Headlines News :
முகப்பு » , » ஞானசாரர் மனோ கணேசனுக்கு பாடம்! - ஆனந்தன்

ஞானசாரர் மனோ கணேசனுக்கு பாடம்! - ஆனந்தன்


இன்று ஞானசார தேரர் தனது பாணியிலேயே மனோ கணேசனின் அமைச்சுக்குள் இன்று (மே 17) அடாவடித்தனமாகப் புகுந்து தனது வழமையான மிரட்டல் பாணியிலேயே மனோ கணேசனுக்கு பாடம் எடுத்த வீடியோ வெளியாகி இருக்கிறது.


ராஜகிரியவிலுள்ள மனோ கணேசனின் அமைச்சுக்குள் இன்னும் சில பிக்குமார்களுடன் புகுந்ததும் "இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் போன்றோருடன் கூட எமக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிகிறது.. மனோ கணேசன் யார்" என்று முதலில் கடிந்து கொள்கிறார். "அமைச்சருக்கு உடனேயே தெரிவித்து இப்போதே இங்கு அழைக்க வேண்டும்" என்று கடுப்பாகிறார். “இந்த நாடு இந்தியாவின் மாநிலம் அல்ல" என்று அங்கிருப்பவரிடம் கூறுகிறார். "வந்திருக்கும் பிக்குமாரை எப்படி கவனிக்க வேண்டும் என்று தெரியாதா" என்று கடிந்து எங்கே வெள்ளைச் சீலைகள் என்கிறார்.

பின்னர் அமைச்சர் மனோ கணேசன் வந்து சேர்கிறார். உரையாடல் ஆரம்பமாகிறது. ஞானசார தேரர் தற்போது முஸ்லிம்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விபரிக்கிறார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு நேர்ந்து வரும் சிக்கல்களை பட்டியலிடுகிறார். கிழக்கில் தமிழர்களும் தமிழ் இந்துக்களாக இருப்பதாலேயே முஸ்லிம்களால் இன்னல்களுக்கு உள்ளாவதாகவும் மனோ கணேசனிடம் ஒரு போடு போடுகிறார். ஓரிடத்தில் இப்படி இது நகர்கிறது.

ஞானசார தேரர்: “வீட்டு உரிமையாளருடன் பிரச்சனையைப் பற்றிப் பேசாமல் வாடைக்கு வந்திருப்பவர்களுடன் பேசித் தீர்க்க முடியாதே. அது நல்லிணக்கம் இல்லையே. இந்த நாட்டின் உரிமையாளர்கள் நாங்கள் அல்லவா?”

“சரி...இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்கிறீரா இல்லையா அமைச்சரே”

மனோ கணேசன்: “நான் நினைக்கிறேன் சுவாமி...”

ஞானசார தேரர்: “கொஞ்சம் பொறுங்கள்.. கொஞ்சம் பொறுங்கள்... தேசிய நல்லிணக்க அமைச்சர் தானே நீர். நான் கேட்கிறேன்.. இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்கிறீரா?”

மனோ கணேசன்: “இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம்.....”

ஞானசார தேரர்: “இல்லை.. இல்லை.. இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்கிறீரா? இல்லையா?”

மனோ கணேசன்: “சிங்கள பௌத்தர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்”

ஞானசார தேரர்: “அப்படி என்றால் இந்த நாட்டை உருவாக்கியவர்கள் யார்.?

மனோ கணேசன்: “பே... மே....!”

ஞானசார தேரர்: "இனி இது பிழை தானே... நல்லிணக்கத்தை அப்படி ஏற்படுத்த முடியாது அரக்கனே (“யோதயோ” என்று அழைக்கிறார்). இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

(இடையில் மனோ கணேசன் ஏதோ சொல்ல முயற்சி ஆனால் ஞானசாரவின் அதிகாரக் குரலுக்கு முன்னால் அடங்கிப் போகிறது மனோவின் குரல்) தொடர்கிறார் ஞானசாரர்

"அந்த அடையாளத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஒன்றும் செய்யமுடியாது. இது சிங்கல பௌத்தர்களின் நாடு என்பதை அனைவரும் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த நாட்டில் குடியேற்றங்களை ஏற்படுத்தியது நாங்கள். பண்பாட்டை எட்படுத்தியவர்களும் நாங்கள். 2500 வருடங்களுக்கு முன்னரே உள்ள மகாவம்சம் நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழர்கள் இங்கு வந்தவர்கள்.... வந்து குடியேறியவர்கள். முஸ்லிம்கள் வந்தார்கள். சிங்களவர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். அதை எற்றுக்கொள்ளத் தெரியவேண்டும். நாட்டுக்கு உரிமையாளர்கள் இல்லாது போகும்போது ஏற்படும் பிரச்சினை தான் இவை. இந்த நாடு என்ன என்பது பற்றி அமைச்சர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்."

அமைச்சர் மனோ கணேசனுக்கு ஞானசார தேரர் வகுப்பு எடுத்து விட்டு களைந்து சென்றார். மனோ கணேசனுக்கு ஒழுங்காகஒன்றையும் விளக்குவதற்குக் கூட வாய்ப்பைக் கொடுக்கவில்லை. இடையையே மனோ கணேசனால் சடைந்து போக மட்டுமே முடிந்தது. அதன் விளைவு அவர் தான் இதற்கான அமைச்சர் அல்ல என்பதும், அதற்கான சந்திரிகாவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனமே ஜனாதிபதியின் கீழ் கவனித்து வருகிறது என்றும் தள்ளிவிடப் பார்த்தார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் “நாள் தலையிடுகிறேன்.... அது தானே எனது ஜொப். அது தானே எனது கடமை நான் அதனை செய்கிறேன்” என்கிறார்.

ஞானசார தேரர் சில மாதங்களாக அடக்கியே வாசித்தார். அவர் மீது அத்தனை வழக்குகள். சில வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு பிணையிலேயே வெளியில் இருக்கிறார். ஆக்ரோஷத்தை அடக்கி வாசித்து வந்த அவர் மீண்டும் பழையபடி களத்தில் இருங்கியிருப்பது எந்த தைரியத்தில், எத்தன அறிகுறி என்கிற அச்சம் ஏற்படவே செய்கிறது.

அவர் மீது இன்னும் பல வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு எதிர்வரும் மே 24 விசாரிக்கப்படவுள்ளது.

சிங்கள – முஸ்லிம் கெடுபிடி நிலைமை அதிகரித்து வருவதை இந்த நாட்களில் அவதானிக்க முடிகிறது. கடந்த வாரம் “இந்த இடங்களில் அல்லாவின் லப்ப எதுவும் கிடையாது” என்று அவர் தெரிவித்த கருத்துக்களால் “எங்களின் பொறுமையை சோதிக்காதே ஞானசார” என்று முஸ்லிம்களின் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது.


இந்த நிலையில் தான் ஞானசார தேரர் மனோ கணேசனிடம் தனது பட்டாளத்துடன் போய் பாடமெடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

மனோ கணேசன் தனது முகநூல் குறிப்பில் ஏதோ ஞானசார தேரர் கூறியதை எதிர்த்து மறுப்பு கூறியதைப் போல கதை விட்டுள்ளார். அவரது முகநூலில்
“எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி சடம்மும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார்.” என்கிறார்
மேற்படி சம்பவத்தை ஞானசார ஆதரவாளர்கள் 24 நிமிட வீடியோவையும் மனோ கணேசனின் முகநூலில் 28 நிமிட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் எங்கேயும் மனோ கணேசனின் மேற்படி வீரமறுப்பைக் காண முடியவில்லை. ஞானசாரருக்கு அடங்கிப் போன நூற்றில் ஒன்று தான் மனோ கணேசன் என்பதை அவர் மறைக்கலாம். எங்களால் மறைக்க முடியாது.

ஞானசாரரின் இருப்பில் ஊடக விளம்பரம் பெரும் வகிபாகம் அளித்து வருகிறது. ஆனாலும் அவர்கள் இப்போது சமூக ஊடகங்களின் பலத்தையே அதிகம் நம்பி இருக்கிறார்கள். அவர்கள் வெளியிடும் வீடியோக்களையும், கருத்துக்களையும் பல்லாயிரக்கனகானோர் பார்க்கிறார்கள். பகிர்கிறார்கள்.




Share this post :

+ comments + 1 comments

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates