Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

காலிமுகத் திடல்: அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -1) - என்.சரவணன்

கொழும்பைப் பற்றிய வரலாற்று வழித்தடத்தை தேடும் ஆய்வு இது. சற்று விரிவாக கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், அதன் மானுடப் பண்பாட்டைப் பற்றியும் பல சுவாரசியமான கதைகளுடனும், ஆதாரங்களுடன் தொடராக இத்தொடரில் நீங்கள் சுவைக்கலாம்.

கோல் பேஸ் (Galle face) என்று நாம் அழைக்கும் காலிமுகத்திடலை அனுபவித்திராத இலங்கையர் அபூர்வம் எனலாம். இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் கொழும்பில் காலிமுகத்திடலுக்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கொழும்பில் பிரதான மையப் பகுதியில் மிகப்பெரிய விஸ்தீரணம் கொண்ட கடற்கரைப் பகுதியாக அது இருப்பதாலும், பழைய பாராளுமன்றக் கட்டிடம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய கேந்திர மையங்களை ஒருங்கே அருகாமையில் உள்ள பகுதியாக இருப்பதாலும் அது மேலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காக பின்னேரம் பலர் நிறைந்திருப்பார்கள். அதிகாலையில் உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, கடும் வெய்யிலிலும் காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அது.

கொழும்பில் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்ட வேற்று நிலமாக பேணப்படுகின்ற ஒரே இடமாக இதைச் சொல்லலாம். சுதந்திர தினம், இராணுவ அணிவகுப்புகள், இராணுவக் கண்காட்சி உள்ளிட்ட பல முக்கிய அரச நிகழ்வுகள் அங்கே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மாபெரும் மே தின நிகழ்வு, மாபெரும் அரசியல் பொதுக் கூட்டங்களும், மட்டுமன்றி ஒரு காலத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் இடமாகவும் இது இருந்தது. ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரபல சத்தியாக்கிரக போராட்டங்களும் அங்கே தான் நடந்தன.

இன்றைய காலிமுகத்திடல் ஐந்து ஹெக்ராயர் பரப்பைக்கொண்டது. ஆனால் இன்று காண்பதை விட மிகப் பெரிதாக ஒரு காலத்தில் அது இருந்தது. அப்போது கிரிக்கெட், ரக்பி, கொல்ப், உதைப்பந்தாட்டம் மட்டுமன்றி, குதிரையோட்டம், காரோட்டப் பந்தயப் போட்டிகளும் நிகழ்த்தப்பட்ட இடம் அது.

காலிமுகத்திடல் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பு கோட்டையைப் பாதுகாப்பதற்கான இராணுவ தந்திரோபாய இடமாக பேணப்பட்டு வந்தது. போர்த்துக்கேயர்கள் கடல்வழி ஆக்கிரமிப்பை நடத்தினால் அதை எதிர்கொள்வதற்காக பீரங்கிகளை கொண்டு வந்து வரிசையாக இங்கே நிறுத்தினார்கள். இன்றும் காலிமுகத்திடலின் கரைகளில் கடலை நோக்கியபடி காணப்படும் பீரங்கிகள் ஒரு காலனித்துவ காலத்தில் எப்பேர்பட்ட போர்களையும், போர் தயார் நிலையிலும் இது இருந்திருக்கிறது என்பதை நமக்கு விளக்கும்.

முன்னர் கொழும்பு கோட்டையின் வாயிற் பகுதியாக காலிமுகத்திடல் இருந்தது. டச்சு மொழியில் Gal என்றால் Gate அல்லது வாயில் என்று பொருள். அதுபோல faas என்றால் முகப்பு என்று பொருள். இரண்டும் சேர்ந்து Galle face காலிமுகத் திடல் என்று தமிழில் பின்னர் அழைக்கப்பட்டது. சிங்களத்திலும் கூட தமிழில் உள்ள அதே அர்த்தத்துடன் ගාලු මුවදොර පිටිය என்றே அழைக்கப்படுகிறது. இன்னொரு பெயர்க் காரணமும் கூறப்படுகிறது. அதாவது “கல் பொக்க” (கல் வாயில்) என்கிற சிங்களச் சொல் தான் ஆங்கிலத்துக்கு Galle face என்று ஆனது என்கிற கதையும் உண்டு.

காலிமுகத்திடல் பற்றிய பல உண்மைகள் புதைந்தே போய்விட்டன. இல்லை... இல்லை... அது சடலங்களின் புதைகுழியாகவே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. காலிமுகத்திடல் ஒரு காலத்தில்; மரணித்தவர்களை புதைக்கின்ற மயானமாக இருந்தது என்றால் நம்ப சிரமப்படுவீர்கள். ஆனால் அது தான் உண்மை.

பேறை வாவியோடு ஒட்டியிருக்கும் பகுதியே மயானம் (Galle Face Burial Ground) இருந்த சரியான இடம். 1865-75 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எந்தக் கட்டிடங்களும் இல்லாத காலம்.

சடலங்களை புதைக்கின்ற மயானமாக

ஆங்கிலேயர்கள் இலங்கையின் கரையோரங்களை ஒல்லாந்தர்களிடம் இருந்து 1796 இல் கைப்பற்றியபோதும் கண்டியை 1815 இல் கைப்பற்றியபின் தான் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த இடைக்காலப் பகுதியில் கண்டியுடன் கடும் போர் நடத்தியிருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் இரு தசாப்தங்கள் தான் அதிக பிரிட்டிஷார் கொல்லப்பட்ட காலம். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தான்  கண்டியுடனான முதல் போர் 1803 இல் ஆரம்பமானது. அந்தப் போர்களில் எல்லாம் கடும் தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படைகள். அதில் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகள் பலரது சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றன. காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. 1805 ஆம் ஆண்டு தான் அதற்கான எல்லை மதில்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. முதல் கல்வெட்டு 1809 இல் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஜெபித்து புனிதப்படுத்த 1821 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து பேராயர் (Middleton) வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

1809 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இராணுவத்தைச் சேர்ந்த டேவிட் டேன் (David Dunn) என்கிற 24 வயது இளைஞன் கொழும்பு பேறை (Beira Lake) வாவியில் தற்செயலாக மூழ்கி இறந்துள்ளார் அவ்விளைஞனின் பிரேதம் தான் முதலாவது தடவையாக காலி முகத்திடலில் புதைக்கப்பட்டிருகிறது. 

இதே 1821 ஆம் ஆண்டு தான் அன்றைய தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) காலி முகத்திடலை பரந்துபட்ட நில அமைப்புடன்  “Galle Face Green” திட்டம் என்கிற பெயரில் அமைத்தார். ஒரு குதிரைப் பந்தயத் திடலை அந்த இடத்தில் அமைப்பதை இலக்காகக் கொண்டே இந்தத் திடலை அவர் அமைத்தார். குதிரைப்பந்தயப் போட்டி விளையாட்டு இலங்கையில் இங்கிருந்து தான் அறிமுகமானது. எட்வர்ட் பார்ன்ஸ் இலங்கையில் பிரதான பெருந்தெருக்களை அமைத்ததில் முன்னோடியானவர். “இலங்கைக்கு முதலாவது தேவையானது தெருக்கள் தான். இரண்டாவது தேவையானதும் தெருக்கள் தான். மூன்றாவது தேவையானதும் தெருக்கள் தான்” என்று 1819 அவர் இலங்கை வந்த வேளை கூறியவர். அவர் இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தெருக்களால் ஒன்றினைத்தார். கொழும்பில் அவர் பெயரிலும் ஒரு வீதி (Barnes place) இன்றும் உள்ளது. கொழும்பு – கண்டி வீதி அமைக்கப்பட்டதன் பின் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இலங்கையில் 1823இல் கோப்பித்தோட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் பெருந்தோட்டத்துறையை அறிமுகப்படுத்தியவர் எட்வர்ட் பார்ன்ஸ். இந்தியத் தொழிலாளர்களை தோட்டத்தொழிலுக்காக இலங்கையில் முதலில் இறக்கியவரும் அவர் தான்.


அதற்கு முன்னரே காலிமுகத் திடலோடு இருக்கிற வீதி 1814 இல் அமைக்கப்பட்டது. இன்றும் அது அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு இன்றைய தாஜ் சமுத்திரா ஹோட்டலின் பாதையோர மதிலோடு அது பற்றிய ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணலாம்.. பிற்காலத்தில் தென்னிலங்கையில் காலி வரை நீள்கிற A2 பாதையின் ஆரம்பம் காலிமுகத்திடலில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு இது குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் காலிமுகத்திடல் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. 22.09.1835 ஆம் ஆண்டு தான் முதல் குதிரைப் பந்தயம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.(1) 1893 ஆம் ஆண்டு கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிக்கு (Cinnamon Garden) பகுதிக்கு அது மாற்றப்படும் வரை இங்கே தான் அந்தப் பந்தயங்கள் நிகழ்ந்தன. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இறப்பதற்கு காரணமான குதிரை சவாரி விபத்து இங்கு தான் நிகழ்ந்தது என்பதையும் இங்கே கொசுறாக நினைவுக்கு கொண்டு வரலாம்.

அந்தக் காலத்து குதிரைப்பந்தையத் திடல் (1865-75 கால படம்)

பசுமை காலிமுகத்திடல் திட்டம்

1856 ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Sir Henry George Ward - 1797–1860) காலிமுகத்திடலின் கடற்கரையோடு அண்டிய பகுதியை ஒரு மைல் தூரம் அளவுக்கு பசுமையான திடலாக புதுப்பிக்கும் இன்னொரு Galle Face Green திட்டத்தை ஆரம்பித்தார். அவரது அத்திட்டம் 1859 இல் நிறைவடைந்தது. காலி முகத்திடல் இன்றைய தோற்றத்தை அடையப்பெற்றது இந்தத் திட்டத்தின் மூலம் தான். இன்றும் காலிமுகத்திடலில் அதன் நினைவுக் கல்லை காணலாம். முற்றிலும்  பெண்களும் குழந்தைகளும் காற்று வாங்கி கூடிக் களிக்கும் இடமாக மாற்றுவதே அவரின் திட்டமாக இருந்தது. கூடவே குதிரைச் சவாரி செய்வதற்கும், கோல்ப் விளையாடுவதற்குமான பெரிய திடலாக அமைப்பது தான் அவரின் நோக்கம்.

ஒரு புறம் பேறை வாவியை (Beira lake) எல்லையாகக் கொண்டு தான் அந்த மயானம் இருந்தது என்று லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். அதாவது சில ஆண்டுகள் வரைக்கும் இராணுவத் தலைமையகம் இருந்த இடமாகவும் இப்போது பிரபல சங்கிரில்லா ஓட்டல் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து தொடங்குகிறது அந்த காலிமுகத்திடல் மயானம்.

சங்கிரில்லா ஓட்டல் கட்டுவதற்கான பணிகளுக்காக தோண்டும் போது அங்கிருந்து எலும்புக் கூடுகளும், சவப்பெட்டிகளின் எச்சங்களும், சவப்பெட்டிகளின் இரும்புக் கைப்பிடிகளும் கண்டெடுக்கப்பட்டது பற்றி செய்திகளில் வெளிவந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த எச்சங்களை ஆராய புறக்கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்றார் அங்கே சமூகமளித்திருந்ததையும் அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

1866 ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் வுல்பெண்டால், ஸ்லேவ் ஐலன்ட் ஆகிய இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்,  ஸ்லேவ் ஐலன்ட்டில் உள்ள மலே மயானம் என்பவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், காலிமுகத்திடல் மயானத்தை தனித்து ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும்படியும் ஒரு தீர்மானம் 1866 யூன் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2)

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது மயானமாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இராணுவப் பாவனைக்காக அது பயன்படுத்தப்பட்டது.

அடுத்த இதழில்...

உசாத்துணை :
  1. Colombo Landmarks, Sunday Times, 06.08.2006
  2. CEYLON BLUE BOOK FOR THE YEAR, 1866,  COLOMB0: WILLIAM SKEEN, GOVERNMENT PRINTER, CEYLON. 1867.


புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ யில் மலையகம் பற்றிய சித்திரிப்பு - ஆ.சிவசுப்பிரமணியன்

//சென்னை பல்கலையின் பாடத் திட்டத்தில் இருந்து, எழுத்தாளர் புதுமைப் பித்தனின், "துன்பக்கேணி, பொன்னகரம்" ஆகிய இரு சிறுகதைகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இரண்டு சிறுகதைகளையும் நீக்கி விட்டு புதிதாக, இரண்டு கதைகளை சேர்க்க சென்னை பல்கலை., முடிவெடுத்தது. கடந்த சனிக்கிழமை, பல்கலை., கல்விக்குழு ஒப்புதலுடன் இந்த சிறுகதைகள் நீக்கப்பட்டன. இதில், "பொன்னகரம்" சிறுகதைக்கு பதில், "ஒரு நாள் கழிந்ததது" என்ற புதுமைபித்தனின் சிறுகதை சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது

"துன்பக்கேணி" சிறுகதையானது, தலித் மக்களை, மோசமாக சித்தரித்துள்ளதாகவும், "பொன்னகரம்" சிறுகதை தன் கணவனுக்காக, ஒரு பெண், உடலை விற்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கள் தற்போதைய மாணவர்களுக்கு உகந்ததல்ல என்பதை காரணம் காட்டி பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.- செய்தி தினமலர்//

புதுமைப்பித்தனின் குறிப்பிடத்தக்க சிறுகதை களில் துன்பக்கேணி என்ற சிறுகதையும் ஒன்று. இதைக் குறுநாவல் என்றுகூடக் குறிப்பிடலாம். இக்கதை ஓர் ஆழமான சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ளது.

மூன்றாவது மைசூர் யுத்தத்தை அடுத்து, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1858-இல் ஆங்கிலேயப் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சியின்கீழ் இந்தியா வந்தது. இவ்விரு ஆட்சி களிலும் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மை உறவுகளில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

  1. நீர்ப்பாசன வசதி புறக்கணிக்கப்பட்டது.
  2. ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு புதிய நிலக்கிழார்கள் உருவாயினர்.
  3. தொடர்ச்சியாகப் பஞ்சங்கள் பல ஏற்பட்டன. இதன் உச்சகட்டமாக 1878-இல் ‘தாது வருடப் பஞ்சம்’ என்ற கொடிய பஞ்சம் நிகழ்ந்தது.
  4. நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகி யோரின் பிடியில் சிக்கிய சிறு நிலக்காரர்கள் தம் நில உரிமையை இழந்து, விவசாயத் தொழிலாளர்களாக மாறினர் அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
  5. ஏற்கனவே நில உரிமை அற்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் மாறினர்.
  6. தானியமாகச் செலுத்தி வந்த நில வரியைப் பண வடிவில் செலுத்த வேண்டியதாயிற்று.
  7. விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயி இழந்தான். இவ்வுரிமை இடைத்தரகரிடம் சென்று அடைந்தது. உற்பத்தியாளனைவிட இடைத் தரகர்களே அதிக ஆதாயம் அடைந்தனர்.

இவற்றின் விளைவாகத் தமிழகக் கிராமப் புறங்களில் வாழ்ந்த, சிறு நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழி லாளர்கள் குறிப்பாகத் தலித் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளி யேறி உயிர் பிழைக்கலாம் என்ற உணர்வு அவர் களிடம் உருவாகத் தொடங்கியது.

pudhumaipithan 290தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதி களிலும் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங் களையும், பர்மாவில் (மியான்மர்) ரப்பர் தோட்டங் களையும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங் களையும் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் உருவாக்கினர். இவ்வாறு புதிதாக மலைத் தோட்டங் களை உருவாக்க, காடுகளைத் திருத்தி அமைக்க வேண்டியதிருந்தது. அடுத்து இங்குப் பயிரிடப் பட்ட காப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பராமரிக்கவும், இவற்றின் பலனைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இலங்கையின் மலையகப் பகுதியின் தலை நகராக விளங்கிய கண்டியை 1815-இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதன் பின்னர் 1824-இல் இம் மலைப் பகுதியில் காப்பி பயிரிடத் தொடங்கினர். 1828-இல் ஜோர்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் இப்பகுதியில் காப்பியும் கொக்கோவும் பயிரிடும் தோட்டங்களை உருவாக்கினார். இதையடுத்து வேறு சில ஆங்கிலேயரும் மலைத் தோட்டங்களை உருவாக்கினர். 1869-1880ஆம் ஆண்டுகளில் ஒரு வகையான நோய்த் தாக்குதலுக்கு, காப்பிப் பயிர் ஆளாகியது. இதன் பின்னர் காப்பி மட்டுமின்றி, தேயிலை, கொக்கோ, சிங்கோனா ஆகிய பயிர் களையும் வளர்த்தனர். பின்னர் ரப்பரும் பயிரிடத் தொடங்கினர். என்றால் ‘தேயிலைத் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படும் அளவிற்குத் தேயிலையே பிரதானப் பயிராக இங்கு விளங்கியது. இத் தோட்டங்களை உருவாக்க சிங்களக் குடியிருப்புகள் பல அழிக்கப்பட்டன. தங்கள் குடியிருப்பு உரிமையை அழித்தவர்கள் என்ற வெறுப்புணர்வின் காரண மாக வெள்ளையர்களின் தோட்டங்களில் பணி புரிய அவர்கள் விரும்பவில்லை. மேலும் செங்குத் தான மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பகுதி களிலும் கடினமாக உழைக்க அவர்கள் முன்வர வில்லை.

இதனால் இலங்கைக்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை வெள்ளையர்களுக்கேற்பட்டது. இச்சூழலில் வெள்ளை அரசின் தவறான வேளாண்மைக் கொள் கையால் பாதிக்கப்பட்ட தமிழகக் குடியான வர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங்களைத் தேடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந் தார்கள்.

இத்தகைய சமூகச் சூழலில் வெள்ளையர் களால் உருவாக்கப்பட்ட மலைத்தோட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு, பாலைவனச் சோலையாக அமைந்தன. இவர்கள் மட்டுமன்றி, கடன்பட்டு, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள், சாதி மீறிக் காதலித்தவர்கள், கிரிமினல் குற்றங் களைச் செய்தவர்கள் ஆகியோரின் புகலிடமாகவும் மலைத்தோட்டங்கள் அமைந்தன.

வெள்ளை முதலாளிகளின் இத்தேவையை நிறைவேற்றும் வகையில் ‘ஒப்பந்தக் கூலி முறை’ ((Indentured Labour System) என்ற முறை உருவாக்கப் பட்டது. இதன்படி கிராமப்புற ஏழைக் குடியான வர்கள், தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு, அத்தோட்டங்களில் பணிபுரிவதாக ஒப்பந்தம் பத்திரத்தில் கையெழுத்தோ, கைநாட்டோ போட்டுக் கொடுத்துவிடுவர். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் மலைத்தோட்டங்களை விட்டு வெளியேற முடியாது. திருட்டுத்தனமாகச் சிலர் தாயகத்திற்குத் திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப் படையில் இங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து அவர்கள் பணிபுரிந்து வந்த தோட்டத்திற்குத் திருப்பி அனுப்பிவிடும்.

ஒரு கட்டத்தில் இம்முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில் ‘கங்காணி முறை’ என்ற முறையை அறிமுகப்படுத்தினர். கங்காணி என்பவர் ஏற்கெனவே வெள்ளையர்களுக்கு உரிமையான மலைத்தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளிதான். முரட்டுத்தனமும், வாக்கு சாதுர்யமும், பொருளாசையும், ஒருசேரப் பெற்றவர்களாகவும் வெள்ளை முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கங்காணிகள், Tine Ticket எனப்படும் அடையாளத் தகடுகளுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவர். அவர்கள் கொண்டு வரும் அடையாளத் தகடில், தோட்டத்தின் பெயர், அது இருக்கும் பகுதி, தகடின் வரிசை எண் ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டப்பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர். தங்களது பூர்வீகக் கிராமம், உறவுக்காரர்கள் மற்றும் தன் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு அறிமுகமான பகுதிகளையே கங்காணிகள் தேர்ந் தெடுத்துக் கொண்டனர்.

திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம், இலங் கையின் மலையகத் தோட்டங்களை, சொர்க்க லோகம் என வருணித்து, தோட்டத் தொழிலாளர் களாகப் பணிபுரிய அவர்களைக் கங்காணி அழைப் பான். அதை ஏற்றுக்கொண்ட மக்களிடம், தான் கொண்டு வந்த தகடை, இரண்டரை ரூபாய்க்கு விற்றுவிடுவான். சிலர் குடும்பத்துடன் புறப்படு வார்கள். இவர்களது பயணச் செலவை முதலில் கங்காணியே ஏற்றுக்கொள்வான். பின் இவர்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கும் மணியாச்சி இரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள தட்டப் பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்ற ஊர்களில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இம் முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்டன. இங்கு நுழையும் போது கங்காணி கொடுத்த தகடைக் கயிற்றில் கோத்து, கழுத்தில், தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். காலரா, அம்மை, ஆகிய நோய்களுக் கான தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழிலாளர் களுக்கும் போடுவர். இவ்விரு நோய்களும் அவர் களிடம் இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து கப்பல் வாயிலாக இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கு அல்லது கொழும்பு நகருக்குச் செல்வர். தலை மன்னாரிலிருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப்போல் கூட்டம்கூட்டமாக கங்காணி அழைத்துச் செல்வான். வழிநடைக் களைப்பினாலும், போதுமான உணவில்லாமை யாலும் நடைப் பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இத்தொழிலாளர்களைக் ‘கூலி’ என்ற இழிவான சொல்லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ‘கூலிச் சம்பளம்’ என்றே குறிப்பிடப்பட்டது. இவர் களிடையே மதப்பிரச்சாரம் செய்ய உருவாக்கப் பட்ட கிறித்தவ மிஷன்கூட ‘கூலி மிஷன்’ என்றே பெயர் பெற்றது. இவர்கள் தமிழர்களாக இருந்த மையால், ‘கூலித் தமிழன்’ தோட்ட காட்டான்’ என்று குறிப்பிட்டு, இவர்களைவிட தாங்கள் உயர் வானவர்கள் என்று யாழ்ப்பாணத் தமிழர்களும், கொழும்பில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும் தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

‘கூலிலயன்கள்’ என்றழைக்கப்படும், குதிரை லாயம் போன்ற வரிசையாக உருவாக்கப்பட்டிருந்த தகரக் குடிசைகளில் இவர்கள் குடியேற்றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதியதும் அல்லது தப்பு அடித்ததும் எல்லோரும் பிரட்டுக்களத்தில் கூட வேண்டும். ஆங்கிலத்தில் ‘‘Parade Ground’ என்று வெள்ளையர்கள் குறிப்பிட்டதையே ‘பிரட்டுக் களம்’ என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப் பயிர் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். தேயிலைக் கொழுந்தெடுத்தல், காப்பிப் பழம் பறித்தல், செடி களைக் கவ்வாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடு திருத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். குழுக்களாகப் பிரிந்து இவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு ‘கங்காணி’ உண்டு இவர்கள் ‘சில்லரைக் கங்காணி’ என்றழைக்கப் பட்டனர்.

கடற்பயணத்திற்கும் செலவான தொகையை, தொழிலாளர்கள் கங்காணிக்குக் கொடுக்க வேண்டும். கூலிகளின் ஊதியத்திலிருந்து தவணை முறையில் இதைப் பிடித்தம் செய்வர். கம்பளி மற்றும் வேட்டிக்கான தொகைக்குக் கங்காணி எவ்வாறு கணக்குச் சொல்லி, ஊதியத்திலிருந்து கழிப்பான் என்பதை சாரல் நாடன் (1988-49)பின் வருமாறு குறிப்பிடுவார்.

“கம்பளி மூன்று ரூபாய், கருப்புக் கம்பளி மூன்று ரூபாய், வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”.

இவர்களை ஈவு இரக்கமின்றி வேலை வாங்கு வதற்காக வெள்ளை முதலாளிகள் ‘தலைக்காசு’ அல்லது கங்காணிக் காசு என்ற பெயரால் கூலி யாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதி பிடித்தம் செய்து அதைக் கங்காணிக்கு வழங்கி வந்தனர். இது குறித்து சாரல் நாடன் (1993: 75-75) தரும் விளக்கம் வருமாறு:

அவர் தன்னோடு அழைத்துச் செல்லும் அத்தனை போரும், தோட்டத்தில் அவர் ‘கணக்கில்’ பேர் பதியப்படுவார்கள். அவ்விதம் பேர் பதியப் படும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலுக்கு வரும் நாளைக்கு மூன்று சதவீதம் என்று கணக்கிடப் பட்டு அந்தப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும்.

இந்த வகையில் ஊதியத்தைவிட, ‘கங்காணிக் காசு’ என்ற பெயரால் கங்காணிக்கு அதிக வருவாய் கிட்டும். தேயிலை அல்லது காப்பிப் பழம் சேகரித்து முடிந்த பின், அது எடை போடப்படும். இது கணக்கர்களின் பணியாகும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது இருப்பதாகக் கணக்கன் கூறினாலோ, நாள் ஊதியத்தில் சரிபாதி குறைக்கப்படும். இதற்கு ‘அரைப்பேர் போடுதல்’ என்று பெயர், இவ்வாறு கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்துவிட்டால், கங்காணிக்கு, தலைக்காசு கிடைக்காது. ஆகவே அவன் மிகவும் கோபப்படுவான். இதனைப் பின்வரும் நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன.

‘அரைப் பேராலே- ஏலேலோ- கங்காணிக்கு- ஐலசா

தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு- ஐலசா

கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும்- ஐலசா

குதிக்கிறானே- ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா

ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா

அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே - ஐலசா’.

...

கூடை எடுக்கலாச்சு- நாங்க

கொழுந்து மல பார்க்கலாச்சு

கொழுந்து குறைந்த தன்னு

கொரைபேரு போட்டார்கள்

...

அறுவா எடுத்த தில்ல

அடைமழையும் பார்த்த தில்ல

அரும்பு கொரைஞ்சதுன்னு

அரைப்பேரு போட்டார்கள்

...

“பொழுதும் எறங்கிருச்சி

பூமரமும் சாஞ்சிருச்சி

இன்னமும் இரங்கலையோ

எசமானே ஓங்க மனம்

அவசரமா நான் போறேன்

அரபேரு போடாதீங்க”

...

வெள்ளைக்கமிஸ், கறுப்புக்கோட்டு, சரிகைத் தலைப்பாகை, கோட்டின் இடப்புறத்து மேல் பொக்கெட்டுக்கு மேலே வெள்ளிச் சங்கிலி, தொங்கும் பொக்கெட் உருலோசு* இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம்.

காதிலே கடுக்கன்- குண்டலம் என்பர். கழுத்திலே தங்க வளையம்- கெவுடு என்பர். கையிலே பிரம்பு- கொண்டை என்பர்- இவைகள் கங்காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்.

என்று கங்காணிகளின் ஆடை அணிகலன்களை வர்ணிக்கும் சாரல் நாடன் (1993: 40)

“தோட்டப்புறங்களில் தொழிற்சங்கங்கள் ஊடுருவும் வரை கங்காணிமாரின் நிலை இந்தியக் கிராமத்து ஜமீன்தாரிகளின் நிலையிலேயே இருந்தது” என்று குறிப்பிட்டு, கங்காணிகள் எத்தகைய வல்லமை படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கங்காணிகள் ஈவு இரக்க மின்றி வேலை வாங்குவதை,

“எண்ணிக் குழி வெட்டி

இடுப்பொடிஞ்சி நிக்கையிலே

வெட்டு வெட்டு என்கிறானே

வேலையைத்தக் கங்காணி”

“கொண்டைப் பிரம்பெடுத்து

கூலியாளைப் பிரட்டெடுத்து**

துண்டுகளைக் கொடுத்து

துரத்துராரே கங்காணி”

“அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்

அவராலே மானங் கெட்டோம்

முழி மிரட்டிச் சாமியாலே

மூங்கிலாலே அடியும் பட்டோம்”

என்ற மலையக நாட்டார் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு, வெள்ளைத் துரையைவிடக் கங்காணியே முக்கிய காரணம் என்று கருதிப் பின்வருமாறு பாடியுள்ளார்.

“தோட்டம் பிரளியில்லே

தொரே மேலே குத்தமில்லே

கங்காணி மாராலே

கனபிரளி யாகுதையா”

மேலும் பழக்கமில்லாத குளிரான மலைப் பகுதி, அட்டைக்கடி, கொசுக்கடியினால் ஏற்படும் மலேரியாக் காய்ச்சல் என்பனவற்றிற்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழி லாளர்கள் ஆளாகி வந்தனர்.

இத்தமிழர்களிடம் உரையாடுவதற்காகத் தோட்ட முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெல் என்பவர் எழுதிய ‘கூலித் தமிழ்’ என்ற நூல் 1922-இல் வெளியானது. இந்நூலில் தோட்டத்துரைக்கும் கூலியாளுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றிருந்தன. சான்றாக சில பகுதிகளைக் குறிப்பிடலாம்.

கூலி : ஐயா எனக்கு காசு வேணும்.

துரை : இல்லை. அதுக்கு நான் இப்போ கேழ்க்க ஏலாது

கூலி : நான் இப்போ போயலாமா?

துரை : இல்லை நீ இன்று போ ஏலாது.

இவ்வாறு தன்னிடம் பணிபுரியும் கூலியிடம் உரையாடக் கற்றுக்கொடுப்பதுடன் அவனைத் திட்டவும் கற்றுக்கொடுக்கிறது. கூலித் தமிழ்.

“சின்னசாதி குடித்துவிட்டு பயல், நீ குடிக்கிறது பக்தி

உனுக்கு யொப்போதும் சொல்ற புத்தி கேழ்க ஏலாது”

‘செந்தமிழ்’, ‘வண்டமிழ்’, ‘பால்வாய்ப் பசுந்தமிழ்’, ‘முத்தமிழ்’ என்றெல்லாம் தமிழ் மொழிக்கு அடை மொழியிட்டு மகிழ்ந்த எந் தமிழருக்கு, இக்கூலித்தமிழ்ப் புத்தகத்தை அறிமுகப் படுத்திய ஏ.கே. செட்டியார்,

“கூலித்தமிழ்ப் புத்தகம் தோட்டக்காரத் துரைகளுக்குக் கூலிகள் பேசும் தமிழை மட்டும் போதிக்கவில்லை. கூலிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையையும் போதிக்கிறது”.

என்று மிகச் சரியாகவே மதிப்பிட்டுள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக, கங்காணி, கணக்கன், ஸ்டோர் கீப்பர், கம்பௌண்டர் எனத் தம் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவோரின் பாலியல் வன்முறைக்குப் பெண் தொழிலாளர்கள் ஆளாக வேண்டிய அவலம் நிலவியது. கங்காணி களின் துணையோடு தோட்டத் துரைகள், பெண் தொழிலாளிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வதனை,

‘காலுச்சட்டை போட்டுக்

கையை உள்ளேவிட்டுக்

கண்ணை நல்லாச்சிமிட்டிக்

கங்காணி மாரைத்தான்

கைக்குள்ளே தான் போட்டுக்

காசு களையிறைச்சு

காடுண்ணு மில்லை

மேடுண்ணு மில்லை

வீடுண்ணு மில்லையம்மா

கண்ட இடமெல்லாம்

கண்ட கண்ட பெண்ணைக்

கையைப் பிடிச்சிழுப்பார்’.

என்று நாட்டார் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கங்காணிகளின் பாலியல் ஒழுக்கக்கேட்டை

“செம்புச்சிலை போல பொண்டாட்டிய

சிம்மாசனத்தில வச்சிப்பிட்டு

வேலைக் கிறங்கிற கங்காணிக்கு

ஏழெட்டுப் பேராம் வைப்பாட்டிக”. 2

என்ற பாடலின் வாயிலாக அறிய முடிகிறது.

இவ்வரலாற்றுப் பின்புலத்தில்தான் புதுமைப் பித்தனின் ‘துன்பக்கேணி’, கதையை நோக்க வேண்டும். ‘கூலித் தமிழன்’, ‘தோட்டக் காட்டுக் காரன்’ என்ற இழிவான முத்திரையுடன் வாழ்ந்து மடிந்த இந்தியத் தமிழர்களைக் குறித்த ஓர் இலக்கியப் பதிவாகவும், சமூக ஆவணமாகவும், துன்பக்கேணி கதையைப் புதுமைப்பித்தன் உரு வாக்கியுள்ளார். பிஜித் தீவில் உருவாக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை 1916 வாக்கில் பாரதி எழுதியுள்ளார். அதில்,

‘துன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல்

கேட்டிருப்பாய் காற்றே’

என்று காற்றை நோக்கிப் பாரதி பாடுகிறார். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே புதுமைப்பித்தன் தம் சிறு கதையின் தலைப்பாகக் கொண்டுள்ளார்.

1935 மார்ச் 31-ஆம் நாள் ‘மணிக்கொடி’ இதழில் தொடங்கி, ஏப்ரல் 14-ஆம் நாள் இதழிலும், ஏப்ரல் 28-ஆம் நாள் இதழிலும் வெளியாகி ‘துன்பக்கேணி’ முற்றுப் பெற்றுள்ளது. மணிக் கொடி இதழில், ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு வெளியான இக்கதை, பின்னர் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்ற தலைப்பில், 1940 ஆம் ஆண்டில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பில் சில மாறுதல் களுடன் இடம்பெற்றுள்ளது.

1947-இல் இத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, தனிநூலாகவும் ‘துன்பக் கேணி’ வெளியாகியுள்ளது. (வேங்கடாசலபதி, ஆ. இரா. 2000: 806- 807). 3

“வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்கும்கூடத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவித் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக்கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம்” என்ற அறிமுகத்துடன் கதை தொடங்குகிறது. இவ் வூரில் உள்ள கோவில்களையும், ஜாதிவாரியாக மக்கள் வாழும் பகுதிகளையும் தொடக்கத்தில் அறிமுகம் செய்கிறார். கிராமம் என்றால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் இருக்க வேண்டுமே? வாசவன்பட்டியிலும், நல்ல குற்றா லிங்கம் பிள்ளை என்ற பண்ணையார் இருக்கிறார். ‘பண்ணைப்பிள்ளை’ என்றும் இவரைப் புதுமைப் பித்தன் அழைக்கிறார். பறையர் சமூகத்தைச் சேர்ந்த மருதி என்ற பெண்ணின் கணவன் வெள்ளையன். மாடு வாங்குவதற்காக இவரிடம் கடன் வாங்கிய வெள்ளையனால், அதைத் திருப்பித் தர இயலவில்லை.

எனவே அவன் வாங்கிய மாடு களைப் பண்ணைப் பிள்ளை கைப்பற்றிக்கொண் டார். இதன் பின்னர் பண்ணையாரின் மயிலைக் காளைகள் இரண்டைக் காணவில்லை. அவருக்கு வெள்ளையன் மீது சந்தேகம். ஆனால் அவனைக் காணவில்லை. அவனைத் தேடிய தலையாரித் தேவன் ‘மருதியின் தலை மயிரைப் பிடித்திழுத்து, அவளைக் கீழே தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவனுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி’. பனங்காட்டில் குடித்துவிட்டுக் கிடந்த நிலையில், வெள்ளையனைப் பிடித்து விட்டார்கள். அவன் உண்மையில் திருடாமல் இருந்தாலும் என்ன? விஷயம் வெகு எளிதில் போலீஸ் கேசாக மாறி, வெள்ளையன் சிறைக்குச் சென்றான். மாடுகள் கிடைக்கவில்லை. பண்ணைப் பிள்ளையைப் பொருத்த வரையில், ‘வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி’ இரண்டு மாதக் கர்ப்பிணியான மருதி அப்பன் வீடு சென்றாள். அவள் போன நேரத்தில் சாலையில் கப்பி போட்டுக் கொண்டிருந்தார்கள். மருதிக்குக் கப்பி போடும் வேலை கிடைத்தது. ‘எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டேயிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?’ மருதி வேலை இழந்தாள். இந் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் கங்காணி அங்கு வர, மருதி தன் தாயுடன் கொழும்புக்குப் பயணமானாள். புதுமைப் பித்தனின் கூற்றுப்படி ‘பறைச் சேரியில் தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையின் மோட்சம் போலத் தோன்றியது’.

மணிக்கொடி இதழில் இக்கதை வெளிவந்த போது, முதல் மூன்று பகுதிகளின் தொடக்கத்தில், சில பாடல் வரிகளைப் புதுமைப்பித்தன் கொடுத் திருந்தார். ஆனால் சிறுகதைத் தொகுப்பில் இக் கதை இடம்பெற்ற போது அவற்றை நீக்கிவிட்டார். மேற்கூறிய பகுதியின் தொடக்கத்தில்,

“உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம்

உண்டுகளித் திருப்போர்க்கு வந்தனை செய்வோம்”

என்ற கவிதை வரியை வெளியிட்டு தமிழகக் கிராமப்புறங்களின் அவலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாசவன் பட்டியிலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டம் ஒன்றிற்குக் கதை நகர்கிறது. ‘வாட்டர் பால்ஸ்’ என்ற அத்தேயிலைத் தோட்டத்தை, பாட்ரிக்ஸன் ஸ்மித் என்ற 45 வயது, வெள்ளைப் பிரம்மச்சாரி நடத்தி வந்தார். அவர் எத்தகைய குணாம்சம் உடையவர் என்பதைப் புதுமைப்பித்தன் பின்வருமாறு அறிமுகப்படுத்து கிறார்.

‘அவருக்கு இரண்டு விஷயங்கள் சந்தேக மில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மச்சாரியாக இருப்பது என் பதன் அர்த்தம்; இரண்டாவது, தேயிலை உற்பத்தியில் கருப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்பு கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்’

‘கூலிகளின் காரைக் குடிசைகள் கோழிக் கூடுகள் மாதிரி’ என்று வருணிக்கும் புதுமைப் பித்தன், அங்குப் பணிபுரியும் இந்திய அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, ‘அதிகாரிகளோ தோலைத் தவிர மற்ற எல்லா அம்சத்திலும் துரைகளின் மனப்போக்கையுடையவர்கள்’ என்று அறிமுகப்படுத்துகிறார்.

இத்தோட்டத்தில்தான், மருதி கூலியாகச் சேருகிறாள். தன் தாய்க்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து வாங்க மருத்துவமனைக்குப் போனாள் மருதி. அதன் பின் நடந்தவைகளைப் புதுமைப் பித்தனின் கூற்றாகவே கேட்போமே!

அப்பொழுது தேயிலை ஸ்டோர் மானேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். ‘புது உருப்படி’ என்பதால் அவர் ‘குளித்துவிட்டு வா!’ என்றதின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் பற்றி, காரியம் மிஞ்சிய பிறகு தான் அறிய முடிந்தது. கிழவிக்கு வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இது மிகவும் சாதாரண மான காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையிலேயே எட்டிப் பார்ப்ப தில்லை. ஆனால் ஸ்டோர் மானேஜர் லேசானவரா? விலக்க முடியாத பழக்கம். வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளை யனை நினைத்துக் கண்ணீர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தால்...’

நாட்கள் ஓடின. மருதியின் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. பெண் என்று தெரிந்ததுமே தாங்க முடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதிதானே...?

‘எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல்’ கூலிகளை மடியச் செய்யும் மலேரியா பரவ, மருதியின் தாய் இறக்கிறாள். வாழ்வின் தனிமை மருதியைப் பயமுறுத்துகிறது. இதன் பின்னர் அவள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங் களையும் அதற்குக் காரணமானவர்களையும் தனக்கே உரிய நையாண்டி மொழியில் புதுமைப் பித்தன் பின்வருமாறு எழுதுகிறார்.

தெய்வத்தின் கருணை அவ்வளவு மோச மாகப் போய்விடவில்லை. கண்ணைக் கெடுத் தாலும் கோலையாவது கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்துத்தான் சமர்ப்பிப்பார். தற் செயலாக வருவது போல் திரு.பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்தினுடைய ரசனையும் அவ்வளவு மட்டமானதன்று. மருதியும் குழந்தையுடன் பங்களாவின் பக்கத்தில் தோட்டக் காரியாக வசிக்க ஆரம்பித்தாள்.

இப்பகுதி மணிக்கொடியில் வெளியான போது பின்வரும் வரிகளைத் தொடக்கப் பகுதியில் புதுமைப் பித்தன் குறிப்பிட்டுள்ளார்.

“ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடியக்

காண்பது நங்கையர் உள்ளம்”.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. சிறையில் இருந்து விடுதலையான பின், மருதியைக் காண் பதற்குத் தேயிலைத் தோட்டத்திற்கு வருகிறான் வெள்ளையன். தகர விளக்கின் மங்கிய ஒளியில் மருதியைக் காண்கிறான். அவள் மேலெல்லாம் ‘பரங்கி புண்’ (சிபிலிஸ்). அதிர்ச்சியடைந்த அவனிடம் “இங்கே இதுதான் வளமொறை!” என்கிறாள் மருதி. அது தன் குழந்தை தானா என்று ஐயமுற்ற வெள்ளையனிடம் “கண்ணானை” உன் குழந்தைதான் என்று ஆணையிட்டுச் சொன்ன மருதி, ரூபாய் 200ஐயும், வெள்ளச்சி என்று பெயரிட்ட தன் குழந்தையையும் அவனிடம் கொடுத்துத் திருப்பி அனுப்புகிறாள். இப்பகுதி மணிக்கொடி இதழில் வெளியானபோது கதையின் தொடக்கத்தில்,

புண் பூத்த மேனி, புகைமூண்ட உள்ளமடா - அவள்

மண்பூண்ட பாபம், நம் மதிமூத்த கோரமடா

என்ற பாடல் வரிகளை பு.பி. குறிப்பிட்டிருந்தார். பரங்கிப் புண் மருதியின் உடலை மட்டுமின்றி அவள் வேலையையும் மாற்றியது. துரையின் பங்களாத் தோட்டக்காரி என்ற நிலைமாறி மீண்டும் தேயிலைக் கூலியாக மாறுகிறாள். வியாதியின் காரணமாகக் கூலி வேலையில் இருந்து மருதி நீக்கப்பட்டு, தாய் மண்ணுக்குப் பயணமாகிறாள். தான் வாழ்ந்த சேரிக்குள் நுழைந்த அவள், மணஊர்வலத்தில் மணமகனாக வரும் வெள்ளையனைப் பார்த்துவிட்டு, ஓரமாக நின்று, பாளையங்கோட்டை திரும்புகிறாள். புல்வெட்டி விற்று வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொண்டு, பாளையங்கோட்டை மருத்துவமனையில் தன் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். பொருனை ஆற்றுநீரும். மருந்தும் அவள் நோயைக் குணப்படுத்துகின்றன. குழந்தையின் நினைவு வாட்ட வாசவன்பட்டி செல்கிறாள். வெள்ளையனின் புது மனைவி, தன் குழந்தையைத் திட்டி அடிப்பதைக் கண்டு, குழந்தையை வாரியெடுத்து, அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்கிறாள். இருவருக்கு மிடையே அடிதடி நடக்கத் தொடங்கியது. இவளை அடையாளம் காணாத சேரி மக்கள் துரத்திவிடு கின்றனர். அன்று மாலையில் குழந்தை வெள்ளச்சி காணாமல் போய்விட்டது.

“என்றும் உதையும் திட்டும் வாங்கிக் கொண் டிருக்கிற குழந்தை, பொரி கடலையும் தின் பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால் உடன் வருவதற்குச் சம்மதியாமலா இருக்கும்?”

என்று வெள்ளச்சியை மருதி தூக்கிச் சென்றதை நயமாகக் குறிப்பிடுகிறார் பு.பி. குழந்தையுடன், வெகுதூரத்திற்குச் சென்று விட வேண்டும் என்ற முடிவுடன் காத்திருத்த மருதி, கங்காணி சுப்பனைச் சந்திக்கிறாள். வாட்டர் பாலம் தோட்டம் நோக்கி அவளது பயணம் மீண்டும் தொடங்கியது.

மருதியின் தேயிலைத் தோட்ட வாழ்க்கையில் கங்காணி சுப்பனின் மனைவி என்ற நிலை கிடைத்தது. 14 ஆண்டுக்கால வாழ்வில் வெள்ளச்சி பருவடைந்துவிட்டாள். வாட்டர் பாலச் சூழலில் “கருவாட்டைக் காக்கிற மாதிரி” அவளைக் காத்து வந்தாள் மருதி.

வாட்டர் பாலத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் இராமச்சந்திரன் என்ற இளைஞன். அப்பள்ளியில் படிக்கச் சென்ற வெள்ளச்சிக்கும் இராமச்சந்திரனுக்கும் இடையில் காதல் உருவா கிறது. மருதியைக் கெடுத்த ஸ்டோர் மேனேஜருக்கு வெள்ளச்சியின் மீதும் கண் விழுந்தது. துரையின் பங்களாவில் வேலை செய்யும் குதிரைக்கார சின்னானுக்கு, வெள்ளச்சியை மணம் முடிக்க முடிவாயிருந்தது. கங்காணி வேலையின் மேல் நாட்டம் கொண்டிருந்த சின்னான், அதை அடைய வெள்ளச்சியை, ஸ்டோர் மானேஜர் அனுபவிக்க ஒத்தாசை செய்ய முடிவெடுத்தான். கொழுந்து பறிக்கச் சென்ற வெள்ளச்சியை மரத்தில் கட்டி வைக்கிறான் சின்னான். தற்செயலாக அங்கு வந்த இராமச்சந்திரன் சின்னானைத் தாக்க, சின்னான் திருப்பித் தாக்க இராமச்சந்திரன் மயங்கி விழு கிறான். இந்த இடைவெளியில் ஸ்டோர் மானேஜர், தான் நினைத்ததை முடித்துவிட்டான். செய்தி யறிந்த மருதி “என்னைக் கெடுத்த பாவி, என் மகளையும் குலைத்தாயே!” என்று கூறி ஒரு கல்லைத் தூக்கி ஸ்டோர் மானேஜர் மீது வீச, அது நெற்றிப் பொருத்தில் பட்டு, அவன் உயிரைப் பறித்துச் சென்றது.

நடந்த நிகழ்வுகளைத் தோட்டத் துரையிடம் இராமச்சந்திரன் குறிப்பிட்டான். தொழிலாளர் களின் ஆவேசத்தையும், குற்றம் அதிகாரிகளின் பக்கம் இருப்பதையும் உணர்ந்த துரை, தோட்டத்தின் பெயர் பத்திரிகைகளில் இடம்பெறுவதைத் தவிர்க்கும் வழிமுறையாகக் கொலை நிகழ்வைத் தன் செல்வாக்கால் அமுக்கிவிட்டார். பைத்தியம் பிடித்த மருதியை அழைத்துக்கொண்டு வெள்ளச் சியும் இராமச்சந்திரனும் எங்கோ சென்று விட்டார்கள்.

போகிற போக்கில் என்பது போல் சில சமூக எதார்த்தங்களை இக்கதையில் கூறிச் செல்கிறார் பு.பி.வாசவன் பட்டி கிராமத்தின் சேரியில் வாழும் மக்களது வருவாய் யாரிடம் போய்ச் சேர்கிறது என்பதனை,

கோடைக்காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட்டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் ஒட்டப்பிடாரம் பிள்ளைக்கும் அதை விட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்கடை வைத் திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை. சாயங் காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணி வரை பிள்ளையவர்களின் கடை முன்பு சந்தை இரைச்சலாக இருக்கும்.

என்று குறிப்பிடுகிறார். சேரி மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையான சொல்லாடல் களையும்,

“இரு சவமே, அண்ணாச்சி கிட்ட பேசுறது தெரியல்லே - வர வர பறக் களுதைகளுக்கும் திமிறு ஏறுது!”

“அங்கே நிக்கது மருதியா - ஏ மூதி! தொளூவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டுட்டு வா!”

“ஏ மூதி புல்லுகட்டு என்ன விலை”

என்று பதிவு செய்துள்ளார். நல்ல வெயில் நேரத்தில் வாசவன் பட்டிக் குளக்கரை வழியாகச் செல்கிறாள் மருதி. வெயிலின் உக்கிரத்தை, “வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்று வருணிக்கிறார்.

பு.பி. பிறந்து வளர்ந்த அன்றையத் திருநெல் வேலி மாவட்டத்திலிருந்து ஏராளமானவர்கள் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றனர். அவர் களை இரண்டு வகையாகப் பகுக்கலாம். முதல் வகையினர் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றனர். இந்நகரில் வாணிபம், தரகு வேலை, சமையல் வேலை, முடிதிருத்தல், கணக்கு வேலை என்பனவற்றை மேற்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இவர்கள் அனைவரும் வருவாய் ஈட்டுவதில் ஒரே தரத்தவர் அல்லர் என்பதால் இவர்களது வாழ்க்கைத் தரமும் ஒரே தரத்தில் அமைந்திருக்கவில்லை. “ஐவருக்கு நெஞ்சும் அரண்மனைக்கு வயிறும்” என்று விதுரனை நோக்கி, துரியோதனன் கூறியது போல, இவர்கள் இலங்கையில் வாழ்ந்து பொருளீட்டினாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, நிலமாகவும் வீடாகவும் மாற்றுவதில் கருத்தாய் இருந்தனர். ஆனால் மலையகத் தமிழர்களில் பெரும்பாலோர் தம் பூர்வீகக் கிராமங்களுடன் மட்டுமின்றி, தம் சாதிய உறவுகளையும்கூடத் துண்டித்துக் கொண்டு, பல கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு, மலையகத்தையே தம் தாயகமாக மாற்றிக் கொண்ட வர்கள்.

பு.பி. பிறந்த சைவ வேளாளர் சமூகத்தினர் முதல் வகையைச் சார்ந்தவர்கள். ஏதேனும் ஒரு வழியில் பு.பி.க்கு இவர்களுடன் தொடர்பு இருந் திருக்க வாய்ப்புண்டு. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை “கொழும்பு சம்பாத்தியம்”, “கொழும்புச் செட்டியார்”, “கொழும்புப் பிள்ளை”, “கொழும்புப் பண்ணையார்” என்ற சொற்கள் இம்மாவட்டத்தில் பரவலாக வழக்கில் இருந்தன. துன்பக் கேணியை அடுத்து 1937-இன் இறுதியில் எழுதிய ‘நாசகாரக் கும்பல்” என்ற சிறுகதையில், திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக் களிடையே கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையே தான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்று அர்த்தம்.

என்று எழுதியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிழைப்புக்காகக் கடல் கடந்து சென் றாலும், சாதி அடிப்படையிலேயே தொழில் வாய்ப்புகள் கிடைப்பதை பு.பி. அறிந்துள்ளார் என்பதை மேற்கூறிய செய்தியின் வாயிலாக உணரலாம். இது மட்டுமின்றி இலங்கைத் தேயிலைத் தோட்ட வாழ்வின் கொடூரங்களை அவர் மிக நுட்பமாக அறிந்து தம் சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் விளைவாகவே நம் மனதை உறுத்தும் அவலப் பாத்திரமாக மருதி காட்சியளிக்கிறாள்.

1940-இல் வெளியான “புதுமைப்பித்தன் கதைகள்” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில், “துன்பக்கேணி” ஒரு குறுநாவல் திட்டத்திற்கு வளர்ந்து போனாலும் அதில் ஒருமை நிற்கிறது. எல்லா நிகழ்ச்சிகளும் சோகப் பூச்சைப் பூசிக் கொண்டு தோன்றுகின்றன” என்று ரா.ஸ்ரீ. தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

புதுமைப்பித்தன் தமது ‘துன்பக்கேணி’ என்னும் சிறுகதையில், இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் களைப் பற்றியும், அவர்கள் தமிழகத்திலே தமது தாயகத்திலே சமூகப் பொருளாதார ரீதியாக எத்தகைய கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மிக நாசூக்காகவும், அதே சமயம் மிகத் துல்லியமாகவும் காட்டியுள்ளார்.

“...துன்பக்கேணி என்னும் கதையிலே தமிழர் சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களிலுள்ள ஒரு பகுதி மக்களின் அவல வாழ்வையும், வாழ்க்கைப் போராட்டத்திற் சிக்கித் தவித்து அவஸ்தைகளுக் குள்ளாகி அவர்கள் இடும் ஓலங்களையும், பண்ணை யாளர்கள்- தோயிலைத் தோட்ட அதிகாரிகள் போன்ற பெரிய மனிதர்களின் சிறுமைத் தனங் களையும், மனப் பொருமலுடனும் ஆத்திரத் துடனும், எரிச்சலுடனும் வேதனைச் சிரிப்புடனும் எலும்பின் குருத்துக்களையே சிலிர்க்க வைக்கும் சோகக் குரலுடனும் திரைப்படக் காட்சிபோற் காட்டியுள்ளார்”. 

என்ற மலையகத் தமிழர்கள் குறித்த வரலாற்று நூலின் கலாநிதி அருணாசலம் குறிப்பிடுகிறார்.

இக்கூற்றுகள் முற்றிலும் உண்மையானவை என்பதை இச்சிறுகதையைப் படித்து முடித்த வர்கள் உணர்வர். தம் சம காலத்துப் படைப் பாளிகள் தொடாத ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையைப் படைப்பாக்கியதன் வாயிலாக, தமிழ்நாட்டின் டி. செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி ஆகியோருக்கு முன்னோடியாக அமைந்து பு.பி. வழிகாட்டியுள்ளார்.

* * *

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12-02-2006இல் நடத்திய புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் படிக்கப் பெற்றது. - “புதுவிசை” 2006

துணை நூல்பட்டியல்:

  • அருணாசலம் கலாநிதி, க. 1994. இலங்கையின் மலையகத் தமிழர்
  • சாரல் நாடன், 1988. தேசபக்தன் கோ. நடேசய்யர்
  • சாரல் நாடன், 1990. மலையகத் தமிழர்
  • சாரல் நாடன், 1993. மலையக வாய்மொழி இலக்கியம்
  • சாரல் நாடன், 2000. மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
  • நவஜோதி, க. 1971. இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும், நாட்டுப்புறப் பாடல்களும் வேங்கடாசலபதி ஆ. இரா. 2000. புதுமைப்பித்தன் கதைகள் முழுத் தொகுப்பு
  • Betram Bastiampillai, 1968, Social Conditions of the Indian Immigrant Labourer inCeylon in the 19th century.
  • Langa Sundaram, Indian Overseas
  • Panchanan Saha, 1970. Emigration of Indian Labour (1834- 1990).

நன்றி - கீற்று

மொழிபெயர்ப்பியல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசுப்போட்டி - 2022

காக்கைச் சிறகினிலே இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி.பி.அரவிந்தன் ஏழாவது ஆண்டு நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

'காக்கைச் சிறகினிலே' இதழின் தொடக்க கால நெறியாளர் கவிஞர் கி.பி.அரவிந்தன் கனவின் மீதியில் எழும் புதிய தடமாக இப்போட்டி அமையும். 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்கிற மாகவி பாரதியின் கனவை நனவாக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.

மொழிபெயர்ப்பியல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசுப்போட்டி - 2022

(திருவள்ளுவராண்டு - 2053)

தெரிவுக்குரிய தகுதி

இந்த நூற்றாண்டில் 2000 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரை பிறமொழியிலிருந்து முதற் பதிப்பாக தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்கள்

நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.01.2022 போட்டி முடிவு: மார்ச் 2022 நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: காக்கைச் சிறகினிலே, 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 இந்தியா 16016010560 : kipian2022kaakkaicirakinile@gmail.com

நெறியாளர்:

மதிப்பிற்குரிய இ. பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

நடுவர் குழு: 

பேராசிரியர் க. பஞ்சாங்கம் (இந்தியா)

- முனைவர் கே.எம். வேணுகோபால் (இந்தியா) -

எழுத்தாளர் என் சரவணன் (நோர்வே)

எழுத்தாளர் அமரந்த்தா (இந்தியா)


ஈழத்தின் ஆசிரிய/வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் - என்.செல்வராஜா

லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்”. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்” பற்றிய நினைவு மீட்டலுடன் கட்டுரைக்குள் செல்லலாம். 

பீ.பீ.சீ. மற்றும் பிரித்தானிய தொலைக்காட்சி செய்திகளில் கலவரம் தொடர்பாக அடிக்கடி காட்டப்பட்ட ஒரு காட்சி மனதில் இன்னும் படிமமாக உறைந்துகிடக்கிறது. இக்கட்டுரையை வடிவமைக்கத் தொடங்கும்போது ஏனோ அது மீளவும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தது. கலவரபூமியில் உடைக்கப்பட்ட ஒரு ஆசிரியரின் கடை. அதன் உரிமையாளர் செய்வதறியாது விறைத்த பார்வையுடன் கடையினுள் நிற்கிறார். அவரது கண்களுக்கு முன்னால் அவரது பொருட்கள் போவோர் வருவோரால் சூறையாடப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அவர் சாய்ந்து நிற்கும் அலுமாரியிலிருந்து அவரை நகரச்சொல்லிவிட்டு ஒரு சிறு பெண் அதிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்கிறாள். அவரையும் தங்களில் ஒருவராகக் கருதி தான் எடுத்த பொருட்களிலொன்றை அவரின் கைகளிலேயே திணித்துவிட்டு நகர்கிறாள். 

இப்பொழுது கட்டுரையினை எழுதத் தூண்டிய கருப்பொருளுக்கு வருகிறேன். இன்று காலை சிறிதுநேரம் சமூக வலைத்தளத்தில் உலாவிக்கொண்டிருந்த வேளை எனது புதிய நூலொன்றின் வெளியீடு பற்றிய அட்டைப் படத்துடனான செய்தியினை பகிர்ந்திருந்த நண்பர் ஒருவரின் பின்னூட்டமொன்றில் ‘இதன் மின்வடிவம் எங்கு பெறலாம்?” என்று ஒருவர் கேட்டிருந்தார். ‘அறிந்து சொல்கிறேன்” என்று மற்றொருவர் பதில் எழுதியிருந்தார். நூல் வெளியிட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அதன் இலவச ‘பீ.டீ.எப்.” களையும் ‘மின்நூல்” வடிவங்களையும் தேடித்திரியும் ஒரு புதிய வாசகர் பண்பாட்டு வெளிக்குள் நாங்கள் புகுந்துவிட்டோமே என்ற ஆதங்கமே இக்கட்டுரைக்குக் காரணம். 

ஒரு நூலை விலைகொடுத்து வாங்கும் கலாச்சாரத்திலிருந்து இலவசமாக அதனை சிரமமில்லாத நவீன தொழில்நுட்பம் தந்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்நூலை ‘சுடச்சுட” வாசித்துவிட்டுக் கடந்துசெல்லும் மனப்போக்கு எம்மில் பலருக்கும் தோன்றுவதற்கு ‘ஸ்மார்ட் போன்”களும், சமூக வலைத்தளங்களும் இணையத்தில் மலினமாக்கப்பட்டுவிட்ட மின்வருடப்பெற்ற நூல்களும், இணையவழி நூலகங்களும் காரணமாகிவிட்டன. 

ஒரு நூலைத் தனது சொந்த வருவாயிலும், கடன்பட்டும் பிரசவ வலியுடன் அச்சிட்டு வெளியிட்டு, அதன் விற்பனையில் வரும் வருவாயில் அச்சகத்திற்கு செலவிட்ட பணத்தின் ஒரு பங்கையாவது செலுத்திக் கடன்பளுவிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் ஆசிரிய வெளியீட்டாளரின் மனநிலையை இந்த சமூகத்தள வாசகர்கள் எவரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 

இன்று இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய ‘ஸ்கானிங் அப்ஸ் (Scanning Apps)” கள் இல்லாத ஸ்மார்ட் போன்களை காணமுடியாதுள்ளது. எதிர்காலத்தில் போன் வாங்கும்போது, இத்தகைய Appsளகளை பில்ட் இன் அப்ஸ் (Built-in Apps)களாக ஐபோன் தயாரிப்பாளர்கள் வழங்கினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. இத்தகைய வசதிகளின் விளைபொருட்களாக இப்பொழுது எம்மவரின் அண்மைக்கால நூல்களில் பல துல்லியமான  PDF களாக  இலத்திரனியல் உலகில் வலம் வருகின்றன. இந்த PDF களை உருவாக்கிக்கொள்வது ஒருவரது ‘ஆய்வுத் தேவை” என்ற ஓட்டையின் கீழ் பதிப்புரிமைச் சட்டத்தை மீறாத செயலாக தோன்றியபோதும், அதனை இரண்டாம் நபர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அப்பட்டமான சட்டமீறலாகும்.


பதிப்புரிமைச் சட்டம் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினால் 1911ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இது ‘British Copyright Act of 1911” எனக் குறிப்பிடப்படுகின்றது. கிழக்கிந்தியக் கம்பெனியினர், இங்கிலாந்து எழுத்தாளர்களின் நூல்களின் பிரதிகளை இந்தியாவுக்குக் கடத்தி வந்து அங்கே மீள அச்சிட்டு இந்திய உபகண்டத்தில் விற்பனை செய்யும் ‘கள்ள வேலை”களில் ஈடுபட்டுவந்ததினால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பர் வரலாற்றாசிரியர்கள். இதனை இலகுவில் கண்டறியும் நோக்கில் தான், ஒரு நாட்டில் அச்சிடப்படும் அத்தனை நூல்களை அச்சகச் சட்டத்தின்கீழ் அரசாங்க பதிவாளருக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும், அப் பதிவாளர் தனக்குக் கிடைக்கும் நூல்களை பட்டியலிட்டு மாதாந்தம் அரசாங்க கசட் பத்திரமாக வெளியிட்டு வரவேண்டும் என்றும் ஒரு நியதியிருந்தது. அதுவே இன்று தேசிய நூலகத்தின் நூற்பட்டியலாகப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான பதிப்புரிமைச் சட்டம் அடுத்த ஆண்டே இலங்கையில் ‘Ceylon Copyright ordinance No.20 of 1912” என்ற பெயரில் சுமார் 67 ஆண்டுகள் மாற்றமின்றி நடைமுறையில் இருந்தது. இச்சட்டம் பின்னர் 1979இல் புதியதொரு சட்டத்தின்மூலம் இற்றைப்படுத்தப்பட்டது. ‘புலமைச் சொத்துச் சட்டம்”  இல. 52: 1979” என்ற வழங்கப்படும் ‘Code of Intellectual Property Act No: 52 of 1979”  என்பதே அச்சட்டமாகும். இது இலங்கையிலுள்ள எழுத்தாளர்களினதும் பாவனையாளர்களினதும் உரிமைகளைப் பற்றி விரிவாக வலியுறுத்துவதுடன் அவர்களுக்கு நியாயமான பாதுகாப்பையும் வழங்குகின்றது. இச்சட்டம் மீண்டும் 2003இல் திருத்தங்களை உள்வாங்கி ‘2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டம்” என்ற பெயரில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் தேசிய புலமைச் சொத்துக்களுக்கான தலைமை அலுவலகம்  (The National Intellectual Property Office of Sri Lanka)  3வது மாடி, சமாகம் மெதுர, இல.400, டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு-10 என்ற முகவரியில் உள்ளது. இவ்வலுவலகத்தின் தொடர்பாடலுக்கான தொலைபேசி இலக்கம் (0094) 112 689 368 என்பதாகும். உங்கள் நுலொன்று பொருளாதாரரீதியில் உங்களுக்கு நட்டமேற்படும் வகையில் தனிநபரினாலோ, அச்சகமொன்றினாலோ துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிந்தால், உடனடியாக இவ்வலுவலகத்துடன் தொடர்புகொண்டு வெண்டிய ஆலோசனையினைப் பெறலாம். அண்மைக் காலத்தில் இலங்கையில் சக படைப்பாளிகளுக்கு நேர்ந்த பாரபட்சம் பற்றிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும்; இவர்களது இணையத்தளத்தில் தகவல்களை காணமுடிகின்றது. பதிப்புரிமை பெறுவதற்கு எழுத்தாளர்கள் எங்கும் தமது நூலை பதிவசெய்யவேண்டியதில்லை. ஒரு நூல் விற்பனைக்காக பதிப்பகத்தை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அந்த நுலுக்கான பதிப்புரிமை இயல்பாகவே ஆசிரியருக்கு கிடைத்துவிடும். அவராக எழுத்துமூலம் மற்றொருவருக்கோ, நிறுவனமொன்றுக்கோ தனது உரிமையைத் தாரைவார்த்துக் கொடுத்தாலேயன்றி பதிப்புரிமை ஆசிரியருக்கானதே. இதனை ஒவ்வொரு நூலாசிரியரும் தனது நூலில் பதிவுசெய்துவைப்பது நல்லது. 

பதிப்புரிமைச் சட்டம் அல்லது புலமைச்சொத்துச் சட்டத்தில் உள்ள சிறியதொரு ஓட்டை தான் ‘நியாயமான பயன்பாடுகள்  (Fair Use)” எனப்படும் பதப்பிரயோகமாகும். உங்களது நூலை விலைகொடுத்து வாங்கும் ஒருவர் அதனை பலருக்கும் இரவல் கொடுத்துப் பெறுவதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவர் உங்கள் புத்தகத்தை ‘ஸ்மார்ட் போன்” மூலம் மின்வருடல் செய்து அதனை PDF வடிவில் பிரதியாக்கி பொதுவெளியில் மற்றவரின் பாவனைக்கு இலவசமாகவேனும் விடமுடியாது. 

ஈழத்தவரின் ஆவணங்களைப் பதிவுசெய்யும் நூலகம்.ஓர்க்  (Noolaham.Org) இணைய நூலகம் இதன் காரணமாகவே ஒரு நூலை மின்வருடல் செய்தாலும் அதனை பொது வெளியில் இலவசமாக விடுவதற்கு எழுத்தாளரின் எழுத்து மூலமான அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுத்தாளர் மறைந்து 70 ஆண்டுகள் வரை அவரது பதிப்புரிமை சட்டத்தினால் எழுத்தாளரின் சட்டபூர்வ வாரிசுகளுக்காக பாதுகாக்கப்படுகின்றது. ஆசிரியர் மறைந்து 70 ஆண்டுகளின் பின்னர் அப்படைப்பாக்கத்தை எவரும் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் தான் மதுரைத் திட்டம் சங்க இலக்கியங்களையும் பாரதியார் பாடல்களையும் பக்திப் பிரபந்தங்களையும் உள்ளடக்கிய மின்நூல் வடிவங்களை இலவசமாகத் தரவிரக்கம் செய்துகொள்ள வழியமைத்துக் கொடுக்கின்றன. நூலகம்.ஓர்க் ஈழத்தவரின் முழு நூல்களையும் ஆவணப்படுத்திப் பகிரமுனையும் தனது கனவை நனவாக்கமுடியாது உள்ளதும் இத்தகைய சட்டச்சிக்கல்களால் தான். 

இந்தக் கைங்கரியங்களை அநாமதேயங்களாக பலரும் சுதந்தரமாகப் பிரதியெடுத்துப் பகிர்ந்துகொள்ளும் தவறான ஒரு முயற்சி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையின் வரவாகும். 

லண்டனில் எனக்கு நன்கு பரிச்சயமான தீவிர வாசகர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில்  உரையாடும்போது குறித்த ஒரு புதிய நூல் பற்றிப் பேசிய சிறிது நேரத்தில் 150 பக்கம் கொண்ட அந்நூலின் பீடீஎப் பிரதியை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் படைப்பாளியையும் நான் நன்கறிவேன். அந்த நூலை வெளியிடுவதற்கு அவ்வெழுத்தாளர் பட்ட பாடும் எனக்குத் தெரிந்ததே. உடனடியாக என்னுடன் தொடர்புகொண்ட அந்த ‘நல்ல உள்ளத்தை” மீண்டும் தொலைத் தொடர்பில் இணைத்து, இந்த மின்நூல் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்றேன். அதற்கு அவர் எவ்வித மனக் கிலேசமுமின்றி, ’நான் வாங்கும் புத்தகங்களை நேரம் கிடைக்கும் போது, இப்படி பீடிஎப் ஆக்கி வைத்துக்கொள்வேன். தேவைப்படுபவர்களுக்கு தபால் செலவின்றி அனுப்பி உதவலாம் அல்லவா?” என்றார். அவரிடம் ஏறத்தாழ 70 நூல்கள் வரை மின்நூல்களாக இருக்கின்றன என்ற தகவலையும் போகிற போக்கில் போட்டுடைத்தார். அவருக்கு பதிப்புரிமைச் சட்டத்தின்  இருப்பைப் பற்றியும் அதன் தீவிரத்தையும், நண்பர் அறியாமையால் இழைத்துவரும் சட்டமீறல் பற்றியும் விளக்கமளித்தேன். அன்றிலிருந்து தனது சேகரிப்பிலுள்ள மின்நூல்களில் எதையும் அடுத்தவருக்குப் பகிர்வதை அவர் நிறுத்திக்கொண்டார்.

எம்மவரின் நூல்களை மின்நூல் வடிவில் சமூக ஊடகங்களில் தேடிப்பெற்றுப் பகிர்ந்து கொள்ளும் தமிழகத்து புத்திஜீவி ஒருவருடன் கதைத்தபோது, அவரது கருத்து என்னை சிந்திக்கவைத்தது. 

இந்திய இறக்குமதிக் கொள்கைகளின் கீழ், தனது பிராந்திய மொழிகளில் எழுதப்படும் நூல்களை இறக்குமதி செய்வதில் பலத்த கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட தேசத்து மொழிகளுடன் தமிழ்நாட்டின் தமிழும் இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு பாதகமான இந்தியாவின் இந்த இறக்குமதிச்; சட்டத்தினை திருத்தி எழுதுவதற்கு தமிழக சட்டசபையோ, தமிழகத்தின் தமிழ் சகோதர எழுத்தாளர்களோ இன்றுவரை முன்வராமல் கள்ளமௌனம் காப்பதற்கு, தமது பதிப்புத்துறை ஏகபோக உரிமையுடன் நாடுகடந்தும் செழிக்கவேண்டும் என்ற ‘நல்லெண்ணமே” காரணமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது. வாசகரிடம் வேறு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். இப்பொழுது புரிகின்றதா அன்று ஆறுமுகநாவலரும் பணம்படைத்த யாழ்ப்பாணப் பண்டிதர்களும் தமது படைப்பாக்கங்களுடன் சிதம்பரத்துக்கும், சென்னைக்கும் ஏன் கப்பலேறிப் போனார்கள் என்று?

ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்தியாவின் இச்சட்டம் செல்லாது. தாங்கள் எழுதிப் பதிப்பிக்கும் எல்லாவித ‘ஆக்கங்களும்” தாராளமாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று சுதந்திரமாகப் பறந்து செல்லும். இதனால் இலங்கைத் தமிழர்களின் தமிழ் நூல்களை இந்தியாவில் அச்சிட்டாலேயன்றி இந்திய ஆய்வாளர்களுக்கு அவற்றை வாங்கிப் படிக்க வாய்ப்பில்லை. நண்பர்கள் மூலம் தபாலிலும், நேரிலும் தருவித்துக்கொள்வதே அவர்களுக்கெனத் திறக்கப்பட்டுள்ள ஒரே வழியாகக் காணப்படுகின்றது. எஸ்போவும், அ.முத்துலிங்கமும், புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளும் படைக்கும் ஆக்கங்களே பெரும்பாலும் அவர்களின் ஈழத்தவரின் தமிழ் ஆய்வுக்குப் போதுமானதாக உள்ளது. தமிழகத்தில் தனது நூலை அச்சிடும் ஒரு புகலிடத்தின் அறிமுகப் படைப்பாளியை அறிந்துகொண்டுள்ள அளவுக்கு, தமிழக வாசகருக்கு தமிழகத்தில் தமது பதிப்பகத்தைத் தேட முனையாது உள்;ர் பதிப்பகங்களுடன் நின்று தமது படைப்பாக்கங்களை வெளிக்கொண்டுவந்திருந்த ஈழத்தின் முதுபெரும் படைப்பாளிகளைக்கூட தெரியவில்லை. 

இந்நிலையில் மின்நூல்களே தமிழகத்தவருடனான புலமைத்துவ அறிவுப் பகிர்வுக்கு வழியமைக்கின்றன என்கிறார் என்னுடன் கதைத்த அந்தத் தமிழகப் புத்திஜீவி. நூலகம்.ஓர்க் இணையத்தின் நூல்களை விட மேலதிகமாக சட்டவிரோதமான மின்வருடல்களும் இலவசமாக அவர்களைச் சென்றடைகின்றன எனவும் அறியமுடிகின்றது. 

இந்நிலையில் எதிர்காலத்தில் எமது படைப்பாளிகள், ஈழத்துப் பதிப்பாளர்களை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு, தமது நூல்களை இணையத்தில் இயங்கும் நூல் வெளியீட்டு அறக்கட்டளைகளை நாடி, தமது நூல்களை (பேஜ் மேக்கிங்) வடிவமைத்துக்கொண்டு, மின்நூல் வடிவில் மாத்திரம் அவற்றைத் தயாரித்து உலகத் தமிழ் வலைத்தளங்களில் இலவசமாகப் பரவவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலுள்ளது. இப்பொழுதே புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் எமது படைப்பாளி இ.தியாகலிங்கம் உள்ளிட்ட பலரும் தமது நாவல்களை மின்நூல் வடிவில் வெளியிடத் தொடங்கிவிட்டனர். 

இத்தகைய குழப்பகரமான, ஈழத்தமிழ்ப் படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் கிட்டியுள்ள ஆரோக்கியமற்ற ஒரு விநியோகச் சூழலில் தான் இந்த பீடீஎப் வாசகர்கள் சமூகவலைத் தளங்களின் வழியாக இலவச வாசிப்புக்கான மின்நூல்களைத் தேடி அலைகின்றார்கள். இத்தகைய பகைப்புலத்தில்தான் தான் இக்கட்டுரையின் ஆரம்பப் பந்திகளில் நான் குறிப்பிட்டிருந்த லண்டன் கலவரத்தில் சிக்கியிருந்த ‘அந்தக் கடைக்காரரின் ஏக்கம் நிறைந்த முகம்” என் மனதில் ஏனோ வந்து போயிற்று. கையறு நிலையில் நின்றிருந்த அவரின் கண்களில் தெரிந்த அந்த ஏக்கப் பார்வை- எனக்கு ஏனோ எவ்வித அரச ஆதரவும் அற்று சுயம்புகளாக எழுந்து நின்று தமக்கென விதிக்கப்பட்ட பிரசுரகளத்தில் நின்று தனித்துப் போராட விடப்பட்டுள்ள எமது ஆசிரிய - வெளியீட்டாளர்களின் பார்வையையே ஒத்திருந்தது. 

(19.11.2020)

நன்றி - எங்கட புத்தகங்கள்

என்.சரவணனின் "பண்டாரநாயக்க கொலை" நூல்: ஒரு அரிய பணி (அணிந்துரை) - ந.சுசீந்திரன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மிக உற்சாகமான இளைஞனாக, தேடித்தேடிப் புதிய தகவல்கள் பெற ஓடி உழைக்கும் ஊடகவியலாளனாக, இலங்கையில் தென்னிலங்கை அரசியல், இலக்கியச்  செயற்பாட்டாளர்களைத் தமிழ் பேசும் இனத்தவர்களுடன் இணைக்கும் பாலமாக, எழுத்தாளனாக, சஞ்சிகை ஆசிரியனாக, சிங்கள-தமிழ்  மொழிபெயர்ப்பாளனாகத்  சந்தித்த போதில்  தோழர் சரவணன் அவர்களிடம் காணப்பட்ட அதே ஆய்வுநோக்கும், ஆழநோக்கும் குன்றிவிடாது ஆர்முடுகலாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு அவரது அண்மைக்கால நூல்கள் சாட்சியங்களாகப் பரிமளிக்கின்றன. 

தலித்தியம்  இலக்கியத்திலும் அரசியல்  கலாசாரத் தளங்களிலும் தமிழுக்கு அறிமுகமான எண்பதுகளில் அதனை  இலங்கையிலும் தொடர் பேசுபொருளாக்கியவர்  சரவணன் அவர்கள்.  ’இலங்கை அரசியலில் பெண்கள்’ என்ற சுமார் இருபது வருடங்களுக்கு முன் வெளியாகிய அவரது  நூல் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழில் வெளியாகிய குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண்களின் அரசியல் வரலாற்றைப்பேசுகின்ற முன்னோடி நூல் எனவும் குறிப்பிடலாம். 

பிரபலங்களும் அரசியற் பிரமுகர்களும் அகாலமாகக் கொல்லப்படும்போது, அக் கொலை யாரால்? ஏன்? என்று உரிமைகோரப்படாதவிடத்து அக் கொலைபற்றிய வதந்திகளும், சாத்தியமான  மற்றும் சாத்தியமே இல்லாத ஊகங்களும்   தற்செயலாகவும், பலவேளைகளில்  பின் விளைவுகளை பற்றிய எண்ணமில்லாமால், பொறுப்பற்று, வெறும் பரபரப்புக்காக  எழுந்தமானமாகவும்   சிலவேளைகளில்  குறித்த விளைவுகள் ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்பில்  திட்டமிட்டும் பரப்பப்படுகின்றன. வரலாற்றின் நீண்ட பாதையில்  இவை குவிந்து கிடக்கின்றன. 

ஓலோவ் பால்மே என்பவர் , தனக்கு மெய்ப்பாதுகாப்பாளர்கள் வைத்துக்கொள்ளாத சுவீடன் நாட்டின் பிரதமாரக இருந்தவர். ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு மனைவியுடன் கால்நடையாக வீடுதிரும்பும் வேளை 1986 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். கண்கண்ட சாட்சியாக ஒரே ஒருவர் இருந்தார். அவரும் இறந்துவிட விசாரணைகள் கைவிடப்பட்டன. அன்று தென்னாபிரிக்க அப்பாதைட் நிறவெறி ஆதரவாளன் ஒருவன், யூக்கோஸ்லாவிய உளவுத்துறை, சுவீடனின் வலது தீவிரவாதி, அன்றைய சிலி நாட்டு பாசிசம், கூர்டிஸ்தான் விடுதலை அமைப்பு, அல்லது  தன்னிச்சையான தனித்த ஒரு பயங்கரவாதி போன்றோர் இக் கொலையின் பின்னணியில் இருந்திருகின்றார்கள் என்ற ஊகச் செய்திகளும் எடுகோள்களும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியப் பிரதமராயிருந்த ஹோல்ட்  என்பவர், கடலில் சுழியோடுவதில் வல்லுனர். அவ்வாறு அவர் ஒருமுறை கடலில் சுழியோடியபோது காணமற் போய்விட்டார். அவரைச்  சீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று கடத்திச் சென்றிருக்கின்றது என்றும் மக்கள் நம்புகின்ரனர்.   

உண்மையில் இருந்து ஊகத்தினையும், சாத்தியங்களில் இருந்து சந்தேகங்களையும், முழுமையற்ற முடிவுகளில் இருந்து புனைவுகளையும் பிரிக்கமுடியாதபடியும் ஊடகப் புதின்ங்களில் இருந்து உண்மை உலகினைக்  கண்டறிய முடியாதபடியும்  சிக்கல் நிறைந்தவையாய் இருக்கின்றன மனித வாழ்வும், வாழ்வின் தூரநோக்கும்!

உலக கறுப்பின மக்களின்  ஆதர்ஷமாய் விளங்கியவர் மல்கம் எக்ஸ். 1965 இல் அவர் கொல்லப்பட்டபோது, மூன்று நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும், ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று தீர்க்கப்பட்டது. யார், ஏன்  கொன்றிருக்கலாம் என்று பேச இன்றும் அக்கொலைபற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. 

ஐக்கிய அமெரிக்காவின் தலைவராக இருந்த  ஜான் எவ். கெனடியின் கொலை 1963 இல் இருந்து உலகில் அதிகம் பேசப்பட்ட கொலையெனக் கொள்ளலாம். இக் கொலையினை காஸ்றோ விற்கு எதிரான தீவிர வலதுசாரி ஒருவன் செய்தான் என்றும், அன்றைய உப-தலைவர் ஜாண்சனே இதனைச் செய்வித்தார் என்றும், இக் கொலையின் சூத்திரதாரி சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனம் என்றும், சோவியத் உளவு நிறுவனம் என்றும் நிரூபணத்தின் எல்லைவரை வந்துவிடுவதாகப் பாசாங்கு காட்டும் ஆய்வுகளும் ஆவணகளும்  மேலும் மேலும்  உலக சனங்களுக்குக்  கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. நாம் அறிய,  பங்களாதேஸ்  சிற்பி முஜிபுர் ரஃமான், அன்றைய பாகிஸ்தான்  இராணுவ ஆட்சித் தலைவர்  ஸியாவுல் ஹக், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களின் கொலைகள் மீது கூட ஊகங்கள் காலத்துக்குக் காலம் முன்வைக்கப்படுகின்றன.

ஜெர்மனியின் பாராளுமன்ற அங்கத்தவர் யூர்கன் மொல்லமான் என்பவர், அமைச்சராகவும்  இருந்தவர். வானவெளியில் இருந்து பரசூட்டில் குதிக்கும் இராணுவ விளையாட்டில் அனுபவம் மிக்கவர்.  பாராளுமன்றத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். 2003இல் பரசூட் காற்றில் விரிந்தபின்னர் அதன் கொடியை வெட்டி நிலத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படினும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் தொடருகின்றன.

இரண்டாவது உலகப்போரின்போது பிரித்தானிய இராணுவத்தில்  நிறைய வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்த இலங்கையின் தென்பகுதியில்  போருக்குப் பின்னர் வேலையின்மை ஓர் பிரச்சினையாக உருவெடுத்தது. இதன்போது சில இந்திய எதிர்ப்பு இனவாதிகள், மலையக மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மூர்க்கமாக மேற்கொண்டனர்.  இன்னொருபக்கத்தில்,  இடதுசாரிக் கட்சிகளின் உருவாக்கமும் மக்களின் தொழிற்சங்க ஆதரவும்  அதிகரித்தன. இந்தியாவில் காலனித்துவ எதிர்ப்பும், காந்தியின் அஹிம்சைப் போராட்டமும் சூடிபிடித்திருந்த வேளை, இலங்கையில் காலனித்துவ எதிர்ப்பும் சுதந்திரப் போராட்ட ஆதரவும் இடதுசாரிகளிலேயே  அதிகம் காணப்பட்டது. ஆனாலும் அன்று அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் காலனித்துவ நேச சக்தியாகவே காணப்பட்டனர். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது காலனித்துவ எதிர்ப்புக் கருவியாக இல்லாமல், அதிகாரத்தினைக் கைப்பற்றும் குறுக்குவழியாகவே இருந்திருக்கின்றது.

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றினைத் தீர்மானிக்கும் சக்தியாக ‘மஹாவம்ச மனோநிலை’ (பேராசிரியர் க.சிவத்தம்பி) எவ்வாறு செயற்பட்டது என்பதனை  புரிந்துகொள்ளவும், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், ஏன் சிறுபான்மை இனமொன்றின் பயத்துடன், இனத்தையும் மொழியையும் , மதத்தையும் பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பில் பல்லின, பல்கலாசார, பன்மொழிச் , பல சமய இணக்கச் சூழலை அழித்து சகலவகைச் சிறுபான்மைகளையும் அச்சுறுதிக் கொண்டிருப்பதற்கான அடித்தளங்கள் எப்போது எங்கே போடப்பட்டவை போன்றவற்றைப் புரிந்துகொள்ளவது ஆய்வுப்பரப்பில் இன்றும் முக்கியம்பெறுகின்றது. 

1955 இல்  பிரதமர் ஜான் கொத்தலாவல அவர்களுக்கு நெடுந்தீவில்  கோலாகலமான வரவேற்பும் குறியீட்டு முடிசூட்டுவிழாவும் அவரது ஆத்ம நண்பன் ஊர்காவற்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்பிறட் எல். தம்பியையா அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது. அதில் மிக்க மகிழ்ச்சியடைந்த  ஜான் கொத்தலாவல,  இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக, வேண்டுமானால் சட்ட உருவாக்கத்தின் மூலம் உறுதிசெய்யப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்  தெரிவித்தார். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (இதன்  வாசிப்பு  தமிழும்  அல்ல என்பதுதான்) என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ’சாணக்கிய’ வாசகத்தை இது தென்பகுதியில் கேள்விக்குள்ளாக்கியதுடன் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று "24 மணிநேரத்தில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி" என்ற கோசத்தினை எழுப்ப ஒரு அரிய சந்தர்ப்பமாக உருவாகியது. 

பண்டாரநாயக்காவின் கொலையினை  ’பண்டா- செல்வா’ ஒப்பந்தத்துடன்  தொடர்பு படுத்தி அன்று வெளிவந்த ஊகங்கள் போலவே இன்றும்  ஊகங்கள் உருவாக்கப் படுகின்றன.  இப்படி ஒரு புனைவினை உண்மைபோலக் காட்டுவதில் சிங்கள, பௌத்த இனவெறிப் பேரினவாத சக்திகள் தமது  கொலைக் கறைகளை அழித்துவிடப் பார்க்கின்றனர். பாதை யாத்திரை, பலத்த எதிப்பு,  ஊர்வலம் ,S.W.R.D. பண்டாரநாயக்காவின் இருப்பிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் போன்றவற்றால், நாட்டின் பிரதமரே ஒருதலைப் பட்சமாக அதைக் கிழித்துப் போட்டபின்னர் இன்னும் என்ன வேண்டியிருக்கின்றது. 

"பண்டா-செல்வா" ஒப்பந்தம்  புத்த பிக்குகள், கடும்போக்காளர்களின் வற்புறுத்தலினால்  ஒருதலைப் பட்சமாக் கிழித்தெறியப்பட்டாலும், அதன் அம்சங்களே  பின்வந்த காலங்களில், ஆட்சிமொழி, கருமமொழி, பிரதேசப் பயன்பாட்டு மொழி போன்ற விடங்களுக்குக் அடிப்படையாக அமைந்து என்பர் அரசியல் ஆய்வாளர்கள். ஆனாலும் உடனடித் தீர்வெடுக்க முடியாத பயந்தாங்கொள்ளியாகத்தான் அல்லது ஒரு அதிகார வேட்கையின் கைதியாகத்தான் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா இருந்தார் என்பதற்கு பல உதாரணங்கள் இந் நூலில் சொல்லப்படுகின்றன. அதேவேளை சிறுபான்மை இனங்களின் அடையாளம் என்பது பற்றிய மலினமான புரிதலும் விரைவாக் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றித் தன்னை அரசியல் அதிகாரத்தில்  நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் போட்ட தப்புக் கணக்குகள் என்பதுவும், சிறுபானமை இனங்களை  ஏமாற்றுவதுபோல, மூர்க்கமான பேரினவாத சக்திகளையும் கையாளாலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருப்பின் அதுவும்  அவரது உயிருக்கே ஆபத்தாக அமைந்தது மட்டுமல்லாமல், அழகிய அந்த நாட்டில் நாளை வரை  தொடரப்போகும் அமைதியற்ற வாழ்வைத் தொலைத்த நிலைக்கும் பலதரப்புக் காரணிகளாய்  இருப்பதை நாம் உணர்ந்துகொண்டிருக்கின்றோம். 

பிரதேசங்களின் தன்னாட்சியை, பிரதேசங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை தன் அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில்  தன் அரசியற் தூரநோக்காக முன்மொழிந்து, முற்போக்குத் தேசியக் கட்சி ஒன்றை ஆரம்பித்தவர்   எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள். டொனமூர்  யாப்புச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குமுகமாக, அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் கூட்டிய   தனிச் சிங்களவர்களை மட்டுமே கொண்ட மந்திரிசபைக் கூட்டத்தில்  இருந்து  சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அங்கத்தவர்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வெளிநடப்புச் செய்தார்.  சுதந்திர இலங்கையின் நான்காவது பிரதமராக பதவியேற்ற பின்னர், இடதுசாரிகளின் துணையுடன்,  நன்செய்நிலங்கள் சீர்த்திருத்தச் சட்டம், மற்றும் போக்குவரத்துத் துறையினை அரசுடமையாக்கியது போன்றவை அவரது துணிவினைப் பாராட்டக்கூடியவை தான்.

இத் திட்டமிட்ட கொலை,   புத்தரக்கித என்ற தனி  ஒரு மனிதனின்,  பிடிவாதமான  வியாபாரியின்,  நஸ்டமடைந்த வியாபாரத் தரகனின் கடுங் கோபத்தில் புத்தி மறந்த நிலையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு  என்று கொள்வதில் பலரும் உடன்படுகின்றனர். ஆனாலும் நிலவுகின்ற அனைத்துச் சந்தேகங்களையும் அவற்றிற்கான கிடைக்கப்பெறும் காரணங்களையும்  இந் நூலில் அலசி ஆராய்கின்றார்  தோழர் சரவணன் அவர்கள்.  எமது வரலாற்றின்  அழிந்து படும் பக்கங்களைக் காப்பாற்றி, அவற்றைத் தமிழில்  தருகின்ற அரிய பணியினை மேற்கொண்டிருக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றியும் எனது வாழ்த்துக்களும்.   

நடராஜா சுசீந்திரன்

பேர்லின் - ஜேர்மனி

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates