Headlines News :
முகப்பு » , , , » காவிக்குள்ளிருந்து கம்பிக்குள்! - என்.சரவணன்

காவிக்குள்ளிருந்து கம்பிக்குள்! - என்.சரவணன்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றத்தால் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி அதை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் 14ஆம் திகதியன்று உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி அவர் குற்றவாளி என்பதை ஹோமாகம நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணசிங்க  உறுதிசெய்திரருந்தார்.

சந்தியா எனும் பெண் போராளி

மஹிந்த ராஜபக்சவின் போது 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து 25.01.2016 அன்று மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டிருந்த  வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட ஒரு நேர்மையான சிரேஷ்ட ஊடகவியலாளர். இறுதி யுத்தத்தின் போது யுத்த களத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி அரசாங்கம் மக்களைக் கொன்றொழித்தது  என்பதை கண்டறிந்தார். அதற்கான ஆதாரங்கள் பலவற்றை இரகசியமாக திரட்டியிருந்தார். அது பற்றிய விபரங்கள் சிறிதாக கசிந்தபோது அவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பின்னர் விடுவித்தனர். ஆனாலும் அவர் தனது பணியைத் தொடர்ந்தார். தான் கண்டுபிடித்திருந்த ஆதாரங்களைப் பற்றி சர்வதேச மனித உரிமை சக்திகளுக்கு தெரியப்படுத்தத் தொடங்கினார்.

25.01.2010 அன்று பிரகீத் கடத்தப்பட்டார். அதன் பின் இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இந்த 8 ஆண்டுகளாக நீதி கோரி போராடி வருகிறார் அவரது மனைவி சந்தியா. அவர் தினசரி காலை ஆகாரம் செய்து விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான் அவரது அன்றாடச் செலவையும் பிள்ளைகளை வளர்ப்பதற்காகவும் தனது போராட்டங்களுக்காகவும் செலவுகளை சமாளித்து வருகிறார். பிரகீத் இன்று உயிருடன் இல்லை என்பதை பிரகீத்தின் நண்பர்களும் மற்றோரும் நம்புகிற போதும் இன்றும் பிரகீத் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பி அவரை திருப்பித் தரும்படி போராடி வருகிறார் சந்தியா. தென்னிலங்கையில் நடக்கும் பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக பங்குபற்றிவருகிறார்.

பிரகீத் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களாக புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த 8 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்கள். அந்த வழக்கில் பிரகீத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று நிரூபிப்பதற்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனித்தார்கள். பிரகீத் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றார் என்றும், தற்கொலைப் போராளிகளின் தற்கொலை அங்கிகளை மறைத்து வைக்க உதவி புரிந்தார் என்பது போன்ற ஆபத்தான குற்றச்சாட்டுகளை புலனாய்வுப் பிரிவு சுமத்தியது. ஆனால் அவர்களால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.  பிரகீத்தை கடத்தியது, காணாமல் போகச் செய்து போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட சிறையில் சென்று சந்தித்து வந்தார்.

அவர்களின் மீது 25. ஜனவரி 2016 அன்று ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் “பிரகீத்துக்கு; புலிப் பயங்கரவாதத்துடன் தொடர்போ, அவர்களுக்கு ஆதரவளித்ததோ கிடையாது” என்று நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்கள்.

அந்த 8 பேருக்கும் பிணை வழங்காது தடுப்புக்காவலை நீடிப்பு செய்தார் நீதவான். அந்த விசாரணையன்று நீதிமன்றத்துக்கு ஞானசாரருடன் பொதுபலசேனா இயக்கத்தவர்களும் கூடினார்கள். தீர்ப்பால் ஆத்திரமுற்ற அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியாவை மிரட்டினர். பிரகீத் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும், தனக்கும் இங்கு கருத்து கூற அன்மதிக்க வேண்டும் என்றும் கத்தினார். அன்று சந்தியாவுக்கு ஞானசாரர் விடுத்த உயிரச்சுறுத்தல் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

ஞானசாரர் மீது "நீதிமன்றத்தை அவமதித்தல்" தொடர்பில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஞானசாரரால் இதனை மறுத்து வாதிட முடியாது. ஏனென்றால் அங்கு கூடியிருந்த பலர் முன்னிலையில் அப்படி நண்டந்து கொண்டார். சாட்சியளிக்க பார் இருந்தனர். வீடியோக்களும் கூட உள்ளன.

நீதிமன்றத்தில் உறங்கினாலோ, சத்தமிட்டு தும்மினாலோ கூட நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாக்க முடியும்.


இந்த வழக்கில் அரச தரப்பு சிரேஷ்ட வழக்கறிஞர் ஜனக பண்டார நீதிமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை.
"இந்த சட்டத்தில் குறைகள் இருக்கக்கூடும், பிழைகள் இருக்கக்கூடும், இது வெள்ளைக்காரர்களின் சட்டமாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் இது நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம். அதன்படி சட்டத்தை காக்கும் இந்த நீதிமன்றத்துக்குள் வந்து நீதிபதிக்கு சத்தமிடுவது, சாட்சியளிப்பவர்களுக்கு சத்தமிட்டு மிரட்டுவது என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. ஒழுங்கு என்கிற ஒன்று உண்டு.

எப்போது ஒழுக்கம் இல்லாது போகுதோ அன்று சாசனமும் அழிந்து விடும் என்று புத்தர் கூறினார்.

இந்த நீதிமன்றத்துக்கு வந்து சண்டியனைப் போல நடந்துகொண்டால் நீதிமன்றத்தின் நிலை என்ன? நீதிமன்றத்தில் தமக்கு நீதி கோரி வரும் ஒரு பெண்ணை நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுக்கிறார்கள். இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட குற்றத்தைப் புரிந்த ஒரு பிக்குவை விடுவித்தால் நாளை நீதிமன்றத்தின் முன்னால் லுங்கியை அணிந்துகொண்டு வரும் இன்னொருவர் நீதிமன்றத்தை திட்டினால் தண்டிப்பது எப்படி.

இது ஹோமாகம நீதவான் ரங்க திசானாயக்கவுக்கோ சந்தியா எக்னெலிகொடவுக்கோ இழைக்கப்பட்ட குற்றமல்ல முழு நீதித்துறைக்கும், நீதித்துறையிடம் நீதி வேண்டி வரும் அனைவருக்கும் இழைக்கப்பட்ட குற்றம்.

நீதிமன்றத்தில் சத்தமிடுபவரை கூட்டில் அடைப்பது எதற்காக? சேர்ட்டில் பட்டனை பூட்டவில்லை என்பதற்காக கூட்டில் அடைப்பது எதற்காக? நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவே அப்படி செய்யப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வருபவர்களின் ஒழுக்கத்தை சரி செய்வதற்காகவே அப்படி செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் பொது நீதிமன்றத்துக்கு நீதி கோரி வந்த பெண்ணொருவரை மிரட்டிய ஒருவரை விடுவித்தால் நீதிமன்றத்தின் நிலை என்னாவது? அதன் ஒழுக்கம் என்ன ஆவது?"
மகிந்த ஆட்சியின் இனவாதத் தளபதி ஞானசார்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட சிங்கள பௌத்த சக்திகளை பலப்படுத்துகின்ற உசுப்பேத்தி கொதிநிலையில் வைத்திருக்கும் மறைமுக ரெஜிமென்டாக போதுபல சேனாவும், ஞானசார தேரரும் இயங்கினார்கள். சிங்கள பௌத்த சித்தாந்த தளத்துக்கு காலத்துக்கு காலம் தலைமையேற்று நடத்த அவ்வப்போது தலைவர்கள் தோன்றி மறைவார்கள். மகிந்த காலத்தில் அந்தப்பணிக்கு தெரிந்தோ, தெரியாமலோ தலைமை கொடுத்தவர் ஞானசார தேரர்.

அரசாங்கம் பகிரங்கமாகவே ஞானசாரருக்கு ஆதரவையும், அனுசரணையும் வழங்கியது. ஞானசார தேரர் அரச ஆதரவுடன் மேலும் பலமடைந்தார். அவரின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அரச அதிகாரிகளுடனும், பொலிஸ் படையினருடனும் கூட அநாயசமாக வன்சொல் பயன்படுத்தி சண்டித்தனம் செய்தார். பொலீசார் அவரைக் கண்டு நெளிந்து வளைந்தார்கள். பொலிசாரின் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட சண்டித்தனங்களின் போது தலைசொரிந்து கொண்டு “அபே ஹாமுதுருனே” என்றார்கள். அது “அளுத்கம கலவரம்” வரை கொண்டுசென்றது. மகாசங்கத்தினர் கூட அவரைக் கண்டிக்கவும்,  விமர்சிக்கவும் தயங்கினார்கள். ஒதுங்கியே நின்றார்கள்.

இந்த இடைக்காலத்தில் அவரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. மகிந்த ஆட்சி காலத்தில் பல வழக்குகளில் இருந்து இலகுவாக அவரால் தப்பிக்க முடிந்தது. அப்போது நீதிமன்றத்தின் சுயாதீனம் எந்தளவு சீரழிந்திருந்தது என்பது நாட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அளுத்கம கலவரத்திற்கு பொறுப்பான எவரும் மகிந்த அரசாங்கத்தால் தண்டிக்கப்படவில்லை. நான்கு வருடங்கள் கழிந்தும்; இன்றுவரை எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.


தற்போதைய “நல்லாட்சி” அரசாங்கம் ஆட்சியமர்ந்த போது இனி இனவாத சக்திகளின் கொட்டம் அடக்கப்படும் என்கிற நம்பிக்கை ஜனநாயக சக்திகளிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்தது. ஆனால் ஞானசார போன்றோரின் பலம் எத்தகையது என்பது அவர்களின் இருப்பும், தொடர் நடவடிக்கைகளும் மெய்ப்பித்தன. ஆனால் நீதித்துறையின் சுயாதீனம் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. நீதிமன்றம் காலத்தை இழுத்தடித்தேனும் இப்போது இந்த வழக்குத் தீர்ப்பை வழங்கியிருப்பது ஆறுதலைத் தந்திருக்கிறது. ஞானசாரருக்கு எதிரான நூற்றுகணக்கான வழக்குகளில் முதல் தடவையாக தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்கு இது. தனது காலம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிவதிலேயே கழிகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் நொந்துகொண்டதும் நினைவுகொள்ளத்தக்கது.

சமீபத்தில் கண்டி கலவரத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அமித் வீரசிங்க கூட ஞானசாரவால் உருவாக்கப்பட்டவர் என்பதை அனைவரும் அறிவர். அமித் வீரசிங்கவை அனுராதபுர சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று பகிரங்கமாக சந்தித்து வருபவர் ஞானசாரர்.

வரலாற்றில் எந்த பிக்குமாரும் செய்யாத அடாவடித்தனகளையும், மிரட்டல்களையும் பகிரங்கமாக அரசாங்க அனுசரணையுடன் நிகழ்த்தியவர் ஞானசாரர். இந்த தீர்ப்பு அவருக்கு மட்டுமல்ல இனி காவியுடையை அசைக்கமுடியாத அதிகாரக் கவசமாக கருதி இயங்குகிற அனைவருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  படிப்பினையாக இருக்கவேண்டும்.

ஞானசார தேரரை விடுவிப்பதற்காகாக ஜனாதிபதியை அணுகி “ஜனாதிபதி மன்னிப்பின்” பேரில் விடுவிப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பரவலான கதையுண்டு. அது நிகழ்ந்தால் நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் செத்துவிடும் என்பது உறுதி.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates