Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நம்பவைத்து கழுத்தறுத்த சுதந்திரக் கட்சி (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 5) - என்.சரவணன்

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, சீ.பீ.டீ.சில்வா, சிறிமா பண்டாரநாயக்க
1956 தேர்தல், 1957 பண்டா-செல்வா ஒப்பந்தமும் – கிழித்தெறிப்பும், 1956, 1958 கலவரங்களும், 1959 பண்டாரநாயக்க கொலை என அடுக்கடுக்காக சிங்கள தேசியவாதம் பலமுற்ற அதே வேளை தமிழ் தரப்பு நம்பிக்கை துரோகங்களுக்கும், வன்முறைகளுக்கும், நில ஆக்கிரமிப்புகளுக்கும், அரசியல் பிரதிநித்தித்துவ குறைப்புக்கும் உள்ளானது.

பண்டாரநாயக்க கொலையை அடுத்து தஹாநாயக்க இடைக்கால பிரதமராக ஆனார். விரைவிலேயே அவரது ஆணையின்படி ஆளுநர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். 1960 மார்ச் தேர்தல் நடந்தது. முதன் முதலில் ஒரே நாளில் நடத்தப்பட்ட தேர்தல் அது தான். ஒரே வருடத்தில் இரண்டு பொதுத் தேர்தல் நிகழ்ந்த ஆண்டும் அது தான்.

இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் ஆட்சியமைப்பதில் ஆதிகாரப் போட்டி நிகழ்ந்தது. சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி இனி எவரும் அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதை தெளிவாக ஆரம்பித்து வைத்த தேர்தல் அது.

அந்தத் தேர்தலில் ஐ.தே.க -50, ஸ்ரீ.ல.சு.க – 46, ல.ச.ச.க. -10, மக்கள் ஐக்கிய முன்னணி - 10, தமிழரசுக் கட்சி 15 மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் 20 என ஆசனங்கள் பெறப்பட்டன. இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்கிற பெயரில் சுந்தரலிங்கம் தனியாக கட்சியமைத்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டார். அவரை தோற்கடித்து தமிழ் மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்தனர். ஒற்றுமையாக அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான போராட்டத்தையே தமிழர் தரப்பு கைகொண்டிருந்தது.

ஐ.தே.க அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டபோதும் அரசாங்கம் அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை. இடைக்கால பிரதமர் தஹாநாயக்க கூட தனது தொகுதியில் தோல்வியடைந்திருதார். தமிழரசுக் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக அமைந்தது. இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடி வந்தன. தமிழரசுக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை கொடுத்து வழிக்கு கொண்டுவரலாம் என்று அக்கட்சிகள் நம்பின. ஆனால் தமிழரசுக் கட்சியோ தெளிவாக நிபந்தனைகளை வைத்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)

டட்லி சேனநாயக்க தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசுக் கட்சியிடம் கோரியபோது தமிழரசுக் கட்சி கொடுத்த கோரிக்கைகளை எழுத்தில் பெற்றுக் கொண்ட டட்லி அவற்றை நிராகரித்தது மாத்திரமன்றி அவற்றுக்கு எதிராக இனவாத பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சிறிமாவோ உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சியை சந்தித்தது. சீ.பீ.டீசில்வா, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோர் இந்த சந்திப்பை மேற்கொண்டனர். பண்டாரநாயக்கவின் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட தம் கட்சி, அவர் செய்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியவற்றை ஏற்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினர்.

ஆனால் டட்லி அவற்றை ஏற்க மறுத்த காரணத்தினால் 22.03.1960 அன்று சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களித்து அந்த அரசை தோற்கடித்தனர். ஆரம்பிக்குமுன்னமே ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
சேர் ஒலிவர் குணதிலக்க

சாதி அரசியலின் சாதனை
அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க ஒரு குள்ள நரி. மேலும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர். எனவே ஐ.தே.கவை ஏதாவது வழியில் ஆட்சியிலமர்த்த முடியுமா என்று வழி தேடினார். 1960 ஏப்ரல் 27 எதிர்க்கட்சிகளை இராணி மாளிகைக்கு தனித்தனியாக பேச அழைத்தார். செல்வநாயகம் கவர்னரை சந்திக்க செல்லு முன்னர் கொள்ளுபிட்டியிலுள்ள பீலிக்ஸ் இன் வீட்டுக்குச் சென்று சீ.பி.டீ.சில்வா, ஏ,பி.ஜெயசூரிய ஆகியோரிடம் “நான் இப்போது சேர் ஒலிவரிடம் உங்களை ஆதர்க்கப் போவதாகச் சொல்லப் போகிறேன். நீங்கள் பதவிக்கு வந்தால் எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவீர்களா என்பதை உறுதி செய்வதற்காக வந்தேன்” என்றார். அங்கிருந்த இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். “நீங்கள் உறுதிமொழிப்படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று செல்வநாயகம் கேட்ட போது அதற்கு சீ.பி.டி.சில்வா “நான் மிகவும் கறாராகப் பேரம் பேசுபவன். ஓர் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் அதனை பேணுபவன்” என்றார்.

இதன் விளைவாக செல்வநாயகம் சேர் ஒலிவரை சந்தித்தார். “தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியினால் அரசாங்கம் அமைக்க முடியாது. சீ.பி.டீ சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவளிப்பீர்களா?” என்று பீடிகை போட்டார் ஒலிவர். அதற்கு பதிலளித்த செல்வநாயகம் “சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம் எனவே இரண்டு வருடதுக்கென்னே, பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முழுவதும் ஆதரிப்போம் என்றார். இந்த பதிலை எதிர்பார்க்காத சேர் ஒலிவர் அந்த சந்திப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்தார். அதற்கு சேர் ஒலிவர் கொடுத்த காரணம் தமிழரசுக் கட்சி கொடுத்த ஆதரவு நிபந்தனையுடன் கூடியது என்பதால் அது ஸ்திரமான அரசாங்கமாக அமையாது என்றார்.

தமிழரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, சுதந்திரக் கட்சி ஆகியன சேர்ந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், என்.எம்.பெரேரா, சீ.பீ.டி.சில்வா, எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஆகியோர் சேர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதை சுட்டிக்காட்டி தம்மை ஆட்சியமைக்க முடியும் என்று கூறியும் கூட ஆளுநர் ஒலிவர் பிழையான முடியவை எடுத்தார்.

இப்படி சீ.பீ.டீ. சில்வாவை ஆட்சியமர்த்த விடாமைக்கு இன்னொரு காரணமுமுண்டு. “ஏன் உங்களுக்கு “கொவிகம” (வெள்ளாள) சாதியைச் சேர்ந்த எவரும் கிடைக்கவில்லையா? ஏன் ஒரு “சலாகம” சாதியை சேர்ந்த ஒருவரை பிரதமராக ஆக்க முனைகிறீர்கள்.” என்று என்.எம்.பெரேராவிடம் ஒலிவர் கேட்டதாக பிற் காலத்தில் என்.எம்.பெரேரா ஏ.ஜே.வில்சனிடம் கூறியிருக்கிறார். ஏ.ஜே.வில்சன் ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளர் மட்டுமல்ல எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகனும் கூட. இப்படி ஒலிவர் குணதிலக்கவின் சாதிவெறி எப்படி இயங்கின என்பது பற்றி விரிவான கட்டுரைகள் உண்டு.
சத்தியாக்கிரகிகள் மீது பொலிஸ் வன்முறை

1960 யூலை தேர்தல்

இந்த சூழலைப் பயன்படுத்தி ஜூலை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது டட்லி தமிழரசுக் கட்சி, சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கு எதிராக மோசமான இனவாத பிரசாரத்தை கட்டவிழ்த்தார். நாட்டை தமிழருக்கு தாரை வார்க்கும் உடன்பாட்டை அக்கட்சிகள் இரண்டும் செய்திருக்கின்றன என்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தைக் கண்டு கதிகலங்கிய சுதந்திரக் கட்சியினர் “அப்படி ஒரு உடன்பாடும் இல்லை” என்று அறிக்கை விடுங்கள் என்று தமிழரசுக் கட்சியிடம் வேண்டினர். இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு.க வுக்கும் இடையில் அப்படி ஒரு ஒப்புமில்லை உறவுமில்லை என்கிற சாரத்தில் ஒரு அறிக்கை விட்டு தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

மார்ச் மாத தேர்தலில் 50 ஆசனங்களைப் பெற்ற ஐ,தே.க ஜூலையில் 30 மட்டுமே பெற்றது. ஸ்ரீ.ல.சு.க அமோக வெற்றியீட்டி 75 ஆசனங்களைப் பெற்று தனிக் கட்சி ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றது. தமிழரசுக் கட்சியும் 16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக நிரூபித்தது. சீ.பீ.டி சில்வாவுக்கு இனி தமிழரசுக் கட்சியின் தயவும் தேவைப்படவில்லை. தமிழரசுக் கட்சிக்கும் தமக்கும் எந்த உறவுமில்லை என்று காட்டவே விரும்பினார்.

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி ஒரு நல்லுறவைப் பேணியது. 1957 தொடக்கம் சிங்களத்திலேயே வாசிக்கப்பட்டு வந்த சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக் கட்சியும் இப்போது தமிழ் மொழிபெயர்ப்புடன் வாசிக்கப்பட்ட போது கலந்துகொண்டனர்.

சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையில் நவம்பர் 8 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அம்சங்கள் அங்கு உரையாடப்பட்டன. ஆனால் இரண்டே மணித்தியாலங்கள் மட்டுமே நடந்த முதல் பேச்சுவார்த்தையில் தமிழ் அரசாங்க ஊழியர்களின் பிரச்சினை மட்டுமே பேச முடிந்தது. அப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் அதற்கிடையில் 1961 ஜனவரி 1ஆம் திகதி முதல் மீண்டும் தனிச் சிங்கள சட்டம் வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் பூரணமாக அமுல்படுத்தப்போவதை அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கத்தின் இத்தகைய போக்கால் தமிழரசுக் கட்சி – சுதந்திரக் கட்சி உறவு முறிந்தது.

தமிழரசுக் கட்சி தமிழ் பிதேசங்களில் ஹர்த்தால், மற்றும் அறவழி சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தியது. இராணுவத்தைக் கொண்டு பல இடங்களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது அரசாங்கம். ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பலர் இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மார்ச் 4 ஆம் திகதியன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடத்திய சத்தியாக்கிரப் போராட்டத்தின் போது பொலிசார் கொடூரமான தடியடிப் பிரயோகம் செய்ததில் சத்தியாக்கிரகிகள் பலர் படுகாயமுற்றனர். அதில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் மரணமடைந்தார்.

சிங்களமயப்பட்ட அரசியல் அதிகாரம் அநீதி இழைத்தபோதேல்லாம், வாக்குறுதிகளை மீறிய போதெல்லாம் அகிம்சா வழியில் சாத்வீக போராட்டத்தின் மூலம் எதிர்ப்பை வெளியிட்ட தமிழர் தரப்புக்கு வன்முறைகளாலும், கலவரங்களாலும், படுகொலைகளாலும், அழித்தொழிப்புகளாலுமே பதில் கொடுத்தது சிங்கள அதிகார வர்க்கம். மீண்டும் மீண்டும் அதே பாணியில் தான் மிரட்டியது. எச்சரித்தது. 
துரோகங்கள் தொடரும்...
எஸ்.ஜே.வி.செல்வநாயகம்

ஐ.தே.க. நிராகரித்த, சுதந்திரக் கட்சி உடன்பட்ட வாக்குறுதி
30-3-1960இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் இறுதியில், அரசமைத்தற்குரிய பெரும்பான்மை பலம் இல்லாததால், இ. த. அ. க. வின் தயவை நாடித் தந்தை செல்வாவுக்கு நேசக்கரம் நீட்டிய ஸ்ரீ. ல. சு. க., ஐ. தே.க. ஆகியவற்றின் தலைவர்களுக்கு, இ. த. அ. க. சார்பில் அதன் தலைவர் தந்தை செல்வநாயம் விடுத்த குறைந்தபட்சக் கோரிக்கைகளே இவை.
பொதுத் தேர்தல் முடிவுகள் - இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக எமது கட்சியின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அங்கீகரித்திருக்கின்றார்கள் - என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுருக்கமாகக் கூறின் அவையாவன:- 
1. இன்றைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குப் பதிலாகத் தமிழ்பேசும் மக்களின் பிரதேச சுயாட்சியை ஏற்றுக் கொள்ளும் இணைப்பாட்சி முறை ஏற்படுத்தப் படவேண்டும்.
2. இந்நாட்டு ஆட்சி மொழியாகச் சிங்களத்துடன் சம அந்தஸ்து - தமிழ் மொழிக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும்.
3. இந்நாட்டிற் குடியேறியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் திட்டமிட்டுச் சிங்கள மக்களைக் குடியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.
ஆயினும், தங்கள் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எமது கட்சிப் பாராளு மன்றக்குழு ஆதரவு அளிக்கக்கூடியதாக - எமக்கிடையே உடன்பாடு ஏற்படக்கூடிய குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூறுமாறு எம்மைக் கேட்டதற்கிணங்க தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்குமென்று நாம் கருதும் நான்கு அம்சங்களை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். இவற்றை நாம் சமர்ப்பிப்பதனால், எமது அடிப்படைக் கொள்கைகள் எதையும் கைவிட்டு விட்டதாகக் கருதப்படக்கூடாது. 
எமக்கிடையில் உடன்பாடு ஏற்படும் விடயங்கள் - அரியணை உரையில் குறிப் பிடப்பெற்ற சட்ட நடவடிக்கை மூலம் மூன்று மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்:-
1. வடமாகாணத்திற்கு ஒரு பிரதேச சபையும், கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளும் தமக்குள் இணைந்து கொள்ளும் உரிமையுடன் நிறுவுவதன் மூலம் - வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கல், விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், நிலப் பங்கீடும் குடியேற்றமும், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில்களும் மீன்பிடித் துறையும், வீடமைப்பும் சமூகசேவையும், மின்சாரம், தண்ணீர்த் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்களையொட்டி - அதிகாரங்கள் சட்ட மூலம் வழங்கப்பட வேண்டும். பிரதேச அமைப்புக்கள் ஏற்படுத்தப்படும்வரை - மேற்குறிப்பிட்ட அரசாங்க உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்.
2. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் தேசிய மொழியாகச் சட்டரீதி யாகவும் நிர்வாக ரீதியாகவும் தமிழ் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும். இப்பகுதிகளில் வாழும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு - வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழகக் கல்வி உட்பட எல்லாக் கட்டங்களிலும் - தமிழ் மூலம் கல்வி கற்கும் இலங்கை முழுவதும் வாழும் தமிழ்பேசும் மக்களின் உரிமையும - தமிழில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகளின் மூலம் அரசாங்க சேவையில் சேரும் உரிமையும் - சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இலங்கையின் எப்பாகத்திலும் - எந்தத் தமிழ்பேசும் மகனும் - தமிழில் அரசாங்கத்துடன் கருமமாற்றவும், கடிதத் தொடர்புகொண்டு பதில் பெறவுமான உரிமை - சட்ட பூர்வமானதாக்கப்படவேண்டும். எல்லாச்சட்டங்களும், வர்த்தமானி அறிவித் தல்களும், அரசாங்க பிரசுரங்களும், அறிவிப்புகளும், படிவங்களும் தமிழிலும் இருத்தல் வேண்டும். 
3. 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் விதி 40) இல் - "நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்" என்பதும், விதி 5 (1)ம் நீக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து செய்யவேண்டிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
4. தோட்டத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை - பாராளுமன்றத்திற்கான ஆறு நியமன ஸ்தானங்களில் - நான்கிற்கு நியமிப்பதன் மூலம் - இம் மக்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவதுடன், அப்படி நியமிக்கப்படுவோர் - இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிறுவனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் தெரிவுசெய்யப் படுவோராக இருக்கவேண்டுமென்ற சம்பிரதாயம் ஏற்கப்படவேண்டும். 
மேற்கண்டபந்திகளிற் குறிப்பிடப்படாத விபரங்களும் ஏனைய அம்சங்களும் - அரசாங்கத்துக்கும் கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும்.
நன்றி - தினக்குரல்

காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன்


களுத்துறை ரிச்மன்ட் கோட்டை (Richmond Castle) என்று அறிந்திருப்போம். முதலியார் என்.டீ.ஆதர். த சில்வா விஜேசிங்க சிறிவர்தன (1889–1947) கட்டிய பிரமாண்டமான அரண்மனை. 42 ஏக்கர் பூங்காவுக்குள்  அமைக்கப்பட்ட இந்த அரண்மனை களுத்துறை நகரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் களுகங்கையின் ஓரத்தில் அழகான சூழலில் இருக்கிறது.

இன்று அது அரசாங்கத்தின் பொதுச் சொத்தாக ஆக்கப்பட்டு பல பாடசாலை மாணவர்களும், சுற்றுலா பிரயாணிகளும் தினசரி வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். சுவாரஷ்யமான கதைகளை உள்ளடக்கியது இந்த மாளிகை.

விஜேசிங்க அந்த காலத்தில் களுத்துறை மாவட்டத்துக்கு முதலியாராக இருந்தவர். மிகப் பெரும் பணக்காரர். அவரின் தகப்பானார் பல தோட்டங்களுக்கு சொந்தக்காரர். விஜேசிங்க இங்கிலாந்தில் கல்வி கற்றதன் பின்னர் மன்னரால் மகாமுதலியார் பட்டம் அளிக்கப்பட்டு இலங்கை திரும்பி அந்த பதவியை வகித்து வந்தார். 9 முதலிமார்களுக்கு மகா முதலியாக இளம் வயதிலேயே பொறுப்பு வகித்தார். களுத்துறை மாவட்டத்தில் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் பணியில் மூன்று தசாப்தகாலமாக பணியாற்றினார்.

இங்கிலாந்தில் பயின்ற காலத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று வந்த விஜேசிங்க தனது பள்ளித் தோழனான இந்தியாவைச் சேர்ந்த ராமநாதபுரம் மகாராஜாவின் அரண்மனைக்கும் விஜயம் செய்தார். அந்த அரண்மனையின் அழகால் ஈர்க்கப்பட்ட விஜேசிங்க முதலியாரும் அதே வடிவத்தில் ஒரு அரண்மனையைக் கட்ட விரும்பினார். இந்த ஆசையை மகாராஜாவுக்கு கூறியபோது. அது மிகப் பெரும் பொருட் செலவுடைய நிறைவேற்றமுடியாத கனவு என்றே கருதினார். விஜேசிங்க அந்த அரண்மனையின் கட்டட அமைப்புமுறைத் திட்டத்தை கேட்டபோது மன்னர் அதனைக் கொடுக்கவில்லை வேண்டுமென்றால் பார்த்து அதனை வரைந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார். ஆனால் திறமையான ஒரு கட்டடக் கலைஞனை அனுப்பி அதனை வரைந்து எடுத்தார் முதலியார்.

களுத்துறையில் கலுகங்கையோடு ஒட்டிய மிகவும் ரம்மியமான, அழகான சுற்றுச் சூழலைக் கொண்ட  42 ஏக்கர் பரப்பைக் கொண்ட காணியில் வேலையைத் தொடங்கினார். 


கற்கள், ஓடுகளை இந்தியாவிலிருந்தும், தேவையான தேக்கு மரங்கள் பர்மாவிலிருந்து ஒரு கப்பலில் வந்தது. ஜன்னல்கள், கண்ணாடிகளை இத்தாலியிலிருந்தும், குளியல் அறை, மலசல கூடம், போன்றவற்றை இங்கிலாந்திலிருந்தும் வருவித்தார். இந்திய இலங்கை கட்டடக் கலைஞர்கள் வந்து பணிகளை மேற்கொண்டார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த கட்டடப் பொருட்களை  கொழும்பிலிருந்து சிறு கப்பல்கள் மூலம் களுத்துறை ஊடாக கலுகங்கைக்குள் கொண்டு வந்து அரண்மனைக்கு அருகாமையிலேயே இறக்கியதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மகாராஜா கட்டுவதற்கு எடுத்த காலத்திலும் பார்க்க அரைவாசி காலமே இதனைக் கட்டுவிக்க மகாமுதலி விஜேசிங்கவுக்கு எடுத்தது.

இரண்டு மாடிகளைக் கொண்ட கலை நுட்பம் கொண்ட இந்த அரண்மனையில் 99 கதவுகளும் 34 ஜன்னல்களும் மேடையுடன் கூடிய பெரிய விருந்தினர் வரவேற்பு மண்டபமும் உள்ளது. மண்டபத்துக்கு அடியில் நிலத்துக்கு கீழ் சிறிய காற்றோட்டத்துக்காக ஒரு சிறிய சுரங்கம் தொடங்கி களுகங்கையில் முடிகிறது. அரண்மனைக் குளிர்படுத்துவதற்காக நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்கிற இந்த நுட்பத்தை அனைவரும் ஆச்சரியாமாக பார்க்கின்றனர்.

சூழ உள்ள தோட்டத்தில் பெருமளவு தென்னை மரங்கள் மட்டுமன்றி பல வகையான பழ மரங்களும், பூ மரங்களுமாக சோலையைப் போல இன்றும் உள்ளது.

இந்த அரண்மனையை பாதுகாக்க 40 படையினரை அமர்த்தும்படி அன்றைய பிரிட்டிஷ் அரச குடும்பம் கவர்னர் ஜோர்ஜ் அண்டர்சனை கேட்டுக்கொண்டது. 

அப்படி அவர் கட்டிய மாளிகை தான் இந்த ரிச்மன்ட் அரண்மனை. வாழ்க்கைத் துணைக்காக தனக்கு இணையான களுத்துறை மாவட்ட நீதிபதியின் புதல்வி கிலேரிஸ் மெட்டில்டா மௌடே சூரியபண்டார எனும் பெண்ணை விவாகம் செய்தார். 1910 ஆம் ஆண்டு  மே 10 அன்று அவரது திருமணத்தையும் வீடு குடிபுகுதல் விழாவையும் ஒரு சேர பெரும் விழாவாக எடுத்தார். 

இலங்கை முழுவதுமிருந்து பல தனவந்தர்களும், அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பிலிருந்து வருவதற்காக களுத்துறை வரை விசேட ரயிலில் பலர் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து அரண்மனை வரும் வரை களுத்துறை நகரத்தில் வீதியெங்கும் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான குதிரைகளும், மோட்டார் வாகனங்களும் பவனியுடன் அரண்மனைகு வந்தடைந்தபோது அவரை வரவேற்றவர்களில் ஒருவர் இப்படி ஒரு அரண்மை சாத்தியமில்லை என்று அன்று கூறிய அதே ராமநாதபுரம் மகாராஜா. குறுகிய காலத்தில் இப்பேர்பட்ட மாளிகையைக் கட்டிமுடித்ததில் அவர் மிகுந்த ஆச்சரியமடைந்திருந்தார்.

திருமணத்துக்காக 18 உயர கேக் வெட்டப்பட்டிருக்கிறது. முதலாவது உலக யுத்த காலத்தில் பிரித்தானிய படையினருக்காக அன்றைய காலத்தில் 2500 ரூபாவைக் கொடுத்ததற்காக இராணி சார்பில் அனுப்பப்பட்ட நன்றிக் கடிதம் இன்றும் இந்த அரண்மனையில் காணலாம். 

தனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழவென கட்டிய இந்த பெரிய மாளிகையில் அவர் மகிழ்ச்சியாக வாழவில்லை. குழந்தைகள் இல்லாதது மிகப் பெரும் ஏக்கத்தை அவருக்குத் தந்தது. வீட்டுப் பணியாளர் ஒருவருடன் மனைவி கொண்டிருந்த உறவு காரணமாக மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தார். தனது உயிலில் மனைவி உயிருடன் இருக்கும் வரை மாதாந்தம் 300 ரூபா பணமும் காணியில் விளையும் தேங்காயில் 250ஐயும் கொடுக்குமாறும் இந்த அரண்மனை உள்ளிட்ட அனைத்து சொத்தையும் அனாதைச் சிறுவர்களின் நலன்களுக்காக பொதுச்சொத்தாக 1941இல் உயில் எழுதிக் கொடுத்துவிட்டு கண்டி குயின்ஸ் ஓட்டலில் 77 ஆம் இலக்க அறையில் அவர் இறக்கும் வரை அங்கேயே தனிமையில் தங்கி வந்தார். 1947 ஆம் ஆண்டு அவர் இறக்கும் போது அவரது வயது 58.

இன்றும் இந்த அரண்மனையில் சில அறைகளில் அனாதைச் சிறுவர்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன. அச்சிறுவர்களின் தங்குவிடுதி அரண்மனைக்கு வெளியில் இருக்கிறது.

சில பொலிவூட் திரைப்படங்களும் இங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. விருதுகள் பெற்ற Vara: A blessing என்கிற படமும் அதில் ஒன்று.

விஜேசிங்க முதலியார் பற்றியும் இந்த அரண்மனை குறித்தும் பேச இந்த பத்தி போதாது. முடிந்தால் நேரில் சென்று ரிச்மன்ட் அரண்மனையை ஒருமுறை காணுங்கள். சென்ற வருடம் நான் சென்று பார்த்து விட்டேன்.

நன்றி - வீரகேசரி சங்கமம்



ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன்


மிக நீண்ட காலமாக(1962 ஆம் ஆண்டு முதலாக) இலங்கை கல்வி முறையில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிப்பவர்கள் ஆசிரிய ஆலோசகர்கள். இதுவரை இவர்களுக்கான சேவை ஒன்று உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான ஒன்றாகும். இச்சேவையின் அவசியம் குறித்து ஆராய்ந்த கல்வி அமைச்சர் ஆசிரிய ஆலோசகர்களுக்கான தனியான சேவையை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில், இச்சேவையைக் கொண்டு வருகின்றபோது பக்கச் சார்பற்ற நிலையில், குறிப்பாக ஆசிரிய ஆலோசகர்களின் தகைமைகளை      அடிப்படையாகக் கொண்டு நியமனம் வழங்க வேண்டியுள்ளது. குறைந்தது ஒரு வருடக் காலத்திற்கு மேலான சேவையில் உள்ளவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்கள் கல்வி அமைச்சருக்கும் செயலாளருக்கும் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றார். இச்சேவை கொண்டு வரப்படவேண்டும் என்பது கல்விச் சமூகத்தினரது எதிர்பார்ப்பாகும்.

"சமஷ்டி எனும் பயங்கரவாதம்" (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு– 4) - என்.சரவணன்


“சமஷ்டி என்கிற தங்கையைக் காட்டிவிட்டு ஈழம் எனும் அக்காவை மணமுடித்து வைத்தல்” இப்படித்தால் பிரபல இனவாத பத்திரிகையான திவயின ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. (02.08.2015)

புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்குமான தீர்வையும் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இன்றைய முயற்சியில் இத்தகைய பிரச்சாரங்கள் இதுவரையான ஒப்பந்தங்களையும், தீர்வுகளையும், உடன்படிக்கைகளையும் தோற்கடிக்கச் செய்தபோதெல்லாம் பின்புலமமைத்த சக்திகளும் அவற்றின் வியூகங்களும் தான் நினைவுக்கு வருகின்றன. இது அடுத்த துரோகத்துக்கான முன்னேற்பாடுகளா என்கிற ஐயம் நம்மெல்லோருக்குமே உண்டு.

இந்த சமஷ்டி பற்றிய இன்றைய ஒவ்வாமைக்கு தூபமிடப்பட்டது 1957 பண்டாரநாயக்கவால் தான். இலங்கையில் பண்டாரநாயக்கவை சமஷ்டியின் தந்தை என்பார்கள். (“Father of Federalism/Federal Idea” in Ceylon )

“ஆயிரத்தொரு எதிர்ப்புகள் சமஷ்டி முறைக்கு எதிராக எழலாம். ஆனால் அந்த ஆட்சேபனைகள் இல்லாது போகும் ஒரு சந்தர்ப்பத்தில் சமஷ்டி முறையே ஒரே தீர்வு என்பதை நாம் புரிந்து கொள்வோம். – 1926 இல் பண்டாரநாயக்க.

கண்டி தேசிய சங்கத்தில் 1927 இல் உரையாற்றும்போது அமெரிக்காவில் உள்ளதைப் போல ஒரு சமஷ்டி முறையே முன்மொழிகிறேன் என்றார்.

சமஷ்டி பீதி
சமஷ்டி பற்றிய சிங்கள மக்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிற பீதி இன்று நேற்றல்ல. பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய இரண்டும் ஒன்று சமஸ்டியை பிரேரிக்கும் போது மற்றது அதனை “நாடு பிரிக்கும் சதி” என்றே பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது. இந்த பிரசாரம் இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு நிறுவனமயப்பட்டிருக்கிறது. இன்று இரு கட்சிகளுமே ஒன்று சேர்ந்து சமஸ்டியை நிறைவேற்ற நினைத்தாலும் கூட அவர்களால் வளர்த்துவிடப்பட்ட “சமஷ்டி போபியா” அவர்களை விடப்போவதில்லை.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் போது தமிழீழத்துக்கு மாற்றாக சமஸ்டியை ஒப்புக்கொண்ட சிங்கள அரசு இன்று அந்த சொல்லை விபத்தாகக் கூடப் பாவித்து விடாதீர்கள் என்று மிரட்டும் நிலை தற்செயல் நிகழ்வல்ல. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமஷ்டியும் கூட “ஈழத்துக்கு” நிகரான பிரிவினைவாத பதமாக புனையப்பட்டு அந்த பதமும் அரசியல் அரங்கில் தீண்டத்தகாத சொல்லாக ஆக்கப்பட்டது வெறும் தற்செயல் அல்லவே.

தாம் பிரிவினைவாதத்தையோ (“அதிகாரப்பரவலாக்கம்”), பயங்கரவாத்தையோ (“உரிமைபோராட்டம்”), இனவாதத்தையோ (“தேசியவாதம்”) ஆதரிப்பதில்லை என்று பேரினவாதச் சூழலிடம் சத்தியம் செய்து கொடுக்கும் அவல நிலை தமிழர் அரசியலுக்கு உருவாகியுள்ளது. இது ஒரு கையறு நிலை மாத்திரமல்ல. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான பயங்கர நிலை.

தமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் சோல்பரி ஆணைக்குழுவுக்கு சமஷ்டி திட்டம் பற்றி 30.01.1945 அன்று மனு கொடுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணி நீக்கம் செய்த மூவரில் இருவர் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றவர் தந்தை செல்வா. ஆனால் அதே தந்தை செல்வா காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று 18.12.1949 அன்று புதிய கட்சி தோற்றுவித்தபோது அக்கட்சிக்கு சமஷ்டி கட்சியென்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார்.

தமிழில் இலங்கை “தமிழ்+அரசு” கட்சி என்று அழைக்கப்படும் அதே வேளை ஆங்கிலத்தில் «Federal party» (சமஸ்டிக் கட்சி) என்றே எப்போதும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1970 ஆண்டு பொதுத் தேர்தலில் கூட சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தே போட்டியிட்டது.  1977இல் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனித் தமிழீழத்துக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு பேராபத்தான சொல்லாக மாற்றப்பட்டிருப்பது சிங்கள சூழலில் மாத்திரமல்ல. தமிழ் சூழலிலும் தான். எங்கே தப்பித்தவறியும் அச்சொல்லை பயன்படுத்தினால் அதை வைத்தே தமக்கு எதிரான பிரச்சாரத்தை செய்தது விடுவார்களோ, குறைந்தபட்ச கோரிக்கைக்கும் ஆப்பு வைத்து விடுவார்களோ என்று தமிழ் அரசியல் சக்திகள் எண்ணுகின்றனர். அது போல் எங்கே சமஸ்டியை ஆதரித்து விட்டால் அதை வைத்தே தம்மை அரசியலில் ஓரங்கட்டிவிடுவார்களோ என்று சிங்களத் தரப்பும் எண்ணுமளவுக்கு அது அதிபயங்கரவாத சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது.

இனவாத நிர்பந்தத்தால் 1957 இல் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னரும் கூட 1960 இல் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு  தமிழரசுக் கட்சியிடம் ஸ்ரீ.ல.சு.க ஆதரவு கோரிய போது ஒரு உடன்பாடு காணப்பட்டது. அதனை தெளிவாக அடுத்த வாரம் பார்க்கலாம். ஆனால் சமஷ்டி என்கிற “பயங்கரவாத” பதத்தைக் கைவிடச் செய்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திட்டு வெளியே வரும்போது

1960 இரண்டு தேர்தல்கள் நிகழ்ந்தன. மார்ச் மாதம் நடந்த தேர்தல் முடிவில் டட்லி அரசு ஆட்சிமைப்பதை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி. இந்த ஆத்திரத்தில் மீண்டும் அதே வருடம் நடந்த ஜூலை தேர்தலில் டட்லி தலைமையிலான ஐ.தே.க இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கபோகிறது என்றும் நாட்டை தமிழர்களுக்கு விற்கப் போகிறது என்றும் பிரச்சாரம் செய்தது. ஸ்ரீ.ல.சு.க இந்த பிரசாரத்தை கண்டு பீதியுற்றது. தமக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்தவித உடன்படிக்கையும் இல்லை என்று இரங்கி கேட்டுக்கொண்டது. அறிக்கையும் விட்டது. மேடைகளிலும் முழங்கினர்.  இது போதாதென்று தமிழரசுக் கட்சியிடம் சென்று அப்படி ஒரு உடன்பாடும் இல்லை என்று உறுதிபடுத்தும் வகையில் அறிக்கை விடும்படி எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை வேண்டினர்.

இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு.க வுக்கும் இடையில் அப்படி ஒரு ஒப்புமில்லை உறவுமில்லை என்கிற சாரத்தில் ஒரு அறிக்கை விட்டு தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

அந்த அறிக்கையில் மார்ச் மாதம் நிகழ்ந்த சம்பங்களையும் கோர்வைபடுத்தி தமது நான்கம்ச கோரிக்கையை ஏற்க  டட்லி மறுத்ததையடுத்து டட்லிக்கு எதிராக வாக்களித்ததையும் விளக்கினார். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இல்லாமையால் தமிழரசுக் கட்சி அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. தாம் அரசாங்கம் அமைத்தால் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது தமிழர் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிடுவதாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு சுதந்திரக் கட்சியினர் கூறினார்கள். அது சரியாகப் பட்டதனால் சுதந்திரக் கட்சியுடன் எத்தகைய உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என்று செல்வநாயகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

1960இல் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? ஆட்சியமைத்ததும் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.

துரோகங்கள் தொடரும்...



சிலோனுக்கான சமஷ்டி முறை
1926ம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆற்றிய உரை
மாணவர் காங்கிரஸ் ஆதரவிலான கூட்டமொன்றில் சட்டத்தரணி ((Barrister- at-law)) எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா பி.ஏ. (oxon) ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக சமஷ்டி முறை’ என்ற தலைப்பில் சுவாரஷ்யமாக உரையாற்றினார். டாக்டர் ஐசக் தம்மையா தலைமையில் அந்தக் கூட்டம் நடந்தது. பண்டாரநாயக்காவின் முழுமையான உரை வருமாறு:
தற்போதைய காலகட்டத்தின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்வது அவசியம். 1928ம் ஆண்டு அரசியலமைப்பு மீளாய்வு செய்யப்பட உள்ளது. திருப்தியான அளவு கொண்ட சுயாட்சி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இதை உள்வாங்கி அரசியல் பிரச்சினையைக் குறித்து மிகத் தெளிவாக சிந்தித்து கிரகித்துக் கொள்வது அவசியமாகிறது. தற்போது நாம் எடுத்து வைக்கும் பிழையான அடியையோ முன்வைக்கும் தவறான பிரேரணையையோ பின்னர் சரிப்படுத்துவது கடினமாக இருக்கும். அவர்கள் சுயாட்சியை விரும்புகிறார்கள். எந்தளவு சுயாட்சி என்பது தான் இப்போதுள்ள கேள்வி.
கடந்த கால அரசாங்க மாதிரிகள் சுருக்கமாக கூறுவதென்றால் இரண்டு விதமான அரசாங்கங்கள் அப்போது இருந்தன. ஒன்று ‘நிந்தகம்’ என்ற பிரபுத்துவ அரசாங்கம். மற்றது கிராமத்து தலைவர் என்ற அமைப்பிலானது. பிரபுத்துவ அரசாங்கத்தில் கடன் தொகைகள் செலுத்தப்பட்டது வரையில் வேறொன்றைக் குறித்தும் அக்கறை இருக்கவில்லை. கிராமத்து தலைவர் என்ற அரசமைப்பில் கிராமமே தனிப்பிரிவாக கருதப்பட்டது. மன்னருக்கு நிலப்பரப்பு இருந்தது. அதற்குப் பொறுப்பான ஆட்கள் இருந்தனர். பல்வேறு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ‘கங்சபாவ’ என்ற மக்கள் சபையாக உருவாக்கப்பட்டன. அந்த கங்சபாக்கள் கிராமத்திலிருந்த ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் கொண்டிருந்தன. வழக்கு தொடுப்பவர்களுக்கு மன்னருக்கே மேன்முறையீடு செய்யும் உரிமை இருந்தது. பிரித்தானியர் சிலோனுக்கு வந்தபோது அவர்கள் அதிகாரம் முழுவதும் மத்தியில் குவிந்ததான அரசமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினர். அது சுதந்திரமான நிறுவனம் ஒன்றைப் போலிருந்தது. இப்போதும் கூட அது அதிகார தோரணையுள்ள அரசமைப்பாகவே இருக்கிறது.
சீர்திருத்தத்துக்கான கிளர்ச்சி1915ம் ஆண்டு வன்முறை இடம்பெற்றது வரையில் சீர்திருத்தத்துக்கான அரசியல் கிளர்ச்சி ஆரம்பமாகவில்லை.  அதில் சேர். பி. இராமநாதன் ஆற்றிய பெரும் பங்குபற்றி பண்டாரநாயக்கா குறிப்பிட்டார். சேர்.பி. அருணாசலம் தேசிய காங்கிரசை உருவாக்கினார். சீர்திருத்தத்துக்கான கிளர்ச்சி இயக்கத்தின் தந்தையும் அவர் தான். தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதும் சாம்ராஜ்யத்தினுள் சுயாட்சி என்ற நோக்கத்தையும் இலக்கையும் கொண்டதான உறுப்பையே அங்கத்தவர்கள் அனைவரும் ஆதரித்தனர். மேல் சபையில் ஒரு சில் ஆசனங்கள் கிடைத்ததைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை. அந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தவறான அடிப்படைகளில் நின்று கொண்டு இரண்டு திசைகளில் வாதிடுவதிலேயே தமது சக்தியை மையப்படுத்தினர். அந்த அரசமைப்பு பொருத்தமானது தானா என கேள்வி எழுப்பவில்லை. அடுத்ததாக, இங்கிலாந்தில் செயற்படும் மாதிரியான அரசமைப்பையே அவர்கள் இலக்காகக் கொண்டிருந்தனர். விளைவு தற்போதைய மேல் சபை. அப்போது மிகவும் சாதாரணமான ஒரு சபையாகவே இருந்தது. கோட்பாட்டு அளவில் அது மக்கள் சபையாக இருந்தாலும் உண்மையில் அதற்கு அதிகாரம் இருக்கவில்லை. பல விடயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பொறுப்பற்ற வெறும் அரசாங்க உறுப்பினர்களாகவே அவர்கள் இருந்தனர். நாட்டின் நிலப்பரப்பு தொடர்பான கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. இனங்கள் தொடர்பான கோட்பாடு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிதி விடயத்தில் மேல் சபைக்கு ஓரளவு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. நிறைவேற்று அதிகார பேரவை மேல் சபையிலிருந்து பிரிந்து பாடசாலை மாணவர்களின் விவாத அரங்கு போலக் காட்சியளித்தது. கடந்த சில வருடங்களாக நடந்த கிளர்ச்சிக்கு கிடைத்த பலன் இது தான். அதற்கு செலுத்தப்பட்ட விலை சிங்களவர் - தமிழர் என்ற பிரிவினை. தாழ்நிலப்பகுதி சிங்களவர் - கண்டிய சிங்களவர் என்ற பேதம். சிறுபான்மையினர் ஒருவரை ஒருவர் அவநம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கினர். அடிப்படையிலிருந்து அந்த வேற்றுமைகள் உருவாகவில்லை என நினைப்பது தவறு. ஒரு சிலர் மனதில் ஒரு நோக்கத்துடனேயே அந்தப் பிரிவினைகளை ஏற்படுத்தினர். அவர்கள் இறந்த பின் அந்தப் பிரிவினைகள் மறைந்துவிடும் என நினைத்தவர்களும் இருந்தனர். நூறு வருடங்களுக்கு முன்பு அவ்வாறான பிரிவினைகள் இருக்கவில்லை. காரணம் அப்போது இந்த நாட்டிலிருந்த சிங்களவர், தமிழர் தலைகளில் ஆங்கிலேயர் ஏறி அமர்ந்திருந்தனர். அரசாங்கத்தை தமது கரங்களில் எடுக்கப் போவதாக அவர்கள் கூறி வந்த கணப்பொழுதில் தான் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த கனல் வெளிவந்தது. சரித்திரத்தை படித்துப் பார்த்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தாலும் ஒன்று சேர வேண்டும் என்ற மனப்போக்கு அவர்களிடம் காணப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் தமது மொழியை, சடங்குகளை, மதத்தைப் பாதுகாத்தனர். அந்த வேற்றுமைகள் படிப்படியாக மறையும் என நம்பும் எவரும் அவசரத்தில் காரியம் செய்பவனாகவே இருப்பான்.
மத்திய அரசாங்கத்தின் தவறுகள் இதனை அடுத்து, உருவாகக் கூடிய சிக்கல்களைப் பற்றி பண்டாரநாயக்கா கோடிட்டுக் காட்டினார். எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் மேல் சபையானது பிரதமரையும் பல்வேறு அமைச்சர்களையும் தெரிவு செய்யும். தற்போது பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட அளவிலான அமைச்சர்கள் இருக்கின்றனர். அந்த அளவு தொடர்ந்தும் இருக்குமென்றால் அமைச்சரவையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு பிரதிநிதித்துவம் தமக்கு வேண்டுமென சமூகங்கள் வலியுறுத்தும். மத்திய அரசாங்கத்தில் ஒரே மாதிரியான இனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இலங்கையைப் போன்ற மோதல் சூழ்நிலைகளில் செயற்படும் அரசாங்கமொன்று உலகின் வேறெப்பாகத்திலாவது செயற்படுகின்றதா என எனக்குத் தெரியாது. இனரீதியான பரந்த வேறுபாடுகளைக் கொண்ட நாடுகளின் மத்தியில் அதிகாரம் குவிந்த அரசாங்கம் அமையுமென்றால் இவ்வாறான சிக்கல்கள் தான் உருவாகும்.
சமஷ்டி முறை சமஷ்டி முறையில் அந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் தானாகவே ஆட்சி செய்வதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இருப்பினும் அவை இணைந்த இரண்டொரு சபைகளாகி நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடும். அமெரிக்காவிலுள்ள அரசாங்கம் அப்படியானது தான். சுயாட்சி அதிகாரமுள்ள அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் இதே அரசமைப்புதான். இந்த விடயத்தில் சுவிட்சர்லாந்து, இலங்கைக்கு நல்லதோர் உதாரணம். அது சிறிய நாடாக இருந்தாலும் அங்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாட்டவர்கள் வாழ்கின்றனர். இருப்பினும், அங்கு சமஷ்டி முறை வெற்றியளித்திருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு அரச உப பிரிவும் தமது அலுவல்களை சுயமாகவே கவனித்துக் கொள்கின்றன. வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மேல்சபை கையாள்கிறது. சிலோனில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் சுயாட்சி வழங்க வேண்டும். நாட்டின் வருவாயைக் கையாள்வதற்கென இரண்டொரு மேல்சபைகள் இருக்க வேண்டும். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிப்பர். இருப்பினும், பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையான சமஷ்டி முறைதான் பொருத்தமானதாக இருக்கும் என்பது தான் தனது நம்பிக்கை என பண்டாரநாயக்கா கூறினார். சிறுபான்மை இனங்களுடன் தான் இன்னும் பணியாற்றத் தொடங்கவில்லை. ஏனென்றால் அவர்களுடைய தற்காலிக ஏற்பாடுகள் விசேட பிரதிநிதித்துவத்துக்கு பயன்படலாம். ஆனால், அந்த ஏற்பாடுகள் ஒரு சமூகம் இன்னுமோர் சமூகத்தை ஆதிக்கம் செய்கின்றது என்ற பயம் இருக்கும்வரை தொடர்ந்து இருக்கவே செய்யும். இதையே பண்டாரநாயக்கா கொழும்பு தமிழர்களுக்கான ஆசனம் தொடர்பான விடயத்திலும் தெரிவித்தார். எல்லா சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய அரசமைப்பொன்றை உருவாக்குவது கடினம். சமஷ்டி முறையே தீர்வு. இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதைவிட சிறந்த தீர்வுத்திட்டமொன்று எவரிடமாவது இருந்தால் அவர் அதை மக்கள் முன்பாக வைப்பார் என தான் நம்புவதாகவும் பண்டாரநாயக்கா தனது உரையில் மேலும் குறிப்பிட்டார். அவருடைய உரையை அடுத்து விறுவிறுப்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் எழுப்பப்பட்ட முக்கியமான விடயங்கள் பற்றிய சுருக்கமான விபரம் வருமாறு:
இலங்கையின் சரித்திரத்தில் ஆரம்ப கட்டத்தில் சமஷ்டி முறை எவ்வாறு செயற்பட்டது என திரு. சண்முகம் புரிந்து கொள்ளவில்லை. பிழையான எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி முறையை எவ்வாறு செயற்படுத்த முடியுமென கொடுக்கப்பட்ட விளக்கத்தையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. கொழும்பு ஆசனத்துக்குப் போட்டியிட முயற்சி எடுத்தபோது சேர்.பி. அருணாசலம் நடத்தப்பட்ட விதம் மற்றும் மேல் சபையின் உப தலைவருக்கான தேர்தலில் சேர் இராமநாதன் நடத்தப்பட்ட விதம் குறித்தும் அவர் உதாரணம் காட்டி பேசினார். சமஷ்டி மேல்சபையில் கூட வேற்றுமைகள் உருவாகும் என சுப்பையா கூறினார். ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் சமஷ்டி முறை பொருந்தும். மேல் மாகாண விடயத்தில் அதை எவ்வாறு செயற்படுத்துவது என ஜுலியஸ் பிலிப்ஸ் கேட்டார். ஜே.எச்.பி. விஜயரட்ணம் வருவாய் பற்றாக்குறையால் சில மாகாணங்களில் நிர்வாகம் செயற்படுவதில் சிரமம் இருப்பதை எடுத்துரைத்தார். மதம், சாதி சம்பந்தமான பிரச்சினைகள் வட மாகாணத்தில் தீவிரமாக காணப்படுவதால் அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என தான் அறிய விரும்புவதாகவும் பிலிப்ஸ் கூறினார். பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது என்ற விடயத்தில் மூவின மக்களுக்குமிடையில் தகராறு எழுந்தால் எண்ணிக்கையைக் கணக்கிலெடுக்கும் போது தாழ்நிலப்பகுதி சிங்களவர்களின் கை ஓங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களை அலட்சியம் செய்யக் கூடாதென சுப்பிரமணியம் கூறினார். இந்த சூழ்நிலைகளின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சியே பாதுகாப்பானது என பெய்லி மயில் வாகனம் சொன்னார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஏன் தொடர்ந்து இருக்க கூடாது. இதற்கு பதிலளித்துப் பேசிய பண்டாரநாயக்கா பின்வருமாறு கூறினார். மதப்பிரச்சினை சட்டத்தால் தீர்க்கப்பட வேண்டியது. நிதி சமத்துவமின்மை மிகப்பெரிய தடை. கல்விப்பிரச்சினையும் அப்படியானது தான். நிதி தேவைப்படும் மாகாணங்களிடையே பொது நிதியைப் பகிர்ந்தளிக்கலாம். இந்த விடயம் சர்ச்சை நிறைந்தது. கடைசியாகப் பேசியவர் நாம் ஏன் தொடர்ந்தும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கக் கூடாதெனக் கேட்டார். ஏன் இத்தனை பயமும், விவாதமும்? எந்த ஒரு நாடும் சுயாட்சியை விரும்பவில்லையென்றால் அது நாடாகவே இருப்பதற்குத் தகுதியில்லை. அப்படிப்பட்ட ஒரு நாடு நிர்மூலமாக்கப்பட வேண்டும். டாக்டர் ஐசக் தம்பையா பேசுகையில், பண்டாரநாயக்கவின் உரை நன்கு தயாரிக்கப்பட்டு செறிவுமிக்க வகையில் ஆற்றப்பட்டது. அது பெரும் ஆர்வத்தை தூண்டுமென தான் நம்புவதாகவும் சொன்னார். எனக்குத் தெரிந்தவரையில் சமஷ்டி முறை பிரிட்டிஷ மலாயாவில் தான் மிக நன்றாக செயல்படுகின்றது. சமஷ்டி முறை பற்றி சிந்திக்கும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளவர்களின் தலைவர்கள் மலாயா சென்று அங்கு அது எவ்வாறு செயற்படுகின்றது என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
இறுதியில் தரமானதோர் உரையை தெரிவு செய்ததற்காக மாணவர் காங்கிரசுக்கு டாக்டர் தம்பையா பாராட்டு தெரிவித்தார். சில காலங்களுக்கு முன்பு யாரோ ஒரு கனவான் கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசினார். இன்றிரவு பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் கொள்கைகளைப் பற்றிப் பேசினார். இதையடுத்து டாக்டர் தம்பையா உரையாளருக்கு நன்றியுரை ஆற்றினார்.
சிலோன் மோர்னிங் லீடருக்காக யாழ் செய்தியாளர்
*சிலோன் மோர்னிங் லீடர் (The Ceylon Morning Leader) பத்திரிகையில் சமஷ்டி பற்றிய பண்டாரநாயக்கவின் கட்டுரைகள் 1926 இல் மே – 19,27, யூன் 02,09,23,30, யூலை 17 வெளியானது. இது அந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை.
நன்றி - தினக்குரல்


"ஹியு நெவில்" (அறிந்தவர்களும் அறியாதவையும்) என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயர்களுக்கு பெரும் பங்குண்டு. தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிப் பாதுகாப்பது குறித்த பிரக்ஞையையும், ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்து விட்டு சென்றதில் அவர்களுக்கு இருக்கும் வகிபாகத்தை நாம் மறுக்க முடியாது.

இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாக நிறுவும் இனவாத போக்கிற்குக் கூட ஆதாரங்களை பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடித்தந்துவிட்டுச் சென்ற ஆதாரங்களில் இருந்து தான் புனைகின்றனர் என்பதை கவனித்தல் அவசியம். அந்த வரிசையில் ஹியு நெவில் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவை. புராதனம், அரசியல், வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்களுக்கு அவை அதி முக்கியமானவை.

1848 ஜூன் 19இல் பிறந்த ஹியு நெவில் (Hugh Nevill) 17வயதில் பிரதம நீதிபதியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்ற இலங்கைக்கு வந்து சேர்ந்தவர். பணிபுரிந்த காலப்பகுதியில் இலங்கை நிர்வாக சேவையில் லிகிதராகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதவானாகவும், திருகோணமலை அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருக்கிறார். 1865 – 1897 க்கு இடைப்பட்ட 35 வருட காலத்திற்குள் அவர் இலங்கை முழுவதும் தேடி கண்டு பிடித்த பல ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்தார். மொத்தம் 2227 ஓலைச்சுவடிகள் அதில் அடங்கும். சிங்களம், தமிழ், பாளி மொழிகளில் அவை உள்ளன. இலங்கையின் வரலாறு பற்றி அதுவரை அறியப்படாத அரிய பல உண்மைகள் அதன்பின்னர் ஸ்தூலமானது.

சிங்களவர்களின் வரலாறு மட்டுமல்ல மருத்துவம், கலை இலக்கியம் குறித்தும் பல குறிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக அவர் இந்த ஓலைகளை நம் நாட்டவர்களுக்கு விட்டுச் செல்லவில்லை. அவர் அத்தனையையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பிரான்சுக்கு கொண்டு சென்றார்.

10.04.1897 இல் அவர் பிரான்சில் மரணமானார். 1904 ஆம் ஆண்டு அவர் தொகுத்த ஓலைச்சுவடிகளை பிரிட்டிஷ் நூதனசாலை விலைக்கு கொள்வனவு செய்தது. அவை சிங்களவர்களின் ஓலைச்சுவடித் தொகுப்பு (Catalogue of the Hugh Nevill Collection of Sinhalese Manuscripts in the British Library) எனும் பேரில் அல்லது “Hugh Nevill collection” எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. Or. 6606 (54) and Or. 6606 (139) ஆகிய இலக்கங்களின் கீழ் அவற்றை அங்கு காண முடியும். இவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான அனுசரணையை பிரிட்டிஷ் நூலகம் வழங்கி வருகிறது. ஓலைச்சுவடிகளை பட்டியல்படுத்தி விளக்கும் இரண்டு தொகுதி நூல்களை அவர் எழுதியிருந்தார். ஆனால் அது வெளிவருவதற்குள் அவர் மரணமானார். பின்னர் கே.டி.சோமதாச அவற்றைக் கொண்டு ஏழு தொகுதிகளாக பாளி எழுத்துச் சங்கத்தின் மூலம் (Påli Text Society) வெளியிட்டார்.

அண்மையில் பிரபல சிங்களத் தேசியவாதியான நளின் த சில்வா “நெவில் கொண்டுபோய் சேர்த்த நமது ஓலைச்சுவடிகளை பிரித்தானிய மகாராணியிடம் பேசி மீளப் பெற்றுத் தருவாரா ஜனாதிபதி மைத்திரி” என்று வினவியிருந்தார் அவரது இணையத்தளத்தில். (09.09.2016)

இலங்கை பற்றி மட்டுமல்ல, இந்தியா பற்றியும், சிங்களவர்கள், தமிழர்கள் பற்றியும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்ததில் அவரது பாத்திரம் முக்கியமானது. இவற்றைக் கொண்டு நெவில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இன்றும் வரலாற்றாளர்கள் பலர் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையில் இந்த ஆதாரங்களை அவரவர் தத்தமகேற்றாற் போல் பயன்படுத்தி வருவதை பல நூல்களின் வாயிலாகவும், கட்டுரைகளின் வாயிலாகவும் அறிய முடிகிறது. குறிப்பாக இது சிங்கள பௌத்த நாடு தான் என்பதைப் புனையவும் கூட நெவில் கண்டெடுத்த இந்த ஆதாரங்களில் உள்ள தமக்கு வசதியான பகுதிகளை மாத்திரம் திரித்துப் பரப்புவதை நிறையவே காண முடிகிறது. அதுமட்டுமன்றி மத்திய கால சாதிகள் பற்றியும், காப்பிலி இனத்தவர், பறங்கியர், வன்னி மக்களின் அரசு (பனையோலைச் சுவடிகள்) மற்றும் அம்மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்தும், வேடுவர்கள் பற்றியும் எழுதும் பலரும் கூட நெவிலின் தொகுப்புகளை கையாள்வது வழக்கம்.

அவர் கண்டெடுத்த ஒலைச்சுவடிகளில் 931 சுவடிகள் கவிதை வடிவத்திலானவை. அவற்றை பிற்காலத்தில் பீ.ஈ.பீ.தெரணியகல “சிங்கள கவி” என்கிற பெயரில் வெளியிட்டார்.

இவற்றில் “இலங்கையில் போர்த்துக்கீச கிரியோல் மொழி சுவடிகள்” என்கிற ஆய்வு (the Sri Lanka Portuguese Creole Manuscript) முக்கியமானவற்றுள் ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலத்திலும் அதற்குப் பின்னரும்  (16-19 நூற்றாண்டுகள்) சுமார் 350 வருடங்கள் இந்த கிரியோல் மொழி இலங்கையின் மூன்றாவது மொழியாக இருந்து வந்திருக்கிறது. பறங்கி மொழி என்றும் அழைப்பார்கள். இந்த சுவடிகளில் 1,049 சுவடிகளை மொழிபெயர்த்த ஷிஹான் டீ சில்வா அவற்றை மூன்று பகுதிகளாக வகுத்தார்.

1. மட்டக்களப்பு போர்த்துகீச பாடல்கள்
2. போர்த்துகீச கப்ரிங்கா பாடல்கள் (நீக்ரோ பாடல்கள்)
3. ஓர்சோன், வேலன்டீனா கதை

இவை இன்றும் கலை வடிவங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பாடாசலைகளில் வரலாற்று பாடநூல்களில் நெவில் மற்றும் அவரது வகிபாகம் பற்றியா விபரங்களும் கற்பிக்கப்படுகின்றன. க.பொ.த பரீட்சை வினாத்தாள்களிலும் அவர் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றன.

அனுராதபுரத்தில் எல்லாளனின் சமாதிக்கு நேர்ந்த கதி என்ன என்பது குறித்து தொல்பொருள் -வரலாற்றாசியர்கள் பலருக்கு இடையில் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்களில் நெவிலின் ஆவணங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. 

இவற்றிலுள்ள உண்மைகளை காய்தல் உவத்தலின்றி வெளிக்கொணரவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ் அறிஞர்களுக்கு உண்டு.

மகாவம்சத்தில் வரும் எல்லாளன் – துட்டகைமுனு போரில் எல்லாளனைக் கொன்று ஆட்சிபுரிந்து பின்னர் இறந்த துட்டகைமுனுவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த சர்ச்சை இன்றும் பல விவாதங்களுக்குள் சிக்கியுள்ளது. அந்த சர்ச்சைகளுக்கு ஒரு காரணம் நெவிலின் கண்டுபிடிப்பும் கூட. நெவில் கண்டுபிடித்தவற்றில் சிங்கள நாட்டுப்புற பாடல்களில் இது பற்றி அறியக் கிடைக்கின்றன. 

துட்டகைமுனு நான்கு நாகக்கன்னிகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் அதனால் திசாவெவ பகுதியில் நாகம் தீண்டி விஷமேறி துட்டகைமுனு இறந்ததாகவும் மரபுவழி வந்த நாட்டுப்புற சிங்களப் பாடல் ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டுள்ளது. சிங்களவர்களின் புனிதக் காவியத் தலைவனாக போற்றப்படும் துட்டகைமுனுவின் இறப்புக் காரணத்தை ஒழித்து மறைத்து விட்டு ஏனைய இனங்களுக்கு எதிரான கருத்துகளை மட்டும் கையாளும் போக்கே இன்று எஞ்சியுள்ளது.

இலங்கை குறித்து ஆய்வு செய்தவர்களிலேயே ஒரு பல்துறை சார்ந்த ஆய்வாளராக ஹியு நெவில்  ஒருவரையே குறிப்பட முடியும். மானுடவியல், தொல்லியல், தாவரவியல், இனப்பண்பாட்டியல், நாட்டுப்புறக் கதைகள், புவியியல், நிலவியல், வரலாறு, புராணம், பாளிச்சுவடித்துறை, வரலாற்றாய்வின், மற்றும் விலங்கியல் என அனைத்து துறையிலும் அவர் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். எனவே தான் அவரது கண்டுபிடிப்புகளும் இத்தனை ஆளுமையையும் உள்ளடக்கிய பலமான மூலமாக இன்று நம்மிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 5) - திலக்

 கடந்த வாரம் முள்ளுத்தேங்காய் 4 ல் மொனராகலை பற்றி பேசுவோம் எனகுறிப்பட்டதனால் 'முள்ளுத் தேங்காய்க்கும் மொனராகலைக்கும் என்ன தொடர்பு ' எனும் கேள்வியை இந்தத் தொடர் எழுத காரணமாக இருந்தவர்களில் ஒருவரான லுணுகலை ஶ்ரீ எழுப்பியிருந்தார். கூடவே 'இத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியில் ஒரு தொடரை அதுவும் முள்ளுத் தேங்காய் எனும் யாரும் அறிந்திராத ஒரு விடயம் பற்றி எழுதுகிறீர்களே.... அதுபற்றி கொஞ்சம் பேசவேண்டும்' என மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தொடர்பில் வந்தார்.

மேல் எழும்பிய இரண்டு கேள்விகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் பதில் வழங்கியிருந்தாலும் எல்லோருக்குமாக அந்த பதில்களை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமானது. முதலில் தெளிவத்தையாரின் கேள்விக்கான பதில்.

மலையக சமூகம் பெருந்தோட்டத்துறைத் தொழிலை பின்புலமாகக் கொண்டு உருவான ஒரு சமூகம். ஆரம்பத்திலேயே (பாகம் 1) தென்னைத் தொழிலில் இருந்து எப்படி நாம் ஓரம் கட்டப்பட்டோம் என்பதை குருநாகல் - குளியாப்பிட்டிய எல்லைக் கிராமத்தில் என்க்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்திருந்தேன். இன்னும் விரிவாக அந்த மலையக மக்களின் 'தென்னை' வாழ்க்கைப் பற்றி எழுத வேண்டியுள்ளது. 'தேயிலை' வாழ்க்கை பற்றி எழுதிய மலையக இலக்கியம் 'றப்பர்' வாழ்க்கை பற்றி மிக குறைவாகவும், 'தென்னை' வாழ்க்கைப் பற்றி அறவே எழுதாமலும் விட்டிருக்கிறது. ஆய்வாகவோ, அல்லது புனைவாகவோ மலையக மக்களின் வாழ்க்கைக் கோலம் தொழில்சார்ந்த சூழலில் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தென்னைத் தொழில் சார்ந்து 'தென்னை ஓலைகொண்டு வேயப்பட்ட ஒரு லயம்' தொடர்பில் இதுவரை நான் வாசித்ததில்லை. ஆனால் அப்படியான லயங்களும் அதுசார்ந்த வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். நம்மவர்கள் அங்கு தேர்தல் காலத்தில் சென்று போட்டியிட்டு 'வாக்கு' கேட்டிருப்பது எனக்கு நினைவிருக்கிறது. அது குருநாகல் மாவட்டம். இப்போது கூட அத்தகைய 'தென்னை ஓலை வேயப்பட்ட கூரை லயங்களுக்கு' என்னை அழைத்துச் செல்ல தயாராகிறார் இளம் எழுத்தாளரும் ஆய்வாளருமான சுப்பையா கமலதாசன். விரைவில் அங்கு பயணம் செய்து அத்தகைய 'தென்னை ' மலையக வாழ்க்கைப் பற்றி பதிவுகளைத் தருகிறேன்.

இப்படியான ஒரு பதிவுதான் மொனராகலை பற்றியதும். மொனராகலை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 15000 மலையகத் தமிழ் மக்கள் வாழக்கூடும். ஆனால் அவர்களின் வாழ்க்கை மட்டத்தை பார்க்கின்றபோது பெருந்மோட்டக் கைத்தொழிலுக்காக அங்கு அழைத்து வரப்பட்டு சில பகுதிகளில் றப்பர், சில பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டு பின்னாளில் கைவிடப்பட்டு இப்போது மக்கள் வாழ வழியின்றி அன்றாடம் காய்ச்சிகளாக, அடிமைகள் போன்று கூலிகளாக நகரங்களில் மூடைத் தூக்குபவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள். இந்த மொனராகலை மலையகத் தமிழ் மக்கள் நோக்கிவந்த ஒரு ஆபத்தை மலையகத்தின் எல்லை மாவட்டங்கள் தோறும், அல்லது பிரதான மாவட்டங்களின் எல்லைக்கிராமங்கள் தோறும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த ஆபத்து என்னவெனில்  மலையக எல்லை மாவட்டங்களான களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, மொனராகலை, கண்டியின் சில பகுதி (உன்னஸ்கிரிய, திகன, கலபட, ஹப்புகஸ்தன்ன) நுவரெலியாவின் சில பகுதி (உடபுசல்லாவை, ஹங்குரங்கத்தை) பெருந்தோட்டத்துறை சார்ந்த தேயிலை அல்லது இறப்பர் தொழில் இன்றைய காலத்தில் அடைந்திருக்கக் கூடிய நிலைமைகளை அவதானத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

அண்மையில் கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சப்புமல்கந்தை, அம்பன்பிட்டிய, வரக்காப்பொல, கந்தலோயா போன்ற பிரதேசங்களில் பெருந்தோட்டக்கைத்தொழில் வேகமாக கைவிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருப்பதையும் அதனால் மலையக தமிழ் மக்கள் ஜீவனோபாயம் கருதி வெளியேறிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இதனைப் புள்ளிவிபரங்களுடன் விபரிப்பதற்கு இரத்தினபுரி சார்ந்து அரசியல் செயற்பாட்டாளரான ஆசிரியர் சந்திரகுமார் தயாராகவே உள்ளார். கந்தலோயா எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டத் தோட்டம் இப்போது பெருந்தோட்டக் கைத்தொழில்களை இழந்து, இருக்கின்ற ஒரு தமிழ்ப் பாடசாலையை மாத்திரம் மையமாக வைத்து இயங்கும் குறைந்துசெல்லும் சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாக மாறிவருகிறது.

இவ்வாறு பெருந்மோட்டக் கைத்தொழிலில் இருந்து நமது மக்கள் ஓரம்கட்டப்பட்டு வரும் சூழலில் செயற்கையான ஒரு இடப்பெயர்வுக்கு மலையக பெருந்தோட்ட சமூகம் உள்ளாகி வருகிறது. இவ்வாறு இடம்பெயர்ந்து செல்வோர் எங்கு போகிறார்கள் எனக்கேட்டபோது 'அங்கங்க எங்கேயோ' போய்சேருகிறார்கள் எனும் பதிலே கிடைக்கப்பெறுகிறது. இதே மறுபக்கத்தில் மரபு ரீதியாக இருந்துவந்த தென்னை, றப்பர், தேயிலை எனும் பெருந்தோட்டப் பயிர்களுக்குள் 'முள்ளுத் தேங்காய்த் தொழில்' (பாம் ஒயில் ) வேகமாக பரவி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் பாம்ஒயில் அறிமுகமாகும் போது அங்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்திருக்கிறது. அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், பாம் ஒயில் கைத்தொழிலுக்கு ஒத்துழையாமை போராட்டம் செய்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கு 'மேலை மலையகம்' எந்தவகையிலும் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை. மேலும் சொல்லப்போனால் பாம் ஒயில் உற்பத்தி சார்ந்து பெருந்தோட்டக்கைத்தொழில் மாற்றப்பட்டு வருவதை இப்போதுதான் 'மேலை மலையகம்'  உணரத்தொடங்குகிறது என்று கூட சொல்லலாம்.  அதற்கு தெளிவத்தையாரே சாட்சி பகர்ந்தார். 'நான் இடையிடையே வீட்டுப்படம் பாவனைக்கு பாம் ஒயில் வாங்குகிறேன்' என தெளிவத்தையார் கேட்டு இன்னுமொரு ஆய்வுத் தேவையையும் வலியுறுத்திச் சென்றுள்ளார்.

இந்தக் கைத்தொழில் தொழில் மொனராகலை நோக்கித் தாவும் அபாயம் இருப்பதை உணர்ந்தே மொனராகலை மாவட்ட நிலைமைகள் குறித்து முன் கூட்டிய ஒரு பார்வையை தர முனைகிறேன். களுத்முறையில் மக்கள் பாம் ஒயில் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்தபோது கம்பனிகள் அவர்களை அழைத்துச்சென்று காலியில் மேற்கொள்ளப்படும் தோட்டங்களைக்காட்டி சமாதானம் செய்யப்பட்டதுபோல் களுத்முறையைக் காட்டி மொனராகலை சமாதானம் செய்யப்படலாம். இதில் உள்ள அச்சமே பாம் ஒயில் (முள்ளுத் தேங்காண்ணை) உற்பத்தி முறை, அதனால் சூழலுக்கு உண்டாகப்போகும் ஆபத்துகள், அதில் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் சமூக ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை முன்கூட்டி அவசியமாகிறது. மலேசிய நாட்டில் இந்தக் கைத்தொழில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்ற அடிப்படையில் அங்கிருந்து படிப்பினைகளை நாம் பெறவேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த அத்தியாயம் இங்கிலாந்தில் நிற்கும் நாளில் எழுதப்படுகின்றது. இது ஒரு உணர்வு பூர்வமான பகுதியாக கூட அமைகிறது. விமானத்தில் வரும்போது '12  years a slave"  ( அடிமையாக 12 வருடங்கள்) எனும் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. சொலமன் பிளட் எனும் கறுப்பினத்தவர் அமெரிக்க பருத்திக் காட்டுத் தொழிலுக்கு நயவஞ்ச்சகமாக அவரின் சமூகத்துடன் இணைத்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எவ்வாறு அடிமைகளாக நடாத்தப்பட்டார்கள் என்பது பற்றி இந்தத் திரைப்படம் விபரிக்கின்றது. சொலமன் படித்த நாகரீகமான சமூக உறுப்பினராக இருக்கின்ற நிலையில்தான் அந்த நயவஞ்சக வலையில் தானும் வீழ்ந்து தனது சமூகத்தின் ஒருபகுதியையும் பலிகொடுத்து அடிமையாகிறார். 12 வருட அடிமை வாழ்வின் பின்னர் தனது விடாமுயற்சியால் அங்கிருந்து வெளியேறி ஊர்திரும்பும் சொலமன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நூலாக எழுதி அதுவே திரைப்படமாக வெளிவந்து இருக்கிறது.  முதன்முதலாக 'இங்கிலாந்துக்கு ' பயணிக்கையில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது, நமது மக்கள் அழைத்து வரப்பட்டதையும் அவைகுறித்த பதிவுகளின் அவசியத்தையும் உள்ளூற உணர்த்தியது. இப்படித்தானே இருநூறு வருடங்களுக்கு முன்னர் எம்மவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். இந்தப் படத்தின் எழுத்தோட்ட ஆரம்பத்தில் இந்த திரைப்படம் வன்முறைகளை காட்டுவதால் சிறுபிள்ளைகள் பார்வையிடுவதில் கவனம் தேவை என ஒரு எச்சரிக்கை செய்யப்படுகின்றது. நமது தமிழ் திரைப்படங்கள் காட்டும் வன்முறைகளுடன் ஒப்பிடும்போது அங்கு காட்டப்படும். வன்முறைகள் ஒன்றும் பாரியதாக தெரியவில்லை. 12 மணித்தியாலம் விமானத்தில் அமர்ந்தாகவேண்டிய நிலையில் கூடவே 'பூலோகம்' (இயக்கம் இரவிச்சந்திரன்இ கதாநாயகன் ஜெயம் ரவி) எனும் புதிய தமிழ்த் திரைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. வழமையான கோமாளித்தனங்கள் இருந்தபோதும் கூட இறுதிக்கட்டத்தில் அந்த பூலோகம் விடும் எச்சரிக்கை மிக முக்கியமானது. நம்மைச்சூழ நிலவும் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் ஒரு அரசியல் பின்புலம் இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்பது  வலியுறுத்தப்படுகின்றது.அந்த காட்சிக்காக இங்கே பூலோகத்தை பரிந்துரைக்கிறேன். இயக்குனர் 'பூலோகம்'(Global) என கதாநாயகனுக்குப் பெயரிட்டு ஒரு குறியீட்டை முன்வைக்கிறார்.

இங்கே எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் விபரங்கள் கூட சொலமன் பிளட் எழுதிவைத்துவிட்டு சென்றது போன்ற ஒரு நோக்கம் கருதியதுதான். நமது மலையக மக்களின் வரலாறுகள் பற்றி புனைவுகளும், அபுனைவுகளும் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை எல்லாம் வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு சமூக பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படல் வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடுதான் இந்த தொடரும் கூட முன்வைக்கப்படுகின்றது. டொனவன் மோல்ரிச் சின் bitter berry bondage  நூலை இங்கே லன்டனில் திரு. காதர் அவர்களின் நூலகத்தில் தொட்டுப்பார்க்க கிடைத்தது. கூடவே பி.ஏ.காதர் மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்' நூலையும் கூட பல ஆண்டுகளுக்கும் பின்னர் அவர் கரங்களில் தர தொட்டுப்பார்க்க கிடைத்தது. தொழிற்சங்கவாதி எஸ்.நடேசன் எழுதிய "history of upcountry Tamils in Sri Lanka  நூல் பற்றிய ஞாபகமூட்டல் நிகழ்ந்தது. காரணம், "Endless Inequality" - the rights of the plantation Tamils in Sri Lanka  எனும் நூல் லன்டனில் வெளியாகி இருக்கிறது. யோகேஸ்வரி விஜயபாலன் எனும் சட்டத்தரணி அந்தப் பெரிய புத்தகம் ஒன்றை எழுதும் தேவை வெறுமனே எழவில்லை. இப்படி சர்வதேச ரீதியாக பேசப்படவேண்டிய எழுதப்பட வேண்டிய பல்வேறு மலையக விடயங்கள் நம்மிடையே விரிந்து கிடக்கிறது. களுத்துறை முள்ளுத்தேங்காய்த் தோட்டங்களில்  சிதறும் கொட்டைகளை நமது தொழிலாளர் மக்கள் பொறுக்கிச் சேர்த்து பையிலிடுவதுபோல சர்வதேசம் எங்கும் சிதறிவாழும் மலையக உணர்வாளர்கள் ஒன்று திரட்டி உணர்வு பெறவேண்டிய காலத்தில் இந்த முள்ளுத்தேங்காய் நமது சூழலுக்குள் பெருந்தோட்டக் கைத் தொழிலாக உள்வருவதை நாம் அவதானமாக கையாளவேண்டியவர்களாக உள்ளோம். அதுவரை மீண்டும் தலைப்பை வாசிக்க... தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத் தேங்காய் எண்ணைக்கு ...

(உருகும்)
முழுமையாக நூலை வாசிப்பதற்கு...

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக உங்கள் ஒத்துழைப்பை கோருகின்றோம்

மக்கள் தொழிலாளர் சங்கம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள எழுத்தானை வழக்கானது தனித்து எனதோ அல்லது எமது சங்கத்தின் முயற்சி என்றும் மட்டும் நாம் பார்க்கவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வழக்கிட வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய மற்றும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிப்பராயம் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் சார்பாகவே நாம் வழக்கிட்டுள்ளோம் என்று கருதுகின்றோம்.

வழக்கின் தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அமையாவிட்டாலும் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் அவசியமாகும். தீர்ப்பு சாதகமாக வருமிடத்து புதிய கூட்டு ஒப்பந்த்தை செய்ய கம்பனிகளையும் தொழிற்சங்களையும் நீதிமன்றம் நிர்ப்பந்திக்கும். இச் சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க தொழிலாளர்களும் தொழிலாளர் சார்பு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தனிநபர்கள் முன் வர வேண்டும். அதேபோல் தீர்ப்பு சாதமாக அமையாத விடத்தும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகுந்த தயாரிப்பு அவசியமாகிறது.

பாக்கி சம்பளம் மறுப்பு, சம்பள உயர்வு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இருந்தமை கால வரையறையின் பேணுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளமை, நுணுக்கமான முறையில் முன்னர் பெற்ற 620 நாட்சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை சேர்த்துள்ளமை, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் வெளியாள் உற்பத்தி முறை சேர்த்துள்ளமை போன்ற விடயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் அதேவேளை அவர்களை நவீன அடிமைகளாக ஆக்கும் முயற்சியின் விளைவாகும்.

இது வரை அனுபவித்த உரிமைகளையும் இழந்து தொழிலாளர் நவீன அத்தக்கூலிகளாக ஆக்கும் முயற்சிகள் இன்றை ஆளும் வர்க்கங்களாலும் அதற்கு துணை போகும் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தின் ஒரு ஆரம்ப நிலை நடவடிக்கையே வழக்கு நடவடிக்கையாகும். எனவே, வழக்கு நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் அவர்களின் இருப்பை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மீது அக்கறைக் கொண்டவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

வழக்கு நடவடிக்கைகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அரசியற் கட்சி பேதமின்றி எமக்கு ஆதரவை வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் உரிமையில் அக்கறைக் கொண்ட மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகள், தனி நபர்கள் தங்களால் வழங்க கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு செயற்படுவதற்கு இனியும் தாமதிப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான அரசாங்கம், கம்பனிகளிடத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுவிடுவதாக அமைந்து விடும்.

எனவே, கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளுக்கு உங்களால் வழங்ககூடிய ஒத்துழைப்புகளை எமக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு 071-4302909/071-6275459
நன்றி
சட்டத்தரணி இளையதம்பி தம்பையா
பொதுச் செயலாளர் 
மக்கள் தொழிலாளர் சங்கம்.

1957 காட்சிகள் மீண்டும் 2017இல் - (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 3) -என்.சரவணன்


"கூடியவிரைவில் நான்கைந்து சோமராமக்கள் இந்த நாட்டில் உருவாகப் போகிறார்கள்."
என்று ஞானசார தேரர் இப்போது மிரட்டியிருகிறார். (“அத” பத்திரிகை -09.02.2017)

சென்ற வருடம் ஜனவரி 26 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “இந்த நாட்டில் புத்த ரக்கித்த, சோமராம போன்றோருக்கு எந்த இடமும் கிடையாது” என்று  பாராளுமன்றத்தில் கூறினார். ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்த போது தான் இந்த கருத்தை அவர் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அது சரி இந்த சோமராம யார்? அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிக்குதான் சோமராம தேரர்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் விளைவாக பண்டாரநாயக்கவை கடும்போக்கு சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை கிழித்தெறியச் செய்ததோடு நிற்காமல் பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார் பண்டாரநாயாக்க.
சோமராம தேரோ சிவில் உடையில் நீதிமன்றத்திலிருந்து வெளிவரும் போது

இன்று இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மீண்டும் அதே சமஷ்டி யோசனைகளும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஏற்பாடுகளில் முன்வைக்கப்பட்டு வருகிறது. உயிரைக் கொடுத்தென்றாலும் அதனை செய்ய விட மாட்டோம் என்கிற குரல்கள் இனவாத தரப்பிலிருந்து கடுமையாக எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சகல பௌத்த நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் ஒருமித்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக வடக்கு - கிழக்கு இணைப்பு. சமஷ்டி (அல்லது அதற்கொத்த தீர்வு) என்பவற்றை எதிர்த்தே தீருவோம் என்று உறுதியாக உள்ளார்கள். நாடெங்கிலும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்தி பிரச்சாரங்களையும் முடுக்கி விட்டுள்ளார்கள்.

சமீபகாலமாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சிங்கள இனவாதிகளால் உருவாகியுள்ள உயிர் அச்சுறுத்தல் பற்றி நாம் அறிந்ததே.

இந்த பின்னணியில் இருந்து தான் ஞானசார தேரர் “சோமராம” உருவாகப் போகிறார்கள் என்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்.

இன்று இந்த தீர்வு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சதிக்கு பின்னால் நின்று தலைமை தாங்குவது மகிந்த ராஜபக்ஷ. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் பின்னின்று தலைமை தாங்கியது ஜி.ஆர்.ஜெயவர்த்தனா. சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஜே.ஆர் அளித்த பேட்டியொன்றில் (28.07.89 திசை பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது) ஏன் அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “முதற் தடவையாக அதில் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்க பண்டாரநாயக்க முயற்சித்தார்.” என்றார்.

“சமஷ்டி”, “வட-கிழக்கு இணைப்பு” என்பது சிங்களவர்களுக்கு தீண்டத்தகாத பேசுபொருளாகவும் அரசியல் சொல்லாடலாகவும் இன்று வளர்ந்துவிட்டுள்ளது. அதே சமஸ்டி உள்ளடக்கத்தை வேறு ஒரு பெயரில் அரசியல் அரங்கில் பயன்படுத்துவோம் இல்லையென்றால் தொடங்குமுன்னே முடித்து விடுவார்கள் என்று முனகும் பலரை நாம் இன்றும் காண முடியும்.

கடந்த 99 வருடகாலமும் நம்பிக்கைத் துரோகங்களினாலும், நம்பவைத்து கழுத்தறுத்த அரசியல் வரலாறு நிகழ்ந்த போதெல்லாம் சிங்கள தரப்பில் பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் வெற்றிகண்டுள்ளது. அதன் தொடர்ச்சியே 1957 சம்பவங்கள். 60 வருடங்களுக்குப் பின்னர் அன்று நடந்த காட்சிகள் அனைத்தையும் இன்றைய அரசியல் களத்தில் காண்கின்றோம்.

அன்று கிழித்தெரியப்பட்டதைப் போல இன்று யாப்பு கைவிடுவது தான் பாக்கி.

பண்டா செல்வா ஒப்பந்தம் = புதிய அரசியல் யாப்பு
ஜே.ஆர்.ஜெயவர்த்தன = மகிந்த
பண்டாரநாயக்க = மைத்திரிபால
சோமராம = ஞானசார?

“தர்ம யுத்தம்”
1956 அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தை “தர்ம யுத்தம்” என்றே பெயர் சூட்டியிருந்தனர் சிங்கள பௌத்த தரப்பினர். பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு”  என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்”  என்றே அழைக்கிறார்.

1956 ஆம் ஆண்டின் பௌத்தம் புத்துணர்ச்சியையும், எழுச்சியுணர்வையும் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வருடம் புத்தரின் 2500 புத்த ஜயந்தி வருடம். அப்படி புத்த ஜயந்தி வருடம் என்று அதனை அழைத்தாலும் கூட அது புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500 வருடமாகவே கொள்ளப்படுகிறது. அதாவது புத்தர் மரணித்த அந்த வருடம் கி.மு.544. அதே நாளில் தான் விஜயன் இலங்கை வந்தடைந்ததும், சிங்கள இனத்தின் உருவாக்கமும், இலங்கை ராஜ்ஜியமும் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்புகளும் பௌத்த உணர்வைத் தூண்டி பலன்களை அடைய வாய்ப்பு விரிந்தது என்றே கூறலாம்.

சிங்கள பௌத்த புத்தெழுச்சிக்கு வித்திட்ட பல முக்கிய அமைப்புகள் இயங்கின. பிக்கு பெமுன, பாஷா பெரமுன, ஏ.எச்.மெத்தானந்த  தலைமையிலான பௌத்த தேசிய படை, சிங்கள மகா சபை என்பவற்றுடன் சுயபாஷா கொள்கையை வலியுறுத்திய பௌத்த தகவல் அறியும் ஆணைக்குழுவின் அறிக்கை (பௌத்த மகா சம்மேளனத்தின் தலைமையில்) போன்றன பலமான அழுத்தக் குழுக்களாக அதிகார அமைப்பை ஆட்டுவித்து வந்தது.

1956இல் சிங்களம் மட்டும் சட்டம் என்கிற அநீதிக்கு எதிராக தமிழரசுக்கட்சி நடத்திய உண்ணாவிரதத்தைப் போலவே சிங்களம் மட்டுமே அரச மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரிய உண்ணாவிரதத்தை சிங்கள பேரினவாதத் தரப்பிலும் நடந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் தான் எப்.ஆர்.ஜெயசூரிய.

பண்டாரநாயக்கவை சிங்கள பௌத்தர்களின் மீட்பராக உருவகித்துக் கொண்டிருந்தபோது பண்டா செல்வா ஒப்பந்தத்தைக் கிழிக்கக் கோரி ஐ.தே.கயும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. “முதல் காலடி” (“First step”) என்கிற வெளியீடோன்றை வெளியிட்டு இனவாத பரப்புரையில் ஐ.தே.க ஈடுபட்டது. அக் கட்சியில் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சியரட்ட” பத்திரிகையில் இந்த இனவாத பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டது. தமிழர்களுக்கு சமஷ்டி கொடுக்கப் போகிறார்கள் என்று அந்தப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதிய ஜே.ஆர். வரைபடங்களையும் வெளியிட்டு சிங்கள மக்களுக்கு பயத்தையும், தமிழர் மீதான வெறுப்பையும் பரப்பினார். ஜே.ஆர்.ஜெயவர்தனா நிலையத்தில் அவர் எழுதிய இந்த கட்டுரைகள் அவரின் கையெழுத்துடன் இன்றும் காணக் கிடைக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விட தீவிர சிங்கள பௌத்தர் என்பதைக் காட்டுவதற்கு ஸ்ரீ ல.சு.க. தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் தேர்தலில் வெற்றி பெற்றதும் பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சியினர் கொடுரமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதுடன் அது கலவரத்தில் வந்து முடிந்தது. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1957 சுதந்திர பகிஷ்கரிப்பு செய்து, கறுப்புக் கொடியேற்ற முனைந்த நடராசன் எனும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் 1957 யூலை 20 திகதியன்று ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான எற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் எதிர்ப்பை கண்டு சமரசத்துக்கு வரத் தொடங்கினார்.

1957ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி நள்ளிரவு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது
ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆரின் கண்டி யாத்திரை

இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடாத்தவிருந்த மாபெரும் ஹர்த்தால் நிறுத்தப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் தென்னிலங்கையில் ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்தன. ஒக்டோபர் 4இல் ஒப்பந்தத்தை எதிர்த்து 03.10.1957 அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க வின் பிரதித் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கக்கோரி ஆயிரக்கணக்கான ஐ.தே.க உறுப்பினர்கள் கண்டிக்கு பாதயாத்திரை சென்றார்கள். கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை துவேசம் கக்கும் கோசங்களை எழுப்பியபடி நகர்ந்தது. இம்புல்கொட சந்தி வரை மட்டுமே அந்த பாத யாத்திரை செல்ல முடிந்தது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க தலைமையிலான குழு இதனை நிறுத்தி திருப்பியனுப்பியது. ஒரு இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.டீ.பண்டாரநாயக்க ஒரு வீரராக புகழப்பட்டார்.

ஒன்பது மாதங்களாக இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இழுத்தடிக்கப்பட்டது. 1958 ஏப்ரல் 8 அன்று பண்டாரநாயக்காவின் றோஸ்மீட் பிளேஸ் இல்லத்துக்கு முன் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் பிக்கு எக்ஸத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குமாரும் சத்தியாக்கிரகம் இருந்ததைத் தொடர்ந்து அவர்களின் முன்னால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன். ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாக அன்றே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த துரோகத்தனம் சிங்கள அரசாங்கத்தின் முதற் துரோகமாகவும் அமைந்தது. இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு இது கொண்டு சென்றது. மேலும் 1957இல் ”ஸ்ரீ” சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றை எதிர்த்து சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 1958 இனக்கலவரம் நடந்தேறியது தமிழ் மக்களுக்கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல தமிழர்கள் இதில் கொல்லப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. அகதிகளாக்கப்பட்டனர். தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டதுடன் தொண்டர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டன ர், சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டது.
ரோஸ்மீட் இல்லத்திற்கு வெளியில் ஒப்பந்தத்துக்கு எதிரான பிக்குகளை சந்திக்கும் பண்டாரநாயக்க

இதற்கிடையில் பண்டாரநாயக்காவும் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி பிக்குவால் கொலை செய்யப்பட்டார்.

1944 இல் அரசாங்க சபையில் சிங்களமும் தமிழும் அரச உத்தியோகபூர்வ மொழி என்று வலியுறுத்திய ஜே.ஆர் 1956 இல் சிங்களம் மட்டும் கொள்கையை முதலில் தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து தான் பண்டாரநாயக்கவும் தன்னை ஆட்சியில் அமர்த்தினால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொணர்வதாக போட்டிக்கு வாக்குறுதி அளித்தார்.

அது போல 1926 இல் சமஸ்டியே இலங்கையின் இலங்கைக்கு சிறந்த அரசியல் தீர்வு என்று வலியுறுத்தி பிரசாரம் செய்த பண்டாரநாயக்க 1956 இல் சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். 

இந்த இருவரும் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டை – சுதந்திரத்துக்குப் பின்னர் மாற்றிக்கொண்டதற்கு இடையில் இருந்த இடைவெளியே பேரினவாதத்தின் வெற்றி என்பதைக் கவனிக்க வேண்டும். சுதந்திரமும், ஆட்சியும், அதிகாரமும் சிங்களவர்களுக்கு கைமாற்றப்பட்டதன் விளைவு எத்தகைய அநீதிகளை உருவாக்கியது என்பதை கவனிக்க வேண்டும். சற்று தாராளவாதிகள் போல இருந்தவர்கள் இனச்சார்பு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டிய சிங்கள – பௌத்த அமைப்புமுறையை கணக்கில் எடுக்கவேண்டும். அதன் நீட்சி அதன் பின்னரும் தொடர்ந்தது. மேலும் பலத்துடன் தொடர்ந்து வருகிறது.

துரோகங்கள் தொடரும்...
26.07.1957 பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்
பகுதி – அ
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி புரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்த்தை (தனிச்சிங்கள சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பானாடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்யமுடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழரசுக்கட்சி பல அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளைக் கைவிடாமல் மாற்று ஒழுங்குகளை ஏற்படுத்தமுடியுமா? என்பது பற்றி ஆராய இணக்கம் தெரிவித்தது. அரசின் பிராந்திய சபைகள் மசோதாவை ஆராய்ந்து உரிய யோசனைகளை முன் வைக்க முடியுமா என்று பிரதமர் தமிழருசுக்கட்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் கீழே..
மொழி விடயத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சம அந்தஸ்த்து கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், இவ்விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் மிக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். தான் முன் குறிப்பிட்டது போன்று உத்தியோக மொழிச்சட்டத்தை அழிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்தியமற்றது என்று பிரதமர் கூறினார். கருத்துப் பரிமாறலின் பின் இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும், உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழே இருக்கும் வகையில் பிருதமரின் நான்கு அம்ச திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டிமென்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபன்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது பற்றியும் குடியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தகிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவிலிப்பிரச்சனை தீரவேண்டுமென்றும் வற்புறுத்தினர். இப்பிரச்சனை விரைவில் பரிசிலனைக்கு எடுத்டுக்கொள்ளப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இம்முடிவுகளின் காரண்மாக தம்து உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையை கைவிடுவதக தமிழரசுக்கட்சி அறிவித்தது. 
பகுதி – ஆ
  1. வடமாகாணம் ஒரு பிராந்திய அலகாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகளாகவும் இருத்தல்.
  2. பாராளுமன்றத்தினால்அங்கீகரிக்கப்படுவதற்கு உட்பட்டதாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகள் மாகாண எல்லைகளுக்கு அப்பாலும் ஒன்றிணைவதும் ஒரு பிராந்திய அலகு பலவாகப் பிரிவதும்.
  3. பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்.
  4. விவசாயம், கூட்டுறவு, காணிகளும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், கடற்தொழில், வீடமைப்பு, சமூக சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், வீதிகள் உட்பட பிராந்திய சபைகளுக்கான விடயங்களைச் சட்டத்தில் உள்ளடக்குதல்,
  5. மத்திய அரசாங்கம் பிராந்திய சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.
  6. வரி விதிப்பதற்கும் கடன் பெறுவதற்கும் பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் உண்டு.
  7. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழி.
நன்றி - தினக்குரல்

காணி அதிகாரம்; அரசியல் பேச்சுவார்த்தைகளும் நடைமுறைகளும் வேறுவேறா? - சபையில் திலகர் எம்.பி கேள்வி


இன்று நாங்கள் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடிக்கொண்டு இருக்கின்றோம். அதன்போது அதிகாரப்பகிர்வின் மிக முக்கியமான விடயங்களாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அமைகின்றன. காணி அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என பல்வேறு உரையாடல் இடம்பெறும் போது நடைமுறையில் நாட்டின் காணிகள் தொடர்பாக அவை பகிரப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடைமுறைகள் வேறானவையாக காணப்படுகின்றன. இது குறித்து காணி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காணி பாராதீனப்படுத்தல் மற்றும் மட்டுப்படுத்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே திலகர் எம்.பி மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

 நாட்டில் அதிகாரப்பகிர்வின் முக்கிய அம்சமாக காணி அதிகாரம் குறித்தே பேசப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரச்சினைகளின் மையப்புள்ளியே இந்த காணி அதிகாரங்களை கொண்டமைந்ததாகவுள்ளது. ஆனால், உள்நாட்டில் காணி நிர்வாகம் தொடர்பான நடைமுறைகள் இந்த அரசியல் அதிகார பகிர்வு கலந்துரையாடலுக்கு மாறானதாக ஆங்காங்கே வெவ்வேறு அதிகாரத்தரப்பினரால் பராமரிக்கப்பட்டும் பகிரப்பட்டுவரும் சூழல் நிலவுவதனை அவதானிக்க முடிகின்றது.

 நமது நாட்டில் வெளிநாட்டவர் காணிகளை கொள்வனவு செய்வதுதொடர்பில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த சட்டம் பல வெளிநாட்டவர்க்கு காணிகளை விற்க வழிசெய்தமை இதன் மூலம் தடுக்கப்படுகின்றது. அதேபோல உள் நாட்டில் வளம் கொழிக்கும் தேயிலை ரப்பர் தொழில்கள் முன்னெடுக்கப்படும் பெருந்தோட்டக் காணிகளை எடுப்பார் கைப்பிள்ளையாக கையாளும் நடைமுறைகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. இது குறித்த முறையான சட்டம் ஒன்றை நிறைவேற்ற காணி

 அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்போது கூட நான் பிரதிநிதித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிவனொளிபாதமலை அண்டிய பகுதிகளில் வெளியாருக்கு காணிகள் வழங்கப்பட்டு சட்டரீதியற்ற வகையில் சுற்றுலா விடுதிகளும் வியாபார தளங்களும் அமைக்கப்படுவதாக பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் வெளியாருக்கு துணை போவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முன்னாள் பிரதேச சபை தலைவர் ஜி.நகுலேஷ்வரன் தலைமையில் அங்கு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 நமது பாரம்பரிய ஏற்றுமதிக் கைத்தொழிலான தேயிலை மற்றும் ரப்பர் இன்று வீழ்ச்சிப் போக்கில் சென்றுக்கொண்டிருக்கின்றது. அதற்காக பயன்படுத்தும் காணிகளை அதனை நிர்வகிக்கும் தனியார் கம்பனிகளும் அரச நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் வெவ்வேறு தேவைகளுக்காக கையாண்டு வருகின்றன. திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளருமான ஏ.எஸ். சுந்திரபோஸ், 'விற்பனைப் பண்டமாகியுள்ள பெருந்தோட்ட காணிகள்' என ஒரு கட்டுரையின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். காணியமைச்சர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

 இப்போது வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருக்கும் தேயிலைத் தொழில் நிர்வாக முறைமையை மாற்றியமைக்க முயற்சிகள் மேன்கொள்ளப்பட்டு வருகின்றது. மாற்றுத்திட்டத்தை முன்வைக்கும் தோட்டக் கம்பனிகள் காணி குறித்த எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதில்லை. அதேநேரம் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் மூன்று அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல மூன்று தொழிற்சங்கங்களினதும் கூட்டணி என்ற வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளைப் பெற்றுக்கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் இப்போது அங்கு அந்த காணிகளைப் பராமரிக்கும் நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறையைப்பார்த்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பகிர மிச்சம் வைக்க மாட்டார்கள் போல தெரிகிறது. குறிப்பாக நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை பகுதிகளில் அரச உடமையான காணிகள் தனியாருக்கு வேகமாக பகிரப்பட்டு வருகின்றது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என காணியமச்சர் ஜோன் அமரதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
 அண்மையில், மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி பெருந்தோட்டக்காணிகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மொராகலை மக்கள் அபிவிருத்தி மன்றம் எனும் தன்னார்வ நிறுவனம் முன்nடுத்திருந்தனர். அந்த ஆய்வறிக்கை குறித்த கலந்துரையாடல்களுக்கு சென்றிருந்த சமயம் அங்கே பல் பெருந்தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் அங்கு வாழும் தொழிலாளர் குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பதான சேனைப்பயிர்ச்செய்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவலத்தை நான் நேரில் பார்வையிட்டேன். அங்கு தேயிலை, ரப்பர், கரும்பு என அனைத்து உற்பத்திகளும் கைவிடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் அல்லாத வெளியாருக்கு காணிகள் பங்கிடப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் மக்களோ சேனைப்பயிர்ச்செய்கை மூலம் அல்லாத அன்றாட கூலிகளாக அவல வாழ்க்கை வாழ்கின்றனர். இது மொனராகலை மாவட்டத்திற்கு மாத்திரமான நிலைமை என்று கொள்ள முடியாது. ஒட்டுமொத்த பெருந்தோட்டக் காணிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் சூறையாடல் நிறுத்தப்படல் வேண்டும்.

 இன்றைய நல்லாட்சியில் மலையக மக்களின் வீட்டுரிமைக் காணியை நாங்கள் வென்றெடுத்திருக்கினறோம். வரலாற்றில் முதன் முறையாக மலையக மக்களுக்கான வீட்டுக்காணி உறுதியுடன் கூடியதாக வழங்கி வைக்கும் நிகழ்வு  ஜனாதிபதியின் கரங்களில் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி அக்கரப்பத்தன ஊட்டுவில் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக  நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம் 'நிலைத்துநிற்கும் அபிவிருத்தி ' இலக்குகளில் ஒன்றாக காடாக்கல் நடைமுறை பின்பற்றப்படுகின்றபோது பயிரிப்படாத காணிகளே காடாக்கலுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும். இயற்கையை  பாதுகாக்க மழை வீழ்ச்சியை அதிகரிக்க அது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேயிலை மலைகளை காடாக்க அனுமதிக்க முடியாது.

 எனவே இத்தகைய காணி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து உரையாக காணி அமைச்சு தனியான விவாதம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு மொனராகலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஹன்சாட் தேவைகளுக்காகவும் சமர்ப்பித்தார்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates