Headlines News :
முகப்பு » » ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்

ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்


ஒரு நாளைக்கு எமக்கு அடிப்படை சம்பளமான 500 ரூபாவே கிடைத்து வருகின்றது இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அது குறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு இத்தனை காலமும் அது குறித்து பேச எந்த தொழிற்சங்கங்களும் எம்மைக் காண வந்ததில்லை இம்முறை எமக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இல்லாவிடின் இந்தக் கூட்டு ஒப்பந்தமே எமக்குத்தேவையில்லை என்கின்றனர் தொழிலாளர்கள். கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தோட்டத்தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது குறித்து அட்டன் பிரதேச தேயிலைத்தோட்டங்களில் கடமையாற்றும் பெண் தொழிலாளர்கள் சிலரை சந்தித்தபோது அவர்கள் கூறிய கருத்துகள் இங்கு தரப்படுகின்றன.


பிரமிளா
ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இது வரை அதைப்பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு திராணியில்லை. எல்லாம் அடங்கலாக எமக்கு 730 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்து வருகின்றது என்று கூறுவது பொய்யாகும். அந்தத் தொகைக்கு அவர்கள் ஒப்பம் வைத்திருப்பார்கள். ஆனால் எமக்கு அப்படிக் கிடைப்பதில்லை.ஏனென்றால் நாம் ஒரு நாளைக்கு 19 கிலோ எடுத்தால் மட்டுமே ஏனைய கொடுப்பனவுகளும் சேர்த்து அத்தொகை கிடைக்கும். கொழுந்தில்லாத காலங்களில் 10 கிலோ எடுப்பதே கடினம். அந்நாட்களில் அடிப்படை சம்பளமான 500 ரூபா மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல வேலை நாட்களும் 10 அல்லது 15 நாட்களே இருக்கும். இப்போது பாருங்கள் எங்களது சம்பளத்தொகையை ? இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது? பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது? இம்முறை எங்களுக்கு எப்படியாவது ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு கூட்டு ஒப்பந்தமே வேண்டாம். வேறு எந்த முறையிலாவது எமக்கு சம்பளத்தைப்பெற்றுத்தாருங்கள்.

பி.அம்பிகா
இங்கே பாருங்கள் தேயிலை பறித்துப் பறித்து கைகள் காயமடைந்து விட்டன. அதனால் துணியினாலான கையுறை அணிந்து கொழுந்து பறிக்கிறேன். வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே. எமது நிலைமை ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்துபவர்களுக்குத்தெரியாதே? கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள்? வருடக்கணக்காக தொழிற்சங்கங்கள் நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு 50 ரூபாவை கூட்டித்தருவதற்கு முடியவில்லையே ஆனால் இத்தனை காலமும் எமது சந்தாப்பணத்தை வேண்டாம் என்றும் கூறியதில்லை. எமது தலைவிதியை நினைத்துத் தான் வெயிலிலும் மழையிலும் கடினப்பட்டு வேலை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் எவரும் கண்டு கொள்வதில்லை.

உமாதர்ஷினி
எனக்கு 18 வயதாகின்றது. சாதாரண தரம் வரை படித்து விட்டு வீட்டு வறுமை காரணமாக இத்தொழிலுக்கு வந்து விட்டேன். தந்தைக்கு நோய் காரணமாக வேலை செய்ய முடியாது.அண்ணா தொழில் செய்கிறார். தம்பி படித்துக்கொண்டிருக்கிறார். இனி எனது காலம் முழுக்க இந்தத் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் எம்போன்று சாதாரண மற்றும் உயர்தரம் படித்து விட்டு தோட்டங்களை விட்டு வெளியே போக முடியாத சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்கு இங்கேயே இருக்கும் ஒரே தொழில் இது மட்டும் தான். வேறு தொழில்கள் பற்றி அவர்களும் சிந்திப்பதில்லை.

சாந்தகுமாரி
எனக்கு 3 பிள்ளைகள். அவர்களை படிக்க வைக்க வேண்டும். மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்தால் தான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அதுவும் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே முழு கொடுப்பனவும் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதி, ஏனைய கொடுப்பனவுகள், முன்பணம் எல்லாவற்றையும் கழித்துப்பார்த்தால் மாதம் 6 அல்லது 5 ஆயிரம் தான் மிஞ்சுகிறது இதை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் என்ன தான் செய்ய முடியும்? தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர்? இப்படியே போனால் தோட்டங்களை இழுத்து மூட வேண்டியது தான்.

யோகலட்சுமி
கோதுமை மா விலை அதிகரித்து விட்டது. அரிசி கிலோ 100 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது. இந்த நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஏனையோருக்கு கிடைக்கும் நிவாரணமும் உதவியும் ஏதோ எமக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்த நேரம் ஏதோ கத்துவார்கள். பின்பு அவர்களுக்கு விருப்பப்பட்ட ஒரு தொகைக்கு கையெழுத்திட்டு அமைதியாகி விடுவார்கள்.எப்போதாவது இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களிடம் வந்து இத்தொகை போதுமா என்று கேட்டிருக்கின்றார்களா? ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது? காணி, வீடு எமக்குத்தேவை வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அதில் வசிப்பதற்கு வாழ்வாதாரம் தேவை தானே?

இதே வேளை சில தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதியம் பெற்றவர்களையும் தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை முக்கிய விடயம்.

இவர்களும் 20 கிலோ வரை நாள் ஒன்றுக்கு கொழுந்து பறித்தல் அவசியம்.அதில் குறைந்தால் அரைபேர் அதாவது 250 ரூபாவே வழங்கப்படுகிறது. 10 கிலோ எடுத்தால் கிலோ ஒன்றுக்கு 25 ரூபா வீதம் வழங்குகின்றனர். இது தோட்ட நிர்வாகங்களுக்கு இலாபம் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் தொழிலாளர்களின் ஒரே குரலாக நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவுக்கு குறையக்கூடாது என்பதாக இருக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ன செய்யப்போகின்றன, கம்பனிகளுடன் எவ்வாறு பேச்சு நடத்தப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சந்திப்பு: சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates