Headlines News :
முகப்பு » » மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா? - செழியன் நல்லதம்பி

மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா? - செழியன் நல்லதம்பி


மத்திய மாகாண சபையிலும் வடமத்திய மாகாண சபையிலும் ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாகாண சபைகளிலும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது.

வடமத்திய மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள். மிகுதி 12 பேரில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் ஒரு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரும் அடங்குகின்றனர்.

ஐ.ம.சு.கூட்டமைப்பிலுள்ள 21 பேரில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் அவர்கள் தனித்துச் செயற்பட முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஐ.ம.சு.க்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததுடன் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வடமத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது ஐ.ம.சு.கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனிடையே ஐ.தே.க.யின் 11 உறுப்பினர்களுடன் இணைந்து எஞ்சியுள்ள ஐ.ம.சு.முன்னணி உறுப்பினர்கள் ஆட்சியைத் தொடரச் செய்யும் நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காதவகையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.ம.சு.தலைமையும் கட்சியும் முன்னெடுத்துவருகின்றது.

இவ்வாறானதொரு நிலைமையே மத்திய மாகாண சபையிலும் நிலவுகின்றது. மத்திய மாகாணசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியே நடைபெறுகின்றது. மத்திய மாகாண சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதில் ஆளும் கட்சியான ஐ.ம.சு.மு.யின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தனர். எதிர்க்கட்சி தரப்பில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆளுங்கட்சி தரப்பில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பிரமித்த தென்னக்கோன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் தன்னுடன் இணைந்துள்ள 10 பேருடன் சேர்ந்து (11 பேராக) தனித்து இயங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த 11 பேரும் தனித்து இயங்குவார்களேயானால் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 ஆகக் குறைவடையக்கூடும். அத்துடன் 11 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்களேயானால் எதிர்க்கட்சியின் பலமும் 29 ஆக அதிகரிக்கக்கூடும்.

எவ்வாறெனினும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமது கட்சியிலுள்ள ஒரு பிரிவினரை தனித்துச் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை. அவ்வாறு செயற்பட முற்படுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பதவியிலிருந்து நீக்கவும் கூடும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக தமிழ் கட்சிகள் ஐ.ம.சு.கூ.சார்பிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றன. இ.தொ.கா.சார்பில் 6 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அவர்களில் எம்.ரமேஷ் மாகாண சபை அமைச்சராகவும் துரை மதியுகராஜா சபை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.

அதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் அதிருப்தி மாகாண சபை உறுப்பினர் பிரமித்த தென்னக்கோனின் ஆதரவாளர்கள் என கூறப்படும் உறுப்பினர்களும் கட்சியைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வதன் மூலம் ஆட்சியைக்கைப்பற்றக்கூடியதாக இருக்குமென்று ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், பிரமித்த தென்னகோன் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஆளுங்கட்சியின் கடைசி வரிசை ஆசனத்திலேயே தமக்கான ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதாக மத்திய மாகாண சபை முதல்வரான துரைமதியுகராஜா தெரிவித்தார்.

அத்துடன் தமது தலைமையில் ஒரு குழுவினர் தனித்து செயற்படப்போவது பற்றி பிரமித்த தென்னக்கோன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவோ அல்லது எழுத்துமூலமான ஆவணம் ஒன்றை இதுவரை கையளிக்கவோ இல்லையெனவும் துரைமதியுகராஜா குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க ஐ.ம.சு.மு அதிருப்தியாளர்களுடன் அந்த முன்னணியிலுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து மாகாண ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது சாத்தியமானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டுமானால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேருக்கு மேல் ஆதரவளிக்க வேண்டும். ஆனால் ஐ.ம.சு.முன்னணி சார்பில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் 36 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிருப்தியாளர் எனக்கூறப்படும்.

பிரமித்த தென்னக்கோன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவருமே தற்போதும் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மத்திய மாகாண முதலமைச்சரை மாற்றவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இதனிடையே மத்திய மாகாண விவசாய இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் எம்.ரமேஷிடம், மாகாண தமிழ்க் கல்வி அமைச்சையும் ஒப்படைத்திருக்கின்றனர். கடந்த 8 ஆம் திகதி மாகாண ஆளுநர் முன்னிலையில் எம்.ரமேஷ் தமிழ் கல்வி அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். 4 வருடங்களின் பின்னர் தமிழ் கல்வி அமைச்சு தற்போது வழங்கப்பட்டுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மத்திய மாகாண சபைக்கான தேர்தல் 2013 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அந்த வகையில் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 1 ¼ வருடகாலமே இருக்கிறது. அடுத்தவருடம் 2018 இல் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவேண்டும்.

இந்த இறுதிக் காலப்பகுதியில் தமிழ் கல்வியமைச்சை இ.தொ.கா.வுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? ஆட்சிமாற்ற அச்சுறுத்தல், அடுத்த மாகாண சபைத் தேர்தல், ஐ.ம.சு.கூட்டமைப்பின் எதிர்கால வெற்றி என்பவற்றை முன்னிலைப்படுத்திதான் 4 வருடங்களின் பின்னர் மீண்டும் தமிழ்க் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறதா?

மத்திய மாகாணத்திற்கான தமிழ் கல்வியமைச்சை ஏற்கனவே வழங்கியிருந்தால் மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்குமல்லவா? இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates