Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா

என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... 

ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு  சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும்  அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக்  கொண்ட நாடு.  இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்சங்கள்  பற்றியதுமான நூலாக “சிங்கள பண்பாட்டிலிருந்து” நூல் அமையபெற்றுள்ளது. 

இந்நூல் நம்ப முடியாத,  ஆனால் நிதர்சனமான விடயங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவரை தமிழர்களால் அறியப்படாத சிங்களவர்களின் கலாசார முறைமையை மிகத்தெளிவாகவும் சரளமாகவும் இந்நூலில் அறியமுடிகின்றது.   மொத்தமாக பதின்மூன்று ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது அவற்றிலிருந்து சுவாரஸ்யமான சில கட்டுரைகள் பற்றி இங்கே பகிர்கிறேன். 

சிங்கள சமூக அமைப்பில் கன்னித்திரை பரிசோதனையில் என்ற அம்சத்தில் தொடங்கி, சிங்கள பெயர்களின் சாதிய செல்வாக்கில் நிறைவுறுகிறது. 

மிகவும் அந்தரங்கமானதும், ஆதர்சமானதுமே தாம்பத்திய உறவு. இதில் பெண்ணிடம் மாத்திரம் அவளின் கன்னித்தன்மையை  பரிசோதிப்பது எந்தளவில் சரியானதாக இருக்கும்  என்பது தெரியவில்லை. கன்னித்திரை பரிசோதனை ஒரு சமூக வழக்கில் எந்தளவிலான ஒரு பாரதூரமான விடயம் என்பதை தெளிவுப்படுத்துவதுடன், ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரத்தை வலியுறுத்தும் விதத்தையும் வெளிப்படுத்துகின்றது.  பெண்ணின் ஒழுக்கம் இதன் மூலம் மட்டும் அறியப்படக்கூடிய ஒன்றல்ல. 

பெண் தமது கற்பை திருமண நாளிலேயே இழக்கவேண்டும் என்பது ஒரு பாரம்பரிய எதிர்பார்ப்பாக இங்குகொள்ளப்படுகின்றது. சிங்கள சமூக அமைப்பில் அந்த எதிர்ப்பார்ப்பை எப்பேர்பட்ட நடைமுறைகளைக் கொண்டு கையாள்கின்றனர் என்பது பற்றியது அக்கட்டுரை. ஆசிரியர் ‘கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே ஆண்கள் கையிலிருந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பார்க்க முடிந்தது.” என்கின்றார். 

சிங்கள குடும்பமொன்றில் கன்னிப்பரிசோதனையின்போது  அப்பெண்ணின் கற்புநிலையில் ஐயம் ஏற்பட்டால் அவள் மறுபடியும் தமது பிறந்த வீட்டிற்கே அனுப்பிவைக்கப்படுகின்றாள்.  ஆனால் கற்புத்தன்மையை வெறுமனே இதை வைத்துக்கொண்டு நோக்க இயலாது. கடினமான வேலைகள், விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கு பெண்ணுறுப்பின் சவ்வு கிழிய வாய்ப்புண்டு. அதற்காக அவர்கள் கற்பிழந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாதல்லவா? இதை ஆணாதிக்க சமூகமும், இளவயதினரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். இக்கட்டுரையின் மூலம் அதை அறியக்கூடிய வாய்ப்பும் பலருக்கு ஏற்படும். இக்கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் சிறியாணி பஸ்நாயக்க அவர்களின் கூற்றில் கேட்கப்பட்டிருக்கும் வினா  ஆணாதிக்க சமூகத்தை தலைகுனிய வைக்ககூடியதுதான். 

தொடர்ந்து, சாதிய அமைப்பில் தீண்டாமையின் செயற்பாடு எவ்வாறானது கோத்திர சபைகளின் இறுக்கமான சட்டங்கள் பற்றியும் அறியமுடிகின்றது. இதுவரை வரலாற்று இலக்கியங்களின் வாயிலாக மட்டுமே அறிந்திருந்த பல் கணவர் முறை சிங்களப் பாரம்பரியத்தில் மிகச் சமீப காலம் வரை இருந்திருப்பதை  இந்நூலின் வழி அறிந்தேன்.  அது “ஒரே வீட்டில் புசித்தல்- பல கணவர் முறை” சொத்திற்காக ஒரே பெண்ணை சகோதரர்களே மணந்துக்கொள்ளும் பண்பாடு இச்சமூகத்தில் இருந்து வந்துள்ளமை மிக அதிர்ச்சியான விடயம் . ஆசிரியர் இதனை குறிப்பிடும்போது“ பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்துக்கொள்வதை ஆணாதிக்க சமூக அமைப்பு ஆச்சரியமாகவும்  அதிசயமாகவும் கலாசார சீர்கேடாகவும் பார்க்கின்றது” என்கின்றார்.  

ஆணாதிக்கத்தை தனிசொத்துரிமையில் பாதுகாக்க பண்பாட்டு கலாசார தளத்தை அதி உச்ச நிலையில் இருந்து வந்திருப்பதனை வரலாறு முழுவதும் காணமுடிகின்றது. ஆணாதிக்கத்துக்கு முன் பெண் பெற்றிருந்த உயர்ந்த மதிப்புக்கான காரணங்களால், தனிசொத்துரிமையின் பின்னால் கேவலப்படுத்தப்பட்டு அடிமையானாள். இதை ஏங்கல்ஸ் “ தாயுரிமை தூக்கியெறியப்பட்டது”என ஆணாதிக்கத்தை மொத்தவடிவை தெளிவுப்படுத்துகிறார். 

ஆணாதிக்கத்திற்குள்ளான பெண்மீதான அடிமைத்தனத்தை இயற்கைக்கு வெளியில் தனிசொத்துரிமை சுரண்டல் ஆதிக்க கருத்தில்  கொண்டுள்ளது. தனிசொத்துரிமை என்பது இயற்கை சமூகச்சூழல், மற்றைய உயிரினங்கள், மனித இனம் எதையும் மறுத்து உருவாகும் போக்கில் உருவானவை என்பதால், அவை தன்னளவில் பெண் மீதான பாலியல் ஆதிக்கத்தை கோரியது. பெண்ணின் தேர்வுக்கும், உணர்வுக்கும் பதில் பெண்ணை தனிச்சொத்துரிமை ஆதிக்கத்திற்குள்ளான தீர்மானகரமான விடயமாக தனிசொத்துரிமை பார்க்க தொடங்கியது. 

இதையடுத்து சிங்கள சாதியம் தொடர்பாக இங்கு அவதானிக்கமுடிகின்றது. சாதியம் வெறுமனே நேற்று இன்றைய பேசுப்பொருள் அல்ல. இந்த நவீன காலத்தில் கூட இந்தியா,  இலங்கையில் இன்னும் சில நாடுகளிலும் ஜாதியின் சமூக பங்களிப்பு மிகமுக்கியமானதாக அமைகின்றது. இந்திய சாதியமைப்பின் கொடுமைகளையே அதிகமாக அறிந்து வைத்திருக்கிற எம் போன்றவர்களுக்கு சிங்கள சாதியமைப்பின் கட்டமைப்பும், அதன் நிறுவனமயப்பட்ட தன்மையும் இந்த நூலின் மூலம் வேறொரு வடிவத்தில் அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இவற்றைத் தாண்டி சிங்கள பண்டைய சமூகத்தில் சாதிய கட்டமைப்பை பாதுகாப்பதற்காகவே பலமான ஒரு அமைப்பு இருந்திருக்கிறது என்பது புதிய - வியக்கத்தக்க தகவலாகவே அமைந்தது. இந்தியா  போன்ற நாடுகளில் அதிகளவில் பஞ்ஞாயத்துகள் இருப்பதை போன்றுதான் இச்சபைகளும்  ஆனால் இதில் மாறுபட்ட ஒரு விடயம் என்னவெனில் இலங்கையின் கோத்திர சபைகள் என அழைக்கப்பட்ட அவைகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமையே ஆகும்.  நூலாசிரியர் “இக்கோத்திர சபைகள் கூட இலங்கையின் இனத்துவ சிந்தனை தளைத்தோங்க ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்”  என்கிறார். 

இன்று சமூகங்களில் காணப்படும் அதே சாதிய கட்டுப்பாடுகள் பண்டைய சிங்கள சமூகத்திலும் நிலவி வந்துள்ளன. எடுத்துக்கட்டாக, பிறசாதியில் திருமணம் முடித்தல், கணவர் இறந்ததும் இன்னொரு வெளியில் ஆணுடன் தொடர்புற்று கர்ப்பமடைதல், சபைகளில் கைகால்  உயர்த்தி கதைத்தல் போன்றவற்றை குறிப்பிலாம். ஆனால் இக்கட்டுரையின் சிறப்பம்சம் ஒரு வழக்கு தொடர்பாக அதில் விளக்கமாக குறிப்பிட்டப்பட்டிருப்பது மட்டுமன்றி, அந்த வழக்குகளில் கிராமத்தில் நடைமுறையில் இருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் விபரிக்கப்பட்டுள்ளன. சில கிராம குழுக்கள் போன்று இது வெறுமனே ஒரு பிரச்சினையை தீர்க்கும் சக்தியாக மட்டுமன்றி தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருந்ததை அறியமுடிகிறது. அத்தோடு நன்றாக உற்றுநோக்கின் மிக நுணுக்கமான முறையில் இக்கோத்திர அமைப்பின் மூலம் சாதியம், கோத்திர பிரிவுகள் என சமூகப் பிரிவுகளும், சமூகப் பாகுபாடுகளும் வளர்த்தெடுக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட காரணமாக இருந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

அடுத்த மிக முக்கியமான கட்டுரையாக நாம் எமது நாட்டின் வேடுவ இனகுழுமத்தை பற்றிய தகவல்களை அறியகூடியதாக  அமைகின்றது. அதைப் பற்றி இந்நூலிலாசிரியரின் ஒரு கூற்று மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. “அருகி வரும் வேடுவர் இனமானது தமது சுய அடையாளத்தை பேணல் என்பது இனிவரும் காலங்களில்  போதியளவு சாத்தியம் இல்லை என உணரத்தொடங்கியது. தமது வேடுவ அடையாளம் அவமானமாக பார்க்கும் ஒரு சந்ததிக்கூட தழைக்கத் தொடங்கியிருக்கின்றது.” இந்த மேற்கோளின் ஊடாக வேடுவ வாழ்க்கை முறை எவ்வாறானதொரு மாற்றத்தை இன்று கண்டுள்ளது என்பது  தெளிவாக அறியலாம் . எமது அடுத்த சந்ததியினருக்கு வேடுவர்கள் தொடர்பான ஆதாரங்களைத் தவிர வேறு எந்த அடையாளங்களும் நேரடி ஆதாரங்களும் அற்ற நிலை வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

ஒரு இனத்தின் அடையாளம்  வேறு இனத்தினால் மறுக்கப்படுவதை காட்டிலும் அதே இனத்தால் ஏற்கமுடியாவிடின் அங்கு அவர்களின் சுயம், இறைமை, உரிமை என்பன அடியோடு இல்லாதொழிக்கப்படுகின்றது. அந்த இனமே அதன் அழிவை உறுதிப்படுத்துவதாக இது அமைகின்றது. பாரம்பரியம், உணவு கலாசார, மொழி, பழக்கவழக்கங்கள் மரபுகள், என்பன அடுத்த சந்ததியினருக்கு ஏதோவொரு வழியில் கடத்தப்பட்டவேண்டியதே தவிர அழிக்கப்பட வேண்டியவையல்ல என்று கூறுகிற பேராசிரியர் கணநாத ஒபயசேகர; வேடுவர்களை ஆய்வு செய்த  முக்கிய ஆய்வாளரான “செலிக்மன்” கூட தனது ஆய்வுக்கான போதியளவு தூய வேடுவர்களை சந்திக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றார். 

நூலாசிரியரின் மொழியாற்றலின் ஊடாக இலங்கையின்  பண்டைய  சிங்கள சமூக அமைப்பின் பேசப்படாத வியப்புக்குரிய விடயங்களை இந்நூலில் பகிரங்கப்பட்டுத்தியுள்ளமை  இந்நூலின் முக்கிய சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி அவரின் ஏனைய  நூல்களும்  இது போன்றே ஆச்சரியங்களை உள்ளடக்கியவை தான்.  

சமகாலத்தில் ஓரினசேர்க்கை பற்றிய கருத்தாடல்கள் சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேசுபொருளாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பண்டைய சிங்கள சமூகத்தில் பண்பாட்டளவில் அது எத்தகைய நிலையில் காணப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை முன்வைப்பதுடன், ஓரின சேர்க்கை குறியீடாக மாற்று பதங்களும்  இருந்து வந்துள்ளதனையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இதைத் தாண்டி நான் மேற்கத்தேய நாவல்களில் குறிப்பாக ரஷ்ய நாவல்களில் அறிந்திருந்த ஒரு விருந்தோம்பல் முறைமை, இலங்கையிலும் பின்பற்றப்பட்டிருந்திருப்பதை  அறிந்துக்கொண்டேன். அந்த நாவலில் ஒரு நண்பன்,  அவனை  சந்திக்க வந்த கதாநாயகனுடன்  தன் மனைவியை பகிர்ந்துகொள்கின்றான். சில ஐரோப்பிய சமூகங்களில் தமது துணைவியை விருந்தினருடன் பாலுறவுக்கு பகிரும் வழக்கங்களும் இருந்துள்ளதை அறிந்திருக்கிறோம். இதை சிங்கள பண்பாட்டிலும் விருந்தினருக்கான விருந்தோம்பலில் தமது மனைவியைப் பகிர்தல்  என்பது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்துவதுடன், பெண் வெறும் ஆணின் இன்பவேட்கைக்கான பொருள் மாத்திரமாக இருந்து வந்திருப்பதை காணமுடிகின்றது. இவற்றுக்கடுத்து பாலியல் வசியம் மற்றும் பௌத்த விகாரைகளிலும் சில துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற போக்குகளையும் நூலில் குறிப்பிடத் தவறவில்லை.

என்.சரவணனின் “அறிந்தும் அறியாதவை” நூலில் இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும், இந்திய தோட்ட தொழிலாளர்களுக்கும் மேலாடை அணிவது தடைசெய்யப்பட்டிருந்த விபரங்களை சில வலிமையான ஆதாரங்கள் மூலமாக உறுதிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமன்றி இவை தொடர்பாக பல ஆய்வுகள் இடம்பெற்றுவந்துள்ளமையையும் அறியமுடிகின்றது.

காலனித்துவ காலப்பகுதியில் வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறையில் இருந்த வரி விதிப்பைப் பற்றி நாமறிவோம்.  மஹபத்த , உடல்வரி, சாவுவரி, மீன்பிடி வரி, தென்னை வரி, இஸ்தோப்பு வரி, நெருப்பு வரி, நாய்வரி, போன்றனவற்றை விட முலைவரி என்ற புதிய வகை வரியையும் அறிமுகப்படுத்தியிருந்திருக்கின்றனர். இவ்வாறான வரிகள் சமூக மத்தியில் வெறுக்கத்தக்க ஒன்றாகவே காணப்பட்டிருக்கின்றது. இவ்வரி தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை ஆசிரியர் தெளிவுப்படுத்துகின்றார்.  அப்படியான ஒரு குரூரமான எதிர்ப்பலைக்கு பின்னரே இவ்வரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து சிங்கள பெயர்களில் சாதியத்தின் பங்கு தொடர்பான கட்டுரையை நோக்குவோம். தமிழ், இஸ்லாமிய பெயர்களை விட சிங்கள பெயர்களின் இவ்வாறானதொரு பாரிய பின்னணி இருக்குமென்று யாரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனது சகோதர மொழி நண்பர்களின் பெயர்களும் இவ்வாறானதொரு விரிவை கொண்டு காணப்பட்டிப்பதை அறிந்திருகிறேன்,  ஆனால் அதன் பின்புலம் இக்கட்டுரையின் பின்பே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. சிங்களப்பெயர்களின் பின் அதன் வர்க்கம் , சாதி, குலம், பெருமை, பட்டம், பதவி போன்ற பல அம்சங்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் என  எதிர்ப்பார்க்கவில்லை.  

இலங்கையை ஆண்ட போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  ஆகியோரின் செல்வாக்கின் ஊடாகவும் மதப்பரப்புகையின் ஊடாகவும் அதிகளவில் இந்த பெயர்கள் கரையோர பகுதிகளில் புழக்கமாகியுள்ளது. காலப்போக்கில் இவற்றிற்கான பார்வை, அர்த்தங்கள் வேறு வகையில் புனையப்பட்டு, அவை சாதி, குலம், வர்க்கம் என அவற்றை பரம்பரையாக தக்கவைப்பதாக ஆனதை தெளிவாக ஆசிரியர் புலப்படுத்துகின்றார். அவைமட்டுமன்றி, அந்த காலப்பகுதியில் ஐரோப்பியருக்கு ஏற்றாற்போல பௌத்தர்கள் பெயர்களை மாற்றியது சூழலுக்கு தகவமைந்தசந்தர்ப்பவாத நடைமுறையாகவே கருத வேண்டியுள்ளது.

பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதியில் பௌத்தத்தை மீள உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளின் போது பெயரிடலையும் ஆதிக்க சிந்தனா முறையிலேயே அமைத்திருப்பதைக் கவனிக்க முடியும். பிற காலங்களில் பல பெயர்களை கொண்டு சிங்களவர்களிடையே சாதி வாரியாக பிரித்து நோக்க இலகுவாக அமைந்ததை காணமுடிகின்றது. இக்காலப்பகுதியில் சில ஐரோப்பிய கலாசாரத்தை மறுதலித்து, பௌத்த ஒழுக்கவிதிகளுக்குள் உட்புகுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றதில் பலர் தமது ஐரோப்பிய பெயர்களை மாற்றியுமுள்ளனர். 

உலகில் இரண்டு முக்கியமான பௌத்த சமயம் பிரதான இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதை நாமறிவோம். ஒன்று மகாயான பௌத்தம் மற்றையது தேரவாத  பௌத்தம். தேரவாதம் நிலையாமை,  முக்தி என்பவற்றையே வலியுறுத்துகின்றது. தேரவாத பௌத்ததை பின்பற்றும் நாடுகளில் ஒன்றே இலங்கை. ஆனால் இலங்கையின் பௌத்த பீடங்கள் கூட சாதியைத் தூக்கிபிடிக்கின்ற நிலையினை அவதானிக்கமுடிகின்றது.

பௌத்த மதத்தின் பேரால் இலங்கையின்  “புனித” வரலாற்று நூலான மகாவம்சத்தை ஒரு பேரினவாதத்தை நிலைநிறுத்த பயன்படுத்தும் கருவியாக ஆக்கி வைத்திருக்கிற நிலையில் அபேர்பட்ட பேரினவாதத்தை ஸ்தூலமாக்க பண்பாட்டம்சங்களும் அதற்கு தோதாக வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதையே இக்கட்டுரைகளின் மூலம் காண முடிகிறது. 

இந்த நூல் சிங்களப் பண்பாட்டின் அதிசயிக்கத்தக்க பல கூறுகளை பகிரும் ஒன்றாக இருக்கிற போதும், அதற்கும் பேரினவாதத்துக்கும் இடையிலான உறவையும் இனங்காட்டத் தவறவில்லை என்றே கூற வேண்டும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் தொகுப்பாக இந்நூல் வாசகர்களின் கைகளில் வலம்வருகின்றது. இன்னொரு இனத்தின் மத கலாசார பண்பாட்டை அறிந்துக்கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு சுவையான நூலாக அமையும். இதுவரை தமிழில் வெளிவராத தகவல்கல்களையே தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல். வெறுமனே ஆய்வுகளாக மட்டும் நாம் அறிந்துகொள்வதை தாண்டி அதனது உண்மைத்தன்மை வெளியிடும் வகையில் உசாத்துணைகளும் அடிக்குறிப்புகளும் மேலும் இந்நூலின் உண்மைத்தன்மையை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது. உசாத்துணைக்காக ஆங்கில நூல்கள், ஆவணங்கள் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் நூல்களையும், ஆவணங்கள் பலவற்றையும் பயன்படுத்தி சொல்லவந்த கருத்தை நிறுவியிருப்பது இந்நூலின் முக்கிய சிறப்பென்றே கூறலாம். குறிப்பாக பல சிங்கள, ஆங்கில நூல்கள் ஆய்வுக்கு பயன்படுத்தி தமிழில் வெளிவராத புதிய வியக்கத்தக்க வகையான தகவல்களை நம் முன் சமர்ப்பித்து இருப்பதில் நூலாசிரியர் வெற்றிக்கண்டுள்ளார். இன்றைய சமூகத்தேவையையும், வாசகர்களின் மனநிலையையும் புரிந்து இவ்வாறான பல புதிய தகவல்கள்  வெளிகொணர்ந்திருக்கும் இந்நூல் வரலாற்றை அறியும் ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி மானுடவியல் சார்ந்த கற்கைகளை செய்பவர்களும், ஆர்வலர்களுக்கும், தேடலாளர்களுக்கும் ஒரு சிறந்த தீனி எனலாம்.

மா.பவித்திரா : உதவி விரிவுரையாளர் – அரசறிவியல் துறை – யாழ் பல்கலைக்கழகம்

நன்றி - தாய்வீடு - பெப்ரவரி - 2021

"வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள்" - என்.சரவணனின் "சிங்களப் பண்பாட்டிலிருந்து" நூல் விமர்சனம் -... by SarawananNadarasa on Scribd


பெண்கள் - கொரோனா - சமூகம். 'பெண்களுக்கு கொரோனா" பெண்களை மேலும் பலவீனப்படுத்தியது! - அருள்கார்க்கி

 '4 வருசமா கொழும்பில காமென்ட் இலதான் வேலை  செஞ்சேன். அம்மா, அப்பா தோட்டத்திலதான் வேலை செய்றாங்க. குடும்ப கஸ்ரத்தை போக்கதான் நான் கொழும்புக்கு வேலைக்கு போனன். இப்ப அங்க கொரோனா வந்ததால இங்க வந்தன். என்னோட யாரும் பேசுறாங்க இல்ல...என்னய கண்டாலே தள்ளிபோறாங்க. ஏண்ட 'பிறன்சும்' என்னோட கதைக்கிறாங்க இல்ல." என்கிறார். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24). கொழும்பில் கொரோனா காரணமாக காமென்ட் மூடியதால் மூன்று  மாதங்கள் விடுதியில் தங்கியிருந்தவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினை அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. சாதாரணமாகவே பெண்கள் என்றாலே இரண்டாம்பட்சமாக நோக்கும் இந்த சமூகம், அந்தப்பெண் வேலைக்கென்று வெளியில் சென்று வரத்தொடங்கினால் இன்னும் அதிகமாகவே துன்புறுத்துகிறது.

இலங்கையில் 1820 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்டவர்கள்.  இத் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் காலனித்துவவாதிகளால் வழங்கப்படவில்லை. இன்றும் இந்த தோட்டமக்கள் கீழ்மட்ட வாழ்க்கைத்தரம், குறைந்த ஊதியம்,  போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உள்ளனர். இவ்வாறு பெருந்தோட்ட தொழில்துறையில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாவர். குடும்ப பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுபவர்களாக இந்தப்பெண்கள் உள்ளனர். 

தனியார் துறையினரின் இலாப நோக்கத்துடன் கூடிய சிந்தனை போக்கினால் மலையக பெருந்தோட்ட தொழில்துறை முகாமைத்துவம் சுரண்டல் மிகுந்ததாக மாறியது. இந்நிலைமையும் 1992 இல் ஏற்பட்ட தனியார் துறையினரின் தொழில் கொள்கைகளில் மாற்றமும் பெருந்தோட்ட பெண்களை தோட்ட தொழில் சாராத ஏனைய தொழில்களின் பக்கம் நகரத் Àண்டியது. இவ்வாறு  ஏனைய வாய்ப்புகளை தேடிய பெருந்தோட்ட பெண்களுக்கு நாட்டின் மற்றைய கைத்தொழில் துறையான ஆடை உற்பத்தி துறையும், தொழிற்சாலைகளும் தொழில் வழங்கக் கூடியனவாக இருந்தன. தோட்டத்தை விட்டு பெண்கள் வெளியேறத் தொடங்கினர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பாக அன்னியச் செலாவணியைப் பெற்றுத்தரும் துறையில் (தேயிலை, ஆடை) பெண்களின் பங்கு கணிசமானதாக மாறியது. ஆயினும் வீட்டிலும் சமூகத்திலும் பெண்களுக்கான இடம் குறிப்பிடும்படி இல்லை என்பதே கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு பெருந்தோட்ட வாழ்க்கை முறையில் காணப்பட்ட பெண்களின் சமூக அந்தஸ்;து இன்மை, அவர்கள் ஏனைய தொழில்துறைகளுக்கு சென்றாலும் அங்கும் அவர்களின் நிலை அதுவாகத்தான் உள்ளது. மாறாக அவர்களை மேலும் கீழான கண்ணோட்டத்துடன் அவதானிக்கும் சமூக மனப்பான்மையே உருவாகியுள்ளது. 

இவ்வாறான ஒரு நிலையில்தான் கொவிட் - 19 தாக்கம் பரவலடைய ஆரம்பித்ததும் அதன் இரண்டாவது அலை ஆடைத்தொழிற்சாலைகளில் இருந்து வரத்தொடங்கியதும் பெண்கள் மீது கவனம் குவிந்தது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணை இனங்கண்டபின் அவருடன் தொடர்புபட்டவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன்போது இன்னும் அதிகமான முகாமைத்துவ ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்றியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடயத்தை பெரிதுபடுத்தி ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளர்களின் நடத்தை தொடர்பாக வெறுக்கத்தக்க வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் பெண்கள் மீதான வெறுப்பு பேச்சுக்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட ஆரம்பித்தன. இது மீண்டும் பெண்கள் மீதான சமூகக் கண்ணோட்டத்தை கருத்துருவாக்கம் செய்தது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாலதியின் கூற்று.  இவை பெண்களின் உளவியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. 

இவ்வாறு குடும்பத்துக்கான பொருளாதார ஆதாரமாகவும் நாட்டின் பொருளாதார காரணிகளாகவும் இருக்கும் இந்தப் பெண்களை சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கக்கூடிய வெறுப்புப் பேச்சுக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப் படுவதன் காரணமாக அவர்கள் மீண்டும் அவ்வாறான தொழிலுக்கு செல்வதற்கு தயக்கம் கொண்டுள்ளனர். குறைவான கல்வித்தகைமைகள், அதிகமான காலத்தை தேர்ச்சி அடைய முடியாத தொழிற்துறைகளில் முதலீடு செய்தமை உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் எதிர்கால தொழில்சார் வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியமை அனுபவங்களின் ஊடாக அறிய முடிகின்றது.  

பொதுவாகவே ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட பாரிய தொழிற்துறைகள் தனியாரின் முதலீடுகளில் தான் இயங்குகின்றன. இங்கு சர்வதேச தொழில் நியமங்களோ, உள்ளுர் தொழில் நியமங்களோ பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக இங்கு பணிபுரியும் பெண்களின் உளவியல் ஆற்றுப்படுத்தல்கள், உரிமை மீறலின் போது அதற்கான நியாயம் என்பன கேள்விக்குறியாகியுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நிறுவனத்துக்குள் உழைப்புச் சுரண்டல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அடக்குமுறை என்பன காணப்படுகின்றமையை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான பெண்கள் உறுதிப்படுத்துகின்றனர். 

இந்த நிலையில் தன் சமூகத்தினுள்ளேயே இவ்வகையான வெறுப்புப் பேச்சுகள், பாரபட்சம்  என்பன கண்டு பெண்கள் விரக்தி மனநிலைக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக சர்வதேச தொழிற்துறை சம்மேளனத்தின் மத்தியக்குழு உறுப்பினரும், சுதந்திர வர்த்தக வலய தொழில் மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைந்த செயலாளருமான  என்டன் மார்க்கஸ் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, 'நாட்டின் கைத்தொழில் துறையே இன்று பிரதானமான மொத்த தேசிய உற்பத்தியாகும். ஆயினும் தனியார் முதலீட்டாளர்களே இன்று கைத்தொழில் துறையை முகாமைத்துவம் செய்கின்றனர். எனினும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுய கௌரவம் பேணப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கடமையை அவர்கள் சரியாகச் செய்யாத காரணத்தினால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். 

முக்கியமாக சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்டவற்றில் சேவையாற்றும் மலையக யுவதிகள் பிறப்பிரதேசங்களில் இருந்தே வருகைத் தருகின்றனர். வாடகை வீடுகளில் தங்கி தொழில் புரியும் இவர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் இரண்டாம் பட்சமாகவே கவனிக்கப்படுகின்றனர். பாதுகாப்பற்ற உரிமைகள் மறுக்கப்பட்ட தொழிலாளர்களாகத்தான் இவர்கள் இருக்கினறனர். தனியார் தங்குமிடங்களிலும் இவர்கள் தவறான நோக்கங்களுடன் அணுகப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்கு காரணம் இவர்களின் தொழில் சார்ந்து இவர்களை மதிப்பிடுவதும், தவறான சமூக அபிப்பிராயம் காலங்காலமாக வேரூன்றியுள்ளதுமாகும்.

இவர்கள் தொழில் புரியும் பிரதேசங்களில் இவர்களுக்கான வாக்குரிமை இல்லை. எனவே இவர்களின் நலனிலோ, அல்லது உரிமை சார்ந்த விடயங்களிலோ பிரதேச அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதில்லை. இவர்களின் சொந்த பிரதேசங்களிலும் இவர்களுக்கான உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் இவர்கள் ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவினராகவே உள்ளனர். இவையும் இவர்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் தோன்றுவதற்குக் காரணங்களாகும்.

குடும்ப வறுமை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலகுவாகக் கிடைக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு இவர்கள் வருகின்றனர். இங்குள்ள சூழல் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் தம்மீதான அத்துமீறல்களின் போது அந்த விடயங்களை முறையிடுவதற்கு உள்ள தயக்கம், போதிய வலுëட்டலின்மை போன்ற  காரணங்களினால் இவ்வாறான விடயங்கள் மறைக்கப்படுகின்றன. இந்த நிலை தனியே தோட்டப்புற பெண்களுக்கு மட்டும் ஆனதல்ல. ஏனைய பெண்களின் நிலையும் இதுதான். இலங்கையில் 75 வீதமான பெண்களுக்கு சுயகௌரவம் என்பது தொழில் ரீதியாக வழங்கப்படுவதில்லை." என்று கூறினார்.

மாலதி தன் நிலை பற்றி மேலும் கூறுகையில், 'தோட்டத்தில் எங்களை போல்  காமென்டில் வேலை செய்பவர்களை ஏளனமாகத்தான் பார்க்கிறாங்க.  கொரோனா காமென்டில் பரவியதால் நாங்கள் தோட்டத்துக்கு  வருவதையும் பலர் விரும்பவில்லை. இதனாலும் எம்மீது வெறுப்பு பேச்சை சமூக ஊடகங்களினூடக  வெளிப்படுத்துகின்றனர். இது எமது குடும்பத்தையும் பாதிக்கின்றது." என்கிறார்.

இவ்வாறான வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பின் தலைவி திருமதி.தேவகி இராஜகோபால் அவர்களிடம் வினவப்பட்டது. மலையகப் பெண்கள் மீது கடுமையான அழுத்தங்களும் அவÀறுகளும் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரப்பட்டிருக்கின்றன. இப்போது கொரோனா தொடர்பில் தமது சமூகத்தினுள்ளேயே வெறுப்பு பேச்சுகளுக்கு பெண்கள் ஆளாகியுள்ளனர். கொரோனாவை பரப்புபவர்களாக, தோட்டத்தை விட்டு தேவையற்று வெளியில் போகிறார்கள் என்றும் அவர்களது பொருளாதார தேவையின் முக்கியத்துவத்தை உணராது கூறுகின்றனர். ஏற்கனவே புரையோடிப் போயிருந்த பெண்களுக்கான அங்கீகாரமின்மை மீள நிறுவப்பட்டது போன்று உணரப்பட்டது. இது ஒரு ஆபத்தான நடைமுறையாகும். எமது யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. எவ்வித ஆதாரமுமின்றி பொதுப்புத்தியுடன் சமூகம் இதனை எதிர்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் அவர்களை தனிமைப்படுத்தும் விடயங்களாகும். 

மேலும் பெருந்தோட்ட பிரதேசங்களில் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இவை அம்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை சமூகமயப்படுத்துவதற்கு வழங்கிய பங்களிப்புக்கள் போதாது. அச்சமூகங்களில் இருந்து தொழிற்துறைக்கு வெளியில் வரும் ஏனைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கான பயிற்சிகள், நீதித்துறை வழிகாட்டல்கள், மறுவாழ்வு முயற்சிகள் என்பன வழங்குவதற்கான முயற்சிகளை எமது ஒன்றிணைந்த தொழிற்சங்கம் மேற்கொள்கின்றது. இதற்கூடாக வெறுப்பு பேச்சு கலாசாரத்தை மாற்றியமைக்க முடியும்" என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஒரு தனிநபர் வெறுக்கத்தக்க வகையில் சமூகத்தில் பரிகாசம் செய்யப்படும் போது அது பெரிதாக அதிர்வுகளை 

ஏற்படுத்துவதில்லை. எனினும் அவர் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்திருந்தால் வெறுப்புப் பேச்சு பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் போது அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எமது ஒருங்கிணைந்த தொழிற்சங்கம் அவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களை எதிர் கொண்டுள்ளது. (புநனெநச டீயளந ஏழைடநnஉந) என்று சொல்லக் கூடிய பாலியல் சார் வன்முறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடமுடியும். அதேப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை, மற்றும் ஆற்றுப்படுத்தல் சேவைகளும் அவசியமாகும்" என்று குறிப்பிட்டார்.

அதேநேரம் தோட்டப்புற பெண்களின் தொடர் பின்னடைவுக்கு காரணமாக இருப்பது தமது இளவயதுக் காலங்களை இவ்வாறான தொழிற்துறைகளில் முதலிடும் இவர்கள் தேர்ச்சியடையாத தொழிலாளர் படையாகவே தொடர்ந்தும் இருப்பதாகும். அதாவது இவர்கள் ஆடைத்தொழிற்சாலை அனுபவங்களை கொண்டு இவர்கள் பிறிதொரு தொழிலைத் தேட முடியாதது. 

மேலும் இவர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு பல்வேறு உட்கூறுகளை நாங்கள் அபிவிருத்திச் செய்ய வேண்டிள்ளது. குறிப்பாக இவர்களின் பாடசாலைக் கல்வியை வலுëட்டுவதும், தொழிற்பயிற்சிகளை வழங்குவதும் அவசியம். மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பு  இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். எனினும் இவை பெண்களின் பக்கம் பாதிக்கப்பட்டோர் சார்ந்தது. ஆனால் வெகுசன சமூகம் அதிலும் குறிப்பாக சொந்த சமூகம் இவர்களை பார்க்கும் வெறுப்புப் பார்வையை மாற்றுவதற்கு அவர்கள் பால்நிலை சமத்துவ அறிவைப் பெறவேண்டும். முதலில் தமது வீட்டுக்குள் இருக்கும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்." என்றார்.

இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் தாம் வேலைக்கு போக விரும்பவில்லை என்பதையும் கூறுகின்றனர்.   

'சமூகம் எங்களை இழிவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றது. இதனை  மாற்றுவது கஸ்ரம். எங்கள் மூலமாக ஊருக்குள் கொரோனா  வந்துவிடும் என்று பயப்படுகின்றனர்.  இதனால் நான் யார் வீட்டுக்கும் இதுவரை போனதில்லை. எங்கள் வீட்டுக்கும் கூட யாரும் வருவதில்லை. இந்த  அனுபவம் மிகவும் மோசமானதாக இருக்கின்றது. நாம் வேறு வேலை தேடவேண்டும்" என்கிறார் மாலதியின் நண்பி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை).

வீட்டின் நாட்டின் பொருளாதார தூண்களாக மட்டுமல்லாமல் சமூக உற்பத்தியின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் பெண்களின் உடல், உள நலத்தை பாதுகாத்து வளமான சமூகத்தை கட்டி எழுப்ப நாம் ஒவ்வொருவரும் முயலவேண்டும். பெண்கள் தொடர்பில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொய்மைகளை உடைத்து உண்மைகளையும் தேவைகளையும் உணர்ந்து மக்கள் செயற்படவேண்டும். அதுதான் சமூகத்தை முன்னேற்றும்.

'பொதுவாகவே ஆடைத்தொழிற்சாலையில் மட்டுமல்ல வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களையுமே தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக பிறப்பிரதேசங்களில் இருந்து தொழிலுக்கு வரும் யுவதிகள் தனியார் தங்குமிடங்களிலேயே இருக்கின்றனர். எல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கவேண்டியவர்களாகின்றனர். தன்னிச்சையாக இயங்கவேண்டி மனபலம் அவர்களுக்க வேண்டும். தற்துணிபு, தற்பாதுகாப்பு என அவர்கள் மனபலம் அடையவேண்டும். ஆனால் மற்றவர்களின் கண்ணோட்டத்தில் இவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு, ஆண்களின் துணை இல்லாமல் இருப்பதன் காரணமாக இவர்கள் தவறான நடத்தையுடையவர்களாக பார்க்கப்படுகின்றனர். இது எமது சமூகத்தின் கீழ்த்தரமான கண்ணோட்டமாக அமைந்துள்ளது. 

இவ்வாறான நிலைமை இப்பெண்களின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. இது எல்லா சமூகத்தினர் மத்தியிலும் இவ்வாறான கருத்து நிலையே உள்ளது. இந்த மனநிலையை மாற்றாமல் இவ்வாறான சமூக அபிப்பிராயத்தை மாற்ற முடியாது." என்கிறார் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு செயற்பாட்டாளர் எஸ். மோகனதர்~pனி.

இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் அரசியல் லாபங்களுக்காக சமூகங்களை கூறுபோட்டு வைத்துள்ள இக்காலத்தில் தமது சமூகப் பெண்களை தாமே புறந்தள்ளாது பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் அவர்களின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மதித்து செயற்பட ஒவ்வொரு சமூகத்திற்கும் கடப்பாடு உண்டு. 

நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates