Headlines News :
முகப்பு » » மத்திய- ஊவா மாகாணங்களை ஐக்கிய நிர்வாக அலகுகளாக மாற்ற முடியுமா? - அருள் கார்க்கி

மத்திய- ஊவா மாகாணங்களை ஐக்கிய நிர்வாக அலகுகளாக மாற்ற முடியுமா? - அருள் கார்க்கி

மலையக மக்கள் என்ற தேசிய இனமானது இலங்கையில் மிக முக்கிய வரலாற்று பதிவுகளை கடந்து வந்திருக்கின்றது. அண்மைய ஆய்வுகளின்படி மலையக மக்களின் சனத்தொகையானது 10 இலட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த புள்ளிவிபரத்தின் படி இந்த 10 இலட்சம் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலேயே வாழ்கின்றனர். 

மூலம் : இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் 2012.
இலங்கை புள்ளிவிபர மதிப்பீடு திணைக்களத்தின் இத்தரவுகளின் படி மொத்த இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் 75.46% சதவீதம் நிரந்தரமாக வாழ்கின்றனர். எனவே இவ்விரு மாகாணங்களையும் மையப்படுத்தி மலையக தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார,பொருளாதார, பண்பாட்டு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விகிதாசாரத்தின் அடிப்படையில் பாதாளத்தை நோக்கிச் செல்லும் ஒரு இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நிலமும் மொழியுமே ஆதாரங்கள். அந்த ஆதாரங்களைப் பற்றி இனத்தை ஸ்தீரப்படுத்துவதில் காணப்படும் விரிசல்களை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, ஊவாவும் மத்தியும் நிர்வாக ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் பிரதிநிதித்துவ அரசியலை தக்கவைப்பதோடு, நிர்வாக ஸ்தீர தன்மையையும் இறுக்கமாக்கலாம். ஈழத்தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் இணைந்த வடக்கு கிழக்கு கோட்பாடு செல்வாக்குச் செலுத்துவதையும் நிலம் சார்ந்து ஒதுக்கீடுகளைக் கோருவதையும் இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஆனால், இங்கு நாம் பிரஸ்தாபிப்பது அப்படியல்ல. இதை தனிநாட்டு கோரிக்கையோடு எவரும் ஒப்பிட்டு பார்த்து விடல் கூடாது. மலையக மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை என்ற அடிப்படையில் அதை ஐக்கியப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வாக முறை மூலம் தீர்க்க முடியுமா என்ற ஒரு தேடலின் விளைவாகவே இக்கட்டுரை வரையப்படுகிறது. 

இவ்விரு மாகாணங்களுக்கும் புறம்பாக மலையக மக்கள் கொழும்பு (3.2%), களுத்துறை (2.8%), இரத்தினபுரி (7.5%) கேகாலை (4.9%) என்றவாறான இனப்பரம்பலைக் கொண்டுள்ளனர். 

அதேபோல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் சிறியளவில் பரந்து வாழ்கின்றனர். இவ்வனைவரையும் ஒரு புள்ளியில் குவிமையம் கொள்ளச் செய்வதற்கு உறுதியான கட்டமைப்பு ஒன்று ஊவா மற்றும் மத்திய மாகாணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். மேலோட்டமான தொடர்புகளும் சுயநல அரசியல் கலாசாரமும் மக்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாக, பிழையான அரசியல் அணுகுமுறைகளால் பிரதேசவாதமும் இளைய தலைமுறையினரிடம் விதைக்கப்பட்டிருக்கின்றது. வாக்கு அரசியலிலும் சுரண்டல் போக்குடைய தொழிற்சங்க கட்டமைப்புகளாலும் மக்களை ஐக்கியப்படுத்த முடியாது என்பது மலையக அரசியல் வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். இன்று நிலைமை இளைஞர்களை இலக்காக வைத்து நுண்ணரசியலாகவும் சலுகைகளை வழங்குவதாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றது. 

ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் எவ்வாறான தொடர்புகளை சமகாலத்தில் பேணுகின்றன என்ற கருத்தியல் விமர்சன ரீதியாக நோக்கப்பட வேண்டியது. அதே போன்று காத்திரமான ஒருமைப்பாட்டுக்கு இடையூறான காரணிகளும் விவாதிக்கப்பட வேண்டும். 

அரசியல் தொழிற்சங்க உறவுகள் 
முக்கியமாக அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்த இரு மாகாணங்களும் எவ்வாறான பரிமாற்றங்களை செய்கின்றன என்பது குறிப்பிட்டுக்கூற வேண்டியது அவசியம். உதாரணமாக மலையக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் மத்திய மாகாணத்தையே தளமாகக் கொண்டுள்ளன. வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு பேர் போன மலையக அரசியல் வரலாற்றில் ஊவா மாகாணம் வாக்காளர்களையும் சந்தாதாரர்களையும் மட்டுமே வழங்கி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர் தெரிவு பதுளை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் இனப்பரம்பல் குறைந்த மொனராகலை (0.5%) மாவட்டம் அநாதையாகவே உள்ளது. 

ஊவா மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கட்சிகள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டும் பலவீனப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. குறிப்பாக மத்திய மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட கட்சிகள் மற்றும் நபர்களால் ஊவா கட்சிகள் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் மத்திய மாகாண தொழிற் சங்கங்களுக்கும் ஊவா மாகாண சந்தாதாரர்களும் கணிசமாக பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். இவ்வாறு ஆட்சேர்ப்பில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்ட ஊவாவுக்கு அண்மைக்காலமாகவே அபிவிருத்திப்பணிகள் விரிவடைந்திருக்கின்றன. 

தேர்தல் காலங்களில் ஊவாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேட்பாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இது எதேச்சதிகார அரசியலின் மற்றொரு முகம். ஊவாவில் அரசியல் ஆளுமைகளை கட்டியெழுப்ப மலையக கட்சிகள் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்பதும் ஊவாவில் தோன்றிய அரசியல் தலைவர்கள் நாயக பக்தி, சுயநலபோக்கு காரணமாக கட்சிகளின் தலைமைகளிடம் ஊவா மக்களுக்காக போராடவில்லை என்பதும் வெளிப்படை.

நிர்வாக உறவு

அரச நிர்வாக கட்டமைப்பில் ஊவாவும் மத்திய மாகாணமும் இரு வேறுபட்ட நிர்வாக அலகுகள். ஐந்து (05) மாவட்டங்களையும் பொதுவாக உள்ளடக்கி இப்பெரு நிலப்பரப்புக்கு இதுவரை எந்தவொரு தேசிய வேலைத்திட்டமும் பரிந்துரைக்கப்படவில்லை. இதன் பிரதான காரணம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திப்பணிகள் ஆகும். நுவரெலியா மாவட்ட தமிழர்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகள் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்குக் கிடைப்பதில்லை. 

தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படும் மலையக தேசியம் கருத்து ரீதியாக மட்டுமே உள்ளமையும் நிலங்களை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் இதற்குக் காரணிகள். அண்மையில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டபோது அவை பெரும்பாலும் மத்திய மாகாணத்தை தழுவியே இருந்தமை கவனிக்கத்தக்கது. பதுளை மற்றும் மொனராகலைக்கான நிர்வாக இலகுப்படுத்தல்கள் சார்ந்த முன்மொழிவுகள் குறைவாகவே சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன. 

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது போன்று பதுளை மாவட்டத்திற்கும் நிர்வாக விரிவுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லைப் பிரதேச செயலாளர் பிரிவு சுமார் 50,000 சனத்தொகையை கொண்டது. இது போன்ற பாரிய சனத்தொகையை ஒரு பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கும் போது ஏற்படும் அசாத்திய தன்மை பாரதூரமானது. எனவே இவை தொடர்பான தீர்வுக்கு கூட்டுமுயற்சிகள் அவசியம். 

கல்வி இலக்கியம் தொழில் உறவுகள் 
ஊவா மாணவர்கள் பாடசாலைக் கல்விக்காகவும் உயர்கல்விக்காகவும் மத்திய மாகாணத்தை தெரிவு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து ஓய்ந்திருக்கின்றது. காரணம் மத்திய மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் பாடசாலைகள் கல்வியில் உயர்நிலையை அடைந்திருப்பதும் ஊவா தமிழ்க்கல்வி பின்னடைந்திருப்பதுமே ஆகும். இதற்கு அரசியல் சுயநலமும் அசமந்தப்போக்குமே அடிப்படைகள். ஊவாவையும் மத்தியையும் ஒன்றிணைத்து கல்வி அபிவிருத்திகளை வகுக்க கட்டமைப்பு ஒன்று இல்லாததே இங்குள்ள இடைவெளியாகும். 

குறிப்பாக இரு மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை,பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழக கண்டி பிராந்திய நிலையம் மற்றும் அட்டன் கற்கை நிலையம், நுவரெலியா தொழிநுட்ப கல்லூரி போன்ற குறிப்பிடத்தக்க உயர்கல்வி / தொழிற்கல்வி நிறுவனங்களின் வகிபாகத்தை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டங்கள் அவசியம். அதனை இணைந்த ஊவா மத்தியை தளமாகக் கொண்டு முன்னகர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது. நிர்வாக வரையறைகளுக்கு அப்பாற்பட்டு விஷேட வேலைத்திட்டங்கள் மூலம் அரச அனுசரணையில் இதனைச் சாத்தியமாக்குவதே முக்கியமானது. இதற்கு மாகாண சபைகளையும் உள்ளூராட்சி சபைகளையும் முதற்கட்டமாக ஒருங்கிணைக்கலாம். அதே போன்று விகிதாசார ஒதுக்கீடுகளையும் முன்வைத்து கொள்கை ரீதியாக கூட்டமைப்புகளையும் உருவாக்குதல் சிறந்தது. 

மேலும் இலக்கிய பண்பாட்டு ரீதியாகவும் இரு மாகாணங்களையும் உள்ளடக்கி வேலைத்திட்டங்களை சாத்தியமாக்குவதும் இனத்தின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். இவ்வாறான நகர்வுகள் மூலம் வெளிமாவட்ட மலையக மக்களும் நம்பிக்கையுடன் தமது பிரதேசத்தில் ஸ்தீரமாவதற்கு வாய்ப்பு ஏற்படும். 

கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த இளைஞர்கள் சிவில் அமைப்புகளாக நிறுவனமயப்படுத்தப்பட்டு விவாதிக்க வேண்டியது இதன் சாராம்சமாகும். மேலோட்டமான பார்வைகள், அரசியல் தொடர்புகள் மட்டுமே மலையக தேசியத்தை கட்டியெழுப்பி விடாது. அதற்காக அனைத்து துறைகளிலும் முயற்சிப்பதே மலையக தேசியத்தை வலுப்படுத்தும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக ஒருங்கிணைப்புகள் ஏற்படுத்தப்படுவது அவசியம். அது இவ்விரு மாகாணங்களையும் தழுவி அமைவது பலம்மிக்கதாகவும் சமூக அபிவிருத்தியில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இவ் யோசனை குறித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு புத்தி ஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates