Headlines News :
முகப்பு » , , » மலையகமும் மறுவாழ்வும் - மல்லியப்பு சந்தி திலகர்

மலையகமும் மறுவாழ்வும் - மல்லியப்பு சந்தி திலகர்



ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இந்தியா தமிழகம் நோக்கி தாயகம் திரும்பியவராக சென்ற எமது மலையக உறவுகள் இன்று உணர்வோடு தாங்கள் பிறந்து வளர்ந்த மண் நோக்கி திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமுறைகள் கடந்து மீளபுதுப்பிக்கப்படும் இந்த உறவு உணர்வு ரீதியாக மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுகிறது .

கேகாலை மாவட்டத்தின் முக்கியமானதொரு  தமிழ் பாடசாலையான கந்தலோயா தமிழ் வித்தியாலயத்துக்கு இல்ல விளையாட்டுப்போட்டிகளின் போது விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே மாணவர்கள் தமது இல்லங்களை மலையக தொழிற்சங்க, அரசியல், இலக்கிய, ஊடக, நாடக முன்னோடிகளான கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய பெயர்களை தமது இல்லங்களுக்கு இட்டிருந்தனர்கள்.  

மாணவர்கள் ஓர் இல்லத்தை மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட "ஆதிலட்சுமி கப்பல்" போன்றும், மற்றைய இல்லத்தை மலையக மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்ப்பட்ட "ஒப்பாரிக் கோச்சி" போன்றும் அமைத்திருந்தனர். அந்த இரண்டையும் அன்று உணர்வு பூர்வமாக தரிசித்தேன். அந்த கற்பனைக் கப்பலின் மேல் தளத்திற்கும், அந்த ரயில் பெட்டியிலும் ஏறி இறங்கினேன். என் முன்னைவர்கள் அனுபவித்த அவல உணர்வை அப்படியே அனுபவிக்க கிடைத்த நாள் அது. 

விளையாட்டுப்போட்டிக்கு இல்லத்தை அலங்கரித்ததோடு நின்று விடாமல் " ஆதிலட்சுமி " மூழ்கும் காட்சியையும் "ஒப்பாரிக் கோச்சியில்" மக்கள் அழுது புலம்பும் காட்சியையும் குறுந்திரைப்படமாக்கி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் கந்தலோயா பாடசாலை சமூகத்தினர். 

அன்று ஒப்பாரிக்கோச்சியில் அழுது புலம்பி சென்ற உறவுகள் இன்று தமிழகத்தில் உயர் தொழில் புரிபவர்களாக, ஓய்வு பெற்றவர்களாக தமது மண்ணையும் மக்களையும் பார்க்க வருகை தந்திருந்தனர்.  இரத்தினபுரியில் இருந்து சென்ற தமிழகன் எனும் ராமச்சந்திரன் ஒரு சட்டத்தரணி, ஆகரப்பத்தனையில் இருந்து சென்ற செவந்தி நீதிமன்ற நிர்வாக அதிகாரி, வரக்காப்பொலயில் இருந்து தம்பிராஜா கிராம நிர்வாக அதிகாரி. 

தம்பிராஜா தனது மாவட்ட பாடசாலைக்கு மலையக பாரம்பரிய இசைக்கருவிகளை அங்கிருந்து அன்பளிப்பாகக் கொண்டுவந்திருந்தார். அவர்கள், என்னையும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர் அதன் நிமித்தம்  மூன்றாவது தடவையாகவும் கந்தலோயா போனேன்.

தமிழக உறவுகளுடன் பாடசாலை மண்டபத்தை அடைந்தபோது அங்கே ஆதிலட்சுமி மூழ்கும் காட்சியும், ஒப்பாரிக் கோச்சியில் உறவுகளைப் பிரியும் ஓலமும் கண்ணீரைக் கசியச் செய்தது. கடைசிக் காட்சியில் ஒரு சிறுவனைக் கட்டியணைத்து அழுது ஓர் ஆண்மகன் விடைபெறும் காட்சி. அதில் எங்கே இருக்கிறது கற்பனை.? 80களில் எனது குருநாதரும் சிற்றப்பாவுமான மெய்யன் மேகராஜா சிறுவனான என்னைக் கட்டி அணைத்து விடைபெற்ற உண்மைக் காட்சியல்லவா அது. இந்த சித்தப்பாவைத் தேடி நான் பெரியவனாகி தமிழ் நாட்டில் அலைந்த கதையை "மல்லியப்பு சந்தியில் " பதிவு செய்துள்ளேன். ( ஐயா மேகராஜா வின் அன்றைய உணர்வுப்பதிவுதான் மல்லியப்பு சந்திக்கு முன்னுரை). 

இப்போது தமது உறவுகளைத் தேடி இங்கே வந்துள்ள உறவுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். "குறும்படத்தில் ஒப்பாரிக் கோச்சிக்கு வெளியே பிளட்போரத்தில் நின்று கதறி அழுகிறார்களே  அது நாம். ஐய்யோ என கதறி அழுது கொண்டு கைகாட்டி போனார்களே அவர்கள் தான் இவர்கள் " என அறிமுகம் செய்தேன். அந்த மண்டபத்தின் ஒவ்வொரு கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்கியது. எனக்கு குரல் கரகரத்தது. 

மலர்மன்னன் தம்பிராஜா திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரிடம் இருந்து விலைக்கு வாங்கிவந்த "தப்பு" முதலான பாரம்பரிய இசைக்கருவிகளை அன்பளிப்பு செய்தார். தனது கட்டுரைகளுடன் எமது கட்டுரைகளும் அடங்கியதாக வழக்கறிஞர் தமிழகன் தொகுத்தளித்திருக்கும் நூலான "மலையகமும் மறுவாழ்வும்" தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்டாலும் இலங்கையிலேயே முதல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என தமிழகன் எண்ணியிருந்தார்.

அதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 13-05-2018 விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும்,  எதிர்பாராதவிதமாக அன்று கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவரிடம் இருந்து பாடசாலை அதிபர் கருணாகரன் பாடசாலைக்கான பிரதியைப் பெற்றுக் கொண்டார். ஒப்பாரிக் கோச்சியில் சென்றவர்களை காட்சிப்படிமாக்கிய கந்தலோயா பாடசாலையில் இந்த நிகழ்வு அரங்கேற்றம் கண்டது உணர்வுபூர்மானது.

இந்த நூலின் தலைப்பு பற்றி வீரகேசரி "சங்கமம்" இலக்கிய இணைப்பிதழுக்காக நடைபெற்று இருந்த உரையாடலில் தொகுப்பாசிரியர் தமிழகன் அளித்திருந்த பதில் இங்கே பதிவு செய்யப்படவேண்டிது. 

(உரையாடல் ஆரம்பம் )

ஜீவா சதாசிவம் : மறுவாழ்வு எனும் போது ஒருவாழ்வு இழக்கப்பட்டிப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றதே..

வழக்கறிஞர் தமிழகன் : நிச்சயமாக. மலையக மக்கள் எல்லா காலப்பகுதியிலும் அவர்களது வாழ்வை இழந்து மறுவாழ்வைத்தேடிக் கொண்டிருப்பவர்களாகவே நான் உணர்கிறேன். 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக கிராமப்புற வாழ்வை  இழந்துதான் அவர்கள் இலங்கையில்  வெள்ளைக்காரர்களால்  குடியமர்த்தப்பட்டார்கள்.   அப்போது  அவர்கள்  தமிழகக் கிராமங்களில்  வாழ்ந்த வாழ்ககையை  இழந்து  இங்கு மறுவாழ்வைத் தேடினார்கள். 

இங்கு நூறு வருடங்கள் ஓர் அடிமை வாழ்வை எதிர்கொண்ட அந்த மக்கள் வாக்குரிமை பெற்று இலங்கை நாட்டின் பிரஜைகளாக வந்ததன் பின்னர் சுதந்திர இலங்கையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக மறுவாழ்வு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 

இந்த கட்டத்தில் 1964 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய அரசுகள் செய்துகொண்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்களை இருகூறுகளாக்கியது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழகம் சென்ற மக்கள் அங்கு மறுவாழ்வு தேட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

இவ்வாறு வாழ்வதும் பின்னர் மறுவாழ்வு தேடுவதுமாக சுமார் இருநூறு வருடகாலமாக வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வியலை விளக்குவதாகவே இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இரா.சடகோபன், இலங்கையில் சட்டத்தரணியாக, பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக, வரலாற்று விடயங்களைக் கொண்ட புனைவுக்கட் டுரைகளை எழுதுபவராக அறியப்படுகின்றார். எனவே அவரது பார்வையில் மலையக மக்களின் வருகை, வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பை வெளிப்படுத்தும் கட்டுரையை சேர்த்துள்ளேன். உண்மையில் இந்த நூலுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது. எம்.வாமதேவன் மலையகத் தமிழ் சமூகத்தில் பொருளாதார திட்டமிடல் துறையில் கல்விகற்று இலங்கை அரச நிர்வாக துறையில் உயர் பதவிகளை வகித்து வருபவர். 

கடந்த முறை எனது பயணத்தின்போது அவரது ‘மலையகம் - சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் நூல் கிடைக்கப்பெற்றது. அந்த நூலில் இருந்து எனது தொகுப்புக்கு பொருத்தமான கட்டுரை ஒன்றை தெரிவு செய்து இணைத்துள்ளேன். அதேபோல, அ.லோரன்ஸ், இலங்கை மலையக அரசியல் செயற்பாட்டாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை.  அவரது மலையகம்: 

சமகால அரசியல், அரசியல் தீர்வு என்ற நூலில் இருந்து மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பான பக்கத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை தெரிவு செய்து இணைத்துள்ளேன். இவற்றுக்கு மேலதிகமாக அரசியல், இலக்கியம், பத்திரிகை, அரசியல் ஆய்வு எனும் பன்முகத்தளங்களில் இயங்கும் மல்லியப்புசந்தி திலகரின் சிறப்புக்கட்டுரை இந்த நூலில்தான் முதல் அறிமுகம் காணுகின்றது. 

அவரது எந்த உரை மலையகம் தொடர்பான, இலங்கையில் தமிழர்கள் தொடர்பான எனது பார்வையை மாற்றியமைத்ததோ அந்த உரையினைக்கட்டுரையாக்கித் தருமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு  இணங்க எழுதித்தந்தார். ஒரு விஞ்ஞான பூர்வ ஆய்வுக்கட்டுரையாக அதனை நான் பார்க்கிறேன். 
( உரையாடல் முடிவு) 

தமிழகன் கூறும் மலையகத்தின் மறுவாழ்வு நுணுக்கமான பார்வை விரிவாக ஆராயப்பட வேண்டியது. அவர் கூறும்  எனது ஆய்வு கட்டுரை 2011 அளவில்  தமிழ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக் குழுவினர் என்னை "மல்லியப்புசந்தி" ஊடாக அறிந்திருந்தனர்.
அத்தகைய அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தவர் மலையகத் தமிழராக இந்திய (சிவகாசி) அகதிமுகாமில் வாழ்ந்து மறைந்த அந்தோனி ஐயா. அவர் மலையக மக்களின் இலங்கைக் குடியுரிமை பெறுதலின் இறுதிப்போராளி. அது பற்றியும் அவர் பற்றியும் ஏற்கனவே சில இடங்களில் பதிவு செய்திருந்தாலும் "மலைகள் பேசும்" இந்தத் தொடரில் பொருத்தமான இடம் ஒன்றில் பதிவு செய்கிறேன். ஏனெனில் அந்தோனி ஓர் அறியப்படாத ஆளுமை. அறியப்படவேண்டிய ஆளுமை. 

இவர் முயற்சியால்தான் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையின் எஞ்சியிருந்த பிரச்சினை 2009 ல் தீர்க்கப்பட்டது. இலங்கைத் தமிழரின் 40 ஆண்டுகால ஆயுதப் போரும், மலையகத் தமிழரின் இலங்கைக்  குடியுரிமைக்கான 60 ஆண்டுகால அகிம்சைப் போரும் முடிவுக்கு வந்த ஆண்டு 2009. 

இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்வை இழப்பதும் தேடுவதுமான மலையகமும் மறுவாழ்வும் பற்றி அறிந்து கொள்ள அந்த நூலில் அடங்கிய எனது "இலங்கை(யில்) தமிழர்கள்" எனும் கட்டுரை கூறும் விடயங்கள் இங்கே பேசப்பட வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன். மலைகளைப் பேசவிடுங்கள்.

நன்றி அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates