Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன்

(மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 )

மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம்.

மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக வெளிவந்த மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வரிசையில் இறுதியாக வெளிவந்த தொகுதி 6வது தொகுதி. கடந்த 2018 ஆம் ஆண்டு அது இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. ஆம் மகாவம்சம் என்கிற வரலாற்றுக் குறிப்புகளை அரசே எழுதி வைத்து வருகிறது என்பதை இங்கே முதலில் விளங்கிக்கொள்வோம். கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச்சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் வெளியிடப்படுவதுமில்லை. அதை எழுதும் அணியில் எந்த தமிழ் அறிஞர்களும் இதற்கு முன் இருந்ததுமில்லை. இவ்வாறு சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களும் கூட தமிழர்களால் வெளிவந்ததில்லை. வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த வகையில் 6ஆம் தொகுப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி வெளியாகும் முதல் கட்டுரை இதுவாகத்தான் தான் இருக்கும்.

ஒரு வரலாற்றுப் புனித நூலாக கருதப்பட்டு வந்த மகாவம்சம் இன்றைய நிலையில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ வரலாற்றுப் பதிவாக இது ஆக்கப்பட்டிருப்பதால் நாம் அதிக கவனத்துக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது.

திருத்திய "மகாவம்சம்" பதிப்பு 2016 ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை. இந்தியக் கொடியில் அசோக சக்கரமும் இருந்திருக்காது, நமது மகாவம்சத் தகவல்களைக் கொண்டு தான் அசோக சக்கரவர்த்தியை யார் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். ஜோர்ஜ் டேர்னர் மகாவம்சத்தை மொழிபெயர்க்கும்வரை தர்மாசோகன் யார் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை." என்றார். அன்றைய தினம் பிக்குமார்களை அழைத்து பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வை நடத்தியபோது மகாவசத்தின் பிந்திய அத்தனை தொகுதிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்கான குழுவொன்றை ஏற்படுத்தும்படியும் அதற்கு நிதியொதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை மகாவம்சம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதைத் தேடிப்பார்த்ததும் இல்லை அதைச் செய்யச் சொல்லி கட்டளை இட்டதுமில்லை. அதில் அக்கறை காட்டியதுமில்லை.

அந்தப் பதிப்பில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தகவல் பிழைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டது. குறிப்பாக புதிய ஆராய்ச்சிகளின் படி “சிஹல தீப”, “சிஹலே” போன்ற பெயர்களில் இலங்கை அழைக்கப்பட்ட விடயங்கள் சேர்க்கப்பட்டிருப்பது பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வப்போது முன்னைய மகாவம்சப் பிரதிகளைத் திருத்தும் (திரிக்கும்) பணிகளும் கூட நிகழ்கிறது என்பதைத் தான் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு “மகாவம்ச மனநிலை” முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கிறது. அதனை விதைத்ததில் இலங்கையின் கல்வித்துறைக்கும் முக்கிய பாத்திரமுண்டு.  மேற்படி கூட்டத்தில் வைத்து ரணிலைப் பாராட்டி பேராசிரியர் எஸ்.பீ.ஹெட்டி ஆராச்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இப்படி கூறினார்.

“மகாவம்சத்தைப் போற்றி பல இடங்களில் நீங்கள் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை 2001 ஆம் ஆண்டு நீங்கள் மத்திய கலாசார நிதியத்துக்கு தலைவராக இருந்த போது தான் மகாவம்சத்தின் சிங்கள, பாளி பிரதிகள் உடனடியாக தயாரிக்கப்படவேண்டும் என்கிற யோசனையைச் செய்தீர்கள். இப்போது இதோ நம்மிடம் அவை இருக்கின்றன.” என்றார்.

ரணில் இனவாதமற்ற ஒரு தலைவர் என்கிற பொது அப்பிராயம் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த மகாவம்ச மனநிலையால் பீடிக்கப்பட்ட பலருக்கு அப்படி தாம் பீடிக்கப்பட்டதே தெரியாது இருப்பதும் அந்த நோயின் அறிகுறிகளில் ஒன்று தான். இல்லையென்றார் ரணில்; மகாவம்சத்துக்கும் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கும் உள்ள உறவென்ன என்பதை அறிந்திருப்பார். 

வரலாற்று மூலத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுவரும் தமிழர்கள்

2010ஆம் ஆண்டு மகாவம்சத்தின் ஐந்தாவது தொகுதி (1956 - 1978) முடிக்கப்பட்டு இலங்கையின் கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆறாவது தொகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் உத்தியோகபூர்வ வரலாறு இது தான் என்று அரச ஆவணமாகவும், புனித நூலாகவும் கூறப்படும் மகாவம்சம் இலங்கையில் ஓரினத்துக்கு மட்டுமே இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். வலுக்கட்டாயமாக இலங்கைத் தேசத்துக்குள் இணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்; தம்மைப் பற்றி “அரசு” எத்தகைய வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருக்கிறது என்பதை அறிய வாய்ப்பு கூட வழங்கியதில்லை. ஏனென்றால் அது தமிழ் மொழியில் இன்றளவிலும் இல்லை.

தமிழர்களின் வரலாற்றை சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய கருத்து நிலையைப் பரப்பி வந்திருக்கிறது என்பது பற்றி அறிய தமிழர்களுக்கு எந்த வாய்ப்புமளிக்கப்பட்டதில்லை. இன்று வரை தமிழ் மொழியாக்கம் பற்றி தமிழர் தரப்பில் இருந்து கூட எவரும் நிர்ப்பந்தித்ததாகவோ, கோரியதாகக் கூட தகவல்கள் இல்லை.

தமிழில் இல்லை... ஆனால் ஜப்பானிய மொழியில்....

இன்றுவரை தமிழில் கிடைக்கப்படும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. அதே வேளை அரச அனுசரணையுடன் மகாவம்சம் (தொகுதி 1,2), தீபவம்சம் உள்ளிட்ட ஐந்து பௌத்த இதிகாச நூல்கள் ஜப்பான் மொழியில் கடந்த 14 யூலை 2017 அன்று புத்த சாசன, நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்சவினால் அவரது அமைச்சில்  வெளியிடப்பட்டன. அம்பாறையிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதியாக இருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜி.அசாமி என்கிற ஒரு பௌத்தத் துறவி தான் இவற்றை மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்.  மகாவம்சத்தை மேலும் 8 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியில் மகாவம்சத்துக்கு பலர் உரை எழுதியிருக்கிறார்கள். சிங்கள நூல் விற்பனை நிலையங்களில் அத்தகைய  பல நூல்கள் காணக் கிடைக்கின்றன. இலங்கையின் பல பௌத்த இலக்கியங்கள் (திபிடக உள்ளிட்ட) பாளி, சிங்களம், ஆங்கில, ஜப்பானிய இன்னும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பௌத்த நிறுவனங்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களாலும் அப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசாக 08-09-1978 ஆம் ஆண்டு ஆனதும் ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆனார். ஜே.ஆரால் தான் முதலாவது தடவை கலாசார அமைச்சின் கீழ் 30.01-1978இல் மகாவம்சத்தை தொடர்ச்சியாக பாளி, சிங்கள மொழிகளில் ஆக்கும் பணிக்கான முதலாவது கூட்டம் அவ் அமைச்சின் காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கி.பி.1935 வரை எழுதப்பட்ட மகாவம்சத்தின் மூன்று தொகுதிகளை விட 1935 -1956 வரையான காலப்பகுதியைக் கொண்ட நான்காவது தொகுதிவெளியிடப்பட்டது. அது போல 1956-1978 வரையான கால ஆட்சியை உள்ளடக்கி ஐந்தாம் தொகுதியை எழுதும் பணி 2008 இல் தான் ஆரம்பமானது.

மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. ஐந்தாம் தொகுதியின் ஆக்கக் குழுவில் அங்கம் வகித்த 25 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத  நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி.

இதைத் தவிர மகாவம்சத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்களம் ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.

2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே பின்னர் 6வது தொகுதி வெளியிடப்பட்டது.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010ஆம் ஆண்டு வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.

ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?

சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதம் தான் மகாவம்சம். அது இலங்கையில் இதுவரை ஏற்படுத்திய நாசம் போதும். இதற்கு மேல் தாங்காது. தமிழ் அரசியல் சக்திகள் இதற்கு உரிய முறையில் வினையாற்றுவது முக்கியம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும், ஏன் உலகமே காத்திருப்பது பிரபாகரனின் மாவீரர் உரைக்காகத் தான். நோர்வே அரசின் மத்தியத்துவத்துடனான இறுதிப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியுற்றதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் சிங்களப் பேரினவாதமயபட்ட மக்களின் மனநிலையை “மகாவம்ச மனநில” என்று குறிப்பிட்டார். அந்த உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.


இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை....”

இலங்கையின் இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் வகிபாகம் எத்தகையது என்பதை தனது உரையில் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண்டார் பிரபாகரன்.

ஒன்றை புனித நிலைக்கு உயர்த்திவிட்டால் அது கேள்வி கேட்கப்பட முடியாத, விமர்சிக்க முடியாத இடத்தை பிடித்துவிடுகிறது. அப்பேர்பட்ட புனிதத்துவ இடத்தில் உள்ளவை புனிதத்துவ அந்தஸ்து வழங்கப்படாத அனைத்து விடயங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி கோலோச்சும் நிலையையும் எட்டி விடுகிறது. தம் “புனிதத்துக்கு” வெளியில் உள்ளவற்றையெல்லாம் அந்நியமாக ஆக்கிவிடுகிறது. ஈற்றில் அப்புனிதத்துக்குள் அடங்காத அத்தனையும் பாரபட்சத்துக்கும், நசுக்குதலுக்கும், அழிப்புக்கும் கூட உள்ளாக்கப்பட்டு விடுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் வகிபாகம் அத்தகையது தான். அதன் மீது தொடுக்கப்படும் எந்தக் கேள்விகளையும் விமர்சனங்களையும் சிங்கள பௌத்த சக்திகள் பகை முரண்பாட்டுக் கருத்துக்களாகவே கருதிக்கொள்கின்றன. புனிதத்தின் மீது தொடுக்கும் போராகவே எடுத்துக்கொள்கின்றனர். 

மகாவம்சம் ஏற்படுத்திய இலங்கையின் முதல் தமிழ் - சிங்களக் கலவரம்

இலங்கையில் நிகழ்ந்த முதலாவது சிங்களத் – தமிழ் கலவரம் மகாவம்சத்தின் மீதான விமரசனத்தின் விளைவாக ஏற்பட்டதே என்பதையும் இங்கு நினைவு கூறுதல் பொருத்தமாக இருக்கும். 1939ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்தக் கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்களே அதிகம் பாதிகம் பாதிக்கப்பட்டனர்.

1939ம் ஆண்டு மே 30 ஆம் திகதி மலையகப் பகுதியான நாவலப்பிட்டி நகரில் 'முஸ்லீம் இளைஞர் சங்கம்' (Y.M.M.A) கூட்டம் நடைபெற்ற பொது சிறப்பு விருந்தினராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல் என்றும் விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே என்றும் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்களவர்களை ஆண்டிருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார்.

மகாவம்சத்தை விமர்சித்து ஜி.ஜி.பொன்னம்பலம் பேசிவிட்டார் என்று சிங்களப் பகுதிகளில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டதன் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் தூண்டிவிடப்பட்டது.  அது இறுதியில் இனக்கலவரத்திற்கு இட்டுச் சென்றது. இதன் காரணமாக இந்திய மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளான 'பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளில் வாழும் அப்பாவி இந்திய வம்சாவளிகள் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வரை கலவரம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் நாலவலப்பிட்டியில் மகாவம்சத்தை தாக்கிப் பேசிய உரையே அக்கலவரத்துக்கு காரணம் என்று இதுவரை பல வரலாற்று ஆய்வாளர்களும் பதிவு செய்து வந்திருக்கின்றனர். அவரது உரை குறித்த அந்த மூன்றாந்தரப்பு ஆதாரங்களையே பலரும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பல ஆய்வாளர்களும் நாவலப்பிட்டி கூட்டம் நிகழ்ந்த இரண்டாவது நாளான 01.06.1939 அன்று வெளியான The Hindu Organ பத்திரிகையையே ஆதாரம் காட்டி வந்திருக்கின்றனர். இக்கட்டுரைக்காக அப்  பத்திரிகையின் மூலப் பிரதியை எடுத்துப் பார்த்ததில் பொன்னம்பலம் சிங்கள வரலாற்று புனைவுகளை சாடுகிறார். ஆனால் மகாவம்சம் குறித்து அவர் எங்கும் தாக்கவில்லை என்று உறுதிசெய்துகொள்ள முடிகிறது.

ஆனால் மகாவம்சத்தின் மீது புரியப்பட்டதாக கூறப்படுகின்ற வெற்று வதந்திக்கே அத்தகைய பெரும் கலவரத்தை உண்டுபண்ண முடிந்தது என்பதை இங்கு கவனத்திற் கொள்வோம்.


6 வது தொகுதியின் தோற்றம்

மகாவம்சமானது குறிப்பிட்ட கால வரிசைப்படி, அக்காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள், அரசிகள், தேசாதிபதிகள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்போரின் ஆட்சிக்காலங்களை மையப்படுத்தி அக்காலப்பகுதியின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வடிவத்தையே கொண்டிருக்கிறது. அதன்படி 6வது தொகுதியானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக்கால முடிவு வரையான காலப்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. 1956 -1978 காலப்பகுதியைக் குறிக்கின்ற மகாவம்சத்தின் ஐந்தாம் தொகுதியானது 129 வது அத்தியாயத்துடன் நிறைவடைகிறது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஜே ஆர் வெற்றி பெற்று 1977 யூலை 23 இலிருந்து 1978 பெப்ரவரி 04 வரை அவர் பிரதமராக குறுகிய காலம் பதவி வகித்தார். அவருக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அவர் அரசியலமைப்பை மாற்றி ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். எனவே அவர் பிரதமராக பதவி வகித்த அந்த முதல் ஏழு மாதங்களை 129 வது அத்தியாயம் பேசுகிறது. கூடவே மிகச் சுருக்கமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். 1978 இல் பதவியேற்றதையும் குறிப்பிடத் தவறவில்லை.

1978 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து மகாவம்சத்தின் 6 வது தொகுதி தொடங்குகிறது. அதாவது 130 வது அத்தியாயத்திலிருந்து அது தொடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும், 6வது தொகுதியிலும் ஜே.ஆரின் ஆட்சி பற்றி இருக்கிறது.



இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.

  1. தொகுதி  1 -  இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது (37வது அத்தியாயம் வரை) மகாநாம தேரரால் எழுதப்பட்டது.
  2. தொகுதி  2 -  கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (100வது அத்தியாயம் வரை) இதை “சூளவம்சம்” என்றும் அழைப்பர். இதை எழுதியவர்கள்
    1. தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை
    2. தர்மகீர்த்தி (II) தேரரால் 79-90 வது அத்தியாயம் வரை
    3. திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் 90-100 வது அத்தியாயம் வரை
    4. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர்  ஆகியோரால் 101 வது அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது
  3. தொகுதி  3 -  1815 முதல் 1936 வரை (114 வரை வது அத்தியாயம் வரை) யகிரல பஞ்ஞானந்த தேரரால் எழுதப்பட்டது
  4. தொகுதி  4 -  1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை (124வது அத்தியாயம் வரை) கலாநிதி நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  5. தொகுதி  5 -  1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை (129 வது அத்தியாயம் வரை) பெல்லன ஸ்ரீ ஞானவிமல தேரரின் தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  6. 6) தொகுதி  6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம்  முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை (133 வது அத்தியாயம் வரை) அரசின் கீழ் அமைக்கப்பட்ட மகாவம்சக் குழுவால் பேராசிரியர் திருமதி மாலனி எந்தகம தலைமையில் இயற்றப்பட்டது.
    1. 130 வது அத்தியாயம் - ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி 1978 பெப்ரவரி 04 தொடக்கம் -02.02.1989 வரை
    2. 131 வது அத்தியாயம் - ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி 1989 பெப்ரவரி 02 தொடக்கம் - 12.11.1994 வரை
    3. 132 வது அத்தியாயம் -சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி 1994 நவம்பர் 12 தொடக்கம் - 19.11.2005 வரை
    4. 133 வது அத்தியாயம் - மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி 2005 நவம்பர் 19 தொடக்கம் - 17.11.2010 வரை

மகாவம்சத்தின் முதலாவது தொகுதியில் ஒரே அத்தியாயத்தில் பல அரசர்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன. உதாணத்துக்கு 10 அரசர்கள், 11 அரசர்கள், 12 அரசர்கள், 13 அரசர்கள் என முறையே 33-36 வது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன. அதுபோல ஒரே அரசரை பல அத்தியாயங்களிலும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு முதலாவது தொகுதியில் 37 அத்தியாயங்களில் பத்து அத்தியாயங்கள் துட்டகைமுனு காலத்தை பதிவு செய்துள்ளன. துட்டகைமுனு – எல்லாளன் போர்  என்பது மகாவம்சத்தின் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதை அறிவீர்கள். தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியின் அச்சாணி அக்கதைகள். மகாவம்சத்தில் அதற்கு ஒதுக்கப்பட்ட அளவு இடம் வேறெந்த கதைகளுக்கும் – ஆட்சிகளுக்கும் – அரசருக்கும் கொடுக்கப்பட்டதில்லை. அதே வேளை இதை விட அதிக அத்தியாயங்கள் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியில் 68 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்கள் மகா பராக்கிரபாகுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதே என எவரும் வாதிடலாம். ஆனால் அத்தியாயங்களாக அவை அதிகமாக இருந்தபோதும் உள்ளடக்கத்தில் துட்டகைமுனுவுக்கு கொடுக்கப்பட்டத்தை விட குறைவு தான். அந்தளவு விரிவான விபரங்களுடன் துட்டகைமுனு காலம் பதிவு செய்யப்பட்டிருகிறது

மகாவம்சத்தின் 6 வது தொகுதியைப் பொறுத்தளவில் தலா பத்து வருடங்கள் ஆட்சி புரிந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருக்கும் ஒரு அத்தியாயம் தான், ஐந்தாண்டுகால ஆட்சியான பிரேமதாச + டிங்கிரிபண்டா விஜேதுங்க ஆட்சிக்கும் ஒரு அத்தியாயம் தான். இறுதியாக 2010 வரை ஐந்தாண்டுகள் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்சவுக்கும் ஒரு அத்தியாயம் தான். ஆனால் அவ் அத்தியாயங்களின் உள்ளடக்கம் ஆட்சிபுரிந்தவர்களின் காலத்துக்கு ஏற்றாற்போல கூடிக்குறைய உள்ளது.

மகாவம்ச உருவாக்கக் குழுவில் உள்ளவர்களால் பல்வேறு துறைசார்ந்து வகுக்கப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை; இறுதியில் ஐந்து பேரைக் கொண்ட குழு மீண்டும் ஒன்றாகத் தொகுத்து உருவாக்கியதாகவும், பின்னர் அந்த சிங்களப் பிரதியை பாளி மொழி அறிஞர் குழுவைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிடப்பட்டதாகவும் அதன் முகவுரையில் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் 6 ஆம் தொகுதியானது இரண்டு பாகங்களைக் கொண்ட பெரிய தொகுதி. ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமானது. ஆனால் இந்தளவு பக்கங்களைக் கொண்டிருந்தும் தமிழர்கள் பற்றிய பதிவுகள் வெகுகுறைவு. அதில் இருக்கிற பதிவுகளும் கூட தமிழர்களின் அபிலாசைகளை பயங்கரவாதமாக சித்திரிக்கின்ற பதிவுகளே. அன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மகாவம்சம் தமிழர்களுக்கு எதிரானதும் சிங்கள பௌத்தர்களை புனிதத்துவ இடத்துக்கு தூக்கி நிறுத்துவதுமான வரலாறை எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்றால் இன்று வரை மகாவசம் அதே இனவெறுப்பையும், பாரபட்ச பாணியையும் தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிற முடிவுக்கே நாம் வர முடிகிறது.

இத்தொகுதியின் முன்னுரையில் இப்படி ஒரு வாசகம் இருக்கிறது...

“மகாவம்சத்தை தொகுக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவில் உள்ளவர்கள் தமக்கென சொந்த அரசியல் சமூக கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் ஆனால் அவர்கள் எவரும் இதை எழுதும்போது எந்தவித பாரபட்சங்களையும் கொண்டிராதவர்களாக இருத்தல் அவசியம். இந்தியாவின் முதலாவது சரித்திர நூலாக கருதப்படும் “ராஜதரங்கனி”யை எழுதிய கல்ஹணர் தனது நூலின் ஆரம்பத்தில் “எந்தவித துர் எண்ணங்களையும் கொண்டிராமல் தூய சிந்தனையோடு உள்ளதை உள்ளபடி வெளிப்படுதுபவரே நன்மதிப்பைப் பெறுவார்” என்கிறார். அது போல மகாவம்சத்தின் 6 வது தொகுதியை எழுதுபவரும் தூய உள்ளத்தோடு எழுதவேண்டும் என்று இதற்கான முதலாவது மாநாட்டில் அறிவுறுத்தியிருந்தோம்.”

என்று மகாவம்ச உருவாக்கக் குழுவின் செயலாளர் பேராசிரியர் மாலனி எந்தகம குறிப்பிடுகிறார்.

ஆனால் அதன் உள்ளடக்கம் மிகவும் பாரபட்சமானவை. அந்த பாரபட்சம் அந்த குழுவில் உள்ள தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்டதன்று; மாறாக ஏற்கெனவே நிறுவனமயப்பட்ட பேரினவாத அரசின் பாரபட்ச நிகழ்ச்சிநிரலை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

103 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் இருவரைத் தவிர அனைவரும் சிங்கள பௌத்தர்களே. அந்த இருவரும் கூட சமயம் பற்றிய விபரங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மட்டுமே இணைக்கப்பட்டவர்கள். ஏனைய சமூகத்தினரும் குழுவில் இருந்தார்கள் என்று காட்டுவதற்காக கண்துடைப்புக்கு பயன்படுத்தப்பட்டவர்களே. அந்த இருவரும் யாரென்றால் பேராசிரயர் எஸ்.பத்மநாதன் என்கிற சைவரும், ஒஸ்வல்ட் கோமிஸ் பாதிரியார் என்கிற ஒரு கத்தோலிக்கரும் தான்.

இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களில் ஒன்று தான் “பயங்கரவாதம், பிரிவினைவாதம்” என்பவற்றை எழுதுவதற்காகவே 7 பேரைக் கொண்ட குழு. இலங்கையின் இனப்பிரச்சினையை முன் கூட்டிய முடிவுடன் அதனை பயங்கரவாதப் பிரச்சினையாக அணுகுவதென்கிற முடிவிலேயே இப்பணிகள் தொடரப்பட்டிருப்பதை நாம் உணர முடியும்.  இந்தக் காலப்பகுதியின் தேசியப் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை பிரதான பங்கை வகித்திருந்தும் அந்த நோக்கில் இதை ஆராய்வதற்குப் பதிலாக பயங்கரவாத/பிரிவினைவாத பிரச்சினையாகவே அணுகியிருக்கிறார்கள்.

அக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த எழுவரின் பின்னணி

லக்ஸ்மன் ஹுலுகல்ல


சிவில் சேவையில் நீண்டகாலமாக இருப்பவர். ராஜபக்ச குடும்பத்தினரின் விசுவாசி. 2006 – 2009 வரையான யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த காலத்தில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் என்கிற ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. (MCNS - Media Centre for National Security) விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்களையும், பிரச்சாரங்களையும் தேசிய – சர்வதேசிய அளவில் மேற்கொள்வதற்கான தந்திரோபாய நிலையமாக இது செயற்பட்டிருந்தது. ஹுளுகல்லவை அதன் இயக்குனராக நியமித்தார் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச. 2019இல் ஜனாதிபதியானதும் 2020 இல் அவுஸ்திரேலியாவுக்கான பிரதித் தூதுவர் பதவியை வழங்கினார் கோத்தபாய.

பேராசிரியர் காமினி சமரநாயக்க


பேராதனைப் பலகலகத்தின் அரசியல் துறை, சிரேஷ்ட பேராசிரியர். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தவர். தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவர். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்கின்ற பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருப்பவர். “இலங்கையின் இனப்பிரச்சினையும் விடுதலைப் புலிகளின் கெரில்லா போர் முறையும்” என்கிற அவரின் நூல் பரவலாக பிரசித்திபெற்ற ஒரு நூல். 2015 ஆம் ஆண்டு மகிந்தவை வெல்ல வைப்பதற்காக ஒரு புத்திஜீவிகளின் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மகிந்தவின் (Think Tank) என்று அறியப்பட்டிருந்தது. அதன் பிரதான ஆலோசகர்களாக ஜி.எல்.பீரிசும் காமினி சமரநாயக்கவும் இயங்கினார்கள். w.m.amaradasa

பேராசிரியர் மாலனி எந்தகம

மகாவம்சம் 6 வது தொகுதியாக்கக் குழுவுக்கு செயலாளராக செயற்பட்டவர். அது போல மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும் அங்கம் வகித்தவர். அதாவது மகாவம்ச ஆக்கக்குழுவை தலைமையேற்று வழிநடத்தியவர். அவர் ஒரு சிரேஷ்ட வரலாற்று அறிஞராக கருதப்படுவதால் அவரை பயங்கரவாதம் பற்றிய குழுவில் சேர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. சிங்களத்தில் பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர். அவரின் நூல்கள் பாடப்புத்தகங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகாவம்சம் தொடர்பிலான அறிஞராக கருதப்படுவதால் மகாவம்சம் பற்றிய பல்வேறு உரையாடல்களுக்கும் அழைக்கப்படுபவர். அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட பௌத்த உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இயங்கியவர். 

மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது வன்னி பாதுகாப்பு சேனையின் தலைமையக பிரதானியாக கடமையாற்றியவர். அதற்கு முன்னர் அவர் 53வது, 54வது படைப்பிரிவுகளின் தலைவராகவும் கடமையாற்றியவர். சந்திரிகா பண்டாரநாயக்க காலப்பகுதியில் வடக்கில் நிகழ்ந்த பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியவர்களில் ஒருவர். அமெரிக்க இராணுவக் கல்லூரியில் விசெத் பயிற்சி பெற்று திரும்பியவர். எதிர்கால இராணுவத் தளபதியாக ஆகக்கூடியவராக அப்போது கருதப்பட்டவர். இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் இவரின் பாத்திரம் முக்கியமானது என்பதால் மகாவம்ச ஆக்கக் குழுவில் “பயங்கரவாத” தலைப்பிலான குழுவில் இவரை இடம்பெற வைத்தார்கள். 

டபிள்யு எம்.அமரதாச


இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக பணியாற்றியவர். யுத்தத்தின் இறுதிக் காலத்தில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இந்திய இராணுவப் புலனாய்வு பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த (Military Intelligence Training School and Depot (MITSD)) தூதுக்குழு இரகசியமாக இலங்கை வந்து மன்னார் வளைகுடாவில் புலிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பயிற்சியளிக்கப்பட்ட மூவரில் அமரதாசவும் ஒருவர். 

திருமதி எஸ்.டீ.பி.கவிமல் சூரிய ஆராச்சி 

இவர் ஒரு தேசிய அளவிலான விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பதிப்பாளர். மேலதிக விபரங்களை அறிய முடியவில்லை.

ஷமீந்திர பேர்டினன்ட்


யுத்த காலத்தில் பிரபல இராணுவப் / புலனாய்வுக் கட்டுரையாளராக அறியப்பட்டவர். இவரது கட்டுரைகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்ததால் சரவதேச அளவில் கவனிப்புக்கு உள்ளாக்கப்பட்டன இவரது கட்டுரைகள். இந்தக் காலப்பகுதிகளில் மிகவும் மோசமான இனவாத ஊடகமாக இயங்கி வந்த தி ஐலன்ட்/ திவயின பத்திரிகைகளில் தான் இவரின் இராணுவ – புலனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. பின்னர் தி ஐலன்ட் பத்திரிகையின் பிரதான செய்தி ஆசிரியராக இயங்கினார்.

ஆக இப்பேர்பட்டவர்களைக் கொண்டு தான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அபிலாசைகள் பற்றியும் மகாவம்சத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

இந்த மகாவம்சத் தொகுதியில் அதிகமான பக்கங்களை இனப்பிரச்சினை குறித்த விடயங்களை பதிவு செய்வதற்காக ஒதுக்கியிருப்பது உண்மை. ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினையை இனப் பிரச்சினையாக பார்க்கவில்லை. “பயங்கரவாத” பிரச்சினையாகவே இதனை அடையாளம் காட்டுவதை காண முடிகிறது. ஜே.ஆர்., பிரேமதாச / டி.பி.விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகிய ஐவரின் ஆட்சி காலங்களின் கீழ் நான்கு தடவைகள் “பயங்கரவாதம் / பிரிவினைவாதம்” என்கிற தனித் தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.  இந்த மகாவம்சத்தின் அதிக பக்கங்களை ஆக்கிமித்துள்ள விடயதானமும் அது தான்.

130வது அத்தியாயம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தையும், 131 வது அத்தியாயம் பிரேமதாச, டி.பி விஜேதுங்க ஆட்சிக்காலத்தையும் சேர்த்து மகாவம்சத்தின் 6ஆம் தொகுதியின் முதலாவது பாகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

132வது அத்தியாயம் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தையும், 133 வது அத்தியாயம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தையும் சேர்த்து 6ஆம் தொகுதியின் இரண்டாம் பாகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்நால்வரின் ஆட்சிக்காலத்தையும் எவ்வாறு நூலாக்கமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே அட்டவணைப்படுத்தியிருக்கிறேன்.

இனி இந்த நால்வரின் ஆட்சிக் காலம் பற்றிய உள்ளடக்கத்தைப் பற்றி தனியாக அடுத்த இதழில் காண்போம். குறிப்பாக தமிழர் பிரச்சினையை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக பதிவுசெய்துகொண்டு போயிருக்கிறார்கள் என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

நன்றி - தாய்வீடு - ஓகஸ்ட் 2021

நூற்றாண்டு காணும் பேராதனை பல்கலைக்கழக நூலகம் 1921 - 2021 - ஆர். மகேஸ்வரன்


பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் சேர்க்கைக்கு 100 வருடங்கள் ஆகின்றன. இவ் வருடம் இந்நூலகம் நூற்றாண்டினை கொண்டாடுகிறது. 

இதற்கான முதற் கட்டமாக நூலக பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை பல்கலைக்க்கழக மூதவை சபை அங்கீகரித்துள்ளது. நூலகக் கண்காட்சி, நூலக விஞ்ஞானத்துறையில் சர்வதேசக் கருத்தரங்கு, பல்கலைக்கழக ஆய்வடங்களை ஒருமுகப்படுத்திய  ஆய்வு நூல் வெளியீடு முதலியனன மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேராதனை நூலக நூற்றாண்டு வரலாறு சுவாரசியமானது. பல பட்டதாரிகள், கலாநிதிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உருவாகுவதற்கு இந்த நூலகம் காரணமாயிருந்துள்ளது. கிட்டத்தட்ட எட்டு லட்சம் நூல்களை கொண்ட இந்நூலகம் தற்போது பிரதான நூலகத்துடன் 8 கிளை நூலகங்களுடன் காணப்படுகிறது. கலைப்பீடத்திற்கும், முகாமைத்துவ பீடத்திற்கும், தொல்லியல், தமிழ், சிங்களம், சட்டம், மானிடவியல் பாடங்களை உள்ளடக்கியதாக நூல்களைக் கொண்டது பிரதான நூலகம். மருத்துவம், மிருகவைத்தியம், பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானம், இணைந்த சுகாதாரம், பொறியியல் ஆகிய ஏழு பீடங்களுக்கான நூலகங்களும் விவசாய பீடத்தின் இரண்டாவது நுலகமும் மகாஇழுப்பள்ளத்தில் அமைந்துள்ளது.

இனி இதன் நூற்றாண்டு வரலாற்றினை நோக்குவோம். ஆரம்பத்தில் பல்கலைக்கழக கல்லூரிக்கான இடமும் கட்டடமும் 1921இல் கொழும்பு ”ரெஜினா வலவ்வ” என்ற இடத்தில் வாங்கப்பட்டது. இக்கட்டடத்துக்கு கொலேஜ் ஹவுஸ் (College House)  என்ற பெயர் சூட்டப்பட்டு இங்கேயே பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் 1921 இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்போது குயின்ஸ் வீதியில் ” வில்லா வெனிசியா” (villa venezia) என்ற கட்டிடத்திலேயே நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் பல்கலைக்கழகத்தினை தோற்றுவிக்க பாடுபட்டவர்களுள் சேர். பொன் அருணாசலம், சேர் பொன் இராமநாதன், நீதிபதி அக்பார் மற்றும் ஜயதிலக்க, மார்க்ஸ், ஜேம்ஸ் பீரிஸ், டீ. ஆர் விஜயவர்தன. ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களது பெயரிலேயே பேராதனையில் மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுள் சேர். பொன்.அருணாசலத்தின் மகன் அருணாசலம் பத்பநாபா இளமையிலேயே இறந்து போக அவரது நூற்சேர்க்கையை சேர் பொன் இராமநாதன் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார். அந்நூல் தொகுதியைக் கொண்டே இந் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தின் இலக்கம் 1 தொடக்கம் 1401 வரையான நூல்கள் அருணாசலம் பத்பநாபா பயன்படுத்திய நூல்களாகும்.

இவரைத் தொடர்ந்து பேராசிரியர் எ. டப்ளியு. ஆர் டேவிட்ஸ் சின் நூற் சேர்க்கை, வண ரம்புக்வெல்ல சித்தாந்த தேரர் நூற் சேர்க்கை, ஆகியன நன்கொடையாக வழங்கப்பட்டன. வண. ரம்புக்வெல்ல சித்தாந்தவே முதல் சிங்கள, பாளி, சமஸ்கிருத நூல்களை வழங்கியுள்ளார். இதன் பின் வரலாற்று விரிவுரையாளர் வண. டி மெல் அவரது தந்தை ஹென்றி டி மெல் நினைவாக நூல் சேர்க்கையினை வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து பண்டித பட்டுவண்டுதேவ் ஞாபகார்த்த நூற் சேர்க்கையும் நன்றிக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்காலத்தில் இங்கு நூல்கள் மாணவர்களுக்கு இரவல் வழங்கப்பட்டதுடன் மீளக்கொடுக்க தாமதமானால் ஒரு நாளைக்கு அதற்காக 25சதம் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நூலக அங்கத்தவராவதற்கு ரூபா.10 அறவிடப்பட்டுள்ளது.

இதன் பின் 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. (ordinance No 200/1942) இதன் பிரகாரம் ஆளுனரின் அனுமதியுடன் 01 ஜீலை 1942 இலங்கை பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டது. 1870ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி (medical college) மற்றும் 1921ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆகிய இரண்டையும் இணைத்தே யுனிவசிட்டி ஒப் சிலோன் – (இலங்கை பல்கலைக்கழகம்) ஆரம்பிக்கப்பட்டது. முதலில் லண்டன் பரீட்சைக்கே மாணவர்கள் தோற்றினர். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது முதல் வருட மாணவர்களாக 150 பேர் பதிவு செய்து கற்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

முதலாவது அதிபராக ஆர். மார்ஸ் கடமையாற்றியுள்ளார். ஐந்து பேராசிரியர்கள் மூன்று விரிவுரையாளர்கள், நான்கு வருகைதரு விரிவுரையாளர்களுடனேயே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ”கொலேஜ் ஹவுஸ்” கட்டிடத்தில் ஒரு அறையிலேயே முதலில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல் வருடம் நூலகத்திற்காக ரூபா. 750 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்தே ”வில்லா வெனிசியா” என்ற இரண்டு மாடி கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டு இயங்க ஆரம்பித்துள்ளது. 1921ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942 வரை 580 பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். முதல் விடுதியாக (ஹொஸ்டல்) கிரிஸ்டியன் மாணவர் விடுதியும் பின்னர் கத்தோலிக்க மாணவர் விடுதியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1932ஆம் ஆண்டே பெண்கள் விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையும் கிரிஸ்டியன் கவுன்சிலே ஆரம்பித்துள்ளது. 1931ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் ஒன்றின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும் எங்கே அமைப்பது என்ற வாக்குவாதம் காரணமாக விஷயம் 1942 வரை இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அருப்பொலவில் நிலம் வாங்குவதற்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சேர் ஜவர் ஜெனிங்ஸ் பேராதனையை தெரிவு செய்தார். ஏன் பேராதனைக் காணியை தெரிவு செய்தேன் என்பதற்கான காரணங்களை அவர் தனது நூலான கண்டி ரோட் (Kandy Road) என்ற நூலில் விபரமாக குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக்க் காணியினை ”யுனிவசிட்டி பாக்” (பல்கலைக்கழக பூங்கா) என்றே பெயர் சூட்டினார்.

கல்விக்கான சூழல், காலநிலை என்பனவற்றை அவர் கருத்திய எடுத்திருக்கிறார்.

1942இல் இலங்கை பல்கலைக்கழகம் பேராதனையில் ஆரம்பிக்ப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட போதும் போதிய கட்டட வசதிகளோ, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாததால் பேராதனைக்கு பதிலாகக் கொழும்பிலேயே தற்காலிகமாக அது இயங்கியது. 1942இல் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்ட்டு 1952 லேயே கட்டடங்கள் அமைக்கும். பணிகள் முடிவுற்றன. பேராதனையில் கற்ககைகளும் அதன் பின்னரேயே ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தம், பேராதனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியன இக்காலதாமதத்திற்கு காரணமாகின. 1952 ஆம் வருடமே நூலகமும் பேராதனை கலைப்பீடக் கட்டடத்திற்கு கொண்டுவரப்பட்டது. 1960 இல் ஆறுமாடிக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை கலைபீட அறையிலேயே நூலகம் இயங்கிவந்தது. 1960 இல் நூலகக் கட்டிடத்திற்கு முழு நூலகமும் கொண்டுவரப்பட்டது.

1952ஆம் ஆண்டு நூலகம் கொழும்பிலிருந்து பேராதனைக்கு கொண்டுவரப்பட்ட போது 1921இல் ஏப்பரல் 8ஆம் திகதி ஒன்றில் தொடங்கிய பத்பநாபா சேர்க்கை முதல் வில்லா வெனிசியாவில் இருந்த சகல நூல் தொகுதிகளும் கொண்டுவரப்பட்டன. எனவேதான் 2021 இல் இப்பல்கலைக்கழக நூலகத்துக்கு 100 வருடம் எனக் கொண்டாடப்படுகிறது. 

இந்த 100 வருட வரலாற்றில் தற்போது நூல்கள் மட்டுமன்றி சகல நவீன வசதிகளுடனான சேவைகளும் வழங்கப்படுகின்றன. இணையத்தளங்கள், இணைய நூலகம், டிஜிட்டல் நூலகம் போன்றனவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். புகழ் பூத்த கல்விமான்களைப் பல்வேறு துறைகளிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் அதன் ஆய்வு வெளியீடுகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் முன்னணி பல்கலைக்கழக நூலகங்களுடன் இணைந்து நூல் பரிமாற்றத்தினை செய்து வருகிறது. இதன் மூலம் எமது வெளியீடுகள் உயர்தரத்திலான முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு கிடைப்பதுடன், அப் பல்கலைக்கழக வெளியீடுகள் எமது மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதில் 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் Ceylon journal of science (சிலோன் ஜேர்னல் ஒப் சயன்ஸ்) 1942 இன் பின் University of Ceylon, Peradeniya ( யூனிவசிட்டி ஒப் சிலோன்) பேராதனையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

University of Ceylon Review (யுனிவசிட்டி ஒப் சிலோன் ரிவியூ சஞ்சிகை 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு தொடக்கம் கலைப்பீடம் மூலம் “Modern Ceylon studies” (மொடரன்  சிலோன் ஸ்டடீஸ்) வருடத்திற்கு இரண்டு அரையாண்டு மலராக வெளியிடப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு முதல் ”Sri lanka Journal of the Humantites”  (ஸ்ரீலங்கா ஜேர்னல் ஒப் தி ஹியுமனிடிஸ்) வெளியிடப்பட்டுள்ளது. இவையே ஆரம்பத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன்  பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இனி இங்கு 100 வருடங்களில் கடமையாற்றிய நூலகர்களை பார்ப்போம். 1925 ஆம் ஆண்டு  பல்கலைக்கழக கல்லூரி காலத்தில் ரெஜினட் ஸ்டீபன் என்ரைட் என்பவர் நியமனம் பெற்றுள்ளார். 1942ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது நூலகராக இவரே கடமையாற்றியுள்ளார். இவர் கண்டி திருத்துவ கல்லூரியில் கல்வி கற்று லண்டனில் பல்வேறு நூலகங்களில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் 1952 வரை நூலகராக கடமையாற்றினார்.  பல்கலைக்கழக நூலகர் பதவி என்பது சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு இணையானது. கல்விசார் உத்தியோகஸ்தர்களில் இப்பதவி. உபவேந்தருக்கு அடுத்தபடியான கௌரவமான பதவியாகும். 1952இல் மொத்த நூல்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாகும். கொழும்பிலிருந்த நூலகம் கண்டி பேராதனைக்கு இட மாற்றப்பட்ட போது அதிக வேலை பளு காரணமாக 14.11.1952 இல் நூலகர் என்ரைட் இறந்து போனார்.  இவரது முதல் ஞாபகார்த்தத் தினத்தில்  பல்கலைக்கழகம் இவரது பெயரில் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கியது. 1962 இல் இவரது புகைப்படம் பல்கலைக்கழக நூலகத்தில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

ஆர். மகேஸ்வரன்

நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம்

நன்றி - வீரகேசரி



மகாவம்சத்தின் 2ஆம் பாகத்தை (சூளவம்சம்) எழுதியவர் தமிழரா? - என்.சரவணன்

இலங்கையின் புனித வரலாற்று நூலாக கருதப் படுகிற மகாவம்சம் கி.மு. 483 தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரை சுமார் 25 நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக பதிவுசெய்து 6 தொகுதிகளாக பதிப்பிக்கட்டிருக்கிறது. இன்றும் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் வேறெங்கும் வரலாறு இப்படி தொடர் வரலாறு பதிவுசெய்யப்பட்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. சீனா கி.மு 1250 க்கு முன் இருந்து வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறது. சீனாக்கு அடுத்ததாக சொல்லக் கூடிய நாடு இலங்கை தான்.

தீபவம்சம் என்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம் (Mahavamsa) என்றும் கூறலாம். அந்த தீபவம்சமும், மகாவம்சமும் அதற்கு முன்னர் வெளியாகியிருந்த “சீஹல அததகத்தா” என்கிற பனுவலைத் தழுவியே எழுதப்பட்டது என்பதை பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். 

மகாவம்சத்தின் மூல ஆசிரியர் மகாநாம தேரர். தீபவம்சத்தில் அடங்கியிருப்பது போல் 37 அத்தியாயங்கள் மகாவம்சத்தில் உள்ளடங்கியுள்ளன. அந்த 37 அத்தியாயங்களையும் பாளி மொழியிலிருந்து மொழி பெயர்த்த வில்லியம் கைய்கர் (Wilhelm Geiger) முதல் 37 அதிகாரங்களை மகாவம்சம் என்றும், ஏனைய 38 இலிருந்து 100 வரையான அதிகாரங்களின் தொகுப்பை “சூளவம்சம்" (Culavamsa) எனவும் வகுத்து மொழி பெயர்த்துள்ளார். பாளி மொழியில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது நூல் மகாவம்சம் தான்.

ஆக, மகாவம்சத்தின் 6 தொகுதிகளில் இரண்டாவது தொகுதியே “சூளவம்சம்” என்று அழைக்கப்படுகிறது.

"சூளவம்சம்” என்பது “சுளுவம்சம்” என்கிற பதத்திலிருந்து வந்தது. “சுளு” என்பது சிறு என்று அர்த்தம். “மகா வம்சம்” என்பது பெரிய வம்சக் கதையாகவும், “சுளு” என்பது சிறு வம்சக் கதையாகவும் “ராஜாவலிய” நூல் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. மேலும் முதலாவது தொகுதிக்கு வழங்கவேண்டிய புனிதத்தன்மைக்காகவும், கௌரவத்துகாகவும் அதை மகாவம்சமாகவே தனித்து அடையாளப்படுத்தும் நோக்கமும், தேவையும் சிங்களத் தரப்புக்கு இருந்து வந்திருப்பதை உணர முடிகிறது.

சூளவம்சம் ஒரே தடவையில் எழுதி முடிக்கப்பட்ட ஒன்றல்ல, ஒருவரால் எழுதப்பட்டதுமில்லை. அதுபோல தொடர்ச்சியாக கிரமமாக எழுதி முடிக்கப்பட்ட ஒன்றுமல்ல. பலரால் பல கால கட்டங்களில் அங்கும் இங்குமாக எழுதப்பட்டவற்றின் தொகுப்பே இது.

இதுவரையான மகாவம்சத்தின் அத்தனை தொகுதிகளையும் எழுதியவர்கள் பௌத்த பிக்குமார்களே. பிற்காலத்தில் அரசு மகாவம்சத்தை தொடர்ந்து எழுதுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் சிங்கள பௌத்த புலமையாளர்களை அப்பணியில் இணைத்துக்கொண்ட போதும் அப்பணியில் பௌத்த பிக்குமாரின் செல்வாக்கே அதிகமானது என்பதை அறிவீர்கள்.

கைகருக்கு முன்னரே மகாவம்சத்தை மொழிபெயர்த்த ஜோர்ஜ் டேனர் 101 அதிகாரங்களையும் ஒருங்கே மஹாவம்சம் (Mahavamsa) என்ற பெயரோடு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். வில்ஹைம் கைய்கர் பாளியிலிருந்து முதலில் ஜெர்மனுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். ஆனால், ஜோர்ஜ் டேனர் பாளியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருந்தார், அது பின்னர் முதலியார் விஜயசிங்க என்பவரால் மீளாய்வு செய்யப்பட்டு வெளிவந்தது. கைய்கர் மகாநாம தேரர் இயற்றிய மகாவம்சத்தை தனியாக பிரித்தெடுத்து அதை “மகாவம்சம்” என்றே அழைத்தார். எஞ்சிய பகுதியை சூளவம்சம் என்று பெயரிட்டு மகாவம்சத்தின் இரண்டாம் பாகமாக வெளியிட்டார். இதுவரையான மகாவம்சத்தின் 6 தொகுதிகளில் சூளவம்சம் தான் அதிக காலப்பகுதியை பதிவு செய்திருக்கிற தொகுதி எனலாம்.

புத்தரின் இலங்கை விஜயத்தோடு மகாவம்சத்தின் முதலாவது அதிகாரம் ஆரம்பமாகின்றது. கி.மு. 483 இலிருந்து கி.பி 362 ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றை இது விபரிக்கின்றது. இலங்கையின் முதலாவது மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயனிலிருந்து 58 வது மன்னனாகிய மகாசேனன் வரை மகாவம்சம் விபரித்துச் செல்கிறது. இன்றும் பலர் அறிந்திருக்கிற மகாவம்சம் என்பது இந்த முதலாவது மகாவம்சம் தான்.

மகாசேனன் மகன் ஸ்ரீ மேகவண்ணன் (கித்சிரிமெவன்) தொடக்கம் (கி.பி.362) ஸ்ரீ விக்கிரமசிங்கன் வரை (கி.பி..1815) சூளவம்சம் விபரிக்கின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டு வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது சூளவம்சம்.

மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள பல கதைகளுக்கு தொல்லியல் சான்றுகள் போதுமானதாக இல்லை. அதில் உள்ள பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பான; விஞ்ஞானத்துக்கு ஒவ்வாத; நம்பகத்தன்மைக்கு நெருக்கமற்ற புனைகதைகள் என்பதை உணர முடியும். வாய்மொழிக் கதைகளையும்; ஆசிரியரின் சுய விருப்புவெறுப்புகளுக்கு உட்பட்டவை என்பதையும் உணர முடியும். ஆனால் அப்படியான வரலாற்று அவநம்பிக்கையைச் சூளவம்சத்தில் காண்பதற்கான ஏதுக்கள் குறைவு. ஏனெனில் சூளவம்சத்தில் கூறப்படுகின்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகளும்; கல்வெட்டு ஆதாரங்களும், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளும் நிரூபணமாக்குகின்ற மெய்மையைக் காணலாமென கைய்கர் உறுதிப்படுத்துகிறார்.

இதனால் தான் மகாவம்சத்தை ஒரு புராணமாகவும், சூளவம்சத்தை ஒரு காவியமாகவும் சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள். (L. H. Horace Perera, M. Ratnasabapathy, 1954)

சூளவம்சத்தின் 37 இலிருந்து 79 வரையிலான அதிகாரங்களைத் தொகுத்தளித்த தர்மகீர்த்தி தேரரின் (தம்பதெனியவில் வாழ்ந்தவர்) சூளவம்ச வருணனைகள் இந்தியக் காவிய மரபினை நினைவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பர். சூளவம்சம் மொத்தம் 64 அத்தியாயங்களைக் கொண்டது. அதில் 42 அத்தியாயங்கள் தர்மகீர்த்தி தேரர் ஆக்கியது எனலாம். இன்னும் சொல்லப் போனால் சூளவம்சத்தின் ஆசிரியர் ஒருவரல்ல. பலர்.

தர்மகீர்த்தி தேரர் ஒருவரா?

சூளவம்சத்தின் பெரும்பகுதியை எழுதிய தர்மகீர்த்தி தேரர் ஒரு தமிழர் என சிங்கள அறிஞர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அதே தமிழ் தேரர் தான் புத்தரின் தாதுப்பல் பற்றிய முக்கிய இதிகாச நூலான பௌத்தர்கள் போற்றும் “தாதாவம்ச” என்கிற பனுவலையும் (பராக்கிரமபாகுவின் வேண்டுகோளின் பேரில் பாளி மொழியில்(1)) இயற்றினார். (2) தர்மகீர்த்தி தேரர் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த துறவி. (3)

தர்மகீர்த்தி தேரரை சிங்கள நூல்கள் பலவற்றிலும், கட்டுரைகள் பலவற்றிலும் தம்மகித்தி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கைகர் உள்ளிட்டோர் பலர் ஆங்கிலத்தில் எழுதும்போதும் “Dhammakitti” என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் 6ஆம் தொகுதியில் “தர்மகீர்த்தி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் நானும் அதே பெயரை இங்கே பயன்படுத்துகிறேன்.

தர்மகீர்த்தியின் படைப்புகள் அத்தனையும் பாளிமொழியில் படைக்கப்பட்டமைக்கு இன்னொரு முக்கியமான காரணம்; உள்நாட்டு மொழியில் அது இயற்றப்பட்டால் அது ஒரு நாட்டுக்குள் தான் இருக்கும், ஆனால் பாளி மொழியில் இயற்றினால் அன்று பாளி மொழி பரவியிருந்த நாடுகள் அனைத்துக்கும் அது போய் சேரும் என்பதால் தான்.(4) ஆங்கிலத்தில் எழுதினால் சர்வதேச அளவில் அப்படைப்பு சேரும் என்று இன்று நம்புவதுபோல் அன்று பாளி மொழிக்கே ஆசிய கண்டத்தில் அதிக செல்வாக்கு இருந்ததை நாமறிவோம். ஆசியாவின் பெருவாரி நாடுகளில்; குறிப்பாக கற்றோர் மத்தியில் பாளி மொழி தான் செல்வாக்கு பெற்றிருந்தது. குறிப்பாக பௌத்த இலக்கியங்கள் பல பாளி மொழியில் இயற்றப்பட்டதன் பின்னணி இதுதான். அரசர்கள், ஆட்சி செய்தவர்கள், புலவர்கள், பௌத்த பிக்குகள் போன்றோர் தான் கல்வியறிவு பெற்ற குழாமினராக இருந்தனர். அவர்களில் பலர் பாளி மொழியை அறிந்திருந்தார்கள்.

சூளவம்சம் பிற்காலத்தில் மூன்று பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.

  1. கி.பி.362 இல் மகாசேனனின் மகன் ஸ்ரீ மேகவண்ணன் (கித்சிரிமெவன்) மன்னரின் ஆட்சிக் காலத்திலிருந்து ஆரம்பமாகி மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலம் முடிவு வரையிலான கி.பி 1186 ஆம் ஆண்டு வரையும் மொத்தம் 884 வருட காலத்தை உள்ளடக்கியது தான் அந்த முதல் 42 அத்தியாயங்களும்.
  2. கிபி. 1186 இல் இரண்டாம் விஜயபாகு மன்னரின் ஆட்சிகாலத்திலிருந்து கி.பி. 1357 ஆம் ஆண்டு ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரையிலான மொத்தம் 171  ஆண்டுகால ஆட்சியை 11 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.
  3. கி.பி 1357 இல் மூன்றாவது விஜயபாகு மன்னரின் ஆட்சிக் காலத்திலிருந்து கி.பி 1815  ஸ்ரீ விக்கிரமசிங்க மன்னரின் ஆட்சி வரையிலான; அதாவது ஆங்கிலேயர்கள் வசம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியுற்றது வரையிலான 441 ஆண்டுகாலத்தையும் பத்து அத்தியாயங்களில் முடிக்கப்பட்டிருக்கிறது.(5)

மகாவம்சத்தின் முதலாவது தொகுதியானது அது எழுதப்பட்ட காலத்துக்கு முன்னைய 9 நூற்றாண்டுகளை பதிவு செய்கிறது. அதுபோல சூளவம்சத்தின் முதலாவது பகுதி எழுதப்படும்போது மகாவம்சத்தின் முதலாவது பகுதி எழுதப்பட்டு 9 நூற்றாண்டுகள் கடந்திருந்தன என்பதையும் இங்கே குறிப்பிடமுடியும்.

ஆசிரியர்கள் பற்றிய குழப்பம்

இந்த மூன்று பகுதிகளையும் எழுதியவர்களும் முதல் தொகுதியை எழுதிய மகாநாம தேரரைப் போல பிக்குமார்கள் தான். ஆனால் அதை எழுதிய பிக்குமார் யார் யார் என்பது பற்றிய விவாதங்கள் இன்னமும் ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துகளும் இருக்கவே செய்கின்றன.

மேற்படி முதல் பகுதியான 37 இலிருந்து 79 வரையிலான 42 அத்தியாயங்களையும் எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்பது வில்ஹைம் கைகரின் கருத்து. முதலாம் பராக்கிரமபாகுவின் கால ஆட்சியைப் பற்றி விரிவான ஆய்வைச் செய்தவர்களில் முக்கியமானவர் கலாநிதி சிறிமா விக்கிரமசிங்க (பேராசிரியர் சிறிமா கிரிபமுனே). அவரும் கைகரின் அக்கருத்தை உறுதி செய்கிறார். அதேவேளை மகாவம்சத்தின் மூன்றாம் தொகுதியைத் தொகுத்த யகிரல பஞ்ஞானந்த தேரர், பேராசிரியர் மங்கள இலங்கசிங்க போன்றோர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர் சூளவம்சத்தின் 38இலிருந்து 54 வரையிலான அத்தியாயங்களை மகாவிகாரையைச் சேர்ந்த சில பௌத்த துறவிகளாலும், 54இலிருந்து 79 வரையிலான அத்தியாயங்களை பொலன்னறுவையில் வாழ்ந்தவரும், பராக்கிரமபாகு குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவருமான ராஜகுரு தர்மகீர்த்தி தேரரால் எழுதப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதுமட்டுமன்றி தர்மகீர்த்தி தேரர் பாளி, சமஸ்கிருதம், பிரகிருதம் போன்ற மொழிகளில்  தேர்ச்சிபெற்ற ஒருவராக இருந்திருப்பதுடன், தாதாவன்ச என்கிற நூலை ஆக்கியவர்.(6) தாதாவம்சத்தை இயற்றிய தர்மகீர்த்தி தேரரை “திம்புலாகல தர்மகீர்த்தி” என்று அழைக்கிறார் பிரபல தொல்லியல் ஆய்வாளரான சீ.ஈ.கொடகும்புற(7)  மேலும் அவர் கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தையும், மனுஸ்மிருதி, ரகுவம்சம் போன்றவற்றையும் ஆழமாக அறிந்த ஒருவர் என்பதை; அவர் சூளவம்சத்தில் பராக்கிரமபாகுவின் குழந்தைப்பருவம், கல்விப்பருவம், இளம்பருவம், வீரத்தனம் என்பவற்றை விபரிக்கும் வடிவத்தில் இருந்து உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார்.

தர்மகீர்த்தி (Dhammakitti / Dharmakirti) என்கிற பெயர் மகாவம்சத்தில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பாத்திரங்களாக இடம்பெற்றிருப்பதால் பலரும் இப்பெயரை குழப்பிக்கொண்டுள்ளதை, பல ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. மகாவம்ச தொகுதிகளில் காணப்படுகின்ற ஐந்து தர்மகீர்த்திகள் யார் என்கிற வேறுபாடுகளை விளக்கி 125 ஆண்டுகளுக்கு முன்னர் Don M. de Z. Wickremasinghe ஒரு சிறந்த கட்டுரையொன்றை ராஜரீக ஆசிய கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் எழுதியிருகிறார். (8)

வம்சக்கதையின் (மகாவம்சத்தில்) பொலன்னறுவை காலப்பகுதியைப் பற்றி – குறிப்பாக மகாபராக்கிரமபாகுவின் காலப்பகுதியின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை தர்மகீர்த்தி தேரரால் எழுதப்பட்டிருக்கிறது என்கிற முடிவுக்கு நாம் வர முடியும் என்கிறார் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க. (சவிஸ்தர மகாவம்சம் அறிமுகம் – முதலாவது பாகம் - 2007).

அப்படியென்றால் சூளவம்சத்தின் முதலாவது பகுதியை யார் எழுதியிருக்கிறார்கள் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க,  யகிரல பஞ்ஞானந்த தேரர் போன்றோர் கூறுகின்றார்கள்.

மகாபராக்கிரமபாகுவின் சமகாலத்தைச் சேர்ந்த மொக்கலான என்கிற பிக்குவால் அது எழுதப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க,  யகிரல பஞ்ஞானந்த தேரர் போன்றோர் நம்புகிறார்கள். மகா பராக்கிரமபாகு பௌத்த சாசன வழிகாட்டலுக்காக நாடு முழுவதுமிருந்து ஆலோசனை பெறுவதற்காக பல பௌத்த துறவிகளை பொலன்னறுவைக்கு வரவழைத்து அவர்களை அங்கிருத்தி உபசரிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவரே அனுராதபுர தூபாராமவைச் சேர்ந்த மொக்கலான தேரர் என்றும் அவரை பொலன்னறுவை ஜேத்தவன  விகாரையில் தங்கவைத்து தேவையான வசதிகளை செய்துகொடுத்தார் என்று யகிரல பஞ்ஞானந்த தேரர் விளக்குகிறார். இந்த வாதத்துக்கு துணை சேர்க்க முயல்கின்ற பல சிங்களக் கட்டுரைகளை காண முடிகின்றன. அதேவேளை இரண்டாம் விஜயபாகுவின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலம் வரை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்கிற கருத்தில் இவர்கள் முரண்பட்டதில்லை. (9)

ஆனால் இதுவும் ஒரு வாதம் மட்டுமே. ஏனென்றால் சூளவம்சத்தின் ஆசிரியர்கள் யார், யார் என்பது பற்றி நிலவுகிற பலமான வாதங்களைப் பற்றி விளக்குவதற்காகவே இதனையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேற்படி குழப்பகரமான பல தரப்பட்ட வாதங்களை இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் 6 வது தொகுதியில் (2016 இல் வெளியானது) பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் மகிந்த தீகல்ல என்கிற பௌத்த தேரர் 2006 இல் எழுதிய ஆய்வொன்றில் சூளவம்சத்தின் முதல் இரண்டு பகுதிகளையும் எழுதியவர்கள் தர்மகீர்த்தி என்கிற பெயரைக்கொண்ட இரு வேறு பிக்குகள் என்றும் ஒருவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் வாழ்ந்த பிக்கு என்றும். மற்றவர் பதினான்காம் நூற்றாண்டில் குருநாகலையில்; நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறுவதுடன். அவர்கள் இருவருமே பெரும்பாலும் தென்னிந்தியாவில் பாண்டிய / சோழ நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.(10) இந்த கருத்தை உறுதியாக நம்புகிற வரலாற்றாய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். Ceylon and Indian History என்கிற நூலை எழுதிய ஹோரஸ் பெரேரா, ரத்னசபாபதி ஆகிய இருவரும் இதைத் தான் கூறுகிறார்கள்.(11) அதே வேளை சூளவம்சத்தின் முதலாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி (I); பர்மாவில் இருந்து இலங்கை வந்தவர் என்கிற வாதங்களும் உண்டு. ஆனால் அதன் இரண்டாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி(II); சோழ நாட்டிலிருந்து வந்தவர் என்கிற கருத்தில் பலரும் முரண்படுவதில்லை.

மேலும் இந்த வேறுபட்ட தர்மகீர்த்திகளின் பெயர் பட்டியலையும், அவர்கள் இயற்றிய இலக்கியங்களைப் பற்றியும் பிட்டிஷ் நூலகம் தொகுத்த Catalogue of the sinhalese printed Books intha Library of the British Museum என்கிற நூலில் காணக் கிடைக்கிறது.(12)

மகாவம்சத்தின் இந்த இரண்டாம் தொகுதியின் (சூளவம்சத்தின்) 79-90 வரையான கி.பி 1186-1357 பற்றிய பகுதிகளை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்று மேற்படி அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் உடன்படுகிறார்கள். சூளவம்சத்தின் முதல் இரண்டு பகுதிகளையும் எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்று கைகர் கூறுவதை ஏற்காவிட்டாலும். இரண்டாம் பகுதியை எழுதியவர் தர்மகீர்த்தி தேரர் தான் என்பதை பலர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

குறிப்பாக சூளவம்சத்தை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவே சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே தேவரக்ஷித்த பண்டிதர், பேராசிரியர் மங்கள இலங்கசிங்க ஆகியோர் அப்படி ஒத்துக்கொள்பவர்களில் முக்கியமானவர்கள்.

சூளவம்சத்தின் மூன்றாவது பகுதியான 91-100 வரையிலான அத்தியாயம் ‘செங்கடகல’வில் (அன்றைய கண்டி) வாழ்ந்த திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் அவர்களால் எழுதப்பட்டது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் காலத்தில் பௌத்த பீடங்களுக்கும், பௌத்த நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கியவர்  புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் இது மிகவும் பிந்திய நிகழ்வு என்பதால் அதற்கான ஆதாரங்களும், பதிவுகளும் ஸ்தூலமாகவே கிடைக்கின்றன.

சூளவம்சத்தின் இறுதிப் பகுதியான 101வது அத்தியாயமானது இராஜாதி இராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆகிய இருவரின் காலத்தைப் பற்றி பதிவு செய்திருக்கிறது. மிகவும் சுருக்கமாக 29 செய்யுள்களில் எழுதப்பட்டு 29 வது செய்யுளில் “சித்தி ரஸ்து” என்கிற சொற்களால் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர்; மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் காலத்திலேயே இறந்துபோனார் என்பதால் அவரால் இந்த இறுதி 101 வது அத்தியாயம் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படியாயின் இந்த அத்தியாயத்தை எழுதியவர்கள் யார்?

சூளவம்சத்தை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோர் தான் இந்த இறுதிப் பகுதியை சேர்த்திருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தாம் அந்தப் பகுதிகளை சேர்க்கவில்லை என்று அவர்களின் மகாவம்சத்திலேயே கூறியிருக்கிறார்கள்.

அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிற சொற்பதங்களைப் பார்க்கும்போது எப்படியோ கண்டியைச் சேர்ந்த பௌத்த துறவியொருவரால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் மங்கள இலங்கசிங்க விளக்கியுள்ளார்.

கைகர் மகாவம்சத்தின் முதல் பாகத்தைத் தான் (கி.பி 301 வரைதான்) மொழிபெயர்த்தார் என்றே பலரும் நம்பி வருகிறார்கள். கைகர் சூளவம்சத்தையும் சேர்த்துத் தான் மொழிபெயர்த்தார். அதாவது 1815 வரையான காலப்பகுதியையும் சேர்த்துத் தான் அவர் முடித்தார். மகாவம்சத்தை தனியாகவும், சூளவம்சத்தை தனியாக இரண்டு தொகுதிகளாக அவர் பிரித்தார். சூளவம்சம் என்கிற பெயரில் எதுவும் எழுதப்பட்டதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அப்படி ஒரு பெயரை வைத்தவர் கைய்கர் தான். 

37-72 வது அத்தியாயம் வரை சூளவம்சத்தின் முதலாவது தொகுதி (1929இல்) என்றும், 73-101 வரையிலான அத்தியாயங்களை இரண்டாம் தொகுதியாகவும் (1953இல்) அவர் வெளியிட்டார்.

மகாநாம தேரரின் பிரதியை அவர் மகாவம்சம் என்று பிரித்ததுடன் அதன் பின்னர் பல பிக்குமார்களால் எழுதப்பட்டவற்றை தொகுத்து சூளவம்சம் என்று பெயரிட்டார். மகாவம்சம் எனும் போது பேரரசர்களின் வம்சாவளிக் கதை என பொருள்கொள்ளலாம். அதேபோல சூளவம்சம் எனும்போது சிறிய வம்சக் கதை எனப் பொருள்கொள்ள முடியும். இந்த “சூளவம்சம்” என்கிற பதத்துக்கான வரைவிலக்கணத்தை கைகர்  பூஜாவலியவில் இருந்து பெற்றார் எனலாம். பூஜாவலியவில் மகாவம்சத்துக்குப் பின்வரும் அரசர்களை சூளவம்ச அரசர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும்படி சூளவம்சம் என்று எங்கும் கண்டெடுக்கப்பட்டதில்லை.

சூளவம்சமானது;

  • தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை அதாவது முதலாம் பராக்கிரமபாகு காலம் (1186) வரை தொகுக்கப்பட்டிருக்கிறது.
  • விஜயபாகு காலம் முதல் கி.பி 1332 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரபாகு காலம் வரை 79-90 வது அத்தியாயம் வரை தர்மகீர்த்தி (II) தேரரால் இயற்றப்பட்டிருக்கிறது. சூளவம்சத்தின் 84 வது அத்தியாயத்தில் தர்மகீர்த்தி தேரர் தலைமையிலான பௌத்தத் துறவிகள் இரண்டாம் பராக்கிரமபாகுவால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மடப்பள்ளிகளைக் கட்டிக்கொடுத்தது பற்றிய விபரங்கள் உள்ளன.(13)
  • திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் காலம் வரை (1781) அதாவது 90-101 வது அத்தியாயம் வரை எழுதப்பட்டிருக்கிறது.
  • அதிலிருந்து ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோரால் ஆங்கிலேயர் 1815 இல் கைப்பற்றப்படும்வரை எழுதப்பட்டுள்ளது. (L. H. Horace Perera, M. Ratnasabapathy, 1954)

இதன் பிரகாரம் சூளவம்சத்தின் பெரும்பாகத்தை எழுதியவர்கள் தமிழ் பௌத்தத் துறவிகளே என்று கருத முடியும். தர்மகீர்த்திக்களால் எழுதப்பட்ட போது இல்லாத இனவாத கருத்துக்கள் அதன் பின்னர் அதிகம் எழுதப்பட்டுள்ளதை நாம் காணலாம். குறிப்பாக இலங்கை இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரமசிங்க இராஜசிங்கனை ஒரு கொடியவனாகவும், அந்நியனாகவும் தென்னிந்திய வடுக நாயக்கனாகவும், தமிழனாகவும் காட்டி, நாடு கடத்தியதற்கு நியாயம் கற்பிக்கின்ற பகுதிகளையெல்லாம் அங்கே காணலாம். அதேவேளை சூளவம்சத்தை தர்மகீர்த்தி தேரர்கள் சுயத்துடன் எழுதினார்களா என்கிற கேள்வி நம்மிடம் தொக்கி நிற்கிறது. அரசனின் பணிப்பின் பேரில் அதை எழுதியுள்ளதை காண முடிகிறது. எனவே அன்றைய தென்னிந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அவ்வரசர்களின் அபிலாஷைகளை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த நேரிட்டிருக்கிறது என்கிற முடிவுக்கும் நாம் வர முடியும்.

மேலும் இந்த பௌத்த அரசர்கள், பௌத்த பிக்குகளைக் கொண்டு எழுதுவித்திருக்கிறார்கள் என்றால் அன்றைய அந்த ஆக்கிரமிப்புகள் பௌத்த மதத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பையும், இந்து சமயத்தின் செல்வாக்கையும் ஒருவகையில் மத ஆக்கிரமிப்பாகத் தான் எதிர்கொண்டிருப்பார்கள். எனவே இந்த பௌத்த பிக்குகள் தென்னிந்திய தமிழ் அரசர்களின் படையெடுப்புகளையும், படையெடுப்பாளர்களையும் கடும் எதிர்ப்புணர்வுடனும், வெறுப்புணர்வுடனும் தான் பதிவு செய்திருப்பார்கள் என்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும். அதேவேளை சில தமிழ் அரசர்கள் பௌத்தத்துக்கு செய்த சேவைகளைப் பற்றியும் அதே சூளவம்சம் பதிவு செய்திருக்கிறது என்பதை மறுக்கவும் முடியாது.

ஹோரஸ் பெரேரா, ரத்னசபாபதி ஆகியோர் இலங்கை இந்திய வரலாற்றை ஒப்பீட்டாய்வு செய்யும் போது சூளவம்சத்தில் அதிக நம்பகத்தன்மையைக் கொண்ட பகுதி தர்மகீர்த்தியின் முதலாவது பகுதி தான் என்றும் அதேவேளை அவர் முதலாம் பராக்கிரமபாகு பற்றி தவிர்த்த பல விபரங்களை இந்திய வரலாற்றிலிருந்து பெற முடிகிறது என்பதையும், மேலும் அவர் இலங்கைத தீவின் ஏனைய பகுதிகளின் விபரங்களை அவர் தரவில்லை என்கிற விமர்சனத்தையும் முன் வைக்கிறார்கள். பராக்கிரமபாகு பற்றி அவர் தந்த தகவல்களில் இருந்து சற்று மாறுபட்ட விபரங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன என்கின்றனர். இன்றைய வரலாற்றாய்வுக்கு அந்த விபரங்கள் முக்கியமானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சூளவம்சத்தின் மூன்றாவது பகுதி, தெளிவற்ற, ஸ்தூலமற்ற தகவல்களைக் கொண்டது என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

வம்ச காவியங்களின் கதாநாயகர்கள்.

மகாவம்சத்தில் மாமன்னன் துட்டகாமினி (துட்டகைமுனு) எப்படிப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளப்பட்டாரோ அதுபோல சூளவம்சத்தில் மகா பராக்கிரமபாகு (முதலாம் பராக்கிரமபாகு) பாட்டுடைத் தலைவனாக கொள்ளப்படுகிறான். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியில் மொத்தம் 37 அத்தியாயங்களில் 11 அத்தியாயங்கள் துட்டகைமுனுவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதை விட அதிகமான அத்தியாயங்கள் பராக்கிரமபாகுவுக்கு சூளவம்சத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. சூளவம்சத்தின் முதலாவது பகுதியில் மொத்தம் 18 அத்தியாயங்களை; 33 ஆண்டுகள் மாத்திரமே ஆட்சி செய்த மகா பராக்கிரமபாகுவின் வீரதீரமிக்க ஆட்சியைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது அடுத்த எட்டு நூற்றாண்டுகளை (78 அரசர்களின் ஆட்சியை) அவர் 24 அத்தியாங்களில் முடித்துவிட்டார்.(14) இன்னும் சொல்லப்போனால் இதுவரை வெளிவந்துள்ள மொத்த மகாவம்சத் தொகுதிகளிலும் அதிக அத்தியாயங்கள் மகா பராக்கிரமபாகுவுக்கே உள்ளன எனலாம். தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு எதிராக போரிட்டு விரட்டியடித்து பிளவுபட்டிருந்த நாட்டை எப்படி ஒன்று சேர்த்தார், லங்காபுர என்கிற படைத்தளபதியின் தலைமையில் படையனுப்பி மதுரையைக் கைப்பற்றியதையும், (ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரையான சமர்களை அவர் அதில் விளக்கியிருக்கிறார்.)(15)  அதன் பின்னர் பௌத்த விகாரைகளையும், பாரிய வாவிகளையும் கட்டுவித்து நாட்டை வளப்படுத்தினார் என்கிற கதை தான் அப்பகுதி.

சூளவம்சத்தின் இரண்டாம் பகுதியை எழுதிய தர்மகீர்த்தி (II) தேரர்; இரண்டாம் பராக்கிரமபாகுவுக்கே அதிக இடம் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பராக்கிரமபாகுவுக்கும் அவரின் மகனுக்கும், விஜயபாகுவுக்கும் சேர்த்து மொத்தம் 37 ஆண்டு கால ஆட்சிக்கு எட்டு அத்தியாயங்கள் ஒதுக்கிய அவர் எஞ்சிய 53 ஆண்டுகால ஆட்சியை இரண்டே அத்தியாயங்களில் முடித்துவிட்டார்.

அதுபோல திபெட்டுவாவே சுமங்கள தேரோவின் கதாநாயகன் மன்னர் கீர்த்திஸ்ரீ இராஜசிங்கன். அம்மன்னரின் 33 ஆண்டுகால ஆட்சியை 45 பக்கங்களுக்கு அவர் அதே அளவு பக்கங்களில் தான் அடுத்த மூன்று நூற்றாண்டு ஆட்சி செய்த 24 அரசர்களின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆக இந்த பிக்குமார் தமக்கான கதை மாந்தர்களை மையப்படுத்திக் கொண்டு தான் இந்த பனுவல்களை இயற்றியிருப்பதையும் ஏனைய ஆட்சிக்காலங்களை தமது விருப்புவெருப்புகளுக்கேற்ப கையாண்டிருப்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். “சொன்னவற்றை விட சொல்லப்படாமல் தவிர்க்கப்பட்டவற்றை தேடியறிவதே சிங்கள வரலாற்றில் சிரமமான காரியம்” என்று சும்மாவா சொன்னார் கைய்கர்.

தமிழில் இதுவரை சூளவம்சம் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை. கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) மகாவம்சத்தின் முதலாவது பாகத்தை தமிழில் தந்தது நமக்குத் தெரியும் (2003). அதுபோல அவர் சூளவம்சத்தையும் தமிழுக்குத் தந்தார் (2008). துரதிர்ஷ்டவசமாக இவை இரண்டும் மிகவும் சுருக்கப்பட்ட சாரம்சமே. சுர்க்க்கப்பட்ட விளக்கவுரையே. முழுமையானவை அல்ல. கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்க்வுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மகாவம்சத்தின் இந்த இரு பாகங்களைத் தவிர அடுத்த நான்கு பாகங்களில் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான சித்தாந்த தளம் அங்கிருந்து தான் ஊற்றெடுக்கின்றன என்கிற கருத்தை நாம் ஆழமாக காணவேண்டுமாயின் மகாவம்சப் பிரதிகளில் சூளவம்சத் தொகுதியின் வகிபாகம் அதி முக்கியமானது எனலாம்.

அடிக்குறிப்புகள்:

  1. Walpola Rāhula, History of Buddhism in Ceylon: The Anuradhapura Period, 3rd Century BC-10th Century AC, M.D.gunasena & Co. Ltd, 1956.
  2. Norman, Kenneth Roy, Pali Literature. Wiesbaden: Otto Harrassowitz, (1983).
  3. பிரபல சிங்கள தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜ் சோமதேவ நுவன் என்கிற ஊடகவியலாளருடன் தொல்லியல் வரலாறு பற்றி யூடியுப்பில் தொடர் உரையாடல் ஒன்றை செய்து வந்தார். அதன் 60 வது பகுதி மே 2021 வெளியானது. அந்த உரையாடல் “இலங்கையில் தமிழ் பௌத்தர்” பற்றியது. அவர் அதில் குறிப்பிட்ட பல முக்கிய தகவல்களில் “மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியை எழுதிய தர்மகீர்த்தி தேரர் ஒரு சோழ நாட்டு தமிழ் பிக்கு என்றார். அந்தப் பொறி தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
  4. Walpola Rāhula, History of Buddhism in Ceylon: The Anuradhapura Period, 3d Century BC-10th Century-AC, M.D. Gunasena, 1956
  5. மகாவம்சம் 6ஆம் தொகுதி (சிங்களம்), இலங்கை கலாச்சார திணைக்களம், கலாசார அமைச்சு, 2016.
  6. Dhammkitti, “The Dathavansa”, or, the History of the Tooth-Relic of Gotama Buddha: The Pali Text and Its Translation Into English, With Notes by Mutu Coomara Swamy (mudeliar), Trubner & Co., London (1874)
  7. C. E. Godakumbura : Catalogue of Ceylonese Manuscripts (Catalogue of Oriental Manuscripts, Xylographs, etc., in Danish Collections. Vol. I, The Royal Library Copenhagen, 1980.
  8. Don M. de Z. Wickremasinghe, The Several Pali and Sinhalese Authors known as Dhammakitti Journal of the Royal Asiatic Society, Volume 28, Issue 01, January 1896
  9. ஹாந்துபெல்பொல புன்ஞாரசார ஹிமி, சூளவம்சம் – திவயின - 10.07.2021 (இக்கட்டுரை “විචිත්‍ර ශාස්ත්‍රීය සඟරාවේ 1966 නොවැම්බර් කලාපයෙනි” இலிருந்து மீள் பிரசுரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  10. Mahinda Deegalle, Buddhism, Conflict and Violence in Modern Sri Lanka (Routledge Critical Studies in Buddhism), Routledge;(April 21, 2006)
  11. L. H. Horace Perera, M. Ratnasabapathy, Ceylon & Indian History from Early Times to 1505 A. D. W. M. A. Wahid & Bros, India, 1954
  12. Don, Martino De Zilva Wickremasinghe, Catalogue of the sinhalese printed Books intha Library of the British Museum, London British Museum, 1901
  13. Culavamsa: Being the More Recent Part of the Mahavamsa (Part II) Translated by Wilhelm Geiger, The Ceylon Government information Dept, Colombo, 1953
  14. Bimala Churn Law, A History of Pali Literature - Vol. II, Kegan Paul, Trench trubner & co., Ltd, London, 1933.
  15. Ruwan Rajapakse, Concise Mahavamsa, History of Buddhism in Sri Lanka, 2003

நன்றி: காக்கைச் சிறகினிலே - ஓகஸ்ட் - 2021
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates