Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

வடக்கிலே காணப்படுபவை தமிழ் பௌத்தம் தான்! - ஜனாதிபதி ரணில்

இந்த வீடியோவைப் பாருங்கள். தொல்லியல் பணிப்பாளர் இராஜினாமாவுக்கு தள்ளப்பட காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய சந்திப்பு இது தான். அதில் உள்ளபடியே மொழிபெயர்த்திருக்கிறேன். இன்று 12ஆம் திகதி தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுரா மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரால் கடமையை செய்ய முடியாவிட்டால் விலகும்படியும் வேறு ஒருவரை அந்த இடத்துக்கு நியமிக்க முடியுமென்றும் ஜனாதிபதி கடந்த மே 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நில முகாமைத்துவம் தொடர்பாக நடந்த கூட்டத்தின் போது தெரிவித்திருந்ததை அறிவீர்கள்.

முதல் தடவை ஒரு இலங்கையின் ஒரு ஜனாதிபதி வடக்கில் இருப்பவை தமிழ் பௌத்தர்களது என்று அறிவித்திருக்கிறார். அதுவும் இனவாத சக்திகளுக்கும், தொல்லியல் தலைமைகளுக்கும் கொடுத்திருக்கும் பதிலடி. ஒரு ஜனாதிபதியே இவ்வாறு நம் நிலத்தில் இருக்கும் பௌத்த சான்றுகள் தமிழகளுக்கு உரியவை என்று கூறும்போது; இன்னும் அது “சிவபூமி” என்று போலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கப்போகிறோமா?

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு நிலத்தில் 229 எக்கரை யூன் 30க்கு முன்னர் விடுவிப்பது பற்றிய கடிதத்தை வழங்குதற்கு அமைச்சரும். பணிப்பாளரும் உறுதியளித்தார்கள். (இப்படி ஆர்ம்பிப்பவரின் பெயர் தெரியாது சிங்களம் தெரிந்த தமிழர் என்று நினைக்கிறேன்)

தொல்லியல் பணிப்பாளர் மனதுங்க : அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது சேர் அந்த நிலத்தை விடுவிப்பது சிரமம். அது சிக்கலாக ஆகிவிடும்.

ஜனாதிபதி ரணில் : நீங்கள் அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்னொருதடவை நீங்க இவ்வாறு தேசிய கொள்கையை ஏற்க மறுத்தால் அது ஒரு பிரச்சினையாகிவிடும்.

சுமந்திரன் : அந்த நிலத்தில் நூற்றாண்டுகளாக விவசாயம் செய்துவருகிறார்கள்.

ரணில் : சரி இப்போது எத்தனை ஏக்கர்கள் வேண்டும்? (ஆணையாளரைப் பார்த்து)

பணிப்பாளர் : தற்போது 72ஏக்கர்கள் உண்டு. இன்னும் 270 ஏக்கர்கள் எங்களுக்கு வேண்டும் என கேட்டிருக்கிறோம் சேர். இவற்றில் விவசாயம் மேற்கொள்ளும் நிலம் 5 ஏக்கர் மட்டுமே.

ரணில் : சரி அந்த 5 ஏக்கரை திருப்பிக் கொடுக்க முடியுமா?

பணிப்பாளர் : அந்தக் காணி எங்களிடம் இல்லை. அது வன இலாக்காவிடமே இருக்கிறது.

ரணில் : சரி நீங்கள் 270 ஏக்கர்களை எடுத்தால், இந்த விகாரை மகாவிகாரையை விட பெரிதென்கிறீர்களா? மகாவிகாரை, ஜேதவனாராமய, அபயகிரி அனைத்து விகாரைகளையும் சேர்த்தால் கூட நூறு ஏக்கர் வராதே. அவற்றை விட பெரிய விகாரை என்றா எனக்கு நீங்கள் கூறுகிறீர்கள்?

(இடையில் சுமந்திரன் குறிக்கிடுகிற போது. இருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள் என்கிறார் ஜனாதிபதி)

இல்லை சேர். அங்கே போய் ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகளாகின்றன. அவர்கள் அடையாளம் கண்டு குறிப்பிட்ட நிலங்கள் தான் இவை. மீண்டும் அங்கே சென்று அவற்றை மீளாய்வு செய்யலாம்.

ரணில் : நீங்கள் எனக்கு வரலாறு கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு நான் வரலாற்றைக் கற்றுத் தரவா?

பணிப்பாளர் : மகாவிகாரை அளவுக்கு அது பெரிதில்லை தான்....

ரணில் : அப்படியென்றால் அது சிறியதாக அளவா இருக்க வேண்டும். அது முக்கிய இடம். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடம். எனவே அதில் பிரச்சினை இல்லை. ஆனால் 275 ஏக்கர்கள் இருக்க முடியாது.

மற்றவர் : பணிப்பாளர் தான் 270 ஏக்கர் நிலத்தில் ஆராயுமாறு பணித்தவர். அதன் பின்னர் அந்த கடிதத்தை மீளப்பெறுவதாக பணிப்பாளரும், அமைச்சரும் தெரிவித்திருந்தார்கள். இங்கே அவர் அப்படி மீளப் பெற முடியாது என்கிறார். அது எங்கள் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது...

ரணில் : ஆம் இது முக்கிய தொல்லியல் இடம். இங்கு தான் தமிழ் பௌத்த விகாரை இருந்திருக்கிறது. இதைப் பற்றிய வரலாற்று சான்றுகள் உள்ளன. இதைப் பற்றி கொத்குக என்கிற ஒரு மந்திரி ஒருவரால் ஆக்கப்பட்டது. அவரைப் பற்றிஅறிந்திருக்கிறீர்களா? (பணிப்பாளரைப் பார்த்து) எப்படியோ... 200 ஏக்கர்கள் இருக்கும் என்றெல்லாம் நான் கருதவில்லை. அந்த இடம் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் இவ்வளவு நிலம் அதற்குத் தேவையா என்பது தான் பிரச்சினை. 

இந்த சம்பாசனையில் இராச மாணிக்கம் சாணக்கியன்

இப்படித்தான் திரியாயவில் பறிக்கப்பட்ட 3000 ஏக்கர் காணி இப்போது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை பனாமுரே திலகவன்ச என்கிற பிக்கு கையகப்படுத்தி அதனை மீண்டும் பறிக்கப்பட்ட மக்களுக்கே விவசாயம் செய்வதற்கு குத்தகைக்கு கொடுக்கிற நிலமை உருவாகியிருக்கிறது.

என்றுதொடர்கிறது.

ஜனாதிபதி ரணில்,தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதவை மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படவேண்டும். திரியாயவில் 3000 ஏக்கர் ஏன் தேவைப்பட்டது. இனியாவது அவற்றை மீளக் கொடுப்பீர்களா இல்லையா? இதைத் தீர்ப்பீர்களா இல்லையா? நேரடி பதிலைத் தாருங்கள். திரியாய என்பது என்ன?

பணிப்பாளர் :அந்த இடத்தைச் சுற்றித்தான் சேர்....

ரணில் : அங்கே ஒரு பன்சலை அல்லவா இருந்தது. 

பணிப்பாளர் :ஓம். ஒரு விகாரை

ரணில் : விகாரை.. ஆனால் அங்கே 3000 ஏக்கர் இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அது மட்டுமல்ல திரியாய என்பது ஒரு பன்சலையாக இருக்கவில்லை. அது முன்னொரு காலத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக (Light house) இருந்தது. முதுமாவிகாரை, யாலவில் உள்ள ஆகாச சைத்திய போன்றவை எல்லாம் உண்மையில் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தவையே. அதன் பின்னர் அங்கே சென்று பிக்குமார் தங்கிக் கொண்டார்கள். 

மேலும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தொல்லியல் திணைக்களம் கண்டுபிடிக்கிற இடங்களை தொல்லியல் திணைக்களம் பொறுப்பெடுத்து பாதுகாக்காமல்; அவற்றை ஏன் பௌத்த பிக்குகளிடம் ஒப்படைக்கிறார்கள். சுற்றி உள்ள தமிழர் நிலங்களையும் சேர்த்து அந்த பிக்குகளுக்கு வழங்கி புதிய விகாரைகளையும் அமைக்க வழிஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அதன் பின்னர் அந்த பிக்குமார் அந்த விவசாய காணிகளை அங்கிருக்கும் மக்களுக்கே குத்தகைக்கு கொடுக்கிற அநியாயமும் நடக்கிறது. இது கேலிக்கூத்து மட்டுமல்ல மோசமான மீறல்.

தொல்லியல் இடங்களாக அடையாளம் கண்டால் அவை மேலும் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான (Restoration) செய்யலாமே ஒழிய அங்கே புதிய கட்டுமானங்களை செய்ய முடியாது என்பது தொல்லியல் விதி.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் அளவுக்கு வரலாற்று அறிவைக் கொண்டவர்கள் இருந்ததில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். ரணில் பல கூட்டங்களில் இதனை மெய்ப்பித்து இருபதைக் காணலாம். அதுபோல இலங்கையின் அரசியல் தலைவர்களிலேயே பௌத்த மரபுரிமைக்காக சொத்துக்களை அதிகம் தானம் செய்த குடும்பமும் ரணிலின் குடும்பம் தான் என்பதும் வரலாறு. இந்தப் பின்னணியால் தான் ரணிலோடு மோத விளையும் பிக்குமார் தரப்பு குறிப்பிட்ட எல்லையை தாண்ட முடிவதில்லை. ரணிலிடம் இருக்கும் லிபரல்வாத சிந்தனையும் சேர்ந்து தொல்லியல் சிக்கலில் இந்தப் போக்கைக் கடைபிடிக்க முடிகிறது. ஆனால் மறுபக்கம் ரணில் ஒரு தனித் நபர் அல்ல நிறுவனமயப்பட்ட சிங்கக பௌத்த பேரினவாத அரசின் தலைவர். ரணிலிடம் போய் பிரபாகரனிடம் எதிர்பார்த்ததைதை கோர முடியாது.

தற்போது இந்த உரையாடலைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக பிக்குமார்களும் இனவாத அமைப்புகளும் களத்தில் இறங்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. ஊடக சந்திப்புகள், கண்டன அறிக்கைகள் எல்லாம் ஏற்கெனவே தொடங்கியாயிற்று. சமூக வலைத்தளங்கள் எங்கும் சிங்களத்தில் ரணிலுக்கு கொடுத்து வரும் தாக்குதல்களும், பேச்சுக்களும் ரணில் மீது கடும் எதிர்ப்பலை தொடங்கப்பட்டுவிட்டதை உறுதிபடுத்துகின்றன.ரணிலின் இந்த கருத்துக்கள் இனவாத சக்திகளுக்கு ஒரு பேரிடி தான் என்பதை கவனிக்க முடிகிறது.




குருந்தூர் மலை எதிரொலி: தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுர மனதுங்க இராஜினாமா! - என்.சரவணன்

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் மலையை அண்டிய (குருந்தி மலை) தொல்லியல் இடத்துக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியை விடுவிக்க மறுத்ததால் தொல்லியல் பணிப்பாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் பணிப்பாளர்பேராசிரியர் அனுர மனதுங்க கடந்த 15ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முல்லைத்தீவு வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மகா விகாரைக்கு சொந்தமான இருநூறு ஏக்கர் நிலப்பரப்பிலான தொல்லியல் எச்சங்கள் அடங்கிய அநுராதபுரத்தின் ஆரம்ப காலத்தை விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் கண்டு அளவிட்டு தருமாறு காணி அளவீட்டாளரிடம் தொல்லியல் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அடையாளம் காணப்பட்ட பகுதியில் 05 ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணியும் உள்ளடங்கும்.

கடந்த 08ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த நெற்காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்போது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற வகையில் பேராசிரியர் அனுர மனதுங்க, தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள நாட்டின் சட்டங்களின்படி அதனைச் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் தாம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுமாறு தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்படி, பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆலயத்தின் புராதன இடிபாடுகள் கொண்ட நகரின் பகுதியை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்தி தொல்லியல் திணைக்களம் பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதில் 05 ஏக்கர் காணியை அதன் உரிமையாளர் தொல்லியல் திணைக்களத்துக்கு தரத் தயாராக இருந்ததாகவும் அவருக்கு அங்கே ஏற்கெனவே அவருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் சொந்தமாக இருந்ததாகவும் தொல்லியல் திணைக்களம் கூறியிருக்கிறது.

இந்த நிலைமையை மோசமாக ஆக்குவதும் தடுப்பதும் தமிழ் தரப்பு அரசியல் வாதிகள் தான் என்று தற்போது அரசியல்வாதிகளும், தொல்லியலாளர்களும், பௌத்த சங்கங்களும் இனவாத அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

முல்லைத்தீவு குருந்தூர் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிரதேசம் பௌத்த தொன்மைகளைக் கொண்ட பிரதேசம் அல்ல என்றும், அது இந்து மக்கள் காலங்காலமாக வழிபட்டு வந்த ஆதி ஐயனார் கோவிலுக்குச் சொந்தமானது என்று தமிழர் தரப்பு உறுதியாக கூறி வருகிறது. இந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஒருபோதும் சிங்களவர்களோ, பௌத்த பிக்குகளோ வாழ்ந்ததில்லை. மேலும் 2018ஆம் ஆண்டில் தமிழர்கள் இங்கு வழிபடத் தடையில்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இராணுவத்தினரையும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளையும் களமிறக்கி வடக்கில் உள்ள இந்துப் பிரதேசங்களை வலுக்கட்டாயமாக பௌத்தமயமாக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழர் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இராணுவத்தின் பாதுகாப்பிலேயே தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்துள்ள பிரதேசத்தில் பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள மக்களோ இதுவரை வாழ்ந்ததில்லை.

சிங்கள வரலாற்று புராணங்களிலும் அட்டகத்தா போன்ற பாரம்பரிய  இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பழங்கால குருந்தவசோக விகாரை இந்த இடத்தில் அமைந்துள்ளதாக சிங்கள தொல்லியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.  குருந்தவசோகாராமய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான தொல்லியல் தளம் என்று உரிமை கோருகின்றனர் அவர்கள். இது கிறிஸ்தவத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இருந்த குடியேற்றம் என்பதற்கான விஞ்ஞானபூர்வமான சான்றுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். 

இது தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய வராலாற்று சான்றுகள் எவை, முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி ஒரு பட்டியலையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.


  • மகாவம்சத்தின் 33வது அத்தியாயத்தின் 32வது சரணத்தில் லஜ்ஜிதிஸ்ஸ மன்னனுக்குப் பின் வந்த கல்லாடநாக (கி.மு. 110-103) மன்னனால் கட்டப்பட்ட “குருந்தபாசகா” கோயில் இது என்று அடையாளப்படுத்துகின்றனர்.
  • இக்கோயிலை ஒட்டி குருந்தசுல்லக்க என்ற ஊர் இருந்ததாக வம்சவரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
  • சமந்தபசாதிகா வினயட்ட என்கிற இதிகாசக் காப்பியத்தில், குருந்தனூர் அட்டகத்தா பற்றி 75 முறைக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அந்த அட்டகத்தா இந்த குறுந்வேலு விகாரையில் தான் தொகுக்கப்பட்டது என்கின்றனர்.
  • முதலாம் அக்போ மன்னர் (கி.பி. 571-604) இந்தவிகாரையின் தளத்தில் குடியேறினார் என்றும், அந்த இடமே குருந்துவெவ என்றும், முதலாம் அக்போ மன்னன் செய்த குருந்துவெவா (வாவி) தற்போதைய தன்னிமுருப்பு ஏரி என்றும் நிக்கோலஸ் குறிப்பிடுகிறாராம்.
  • வரலாறு நெடுகிலும் இவ்விகாரையுடன் சேர்ந்து நடந்த வளர்ச்சிப் பணிகளை பௌத்த இலக்கியங்கள் பதிவு செய்து வருவதாக கூறுகின்றனர்.
  • IV ஆம் அகபோ மன்னர் (667-683) மற்றும் IIIஆம் மிஹிந்து மன்னர் (கி.பி. 801-804) ஆகியோர் இந்தக் கோயிலின் மீது மேற்கொண்ட தலையீட்டைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடுகின்றதாம்.
  • முதலாம் விஜயபா மன்னன் (கி.பி. 1055-1110) இக்கோயிலை மீட்டெடுத்தாராம்
  • இரண்டாம் பராக்கிரமபாகு (கி.பி. 1236-1270) மன்னரின் ஆட்சியின் போது கலிங்க மாக மற்றும் ஜெயபாகு ஆகிய தமிழர்ப் படைகளால் அழிக்கப்பட்ட 15 முகாம்களில் குருந்தனூர் விகாரையும் ஒன்று என்கின்றனர்.
  • பூஜாவலிய, நிகாய சங்கிராய போன்ற பழைய நூல்களில் இப்பகுதி குருந்து நாடு (சிங்களத்தில் ரட்ட என்பது நாடு), குரனந்துகம்மு நாடு, என்றும் அழைக்கப்படுவதாக தொல்லியல் குறிப்புகள் தெரிவிக்கினவாம்.
  • 1905 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த பகுதியில் ஒரு  கவேட்டு இருந்ததாம்.
  • ஹென்றி பார்க்கரின் கூற்றுப்படி, வட மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதி; இந்த குருந்தசோகா விகாரை என்கின்றனர்.
  • இந்த காணி 1933 ஆம் ஆண்டு 12-05-1933 தேதியிட்ட வர்த்தமானி அறிவித்தல் எண் 7981 இன் படி 78 ஏக்கர் நிலம் தொல்லியல் பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த விபரங்களில் பிழைகள் இருபதாகத் தெரியவில்லை.

கஜேந்திரன் பொன்னம்பலம் போன்றோர் “குருந்தூர் மலை என்பது பௌத்த சான்றல்ல” என்று வாதிடுவதை விட, அது பௌத்தம் தான், அது எங்கள் பௌத்தம் என்று வாதிடும் சாணக்கியமும் நேர்மையும் வேண்டும். ஏனென்றால் அங்கே சைவ சான்றுகளைப் போலவே பழைய பௌத்த தூபிக்கான சான்றும் கிடைத்திருக்கிறது என்பது உண்மை.


பிரபல இனவாத கோட்பாட்டாளராக அறியப்பட்ட நளின் த சில்வா

“அரச அதிகாரிகள் இருப்பது ஜனாதிபதி கூறியதும் விலகுவதற்கல்ல. மேலும் இந்த ரணில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் அல்ல. மாறாக தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஒருவர்.”

என்கிறார்.

சம்பா வைத்தியத்திலக்க என்கிற சிங்கள எழுத்தாளர் இப்படி சமீபத்தில் எழுதுகிறார்.

ஹெல எழுத்துக்களில் முதன் முதலில் எழுதப்பட்ட குருந்தி கல்வெட்டு சான்றுகள் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ஜகத் சுமதிபாலவினால் நிதி உதவி வழங்கப்பட்டது. ஒருமுறை ரணில், வெளியார் நிதியுதவியுடன் தொல்லியல் பாதுகாப்புப் பணிகளைச் செய்யக்கூடாது என்றும், பௌத்த விகாரைகள் இவ்வாறான உதவியுடன் புனரமைக்கப்படுவதானால், அது அரசாங்க நிதியில்தான் தொல்பொருள் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அப்படிச் செய்தால் இந்தப் பாதுகாப்புப் பணிகள் நின்றுவிடும். ஏனென்றால் இவற்றைச் செய்ய தொல்லியல் துறையிடம் பணம் இல்லை.வடக்கு, கிழக்கில் ஆங்காங்கே பௌத்த தொல்லியல் சான்றுகள் ஏராளம் உள்ளன. அங்கே கிடைக்கின்ற பௌத்த தொல்லியல் சான்றுகள்; தமிழ் தாயகக் கோட்பாட்டுக்கு புனைவுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மரண அடி. அதனால்தான் அவர்கள் வடக்கில் அனைத்து மதத்தினருக்கும் இடமளித்த போதும் பௌத்த கலாச்சாரத்தை அங்கே அனுமதிக்கவில்லை.

பௌத்த சான்றுகளைக் கண்டவுடனே அங்கே சென்று சிவலிங்கம் வைக்கும் அளவிற்கு துணிந்தனர். தாங்கள் செய்வது பித்தலாட்டம் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களால் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்  அந்த உண்மையுடன் மோதுவதற்கு அவர்கள் கூட்டம் சேர்ப்பதையும் பொய்யான நாடகங்களையும் ஆடுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் ஒரே பலம் புலம்பெயர் மக்களின் பணம். அதனால் அந்த பணத்தை செலவு செய்து இந்த நாட்டிற்கு தமக்கேற்ற ஆட்சியாளர்களையும் ஏற்படுத்துகிறார்கள். அந்த ஆட்சியாளர்களோ; கொள்கை முடிவுகளை எடுத்து அவர்களுக்கு மேடையைக் கொடுக்கிறார்கள். வடக்கின் பௌத்த பாரம்பரியத்தை அழித்து, நிலங்களை அபகரித்து, தாயகத்தை கட்டியெழுப்புவது “தெற்கின் புலிகள்” (தமிழர்களுக்கு உதவுவதாக அவர்கள் கருதும் சிங்களவர்களைத் தான் தெற்கின் புலிகள் என்கிறார்கள்) தான். அதுதான் உண்மை.

குருந்தியிலுள்ள தொல்லியல் காணிகளை மீள ஒப்படைக்குமாறு தனக்கு வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இன்று பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முடியாவிட்டால் பதவி விலகுங்கள். யாரையாவது வைத்து செய்கிறேன்... என்கிற வசனங்களை “புலம்பெயர் நாட்டில் பணம் தான்.” பேச வைக்கின்றன. இந்த தமிழ் தய்ச்போரா கோருவது  இலங்கையின் எதிர்காத்தைத் தான்.

எதை எதிர்கொண்டாலும் உனக்காக காத்திருக்கிறோம் குருந்தியே. சிங்களக் கலாச்சாரத்தையும் பௌத்த பாரம்பரியத்தையும் விரும்பும் உங்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு பணிவுடன் அழைக்கின்றோம்..”

-சம்பா வைத்தியதிலக.


மனதுங்கவின் இராஜினாமா உறுதியானால் சிங்கள பௌத்தத் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும், கிளர்ச்சியும் எழும் என்பதை  உணர முடிகிறது.

குருந்தூர் மலை தொடர்பாக சிங்கள சமூகத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் உரையாடல்கள், பரப்புரைகள், தமிழர்கள் மீதான எதிர்ப்புகள், ஊர்வலங்கள், கூட்டங்கள், இணையத்தளங்கள், கட்டுரைகள், நூல்கள், உரையாடல் குழுக்கள் என்பவற்றைப் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒரு பகுதி எதிர்வினை கூட தமிழர் தரப்பில் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

விடுதலைப் புலிகள் காலத்தில் இவற்றை நாசம் செய்திருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகள் இத்தகைய தொல்லியல் சான்றுகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக யுத்த காலத்திலும் அவை அழியவிடாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அவ்வாறு பாதுகாகபட்டதால் தான் இன்று தென்னிலங்கை தொல்லியலாலர்களுக்கும் அங்கே சென்று அவற்றை ஆராய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்லியலின் பேரால் ஆக்கிரமிக்கப்படவிருக்கும் இடங்கள் எவை என்கிற வரைபடத்தை 1970களிலேயே தயார் செய்துவிட்டார்கள். அதனை சிறில் மெத்தியு 1980ஆம் ஆண்டு தனது நூலில் முதன் முறை பகிரங்கமாக வெளியிட்டார் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்களோ தெரியாது. அந்த வரைபடத்தில் 42 ஆம் இலக்கத்தைக் குறிப்பது "குருந்தூர் மலை". மொத்தம் எத்தனை இடங்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா? மொத்தம் 261 இடங்கள்.

தற்போது அந்த இடங்களின் பட்டியல் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதை சிங்களத்தில் நடக்கும் விவாதங்களில் இருந்து அறிந்துகொண்டேன். இவற்றில் சுமார் 10 இடங்களின் மீதான ஆக்கிரமிப்பின் மீது தான் நாம் வினையாற்றி வருகிறோம். எண்ணிப் பாருங்கள் எத்தகைய விபரீதம் காத்திருக்கிறது என்பதை. இவை அனைத்தும் சிங்கள பௌத்த தொல்லியல் சான்றுகளென நிறுவி "தமிழர் பூர்வீக அடையாளத்தை" துடைத்தெறியும் சதியே. தமிழ் பௌத்தம் பற்றிய மீள் கண்டுபிடிப்பின் அவசியத்தை இதனால் தான் திரும்பத் திரும்ப சில வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம் தோழர்களே.

யாழ் நூலக எரிப்பும், யாழ்ப்பாணத்தை சிதைக்கச் சென்ற யாழ் தேவியும் - சிறிமான்னவின் வாக்குமூலம்

தமிழில் - என்.சரவணன்

யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன.

“1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்குஆம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய வீட்டுக்கு வந்து தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பை எனக்கு விடுத்தார். அப்போதைய யாழ்ப்பாணத்தின் நிலைமை மோசமாக இருப்பதையிட்டு உரையாடினோம். ஆனால் அவர் ‘நீங்கள் இந்த.பணிகளில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு ஏற்கனவே இங்கே பணியாற்றி கொண்டிருக்கின்ற ஒரு நபர் நீங்கள்’ என்றார். ஒரு அரசு ஊழியனாக அதனை என்னால் நிராகரிக்க முடியவில்லை. இறுதியில் அடுத்த நாள் அதிகாலையில் குருநாகலில் இருந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டோம். பின்னர் குருநாகளில் இருந்து இரயிலில் ஒவ்வொரு கம்பார்ட்டுகளுக்குள் நாங்கள் பிரித்து ஏற்றப்பட்டோம். 

குருநாகலில் அன்று இருந்த உதவி அரசாங்க அதிபர் திசாநாயக்க என்பவர் தான் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.

இரயில் நிலையத்தில் அங்கே அன்றைய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மைக்கை எடுத்து உரத்துப் பேசினார். அவர்  எங்களிடம்;

“இப்போது நாங்கள் தேசிய வீரத்தனமான (ජාතික වීර ගමන) பயணத்துக்கு புறப்படுகிறோம். உங்களுக்காண பணிப்புகள் அங்கே கிடைக்கும். உங்களுக்கு தேவையான உதவிகள் அங்கே கிடைக்கும்” என்றார்.

அப்போது இதன் அர்த்தத்தை பூரணமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இரயிலில்  உள்ள கம்பார்ட்டுகளில் குருநாகல, வாரியபொல என பிரதேசவாரியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தான் எங்களுடன் அரச ஊழியர்கள் அல்லாதவர்களும் இருந்ததைக் கண்டோம். அவர்கள் கைகளில் பச்சைக் குத்தியவர்கள், லுங்கி அணிந்தவர்கள், விசித்திரமாக உடை அணிந்திருந்தவர்களைக் கண்டோம். அப்போதும் இவர்கள் ஏன், எதற்காக எங்களுடன் வருகிறார்கள் என்பதை உறுதியாக உணர முடியவில்லை. 

பின்னர் தான் ஒரளவு ஊகிக்க முடிந்தது. 

இரவு எட்டு மணிக்குத் தான் இரயில் யாழ்ப்பாணத்தை அடைந்தது. நாங்கள் இறங்கியதும் இராணுவம் வந்து எங்களை பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றது. எங்களுக்கு அங்கே யாழ் இந்துக் கல்லூரியில் தான் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் அப்போது ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்தது. நாங்கள் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது ஒரு மருங்கிலும் தீயால் சேதப்படுத்தப்பட்டிருந்த பலவற்றைக் கண்டோம். அடுத்த நாள் தேர்தல் ஆனால் முன்னைய நாள் அங்கிருந்த இந்த மோசமான நிலையைக் காணக் கூடியதாக இருந்தது.

அரச ஊழியர்கள் மாத்திரம் தான் உங்களோடு இருந்தார்களா? 

யாழ் இந்துக் கல்லூரியில் நாங்கள் சென்றிருந்தபோது அங்கே அமைச்சர் காமினி திசாநாயக்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, பீ.எம்.பிரேமசந்திர ஆகியோர் அங்கே வந்து சேர்ந்தார்கள். எங்களுக்கு ஐம்பது ரூபாய் வீதம் முதலில் வழங்கப்பட்டது. 

“உங்களுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கும், உங்களுக்கு தேவையான மேலதிக ஊழியர்களும், போலீசார், இராணுவம் என அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் வாக்களிப்பை ஏழு மணிக்கு தொடங்குங்கள் ஆனால் பத்து மணிக்கு நிறுத்திவிடவேண்டும். நிறுத்திவிட்டு அங்கே வாக்களிப்புக்காக வரிசையில் இருப்பவர்களை போலிசாரையும், இராணுவத்தையும் கொண்டு கலைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்கள் பொறுப்பில் இருக்கிற வாக்கட்டைகளை நிரப்பி வாக்குப் பெட்டிகளில் போட்டுவிடுங்கள்.” என்றார்

அப்போது அங்கே இருந்த இன்னொரு ஊழியர் “அப்படியென்றால் யாருக்கு புள்ளடி இடுவது”

 என்று வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் “உங்களுக்கு அதில் உள்ள விலங்கு எதுவேண்டு தெரியும் அல்லவா” அதற்கே புல்லடி இடுங்கள் என்றார். ஊழியர்கள் பலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எவரும் அங்கே மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இருக்கவில்லை. அங்கிருந்த பலருக்கு நிலைமை பற்றிய விசனம் இருந்தபோதும் எதிர்த்து இயங்கும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை.

இது மோசமான தேர்தல் மோசடி அல்லவா?

உண்மைதான் மோசமான தேர்தல் மோசடி தான். இத்தனைக்கும் அப்போது அரசாங்கத்துக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் மோசமான தேர்தளை நடத்தினார்கள்.

என்னோடு அங்கே சோமபால ஜெயவீர என்கிற அஒரு ஊழியர் இருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் அங்கே தங்கியிருந்தோம். அவர் ஒரு உதவி ஆணையாளர். அவரிடம் நான்; யாழ்ப்பாணத்தில் நான் 79ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகிறேன். அந்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க நான் துணைபோக முடியாது; எனவே இங்கிருந்து நான் தப்பிப் போகப் போகிறேன் என்றேன். அவரையும் அழைத்தேன். ஆனால் அவர்; பயமாக இருக்கிறது கைது செய்துவிடுவார்கள் என்று பயப்பட்டார்.

நாம் இருவர் மட்டும் தான் எனவே பெரிதாக பாதிக்காது இருவரும் சென்று விடலாம் என்று அவரை சமாதானப் படுத்த முயன்றேன். இறுதியில் அவரும் ஒப்புகொண்டார்.

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லோருக்கும் நியமனக் கடிதங்களைக் கொண்டு வந்து பெயர் கூறி அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அதனை எடுக்கவில்லை. தெரியாதது போல இருந்தோம். அதிகாலை பலர் தயாராகி இருக்காததால் அங்கே பலர் நியமனக் கடிதங்களை உடனடியாக எடுக்க வந்திருக்கவில்லை. எனவே பல கடிதங்கள் அங்கே தேங்கி இருந்தன. 

அங்கே காமினி திசாநாயக்க கூறினார். நியமனக் கடிதங்கள் பெற்றவர்கள் ஒரு வரிசைக்கு வாருங்கள் கிடைக்காதாவர்கள் மறு வரிசைக்கு வாருங்கள் என்றார்.

உங்கள் பெயர் ஆரியசேன என்று இருக்கலாம். அங்கே நீங்கள் கருணாசேன என்று கூறி வாக்குப் பெட்டிகளை எடுங்கள். இப்படித்தான் ஆரியசேனக்கள், கருணாசேனக்கள் ஆகினார்கள். கருணாதிலக்கக்கள் குணதிலக்கக்கள் ஆகினார்கள். இப்படித்தான் அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். பலருக்கு இதனை மறுப்பதற்கோ, எதிர்பதற்கோ திராணி இருக்கவில்லை.

ஆனால் என் மனசாட்சி இந்த நிலைமையை எற்றுக்கொள்ள மறுத்தது.

பின்னர் இராணுவம் வந்து வாயிற் கதவைத் திறந்து நியமனம் பெற்ற ஊழியர்களை வெளியே அனுப்பியது. SPO தலைமையில் இன்னொரு அணியோடு சேர்ந்து நாங்கள் இருவரும் அந்த அணியோடு இணைந்துகொண்டோம். 

 SPO வுக்கு தனது குழுவில் இருந்தவர்கள் யார் யார் என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். நாங்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சென்ற போது தாமதமாகியிருந்தது. அங்கே இருந்த குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி நாங்கள் இருவரும் அங்கிருந்து இரகசியமாக தப்பிதத்தோம்.

எங்களுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கே உள்ள நூல் நிலையத்துக்கு செல்வோம் என்று நான் கூறினேன். நான் அங்கே பணிபுரிந்த காலத்தில் நூலகத்துக்கு சென்று பத்திரிகைகளை வாசித்துவிட்டுப் போகும் வழக்கம் எனக்கு இருந்தது. அங்கே அப்போது சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் இருந்தன.

நாங்கள் நூலகத்தை அண்மித்துக் கொண்டிருந்தபோது அந்தத் திசையில் புகையைக் கண்டோம். 

நூலகம் எரிக்கப்பட்டுவிட்டதை அங்கு சென்று பார்த்தபோது கண்களில் நீர் நிறைந்திருந்தது. அங்கே அப்போதும் சிலர் அதனைப் பார்த்தபடி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர். 

அதுவரை அங்கிருந்த புலிகள் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவு இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் அந்த இயக்கங்களுக்கான ஆதரவை அதிகரித்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது நாங்கள் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சில தமிழர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் “உண்மையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா?” என்று. அதற்கு அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறார்கள். அங்கே படித்துவிட்டு கொழும்பில் வேலை பார்க்கும் கனவுகளில் இருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஈழம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

ஆனால் இந்த சம்பவமும் அதன் பின்னர் 83 கலவரங்களும் சர்வதேச ரீதியில் புலிகள் போன்ற இயக்கங்களின் இருப்புக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தின. அதற்கு முன்னர் இருந்த சிங்கள தமிழர் உறவு மோசமடைந்தன.

நாங்கள்மீண்டும் அங்கிருந்து ஐந்தாம் திகதி இரயில் புறப்பட்டோம். அந்த இரயில் அனைத்து இரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் எங்களோடு பயணித்த சிங்காவர்கள் இரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்த மரங்களில் பலாத்காரமாக மாம்பலங்களைப் பறித்து சேகரித்தார்கள். வெறும் சிலர் அங்கிருந்த கடைகளில் சிகரட்டுகளையும், இனிப்புப் பண்ட போத்தல்களையும், வேறு பொருட்களையும் பணம் செலுத்தாமல் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். இப்படியான நிலைமைகளை தமிழ் மக்கள் பீதியுடன் எதிர்கொண்டார்கள். 

வவுனியாவில் இரயில் தரித்து நின்றபோது இரயிலில் இருந்து ஒரு கும்பல் இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு கடையை கொள்ளையடித்து அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து ஆசனங்களுக்குக் கீழே மறைத்து வைத்தனர், அங்கே கடையில் இருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்த ஒருவர் “சிங்களத்தில்” அந்தக் கடை எனது கடை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பித் தராவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன். நானும் ஒரு சிங்களவன் தான் என்றார்.

சிலர் திருப்பிக் கொண்டுத்தார்கள், சிலவற்றை அந்தக் கடைக்காரரே எடுத்துச் சென்றார். இந்தக் கும்பலோடு நாங்கள் வாக்குவாதப் பட்டோம். அது மோதல் நிலையை உருவாக்கியிருந்தது. 

மீண்டும் அந்த நூலகம் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் திறக்கப்பட்டது. அந்த நூலகத்தின் மதிப்பைக் கூறுவதாயின்; இன்றும் அந்த நூலகத்துக்குள் பாதணிகளோடு உள்ளே செல்ல முடியாது, நீங்கள் வெளியில் அவற்றை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்லலாம். 

பிற்காலத்தில் இவற்றை விசாரிப்பதற்காக LLRC குழு பின்னர் நியமிக்கப்பட்டது. என்னை அவர்கள் சாட்சியமளிக்கும்படி வீட்டுக்கே தொலைபேசி மூலம் அழைத்தார்கள்.  அக்குழுவின் முன் நான் இரு தடவைகள் சாட்சியமளித்தேன். அத்துகொட என்பவர் தான் அக்குழுவின் செயலாளராக இருந்தார். நான் நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினேன். பின்னர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் யாழ் நூலக எரிப்புக்கு மன்னிப்பு கோரினார். காலம் பிந்தி என்றாலும் அதை செய்தது நல்ல விடயம்.

ஆனால் இன்றும் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இங்கிருந்து அங்கே செல்வதற்கு அழகான பாதைகளை அமைத்தால் மட்டும் போதாது. அம்மக்களின் உளக்குமுறல்களை தீர்க்கும்வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசு செய்யவேண்டிய கடமை. ஆனால் அது வாய்க்குமா? முற்போக்கானவர்கள் இந்த விடயத்தில் தொடர் அழுத்தம் கொடுத்து இதனை உரிய வகையில் தீர்க்காவிட்டால் இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பிரச்சினைகளின் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

காணொளியின் மூலம்-: 

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates