Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொழும்பின் 15 வலயங்களும், பின்புலக் கதைகளும் ( கொழும்பின் கதை - 48) - என்.சரவணன்

ஒரு புறம் கொழும்பு என்பது கொழும்பு மாநகர சபை வலயமாகவும், அதற்கு வெளியில் உள்ள நகர சபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கொழும்பானது நிர்வாக வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்றைய கொழும்பு நகரம் 15 அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கொழும்பின் நகராக்கம் வலுவடைந்து மக்கள் செறிவும், உட்கட்டமைப்பின் விரிவாக்கமும் பறந்து விரிந்த போது இவ்வாறு அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கும் தேவை உருவானது.

கொழும்பு 1 - கொழும்பு கோட்டை

கொழும்பின் உருவாக்கமே அதன் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி, பின்னர் வளர்ந்தது பற்றியும், விரிவாகி நாட்டின் தலைநகராக ஆனதன் பின்புலத்தை இதற்கு முன்னர் பார்த்தோம். இத்துறைமுகமானது இயற்கையின் விலைமதிப்பற்ற கொடையாகும், இது வெளிநாட்டு வர்த்தகர்களை மட்டுமல்ல, படையெடுப்பாளர்களையும் ஈர்த்தது. முதலில் போர்த்துகீசியர்கள் (1505-1656) கொழும்பு துறைமுகத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டினார்கள், இரண்டாவதாக டச்சுக்காரர்கள் (1656-1796) மற்றும் மூன்றாவதாக ஆங்கிலேயர்கள் (1796-1948) அதை மேலும் மாற்றியமைத்து மேம்படுத்தினர். இந்த மூன்று காலனித்துவ சக்திகளிலேயே கோட்டையை பலமாக கட்டி அதனைப் பேணியவர்கள் டச்சுக் காரர்கள் தான். இந்த பண்டைய கொழும்பு நகர எல்லைகள் கொழும்பு கோட்டையிலிருந்து புறக்கோட்டை வரை மட்டுமே இருந்தது.

கொழும்பில் ஆங்கிலேயர் படையெடுப்பின் போது பதினொரு காவலரண்கள் (Bastians கொத்தளங்கள் அல்லது முன்னரண் முகப்பு என்றும் கூறலாம்) இருந்தன. அவற்றில் இரண்டு பீரங்கிகள் பொருத்தப்பட்ட கொத்தளங்கள். அதைவிட கோட்டைக்குள் நான்கு பிரதான வீதிகளும் இருந்தன. போர்த்துக்கேயரிடம் இருந்து கோட்டையைக் கைப்பற்றியதும் 1656இல் டச்சுக்காரர்கள் கோட்டையை பலமாகக் கட்டினார்கள். 11 கொத்தளக் காவலரண்களுக்கும் ஒல்லாந்திலுள்ள பிரசித்தி பெற்ற நகரங்களின் பெயர்களை அவற்றுக்கு சூட்டினார்கள். உதாரணத்துக்கு ஒல்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாம், ரொட்டர்டாம், டெல்ப் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். ஆம்ஸ்டர்டாம் என்று அன்று அவர்கள் பெயரிட்டிருந்த பகுதி என்பது இன்று கொழும்பு துறைமுகத்திற்குள் இருக்கிற சுங்கக் கட்டிடம் அமைந்திருக்கிற பகுதியைக் குறிக்கும்.


கோட்டையின் அரை வட்டப் சுற்றுப் பகுதியில் பெரிய அகழியையும் அவர்கள் கட்டி இருந்தார்கள். கடலைச் சூழ இருந்த பகுதிகளுக்கு அகழி அவசியப்படவில்லை. ஆனால் அதற்கு எதிர்புறமாக நிலத்தோடு தொடர்புடைய கிழக்குப் பகுதியில் அகழி இருந்தது. ஆங்கிலேயர்கள் 1869 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டையின் சுற்றுச் சுவர்களை அடையாளமே  தெரியாதபடி  இடித்துத் தள்ளினார்கள். இனி ஒரு ஆக்கிரமிப்புக்கான வாய்ப்பே இல்லை என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். அப்படி இடிக்கப்பட்ட சுவர்களையும் கொத்தளங்களையும் அகழியில் நிரப்பித் தான் நிலத்தை புறக்கோட்டையுடன் தொடுத்தார்கள். இன்றைய கபூர் கட்டிடம், YMBA கட்டிடம், அதனோடு இருக்கும் தொலைதொடர்பு திணைக்களத்தின் பின் புற வீதி உள்ள பகுதிகளே அவ்வாறு கோட்டையின் அகழியாக இருந்த பகுதிகள். 

இன்றும் கொழும்பு இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார மையமாகத் திகழும் பகுதிகளினூடே  அலைந்து திரிந்தால் கொழும்பு கோட்டையின் சில எச்சங்களை இன்றும் காணலாம்.

கொழும்பு 2 - கொம்பனி வீதி

கடந்த காலத்தில் கொம்பனித் தெருவின் பிரபலமான பெயர் ஸ்லேவ் ஐலன்ட் எனப்பட்டது. அதாவது அடிமைத் தீவு. இன்றும் அந்த பகுதி ஆங்கிலத்தில் (Slave Island) என்று அழைக்கப்படுகிறது. மேற்படி பிரதேசமானது இன்றைய கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை அல்லது யூனியன் பிளேஸ் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது.

போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட 2000 மொசாம்பிக் காபிரி மக்களை (கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து) இந்த நாட்டிற்கு அழைத்து வந்தனர், பின்னர் டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கூலிப்படைகளாகவும், வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும் பயன்படுத்தினர். அவர்கள் அடிமைகளாகவே கொண்டு வரப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட புகழ்பெற்ற 'காபிரி கிளர்ச்சி'யின் போது டச்சு அதிகாரி பேரன்ட் டி ஸ்வான் (Barent de Swan) கொல்லப்பட்டதால், டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கடுமையான பாதுகாப்பில் வைத்திருக்க சட்டங்களை அறிமுகப்படுத்தினார். அந்த கிளர்ச்சிமோசமாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிமைகள் பேரை வாவியின் நடுவில் உள்ள தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்கள் அங்குள்ள குடிசைகளிலும் அறைகளிலும் வைக்கப்பட்டனர். ஏரியில் உள்ள முதலைகள் அவை தப்பிக்காமல் இருப்பதை உறுதிசெய்தன, மேலும் எதிர்கால கலவரங்களை நடத்தும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு அங்கே தூக்கு மேடையும் நிரந்தரமாக அமைக்கப்பட்டது. அங்கே ரைபிள் ரெஜிமென்ட் (Rifle Regiment/Company) நிறுவப்பட்டதன் பின்னர் ஸ்லேவ் ஐலன்ட் (Slave Island) என்று அழைக்கப்பட்ட இடம் பின்னர் கம்பெனி தெரு என்று பெயர் மாற்றம் பெற்றது. 

கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி

1664 இல் உடுநுவர அம்பன்வெல அப்புஹாமியும், சத்கோரளே மன்ன அப்புஹாமியும், அட்டகலங்கோரளே சுந்தர அப்புஹாமி ஆகியோர் இரண்டாம் இராஜசிங்க மன்னருக்கு எதிராகக் சதிக்கிளர்ச்சி செய்தனர். இறுதியில் அது தோல்வியடைந்தது. அரச விரோதச் சதிகளுக்குத் தண்டனையாக மன்ன அப்புஹாமியும், சுந்தர அப்புஹாமியும் மரணதண்டனையின் மூலம் கொல்லப்பட்டனர். ஆனால் அன்று சக்திவாய்ந்த குடும்பப் பின்னணியையும் கொண்டிருந்த அம்பன்வெல அப்புஹாமி டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கரையோரப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

குறுகிய காலத்தில் டச்சுக்காரர்கள் அம்பன்வெல அப்புஹாமிக்கு (அம்பன்வெல ரால) கொழும்பிற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் ஒரு பெரிய நிலத்தை வழங்கினார்கள். அதற்குப் பிரதியுபகாரமாக கண்டி இராச்சியத்தின் தகவல்களை வழங்குவதற்கும் உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டனர்.

அம்பன்வெல அப்புஹாமி அந்த நிலத்தில் தென்னை பயிரிட்டு, டச்சுக்காரர்களின் உதவியுடன் சுற்றுப்புறத்தில் இருந்த மக்களின் நிலங்களை கையகப்படுத்தி நிலச்சுவாந்தராகவும் பணக்காரராகவும் ஆனார். கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் உருவாக்கிக் கொண்டார். வான் ரை-கோஃப் (Van Rycloff) என்கிற டச்சுப் பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார்.

சுற்றுவட்டார ஏழைகளின் நிலத்தை பலவந்தமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ அபகரித்துக் கொண்டிருந்தார் அம்பன்வெல அப்புஹாமி, அவரது செயலை எதிர்க்கும் சக்தி இல்லாத கிராம மக்கள், அந்தப் பகுதி கொள்ளையடிக்கப்பட்ட நிலம் என்பதால் “கொள்ள கே பிட்டிய” என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே திரிந்து கொள்ளுப்பிட்டி பின்னர் ஆனது.

கொள்ளுப்பிட்டி புனித மைக்கேல் தேவாலயமும், கல்லூரியும் இந்தக் காணியின் ஒரு பகுதியைச் சேர்ந்தது. கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து லிபர்ட்டி சுற்றுவட்டம் வரை அந்நிலப்பகுதி பரந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் புனித மைக்கேல் தேவாலயம் மற்றும் புனித மிக்கேல் கல்லூரி அமைந்துள்ள காணி பொல்வத்தை என்றும் புனித மைக்கேல் கல்லூரியின் முகவரி "பொல்வத்தை, கொழும்பு 03" எனவும் அழைக்கப்படுகின்றது.

கொழும்பு 4 - பம்பலப்பிட்டி

பம்பலப்பிட்டி என்ற பெயர் பிறந்ததற்கு அந்த பகுதியில் உள்ள மிகவும் வளமான ஜம்பு மரங்களே காரணமாகும். ஜம்போலா என்கிற சிங்களப் பெயரை சில இடங்களில் பம்பலொசி என்றும் அழைப்பார்கள். சிங்களப் பெயராக இருந்தாலும், இது தமிழில் 'பம்பலிமாசு' என்பதிலிருந்து திரிந்து போர்த்துகீச அல்லது டச்சுக் கலப்பு பெயராக திரிபடைந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஜம்போல, 'பாம்ப்லமூசஸ்' (பிரெஞ்சு) மற்றும் 'பொமலோ' என்றும் அறியப்படுகிற இந்த ‘ஜம்பு’ சிட்ரஸ் குடும்பத்தின் (citrus maxima) ஒரு பெரிய பழமாகும். பம்பலப்பிட்டி என்ற பெயர் இந்த வார்த்தைகளின் கலவையிலிருந்து பிறந்ததாக கொள்ளப்படுகிறது. காலி வீதியில் கொள்ளுப்பிட்டியின் முடிவெல்லையில் இருந்து பம்பலப்பிட்டி ஆரம்பிக்கிறது. தற்போது அதிக மக்கள் செறிவைக்கொண்ட இன்னொரு வணிக நகரமாக இருக்கிறது பம்பலப்பிட்டி.

கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன்

ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லொக் (Arthur Elibank Havelock) 1890 முதல் 1895 வரை இலங்கையின் பிரித்தானிய ஆளுநராக இருந்தவர். ஐந்து ஆண்டுகள் தான் அவர் ஆட்சி செய்தாலும் அவரின் காலத்தில் தான் கொழும்பிலிருந்து குருநாகல், பண்டாரவளை போன்ற இடங்களுக்கான  இரயில் பாதை விஸ்தரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அப்போது விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த “நெல்வரி” அவரின் காலத்தில் தான்  இரத்து செய்யப்பட்டது. கொழும்பின் ஒரு நகரத்துக்கே பெயரிடப்பட்ட ஒரே ஒரு ஆங்கிலேய ஆளுநரின் பெயர் அவரது பெயர் தான். அதுமட்டுமல்லாமல் ஹெவ்லொக் வீதி, எலிபேங்க் வீதி, ஹேவ்லாக் பிளேஸ் ஆகிய மூன்று வீதிகளும் இவரது பெயரால் சூட்டப்பட்டன. ஹவ்லாக் வீதி இன்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் தற்போதைய பெயர் சம்புத்தத்வ ஜெயந்தி மாவத்தை.

கொழும்பு 6 - வெள்ளவத்தை

வெள்ளவத்தை என்பது வெலி உயன என்கிற சிங்களச் சொல்லுக்கு சமமானது அந்தக் காலத்தில், புதைமணலால் கட்டப்பட்ட, காட்டுச் செடிகளாலும், புதர்களாலும், கடற்பரப்பிற்குச் செல்லும் பாழ்நிலமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால் இன்று காலி வீதியில் அமைந்துள்ள நகரங்களிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட வர்த்தக நகரமாக மாறியுள்ளது. பெருந்தொகையான நீர்வழிகள் மற்றும் கால்வாய்கள் வெள்ளவத்தை ஊடாக கடலைச் சென்றடைகின்றன. கொழும்பில் அதிகமான வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் வாழும் பகுதியாகவும் இது கொள்ளப்படுகிறது.


கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்

1765 முதல் 1785 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த வில்லெம் இமாம் பால்க் (Willem Imam Falck), விவசாய நிலங்களில் கறுவாப்பட்டை பயிரிடுவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதற்கு முன், கறுவாப்பட்டை காட்டில் இயற்கையாக வளரும் ஒரு செடி என்று நம்பப்பட்டது. கொழும்பின் மீதான போர்த்துகேயரின் ஆக்கிரமிப்பு மோகத்துக்கு கறுவாப்பட்டை உற்பத்தி முக்கிய காரணியாக அமைந்ததை அறிவீர்கள். அன்று இந்தக் கறுவாத் பயிடப்பட்ட பகுதி; தற்பதைய கொழும்பு 7 வலயத்திற்கு உட்பட்ட பகுதி உட்பட மருதானையிலிருந்து ஹெவ்லொக் டவுன் வரை 12 மைல்களுக்குள் பரவியிருந்தது. கொழும்பு 7 சிங்களத்தில் “குறுந்து வத்த” என்றும் ஆங்கிலத்தில் Cinnamon Garden என்றும் அழைக்கப்படுவதற்கு இந்த கறுவாப்பட்டையே காரணம். கொழும்பின் வசதி படைத்தவர்களும், அதிகமான வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்களும் உள்ள பகுதி இது.

கொழும்பு 8 - பொரளை

பொரளை என்பது சரளை (சிங்களத்தில் பொரளை) நிலத்திற்கு இணையான சொல்லாகும். சரளைக் மண், கற்கள் போன்றவற்றை அதிகமாகக் கொண்ட இடமாக அப்போது அறியப்பட்ட பிரதேசம் இது. போர்த்துகீசர்கள் இந்த இடத்தை Outeirinho das pedras (கற்களைக் கொண்ட குன்று) என்றும் அழைத்தனர். தற்போது, வார்ட் பிளேஸ், கலாநிதி டேனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி), ஞானார்த்த பிரதீபா வீதி மற்றும் கலாநிதி என். எம். பெரேரா மாவத்தை (கொட்டா வீதி) என்பன ஒன்றினையும் ஐந்து வழிச் சந்திப்பின் காரணமாக பொரளை ஒரு பரபரப்பான வர்த்தக நகரமாகும். நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான பிரதான வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) போன்றனவும் பொரளையில் அமைந்துள்ளது.

கொழும்பு 9 - தெமட்டகொட

ஒரு காலத்தில் நாகப்பாம்பு விஷக்கடிக்கு மருந்தாக “தெமட்ட பந்துரு”  (Gmelina Asiatica அல்லது Asiatic bushbeech) என்கிற மருந்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். புதரில் இருந்து கீழே தொங்கும் மணி வடிவ மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த புதர்கள் பொதுவாக மூன்று மீட்டருக்கு மேல் உயரம் இருக்காது. ஒருவேளை தெமட்டகொட பிரதேசமானது கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தெமட்ட புதர்கள் செழிப்பாக வளர்ந்த கிராமமாக இருந்திருக்கலாம் என்றே ஊகிக்கப்படுகிறது.

அல்லது இரு மொழிகளின் இணைப்பால் இப்பெயர் பிறந்திருக்கலாம். போர்த்துகீச மொழியில், ‘De mata’ என்பது காடு/வனம் என்று அர்த்தம். சிங்களத்தில் 'கொட' என்பது 'Village' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பயன்படுத்தப்படும் சொல். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தெமட்டகொட என்பது 'காட்டில் உள்ள கிராமம்' என்றும் பொருள்படலாம். லியோனார்ட் வூல்ஃப்பின் 'பத்தேகம' இந்த இடத்தில் நமக்கு நினைவுக்கு வரும். அவர் எழுதிய நூலின் சிங்களத் தலைப்பு “பத்தேகம”. (பத்தேகம கிராமம் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது.)

இன்று தெமட்டகொட ஒரு கிராமப் பிரதேசம் அல்ல. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதி. தேசிய இரயில்வே அருங்காட்சியகம் தெமட்டகொடாவில் அமைந்துள்ளது. மேலும் தெமட்டகொடாவில் பல்பாதை மேம்பாலமும் இப்போது உள்ளது.

கொழும்பு 10 - மருதானை

மருதானை தமிழ்ச் சொற்களின் சேர்க்கை என்றே கொள்ளப்படுகிறது. தமிழில் உள்ள மரமும், ஸ்தானமும் இணைந்து திரிந்து மருதானை ஆனதாக சிங்கள மொழிக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது மருதானை 'மரங்களின் இடம்' ஆக இருக்கக் கூடுமோ?

க்ளோப் ஆதரின் (Clough’s definition) வரையறையின்படி, 'மரதான' என்பது 'மணல் பள்ளத்தாக்கு' என்பதன் பொருளில் இருந்து பிறந்தது. மருதானை பிரதேசத்தின் மணல்மேடுகளில் தான் முதன் முதலில் செயற்கையாக கறுவாப்பட்டை செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து கிடைக்கும் அறுவடை இலங்கையின் சிறந்த கருவாப்பட்டையாகக் கருதப்பட்டது. இந்த மண்ணில் கறுவாப்பட்டை சிறந்த முதிர்ச்சி அடைய ஐந்து ஆண்டுகள் போதும், ஆனால் சாதாரண மண்ணில் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

மருதானையின் கறுவாப்பட்டை மிகவும் பெரியதாக இருந்தது. அதன் சிறப்புக்கு உதாரணமாகக் கூறுவதாயின் டச்சுக் காலத்தில் அங்கிருந்த கறுவாப்பட்டையை திருடினாலோ, அப்பயிர்செய்கைக்கு சேதமேற்படுத்தினாலோ மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளில், அத்தகைய குற்றம் விளைவித்தவர்களுக்கு சாட்டையடியால் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.

இன்றைய மருதானை, இலங்கைத்தீவின் தெற்கில் இருந்து வரும் ரயில்களுக்கான சந்திப்பாக திகழ்கிறது. பிரதான கோட்டை ரயில் நிலையத்தின் பரபரப்பான வளாகத்துடன் இது இணைக்கபட்டிருக்கிறது. இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

கொழும்பு 11 – புறக்கோட்டை

சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” என்பதன் தமிழ் அர்த்தம் புறக்கோட்டை என்று பொருள். ஆனால் ஆங்கிலத்தில் pettah என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த பெட்டா என்ற சொல் தமிழின் பேட்டை என்கிற சொல்லில் இருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது. Hobson-Jobson's ஆங்கில அகராதியின்படி, Pettah (தமிழ்ப் pettāi) என்பது ஒரு கோட்டையுடன் இணைக்கப்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும் அல்லது கோட்டையை ஒட்டிய நகரமாகும். முன்பெல்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாகவும், திறந்த வெளியில் கடைத் தெருவும், சந்தையும் இருந்தது. இன்று, புறக்கோட்டையில் குறுகிய முடுக்குத்தெருக்களும், குறுகிய பாதைகளும் சேரிகளின் ஒரு பிரமையைத் தருவதாக கூறப்படுவதுண்டு. இது இலங்கையின் மொத்த / சில்லறை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.

கொழும்பு 12 - அளுத்கடை

1656 இல் போர்த்துகீசியர்களுக்கு எதிரான கடைசி வெற்றிகரமான போரில் டச்சு ஜெனரல் ஜெரார்ட் ஹல்ஃப்ட் (Gerard Hulft) கொல்லப்பட்டார். 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயர்களை வெளியேற்ற அந்த நேரத்தில் கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் ராஜசிங்க மன்னனுடன் அவர் கூட்டணி வைத்தார். ஹல்ஃப்ட் இறப்பதற்கு முந்தைய நாள், அவர்கள் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் இரண்டாம் ராஜசிங்க மன்னர் ஜெனரல் ஹல்ஃப்ட்டின் கழுத்தில் ஒரு 'தங்க மாலையையும் தனது சொந்த மோதிரத்தை டின் விரலிலும் அணிவித்தார் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பைக் குறிக்கிறது.

மறுநாள் ஜெனரல் இறுதிப் போரில் பயன்படுத்தக்கூடிய முன் வரிசை அகழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை போர்த்துக்கேயர்கள் டச்சு மண்டபத்திற்கு தீ மூட்டினர். ஹல்ஃப்ட் மும்முரமாக பணியில் இருந்த வேளை அவரின் இதயத்தில் வந்து பாய்ந்தது. அதே இடத்தில் அவர் இறந்தார். அவர் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்ட மேட்டுப் பகுதி பல நூற்றாண்டுகளாக ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்ற பெயருடன் தொடர்கிறது.

ஆங்கிலேயர்கள் புறக்கோட்டை சந்தையை இந்த மேட்டுப்பகுதியின் அடிவாரத்தில் கொண்டு வர முயற்சித்ததன் விளைவாக, அந்த இடத்திற்கு 'அழுத் கடே’ என்று பெயரானது. நியூ பஸார் என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றைய இலங்கையின் ஏறக்குறைய அனைத்து சட்ட நிறுவனங்களும் அளுத்கடையில் அமைந்துள்ளன. அவற்றில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நீதி அமைச்சு ஆகியவை அடங்கும்.

கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை

ஒரு சிறிய மீன்பிடி கிராமமான கொட்டாஞ்சேனை, அங்குள்ள கொட்டாங்காய் மரங்கள் (Costus Speciosus) நிறைந்திருதந்தால் அதன் பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்த இடம் கொட்டாஞ்சினா (Kottanchina) என்று அழைக்கப்பட்டது. டச்சு மொழியில், 'Korteboam' என்றால் 'குட்டையான மரங்கள்' எனப்படும். இறுதியாக, ஆங்கிலேயர்கள் கொட்டன் சைனாவாக (Cotton China) மாற்றினர்.

1760 ஆம் ஆண்டு முதலே கொட்டாஞ்சேனையில் ஒரு தேவாலயம் இருந்தபோதிலும், இந்த சிறிய கிராமம் 1838 இல் புனித லூசியாஸ் கதீட்ரல் தேவாலயம் நிறுவப்பட்ட பின்னர் நகரமயமாக்கப்பட்டது.

கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்

போர்த்துக்கேயர் காலத்தில் களனி ஆற்றைக் கடந்து வடக்கே செல்ல இரண்டு படகுத்துறைகள் இருந்தன.  போர்த்துகீசியர்கள் இதை 'பஸ்ஸோ' (Passo) என்று அழைத்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் அதை 'பாஸ்' என்று ஆங்கிலத்தில் அழைத்தனர். முதல் படகுத்துறை இன்றைய நாகலகம் வீதியின் முனையிலிருந்தது. இது போர்த்துகேயர் காலத்தில் 'பாஸோ கிராண்டே' (Passo Grande) என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அது கிராண்ட் பாஸ் ஆனது. இரண்டாவது துறை வத்தளைக்கு அருகாமையில் இருந்தது. கிராண்ட்பாஸ் படகுச்சேவை மிகவும் பரபரப்பான இடமாகவும், அதற்கென்றே சந்தையும் வரி வசூலிப்பு நிலையமும் இருந்தது. 1822 இல் தான் படகுகளின் மேல் மிதக்கும் பாலம் (Pontoon Bridge) கட்டப்பட்டது. அதன் பின்னர் படகுச் சேவை குறைந்து பின்னர் அச்சேவை நிரந்தரமாக முடிவுக்கு வந்தது. இந்தப் பாலத்தை 21 படகுகள் தாங்கியிருந்தன. அதன் நீளம் 499 அடியைக் கொண்டிருந்தது. 1895 ஆம் ஆண்டில் 26 அடி அகலத்தில் விக்டோரியா பாலம் கட்டப்படும் வரை இப்படித்தான் அந்தப் பாலம் இயங்கியது. அதற்கு 30 வருடங்களுக்கு முன்னர் களனி ஆற்றின் குறுக்கே ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

கொழும்பு 15 – முகத்துவாரம்

கடலுடன் வந்து கலக்கும் ஆற்றின் முனையத்தை முகத்துவாரம் என்று அலைக்கபடுவது வழக்கம். அப்படி வந்தது தான் களனி கங்கை வந்து கலக்கும் இந்த முனையம். அதேவேளை போர்த்துக்கேயர், டச்சுக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட 'முத்வால்' என்ற சொல் இன்றும் பயன்படுத்தபாட்டில் இருக்கிறது. இன்றைய முகத்துவாரப் பிரதேசத்தில் வடகொழும்பைச் சேர்ந்த மட்டக்குளி, மோதர, கதிரான, காக்கைத் தீவு என்பவை அடங்குகின்றன.

கொழும்பின் வலயங்கள்

அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள்

கொழும்பு 1 கோட்டை

கொழும்பு 2 கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ்

கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி

கொழும்பு 4 பம்பலப்பிட்டி

கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம், கிருலப்பனை

கொழும்பு 6 வெள்ளவத்தை, பாமன்கடை

கொழும்பு 7 கறுவாத் தோட்டம்

கொழும்பு 8 பொரல்லை

கொழும்பு 9 தெமட்டகொடை

கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை

கொழும்பு 11 புறக்கோட்டை

கொழும்பு 12 புதுக்கடை, வாழைத் தோட்டம்

கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை

கொழும்பு 14 கிராண்ட்பாஸ்

கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி, மாதம்பிட்டி

நன்றி - தினகரன் (26.11.2022)



விக்டோரியா கண் ஆஸ்பத்திரியும் ஸ்கின்னரின் தற்கொலையும் (கொழும்பின் கதை - 47) - என்.சரவணன்

விக்டோரியா மெமோரியல் கண் மருத்துவமனையானது (Victoria Memorial Eye hospital) அதன் கம்பீரமான கட்டிடக்கலையுடன் கொழும்பில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இது லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழ்ந்த கட்டிடங்களில் பெரிய கட்டிடம் இது. உலகம் முழுவதும் பிரபலமான சிலோன் தேயிலையை நினைவுகூருவதற்காக பெயரிடப்பட்ட சுற்று வட்டமே லிப்டன் சுற்றுவட்டம் என்பதை நாம் அறிவோம். மகப்பேறு மருத்துவமனையை நடத்தி வந்த பரோபகாரரும் தொழில்முனைவோருமான சார்ள்ஸ் ஹென்றி டி சொய்சாவின் பெயரால் டி சொய்சா சுற்று வட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1906 இல் நிறுவப்பட்ட விக்டோரியா நினைவு மருத்துவமனைக்கு விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

இந்த சிவப்பு செங்கல் கட்டிடமானது காலனித்துவ காலத்தை நினைவு கூறும் முக்கிய கட்டிடங்களில் ஒன்று. 1894 ஆம் ஆண்டு இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரான எட்வர்ட் ஸ்கின்னரால் (Edward Skinner) இது வடிவமைக்கப்பட்டது. அதன் கட்டுமான வெளித்தோற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு செங்கற்கள் பிரமாண்டமானதும் தனித்துவமானதுமான தோற்றத்தை அளிக்கிறது. சிவப்பு செங்கற்களினாலான கட்டிட அமைப்புமுறையின் வரலாறானது மத்திய, வடமேற்கு ஐரோப்பாவில் 12 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது. லண்டனில் உள்ள பல பிரபலமான 19 ஆம் நூற்றாண்டின் மருத்துவமனைகள் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனை மற்றும் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை (Moorfields Eye Hospital) போன்றவை சிவப்பு செங்கற்களால் செய்யப்பட்டவை.


கொழும்பில் காலி முகத்திடல் ஹோட்டல் (மீள் நிர்மாணம்), கார்கில்ஸ் கட்டிடம், விக்டோரியா மேசோனிக் தேவாலயம், வெஸ்லி கல்லூரி, கோட்டையில் உள்ள லொய்ட்ஸ் (Lloyds) கட்டிடம், மற்றும் காலி வீதியில் உள்ள செயின்ட் அன்ட்ரூஸ் ஸ்கொட்ஸ் தேவாலயம் (St. Andrew’s Scots Kirk) உள்ளிட்ட பல முக்கிய கட்டிடங்களை வடிவமைத்தவர் எட்வர்ட் ஸ்கின்னர். மேற்கத்திய கட்டிடக்கலையில் கோதிக் மறுமலர்ச்சி 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தாலும், எட்வர்ட் ஸ்கின்னர் இந்த கண் மருத்துவமனைக்கு இந்தோ-சராசெனிக் (Indo-Saracenic) வடிவத்தை முடிவு செய்தார். குவிமாடங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் முகலாயர் காலத்து கட்டிடக்கலையை நினைவூட்டுகிறது. அதுபோல் கதவுகளிலும், ஜன்னல்களின் நேர்த்தியான, அழகான பாலிக்ரோம் (polychrome) செங்கல் வளைவுகள் உள்ளன. கட்டிடக்கலை ரீதியாக அது உலகின் சிறந்த காலகட்டத்தின் நினைவைத் தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடியும். 


அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர் சேர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வேயின் (Sir Joseph West Ridgeway) மனைவி, லேடி ரிட்ஜ்வே என்று அழைக்கப்பட்ட கரோலினா எலன் (Carolina Ellen), 1903 ஓகஸ்ட் 6 அன்று விக்டோரியா கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தவரும் லேடி ரிஜ்வே தான். 1902ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆஸ்பத்திரியை நமது இராணியின் நினைவாக கட்டுவதற்கு ஆதரவு தரும்படி வேண்டினார். அதன் விளைவாக பல தனவந்தர்களும் பொது மக்களும் நிதியளித்தார்கள். உடனடியாக 30,000 ரூபா சேர்ந்தது. இறுதியில் அது ஒரு லட்சம் வரை உயர்ந்தது. அன்று நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மாத்திரம் 4000 ரூபாய் இதற்காக வழங்கினார்கள். திருமதி ஜேம்ஸ் பீரிஸ் 5000 ரூபாய் வரை சேகரித்துக் கொடுத்தார்.


இதற்காக நிதி வழங்கிய பலரின் பெயர் பட்டியல் Arnold Wright, எழுதிய “Twentieth Century Impressions of Ceylon” நூலில் காணக்கிடைகிறது. பி.குமாரசுவாமியின் பெயரும் அதில் அடங்கும். அன்று தனவந்தர்களாக இருந்த சேனநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த டீ.எஸ்.சேனநாயக்க இக்கட்டிடத்துக்காக வழங்கிய நிதிப் பங்களிப்பின் காரணமாக ஆங்கிலேய ஆளுநர் ரிஜ்வே முதலியார் பட்டம் வழங்கி கௌரவித்தார். பொது மக்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்ததை விட கிடைத்தது. அரசும் தனது பங்கையும் சேர்த்து கட்டிய கட்டிடம் தான் இது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் இந்த ஆஸ்பத்திரியை உருவாக்கி முடிக்க செலவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பலரின் மிகுந்த நம்பிக்கையுடன் சிறந்த கண் மருத்துமனையாக 1906 ஏப்ரல் 2ஆம் திகதி பொதுப்பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.  அது திறந்து புதிய ஆளுநர் மாற்றப்பட்டிருந்தார் எனவே புதிய ஆளுநரின் மனைவி லேடி எஷ்மோர் (Lady Ashmore) திறந்து வைத்தார்.  1906 ஆம் ஆண்டில் இது காலனி நாடுகளிலேயே சிறந்ததாகக் கருதப்பட்டது. இது இப்போது இலங்கையின் தேசிய மருத்துவமனையின் ஒரு பகுதியாகும்.  

பிற்காலத்தில் கண் மருத்துவ சேவைகள் பழைய மருத்துவமனையிலிருந்து எதிர் மூலையில் இருந்த புத்தம் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1962 இல் கொழும்பு புதிய தேசிய கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. பழைய விக்டோரியா நினைவு மருத்துவமனையின் சில பகுதிகள் சிதைக்க அனுமதிக்கப்பட்டாலும், இம்மருத்துவமனை தொடர்ந்தும் சேவை அளித்து வந்தது. சுகாதாரத் துறையில் இடத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க விக்டோரியா ஞாபகார்த்த வைத்தியசாலையில் திடீர் விபத்து சேவையை திறந்து வைத்தார். அதனைச் சூழ இருந்த பகுதியானது சின்னபொரளை வரை கொழும்பின் மருத்துவ மனைகளின் மத்திய தளமாக மாறியது. கொழும்பு மட்டுமன்றி இலங்கையின் மூளை முடுக்கெங்கிலும் இருந்து தரமான மருத்துவ சேவையை நாடிவரும் சாதாரண குடிமக்களின் நம்பிக்கை ஆலயங்களாக இந்த மருத்துவக் காடு திகழ்கிறது. நாளாந்தம் உடல்நலம் வேண்டி, நாடி  வரும் லட்சோப பாமர மக்கள் இன்றும் பயனடையும் இடமாக இது இன்று மாறியிருக்கிறது.


லிப்டன் சுற்றுவட்டத்தின் இன்னொரு புறத்தில் இன்று இருக்கிற அரச மருந்தகற் கூட்டுத்தாபனமான “ஒசுசல” கட்டிடம் ஒரு காலத்தில் அழகான பீக்கிங் ஹோட்டலாக இருந்தது. இன்று அப்படி ஒன்று இருந்ததை அறிந்தவர்கள் குறைவு.

விக்டோரியன் கட்டிடங்களின் பொது மருத்துவமனையானது குறுகிய தாழ்வாரங்களையும், ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்குச் செல்லும் கூரைபோட்ட பாதைகளும், அவற்றைக் கடந்து வரும் கலவரப்பட்ட சோக மனிதர்களும், நோயாளிகளும், எப்போதும் பல மருந்துகளின் கலவை மணம் பரவிய சூழலும் எவருக்கும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

இங்கே பல ஆண்டுகளாக பணிபுரிந்த டொக்டர் நிமால் அமரசேகர இந்த மருத்துவமனை குறித்து எழுதிய விபரங்கள் சுவாரசியமானவை.

“...இரவில், அதன் பெரும்பகுதி இருட்டாகவும், வெளிச்சமின்றியும் சமீப காலம் வரை இருந்தது. இருளில் அவை அச்சுறுத்தும் பாதைகளாக இருந்தன. பெரும்பாலான பழைய கட்டிடங்கள் பேய் குடிகொண்டிருக்கும் கட்டிடங்களாக உலகளவில் ஒரு விசித்திரமான நம்பிக்கை உள்ளது. அங்கெல்லாம் இரவில் மர்மமான நிகழ்வுகள் நடந்ததாக பல கதைகள் உள்ளன. சிலர் மருத்துவமனையை சூழ பேய் உருவங்கள் உலாவுவதாக நம்பினர். அந்தக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர்கள் விசித்திரமான சத்தங்களைக் கேட்ட கதைகளை பகிர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் மூடிய கதவுகளின் வழியாக மனித உருவங்கள் தோன்றுவதைப் பார்த்தார்கள். நான் இரத்த வங்கியில் ஒரு மங்கலான அறையில் தூங்கினேன். எனது எல்லா வருடங்களிலும் எனக்கு கீழே இருந்த விபத்து சேவையிலிருந்து அவ்வப்போது வலியின் அழுகை அல்லது விரக்தியின் அலறல்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை....”


விக்டோரியா கண் மருத்துவமனை, கட்டிடக் கலைஞர்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அக்கட்டிடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அனால் அது இன்று அதன் முக்கியத்துவம் அலட்சியம் செய்யப்பட்ட ஒன்றாக ஆகியிருக்கிறது. அதன் செங்கற்களால் ஆன முகப்பின் பிரமாண்டத்தையும் மகத்துவத்தையும் மறைக்கும் வகையில் பெரிய விளம்பரப் பலகைகளாலும் கதைகளாலும் மூடப்பட்டு காட்சி தருகின்றன. அற்புதமான நுழைவு வாயில்களும் நேர்த்தியான தாழ்வாரமும் இப்போது பயன்பாட்டில் இல்லை.

இலங்கையின் தேசிய வைத்தியசாலையின் ஒரு அங்கமாகவே இந்த வைத்தியசாலை உள்ளது. அவசர விபத்து சேவை, அவசர சேவை, தீக்காயங்கள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சில நரம்பியல் சத்திரசிகிச்சை சேவைகளையும் கொண்டிருப்பதுடன், ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வைத்தியசாலை தொகுப்பாக இன்று விரிந்திருக்கிறது.


புதிய கண் மருத்துவமனை ஒரு பெரிய கான்கிரீட் தொகுதியாகத் தோன்றினாலும், இது நவீன அமைப்பைக் கொண்ட அதிநவீன மருத்துவமனை மற்றும் மிக சமீபத்திய வசதிகளைக் கொண்டது. பெரிய வார்டுகள், சிறந்த வெளிச்சம் மற்றும் சத்திரசிகிச்சை வசதிகளுடன், மருத்துவ நிபுணர்களுக்கு மிகவும் சிறந்த பணிச்சூழலாக இருக்கிறது. விசாலமான காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிநோயாளர் கிளினிக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பெரிய காற்றோட்டமான பகுதிகள் பொதுமக்களுக்கு வசதியாக காணப்படுகிறது.

நிகழ்காலம் அனைவரையும் பிடிக்கும், ஆனால் கடந்த காலம் நம் வாழ்வில் எப்போதும் நிலைத்து இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றாலும், இப்போது கூட வண்ணப்பூச்சு வேலைபாடு சூரிய ஒளியில் அக்கட்டிடத்தின் புறத்தோற்றம் ஒரு தலைசிறந்த படைப்பென வெளிப்படுத்துகிறது.

எட்வர்ட் ஸ்கின்னர் (15.03.1869 – 26.12.1910)

ஸ்கின்னர் ஒரு தலைசிறந்த கட்டிடக் கலைஞர். 1893ஆம் ஆண்டு அவர் கட்டிடக் கலைஞராக உயர்கல்வியைக் கற்று பிரித்தானிய ராஜரீக கட்டிடக்கலை அமைப்பில் இணைந்த கையோடு அதே ஆண்டு தனது 24வது வயதில் இலங்கைக்கு குடிபெயர்ந்தார். 1897இல் இருந்து தான் அவர் கொழும்பில் தனது கட்டிட வடிவமைப்புகளை தொடங்கினார். அவரது கட்டிடக்கலை ஞானமும் வடிவமைப்பும் கொழும்பு நகரத்தின் பாராட்டைப் பெற்றன. கொழும்பின் காலனித்துவ கால கட்டிடங்களை நினைவு கொள்ள எஞ்சியிருக்கும் அழகான கட்டிடங்கள் பல அவரால் வடிவமைக்கப்பட்டவை. அவரின்  அலுவலகம் கொழும்பு கோட்டையில் இருந்தது.


அவர் கொழும்பு நகர வீதிகளில் அவர் சைக்கிளில் பயணம் செய்தார். திருமணமாகி சில மாதங்களில் 1910 யூலையில் அவர் ஒரு சைக்கிள் விபத்தில் சிக்கினார். அதனால் அவர்  மூளையதிர்ச்சியால் அவதிப்பட்டார். அதில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இறுதியில் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அவரது உடல் கோட்டையிலுள்ள அவரின் அலுவலகத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பற்றி அன்றைய சிங்கப்பூர் பத்திரிகையில் (டிசம்பர் 27 வெளியான சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையை ஆதாரம் காட்டி) அன்று வெளிவந்த செய்தியொன்றை கண்டெடுக்க முடிந்தது.  அதில் காலை உணவுக்கு வேளைக்கு வந்துவிடுவதாக கூறி மனைவியிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற ஸ்கின்னர் மதியம் தாண்டியும் வராத நிலையில் அவரைத் தேடி ஒஸ்திரேலியா கட்டிடத்தில் (Australia Building) இருந்த அவரின் அலுவலகக் கதவைத் திறந்த போது அவர் அங்கே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும், சைக்கிள் விபத்தின் பின் அவர் முற்றிலும் மாறிய மனிதாகவும், அடிக்கடி ஆத்திரமும், கவலையும் கொண்ட நபராக காணப்பட்டார் என்றும் அதில் காணக் கிடைக்கிறது.

கோட்டை கார்கில்ஸ் கட்டிடத்தை அன்று ஒஸ்திரேலியா கட்டிடம் என்று அழைத்தார்கள். இன்றும் கோட்டையில் பிரமிக்க வைக்கும் அக்கட்டிடத்தை வடிவமைத்தவர் கூட ஸ்கின்னர் தான். அவர் இறக்கும்போது அவரின் வயது 41 மட்டும் தான். இந்த குறுகிய காலத்துக்குள் அவர் முடித்து விட்டுச் சென்ற அற்புத படைப்புகள் காலத்தால் அழியாதவை. அப்படி அவரின் நினைவின் ஒரு பகுதி எப்போதும் விக்டோரியா நினைவு கண் மருத்துவமனையும் இருக்கும்.

நன்றி தினகரன் - 20.11.2022



சிறு தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களும் - அருள்கார்க்கி

தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியாள் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார் தோட்டங்கள் யாவும் தேயிலை சிற்றுடைமைகள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. காணி சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தேயிலை நிலங்கள் யாவும் இலங்கையர்களுக்கே சொந்தம் என்று அப்போதைய அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் அது தொழிலாளர்களுக்கு சொந்தமாகவில்லை. மாறாக தேயிலை காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்தமைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. இது அன்றே தேயிலை சிற்றுடைமைகளுக்கு அரசாங்கம் பக்கபலமாக இருந்ததற்கான அடிப்படையாகும். 

அன்று தொடக்கம் இன்றுவரை சிற்றுடைமையாளர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசாங்கம் பக்கபலமாக இருந்து வருகின்றது. 1975 இல் 117000 ஆக இருந்த தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் 1982 இல் 236000 ஆக அதிகரித்து 2006 இல் ஏறக்குறைய 319000 பேராக உயர்ந்துள்ளனர். இந்த தொகை 2017 இல் 395414 ஆகவும், 2018 இல் 399313 ஆகவும், 2019 இல் 400987 ஆகவும், 2020 இல் 404291 ஆகவும் படிப்படியாக அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. இது சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சிப் போக்கை மட்டுமல்லாது பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியையும் தெளிவுப்படுத்தும் குறிகாட்டியாகும். 

இவ்வாறு தேயிலை சிற்றுடைமையாளர்களாக உள்ளோரில் பெரும்பாலோனோருக்கு அரை ஹெக்டேயருக்கும் குறைவான தேயிலை நிலமே உரிமையாக உள்ளதுடன், இவர்களில் பெரும்பாலோனோர் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றனர். தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கான அதிகார சபையானது அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பொறுப்பாக செயற்படுகின்றது. அதேபோல் சமூக, பொருளாதார ரீதியாக இந்த தேயிலை சிற்றுடைமையாளர்களை பாதுகாக்கும் அமைப்பாகவும் இந்த அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. 

தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித நலன்பேண் திட்டங்களும் இல்லாத போதும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையானது பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் முக்கியமானது 1980 களின் பின்னர் உயர் விளைச்சல் தரக்கூடிய தேயிலை கன்றுகளை வழங்கி வருகின்றது. இலகு வட்டியில் கடன்களை வழங்கியமை, பச்சைத் தேயிலைக்கு உயர்ந்த விலையை வழங்கியமை, உரமானியம் வழங்கியமை ஆகிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொழில்சாலைகளை நிர்மாணிக்க உதவியமை போன்றவற்றைக் கூறமுடியும். 

இவ்வாறான எவ்வித உதவிகளும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கடந்த 150 வருடகாலமாக அறிய முடியவில்லை. இன்று தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்டங்களை விடவும் சிற்றுடைமைகளே அதிகமான விளைச்சலை கொண்டிருக்கின்றன. இதனை ஒப்பிடுகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மொத்த தேயிலை உற்பத்தியை சிறு தெயிலை தோட்டங்களே மேற்கொள்கின்றன. 

இலங்கையில் மொத்த விவசாய நிலத்தில் 16 சதவீதம் தேயிலை துறைக்கு சொந்தமானது. இதில் மொத்த தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி (வுநய ஊழவெசழட யுஉவ) நாடு முழுவதும் 20 பேர்ச்சஸ் முதல் 10 ஏக்கர் வரையிலான தேயிலை நிலங்கள் சிறிய தேயிலை தோட்டங்களாக கருதப்படுகின்றன. இந்த பின்னணியில் சிறிய தேயிலை தோட்டங்களின் வளர்ச்சியானது சமகாலத்தில் அபரிமிதமானதாக காணப்படுகின்றது. பெருந்தோட்ட கட்டமைப்பை மிஞ்சிய அளவில் கணிசமான வளர்ச்சியை சிற்றுடைமைகள் கொண்டுள்ளன. 

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கையின் படி (2020) இலங்கையின் தேயிலை உற்பத்தி மேலே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இது தேசிய தேயிலை உற்பத்தி மேலாண்மை நிறுவனங்களின் பங்களிப்பு ஆகும். அதன்படி சிற்றுடைமைகள் 2018 ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 75.02 சதவீதத்தை கொண்டுள்ளன. 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களிலும் முறையே 75.21 சதவீதம் மற்றும் 73.85 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. மறுபுறம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மொத்த உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 24.2 சதவீதம், 2019 ஆம் ஆண்டு 24.05 சதவீதம், 2020 ஆம் ஆண்டு 25.37 சதவீதம் என்றவாறு உள்ளது. இது சிற்றுடைமைகளின் சமகால வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாகும். 


2019 மற்றும் 2020 இரு ஆண்டுகளில் தேசிய தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்காக சிறு தேயிலை நிலப்பிரிவின் உற்பத்தி முக்கியமானதாக உள்ளது. இலங்கை தேயிலை சபையின் தேயிலை உற்பத்தி தொடர்பாக தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலங்களின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1766 கிலோகிராம் ஆகும். 2019 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலப் பிரிவின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1938 கிலோகிராம் என்றால் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் 8.8 சதவீத அதிகரிப்பாக கொண்டுள்ளது. 

தேயிலை காணிகளின் அபிவிருத்தியை பொருத்தவரையில் சிற்றுடைமைகளின் வளர்ச்சியானது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடக்கூட முடியாத அளவுக்கு சிறப்பாக காணப்படுகின்றது. பொதுவாக பெருந்தோட்ட கம்பனிகள் மீள்நடுகை விடயத்தில் சமகாலத்தில் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. ஆனால் சிற்றுடைமையாளர்களானது மீள்நடுகை விடயத்தில் சிறப்பான செயற்றிறன் கொள்கையை கடைப்பிடிக்கின்றன. 


2020 ஆம் ஆண்டில் மீள்நடுகைக்காக அனுமதிப் பத்திரங்களை வழங்கல் 41 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உரிமம் பெற்றவர்கள் பழைய தேயிலை அகற்ற விண்ணப்பிக்கப்பட்ட ஹெக்டேயர் அளவு 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேயிலை மீள்நடுகைக்காக தேயிலை அகற்றிய ஹெக்டேயர் அளவு 682 ஆகும். அந்த அளவு வருடாந்த இலக்காக நிலப்பரப்பின் அதாவது 840 ஹெக்டேயரில் 81 சதவீத வளர்ச்சியாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பழைய தேயிலை அகற்றும் சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்து அந்த நிலப்பரப்பு 306 ஹெக்டேயரில் அதிகரித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டில் சிற்றுடைமைகளின் மண் பதப்படுத்தல் இலக்காக கொண்ட நிலப்பரப்பு 624 ஹெக்டேயர் ஆவதோடு அதன் செயல்திறன் 94 சதவீத வளர்ச்சியாகும். இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணம்  மீள்நடுகை எடுக்கும் நிறுவன இலக்கு 376 ஹெக்டேயர் வரை வீழ்ச்சியாகும். ஒதுக்கீடு கட்டுப்பாடு என்றால் 2020 ஆண்டில் மண் மறுவாழ்வு இலக்கு 400 ஹெக்டேயர் ஆகும். 2020 ஆம் ஆண்டில் மண் பதப்படுத்தல் திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்ட நிலப்பரப்பு 411 ஹெக்டேயர் ஆகும். 

இவ்வகையாக தேயிலை  சிற்றுடைமைகளின் வளர்ச்சி காணப்படுமிடத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையானது பின்னோக்கி செல்கின்றது. அவர்களின் சம்பளம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. பொதுவாக நோக்குமிடத்து இவ்வாறான சிற்றுடைமைகளின் உரிமையாளர்களே அவற்றை நிர்வகிப்பவர்களாகவும், பராமரிப்பு, தொழிலாளர்களை கையாளுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுகின்றனர். எனவே இவர்களின் முதன்மை நோக்கமாக இருப்பது இலாபகரமான முறையில் அறுவடையை பெற்றுக் கொள்வது மாத்திரமே. தொழிலாளர்களின் நலன்பேண் விடயங்களில் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அதேபோல் இவ்வாறான சிற்றுடைமைகளில் தொழில்புரிவோர் எவ்வித இலக்க ரீதியான குழுவாகவும் இல்லாத காரணத்தினால் அவர்களின் உரிமைகள் தொடர்பாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படுவது இல்லை. இது சிற்றுடைமை உரிமையாளர்களுக்கு வாய்ப்பான ஒன்றாகும்.மேலும் தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் கிடையாது. அவர்கள் நாளாந்த கூலிக்கு தொழிலுக்கு வருபவர்களாவர். 

1950 ஆம் ஆண்டின் இலங்கையின் கைத்தொழில் சட்டம் (Induestrial dispute Act- 1950) எந்தவொரு தொழில்துறையிலும் பணியாளர்களின் வேலைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக உடன்பாடாக ‘கூட்டு ஒப்பந்தம்’ உருவாக்கப்பட்டது. (Cellective Agreement) முக்கியமாக தேயிலை தொழில்துறையில் இந்த கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் ஊதியத்தில் கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் புதுப்பிக்கப்படுகின்றது. ஆனால் தேயிலை சிற்றுடைமையாளர்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவது இல்லை. இது இவர்களுக்கு தமது ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குகின்றது. சிற்றுடைமையாளர்கள் தமது இலாப நோக்கத்தை இரட்டிப்பாக்கி கொள்வதன் கொள்கையை முழுமையாக விரிவுப்படுத்த இது வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இவர்களின் கொடுப்பனவு முறையை கேள்விக்குட்படுத்த எந்தவொரு அதிகாரம் பொருந்திய நிறுவனமும் இல்லை. என்பதும் ஒரு பாரிய குறைபாடாகும்.  

சுற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர சம்பளமாக ஒரு தொகையை நிர்ணயிப்பதில்லை. அவர்களின் அறுவடையை பொறுத்தே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. பெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிப்பதற்கு ரூ.30 வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது. இந்த தொகையானது அவர்களின் அறுவடையானது சராசரியாக 20 கிலோகிராமாக இருந்தால் அவர்களின் அன்றைய சம்பளம் ரூ. 600 மட்டுமேயாகும். ஆயினும் இன்று பச்சை தேயிலை ஒரு கிலோகிராம் சராசரியாக ரூ.200 வரை கொள்வனவு செய்யப்படுகின்றது. இவருமானத்தை அன்றைய தொழிலாளியின் நாளாந்த ஊதியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1ஃ7 மடங்காக காணப்படுகின்றது. 

தோழிலாளி ஒருவர் அன்றாடம் 20 கிலோகிராம் வரையில் பச்சை தேயிலையை அறுவடை செய்ய முடியுமா என்பதும் பாரிய சிக்கலான நடைமுறையாகும். அது தேயிலைச் செடியின் வயது, காலநிலை, மண்ணின் தன்மை, அறுவடை நடைமுறைகள் என்பவற்றை பொருத்து வித்தியாசப்படும். 

இது உற்பத்தி திறன் சார்ந்த ஊதியமாதிரி என்று அழைக்கப்படும். Produvtive link model அதாவது அவர்களுக்கு நிலையான ஊதியமொன்று இல்லை. அவர்களின் அறுவடையை பொறுத்து அவர்களின் நாளாந்த ஊதியம் தீர்மானிக்கப்படும். இருப்பினும் 2000 ஆண்டுவரை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை போலவே சிற்றுடைமையாளர்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாளாந்த ஊதியத்தை கொடுத்தனர். இது கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்டதாகும். பின்னாளில் அவர்கள் மிகை இலாபத்தை அடையும் நோக்குடன் அந்த நடைமுறையிலிருந்து விடுபட்டு தமக்கு சாதகமான உற்பத்தி திறன்சார்ந்த ஊதிய மாதிரிக்கு சென்று விடலாம். அதேபோல் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு, உழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு சேவைக்கால கொடுப்பனவு போன்ற எவ்வித நலன்புரி சேவைகளும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பதுளை மாவட்டத்தில் ஒரு சிற்றுடைமை தோட்டத்தில் தொழில்புரியும் அதிகமான பெண்கள் பெருந்தோட்டங்களில் சேவைபுரிந்து ஓய்வு பெற்றவர்களாவர். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. என்பது அந்த தேயிலை சிற்றுடைமை உரிமையாளரின் கருத்தொன்றாக இருந்தது. இதனை காரணம் காட்டி ஏனைய தொழிலாளர்களுக்கும் அந்த சேவை மறுக்கப்படுகின்றது. எத்தோட்டமும் மிகவும் இலாபகரமாக இயங்கும் ஒரு சிற்றுடைமையாகும். 

பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் அங்கு தொழில் புரியும் ஊழியர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு சேவைகளை வழங்குவது கட்டாயமாகும். வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, அடிப்படை உரிமைகள் போன்ற விடயங்களில் அவர்கள் நம்பமுடியாத சட்டங்க்ள ஓரளவு காணப்படுகின்றன. ஆயினும் இவ்வாறான தேயிலை சிற்றுடைமைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு உடைமையாளர்கள் எவ்வித அடிப்படை சேவைகளையும் வழங்குவதில்லை. அதிலும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் குடியிருப்புகளோ அல்லது வேறு எவ்வித பொதுச் சேவை கட்டிடங்களோ இல்லை. குறைந்த பட்சம் அவசர மருத்துவ தேவைகளை கூட தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

சிறியளவிலான மக்கள் குடியிருப்பாளர்களாக உள்ள தெயிலை சிற்றுடைமைகளில் வீடு பாதை வசதிகள், முன்பள்ளிகள், மருத்துவசாலைகள் குடிநீர், மகப்பேற்று நிலையங்கள், போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் நலன்பேண் விடயங்களுக்கும் சிற்றுடைமைகளின் உரிமையாளர்களுக்கும் தொழிலுறவைத் தவிர வேறு எவ்வித பிணைப்புக்களும் காணப்படுவதில்லை. எனவே இங்குள்ள மக்கள் மலையக அன்னியப்படுத்தப்பட்ட சமூகத்தினர்களாக காணப்படுகின்றனர். 

தேயிலை சிற்றுடைமைகளில் மக்களின் சமூக பொருளாதார சவால்கள் தொடர்பாக மூத்த சட்டத்தரணி இ.தம்பையா கூறுகையில் “சிறு தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். முதலாவதாக அவர்களின் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் ஓரளவுக்கு தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அக்கறை காட்டுவதங்கு சட்டங்கள் உண்டு. ஆனால் சிறு தேயிலை தோட்டங்களில் அவ்வாறில்லை. அங்குள்ள மக்கள் அடிமைகள் போன்றே நடாத்தப்படுகின்றனர். முக்கியமாக அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் முழுமையாக வழங்கப்படாமையை எடுத்துக்காட்ட வேண்டும். பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களை போன்று இவர்களின் ஊதியத்துக்கு எதுவித சட்ட ஏற்பாடுகளும் எதுவுமில்லை. அவர்கள் பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ற விதத்திலேயே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படும். இது அவர்கள் எவ்வித நிறுவன அமைப்புக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை என்பதனை குறிக்கின்றது. மேலும் ஊழியர்களின் நலன்புரி விடயங்களிலும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் போன்று ஒப்பீட்டளவிலேனும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தேயிலை தனியார் தோட்டங்கள் கூட்டு ஒப்பந்தத்துக்குள் உள்வாங்காப்படினும் கூட்டு உடன்படிக்கையில் எட்டப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுதல் வேண்டும் என்பது தொழில் ஆணையாளரினால் விடுக்கப்படும் கட்டளையாகும். 

எனினும் இவர்கள் அதற்கு கட்டுப்படுவதில்லை. பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு திருப்தியான வீடுகள் கூட இல்லை. அவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் அந்த தோட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். வெளியாரின் தொடர்புகளை கூட அவர்களுக்கு தோட்ட உரிமையாளர் அனுமதிப்பதில்லை. மறுபுறம் ஒரு தோட்டத்திலிருந்து பிரிதொரு தோட்டத்துக்கு மேலதிக வருமானம் ஈட்ட அவர்கள் செல்வதற்கும் அனுமதியில்லை இவ்வாறான சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட பல வழக்குகளில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக அனுபவம் உண்டு”  என்று தம்பையா கூறினார். சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களுக்கு தீர்வாக தம்பையா அவர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர். அவையாவன : 

  1. தேயிலை சிற்றுடைமையாளர்களுக்கு தொழில்துறை சார்ந்தும், தொழிலாளர்கள் சார்ந்தும் ஒரு சட்ட ஏற்பாட்டை கொண்டு வருதல்.
  2. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் யாப்பில் திருத்தங்களை கொண்டு வருதல். 
  3. அரசு, சிற்றுடைமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்ததற்கான ஒரு கூட்டுறவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 

என்பனவாகும். மேலும் எதிர்காலத்தில் பாரியளவான பொருளாதார (Macro Level) திட்டங்களே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும். அதற்கு மிகவும் சாத்தியமானது பெருந்தோட்ட தொழில்துறையாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) இன் பரிந்துரைகளும் அவ்வாறானவைகளாக தானிருக்கின்றன. சிறு தெயிலை தோட்டங்களினால் அந்த தேசிய இலக்குகளை அடைவது சிரமமானது. என்பதே சட்டத்தரணி இ. தம்பையாவின் கருத்தாகும்.  

அதே போல் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக நீண்ட அனுபவங்களை கொண்ட சட்டத்தரணி கௌதமன் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பாக வினவிய போது அவர் சில கருத்துக்களை முன்வைத்தார். அதாவது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. பெருந்தோட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒரு நிறுவன அமைப்ப காணப்படுவதால் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் காணப்படுகின்றன. பதுளை நுவரெலியா மாவட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட தோட்டங்களுக்கு அருகாமையில் சிறு தோட்டங்கள் காணப்படுவதால் சம்பள விடயத்தில் ஒரு நியாயம் காணப்படுகின்றது. குறைவான ஊதியம் கிடைத்தால் சிறு தோட்டங்களுக்கு தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதில் சிரமம் என்பதால் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள சிறுதோட்டங்கள் சம அளவான சம்பளம் வழங்குகின்றனர். 

ஆனால் எல்லா தோட்டங்களிலும் அவ்வாறு இல்லை. அங்கு உரிமையாளர்கள் வைத்ததுதான் சட்டம். ஊதியம், ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம், ஏனைய நலன்சார் திட்டங்கள், வீட்டு வசதிகள், சுகாதாரம், உள்ளிட்ட விடயங்களில் பாரிய பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவர்களை சட்டரீதியான ஒர கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கின்றார். 

இந்த ஆய்வு தொடர்பாக நாம் விஜயம் செய்த சிறு தோட்டங்களில் தொழிலாளர்கள் கூறிய விடயங்கள் இந்த கருத்துக்களை வலியுறுத்துவனவாகவே உள்ளது. கொஸ்லாந்தை பிரதேசத்தை அண்மித்த ஒரு சிறு தேயிலை தோட்டத்தில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் ஓய்வ பெற்றவர்களாவர். அவர்களுக்கான நாளாந்த சம்பளம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியமோ அல்லது வேறெந்த கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை. என்று அவர்கள் கூறுகின்றார்கள். இம்மக்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமே அவர்களின் தேவையாக இருப்பதால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவர்களுக்கான நலன்புரி தேவைகளும் முறையாக இல்லை என்பத அவர்களின் வீடுகளை அவதானித்தபோது தெளிவாகியது. 

அப்புத்தளை பிரதேசத்தை அண்மித்த ஒரு தனியார் தோட்டத்திற்கு விஜயம் செய்தபோது அங்குள்ள மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக அறியமுடிந்தது. நீண்டகாலமாக அவர்களுக்கான ஊழியர் சேமலாப  நிதியத்துக்காக பணம் செலுத்தப்படவில்லை. அந்த தனியார் தோட்டத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் அதேவேளை அந்த தோட்டத்தை நிர்வாகம் செய்தவர்களால் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய பணம் முறைகேடாக கையாளப்பட்டு இருப்பதாகவும் அம்மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

மேலும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்த தோட்டத்துக்கு பணிக்கு செல்லாவிட்டால் அவர்கள் அத்தோட்டங்களில் எவ்வித சலுகைகளையும் அனுபவிக்க முடியாது. வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு அவர்கள் நடுநிசியில் வெளியேற்றபட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அறிய முடிகின்றது. இவர்கள் ஒரு அடிமைச் சமூகமாகவே நடத்தப்படுகின்றனர். இந்த விடயத்தை பேராதனை பல்கலைகழகத்தின் அரசறிவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஸ் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். “தேயிலை சிற்றுடைமைகள் என்று சொல்லப்படும் தனியார் தோட்டங்கள் தான் இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கின்றன. அரசாங்கமும் அவர்களுக்கு கணிசமான அளவு மானியங்களையும் கடன் உதவிகளையும் வழங்குகின்றது.

அவர்கள் சமீபகாலமாக அதிகமான விளைச்சலையும் பெற்றுக் கொடுக்கின்றனர். கணக்கீட்டின் படி இலங்கையில் 4 இலட்சம் சிறு தேயிலை தொட்ட உரிமையாளர்கள் இன்று உள்ளனர். ஆனால் அவர்களின் தோட்டங்களில் தொழில்புரியும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உரிமைகள் மீறப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் உள்ளனர். சும்பளம், மேலதிக கொடுப்பனவுகள், நலன்புரி தேவைகள் என்பன ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலேயே உள்ளது.

தென் மாவட்டங்களை பொருத்தவரையில் அங்குள்ள சிற்றுடைமைகளில் தொழில் புரியும் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக கைவிடப்பட்ட ஒரு சமூகமாகவே இருக்கின்றனர். இதில் மலையக மக்களும் அடங்குகின்றனர். நுவரெலியா, ஊவா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களும் அடக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகமாகவே உள்ளனர். இவர்கள் தொழிற்சங்கங்களில் இல்லாமையும், நிறுவனமயப்படுத்தப்படாமையும், இவர்களின் தொழில் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளதற்கான பிரதான காரணங்களாகும். 

துனியார் தோட்டங்களில் தொழில்புரியும் மலையக மக்களின் தரவுகள் முழுமையாக இல்லாமையும் எமக்குள்ள ஒரு குறைபாடாகும். இவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இது சவாலாக உள்ளது.” என்கின்றார்.

மேலும் தனியார் தோட்டங்களில் பணிபுரிபவர்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது தனியார் தோட்டங்கள் இதுவரை நிறுவனமயப்படுத்தப்படவில்லை. எனவே சட்டத்தின் பிரகாரம் தனியார் தோட்டங்களை நிறுவனப்படுத்த வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்வதும் கட்டாயமாகும். இது அவர்களை அடிமை மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வரும். அதேபோல் அவர்களுக்கான நியாயமான சம்பளம் (Minimum wage ordinance) நலன்புரி சேவைகள் என்பனவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பிரதிநிதித்துவம் வலுவானதாக இருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்களை தொகுத்து ஆராய்கையில் சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களை நிவர்த்திச் செய்யும் வகையில் புத்திஜீவிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மலையக மக்கள் சிறு தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக உருவாவதை தடுக்க முடியாது.

06.11.2022 வீரகேசரி

கொழும்பின் மணிக்கூட்டுக் கோபுரங்கள் - (கொழும்பின் கதை - 46) - என்.சரவணன்

“நகரமொன்றின் தரம் எப்பேர்பட்டது என்பதை பறைசாற்றும் குறியீடாக மணிக்கூட்டுக் கோபுரங்கள் இருந்திருக்கின்றன” என்கிறார் மணிக்கூட்டுக் கோபுரங்களைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ள கார்லோ கிபல்லோ. 

கொழும்பின் மையப் பகுதிகளில் இன்றும் காணப்படுகிற மணிக்கூட்டுக் கோபுரங்கள் கொழும்பின் முக்கிய நினைவுக் கோபுரங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய மணிக்கோட்டுக் கோபுரங்கள் இலங்கையில் அறிமுகமாக்கியவர்களும் ஆங்கிலேயர்கள் தான். ஐரோப்பாவெங்கும் குறிப்பாக தேவாலயக் கோபுரங்களில் இத்தகைய பிரமாண்டமான மணிக்கூடுகள் அமைக்கப்பட்ட பெரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் பலவற்றைக் காணலாம். பெரிய கடிகாரங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தபோதும் இந்த கோபுர மணிக்கூட்டு கலாசாரம் 19ஆம் நூற்றாண்டில் தான் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வெளியில் வேறு கட்டிடங்களுக்கும், கோபுரங்களுக்கும் புழக்கத்துக்கு வந்தன. இவ்வாறு உயரமான இடத்தில் பிரமாண்டமான கடிகாரத்தை வைப்பதன் மூலம் தூர இருந்தே மக்கள் நேரத்தை அறிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னர் தேவாலய மணிகளை ஒலிக்கச் செய்து சுற்றி உள்ளவர்களுக்கு நேரத்தை அறியத் தரும் வழிமுறை இருந்தது. மணிக்கூடுகளை தேவலாய கோபுரங்களில் நாற்திசையிலும் வைத்தபோதும் கூட மணிகளை அடித்து நேரத்தை அறிவிக்கும் மரபு இன்று வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் இந்த தேவாலய மணிக் கோபுரங்கள் பிராரத்தனை நேரத்தை அறிந்துகொள்வதற்காகத் தான் பிரதானமாக நிறுவப்பட்டன.

இப்போதெல்லாம் இந்த மணிக்கூண்டுகள் அதிகம் பயன்படாவிட்டாலும், ஒரு காலத்தில் இந்த மணிக்கூண்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போதெல்லாம் கையில் கைக்கடிகாரம்  கட்டிக்கொள்வது கூட அருகிப்போய் விட்டது. கைக்கடிகாரம் வெறும் அழகுசாதனப் பொருளாக மட்டுமே குறுகிப் போய்விட்டது. ஸ்மார்ட்போன்கள் அந்த இடத்தை எடுத்துவிட்டன. கடிகாரங்களும், கைக்கடிகாரங்களும் வசதிபடைத்தவர்களின் சாதனங்களாக இருந்த காலத்தில் இத்தகைய மணிக்கூட்டுக் கோபுரங்கள் மிகுந்த பலனளித்தன. 

இலங்கையில் பின்னர் இந்தக் மணிக்கோட்டு கோபுரங்கள் பல நகரங்களின் மையத்தில் வைக்கப்பட்டன. இது நகரத்தின் மையம் என்பதை பறைசாற்றும் ஒன்றாகக் கூட இந்த மணிக்கோட்டுகோபுரங்கள் திகழ்ந்தன. கொழும்புக்கு வெளியில் காலி, யாழ்ப்பாணம், குருநாகல், கோட்டை, போன்ற இடங்களில் பழமையான மணிக்கூண்டுகள் உள்ளன. பிற்காலத்தில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, கண்டி, பதுளை போன்ற நகரங்களில் போன்ற ஏனைய நகரங்களில் கட்டப்பட்டன.

இப்படி கட்டப்பட்ட பல கோபுரங்களின் தோற்றத்தின் பின்னணியில் சுவாரசியமான கதைகள் பல உள்ளன. உதாரணத்துக்கு 135 வருடங்கள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண மணிக்கூண்டைக் கூடச் சொல்லலாம். 1875 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அன்றைய வேல்ஸ் இளவரசராக இருந்த இளவரசர் ஆல்பர்ட்டுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் இருந்து இந்த மணிக்கூட்டு கோபுரம் கட்டப்பட்டது. வேல்ஸ் இளவரசர் இலங்கை வரும்போது கொழும்பில் யாழ்ப்பாணத்துக்கென தனி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக்காக ஏற்பாட்டுக் குழுவினர் 10,000.00 ரூபாய் நன்கொடையாகச் சேகரித்திருந்தனர். 

வேல்ஸ் இளவரசருக்குப் பரிசளிக்க 4000 ரூபாய்க்கு வெள்ளி மஞ்சுசாவையும் நகைகளையும் வாங்கினர். இந்தப் பரிசு வேல்ஸ் இளவரசருக்கு டிசம்பர் 1 , 1875 அன்று வழங்கப்பட்டது. பின்னர் இந்த வரவேற்புக்குழு யாழ்ப்பாணம் சென்று மீதி ரூ6000 ஐ என்ன செய்வது என்று சிந்தித்தனர். இது குறித்து முடிவெடுக்க 1880 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேல்ஸ் இளவரசரின் இலங்கை பயணத்தை நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பது நல்லது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அந்த மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது.


கொழும்பின் முதல் கலங்கரை விளக்கம்.

கொழும்பில் முதன் முறையாக கலங்கரை விளக்கம் 1829 இல் கட்டப்பட்டது. அதாவது போர்த்துகேய, ஒல்லாந்தர் காலத்தில் கொழும்பில் முறையான கலங்கரை விளக்கம் இருக்கவில்லை. ஆங்கிலேயர் கொழும்பைக் கைப்பற்றி சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தான் அதற்குரிய அவசரத்தை உணர்ந்தார்கள்.

இருப்பினும் இந்த கலங்கரை விளக்கம் குறித்து இலகுவாகத் தேடிக்கண்டுபிடிக்க முடிவதில்லை. பழைய ஆவணங்கள், வெளியீடுகளில் கூட எந்த குறிப்பும் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இப்படி ஒரு கலங்கரை விளக்கம் இருந்ததை பிரிட்டிஷ் நூலகத்தின் இணையத்தளத்தில் சில படங்கள் காணக் கிடைக்கின்றன. அதன் கீழ் சில விளக்கங்களும் உள்ளன. இந்தப் படத்தை அப்போது எடுத்தவர் பிரபல புகைப்படப் பிடிப்பாளர் ஃபிரடெரிக் ஃபீபிக் (Fiebig, Frederick). 

கொழும்பு கோட்டையின் கொடிக் கம்பமும் பீரங்கிகளையும் அப்படத்தில் காணக் கிடைக்கிறது. கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் கலங்கரை விளக்கம் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருந்ததைக் காண முடிகிறது. இக்கலங்கரை விளக்கம் இரவு நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை ஒரு நிலையான ஒளியைக் காண்பிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட்டமான நான்கடுக்கு வீடுபோல அமைக்கப்பட்டிருக்கும் அந்த கோபுரம் நான்காவது அடுக்கில் சிறியதாக காணப்படுகிறது. அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை அதன் உயரம் 74 அடியாகும் (22.5 மீட்டர்). மேலும் ஒளியைப் பாய்ச்சும் கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 97 அடி உயரத்தில் அமைந்திருந்தது. கீழ் அறைகளின் விட்டம் 21 அடி 6 அங்குலம் (6.5 மீட்டர்) மற்றும் ஒளி பாய்ச்சும் அறை 11 அடி (6.4 மீட்டர்) ஆகும். 16 மைல் வரை இதைக் காணக் கூடியதாக இருந்திருக்கிறது. கடலில் இருந்து கிட்டத்தட்ட 120 கெஜம் (110 மீட்டர்) தொலைவில் அமைந்திருந்தது. அதுபோல் கடல் மட்டத்திலிருந்து 12 கெஜம் (10.9 மீட்டர்) உயரத்தில் அது இருந்தது.

இது 1844 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு 1849 இல் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.  அப்போது உள்நாட்டில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி விளக்குகள் ஏற்றப்பட்டன. இக் கலங்கரை விளக்கம் 1867 வரை செயல்பட்டது. 1869 க்கும் 1871க்கும் இடையில் கொழும்பு கோட்டையின் அரண்களை இடித்து அகற்றினார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது இந்த கலங்கரை விளக்கமும் சேர்த்தே இடிக்கப்பட்டது. அப்படி இடிக்கப்பட்ட போது அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் கொழும்பு கோட்டை கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டிருந்தது.

ஃபிரடெரிக் ஃபீபிக் அப்படத்தை 1852இல் எடுத்திருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி 1856 இல் வாங்கியிருக்கிறது. 

1864 ஆம் ஆண்டு 17ஆம் திகதி வெளியான “The illustrated London news” என்கிற சஞ்சிகையில் 280ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிற கோட்டோவியத்தில் இந்த கலங்கரை விளக்கத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. இக்கட்டுரைக்காக அச் சஞ்சிகையை தேடிக்கண்டுபிடித்த போது காண முடிந்தது. 285 ஆம் பக்கத்தில் அந்தப் படத்திற்கான மேலதிக விளக்கங்களை அதில் வெளியிட்டிக்கிறார்கள். “Photograph by messrs Slinn & Co, of Colombo” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கொழும்பில் இருந்த கலங்கரை விளக்கங்களுக்கும், இந்த மணிக்கூட்டுக் கோபுர கலங்கரைக்குமான பராமரிப்புச் செலவாக 1916-1917 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுக திணைக்களத்தால் 13,190 ரூபாய் செலவளித்திருப்பதை 1917 ஆண்டின் நிர்வாக அறிக்கை தெரிவிக்கிறது. 


கலங்கரையும், மணிக்கூண்டும்

இலங்கையில் கலங்கரை விளக்கங்களின் வரலாறு பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இருந்து தொடங்குகிறது. 1815-1948 வரை ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்டனர். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான கலங்கரை விளக்கங்கள் இந்தக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கலங்கரை விளக்கங்கள்; இம்பீரியல் லைட்ஹவுஸ் சர்வீஸ் (Imperial Lighthouse Service) என்ற நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கலங்கரை விளக்கங்களின் செயற்பாடுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும் இன்றைய நிலையில் இலங்கை துறைமுக அதிகாரசபை அவற்றை நிர்வகித்து வருகின்றது. இன்று இலங்கையில் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன, அவற்றில் 14 மட்டுமே செயல்படுகின்றன. எனினும், இலங்கையின் 25 கலங்கரை விளக்கங்களில் நான்கு கொழும்பில் அமைந்துள்ளன. கொழும்பு கலங்கரை விளக்கம், கொழும்பு வடக்கு பிரேக் வாட்டர், கொழும்பு தெற்கு பிரேக் வாட்டர் மற்றும் பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கம் என்பவையே அவை. இந்த நான்கு கலங்கரை விளக்கங்களில், பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கத்தைத் தவிர, மீதமுள்ள மூன்று கலங்கரை விளக்கங்கள் இன்றும் செயல்படுகின்றன.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழமையான மணிக்கூண்டு பல வழிகளில் முக்கியமான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் நிர்மாணமானது கொழும்பில் வசிப்பவர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் ஒரு வகையான ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றுமாக இருந்தது. கொழும்பில் குவியும் உல்லாசப் பிராணிகளையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் இவ்வாறான ஒரு மணிக்கூட்டு கோபுரத்தை இந்நாட்டு மக்கள் இதற்கு முன் பார்த்ததில்லை. பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் நிறுவிய முதலாவது மணிக்கூண்டு இதுவாகும். கொழும்பு கோட்டையில் சதாம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை (முன்னாள் இராணி வீதி) என்பவை சந்திக்கும் சந்தியில் கடிகாரத்துடனான இந்தக் கலங்கரை விளக்கம் இன்று செயலற்ற நிலையில் உள்ளது. இந்த கோபுரத்தை சுற்றி சுமார் 20 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை, முன்னாள் தபால் தலைமையகம் என்பவை உள்ளன.

இது கொழும்பு நகரின் மிகவும் தனித்துவமான வரலாற்று நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. 1860 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் இலங்கையில் கடிகாரம் பொருத்தப்பட்ட ஒரேயொரு கலங்கரை என்பது அதன் விசேடத் தன்மையாகும். “கொழும்பு கோட்டை பழைய கலங்கரை விளக்கம்” என்று அது அழைக்கப்பட்டாலும், கடிகாரம் மட்டும் இன்றும் செயல்படுவதால், தற்போது அது மணிக்கூண்டு கோபுரமாக பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுத் தகவல்களின்படி, இது 1856-57 இல் ஒரு மணிக்கூட்டு கோபுரமாக கட்டப்பட்டது. பின்னர் 1860ல் இந்த மணிக்கூண்டு கோபுரத்தில் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “A guide to Colombo with maps”  என்கிற கொழும்பின் வழிகாட்டி நூலில் இந்த கலங்கரை விளக்கத்துடன் சேர்ந்த மணிக்கூட்டுக்கோபுரமானது ஒளிக் குவிவை பாய்ச்சும் விசேட அம்சம் பொருந்திய ஒன்றென்றும் அது உலகத் தர வரிசையில் உலகின் மிகச்சிறந்த ஒன்றென்றும் குறிப்பிடுகிறது. கடல் மட்டத்திலிருந்து அந்த கலங்கரை உயரம் 132 அடி உயரத்தில் இருப்பதால் கொழும்புத் துறைமுகத்தின் வழிகாட்டலுக்கு மிகவும் உதவும் ஒன்றென்றும்  தெளிவான காலநிலையில் 17 மைல் தொலைவு வரை கடலில் தெரியும் என்றும் குறிப்பிடுகிறது.  அதுமட்டுமன்றி ஆரம்பத்திலிருந்து மண்ணெண்ணை மூலம் விளக்கெரிக்கப்பட்டுத் தான் கலங்கரை விளக்கை ஒளிர்க்கச் செய்தார்கள். அந்த ஒளியைக் கொண்டு தான் பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தன. ஆனால் 1907 ஆம் ஆண்டு தொடக்கம் எரிவாயு மூலம் விளக்கெரிக்கப்பட்டது. பின்னர் 1933 இல் இருந்து 1500 மெழுகுவர்த்திகளின் ஒளிக்கு நிகரான ஒளியைத் தரக்கூடிய மின்சார மின்விளக்கு நிர்மாணிக்கப்பட்டது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மணியின் எடை மாத்திரம் 250 கிலோகிராம் ஆகும்.

கோபுரத்திற்கான அனைத்து வடிவமைப்புத் திட்டமும் அப்போது இலங்கையின் ஆளுநராக பணியாற்றிய சர் ஹென்றி ஜார்ஜ் வார்டின் (Sir Henry George Ward -1797 – 1860) மனைவி எமிலி எலிசபெத் வார்டால் (Emily Elizabeth Ward) வடிவமைக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரது வடிவமைப்பின்படி, கடிகார கோபுரத்தின் கட்டுமானத்தின் இயக்குனரான கட்டிடப் பொறியியலாளர் ஜோன் ஃப்ளெமிங் சர்ச்சிலின் (J. F. Churchill) மேற்பார்வையின் கீழ் பொதுப்பணித் துறையால் 1957 பெப்ரவரியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த 95 அடி உயர கோபுரமே அன்றைய கொழும்பில் மிக உயரமான கோபுரமாக இருந்தது.

இந்த கோபுரத்தை ஆரம்பத்தில் அப்போது ஆளுநராக இருந்த சேர் ரொபர்ட் பிரவுன்ரிக், கோபுரத்தை நிறுவுவதற்காக 1814 ஆம் ஆண்டு 1,200 பவுண்டுகள் செலவில் ஒரு கடிகாரத்தை வடிவமைத்தார். ஆனால் பொருளாதாரச் சிக்கலில் அந்தத் தொகையைச் செலுத்த முடியாமல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடிகாரம் 1857 இல் கோபுரம் நிறுவப்படும் வரை ஒரு பழைய களஞ்சியத்திலேயே அக்கடிகாரம் இருந்தது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பின்னரும் அது நல்ல நிலையிலேயே இருந்தது. எனவே மேலதிகமாக 280 பவுண்டுகள் அக்கடிகாரத்தை கடிகாரத்தை சுத்தம் செய்வதற்கும் எண்ணெய் தடவி புதுப்பிப்பதற்கும் செலவிடப்பட்டிருக்கிறது.


இந்த கடிகாரம் மிகவும் உயர்தர கடிகாரம் என்று அதன் மதிப்பில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இதனை தயாரித்தது பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற வணிக நிறுவனமான டென்ட் (Dent) நிறுவனமாகும். இதில் உள்ள இன்னொரு விசேடத்துவம் என்னவென்றால் லண்டனில் புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரத்தை நீண்ட உத்தரவாதக் காலத்துடன் தயாரித்த டென்ட் (Dent) நிறுவனம் அது. “பிக் பென்” என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் வளாகத்தில் உள்ள பிரபலமான மணிக் கூட்டுக் கோபுரம் என்பதை அறிவீர்கள். இலங்கைக்கு தயாரித்த தரம்வாய்ந்த கடிகாரம் இங்கு கொண்டுவரப்பட்டது. மணிக்கூட்டு கோபுரத்தின் பிரதான மணி சுமார் 250 கிலோகிராம் எடையைக் கொண்டது. இந்த மணியைத் தவிர வேறு இரண்டு துணை மணிகளும் இருந்தன. அவற்றின் எடை 135 கிலோ.

Big Ben  என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் கட்டிடத்தில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம்
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்தில் “பிக் பென்” கோபுரம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே இந்த கலங்கரை மணிக்கூண்டு (Lighthouse Clock Tower) கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 1859ஆம் ஆண்டு மே31 அன்று தான் “பிக் பென்” திறக்கப்பட்டது. ஆனால் கோட்டை மணிக்கோட்டு கோபுரம் 1857 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்றே திறக்கப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை வடிவமைத்த அதே டென்ட் தான் “பிக்பென்” கடிகாரத்தையும் வடிவமைத்தார். 

1907 அளவில் இந்த கடிகாரம் பழுதானது. எனவே அந்தக் கடிகாரத்தை அகற்ற வேண்டியதாயிற்று. மீண்டும் 22.10.1913 அன்று இங்கிலாந்தில் இருந்து புதிய கடிகாரம் தருவிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. இன்று இருக்கும் 6-அடி கடிகார முகப்பும் பொருத்தப்பட்டது. ஆனால் அதனை உடனடியாக திறந்து வைக்க முடியவில்லை. முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பட்டு இருந்ததால் இழுபறிப்பட்டு பின்னர் 1914 ஏப்ரல் 04 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த காலத்தில் கோட்டை கடற்கரையோரத்தில் புதிய கலங்கரை (“கல்பொக்க லைட் ஹவுஸ்” என்று அழைக்கப்படும் “Galle Buck Lighthouse”) 1952 கட்டப்பட்டதால் யூலை 12 ஆம் திகதியிலிருந்து இந்தக் கோபுரத்தின் கலங்கரை வெளிச்சம் நிறுத்தப்பட்டது. அதேவேளை இந்த மணிக்கூண்டு கோபுரத்தை சுற்றி கட்டிடங்கள் எழத் தொடங்கின. தூரத்திலிருந்து வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட இந்த கோபுரத்தின் தேவை அற்றுப் போன நிலையில் இது நிறுத்தப்பட்டது.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழைய கலங்கரை விளக்கமே இலங்கையின் முதலாவது கலங்கரை விளக்கம் என்கிறனர் சிலர். ஆனால் சில தகவல்களின்படி காலி கோட்டையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கமே இந்நாட்டின் முதல் கலங்கரை விளக்கமாகும். எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையின் பழைய மணிக்கூட்டு கோபுரம் இலங்கை நெடுஞ்சாலைகளின் தூரத்தை (Mileage) அளவிடுவதற்கான மையப் புள்ளியாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கொழும்பின் மையம் இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் இருந்து தான் நாளா திசைகளுக்கும் அளவிடப்படுகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், காலிக்கும் இங்கிருந்து கணக்கெடுக்கப்படுகிறது. முதற் தடைவையாக கொழும்புக்கும் கண்டிக்குமான தூரத்தை இதன் அடிவாரத்திலிருந்து தான் கணக்கெடுக்கப்பட்டது. இங்கிருந்து கண்டி 115.6 கிலோமீட்டர் தூரம் என கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.


கான் மணிக்கூண்டு கோபுரம்

கொழும்பில் உள்ள இந்த கலங்கரை விளக்கக் கோபுரத்தைப் பற்றிப் பேசும் போது மறக்க முடியாத இன்னொரு மணிக்கூண்டும் உள்ளது. அதுதான் கோட்டை மல்வத்தை வீதி மற்றும் பிரதான வீதி என்பன சந்திக்கும் இடத்தில் உள்ள கான் நினைவு மணிக்கூண்டு கோபுரம். கொழும்பு மத்திய இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நேராக வந்தால் இந்த இடத்தை வந்தடையலாம். ஹன்டர் என்ட் கொம்பனிக்கு எதிரில் துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது இது. கான் மணிக்கூட்டுக் கோபுரம் என்று இது அழைக்கப்படுகிறது.

பேர்சி குடும்பத்தைச் சேர்ந்த கான் (Framjee Bhikhajee Khan) என்பவரின் 45 ஆண்டின்  நினைவாக அவரின் புதல்வர்களால் இது அமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கைக்கு பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் வந்து குடியேறியிருக்கிறார்கள். 7ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தின் மீதான அரேபிய ஆக்கிரமிப்பின் போது அங்கிருந்து தப்பி சிதைந்து பல்வேறு இடங்களில் குடியேறியவர்கள் பார்சி இனத்து\முஸ்லிம்கள். அவ்வாறு குஜராத்தில் குடியேறி வாழ்ந்து வந்தவர்களின் சந்ததியினர் தான் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பெரிய வர்த்தக வியாபார  நோக்கத்துக்காக குடியேறிய பேர்சியர்கள்.


நிலையாக தம்மை பல துறைகளில் நிலைநிறுத்திக்கொண்ட அவர்கள் குறிப்பாக தரம் வாய்ந்த எண்ணெய் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். 1878ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்தின் தலையாய நபரான கான் இறந்து போனார். அவர்களின் இரு புதல்வர்கள் அந்த வியாபாரத்தை பெரிதாக வளர்த்தெடுத்தார்கள். அதற்கு மூலாதாரணமான தமது தந்தையின் பெயரை என்றென்றும் சொல்லக் கூடியவாறு அரசின் முழு சம்மதத்துடன் 1923 இல் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை அன்று 17,113 ரூபாய் செலவில் கட்டி முடித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே நூறாண்டுகளை எட்டும் அந்த கோபுரம் இன்றும் கானின் பெயரால் நிலைத்து நிற்கிறது. இந்த நூறாண்டில் கொழும்பின் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களை நகர, மற்றும் வீதி அபிவிருத்தியின் பெயரால் செய்ய நேரிட்டாலும் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கொண்ட சுற்று வட்டத்தை சேதப்படுத்தியதில்லை. அதில் உள்ள கல்வெட்டில் இப்படிப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

"இந்த மணிக்கூட்டு கோபுரமும் நீரூற்றும் ஃபிராம்ஜி பிகாஜி கானின் நினைவாக அவரது மகன்களான பிகாஜி மற்றும் மன்சர்ஷோ ஃப்ரம்ஜி கான் ஆகியோரால் அன்பான நன்றியின் அடையாளமாக அமைக்கப்பட்டது. மேலும் 1923 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி, கானின் நினைவாக கொழும்பு குடிமக்களுக்கு மாநகர சபையின் மூலம் அர்ப்பணிக்கப்பட்டது.”

இதில் அமைக்கப்பட்டிருந்த நீருற்று எப்போதோ நின்றுவிட்டது. இப்போது அது இல்லை. ஆனால் கடிகாரக் கோபுரம் அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. ஒன்றரை நூற்றாண்டையும் கடந்து விட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் முக்கிய ஆங்கிலேய காலனித்துவத்தின் எஞ்சிய அடையாளம் இவை.

நன்றி - தினகரன் - 30.10.2022


மரணப்படுக்கையில் கொலைஞனுக்கு மன்னிப்பு வழங்கச் சொன்னவரின் மகள் நான். அவர்களை விடுவியுங்கள்!


சிறையிலிருக்கும் முன்னால் போராளிகளை விடுவிக்கும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சிங்கள ஊடகங்களில் இதனை கடுமையாக விமர்சிக்கின்ற வகையில் இனவாத செய்திகளும் நிறையவே வெளிவருகின்றன. இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு டிசம்பர் 18அன்று  ஜனாதிபதி த் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பியபோதும் அவரின் வலது கண் நிரந்தரமாக செயலிழந்தது. தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்தி அனுப்பிய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறை அனுபவித்து வருகின்றனர். அவர்களை இருபதாண்டுகளுக்குப் பின்னர் விடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

சந்திரிகா 1959 இல் தனது தந்தையை (பிரதமர் பண்டாரநாயக்க) துப்பாக்கி சூட்டினால் பறி கொடுத்தவர். அது போல 1988 இல் தனது கணவர்  விஜயகுமாரனதுங்கவை துப்பாக்கிச் சூட்டில் இழந்தவர்.

உங்களை கொலை செய்ய வந்தவரை விடுவிக்கும்படி நீங்கள் கூறியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது அது உண்மையா? 

ஆம் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னை கொலை செய்ய வந்த பெண்ணின் உடலில் அந்த குண்டுகளை கொண்ட பட்டியை கட்டிய இருவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர்கள் இருவரும் கோவிலைச் சேர்ந்த பூசாரியும் அவரது மனைவியும். அவர்கள் இருவரும் இருபது வருடத்திற்கும் மேல் தண்டனை அனுபவித்து இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிறையில் இருப்பதால் என் கண்கள் திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. இந்த நாட்டில் நிலவுகிற இனப் பிரச்சனையும் தீரப் போவதில்லை. அவர்கள் சிறையில் இருக்கும்போதே அதாவது ஏழெட்டாண்டுகளிலேயே அவர்களை விடுவிக்கும்படி நான் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரவிருந்தேன். 

இந்த சூழலில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் விடுதலைப் போராளிகளை விடுவிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

அவரின் செயலாளர் என்னை அழைப்பில் வந்து என்னிடம் கேட்டார் மேடம் இதனை கேட்கவும் கஷ்டமாக இருக்கிறது கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர் எதைக் கூறுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே பத்திரிகைகளும் அதனை பார்த்து விட்டேன். எனவே அவர் தொடர்ந்து வினவு முன்னமே நான்; ஆம் நீங்கள் அதனை செய்யுங்கள் என்று கூறினேன். அதை செய்வதாயின் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் உடனடியாக செய்யுங்கள் என்றேன். அப்படி செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது. ஒரு பௌத்தராக மட்டுமல்ல எந்த மதப் பின்னணியை சேர்ந்திருந்தாலும் மன்னிப்பு என்பது வழங்கப்பட வேண்டிய ஒன்று. எனக்கு ஒரு கண் போனாலும் நான் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அவர்கள் புணர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிப்பது நல்லது. அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்ட மூன்றாவது நாள்; நான் சத்தியப் பிரமாணம் எடுக்கும் போதும் கூட எனது உரையில் நான் ஒன்றைக் கோரி இருந்தேன். 

அதாவது இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர என்னோடு கைகோருங்கள் என்று விடுதலைப் புலி இளைஞர்களிடம் கோரி இருந்தேன். உங்களை என் பிள்ளைகளைப் போல் நடத்துவேன். உங்களிடம் நான் பழிவாங்க மாட்டேன் எனக் கூறி இருந்தேன்.

அவ்வாறு நான் கூறியதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. என் தகப்பனார் தன்னை சுட்ட பிக்குவுக்கு மன்னிப்பு வழங்கும் படி மரணப்படுக்கையில் கேட்டார். அந்தத் தகப்பனின் பிள்ளை நான்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates