் மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகளுள். இது உண்மையாயிருந்தால், இன்றைய தமிழ் பேசும் பிரதேசத்தைக் குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றதென்பது தெளிவு. தடுப்பாரின்றி இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லா தொழியும்.

நிதி மந்திரியவர்கள் விளக்கியபடி, அரசியல் மொழி விஷயத்திலே தமிழ் பேசும் மாகாணங்களைப் பரிபாலன முறையிற் பிரித்து விடுவதும்; மற்றைய ஏழு மாகாணங்களிலும் சிங்களத்தையே அரசாங்க மொழியாகச் செய்வதும் தான் அரசாங்கத்தின் கொள்கையாகும். இவ்வேழு மாகாணங்களிலே, குறைந்தது இரண்டு மாகாணங்களிலாவது, தமிழர்கள் செறிந்து பெரும்பான்மையோராக வாழும் பிரதேசங்கள் இருக்கின்றன. இவர்களிடம் அரசாங்கம் நீதியாக நடந்துகொள்ள விரும்பினால், அவர்களுடைய பிரதேசத்தின் பரிபாலன விஷயங்களில் அவர்களுடைய மொழியையே உபயோகிக்க வேண்டும். ஆனால், இது நடைபெறப்போவதில்லை. இப்படியான செயல்களினால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஆளுவதற்கு, இன்றைய அரசாங்கம் தர்ம நீதிப்படி அருகதையற்றதாகிவிட்டது. அவர்கள் அப்படி ஆளுவதற்கு அதிகார வலிமையொன்றே உரிமையளிக்கின்றது. இரண்டேயிரண்டு வருடச்சுயாட்சியில், தமது சொந்த நாட்டிலேயே இவ்வளவு கீழ்நிலையடைந்து விட்டார்கள் ! இன்றைய அரசாங்கம் தங்களுடையதென்று தமிழ் பேசும் மக்கள் கருதவில்லை, இந்தச் சூழ்நிலையில் யாம் செய்யவேண்டுவதென்ன ? நடந்தது நடக்கட்டுமென்று வாளாதிருப்பதா ? அவ்விதம் இருத்தல் நமக்கோ-நமது நாட்டுக்கோ நன்றன்று. நாம் ஆண்மையுடன் முயன்று இப்பிரச்சினையைத் தீர்க்க ஒருவழி காணுதல் வேண்டும். அவ்வழிதானென்ன ? கூடுதலான பிரதிநிதித்துவம் கோரினோம்; அது கிட்டவில்லை . வேறோர் பரிகாரம் தேடியாக வேண்டும். இதற்காக, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழுகின்ற பிற நாடுகளைப் பார்ப்போம். இலங்கையில் போலவே, அந்நாடுகளிலும் பல்வேறு மொழிகளைப் பேசும் இனம் ஒவ்வொன்றும் தத்தம் உரிமைகளைக் கவனமாகப் பேணிவந்தன. சிறிய மொழிவாரி இனங்கள் பெரிய மொழிவாரி இனங்களால் விழுங்கப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டன. இவ்விதம், மொழிவாரி இனங்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் பல தடவைகளில் யுத்தத்தில் முடிந்து, பெரிய தேசிய இனங்களும் மோதிக்கொள்ள நேரிட்டதுண்டு. இவ்வித சச்சரவுகளை நீக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட பூரண சுதந்திர அரசுகளை அமைப்பது; இதிலும் பார்க்கத் தீவிரங் குறைந்ததான மற்றைய வழி, மொழிவாரிச் சுயாட்சி மாகாணங்களை அமைத்து, அவற்றை இணைக்கும் ஒரு மத்திய அரசாங்கத்தையுடைய சமஷ்டி அரசை ஏற்படுத்துவதே . இவ்விரு முறைகளையும் கையாளுவதற்கு, வெவ்வேறு மொழிபேசும் இனங்கள் பிரிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வாழுதல் வேண்டும். சமஷ்டி அரசியலானது, உலகிற் பல பாகங்களிலும் இவ்வித பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்துவைத்திருக்கிறது. பிரெஞ்சு-ஆங்கில மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட கனடா தேசமும்; பலவாய் , ஜெர்மன், பிரெஞ்சு - இத்தாலிய சுவிற்சலாந்து தேசமும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். ரஷ்ய தேசத்திலும் சுயாட்சி கொண்ட மொழிவாரி மாகாணங்களே அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே ஒரு தனியான பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களும், ஒரு தனித் தேசிய இனத்தினராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவிலும், இந்திய தேசியக் காங்கிரசும் இந்திய அரசாங்கமும் மொழிவாரி மாகாணங்களை அமைக்க வேண்டுமென்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு, அப்படியே அமைத்தும் வருகின்றார்கள். தனி ஆந்திர மாகாணமொன்று உருவாகின்றது. கன்னடர் தமக்கொரு மாகாணம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்கின்றனர். இவையெல்லாம் ஒவ்வொரு மொழிவாரி இனமும் தன்னைத்தானே பாதுகாக்க விரும்பும் இயற்கையுணர்ச்சியின் பயனாக ஏற்பட்டவையேயாகும். 

யாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து, இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள - சமஷ்டி அரசு - இலங்கையில் ஏற்படவேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாயிருக்கிறது. தமிழ் பேசும் பிரதேசங்களை இலகுவாகப் பிரித்துவிடலாம். இடையிடையே இரு மொழிகளைப் பேசும் மக்களும் கலந்து வாழும் பிரதேசங்களும் உண்டு. ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு ஒவ்வொரு மொழியைப் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களை, சுயாட்சி மாகாணங்களாக வகுப்பதற்குத் தடை ஏற்படக்கூடாது. சமஷ்டி அரசியலால் ஒருவரும் நஷ்டமடையப்போவதில்லை . நிச்சயமாகச் சிங்கள மக்கள் நஷ்டமடையவே மாட்டார்கள். ஏனென்றால், இது பெரும்பான்மையோருடைய பிரதிநிதித்துவத்தைக் குறைத்து. சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிக்கும் திட்டத்தைப் போன்றதன்று. ஆதலால், சமஷ்டி அரசியல் எல்லோரும் விரும்பவேண்டிய ஓர் இலட்சியமாகும். 

சுயாட்சித் தமிழரசை நிறுவவேண்டுமென்று யாம் கோருவதற்குப் பல காரணங்களுண்டு. முஸ்ஸிம்கள், தமிழர்களாகிய தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் இப்பொழுதே , தாங்கள் - தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மையைப் பெற்று வருகிறார்கள். ஒரு மனிதனின் பூரணமான மனோவிருத்திக்கு, அவன், "தானிருக்கும் நாடு தன்னுடையதே" என்றும், "நாட்டின் அரசாங்கமும் தனதே'' என்றும் கருதவேண்டியது அவசியமாகும். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே இன்று இவ்வுணர்ச்சி இல்லாதிருக்கிறது. அவர்கள், தங்கள் பிரதேசங்களைத் தாங்களே ஆளுவதன் மூலம், அவ்வரசாங்கம் தங்களுடையதே என்று கருதுவதற்கு உரிமை இருக்க வேண்டும். இன்று கூட , தமிழ்ப்பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும், சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்குமிடையே, இவ்வுணர்ச்சியைப் பொறுத்தவரையில் ஒரு வேற்றுமை இருப்பதைக் காணலாம். சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றார்கள் ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் வசிப்பவரிடையே சுதந்திர உணர்ச்சி, இன்னும் நிலவுகிறது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுதந்திர அரசு வேண்டுமென்ற இந்த இயக்கங்கூட, தமிழ் பேசும் பகுதிகளில் வசிக்கும் மக்களாலும், அப்பகுதிகளுடன் இன்னும் தொடர்புடையவர்களாலுமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத் தமிழர்கள் இத்திட்டத்தை ஆதரிக்கும் அளவுக்கு அங்குள்ள முஸ்லிம் மக்களும் இதை வரவேற்கின்றனர். கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழ் அரசின் பகுதியாக வேண்டுமென்றால், தமிழ் பேசும் அவ்விரு சாகியத்தாரும் ஒன்றுசேர வேண்டும். ஆனால், எங்களுடைய இயக்கம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? அல்லது சிங்களம் பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லிம்களுக்கே பூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகள், இந்நாட்டில் மிகவும் குறைவாக அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளாக இருக்கின்றன. இலங்கையின் பரப்பில் முப்பது விகிதத்தையும்; மொத்த சனத்தொகையிற் பத்து விகிதத்தையும் இம் மாகாணங்கள் கொண்டிருக்கின்றன. இவை நன்றாக அபிவிருத்தி செய்யப்படக்கூடியன. போதிய நீர்ப்பாசன வசதிகளுடன் - சம தரையுள்ள இப் பிரதேசங்கள், தமிழ் பேசும் மக்களுடைய அரசாங்கத்தினாலன்றிச் சீரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படமாட்டா. சிங்கள அரசாங்கத்தினால் இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டால், அங்கு சிங்களமக்கள் குடியேற்றப்படுவார்கள் என்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே. கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் என்ன நடைபெற்று வருகின்றதென்பதை, அங்குள்ள மக்கள் இப்பொழுதே உணர்ந்துவிட்டார்கள். 

எங்களுடைய ஒரேயொரு நோக்கம், ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் அங்கமாக, ஒரு சுதந்திர அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பெறுவதேயாகும். செய்யவேண்டிய வேலை எவ்வளவு கஷ்டமானதென்பதை யாம் உணர்ந்தேயிருக்கின்றோம். ஆயினும் அப்பணியைச் செய்து முடிக்க எம்மால் இயலும். அதைச் செய்தே தீரவேண்டும். எமக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் பல விஷயங்கள் உள்ளன. யான் முன் குறிப்பிட்டதைப்போல, எமது மக்கள் தம் எதிர்காலத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் உறுதியான அரசியற் கொள்கையே எமக்குச் சாதகமான பெரிய சக்தியாகும். யாம் சிறந்த முறையில் - நம்பிக்கைக்குரிய ஊழியர்களுடன் ஒரு கட்சியை அமைப்போனால், எமது மக்கள் எம்மைக் கட்டாயம் ஆதரிப்பார்கள். சென்ற காலங்களில் தலைவர்களின் உறுதியற்ற நிலையே, எமது பலவீனத்துக்குக் காரணமாயிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்தாலன்றி, எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப்போல, சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை, "பதவி ஏற்கவே மாட்டோம்" என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமுமாக யாம் இருத்தலாகாது.

செல்வத்திற் குறைந்த எங்களுக்கு, வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை. நேர்மையையும் - மன உறுதியையும் – இலட்சியத் தூய்மையையுமே நாங்கள் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும். இந்திய விடுதலை-இப்படியான தார்மீக சக்திகளினாலேயே பெறப்பட்டது. எமது விடுதலை - வெளிச்சக்திகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. யாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமானால், நமது சமூகத்திலிருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மை பெறச் செய்யவேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுவதாகக் கருதுகின்றனர். யாம் ஒருவருக்குக் கொடுமை செய்தால், தர்மநீதியின்படி எமக்கும் பிறரொருவர் அதையே செய்வார். தமிழ்மக்கள் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமேயானால், தம் சமுதாயத்திலே உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ்வுரிமைகளை வழங்க வேண்டும். 

மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களுடைய நிலைமையானது, இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டாதவர்களாய் விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிமை இல்லாமலிருப்பது மாத்திரமன்றி, தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவு மிருக்கின்றார்கள். ஏனைய தமிழ் பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவையல்ல ; சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடமிருந்தே அவ்வுதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் - நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம் பெறுதல் வேண்டும். 

இறுதியாக, என்னுடைய பேச்சினைப் பொறுமையுடனும் ஆதரவுடனும் கேட்டுக் கொண்டிருந்தமைக்காக உங்களுக்கு யான் நன்றி கூறுகிறேன். உங்களுக்குள்ளே எத்தனையோ பேருடைய வீரத்தை யான் நேர்முகமாக அறிவேன். அவ்வீரமானது - என்னகத்தும் செறிந்து, எனக்கும் உற்சாகம் அளிக்கின்றது. குற்றங்களிருந்தால் மன்னித்து, எங்கள் தொண்டின் ஒரு பகுதியாக என் முயற்சியையும் ஏற்றுக்கொள்ளும்படி, உங்கள் எல்லோரையும் பணிவுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன். 

வணக்கம்.

"தந்தை செல்வா ஒரு காவியம்" எனும் நூலிலிருந்து
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates