Headlines News :
முகப்பு » » இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் - 2) - சிலாபம் திண்ணனுரான்

இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் - 2) - சிலாபம் திண்ணனுரான்


அன்று சந்திரிக்கா அம்மையாரு க்கு ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. பொ.ஜ.ஐ.முன்னணி 105 உறுப்பினர்களுடனும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 உடன் இணைந்தும் ஆட்சி அமைக்க இயலாத கட்டத்திலேயே மலையக மக்கள் முன்னணித் தலைவர் அமரர். பி.சந்திரசேகரன் கிங்மேக்கராக உருவெடுத்து மலையக மக்களின் வாக்கு பெறுமதியை இந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடையாளப்படுத்தினார். இது மலையக வரலாற்றில் அரசியல் சாதனை யாகும். மலையக அரசியல் தலைமைகளை மட்டுமல்லாது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்த கிங்மேக்கரா னார்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வீரன் சென்னன் (41683 வி.வா) வெற்றி பெற்றார். இவருடன் ஐ.தே.கட்சி பட்டியலில் இடம்பெற்ற மற்றுமொரு வேட்பாளரான எம்.கே.சுப்பையா (39,650 வி.வா), பெற்று 643 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் தோல்வி அடைந்தார். இந்நிலையில்

அமரர் எஸ்.தொண்டமான், ஏ.எம்.டி.ராஜன் ஆகியோர் ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள். அமரர் பி.சந்திர சேகரன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக நியமனம் பெற்றார்.

இந்நிலையில், 1994ஆம் ஆண்டு கொழும்பு தொட்டலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஓசி அபேகுணசேகர, வீரசிங்க மல்லிமாராச்சி ஆகிய இருபாராளுமன்ற உறுப்பினர்களும் மரணம் அடைய ஆர்.யோகராஜன், பி.பி.தேவராஜ் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்கள்.

2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் (61,779 வி.வா), முத்து சிவலிங்கம் (வி.வா 55,673), எஸ்.ஜெகதீஸ்வரன் (வி.வா 50,735) ஆகியோர் பொ.ஐ.ஐ.முன்னணியின் வேட்பாளர் பட்டிய லில் இடம்பெற்று வெற்றிபெற ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட பி.சந்திரசேகரன் (54,681 வி.வா), எஸ்.சதாசிவம் (48,126 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். பொ.ஜ.ஐ. முன்னணியின் தேசியப் பட்டியலில் கே. மாரிமுத்து (இ.தொ.கா)வும் ஐ.தே.கட்சி தேசிய பட்டியல் மூலமாக கணபதி கனகராஜ், பி.பி தேவராஜ் ஆகியோர் தெரிவானார்கள். இத்தேர்தலில் பதுளை, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்திய வம்சாவளி யினர் போட்டியிட்டும் வெற்றிபெற இயலாது போனது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 12ஆவது பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (1,21,545 வி.வா), பி.சந்திரசேகரன் (1,21,421 வி.வா), முத்துசிவலிங்கம் (1,07,338 வி.வா.) ஐ.தே.கட்சியில் போ ட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றனர்.

இத்தேர்தலின் முடிவுகளில் பெருந்தோட்ட மக்களின் அரசியல் தெளிவு தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. இத்தேர்தலில் பொ. ஜ.ஐ. முன்னணியில் இம்மாவட்டத்தில் போட்டியிட்ட வி.புத்திரசிகாமணி (10,261 வி.வா), எஸ்.ராஜரத்தினம் (10,028 வி.வா), கணபதி கனகராஜ் (9,878 வி.வா), கணபதிப்பிள்ளை (3,535) ஆகியோர் தோல்வி அடைந்தனர். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட முருகன் சச்சிதானந்தன் (39,749 வி.வா) வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இ.தொ.கா வேட்பாளர்கள் ஐ.தே.கட்சி பட்டியலில் கண்டி, கொழும்பு, மாத்தளை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை.

ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் பி.இராதாகிருஷ்ணன், ஆர்.யோகராஜ், பொ.ஜ.ஐ. முன்னணியில் எஸ்.சதாசிவம், மக்கள் விடுதலை முன்னணியில் ராமலிங்கம் சந்திரசேகரனும் தெரிவானார்கள்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற 13ஆவது பாராளுமன்ற த்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத் தில் ஐ.தே.கட்சி பட்டியலில் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா. வின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமான் (99,783 வி.வா), முத்து சிவலிங்கம் (85,708 வி.வா), எஸ்.ஜெகதீஸ்வரன் (81,386 வி.வா), வெற்றி பெற மலையக மக்கள் முன்னணி மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு பி.சந்திரசேகரன் (42, 582 வி.வா) வெற்றிபெற்றார்கள். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா. எம்.சச்சிதானந்தன் (44,937 வி.வா), வடிவேலு சுரேஷ் (40,820 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் தேசியப்பட்டியலில் ஐ.ம.சு.முன்னணியின் பட்டியலில் ம.வி.முன்னணியின் சார்பில் ராமலிங்கம் சந்திரசேகரனும் ஐ.தே.கட்சியின் பட்டியலில் (இ.தொ.கா), எம்.எஸ்.செல்லச்சாமி, பி.பி. இராதாகிருஷ்ணன் (ம.ம.மு), வி.புத்திரசிகாமணி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானார்கள்.

13வது பாராளுமன்றத்தின் இறுதி வருடங்களில் மலையக அரசியல் என்றுமே இல்லாத பெரும் மாற்றம் நிலவியது. மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் ம.வி.மு.உறுப்பினர் இராமலிங்கம் சந்திர சேகரனைத் தவிர ஏனைய 9 உறுப்பினர்களும் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்திருந்தனர். இரண்டு அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் இருந்தனர். இது மலையக மக்களின் சாதனையா? அல்லது அரசியல்வாதிகள் சுயநலம் கொண்டு இப்பத விகளை பெற்றனரா என்பது கேள்வியாகவே இன்றும் வாழ்கின்றது.

2 அமைச்சர்கள்

1. ஆறுமுகன் தொண்டமான்

(இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சர்)

2. பெ.சந்திரசேகரன்

(சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர்)

7 பிரதி அமைச்சர்கள்

1. முத்து சிவலிங்கம்

(தோட்ட உட்கட்டமை ப்பு பிரதி அமைச்சர்)

2. எம்.எஸ்.செல்லச்சாமி

(தபால், தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சர்)

3. எஸ்.ஜெகதீஸ்வரன்

(தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்)

4. எம்.சச்சிதானந்தன்

(பிரதிக் கல்வி அமைச்சர்)

5. வடிவேல் சுரேஷ்

(பிரதி சுகாதார அமை ச்சர்)

6. வி.புத்திரசிகாமணி

(நீதி சட்ட மறுசீரமைப்புபதில் அமைச்சர்)

7. பெ.இராதாகிருஷ்ணன்

(வாழ்க்கை தொழில் பயிற்சி பிரதி அமைச்சர்)

மலையகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது இலங்கையின் அரசியல் வரலாற் றில் மலையக மக்கள் பிரதிநிதிகளில் இவ்வாறான சாதனை இனி எதிர்வரும் காலங்களில் இடம்பெறபோவதில்லை. இது அரசியல் அவ

தானிகளின் தகவல்களாகும். காலம்தான் பதில் தர வேண்டும்.

14ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் இ.தொ.கா. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து நுவரெலியா, கண்டிமாத்தளை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (60,997 வி.வா), எஸ். இராதாகிருஷ்ணன் (54,083 வி.வா), பி.இராஜதுரை (49,228 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பழனி திகாம்பரம் (39,490 வி.வா), பிரஜை கள் முன்னணி செயலாளர் ஸ்ரீரங்கா ஜய ரத்னம் (33,948 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஏ.எஸ்.அருள்சாமி (5,855 வி.வா)வி.புத்திரசிகாமணி (2,896 வி.வா), எம்.உதயகுமார் (30,928 வி.வா), எஸ்.சதாசிவம் (24,152 வி.வா), எல்.பாரதிதாசன் (7,705 வி.வா) ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியைத் தழுவ ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட இ.தொ.கா. வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். ஐ.ம.சு. முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக முத்து சிவலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தெரிவான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ 2014ஆம் ஆண்டு ஊவாமாகாண சபைக்கு தெரிவானதையடுத்து கே.வேலாயுதம் பதுளை மாவட்டத்திற்கான ஐ.தே.க. உறுப்பினராக தெரிவானார். இன்று பி.திகாம்பரம் அமைச்சராகவும் வே. வேலாயுதம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றது.

இவ்வாறு மலையக அரசியல் பெரும் இன்னல்களை தொட்டு வாழ்கின்றது.

விருப்பு வாக்கு கொண்ட தேர்தல் மூலமே பெரும்பாலும் மலையக பிரதிநிதிகளை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 1989 இல் நுவரெ லியா மாவட்டத்தில் விருப்பு வாக்கு மூலமாக ஒரு பிரதிநிதியையாவது பெற இயலாமை போனது இச்சமூகத்தின் துரதிஷ்டமேயாகும். பின்னர் வந்த தேர்தல்களில் பதுளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் பிரதிநிதிகளை பெற்றிருந்தாலும் அரசியல் போட்டி கள் காரணமாக பிரதிநிதித்துவம் இழந்துள் ளதைக் காணலாம். மலையகத்தின் அனைத்துக்கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத் தால் இன்றைய விகிதாசார மாவட்ட தேர்தல் பிரதிநிதித்துவம் மூலமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 14 முதல் 16 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பெறலாம். எதிர்காலத்தில் தேர்தல் மாற்றம் பெறுகையில், மலையக பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

மலையக மக்களின் இருப்பை குறைப்பதற்காக மறைமுகமாக தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு அவைகள் பெரும்பான்மை இன மக்களைக் கொண்ட பகுதிகளுடன் இணைக்கப்படலாம். இதனால் மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதிகளை பெற இயலாத சூழலை உருவாக்கலாம். 90 ஆயிரம் மக்களைக் கொண்ட பகுதி இன்று தேர்தல் தொகுதியாக நிர்ணயிக்கப்படுகின்றது. அவ்வாறு நுவரெலியா தொகுதி பிரிக்கப்பட்டால் நிலைமை மாறிவிடும்.

இரு பிரதான கட்சிகளும் பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பூரணமாக வழங்க இதுவரை முன்வரவில்லை. இதுவரை காலமும் இருகட்சியினரின் ஆட்சியில் சலுகைகளே வழங்கப்படுகின்றன. உரிமைகள் வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட மக்களின் தனித்துவத்தை தேர்தல் மாற்றத்தின் மூலமாகவும் சிதறிடிக்கப்படலாம்.

30.10.1964 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாதிருந்திருந்தால் இன்று கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலிருந்து விகிதாசார தேர்தல் முறையில் குறைந்தது 35 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் இருந்தது. அது அரசியல் வழிப்பறி கொள்ளையால் தடுக்கப்பட்டு விட்டதை நாம் மறக்க இயலாது. இவ்வாறு இன்று பலருக்கு அரசியல் முகவரியை கொடுத்தவர்கள் பெருந்தோட்ட மக்களும் அவர்களின் சத்தியப் போராட்டங்களுமேயாகும்.

மலையக அரசியலுக்கு வரலாறு உண்டு.

தேர்தல் முறை மாற்றத்தால் அது தொலைந்து போய்விடக்கூடாது. இவ் அரசியல் அடையா ளத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். இதுவரை கடந்து வந்த பாதையை விட இனி கடக்க போகும் பாதை மிக எளிதா னதாக தெரியவில்லை. (முற்றும்)

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates