Headlines News :
முகப்பு » , , , » "நவீன சேரி": கொழும்பின் தொடர்மாடி வீடுகள் - என்.சரவணன்

"நவீன சேரி": கொழும்பின் தொடர்மாடி வீடுகள் - என்.சரவணன்

“நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை”
“காலா” திரைப்படத்தின் தாரகச் சுலோகம் அது. காலா திரைப்படத்தைப் பார்வையிட்ட கொழும்பு வாழ் அடித்தட்டு மக்கள் (குறிப்பாக “சேரி” வாழ் மக்கள் மற்றும் அரசாங்க தொடர்மாடிகளில் வாழ்பவர்கள்) அந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் பல முகங்களில் தங்கள் முகங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள். அத்திரைப்படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் பல தமது பிரச்சினைகளும் தான் என்பதை அடையாளம் கண்டிருப்பார்கள்.

கொழும்பில் உள்ள சேரிகளில் பல தாராவியை விட மோசமான நிலையில் பல இடங்கள் உள்ளன. இவர்கள் மொத்த கொழும்பு வாழ் மக்களில் 51% வீதத்தினர் என்கிறார் துஷார சமரதுங்க (Thushara Samaratunga - High Density High Rise Vertical Living for Low Income People in Colombo, Sri Lanka: Learning from Pruitt-Igoe) தனது ஆய்வில். பெரும்பாலான இம்மக்கள் தாம் வாழும் இடங்களை அப்படிப்பட்ட “சேரி” என்று இனங்கான்பதில்லை. தாம் வாழும் இடங்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதும் இல்லை. பெரும்பாலான தமது வாழ்விடங்களை “தோட்டம்” என்று அழைத்துக் கொள்வார்கள். வசதி குறைந்த இடத்தில்,  மக்கள் திரள் நெரிசலாக வாழும் இடங்களைத் தான் சேரி என்று அழைக்கிறார்கள். அதன் படி கொழும்பில் அப்படி பல வாழ்விடங்களை அடையாளம் காணலாம்.

அடித்தட்டு தொழிலாளர்களும், மத்தியதர வர்க்கத்துக்கு கீழே உள்ளவர்களும் சாதாரண மத்திய வர்க்கத்தினரும், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலையினரும் வாழும் இடங்கள் இவை.

“நகராக்கம்” நிகழ, நிகழ மக்கள் செறிவு அதிகரிக்கப்படுவதும், அவர்களுக்கான தேவைகளும், வளங்களும் கூடவே அதிகரிக்கப்படுவதற்கான போக்கு நிகழவே செய்யும். இதை உலகெங்கும் காணலாம்.

பொதுவாக பெருமளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நகரங்களில் சனத்தொகை பெருக்க விகிதாசாரமும் அதிகம். அதாவது ஏனைய பிரதேசங்களை விட இயல்பாக அங்கே சனத்தொகை பெருக்கவீதம் அதிகமாகவே இருக்கும்.

கொழும்பைப் பொறுத்தளவில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பை நோக்கி படையெடுத்து  பெருகுவது என்பது எங்கும் போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது. அடுத்ததாக யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் பெருவாரியாக கொழும்பை நோக்கியே கடந்த தசாப்தங்களில் பெருகினார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமது பிரதேசங்களுக்கு திரும்பியவர்கள் குறைவே. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்புவாசியாகவே ஆனார்கள்.ஆக கொழும்பின் சனநெரிசல் என்பதை இந்தப் பின்னணியுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக குடியேறி நிரந்தவாசியாக ஆனவர்களில் பெரும்பாலானோர் இந்த சேரி வாழ்க்கைக்குள் அகப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோனோரின் பொருளாதார காரணிகள் அந்த இடத்துக்கு அவர்களைத் தள்ளவில்லை. ஆனால் சேரி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்களும் கணிசமானவர்களும் உளர்.

கொழும்பு என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரம். அந்த வகையில்  பல்வேறு தொழில்துறையை நிரப்பும் பெருமளவு தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கே தான் வாழ்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு அதிகமாக ஆளாகும் அவர்களின் வாழ்விடங்கள் இந்த சேரிகளும், அதை அண்டிய பகுதிகளுமாகத் தான் இருக்கமுடியும். அப்படித் தான் இருக்கிறது.

1978 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையின் வரவோடு இந்த வர்த்தகத் தலைநகருக்குள் பல்தேசிய கம்பனிகளினதும், கார்ப்பரேட் நிருவனங்களினதும் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அந்நிய முதலீடுகளாலும் தொழிற்துறை பெருக்கத்தாலும் நிலம் அதிகளவு தேவைப்பட்டன. அதன் விளைவு கொழும்பின் மையத்திலிருக்கும் முக்கிய சேரிகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டு தொடர்மாடிக் கட்டடங்களுக்குள் புகுத்தப்பட்டார்கள்.

இலங்கையின் 1953ஆம் ஆண்டு முதன் முதலில் தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே படிப்படியாக வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 1978க்குப் பின்னர் தான் இதன் வேகம் அதிகரிக்கப்பட்டது. இதெற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையும் நிறுவப்பட்டது. ஐ.நா சபையும் இந்தத் திட்டத்துக்கு உதவியளித்தது. 1982ஆம் ஆண்டை “வீடற்றவர்களுக்கு வீடு” என்று ஐ.நா பிரகடனப்படுத்தியது. ஐ.நா சபையின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் அப்போது கட்டப்பட்டன. வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரேமதாசவின் திட்டத்தில் 1984-1988 காலப்பகுதிக்குள் மாத்திரம் “பத்து லட்சம் வீடுகள்” திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.  பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்த 1989-1993 காலப்பகுதிக்குள் 1.5 மில்லியன் வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டங்களில் மக்கள் நலன் நிச்சயம் இருந்தாலும் காலப்போக்கில் பெறுமதியான நிலங்களை அரசு கையகப்படுத்தும் திட்டத்தின் அங்கமாக பரிமாற்றப்பட்டது. இதன் விளைவாக கொழும்பு சேரிப்புறங்களில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பெறுமதி உயர்ந்திருந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தைக் கொண்டு அகற்றி வீதியில் விட்டார்கள். அவர்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட வீடுகள் அவர்களின் வாழ்ந்த நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பெறுமதியானவை அல்ல.

நிலத்தோடு வாழ்ந்த மக்கள் வசதிகள் குறைவாக இருந்தாலும் அந்த சிறு குடில்களில் மாடிகளைக் கட்டி பல குடும்பங்களும் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் நிலங்களைப் பறித்த அரசு அவர்களை வீடமைப்புத் திட்டம் என்கிற பேரில் சிறு கூடுகளுக்குள் அடைத்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனியார் கொன்ராக்டர்களும், இடைத்தரகர்க்களுமாக நிதியின் பெரும்பகுதியை ஊழல்களால் பிரித்தெடுத்ததன் பின்னர் எஞ்சிய பணத்தைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இன்றைய தொடர்மாடிகள் தரத்தால் மிகவும் மோசமானவை. வீடுகள் வழங்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே அவற்றின் பராமரிப்புகள் கூட மோசமாக ஆகிவிடுகின்றன. வீடமைப்பு அதிகார சபையும், அமைச்சும், திணைக்களங்களும், உள்ளூராட்சி நிறுவனங்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பழியைப் போட்டு தப்பி விடுகின்றன.


இம்மக்களில் கணிசமானோர் தமது சொந்தத் தேவைகளை ஈடு செய்வதற்காகவும் தொழிலுக்காகவும் முச்சக்கர வண்டிகளை வைத்திருப்பவர்கள். அவற்றை நிறுத்துவதற்கும் எந்த வசதிகளும் இல்லை. சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கு போதிய வசதிகள் கிடையாது. பாடசாலை முடிந்து திரும்பும் சிறுவர்கள் வீடுகளுக்குள் அடைவதைத் தவிர அவர்களுக்கு தெரிவில்லை. வளர்ந்தவர்கள், வயோதிபர்கள் ஒன்று கூடுவதற்கான வசதிகளும் கூட உரிய முறையில் இல்லை. ஏன் வீட்டில் துவைக்கின்ற உடைகளைக் காயவைக்கக் கூட வசதிகள் கிடையாது. புதிய சீமெந்து தொடர்மாடி வீடு கச்சிதமான தோற்றத்துடன் காட்சியளித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சிறு வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் கிடைத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வசதி குறைந்தாலும் - இட வசதி அதிகமுள்ள இடங்களுக்கு மீண்டும் வாடகைக்குச் சென்றுவிட்டதையும் அவதானிக்க முடியும்.

இம்மக்கள் இருந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி மீண்டும் வேற்று முதலீட்டாளர்களுக்கு விற்றுவிடவோ, வாடகைக்கு விடவோ செய்கின்றனர். கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் இலவசமாக வழங்கப்படவில்லை மீண்டும் அவர்களிடம் பணம் அறவிடப்படுகிறது. நிலம் மக்களின் கைகளில் இருந்தவரைக்கும் வானமே எல்லை என்று அவர்களால் மேலே பெருப்பித்து வாழ முடிந்தது. ஆனால் இப்போது நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இனி அது கிடைக்கப்போவதுமில்லை.

கொழும்பின் தொடர்மாடிக் காட்டிடங்களுக்குப் போய்ப் பார்த்தால் தெரியும் அவை நவீன சேரிகளாக எப்படி உருவெடுத்திருக்கின்றன என்பது.

அவர்களின் வாழ்க்கையை தரமுயர்த்துவதாக சொல்லிக்கொண்டு தொடர்மாடி வீடுகளை கட்டிகொடுக்கும் அரசு குறைந்தபட்சம் அங்குள்ள  அவர்களின் சுற்றுச் சூழலையும், சுற்றாடல், உட்கட்டமைப்பு விடயத்தில் கூட உரிய காட்டியதாகத் தெரியவில்லை. கட்டிட மலைகளுக்குள் அவர்களைத் திணித்துவிட்டால் மாத்திரம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போவதில்லை. அவர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளும் சரி செய்யப்படவேண்டும்.

கொழும்பில் இன்னும் பல நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்த தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படவேண்டும். ஏற்கெனவே தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பலமான அமைப்பு இதுவரை இல்லை.

நிலம் நமதுரிமை.

நன்றி - அரங்கம்


Share this post :

+ comments + 1 comments

Sad! They shd move back to villages & start own business or farming!

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates