Headlines News :
முகப்பு » , , , » "சாதி" சொல்லும் சேதி - கவிஞர் காசி ஆனந்தன்

"சாதி" சொல்லும் சேதி - கவிஞர் காசி ஆனந்தன்

"சாதிய வசைபாடல்" என்கிற தலைப்பில் என்.சரவணன் எழுதிய கட்டுரை இரு பகுதிகளாக "காக்கைச் சிறகினிலே" சஞ்சிகையில் வெளிவந்தது. அக்கட்டுரை சமீபத்தில் வெளியான என்.சரவணனின் "தலித்தின் குறிப்புகள்" நூலிலும் இடம்பெற்றிருக்கிறது. யூன் மாத "காக்கைச் சிறகினிலே" இதழில் அக்கட்டுரையின் மீதான தனது கருத்துக்களை இப்போது பதிவு செய்துள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
'காக்கைச் சிறகினிலே ' இதழில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெளிவந்த 'சாதியம்' குறித்த சரவணனின் எழுத்தாக்கம் காட்டமானது.

'சக்கிலியன்' என இழிவுபடுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் போர்க்களக் குரலாய் வெடித்த சங்கொலி.

மறைமலையடிகள் வேதகாலத்தில் ஆரியரால் உருவாக்கப்பட்டது சாதியம் என்பதை மறுக்கிறார். வியாசர். விசுவாமித்திரர் போன்ற தமிழர்களான முனிவர்களும் இணைந்து உருவாக்கிய மறையே வேதங்கள்' என்கிறார் அவர்.

'சாதியம் ' ஆரியர்களின் உருவாக்கம் என்பதை ஆய்வறிஞர் குணாவும் ஏற்பதாயில்லை. சாதியம் பழங்குடிகளான தமிழரிடமே தோன் றிற்று என்கிறார் குணா.

ஆரியர்கள் இந்தியாவில் கால்வைத்த காலம் கி.மு. 1500. வேதங்கள் தோன்றிய காலம் கி.மு. 1200. கி.மு. 1000இல் 'பிராமணங்கள்' ஆக்கப்படுகின்றன. 500 ஆண்டுகளின் பின்பு கி.மு. 500இல் வாழ்ந்த புத்தர் பிராமணங்களில் நால்வகைச் சாதிப் பிரிவினை இருப்பதை எதிர்த்தார் எனப் பேரறிஞர் அம்பேத்கர் தனது 'புத்தரும் அவர் தம்மமும்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால் - இதே காலத்தில் ஒரு பழந்தமிழர் வழித் தோன்றலான புத்தரின் தந்தையார் சுத்தோதனர் 'பிராமணர்களை அரவணைத்து வாழ்ந்தார் என அதே நூலில் பெருந்தகை அம்பேத்கர் அவர்கள் கூறுவது ஆய்வுக்குரிய செய்தி ஆகிறது.

இந்தியாவை (பழைய நாவலந்தேயம்) இரு பிரிவுகளாக்கி ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டும்.

வடஇந்தியாவையே ஆரியர்கள் ஆரியமய மாக்கினார்கள். அப்பகுதி 'ஆரியவர்த்தம்' என அழைக்கப்பட்டது. அங்கேதான் நால்வகைச் சாதிநெறி பற்றிப் பேசப்பட்டது. வட நாவலந் தேயத்தில் வாழ்ந்த பழந்தமிழர்கள் ஆரியர்களின் மொழியோடு கலந்து வடதிராவிடர்களானதுடன் சாதியத்தை வடிவமைப்பதிலும் இவர்களே பெரும் பங்காற்றினார்கள்.

'நான்கு வருணங்கள் - பலவகையான கலப்படச் சாதிகள் பற்றியெல்லாம் கூறப்படுபவை ஏட்டுச் சுரைக்காயே அன்றி வேறில்லை. ஆரிய வர்த்தத்தில் மட்டுமே நால்வருணம் இருந்தது. தென் இந்தியாவில் நால்வருணம் சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருந்ததே ஒழிய நடைமுறையில் இல்லை ; என்கிறார் ஆய்வறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார்.

ஒரு பிராமணன் கி.பி. 70இல் சத்திரியன் ஆகிறான். நால்வருண விதிகளின் படி அவன் சத்திரியன் ஆவது அவனைத் தாழ்வுபடுத்துவ தாகும். இருப்பினும் புஷ்ய மித்திர சுங்கன் அரசனாகிறான். அவன் காலத்தில்தான் தமிழர்கள் பெரிதும் வெறுத்துப் பேசுகின்ற மனு தனது மனுதரும சாஸ்திரத்தை எழுதுகிறான். இந்நூலில் மனு தமிழர்களைச் 'சத்திரியர்' என்கிறான். (மனு 10.4333) மனுவே தமிழன்தான் என்கிறது பாகவத புராணம்.

கி.பி. 1ஆம் நூற்றாண்டில் ஆரியர்கள் மெல்லமெல்ல இந்தியாவின் (நாவலந் தேயம்) தென்பகுதியான தெக்காணத்திலும் நுழையலா யினர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் தென்னாட்டின் இருண்ட காலமாகவே கருதப்படு கிறது. இக்காலத்தில் தெற்கில் வாழ்ந்த தமிழரில் பலரும், வடநாவலந்தேயத்தின் பழந்தமிழர் மொழிமாறி இனம்மாறி வடதிராவிடராய் மாறியதுபோல் தெலுங்கராயும், கன்னடராயும், மலையாளியராயும் மொழி-இனம் மாறித் தென் திராவிடராயினர்.

சங்க காலத்தில் 'சாதியம்' இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இல்லை. காப்பிய காலத்திலும் அதைத் தொடர்ந்த தேவார காலத்திலும் கூடச் சாதியம் இருந்ததில்லை .

பிரமன் பிறப்புக்குரியவன் என்பதால் அவனை வைத்து ஓர் உடலமைப்பில் 'சாதியம்' தோன்றிய நான்கு இடங்கள் பற்றிக் கதை பண்ணி னார்கள். தலையில் இருந்து பிராமணனும் தோளில் இருந்து சத்திரியனும் இடுப்பில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்த தாகக் கதை.

தேவாரகாலத்தில் சிவனுடைய தலையில் ஒரு சூத்திரனான வேடன் கண்ணப்பன் காலை வைத்து சிவனின் கண் இருந்த இடத்தை அடை யாளம் கண்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. தேவாரத்தில் வரும் இந்நிகழ்வினை சாதியத்துக்கு எதிரான ஒரு பெரும் வெடிப்பாகவே நான் பார்க்கிறேன்.

தமிழ் காத்த நாயன்மாரின் தேவார காலத்தை ஒட்டிய பல்லவர்முடியாட்சியின் போதே சாதியம் தமிழ் நாட்டில் தழைத்தோங் கிற்று.

உலகப் புகழ்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மன்னர்கள் நினைத்திருந்தால் 'சாதியத்தை' உடைத்து நொறுக்கிப் போட்டிருக்க முடியும். தமிழனைத் தமிழனே காலின் கீழ் மிதித்துக் கொண்டிருந்த காலத்தில் ராஜராஜனும் ராஜேந்திர னும் உலகை வென்றார்கள் எனத் தோள் தட்டுவதில் எந்தப் பெருமையும் இல்லை.

மராத்திய மக்களும் பழைய தமிழர்களே. இந்தியாவின் வடதிசை அனைத்தும் வாழ்ந்தவர் கள் பழைய தமிழர்களே எனக் கூறியவர் மதிப்புக்குரிய பேரறிஞர் அம்பேத்கர் ஆவார். ஆனால் அவர் காலத்தில் மகர் என்னும் தாழ்த்தப் பட்ட மக்களின் அவலம் கண்டு மதம்மாறிப் புத்தசமயத்தினர் ஆனார் அவர்.

மராத்தியத்தை ஆண்ட வீரசிவாஜி சூத்திரர் ஆவார். அவரும் பழைய தமிழரே. அவர் ஆட்சிக் காலத்தில் சாதியத்தை வேரோடு பிடுங்கி எறிய அவர் மறந்தார். விளைவை மாந்தநேய மாமறவர் அம்பேத்கர் சுமக்கவேண்டியதாயிற்று.

சாதியத்தின் உருவாக்கத்திலும் அதை வேலியிட்டுக் காத்ததிலும் தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு என்பதற்கான சான்றுகள் வரலாறு நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன.

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் காலம் ஆரியர்கள் தமிழர் வரலாற்றில் அவ்வப்போது நிகழ்த்திய கொடுமைகளை நான் மூடிமறைக்க வில்லை .

ஆனால் -

இறுமாப்போடு மேடைகளில் ஆரியத்தை எதிர்த்து இடிமுழக்கமிடும் தமிழர்களைப் பார்த்து நான் கேட்பது இதுதான்.

தமிழ்நாட்டில் தமிழன் சேரிக்கு நெருப்பு வைப்பவன் ஆரியனா? தமிழனா? என்னுடைய சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டவனைப் புதைக்க விடமாட்டேன் என்று எகிறிக் குதிக்கிறவன் ஆரியனா? தமிழனா? தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்டவனுக்குத் தனிக்கோப்பை தருகிறவன் ஆரியனா? தமிழனா? திருவிழாவில் கோயில் தேரின் வடத்தைத் தாழ்த்தப்பட்டவன் தொடக் கூடாதென்ற வீச்சரிவாளோடு திமிறி வெறியாடு கிறவன் ஆரியனா? தமிழனா?

இனி,

'சக்கிலியன்' எனத் தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் இன்றும் தாழ்வாக அழைக்கப்படு வது பற்றி 'காக்கைச் சிறகினிலே' இதழில் வந்த சரவணன் கட்டுரைக்கு வருகிறேன்.

செருப்புத் தைக்கும் தொழிலாளிகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்த இவர்களை 'அருந்ததியர்' என வரலாறு செப்புகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த இவ்வகுப்பினரில் ஒரு சிறு குழுவினர் தூய்மைப்பணியாளராக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

வாளிகளில் மலம் கழிக்கும் கழிப்பறைகள் இருந்த காலத்தில் தெலுங்கு பேசிய இத்தொழி லாளரிடமே அவ்வாளிகளையும் கழிப்பறையை யும் தூய்மைப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. இவர்களில் இருபது குடும்பங்கள் மட்டக்களப்பில் இப்பணியில் ஈடுபட்டிருந்த போது இவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தோழர் விக்கிரமசிங்க, தோழர் பீட்டர் கௌமன் ஆகியோர் தலைமையில் இயங்கிய இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் மட்டக் களப்புக் கிளைப் பொறுப்பாளராக இருந்த, இன்றும் நான் நெஞ்சில் வைத்துப் போற்றும் ஒரு மலையாளியான மறைந்த தோழர் கிருஷ்ணக் குட்டி, மட்டக்களப்பில் தங்கி வாழ்ந்த இத் தூய்மைப்பணியாளரின் குடியிருப்பில் ஒரு விருந்துக்கு என்னை அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது.

ராமன் தான் அவர் களுக்கெல்லாம் அப்போது தலைவனாக இருந்தான். அவன் வாயில் எப்போதும் கள் வாடை வீசிக்கொண்டே இருக்கும். பணி முடித்து அவன் வீடு திரும்பும் வழியில் எங்காவது அவனைப் பார்க்க நேர்ந்தால் ஆங்காங்கே அவன் உடையில் அப்பியிருக்கும் மலத்தின் வாடையும் கூடவே இருக்கும்.

ஊரைத் தூய்மைப்படுத்தும் உயரிய பணியை மேற்கொண்டிருந்த ராமன் வீட்டில் உணவுண்டு மகிழ்ந்த நாள் இனியது. இன்றும் அந்த நினைவில் ஊறித் திளைக்கிறேன்.

ஆயிரம் பேர் கழித்த மலத்தை வாளியில் அள்ளிச் சுமப்பதும் - அந்த வாளிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவதும் 'கொடுமையான தொழில் என்னும் உணர்வு ராமனோடு பழகிய காலத்தில் என் நெஞ்சில் ஆழப்பதிந்தது.

சிங்களச் சிறைச்சாலைகளில் ஐந்து ஆண்டு கள் நான் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் வெளி யே யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலின் உள்ளே தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதை அன்றிருந்த தமிழர்களின் தலைவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் அவர்கள் முன்னின்று தடுத்ததாக வெளிவந்த செய்தி எனக்குச் சினமூட்டியது.

'அடங்காத் தமிழர் முன்னணி' என்னும் அமைப்பின் தலைவராக இருந்த சுந்தரலிங்கனார் பெரிய படிப்பாளி. இன்று பிரித்தானியாவின் பேரரசியாக விளங்கும் எலிசபெத் அரசியாருக்கு கணிதம் கற்றுத்தந்த ஆசிரியர். தமிழீழம் தனி நாடாக வேண்டும் என்னும் கருத்தினை வரலாற்றில் முதன்முதல் விதைத்தவர் சுந்தரலிங்கம் அவர்களே என்பதையும் மறப்பதற்கில்லை.

ஆனால் -

சாதி வெறிகொண்டு அவர் கூத்தாடிய போது மோதி எதிர் நின்று அவரைச் சாட வேண்டும் என்று நான் கருதினேன். சாட்டை அடியாகச் சிறைச் சாலையில் இருந்தே அவருக்கு ஓர் அஞ்சலட்டை அனுப்பிவைத்தேன்.

இறத்தல் - அந்தர் - தொன் என்பதெல்லாம் பழைய நிறை அளவுகள் என்பதை இன்றிருப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லை . 112 இருத்தல் ஓர் அந்தர் ஆகும். சாதி வெறியாடிய சுந்தரலிங்கனா ருக்கு இப்படித்தான் நான் என் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டினேன்:
'சுந்தர்
உன் மண்டையில்
கல்வி
ஒரு அந்தர்;
களிமண்
ஒரு அந்தர்;
உன்னைச்
சும்மாவிடமாட்டார்
மாவிட்டபுரக்
கந்தர்!'
பின்பு ஒருநாள் சுந்தரலிங்கனாரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது 'உங்கள் தமிழ் நன்றாக இருந்தது' என்று சிரித்துக்கொண்டே அவர் கூறியது நினைவிருக் கிறது.

சிங்களச் சிறைச்சாலைகளில் வாழ்ந்த காலத்தில், விடுதலையானதும் யாழ்ப்பாணத்தில் வாழும் சாதி வெறியர் சிலருக்கு உறைக்கும் வகை யிலான ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் என்னும் முடிவோடு சிறைக் கதவுகள் திறக்கும் நாளுக்காகக் காத்திருந்தேன்.

என் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி யாழ்ப்பாணம் சென்று சாவகச் சேரியில் தூய்மைப்பணியாளரோடு இணைந்து வீடுவீடாகக் கழிப்பறைத் தூய்மைத் தொண்டில் வெறிகொண்டு நான் ஈடுபட்டேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் களிலேயே சிலர் மறைவாக என்னை எதிர்த்து, இப்போராட்டத்தின் போது தங்களுக்குள் பேசிக்கொண்டது எனக்குத் தெரியும்.

குழிக் கழிப்பறைகள் வந்த பின்பு மலவாளி தூக்கும் - தூய்மைப்படுத்தும் கொடுமை இப்போது இல்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மலவாளி கழுவித் தூய்மைப் படுத்தும் போராட்டத்தில் நேரில் ஈடுபட்டபோதுதான் அது எத்தனை துன்பமான தொழில் என்பதை என்னால் உணர நேர்ந்தது.

பிடி இல்லாத பழைய வாளிகளைச் சில வீடுகளில் கழிப்பறையில் வைத்திருந்தார்கள். வாளியின் விளிம்பில் கையை வைத்துத்தான் அந்த வாளிகளைத் தூக்கவேண்டும். வாளியின் விளிம்பைப் பற்றியிருக்கும் கைவிரல்கள் சில வேளைகளில் அவ்வாளியின் உள்ளே நிரம்பி இருக்கும் மலத்தில் தோய்ந்துவரும். தூய்மைப் பணியாளன் இப்படித்தான் அந்தத் தொழிலில் ஈடுபடுகிறான். போராட்டத்தில் ஈடுபடும் நான் கையுறை போட்டுக் கொண்டா வாளியைத் தூக்கமுடியும்? அவனைப் போலவே - அந்த உயரிய தொழிலாளியைப் போலவே மலவாளி களைத் தூக்கினேன். கழுவினேன். தூய்மைப்பணி யாற்றினேன்.

சரவணன் 'காக்கைச் சிறகினிலே' இதழில் எழுதிய கட்டுரை தந்த உந்துதலால் இச்சாதி எதிர்ப்புச் சமரை இங்கே பதிவு செய்கிறேன்.

தமிழீழத்தில் மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ - மன்னாரிலோ வவுனியாவிலோ - அம்பாறையிலோ சாதி வெறி எந்தக் காலத்திலும் பெரிய அளவில் தலைவிரித் தாடியதில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சிலரிடம் மட்டுமே தறிகெட்ட இக்கொடுமை நின்று நிலவிற்று.

எழுத்தாளர் டானியேல் 'பஞ்சமர்' நாவலில் எழுதிய பழையகால வாழ்க்கை என்றோ தொலைந்துபோன பழைய கதை என்பதையும் - மாபெரும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வருகைக்குப் பின்பு தமிழீழத்தில் 'சாதியம்' முற்றுமுழுதாய் எரிந்து சாம்பலாயிற்று என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை .

முன்பே தமிழீழம் சாதியத்தை ஓரளவு முறித்துப் போட்டிருந்தது என்பதே உண்மை.

தமிழ் நாட்டில் 'சாதிக்கட்சி' என்று வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் 'சாதிக் கட்சிகள் உண்டு. தமிழீழத்தில் சாதியின் அடிப்படையில் கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைவர்களின் பெயர்களே சாதியைச் சமந்து நின்றதைப் பார்த்தோம். காமராஜ நாடார், ராஜகோபாலாச்சாரியார், ராஜா அண்ணாமலைச் செட்டியார், ராமசாமிப் படை யாட்சி, முத்தையா முதலியார், ம.பொ.சிவஞான கிராமணியார் என்றுதான் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டின் தலைவர்கள் அழைக்கப்பட்டார் கள். பெரியார் அவர்களே இராமசாமி நாயக்கர் என்று தன் பெயரைப் பயன்படுத்திய காலமும் இருந்தது. இன்றுகூடத் தமிழ் நாட்டில் ஓர் அமைப்பின் தலைவர் தன் பெயரைப் பெரிய எழுத்துக்களில் சுவரில் மதிப்பறையனார் என்று எழுதச் செய்து மகிழ்கிறார். இந்த நிலை தமிழீழத்தில் என்றும் இருந்ததில்லை.

தமிழ்நாட்டில் 339 சாதிகள் உள்ளன. சிங்கள சிறீலங்காவில் - சிங்களவரிடையே 39 சாதிகள் உள்ளன. தமிழீழத்தில் 15 சாதிகளே உள்ளன. தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த சாதிகள் இன்று தரையில் வேரறுந்து வீழ்ந்த பட்டமரங்களாகவே உயிரிழந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.

குமுறிச் சினந்து புத்தர் சாதியத்தை எதிர்த்தார் என்று பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று சிங்கள பௌத்த சிறீலங்காவில் புத்த மதத்தின் உயர்ந்த மூன்று சங்கங்களான மல்வத்தை பீடத்திலும், அஸ்கிரிய பீடத்திலும், களனி பீடத்திலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் மகாதேர ராக (தலைமைத் துறவி) வரமுடியாது என்னும் கொடுமையை இக்கட்டுரையில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை .

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைச் சிங்கள இனவெறியர் கள் 'சக்கிலியப் பிரபாகரன்' என்று வசைபாடிய தாகச் சரவணன் தன் கட்டுரையில் எழுதியிருக் கிறார். புத்த சிங்கள இனவெறியருக்குச் சாதிவெறி புதியதல்ல. தமிழனை இன்றும் பொதுக்கூட்ட மேடைகளில் 'பறைத் தமிழன்' என்றே அவர்கள் அழைக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில், தமிழீழ விடுதலை உணர்வைக் களங்கப்படுத்தும் நோக்கோடு தமிழ்நாட்டின் இலக்கிய வார- மாத இதழ்களில் சிலர் தமிழீழ மண்ணில் சாதிவெறி ஆழமாக நிலைகொண்டுள்ளதைப் போல் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவதைக் கவனித்து வருகிறேன்.

உடைந்து நொறுங்கிய சாதியத்தின் துண்டுகள் தமிழீழத்தில் எங்கேனும் உங்கள் கண்களில் காணப்படலாம். அதைப் பெரிதுபடுத்தி உளறுவதை நிறுத்துங்கள்.

'சக்கிலியன்' என்னும் சொற்பயன்பாடு தவறானதென்றும் 'அருந்ததியர்' என்னும் அவர்களின் சமூகப்பெயர் ஒதுக்கப்படுவதாகவும் எழுத்தாளர் சரவணன் கொண்டுள்ள நிலைப்பாட்டில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதைச் சற்று உரிமையோடு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை - சக்கிலியன் என்றோ அருந்ததியர் என்றோ பறையன் என்றோ தலித் என்றோ எந்தச் சாதியின் பெயரிலும் எவன் அழைக்கப்படுவதையும் நான் எதிர்க்கிறேன்.

தொழிலின் பெயரைச் சொல்லுங்கள். சாதி பெயரைத் தொலையுங்கள்.

நன்றி - காக்கைச் சிறகினிலே

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates