Headlines News :
முகப்பு » , » நிலவுடைமை சமூகமாவது எப்போது? - துரைசாமி நடராஜா

நிலவுடைமை சமூகமாவது எப்போது? - துரைசாமி நடராஜா


மலையக மக்களை நிலவுடைமைச் சமூகமாக மாற்றியமைக்கும் முனைப்புகள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன.மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் இது குறித்த அழுத்தங்களை தொடர்ச்சியாகவே வழங்கி வருகின்றனர்.எனினும் இதன் சாதக விளைவுகள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. நாட்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும் இத்திட்டங்கள் எதுவும் மலையக மக்களுக்கு கை கொடுக்கவில்லை.இத்திட்டங்களில் இம்மக்கள் உள்வாங்கப்படாமை குறித்து பலரும் தமது விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அம்மக்களின் நிலவுடைமைக் கனவு நனவாக்கப்படவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளமையும் நோக்கத்தக்கதாக உள்ளது.

மலையக மக்களுக்கு இந்த நாட்டில் மிக நீண்டதொரு வரலாறு காணப்படுகின்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய,பிரான்ஸிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும், அந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடூரமாக சுரண்டப்பட்டதாகக் கலாநிதி க.அருணாசலம் தனது நூல் ஒன்றிலே தெளிவுபடுத்தி இருக்கின்றார். இவ்வாறாக தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக நீண்டகாலமாக வாழ நேர்ந்தது.பல இனத்தவர்களினதும் அலட்சியத்திற்கு உள்ளானவர்களாகவே இவர்கள் விளங்கினர். கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தையான்,தோட்டக்காட்டான் என்று பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதோடு இம்சிக்கவும் பட்டனர்.

உலகில் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகமாக இவர்கள் இருந்து வந்ததாக புத்திஜீவிகள் தமது நிலைப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். மலையக சமூகம் நாட்டின் ஏனைய சமூகத்தினரைப் பொறுத்தவரை ஒரு தாழ்த்தப்பட்ட கேலிக்குரிய சமூகமாகவே கணிக்கப்படுகிறது.உதாரணமாக மலையக சமூகம் வெறும் சோற்றுப்பிண்டங்கள், கல்வி அறிவற்ற சமூகம் இன்னும் கொஞ்சம் பச்சையாக சொல்லப்போனால் “தோட்டக்காட்டான்” இப்படி பல பட்டப்பெயர்களை எமது மலையக சமூகம் ஏனைய சமூகத்தின் கணிப்பின் மூலம் சூட்டிக்கொள்கிறது. இதற்குக் காரணம் இந்த மக்கள் மொழி ரீதியாக, இன ரீதியாக, கலை, கலாசார ரீதியாக சரித்திர பாரம்பரியங்களைக் கொண்டதோர் அறிவுள்ள ஆற்றல் உள்ள சமூகம் என்ற யதார்த்த ரீதியான உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ளாததேயாகும் என்று ஒரு மூத்த எழுத்தாளர் ஒரு சமயம் வலியுறுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.

வேரறுப்பு

மலையக சமூகத்தை வேரறுக்கும் முயற்சிகள் இன்று,நேற்று ஆரம்பமானவை அல்ல. இதனை ஒரு திட்டமிட்ட செயற்பாடாக நீண்ட காலமாகவே இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தெளிவான அட்டவணைகள் இனவாத சிந்தனையாளர்களிடம் காணப்பட்டன. இப்போதும் காணப்படுகின்றன. இதனடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாடு சுதந்திரமடைவதற்கு முன்னதாயினும் சரி அல்லது நாடு சுதந்திரமடைந்த பின்னராயினும் சரி மலையக மக்கள் மீதான நெருக்கீடுகளுக்கு குறைவில்லை என்றே கூறுதல் வேண்டும். இவர்களுக்கான பல வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டிருக்கின்றன. “தாம் இடும் பிச்சையைப் பெற்றுக்கொண்டு இவர்கள் மௌனமாக இருக்க வேண்டும். உரிமைக்காக குரல் எழுப்புதல் கூடாது” என்று பேரினவாதிகள் எண்ணம் கொண்டிருந்தனர். சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இம்மக்களைப் புறக்கணித்து செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

சமூக நிலை, கல்வி நிலை தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்களிலும் முடக்கி இம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. வீடமைப்பிலும் புறக்கணிப்பு நிலைமைகளே மேலோங்கின. வீடமைப்பு நடவடிக்கைகளில் கிராமத்தவர்கள் மீது காட்டிய ஆர்வத்தினை மலையக மக்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்து வருகின்றது. தேர்தல் கால வாக்குறுதிகளிலும் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் எமது மக்களை திருப்தியடையச் செய்த ஆட்சியாளர்கள் செயல் வடிவில் உருப்படியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. “யானைப்பசிக்கு சோளப்பொரி” என்பதன் அடிப்படையிலேயே காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. பின்தங்கிய நிலையில் உள்ள மலையக சமூகத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கோஷங்களும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு ஏறவில்லை. சிறுபான்மையினர் என்ற ரீதியில் இம்மக்கள் செல்லாக்காசாக இருந்தனர். பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட சம்பவம் இந்நிலைமைக்கு மேலும் வலுசேர்த்தது. இச் சம்பவம் மலையக மக்களின் சரித்திரத்தில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தியது.

நிலவுடைமை இல்லை

நிலவுடைமை என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாக உள்ளது. நிலவுடைமையானது சமுதாயங்களில் மக்களுக்கு அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றை அளிக்கின்றது என்பார்கள். ஆனால் மலையக மக்களை பொறுத்தவரையில் அவர்கள் இந்த நாட்டில் சுமார் இருநூறு வருட கால வரலாறு எனக்கொண்டுள்ள போதும் இன்னும் நிலவுடைமை இல்லாத ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் ஏனைய இனத்தவர்கள் நிலவுடைமைச் சமூகமாக இருந்து வருவது தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது எந்த நிறுவனத்தின் முகாமையின் கீழ் இருந்தாலும் மலையகத் தமிழ் மக்களின் பெரும் பகுதியினர் அச்சமூகத்தில் இருந்து இன்று கைத்தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் இப்படி பல தரங்களுக்கு மாற்றமடைந்திருந்தாலும் இந்த லயன் காம்பராக்களைத்தான் தமது வசிப்பிடமாகவும் தமது காணியாகவும் கொண்டு வாழ்ந்துள்ளனர். ஒப்பந்த கூலிகளாகக் கொண்டு வந்த காலத்தில் இருந்து இந்நாள் வரை அடிப்படை லயன் முறையில் இன்னும் முழுமையாக மாற்றம் வரவில்லை. லயன் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கும் நிலம்தான் இச்சமூகத்திற்குரிய காணி. அந்த லயம்தான் இவர்கள் வாழ்விடம். அல்லது வீடாக அமைந்துவிட்டது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தனது நூல் ஒன்றில் (2006) எடுத்துக்காட்டி இருக்கின்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி தோட்டக் கம்பனிகள், ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இரண்டு இலட்சத்து 56 ஆயிரத்து 963 ஹெக்ரேயர் காணிகள் பொறுப்பில் இருந்தன. தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 357 ஆக இருந்தது. உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 965 ஆகும். 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்தச் சட்டம் இலக்கம் ஒன்றின் மூலம் நிலச்சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் தனியார் உரிமை கொண்டிருக்கும் நிலங்களுக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது. இதனடிப்படையில் பெருந்தோட்ட நிலங்களாக இருந்தால் ஐம்பது ஏக்கரும் மற்றைய நிலங்களாக இருந்தால் 25 ஏக்கர்களும் மட்டுமே தனிப்பட்ட ஒருவர் வைத்திருக்கலாம் என்பது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சட்டத்தினை விட 1950ஆம் ஆண்டின் நில சுவீகரிப்பு சட்டம் 1972ஆம் ஆண்டின் பெருந்தோட்ட சட்டம் (இலக்கம் இரண்டு), 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய கூட்டுத்தாபன சட்டம், 1973ஆம் ஆண்டின் விவசாய நிலச்சட்டம் இலக்கம் 42 ஆகிய சட்டமூலங்களை பயன்படுத்தியும், பின்னர் உருவாகிய 1975ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டத்தை (திருத்தப்பட்டது) பயன்படுத்தியும் இலங்கையில் கடந்த காலத்தில் நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் (1995) வலியுறுத்தியுள்ளன. இதேவேளை 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் தோட்டங்கள் இரு கட்டங்களாக அரசினால் கையேற்கப்பட்டன. முதலில் ரூபா நிறுவனங்கள் எனப்பட்ட இலங்கையருக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் அடுத்து வெளிநாட்டு ஸ்டேர்லிங் நிறுவனங்களுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் கையேற்கப்பட்டன. இவ்வாறு கையேற்கப்பட்ட பெருந்தோட்டங்களில் இலாபகரமாக இயங்கும் தோட்டங்கள் என அரசினால் இனம் காணப்பட்ட தோட்டங்களை நிர்வகிக்க அரசு இவ்வகை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை என்ற இரு முகவர் நிறுவனங்களை நிறுவியது. ஏனைய நட்டத்தில் இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட தோட்டங்களை மலைநாட்டு தோட்ட அபிவிருத்தி சபையிடமும், வேறு சில இடைக்கால நிர்வாக முகவர்களிடமும் அரசு ஒப்படைத்தது.

இதன் விளைவுகளை கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தனது நூல் ஒன்றில் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றார். இவ்வாறாக பிரஸ்தாப நிர்வாக முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோட்டங்களை பிற்காலத்தில் கிராமத்தவர்கள் மத்தியில் சிறு நிலத்துண்டுகளாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தோட்டங்களில் பிறந்து தோட்டங்களுக்கே தம்மை அர்ப்பணித்த தொழிலாளர்கள் நிலப்பகிர்வின்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.நில விடயத்தில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களுக்கான நிலவுரிமையானது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது. இது ஒரு மோசமான நிலைமையாகும். மலையகத்தில் காணப்படும் நிலப்பயன்பாடும் காணி உரிமையும் ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்பதாக புத்திஜீவிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி மக்களுக்கு தங்கியிருக்கும் வீடு,காணி என்பவற்றுக்கு உரித்துடைமையை பெற்றுக்கொடுப்போம் என்று ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறி வந்த போதும் எதுவித காத்திரமான பணிகளும் இடம்பெறவில்லை.மலையக சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிற சமூகங்களினால் பாரபட்சத்துக்கு உள்ளாகியும் உள்ளது. இச்சூழ்நிலைகளையும் இப்பாரபட்சத்தையும் நீக்குவதற்கு அரசு உரியவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தோட்டங்களுக்கு வெ ளியே இந்திய வம்சாவளியினர் சுதந்திரமாக தமது வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாமல் செய்துள்ளன. சட்ட ரீதியாக தமது தேசத்திற்குள் வாழ்பவர்கள் அனைவரும் வசிப்பிடத்தை தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டவர்கள். இந்திய வம்சாவளியினர் வீடமைப்பு திட்ட சலுகைகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆகவே பெருந்தோட்டங்களில் காணப்படும் காணியுரிமையும் நிலப்பயன்பாடும் தெளிவாக பௌதீக ரீதியாக ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்கின்றது என்றும் பல்வேறு வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் மலையக மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளன என்பதனை அவற்றின் போக்குகளும் கட்சி கொள்கைகளும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன. ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற விசனம் மேலோங்கி காணப்படுகின்றது.

அபிவிருத்தி போர்வையில் நிலம் சுவீகரிப்பு

தோட்டப்புற காணிகளின் அளவு இன்று வேகமாக குறைவடைந்து வருகின்றது. தேயிலை விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அபிவிருத்தி என்கிற போர்வையில் தேயிலை விளை நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை இனவாதத்தின் பின்னணியாகுமென்று மலையக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பெருந்தோட்ட தமிழர்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுவதாகவும் இந்நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்களும் உடந்தையாக உள்ளதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அண்மையில் ஒரு குற்றச்சாட்டினையும் முன்வைத்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக பெருந்தோட்ட காணியினையும் அதற்குரிய குடியுரிமையினையும் உறுதி செய்வதாக வாக்களித்திருந்தது. அதற்கேற்ப ஆங்காங்கே அவர்களுக்குரிய காணி உரிமைகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பெருந்தோட்டங்களை சூழ இருக்கின்ற அரசாங்க காணிகளை நிச்சயமாக பெருந்தோட்ட மக்களுக்கே உரித்துடையதாக வழங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான காணியிலோ தோட்டத்துக்கு அண்மித்த காணியிலோ கிராமத்தவர்களை குடியமர்த்துவதை உடன் நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன். தோட்டப்புற காணிகள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்படுவதால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன. மலையக மக்களின் இருப்பு பல இடங்களில் கேள்விக்குறியாகி இருக்கின்றது. இம்மக்கள் சிதறி வாழும் நிலைமை மேலோங்குகின்றது. இதன் காரணமாக மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றது. சமூக அபிவிருத்திக்கு அரசியல் ஆதிக்கம் மிகவும் அவசியமாகும் என்று கருதப்படும் நிலையில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பாதிப்பு பாதக விளைவுகள் பலவற்றுக்கும் இட்டுச் செல்லும் என்பதனை மறுப்பதற்கில்லை.தோட்டப்புற நிலங்கள் பல தேவை கருதியும் சுவீகரிக்கப்படுவதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை குறைவடையும் அபாய நிலை காணப்படுகின்றது. அண்மைக்காலமாக கம்பனியினரின் பொறுப்பில் உள்ள பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான வேலை நாட்களே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நிலச் சுவீகரிப்பு நிலையானது இதனை மென்மேலும் உக்கிரமடையச் செய்வதாகவே அமையும். இது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற தோட்டப்புற மக்களின் குரல்களை மேலும் நெருக்குவதாகவே அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

1972 இல் காணியமைச்சர் ஹெக்டேர் கொப்பேகடுவ தலைமையில் காணி சீர்திருத்தம் இடம்பெற்றது. 1975 ஆம் ஆண்டு ரூபா, ஸ்டேர்லிங் கம்பனிகளுக்கு சொந்தமாக இருந்த காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இந்நிகழ்வும் இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னும் பல நிகழ்வுகளும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. உசலசம, ஜனவசம கமிஷன் போன்ற தோட்டங்களில் மாற்றுப் பயிர்ச்செய்கை, பன்முகப்படுத்தல் என்ற போர்வையில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தோட்டக்காணிகளில் இருந்தும் லயன்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நட்சா திட்டம், மகாவலி குடியேற்றம் மற்றும் தோட்ட கொத்தனி முறை தோட்டப் பகுதிகளில் மலையக தமிழ் மக்களின்பலத்தை குறைக்கும் திட்டமிட்ட குடியேற்றம் போன்றன தீவிரமாக இடம்பெற்றுள்ளன. இதேவேளை நிலச்சீர்திருத்தம், தோட்டக்காணிகளை அரசு பொறுப்பேற்று பல்வேறு குடியேற்றத் திட்டங்கள் மூலம் மலையக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டு அவர்கள் காணியுரிமையும் வீட்டுரிமையும் பறிக்கப்பட்டதாக ஏ.லோறன்ஸின் கருத்து அமைந்திருக்கின்றது.

டெல்டா, சங்குவாரி போன்ற இடங்களில் உள்ள லயன்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. டெவன் காணி சுவீகரிப்பில் சிவனு லெட்சுமணன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் துறந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்ட இனக்கலவரம், திட்டமிட்ட குடியேற்றங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பானவை என்பதை புலப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

காணித்துண்டுகள்

 இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக மலையக காணி உரிமையை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனடிப்படையில் இருபதாயிரம் காணித்துண்டுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நான் மலையக தோட்ட மக்களுக்கு 07 பேர்ச்சஸ் காணியை வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்தேன். தற்போது நான் அமைச்சர் என்ற வகையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மலையக மக்களுக்கு சொந்தமாக தோட்டக் கம்பனிகளில் தோட்ட மக்களுக்கு இருபதாயிரம் காணித்துண்டுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தோட்ட நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். 2015 ஆம் ஆண்டு எம் அரசாங்கம் பதவிக்கு வந்தபோது அரசுக்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கான கொடுப்பனவுகள் இருபது வருடங்களாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பெறுமதி ஆயிரத்து 900 மில்லியன்களாகும். நான் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து படிப்படியாக அவற்றை செலுத்திவந்தேன். தற்போது ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை முந்நூறு மில்லியனாக குறைத்துள்ளேன் என்றும் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார். வாக்குறுதிகள் காற்றில் கடந்த காலங்களைப் போன்று பறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகர்

தோட்ட தொழிலாளர்களுக்கு நிலங்களைப் பெற்றுக்கொடுத்து நிலவுடைமை சமூகமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சவால்களையும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் சிறப்பாக எடுத்துக் கூறினார். அவரது கருத்தின் ஊடாக பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கம்பனிகள் இன்று தோட்டங்களை கொண்டு நடத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் வெளியார் உற்பத்தி முறையினை அமுல்படுத்துவதில் ஈடுபாடு காட்டிவருகின்றன. இந்நடவடிக்கை சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது குறித்து பெருந்தோட்ட அமைச்சிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். கம்பனிகள் முன்வைத்த முன்மொழிவுகளில் நிலம் குறித்து எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தேயிலை மரங்களை அடிப்படையாகக் கொண்ட முன்மொழிவுகளே இடம்பெற்றன.எனினும் நான் இங்கு மரங்கள் என்பதற்கு பதிலாக நிலம் குறித்து குறிப்பிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலம் குத்தகையா? அல்லது சொந்தமா? என்பது குறித்து பேசித்தீர்க்க வேண்டியுள்ளது. நிலம் குறித்த விடயத்தினை பிரதமரும் ஏற்றுக்கொண்டார். நிலத்தை சொந்தமாக வழங்குகையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்றும் தொழிலாளர்கள் நிலத்தை கைமாற்றி விடுவர் என்றும் கருத்துக்கள் பலவும் தெரிவிக்கப்பட்டன. இது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இது நமது நிலம். இதில் நாம் பயிரிட வேண்டும் என்பது குறித்த சிந்தனையை சமூக மட்டத்தில் ஏற்படுத்த உள்ளோம். மலையக மக்களிடையே நிலம் குறித்த உணர்வு இப்போது அதிகரித்து வருவதையும் நாம் கூறியாதல் வேண்டும். இது எமக்கு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் நிலத்தை பெற்றுக்கொடுக்கின்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்து வருகின்றோம். வீடமைப்புக்காக பல திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றோம்.

கூலிச்சமூகமாக சுமார் இருநூறு வருடங்களாக வாழ்ந்த சமூகம் உடனடியாக நிலவுடைமை சமூகமாக மாறுவதென்பது இலகுவான காரியமல்ல. இதற்கான தயார் நிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த தயார் நிலைகள் இருபக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலத்தை பாதுகாக்க வேண்டியது ஒரு சமூகப் பொறுப்பு ஆகும். இதனை அரசி யல்வாதிகள் மட்டுமல்லாது பல்துறை சார்ந்தவர்களும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வெளியார் உற்பத்தி முறை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும். தேயிலை உற்பத்தித் துறையில் எமது மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இத்துறையில் மேலும் பலரும் மறை முகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் பட்டு எவருக்கும் பாதிப்பு ஏற்படா வண் ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தொழிற்றுறை தூக்கி நிறுத்தப்படுதல் வேண்டும். தேயிலை நிலத்தை பெற்றுக்கொடுப்பதோடு பொரு ளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மாற்றுப்பயிர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கூட்டு ஒப்பந்தம் குறி த்து கவனம் செலுத்தி வருகின்றோம். நிலத்துடன் கூடியதாக பயிரிடும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் திலக ராஜ்.

 மலையக சமூகம் நிலவுடைமை சமூக மாக தலைதூக்க வேண்டும் என்பதே சகல ரதும் எதிர்பார்ப்பாகும்.

துரைசாமி நடராஜா

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates