Headlines News :
முகப்பு » , , » "ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி! தமிழீழமே எங்கள் இலக்கு" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி

"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி! தமிழீழமே எங்கள் இலக்கு" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி


மாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன்  எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. மாணிக்கதாசன் உள்ளிட்ட புளொட் தலைவர்களால் எமது அமைப்பின் தலைமை உயிரச்சுறுத்தலை எதிகொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் அரசோடு இணைந்து பல தமிழ் இளைஞர்களை காணாமல் ஆக்கிக்கொண்டிருந்த காலம். மாணிக்கதாசன் மீது பொதுவாக இருந்த பயமும் முன்னெச்சரிக்கையும் எனக்கும் இருந்தது. அரசுடன் சேர்ந்திருந்த நிலையிலும் “தமிழீழமே எமது இலக்கு” என்று கொடுத்த பேட்டி பலரையும் கவனிக்கச் செய்தது. இந்தப் பேட்டிக்கு சரியாக 20 வயது. - என்.சரவணன் (ஆனந்தன் என்கிற பெயரில் மே 1999 - சரிநிகரில் வெளிவந்தது.)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் துறைப் பொறுப்பாளராக மாணிக்க தாசன் சொல்லப்படுகின்ற போதும் இன்று அவ்வியக்கத்தின் முழுக் கட்டுப்பாடும் இவரின் கீழேயே இருப்பது இரகசியமல்ல. புளொட் இயக்கம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பளின்றன, அடிப்படையில் அவ்விமர்சனங்களின் சாராம்;சம். எதிரியோடு சேர்ந்து செயற்படுவது, மற்றும் மக்களுக்கு துரோமிழைத்து வருவது, இவ்விமர்சனங்கள் குறித்து சம்பவங்களாக வினாக்களைத் தொடுக்காது அடிப்படையான அரசியல் கேள்விகளாகவே இந்த பேட்டி தயாரிக்கப்பட்டது. கேள்விகளைக் கேட்பது எங்களின் கடமை. அதற்கு பதில் தருவது அவரின் பொறுப்பு. மற்றவை வாசகர்களின் சுதந்திரம்.
கழகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தற்போதைய அதன் நடவடிக்கைகள் தலைகீழாக மாறி இருப்பதாகவும், அது இன்று துரோகக் கும்பலாக ஆகியிருக்கிறது என்றும் எழுந்துள்ளற பரவலான குற்றச்சாட்டுக்  குறித்து உத்தியோக பூர்வமாக என்ன கூறுவீர்கள்?

எமது அரசியல் மற்றும் இராணுவச்  செயற்பாட்டில் எதை  எடுத்துக் கொண்டாலும் நாங்கள் அரசோடு இணைந்தது கிடையாது. ஒரு பரந்த வெகுஜன அமைப்பாக ஒருகாலத்தில் நாங்கள் இருந்தது உண்மை தான். தவிர்க்க முடியாமல் ஆயுதம் தரித்துப்  போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது ஆயுதமயமாக்கலில்  ஏற்பட்ட தாமதம் புலிகளுக்கு வெற்றியை ஏற்படுத்தி விட்டது. போராட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம்பெற்று முன்னுக்கு வந்த வரலாற்றைக் காண்கின்றோம். புளொட் ஒரு கட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒரு கட்டத்திலும்  இன்னொரு கட்டத்தில் டெலோ என்றும் ஏன் ஒரு கட்டத்தில் புலியுமாக இந்த வகையான செல்வாக்கு, ஆதரவு பெறுதல் தளப்பிரதேசங்களை கொண்டிருத்தல் போன்றவற்றைக் காணலாம். இந்தக் காலகட்டத்தில் புலிகள் தங்களின் பாசிசத்தைப் பயன்படுத்தி ஏனைய இயக்கங்களை நசுக்கி தம்மைத் தாமே தலைமைக்குக்  கொண்டு வந்து விட்டனர்.  சுழற்சிமுறையில் இந்தத்  தலைமைகள் மாறிய நிலை போய் ஒரு கட்டத்தில் புலிகள் தம்மை நிரந்தரமாக்கிக் கொண்டனர்.    இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மக்கள் ஆதரவும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதன் அர்த்தம் மக்களின் உண்மையான தலைமை அது தான்  என்பதோ அல்லது அவர்களின் வழிமுறை தான் சரியென்பதோ ஏனைய இயக்கங்கள் தவறானவை, தமிழின விடுதலைக்கு எதிரானவை  என்பதோ அல்ல.

எமது போராட்டத்தைப் பொறுத்த வரை ஆயுதந் தாங்கிய எதிர்ப்புகளை போர் என்றும் அரசியல் ரீதியான போராட்டத்தை போராட்டம் என்றும் தான் நாங்கள் அழைக்கிறோம். இன்றைய நிலையில் பாசிசத்தின் உச்சக் கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும்  நிலையில், புலிகளும் நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து கொண்டு புலி உறுப்பினர்கள் எவரையும் விமர்சிக்க முடியாத சூழலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மாறாக தென்னிலங்கையில் ஆசை தீருமட்டும் ஜனாதிபதியையோ ஏனைய அரசியல் வாதிகளையோ கடுமையா கத் தாக்கி விமர்சிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த வழிமுறைக்கூடாக வடகிழக்குப் பிரதேசத்தில் நாங்கள் காலூன்றி நிற்க முடியுமோ அந்த வழிமுறையைப் பாவித்தே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்திய இராணுவம் இருக்கும் போது புலிகள் அரசுடன் நெருக்கமாக இருந்த போது நாங்கள் கொழும்பில் கூட சுதந்திரமாக உலாவ முடியாத நிலையில் தான் இருந்தோம். எமது உறுப்பினர்கள் வத்தளையில் ரயர் போட்டு புலிகளால் எரிக்கப்பட்டனர். எம்மில் பலர் இந்தியாவை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. ஆனால் என்றோ ஒரு நாள் இந்தியாவும் புலிகளும் மோதிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தோம். கிழக்கும் கிழக்கும், அல்லது மைனசும் மைனசும் ஒன்று சேருவதில்லை அல்லவா? இரு தரப்பும் மோதல் ஏற்பட்ட போது நாங்கள் இராணுவ உயர் அதிகாரி களுடன் தொடர்பு கொண்டு பேசி திரும்பி வந்து எமது பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்தோம்.

அதிலிருந்து எமக்கான தனித்து வமான போக்கைத் தான் கடைப் பிடித்து வருகிறோம். இன்று அரசும் புலிகளை எதிர்க்கிறது. நாங்களும் புலிகளை எதிர்க்கிறோம். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் அடிப் படையில் வித்தியாசம் உண்டு. புலிகள் எங்களை எதிர்ப்பதால் தான் நாங்களும் எதிர்த்து நிற்க வேண்டி யேற்பட்டுள்ளது. எனவே தான் வெளிப் பார்வைக்கு தோன்றுவதை வைத்துக் கொண்டு நாங்கள் படையுடன் சேர்ந்து செயற்படுகிறோம் என்று கூறுவது பிரச்சார ரீதியில் எவருக்கும் வசதியாக இருக்கும். ஆனால் அரசுடன் எவ்வளவு முரண்பட்டு செயற்படுகிறோம் என்பது வெளிக் கொணரப் படுவதில்லை. நாங்கள் எத்தனையோ தடவைகள் பொலிசுக்கு அடித்திருக்;கி றோம். இராணுவத்துக்கு அடித்திருக்கி றோம். அப்படி அடித்த எத்தனையோ எங்களின் உறுப்பினர்கள் இன்னமும் சிறைகளில் இருந்து வருகிறார்கள். புலிகளின் செய்திகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கும் தொடர்பூடகங்கள் எங்களின் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசாங்கத்துக்கு எதிராக எத்த னையோ போராட்டங்களை முன்னெ டுத்திருக்கிறோம். 1952க்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு முன்னால் இருந்து உண்ணாவிரதம் மேற் கொண்ட கட்சி நாங்கள் தான். வவுனியாவில் எல்லைப்புறங்களில் அரசாங்கத்தால் செய்ய முனைந்த எத்தனையோ  குடியேற்றங்களைத் தடுத்து அந்த இடங்களிலேயே நிறுத்தி விட்டுள்ளோம்.  ஆனால் புலிகளின் பலமான பிரச்சார இயந்திரங்களால் தான்  இவை மறைக்கப்பட்டு விட்டன. 

புலிகள் ஒரு கட்டத்தில் தங்களை பலப்படுத்தி அதனையே நிரந்தரமாக்கிக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்நிலைமை புலிகளின் பலத்தால் ஏற்பட்டதா அல்லது கழகத்தின் பலவீனத்தால் ஏற்பட்டதா?

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம் பெற்றபோதும் அவை சக இயக்கங்களுக்கு எதிராக பாசிசத்தைப் பாவித்து இருப்பை உறுதி செய்யவில்லை. அதைச் செய்தவர்கள் புலிகள் தான். அதன் மூலம் தான் அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.

உங்களின் கருத்து இராணுவ ரீதியிலான விடயத்தில் பொருந்தக் கூடும். ஆனால் அரசியல் ரீதியில் உங்கள் பலம் நிரூபிக்கப்படவில்லையே?

புலிகள் மட்டுமென்ன அரசியல் ரீதியில் பலம் பெற்றவர்களா? அவர்களின் பலமும் இராணுவப் பலம் தான். அவர்களின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்களா என்ன? போராட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே மக்களை அரசியல் மயப்படுத்துவதில் புளொட், ஈ.பி.ஆர்எல்.ப்., ஓரளவில் ஈரோஸ் ஆகியவை தான் அக்கறைகாட்டி வந்துள்ளன. புலிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரமுடியாமலிருப்பதும் இந்தக் குறைபாட்டால் தான்.

அரசியல் ரீதியில் கழகம் மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இருக்கும் ஆதரவுக்கும் புலிகளின் மீது இருக்கும் ஆதரவுக்கு மிடையில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

புலிகள் தங்களின் இராணுவப் பலத்தை தமிழ் இயக்கங்கள் மீது திருப்பி விட்டார்கள். ஏனைய இயக்கங்கள் அவ்வாறு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டதில்லை.

சரி, இப்படிக் கேட்டால், இன்று கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களா?

எல்லோரும் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்கள் என்று கூறமுடியாது. ஆனால் இராணுவப் பிரிவில் உள்ளவர்களுக்கு தேவையான அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆயுதம் ஏந்துவதன் நோக்கம்? யாருக்கு எதிராக அதனைப் பயன்படுத்த வேண்டும்? போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கல்வி வழங்கப் பட்டுள்ளது.

அரசியல் துறைக்கும், இராணுவத் துறைக்குமிடையிலான உறவு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இரண்டையும் வேறுவேறாகப்  பிரிக்க முடியாது. அரசியல் இலக்குகளுக்கு அமையத் தான் இராணுவ வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இராணுவ ரீதியான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்குடன் அரசியல் பிரிவை நடாத்த முடியாது.  இவை இரண்டுக்கு மிடையிலான உறவுகள் ஒன்றுடன் ஒன்று விட்டுப் பிரியாததாக இருப்பது அவசியம். ஆனால் இன்றைய யுத்தசூழ்நிலையின் காரணமாக இராணுவ  ரீதியான அலோசனைக்கிணங்க அரசியல் வியூகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்பதும் அத்தியாவசிய மானது. இன்று இதே போன்ற முறையைத் தான் இலங்கை இராணுவத்திலும் கடைப்பிடிக்கிறார்கள்.  பிரிகேடியர் மட்டத்திலுள்ள ஒருவர்  இணைப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏனைய சிவில் நிலைமைகளின் சாதக பாதகங்களைக் கருத்திற்கொண்டே இராணுவ விவகாரங்களை நகர்த்துகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் கழகத்தில், அரசியல் துறையைவிட இராணுவத்துறைக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப் படுவதாக  கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்  குறித்து...?

நேரடியாக பாசிசத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இராணுவத்துறையின் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அரசியற்துறை அதனைக் கட்டுப்படுத்த முடியாது. அரசியல் ரீதியான செல்வாக்குக்கு எவ்வளவு தூரம் அனுமதிப்பது என்பதை அப்படிப்பட்ட நடைமுறைதான் தீர்மானிக்க முடியும்.

சமீபத்தில் கூட கழகத்தின் இராணுவ செயற்பாடுகள் குறித்து அரசியல் பிரிவிடம் கேள்வி கேட்க வேண்டாமென கழகத்தின் அரசியற் பிரமுகர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இராணுவச் செயற்பாடு குறித்து அரசியல் ரீதியில் பொறுப்பு கூற மாட்டோம் என்றல்லவா அர்த்தம்?

அப்படியில்லை. கட்டுப்பாடும், இறுக்கமும் கொண்ட இராணுவமாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை. இன்று பிரபாகரனுக்கு இருக்கின்ற தலையிடியை விட எமக்குத் தான் அதிகம். ஏனென்றால் நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறோம். மக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் பதில் கூறிவருகிறோம். வருஷத்துக்கு ஒரு தடவை கதைக்கும் புலிகளுக்கு இந்தசிரமங்கள் தெரியாது.

சரி, கடந்த ஒரு தசாப்த காலமாக நீங்கள் எவ்வாறான  அரசியல் வெற்றிகளை அடைந்திருக்கிறீர்கள்?

அரசாங்கம் செய்ய முயற்சித்த குடியேற்றங்கள் பலவற்றைத் தடுத் திருக்கிறோம். ஜெனரல் கொப்பேகடு வவுக்கூடாகவும் இந்த முயற்சிகள் இகசியமாக செய்யப்பட்ட வேளை நாங்கள் கடுமையாக எதிர்த்து நின்று அதனை செய்ய விடவில்லை. அதில் எங்களுக்குப் பெரும் திருப்தி. அவ்வாறான தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சின்ன வயசு கல்வியறிவற்ற பெடியன்களே சமயோசிதமாக மேற்கொண்டனர். அதேவேளை நாங்கள் ஏறத்தாழ 12 தமிழ் குடியேற்றங்களை எல்லைப்புறங்களில் நிறுவியிருக்கிறோம். அவற்றுக்கூடாக கிராமங்கள் சிலவற்றை உருவாக்கி யிருக்கிறோம்.

வேறு...?

வேறு... சிரமதானங்கள், கணவர் இழந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கான புனர்வாழ்வுத்  திட்டங்கள், நோயாளர் களுக்கான உதவிகள், வசதியிழந்தவர்கள் தங்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி , மாரி காலங்களில் அடிமட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான கிடுகுகளை விநியோகித்து வருகிறோம். மக்கள் கடைகள் சிலவற்றை அமைத்து வருகிறோம்.

ஒரு தசாப்த காலமாக நீங்கள் செய்ததாகக் கூறிய மேற்படி செயற் பாடுகள் குறித்து நீங்கள் திருப்தி காண்கிறீர்களா?

திருப்தி கண்டதால் தான் மக்கள் எங்களிடம் பிரதேச சபையையும் மூன்று பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தந்திருக்கிறார்கள். மக்கள் திரும்பிக் கொண்டிருப்பதன் சமிக்ஞை தான் அவை.

நீங்கள் செய்ததாக் கூறிய சில சீர்திருத்த நடவடிக்கைகளை கருத்திற் கொள்ளும் போது ஒரு போராளி இயக்கத்தின் கொள்ளளவு இவ்வளவு தானா என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அவ்வளவு மட்டுமல்ல. ஜனநாயக வழிக்கு வந்த ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் தான் மக்களின் பல பிரச்சினைகள் குறித்து ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறோம். உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள் என எங்களின் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம். சர்வதேச ரீதியில் இடம் பெற்று வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்தும் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியிருக்கி றோம். போரில் நாங்கள் ஈடுபட முடியா விட்டாலும் போராட்டத்தில் நின்று கொண்டு தான் இருக்கிறோம். சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போருக்கும் தள்ளப்படலாம். அந்த சுழற்சியின் அடிப்படையில் நாங்களும் புலிகளும் ஒன்றாக செயற்படும் நிலைமையும் ஏற்படலாம். ஒரு சுழற்சி முறையில் இராணுவத்துடன் இருக்கத் தள்ளப்பட்டுள்ளோம். 

ஏன் பழைய நிலைக்குப் போக முடியாது?

 அந் நிலைமைக்கு போதிய வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் போருக்கும், போராட்டத்துக்கும் தயாராக இருப்போம்.

இன்று ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற இயக்கங்கள் இராணுவ ரீதியில் தயாராவதற்கு இருக்கக்கூடிய பிரச்சினை எமக்கு இல்லை. எமக்கு நிறைந்த அனுபவம், தளப்பிரதேசம், வழிநடத்தல், இராணுவத்துறை சார்ந்த அறிவு என்பவை உண்டு. எங்களுக்கு அது இலகுவானது.

சரி, கழகத்தின் ஆரம்ப கால அரசியல் இலக்கான "தமிழீழம், சோஷலிசம்" என்பவை இன்றும் செல்லுபடியானவை தானா?

"பெரியவரின்" உண்மையான நோக்கம் வர்க்க ரீதியானது தான். சோஷலிசத் தமிழீழத்தை அடைய வேண்டுமென்பது தான் அவரின் இறுதி லட்சியமாக இருந்தது. அவர் இருந்த போது அதற்கேற்றவகையில் தான் கட்சியை வழிநடத்தினார். தென்னாசியா வில் ஒரு மோசமான ஏகாதிபத்திய சக்தியாகவே இந்தியாவையும் அவர் அடையாளம் கண்டார். அதன் அடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்காத அதே வேளை அதனை ஏற்கவும்  மறுத்தார். அது இரு நாடுகளின் வர்க்க நலன் சார்ந்த ஒப்பந்தம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது கருத்துக்களின் வளர்ச்சியாகத் தான்  தமக்கு எதிர்காலத்தில் ஒரு சாத்தியமான, சாதகமான நாடு தேவையென்பதால் மாலைத்தீவுப் புரட்சியை மேற்கொண்டோம்.

தமிழீழத்துக்கு ஆதரவான ஒரு நாட்டுக்கு தமிழீழம் பிரிவதால் அந் நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் ஸ்திரத்தன்மைகள்  குழப்பமடையாத பின்தளம் ஒன்று தேவையென்பதால் தான் மாலைதீவுப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழப் போராட்டம் குறித்த மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யுடன் கூட உறவுகளை வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொண்டதும் இந்த வர்க்க நோக்கத்துடன் தான். அந்த நோக்கிலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இன்னமும் வவுனியாவில் பல இடங்களில் கூட்டுறவுப் பண்ணை களை நடாத்தி வருகிறோம்.

தமிழீழ இலக்கில் இன்றைய உத்தியோபூர்வ நிலைப்பாடு என்ன?

அந்தப் பதத்தை நேரடியாகப் பாவித்து அரசியல் செய்ய முடியாத, ஆயுதம் தாங்கிப் போராட முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆயுதம் தரிப்பது அவசியம். பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது தான். அதற்காகத் தான் படைப் பிரிவினை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கிறோம்.

சரி இப்படிக் கேட்கிறேன். இன்று கழகம் என்கின்ற ஒரு இயக்கம் ஏன் தேவை? 

முன்னர் கூறியதைப் போல சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போர்புரியும் காலம் ஏற்படலாம். இன்றைய நிலையில் நிரந்தரமான ஒரு இலக்கைத் தீர்மானிக்க முடியாது.

அப்படியென்றால் தமிழீழம் இலக்காக இருக்க முடியாது...?

தமிமீழம் தானே எங்கள் நோக்கம். அதற்காகத் தான் நாங்கள் புறப்பட்டோம். அர்ப்பணிப்பு, தியாகம் எல்லாமே அதற்காகத் தானே. பிரபாகரன் சில வேளை செத்தால் அப்போது ஏற்படும் இடைவெளி, அலலது போராட்டத்தில்  ஒரு மந்தகதியான நிலைமை தோன்றினால்   நாங்கள் முழுமையாக இறங்கும் முயற்சி தோன்றலாம். இன்று போராட்டம் திசை திரும்பிய நிலையில் அதனை நிறுத்தி விட்டுத் தான் திருப்பி சரியான வழியில் இயக்க வேண்டும்.

அப்படியென்றால் இன்றுகூட உங்களின் பொது எதிரியாக...?

என்றென்றைக்கும் எங்களின் பொது எதிரி ஸ்ரீ லங்கா இராணுவம் தான்.

இராணுவமா? அரசா?

அரசு தான். 

ஆனால் இன்று அந்த அரசுக்கும் இராணுவத்துக்கும் அல்லவா ஆதரவு வழங்கி வருகிறீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இருப்பதால் நாங்கள் அரசு சார்பானவர்களா?

ஆனால் அதன் மூலம் இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று கூறினால்?

நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதில்  ஒன்றும் தவறில்லை. அந்த ஆசனங்களைப் பயன்படுத்துவதில் தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது. அதனை எமது உரிமைக் குரலெழுப்பு வதற்காகப்  பயன்படுத்துவதை விட்டு விட்டுத் தமது சொந்த மகிழ்ச்சிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்துவது தான் பிரச்சினைக்குரியது. எங்களுக்கு இருக்கிற இரத்தக்கொதிப்போ உணர்வோ எமது பாராளுமன்ற ஆசனங்களில் உள்ளவர்களுக்கு இல்லைத்தான். அது குறித்து எமது கட்சியில் பிரச்சினைகள் உண்டு.

நீங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதன் பின்...?

இல்லை, நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பவில்லை. ஜனநாயக வழிக்கு வந்தால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதாகக் கூறியபோது பழைய ஆயுதங்களை வேண்டிக் கொண்டு புதிய ஆயுதங்களை ட்ரக்டர் ட்ரக்டராக அள்ளித் திணித்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் ஜனநாயக வழிக்கு வந்துவிட்டதாகக் கூறியபோது அவர்களும் ஆயுதங்களை அள்ளித் தந்தார்கள். பின் எப்படி ஜனநாயக வழிக்கு வந்ததாகக் கூற முடியும். நாங்கள் விரும்பினாலும் இந்த அரசுகள் எங்களை விடப்போவதில்லை. இன்று ஆயுதங்களை பாசிசத்துக்கு எதிராகவும், அதே வேளை பொது எதிரியுடன் தந்திரோபாய ரீதியிலான உறவையும் கொண்டியங்கி வருகிறோம்.

அவ் ஆயதங்கள் நீங்கள் குறிப்பிடும் எதிரிக்கு எதிராகத் திருப்பப்படாமல் போராட்டத்துக்கு எதிராக திருப்பப்படுவதாக அல்லவா குற்றம் சுமத்தப்படுகிறது?

எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய பொறுப்பை புலிகள் ஏற்க வேண்டும். அப்படிக் கொண்டு வந்து விட்டு அரசோடு நிற்கிறாhகள்; என்கின்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு புலிகளுக்கு தார்மீக உரிமை கிடையாது.மீண்டும் தமது பிரதேசங்களில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தமிழ் இயக்கங்கள் தயாரானால் அதனைப் புலிகள் அனுமதிப்பார்களா? தம்மால் துரத்தப்பட்ட முஸ்லிம்களையே திருப்பி அழைக்காத புலிகள் எப்படி ஏனைய இயக்கங்களை அனுமதிப்பர்?  டெலோவை புலிகள் வேட்டையாடத் தொடங்கிய போது டெலோ அரசோடு இருக்க வில்லை. மக்களோடு இருந்த காலத்தில் தான் புலிகள் நசுக்கத் தொடங்கினர். ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் அதே நிலைமை தான். இந்த நிலைமையில் நாங்கள் மக்களோடு நிற்பதற்கு ஒரு பிரதேசம் வேண்டியிருக்கிறது. தற்காலிகமாக இராணுவம் நிலை கொண்டிருக்கிற பிரதேசத்தில் நாங்கள் நிலை கொண்டிருக்கிறோம் . அவ்வளவு தான்.

சரி, புலிகளின் மீதான அழித் தொழிப்பு நடவடிக்கைகளில் கழகமும் ஈடுபட்டு வருவதாகச் சொன்னால்..?

நாங்கள் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அழித்தொழிப்பில் ஈடுபட்டதில்லை. அவர்களிடம் இருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்கான சந்தர்ப் பங்களில் மாத்திரம் தான் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கப்பட்டுள்ளது.

இராணுவ சோதனை நடவடிக்கை களில் சேர்;ந்து கூட்டாக செயற்படுகிறீhகள் அல்லவா?

சுற்றி வளைப்புகளுக்கு ஒரு போதும் கழகம் போவது கிடையாது. ஆனால் நொச்சிமோட்டை, தாண்டிக்குளம் போன்ற பிரதான இராணுவ சோதனை சாவடிகளில் கழக உறுப்பினர்கள் இருத்தப்பட்டுள்ளனர்.  அதற்கான காரணம் மக்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு சிரமமேற்படாமல் அனுப்ப வேண்டியுள்ளது. அவர்கள் புலிகளின் பிரதேசத்திலிருந்து வரும் எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். புலி வருது புலி வருது என்று தான் பார்க்கிறார்கள். சில வேளைகளில் புலிகளும் வந்திருக் கிறார்கள். பிடிபட்ட எத்தனையோ புலிகளைக் கூட நாங்கள் வெளியில் எடுத்து விட்டிருக்கிறோம். அதனைச் சொன்னால் வெளியுலகம் நம்பாது. புலிகள் எங்களை துரோகிகள் என்று தான் முத்திரை குத்தி வைத்துள்ளது.

உங்கள் இலக்கு எனக் கூறும் தமிழீழத்தை பாராளுமன்ற வழிமுறைக் கூடாக அடைய முடியுமென்கின்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா?

பாராளுமன்றங்களுக்கூடாகவும் இணக்கங்கள் காணப்படலாம். அதற்கு உலகில் ஏகப்பட்ட விடுதலைப் போராட்ட அனுபவங்களும் உண்டு. ஆனால் ஆசியச் சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அனைத்து உரிமைகளையும் கொண்ட தமிழீழத்தை இந்தப் பாராளுமன்ற வழிமுறைக்கூடாகப் பெறமுடியாது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற சந்தேகம், கைது, தடுப்பு, சித்திரவதை என்பனவற்றுக்கு காரணமாகவுள்ள அவசரகால சட்டத்துக்கு உங்கள் இயக்கம் ஆதரவு அளித்து வந்தது  பற்றி...?

எந்தக் காலத்திலும் ஆதரவு வழங்கவில்லை. ஈபி.டி.பி. மட்டும் தான் தமிழ் இயக்கங்களில் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறது. மற்றும்படி கூட்டணி எதிர்த்து வாக்களிக்கிறது.

அவசரகாலச் சட்டம் தொடர்பான கழகத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களை நசுக்கப் பாவிக்கப்படும் இந்தச் சட்டத்துக்கு தமிழ் எம்பி.க்கள் ஆதரவளிப்பது பெரும் முட்டாள்தனம்.

இந்த அரசாங்கம் பதவியேற்ற முதல் இருவருடங்களாக கழகம் ஆதரவளித்துத் தானே வந்திருக்கிறது?

கழகத்திலுள்ள சில மிதவாதப் போக்கின் விளைவாகவும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அந்தளவுக்கு கழகத்தின் அரசியல் சீரழிந்துள்ளதாகக் கூறலாமா?

அரசியல் பிரிவுக்குள் சில முரண்பாடுகள் உண்டு தான். ஆனால் அவை குறித்து மேலதிகமாகப் பேச விரும்பவில்லை.

சம்பவமாகக் கூறாமல் சிக்கலை மாத்திரம் கூறுங்களேன்?

நாங்கள் பாசிச இயக்கம் இல்லையே. ஜனநாயக இயக்கம். அந்த விதத்தில். மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் எமது இயக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் சில முரண்பாடுகளை தோற்றுவித்து விடுகின்றன.

இயக்கத்தில் அரசியல் விவாதங் களுக்கான வழிகள் இருக்கின்றன அப்படியா?

ஆம், அதன் காரணமாகத் தான் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக வெளியில் பேசப்படுகிறது.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் தான் இருக்கிறது என உலகத்துக்கு பறை சாற்றவென வடகிழக்கில் பொதுவாக தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். இந் நிலைமையில் எதிர்வரும் உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட இருக்கிறீர்களே?

சகல தேர்தல்களும் தவறானவை என்பதல்ல. அதனை நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது. அரசு எங்கும் சிவில் நிர்வாகத்தை அப்படியே நடத்தப்போவதில்லை. அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

வடகிழக்கில் சிவில் நிர்வாகம் இல்லையென்பது ஒரு போதும் கழகத்தால் அம்பலப்படுத்தப்பட்டதில்லையே?

நாங்கள் இருக்கின்ற பகுதிகளில் மாத்திரம் தான் நாங்கள் பதில் சொல்லலாம்.

ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என அழைக்கப்படும் உங்கள் இயக்கம் வவுனியாவுக்கு மட்டும் தான் பொறுப்பு சொல்லுமா?

மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் எமக்குச் சேவை செய்ய அனுமதி கேட்டோம் அனுமதி தரவில்லை. ஆனால் வவுனியா மக்கள் தந்திருக்கி றார்கள். அங்கும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலும்  மக்களுக்குச் சேவை செய்கிறோம்.

அரசின் தீர்வு யோசனை தொடர்பாக..?

வரலாற்றில் பல தலைவர்களைப் போல சந்திரிகாவும் பொதி எனும் பேரில் ஏற்க முடியாத யோசனையை முன்வைத்திருக்கிறார்.

ஆனால் நீங்கள் ஆதரவளிப்பதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தனவே?

தீர்வு முயற்சிக்குத் தான் ஆதரவளித்தோமேயொழிய தீர்வுப் பொதிக்கு அல்ல. அதற்கு நாம் ஆதரவளிக்கவில்லை.

நன்றி - சரிநிகர் (மே 1999)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates