Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகக் கட்சிகளின் இணக்கப்பாட்டின் தேவையை வலியுறுத்தியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - துரைசாமி நடராஜா



உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமையானது நாட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது. எதுவும் எப்படியும் நடக்கலாம் என்று நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கிக் காணப்படுகின்றது. மலையகக் கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் திக்குமுக்காடிப்போயுள்ளன. எவ்வாறெனினும் அரசியல் கொந்தளிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், சிறுபான்மையினரை பொறுத்தவரையில் இத்தேர்தல் ஒரு பாடமாக அமைந்திருப்பதாகவும், சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு தேர்தலாக விளங்குகின்றது. இத்தேர்தலானது பிரதேசசபைகளுக்கான தேர்தலாக இருந்தபோதும் நாட்டின் அரசியல் பரப்பில் பல்வேறு மாறுதல்களுக்கு வித்திட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மிகப் பெரும் அழுத்தத்தினை கொடுத்துவந்த நிலையில் கடந்த பத்தாம் திகதி இத்தேர்தல் இடம்பெற்றிருந்தது. மலையகக் கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தம்மை அதிகமாகவே தயார்படுத்திக் கொண்டிருந்தன.

வேட்பாளர்கள் இரவு, பகலாக வீடுகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என்று மலையகம் களைகட்டியிருந்தது. மலையகக் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டிருந்தன. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் களத்தில் பல வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இதுபோன்றே இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் தேர்தல் களத்தில் பல வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், எழுதுவினைஞர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். இவர்களில் சிலரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் மூலமான தெரிவுகளும் இடம்பெற்றுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக கண்டியில் 54 சதவீத வாக்குப் பதிவும், மாத்தளையில் 80 வீத வாக்குப்பதிவும், நுவரெலியாவில் 70 வீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 74 வீத வாக்குப்பதிவும், பதுளையில் 64 வீத வாக்குப்பதிவும், கேகாலையில் 70 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கன.

தேர்தல் வெற்றி தொடர்பில் மலையகக் கட்சிகள் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இத்தேர்தலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவிலான வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. தமது கட்சியின் சார்பில் அதிகமான உறுப்பினர்கள் தெரிவாகி இருப்பதாகவும் இது இ.தொ.கா. வின் சேவைக்கு கிடைத்த வெற்றியென்றும் இக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் இ.தொ.கா. வின் சேவைகளை புரிந்துகொண்டு வாக்களித்திருப்பதாகவும், மலையகத்தின் ஒரே தலைவன் ஆறுமுகன் தொண்டமானே என்பதனையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருப்பதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இ.தொ.கா. கூட்டு சேர்வதன் மூலமாக பதினொரு உள்ளூராட்சி மன்றங்களை நுவரெலியா மாவட்டத்தில் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் இ.தொ.கா. வின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இ.தொ.கா. வின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கத்துக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சர் பதவியே இவருக்க வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இ.தொ.கா. தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவினை தக்கவைத்துக் கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதும், உறுப்பினர்கள் பலர் தெரிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுதல் மற்றும் உறுப்பினர்களின் தொகை என்பவற்றில் கூட்டணி எதிர்பார்த்த இலக்கினை அடைந்துகொள்ள முடியாமல் போயுள்ளது . தமிழ் முற்போக்கு கூட்டணி உரிமை சார்ந்த விடயங்களுக்கும், பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மலையக அபிவிருத்தி அதிகார சபையினை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்குமே முன்னுரிமை அளித்து வந்தது. இவற்றோடு வீடமைப்பு, தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி அதிக ஈடுபாடு காட்டி வந்தது.

இந்த நிலையில் மலையக மக்கள் சிலர் தமது உரிமைகளையும் கொள்கைகளையும் கருத்திற்கொள்ளாது வாக்களித்திருப்பதாகக் கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். அற்ப சலுகைகளுக்காக ஒரு கூட்டம் விலை போயுள்ளதாகவும், பிழையான பிரசார நடவடிக்கைளின் மூலம் அப்பாவி மக்களின் வாக்குகளை சிலர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார். குறிப்பாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் கூட்டு ஒப்பந்தம் என்பன குறித்த பிழையான பிரசாரங்களை மலையகக் கட்சியொன்று முன்னெடுத்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய நடவடிக்கைகளே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்த்த வெற்றியினை தட்டிப் பறித்துள்ளதாக இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது. முன்னணி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இத்தேர்தலில் உருவெடுக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.சதாசிவம் தெரிவித்திருந்தார். ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி இவற்றின் அதிருப்தியாளர்கள் சதாசிவத்துடன் இணைந்துக் கொண்டிருந்தனர். இவர்களில் பலருக்கு வேட்பாளர் பட்டியலிலும் இடம் வழங்கப்பட்டிருந்தது.

இன, மத பேதமின்றி சகலருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டிருப்பதாகவும் சதாசிவம் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும் முன்னணியின் வெற்றியும் எதிர்பார்த்தவாறு அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

மலையகத்தில் சுயேச்சைக் குழுக்கள் பலவும் தேர்தல் களத்தில் குதித்திருந்தன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீல.சு.கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பவற்றின் ஊடாகவும் சிறுபான்மை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருந்தமையும் தெரிந்த விடயமாகும்.

மலையக மக்களின் வாக்கு பலத்தினை சிதைக்கின்ற நடவடிக்கைகள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இடம்பெற்றிருந்தன. பல சுயேச்சைக் குழுக்கள் இதற்கெனவே களமிறக்கப்பட்டிருந்தன. அத்தோடு பெரும்பான்மைக் கட்சிகள் சில இடங்களில் வாக்குப் பலத்தினை சிதைக்கின்ற நோக்கில் சிறுபான்மை வேட்பாளர்களுக்கு இடமளித்திருந்தமையும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.. மலையக மக்களின் வாக்கு பலத்தை மழுங்கடிக்கச் செய்து இம்மக்களை அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் ஓரம்கட்டும் முயற்சியாக இது அமைந்திருந்தது.

இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது இனவாத சக்திகளின் எழுச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளதாக பரவலான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. எனினும் இது ஒரு ஆரோக்கியமான செயலாகத் தென்படவில்லை. இனவாதத்தின் எழுச்சி நிலையானது பல்வேறு பாதகமான விளைவுகளுக்கும் இட்டுச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய விடயமல்ல. எமது நாட்டை பொறுத்தவரையில் இனவாதம் என்பது புதிய ஒரு விடயமல்ல. இனவாதத்தினால் எமது நாடு பல்வேறு இன்னல்களை ஏற்கனவே அனுபவத்திருக்கின்றது. இதன் தழும்புகள் இன்னும் இலங்கை தேசத்தின் தேகத்தில் இருந்துகொண்டே இருக்கின்றன. இதற்கிடையில் மீண்டும், மீண்டும் இனவாத நிலை நிறுத்துகையானது தழும்புகளை அதிகரிக்கச் செய்வதாகவே அமையும். இதற்கிடையில் மலையகக் கட்சிகள் இவ்விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் விரும்பத்தகாத கூட்டுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு தேவைக் காணப்படுகின்றது.

மலையக மக்கள் இன்னும் பல்வேறு தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இவர்கள் அடைய வேண்டிய உரிமைகள் இன்னுமின்னும் அதிகமாகவே காணப்படுகின்றன. தொழில் வாய்ப்பு, பொருளாதாரம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், சமூக வாழ்க்கை என்று பல மட்டங்களிலும் இம்மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மலையக அதிகார சபை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த கவனமும் அவசியமாக உள்ளது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் மலையகத்திற்கென்று தனியான ஒரு பல்கலைக்கழகத்தினை ஏற்படுத்த வேண்டியதன் அவசியப்பாடு தொடர்பில் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றனர். எமது பக்கம் மற்றும் மண்ணின் அடையாளத்துடன் கூடிய ஒரு பல்கலைக்கழகமாக இது அமைதல் வேண்டும் என்பது பேராசிரியர் சந்திரசேகரனின் விருப்பமாகும். எனவே தனியான பல்கலைக்கழகம் என்பது பேராசிரியர் சந்திரசேகரனின் வாழ்நாளிலேயே சாதகமாதல் வேண்டும் என்பது புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மலையக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மலையக கட்சிகளிடையே இணக்கப்பாடு, புரிந்துணர்வு என்பன அவசியமாகும். விட்டுக்கொடுப்புகளும் இருத்தல் வேண்டும். இது சாத்தியப்படாதவிடத்து வெளியார் எம்மில் ஆதிக்கம் செலுத்துவதும் அடக்கியாள்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

நன்றி - வீரகேசரி

உள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன்


உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கமும் தான்.

ஏற்கெனவே உள்ளூராட்சி சபைகளில் இருந்த அங்கத்தவர்  தொகையை புதிய சட்டத்தின் மூலம் 4,486 இலிருந்து 8,356 ஆக உயர்த்தப்பட்டதும் கூட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் தான். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்தம் 19,500 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 32% வீதமாகும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகளுமாக மொத்தம் 341சபைகளிலும் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இம்முறை நிச்சயம் நியமிக்கப்படுவது உறுதி என்று நம்பியிருந்தார்கள். ஆனால் நடைமுறைச் சிக்கல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

இலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56% வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60% வீதமானோர் பெண்கள். ஏன் உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7% வீதத்தினர் பெண்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே அளவு வீதாசார பிரதிநிதித்துவத்தை கோரி அவர்கள் போராடவில்லை. குறைந்தபட்சம் 25% வீத பிரதிநிதித்தவத்தை உறுதி செய்யும்படிதான் கேட்டார்கள். அதுவும் நீண்ட போராட்டத்தின் பின்னர் அதனை சட்டபூர்வமாக வென்றெடுத்தார்கள். 25% பிரதிநிதித்துவத்தால் மாத்திரம் நம் நாட்டுப் பெண்களின் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இது ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.

நாட்டுக்கு பிரதான பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் பெரும் தொழிற் படையாக பெண்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு பணிப்பெண்களாகவும், தோட்டத்துறை பெண்களாகவும், சுதந்திர வர்த்தக வலய பெண்களாகவும் இன்னும் பற்பல துறைகளின் மூலம் தங்களை அதிகாரம் செலுத்தும் ஆண்களுக்காவும் சேர்த்து உழைத்துத் தருபவர்கள் நமது பெண்கள். அப்படி இருக்க அவர்களிடம் இருந்து “ஆளும் அதிகாரத்தை” மாத்திரம் பறித்தெடுத்து வைத்திருக்கும் அதிகார கட்டமைப்பு மாற்றப்பட வேண்டியதே.

சட்டம் நிறைவேற்றம்
குறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

அதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத?” (ஏன் பயமா?) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.

“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா?” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.

சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தின் தோல்வி
புதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.

அதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.

2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளபெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…

தற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

ஆண்களின் கூட்டுத் துரோகம்
இப்போது பல சபைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் 25% பெண்களின் பிரதிநித்தித்துவத்தை உறுதிசெய்யப்படாத சபைகளை நடத்துவது புதிய சட்டத்தின் படி முடியாத காரியமாகும். ஆனால் சபையை எப்பேர்பட்டும் நடத்துவதற்காக பிரதான கட்சிகள் தமக்குள் உடன்பாடு கண்டிருக்கின்றன. தேர்தலில் எதிரிகளாக இயங்கிய இக்கட்சிகள் அதிகாரத்தை அடைவதற்காக பெண்களின் பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தாமலேயே இயக்கும் உடன்பாட்டைக் கண்டிருக்கின்றனர். பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவை சேர்ந்து எடுத்தனர். தேர்தல் ஆணையகத்தின் தலைவர், உறுப்பினர்கள், உள்ளூராட்சித்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், நீதிபதி, சட்ட உருவாக்கக் குழுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியான முடிவை எடுத்ததை சபாநாயகரும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் உறுதிசெய்தார்.

தேர்தல் ஆணையாளரும் இந்த சட்ட சிக்கலை சரி செய்ய வழி இல்லாமல் அவரும் தர்மசங்கடத்துடன் உடன்பட்டு இருக்கிறார் என்று அறிய முடிகிறது. இதே தேர்தல் முறை இனி நீடிக்குமா என்பது சந்தேகிக்கப்படுகிறது. இந்த சட்டம் மீண்டும் திருத்தத்துக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்த வண்ணமிருகின்றது. எந்த குழப்பமுமின்றி அப்போதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் உறுதி செய்யப்படவேண்டும்.


ஆணையாளரின் ஒப்புதல் வாக்குமூலம்
கடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது
“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.
இதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”
இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.

இந்தத் தடவை பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று அதிகமாக நம்பியிருந்த ரோசி சேனநாயக்க ஆணையாளருக்கு இறுக்கமான ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருந்தது. அதன் படி எந்தவகையிலும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அவர் வேண்டிக் கொண்டார்.


உள்ளூராட்சியில் பெண்கள்
இலங்கையின் வரலாற்றில் அனுலா, சுகலா, லீலாவதி, கல்யாணவதி, சீவலி போன்ற சிங்களப் பெண்கள் அரசிகளாக ஆண்டிருக்கிறார்கள். அது போல ஆடக சவுந்தரி, உலகநாச்சி போன்ற தமிழ் பெண்களும் அரசிகளாக இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

இலங்கை உள்ளூராட்சி மன்ற முறைமைக்கு ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு வரலாறு உண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் 1865இல் முதலாவது மாநகரசபை உருவாக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரை மைய அரசியலில் பெண்களின் பங்குபற்றலை விடக் குறைவாகவே இருக்கிறது. 1865இல் கொழும்பு மாநகரசபை ஆரம்பிக்கப்பட்ட போதும் 1937 வரை அதில் பெண்களின் அங்கத்துவம் இருக்கவில்லை.

1937இல் டொக்டர் மேரி ரத்தினம் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண். ஆனால் அந்தத் தேர்தலில் எழுந்த சட்டப்பிரச்சினை காரணமாக அவர் ஒரு சில மாதங்களில் அங்கத்துவமிழந்தார். 1949இல் ஆயிஷா ரவுப் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தான் இலங்கையில் தேர்தல் அரசியலில் பிரவேசித்த முதல் முஸ்லிம் பெண்ணாகவும் திகழ்கிறார். 1954இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தொடர்ச்சியாக உள்ளுராட்சி அரசியலில் ஈடுபட்டார். ஒரு தடவை அவர் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1979இல் திருமதி சந்திரா ரணராஜா கண்டி மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் அதன் பிரதி மேயராகவும் கடமையாற்றியிருந்தார். அவர் தான் ஆசிய நாடொன்றில் தெரிவான முதலாவது பெண் மேயருமாவார். திருமதி நளின் திலகா ஹேரத் நுவரெலியா நகர சபையின் தலைவராகக் கடமையாற்றியிருக்கிறார். திருமதி.ஈ.ஆர்.ஜயதிலக்க நாவலப்பிட்டிய நகரசபைத் தலைவராக இருந்திருக்கிறார்.

2002ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு பெண்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சுயாதீன குழுவை போட்டியிடச் செய்தார். பிரபல மனித உரிமை – பெண்ணுரிமையாளரான நிமல்கா பெர்னாண்டோ. எவரும் தெரிவாகாத போதும் பெண்களின் பிரதிநித்துவத்துக்கான ஒரு சிறந்த பிரச்சார மேடையாக வரலாற்றில் அமைந்தது.


ஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர். 1931இல் டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொண்ட போது பெண்களுக்கும் சேர்த்தே அது கிடைத்தது. ஆனால் அது பெரும் போராட்டத்தின் பின் தான் கிடைத்தது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் இந்த 87 வருடங்கள் காத்திருக்க நேரிட்டது குறைந்தது இந்த 25% வீதத்தை உறுதிபடுத்துவதற்காக.

பிரித்தானிய காலனிய நாடுகளிலேயே பெண்களுக்கும் சேர்த்து சர்வஜன வாக்குரிமை பெற்ற முதலாவது நாடு இலங்கை. உலகிலேயே பெண்ணை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தை தந்த நாடு இலங்கை. அது மட்டுமன்றி ஆசியாவிலேயே முதலாவது பெண் மேயரைத் தந்ததும் இலங்கை தான்.

இதுவரை வரலாற்றில் இரு பெண்கள் தான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள். இருவருமே தாயும் மகளும். அதுவும் இருவரின் தெரிவிலும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

ஏனைய அதிகார அங்கங்களைப் போலல்லாமல் இச்சபைகள் நேரடியாக மக்களோடு பணிபுரிவதற்கான களம். இதுவரை தகப்பன், கணவன், சகோதரன், போன்ற அரசியல் வாதிகளுக்கு ஊடாகவே மேல் மட்ட அரசியலுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து சேர்ந்தார்கள். ஜனாதிபதி முறை, பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை என அனைத்துக்குமான அரசியல் பாலபாடத்தையும், அரிச்சுவடியையும் கற்கும் களமாக உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றது.

கடந்த 2017 World Economic Forum என்கிற அமைப்பு வெளியிட்ட “Global Gender Gap Index 2017” என்கிற புள்ளிவிபரத்தின்படி ஆண்-பெண் சமத்துவ வரிசையில் இலங்கை 109 வது இடத்தில் இருக்கிறது. 2016இல் 100வது இடத்தில் இருந்தது. 2015 இல் 84வது இடத்தில் இருந்தது. அவ் அறிகையின்படி பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகள் கூட இலங்கைய விட முன்னிலையில் இருக்கின்றது. ஆக ஆண் பெண் சமத்துவம் மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கும் நாடாக உலக அரங்கில் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது இலங்கை.

உலகுக்கே பெண் அரசியல் தலைமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை இன்று தென்னாசியாவில் கூட மோசமான பின்னடைவுக்கு உதாரணமாக ஆகியிருக்கிறது. (பார்க்க அட்டவணை)

Inter Parliamentary Union அமைப்பின் 01.12.2017  அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது
http://archive.ipu.org/wmn-e/classif.htm
இறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில்  6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே. 

உள்ளூராட்சிச் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 1997இல் 1.9%வீதமாகவும், 2004இல் 1.8% வீதமாகவும், 2011இல் 1.9% வீதமாகவும் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையை சட்டம் தலையிட்டும் சரி செய்ய முடியவில்லை. இப்போது புதிய வழிகளைக் கோரியபடி அடுத்த கட்ட போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

ரோசி சேனநாயக்க
ரோசி சேனநாயக்க
இலங்கையின் பிரதான மாநகர சபையின் புதலாவது பெண் மேயர். 05.01.1958 இல் பிறந்த ரோசி சேனநாயக்க தற்போது 60 வயதைக் கடந்தவர்.
1980 ஆம் ஆண்டு இலங்கையின் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட ரோசி 1981இல் சர்வதேச ஆசிய பசுபிக் நாடுகளின் அலகு இராணியாக தெரிவானார். 1985 ஆம் ஆண்டு அவர் திருமணமான உலக அழகு ராணியாக தெரிவானார். அதன் பின்னர் அவர் பல போது நடவடிக்கைகளில் ஈடுபட்டு படிப்படியாக சமூக தலைமைப் பாத்திரத்துக்கு தன்னை ஈடுபடுத்தி அரசியல் பணிக்குள் நுழைந்தவர்.
கொழும்பு மாநகர சபை இதுவரை ஐ.தே.க.வின் கைகளை விட்டு நழுவியதில்லை. இந்தத் தேர்தலில் 131353 வாக்குகளைப் பெற்று ஐ.தே.க 60 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதன்படி புதிய சட்ட திருத்தத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு 27 பெண்கள் தெரிவாகியாக வேண்டும்.
ரோசி சேனநாயக்க அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, சிறுவர்கள் - பெண்ணிய – மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளராக மட்டுமன்றி இனவாதத்துக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் தன்னை நிறுவியவர். சில சிங்களத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

1987 இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 2002இல் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியிருக்கிறார். அதன் பின்னர் ஐ.தே.க வின் கொழும்பு மேற்குத் தொகுதியின் அமைப்பாளராக இயங்கி வந்தார். 2009 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு 80,884 அதிகப்படியான விருப்பு வாக்குகளின் மூலம் தெரிவானார். 2010 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவியாக இயங்கினார். 2010 பொதுத் தேர்தலில் 66,357 விருப்பு வாகுகளினால் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.  2015 இல் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை  கடமையாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒருசில வாக்குகளின் வித்தியாசத்தில் அவரது பிரதிநிதித்துவம் இல்லாது போனது. அவர் 65320 வாக்குகள் பெற்றிருப்பதாக வெளிவந்த முடிவை எதிர்த்து அவர் வாக்குகளை மீள எண்ணும்படி மேன்முறையீடு செய்தார். ஐ.தே.க பட்டியலில் தெரிவானோரில் இறுதியாக மனோ கணேசன் இருந்தார். ரோசி தெரிவாகாதது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் ரோசி தனது முயற்சியை கைவிட்டார். ரோசியை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க ஏற்பாடாகி வந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்தார். தனது அரசியல் பயணத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக ஆவதற்கான வாய்ப்பு குறித்து அப்போது தான் உரையாடப்பட்டது. இந்த இடைக்காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அது தொடர்பில் உள்ளூரில் மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டினார்.
 விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்திருப்பதையிட்டு அவர் முறைப்பாடு செய்ய முனைகையில்   பிரதம மந்திரி காரியாலயத்தின் பிரதானியாக கடமையாற்றினார்.
இலங்கையின் பெரிய உள்ளூராட்சி சபை கொழும்பு மாநகர சபை. இலங்கையின் மையம். சகல அதிகார பீடத்தின் பிரதான காரியாலயங்கள், வர்த்தக மையங்கள், அதிக ஜனத்தொகை, அதிக சேவை, வள பரிமாற்றம் நிகழும் இடமாக திகழும் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகும் மேயர் பதவி சாதாரண ஒன்றல்ல. அப்பதவி ஒரு பெண்ணிடம் இம்முறை கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வு.


மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா? - என்.சரவணன்


இன்றிலிருந்து கிழக்கில் வெளிவரத் தொடங்கியிருக்கும் "அரங்கம்" சஞ்சிகையில் வெளிவந்திருக்கிற கட்டுரை இது.  நன்றியுடன் மீள இங்கு பதிவிடுகிறோம்.
போர்த்துக்கேயர் இலங்கைத் தீவை நிரந்தரமாக தமது காலனித்துவத்துக்குள் கொண்டு வந்துவிட்டதென நம்பி நாட்டின் முக்கிய கரையோர கேந்திர இடங்களிலெல்லாம் தமது பலமான கோட்டைகளை நிறுவினார்கள். அந்த வரிசையில் மட்டக்களப்பு வடக்கு மன்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கடலை அண்மித்து புளியந்தீவில் வாவி சூழ்ந்த பகுதியில் அமைத்த கோட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மட்டக்களப்பின் காலனித்துவ அரசியல் வரலாற்றின் ஒரு வடிவமாக இந்தக் கோட்டை திகழ்கிறது.

1628இல் போர்த்துக்கேயரால் அமைத்து முடிக்கப்பட்ட இந்தக் கோட்டையில் போர்த்துக்கேயர் 10 ஆண்டுகள் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. போர்த்துக்கேயரை விரட்டியடிக்க கண்டி அரசன் ராஜசிங்கன் ஒல்லாந்தரை நாடினான். அதன் விளைவு 18.05.1638 இல் அக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஒல்லாந்தர் அதனை அழித்து புதிய வடிவில் மீண்டும் கட்டி அங்கேயே தங்கினர் ஒல்லாந்தர். 1766இல் கண்டி அரசுக்கு விட்டுக்கொடுத்தனர். 1796 இல் இக்கோட்டை ஆங்கிலேயர்களால் எந்தவித எதிர்ப்புமின்றி கைப்பற்றப்பட்டது.

ஆகவே மூன்று காலனித்துவ நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கோட்டை என்கிற சிறப்பு இந்த கோட்டைக்கு உண்டு. தமது வர்த்தக மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அங்கிருந்துதான் மேற்கொண்டார்கள்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தக் கோட்டைக்குள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலவட்டக் கல்லும், ஆசனக் கல்லும் இருப்பதாகவும், ஆகவே இந்தக் கோட்டை அமைப்பதற்கு முன் இங்கு பௌத்த விகாரை இருந்ததற்கான தடயங்கள் உள்ளது என்று தொல்பொருள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு இருந்த பௌத்த விகாரையை அழித்துத் தான் அங்கு இந்த கோட்டை கட்டப்பட்டதாக சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் நூல்களிலும், கட்டுரைகளிலும் குறிப்பிடுகின்றனர். தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் இது பற்றிய ஸ்தூலமான வாதங்கள், அல்லது விபரங்கள் இல்லாமையினால் மேற்படி சிங்கள – பௌத்த தரப்பு வாதங்கள் பலமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றது.

மட்டக்களப்பு என்கிற பெயர் கூட “பலகொட்டுவ” (මඩකලපුව බලකොටුව - கோட்டை) என்கிற சிங்களப் பெயரில் இருந்து தான் வந்தது என்று பல சிங்கள நூல்களில் காணக்கிடைக்கின்றது. அப்படி ஒரு புனைவை விக்கிபீடியா போன்ற இணைய கலைக்களஞ்சியங்களிலும் கூட (முடிந்தவர்கள் Batticaloa fort என்கிற தலைப்பிலுள்ள Wikipedia கட்டுரையையும் பார்க்க) பதிவு செய்திருக்கின்றனர்.

சமீபகாலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்பொருள் சான்றுகள் கிடைத்து வருகின்றன என்று கூறி தமிழ் - முஸ்லிம் சமூகங்களுடன் வம்பிழுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அறிவோம்.

பௌத்த சான்றுகள் கிடைப்பதை புனைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் பெரும்பாலான சான்றுகள் உண்மையானவையே. ஆனால் இதில் ஒரு அரசியல் சிக்கல் உண்டு. பௌத்தத்தை சிங்களத்துடன் கோர்த்து விடுவது தான் முதல் சிக்கல். அதன் மூலம் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழர்களின் தாயக பிரதேசமாக வடக்கு கிழக்கை கொள்ள முடியாது என்கிற வாதத்தை நிறுவதற்கும் தான் இத்தகைய புதைபொருள் சான்றுகள் சிங்கள பௌத்த தரப்புக்கு அவசியப்படுகின்றன.

மாறாக இலங்கையில் “தமிழ் பௌத்தம்” என்கிற ஒன்றும் இருந்தது என்பதும் சிங்கள மக்கள் பெருவாரியாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்கள பௌத்தம் போல தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்த பிரதேசங்களில் தமிழ் பௌத்தம் நிலவியது என்பதும் மறக்கடிகப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. தமிழர்களும் தமக்கும் பௌத்தத்துக்கு இருந்த உறவை பலமாக நிறுவாததும், அப்பேர்பட்ட பௌத்தத்தை கைவிட்டதும், இந்துத்துவத்தினதும், சைவத்தினதும் செல்வாக்கின் காரணமாக பௌத்தத்தை தள்ளி வைத்ததும் கூட இனப்பிரச்சினையின் இன்றைய வடிவத்துக்கு முக்கிய காரணம் தான்.

இலங்கையில் தமிழர்கள் பலர் சமணர்களாகவும், பௌத்தர்களாக இருந்ததையே ஆச்சரியமாகப் பார்க்கும் சந்ததி தோன்றி நூற்றாண்டுகளாக ஆகிவிட்டன. இன்று சிங்களவர்களின் மதமாக பௌத்தத்தை கருதுகிற போக்கு சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமல்ல தமிழர் – முஸ்லிம்கள் மத்தியிலும் கூட நம்புகின்ற போக்கு அரசியல் ஆபத்தைக் கொண்டது. இன்றைய இனச்சிக்கலில் இதன் வகிபாகத்தை மறுக்க முடியாது. தமிழில் அவசியமான, அவசரமான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம் “இலங்கையில் தமிழ் பௌத்தம்” பற்றிய ஆய்வுகள். பல்கலைக்கழகங்களில் அரசியல், வரலாற்றுத் துறை, தொல்பொருள்துறை மாணவர்களுக்கு இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் படி வலியுறுத்த வேண்டியதன் தேவை அதிகமுள்ளது.




நன்றி - அரங்கம்

'மலையக மக்களும் தேசிய இனம் என்று புதிய யாப்பு அங்கீகரிக்க வேண்டும்'

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மலையகத்திலுள்ள சமூக அமைப்புகள் யோசனைகளை முன்வைத்துள்ளன.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் குழுவிடம் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் அமர்வு இரண்டு நாட்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தனி அதிகார அலகு, தனி அடையாளம், காணி உரிமை உட்பட மலையக மக்கள் சார்ந்த பல்வேறு யோசனைகள் இந்தக் குழுவிடம் பலரும் முன்வைத்துள்ளனர்.

மலையக ஆய்வகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில், இலங்கை ஒரு பல்லின- பல்கலாசார-மதச்சார்பற்ற நாடு என்று புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தேசிய இனங்களாக சிங்களவர், வடக்கு-கிழக்கு தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம் என அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களை கொண்டதான அதிகார அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறே, மூன்று மாகாணங்களிலும் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கி நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நிலத் தொடர்பற்ற அதிகார பகிர்வு தேவை என்றும் கோரியுள்ளதாக மலையக ஆய்வகத்தின் பிரதான செயற்பாட்டாளரான ஏ. லோறன்ஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பிராந்திய ரீதியான அதிகார பகிர்வில் பொலிஸ் அதிகாரத்தை தாங்கள் வலியுறுத்தாவிட்டாலும் காணி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பபட வேண்டும் என்றும் துனை ஜனாதிபதிகளாக மலையகத் தமிழர் உட்பட மூன்று சிறுபான்மை இனங்கள் சார்பிலும் மூன்று பேர் தெரிவாகக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் லோறன்ஸ் கூறினார்.

நன்றி - BBC

பல்கலைக்கழக அனுமதியில் மலையக மாணவர்களின் வரலாற்று சாதனை - எம்.வாமதேவன்


ஒரு சமூகத்தின் நிலைமாற்றத்தில் அல்லது மேல்நோக்கிய சமூக நகர்வில் கல்வி கற்றோர்களின் குறிப்பாக பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக முக்கியமாக கருதப்படுகின்றது. தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட மலையக சமூகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தமை வியப்புக்குரிய வொன்றல்ல. எனினும் பட்டதாரிகளின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு இச் சமூகம் நிலைமாற்றம் பெறுவதை எடுத்துக்காட்டுகின்ற முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். அந்தவகையில் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியானது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டில் மலையக பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி 500ஐ தாண்டியதாகவும் அது ஒரு சடுதியான வளர்ச்சியையும் சுட்டி காட்டுகின்றது. இது வரைக்குமான அனுமதியானது மொத்த அனுமதியில் 1சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததோடு 2017ஆம் ஆண்டில் இது 1.7வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் அரச பல்கலைக் கழக அனுமதியில் தொடர்ச்சியாக ஒரு வளர்ச்சி காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அது 29000மாக அதிகரித்துள்ளது. ஒரு சதவீதத்திற்கு குறைவு என்கின்ற போதும் மலையக மாணவர்களின் அனுமதி கடந்த காலங்களில் 100 –150 ஆகவே அமைந்திருந்தது. மொத்தம் 29000 என்ற நிலையில் 500 ஆனது 1.7வீதமாக அமைந்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் தன்மை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாற்று பின்னணி

ஒரு வரலாற்று நோக்கில், 1965ஆம் ஆண்டு மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை பொறுத்தவரை ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இதற்கு முன்னைய ஆண்டுகளின் பல்கலைக்கழக அனுமதி விரல் விட்டு எண்ணக் கூடியதாகவும் மலையக மாவட்டங்களுக்கு அப்பால் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் இருந்தே அனு மதிகள் இடம்பெற்றன. அந்த வகையில் 1965இல் முதன்முறையாக மலையகத்திலிருந்து நேரடியாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவானோர் தொகை 8பேராக இருந்தமை, எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் முதன்முறையாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து மூவரும், மாத்தளை சென்.தோமஸ் கல்லூரி, கண்டி சென்.சில்வெஸ்டர், கம்பளை ஸாஹிரா கல்லூரி, கண்டி உயர் நிலை கல்லூரி, பதுளை சென். பீட்ஸ் ஆகிய கல்லூரிகளில் தலா ஒவ்வொருவரும் உள்ளடங்குவர். இத்தோடு கொழும்பு விவேகானந்தா கல்லூரியிலிருந்து இந்திய வம்சாவளியினர் இருவர் பல்கலைக் கழக அனுமதி பெற்றிருந்தனர். இதற்கு முன்னர் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி, கம்பளை ஸாஹிரா கல்லூரி, கண்டி சில்வெஸ்டர் கல்லூரிகளில் இருந்து ஓரிருவர் அனுமதி பெற்றிருந்தாலும் தொகை அடிப்படையில் கிட்டத்தட்ட 8பேர் இருந்தமையும் இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி முதன்முறையாக இடம்பெற்றமையும் திருப்புமுனையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1965ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மொத்த அனுமதியானது அதற்கு முன்னைய ஆண்டுகளை விட 1000– 1500 மட்டத்திலிருந்து 4000 அல்லது 5000க்கு உயர்ந்தது. இந்த ஆண்டில் மலையக பாடசாலைகளிலிருந்து அனுமதிக்கப்பட்ட அனைவரும் கலைத்துறைச் சார்ந்தவர்களாவர். இதைவிட வேறு சிலர் வடக்கிலிருந்து விவசாயம் மற்றும் மருத்துவம் போன்ற பீடங்களில் அனுமதி பெற்றிருந்தனர். 1965ஆம் ஆண்டில் இலங்கை பல்கலைக் கழகமும் வித்தியோதயா மற்றும் வித்தியாலங்கார போன்ற பிரிவெனாக்களும் பல்கலைக் கழக பட்டங்களை வழங்கி வந்தன. இலங்கை பல்கலைக் கழகமானது பேராதனை, கொழும்பு என இரண்டு வளாகங்களாக காணப்பட்டது. 1965இல் சுட்டிக்காட்டப்பட்ட அதிகளவான கலைப்பீட மாணவர்கள் கொழும்பு வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டனர். 1965–2017ஆம் ஆண்டு வரையான சுமார் 52வருட காலப்பகுதிகளில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததோடு மாணவர்களின் அனுமதியும் 5000 என்ற மட்டத்திலிருந்து 29000 வரை உயர்ந்துள்ளது. இந்த அனுமதியில் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவானது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தமையே அதிக அளவில் சுட்டிகாட்டப்பட்ட ஒன்றாகும். 1965ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக புதுமுக வகுப்புக்கள் பெரும்பாலும் மலையக பகுதிகளில் தோட்டப் புற நகரங்களில் அமைந்துள்ள மிஷனரி பாடசாலைகளிலேயே காணப்பட்டன.


1960களை தொடர்ந்து பெரும்பாலான பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. ஹட்டன் ஹைலன்ஸ் மற்றும் பொஸ்கோ கல்லூரிகள் மாத்தளை சென்தோமஸ் போன்ற பாடசாலைகள் இவற்றுள் உள்ளடங்கும். எனவே 1960களை தொடர்ந்து பல பாடசாலைகளில் க.பொ.த (உ/த) வகுப்புக்கள் ஆரம்பித்தமையை காணக்கூடியதாக உள்ளது. இதன் விளைவாக நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் இருந்து 1966இல் இரண்டு பேர் நேரடியாக முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டனர்.

1970ஐ தொடர்ந்த ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டன. பின்னர் 1990களில் பல பாடசாலைகள் ஜிடிஇஸட் சீடா போன்ற நிறுவனங்களினாலும் தரம் உயர்த்தப்பட்டு உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கையில் ஒரு கூரிய வளர்ச்சியினை காணமுடிகின்றது. இதே காலப்பகுதியில் சாதாரணத் தரத்திலிருந்து உயர்தரத்திற்கு சித்தி எய்தியவர்களின் எண்ணிக்கையும் உயரத்தொடங்கியது.

உயர்தர பாடசாலைகளினுடைய எண்ணிக்கை உயர்வடைந்த அதேவேளை உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகையிலும் ஒரு பாரிய வளர்ச்சியை காணமுடிகிறது.


தற்போதைய நிலை

இத்தகைய பகைப்புலத்தில் 2017ஆம் ஆண்டில் கிடைத்த தகவலின் படி ஏறக்குறைய தோட்டப்புறங்களில் அமைந்துள்ள 144 பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்கள் (12ஆம் ஆண்டு 13ஆம் ஆண்டு) காணப்படுகின்றன இவை 23 1ஏபி பாடசாலைகளையும் 121 1சீ பாடசாலைகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்கின்றார்கள். இந்த 144 பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழக அனுமதி குறித்த விபரங்கள் கோரப்பட்டபோது 100 பாடசாலைகளிலிருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோன்றியவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதிப் பெற்றவர்கள். இறுதியாக பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் போன்ற விபரங்கள் பெறப்பட்டன. இதன்படி 3450 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 2473பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்று அவர்களுள் 506 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பாடசாலைகளின் விபரங்கள் அட்டவணை 1இல் மற்றும் 2இல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை 1இல் காட்டப்பட்டுள்ளவாறு 10க்கு மேற்பட்ட மாணவர்கள் 13 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் 4 1சீ பாடசாலைகளும் ஏனையவை 1ஏபி பாடசாலைகளும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 500க்கு அதிகமாக அனுமதிப்பெற்றுள்ள மாணவர்களின் 216 மாணவர்கள் ஹட்டன் நகரிலும் அதற்கு அண்மித்த நகரிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 10க்கு மேற்பட்ட மாணவர்களை அனுப்புகின்ற பாடசாலைகள் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. 73 பாடசாலைகளில் இருந்து 10க்கும் குறைவானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் எண்ணிக்கையானது 176 ஆக அமைந்துள்ளது. இதைவிட அட்டவணை 02இல் காட்டப்பட்டுள்ளவாறு ஏனைய பாடசாலைகள் 04ல் 52பேரும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே மொத்தமாக 268 பேர் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்தத்தில் 53வீதமாகும். ஏனைய பாடசாலைகள் கண்டி மாவட்டத்தில் ஒன்றும் மாத்தளை மாவட்டத்தில் ஒன்றும் பதுளை மாவட்டத்தில் இரண்டுமாக அமைந்துள்ளன. பாடங்களை பொறுத்தவரையில் 50க்கு மேற்பட்டவர்கள் கலைத்துறைக்கே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 13வீதமானவர்கள் முறையே வர்த்தகம் மற்றும் விஞ்ஞான துறையிலும் 10வீதமானவர் கணிதத் துறையிலும் 08வீதமானவர்கள் ஏனைய துறைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த அனுமதியில் ஏறக்குறைய 70வீதமானவர் பெண்களும் 30வீதமானவர்கள் ஆண்களுமாக காணப்படுகின்றமையும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். 14 பாடசாலைகளில் இருந்து ஒருவரேனும் தெரிவுசெய்யப்படாமையும் குறிப்பிடப்பட வேண்டியவொன்றாகும்.


முடிவுரை

இந்த எண்ணிக்கை வளர்ச்சியானது 1965இல் 8ஆக இருந்து 2015இல் 506ஆக வளர்ந்துள்ள நிலையில் கலைத்துறை பாடங்களின் அனுமதி 100வீதத்திலிருந்து 50வீதமாக குறைந்துள்ளது. ஹைலன்ஸ் கல்லூரி 03இல் இருந்து 76ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்தோடு இங்கு கலைத்துறையை விட ஏனைய துறைகளில் அனுமதி பெற்றுள்ளமை ஒரு வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. ஏனைய துறைகளில் அதிகரிப்பு காணப்பட வேண்டுமெனின் 1ஏபீ பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்ததை போலவே அனுமதியானது பல்வேறு மாவட்டங்களில் அமைந்திருந்தாலும் அதிகமான செறிவு நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதற்கு இந்த தரவானது வலு சேர்க்கின்ற ஒன்றாக அமைகின்றது. ஏனைய மாவட்டங்களின் எண்ணிக்கை .குறிப்பாக இரத்தினபுரி கேகாலைஇ மாத்தறை மாவட்டங்களில் 10 வீதத்துக்குக் குறைவானவர்களே தெரிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியமை சுட்டிக்காட்டப்பட வேண்டியவொன்றாகும்.

நன்றி - வீரகேசரி

தேர்தல் முடிவுகள் மலையக அபிவிருத்திக்கு சாதகமாகுமா? - அருள் கார்க்கி


உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலை சந்தித்த மலையகம் பாரிய மாற்றங்களுக்கு இம்முறை முகங்கொடுத்துள்ளது. புதிய முறையில் இடம்பெற்ற இத்தேர்தல் கட்சிகளின் பலப்பரீட்சையாக அமைந்தது. அந்த வகையில் கிராம அதிகாரி பிரிவுகள் வாயிலாக தமது பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்தது. எனவே மலையகப் பகுதிகளில் இம்முறை வாக்களிப்புக்கு மக்களின் பங்குபற்றல் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.

இம்முறை வாக்களிப்பு நடைமுறை சரளமானதாகக் காணப்பட்டதன் காரணமாக மக்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடியதாக இருந்தது. விருப்பு வாக்கு முறைமை இன்மையால் மக்கள் இலகுவாக கட்சிகளுக்கு வாக்களித்து தமது உரிமையை நிறைவேற்றினார்கள். வேட்பாளர்களும் மக்களுக்கு பரீட்சயமான நபர்களாதலால் தேர்தல் களம் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும் இருந்தது.

மலையகத் தேர்தல் களம் வழமையைப்போல இம்முறையும் பல்வேறு விதமாக குளறுபடிகள் கொண்டதாகவும் ஜனநாயகப் பண்புகள் மீறப்பட்டதாகவும் அமைந்தது. என்னதான் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டங்கள் இயற்றினாலும் பாதுகாப்புப் பிரிவினர் கடமையைச் செய்தாலும் தோட்டங்களில் மதுபான விநியோகத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வியே எஞ்சியது. அதுமட்டுமன்றி வேட்பாளர்களில் அநேகர் தேர்தல் இடம்பெறும் தினத்தன்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதனையும் கட்டுப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல் உணரப்பட்டது.

எவ்வாறாயினும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை கணிக்க முடியாத அளவிற்கு மாற்றங்களும் திருப்புமுனைகளும் இடம்பெற்றன. மேலும் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு ஆளுங்கட்சிகள் வெற்றி பெறாமை முக்கிய திருப்பு முனையாகும். தமிழர்களின் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பினும் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிக்கே அதிக வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.

தேர்தல் கணிப்புக்களை மீறி பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை மஹிந்த அணி வென்றுள்ளமை நாம் அறிந்ததே. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மலையக மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சபைகளும் இதில் உள்ளடக்கம். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த பிரதேச சபையையும், தலவாக்கலை– லிந்துல நகர சபையையும் பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ள அதேவேளை பதுளை மாவட்டத்தில் சொரனாதோட்ட பிரதேச சபை, கந்தகெட்டிய பிரதேச சபை, ஊவா பரணகம பிரதேச சபை, பண்டாரவளை பிரதேச சபை, ஹல்து முல்லை பிரதேச சபை, ஹாலி– எல பிரதேச சபை மற்றும் வெலிமடை பிரதேச சபை ஆகியன மஹிந்த அணிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளன.

அதேபோல் இரத்தினபுரி, கண்டி, கேகாலை போன்ற தமிழர் கணிசமான அளவு குடியிருப்பைக் கொண்ட பகுதிகளிலும் பொதுஜன பெரமுன ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடியது. எவ்வாறாயினும் மலையகம் தமிழர்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழலிது.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான சபைகளில் தமிழர்களின் ஆதிக்கம் காணப்படும். எனினும் பதுளை மாவட்டத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தன்மை நிலவுகின்றது. தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரம் இன்மை மற்றும் சுயேச்சை குழுக்களின் வகிபாகம் என்பன இதில் தாக்கத்தைச் செலுத்தலாம். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளை நம்பி தேர்தலில் குதித்து வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புண்டு . ஆட்சியமைக்கும் கட்சிக்கு அல்லது சுயேச்சை குழுவுக்கு அதிகமான ஆதரவை தேட முற்படலாம்

மறுபுறம் இம்முறை அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கணிசமான ஆசனங்களைப் பெற்றுள்ள காரணத்தினால் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பர் என்பதும் உண்மை.

எனினும் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசி வாங்கவும் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

 அதுவும் சில சுயேச்சை வெற்றியாளர்கள் முன்னர் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகித்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் இம்முறை வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.

அந்த வகையில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெறவில்லை.

அதேபோல் பொதுஜன பெரமுன கட்சியில் அனேகமானவர்கள் தமிழர்கள் அல்லாததும் மலையக மக்களுக்கு பாதகமான விடயமொன்றேயாகும்.இதேவேளை நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு வந்துள்ளன.

ஏனைய பிரதேசங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படப் போகின்றது என்பது வெற்றியீட்டிய வேட்பாளர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை புரிவதற்கான முடிவை எடுப்பார்களா அல்லது சுய லாபத்துக்காக விலைபோவார்களா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அரச இயந்திரத்தின் அத்திவாரங்கள். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, நலன்புரி, பொழுதுபோக்கு என்று அனைத்துவிதமான அடிப்படைத் தேவைகளையும் உள்ளூராட்சி சபைகள் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். ஒதுக்கப்படும் நிதியில் காத்திரமான, நிலையான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் முதல் தேவை எதுவோ அதனை இனங்கண்டு அதனை நிவர்த்திச் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.

இவ்வளவு காலமும் பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கிராமபுறங்களை சென்றடைகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனி அதனை மாற்றியமைக்க முடியும். கிராமபுறங்களுக்கு நிகராக தோட்டப்புறங்களை அபிவிருத்திச் செய்ய முடியும். குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது கட்டாயம். அபிவிருத்திகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் பெறுமதியை அதிகரிக்க முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் தான் இவை. கிராமப்புற சிங்கள சமூகம் இலவசமாக பெற்றுக்கொள்ளும் அல்லது அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை மலையக சமூகம் பணம் செலுத்தி பெற்றுகொள்ளும் நிலைமை இன்றும் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன என்பதைக் கூட மலையக மக்கள் இதுவரையில் முழுமையாக அறிந்துக் கொள்ளவில்லை. அதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. இது அதற்கான சந்தர்ப்பம்.

இதுவரையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சுயலாப அரசியலுக்கும், விலைபோகும் அரசியலுக்கும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் பெருமளவானோர் இளைஞர்கள். எனவே இச்சமூகத்தின் அபிவிருத்தி மற்றும் சமூகப்பெறுமதி என்பவற்றை கையில் ஏந்தி நிற்பதன் உண்மையை பிரதிநிதிகள் உணர வேண்டும். சேர்ந்த இடம் எதுவாக இருப்பினும் செய்யும் கருமம் சமூகநோக்கு உடையதாய் அமையட்டும்

நன்றி - வீரகேசரி

"என்.சரவணனின் இரு நூல்களும் தமிழ் சூழலில் முக்கியமானவை" - பேராசிரியர் சபா ஜெயராசா


ஊடகவியலாளரும் ஆய்வாளருமான என். சரவணன் எழுதிய 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்',  '1915 கண்டி கலவரம்' ஆகிய நூல்களின் விமர்சனக் கூட்டம் கடந்த 31.01.18 அன்று வெள்ளவத்தை தர்ம ராம வீதியில் அமைந்துள்ள 'பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்'தில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.

'அறிந்தவர்களும் அறியாதவைகளும்' ஏற்கனவே வீரகேசரி சங்கமம் பகுதியில் தொடர்ச்சியாக வெளி வந்த கட்டுரைகளாகும். 'கண்டி கலவரம் 'தினக்குரலில் வெளிவந்த ஆய்வுத் தொடராகும். இவ்விரு தொடர் களும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றதாகும்.

நேற்றைய வரலாறை இன்றைய சமூகத்துக்காக என். சரவணன் தந்திருப்பது மிகப்பொருத்தமான தாகும். இந்நிகழ்வு முற்றிலும் விமர்சனப் போக்குடன் இடம்பெற்ற நிகழ்வாகவே அமைந்தது. ஏனைய இலக்கிய நிகழ்வுகளைப் போன்ற சடங்குகள் அற்ற கனதியான கலந்துரையாடல்கள் கொண்டதாகவே அமைந் ததை அவதானிக்க முடிந்தது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு பிற்பகல் 1.30 வரை தொடர்ந்தது.

இந்நிகழ்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சபா ஜெயராசா பேசுகையில்;

"நூல்கள் தமிழிலே நாளாந்தம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்நூல்களிலே தரத்தைப் பாது காப்பது மிகமுக்கியமானது. என். சரவணன் அவரது அனுபவத்தைக் கொண்டு இந்த இரு நூல்களையும் தந்துள்ளார். தர ஆழமுள்ள, தரச்சிறப்புள்ள நூல்களாக இவை அமைந்துள்ளன.

இன்று இதழியல் தனித்து செய்தியுடன் தங்கியிருக்க முடியாத நிலையில் உள்ளது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றதொரு சூழலில் பத்திரிகைகளில் தரமான கட்டுரைகள் அமைவதும் அவசியமாகிறது. கட்டுரையிலே கனதியான இலக்கியத் தரத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். இன்று பல்கலைக் கழகங்களிலே நிகழ்கின்ற ஆய்வுகள் எல்லாம் பட்டங்களுக்கான ஆய்வுகளாக மாறி வருகிறது. அந்த வகையில் சரவணன் எழுதிய இரண்டு நூல்களும் மிக முக்கியமானதாக இருக்கின்றன.

பொதுவாக பல்கலைக்கழகங்களிலே சிறுகதைகள், நாவல்கள் பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால், கட்டுரை இலக்கியம் ஆராயப்படவில்லை என்பதாகவும் பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார். மேலும் அவர் கூறியதாவது; இந்நூல் மூலமாக தமிழ் ஆய்வாளர் களுக்குத் தெரியாத பல விடயங்களை சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களமொழி அறிவும் சரவணனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

திறனாய்வாளர் தெ. மதுசூதனன் '1915 கண்டிக் கலவரம்' நூல் பற்றிய நோக்குதலை முன்வைத்தார்.

"குறுகிய காலத்துக்குள்ளே பத்திரிகைத் துறையில் நுழைந்து பல விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் 'அரசியலில் பெண்கள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இன்று பல்கலைக்கழக மரபுகளுக்கு அப்பால் அரசியல் வரலாறு பற்றி எழுது கின்ற பாரம்பரியம் தமிழிலேயே ஆங்காங்கு முளைவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஓரளவு இந்த நூலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது பல்கலைக்கழக மரபுக்கு அப்பால் நின்று கா,சி.குலசிங்கம் எழுதிய நூல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. காசிகுலம் தோற்றிய மரபை இவரது கட்டுரைகளும் அடையாளம் காட்டுகி றது. '1915 கண்டிக் கலவரம்' ஒரு கனதியான நூலாக அமைந்திருக்கிறது. 1915 என்று தலைப்பிட்டிருந்தாலும்கூட அதன் முன், பின் இலங்கையில் நடைபெற்ற சூழலை பறைசாற்றுகிறது.

60 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட் டுள்ளன. இவை தினக்குரலில் தொடர்ச்சியாக எழு தப்பட்டவையாகும். 1915ஆம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை புரிந்து கொள்வதற்கான வரலாற்றுக்கூடாக இதன் பின்புலத்தை காட்டுவ தாக அமைந்துள்ளது. கொட்டாஞ்சேனையில் நடை பெற்ற கலவரத்தையும் இங்கு இணைப்பாகத் தரப்பட் டுள்ளது.

இலங்கை வலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கையாகக் கூட இந்நூல் எழுதப்பட் டுள்ளது. தொடர்ந்தும் இந்நூலின் குறைபாடாக பத்திரிகையில் கூறியதைக் கூறல் என்பன நூலாக்கப்படும் போது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் சில எழுத்துப்பிழைகள் நூலில் இருப்பதாகவும் மதுசூதனன் சுட்டிக்காட்டினார்.

'அறிந்தவர்களும் அறியாதவையும்' எனும் நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ் இங்கு குறிப்பிட்ட போது.

"சரவணன் எழுதியுள்ள இரு நூல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. அதிலும் 'அறிந்தவர்களும் அறியாத வைகளும்' என்ற தலைப்புக்கொண்ட நூலை மிகத்தா மதமாகவே வாசிக்கக்கிடைத்தது. எழுதுகின்றபோது சொல்கின்ற பாங்கு முக்கியமானது. பத்திரிகைத் துறையாளர்கள் விடயங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி அதை மக்களிடம் எவ்வாறு சொல்வது என்பதை அறியத் தருகிறார்கள்.

25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன என்று குறிப்பிட்ட அவர் அதிலிருந்து சில கட்டுரைகளை மாத்திரம் தெரிவு செய்து அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். இந்நூலில் உள்ள சில பிரபலங்கள் வாழ்ந்த அந்த சமகாலத்தில் வாழ்ந்தவர் என்ற வகையில் அனுபவ ரீதியிலான ஆளுமைமிக்க விடயங்களையும் இங்கு பகிர்ந்துக்கொண்டார். நூலாசிரியரின் ஆசிரியர் ஜீ போல் அன்டனி கருத்து தெரிவிக்கையில்;

1990ஆம் ஆண்டளவில் நான் அதிபராகப் பதவியேற்ற கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் மகா வித்தியாலயத்தில் என்.சரவணன் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் அதிபராகப் பதவியேற்ற காலத்தில் ஒரு வருடத்திலே அவர் கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் படித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

துருதுருத்த மாணவனாக அன்று வகுப்பறையில் பார்த்தேன். குழப்படிமிக்க அந்தப் பாடசாலையில் அமைதியான மாணவனாக சரவணன் இருந்தார். அவர் பாடசாலையை விட்டு விலகியபின் தொடர்பு கிடைக்கவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று நான் அவரை நேரில் காண்கிறேன். அதற்கு முன் எமது தொடர்புகள் முகநூல் வழியாகவே இருந் தது என்று கூறியதுடன் அவரது ஆளுமைபற்றியும் சுட்டிக்காட்டினார்.

அவர் எழுதிய 'அறிந்தவர்களும் அறியாதவையும்' எனும் இந்நூலில் மவுண்ட் லவனியா ஹோட்டல், களுத்துறை- ரிச்மன்ட் கோட்டை பற்றிய காதல்கதைகள் பற்றி விழித்துக் கூறியதுடன், அதைத் திரைப் படமாக ஆக்குமளவுக்கு அதன் காதல் கருவைக் கண்டேன்!" ஐந்து பெண் ஆளுமைகளைப் பற்றி சர வணன் எழுதியுள்ள கட்டுரைகளைப் பற்றியும் இங்கு போல் அன்டனி தொட்டுக் காட்டினார்.

தினக்குரல் வார வெளியீடு ஆசிரியர் பாரதி ராஜநாயகம் குறிப்பிடும்போது;

"இலங்கையில் இனவாதம் நிறுவனமயமாக்கப் பட்டே வந்துள்ளது. இலங்கை பல மக்களின் நாடு என் பதை சிங்கள மக்கள் இன்னும் உணரவில்லை. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் அதைக்கூட உணராத இன சக்திகளாக இங்கே சிங்கள மக்கள் உள்ளனர்.

கண்டி மாநகரில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் சிங்கள் இதழ்களில் வெளிவந்தபோதும் தமிழில் வெளிவரவில்லை. புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையிலும் தனது நேரத்தை இந்நூல்களுக்காக செலவிட்டுள்ளார் என் சரவணன்" என்று குறிப்பிட்டார்.

செல்வி ஜீவா சதாசிவம் தனதுரையில், சரவணனை சில மாதங்களாகத்தான் எனக்குத்தெரியும். தினக்குரலில் அவரது கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்த வேளையில்தான் அவரைப்பற்றிய தொடர்பை பெற்றுக்கொண்டு சங்கமத்திற்கும் கட்டு ரைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

அதற்கிணங்க 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்' எனும் தலைப்பில் 25 வாரங்கள் இந்தத் தொடரை எழுதினார். அவ்வாறு சங்கமம் பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக வருவது மகிழ்ச்சியாக இருக்கும் இத்தருணத்தில் நூலாசிரியர் ஊடகத்துறைக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் இதன்போது தெரிவித்தார்.

நூலாசிரியர் சரவணன் தனது ஏற்புரையில்;

1915 கலவரத்துக்கான முழுக் காரணம் முஸ்லி ம்களே என்கிற பரப்புரை பல்லாண்டு காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அந்த புனைவை உடைப்பது இந்த நூலின் முக்கிய இலக்கு. அதே வேளை சிங்கள பெளத்த பேரினவாதம் என்கிறோம் அதன் சித்தாந்த வலிமை பற்றி பேசியிருக்கிறோம். அது நிறுவனமயப்பட்டிருக்கிறது என்கிறோம். ஆனால், அதை சித்தாந்த ரீதியில் நிறுவும் பணி தமிழ் சூழலில் போதாமையுடன் தான் இருக்கிறது. அதை நிறுவுகின்ற பணியை கடந்த 25 வருடகாலமாக செய்து வருகிறேன். அதன் ஒரு முக்கிய அங்கம் தான் இந்த நூல்.

கண்டி கலவரம் பற்றிய நூலின் முதல் 18 அத்தியாயங்களில் சிங்கள பௌத்த பேரினவாதம் 19ஆம் நூற்றாண்டில் எப்படி தோன்றி, வளர்ந்து, வியாபித்து தன்னளவில் நிருவனப்படுத்திக் கொண்டு ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நிலை நிறுத்திக் கொண்டது என்பதை நிறுவியிருக்கிறேன் என்றார். கூடவே இந்த நூல் வெளிவருவதற்குக் பிரதான காரணி வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் என்பதை அங்கு குறிப்பிட்டார்.

கனதியான விடயங்களை உள்வாங்கக்கூடிய நிகழ் வாக மிக எளிமையாக அன்றைய தினம் நடை பெற்றது. இங்கு ஒரு சிலர் இந்நூல் தொடர்பான கருத் துக்களை முன்வைத்துப் பேசினர். தேசிய ரீதியாக அங் கீகரிக்கப்படும் ஒரு ஆவணமாக இந்நூல்கள் திகழும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி - வீரகேசரி 03-02-2018

சரவணனின் இரு நூல்கள் கொழும்பில் அறிமுகம்


ஆய்வாளரும் ஊடகவியலாளருமான என்.சரவணன் எழுதிய "அறிந்தவர்களும் அறியாதவைகளும்" '1915: கண்டி கலவரம்" ஆகிய நூல்களின் விமர்சனக் கூட்டம் அண்மையில் வெள்ளவத்தை "பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.

வீரகேசரி "சங்கமம்" பகுதியில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்", தினக்குரலில் தொடர்ச்சியாக வெளிவந்த ஆய்வுத் தொடர் 'கண்டி கலவரம்" எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இந்த இரு நூல்களின் விமர்சனக் கூட்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வு பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையுரையுடன் ஆரம்பமானது. அவரது தலைமையுரையில்...

இன்று இதழியல் தனித்து செய்தியுடன் தங்கியிருக்க முடியாத நிலையில் உள்ளது, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றதொரு சூழலில் பத்திரிகைகளில் தரமான கட்டுரைகள் அமைதும் அவசியமாகிறது. கட்டுரையிலே கனதியான இலக்கியத் தரத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர். இன்று பல்கலைக்கழகங்களிலே நிகழ்கின்ற ஆய்வுகள் எல்லாம் பட்டங்களுக்கான ஆய்வுகளாக மாறி வருகிறது. அந்த வகையில் சரவணன் எழுதிய இரண்டு நூல்களும் மிகமுக்கியமானதாக இருக்கின்றன.

பொதுவாக பல்கலைக்கழகங்களிலே சிறுகதைகள், நாவல்கள் பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால், கட்டுரை இலக்கியம் ஆராயப்படவில்லை என்பதாகவும் பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: என். சரவணன் அவரது அனுபவத்தைக் கொண்டு இந்த இரு நூல்களையும் தந்துள்ளார். தர ஆழமுள்ள, தரக்சிறப்புள்ள நூல்களாக இவை அமைந்துள்ளன என்றார்.

இந்நிகழ்வில், திறனாய்வாளர் தெ. மதுசூதனன் '1015 கண்டிக் கலவரம்" நூல் பற்றிய நோக்குதலை முன்வைத்தார்.

தனக்கும் தனது நண்பர் சரவணனுக்கும் இடையில் உள்ள நட்பு தொடர்பான விடயங்களுடன் ஆரம்பித்த அவர் பின்னர் நூலுக்குள் பிரவேசித்தார். குறுகிய காலத்துக்குள்ளே பத்திரிகைத்துறையில் நுழைந்து பல விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அரசியலில் பெண்கள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இன்று பல்கலைக்கழக மரபுகளுக்கு அப்பால் அரசியல் வரலாறு பற்றி எழுதுகின்ற பாரம்பரியம் தமிழிலேயே ஆங்காங்கு முளைவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்நூலில் 60 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழு தப்பட்டுள்ளன. இவை தினக்குரலில் தொடர்ச்சியாக எழுதப்பட்டவையாகும். 1915ஆம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை புரிந்து கொள்வதற்கான வரலாற்றுக்கூடாக இதன் பின்புலத்தை காட்டியதாக அமைந்துள்ளது. கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற கவரத்தையும் இங்கு இணைப்பாகத் தரப்பட்டுள்ளது போன்ற பலதரப்பட்ட விடயங்களை இதன்போது குறிப்பிட்டார்.

'அறிந்தவர்களும் அறியாதவையும்" எனும் நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ் இங்கு குறிப்பிட்ட போது.

சரவணன் எழுதியுள்ள இரு நூல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. எழுதுகின்றபோது சொல்கின்ற பாங்கு முக்கியமானது. பத்திரிகைத் துறையாளர்கள் விடயங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி அதை மக்களிடம் எவ்வாறுகொண்டு சொல்வது என்பதை அறியத் தருகிறார்கள்.

25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன என்று குறிப்பிட்ட அவர் அதிலிருந்து சில கட்டுரைகளை மாத்திரம் தெரிவு செய்து அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

நூலாசிரியரின் பாடசாலை கால ஆசிரியர் ஜீ போல் அன்டனி கருத்துத் தெரிவிக்கையில்: 

குழப்படிமிக்க அந்தப் பாடசாலையில் அமைதியான மாணவனாக சரவணன் இருந்தார். அவர் பாடசாலையைவிட்டு விலகியபின் தொடர்பு கிடைக்கவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று நான் அவரை நேரில் காண்கிறேன். அதற்கு முன் எமது தொடர்புகள் முகநூல் வழியாகவே இருந்தது என்று கூறியதுடன் அவரது ஆளுமைபற்றியும் சுட்டிக்காட்டினார். தனது சிறந்த ஆளுமையை அவர் இரண்டு நூல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவரது எழுத்துக்கள் மேலும் வெளிவர வேண்டும் என்பதுடன் அவருக்கு ஆசியையும் வழங்குகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

தினக்குரல் வார வெளியீடு ஆசிரியர் பாரதி ராஜநாயகம் குறிப்பிடும்போது: - கண்டி மாநகரில் இடபெற்ற கலவரங்கள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் சிங்கள இதழ்களில் வெளிவந்தபோதும் தமிழில் வெளிவரவில்லை. புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையிலும் தனது நேரத்தை இந்நூல்களுக்காக செலவிட்டுள்ளார் என் சரவணன் என்று குறிப்பிட்டார்.

செல்வி ஜீவா சதாசிவம் தனதுரையில்.

சரவணனை சில மாதங்களாகத்தான் எனக்குத் தெரியும். தினக்குரலில் அவரது கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்த வேளையில்தான் அவரைப்பற்றிய தொடர்பை பெற்றுக்கொண்டு சங்கமத்திற்கும் கட்டுரைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

அதற்கிணங்க 'அறிந்தவர்களும் அறியாதவைகளும்" எனும் தலைப்பில் 25 வாரங்கள் இந்தத் தொடரை எழுதினார். அவ்வாறு சங்கமம் பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக வருவது மகிழ்ச்சியாக இருக்கும் இத்தருணத்தில் நூலாசிரியர் ஊடகத்துறைக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் இதன்போது தெரிவித்தார். நூலாசிரியர் சரவணன் தனது ஏற்புரையில்:

1915 கலவரத்துக்கான முழுக் காரணம் முஸ்லிம்களே என்கிற பரப்புரை பல்லாண்டு காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அந்த புனைவை உடைப்பது இந்த நூலின் முக்கிய இலக்கு. அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாதம் என்கிறோம் அதன் சித்தாந்த வலிமை பற்றி பேசியிருக்கிறோம், அது நிறுவனமயப்பட்டிருக்கிறது என்கிறோம், ஆனால், அதை சித்தாந்த ரீதியில் நிறுவும் பணி தமிழ் சூழலில் போதாமையுடன் தான் இருக்கிறது. அதை நிறுவுகின்ற பணியை கடந்த 25 வருடகாலமாக செய்து வருகிறேன். அதன் ஒரு முக்கிய அங்கம் தான் இந்த நூல்.

கண்டி கலவரம் பற்றிய நூலின் முதல் 18 அத்தியாயங்களில் சிங்கள பெளத்த பேரினவாதம் 18ஆம் நூற்றாண்டில் எப்படி தோன்றி, வளர்ந்து, வியாபித்து தன்னளவில் நிறுவனப்படுத்திக் கொண்டு ஏனைய சிங்கள பெளத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நிலை நிறுத்திக் கொண்டது என்பதை நிறுவியிருக்கிறேன் என்றார். கூடவே இந்த நூல் வெளிவருவதற்குப் பிரதான காரணி வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் என்பதை அங்கு குறிப்பிட்டார்.

கனதியான விடயங்களை உள்வாங்கக்கூடிய நிகழ்வாக மிக எளிமையாக அன்றைய தினம் நடைபெற்றது. இங்கு ஒரு சிலர் இந்நூல் தொடர்பான கருத் துக்களை முன்வைத்துப் பேசினர்.


நன்றி  தினக்குரல் - 18.02.2018

மீண்டும் தோல்வியுற்ற பெண் பிரதிநிதித்துவம்! என்.சரவணன்



புதிய தேர்தல் சட்டம் பெண்களுக்கு 25% வீத பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதில் தோல்வி கண்டிருகிறது. இதனை தேர்தல் ஆணையாளரின் அறிக்கையும், 25% பிரதிநிதித்துவத்திற்காக இதுவரை போராடி வந்தவரும், கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் மேயராக தெரிவு செய்யப்பட்டிருப்பவருமான ரோசி சேனநாயக்கவின் அறிக்கையும் கூட உறுதி செய்திருக்கிறது.

நாட்டின் சனத்தொகையில் 52% சதவீதம் பெண்களாக இருந்தும் கூட தற்போதைய பாராளுமன்றத்தில் 5.8% வீதத்தினர் மட்டும் தான் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதாவது 94.2% ஆண்களிடம் கைகளிலேயே அரசியல் அதிகாரம் குவிந்திருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக போராடி பெற்ற சட்டம் தான் 25% வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் புதிய தேர்தல் திருத்தச் சட்டம். சனத்தொகையில் அதிகமாக இருந்தும் குறைந்தபட்சம் சரிபாதி பிரதிநிதித்துவத்தைக் கூட பெண்கள் கோரவில்லை. பல சிவில் அமைப்புகள், பெண்கள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மேற்கொண்ட நெடுங்கால போராட்டத்தின் விளைவாக பெற்ற 25% பிரதிநிதித்துவ ஏற்பாடு இப்போது காணலாக ஆகியிருக்கிறது.

சட்டத்தில் ஓட்டை
புதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.

அதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.

2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ள பெண் வேட்பாளர்களில் இருந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…

தற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில்
பல்வேறு சமூக கலாசார தடைகளையும் மீறி இம்முறை வரலாற்றில் முதற்தடவையாக அதிகபட்ச பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள்.

அவர்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு சக்திகள் இயங்கின. குறிப்பாக மத நிறுவனங்கள் கூட கடுமையாக எதிர்த்தன. அவர்கள் அரசியலுக்கு பழக்கப்படவில்லை என்றார்கள். எங்கள் “பெண்களை அவர் பாட்டில் இருக்க விடுங்கள்”, “பொது மகளிர் ஆக்கிவிடாதீர்கள்...” என்று 90 வருடங்களுக்கு முன்னர் இதே கருத்துக்களை 1920களில் சர்வஜன வாக்குரிமைக்கான கோரிக்கைக்காகப் போராடியவேளை அன்றைய ஆணாதிக்கக் கும்பல் கூறியது. வாக்குரிமையைப் போராடி வெல்லவும் செய்தனர் நமது பெண்கள். ஆனால் இன்று; இலங்கையின் பெண்கள் இன்று மிகப் பெரும் ஆளுமை மிகுந்தவர்கள் என்பதை சகல துறைகளிலும் நிரூபித்து வந்திருக்கிறார்கள்.

பெண்கள் அரசியலில் ஈடுபட ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக நிலவுகிறது. இரட்டைச்சுமை பழு, அவமானங்கள் என்பவற்றைக் கடந்து துணிந்து களத்தில் இறங்கினால் ஆண்களைப் போல பணச் செல்வாக்கில்லை, சண்டியர்கள் இல்லை, பயணங்கள், பிரச்சாரங்கள் என்பவற்றை செய்வதில் ஆண்களுக்கு இல்லாத கஷ்டங்கள். பெண்கள் மத்தியில் கூட பெண் வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது ஏன் என்கிற புரிதலின்மையால் பெண்களின் ஆதரவும் நினைத்த அளவு கிடைப்பதில்லை. இத்தனை சவால்களையும் மீறி நம் நாட்டுப் பெண்கள் களத்தில் போராடியிருக்கிறார்கள்.

ஏன் எமக்குப்ப யமா?
வேட்பாளர் பட்டியலில் 25% வீத பெண்களை சேர்க்குமளவுக்கு தம்மிடம் சக்திமிக்க பெண்கள் இல்லை என்று பல அரசியல் கட்சிகள் வாதிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு பதிலளிக்கும் போது “இனி எந்த ஒரு கட்சியும் தம்மிடம் அந்தளவு அரசியல் ரீதியில் வளர்ந்த பெண்கள் இல்லையென்று மறுத்துவிட முடியாது. இப்போது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் குறைந்தபட்சம் 25%வீத பெண்களை இணைத்துத் தான் ஆகவேண்டும். கண்டுபிடியுங்கள்” என்று ஊடகங்களுக்குக் கூறினார்.

குறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

அதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத?” (ஏன் பயமா?) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.

“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா?” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.

சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர்.

அரசியல் ரீதியில் வளர்ச்சியுற்ற பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது என்று காரணம் கற்ப்பித்தார்கள். தேர்தல் காலத்தில் ஆண்களுக்கு நிகராக வன்முறைகளை சமாளிக்க மாட்டார்கள் என்றார்கள். ஆணாதிக்க சூழலை எதிர்கொண்டு தாக்குபிடித்து தலைமை தாங்க மாட்டார்கள் என்றார்கள். ஆண்களைப் போல பகலிலும், இரவிலுமாக பணிபுரியும் இயல்பு அவர்களுக்கு இல்லை என்று காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் உலகில் இந்த நிலைமைகளை எதிர்கொண்டு தான் பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தையும், தலைமையையும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.

இறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில்  6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.

இறுதியாக இருந்த உள்ளூராட்சி மன்றங்களில் 1.9% பிரதிநிதித்துவமே காணப்பட்டது. அந்த நிலையை மாற்றும் முனைப்புடன் புதிய சட்டத்தையும், ஜனநாயக அமைப்பு முறையையும் நம்பி களத்தில் இறங்கிய அவர்களுக்கு இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது புதிய நிலைமை.


ஆணாதிக்க பாராளுமன்றத்தின் அசட்டை
கடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது;
“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.
இதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”

இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.

இனி அடுத்ததாத செப்டம்பரில் மாகாண சபைகள் தேர்தலுக்காக இந் நாடு காத்திருக்கிறது. அதற்கு முன்னராவது இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு பெண்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தான் இன்று எஞ்சியிருக்கும் கேள்வி.

நன்றி - தினகரன் 18.02.2018

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates